Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘London’

Touring British Minister Lord Malloch-Brown meets President; Neil Buhne, United Nations (UN) representative & Humanitarian coordinator, on a fact finding visit to Batticaloa

Posted by Snapjudge மேல் ஜூலை 16, 2008

இலங்கையில் பிரிட்டிஷ் அமைச்சர் மலக் பிறவுண்

பிரித்தானியாவின் ஆபிரிக்க, ஆசிய மற்றும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கான வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மலக் பிறவுண் அவர்கள் இன்று மூன்று நாள் அரசமுறை பயணமொன்றினை மேற்கொண்டு இலங்கையின் தலைநகர் கொழும்பு சென்றிருக்கிறார்.

அங்கு அவர் அரச மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகளையும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக மற்றும் சமயத் தலைவர்களையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து பேசி வருகிறார்.

இவரது விஜயம் குறித்துக் கருத்துவெளியிட்ட இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், அமைச்சர் பிறவுண் தனது சந்திப்புக்களின்போது குறிப்பாக இலங்கையில் தற்போது நிலவும் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து கலந்துரையாட இருப்பதாகவும், மனித உரிமை ஆணைக்குழு, அதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு போன்ற மனித உரிமை மீறல் நிலைமைகளை கண்காணித்துவரும் அமைப்புக்களை வலுப்படுத்துதல் போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்தவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றினைக்காணுவதற்கு ஊக்கமளிக்கக் கூடிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கு தனது இந்த விஜயத்தினைப் பயன்படுத்தவுள்ள பிரித்தானிய அமைச்சர் பிறவுண், அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் வளர்ச்சிப்போக்கு குறித்தும், அக்குழுவினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால விதந்துரைகளின் நடைமுறைப்படுத்தல்கள் குறித்தும் இலங்கை அரச தலைவர்களுடன் பேசவிருப்பதாகவும், பிரித்தானிய தூதரகம் தெரிவித்திருக்கிறது.


மட்டக்களப்பில் ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி

நியூ பொனே
நியூ பொனே

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்புக்கு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்ட ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும் மற்றும் மனிதாபிமான பணிக்கான இணைப்பாளருமான நியூ பொனே அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நேரடியாக ஆராய்ந்துள்ளார்.

ஐ.நா.வின் முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி சபை தலைவர்கள் மற்றும் சிவில் அதிகாரிகள் என்று பல்வேறு தரப்பினரை சந்தித்து இது பற்றி ஆராய்ந்த அவர், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இந்த மாவட்டத்தில் காணப்பட்ட சூழ்நிலையுடன் தற்போதைய சூழ்நிலையை ஒப்பிடும் போது தமது பணிக்கு முன்னேற்றகரமானதாகவும்,சாதகமானதாகவும் நிலைமைகள் தற்போது இருப்பதாகக் கூறினார்


தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு மத்திய அரசு இலங்கையிடம் கண்டனம் தெரிவிக்க வேண்டும்-திமுக கோரிக்கை

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாவதைத் தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசு இந்தியாவிற்கான இலங்கைத்தூதுவரை அழைத்து தொடரும் அச்சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும் என திமுகவின் உயர்நிலைக்குழு கேட்டுககொண்டிருக்கிறது.

தவிரவும் விரைவில் நடைபெறவிருக்கிற தெற்காசிய நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மன்மோகனசிங், அச்சமயத்தில் இலங்கை அதிபரிடம் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தி அமைதியான சூழல் திரும்புவதை உறுதி செய்யவேண்டும் எனவும் தீர்மானம் இயற்றப்பட்டது.

திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி இயற்றப்பட்ட தீர்மானங்களை செய்தியாளர்கள் மத்தியில் படித்தார்.

இன்னொரு தீர்மானம் தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படையும் கடலோரப்படையும் இணைந்து பாதுகாப்பளிக்க வேண்டும் எனக் கோரியது.

இன்றைய தீர்மானங்களை வலியுறுத்தும் வகையில் எதிர்வரும் ஜூலை 19ஆம் நாள் மாநிலம் முழுதும் ஒரு நாள் உண்ணாநோன்பு இருப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

முதல்வர் கருணாநிதி கடல் எல்லையை மீறுகின்ற தமிழக மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை இலங்கை கடற்படை தவிர்க்க வேண்டும் எனக் கூறினார்.

கடற்கரையில் மீனவர்கள்
கடற்கரையில் மீனவர்கள்

தவிரவும் முதல் கச்சதீ¢வு ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருந்ததையும், பின்னால் அப்பிரிவுகள் நீக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி மீண்டும் அவ்வுரிமைகள் நிலைநாட்டப்படும் நேரம் வந்திருப்பதாககூறினார்.

இதனிடையே இன்று காலை முதல்வர் கருணாநிதியையும் உயர் அரசு அதிகாரிகளையும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சந்தித்தபோது, பாதிக்கப்ட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு ஐந்துலட்சரூபாய் வரை நஷ்ட ஈடு வழங்கப்படும், மற்றும் தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு மீனவர்களின் பிரச்சினை பற்றி மத்திய அரசிற்கு எடுத்துக்கூற புதுடெல்லி செல்லும் என்ற வாக்குறுதிகளின் பேரில் தங்களது வேலைநிறுத்தத்தினை முடித்துக் கொள்வதாக கூறினர்.


மட்டக்களப்பில் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பில் போலீசார் விசாரணை
மட்டக்களப்பில் போலீசார் விசாரணை

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடிப் பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்பு ஈபிடிபி அமைப்பினரால் கடத்தப்பட்டாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவர் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்.

அவரது சடலம் அடிகாயங்களுடன் அந்தப் பகுதியிலுள்ள ஈபிடிபி காரியாலயத்துக்கு அருகிலுள்ள காணி ஒன்றிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

36 வயதான தேவதாசன் சுரேஷ் குமார் எனும் இந்த வர்த்தகர், கடந்த மாதம் 19 ஆம் தேதி கடத்தப்பட்டு காணாமல் போனதாக உறவினர்களால் போலீசாரிடம் புகார் செய்யப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் சந்தேகத்தின் பெயரில் அந்த அமைப்பின் பிரதேச அமைப்பாளர் உட்பட நான்கு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

விசாரண நடவடிக்கைளை அடுத்து மேலும் இரு ஈபிடிபி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் கொடுத்த தகவலையடுத்தே இந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஏறாவூர் போலீசார் கூறுகிறார்கள்.

அந்த வர்த்தகர் ஈபிடிபி அலுவலத்தில் வைத்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்பு அருகில் ஈபிடிபியின் பாவனையிலுள்ள காணியில் புதைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பில் இதுவரை சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்கும் தமது அமைப்புக்கும் தொடர்புகள் இல்லை என்று ஈபிடிபி கட்சியின் தலைவரும் இலங்கை அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா தமிழோசையிடம் தெரிவித்தார்.


வவுனியா நலன்புரி நிலையத்தில் தீ விபத்து

வவுனியா நலன்புரி நிலையத்தின் தீ விபத்து
தீக்கிரையான வவுனியா நலன்புரி நிலையம்

இலங்கையின் வடக்கே வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் இன்று வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த நலன்புரி நிலையத்தில் 2500க்கும் கூடுதலானவர்கள் தங்கியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தீ விபத்தின் காரணமாக குறைந்தபட்சம் 400 பேர் வாழ்விட வசதிகளை இழந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொலிசாரும், இராணுவத்தினரும், விமானப்படையினரும் தீயைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு வழங்கவும் மாற்று வசிப்பிட வசதிகளை வழங்கவும் ஏனைய நிவாரண உதவிகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நலன்புரி நிலையங்கள் சரிவர பராமரிக்கப்படாததையே இந்த தீ விபத்து எடுத்துக்காட்டுவதாக அந்த நலன்புரி நிலையத்தைச் சேர்ந்தவர்கள் கருதுகின்றார்கள். இது குறித்த மேலதிக விபரங்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திப் பெட்டகத்தில் கேட்கலாம்.


கொழும்பு கொம்பனி வீதியில் அமைந்திருந்த சட்டரீதியற்ற வீடுகளை பொலிசார் அகற்ற முற்பட்டதால் களேபரம்

கொம்பெனி வீதியில்ரயில் தண்டவாளத்தை ஒட்டிய குடியிருப்புகள்

கொழும்பு கொம்பனி வீதி ரயில் பாதைக்கு அண்மையில் பல வருடங்களாக அமைந்திருந்த சட்டரீதியற்ற குடிசைப் பகுதி வீடுகளை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தரவின் பேரில் பொலிசார் அகற்ற முற்பட்டதால் வெள்ளியன்று பிற்பகல் அப்பகுதி வாசிகளுக்கும் பொலிசாருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள தெற்காசிய நாடுகளின் உச்சி மாநாட்டினையொட்டி எடுத்துவரும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஓர் அங்கமாக கொழும்பு கொம்பனி வீதியில் கிளேனி பிளேஸ் பகுதியில் ரயில்வேக்கு சமீபமாக அமைக்கப்பட்டிருந்த சுமார் 350 சட்டரீதியற்ற குடிசைகளில் வசிப்போரை அங்கிருந்து குறித்த காலப் பகுதிக்குள் வெளியேறும்படி நகர அபிருத்தி அதிகாரசபை இவ்வார முற்பகுதியில் முன்னறிவித்தல் உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.

ஆனால் அங்கிருந்து மக்கள் வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவிற்குள் வெளியேறாததால் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தரவின் பேரில் பொலிசார் அகற்ற முற்பட்டனர். இதேவேளை, இப்பகுதி மக்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், இப்பகுதிமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை எதிர்வரும் 22ஆம் திகதி வரை இடைநிறுத்திவைக்குமாறு உத்தரவொன்றினை பிறப்பித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் இந்த நீதிமன்ற உத்தரவு தமக்குக் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்த நகர அபிவிருத்தி அதிகாரசபையினர், அங்குள்ள குடிசைகள் சிலவற்றை அகற்றமுற்பட்டபோது ஆத்திரமுற்ற அப்பகுதிவாசிகளுக்கும் அவர்களுக்குமிடையில் தகராறு ஏற்பட்டது.

இதனால் நிலைமையைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர பொலிசார் கண்ணீர்புகைப்பிரயோகம் மேற்கொண்டனர். ஆனாலும் பொலிசாரின் உத்தரவிற்கு இணங்க சிலர் வெளியேறியதையும் காணமுடிந்தது.

இங்கு பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சிலர், இந்திய தூதரகம் சென்று மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.


திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் கிழக்கே, திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் விதிக்கப்பட்டுள்ள மீன்பிடிப்பதற்கான கட்டுப்பாடுகளைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்.

திருகோணமலை நகர மணிக்கூட்டுக் கோபுர பகுதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவ குடும்பங்கள் கலந்து கொண்டன.

மீன் பிடிப்பதற்கான இந்தக் கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும், அல்லது அதனால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பம் ஒவ்வொன்றுக்கும் நஷ்டஈடாக மாதாந்தம் இருபதினாயிரம் ரூபாய்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை நாடாளுமன்றத்துக்கான ஜே.வி.பி. உறுப்பினர், ஜயந்த ஜயசேகர மற்ரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் விமல் பியதிஸ்ஸ ஆகியோரும் அங்கு சமூகமளித்திருந்தனர்.


தமிழக மீனவர் தாக்கப்படும் விவகாரம்: மத்திய அரசுக்கு திமுக கடிதம்

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, இன்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்தார்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி தலைமையில், திமுகவின் உயர்நிலைச் செயல் திட்டக்குழுக் கூட்டம் நேற்று சென்னையில் விவாதித்தது. இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, மீனவர்கள் மேலும் பாதிக்கப்படாமல் தடுக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றியது.

அந்தத் தீர்மானத்தின் நகலை, வெள்ளிக்கிழமையன்று பிரணாப் முகர்ஜியிடம் வழங்கினார் டி.ஆர். பாலு. இந்தப் பிரச்சினையில் அரசு முன்னுரிமை கொடுத்து, உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று பிரணாப் முகர்ஜி உறுதியளித்திருப்பதாக டி.ஆர். பாலு தெரிவித்தார்.

மேலும, வரும் 20-ம் தேதி திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இநதப் பிரச்சினை தொடர்பாக பிரதமரைச் சந்திக்க இருப்பதாகவும் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.


Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »

Breakaway LTTE, TMVP leader Karuna back in Colombo; US ‘concerned’ over Sri Lanka rights, attacks on media; Victor Perera the new Governor of the Northern Province

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2008

சுயவிருப்பத்துடன் இலங்கை திரும்பினேன்: கருணா

முறைகேடுகள் இல்லாமலும், தனது விருப்பின் பேரிலும்தான் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பியதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான கருணா தெரிவித்துள்ளார். தனது மக்களுக்கு தான் செய்ய வேண்டிய பணிகளைக் கருத்தில் கொண்டு தான் நாடு திரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என்று தான் விரும்பவில்லை என்றும் பிள்ளையான் அப்பதவியில் இருப்பதை தான் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

வடக்கில் நடந்துவரும் மோதல்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எதுவித சம்பந்தமும் கிடையாது; இராணுவத்துக்கு தமது அமைப்பினர் உதவுவார்கள் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழோசைக்கு பிரத்தியேகமாக செவ்வியொன்றை வழங்கிய கருணா அவர்கள், கிழக்கு மாகாணத்தில் அவசரமாக தேர்தல் நடத்தப்பட்டதன் காரணத்தினால் தமது அமைப்புக்கு மேலும் கிடைத்திருக்க வேண்டிய ஆசனங்கள் கிடைக்காமல் போனதாகக் கூறியனார்.

இருந்தபோதிலும் தமது அமைப்பு இந்த தேர்தலில் வெற்றி பெற்றது குறித்தும், தனது கட்சியைச் சேர்ந்த பிள்ளையான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கருத்து

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்சித் தலைவராக கருணா நீடிப்பார் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கருணா அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வருகையைத் தெரிவித்ததாகவும், தனக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் பின்னர் சந்திப்பதாக கருணாவிடம் தெரிவித்துள்ளதாகவும் முதல்வர் கூறினார்.

இவர்களது செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார் கருணா

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய கர்ணல் கருணா பிரித்தானியாவில் குடிவரவு தடுப்பு முகாமிலிருந்து இலங்கைக்கு நேற்று(புதன்கிழமை) திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்துக்காக பேசவல்ல அதிகாரியான டோமினிக் வில்சன் தமிழோசையிடம் உறுதி செய்தார்.

கருணா இலங்கை திரும்பியுள்ளதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளர் ஆசாத் மௌலானாவும் உறுதி செய்துள்ளார்.

வேறு பெயரிலான ஒரு கடவுச்சீட்டுடன் பிரித்தானியவுக்குள் நுழைந்த வழக்கில் பிரித்தானிய அரசால் கைது செய்துபட்ட கருணா அவர்களுக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை முடிவடைந்த பின்னர் அவர் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே கருணா இலங்கை திரும்பிவிட்டாலும், அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட மாட்டாது என்று அவரது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கைக் கடற்பரப்பரப்பில் நுழைந்த பல நூறு இந்திய மீன்பிடிப் படகுகள் விசாரணையையடுத்து விடுவிப்பு

இராமேஸ்வரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள்
இராமேஸ்வரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள்

இலங்கைக் கடற்பரப்பின் மன்னார் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் பல நூறு இந்திய மீன்பிடி படகுகளை இலங்கைக் கடற்படையினர் நேற்றுமாலை கைதுசெய்து, பலமணிநேர தீவிர விசாரணைகளின் பின்னர் விடுவித்திருக்கிறார்கள்.

இது குறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, நேற்று, புதன்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள விடத்தல்தீவு பகுதியை நோக்கி இந்த இந்திய மீன்பிடி படகுகள் சென்று கொண்டிருந்தவேளை, நெடுந்தீவிற்கு மன்னாருக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, தலைமன்னார் கடற்கரைக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வைத்து இவர்கள் மீது கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று
இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று

இதன்பின்னர் சுமார் இரவு 10 மணியளவில் இதில் 299 இந்திய படகுகள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், எஞ்சிய ஒரு படகில் திசையறிகாட்டிபோன்ற கருவிகள் காணப்பட்டதால், மேலதிக சோதனைக்காக அது தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இன்று காலை அதுவும் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சோதனை நடவடிக்கைகளின்போது இந்திய மீனவர்களிடமிருந்தோ அல்லது அவர்களுடைய படகுகளில் இருந்தோ சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, இந்திய மீனவர்கள் இவ்வாறு அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்துவருவது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிவருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கைப் படையினர் இந்திய மீனவர்களைக் கைது செய்ததை கண்டிக்கும் இராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் தலைவரான போஸ் அவர்கள், ஆனால், தமது மீனவர்கள் இலங்கைப் பகுதிக்குள் சென்று மீன்பிடிப்பதையும் ஒப்புக்கொள்கிறார்.

இது குறித்த போஸ் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்


ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் வடக்கு மாகாண ஆளுனராகப் பதவியேற்பு

விக்டர் பெரேரா பதவியேற்கும் காட்சி
விக்டர் பெரேரா பதவியேற்கும் காட்சி

இந்த வார முற்பகுதியில் இலங்கை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற விக்டர் பெரேரா அவர்கள் வடக்கு மாகாணத்தின் ஆளுனராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருக்கிறார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்திருந்த வடகிழக்கு மாகாணம், நீதிமன்றத் தீர்பொன்றின் பின்னர் இருவேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மாகாணத்திற்கென தனியொரு ஆளுனர் நியமிக்கப்படிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இதற்கு முன்னர் தற்போது கிழக்கு மாகாண ஆளுனராகப் பணிபுரிந்துவரும் முன்னாள் கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவே வடக்கு மாகாண ஆளுனராகவும் கடமையாற்றிவந்தார்.


இலங்கை மனித உரிமை நிலவரம் குறித்து அமெரிக்கா கவலை

ஊடகங்கள் மீதான அழுத்தம் அதிகரிப்பதாக கவலை

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தமக்கு மகிழ்சியளிக்கவில்லை என்று அமெரிக்கா இலங்கையிடம் கூறியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைச் சூழல் குறித்தும் ஊடகங்கள் மீதான அழுத்தங்கள் குறித்தும் அமெரிக்கா அதிகமாக கவலைப்படுவதாக, ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலரான இவான் பைஜன்பாம், இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் முடிவில் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், தங்களின் பாதுகாப்பு குறித்து உடகவியலாளர்கள் எழுப்பிய பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஒரு அமைச்சகக் குழு அமைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கையின் வளர்ச்சிக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்றும் பைஜன்பாம் தெரிவித்துள்ளார்.


ஓமந்தை சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ள நிலையில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் – பெட்டகம்

பாதை திறக்காத நிலையில் பயணத்தின் பாதிவழியில்…

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் இடையிலான ஓமந்தை சோதனைச்சாவடி 3 ஆவது நாளாக இன்றும் திறக்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் வன்னிப் பகுதிக்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோக நடவடிக்கைகள் என்பனவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

வன்னிப்பிரதேசத்திற்குச் செல்வதற்காக வவுனியாவில் சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கின்றார்கள்.

கையிலிருந்த பணம் செலவழிந்துவிட்டதனால் சாப்பிடவும் வழியில்லை செலவுக்கும் வழியில்லை என இவர்கள் வவுனியா செயலக அதிகாரிகளிடம் முறையிட்டதை அடுத்து, விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை OFFER என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியோடு அரச அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

போக்குவரத்தின்மை காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் நிவாரண விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Posted in Govt, India, Law, Order, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

May 9 – Sri Lanka Updates: Eezham, LTTE

Posted by Snapjudge மேல் மே 10, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 12 மே, 2008

கிழக்கு மாகாண முதலமைச்சர் யார்?

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆகக்கூடுதலான இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில், எந்தக் கட்சி ஆகக்கூடுதலான இடங்களை பெற்றுள்ளதோ, அந்தக் கட்சிக்கே முதலமைச்சர் பதவியை வழங்குவது என்று தேர்தலுக்கு முன்னதாக உடன்பாடு காணப்பட்டதாக அந்தக் கூட்டமைப்பின் செயலாளரான அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் யார் என்று தமிழோசையின் சார்பில் கேட்கப்பட்டதற்குப் பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் அவர்கள், இந்த உடன்பாட்டின் அடிப்படையில், தமது கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பில் முதலமைச்சர் யார்?, என்ற இறுதி முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற முஸ்லிம் உறுப்பினர்களில் ஒருவரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கூறுகையில், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக இடங்களைப் பெறுகிறார்களோ, அவர்களில் ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று முன்னமே உடன்பாடு ஏற்பட்டிருந்ததாகவும், ஆகவே முஸ்லிம்களே இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் அதிகம் வெற்றிபெற்றதால், தானே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இவர்கள் இருவரும் தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கு மாகாணத் தேர்தல் மோசடியானது என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

வாக்கு மோசடியின் அடிப்படையிலேயே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைத்தேர்தல் முடிவுகள் குறித்து தமிழோசையிடம் பேசிய அவர், இந்த தேர்தலில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மக்களின் அபிலாசைகள் மறுக்கப்பட்ட நிலையில், மக்கள் விரும்பாத நிலையிலுமே இந்தத் தேர்தல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையில் கிழக்கு மாகாண சபைக்கு நடந்த தேர்தலில் மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாநிலங்களையும் சேர்த்து மாகாண சபையில் உள்ள 37 இடங்களுக்கு (போனஸ் இடங்கள் 2 உள்ளடங்க) நடந்த இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு 20 இடங்களும், முக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சித் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு 15 இடங்களும், தமிழ் ஜனநாயக தேசிய முன்னணி ஒரு இடமும், ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு இடமும் பெற்றுள்ளன.

மாவட்ட அளவில் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:

மட்டக்களப்பு

  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி – 6
  • ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி – 4
  • தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டணி – 1

அம்பாறை

  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி – 8
  • ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி – 6

திருகோணமலை

  • ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி – 5
  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி – 4
  • மக்கள் விடுதலை முன்னணி – 1

மாகாண அளவில் முக்கியக் கட்சிகளின் வாக்கு வீதம்

  • ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி – 52.21%
  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி – 42.38%
  • மக்கள் விடுதலை முன்னணி – 1.59%
  • தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டணி – 1.30%

இருபது ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் கிழக்கு மாகாண சபைக்கு தற்போது தேர்தல்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் முடிவடைந்துள்ளன

இலங்கையில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. கிழக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடத்தி அதிகாரத்தை அளிப்பதன் மூலம் கிழக்கு மற்றும் வடக்கில் தனி நாடு கோரி வரும் விடுதலைப் புலிகளுக்கு முட்டுக்கட்டை போட முடியும் என அரசாங்கம் எண்ணுகிறது.

இந்தத் தேர்தலில் கடந்த 2004 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த வேட்பாளர்களும் பங்ககேற்றுள்ளனர். இவர்கள் அதிபர் மஹிந்த ராஜ பக்ஷ அவர்களின் ஆளும் கட்சியின் கூட்டணியில் சேர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இன்றைய தேர்தலின் போது ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெற்றதாகவும், வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டதாகவும் எதிர்கட்சி தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். அத்தோடு தங்களுடைய குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் ஏற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் நஜீப் ஏ மஜீத் மறுக்கிறார்.


திருகோணமலையில் கடற்படை கப்பல் மூழ்கடிப்பு

இச்சம்பவம் திருகோணமலையில் நடந்துள்ளது
இச்சம்பவம் திருகோணமலையில் நடந்துள்ளது

இலங்கையின் கிழக்கே துறைமுக நகரான திருகோணமலையில் கடற்படைக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்றை விடுதலைப் புலிகள் வெடிவைத்து மூழ்கடித்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பிப்பதற்கு சில மணி நேரம் முன்பாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இலங்கை கடற்படை சார்பாகப் பேசவல்ல தளபதி தஸ்ஸநாயக இச்சம்பவம் பற்றிக் குறிப்பிடுகையில், புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் நீருக்குள் மூழ்கி கப்பலுக்கடியில் வெடிவைத்துள்ளார் என்று தாங்கள் நம்புவதாகவும் ஆனால் இந்தச் சம்பவத்தில் ஆட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

வட இலங்கையில் மோதலில் ஈடுபட்டுவரும் அரச படையினருக்கான வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் அந்தக் கப்பலில் இருந்ததாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர்.

இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்த செய்திகளை நேயர்கள் இன்றைய தமிழோசையில் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் நெடுங்கேணிக்கு வடக்கே விமானப்படை விமானங்கள் சனிக்கிழமை பிற்பகல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்சு பீரங்கி நிலையொன்று அழிக்கப்பட்டுள்ளதாகத் இலங்கை அரசின்தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இந்தப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் மணலாறு பிரதேசத்தில் உள்ள சிங்ளக் கிராமங்கள் மீது எறிகணை தாக்குதல்களை நடத்தி வருவதனாலேயே இந்த நிலைமீது படையினர் தாக்குதல் நடத்தியதாக அந்த ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது. எனினும் இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் உடனடியாகத் தகவல் எதனையும் வெளியிடவில்லை.

இதனிடையில் மன்னார் கறுக்காய்க்குளம் பகுதியில் இராணுவத்தினருடன் வெள்ளிகிழமை இடம்பெற்ற உக்கிர சண்டைகளில் கொல்லப்பட்ட இராணுவத்தின் 5 சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மன்னார் கறுக்காய்க்குளத்திற்கு அடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் ஆலங்குளம் பகுதியில் நேற்று விடுதலைப் புலிகளுடன் பல மணித்தியாலங்கள் இடம்பெற்ற கடும் சண்டைகளில் 33 விடுதலைப் புலிகளும் 8 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது. விடுதலைப் புலிகள் வசமிருக்கும் இந்தப் பிரதேசத்தில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பகுதியை வெள்ளிகிழமை இடம்பெற்ற இந்தச் சண்டைகளின்போது படையினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 மே, 2008 – பிரசுர நேரம் 16:59 ஜிஎம்டி

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருணா மீது வழக்கு தொடர போதிய ஆதாரம் இல்லை என பிரித்தானிய அரசு தரப்பு கூறியுள்ளது

கருணா மீது மேலதிக வழக்குகளை தொடருவதற்கான போதிய ஆதாரங்கள் கிடையாது என்று பிரித்தானிய அரச வழக்கு தொடுப்பு சேவை கூறியுள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணா என்ற வினாயகமூர்த்தி முரளீதரன், பிரிட்டனில் அடையாள ஆவணங்கள் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டு, ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதில் ஒரு பகுதிக் காலத்தை கழித்த நிலையில், கடந்த வியாழனன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவரை குடிபுகல் துறை தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இந்த நிலையில் அவர் இலங்கையில் போர்க்குற்றங்கள் இழைத்தார் மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகளை எழுப்பிய மனித உரிமை அமைப்புகள் அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியிருந்தன.

ஆனால் பிரிட்டனின் அரசு வழக்கு தொடுப்பு துறையான கிரவுன் பிராசிக்யூஷன் சர்வீஸ், கருணா மீது மேலும் எந்த ஒரு குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கித் தருமளவுக்கு யதார்த்த ரீதியான வாய்ப்புகளைத் தரும் ஆதாரம் போதிய அளவில் இல்லை என்று லண்டன் பெருநகர காவல் துறைக்கு அறிவுறுத்தியிருப்பதாக பிபிசி தமிழோசைக்குக் கூறியிருக்கிறது.

எனவே இந்த நிலையில், கருணா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் சாத்தியக்கூறு அதிகமாகியிருக்கிறது.

பிரிட்டிஷ் அரசின் இந்த முடிவு குறித்து மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்னேஷனல், ஏமாற்றம் தெரிவித்திருக்கிறது. இன்று அது வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், சித்ரவதை செய்தது, பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்தது, சிறார்களை படையில் சேர்த்தது, சிறார்களை போரில் பயன்படுத்தியது உள்ளிட்ட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு உடனடியான, முழுமையான, பக்கச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான விசாரணையை சர்வதேச சட்டப்படி பிரிட்டன் நடத்தவேண்டும் என்று கூறியிருக்கிறது.


அம்பாறையில் குண்டுவெடிப்பு; 11 பேர் பலி

குண்டு வெடித்த சமயத்தில் விடுதியில் கூட்டம் அதிகம் இருந்தது

இலங்கையில் சனிக்கிழமையன்று தேர்தல் நடக்கவுள்ள கிழக்கு மாகாணத்தின் மாவட்டங்களில் ஒன்றான அம்பாறையில், வெள்ளியன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில் 11 பேர் கொல்லப்பட்டும் 24 பேர் காயமடைந்தும் இருப்பதாக வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை நகரத்தில் பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள சிட்டி கபே என்னும் உணவு விடுதியிலேயே இந்த குண்டு வெடித்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார கூறியுள்ளார்.

கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலர் அந்த விடுதியில் அமர்ந்திருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இது பார்சல் குண்டாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


மன்னார் மாவட்டத்தில் உக்கிர சண்டை

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் கட்டுக்கரைக் குளத்திற்கு வடக்கே உள்ள ஆலங்குளம் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர சண்டைகளில் குறைந்தது 33 விடுதலைப்புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. இந்த மோதல்களில் 5 படையினர் காணாமல் போயிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

வெள்ளியன்று விடுதலைப் புலிகளின் பலம் பொருந்திய முன்னரங்கு பகுதிகளை உடைத்துக்கொண்டு முன்னேறுவதற்காக இராணுவத்தினர் பல முனைகளில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின்போது இரு தரப்பினருக்கும் மோதல்கள் மூண்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

படையினருக்கு உதவியாக எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்கு வானூர்தியும் தாக்குதல் விமானங்களும் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தி அவர்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியதாகக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மன்னார் கறுக்காய்க்குளம் பகுதியில் வெள்ளியன்று இராணுவத்தினருடன் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், இராணுவத் தரப்பில் 30க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாகவும், 5 இராணுவத்தினரின் சடலங்களையும், இராணுவ தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டம் அடம்பன் நகரப்பகுதியை இன்று காலை 9 மணியளவில் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

பல மணித்தியாலங்கள் விடுதலைப் புலிகளுடன் இப்பகுதியி;ல் நடைபெற்ற சண்டைகளில் குறைந்தது 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், இராணுவ தரப்பில் 2 படையினர் கொல்லப்பட்டு, மேலும் 7 பேர் காயமடைந்ததாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

மன்னார் கட்டுக்கரைக்குளத்திற்கு வடக்கே அடுத்தடுத்து அமைந்துள்ள ஊர்களான ஆலங்குளம் மற்றும் கறுக்காய்க்குளம் பகுதியில் இருதரப்பினருக்கும் இடம்பெற்ற இந்தச் சண்டைகள் பற்றிய தகவலை விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.

அவர் தெரிவித்த மற்ற விபரங்கள் அடங்கிய செய்திக் குறிப்பினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையின் கிழக்கே துறைமுக நகரான திருகோணமலையில் கடற்படைக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்றை விடுதலைப் புலிகள் வெடிவைத்து ழூழ்கடித்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பிப்பதற்கு சில மணி நேரம் முன்பாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இலங்கை கடற்படை சார்பாகப் பேசவல்ல தளபதி தஸ்ஸநாயக இச்சம்பவம் பற்றிக் குறிப்பிடுகையில், புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் நீருக்குள் மூழ்கி கப்பலுக்கடியில் வெடிவைத்துள்ளார் என்று தாங்கள் நம்புவதாகவும் ஆனால் இந்தச் சம்பவத்தில் ஆட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

வட இலங்கையில் மோதலில் ஈடுபட்டுவரும் அரச படையினருக்கான வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் அந்தக் கப்பலில் இருந்ததாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர்.

இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்த செய்திகளை நேயர்கள் இன்றைய தமிழோசையில் கேட்கலாம்.

Posted in Govt, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »