Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘BBC’

Dec: Sri Lanka, LTTE, Eezham: News Updates: War, Attacks, Dead

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2008

இலங்கையை விட்டு வெளியேற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஞாயிறு காலை தான் இந்தியாவிற்கு பயனம் மேற்கொள்ளவிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேற குடிவரவு குடியகல்வு தினைக்களத்தினால் அனுமதி மறுக்கப்பட்டது என கூறியுள்ளார்.

தான் ஏற்கனவே தீர்மானத்திபடி வைத்திய சிகிசைக்காக செல்லவிருந்ததாகவும், அனால் நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டட நிலையில் தனது பயணத்தை மேற்கொள்ள முடியாமல் திரும்பியதாகவும் தெரிவிக்கின்றார்.

விமான நிலையத்தில் அனுமதி மறுத்த அதிகாரிகள் தன்னை குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் அழைத்துச் சென்றதாகவும், அங்கிருத்த குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி இது மேலிடத்து உத்தரவு என தனக்கு தெரிவித்ததாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன குறிப்பிடுகின்றார்


இலங்கையின் அம்பாறையில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள்

மட்டக்களப்பு வரைப்படம்
மட்டக்களப்பு வரைப்படம்

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்

பாதுகாப்பு காரணங்களக்காக இக்கட்டுப்பாடு என பாதுகாப்பு தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களைப் பொறுத்த வரை இதனால் தாம் சிரமங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

இக்கட்டுப்பாடு காரணமாக ஒருவரின் உறவினர்கள் உட்பட பெயரில் பதிவு செய்யப்ப்டுள்ள மோட்டார் சைக்கிளை மற்றுமொருவர் செலுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்றும், இது தொடர்பாக பொலிஸ் மா அதிபதிக்கு அவசர கடிதமொன்றை தான் அனுப்பி வைத்துள்ளதாக கூறும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஷ்பராஜா, இது மனித உரிமை மீறல் என்றும், தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களிலேயே இக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அம்மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் கூறுகின்றார்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

புளியங்குளத்தில் அரசப்படையினர்
புளியங்குளத்தில் அரசப்படையினர்

இலங்கையின் வடக்கே, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாகிய வன்னிப்பகுதியில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக 7 படையணிகள் பல முனைகளில் தாக்குதல்களை நடத்திய வண்ணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை நோக்கி முன்னேறி வருவதாகவும், கடந்த இரு தினங்களில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் சண்டைகளில் விடுதலைப் புலிகளின் 14 சடலங்களைப் படையினர் ஆயுதங்களுடன் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

பரந்தனுக்கு மேற்குப் பகுதி, அடம்பன், இரணைமடுவுக்கு மேற்குப்புறம், திருமுறிகண்டி, கொக்காவில், கனகராயன்குளம், புளியங்குளம், ஒலு மடுவின் வடகிழக்குப் பகுதி மற்றும் அலம்பில் ஆகிய முனைகளில் இருந்து அரச படையணிகள் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இங்கு இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

வவுனியா நகருக்கு வடக்கே அமைந்துள்ள ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் இருந்து ஏ9 வீதியில் இராணுவம் கிளிநொச்சி நகருக்குத் தெற்கே உள்ள கொக்காவில் வரையிலான பெரும் பகுதியைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.

எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் இந்த மோதல்கள் காரணமாக யுத்த பிரதேசத்திலிருந்து இதுவரையில் 225 குடும்பங்களைச் சேர்ந்த 654 பேர் இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ் மாவட்டங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.


மன்னம்பிட்டியில் பயணிகளில் விபரங்கள் பதியப்படும் புதிய நடைமுறை

மட்டக்களப்பில் பயணிகள் பஸ் ஒன்று(ஆவணப்படம்)
மட்டக்களப்பில் பயணிகள் பஸ் ஒன்று(ஆவணப்படம்)

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இருந்து வடமத்திய மாகாணத்தின் ஊடாக பயணம் செய்பவர்கள் மன்னம்பிட்டி என்னும் இடத்தில் தமது விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை புதிதாக அமலுக்கு வந்ததால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

இப்படியாக விபரங்கள் ஒவ்வொருவராக பதியப்படுவதால், பெரும் காலதாமதம் ஏற்படுவதாகவும், அத்துடன் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மாத்திரமே இவ்வாறு பதியப்படுவதாகவும் பயணிகள் குறை கூறுகிறார்கள்.

மன்னம்பிட்டியில் பயணிகளின் பெயர்கள் பதிவு செய்யப்படுவதாகவும், அதன் மூலம் சிறிது காலதாமதம் ஏற்படுவதாகவும் ஒப்புக்கொள்ளும் பொலிஸ் தரப்பு பேச்சாளரான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரான ரஞ்சித் குணசேகர அவர்கள், ஆனால், தமிழர்களும், முஸ்லிம்களும் மாத்திரந்தான் அப்படியாக பதிவு செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுவதில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்

இந்தியாவிலிருந்து வந்துள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கையின் வன்னிப் பிரதேசத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன

லாரிகளில் எடுத்துச் செல்லப்படும் இந்திய நிவாரணப் பொருட்கள்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தினுள் போர்ச்சூழலில் சிக்கியுள்ள மக்களுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டு, கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு எடுத்துவரப்பட்டுள்ள நிவாரண உணவுப் பொருட்களின் முதல் தொகுதி 60 ட்ரக் வண்டிகளில் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரால் வன்னிப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

இதுபற்றி கருத்து தெரிவித்த வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள், இந்தப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளதாகக் கூறினார்.

வரும் வியாழக்கிழமை மேலும் ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இதற்கிடையில் வன்னிப்பிரதேசத்தில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்ற பொதுமக்களைத் தங்கவைப்பதற்காக ஓமந்தை பாடசாலையில் புதிய இடைத்தங்கல் நிலையம் ஒன்று திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கிளிநொச்சியை ஒட்டிய கொக்காவிலை கைப்பற்றியிருப்பதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடக்கே வன்னிக்கள முனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச படைகள் கிளிநொச்சி நகருக்குத் தெற்கே முறிகண்டி பிரதேசத்தில் ஏ9 வீதியின் கிழக்குப் பகுதியில் முன்னேறி கொக்காவில் பிரதேசத்தை கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும், இதுகுறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

கிளிநொச்சி நகருக்கு மேற்கில் உள்ள அக்கராயன்குளம் பகுதியில் இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்த மூன்று தளங்களின் மீது விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.

இதுபற்றியும் விடுதலைப் புலிகளிடமிருந்து உடனடியாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

ஆயினும் கிளிநொச்சி நகருக்கு கிழக்கே உள்ள வட்டக்கச்சி பகுதியை நோக்கி இராணுவத்தினர் நடத்திய எறிகணை தாக்குதலில் மாணவி ஒருவர் கொல்லப்பட்டும், 31 வயதுடைய ஆண்மகன் ஒருவர் காயமடைந்தும் இருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


இலங்கையின் வடக்கே வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது

இலங்கையின் வடக்கே சுமார் மூன்று லட்சம் பேர் இடம்பெயர்வதற்கு காரணமான வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ் மாவட்டங்களில் இந்த மழை, வெள்ளம் காரணமாக 9 பேர் பலியாகியுள்ளனர், கிட்டத்தட்ட 800 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிவருவதாக கூறும் இலங்கை அரசு, வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்துள்ள சாலைகளை செப்பனிடும் பணிகளில் ஈடுபட்டுவருவதாகவும் கூறியுள்ளது.

1918ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் இலங்கையின் வடபகுதியில் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளது என்று இலங்கை அரசின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


உலக எய்ட்ஸ் தினம்: இலங்கையில் விழிப்புணர்வு ஊர்வலம்

வெலிக்கடை சிறையின் முன்பு எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகளுடன் கைதிகள்

எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை சுகாதார அமைச்சும், சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து சர்வதேச எயிட்ஸ் தினமான திங்களன்று கவனயீர்ப்பு ஊர்வலமொன்றினை மேல் மாகாணத்தில் நடத்தியது.

பாதுகாப்பற்ற பாலியல் உடலுறவினால் பெருமளவில் ஏற்படும் இந்தக் கொடிய நோயின் தாக்கத்திற்கு இலங்கையில் சுமார் 100 குழந்தைகள் உட்பட 1029 பேர் பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாகவும், சுமார் 200 பேர் வரை மரணத்தினைத் தழுவியிருப்பதாகவும் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் வைத்திய நிபுணர் நவரட்ணசிங்கம் ஜனகன் தழிழோசையிடம் தெரிவித்தார்.

ஆனாலும் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்போரின் உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுவதாகத் தெரிவித்த டாக்டர் ஜனகன், இலங்கையில் எயிட்ஸ் நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பவர்களில் சுமார் 50 சதவீதமானவர்கள் கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்திலேயே வசித்துவருகிறார்கள் எனவும், இவர்களில் பெரும்பாலானோருக்கு பாதுகாப்பற்ற பாலியல் உறவு காரணமாகவே எச்.ஐ.வி கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கே மழைவெள்ளம்

இலங்கையில் வடக்கே மழை வெள்ளம்
இலங்கையின் வடக்கே மழை வெள்ளம்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

நீரினால் அடித்துச் செல்லப்பட்டும், வீடுகள் இடிந்ததனாலும், மரங்கள் முறிந்து வீழ்ந்ததனாலும், 12 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

வீதிகளில் வெள்ளம் பாய்வதனால் போக்குவரத்துக்கள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை ஓய்ந்து வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள போதிலும், வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் இன்னும் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலைமையே காணப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றார்கள்.

இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் நேயர்கள் கேட்கலாம்


மட்டக்களப்பில் சந்தேக நபர்களிடம் விசாரணை

மட்டக்களப்பு வரைப்படம்
மட்டக்களப்பு வரைப்படம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமையன்று 12 மணி நேரத்திற்கு பிறப்பிக்கப்பிட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் சிவிலியன் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சனிக்கிழமையன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நேரத்தில், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் என 2000 க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் சுமார் 4103 வீடுகள், 56 வாகனங்கள் மற்றும் 11963 பேரை சோதனையிட்டுள்ளனர்.

இவர்களில் 123 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 117 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனிடையே கிழக்கு மாகாணத்தில் நிலவும் அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை குறித்து மட்டக்களப்பு திருகோணமலை மறை மாவட்டங்களின் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கவலை வெளியிட்டுள்லார். அவரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உரையை தணிக்கை செய்ததாக இலங்கை அரசு மீது குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வருடாந்திர உரை குறித்த செய்திகளை வழங்கியபோது பிபிசியின் தமிழ் மற்றும் சிங்கள சேவை ஒலிபரப்புகளை இலங்கை அரசு தணிக்கை செய்ததாக இலங்கையின் ஊகட அமைப்புகள் ஐந்து குற்றம்சாட்டியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை அன்று அரசு கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்த செய்தித் தணிக்கை நடவடிக்கையானது, இலங்கை மக்களின் தகவல் அறியும் உரிமையையும், ஒரு முக்கிய விடயம் குறித்த மாற்றுக் கண்ணோட்டங்கள் தடையின்றி பரிமாறப்படுவதையும் தெளிவாக மீறியுள்ளது என்று கூறியுள்ளது.

பிரபாகரனின் உரை குறித்த செய்திகள் சென்ற வருடமும் தணிக்கை செய்யப்பட்டிருந்தன என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இக்குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பதில் தரவில்லை.

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 Comments »

BBC shuts down Romanian service

Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2008

பிபிசியின் ருமேனிய சேவை நிறுத்தப்படுகிறது

கடந்த 69 ஆண்டுகளாக ஒலிபரப்பாகிவரும் பிபிசியின் ருமேனிய மொழி வானோலி சேவை எதிர்வரும் ஆகஸ்ட் முதல் திகதியுடன் மூடப்படும் என்று பிபிசி உலக சேவை அறிவித்துள்ளது.

உலக சேவையின் இயக்குனர் நைஜல் சேப்மேன், தடையற்ற, சுதந்திரமான தகவல்களை தருவதில் ருமேனிய சேவை முன்னணியில் இருந்ததாக புகழாரம் சூட்டியுள்ளார்.

ருமேனியாவில் அதிகரித்துள்ள ஊடகங்களுக்கு இடையேயான போட்டி மற்றும் ருமேனிய சேவை கேட்கும் நேயர்கள் குறைந்தமை, உலக சேவையின் அனைத்துப் பிரிவுகளிலும் பணத்தை சேமிக்க வேண்டிய கட்டாயம் போன்றவைதான் இந்த முடிவுக்கு காரணங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூடப்படும் ருமேனிய சேவையின் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நேஷ்னல் யூனியன் ஆப் ஜேர்னலிஸ்ட் அமைப்பு இந்த முடிவு ஏற்க முடியாத ஒன்று என்று கூறியுள்ளது.

Posted in Economy, Finance | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | Leave a Comment »

Apr 27 – LTTE, Eezham, Sri Lanka: News & Updates from BBC

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 28, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 மே, 2008

வட மாகாணத்துக்கு சிறப்புச் செயற்பாட்டுக்குழு

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கென்று புதிய சிறப்பு செயற்பாட்டுக்குழு ஒன்றை அமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் முன்வைத்த பிரேரணை ஒன்றுக்கு, நேற்று புதன்கிழமை கூடிய இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

இந்தக் குழுவில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிஷாத் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இடம்பெறுகிறார்கள்.

அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால பரிந்துரைகளில் வட மாகாணத்திற்கு என்று ஒரு இடைக்கால சபை ஒன்றை நிறுவ வேண்டும் என்ற பரிந்துரைப்படி, நிறுவப்படக் கூடிய இடைக்கால நிர்வாக சபைக்கான ஒரு முன்னோடியாக இந்தக் குழு அமையும் என்று இந்தக்குழுவின் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசைக்குத் தெரிவித்தார்.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட பல பணிகளை இந்தக்குழு நிறைவேற்றும் என்றும் அவர் கூறினார்.

இவை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


சம்பூர் அனல் மின் நிலையத்துக்கு அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எதிர்ப்பு

இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்

இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு பிரதேசத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு அந்த பிரதேச குடியிருப்பாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

2006 ஆம் ஆண்டு அந்த பிரதேசத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக அங்கிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இன்னமும் தங்கியிருக்கின்றார்கள்.

தாங்கள் இடம் பெயர்ந்துள்ள நிலையில், தமது குடியிருப்புப் பகுதிகளில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு பயன்படுத்தப்படுவதை எதிர்க்கும் இவர்கள், இந்தியா இதற்கு உதவுவது குறித்து இந்தியா மீது தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்கள்.

விசேட நிபுணர்களின் குழுவின் தீர்மானத்தின் படியே இந்த இடத்தை தாம் தெரிவு செய்ததாகக் கூறும் இலங்கை மின்சக்தி எரி பொருட்துறை அமைச்சர் ஜோன் செனவிரட்ன, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த பகுதி, தற்போது சுற்றுலாப் பயணத்துறைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளதால் அது பொருத்தமற்றது என்கின்றார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


‘இலங்கை விவகாரத்தில் இந்தியா மீண்டும் தலையிட வேண்டும்’- பண்ருட்டி ராமச்சந்திரன்

பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு இரு தரப்புக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று தமிழக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் இந்தியா தலையீடு செய்ய வேண்டுமென்று தமிழக சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

அதனையடுத்து இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான ராஜ்நாத் சிங் அவர்கள் கூட இதே வகையான கருத்தை சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அந்த நிலையிலேயெ ராமச்சந்திரன் அவர்களின் இந்தக் கருத்தும் வந்துள்ளது.

இன்று இலங்கையில் கடுமையான உள்நாட்டுப் போர் நடக்கும் நிலையில், அங்கு ஒரு அரசாங்கமே மக்களின் மீது தாக்குதலை நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டும் ராமச்சந்திரன் அவர்கள், இந்த விடயத்தில் தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கூட பிரச்சினையின் முழுமையை உணர்ந்து மேற்கொள்ளப்பட்டதாக இல்லை என்று கூறியுள்ளார்.

இவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 ஏப்ரல், 2008


வட இலங்கையில் கடுமையான மோதல்

இரு தரப்பாலும் கடுமையான எறிகணை வீச்சுகள் நடத்தப்பட்டுள்ளன
இரு தரப்பாலும் கடுமையான எறிகணை வீச்சுகள் நடத்தப்பட்டுள்ளன

இலங்கையின் வடக்கே மன்னார், வெலிஓயா பகுதிகளில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடி மற்றும் எறிகணை வீச்சு மோதல்கள் இடம்பெற்றதாகவும் மன்னார் பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் ஒன்றை இராணுவம் கைப்பற்றியிருப்பதாகவும் இலங்கை தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

மன்னார் பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் பேஸ் -18 எனப்படும் முக்கிய தளம் உட்பட்ட வேப்பங்குளம், கள்ளிக்குளம் பிரதேசம் முழுமையாக இராணுவத்தினரால் இன்று கைப்பற்றப்பட்டிருப்பதாகவும், இங்கு இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 40 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இப்பகுதியில் இராணுவத்தினருக்கு உதவியாக எம்.ஐ தாக்குதல் உலங்கு வானூர்திகளும் விடுதலைப் புலிகள் மீது வான் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இதேவேளை, வெலிஓயா எனப்படும் மணலாறு பகுதியில் இன்று காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான எறிகணை வீச்சு மோதல்கள் இடம்பெற்றதாக இரு தரப்பினரும் தெரிவித்திருக்கின்றனர்.

இதன்போது, விடுதலைப் புலிகளினால் சிறிபுர பகுதிமீது நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினர் நெடுங்கேணி பகுதி மீது நடத்திய எறிகணை தாக்குதல்களில் சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இளம் தாய் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

யுஎன்டிபி ஊழியர் கைத்துப்பாக்கியுடன் கைது

இதனிடையில் யுஎன்டிபி எனப்படும் ஐநாவின் அபிவிருத்திக்கான நிறுவனத்தின் கிளிநொச்சி அலுவலகத்தில் ஊழியர் எனக் கூறுப்படும் ஒருவர் இன்று மாலை வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடியில் மைக்ரோ பிஸ்டலுடன் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

மட்டக்களப்பைச் சேர்ந்த இவர் கிளிநொச்சியில் இருந்து மட்டக்களப்பிற்குச் செல்லும் வழியில், ஈரப்பெரியகுளம் வீதிச்சோதனையில் இவரை சோதனையிட்ட பொலிசார் இவரிடமிருந்து இந்த கைத்துப்பாக்கியைக் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவரை வவுனியா பொலிசார் விசாரணை செய்து வருவதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.


பிரபாகரன் திரைப்பட வழக்கை ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை

பிரபாகரன் திரைப்படத்தின் இயக்குனர்
பிரபாகரன் திரைப்படத்தின் இயக்குனர்

பிரபாகரன் திரைப்படத்துக்கான தடை குறித்த வழக்கை சென்னை முதலாவது உரிமையியல் உதவி நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னதாக விசாரிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் படச் சுருள்களை ஜெமினி கலர் லாப் நிறுவனத்தில் இருந்து எடுத்துச் செல்லவும், அந்த திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கு தடை விதிக்கவும் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் சென்னை முதலாவது உரிமையியல் உதவி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு ஜூன் மாதம் 9 ஆம் திகதி விசாரிக்கப்படும் என்று முன்னர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதுவரை படச்சுருள்களை எடுத்துச் செல்லவும் அது தடை விதித்திருந்தது.

ஆனால், அந்த வழக்கை முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று அந்த திரைப்படத்தின் இயக்குனரான துஷார பீரிஸ் பதில் மனு தக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், வழக்கை இன்று ஏப்ரல் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கவிருந்தது. ஆனால், அதனை எதிர்த்து திருமாவளவன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த வழக்கை ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் விசாரிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து திருமாவளவனின் சார்பிலான வழக்கறிஞர் ஆர்வலனின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


நளினிக்கு முதிரா விடுதலை கோரி மனுத்தாக்கல்

தனது கணவர் முருகனுடன் நளினி
தனது கணவர் முருகனுடன் நளினி

ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளியான நளினியை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் சார்பில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது ஆயுட் தண்டனையாக குறைக்கப்பட்டது.

வழமையாக ஆயுட்தண்டனைக் குற்றவாளிகள், 14 வருட சிறைவாசத்துக்குப் பின்னர் விடுதலை செய்யப்படுவது வழக்கம். ஆனால் நளினி ஏற்கனவே 17 வருடங்களை சிறையில் கழித்த நிலையில், அவர் தற்போது விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனக்கு முதிரா விடுதலை வழங்கப்பட வேண்டும் என்று 2005ஆம் ஆண்டு முதல் நளினி அரசாங்கத்தைக் கோரி வந்துள்ளார். ஆனால் அவை நிராகரிக்கப்பட்டு விட்டன. ஆனால், அவ்வாறு நிராகரித்தமை தவறு என்று கூறியே தற்போதைய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவை குறித்து நளினியின் சார்பிலான வழக்கறிஞரான துரைசாமி அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 ஏப்ரல், 2008


திருகோணமலை பிரச்சாரக் கூட்டத்தில் ரணில்

பிரச்சார மேடையில் ரணில் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர்
பிரச்சார மேடையில் ரணில் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர்

திருகோணமலை மாவட்டத்தில், இந்திய உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் அனல் மின்நிலையத்தை, சம்பூரில் அல்லாமல், ஏற்கனவே திட்டமிட்டபடி பவுல் பொயிண்டில் அமைக்க முயற்சி எடுக்கப்போவதாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க அவர்கள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி இந்த மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்திய அதிகாரிகளுடன் பேசி ஏற்கனவே திட்டமிட்டபடி அனல் மின்நிலையத்தை பவுல் பொயிண்டில் அமைப்போம் என்றும், சம்பூரையும் அதனை அண்டிய 23 கிராமங்களையும் சேர்ந்த இடம்பெயர்ந்த பதினேழாயிரம் மக்களையும் அவர்களது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்வோம் என்றும் கூறினார்.

அத்தோடு, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அனைத்து சமூகங்களும் ஏற்கக் கூடிய ஒரு தீர்வையே தாம் முன்வைப்போம் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் களம்

இலங்கையின் கிழக்கு மாகாண தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் தமது பிரச்சாரக் கூட்டங்களை ஆரம்பித்துள்ளன.

தமது கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான நோக்கம், கட்சியின் கொள்கை உட்பட தமது பலவிதமான கருத்துக்களையும் அந்த பிரச்சாரங்களின் போது அந்தந்தக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் முன்வைத்து வருகிறார்கள்.

இவை குறித்து எமது மட்டக்களப்புச் செய்தியாளர் உதயகுமார் தயாரித்து வழங்கும் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


பிரிட்டனில் விடுதலைப்புலிகள் குறித்த விசாரணைக்காக மூவர் கைது

படிங்டன் கிறீன் போலிஸ் நிலையத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
படிங்டன் கிறீன் போலிஸ் நிலையத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான விசாரணையின் ஒரு கட்டமாக மூன்று பேரை கைது செய்துள்ளதாக பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் இருவர் வேல்சில் கைது செய்யப்பட்டதாகவும் மூன்றாவது நபர் லண்டனில் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

வெளிநாடுகளில் தீவிரவாதச் செயல்களை, ஏற்பாடுகளை செய்ய முற்பட்டது, தீவிரவாத செயல்களை தூண்டியது அல்லது தீவிரவாத செயல்களுக்காக தயார் செய்தது போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு 2001 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 28 ஏப்ரல், 2008

மடு தேவாலயப் பகுதி சமாதான வலயமாக அறிவிக்கப்படுகின்ற உத்தரவாதம் கிடைத்த பின்னரே மடு மாதா திருச்சொரூபம் ஆலயத்துக்கு கொண்டுவரப்படும் என மன்னார் மறை மாவட்ட குருமார் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் மடு பகுதியை ராணுவம் சில நாட்களுக்கு முன்னர் கைப்பற்றியதை அடுத்து, மடு மாதா தேவாலயத்திலிருந்து சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்ட மடுமாதாவின் திருச்சொருபத்தை மீண்டும் அங்கு கொண்டுவரவேண்டும் என்ற பிரச்சினை குறித்து ஆராய திங்களன்று மன்னார் மறை மாவட்ட குருக்கள் மன்னாரில் கூடினர்.

மடு தேவாலயப் பகுதியை சமாதான வலயமாக அறிவித்து, அங்கு இடம்பெயர்ந்த மக்கள் வாழ்வதற்கு அனுமதியளிக்க இலங்கை இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் எழுத்துமூல உத்தரவாதம் வழங்கிய பின்னரே மாதா சிலையை மீண்டும் மடுவுக்கு கொண்டுவருவது என்று இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

படையினர் அனுமதிக்கும் பட்சத்தில் தற்போதைக்கு மூன்று குருமார்களை ஆலயத்திற்கு அனுப்பி அதனை மீண்டும் வழிபாட்டுக்குரிய ஒரு இடமாக ஒழுங்கு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை தமிழோசையிடம் வெளியிட்ட கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையில் மழை, வெள்ளம், மண் சரிவுக்கு குறைந்தபட்சம் 7 பேர் பலி

இரத்னபுரியில் மழை வெள்ளம்

இலங்கையில் பல்வெறு பகுதிகளில் இன்று கடுமையான மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இரத்தினபுரி, மாத்தறை, களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் இந்த அனர்த்தங்கள் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளன.

இரத்தினபுரி பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதுடன், அங்கு பல பகுதிகளில் அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, யட்டியாந்தோட்டைப் பகுதியில் இடம்பெற்ற மண் சரிவில் ஒரு பெண் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்து மகாசமுத்திர பிரந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இந்த கடுமையான மழை பெய்வதாகவும், களுகங்கைப் பகுதியில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், கரையோரத்தில் வாழும் மக்கள் விழிப்பாக இருக்குமாறும் இலங்கை வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.


விடுதலைப் புலிகள் மீண்டும் வான்தாக்குதல்

வான் தாக்குதல்
வான் தாக்குதல்

இலங்கையின் வடக்கே வெலிஓயா எனப்படும் மணலாறு இராணுவ முன்னரங்க பகுதிகள் மீது விடுதலைப் புலிகள் ஞாயிற்றுகிழமை அதிகாலை விமான குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இந்தத் தாக்குதல் குறித்து தகவல் வெளியிட்ட இராணுவத்தின் தரப்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள்,
ஞாயிற்றுகிழமை அதிகாலை 1.43 மணியளவில் விடுதலைப்புலிகளின் இரண்டு விமானங்கள் வெலிஓயா பகுதியில் உள்ள இராணுவ முன்னரங்குகள் மீது 3 குண்டுகளை போட்டதாகவும், அங்கு தரையில் இருந்த படையினர் அந்த விமானங்களை நோக்கித் தாக்குதல் நடத்தினார்கள் என்றும் கூறினார்.

விடுதலைப்புலிகளின் விமானங்களை ராடர் கருவிகளும் காட்டியதையடுத்து, விமானப்படையினர் விடுதலைப்புலிகளின் விமானங்களைத் தடுத்து தாக்கும் தமது விமானங்களைச் செலுத்தினார்கள் என்றும், எனினும் விடுதலைப்புலிகளின் விமானங்கள் முல்லைத்தீவு பகுதியை நோக்கித் தப்பிச் சென்று விட்டதாகவும், இந்த சம்பவத்தில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.


மடு மாதா ஆலய நிர்வாகத்தை திரும்ப எடுப்பது குறித்து திங்கட்கிழமை ஆலோசனை – மன்னார் ஆயர்

மடுமாதா தேவாலயம்
மடுமாதா தேவாலயம்

மடுமாதா ஆலயத்தின் நிர்வாகத்தை ஏற்குமாறு இலங்கை இராணுவம் தங்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தப்போதிலும், இது குறித்து திங்கட்கிழமை நடைபெறவுள்ள குருமார்களின் ஆலோசனைக் கூட்டத்தில்தான் முடிவு எடுக்கப்படும் என மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் கூறியுள்ளார். அத்தோடு இராணுவத்தின் இணையத்தளம் கூறுவது போல தாங்கள் இன்னும் ஆலயத்தின் பொறுப்பை ஏற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆலயத்தை பொறுப்பேற்பதும், மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் மடு ஆலயத்தில் நிறுவுவது ஆகியவை இரண்டு வெவ்வேறு விடயங்கள் என்றும், திங்கட்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் ஆலயத்தை பொறுப்பேற்பது மட்டுமே ஆலோசிக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழோசையிடம் பேசிய அவர், ஆலய வளாகத்திற்குள் சீருடையில் ஆயுதம் தாங்கிய துருப்புகளின் நடமாட்டத்தை தாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்றும், ஆலயம் அமைந்திருக்கும் பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவிக்க இராணுவம் முயற்சி எடுத்தால் அதற்கு தாங்கள் தடையாக இருக்க மாட்டோம் என்றும் கூறினார்.

அனுராதபுரம் மற்றும் காலி ஆயர்களுடன் தாம் விடுதலைப் புலிகளை சந்தித்து மடுமாதா ஆலயத்தில் மீண்டும் மாதாவின் திருச்சொரூபத்தை நிறுவுவது தொடர்பாக பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் எந்த வழியாக எடுத்து வருவது என்பது இருதரப்பாரின் நிலைப்பாடு மற்றும் ஒத்துழைப்பை பொறுத்தே அமையும் என்றும் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தார்.

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | Leave a Comment »

Sri Lanka Updates: Apr 13 – Minister of Science and Technology Professor Tissa Vitharana

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 26 ஏப்ரல், 2008

குண்டுவெடிப்பை தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே பிலியந்தளை என்னும் இடத்தில், பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துவிட்டது. தற்போதைய நிலவரம் தொடர்பாக இலங்கை துணை பொலிஸ்மா அதிபர் இலங்க கோன் அவர்கள் கூறும் போது, இந்த சம்பவம் தொடர்பாக இது வரையில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், ஆனால் அவர்கள் யார் என்பது குறித்து தற்போது கூற முடியாது என கூறினார்.

அத்தோடு இந்த சம்பவங்கள் விடுதலைப்புலிகளால் தான் நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்று தாங்கள் தெளிவாக நம்புவதாகவும், புதிய பாதுகாப்பு திட்டங்கள் உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும், இதற்கு காரணம் நீதவான் தாமதமாக வந்ததே என கொழும்பு கலுபோவில் மருத்துவமனையில் உள்ள குண்டுவெடிப்பில் சிக்கியவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.


உரிய பொருட்கள் இருந்தால் மடுமாதா தேவாலயத்தை விரைவில் சீரமைக்கலாம் – பாதிரியார்

மடு தேவாலயம்
மடு தேவாலயம்

மன்னார் மடு வளாகத்தை தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவந்து விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ள நிலையில், மடு கோயில் வளாகத்துக்கு இன்று சென்ற மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சூசை அங்கு ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட அவர், தேவாலயம், குருக்கள் வாழும் இடங்கள் ஷெல் வீச்சினால் சேதம் அடைந்திருப்பதாகவும், குறிப்பாக திருஇருதய ஆண்டவர் ஆலயம் முற்றாக சேதம் அடைந்திருப்பதாக கூறினார்.

மேலும் இராணுவத்தின் காவலரண்கள் எதுவும் தேவாலய வளாகத்திற்குள் இல்லை என்றும், இன்னும் ஒரு சில நாட்களில் தேவாலயத்தை சீரமைக்க சில மதகுருமார்களையும், பணியாளர்களை அனுப்புவதை பற்றி தாங்கள் யோசித்து வருவதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு உரிய பொருட்கள் கிடைத்தால் விரைவாக சீரமைக்க கூடிய நிலையிலே தேவாலயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு தேவாலயம் அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தை பாதுகாப்பு வலயமாக அறிவித்து விடுதலைப்புலிகளும், இராணுவத்தினரும் எப்போது செயற்படுகின்றார்களோ அப்போது மடுமாத திருச்சொரூபத்தை தேவாலயத்தில் மீண்டும் வைப்பதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சூசை தெரிவித்தார்.


இலங்கையில் பெண்கள் பிரசவிக்கும் போது அவர்களது கணவரும் உடனிருக்க ஏற்பாடு

பச்சிளங்குழந்தை
பச்சிளங்குழந்தை

இலங்கையில் பெண்கள் பிரசவிக்கும் போது அவர்களது கணவரும் உடனிருப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என அறிவித்துள்ள இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இது தொடர்பாக வைத்திய சேவை அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பபடும் என்றும் கூறியுள்ளார்.

இது ஒரு வரவேற்க்கதக்க திட்டம் என கூறியுள்ள பிரபல டாக்டர் ராணி சிதம்பரப்பிள்ளை, ஆனால் இலங்கையில் உள்ள 99 சதவீதமான தனியார் மற்றும் அரச மருத்துவமனைகளில் இதற்கான வசதி கிடையாது என கூறினார்.

இது குறித்து கொழும்பு செய்தியாளர் பி.கருணாகாரன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 ஏப்ரல், 2008

இலங்கை பேருந்து குண்டு வெடிப்பில் 24 பேர் பலி

இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே பிலியந்தளை என்னும் இடத்தில், பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.

இந்தத் தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்ததாகவும் அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

பேருந்து நிலையம் ஒன்றை இந்தப் பேருந்து அடைந்தவேளை அதிலிருந்த பார்சல் குண்டு வெடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது, இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நானயக்கார குற்றஞ்சாட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசாங்கம் வெளியேறியதை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் முதல் அங்கு வன்செயல்கள் அதிகரித்துள்ளன.


இலங்கை இராணுவத்தினர் வசம் மன்னார் மடுக்கோவில்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க மடுக்கோவில் பகுதி தற்போது இராணுவத்தின் வசமாகியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

மோதலில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அரசியல், இராணுவ ரீதியில் முக்கியத்துவம் மிக்க கேந்திர தளமாக விளங்கிய மடுக்கோவில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தின் கைகளுக்குத் தற்போது மாறியிருக்கின்றது.

வடக்கில் தீவிரமடைந்த சண்டைகளினால் இந்த ஆலயத்திற்குப் பேரழிவு ஏற்படும் என்று பலராலும் அச்சம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கிருந்த மாதா சொரூபம் பாதுகாப்பு கருதி ஆலய குருக்களினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள தேவன்பிட்டி பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த இராணுவத்தின் தரப்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்காரா, இராணுவத்தினர் சென்றபோது விடுதலைப் புலிகள் ஆலய வளாகத்தில் இருக்கவில்லை எனக் கூறினார்.

மடுக்கோவில் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்து புலிகள் தரப்பிலிருந்து கருத்து எதுவும் வெளியாகவில்லை.

மடுமாதாவின் திருச்சொரூபம் மீண்டும் மடுக்கோவிலுக்கு எப்போது கொண்டுவரப்படும் என்பது குறித்து மன்னார் ஆயர் ராயப்பு ஜோசஃப் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


யுத்த சேதம் செய்தி வழங்க ஊடகவியலாளருக்கு மறைமுகத் தடை: சுதந்திர ஊடக இயக்கம் குற்றச்சாட்டு

அண்மைய காலமாக மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன

இலங்கையில் மோதல்களில் காயமடைந்த இராணுவத்தினர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைகள் மற்றும் உயிரிழந்த படையினர் வைக்கப்பட்டுள்ள மலர்ச் சாலைகள் ஆகியவற்றுக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் செல்வதை அரசாங்கத்தினர் தடுத்துள்ளனர் என்று இலங்கையின் சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் மீது அரசாங்கத்தினர் விதிக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக நடந்துவரும் யுத்தம் பற்றிய உண்மையான தகவல்களை அறிந்துகொள்வது தொடர்பில் மக்களுக்கு இருக்கும் உரிமை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவ்வியக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கொல்லப்பட்டோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்டு யுத்தம் குறித்து துல்லியமான செய்திகளை பக்கச்சார்பற்ற ஊடகங்கள் வழங்க அரசாங்கத்தினரும் விடுதலைப் புலிகளும் இடம்தர மறுக்கிறார்கள் என்று சுதந்திர ஊடக இயக்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவ்வமைப்பின் சார்பாகப் பேசவல்ல சிவகுமார் மற்றும் இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயகார ஆகியோர் தமிழோசைக்கு தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வெளியேற்றத்தை நினைவுகூரும் மூதூர் அகதிகள்

கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு இன்னமும் 2 வாரங்கள் இருக்கும் இவ்வேளையில், திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கிலிருந்து 2006ம் ஆண்டு யுத்த அகதிகளாக வெளியேறிய ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது வெளியேற்றத்தின் 2வது ஆண்டு நிறைவை வெள்ளியன்று அகதி முகாம்களிலும் உறவினர்கள்-நண்பர்கள் வீடுகளிலும் நினைவுகூர்ந்தனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்கள் தங்கியிருக்கும் முகாம்களில் இடம்பெயர்வின்போது உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும் தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றத்திற்காகவும் தீபங்கள் ஏற்றப்பட்டு சர்வ மதத் தலைவர்கள் கலந்து கொண்ட அமைதிப் பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

மட்டக்களப்பு சாகிரா முகாமில் பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதான வைபவத்தில் உரையாற்றிய இடம்பெயர்ந்தோருக்கான நலன் புரி சங்கத்தின் தலைவரான குமாரசாமி நாகேஸ்வரன், 2006ம் ஆண்டு இதேநாளில் மது பிரதேசத்தை நோக்கி ஏவப்பட்ட எறிகணை வீச்சுக்களும் விமானக் குண்டு தாக்குதல்களுமே தமது இடப்பெயர்வுக்கு அடித்தளமாக அமைந்ததாகக் கூறினார்

சொந்த மண்ணில் மீள் குடியேற்றத்திற்கு தமக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டு உதவியுடன் அனல் மின் உற்பத்தி நிலையமொன்று அங்கு அமைக்கும் முயற்சியை தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 ஏப்ரல், 2008


இலங்கையின் வடக்கே நடைபெற்ற மோதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தகவல்கள்

செஞ்சிலுவை சங்கத்திடம் உடல்கள் ஒப்படைப்பு
செஞ்சிலுவைச் சங்கத்திடம் உடல்கள் ஒப்படைப்பு

இலங்கையின் வடக்கே நேற்று(புதன்கிழமை) முகமாலை-கிளாலி முன்னரங்க பகுதிகளில் இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம் பெற்ற கடுமையான மோதல்களில் இரு தரப்பிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இந்த மோதல்களில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் 28 உடல்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதை இராணுவத்தினரும் செஞ்சிலுவைச் சங்கமும் உறுதிப்படுத்தியுள்ளன.

கடைசியாக கிடைத்த தகவல்களின்படி இந்த மோதல்களில் இராணுவத் தரப்பிலிருந்து 43 கொல்லப்பட்டுள்ளதாகவும், 33 பேரை காணவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார். விடுதலைப் புலிகள் தரப்பில் 149 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 196 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவிக்கிறார்.

வடக்கே கடும் மோதல்கள்
வடக்கே கடும் மோதல்கள்

தாம் கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் ஆறு உடல்கள் இன்னமும் யாழ்ப்பாணத்திலேயே இருக்கின்றன எனவும் அவை இன்னமும் கையளிக்கப்படவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் மேலும் கூறுகிறார்.

இதனிடையே நேற்று தமிழக சட்டப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல்ல அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவே அவ்வாறு ஒரு தீர்மானம் நிறைவேறியுள்ளதாக தமிழோசையிடம் தெரிவித்தார்.


இலங்கையின் வடக்கே தாதியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது

இலங்கை மருத்துவமனை ஒன்றில் தாதிகள்
இலங்கையின் வடக்கே தாதிகளுக்கு பற்றாக்குறை

இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச பொது மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரச வைத்தியசாலைகளில் தாதியர்களுக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுவதாக அரச தாதியர் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இந்தக் குறைபாடு காரணமாக இந்த வைத்தியசாலைகளில் நோயாளர்களைச் சரியான முறையில் பராமரிக்கவும் அவர்களுக்குச் சரியான சிகிச்சையளிக்க முடியாமலும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

வவுனியா வைத்தியசாலையில் மாத்திரம் 170 தாதியர்கள் தேவையாக இருக்கின்ற போதிலும் 64 பேரே தற்போது கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பற்றாக்குறை காரணமாக மேலதிகக் கடமையில் ஈடுபடும் தாதியர்கள் 16 மணித்தியாலங்கள் வரையில் கடமையாற்ற நேர்ந்திருப்பதாகவும் இதனால் அவர்கள் உள-உடல் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிட்டிருப்பதாகவும் தாதியர் சங்கத்தின் வன்னிப்பிராந்திய இணைப்பாளர் எஸ் பாலநாதன் கூறுகின்றார்.

இது குறித்த மேலதிக தகவல்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 23 ஏப்ரல், 2008

முகமாலை மோதலில் இரு தரப்பிலும் பலத்த இழப்பு

இலங்கையின் வட போர்முனையில், முகமாலைப் பகுதியில் நடந்த மோதல்களில் இரு தரப்பிலும் கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

முகமாலை முன்னரங்கப் பகுதியை ஒட்டி நடந்த இந்த மோதல்களில் இரு தரப்பிலுமாக 90 பேர் வரை கொல்லப்பட்டதாகக் கூறுகின்ற இலங்கை இராணுவத்தினர், அதில் 52 பேர் விடுதலைப்புலிகள் என்றும், 38 பேர் இராணுவத்தினர் என்றும் தெரிவித்துள்ளனர். 84 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இந்த மோதல்களின் போது விடுதலைப்புலிகளின் பீரங்கி நிலைகளை இலங்கை விமானப்படையினர் அழித்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த மோதல்களை உறுதி செய்துள்ள விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், ஆனால், அதில், நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், விடுதலைப்புலிகள் தரப்பில் 16 பேர் பலியானதாகவும் தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக சட்டசபை தீர்மானம்

தமிழக முதல்வர் மு. கருணாநிதி
தமிழக முதல்வர் மு. கருணாநிதி

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் சுமூகத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைக்கு இந்திய மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோருகின்ற தீர்மானம் ஒன்று இன்று தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழக முதல்வர் மு. கருணாநிதியே அந்த தீர்மானத்தை முன்மொழிந்திருந்தார். இலங்கையில் மோதலில் ஈடுபடுகின்ற இரு தரப்புக்கும் இடையேயான இந்த பேச்சுவார்த்தையை இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கோருகிறது.

ராஜிவ் கொலையாளிகளுக்கு சோனியா காந்தியும், அவரது குடும்பத்தினரும் காட்டிய மனித நேயத்தை, மத்திய அரசு இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் காண்பிக்க வேண்டும் என்று அந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய கருணாநிதி கூறியிருக்கிறார். இந்த விடயத்தில் இந்திய அரசாங்கத்தை குறைகூறிப் பயனில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, இலங்கை தமிழ் விடுதலைப்போராட்ட அமைப்புக்களிடையில் ஒற்றுமை இல்லாத காரணத்தினாலேயே, அந்தப் போராட்டம் வெற்றிபெறாமல் போய்விட்டது என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 22 ஏப்ரல், 2008


கிழக்கு மாகாணத்தில் சுதந்திரமான தேர்தலுக்கான சூழ்நிலை இல்லை: தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

இலங்கையில் எதிர்வரும் 10ஆம் திகதி கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவிருக்கும் இவ்வேளையில், அங்குள்ள நிலைமையை அவதானிக்கும்போது, சுதந்திரமான நியாயமான தேர்தலொன்ரை நடத்தக் கூடிய சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை என “கஃபே” எனப்படும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நிமல்க்கா பெர்னான்டோ கூறுகின்றார்.

தேர்தல் கண்காணிப்பிற்காக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கஃபே இயக்கத்தின் பிரதிநிதிகள் கிழக்கு மாகாணத்துக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட நிமல்க்கா பெர்னான்டோ, “மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், அங்கு ஓரு வித மோசடி நிலை உள்ளது. ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் உள்ளது. இரு தரப்பு மோதல் நிலமையும் காணப்படுகின்றது.” என்று தெரிவித்துள்ளார்.

“பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் மாகாண சபைத் தேர்தலில் குதித்துள்ளதால், பிரச்சார நடவடிக்கைகளின் போது சகலருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. ” என்றும் நிமல்க்கா பெர்னான்டோ கூறினார்.

பெர்னான்டோ அம்மையார் தெரிவித்த கருத்துகள் அடங்கிய செய்திக் குறிப்பை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 21 ஏப்ரல், 2008

இலங்கையில் அரசின் அரிசி விலைநிர்ணயத்திற்கு இணங்குவதென வியாபாரிகள் முடிவு

இலங்கையில் கடந்த புதன்கிழமை திடீரென அரிசியை வியாபாரிகள் விற்கக்கூடிய அதிஉச்ச விலை நிர்ணயத்தினை அரசாங்கம் அறிவித்ததனை அடுத்து கொழும்பிலுள்ள அரிசி மொத்த வியாபாரிகள் பலர் தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்ததோடு, கதவடைப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் இன்று அவர்கள் அரசின் நிர்ணயவிலையின் அடிப்படையில் அரிசி விற்பனையில் எதிர்காலத்தில் ஈடுபடத் தயாராகவிருப்பதாக இணக்கம் தெரிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து சற்றுமுன்னர் பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட கொழும்பு அத்தியாவசியப் பொருட்க்கள் இறக்குமதியாளர்கள், விநியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. சாமி, திங்கள் மாலை வர்த்தக நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில், நிதியமைச்சில் இடம்பெற்ற முக்கிய கூட்டத்திலேயே, அரிசி ஆலை உரிமையாளர்களும், வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளும் பரஸ்பரம் அரசின் விலைநிர்ணயத்திற்கு இணங்கியதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரிகள் இன்று தமது கையிருப்பிலிருந்த அரிசியை வழமைபோல, ஆனால் நிர்ணயவிலையின் அடிப்படையில் விற்பனை செய்தனர். ஆனாலும் அவர்கள் இருப்பு பற்றாக்குறை காரணமாக மிகவும் குறைந்த அளவு தொகை அரிசியையே தமக்கு விற்பனை செய்ததாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து கொழும்பு செய்தியாளர் பி.கருணாகரன் தயாரித்து வழங்கும் செய்திப் பெட்டகத்தினை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 20 ஏப்ரல், 2008

இலங்கையின் வடக்கே இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் அருட்தந்தை பலி

இலங்கையின் வடக்கே மாங்குளம் மல்லாவி வீதியில் இன்று இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் கிளிநொச்சியில் செயற்பட்டு வரும் வடக்குகிழக்கு மனித உரிமைகள் பிரதேச செயலகத்தின் தலைவராகிய அருட்தந்தை கருணரத்னம் அடிகளார் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த தகவல் யாழ் ஆயர் இல்லத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரே நடத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர். ஆனால் தங்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் அவர்களே இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.


அரசாங்கத்தின் உத்தரவை பின்பற்ற தயார் – அரிசி வியாபாரிகள்

இலங்கையில் அரிசியின் உச்ச விலையை இலங்கை அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ளதை அடுத்து கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரிகள் பலர் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து கதவடைப்பில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தற்போது அரசின் நிர்ணயவிலையின் அடிப்படையில் அரிசி விற்பனையில் ஈடுபடத் தயார் என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட கொழும்பு அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. சாமி, அரசாங்கம் நாட்டின் நன்மை கருதி எடுக்கும் முடிவிற்கு ஆதரவு கொடுக்கவேண்டியது பொறுப்புள்ள வியாபாரிகளின் கடமையென்றும், அரசினால் விதிக்கப்படும் சட்டவரம்புகளை மீறுவதென்பது அசாத்தியமான விடயம் என்றும் தெரிவித்தார்.

பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் கே.பழனியாண்டி, இவ்வாறு பிறிதொரு வியாபாரிகள் சங்கம் எடுத்த முடிவினை தாமும் பிற்பற்றவேண்டிய நிலைக்குத் தற்போது தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இது குறித்த விரிவான செய்திகளை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 ஏப்ரல், 2008

வியாபாரம் செய்ய மறுத்த அரிசி வியாபாரிகள் மீது இலங்கை நடவடிக்கை

இலங்கையில் அரிசியை வியாபாரம் செய்ய மறுத்த சில வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு, வணிக மற்றும் நுகர்வோர் நலன் அமைச்சின் செயலாளரான ஆர். எம். கே. ரட்ணாயக்கா தெரிவித்துள்ளார்.

அரிசி விற்பனைக்கு உச்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், எந்த வியாபாரியும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்த ரட்ணாயக்கா அவர்கள், எந்த வியாபாரிக்கும் நட்டஈடு வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் விவசாயிகளுக்கு உர மானியம் போன்றவை வழங்கப்படுவதாகவும், ஆகவே இதனால், விவசாயிகளுக்கும் இதனால், எந்த விதமான பாதிப்பும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

அரிசியை குறித்த விலைக்கு விற்க வேண்டும் என்று அரசாங்கம் நிர்ணயித்திருக்கின்ற வேளையில், ஆலை உரிமையாளர்கள் அவற்றை தாம் விரும்புகின்ற வெவ்வேறு விலைகளுக்கு விற்க விரும்புவதாகக் குற்றஞ்சாட்டுகின்ற ரட்ணாயக்கா அவர்கள், புறக்கோட்டையில் இருக்கின்ற கடைக்காரர்கள் அவர்களது தரகு முகவர்களாகவே செயற்படுவதாகவும், புறக்கோட்டையில் இருக்கின்ற சில கடைகளில், வெள்ளியன்று விற்பனை செய்ய மறுக்கப்பட்ட அரிசி இன்று பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறினார்.


விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு மருந்துகள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஒரு தொகுதி மருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்பகுதியில் மருந்துப் பொருட்களுக்கு பெரிய அளிவில் தட்டுப்பாடு நிலவுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக தமிழோசையில் கருத்து வெளியிட்ட கிளிநோச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் டி.சத்யமூர்த்தி, பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதல் உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தினால், மூன்று மாதங்களாக மருந்துகளைக் கொண்டுவர முடியாத நிலை உருவானது என்றார். இதன் விளைவாக மருந்து தட்டுப்பாடு நிலவியது என்றும் அச்சமயம் தனியார் மருந்துக் கடைகளிலிருந்து நோயாளிகள் மருந்துகளை வாங்க முடியாத சூழ்நிலைகூட நிலவியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தற்போது ஒப்புதல் கிடைத்து ஒரு தொகுதி மருந்துகள் எடுத்துவரப்பட்டுள்ள நிலையில், அவை உடனடியாக விநியோகிக்கப்படும். இதனால் மருந்து தட்டுப்பாடு நீங்கும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

டாக்டர்.சத்யமூர்த்தி தமிழோசையிடம் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட வேண்டும்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

கே. இராமகிருஷ்ணன்

உலக சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் தொடர்ச்சியான விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையிலும் பெற்றோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கும்படி இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களை விற்பனைசெய்துவரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

உலக சந்தையில் ஏற்பட்ட விலை அதிகரிப்பிற்கேற்ப இலங்கையில் தற்போது நிலவும் டீசலின் விலையை சுமார் 31 இலங்கை ரூபாய்களினால் உடனடியாக உயர்த்தும்படி தாம் கோரியிருப்பதாகவும், இல்லாவிடில் அடுத்த மாத முடிவில் தமது நிறுவனம் சுமார் 750 மில்லியன் ரூபாய்கள் நட்டத்தினைச் சந்திக்கவெண்டியிருக்கும் என்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கே. இராமகிருஷ்ணன் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இவருடனான செவ்வியினை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


அம்பாறையில் ஜே.வி.பி. வேட்பாளர் தாக்குதல்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர் ஒருவரும் இரண்டு ஆதரவாளர்களும் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் வியாழன் இரவு தாக்குதலுக்கு இலக்கானதாக ஜே.வி.பி. கூறுகின்றது

தமது கட்சியின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக வேட்பாளரான எம்.ஐ.அபு சகீத் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தனக்கு தெரியாது என்று கூறும் அவர், தாக்குதலுக்கு இலக்காகிய தானும் 2 ஆதரவாளர்களும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

சம்பவம் தொடர்பாக விசாரனைகள் நடைபெற்றுவருவதாகக் கூறும் அக்கரைப்பற்று பொலிசார் தேர்தல் வன்முறைகளை தடுப்பதற்குரிய சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 ஏப்ரல், 2008

புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

இலங்கையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களின் காரணமாக, வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அடிப்படை மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சர்வதேச செஞ்சிலுவவைச் சங்கம் கூறியுள்ளது.

வடபகுதிகளுக்கு தொடர்ந்து பொருட்களை எடுத்துச் செல்வதில் இருக்கும் சிக்கலே இதற்கு காரணம் எனத் தெரிவித்துள்ள செஞ்சிலுவைச் சங்கம், அரசுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டின்படி தேவையானவற்றை கொண்டுவரும் நடவடிக்கையை ஓரளவு செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆட்பற்றாக் குறையும் ஒரு முக்கியமான விடயம் எனவும், இதன் காரணமாக வழக்கமாக வரும் நோயாளர்களுடன் நடைபெற்று வரும் மோதல்களின் காரணமாக காயமடைந்தவர்களையும் கூடுதலாக கவனிக்க வேண்டியிருப்பதால் மருத்துவமனைகள் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியுள்ளது எனவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கை கூறுகிறது.


இலங்கை அரசு நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு

சோனகத்தெருவில் மூடப்பட்டுள்ள கடைகள்
சோனகத்தெருவில் மூடப்பட்டுள்ள கடைகள்

இலங்கையில் அதிகரித்து வரும் அரிசி விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அரிசியை வியாபாரிகள் விற்கக்கூடிய அதிஉச்ச விலை நிர்ணயத்தினை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதனை கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு மொத்த அரிசி வியாபாரிகள் பலர் தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருப்பதோடு, கதவடைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

அரசின் இந்த நள்ளிரவு அதிரடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமக்கு நீதி வழங்கவேண்டுமென்றும் அவர்கள் அரசிடம் கோரியிருக்கிறார்கள். கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரக் கடைகள் பல இன்று மூடப்பட்டிருந்தன.

இதுகுறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் கே.பழனியாண்டி, அரசாங்கம் இவ்வாறு முன்னறிவித்தல், கலந்துரையாடல் ஏதுமின்றி அரிசி விலைநிர்ணயம் செய்திருப்பது தவறான நடவடிக்கை என்றும், இதற்கு ஒரு சுமுகமான தீர்வினைக்காணும் வரைக்கும் மொத்தவியாபாரத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் அரிசி விற்பனையில் ஈடுபடுவதில்லை என்றும் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனால் இந்தத் தொழிலின் இணைத்தொழிலில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்களும் தொழிலில்லாது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு இவ்வாறு விலைநிர்ணயத்தினை புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலிற்கு கொண்டுவருவதாக அறிவித்திருந்த போதிலும், இதனை மீறுவோர் மீது நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று எச்சரித்திருந்தபோதிலும் இன்று கொழும்பிலுள்ள சில்லறைக் கடைகளில் அரிசி மிகவும் அதிகமாக பழையவிலைப்பட்டியல்களின் அடிப்படையிலேயே விற்கப்பட்டது.

இது குறித்து கொழும்பிலிருந்து செய்தியாளர் பி.கருணாகரன் வழங்கும் செய்திப் பெட்டகத்தினை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


BBCTamil.com: “போர்நிறுத்தம்: சாதனைகள், பின்விளைவுகள்”

BBCTamil.com: “கிழக்கு மாகாண சபை தேர்தல்”

BBCTamil.com: “ஜே.வி.பி.யில் உட்கட்சிப் பூசல்”

BBCTamil.com: “இலங்கை- 60 ஆவது சுதந்திர தினம்”

BBCTamil.com: “முஸ்லிம்கள் வெளியேறி ஒர் ஆண்டு நிறைவு”

BBCTamil.com: “தமிழர் விவகாரத்தில் ஜேவிபியின் நிலைப்பாடு குறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி”

BBCTamil.com: “கர்ணல் கருணாவுக்கு சிறைத் தண்டனை”

BBCTamil.com: “இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் 20 வருடங்கள்”

புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 ஏப்ரல், 2008


அரிசி விற்பனைக்கு அதிகபட்ச விலையை இலங்கை அரசு நிர்ணயித்துள்ளது

இலங்கைத் துறைமுகத்தில் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது
இலங்கைத் துறைமுகத்தில் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது

இலங்கையில் அதிகரித்து வரும் அரிசி விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அரிசியை வியாபாரிகள் விற்கக்கூடிய அதி உச்சபட்ச விலையை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி சம்பா அரிசி ஆகக்கூடுதலாக கிலோ ஒன்றுக்கு 70 ரூபாவாகவும், நாட்டரிசி 65 ரூபாவாகவும், சிவப்பு அரிசி 65 ரூபாவாகவும், வெள்ளைப் பச்சை 55 ரூபாகவும் மாத்திரமே ஆகக்கூடுதலாக விற்பனை செய்ய முடியும் என்று இலங்கையின் வணிக அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார்.

இந்த உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதனை எவரும் மீறும் பட்சத்தில் நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று பிபிசியின் சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


மடு பகுதியை மோதலுக்குள் இழுத்து விட்டது மஹிந்த அரசுதான் என்று ஜயலத் ஜயவர்த்தன குற்றம் சாட்டுகிறார்

மடு தேவாலயம்
மடு தேவாலயம்

இலங்கையில் மடு தேவாலயப் பகுதியை மோதலில் இழுத்துவிட்டது மஹிந்த ராஜபக்ஷவின் அரசுதான் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன குற்றங்சாட்டியுள்ளார்.

600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயப் பகுதியை அமைதிப் பிராந்தியமாக பேண வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், புனித பாப்பரசரும், மற்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர்களும் கேட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

தமது கட்டுப்பாட்டில் மடு தேவாலயம் இருக்கின்ற போதிலும், விடுதலைப்புலிகள் அந்த ஆலய வளாகத்தில் இருக்கவில்லை என்பதை தன்னால் கூறமுடியும் என்று தெரிவித்த ஜயலத் அவர்கள், ஆனால், அரச படைகளின் தாக்குதலுக்கான எதிர்வினை நடவடிக்கையாகவே அவர்கள் அங்கு சென்று சண்டையிடுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

மடு தேவாலயம் அனைத்து இன மக்களின் மதிப்பைப் பெற்ற ஒரு வழிபாட்டிடமே ஒழிய, அதற்கு இராணுவ ரீதியாக எந்தவிதமான முக்கியத்துவமும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

அவர் தமிழோசைக்கு வழங்கிய முழுமையான செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



அனைத்துக் கட்சிக் குழுவின் 90 சதவீதப் பணிகள் பூர்த்தியாகிவிட்டன: இலங்கை அமைச்சர் திஸ்ஸ விதாரண

அமைச்சர் திஸ்ஸ விதாரண

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்ற சர்வகட்சிக் குழு தனது 90 வீதமான பணிகளை பூர்த்தி செய்துவிட்டதாகவும், நிலைமை சுமூகமாகச் செல்லுமானால், இன்னும் சில மாதங்களில் தமது பணி முழுமையாக பூர்த்தியடைந்துவிடும் என்றும், அந்த குழுவின் தலைவரான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

லண்டனுக்கு விஜயம் செய்திருந்த அவர், இன்று தமிழோசைக்கு நேரடியாக வந்து வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த அனைத்துக்கட்சி குழுவின் நடைமுறைகளில் இருந்து விலகிச் சென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகியவை குறித்து கருத்துக் கூறிய அவர், ஏற்கனவே அதிகாரபூர்வமற்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இந்த விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ஐக்கிய தேசியக்கட்சி மீண்டும் இந்த நடைமுறைகளில் இணைய வரும்போது, ஜே.வி.பி.யையும், அதில் இணைந்துகொள்ள வருமாறு தான் அழைப்புவிடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடரும் நிகழ்வுகளால் விடுதலைப் புலிகள் அமைதி நடைமுறைகளுக்குள் வர முன்வராத நிலை ஏற்படுமானால், அப்போது ஒருவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இந்த அனைத்துக் கட்சி குழுவில் இணைந்து செயற்படுவதற்கான அவசியம் குறித்து ஆலோசிக்கலாம் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் திஸ்ஸ விதாரண அவர்கள் கூறினார்.

Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , | Leave a Comment »