Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Fish’

Jul 31 – Eezham, Sri Lanka, India, Tamil Nadu: Updates, News, Fishermen

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 1, 2008


இலங்கையில் மனித உரிமைகள் மேம்படவேண்டும்: அமெரிக்க அரசுத்துறை துணைச் செயலர் கருத்து

ரிச்சர்ட் பவுச்சர்

சார்க் மாநாட்டின் போது அமெரிக்காவின் சார்பில் பார்வையாளராக கலந்து கொண்ட அரசுத்துறை துணைச் செயலர் ரிச்சர்ட் பவுச்சர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில் இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் மேம்பட வேண்டும் என வலியுறித்தினார்.

“ஜனநாயகத்தின் பலாபலன்கள் இலங்கையின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் இலங்கையில் அனைத்து பிரிவினரின் மனித உரிமைகளுமே மதித்துக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆயுதக் குழுக்கள் கலைக்கபட வேண்டும். அதிலும் குறிப்பாக சிறார்ப் போராளிகளை ஆயுதக் குழுக்கள் பயன்படுத்துவதென்பது முற்றிலுமாக நிறுத்தப்படவேண்டும். தவிர சாதாரண மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வல்லமை போலீஸாருக்கு இருக்க வேண்டும். இலங்கையில் தொடர்ந்தும் நடந்துவருகின்ற துஷ்பிரயோகங்கள் முடிவுக்கு வர வேண்டும். ஆட்கள் காணாமல் போதல், கடத்தப்படுதல், சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்படுதல், கொலைசெய்யப்படுதல் போன்று அடிக்கடி நடக்கின்ற விஷயங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வர வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

அவர் தெரிவித்த கருத்துகள் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியறிக்கையில் கேட்கலாம்.


இரணைத்தீவு புலிகள் முகாமை அழித்துள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடமேற்குக் கடற்பரப்பில் இரணைத்தீவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றையும் விடுதலைப் புலிகளின் படகு ஒன்றையும் அழித்துள்ளதாகத் தெரிவித்திருக்கும் கடற்படையினர், இந்தத் தாக்குதலின்போது 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.

இரணைத்தீவு பகுதியில் ஆள் நடமாட்டத்தை அவதானித்த கடற்படையின் துரித நடவடிக்கைப் படகு அணியினரும், விசேட படகு அணியினரும் அந்தத் தீவுக்குச் சென்று, அங்கு அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை அழித்துள்ளதுடன், விடுதலைப் புலிகளின் இரண்டு படகுகளையும் கைப்பற்றியிருப்பதாகக் கடற்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை, மன்னார், வவுனியா, வெலிஓயா, யாழ்ப்பாணம் முகமாலை ஆகிய களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இடம்பெற்று வரும் தாக்குதல் நடவடிக்கைகளில் நேற்று மாத்திரம் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இந்தச் சம்பவங்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


‘பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கை சிறப்பாக செயற்படுகிறது’- சார்க் ஆரம்ப வைபவத்தில் இலங்கை ஜனாதிபதி

சார்க் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் முன்னோடியாக இலங்கை தனது கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதத்தை ஒழித்து, அங்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்தி, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முன்னாள் சிறார் போராளி ஒருவரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சார்க் உச்சி மாநாட்டின் முதலாவது நாளான சனிக்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் இருந்து மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கை ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்றைய மாநாட்டின் போது உரையாற்றிய அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களும், பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஒழித்தல், உணவுப் பாதுகாப்பு, சார்க் நிதியம், உறுப்பு நாடுகளுக்கிடையே நெருங்கிய உறவைப் பேணுதல் மற்றும் எரிபொருட் பாதுகாப்பு போன்ற விடயங்களுக்கே தமது உரைகளில் அதிக முன்னுரிமை கொடுத்திருந்ததாக, கொழும்பில் சார்க் மாநாடு குறித்த செய்திகளைச் சேகரிக்கும் எமது செய்தியாளர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.


வெள்ளாங்குளத்தைக் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் மன்னாரில் இருந்து பூநகரிக்குச் செல்லும் ஏ32 வீதியில் உள்ள வெள்ளாங்குளம் பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை இராணுவத்தினர் முழுமையாகக் கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.

இந்த முன்னேற்றத்தின் மூலம் இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டத்தினுள் பிரவேசித்திருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே உள்ள மல்லாவி, துணுக்காய் பிரதேசங்களின் தென்பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற கடும் மோதல்களில் 9 விடுதலைப் புலிகளும் 11 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்தப் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு மோதலில் மேலும் ஒரு இராணுவச் சிப்பாய் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

கேந்திர முக்கியத்துவம் மிக்க மல்லாவி மற்றும் துணுக்காய் நகரங்களை நோக்கி இராணுவத்தின் 57ஆம் படைப்பிரிவினர் நகர்ந்தபோது, நூற்றுக்கணக்கான மோர்டார் குண்டுகளை விடுதலைப் புலிகள் ஏவியதாகவும், எனினும் நிலைமையை படையினர் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

மாங்குளத்திற்கு மேற்கே வவுனிக்குளம் பாலையடி பகுதியில் மல்லாவியை நோக்கி மூன்று முனைகளில் வெள்ளிக்கிழமை காலை முன்னேற முயன்ற இராணுவத்தினரை எதிர்த்து தாங்கள் நடத்திய தாக்குதல்களில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இதேவேளை, வெள்ளாங்குளம் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 10 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. அத்துடன் வவுனியா பாலமோட்டை மற்றும் வெலிஓயா பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் மேலும் 17 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


‘பத்தாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்தன’- கிளிநொச்சி அரசாங்க அதிபர்

இடம்பெயரும் மக்கள்(ஆவணப்படம்)
இடம்பெயரும் மக்கள்(ஆவணப்படம்)

அண்மைக்காலமாக வன்னிப் பிரதேசத்தில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக 10 ஆயிரம் குடும்பங்கள் புதிதாக இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்திருக்கின்றார்.

மன்னார் மாவட்டத்தின் மடு மற்றும் மாந்தை மேற்குப் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள 7000 குடும்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்குப் பிரதேசகங்களில் இருந்து 1500 குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் இருந்து மேலும் 1550 குடும்பங்களுமாக 10 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்து, கிளிநொச்சி மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் வடமேற்கே உள்ள பூநகரி பிரதேச செயலகப் பிரதேசத்திலிருந்து மக்கள் ஏறக்குறைய அனைவருமே பாதுகாப்பான இடங்களைத் தேடி இடம்பெயர்ந்துள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருக்கின்றார்.


தமிழக மீனவர்கள் கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடிக்க வழிசெய்யும் வரைவு ஒப்பந்தம் இலங்கையின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது

தமிழக மீனவர்கள் கச்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் மீன் பிடிக்க, இலங்கை அரசால் உரிமங்கள் வழங்கப்படுவதற்கு வழிவகுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம், தற்போது இலங்கை அரசின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் எல்.கே. திரிபாதி தெரிவித்தார்.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தெற்காசியக் கூட்டமைப்பு நாடுகளின் உச்சிமாநாட்டில் கலநதுகொள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை கொழும்பு செல்ல இருக்கும் நிலையில், மீனவர் பிரச்சினை தொடர்பாக வியாழக்கிழமை புதுடெல்லியில் தமிழக மற்றும் மத்திய அரசு அதிகாரிகளின் உயர்நிலை ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாதுகாப்புத்துறைச் செயலர், கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில், தலைமைச் செயர் திரிபாதி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

அப்போது, தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினை தொடர்பாகவும், அதைத் தடுப்பதற்கான வழிகள் குறித்தும், கச்சத்தீவு உடன்படிக்கையை மறுஆய்வு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் விவாதிக்கப்பட்ட அம்சங்களின் அடிப்படையில், பிரதமரிடம் எம்.கே. நாராயணன் கருத்துக்களைத் தெரிவிப்பார் என்று எமது புதுடில்லிச் செய்தியாளர் தங்கவேல் கூறுகிறார்.


“இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது”

பாதுகாப்பு கோரும் மீனவர்கள்
பாதுகாப்பு கோரும் மீனவர்கள்

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் தவறுதலாகச் சென்றாலும், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தியிருப்பதாகவும் தமிழகத்தின் தலைமைச் செயலர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரை, 5 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், மூன்று மீனவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், இருவர் காயமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடற்படையும், கடலோரக் காவல் படையும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருப்பதாக தலைமைச் செயலர் எல்.கே. திரிபாதி தெரிவித்தார்.


மன்மோகன் சிங் கொழும்பு பயணம்

மஹிந்தவை சந்திக்கவுள்ளார் மன்மோகன்
மஹிந்தவை சந்திக்கவுள்ளார் மன்மோகன்

கொழும்பில் நடைபெறும் சார்க் நாடுகளில் உயர்நிலை மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு செல்கிறார்.

கொழும்பு செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதியை வெள்ளிக்கிழமையே சந்தித்துப் பேசுவார் என இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களைக் கைது செய்தால், விசாரணை விவரங்களை இந்திய அரசிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும், மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்றும் இரண்டு வாரங்களுக்கு முன்பு இருநாட்டு அதிகாரிகள் நிலையில் நடைபெற்ற கூட்டத்திலேயே வலியுறுத்தப்பட்டதாகவும் நவ்தேஜ் சர்னா தெரிவித்தார்.


விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு

கடற்புலிகள்
கடற்புலிகள்

விடுதலைப் புலிகளில் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்த 46 வயதான டேனியேல் எனப்படும் தம்பியண்ணா என்பவரை கைது செய்திருப்பதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியைச் சேர்ந்த இவர், கடற்புலிகளின் தலைவரான சூசை அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயற்பட்டு வந்ததாகவும், கடற்புலிகளுக்கு தேவையான நீச்சல் உபகரணங்கள், படகுகள், தொலைத் தொடர்பு கருவிகள் மற்றும் வெடி பொருட்கள் ஆகியவற்றை இலங்கைக்கு கடத்தியதாகவும் தமிழக காவல்துறை கூறியுள்ளது.

நீதிமன்ற உத்தரவையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறையில் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை கொள்வனவு செய்துவந்ததில் அவர் ஒரு முக்கியமான நபர் என்று தமிழக காவல்துறையில் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரியான ஜாஃபர் சேட் தமிழோசையிடம் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி அவர் தமிழகத்துக்கு வந்ததாகவும், இலங்கைக்கு பொருட்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் வெளியிட்ட தகவலையடுத்து, தொடர்ந்து தம்பியண்ணா கண்காணிப்பட்டு பிறகுதான் கைது செய்யப்பட்டதாகவும் ஜாஃபர் சேட் மேலும் தெரிவித்தார்.

இது குறித்த மேலதிகத் தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கு பகுதிக்கு பாதுகாப்பு செயலர் விஜயம்

கோத்தபாய ராஜபக்ஷ
கோத்தபாய ராஜபக்ஷ

இலங்கையின் வடக்கே வன்னிக் களமுனைகளில் வெற்றிகரமாக முன்னேறிச் செல்கின்ற இராணுவ தளபதிகளையும் சிப்பாய்களையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் பாராட்டி ஊக்குவித்ததாகப் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறியிருக்கின்றது.

மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களுக்கு விஜயம் செய்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் விமானப்படைத் தளபதி மார்ஷல் டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட்ட மூத்த இராணுவ அதிகாரிகள் உடன்சென்றுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதில் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்டு அநதப் பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாகவும், கள்முனைகளில் உள்ள இராணுவ உயரதிகாரிகளுடன் இவர்கள் கலந்தாலோசித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் பிரதேசங்களில் இருந்து வெளியேறி வருகின்ற பொதுமக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ஷ தனது விஜயத்தின்போது கவனம் செலுத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.



புலிகளின் பயிற்சி முகாமை அழித்துள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுவுக்கு அருகில் உள்ள விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றை விமானப்படையினர் புதனன்று வான்வழி குண்டுத்தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

கரும்புலிகளின் பயிற்சித் தளமே இந்தத் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் வவுனியா, மன்னார், வெலிஓயா ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய வன்னிக் களமுனைகள் பலவற்றில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத்தின் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் செவ்வாயன்று மாத்திரம் 16 விடுதலைப் புலிகளும் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இதேவேளை, வவுனியா மாவட்டம் பாலமோட்டை பகுதியில் இராணுவத்தினரின் முன்னேற்ற நடவடிக்கை இன்று விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதலில் முறியடிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தத் தாக்குதலில் இராணுவத்தினருக்கு உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

எனினும் இது குறித்து இராணுவ தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.



மடு ஆலயத்துக்கு மன்னார் ஆயர் விஜயம்

மடு ஆலயத்தில் ஆயர்
மடு ஆலயத்தில் ஆயர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து, இராணுவத்தினரின் வசம் வந்துள்ள மடுக்கோவில் பகுதியைப் பார்வையிடுவதற்கு கத்தோலிக்கத் திருச்சபையினருக்கு இன்று செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசையுடன் அங்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு திரும்பியுள்ள, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு அவர்கள் ஆலயத்தின் திருத்த வேலைகள் யாவும் இராணுவத்தினரால் செய்யப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தாங்களே இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என இராணுவத்தினரிடம் கேட்டிருந்த போதிலும் அதற்கான அனுமதி வழங்கப்படாமல் தமக்கும் தெரிவிக்காமல் இராணுவத்தினரே அனைத்து வேலைகளையும் செய்திருப்பதை அங்கு தாங்கள் கண்டதாகவும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

எனினும் மடுக்கோவில் இன்னும் தம்மிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பாதுகாப்புக்காக விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய தேவன்பிட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த மடுமாதாவின் திருச்சொரூபமும் கடந்த வாரம் மன்னார் ஆயர் இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும் தற்போது மடுக்கோவில் ஆயர் இல்லத்திடம் ஒப்படைக்கப்படாததன் காரணமாக ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள மடுக்கோவிலின் ஆவணி மாதத் திருவிழா இம்முறை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.


அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றிலே இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானுக்கும், துணை அமைச்சர் முத்து சிவலிங்கம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் நுவரெலிய நீதிமன்றம் 6 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற சதாசிவம் அவர்களுடனான அலுவலக உரிமை குறித்த வழக்கு ஒன்றில், முன்னதாக நீதிமன்றம் அந்த அலுவலகத்தை சதாசிவம் பயன்படுத்த அனுமதித்திருந்தது.

ஆயினும், அந்த உத்தரவை குற்றவாளிகள் மீறியதாகக் கூறி சதாசிவம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட தற்போதைய வழக்கிலேயே இவர்கள் மூவருக்கும் இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கச்சதீவு உடன்படிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா

இந்திய மீனவர்கள் இழந்த உரிமைகளை மீண்டும் பெற்றுத் தரும் வகையில், கச்சத்தீவு உடன்படிக்கையை இந்தியா மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

கொழும்பில் நடைபெறும் சார்க் உச்சிமாநாட்டின்போது, இது தொடர்பாக இலங்கை அரசுடன் இந்தியப் பிரதமர் பேச்சு நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா.
இந்தியா – இலங்கை இடையிலான கடல் பகுதியில், கடல் கண்ணிவெடிகளைப் பரப்ப இலங்கையை இந்தியா அனுமதிக்கக் கூடாது என்றும், இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



கிளிநொச்சி மாவட்டத்துக்குள் இலங்கை படையினர் பிரவேசித்திருப்பதாகக் கூறுகிறது பாதுகாப்பு அமைச்சகம்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடரும் இராணுவ நடவடிக்கைகளில் மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைப்புறங்களில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினர் குறிப்பிட்டு அடையாளம் சொல்ல முடியாத இடம் ஒன்றில் கிளிநொச்சி மாவட்டத்தினுள் பிரவேசித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

மன்னார் பூனகரி வீதியில் மூன்றாம்பிட்டி பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளில் 5 பேரின் சடலங்கள் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இதேவேளை 5 விடுதலைப் புலிகளின் சடலங்களை இராணுவத்தினர் வெள்ளியன்று மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வன்னிக் களமுனைகளின் பல இடங்களிலும் நேற்று இடம்பெற்ற மோதல்களில் மாத்திரம் 20 விடுதலைப் புலிகளும், 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை மேற்கு, துணுக்காய் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஒரு தொகுதியினர் ஏ9 வீதியின் இரு பக்கங்களிலும் மாங்குளம் தொடக்கம் கிளிநொச்சி வரையில் மரங்களுக்கு கீழ் தஞ்சமடைந்துள்ளதாக கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

Sri Lankan government continues offensive despite ceasefire offer; 15th SAARC South Asian summit kicks off in Colombo

Posted by Snapjudge மேல் ஜூலை 28, 2008


சார்க் மாநாடு கொழும்பில் ஆரம்பம்

சார்க் சின்னம்

தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்கான சார்க் அமைப்பின் உச்சமாநாடு அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்துடன் ஞாயிறன்று தொடங்கியுள்ளது.

அதிகாரிகளின் கூட்டத்துக்கு பின்னர் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நடக்கும். அதன் பின்னர் சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் சந்திப்பு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் மற்றும் முன்றாம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

சார்க் நாடுகளுக்கிடையே உணவுப் பாதுகாப்புக் கையிருப்பு, சார்க் நிதியம் ஏற்படுத்துதல் மற்றும் மின்வலு பரிமாற்றம் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது.

மாநாட்டின் நிகழ்ச்சித் திட்டம் குறித்து கொழும்பிலிருந்து எமது செய்தியாளர் கருணாகரன் வழங்கும் செய்திக் குறிப்பினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கையில் மோதல்கள் நீடிக்கின்றன

இலங்கை சிப்பாய்

இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார் களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்தில் இருந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்குளத்தை நோக்கிச் செல்லும் வீதியை நோக்கி முன்னேறும் இராணுவத்தினர், மல்லாவிக்கு அருகில் தமது படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் உள்ள கல்விளான் பகுதியைச் சுற்றி வளைக்க முயன்ற இராணுவத்தினரை எதிர்த்து, குட்டிமூலை என்னுமிடத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 25 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் 40 படையினர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த மோதல்களில் விடுதலைப் புலிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளம் களமுனையில் கொல்லப்பட்டு இராணுவத்தினரால் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 30 சடலங்களில் 19 சடலங்கள் ஞாயிறன்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பினர் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.

இதனிடையில் மாந்தை மேற்கு, துணுக்காய் பிரதேசங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம், அக்கராயன் போன்ற பிரதேசங்களை நோக்கி நகர்ந்து பாடசாலைகள், பொது இடங்கள் மற்றும் மரநிழல்களின் கீழ் தஞ்சமடைந்திருப்பதாகவும், இவர்களுக்கான அவசர நிவாரணப் பணிகள் பெரும் சிக்கல்களுக்கு மத்தியிலேயே மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

பாடசாலைகளில் இடம்பெயர்ந்து வந்தவர்கள் தங்கியிருப்பதனால், இப்பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.


மீன் பிடித் தடைகளை அகற்ற திருகோணமலை மீனவர்கள் முதலமைச்சரிடம் வேண்டுகோள்

முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்

திருகோணமலை மாவட்டத்தில் மீன் பிடிப்பதில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் அகற்றப்பட வேண்டுமென அம்மாவட்ட மீனவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனைச் சந்தித்து முறைப்பாடு செய்துள்ளனர்.

மீன்பிடிக்க விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டின் விளைவாக தாங்கள்
பெரும் சிரமங்களை அனுபவித்துவருவதாக இந்தப் பிரதேச மீனவர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர்.

தங்கள் நாளாந்த வாழ்க்கையினைக்கூட நடத்த முடியாது துன்பம் அடைவதாகவும் இவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக தற்போது விதிக்கப்பட்ட மீன்பிடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுதாங்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் முதலமைச்சரைக் கோரியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துப் பேசி இதற்கான
தீர்வினைக் காண்பதாக முதலமைச்சர் இவர்களுக்கு
உறுதியளித்துள்ளார்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Sri Lankan Navy denies hand in killing of two Tamil Nadu fishermen

Posted by Snapjudge மேல் ஜூலை 20, 2008

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சிகள் நெருக்குதல்

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதான குற்றச்சாட்டு தொடர்பாக, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றன. இரு தினங்களுக்கு முன்பு, பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி.க்கள் பிரதமரைச் சந்தித்து பல கோரிக்கைகளை விடுத்தார்கள்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை, முதலில் திமுக எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் பிரதமரைச் சந்தித்தார்கள். அப்போது கடந்த 17-ம் தேதி திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வலியுறுத்தினார்கள்.

அதாவது, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு கடலோரக் காவல் படை பாதுகாப்பு உள்பட அனைத்து வகையான பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்றும், பிரதமர் மன்மோகன் சிங் சார்க் மாநாட்டுக்குக் கொழும்பு செல்லும்போது, இப்பிரச்சினையை இலங்கை அதிபரிடம் பேச வேண்டும் என்றும் கோரி்க்கை விடுக்கப்பட்டதாக டி.ஆர். பாலு தெரிவித்தார்.

நேற்று, இலங்கைத் தூதரை அழைத்து, தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடைபெறக் கூடாது என இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரித்திருப்பதாகவும், அதை வரவேற்பதாகவும் பாலு தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள், இலங்கைக் கடல் எல்லைக்குள்ளும் சென்று மீன் பிடிக்க உரிமம் வழங்கப்படும் என பாமக எம்.பி.க்களிடம் பிரதமர் உறுதியளித்திருப்பது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் டி.ஆர்.பாலு, இது புதிய முடிவு அல்ல என்று தெரிவித்தார். இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் விரைவில் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசுவார் என்றும் பாலு தெரிவித்தார்.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை பிரதமரிடம் வைக்கப்பட்டதா என்று கேட்டதற்கு பாலு பதிலளிக்கும்போது, இதுகுறித்து, 22-ம் தேதி அரசு நம்பிக்கை வாக்குக் கோரிய பிறகு, விரிவாகப் பேசப்படும் என்று பாலு தெரிவித்தார்.

அதன்பிறகு, தமிழக காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான கே.வி. தங்கபாலு தலைமையில், காங்கிரஸைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஜி.கே. வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் எம்.பி.க்கள் பிரதமரைச் சந்தித்து அதே கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.


விடுதலைப் புலிகளிடம் இருந்து கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டு ஒராண்டு நிறைவு

இடம்பெயர்ந்தோர்
இடம்பெயர்ந்தோர்

இலங்கையில் கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கபட்டு விட்டதாக தேசிய ரீதியாக விழா எடுக்கப்பட்டு சனிக்கிழமையுடன் ஓராண்டு ஆகிவிட்டது.

இந்த ஒரு வருட காலத்திற்குள் மாகாண சபைத் தேர்தலும் நடை பெற்று முடிந்துள்ளது. மாகாணத்தில் அரசியல் மற்றும் சிவில் ரீதியான நிர்வாகங்கள் முழுமையாக அமுல் படுத்தப்பட்டு அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு பணிகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறி வருகின்றது.

இருப்பினும், மக்களைப் பொறுத்த வரை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொண்டாலும் தங்களின் வாழ்ககை நிலை இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என்றும், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்று மாகாண சபை நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகளிடம் சென்றடைந்திருந்தாலும் பாதுகாப்பு கெடுபிடிகளிலிருந்து மக்கள் இன்னமும் முற்றாக விடுவிக்கப்படவில்லை என்றும் பலர் தமிழோசைக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

இடம்பெயரும் மக்கள்
இடம்பெயரும் மக்கள்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பிரதேசத்தை மீட்பதற்காகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெவ்வேறு களமுனைகளில் வெள்ளிகிழமை இடம்பெற்ற மோதல்களில் 17 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களில் 19 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

வவுனியா மாவட்டத்தின் பாண்டியன்குளம், பாலமோட்டை, நவ்வி ஆகிய இடங்களிலும் மன்னாரில் குறுணியடி, கட்டாடிவயல் ஆகிய இடங்களில் இந்த மோதல்கள் இடம் பெற்றதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

வெலிஓயா மற்றும் நாகர்கோவில், முகமாலை பகுதிகளிலும் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நேற்றைய தினம் மோதல்கள் இடம்பெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் உள்ள குருந்தன்குளம் பகுதியில் வெள்ளிகிழமை அரச படைகள் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையில் மன்னார் மாவட்டம் விடத்தல்தீவு பகுதியைக் கைப்பற்றியுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை நோக்கி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் எறிகணை தாக்குதல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக இலங்கை அரசிடம் இந்திய அரசு முறைப்படி கவலையை தெரிவித்துள்ளது

இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்
இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

இந்திய மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்பாக, இந்தியா சனிக்கிழமை இலங்கை அரசிடம் முறைப்படி தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்திய வெளியுறவுத்துறையின் கிழக்காசியப் பிரிவுச் செயலர் என்.ரவி, புதுடெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை அமைச்சகத்துக்கு அழைத்து இந்தியாவின் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 12-ம் தேதி தமிழக மீனவர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த மீனவர்கள் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும், இந்தியர்கள் மற்றும் இந்திய மீனவர்கள் நலனுக்கு இந்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளிப்பதாகவும் இலங்கைத் தூதரிடம் இந்திய அதிகாரி ரவி திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பதாகவும் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதாகவும், சுட்டுக்கொல்லப்படுவதாகவும் மீனவர்கள் தரப்பில் புகார்கள் கூறப்படுகிறது.

சமீபத்தில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இரண்டு மீனவ்ர்கள் அவ்வாறு கொல்லப்பட்டதாகக் கூற்ப்படுகிறது. அதற்கு சில தினங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து பின்னர் விடுதலை செய்தது.

இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரியுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சிப் பிரதிநிதிகள் ஏற்கெனவே பிரதமரைச் சந்தித்து இதுகுறித்துக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். திமுக எம்.பி.க்கள் நாளை பிரதமரைச் சந்திக்க உள்ளனர். மேலும் திமுக சார்பில் சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் இலங்கை அரசிடம் இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது.


இலுப்பைக்கடவையை கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது

இலங்கை கடற்படையினர்
இலங்கை கடற்படையினர்

இலங்கையின் வட மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கும் நடவடிக்கைகள் வெற்றியை நோக்கி முன்னேறிச் செல்வதாகத் தெரிவித்திருக்கும் அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், வடமேற்குக் கரையோரத்தில் இலுப்பைக்கடவை சிறுநகரை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியிருப்பதாகக் கூறியுள்ளது.

இப்பகுதியில் உள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க விடத்தல்தீவு பகுதியைக் கைப்பற்றிய இராணுவத்தினர் அங்கிருந்து முன்னேறிச் சென்று இலுப்பைக்கடவை என்ற இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விடுதலைப் புலிகளின் கருத்துக்கள் கிடைக்கப்பெறவில்லை.

பூனகரியை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையிலேயே இலுப்பைக்கடவை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் நாச்சிக்குடா கடற்பகுதியில் கடற்படையினரும், விமானப்படையினரும் இணைந்து ஞாயிற்றுகிழமை மதியம் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் 6 படகுகள் முற்றாக அழிக்கப்பட்டதாகவும், மேலும் 2 படகுகள் சேதமடைந்ததாகவும் கடற்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

எனினும் இராணுவத்தின் முன்னேற்றம் குறித்தும், நாச்சிக்குடா கடற்பரப்பில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படும் தாக்குதல் குறித்தும் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

இதற்கிடையில், வவுனியா, மன்னார், வெலிஓயா ஆகிய வன்னிக் கள முனைகளில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் சனிக்கிழமை அன்று நடந்த சண்டைகளில் மாத்திரம் 18 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இராணுவம் புதிய கட்டுப்பாடுகள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம், புனானை மற்றும் வாகனேரி பிரதேசத்தில் விவசாயத்தில ஈடுபட்டுள்ள விவசாயிகள், உணவு மற்றும் எரிபொருட்களை வயல்களுக்கு எடுத்துச் செல்வது தொடர்பாக இராணுவத்தினரால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் தொடர்பாக கிடைத்துள்ள தகவல்களையடுத்தே இந் நடவடிக்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்டப்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் உணவுப் பொருட்களுடன் சில தினங்களுக்கு முன்னர் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்திற்கு உணவு மற்றும் எரிபொருட்களை ஒரே தடவையில் நேரடியாக எடுத்துச் செல்வதற்கு இராணுவும் அனுமதிக்காத போதிலும் அருகில் களஞ்சியப்படுத்தி தேவைக்கேற்ப நாளந்தம் எடுத்துச் செல்வதற்கு அனுமதியளித்துள்ளதாக மாதுறு ஓயா வடக்கு விவசாயிகள்
நலன்புரிச்சங்கத்தின் தலைவரான இஸ்மாலெப்பை மொகமத் முஸ்தபா கூறுகின்றார்.

இதனிடையே, மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்தில் வர்த்தகரான தேவதாஸ் சுரேஷ்குமார் கடத்தி கொலைச் செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் இரு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் போலிஸார் தெரிவித்துள்ளனர்.


தமி்ழகத்தில் கைப்பற்றப்பட்ட முருகன்சிலை மூதூர் முருகன் ஆலயத்தை சார்ந்ததாக உரிமை கோரப்படுகிறது

மூதூர் வெருகலம்பதி முருகன் ஆலயம்
மூதூர் வெருகலம்பதி முருகன் ஆலயம்

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட முருகப்பெருமானின் சிலை தமிழக பொலிசாரால் கைப்பற்றப்பட்டதாக அண்மையில் தமிழோசையில் செய்தி வெளியானது. இந்தச் சிலையானது திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் வெருகலம்பதி முருகன் ஆலயத்திலிருந்து 2006ம் ஆண்டு இடம்பெற்ற வன்செயல் சம்பவங்களின் போது காணாமல் போன சிலை என தாங்கள் உணர்வதாகவும் மூதூர் வெருகலம்பதி ஆலய பரிபாலன சபையின் தலைவர் சிதம்பரப்பிள்ளை தமிழோசையிடம் தெரிவித்திருக்கின்றார்.

இந்தச் சிலை களவாடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தமிழக முதல்வருக்கு எழுதியுள்ளதாகவும், அவரது பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

.


இடம்பெயரும் மக்களுக்கு உதவி கோரி யாழ் ஆயர் ஜனாதிபதிக்கு கடிதம்

கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் இடம்பெயர்ந்த நிலையில் துன்பப்படுகின்ற மக்களின் துயர் துடைப்பதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளவேண்டும் என யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் இலங்கை ஜனாதிபதியிடம் கடிதம் மூலமாக அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் இருந்தும், கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் இருந்தும் சுமார் 30 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளாகத் தெரிவித்துள்ள யாழ் ஆயர், இவர்களுக்கான அவசர நிவாரண உதவிகளை மேற்கொள்வதில் அரச அதிகாரிகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும் எதிர்நோக்கியுள்ள சிரமங்களைப் போக்கி உரிய ஒத்துழைப்பை அரசாங்கம் அவசரமாக வழங்க வேண்டும் எனவும் தனது கடிதத்தில் அவர் கோரியிருக்கின்றார்.

இது குறித்த மேலதிக விபரங்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.


ஆட்கடத்தலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வாகனம் ஈ.பி.டி.பி. காரியாலத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்

பறிமுதல் செய்யப்பட்ட வேன் வண்டி

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெள்ளை வேன் ஒன்று திங்களன்று செங்கலடியிலுள்ள ஈ.பி.டி.பி. காரியாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

செங்கலடி பிரதேசத்தில் வர்த்தகரான தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சமப்வம் தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணைகளின போது கிடைத்த தகவலை அடுத்தே இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 19ஆம் திகதி ஈ.பி.டி.பி.யினரால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இவ்வர்த்தகர், இந்த அமைப்பின் காரியாலயத்திற்கு அருகாமையிலுள்ள காணியில் சடலமாக தோண்டியெடுக்கப்பட்டிருந்தார்.

கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்

இக்கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக செங்கலடி பிரதேச ஈ.பி.டி.பி பொறுப்பாளர் ரவி எனப்படும் தர்மலிங்கம் ஈழமாறன் உட்பட அந்த அமைப்பைச் சேர்ந்த 9 பேர் சந்தேகத்தின் பேரில் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

செங்கலடி ஈ.பி.டி.பி. காரியாலயத்தை பொலிசார் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தியபோது வர்த்தகரொருவரிடம் கப்பமாகப் பெறப்பட்ட மோட்டார் சைக்கிளொன்றும் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேவதாஸ் சுரேஷ்குமார் கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக புலன்விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான ரஞ்சித் குணசேகர தமிழோசையிடம் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Two Indian fishermen killed: Sri Lanka Navy denies shooting the Indian Citizens

Posted by Snapjudge மேல் ஜூலை 13, 2008

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இரு தமிழக மீனவர்கள் பலி

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டம் ஆற்காட்டுத் துறை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக உயிரிழந்ததாகவும், மூன்றவது மீனவர் படுகாயமடைந்ததாகவும் அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து நாகப்பட்டிணம் ஆற்காட்டுத் துறை மீனவர் தலைவர் மயில்வாகனன் அவர்கள் கூறும் போது, சேது சமுத்திர திட்டத்திற்கான அகழ்வு பணிகள் நடைபெற்ற இடத்தில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த இலங்கை படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டு ஒருவர் காயமடைந்ததாக கூறினார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தமிழக மீன் வளத் துறை அமைச்சர் கே பி பி சாமி அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த சம்பவம் இந்திய எல்லையில் நடைபெற்றது போல தெரிகிறது என்றும், இருந்தாலும் இதனை விசாரணை மூலம் உறுதிப்படுத்த வேண்டியிருப்பதாகவும் கூறினார். கடந்த இரண்டாண்டு ஆண்டுகளில் இது போல பல சம்பவங்கள் இலங்கை படையினரால் நடத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து இலங்கை அரசின் விளக்கத்தைப் பெற சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் பி எம் அம்சா அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்த கேள்விகளுக்கு தற்போது தம்மால் பதில் கூற முடியாது என்றும்- ஒரு விளக்கத்தை மட்டுமே அளிக்க முடியும் என்றும், இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் குறித்து விசாரிக்கப்படுகின்றது என்ற விளக்கத்தை மட்டுமே அளிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இது குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதிய குடியேற்ற இடங்களை நிராகரித்துள்ளனர் சம்பூர் மக்கள்

இடம்பெயர்ந்தோர்
இடம்பெயர்ந்தோர்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை இறால்குழியிலும், சின்னகக்குளத்திலும், குடியமர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவ்விடங்களை ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் வழித்துணையுடன் நேரில் சென்று பார்வையிட்ட சம்பூர் பிரதேச குடியிருப்பாளர்கள் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த அகதிகளாக தங்கியிருக்கின்றார்கள்.

மூதூர் கிழக்கு இடம் பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கத்தின் தலைவரான குமாரசாமி நாகேஸ்வரன், புதிய குடியேற்றத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ள இடம், மக்கள் வாழ்வதற்கோ, தொழில் செய்வதற்கோ, சம்பூர் பிரதேசத்துடன் ஒப்பிடும் போது பொருத்தமற்றது என்றார்.

இடம் பெயர்ந்துள்ள குடும்பங்கள் விருப்பத்திற்கு மாறான இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என மீள் குடியேற்றத்துறை அமைச்சரான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.


மன்னார் மற்றும் முல்லைத்தீவில் இருந்து 1400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு

இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படைகள் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இது வரையில் 1400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளதாக கிளிநொச்சி செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள 600க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம், முழங்காவில், கரியாலை நாகபடுவான் பகுதிகளில் இருப்பதாக கிளிநொச்சி செயலகம் தெரிவித்திருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் தற்போது தீவிரமடைந்துள்ள மோதல் நிலைமைகளினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இருந்து, இந்த மாதத்தில் மாத்திரம் 800 குடும்பங்களசை; சேர்ந்த 3500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குடும்பங்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன், ஸ்கந்தபுரம் பகுதிகளுக்கு வந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவிக்கின்றார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் இடம்பெயர்வுகள் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உணவு வழங்கல் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது இது குறித்த செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையில் மொபைல் தொலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு புதிய நடைமுறைகள்

பயன்பாட்டாளர்களுக்கு புதிய நடைமுறைகள்
பயன்பாட்டாளர்களுக்கு புதிய நடைமுறைகள்

இலங்கையில் தேசிய பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி மொபைல் தொலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் இறுக்கமான நடைமுறைகளை இலங்கைத் தொலை தொடர்பு சீராக்கல் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக, இலங்கை தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், மொபைல் தொலைபேசியை பாவிக்கும் ஒரு வாடிக்கையாளர், அந்த “சிம் கார்ட்” (Subscriber Identity Module) இணைப்பினை வழங்கிய நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உரிமைச் சான்றிதழை எப்போதுமே வைத்திருக்க வேண்டும் எனவும், மற்றமொரு நபரின் சிம்கார்டை பயன்படுத்தக் கூடாது என்றும் தொலைத் தொடர்புகள் சீராக்கல் ஆணைக்குழு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

பொறுப்பற்ற முறையில் தொலைபேசி இணைப்புக்களை பயன்படுத்துவோரால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களைக் குறைத்துக்கொள்வதற்கும், சட்டரீதியற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கங்களின் அடிப்படையிலேயே
இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தொலைத் தொடர்புகள் சீராக்கல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக சிங்கள மாணவர்கள் சேர்ப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகம்
தென்கிழக்கு பல்கலைக்கழகம்

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் எதிர் வரும் கல்வியாண்டு சிங்கள மாணவர்களை அனுமதிப்பது என பல்கலைக்கழ மானிய ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானத்தையடுத்து மட்டக்களப்பிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 41 சத வீதமும் அம்பாறையிலுள்ள தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 27 சத வீதமும் சிங்கள மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழத்திற்கு தெரிவாகியுள்ள 743 பேரில் தமிழர் – 358,சிங்களவர்கள் – 306 ,முஸ்லிம்கள் – 79 என்றும், தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள 518 பேரில் முஸ்லிம்கள் – 361 ,சிங்களவர்கள் 140 ,தமிழர்கள் – 17 என இந்த எண்ணிக்கை அடங்குவதாக பல்பலைக்கழக நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் மாணவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் சிங்கள மாணவர்கள் தெரிவாகியிருப்பது இதுவே முதற் தடவையாகும்.

இது தொடர்பாக அப்பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி ஹுசேன் இஸ்மாயில் மற்றும் உயர் கல்விப் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா ஆகியோர் வெளியிட்ட கருத்துக்களளைத் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இந்திய அரசு சோள ஏற்றுமதிக்கு தடை விதித்து இருப்பதால் இலங்கையில் கோழிப் பண்ணை தொழில் பாதிப்பு

கோழிப்பண்ணை தொழில் பாதிப்பு
கோழிப்பண்ணை தொழில் பாதிப்பு

இந்திய அரசு சோள ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால், இலங்கையில் கோழிப் பண்ணைத் தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஏற்றுமதி தடை கால்நடைத் துறைக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலிருந்து சோள இறக்குமதி நின்று போயுள்ளதால் கோழித் தீவன உற்பத்தி இலங்கையில் பெரும் வீழ்ச்சியை சந்திக்கிறது என்று அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று இலங்கையின் கால்நடை துறைக்கான பிரதி அமைச்சர் அப்துல் பாயிஸ் அவர்கள் பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவிக்கும் போது, தாங்கள் இது தொடர்பாக இந்திய அதிகாரிகளிடம் உடனடியாக தொடர்பு கொண்டு சோள ஏற்றுமதி தொடர்வதற்கான வழிவகைகளை ஆராயவிருப்பதாகவும், அதே சமயம் உள்நாட்டிலேயே சோள உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தாங்கள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரம் குறித்து விவாதிக்க திமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.

இது குறித்து திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், எல்லை தாண்டி மீன்பிடிக்கின்றனர் என்பதை சாக்காக வைத்து, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர், இக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய அரசை வற்புறுத்த மாநில அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது குறித்து முடிவெடுக்க உயர்நிலைக் குழு கூட்டம் எதிர்வரும் ஜூலை 17ஆம் நாள் நடைபெறும் எனக் கூறியிருக்கிறார்.

இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 9 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இண்டு தினங்களுக்கு முன்பு வேதாரண்யம் பகுதி மீனவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர், ஞாயிறன்றும்கூட துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் மிரட்டியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் இராமேஸ்வரத்தில் பெரும் ஆர்ப்பாட்டடத்தை ஞாயிறன்று நடத்தியிருக்கிறார். தொடர்ந்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழக அரசு மெத்தனமாக இருக்கிறது என கண்டன அறிக்கை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரிக்குமாறு கோரும் காங்கிரசிடம் பல்வேறு கட்சிகளும் பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்துவரும்போது, மீனவர்கள் பிரச்சினைக்காக ஏன் திமுக இன்னும் அழுத்தமாக குரல்கொடுக்கக்கூடாது என கேள்விகள் பல தரப்புகளிலிருந்தும் எழும் பின்னணியிலேயே திமுக கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை தொடர்வதன் அடிப்படைக் காரணங்கள் குறித்து திருவனந்தபுரத்திலிருந்து இயங்கும் தென்னிந்திய மீனவர் கூட்டுறவு அமைப்புகளின் சம்மேளனத்தில் கடல்வள மேலாண்மை துறை இயக்குநரும் இலங்கைக்கு இந்த பிரச்சினை குறித்து ஆராய சென்றுவந்தவருமான டாக்டர் பி.சுப்ரமணியன் வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கொழும்பு புறநகர்ப் பகுதியிலிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக குடிமக்கள் வெளியேற்றம்

இலங்கை முஸ்லிம்கள் – கோப்புப் படம்

இலங்கைத் தலைநகர் கொழும்பில் கொம்பெனித் தெருவில் வசிக்கும் பல நூறு குடும்பங்களை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியேற சொல்லியிருப்பதாக இலங்கை ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நடவடிக்கை ஏன் என்பது குறித்து இலங்கை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் செயலர் பிரதாப் ராமானுஜன் தமிழோசையில் கருத்து வெளியிடுகையில், சார்க் மாநாடு நடைபெறவிருக்கும் நிலையில், தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்படுகின்றன என்றும் கொம்பெனித் தெரு பகுதியானது அதி உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் வருகின்றபடியால் அங்கிருப்பவர்களை வெளியேற்ற வேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொம்பெனித் தெருவில் கட்டப்பட்டுள்ள வீடுகள், ரயில்வே துறைக்கு சொந்தமான நிலத்தில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகள் என்றும், இங்கு வசிப்பவர்களுக்கு மாற்றிடத்தில் வீடுகள் கட்டித்தருகின்ற பணி நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது கொம்பெனித் தெருவில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடத்தில் கட்டப்பட்டுவரும் நிரந்தர வீடுகள் கிடைக்கும் வரையில், அவர்கள் தாங்களாக பார்த்துச் செல்லும் வீட்டுக்கு வாடகை கொடுப்பதில் அரசாங்கம் உதவி செய்யும் என்றும், அல்லது அரசாங்கம் அமைத்துள்ள தற்காலிக குடியிருப்பில் அவர்கள் தங்கலாம் என்றும் ராமானுஜம் கூறினார்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Breakaway LTTE, TMVP leader Karuna back in Colombo; US ‘concerned’ over Sri Lanka rights, attacks on media; Victor Perera the new Governor of the Northern Province

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2008

சுயவிருப்பத்துடன் இலங்கை திரும்பினேன்: கருணா

முறைகேடுகள் இல்லாமலும், தனது விருப்பின் பேரிலும்தான் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பியதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான கருணா தெரிவித்துள்ளார். தனது மக்களுக்கு தான் செய்ய வேண்டிய பணிகளைக் கருத்தில் கொண்டு தான் நாடு திரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என்று தான் விரும்பவில்லை என்றும் பிள்ளையான் அப்பதவியில் இருப்பதை தான் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

வடக்கில் நடந்துவரும் மோதல்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எதுவித சம்பந்தமும் கிடையாது; இராணுவத்துக்கு தமது அமைப்பினர் உதவுவார்கள் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழோசைக்கு பிரத்தியேகமாக செவ்வியொன்றை வழங்கிய கருணா அவர்கள், கிழக்கு மாகாணத்தில் அவசரமாக தேர்தல் நடத்தப்பட்டதன் காரணத்தினால் தமது அமைப்புக்கு மேலும் கிடைத்திருக்க வேண்டிய ஆசனங்கள் கிடைக்காமல் போனதாகக் கூறியனார்.

இருந்தபோதிலும் தமது அமைப்பு இந்த தேர்தலில் வெற்றி பெற்றது குறித்தும், தனது கட்சியைச் சேர்ந்த பிள்ளையான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கருத்து

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்சித் தலைவராக கருணா நீடிப்பார் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கருணா அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வருகையைத் தெரிவித்ததாகவும், தனக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் பின்னர் சந்திப்பதாக கருணாவிடம் தெரிவித்துள்ளதாகவும் முதல்வர் கூறினார்.

இவர்களது செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார் கருணா

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய கர்ணல் கருணா பிரித்தானியாவில் குடிவரவு தடுப்பு முகாமிலிருந்து இலங்கைக்கு நேற்று(புதன்கிழமை) திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்துக்காக பேசவல்ல அதிகாரியான டோமினிக் வில்சன் தமிழோசையிடம் உறுதி செய்தார்.

கருணா இலங்கை திரும்பியுள்ளதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளர் ஆசாத் மௌலானாவும் உறுதி செய்துள்ளார்.

வேறு பெயரிலான ஒரு கடவுச்சீட்டுடன் பிரித்தானியவுக்குள் நுழைந்த வழக்கில் பிரித்தானிய அரசால் கைது செய்துபட்ட கருணா அவர்களுக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை முடிவடைந்த பின்னர் அவர் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே கருணா இலங்கை திரும்பிவிட்டாலும், அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட மாட்டாது என்று அவரது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கைக் கடற்பரப்பரப்பில் நுழைந்த பல நூறு இந்திய மீன்பிடிப் படகுகள் விசாரணையையடுத்து விடுவிப்பு

இராமேஸ்வரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள்
இராமேஸ்வரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள்

இலங்கைக் கடற்பரப்பின் மன்னார் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் பல நூறு இந்திய மீன்பிடி படகுகளை இலங்கைக் கடற்படையினர் நேற்றுமாலை கைதுசெய்து, பலமணிநேர தீவிர விசாரணைகளின் பின்னர் விடுவித்திருக்கிறார்கள்.

இது குறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, நேற்று, புதன்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள விடத்தல்தீவு பகுதியை நோக்கி இந்த இந்திய மீன்பிடி படகுகள் சென்று கொண்டிருந்தவேளை, நெடுந்தீவிற்கு மன்னாருக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, தலைமன்னார் கடற்கரைக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வைத்து இவர்கள் மீது கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று
இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று

இதன்பின்னர் சுமார் இரவு 10 மணியளவில் இதில் 299 இந்திய படகுகள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், எஞ்சிய ஒரு படகில் திசையறிகாட்டிபோன்ற கருவிகள் காணப்பட்டதால், மேலதிக சோதனைக்காக அது தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இன்று காலை அதுவும் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சோதனை நடவடிக்கைகளின்போது இந்திய மீனவர்களிடமிருந்தோ அல்லது அவர்களுடைய படகுகளில் இருந்தோ சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, இந்திய மீனவர்கள் இவ்வாறு அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்துவருவது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிவருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கைப் படையினர் இந்திய மீனவர்களைக் கைது செய்ததை கண்டிக்கும் இராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் தலைவரான போஸ் அவர்கள், ஆனால், தமது மீனவர்கள் இலங்கைப் பகுதிக்குள் சென்று மீன்பிடிப்பதையும் ஒப்புக்கொள்கிறார்.

இது குறித்த போஸ் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்


ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் வடக்கு மாகாண ஆளுனராகப் பதவியேற்பு

விக்டர் பெரேரா பதவியேற்கும் காட்சி
விக்டர் பெரேரா பதவியேற்கும் காட்சி

இந்த வார முற்பகுதியில் இலங்கை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற விக்டர் பெரேரா அவர்கள் வடக்கு மாகாணத்தின் ஆளுனராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருக்கிறார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்திருந்த வடகிழக்கு மாகாணம், நீதிமன்றத் தீர்பொன்றின் பின்னர் இருவேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மாகாணத்திற்கென தனியொரு ஆளுனர் நியமிக்கப்படிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இதற்கு முன்னர் தற்போது கிழக்கு மாகாண ஆளுனராகப் பணிபுரிந்துவரும் முன்னாள் கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவே வடக்கு மாகாண ஆளுனராகவும் கடமையாற்றிவந்தார்.


இலங்கை மனித உரிமை நிலவரம் குறித்து அமெரிக்கா கவலை

ஊடகங்கள் மீதான அழுத்தம் அதிகரிப்பதாக கவலை

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தமக்கு மகிழ்சியளிக்கவில்லை என்று அமெரிக்கா இலங்கையிடம் கூறியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைச் சூழல் குறித்தும் ஊடகங்கள் மீதான அழுத்தங்கள் குறித்தும் அமெரிக்கா அதிகமாக கவலைப்படுவதாக, ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலரான இவான் பைஜன்பாம், இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் முடிவில் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், தங்களின் பாதுகாப்பு குறித்து உடகவியலாளர்கள் எழுப்பிய பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஒரு அமைச்சகக் குழு அமைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கையின் வளர்ச்சிக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்றும் பைஜன்பாம் தெரிவித்துள்ளார்.


ஓமந்தை சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ள நிலையில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் – பெட்டகம்

பாதை திறக்காத நிலையில் பயணத்தின் பாதிவழியில்…

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் இடையிலான ஓமந்தை சோதனைச்சாவடி 3 ஆவது நாளாக இன்றும் திறக்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் வன்னிப் பகுதிக்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோக நடவடிக்கைகள் என்பனவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

வன்னிப்பிரதேசத்திற்குச் செல்வதற்காக வவுனியாவில் சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கின்றார்கள்.

கையிலிருந்த பணம் செலவழிந்துவிட்டதனால் சாப்பிடவும் வழியில்லை செலவுக்கும் வழியில்லை என இவர்கள் வவுனியா செயலக அதிகாரிகளிடம் முறையிட்டதை அடுத்து, விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை OFFER என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியோடு அரச அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

போக்குவரத்தின்மை காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் நிவாரண விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Posted in Govt, India, Law, Order, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Sakthi TV journalist killed; Outcry as Sri Lanka’s defence chief Gotabhaya urges censorship: Colombo & Sri Lanka

Posted by Snapjudge மேல் மே 28, 2008

கோதபய ராஜபக்ஷ கூறியதாகத் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு இலங்கை ஊடக அமைப்புகள் எதிர்ப்பு

கோதாபய ராஜபக்ஷ

இலங்கை பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷ கூறியதாகக் கூறப்படும் கருத்துக்களுக்கு இலங்கையின் ஊடக அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இலங்கையின் வடக்கே இராணுவத்துக்கு விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் குறித்து பக்கசார்பற்ற முறையில் செய்திகளை வெளியிடுவதற்கு பாதுகாப்பு செயலரின் பேச்சு அச்சுறுத்தலாக உள்ளதாக ஊடக அமைப்புகள் கருதுகின்றன.

பத்திரிக்கையாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு அடித்துத் துன்புறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த இரண்டு மூத்த பத்திரிக்கையாளர்களை கோதாபய ராஜபக்ஜசே தன்னைக் காணவருமாறு பணித்ததாக ஐந்து ஊடக குழுமங்கள் ஒரு அறிக்கையில் கூறியுள்ளன.

அரசாங்க ஊடகத்தில், இராணுவம் மற்றும் இராணுவத் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் ஏற்புடையவையல்ல என்று பாதுகாப்பு ஆலோசகருடனான இந்தச் சந்திப்பின்போது இவர்களுக்கு கூறப்பட்டதாகவும், அவர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து இலைமறைகாயாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் ஊடக குழுமங்கள் தெரிவித்துள்ளன.


யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் வெட்டிக் கொலை

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் கல்லுண்டாய்வெளியில் புதன் மாலை 4.30 மணியளவில் சக்தி தொலைக்காட்சி சேவையின் யாழ் மாவட்ட செய்தியாளராகிய 32 வயதுடைய பரநிருபசிங்கம் தேவகுமாரன் அடையாளம் தெரியாத ஆட்களினால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக யாழ்பபாணம் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இவருடன் சென்றதாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் செயலக சிற்றூழியராகிய 38 வயதுடைய மகேந்திரன் வரதன் என்பவர் படுகாயமடைந்து யாழ் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறந்ததாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்திய மல்லாகம் மாவட்ட நீதிபதியின் உத்தரவையடுத்து, செய்தியாளர் தேவகுமாரனின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.


இலங்கை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தடுப்புக் காவலில்

இலங்கையின் வடமேற்குக் கடற்பரப்பில் கச்சதீவுக்கு அருகில் செவ்வாய் இரவு தலைமன்னார் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 23 இந்திய மீனவர்களை வியாழன் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் புதனன்று உத்தரவிட்டிருக்கின்றது.

இலங்கைக் கடற்பரப்பில் 4 படகுகளில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தமைக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தலைமன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள்.

தங்கச்சிமடம், இராமேஸ்வரம், பாம்பன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இவர்கள் நாளை மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் எனவும் பொலிசார் கூறியிருக்கின்றனர்.

இதேவேளை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த 13 இந்திய மீனவர்களையும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் நேற்று விடுதலை செய்திருக்கின்றது.

இவர்களை கொழும்பு மீரிஹானையில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி அங்கிருந்து அவர்களை அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் அதிகாரிகளுககு உத்தரவிட்டிருக்கின்றது.


மட்டக்களப்பில் தமிழர்-முஸ்லிம் இடையிலான பதற்றத்தைத் தணிப்பது தொடர்பில் கூட்டம்

கிழக்கு மாகாண முதல்வர்

இலங்கையின் கிழக்கே கடந்த சில தினங்களாக வழமைநிலை பாதிக்கப்ப்டுள்ள மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் வியாழன் முதல் வழமைநிலையை ஏற்படுத்தவது என புதன் மாலை பொலிஸ் நிலையத்தில் மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அமீர் அலி, மாகாண சபை உறுப்பினர்கள், சமய சமூக பிரமுகர்கள் மற்றும் பாதுகாப்பு அதிபாரிகள் உட்பட பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஏறாவூர் எல்லைப் பிரதேசமான ஆறுமுகத்தான் குடியிருப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்டுவரும் காவலரனை அகற்றுமாறு முஸ்லிம்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும், ஆறுமுகத்தான் குடியிருப்பிலிருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அச்சமின்றி மீளக் குடியமர்வதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை முஸ்லிம் பிரதிநிதிகள் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சமாதானத்தை வலியுறுத்தி கொழும்பில் பெண்கள் பேரணி

இலங்கை தலைநகர் கொழும்பில் புதனன்று நூற்றுக்கணக்கான பெண்கள் அமைதிப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

நாட்டில் நடந்துவரும் கொடிய யுத்தத்தினை நிறுத்தவேண்டும், அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சமாதானத்தை நிலைநிறுத்த புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும், அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும், உலக மயமாக்கல் அடிமைத் தனத்திற்கு பணியக்கூடாது போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து, சம்பந்தப்பட்ட தரப்பினர்மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்கும் நோக்கில் போராட்டம் நடத்தப்பட்டது.

சமூக நீதிக்கான பெண்கள் இயக்கம், சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்திக்குமான மக்களுக்கிடையிலான கலந்துரையாடல் போன்ற அமைப்புக்களின் ஏற்பாட்டில் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிற்கு எதிரில் இடம்பெற்ற இந்த அமைதிப் பேரணியில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் பதாதைகளைத் தாங்கிய வண்ணம் கலந்துகொண்டனர்.


Posted in Govt, Law, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

18 civilians killed in Wanni blasts; Moothoor fishermen protest against fishing ban; Pillayan group supporters attack Muslim traders in Thaazhangkudaa

Posted by Snapjudge மேல் மே 26, 2008

இலங்கை ரயில் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி

இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே தெஹிவளையில், ரயிலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில், 8 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 70க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற்பகலில் சன நெரிசல் மிக்க வேளையில், பயணிகள் பெட்டியில், பொருட்கள் வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டே வெடித்ததாக இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இந்தத்தாக்குதல் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது அரசாங்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து இதுவரை விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து கருத்து எதுவும் வரவில்லை.

கடந்த மாதம் பேருந்து குண்டு வெடிப்பு ஒன்றில், 20 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் என்னும் இடத்தில் காணாமல் போனவர்களை மீட்டுத் தரக்கோரி முஸ்லிம்கள் நடத்தியஆர்ப்பாட்டத்தின் மீது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.


மட்டக்களப்பில் முஸ்லிம்கள் கடத்தப்பட்டதில் தனது அமைப்பைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை பிள்ளையான் ஒப்புக்கொண்டார்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியில் கடந்த வியாழனன்று முஸ்லிம்கள் இருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் தனது அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தார் என்பதை கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் ஒப்புக்கொண்டார்.

சம்பந்தப்பட்ட அந்த உறுப்பினரை தாங்களே பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்ட முதல்வர், தனது அமைப்பிலேயேகூட எவரும் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்வதை தான் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதேவேளை அந்தப் பகுதியில் கடத்தப்பட்ட முஸ்லிம்களை மீட்டுத்தரக் கோரி ஏறாவூரில் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், ஒரு பெண் பலியானதுடன், மற்றுமொருவர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றனர்.

கடந்த சில நாட்களில் ஏறாவூர் பகுதியில் 4 முஸ்லிம்கள் கடத்தப்பட்டனர். ஆயினும் அவர்களில் இருவரே இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட இரு முஸ்லிம்களும், தம்மை, முதலமைச்சர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களே கடத்தியதாக தெரிவித்திருப்பதாக கூறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்கள், கடத்தப்பட்டு இதுவரை வீடு திரும்பாத மற்ற இருவரது விடயத்தில் கூட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் பிள்ளையானிடம் கேட்டபோதே, இதுவரை விடுவிக்கப்பட்டவர்கள் விடயத்தில் தமது அமைப்பின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டதை ஒப்புக்கொண்ட அவர், ஆனால், இதுவரை விடுவிக்கப்படாதவர்கள் விடயத்தில் தமக்கு சம்பந்தம் எதுவும் கிடையாது என்று கூறினார். அரசியல் நோக்கம் கொண்ட சிலரே இதற்குக் காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதற்கிடையே, இந்தக் கடத்தல்கள் காரணமாக அந்தப் பகுதியில் பதற்ற நிலை தொடர்ந்து வருகிறது. அதனையடுத்து ஏறாவூர் பகுதியில், இன்று இரவு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் குண்டுவெடிப்புகளின் இலக்கானதைக் கண்டித்து வவுனியாவில் ஹர்த்தால்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் பொதுமக்கள் பிரயாணம் செய்த வாகனங்கள் மீது கடந்த வாரம் அடுத்து நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களைக் கண்டித்து திங்களன்று வவுனியாவில் கடையடைப்பும் பணிப் புறக்கணிப்பும் மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலைகள், அலுவலகங்கள் இயங்கவில்லை. போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசங்களிலும் இன்று பாடசாலைகள் இயங்கவில்லை என்றும் அங்கு கறுப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்ததாகவும் வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களாகிய மல்லாவி, முறிகண்டி ஆகிய இடங்களில் கடந்த வியாழனன்று அம்புலன்ஸ் வண்டியொன்றின் மீதும் வெள்ளிக்கிழமையன்று சிவிலியன்கள் பிரயாணம் செய்த வண்டி ஒன்றின் மீதும் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டனர், 6 பேர் காயமடைந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் வவுனியா மன்னார் மணலாறு மற்றும் முகமாலை போர் முன்னரங்குகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இரு தரப்புக்களையும் சேர்த்து 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ அறிக்கைகள் கூறுகின்றன.


மீன்பிடித் தடையை விலக்கக்கோரி மூதூர் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர்
பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவாகள் இப்பிரதேசத்தில் விதிக்கப்பட்டுள்ள மீன்பிடித் தடையை
விலக்குமாறு கோரி வியாழனன்று ஆர்ப்பாட்டப் பேரணியினை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டோர், மீன்பிடித்
தடையயை நீக்குமாறு கோரும் மகஜர் ஒன்றினை ஜனாதிபதியிடம்
கையளிக்குமாறு பிரதேச செயலக அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினைக்கான தீர்வினை செவ்வாய்கிழமையன்று காண்பதாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

கடந்த பதினாறு தினங்களாகவே தொடரும் இப்பிரச்சினை
தொடர்பாக கருத்துத் தெரிவித்த மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச்
செல்லாததினால் தாங்கள் வருமானம் இன்றி பசியால் வாடுவதாக
தெரிவித்துள்ளனர்.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

19 Tamil Nadu fishermen blindfolded, attacked by Sri Lanka Navy for 5 days; India extends ban on LTTE by two years

Posted by Snapjudge மேல் மே 15, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 15 மே, 2008


கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பதவியேற்பு ஒத்திப்போடப்பட்டுள்ளது

சந்திரபால லியனகே

இலங்கையில், வெள்ளியன்று நடைபெறவிருந்த, கிழக்கு மாகாண சபைக்காக புதிதாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுபற்றி, பிபிசி சிங்கள சேவையிடம் பேசிய ஜனாதிபதியின் அலுவலகத்தைச் சேர்ந்த சந்திரபால லியனகே அவர்கள், கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் யார் என்று இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றும், இது தொடர்பில் ஜனாதிபதிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் இன்று முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும் கூறினார்.

ஆகவே இந்த விடயம் குறித்து முடிவெடுப்பதற்காக, கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சிகளின் உறுப்பினர்களுடன் நாளை சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாகவும், அந்தக் கூட்டத்திலேயே முதலமைச்சர் நியமனம் குறித்த இறுதி முடி எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீட்டித்துள்ளது

இலங்கையின் விடுதலைப்புலிகள் அமைப்பு மீது தான் விதித்திருந்த தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய உள் துறை அமைச்சகத்திலிருந்து விடுக்கப்பட்ட ஒரு அறிக்கை இந்த குழு ஒரு சட்டவிரோத அமைப்பு என்று கூறியது.

முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, இந்தியா 1992ல் முதன் முதலில் தமிழ்ப்புலிகள் அமைப்பை தடை செய்தது. இந்த கொலைக்கு புலிகளே காரணம் என்று கூறப்பட்டது.

தமிழ்நாட்டில் சில விடுதலைப்புலி ஆதரவு அமைப்புகள் இந்த தடைக்கு எதிராக பிரச்சாரம் செய்துவந்தன.

இலங்கை பாதுகாப்பு படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடக்கும் மோதல் சமீப மாதங்களில் தீவிரமடைந்திருக்கும் நிலையில் இந்த தடை நீட்டிப்பு வருகிறது.


இலங்கையில் கைதான 19 இந்திய மீனவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்

இலங்கையின் வடமேற்கே தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தபோது இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 19 இந்திய மீனவர்களை வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

மூன்று மீன்பிடி இழுவைப் படகுகளில் வந்த இவர்கள், கடந்த 9 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, கடற்படையினரால் விசாரணை செய்யப்பட்டதன் பின்னர் வியாழனன்று பொலிசாரினால் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

இராமநாதபுரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த இந்த மீனவர்கள் உடனடியாக அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையில் வவுனியா, மன்னார், ஜனகபுர, மணலாறு பிரதேச போர்முனைகளில் நேற்று இராணுவத்தினர் மேற்கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைளின்போது இரு தரப்பிலும் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவச் சிப்பாய் ஒருவரைக் காணவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.


Posted in Govt, India, Law, Order, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »