Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Tamil Nadu’

Attack on UNP Headquarters in Anuradhapura Sri Lanka takes the Life Of Major General Janaka Perera, his Wife & 26 Others – Tamil Tiger rebel commander TMVP Karuna in parliament, JVP going to Court

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 7, 2008

அநுராதபுரத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்; முன்னாள் இராணுவ அதிகாரி ஜானக்க பெரேரா உட்பட 28 பேர் பலி

இலங்கையின் வடமத்திய மாகாணத் தலைநகராகிய அநுராதபுரத்தில் திங்களன்று காலை இடம்பெற்ற நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா வைபவம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் மாகாண மட்டத்திலான முக்கிய அரசியல்வாதிகள் 3 பேர் உட்பட 28 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

வடமத்திய மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராகிய முன்னாள் இராணுவ அதிகாரியாகிய மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேராவும் அவரது மனைவியாரும், மேலும் இரண்டு மாகாண சபை உறுப்பினர்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக அநுராதபுரம் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் தொலைக்காட்சி நிலையம் ஒன்றின் உள்ளுர் செய்தியாளராகிய ரஷ்மி மஃறூப் அவர்களும் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் 84 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்திருக்கின்றார்கள். காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 15 பேர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் அநுராதபுரம் மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்திருக்கின்றார்.

ஜானக்க பெரேரா

வடமத்திய மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராகிய மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா அவர்களுக்கான புதிய அலுவலகத் திறப்பு விழா நடைபெற்று முடிந்து, முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி பேசிக்கொண்டிருந்தபோது அங்கு அவசர அவசரமாகக் கூட்டத்தினுட்புகுந்து வந்துசேர்ந்த தற்கொலைக் கொலையாளியே இந்தக் குண்டுத் தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


இலங்கை தமிழர்கள் பாதிப்புகுள்ளாவது குறித்து இந்திய அரசு கரிசனை

இலங்கையின் வடபகுதியில் இடம்பெறும் தற்போதைய மோதல்களில் தமிழ் பொதுமக்கள் பலியாவது அதிகரித்துவருவதாக விபரித்து, அது தொடர்பாக புதுதில்லிக்கான இலங்கை துணைத் தூதரை அழைத்து, அவை தொடர்பிலான தமது கரிசனைகளை இந்தியா வெளியிட்டுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணனுக்கும், இலங்கை இராஜதந்திரியான பாலித கனேகொடவுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பில், இலங்கை பெரிய அளவில் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சிறுபான்மை தமிழ் மக்களிடையே அதிகரித்துவரும் பாதுகாப்பற்ற உணர்வுகளைப் போக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று கூறுகின்றது.

வடக்கில் தற்போது நடக்கும் இலங்கை படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இரு நாடுகளையும் பிரிக்கும் பாக்குநீரிணை பகுதியில், இலங்கை கடற்படையினர் என்று கூறப்படுபவர்களால், இந்திய மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்வதாகவும் இந்திய அதிகாரிகள் கடுமையான கவலையை வெளியிட்டுள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து தெற்காசிய அரசியல் விவகார ஆய்வாளரான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சஹாதேவன் வழங்கும் ஆய்வுக் செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.

பிரதமருடன் தமிழக முதல்வர் தொலைபேசி உரையாடல்

முன்னதாக, தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு இலங்கைத் தமிழர் பாதிக்கப்பட்டுவருவது குறித்து இந்திய அரசு இலங்கைத் தூதரை அழைத்து தனது கவலையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட்டு போர்நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டுமென்று கோரி தமிழக மக்கள் இந்தியப் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டுமென கருணாநிதி ஞாயிறன்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஞாயிறன்றைய அறிக்கையிலும் திங்களன்றைய தொலைபேசி உரையாடலிலும் இலங்கையில் நடப்பதை ‘இனப்படுகொலை’ என்று கருணாநிதி வருணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம்

கருணா

கருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான விநாயக மூர்த்தி முரளிதரன், நாட்டை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்திருந்த ஜே.வி.பி. என்றழைக்கப்படும் மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சமரசிங்க வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததால் உருவான வெற்றிடத்திற்கே தற்போது கருணா நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக தான் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கருணா தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் மீண்டும் ஆரம்பம்

கிழக்கு பல்கலைக்கழகம்

இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர் ஒருவரின் படுகொலையை அடுத்து கடந்த ஒன்றரை மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த விரிவுரைகள் திங்களன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இரவு பல்லைக்கழக வளாகத்திற்குள் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக மறுஅறிவித்தல் வரை அனைத்து விரிவுரைகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இப்பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கபட்டிருந்த சகல சிங்கள மாணவர்களும் தற்காலிகமாக வேறு பல்கலைக்கழகங்களில் இடம்பெயர்ந்த மாணவர்களாக அனுமதி பெற்றுள்ளதாக உபவேந்தர் கலாநிதி என்.பத்மநாதன் தமிழோசைக்கு தெரிவித்தார்.

திங்களன்று பல்கலைகழகத்திற்கு சமூகமளித்திருந்த மாணவர்கள் பொலிசாரின் சோதனையோடு அடையாள அட்டை சமர்ப்பித்து பதிவுசெய்த பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் திங்களன்று மாணவர் வரவு குறைவாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in DMK, Law, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Jul 31 – Eezham, Sri Lanka, India, Tamil Nadu: Updates, News, Fishermen

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 1, 2008


இலங்கையில் மனித உரிமைகள் மேம்படவேண்டும்: அமெரிக்க அரசுத்துறை துணைச் செயலர் கருத்து

ரிச்சர்ட் பவுச்சர்

சார்க் மாநாட்டின் போது அமெரிக்காவின் சார்பில் பார்வையாளராக கலந்து கொண்ட அரசுத்துறை துணைச் செயலர் ரிச்சர்ட் பவுச்சர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில் இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் மேம்பட வேண்டும் என வலியுறித்தினார்.

“ஜனநாயகத்தின் பலாபலன்கள் இலங்கையின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் இலங்கையில் அனைத்து பிரிவினரின் மனித உரிமைகளுமே மதித்துக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆயுதக் குழுக்கள் கலைக்கபட வேண்டும். அதிலும் குறிப்பாக சிறார்ப் போராளிகளை ஆயுதக் குழுக்கள் பயன்படுத்துவதென்பது முற்றிலுமாக நிறுத்தப்படவேண்டும். தவிர சாதாரண மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வல்லமை போலீஸாருக்கு இருக்க வேண்டும். இலங்கையில் தொடர்ந்தும் நடந்துவருகின்ற துஷ்பிரயோகங்கள் முடிவுக்கு வர வேண்டும். ஆட்கள் காணாமல் போதல், கடத்தப்படுதல், சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்படுதல், கொலைசெய்யப்படுதல் போன்று அடிக்கடி நடக்கின்ற விஷயங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வர வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

அவர் தெரிவித்த கருத்துகள் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியறிக்கையில் கேட்கலாம்.


இரணைத்தீவு புலிகள் முகாமை அழித்துள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடமேற்குக் கடற்பரப்பில் இரணைத்தீவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றையும் விடுதலைப் புலிகளின் படகு ஒன்றையும் அழித்துள்ளதாகத் தெரிவித்திருக்கும் கடற்படையினர், இந்தத் தாக்குதலின்போது 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.

இரணைத்தீவு பகுதியில் ஆள் நடமாட்டத்தை அவதானித்த கடற்படையின் துரித நடவடிக்கைப் படகு அணியினரும், விசேட படகு அணியினரும் அந்தத் தீவுக்குச் சென்று, அங்கு அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை அழித்துள்ளதுடன், விடுதலைப் புலிகளின் இரண்டு படகுகளையும் கைப்பற்றியிருப்பதாகக் கடற்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை, மன்னார், வவுனியா, வெலிஓயா, யாழ்ப்பாணம் முகமாலை ஆகிய களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இடம்பெற்று வரும் தாக்குதல் நடவடிக்கைகளில் நேற்று மாத்திரம் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இந்தச் சம்பவங்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


‘பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கை சிறப்பாக செயற்படுகிறது’- சார்க் ஆரம்ப வைபவத்தில் இலங்கை ஜனாதிபதி

சார்க் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் முன்னோடியாக இலங்கை தனது கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதத்தை ஒழித்து, அங்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்தி, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முன்னாள் சிறார் போராளி ஒருவரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சார்க் உச்சி மாநாட்டின் முதலாவது நாளான சனிக்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் இருந்து மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கை ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்றைய மாநாட்டின் போது உரையாற்றிய அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களும், பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஒழித்தல், உணவுப் பாதுகாப்பு, சார்க் நிதியம், உறுப்பு நாடுகளுக்கிடையே நெருங்கிய உறவைப் பேணுதல் மற்றும் எரிபொருட் பாதுகாப்பு போன்ற விடயங்களுக்கே தமது உரைகளில் அதிக முன்னுரிமை கொடுத்திருந்ததாக, கொழும்பில் சார்க் மாநாடு குறித்த செய்திகளைச் சேகரிக்கும் எமது செய்தியாளர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.


வெள்ளாங்குளத்தைக் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் மன்னாரில் இருந்து பூநகரிக்குச் செல்லும் ஏ32 வீதியில் உள்ள வெள்ளாங்குளம் பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை இராணுவத்தினர் முழுமையாகக் கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.

இந்த முன்னேற்றத்தின் மூலம் இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டத்தினுள் பிரவேசித்திருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே உள்ள மல்லாவி, துணுக்காய் பிரதேசங்களின் தென்பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற கடும் மோதல்களில் 9 விடுதலைப் புலிகளும் 11 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்தப் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு மோதலில் மேலும் ஒரு இராணுவச் சிப்பாய் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

கேந்திர முக்கியத்துவம் மிக்க மல்லாவி மற்றும் துணுக்காய் நகரங்களை நோக்கி இராணுவத்தின் 57ஆம் படைப்பிரிவினர் நகர்ந்தபோது, நூற்றுக்கணக்கான மோர்டார் குண்டுகளை விடுதலைப் புலிகள் ஏவியதாகவும், எனினும் நிலைமையை படையினர் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

மாங்குளத்திற்கு மேற்கே வவுனிக்குளம் பாலையடி பகுதியில் மல்லாவியை நோக்கி மூன்று முனைகளில் வெள்ளிக்கிழமை காலை முன்னேற முயன்ற இராணுவத்தினரை எதிர்த்து தாங்கள் நடத்திய தாக்குதல்களில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இதேவேளை, வெள்ளாங்குளம் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 10 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. அத்துடன் வவுனியா பாலமோட்டை மற்றும் வெலிஓயா பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் மேலும் 17 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


‘பத்தாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்தன’- கிளிநொச்சி அரசாங்க அதிபர்

இடம்பெயரும் மக்கள்(ஆவணப்படம்)
இடம்பெயரும் மக்கள்(ஆவணப்படம்)

அண்மைக்காலமாக வன்னிப் பிரதேசத்தில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக 10 ஆயிரம் குடும்பங்கள் புதிதாக இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்திருக்கின்றார்.

மன்னார் மாவட்டத்தின் மடு மற்றும் மாந்தை மேற்குப் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள 7000 குடும்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்குப் பிரதேசகங்களில் இருந்து 1500 குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் இருந்து மேலும் 1550 குடும்பங்களுமாக 10 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்து, கிளிநொச்சி மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் வடமேற்கே உள்ள பூநகரி பிரதேச செயலகப் பிரதேசத்திலிருந்து மக்கள் ஏறக்குறைய அனைவருமே பாதுகாப்பான இடங்களைத் தேடி இடம்பெயர்ந்துள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருக்கின்றார்.


தமிழக மீனவர்கள் கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடிக்க வழிசெய்யும் வரைவு ஒப்பந்தம் இலங்கையின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது

தமிழக மீனவர்கள் கச்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் மீன் பிடிக்க, இலங்கை அரசால் உரிமங்கள் வழங்கப்படுவதற்கு வழிவகுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம், தற்போது இலங்கை அரசின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் எல்.கே. திரிபாதி தெரிவித்தார்.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தெற்காசியக் கூட்டமைப்பு நாடுகளின் உச்சிமாநாட்டில் கலநதுகொள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை கொழும்பு செல்ல இருக்கும் நிலையில், மீனவர் பிரச்சினை தொடர்பாக வியாழக்கிழமை புதுடெல்லியில் தமிழக மற்றும் மத்திய அரசு அதிகாரிகளின் உயர்நிலை ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாதுகாப்புத்துறைச் செயலர், கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில், தலைமைச் செயர் திரிபாதி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

அப்போது, தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினை தொடர்பாகவும், அதைத் தடுப்பதற்கான வழிகள் குறித்தும், கச்சத்தீவு உடன்படிக்கையை மறுஆய்வு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் விவாதிக்கப்பட்ட அம்சங்களின் அடிப்படையில், பிரதமரிடம் எம்.கே. நாராயணன் கருத்துக்களைத் தெரிவிப்பார் என்று எமது புதுடில்லிச் செய்தியாளர் தங்கவேல் கூறுகிறார்.


“இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது”

பாதுகாப்பு கோரும் மீனவர்கள்
பாதுகாப்பு கோரும் மீனவர்கள்

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் தவறுதலாகச் சென்றாலும், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தியிருப்பதாகவும் தமிழகத்தின் தலைமைச் செயலர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரை, 5 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், மூன்று மீனவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், இருவர் காயமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடற்படையும், கடலோரக் காவல் படையும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருப்பதாக தலைமைச் செயலர் எல்.கே. திரிபாதி தெரிவித்தார்.


மன்மோகன் சிங் கொழும்பு பயணம்

மஹிந்தவை சந்திக்கவுள்ளார் மன்மோகன்
மஹிந்தவை சந்திக்கவுள்ளார் மன்மோகன்

கொழும்பில் நடைபெறும் சார்க் நாடுகளில் உயர்நிலை மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு செல்கிறார்.

கொழும்பு செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதியை வெள்ளிக்கிழமையே சந்தித்துப் பேசுவார் என இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களைக் கைது செய்தால், விசாரணை விவரங்களை இந்திய அரசிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும், மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்றும் இரண்டு வாரங்களுக்கு முன்பு இருநாட்டு அதிகாரிகள் நிலையில் நடைபெற்ற கூட்டத்திலேயே வலியுறுத்தப்பட்டதாகவும் நவ்தேஜ் சர்னா தெரிவித்தார்.


விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு

கடற்புலிகள்
கடற்புலிகள்

விடுதலைப் புலிகளில் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்த 46 வயதான டேனியேல் எனப்படும் தம்பியண்ணா என்பவரை கைது செய்திருப்பதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியைச் சேர்ந்த இவர், கடற்புலிகளின் தலைவரான சூசை அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயற்பட்டு வந்ததாகவும், கடற்புலிகளுக்கு தேவையான நீச்சல் உபகரணங்கள், படகுகள், தொலைத் தொடர்பு கருவிகள் மற்றும் வெடி பொருட்கள் ஆகியவற்றை இலங்கைக்கு கடத்தியதாகவும் தமிழக காவல்துறை கூறியுள்ளது.

நீதிமன்ற உத்தரவையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறையில் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை கொள்வனவு செய்துவந்ததில் அவர் ஒரு முக்கியமான நபர் என்று தமிழக காவல்துறையில் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரியான ஜாஃபர் சேட் தமிழோசையிடம் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி அவர் தமிழகத்துக்கு வந்ததாகவும், இலங்கைக்கு பொருட்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் வெளியிட்ட தகவலையடுத்து, தொடர்ந்து தம்பியண்ணா கண்காணிப்பட்டு பிறகுதான் கைது செய்யப்பட்டதாகவும் ஜாஃபர் சேட் மேலும் தெரிவித்தார்.

இது குறித்த மேலதிகத் தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கு பகுதிக்கு பாதுகாப்பு செயலர் விஜயம்

கோத்தபாய ராஜபக்ஷ
கோத்தபாய ராஜபக்ஷ

இலங்கையின் வடக்கே வன்னிக் களமுனைகளில் வெற்றிகரமாக முன்னேறிச் செல்கின்ற இராணுவ தளபதிகளையும் சிப்பாய்களையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் பாராட்டி ஊக்குவித்ததாகப் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறியிருக்கின்றது.

மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களுக்கு விஜயம் செய்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் விமானப்படைத் தளபதி மார்ஷல் டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட்ட மூத்த இராணுவ அதிகாரிகள் உடன்சென்றுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதில் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்டு அநதப் பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாகவும், கள்முனைகளில் உள்ள இராணுவ உயரதிகாரிகளுடன் இவர்கள் கலந்தாலோசித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் பிரதேசங்களில் இருந்து வெளியேறி வருகின்ற பொதுமக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ஷ தனது விஜயத்தின்போது கவனம் செலுத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.



புலிகளின் பயிற்சி முகாமை அழித்துள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுவுக்கு அருகில் உள்ள விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றை விமானப்படையினர் புதனன்று வான்வழி குண்டுத்தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

கரும்புலிகளின் பயிற்சித் தளமே இந்தத் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் வவுனியா, மன்னார், வெலிஓயா ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய வன்னிக் களமுனைகள் பலவற்றில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத்தின் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் செவ்வாயன்று மாத்திரம் 16 விடுதலைப் புலிகளும் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இதேவேளை, வவுனியா மாவட்டம் பாலமோட்டை பகுதியில் இராணுவத்தினரின் முன்னேற்ற நடவடிக்கை இன்று விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதலில் முறியடிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தத் தாக்குதலில் இராணுவத்தினருக்கு உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

எனினும் இது குறித்து இராணுவ தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.



மடு ஆலயத்துக்கு மன்னார் ஆயர் விஜயம்

மடு ஆலயத்தில் ஆயர்
மடு ஆலயத்தில் ஆயர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து, இராணுவத்தினரின் வசம் வந்துள்ள மடுக்கோவில் பகுதியைப் பார்வையிடுவதற்கு கத்தோலிக்கத் திருச்சபையினருக்கு இன்று செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசையுடன் அங்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு திரும்பியுள்ள, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு அவர்கள் ஆலயத்தின் திருத்த வேலைகள் யாவும் இராணுவத்தினரால் செய்யப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தாங்களே இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என இராணுவத்தினரிடம் கேட்டிருந்த போதிலும் அதற்கான அனுமதி வழங்கப்படாமல் தமக்கும் தெரிவிக்காமல் இராணுவத்தினரே அனைத்து வேலைகளையும் செய்திருப்பதை அங்கு தாங்கள் கண்டதாகவும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

எனினும் மடுக்கோவில் இன்னும் தம்மிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பாதுகாப்புக்காக விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய தேவன்பிட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த மடுமாதாவின் திருச்சொரூபமும் கடந்த வாரம் மன்னார் ஆயர் இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும் தற்போது மடுக்கோவில் ஆயர் இல்லத்திடம் ஒப்படைக்கப்படாததன் காரணமாக ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள மடுக்கோவிலின் ஆவணி மாதத் திருவிழா இம்முறை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.


அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றிலே இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானுக்கும், துணை அமைச்சர் முத்து சிவலிங்கம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் நுவரெலிய நீதிமன்றம் 6 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற சதாசிவம் அவர்களுடனான அலுவலக உரிமை குறித்த வழக்கு ஒன்றில், முன்னதாக நீதிமன்றம் அந்த அலுவலகத்தை சதாசிவம் பயன்படுத்த அனுமதித்திருந்தது.

ஆயினும், அந்த உத்தரவை குற்றவாளிகள் மீறியதாகக் கூறி சதாசிவம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட தற்போதைய வழக்கிலேயே இவர்கள் மூவருக்கும் இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கச்சதீவு உடன்படிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா

இந்திய மீனவர்கள் இழந்த உரிமைகளை மீண்டும் பெற்றுத் தரும் வகையில், கச்சத்தீவு உடன்படிக்கையை இந்தியா மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

கொழும்பில் நடைபெறும் சார்க் உச்சிமாநாட்டின்போது, இது தொடர்பாக இலங்கை அரசுடன் இந்தியப் பிரதமர் பேச்சு நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா.
இந்தியா – இலங்கை இடையிலான கடல் பகுதியில், கடல் கண்ணிவெடிகளைப் பரப்ப இலங்கையை இந்தியா அனுமதிக்கக் கூடாது என்றும், இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



கிளிநொச்சி மாவட்டத்துக்குள் இலங்கை படையினர் பிரவேசித்திருப்பதாகக் கூறுகிறது பாதுகாப்பு அமைச்சகம்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடரும் இராணுவ நடவடிக்கைகளில் மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைப்புறங்களில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினர் குறிப்பிட்டு அடையாளம் சொல்ல முடியாத இடம் ஒன்றில் கிளிநொச்சி மாவட்டத்தினுள் பிரவேசித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

மன்னார் பூனகரி வீதியில் மூன்றாம்பிட்டி பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளில் 5 பேரின் சடலங்கள் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இதேவேளை 5 விடுதலைப் புலிகளின் சடலங்களை இராணுவத்தினர் வெள்ளியன்று மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வன்னிக் களமுனைகளின் பல இடங்களிலும் நேற்று இடம்பெற்ற மோதல்களில் மாத்திரம் 20 விடுதலைப் புலிகளும், 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை மேற்கு, துணுக்காய் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஒரு தொகுதியினர் ஏ9 வீதியின் இரு பக்கங்களிலும் மாங்குளம் தொடக்கம் கிளிநொச்சி வரையில் மரங்களுக்கு கீழ் தஞ்சமடைந்துள்ளதாக கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

Sri Lankan Navy denies hand in killing of two Tamil Nadu fishermen

Posted by Snapjudge மேல் ஜூலை 20, 2008

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சிகள் நெருக்குதல்

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதான குற்றச்சாட்டு தொடர்பாக, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றன. இரு தினங்களுக்கு முன்பு, பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி.க்கள் பிரதமரைச் சந்தித்து பல கோரிக்கைகளை விடுத்தார்கள்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை, முதலில் திமுக எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் பிரதமரைச் சந்தித்தார்கள். அப்போது கடந்த 17-ம் தேதி திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வலியுறுத்தினார்கள்.

அதாவது, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு கடலோரக் காவல் படை பாதுகாப்பு உள்பட அனைத்து வகையான பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்றும், பிரதமர் மன்மோகன் சிங் சார்க் மாநாட்டுக்குக் கொழும்பு செல்லும்போது, இப்பிரச்சினையை இலங்கை அதிபரிடம் பேச வேண்டும் என்றும் கோரி்க்கை விடுக்கப்பட்டதாக டி.ஆர். பாலு தெரிவித்தார்.

நேற்று, இலங்கைத் தூதரை அழைத்து, தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடைபெறக் கூடாது என இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரித்திருப்பதாகவும், அதை வரவேற்பதாகவும் பாலு தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள், இலங்கைக் கடல் எல்லைக்குள்ளும் சென்று மீன் பிடிக்க உரிமம் வழங்கப்படும் என பாமக எம்.பி.க்களிடம் பிரதமர் உறுதியளித்திருப்பது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் டி.ஆர்.பாலு, இது புதிய முடிவு அல்ல என்று தெரிவித்தார். இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் விரைவில் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசுவார் என்றும் பாலு தெரிவித்தார்.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை பிரதமரிடம் வைக்கப்பட்டதா என்று கேட்டதற்கு பாலு பதிலளிக்கும்போது, இதுகுறித்து, 22-ம் தேதி அரசு நம்பிக்கை வாக்குக் கோரிய பிறகு, விரிவாகப் பேசப்படும் என்று பாலு தெரிவித்தார்.

அதன்பிறகு, தமிழக காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான கே.வி. தங்கபாலு தலைமையில், காங்கிரஸைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஜி.கே. வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் எம்.பி.க்கள் பிரதமரைச் சந்தித்து அதே கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.


விடுதலைப் புலிகளிடம் இருந்து கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டு ஒராண்டு நிறைவு

இடம்பெயர்ந்தோர்
இடம்பெயர்ந்தோர்

இலங்கையில் கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கபட்டு விட்டதாக தேசிய ரீதியாக விழா எடுக்கப்பட்டு சனிக்கிழமையுடன் ஓராண்டு ஆகிவிட்டது.

இந்த ஒரு வருட காலத்திற்குள் மாகாண சபைத் தேர்தலும் நடை பெற்று முடிந்துள்ளது. மாகாணத்தில் அரசியல் மற்றும் சிவில் ரீதியான நிர்வாகங்கள் முழுமையாக அமுல் படுத்தப்பட்டு அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு பணிகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறி வருகின்றது.

இருப்பினும், மக்களைப் பொறுத்த வரை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொண்டாலும் தங்களின் வாழ்ககை நிலை இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என்றும், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்று மாகாண சபை நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகளிடம் சென்றடைந்திருந்தாலும் பாதுகாப்பு கெடுபிடிகளிலிருந்து மக்கள் இன்னமும் முற்றாக விடுவிக்கப்படவில்லை என்றும் பலர் தமிழோசைக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

இடம்பெயரும் மக்கள்
இடம்பெயரும் மக்கள்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பிரதேசத்தை மீட்பதற்காகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெவ்வேறு களமுனைகளில் வெள்ளிகிழமை இடம்பெற்ற மோதல்களில் 17 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களில் 19 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

வவுனியா மாவட்டத்தின் பாண்டியன்குளம், பாலமோட்டை, நவ்வி ஆகிய இடங்களிலும் மன்னாரில் குறுணியடி, கட்டாடிவயல் ஆகிய இடங்களில் இந்த மோதல்கள் இடம் பெற்றதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

வெலிஓயா மற்றும் நாகர்கோவில், முகமாலை பகுதிகளிலும் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நேற்றைய தினம் மோதல்கள் இடம்பெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் உள்ள குருந்தன்குளம் பகுதியில் வெள்ளிகிழமை அரச படைகள் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையில் மன்னார் மாவட்டம் விடத்தல்தீவு பகுதியைக் கைப்பற்றியுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை நோக்கி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் எறிகணை தாக்குதல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக இலங்கை அரசிடம் இந்திய அரசு முறைப்படி கவலையை தெரிவித்துள்ளது

இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்
இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

இந்திய மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்பாக, இந்தியா சனிக்கிழமை இலங்கை அரசிடம் முறைப்படி தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்திய வெளியுறவுத்துறையின் கிழக்காசியப் பிரிவுச் செயலர் என்.ரவி, புதுடெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை அமைச்சகத்துக்கு அழைத்து இந்தியாவின் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 12-ம் தேதி தமிழக மீனவர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த மீனவர்கள் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும், இந்தியர்கள் மற்றும் இந்திய மீனவர்கள் நலனுக்கு இந்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளிப்பதாகவும் இலங்கைத் தூதரிடம் இந்திய அதிகாரி ரவி திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பதாகவும் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதாகவும், சுட்டுக்கொல்லப்படுவதாகவும் மீனவர்கள் தரப்பில் புகார்கள் கூறப்படுகிறது.

சமீபத்தில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இரண்டு மீனவ்ர்கள் அவ்வாறு கொல்லப்பட்டதாகக் கூற்ப்படுகிறது. அதற்கு சில தினங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து பின்னர் விடுதலை செய்தது.

இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரியுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சிப் பிரதிநிதிகள் ஏற்கெனவே பிரதமரைச் சந்தித்து இதுகுறித்துக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். திமுக எம்.பி.க்கள் நாளை பிரதமரைச் சந்திக்க உள்ளனர். மேலும் திமுக சார்பில் சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் இலங்கை அரசிடம் இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது.


இலுப்பைக்கடவையை கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது

இலங்கை கடற்படையினர்
இலங்கை கடற்படையினர்

இலங்கையின் வட மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கும் நடவடிக்கைகள் வெற்றியை நோக்கி முன்னேறிச் செல்வதாகத் தெரிவித்திருக்கும் அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், வடமேற்குக் கரையோரத்தில் இலுப்பைக்கடவை சிறுநகரை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியிருப்பதாகக் கூறியுள்ளது.

இப்பகுதியில் உள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க விடத்தல்தீவு பகுதியைக் கைப்பற்றிய இராணுவத்தினர் அங்கிருந்து முன்னேறிச் சென்று இலுப்பைக்கடவை என்ற இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விடுதலைப் புலிகளின் கருத்துக்கள் கிடைக்கப்பெறவில்லை.

பூனகரியை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையிலேயே இலுப்பைக்கடவை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் நாச்சிக்குடா கடற்பகுதியில் கடற்படையினரும், விமானப்படையினரும் இணைந்து ஞாயிற்றுகிழமை மதியம் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் 6 படகுகள் முற்றாக அழிக்கப்பட்டதாகவும், மேலும் 2 படகுகள் சேதமடைந்ததாகவும் கடற்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

எனினும் இராணுவத்தின் முன்னேற்றம் குறித்தும், நாச்சிக்குடா கடற்பரப்பில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படும் தாக்குதல் குறித்தும் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

இதற்கிடையில், வவுனியா, மன்னார், வெலிஓயா ஆகிய வன்னிக் கள முனைகளில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் சனிக்கிழமை அன்று நடந்த சண்டைகளில் மாத்திரம் 18 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இராணுவம் புதிய கட்டுப்பாடுகள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம், புனானை மற்றும் வாகனேரி பிரதேசத்தில் விவசாயத்தில ஈடுபட்டுள்ள விவசாயிகள், உணவு மற்றும் எரிபொருட்களை வயல்களுக்கு எடுத்துச் செல்வது தொடர்பாக இராணுவத்தினரால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் தொடர்பாக கிடைத்துள்ள தகவல்களையடுத்தே இந் நடவடிக்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்டப்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் உணவுப் பொருட்களுடன் சில தினங்களுக்கு முன்னர் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்திற்கு உணவு மற்றும் எரிபொருட்களை ஒரே தடவையில் நேரடியாக எடுத்துச் செல்வதற்கு இராணுவும் அனுமதிக்காத போதிலும் அருகில் களஞ்சியப்படுத்தி தேவைக்கேற்ப நாளந்தம் எடுத்துச் செல்வதற்கு அனுமதியளித்துள்ளதாக மாதுறு ஓயா வடக்கு விவசாயிகள்
நலன்புரிச்சங்கத்தின் தலைவரான இஸ்மாலெப்பை மொகமத் முஸ்தபா கூறுகின்றார்.

இதனிடையே, மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்தில் வர்த்தகரான தேவதாஸ் சுரேஷ்குமார் கடத்தி கொலைச் செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் இரு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் போலிஸார் தெரிவித்துள்ளனர்.


தமி்ழகத்தில் கைப்பற்றப்பட்ட முருகன்சிலை மூதூர் முருகன் ஆலயத்தை சார்ந்ததாக உரிமை கோரப்படுகிறது

மூதூர் வெருகலம்பதி முருகன் ஆலயம்
மூதூர் வெருகலம்பதி முருகன் ஆலயம்

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட முருகப்பெருமானின் சிலை தமிழக பொலிசாரால் கைப்பற்றப்பட்டதாக அண்மையில் தமிழோசையில் செய்தி வெளியானது. இந்தச் சிலையானது திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் வெருகலம்பதி முருகன் ஆலயத்திலிருந்து 2006ம் ஆண்டு இடம்பெற்ற வன்செயல் சம்பவங்களின் போது காணாமல் போன சிலை என தாங்கள் உணர்வதாகவும் மூதூர் வெருகலம்பதி ஆலய பரிபாலன சபையின் தலைவர் சிதம்பரப்பிள்ளை தமிழோசையிடம் தெரிவித்திருக்கின்றார்.

இந்தச் சிலை களவாடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தமிழக முதல்வருக்கு எழுதியுள்ளதாகவும், அவரது பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

.


இடம்பெயரும் மக்களுக்கு உதவி கோரி யாழ் ஆயர் ஜனாதிபதிக்கு கடிதம்

கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் இடம்பெயர்ந்த நிலையில் துன்பப்படுகின்ற மக்களின் துயர் துடைப்பதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளவேண்டும் என யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் இலங்கை ஜனாதிபதியிடம் கடிதம் மூலமாக அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் இருந்தும், கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் இருந்தும் சுமார் 30 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளாகத் தெரிவித்துள்ள யாழ் ஆயர், இவர்களுக்கான அவசர நிவாரண உதவிகளை மேற்கொள்வதில் அரச அதிகாரிகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும் எதிர்நோக்கியுள்ள சிரமங்களைப் போக்கி உரிய ஒத்துழைப்பை அரசாங்கம் அவசரமாக வழங்க வேண்டும் எனவும் தனது கடிதத்தில் அவர் கோரியிருக்கின்றார்.

இது குறித்த மேலதிக விபரங்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.


ஆட்கடத்தலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வாகனம் ஈ.பி.டி.பி. காரியாலத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்

பறிமுதல் செய்யப்பட்ட வேன் வண்டி

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெள்ளை வேன் ஒன்று திங்களன்று செங்கலடியிலுள்ள ஈ.பி.டி.பி. காரியாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

செங்கலடி பிரதேசத்தில் வர்த்தகரான தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சமப்வம் தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணைகளின போது கிடைத்த தகவலை அடுத்தே இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 19ஆம் திகதி ஈ.பி.டி.பி.யினரால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இவ்வர்த்தகர், இந்த அமைப்பின் காரியாலயத்திற்கு அருகாமையிலுள்ள காணியில் சடலமாக தோண்டியெடுக்கப்பட்டிருந்தார்.

கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்

இக்கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக செங்கலடி பிரதேச ஈ.பி.டி.பி பொறுப்பாளர் ரவி எனப்படும் தர்மலிங்கம் ஈழமாறன் உட்பட அந்த அமைப்பைச் சேர்ந்த 9 பேர் சந்தேகத்தின் பேரில் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

செங்கலடி ஈ.பி.டி.பி. காரியாலயத்தை பொலிசார் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தியபோது வர்த்தகரொருவரிடம் கப்பமாகப் பெறப்பட்ட மோட்டார் சைக்கிளொன்றும் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேவதாஸ் சுரேஷ்குமார் கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக புலன்விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான ரஞ்சித் குணசேகர தமிழோசையிடம் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

June 23, 24: Eezham, Sri Lanka, LTTE, Refugees in Tamil Nadu, Batticaloa Updates

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

தமிழகத்தில் சொத்து வாங்கிய இலங்கை அகதிகளின் விவரம் திரட்டப்படுகிறது

தமிழகத்தில் நிலம், வீடு அல்லது மோட்டார் வாகனங்கள் வாங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்த விவரங்களை தமிழக அரசு சேகரிக்கத் தொடங்கியிருககிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் கருணாநிதி, அகதிகள் இவ்வாறு சொத்துகள் வாங்குவது குற்றம், அனுமதிக்கப்படக்கூடாது, உண்மையான அகதிகளுக்கு வேண்டிய உதவிகள் செய்யலாம், ஆனால் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது எனக் கூறியிருந்தார்.

ஆனால், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக நிறுவனர் சந்திரஹாசன், இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் சொத்துகளை சில நியதிகளுக்கு உட்பட்டு வாங்கமுடியும் என்கிறார்.

ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அட்டை போன்றவற்றை அகதிகள் பெறுவதாகக் கூறப்படுவது தவறு என்ற அவர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்; ஆனால் இலங்கைத் தமிழர்கள் நலனை பாதிக்கும் வகையில் தமிழக அரசு நடந்துகொள்ளாது என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.


மட்டக்களப்பு கிளேமோர் தாக்குதலில் பொலிசார் 3 பேர் பலி

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பகுதியில் திங்கள் மாலை இடம்பெற்ற கிளெமோர் குண்டுத் தாக்குதலில் 3 பொலிஸார் கொல்லப்பட்டதோடு, மற்றுமொரு பொலிஸ்காரர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் கூறுகிறார்கள்.

ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இந்தப் பொலிஸ்காரர்கள் அங்குள்ள நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றுக்கு குளிக்கச் சென்றிருந்தபோது, குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் இந்தக் குண்டு அங்கு பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்தப் பகுதி ஏற்கனவே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கைப் படையினரால், கடந்த ஆண்டில் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் காவலிலிருந்த சந்தேக நபரொருவர் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்

ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடமொன்றை காட்டுவதற்காக இன்று அதிகாலை கிளாலிவெட்டைக்கு இந்நபர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு விடுதலைப் புலிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் இடம்பெற்ற மோதலின் போது துப்பாக்கிச் சூட்டில் இவர் கொல்லப்பட்டதாக சமப்வம் தொடர்பாக பொலிசார் கூறுகின்றனர்.


வட இலங்கை மோதல்கள்

இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, வெலிஓயா மற்றும் யாழ்ப்பாணம் போர்முனைப் பிரதேசங்களில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் முன்னணி காவலரண்கள் மீது ஞாயிறன்று மேற்கொண்ட தாக்குதல்களையடுத்து இடம்பெற்ற மோதல்களில் 33 விடுதலைப் புலிகளும், 5 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இராணுவச் சிப்பாய் ஒருவரைக் காணவில்லை என்றும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது. கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 7 சடலங்கள் கைப்பற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.

இதேவேளை, வவுனியா பாலமோட்டை பகுதியில் ஞாயிறு காலை 3 முனைகளில் தமது பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இந்தச் சண்டைகளின்போது 18 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

இராணுவத்தினரின் 3 சடலங்களும் ஆயுதத் தளபாடங்களும் தம்மால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். நல்ல நிலையில் இருந்த ஒரு சடலம் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, இராணுவத்தினரால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட 7 விடுதலைப் புலிகளின் சடலங்களை இன்று பிற்பகல் புளியங்குளம் சோதனைச்சாவடியில் விடுதலைப் புலிகளிடம் தாங்கள் கையளித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளிடம் இருந்து பெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது.


பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இடைக்காலத் தீர்வுக்கான ஆயத்தங்களைச் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் சர்வ மதத்தலைவர்கள் வேண்டுகோள்

இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தும் மதத்தலைவர்கள்
இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தும் மதத்தலைவர்கள்

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வை ஆராய்கின்ற சர்வகட்சிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ஒரு இடைக்காலத் தீர்வாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சர்வமத தலைவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்தக் குழுவில் இடம்பெற்ற மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு கூறியுள்ளார்.

இலங்கையில் நடக்கின்ற மனித உரிமை மீறல்கள், கொலைகள், காணாமல் போதல்கள், குறிப்பாக வெள்ளை வான் கடத்தல்கள் போன்றவை குறித்து உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சர்வமதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையில் பொதுமக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் சிக்கி துன்பப்படுகின்ற நிலைமைகளை அறிந்து, மக்களுக்கு நிவாரணம் செய்ய வேண்டும் என்று மதத்தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரியதாகவும் மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார்.


Posted in Govt, India, Law, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Primary School Education: Nursery kids admission – Tamil Nadu, Children

Posted by Snapjudge மேல் ஜூன் 20, 2008

இது விதியல்ல, சதி!

சமீபத்தில் சென்னை முகப்பேரில் நடந்த சம்பவம் ஒன்று நமது சமுதாயத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் ஏன் நம்மீதே நமக்குக் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது. 24-வயது அனிதா என்ற பெண்மணி தனது மூன்று வயதுப் பெண் குழந்தையை நர்சரி பள்ளியில் சேர்க்க நன்கொடை கொடுக்க முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டாள் என்பதுதான் அந்தத் திடுக்கிடும் செய்தி.

அனிதா தற்கொலை செய்து கொண்டு விட்டாள். ஆயிரக்கணக்கான அனிதாக்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்குப் பல்வேறு தியாகங்களைச் செய்து கொண்டும், வெளியில் சொல்ல முடியாத நரக வேதனையை மனதில் சுமந்து கொண்டும், கடன்காரர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவமானத்தை மென்று விழுங்கிக் கொண்டும் வாழ்கிறார்கள் என்பது ஒன்றும் ரகசியமல்ல. பள்ளிக்கூடம் திறக்கிறது என்கிறபோதே வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பதைபதைக்கும் பெற்றோரும், உற்றார், உறவினர், நட்பு என்று அனைவரிடமும் கைநீட்டிக் கெஞ்சும் பெற்றோரும் ஏராளம் ஏராளம்.

“தம்மிற் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது’ என்பது வள்ளுவப் பேராசானே எழுதி வைத்த குறள். அக்கம்பக்கத்துப் பெண்டிரும், உற்றார் உறவினரும் தத்தம் குழந்தைகளைப் பெரிய பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு அனுப்பும்போது, தங்களது குழந்தைகளுக்கும் அந்தக் கல்வி தரப்பட வேண்டும் என்று எந்தவொரு பெற்றோரும் விழைவது இயல்பு. அப்படித் தர முடியாத நிலையில், விரக்தியும் வேதனையும் ஏற்படுவது தவிர்க்க முடியாதுதான்.

கிராமப்புறங்களிலிருந்து படித்துப் பட்டம் பெற்றுத் தங்கள் வாழ்க்கைத் தரத்தைப் பன்மடங்கு உயர்த்திக் கொண்ட கையோடு, தத்தம் குழந்தைகளை மிகப்பெரிய பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிக்க வைக்க, தங்களுக்கு இயலாமல் போன கனவுகளைப் பூர்த்தி செய்து கொள்ளப் பலர் துடிக்கிறார்கள். அதற்காக எந்த விலையையும் கொடுக்க அவர்கள் தயாராகிறார்கள் என்பதைத்தான் மேலே கூறிய செய்தி உறுதிப்படுத்துகிறது.

சமச்சீர் கல்வி, உயர்கல்வி, மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் என்றெல்லாம் பேசுகிறோமே தவிர, இந்தத் தனியார் பள்ளிகளின் கட்டணத்தையும், நன்கொடையையும் முறைப்படுத்த நமது அரசு ஏன் முன்வருவதில்லை என்பது புதிராகவே இருக்கிறது. காளான்கள் போலத் தனியார் பள்ளிகள் ஆங்காங்கே முளைக்கின்றன. இந்தப் பள்ளிகள் நன்கொடை வசூலித்துத் தங்களது கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கிக் கொள்கின்றன. கேள்வி கேட்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், இது தனியார் முயற்சி என்றும் கூறுகிறார்கள். நாமும் பார்த்துக் கொண்டு வாளாவிருக்கிறோம்.

தனியார் பள்ளிகளை விடுங்கள். அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் அரசின் உதவியுடன் நடத்தப்படும் பள்ளிகளில் அதிகாரபூர்வமற்ற வகையில் நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன. இது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமலா நடைபெறுகிறது? இத்தனைக்கும் தமிழக அரசின் 1972ஆம் ஆண்டு சட்டப்படி இந்த நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தடுக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதியை நிலைநாட்டுகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்கள், இன்னொருபுறம் பள்ளிக் கல்வியில் தனியார் தலையீட்டை அதிகரித்து சமூக ஏற்றத் தாழ்வு என்கிற நஞ்சைப் பிஞ்சு உள்ளங்களில் விதைக்கின்றனர். பணக்காரக் குழந்தைகள் மட்டுமே படிக்கும் தனியார் பள்ளிகள் ஒருபுறம், ஏழைகள் மட்டுமே படிக்கும் அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துப் பள்ளிகளும், அரசு உதவியுடன் நடத்தப்படும் பள்ளிகளும் மறுபுறம்.

பசி, வறுமை, ஏழ்மை என்றால் என்னவென்றே தெரியாமல் வளரும் சமுதாயம் ஒருபுறம். கல்வியில்கூட வறுமையே கதி என்கிற விதியை வரித்துக் கொண்ட குழந்தைகள் மறுபுறம். இட ஒதுக்கீட்டால் ஏற்படும் சமூகநீதிகூட பணக்காரப் பள்ளிகளில் படித்தால் மட்டுமே கைகொடுக்கும் துர்பாக்கிய நிலை. ஏழையாகப் பிறந்த குற்றத்திற்காக அந்தக் குழந்தையும், அந்தக் குழந்தையைப் பெற்ற குற்றத்திற்காக அந்தப் பெற்றோரும் இதையெல்லாம் விதியென்று கருதி வாளாவிருப்பதுதான் சமுதாய நீதியா?

மேலே எழுப்பிய கேள்விகளைப் பெருந்தலைவர் என்று அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் கு. காமராஜ் உணர்ந்திருந்தார். அதனால்தான் கட்டாயக் கல்வி என்கிற பெயரில் அனைவருக்கும் கல்வி அளித்தது மட்டுமல்லாமல் பள்ளிக் கல்வியை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். தனியார் பள்ளிகளும் அரசின் சட்ட மற்றும் பாடத்திட்டங்களுக்கு உள்பட வைத்தார். தமிழகத்தில் சாதி பேதம் மறைந்து சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருமளவில் குறைந்ததற்குக் காமராஜின் கல்விக் கொள்கைதான் தலையாய காரணம்.

பள்ளிக் கல்வியை தனியாரிடமிருந்து அகற்றி அரசே ஏற்று நடத்துவது மட்டும்தான் இதற்கு ஒரே தீர்வு. அதைச் செய்யாத வரையில் சமூக நீதியும் சமச்சீர் கல்வியும், அனைவருக்கும் கல்வியும் உதட்டளவு உபந்நியாசமாகத்தான் தொடரும்!

Posted in Economy, Finance, Govt, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Dasavatharam – Sales gossips: Market rates for various sectors, districts

Posted by Snapjudge மேல் மே 20, 2008

ஐம்பது கோடி ரூபாய் செலவில் தயாராகி இருக்கும் கமலின் இந்தப் படம் தென்னிந்திய மொழிகளில் தயாரான படங்களில் அதிக பொருட்செலவில் எடுத்த படமாகும்.

பெரிய படஜெட் என்றாலும், படம் வெளியாகும் முன்பே போட்ட பணத்தை தயாரிப்பாளர் எடுத்துவிடுவார் என்கிறார்கள். அதற்கேற்ப ‘தசாவதாரம்’ ஏரியா விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

  • வட,தென் ஆற்காடு, செங்கல்பட்டு மற்றும் சென்னை நகரம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த விநியோக உரிமை பதினைந்து கோடி
  • மதுரை ஏரியா மூன்று கோடி,
  • கோயம்புத்தூர் நான்கு கோடி,
  • சேலம் இரண்டரை கோடி,
  • திருநெல்வேலி மற்றும்
  • கன்னியாகுமாரி ஒன்றரை கோடி,
  • திருச்சி
  • தஞ்சை இரண்டரை கோடி

என மெகா விலைக்கு விற்பனையாகி உள்ளது.

கன்னட உரிமை மட்டும் ஒரு கோடியே எண்பத்தைந்து லட்சம்.

தசாவதாரம்’ இந்தியிலும வெளியாகிறது. இந்தி உரிமை மட்டும் 12 கோடி.

Dasavatharam Nizam rights for 6.25 crore

The Nizam rights of the film Dasavatharam have been bagged by Siri Media of Dasari Narayan Rao for a record 6.25 crore. This is very high for a Tamil hero film in Nizam. After Rajinikanth’s Shivaji, the craze for a Tamil hero film has reached such heights.

Kamal Hassan’s new film Dasavatharam has already completed the censor formalities and is now set for release on June 6. Kamal plays 10 different roles while heroin Asin is playing a dual role. Mallika Sherawat and Jayaprada are playing special roles in the film.

Posted in Economy, Finance, India, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »