Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Eezam’

Sri Lanka’s Tamil Tigers warn of ‘genocide’ as UN agencies pullout: Ban Ki-moon ‘helping LTTE’ – Sri Lanka: IDPs urge foreign aid workers not to leave Vanni, block convoy

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2008

கிளிநோச்சிக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற டிரக்குகளுக்கு அனுமதி மறுப்பு

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்று செவ்வாய் கிழமை உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்ற முறை நாளாக இருந்தபோதிலும், பொருட்களை ஏற்றிக்கொண்டு வவுனியாவிலிருந்து புறப்பட்டுச் சென்ற 20 ட்ரக் வண்டிகளுக்கு ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாகச் செல்வதற்கு படையினர் அனுமதி வழங்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ட்ரக் வண்டிகளை ஓமந்தையூடாகச் செல்ல அனுமதிப்பதற்கு உயர்மட்டப் படைத்தரப்பினரிடமிருந்து தங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என படையினர் தெரிவித்ததையடுத்து பல மணித்தியாலங்கள் காவல் இருந்துவிட்டு, இந்த ட்ரக் வண்டிகள் ஓமந்தையிலிருந்து வவுனியா திரும்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த வாரம் இரண்டு தினங்கள் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பொருட்களைக் கொண்டு செல்வதற்கென ஏற்பாடுகள் இருந்த போதிலும் அந்த மாவட்டத்திற்கான பொருட்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டிகளுக்கு ஓமந்தை சோதனைச்சாவடியில் படையினரால் அனுமதி வழங்கப்படவில்லை.

எனினும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பொருட்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டிகளுக்குக் கடந்த வாரம் உரிய பிரயாண அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள் என்பன தொடர்ந்து ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

கடந்த 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில் இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் 73 ட்ரக் வண்டிகளில் அரிசி, பருப்பு, கருவாடு உள்ளிட்ட உணவு மற்றும் கட்டிடப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தலைமையகம் இன்று தெரிவித்திருக்கின்றது.

ஆயினும் 11 ஆம் திகதிக்குப் பின்னரான உணவு விநியோக நிலைமைகள் குறித்து இராணுவ தலைமையகம் எதனையும் தெரிவிக்கவில்லை.

ஆரசாங்கத்தின் அறிவித்தலையடுத்து, வன்னிப்பிரதேசத்தில் இருந்து ஐநா அமைப்புக்களும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் கடந்த வாரம் வெளியேறியதைத் தொடர்ந்து வன்னிப்பிரதேசத்திற்கான குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்திற்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில் இழுபறி நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொண்டு நிறுவனங்களின் வெளியேற்றம் மட்டுமல்லாமல், ஓமந்தைக்கு வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ9 வீதியை அண்டிய பிரதேசங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற கடும் சண்டை நிலைமைகளும் இந்த இழுபறி நிலைமைக்கு ஒரு காரணம் எனவும் கூறப்படுகின்றது.


இலங்கையின் வடக்கே கடும் மோதல்

இலங்கை விமானப்படையினர் இன்றும் தாக்குதல் நடத்தியுள்ளனர்
இலங்கை விமானப்படையினர் இன்றும் தாக்குதல் நடத்தியுள்ளனர்

இலங்கையின் வடக்கே வன்னிக்களமுனைகளில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு உதவியாக கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளத்திலும், அக்கராயன்குளம் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினர் இன்று செவ்வாய்கிழமை மதியம் 12.45 மணியளவில் அடுத்தடுத்து மூன்றுதடவைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதங்களை விளைவித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில், இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே வன்னிப்போர்முனைகளில் நேற்று இடம்பெற்ற சண்டைகளில் 28 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம், வன்னிவிளாங்குளம், வன்னேரிக்குளம், பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களையடுத்து, படையினர் நடத்திய தேடுதலின்போது விடுதலைப் புலிகளின் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.

வெலிஓயா ஆண்டான்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘’பாசறை’’ என்ற கடற்புலிகளின் தளம் ஒன்றைப் படையினர் தம்வசமாக்கியிருப்பதாக இராணுவ தலைமையகம் தனது இணையதள செய்தியில் தெரிவித்திருக்கின்றது.

மல்லாவி மற்றும் அக்கராயன்குளம் பகுதிகளில் கடந்த சிலதினங்களில் இடம்பெற்ற சண்டைகளில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 13 சடலங்கள் விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்படுவதற்காக இன்று வவுனியாவில் வைத்து சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவம் அறிவித்திருக்கின்றது.

இதேவேளை முச்சக்கர வண்டியில் வந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களினால் இரண்டு பெண்கள் நேற்றிரவு கொல்லப்பட்டிருப்பதாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது. இவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.


இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் குறித்த கருத்தரங்கு

உள் நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான கருத்தரங்கம்
உள் நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான கருத்தரங்கம்

இலங்கையில் உள்நாட்டில் மோதல்களினால் நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான அகதிகளிற்கு நிரந்தர தீர்வொன்றினைக் காணும் நோக்கில் மனித உரிமைகள், மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களுடன் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள மூன்று-நாள் கலந்துரையாடல் இன்று கொழும்பில் ஆரம்பமாகியது.

அகதிகளுகான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விசேட பிரதிநிதி பேராசிரியல் வால்டர் கலின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளும், உதவி வழங்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

அங்கு உரையாற்றிய பேராசிரியர் வால்டர் கலின் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைசூழ்நிலைக்கும் மத்தியிலும், குறிப்பாக வடக்கில் ஏற்பட்டுள்ள இடர்களிற்கு மத்தியிலும் இவ்வாறானதொரு கலந்துரையாடலினை நடாத்துவது வரவேற்கத்தக்கது என்றும், வன்முறைகளிற்கும், இடப்பெயர்வுகளிற்கும் முகம்கொடுத்துள்ள மக்களின் துன்பங்களையும், தேவைகளையும் மறந்துவிடமுடியாது என்றும் தெரிவித்தார்.

அத்துடன் இந்த மக்களின் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வொன்றினைக்காண்பதற்கு தகுந்த திட்டமிடலொன்றினை முன்னகர்த்துவது என்பது ஒரு சவால் என்றும் அந்தச் சவாலிற்கு இப்போதே முகம்கொடுப்பது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

ஆயுதக் களைவுக்கான அவசியம் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதர் வலியுறுத்தல்

இலங்கையின் கிழக்கு மாகாண முதலமைச்சர், அங்குள்ள ஆயுதக் குழுக்களிடம் ஆயுதக்களைவை செய்ய உறுதி வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஓ பிளேக் மட்டக்களப்பில் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடியில் அமெரிக்க உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

கிழக்கிலே ஸ்திரத்தன்மை, பெருளாதார மேம்பாடு மற்றும் வளர்ச்சியை முன்னெடுக்கும் இலக்கில் ஒரு முக்கிய பகுதியாக, இங்குள்ள மக்களுக்கு கல்வியறிவையும் தொழிற்பயிற்சியையும் வழங்குவது அமையும் என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாறான ஒரு எண்ணத்தையும் உத்தியையும் முன்னெடுப்பதற்கு தனியார் முதலீடுகளை ஈர்ப்பதும் முக்கியமானதாகும் என்றும், இதன் மூலம் அங்கிருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் அவர் கூறினார்.

தனியார் முதலீடுகள் அங்கு வருவதற்கு அந்தப் பகுதியில் பாதுகாப்பு நடைமுறைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது முக்கியமானது என்று வலியுறித்திய அமெரிக்கத் தூதர், அது விடயத்தில் தமக்கு கிழக்கு மாகாண முதல்வர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

இலங்கை அரசும், கிழக்கு மாகாண அரசும் முதலமைச்சரும் பாதுகாப்பு உத்திரவாதங்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், அதுமாத்திரமல்லாமல் ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான வகையில் நடைபெறும் கொலைகள் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவர அவர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ராபர்ட் ஓ பிளேக் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவரது இந்தக் கருத்து குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


வட இலங்கையில் தொடர்ந்தும் கடுமையான உயிர்ச்சேதம்

இலங்கை இராணுவ தாங்கி ஒன்று
இலங்கை இராணுவ தாங்கி ஒன்று

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம் கிழக்கு, மேற்கு களமுனைகளிலும், கொக்காவில் பிரதேசத்தின் தென்பகுதியிலும், மாங்குளத்திற்கு மேற்கிலும் விடுதலைப் புலிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கடும் சண்டைகளில் குறைந்தது 36 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன், அவர்களது 7 சடலங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளளதாக இராணுவத் தலைமையகம் கூறியிருக்கின்றது. மேலும் 24 படையினர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த உயிரிழப்புகள் சேதங்கள் குறித்து உடனடியாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகாத போதிலும், கிளிநொச்சிக்குத் தெற்கே, வன்னிக் களமுனைகளில் இராணுவத்தினரை எதிர்த்து விடுதலைப் புலிகள் நேற்று பல இடங்களில் முறியடிப்பு தாக்குதல்களை நடத்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். வன்னிவிளாங்குளம் பகுதியில் இராணுவத்தினருக்குப் பலத்த உயிர்ச்சேதம் ஏற்படுத்தியதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில் நாட்டில் அமைதி ஏற்பட வேண்டும் என்றும், வன்னிப்பிரதேசத்தில் போர்ச்சூழலில் சிக்கித்தவிக்கும் மக்களின் துயர் நீங்குவதற்கு அமைதி ஏற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அமைதிப் பேரணியும் சர்வமதப் பிராரத்தனையும் நடத்தப்பட்டிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் நீதிக்கும் சமாதானத்திற்குமான ஆணையகத்தின் ஏற்பாட்டில் மானிப்பாய் அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற இந்த சர்வமதப் பிராரத்தனையில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.


வட இலங்கை மீனவர்களின் தொழில் பாதிப்பு குறித்து யாழ் பேராசிரியர்

யாழ் மீனவர்கள்
யாழ் மீனவர்கள்

யுத்த சூழ்நிலை காரணமாக இலங்கையின் வட பகுதியில் மீன்பிடித் தொழில் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது என்று கூறுகிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றுபவரும் கடல்வளம் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருப்பவமான பேராசிரியர் சிலுவைதாசன்.

இலங்கையின் மொத்த உற்பத்தியில் 36 சதவீதத்தைப் பெற்றிருந்த வடபகுதி தற்போது வெறும் பத்து சதவீதத்தையே பெற்றுள்ளது, மீன்பிடித் தொழிலில் முதலிடத்தில் இருந்து, தற்போது கடை நிலைக்கு இலங்கையின் வடக்கு மாகாணம் கீழிறங்கியுள்ளது என்றும் அவர் விபரித்தார்.

அரசாங்கம் விதித்துள்ள பலவித கட்டுப்பாடுகளால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு புறமிருக்க, தமிழக மீனவர்கள் தமது எல்லைக்குள் நுழைந்த்து, தொடர்ந்து மீன்பிடிப்பது வட இலங்கை மீனவர்கள் தொழில் செய்வதில் பெரிய பிரச்சினைகளை உண்டுபண்ணியுள்ளது என்று அவர் விளக்குகிறார்.

இந்நிலை தீர இருசாராரும் பேசி தீர்ககவேண்டும், தங்கள் பகுதியில் மீனவளம் வறண்டுபோயிருப்பதால் எல்லைதாண்டி தமிழக மீனவர்கள் வருவது புரிந்துகொள்ளக் கூடியதுதான் என்றாலும், இலங்கைப் பகுதியிலும் அம்மாதிரி ஆகிவிடக்கூடாது, அதே நேரம் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாவதும் வருத்தத்திற்குரியதே, இப்பிரச்சினை தீர இரு சாராரும் பேசித் தீர்க்கவேண்டும் என வற்புறுத்துகிறார் பேராசிரியர் சிலுவைதாசன்.

கொழும்பில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை பதிவு செய்யும் பணி ஆரம்பம்

இலங்கையிலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாவட்டங்களிலிருந்து தலைநகர் கொழும்பிற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் இடம்பெயர்ந்திருப்பவர்களை பதிவு செய்யும் நடவடிக்கையினை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

வடக்கிலிருந்து மக்கள் இடம்பெயர்வதைப் பயன்படுத்திக்கொண்டு விடுதலைப் புலிகள் கொழும்பிலும் அதனைச் சுற்றிய இடங்களிலும் குண்டுகளை வைத்துவருகிறார்கள் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உரிய காரணம் என்று குறிப்பிட்டு அப்படிப்பட்ட காரணம் இல்லாமல் கொழும்பில் தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதேவேளை இலங்கை பாதுகாப்பு படையினரால் தாங்கள் துன்புறுத்தப்படுவதாகவும், யதேச்சதிகாரமாக தடுத்துவைக்கப்படுவதாகவும், அடிக்கடி பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தமிழ் மக்கள் முறையிடுகின்றனர்.

இவ்வகையாக கொழும்புக்கு வந்துள்ளவர்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது சட்ட விரோதமானது என்றும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள ஒழுங்குகளுக்கு எதிரானது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூத்த உபதலைவரான யோகராஜன் தமிழோசையிடம் தெரிவித்தார். இதே நேரத்தில் இந்த பதிவுகளை தாங்கள் எதிர்க்கவில்லை என்றாலும் இது முறையற்ற செயல் என்று கருத்து வெளியிட்டுள்ளார் இலங்கை அரசின் பிரதியமைச்சரான ராதாகிருஷ்ணன். இவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை இன்றைய நிக்ழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வைத்தியத்தில் அரச மருத்துவரொருவர்
வைத்தியத்தில் அரச மருத்துவரொருவர்

இலங்கையில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட சட்ட விரோத போலி வைத்தியர்கள் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்வைத்தியர்களினாலே அநேகமான கருக்கலைப்பு நிலையங்கள் நடத்தப்படுவதாகவும் கூறுகின்றது.

உலகில் போலி மருத்துவர்கள் அதிகமாகவுள்ள நாடாக இலங்கை காணபப்டுவது துரதிர்ஷ்டவசமானது என கவலை வெளியிட்டுள்ள
அச்சங்கத்தின் செயலாளரான டாக்டர் உபுல் குணசேகரா, போலி மருத்துவம், மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பொலிஸ், சுகாதார அமைச்சு உட்பட உரிய தரப்புகளுடன் பல பேச்சுக்கள் நடத்திய போதிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக இல்லை என்றும் குறிப்பிடுகின்றார்.

நாளொன்றிற்கு 750 முதல் 1000 வரைய கருக்கலைப்புகள் இடம் பெறுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர் அரசாங்க மருத்துவ சபைகளில் பதிவு செய்யப்படாதவர்களே இவர்கள் என்றும் தெரிவிக்கின்றார்.

கருக்கலைப்பகளை பொறுத்த வரை சட்ட விரோத மருத்துவர்களாலேயே பெரும்பாலானவை நடத்தப்படுவதாக பெண்கள் அமைப்புகளும் குற்றம் சுமத்துகின்றன.

சட்ட விரோத மருத்துவர்கள் இருந்தாலும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்து போல் இந்த எண்ணிக்கையில் இல்லை என கூறும் சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் சுரேஸ் வடிவேல் இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இல்லை என்றும் குறிப்பிடுகின்றார்


இலங்கையின் வடக்கில் தொடரும் வன்முறை

திருகோணேஸ்வரர் ஆலயம்
திருகோணேஸ்வரர் ஆலயம்

இலங்கையின் திருகோணமலையின் திருகோணஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருவான சிவகுரு ராஜ குருக்கள், ஞாயிறு மாலை வித்தியாலயம் வீதியில் அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, இலங்கையின் வடக்கே வன்னிக்களமுனைப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது அடுத்தடுத்து நான்கு தடவைகள் ஞாயிற்றுக்கிழமையன்று விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நாச்சிக்குடா மற்றும் அக்கராயன்குளம் பகுதிகளில் விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும் இடம் ஒன்றின் மீதும், அவர்களது தளம் ஒன்றின் மீதும் குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கொக்காவில் பகுதிகளில் தற்போது படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் வன்னியில் உறவுகளை தொடர்புகொள்வதிலுள்ள பிரச்சினைகள்

வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் தமது உறவுகளை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதிகளில் கடுமையான மோதல்கள் நடந்துவரும் வேளையில், அங்கே செயல்பட்டு வந்த தொலை பேசி இணைப்புகள் பல வாரங்களாக முற்றாக துண்டிக்கப்பட்டுவிட்டன.

இதனால், இங்கே ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான புலம் பெயர் இலங்கைத் தமிழர்களில் பலர் தமது உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் கவலையடைந்துள்ளனர்.

வன்னிப்பகுதியில் உள்ள சில குறிப்பிட்ட அரசுத் துறை அலுவலகங்களின் தொலை பேசி இணைப்புக்களைத் தவிற பிற இணைப்புகள் அனைத்தும் தற்போது செயலிழந்துள்ளதாகவே தெரிகிறது.

உள்ளூர் தொடர்புகளும் அங்கே துண்டிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்பு மட்டும்தான் வன்னி மக்களுக்கும் வெளியுலகுக்கும் இடையேயான ஒரே தொடர்பாய் தற்போது இருப்பதாகத் கருதப்படுறது.

ஐக்கிய இராஜ்ஜியத்தில் வாழும் சில இலங்கைத் தமிழர்கள் தமது உறவுகளைத் தொடர்புகொள்வதிலுள்ள சிக்கல்கள் மற்றும் அதனால் தாம் அடைந்துள்ள இன்னல்களை தமிழோசையில் விளக்குவதை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கையில் மோதல்கள் நீடிக்கின்றன

இலங்கையின் வடக்கே வன்னிக் களமுனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வியாழனன்று இடம்பெற்ற மோதல்களில் 24 விடுதலைப் புலிகளும், 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவத் தலைமையகம் கூறியிருக்கின்றது.

எனினும் இந்த மோதல்கள் உயிரிழப்புக்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் விசுவமடு பகுதியில் வியாழன் பிற்பகல் விமானப்படையினர் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.


இலங்கையில் கரையொதுங்கிய சடலங்கள் ‘இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய அகதிகளுடையது’

தனுஷ்கோடியைக் காட்டும் செயற்கைக்கோள் படம்

இலங்கையின் வடக்கே நெடுந்தீவு மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் கடந்த சில தினங்களில் கரையொதுங்கிய 7 சடலங்களும் இந்தியாவில் இருந்து படகு மூலமாக தாயகம் திரும்பிய இலங்கை அகதிகளுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய இலங்கை அகதிகள் பயணம் செய்த படகொன்று நடுக்கடலில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 10 பேரில் மூவர் தவிர ஏனையோர் கடலில் மூழ்கிவிட்டதாகத் தகவல்கள் தெரிவித்திருந்தன.

உயிர் தப்பிய மூவரும் கடலில் நீந்தி தமிழகக் கரையோரத்தை வந்தடைந்ததாக தமிழகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சம்பவத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் சடலங்களே இவ்வாறு யாழ்ப்பாணம் நெடுந்தீவு மற்றும் நயினாதீவுகளில் கரையொதுங்கியதாகக் கூறப்படுகின்றது.

கிளிநொச்சிக்கான உணவுப் பொருட்கள் அனுப்பப்படவில்லை

வன்னிப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உணவு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகவும், கிளிநொச்சி மாவட்டத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைய ஐநா அமைப்புக்களும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் வன்னிப்பகுதியில் இருந்து வெளியேறியதன் பின்னர் அந்தப் பகுதிக்கு உலக உணவுத் திட்டத்தின் மூலம் அனுப்பப்படுகின்ற ட்ரக் வண்டிகள் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லவில்லை என்றும் அதற்கான அனுமதி படை அதிகாரிகளினால் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை உறுதி செய்துள்ள கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், இதைவிட அரசாங்கத்தினால் கிளிநொச்சிக்கு ஒன்றுவிட்ட ஒருநாள் ஓமந்தை ஊடாக 20 லொறிகளில் பொருட்களை ஏற்றிச் செல்லும் ட்ரக் வண்டிகளுக்கும் இந்த வாரத்தில் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புளியங்குளத்தில் கிளெமோர் தாக்குதல்: 3 பொதுமக்கள் பலி

தாக்குதலில் காயமடைந்த சிறுவன் ஒருவன் மருத்துவமனையில்
தாக்குதலில் காயமடைந்த சிறுவன் ஒருவன் மருத்துவமனையில்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய புளியங்குளம் பகுதியில் இன்று காலை பேருந்து வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 3 சிவிலியன்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூவர் படுகாயமடைந்ததாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தத் தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரே மேற்கொண்டதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள். எனினும் அதனை இராணுவ தலைமையகம் நிராகரித்துள்ளதுடன், விடுதலைப் புலிகளின் பிரசார நடவடிக்கைக்காகவே அவர்கள் சார்ந்த ஊடகங்கள் இதனை செய்தியாக வெளியிட்டிருக்கின்றன என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் நாச்சிக்குடா பகுதியில் வலைப்பாடு கடற்பரப்பில் இரணைதீவுக்கு அருகில் இன்று காலை விடுதலைப் புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் 4 மணித்தியாலங்கள் கடும் சண்டைகள் நடைபெற்றதாகவும், இந்தச் சண்டைகளில் 3 பெரிய படகுகள் உட்பட விடுதலைப் புலிகளின் 10 படகுகளைப் படையினர் அழித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இன்று பிற்பகல் 4 மணிவரையில் தொடர்ந்த இந்த மோதல்களில் 20 தொடக்கம் 30 வரையிலான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.

எனினும் இந்தத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வரவில்லை.

கடற்சமரோடு, வன்னிக்களமுனைகளிலும் இராணுவத்தினரும், விடுதலைப் புலிகளும் தொடர்ந்து சண்டையிட்டு வரும் அதேவேளை, அரச விமானப்படையினரும் வான்வழி தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாக பாதுகாப்பு அமைச்சும் இராணுவமும் தெரிவித்திருக்கின்றன.

வன்னியில் விசுவமடுவுக்கு அருகே பிரமந்தன்குளம் என்னுமிடத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படும் தளத்தில் விடுதலைப் புலிகள் பொருத்தியிருந்த விமான எதிர்ப்பு பொறிமுறையொன்றை (சிஸ்டம் ஒன்றை) விமானப்படையினர் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் குண்டுவீசி தாக்கி அழித்துள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளம் போர்முனைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை மதியம் விமானப்படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்களும், எம்.ஐ 24 ரக ஹெலிக்கப்டர்களும் அடுத்தடுத்து நடத்திய விமானக்குண்டுத் தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் மேலும் ஒரு மோட்டார் பீரங்கித் தளம் அழிக்கப்பட்டுள்ளதாகவும், வன்னேரிக்குளம் முன்னரங்க பகுதியில் விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும் இடம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் உடனடியாக கருத்து எதனையும் வெளியிடவில்லை.

நாச்சிக்குடா பகுதியில் உள்ள கரம்பைக்குளம் குளக்கட்டு பகுதியிலும், அக்கராயன்குளம் பிரதேசத்திலும் விடுதலைப் புலிகளுடன் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கடும் மோதல்களில் கொல்லப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்தச் சண்டைகளில் 40 விடுதலைப் புலிகள் இறந்துள்ளதாகவும் இராணுவ தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றது.

இந்த மோதல்களில் காயமடைந்த படையினரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்திருப்பதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.
ஒன்றரை கிலோ மீற்றர் நீளமுடைய கரம்பைக்குளம் குளக்கட்டுப் பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியுள்ள இராணுவம் இன்று அந்தப் பகுதியில் மேலும் ஒன்றரை கிலோ மீற்றர் நீளமுடைய பகுதியை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில் வவுனியா வன்னிவிளாங்குளம், புதூர், மன்னகுளம், பகுதிகளில் படையினருக்கு எதிராக செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 இலிருந்து புதன்கிழமை காலை 6 மணிவரையில் தாக்குதல்கள் நடந்ததாகவும், இதில் 13 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

வன்னேரிக்குளத்தில் படையினர் இன்று வியாழக்கிழமை மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கைக்கு எதிரான தமது தாக்குதலில் 25 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், இரண்டு இராணுவத்தின் சடலங்களும் ஆயுத தளபாடங்களும் தங்களால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.


கொழும்பு வரும் வட மாகாணத்தவர்களை பதிய உத்தரவு

கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலமாக இருக்கின்றன
கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலமாக இருக்கின்றன

இலங்கையின் வடக்கிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் கொழும்பு உள்ளிட்ட மேல்மாகாணத்திற்கு வந்திருப்பவர்கள் அனைவரும், செப்டம்பர் 21 ஆம் திகதி காவல்நிலையங்களில் பதிய வேண்டும் என்று இலங்கை காவல்துறை இன்று அறிவித்திருக்கிறது.

இது குறித்து இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான ரஞ்சித குணசேகர தமிழோசையிடம் கூறுகையில், ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழும் உள்ள பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களுக்காகவே இந்த பதிவுகள் நடப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஏனைய பகுதிகளில் இருந்து வருபவர்கள் நீண்ட காலம் அங்கு தங்குவதில்லை என்பதால், அவர்களை பிரத்தியேகமாக பதியவில்லை என்றும், இருப்பினும், அப்படியானவர்களை அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் சொந்தக்காரர்கள் பதித்து வழங்குவார்கள் என்றும் அவர் கூறினார்.

தம்மை பதிந்துகொள்ள வருபவர்கள், பிறப்புச் சான்றிதழ் போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தையாவது தம்மோடு கொண்டு வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.

வட இலங்கையில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெறுகின்றன: இழப்புகள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கை விமானப்படையினர் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது தொடர்ச்சியாக விமானக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி அவர்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி வருவதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்திருக்கின்றனர்.

இன்று காலை முதல் மாலை வரையில் 5 இடங்களில் விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், இதில் விடுதலைப் புலிகளின் இரண்டு எறிகணை பீரங்கி நிலைகள் அழிக்கப்பட்டு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடும் தளம் ஒன்றின் மீதும், உடையார்கட்டுக்குளம் பகுதியில் இருந்த விடுதலைப் புலிகளின் ஆயுதக்கிடங்கு ஒன்றின் மீதும் விமானப்படையினர் இன்று காலை 6.30 மணியளவில் அடுத்தடுத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.

எனினும் வட்டக்கச்சி பகுதியில் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் குடியிருப்புக்கள் மீதே விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் 3 சிவிலியன்கள் காயமடைந்ததாகவும், 8 வீடுகள் சேதமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

வடபகுதியில் இடம்பெறும் மோதல்களில் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து இருதரப்பிலிருந்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன.


கிளிநொச்சியிலிருந்து பெருமளவில் மக்கள் இடம் பெயர்வு

இடம் பெயரும் மக்கள்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகரப்பகுதியில் இராணுவத்தினரின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதனாலும், அந்த நகரை அண்டிய பகுதிகளில் விமானத் தாக்குதல்கள், இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிரமடைந்துள்ள நேரடிச் சண்டைகள் காரணமாக கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து மக்கள் பெருமளவில் இடம்பெயரத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு மூன்று தினங்களாக இடம்பெற்று வருகின்ற இந்த இடப்பெயர்வு காரணமாக கிளிநொச்சி நகரை உள்ளடக்கிய கரைச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள 14 கிராம சேவையாளர் பகுதிகளில் இருந்து 6500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

ஒரு வண்டியில் பல பொருட்கள்
ஒரு வண்டியில் பல பொருட்கள்

ஐநா அமைப்புக்கள் வன்னிப்பிரதேசத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும் என அரசாங்கம் விடுத்திருந்த அறிவித்தலையடுத்து, அந்தப் பிரதேசத்திலிருந்து ஐநா அமைப்புக்கள் நேற்று முழுமையாக வெளியேறியுள்ளன.

இந்த நிலையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண பணிகளும், தற்போது இடம்பெயர்ந்து சென்று கெர்ணடிருக்கும் மக்களுக்கான உடனடி நிவாரண பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் கூறுகின்றார்.
இது குறித்த மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை விமானப் படை தாக்குதலில் 4 பொதுமக்கள் பலி

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் முறிகண்டி பகுதியில் இன்று இலங்கை விமானப்படையின் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் குறைந்தது 4 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

மறுப்பு

ஆனால், விடுதலைப்புகளின் இலக்குகள் மீது இன்று நான்கு தடவைகள் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகின்ற இலங்கை பாதுகாப்பு அமைச்சு கிளிநொச்சியில் இரணைமடுவுக்கு மேற்குப் பகுதியில் விடுதலைப்புலிகள் கூடும் இடங்களில் இரு தடவைகள் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மற்றும் உடையார் கட்டுக்குளம் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.

குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் விபரங்கள் குறித்து தமிழோசையிடம் பேசிய, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி, நான்கு பேர் இறந்துள்ளதாகவும், நான்கு பேர் மிகவும் மோசமாக காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பிள்ளையார்கட்டு நோக்கி தாம் சென்ற வேளையிலேயே விமானப்படையின் விமானம் தம்மை தாக்கியதாக கூறுகிறார் காயம்பட்ட ஒருவர்.

அதேவேளை மோதல்கள் நடப்பதால், காயமடைந்தவர்களில், கவலைக்கிடமாக இருப்பவர்களை மேலதிக சிகிச்சைக்கு அனுப்புவதிலும் சிரமம் இருப்பதாகக் கூறுகிறார் டாக்டர் சத்திய மூர்த்தி.

கிளிநொச்சி மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளிலும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.


வன்னியில் இருந்து ஐ நா மனிதநேயப் பணியாளர்கள் விலகல்

வன்னிப் பகுதியில் சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்
வன்னிப் பகுதியில் சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

வன்னிப் பகுதியிலிருந்து ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவிப் பணியாளார்கள் முற்றிலுமாக விலகி விட்டார்கள் என்று ஐ நாவின் இலங்கை அலுவலகப் பேச்சாளர் கார்டன் வைஸ் பி பி சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமது சர்வதேச பணியாளர்களும், இலங்கையின் மற்றப் பகுதியைச் சேர்ந்த பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும், ஆனால் வன்னிப் பகுதியைச் சேர்ந்த சில உள்ளூர் பணியாளர்கள் அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செவ்வாய் கிழமை மட்டும் தமது 20 பணியாளர்கள் வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வந்துவிட்டதாக கார்டன்வைஸ் கூறினார்.

வன்னிப் பகுதியிலிருந்து தமது வாகனங்கள் அனைத்தும் முழுமையாக வெளியே வந்து விட்டதாகவும், உபகரணங்கள் பல வவூனியாவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பணிகளை செய்ய காரிடாஸ் முடிவு

கத்தோலிக்க நிறுவனமான கேரிடாஸ், வன்னிப் பகுதியில் தொடர்ந்து தம்முடைய மனித நேயப் பணிகளை மேற்கொள்ளும் என்று கேரிடாசின் இயக்குனர் அருட் தந்தை டேமியன் பெர்னாண்டோ, பி பி சியின் சிங்கள சேவையான சந்தேஷியாவுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

காரிடாஸ் ஒரு அரசு சாரா நிறுவனமல்ல என்றும் அது கிறிஸ்தவ தேவாலயத்தின் மனித நேயப் பணிகளை செய்யும் ஒரு அமைப்பு என்றும் விளக்கமளித்த காரிடாஸ் இயக்குனர் தங்களது அமைப்பில் வன்னிப் பகுதியில் வெளிநாட்டவர்கள் யாரும் பணியாற்றவில்லை என்றார்.


கொழும்பில் பஸ் குண்டுவெடிப்பில் 4 பேருக்கு காயம்

குண்டு தாக்குதல் நடைபெற்ற பேருந்து
குண்டு தாக்குதல் நடைபெற்ற பேருந்து

இலங்கையின் தலைநகர் கொழும்பில் பேருந்து ஒன்றில் குண்டு ஒன்று வெடித்துள்ளது.

அந்த குண்டு வெடிப்பதற்கு சற்று முன்னதாகவே அந்த பேருந்து பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு அகற்றப்பட்டுவிட்டதால், எவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை.

அந்த பேருந்தில் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று இருப்பது அவதானிக்கபட்டதை அடுத்தே, அதில் இருந்த பயணிகள் இறக்கபட்டு, அது பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

நாட்டின் வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை அரசாங்கப் படையினர் அதிகப்படுத்தியுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


வவூனியா தாக்குதலில் இந்தியர்களுக்கு காயம்படவில்லை- இலங்கை இராணுவப் பேச்சாளர்!

ராடார் தளம் மீது நடந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் காயமடைந்ததை இந்தியாவும் இலங்கையும் உறுதி செய்துள்ளன
ராடார் தளம் மீது நடந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் காயமடைந்ததை இந்தியாவும் இலங்கையும் உறுதி செய்துள்ளன

இலங்கையிலிருக்கும் இந்திய தூதரகம், வவுனியா தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் காயமடைந்தார்கள் என்று உறுதி செய்துள்ள நிலையிலும் கூட இந்தியர்கள் யாரும் அத்தாக்குதலில் காயமடையவில்லை என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார மீண்டும் கூறியுள்ளார்.

அந்த தாக்குதல் நடைபெற்ற தினத்தில், இந்தியர்கள் யாரும் வவுனியா முகாமில் பணிக்கு அமர்த்தப்படவில்லை என்று அவர் தெரிவி்த்திருந்தார். ஆனால் தாக்குதலில் இரண்டு இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் காயமடைந்ததை இரு நாட்டு அரசுகளும் உறுதி செய்துள்ளன.

தாக்குதல் குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட பிரிகேடியர் நாணயகாரா, தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இந்தியர்கள் யாரும் இல்லை என்றும் இந்தியர்கள் காயமடைந்ததாக உங்களுக்கு இந்திய தூதரகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தால் நீங்கள் அவர்களிடமே அது குறித்து மேலதிக விவரங்களை கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

இந்திய தூதரக அதிகாரி மட்டுமல்லாமல், இலங்கை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா அவர்களும் இரண்டு இந்தியர்கள் காயமடைந்ததை உறுதி செய்திருக்கிறாரே என்று அவரிடம் தமிழோசை கேட்டபோது, “நீங்கள் தயவு செய்து அந்த அமைச்சரையே தொடர்புகொண்டு இதை பற்றி கேளுங்கள். எனக்கு தெரியாத விடயம் குறித்து நான் எதுவும் கூறமுடியாது. என்னை பொறுத்தவரை அந்த முகாமில் இந்தியர்கள் யாரும் இல்லை” என்று பிரிகேடியர் தெரிவித்தார்.


விடுதலைப் புலிகள் அழியும் வரை இராணுவ நடவடிக்கைகள் தொடரும் – இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி சமாதானப் புறாவல்ல என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்
ஜனாதிபதி சமாதானப் புறாவல்ல என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கெதிராக அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் அவர்களை முற்றாக அழித்தொழிக்கும்வரை தொடரும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திங்கட்கிழமை கொழும்பில் தெரிவித்திருக்கிறார்.

திங்கட்கிழமை மாலை இலங்கை வெளிநாட்டுப் பத்திரிகையாளர் சங்கத்துடன் நடாத்திய கலந்துரையாடலின்போது இது குறித்துக் கருத்துவெளியிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அதிகாரிகளும், முப்படைத்தளபதிகளும் தற்போது புலிகளுக்கு எதிராக வடக்கில் இடம்பெற்றுவரும் இராணுவ நடவடிக்கைகளின் போக்குக்குறித்து மிகவும் திருப்தியாக இருப்பதாகவும், புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், இது ஒரு சாத்தியப்படும் காரியம் என்றும் தெரிவித்தார்.

வன்னி மாவட்டத்திலிருந்து சர்வதேச தொண்டுநிறுவனப் பணியாளர்களின் வெளியேற்றம் குறித்துக் கருத்துவெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சர்வதேச பணியாளர்களின் சுயபாதுகாப்பிற்காகவே அரசு அவர்களை வன்னியிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டதாகவும், இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்றும், அந்தப்பிரதேசங்கள் படையினால் விடுவிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் மீளவும் அங்கு சென்று பணியாற்ற அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.

‘ஐ.நா. பணியாளர்கள் வெளியேறுவதற்கு வழியேற்படுத்தித்தர விடுதலைப் புலிகள் சம்மதம்’

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஐநா அமைப்புகள் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அரசு பிறப்பித்த உத்தரவை அடுத்து, அப்பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் ஐ.நா. மன்ற அமைப்பின் பணியாளர்கள் ஏற்கெனெவே அங்கிருந்து வெளியேறத் துவங்கிவிட்டனர். மீதமுள்ள ஐநா அமைப்பின் பணியாளர்கள் அனைவரும் நாளை செவ்வாய்க்கிழமை அங்கிருந்து வெளியேறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக இவர்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது என்று கோரி, கிளிநொச்சியிலிருக்கும் பொது மக்கள் போராட்டங்கள் நடத்தி தடை ஏற்படுத்தி வந்தனர்.

இதை தொடர்ந்து, ஐ.நா. மன்ற அதிகாரிகள் இது குறித்து விடுதலைப்புலிகள் அமைப்பிடம் பேசியதை தொடர்ந்து, மீதமுள்ள ஐ.நா. அமைப்பின் பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான வழியை ஏற்படுத்தித் தருவதாக விடுதலைப்புலிகள் தங்களிடம் உறுதி அளித்திருப்பதாக இலங்கையில் இருக்கும் ஐ.நா. மன்றத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான கோர்டன் வெய்ஸ் அவர்கள் பிபிசியிடம் தெரிவித்தார்.

இது குறித்து அவரது விரிவான செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.



வட இலங்கை மோதல்கள்: முரண்பட்ட தகவல்கள்

இலங்கை சிப்பாய்

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற உக்கிர சண்டையில் எதிர்த்தரப்பினருக்குப் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகக்கூறி இருதரப்பினரும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அக்கராயனுக்குத் தெற்கே திருமுறிகண்டி வீதியில் இந்த மோதல்கள் இடம்பெற்றதாகவும், இராணுவத்தின் முன்னேற்ற நடவடிக்கையை எதிர்த்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் மீது படையினர் நடத்திய எறிகணை தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்குப் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இரு தரப்பினருக்கும் இடையில் பல மணித்தியாலங்கள் கடும் துப்பாக்கிச் சண்டைகள் இடம்பெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கி்ன்றது.

ஆனால் விடுதலைப் புலிகளோ, தமது கடுமையான எதிர்த்தாக்குதலில் இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றனர். இந்தச் சண்டையில் இராணுவத்தினருக்குப் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்களையும், ஆயுதத் தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இந்த மோதல்கள் காரணமாக கிளிநொச்சிக்கும் வவுனியாவுக்கும் இடையிலான பொதுப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவக்கப்படுகின்றது.

இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்கள் பல பாதுகாப்பு தேடி வடக்கு நோக்கி இடம்பெயர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனிடையே. கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் மாதுறுஓயா காட்டுப்பகுதியில் திங்கள் மாலை விடுதலைப் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் சிவில் பாதுகாப்புப் படை சிப்பாய் ஒருவரும் சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்கள் என மகாஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


வன்னியிலிருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – ஐ.நா

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து ஐ.நா. உதவிப் பணியாளர்கள் விலகுவது தற்காலிகமாகத் தடைபட்டுள்ளது என்றாலும் அரசு ஆணைக்கமைய அப்பகுதியலிருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை என்று கார்டன் வைஸ் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார். எனினும் தாங்கள் வவுனியா பகுதியில் இருந்து மனிதாபிமான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வன்னியிலிருந்து வெளியேறும் போது வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து அதி முக்கியமான பொருட்களையும் தாங்கள் வெளியேற்ற போவதாகவும், முக்கியமற்ற பொருட்கள் மற்றும் ஒரு சில பணியாளர்கள் அங்கே இருப்பார்கள் என்றும் ஐ,நா அதிகாரியான கார்டன் வைஸ் தெரிவித்தார்.

கிளிநொச்சிப் பகுதிக்கு அருகே மோதல்கள் வலுத்துள்ள நிலையில், அங்கிருக்கும் உதவிப் பணியாளார்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதங்கள் வழங்க முடியாது எனக் கூறி அங்கிருந்து உதவிப்பணியாளர்களை விலகச் சொல்லி இலங்கை அரசு அறிவித்திருந்தது.

அதைத் தொடாந்து சில நாட்களுக்கு முன்னதாக ஐ.நா. அப்பகுதியலிருந்து வெளியேறத் தொடங்கியிருந்தது.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் வன்னி போர் முனைகளில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் மாத்திரம் 27 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் இராணுவச் சிப்பாய் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா மாவட்டத்தின் நாவற்குளம் மற்றும் வவுனியா நகருக்கு கிழக்கே உள்ள மாமடு ஆகிய இடங்களில் சனிக்கிழமை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டைகளில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மாமடு பகுதியில் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரது சடலத்தை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும் இராணுவத் தலைமையகம் கூறியிருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் வன்னேரிக்குளம் நாச்சிக்குடா பகுதிகளிலும் வெலிஓயா ஆண்டான்குளம் போர்முனையிலும் இடம்பெற்ற மோதல்களில் 19 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன் இராணுவச் சிப்பாய் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில் வன்னிக்கள முனைகளில் சில தினங்களுக்கு படையினரால் கைப்பற்றப்பட்டிருந்த 2 விடுதலைப் புலிகளின் சடலங்கள் சனியன்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் கையளிக்கப்பட்டதாக இராணுவம் தனது இணையத்தள செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றது. எனினும் இந்த மோதல் சம்பவங்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


மட்டக்களப்பில் சட்ட விரோத மீன்பிடித்தலால் மீன் இனங்கள் அழிவு

மீன் பிடித்தலை நம்பி ஏராளமான குடும்பங்கள்
மீன் பிடித்தலை நம்பி ஏராளமான குடும்பங்கள்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு வாவியில் சட்ட விரோதமான முறையில் மீன் பிடித்தல் அதிகரித்துள்ளதால் சில மீனினங்கள் அழிந்து வருவதாக மாவட்ட மீன்பிடி விரிவாக்கல் தினைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

வாவியில் இனம் காணப்பட்டுள்ள 112 வகையான மீனினங்களில் 28 வகையான மீனினங்கள் அழிந்து வருவதாக மாவட்ட மீன்படித்துறை உதவிப் பணிப்பாளர் எஸ்.டி.ஜோர்ஜ் கூறுகின்றார்.

இம் மாவட்டத்திலுள்ள 24 ஆயிரம் மீனவ குடும்பங்களில், 50 சத வீதமான குடும்பங்கள் வாவி மீன்பிடித்தொழிலை தமது வாழ்வாதகரமாக நம்பியுள்ளதாகவும், வாவி மீனவர்களில் 20 முதல் 25 சத வீதமானவர்களே தடை செய்யப்பட்ட வலைகளைப் பாவித்து சட்ட விரோத மீன் பிடித்தலில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், கடந்த கால சூழ்நிலை காரணமாக ஏற்கனவே இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் சட்ட நடவடிக்கை மூலம் இதனை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த சட்ட விரோத மீன் பிடித்தல் காரணமாக இம் மாவட்டத்தில் சமூக பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்று கூறிய மாவட்ட மீன் பிடி அபிவிருத்தி சபைத்தலைவரான சிதம்பரப்பிள்ளை பியதாச, கடந்த காலங்களில் இதனை தடுக்க முற்பட்ட போதெல்லாம் ஆயுத அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதாகவும் கூறுகின்றார்.


இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு வரக்கூடிய மக்களுக்கான உதவிகள் குறித்து ஆய்வு

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வரக்கூடிய மக்களுக்கான உதவிகளை செய்வது குறித்த முக்கிய அதிகாரிகள் மட்டக் கூட்டம் ஒன்று இன்று வவுனியாவில் நடந்துள்ளது.

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தீவிரமான இராணுவ நடவடிக்கைகள் காரணமாக அங்கு ஏற்பட்டுள்ள போர்ப் பதற்ற நிலைமையையடுத்து, பாரிய எண்ணிக்கையில் மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதியான வவுனியா பிரதேசத்திற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு வரக்கூடிய இடம்பெயர்ந்த மக்களை 6 இடைத்தங்கல் முகாம்களில் முதலில் தங்கவைத்து அவர்களின் விபரங்கள் பதியப்பட்டு, பாதுகாப்பு நடைமுறைகள் முடிவடைந்த பின்னர், அவர்களுக்கென வேறு 3 இடங்களில் அமைக்கப்படவுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைப்பதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்வது குறித்து, இன்று வவுனியா செயலகத்தில் சிவில், பொலிஸ், இராணுவ அதிகாரிகள் மற்றூம் ஐநா அமைப்புக்கள் உட்பட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உள்ளுர் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்துள்ளார்கள்.

கிளிநொச்சி நிலைமைகள்

வெளியேறும் அரசசார்பற்ற நிறுவனங்கள்
வெளியேறும் அரசசார்பற்ற நிறுவனங்கள்

கிளிநொச்சியில் இருந்து உதவிநிறுவனப் பணியாளர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளதால், அங்கு இடம்பெயர்ந்தவர்களுக்காக அவர்கள் மேற்கொண்டுவந்த பணிகள் தடைப்பட்டுள்ளதுடன், தமக்கு அவை ஒரு சுமையாக மாறியுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் என். வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இராணுவததிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே வன்னிப்பிரதேசத்தில் உக்கிரமடைந்துள்ள மோதல் நிலைமைகளினால் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் இடம்பெயர்ந்து பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்துவரும் நிலையில், அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு அமைய அந்தப் பிரதேசத்தில் இருந்து ஐ நா மன்றம் சார்ந்த நிறுவனங்களும், ஏனைய சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டு நிறுவனங்களும் வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனால் குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் 22 பாடசாலைகளில் தங்கியிருந்த மக்களுக்கான மாற்று வாழ்விட வசதிகளை ஏற்படுத்துவதற்காக தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டு வந்த வேலைத்திட்டங்கள் முடிவடையாத நிலையில் கைவிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

இதனால் 17 பாடசாலைகளில் மாத்திரமே இடம்பெயர்ந்த மக்கள் வெளியேறியதையடுத்து, அங்கு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

5 பாடசாலைகளில் இன்னும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவில்லை என அவர் கூறுகின்றார். அத்துடன் மாற்று வாழ்விட வசதிகளைப் பெற்றவர்களும் தமக்குரிய அடிப்படை வசதிகளை முழுமையாகப் பெற முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.



இலங்கையின் வன்னியில் இருந்து ஐ.நா மன்றத்தினரை வெளியேற வேண்டாம் என கோரி மக்கள் முற்றுகை

முற்றுகையிட்ட மக்கள்
முற்றுகையிட்ட மக்கள்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதியில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டிருந்த ஐநா மன்றத்தின் உதவி அமைப்பினரை அங்கிருந்து வெளியேற வேண்டாம் எனக்கோரி அங்குள்ள மக்கள் அந்த அலுவலகங்களைச் சூழ்ந்திருந்து தடுத்திருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தகவல் வெளியிட்ட ஐநா மன்றத்தின் சார்பில் இலங்கையில் பேசவல்ல அதிகாரியாகிய கோடன் வெய்ஸ் அவர்கள், ஐநாவின் அகதிகளுக்கான தூதரகம், உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் அலுவலகங்களைச் சூழ்ந்து சுமார் 300 பேர் வரையிலான பொதுமக்கள் அந்த பணியாளர்களை அங்கிருந்து வெளியேற முடியாதாவாறு அமைதியான முறையில் தடுத்திருக்கின்றார்கள்.

தங்களது கரிசனைகளையும் கவலைகளையும் உள்ளடக்கிய கோரிக்கைகளை அவர்கள் எழுத்து மூலமாக அங்குள்ள தலைமைப் பணியாளரிடம் வழங்கி அவற்றை ஐநா மன்றத்தின் செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டிருக்கின்றார்கள்.

நாங்கள் அங்கிருந்து வெளியேறவே முயற்சிக்கின்றோம். எமது கணிப்பின்படி அங்கு நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன. அரசாங்கம் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என தெரிவித்து அங்கிருந்து எங்களை வெளியேறிவிடுமாறு கோரியிருக்கின்றது. அங்குள்ள எமது பணியாளர்கள் அவர்களை வெளியேறாதவாறு தடுத்துள்ள பொதுமக்களிடம் தம்மை வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறு கேட்டிருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Sep 06 – Sri Lanka, LTTE, Eezham: News & Updates

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2008

வவுனியா தாக்குதலில் 2 இந்தியர்கள் காயம் – இலங்கை அமைச்சர் ஒப்புதல்

இலங்கையின் வடக்கே வவுனியாவிலிருக்கும் வன்னிப் பிரதேசத்துக்கான பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் மீது
கடந்த செவ்வாய்கிழமையன்று, விடுதலைப் புலிகளால் தரைவழியாகவும் வான்வழியாகவும் நடத்தப்பட்டத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் காயமடைந்துள்ளதை இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதை அந்நாட்டின் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், வவூனியாவில், பராமரிப்பு ஒப்பந்ததில் கீழ் இருந்த இரண்டு இந்தியப் பிரஜைகள் இராணுவத்தைச் சேர்ந்தவர்களா அல்லது தொழில்நுட்ப பணியாளர்களா என்பது தனக்குத் தெரியாது என்று கூறிய அவர் அவர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த புதிய ராடார் வசதிகள் தொடர்பில் இலங்கை இராணுவத்துக்கு உதவி செய்துவந்தார்கள் என்று கூறினார்.

இலங்கையின் பாதுகாப்புக்காக நவீன ராடார்களை வழங்கியதுடன், தமது நாட்டுப் பிரஜைகளையும் அனுப்பி உதவி செய்த வலுவான எமது அண்டை நாட்டுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.

ஆனால் இந்த தாக்குதலில் இந்தியர்கள் காயமடைந்தது குறித்து புது டெல்லி மவுனம் சாதித்து வருகிறது,

வவுனியா தாக்குதலில் காயமடைந்த இந்தியர்கள் யார் என்பது குறித்து இந்திய அரசு விரிவான விளக்கமளிக்க வேண்டும் என்று, இந்தியாவில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் ராஜா அவர்கள் கோரியிருக்கிறார்.

அதே நேரம் வவுனியா தாக்குதலை அடுத்து இலங்கை ராணுவத்திற்கு உத வும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்களை இலங்கையில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று விடுதலைசிறுத்தைகள் கட்சியும் பாட்டாளிமக்கள் கட்சியும் கோரியிருக்கின்றன. இது குறித்து இன்றைய நிகழ்சியில் கேட்கலாம்.


வவூனியா தாக்குதல்களில் கொல்லப்பட்ட கரும்புலிகளின் சடலங்கள் ஒப்படைப்பு

வவுனியா தாக்குதலில் ஈடுபட்ட கரும்புலிகள் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட படம்
வவுனியா தாக்குதலில் ஈடுபட்ட கரும்புலிகள் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட படம்

இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் வெலிஓயா பகுதிகளில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்டு, இராணுத்தினரால் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் 14 சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் இன்று கையளிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா இராணுவ கூட்டுப்படைத் தலைமைத் தளத்தின் மீது செவ்வாயன்று நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 10 கரும்புலிகளின் சடலங்களும், வெலிஓயா களமுனைகளில் கடந்த சில தினங்களில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட 4 விடுதலைப் புலிகளின் சடலங்களுமே இவ்வாறு சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சடலங்கள் உடனடியாகவே ஓமந்தை சோதனைச்சாவடிக்கு வடக்கே புளியங்குளம் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வெலிஓயா மற்றும் யாழ்ப்பாணம் கிளாலி ஆகிய களமுனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நேற்று மேற்கொண்ட தாக்குதல்களின் போது இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 16 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 7 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது,


கிழக்கு மாகாணத்தில் 7 சடலங்கள் கண்டெடுப்பு

இலங்கையின் கிழக்கே அம்பாறை மொனராகலை மாவட்டங்களின் எல்லையிலுள்ள அத்தியமலைக் காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வியாழன் நன்பகல் 7 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

காட்டில் விறகு வெட்ட சென்றவர்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த போலீஸ் மற்றும் விசேட அதிரடிப் படியினரால் இச்சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் சடலங்களுடன் உழவு இயந்திர இழுவைப் பெட்டி ஒன்றும் அங்கு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொல்லப்பட்டவர்கள் தோட்டப் பயிர் செய்கையாளர்கள் என்று கூறும் போலீசார், சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இருப்பினும் இந்தச் சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் மீது சந்தேகம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு தரப்பினர், அந்தக் காட்டுப் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்று நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடுகின்றது.

இது தொடர்பில் புலிகள் தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளியாகவில்லை.

விமானத்தாக்குதலில் நிறைமாதக் கர்ப்பிணியும் அவரது மூன்று வயதுக் குழந்தையும் காயம்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகரையடுத்த பகுதியில் இலங்கை விமானப்படையின் விமானங்கள் நடத்திய குண்டுத் தாக்குதலில் ஒரு நிறைமாதக் கர்ப்பிணியும் அவரது மூன்று வயதுக் குழந்தையும் காயமடைந்தனர்.

இவர்கள் இருவரும் முதலில் கிளிநொச்சி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், நிறைமாத வயிற்றில் கல் ஒன்று தாக்கியிருந்ததால், அந்தத்தாய் பின்னர் வவுனியா மருத்துமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில், அவரது வயிற்றில் இருந்த சிசு இறந்து காணப்பட்டதால், அது உயிரிழந்த நிலையில் வயிற்றில் இருந்து நீக்கப்பட்டது.

அதேவேளை, இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் தரைப்படையினருக்கு உதவியாக, விமானப் படையினர், விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது தொடர்ச்சியாக விமானக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இலங்கை விமானப்படை விமானங்கள்
இலங்கை விமானப்படை விமானங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று காலையிலும் நண்பகலிலுமாக மூன்று தடவைகள் அரச விமானப்படைக்குச் சொந்தமான குண்டு வீச்சு விமானங்கள் குண்டுகளை வீசியதாக அது கூறியுள்ளது.

அக்கராயன்குளத்திற்கு கிழக்கே விடுதலைப் புலிகள் மண்ணைக்குவித்து பெரிய பாதுகாப்பு அரண் ஒன்றை அமைத்துக் கொண்டிருந்த இடத்தை இலக்கு வைத்தும், கிளிநொச்சி உடையார்கட்டு குளத்திற்குக் கிழக்கே இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் வெடிப்பொருள் களஞ்சியம் மற்றும் விநியோகத் தளத்தின் மீதும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

இந்தத் தாக்குதல்களுக்கு முன்னதாக கிளிநொச்சிக்கு மேற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய உளவுப்பிரிவு தளத்தின் மீது இன்று காலை 6.45 மணிக்கு விமானப்படையின் தாக்குதல் விமானங்கள் குண்டுகளை வீசி அழித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும், கிளிநொச்சி நகரின் மையப்பகுதியில் ஏ9 வீதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள திருநகர் பகுதியில் இந்த விமான குண்டு வீச்சுத் தாக்குதல் நடைபெற்றதாகவும், இதில் பல வீடுகள் சேதமடைந்ததுடன், அதன்போதே அந்த 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண் வயிற்றில் கல் அடிபட்டு காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


வன்னி நிலைமைகள் குறித்து ஐ.நா தலைமைச் செயலர் கவலை

பான் கி மூன்
பான் கி மூன்

இலங்கையின் வட பகுதியில் நடக்கின்ற மோதல்களின் அதிகரிப்பு குறித்தும், அங்கு ஏற்பட்டிருக்கின்ற மனித நேய நெருக்கடிகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கி மூன் அவர்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவரது சார்பில் பேசவல்ல அதிகாரியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேயப் பணியாளர்களை வெளியேறுமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுள்ள நிலையில், மக்களின் பாதுகாப்பு மற்றும் நடமாடுவதற்கான சுதந்திரம் குறித்து செயற்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுப்பதற்கான அவர்களது பொறுப்பு பற்றியும், மனித நேயப் பணியாளர்கள் சுதந்திரமாக தமது பணிகளை செய்வதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும் என்பது குறித்தும், மனித நேய உதவிகள் தேவைப்படும் மக்களை அவர்கள் சென்றடைவதற்கான தேவை குறித்தும் ஐ. நா செயலர் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை உதவிப் பணியாளர்களின் வெளியேற்றம் வன்னியில் மோதலினால் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று தாம் அஞ்சுவதாக சர்வதேச அபய ஸ்தாபனம் தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

இதனால், அங்கு மக்கள் விடுதலைப்புலிகளினால் மேலும் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகும் நிலை உருவாகும் என்றும் அந்த அறிக்கையில் அபய ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.


வவுனியா இராணுவ தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்

இலங்கையின் வடக்கே வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய இராணுவ தளத்தின் மீது செவ்வாய் அதிகாலை வான்வழியாகவும் தரைவழியாகவும் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்தத் தாக்குதலில் இரு தரப்பிலும் 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது. இவர்களில் 10 பேர் விடுதலைப் புலிகள் என்றும், படை தரப்பில் கொல்லப்பட்டவர்களில் 10 இராணுவத்தினரும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் அடங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் விடுதலைப் புலிகளோ, தாங்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் அந்த இராணுவ முகாமில் இருந்த ரேடார் நிலையத்தை அழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

குண்டுத் தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானங்கள் இரண்டையும் துரத்திச் சென்ற அரச விமானங்கள், முல்லைத்தீவு பகுதியில் அவற்றில் ஒன்றை சுட்டு வீழ்த்தி அழித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது. ஆனால் புலிகள் இதனை மறுத்துள்ளனர்.

புலிகளின் தாக்குதலில் இந்தியப் பொறியியலாளர்கள் இருவர் காயம்?

ராடார் கண்காணிப்பு அமைப்பு ஒன்று

வவுனியாவில் இராணுவ மற்றும் விமானப்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய சமயம், அத்தளத்திலுள்ள ரேடார்களை பாராமரிப்பதற்காக அங்கு தற்காலிமாகத் தங்கியிருந்த இரண்டு இந்திய தொழில்நுட்பப் பணியாளர்கள் காயமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவதளத்தில் ரேடார் பராமரிப்பு வேலைகளுக்காக இந்திய ரேடார் தொழில்நுட்பப் பணியாளர்கள் தற்காலிகமாகத் தங்கியிருந்தார்கள் என்றும், தாக்குதலின்போது காயமடைந்த அவர்கள் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைபெற்று வருவதாகவும் இலங்கையிலுள்ள இந்திய தூதரகப் பேச்சாளர் திங்கர் அஸ்தானா தெரித்தார்.

இவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் உயிர் ஆபத்து அற்றவை என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த இராணுவத் தளத்தில் இந்தியப் பிரஜை எவரும் இருக்கவில்லை என்று இலங்கை இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.


வன்னியிலிருந்து வெளியேறப்போவதில்லை: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

இலங்கையில் செஞ்சிலுவைச் சங்க வாகனம்

வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அரசு சாரா தொண்டு நிறுவன ஊழியர்கள் வெளியேறவேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரியுள்ள நிலையில், மனிதாபிமான உதவிப் பணிகள் தேவைப்படும் மக்களுடன் தங்கியிருந்து தாங்கள் தொடர்ந்தும் செயற்படப்போவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்திருக்கிறது.

தனது இந்த நிலைப்பாடு குறித்து கொழும்பிலுள்ள ஐ.சி.ஆர். சியின் தலைமையகம் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

வன்னிப் பகுதியில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசங்களின் அரசபடைகளுக்கும், புலிகள் அமைப்பினருக்கும் இடையில் அதிகரித்துவரும் மோதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வருவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் இனம் காணப்பட்ட இலக்குகள் மீது இன்று மூன்று தடவைகள் வான்வழி தாக்குதல்கள் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதமேற்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

அத்துடன், வன்னிக்களமுனைகளில் நேற்று இடம்பெற்ற சண்டைகளில் 17 விடுதலைப் புலிகளும், 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இந்த மோதல்களில் மேலும் 13 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா கிழக்குப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும் தளம் ஒன்றின்மீது இன்று பிற்பகல் 2.10 மணியளவில் விமானப்படையின் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே 3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் பயிற்சித்தளம் ஒன்றின் மீது இன்று காலை 10.20 மணியளவில் தமது குண்டு வீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்தி அந்தத் தளத்தை அழித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா கௌதாரிமுனையில் கடற் புலிகளின் தளம் ஒன்றின் மீது இன்று அதிகாலை எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதங்களை எற்படுத்தியிருப்பதாகவும் கடற்படையின் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க பெரேரா தெரிவித்திருக்கின்றார்.

எனினும் இந்த வான்வழி தாக்குதல்கள் பற்றியோ நேற்றைய களமுனை மோதல்கள் குறித்தோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.



ரூகம் கிராமத்தில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்துக்கான ஏற்பாடுகள்

பள்ளிவாசலில் தொழுகை
பள்ளிவாசலில் தொழுகை

இலங்கையின் கிழக்கே 1990 ஆம் ஆண்டு இதே காலப் பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையே ஏற்பட்ட இன வன்முறைகளை அடுத்து, செங்கலடி பதுளை வீதியிலுள்ள ரூகம் கிராமத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்கள் மீண்டும் அங்கு குடியேறத் தயாராகி வருகிறார்கள்.

இவ்வாறு அந்த கிராமத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்கள் தொடர்ந்து கடந்த 18 வருடங்களாக ஏறாவூரிலும் அட்டாளச்சேனைப் பகுதியிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கி வருகிறார்கள்.

தமது வீடுகளைப் பார்க்க வந்தவர்கள்
தமது வீடுகளைப் பார்க்க வந்தவர்கள்

தமது மீள்குடியேற்றத்துக்கு முன்னோடியாக அந்தப் பகுதியிலுள்ள காணிகளை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அங்குள்ள பள்ளிவாசலில் தொழுகைகளை நடத்தி வருவதாகவும், ரூகம் இடம் பெயர்ந்தோர் நலன்புரி சங்கத்தின் செயலரான சீனி முகமது மஹரூஃப் தமிழோசையிடம் தெரிவித்தார்.

அந்தப் பகுதியில் தற்போது அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்கிற காரணத்தால் அங்கு சென்று தம்மால் மீண்டும் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியும் எனவும் தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.

அங்கிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்கள் மீண்டும் அங்கு வந்து குடியேற முன்வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒரு விடயம் என அங்குள்ள தமிழ் மக்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இது குறித்த மேலதிகத் தகவல்கள் இன்றைய நிகழ்ச்சியில்



இலங்கை வவுனியா வைத்தியசாலையில் புதிய கட்டிடம் திறப்பு

திறப்பு விழாவில் முக்கியஸ்தர்கள்
திறப்பு விழாவில் முக்கியஸ்தர்கள்

இலங்கையின் வடக்கே வவுனியா வைத்தியசாலையில் 132.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டிடத் தொகுதியை வடமாகாண ஆளுனர் விக்டர் பெரேரா அவர்கள் வவுனியாவுக்கு முதல் தடவையாக வருகை தந்து அந்தக் கட்டிடத்தை வைபவரீதியாகத் திறந்து வைத்தார்.

மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுடன் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சமூகநலத்துறை அமைச்சரும் வடக்கு செயலணிக்குழுவின் தலைவருமாகிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடமாகாண சபைக்கான அலுவலகத்தை மாங்குளத்தில் அமைப்பதற்கு ஆலோசிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த முக்கியஸ்தர்களின் வருகையையொட்டி வவுனியா நகரப்பகுதியில் படையினரும் பொலிசாரும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக இங்கு உரையாற்றிய வடமாகாண ஆளுனர் விக்டர் பெரேரா அவர்கள் கூறினார். இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே வன்னி களமுனைகளில் சனிக்கிழமை காலை 6 மணிவரையிலான 24 மணிநேரத்தில், இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களில் 24 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா மன்னார் வீதி, தாலிக்குளம் பிரதேசம், வவுனியா பாலமோட்டை, கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளம், வெலிஓயா, ஆண்டான்குளம் ஆகிய போர்முனைகளில் இடம்பெற்ற மோதல்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இராணுவ தலைமையகம் தனது இணையத்தள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருக்கின்றது.

இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புக்குளம் பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்க பதுங்கு குழி வரிசையொன்றின் மீது சனிக்கிழமை காலை எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதங்களை ஏற்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இந்தப் பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினருக்கு உதவியாக அடையாளம் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Breakaway LTTE, TMVP leader Karuna back in Colombo; US ‘concerned’ over Sri Lanka rights, attacks on media; Victor Perera the new Governor of the Northern Province

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2008

சுயவிருப்பத்துடன் இலங்கை திரும்பினேன்: கருணா

முறைகேடுகள் இல்லாமலும், தனது விருப்பின் பேரிலும்தான் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பியதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான கருணா தெரிவித்துள்ளார். தனது மக்களுக்கு தான் செய்ய வேண்டிய பணிகளைக் கருத்தில் கொண்டு தான் நாடு திரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என்று தான் விரும்பவில்லை என்றும் பிள்ளையான் அப்பதவியில் இருப்பதை தான் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

வடக்கில் நடந்துவரும் மோதல்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எதுவித சம்பந்தமும் கிடையாது; இராணுவத்துக்கு தமது அமைப்பினர் உதவுவார்கள் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழோசைக்கு பிரத்தியேகமாக செவ்வியொன்றை வழங்கிய கருணா அவர்கள், கிழக்கு மாகாணத்தில் அவசரமாக தேர்தல் நடத்தப்பட்டதன் காரணத்தினால் தமது அமைப்புக்கு மேலும் கிடைத்திருக்க வேண்டிய ஆசனங்கள் கிடைக்காமல் போனதாகக் கூறியனார்.

இருந்தபோதிலும் தமது அமைப்பு இந்த தேர்தலில் வெற்றி பெற்றது குறித்தும், தனது கட்சியைச் சேர்ந்த பிள்ளையான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கருத்து

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்சித் தலைவராக கருணா நீடிப்பார் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கருணா அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வருகையைத் தெரிவித்ததாகவும், தனக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் பின்னர் சந்திப்பதாக கருணாவிடம் தெரிவித்துள்ளதாகவும் முதல்வர் கூறினார்.

இவர்களது செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார் கருணா

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய கர்ணல் கருணா பிரித்தானியாவில் குடிவரவு தடுப்பு முகாமிலிருந்து இலங்கைக்கு நேற்று(புதன்கிழமை) திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்துக்காக பேசவல்ல அதிகாரியான டோமினிக் வில்சன் தமிழோசையிடம் உறுதி செய்தார்.

கருணா இலங்கை திரும்பியுள்ளதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளர் ஆசாத் மௌலானாவும் உறுதி செய்துள்ளார்.

வேறு பெயரிலான ஒரு கடவுச்சீட்டுடன் பிரித்தானியவுக்குள் நுழைந்த வழக்கில் பிரித்தானிய அரசால் கைது செய்துபட்ட கருணா அவர்களுக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை முடிவடைந்த பின்னர் அவர் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே கருணா இலங்கை திரும்பிவிட்டாலும், அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட மாட்டாது என்று அவரது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கைக் கடற்பரப்பரப்பில் நுழைந்த பல நூறு இந்திய மீன்பிடிப் படகுகள் விசாரணையையடுத்து விடுவிப்பு

இராமேஸ்வரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள்
இராமேஸ்வரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள்

இலங்கைக் கடற்பரப்பின் மன்னார் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் பல நூறு இந்திய மீன்பிடி படகுகளை இலங்கைக் கடற்படையினர் நேற்றுமாலை கைதுசெய்து, பலமணிநேர தீவிர விசாரணைகளின் பின்னர் விடுவித்திருக்கிறார்கள்.

இது குறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, நேற்று, புதன்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள விடத்தல்தீவு பகுதியை நோக்கி இந்த இந்திய மீன்பிடி படகுகள் சென்று கொண்டிருந்தவேளை, நெடுந்தீவிற்கு மன்னாருக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, தலைமன்னார் கடற்கரைக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வைத்து இவர்கள் மீது கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று
இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று

இதன்பின்னர் சுமார் இரவு 10 மணியளவில் இதில் 299 இந்திய படகுகள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், எஞ்சிய ஒரு படகில் திசையறிகாட்டிபோன்ற கருவிகள் காணப்பட்டதால், மேலதிக சோதனைக்காக அது தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இன்று காலை அதுவும் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சோதனை நடவடிக்கைகளின்போது இந்திய மீனவர்களிடமிருந்தோ அல்லது அவர்களுடைய படகுகளில் இருந்தோ சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, இந்திய மீனவர்கள் இவ்வாறு அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்துவருவது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிவருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கைப் படையினர் இந்திய மீனவர்களைக் கைது செய்ததை கண்டிக்கும் இராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் தலைவரான போஸ் அவர்கள், ஆனால், தமது மீனவர்கள் இலங்கைப் பகுதிக்குள் சென்று மீன்பிடிப்பதையும் ஒப்புக்கொள்கிறார்.

இது குறித்த போஸ் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்


ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் வடக்கு மாகாண ஆளுனராகப் பதவியேற்பு

விக்டர் பெரேரா பதவியேற்கும் காட்சி
விக்டர் பெரேரா பதவியேற்கும் காட்சி

இந்த வார முற்பகுதியில் இலங்கை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற விக்டர் பெரேரா அவர்கள் வடக்கு மாகாணத்தின் ஆளுனராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருக்கிறார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்திருந்த வடகிழக்கு மாகாணம், நீதிமன்றத் தீர்பொன்றின் பின்னர் இருவேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மாகாணத்திற்கென தனியொரு ஆளுனர் நியமிக்கப்படிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இதற்கு முன்னர் தற்போது கிழக்கு மாகாண ஆளுனராகப் பணிபுரிந்துவரும் முன்னாள் கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவே வடக்கு மாகாண ஆளுனராகவும் கடமையாற்றிவந்தார்.


இலங்கை மனித உரிமை நிலவரம் குறித்து அமெரிக்கா கவலை

ஊடகங்கள் மீதான அழுத்தம் அதிகரிப்பதாக கவலை

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தமக்கு மகிழ்சியளிக்கவில்லை என்று அமெரிக்கா இலங்கையிடம் கூறியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைச் சூழல் குறித்தும் ஊடகங்கள் மீதான அழுத்தங்கள் குறித்தும் அமெரிக்கா அதிகமாக கவலைப்படுவதாக, ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலரான இவான் பைஜன்பாம், இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் முடிவில் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், தங்களின் பாதுகாப்பு குறித்து உடகவியலாளர்கள் எழுப்பிய பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஒரு அமைச்சகக் குழு அமைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கையின் வளர்ச்சிக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்றும் பைஜன்பாம் தெரிவித்துள்ளார்.


ஓமந்தை சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ள நிலையில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் – பெட்டகம்

பாதை திறக்காத நிலையில் பயணத்தின் பாதிவழியில்…

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் இடையிலான ஓமந்தை சோதனைச்சாவடி 3 ஆவது நாளாக இன்றும் திறக்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் வன்னிப் பகுதிக்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோக நடவடிக்கைகள் என்பனவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

வன்னிப்பிரதேசத்திற்குச் செல்வதற்காக வவுனியாவில் சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கின்றார்கள்.

கையிலிருந்த பணம் செலவழிந்துவிட்டதனால் சாப்பிடவும் வழியில்லை செலவுக்கும் வழியில்லை என இவர்கள் வவுனியா செயலக அதிகாரிகளிடம் முறையிட்டதை அடுத்து, விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை OFFER என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியோடு அரச அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

போக்குவரத்தின்மை காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் நிவாரண விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Posted in Govt, India, Law, Order, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

LTTE’s Parappakkadantan Stronghold Falls – June 27: Tamil Eelam, Sri Lanka, War Updates

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 ஜுலை, 2008

விடுதலைப்புலிகள் பகுதியில் 8 விமானங்கள் ஒரே நேரத்தில் குண்டு வீச்சு

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் மாங்குளத்திற்கு வடகிழக்கே 8 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள விடுதலைப் புலிகளின் பயிற்சித்தளம் ஒன்றின் மீது இன்று காலை இலங்கை அரசாங்க விமானப்படைக்குச் சொந்தமான 8 குண்டு வீச்சு விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் வான்படையினர் போன்ற விசேட அணியினருக்கான இந்தப் பயிற்சி நிலையத்தின் மீதான இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்தத் தாக்குதல் பற்றியோ, இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றியோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஓமந்தையில் இருந்து ஐ சி ஆர் சி மீண்டும் விலகல்

ஓமந்தை சோதனைச் சாவடி
ஓமந்தை சோதனைச் சாவடி

இதற்கிடையில், ஓமந்தை சோதனைச்சாவடிப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையடுத்து, அந்தச் சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபடுவதிலிருந்து தாங்கள் விலகியிருப்பதற்கு முடிவு செய்திருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

இந்தச் சோதனைச்சாவடி ஊடாகப் பயணம் செய்யும் பிரயாணிகளினதும், தமது ஊழியர்களினதும் பாதுகாப்பு தமக்கு முக்கியமானது என்பதனால், இந்தப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டதும் தமது பணியாளர்கள் திரும்புவார்கள் என்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் தகவலதிகாரி தெரிவித்தார்.

எனினும் அங்கு நடைபெற்ற சம்பவம் என்ன என்பது தொடர்பான விபரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
இதனிடையில், நாளை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் ஓமந்தைக்கு கடமைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் என்ற தகவல் அந்தக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகளினால் கிளிநொச்சி மற்றும் வவுனியா அரசாங்க அதிபர்களுக்கு இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அந்த அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே ஓமந்தையில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை விலகச் செய்யும் வகையில் இன்று என்ன சம்பவம் நிகழ்ந்தது, என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஜெனிவாவில் உள்ள பேச்சாளர் கார்லா ஹடட் அவர்களிடம் பிபிசி சிங்கள சேவையின் சார்பில் கேட்டதற்கு பதிலளித்த அவர், அது ஒரு வெடிப்பு சம்பவம் என்றும், இருந்த போதிலும் அது குறித்த தெளிவான தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும், இது குறித்து தாம் சம்பந்தப்பட்ட தரப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.


ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டர் தொடரணியை சேர்ந்த வாகனத்தின் மீது தாக்குதல்?

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பயணித்த ஹெலிக்கொப்டர் தொடரணியைச் சேர்ந்த ஒரு ஹெலிக்கொப்டர் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சேன சுரவீர அவர்கள் பாதுகாப்புக்கான ஹெலிக்கொப்டர் ஒன்றே மோட்டார் தாக்குதலில் சேதமடைந்ததாகவும், அதற்கு சிறிய சேதம் மாத்திரமே ஏற்பட்டதாகவும் கூறினார்.

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் அறுகம்பை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பாலம் ஒன்று மீளமைக்கப்பட்டதை அடுத்து அதனைத் திறப்பதற்காக அங்கு சென்ற ஜனாதிபதி அங்கிருந்து திரும்பிய வேளையில், அவர் சென்ற ஹெலிக்கொப்டருடன் கூடச் சென்ற ஹெலிக்கொப்டர் ஒன்றே இவ்வாறு விடுதலைப்புலிகளின் ராக்கட் தாக்குதலுக்கு உள்ளானதாக தாம் கேள்விப்பட்டதாக பொத்துவில் பகுதிக்கான சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்து, தரையிறக்கப்பட்ட ஹெலிக்கொப்டர் சேதமடைந்திருந்ததை தான் நேரில் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


வவுனியா சுற்றிவளைப்பில் பலர் கைது

கைது செய்யப்பட்டவர்களை மீட்க காத்திருப்போர்
கைது செய்யப்பட்டவர்களை மீட்க காத்திருப்போர்

இலங்கையின் வடக்கே வவுனியாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கையையடுத்து நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் நேற்று நடைபெற்ற திடீர் தேடுதலின் போது பெருமளவானோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை வவுனியா பொலிஸார் இரவு முழுதும் தடுத்து வைத்ததையடுத்து உறவினர்கள் அச்சமடைந்தனர். பதற்றமும் நிலவியது.

இன்று காலை பெரும் எண்ணிக்கையான உறவினர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தின் எதிரில் கைது செய்யப்பட்டவர்களை மீட்டு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட 91 பேரில் இருவரைத் தவிர ஏனையோரை பொலிஸார் விடுதலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திப் பெட்டகத்தில் கேட்கலாம்.


பரப்புக்கடந்தானை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரைக்குளத்திற்கு வடக்கே உள்ள பரப்புக்கடந்தான் கிராமப்பகுதியை இராணுவத்தினர் இன்று கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளுடனான கடும் சண்டைகளின் பின்னர் இந்தப் பிரதேசம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆண்டான்குளம் பகுதியில் மேலும் 7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவான நிலப்பகுதியை இராணுவத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை மீட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

மன்னார், வவுனியா, வெலிஓயா களமுனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது வெள்ளிக்கிழமை நடத்திய வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் 44 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள்

மன்னார் ஆண்டான்குளம், பாப்பாமோட்டை, நெடுவரம்பு மற்றும் வவுனியா வெலிஓயா போர்முனைகளில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் சண்டைகளின்போதே விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டிருக்கின்றது.

கடந்த வியாழக்கிழமை மன்னார் சிராட்டிக்குளம் பகுதியில் கொல்லப்பட்ட 25 விடுதலைப் புலிகளின் சடலங்களையும் வவுனியா மாவட்ட நீதிபதி எம்.வை.எம்.இஸடீன், வவுனியா வைத்தியசாலையில் பார்வையிட்டு விசாரணை நடத்தியதையடுத்து, இந்தச் சடலங்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சடலங்கள் நாளை சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இதேவேளை, யாழ்ப்பாணம் பருத்தித்துறை கலிகை சந்திக்கருகில் நேற்றிரவு 8 மணியளவில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட வீதியோரக் குண்டுத் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் மல்லாவி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பப்பெண் ஒருவர் நேற்றிரவு 7.30 மணியளவில், அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். கொல்லப்பட்டவர் வவுனியா நகரில் புடவைக் கடையொன்றில் பணியாற்றி வந்ததாக பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 27 ஜூன், 2008


வட இலங்கை மோதல்களையடுத்து விடுதலைப்புலிகளின் 25 சடலங்களை மீட்டதாக இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடமேற்கே மன்னார், வவுனியா முன்னரங்க பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 25 சடலங்களை தாம் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இந்தச் சடலங்கள் இன்று இரவு 7.30 மணியளவில் வவுனியா பொது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இந்தச் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

மன்னார் சிராட்டிக்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் சடலங்கள் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றிய பின்னர், இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலின் போது கண்டெடுக்கப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

மன்னார் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு சண்டையின் போது 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், வவுனியா பாலமோட்டை பகுயில் இடம்பெற்ற இன்னுமொரு மோதலின்போது 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், வவுனியா நவ்வி என்ற இடத்தில் இராணுவத்தினர் மேலும் ஒரு விடுதலைப்புலி உறுப்பினரின் சடலத்தைக் மீட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள்

இந்தச் சண்டைகள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் வவுனியா பாலமோட்டை பகுதியில் இராணுவத்தினர் நேற்று மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தங்களால் முறியடிக்கப்பட்டதாகவும், இதில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய பயிற்சி முகாம் ஒன்றினை விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் இன்று காலை குண்டுவீசித் தாக்கியுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.


கடத்தப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டார்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில், கடந்த வியாழக்கிழமை கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினரொருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

28 வயதான காளியப்பன் குணசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நபர், கடந்த 19ஆம் திகதி கறுவாக்கேணியிலுள்ள காரியாலயத்திலிருந்து தண்ணீர் எடுக்க வெளியே சென்றிருந்த வேளையில் காணாமல் போனதாக கூறப்பட்டிருந்தது.

விநாயகபுரம் காட்டுப் பகுதியில் புதையுண்ட நிலையில் இவரது சடலம் வெள்ளி நண்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

இந்நபர் கடத்தப்பட்டு காணாமல் போனமைக்கு டி.எம்.வி.பி அமைப்பினரே பொறுப்பு என ஈ.பி.டி.பி. யினர் குற்றம்சாட்டியிருந்தனர். ஆனால் ரி.எம்.வி.பி அமைப்பினர் இக்குற்றச்சாட்டை மறுத்திருந்தனர்.


புலர்ந்தும் புலராத விடியல் – பாகம் 4

மீளக்கட்டப்பட்ட வாகரை மருத்துவமனை
மீளக்கட்டப்பட்ட வாகரை மருத்துவமனை

இலங்கையின் கிழக்கே திருகோணமலை – மட்டக்களப்பு மாவட்டங்களில் மீள் குடியேற்றப் பகுதிகளில் மோதல்களுக்குப் பின்னர் பொருளாதார மீட்சி மந்தகதியிலேயே நடந்துவருகிறது.

வேலை இல்லாத் திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது; விலைவாசிகள் மிக வேகமாக உயர்ந்துவருகிறன.

சாலைகள், பொதுக் கட்டிடங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றை சீரமைக்கும் பணிகளும் மந்தமாக நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டை பொது மக்கள் பலர் கூறுகின்றனர்.

மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க அவர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் தேவை என்றபோதிலும், அட்டையைப் பெறுவதில் தாமதங்கள் ஏற்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர். மீனவர்களைப் போலவே விவசாயிகளும் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர்.

கிழக்கிலங்கையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பொருளாதார நிலை குறித்த பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 28 ஜூன், 2008

விடுதலைப் புலிகளிடம் இருந்து விடத்தல்தீவைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகிய விடத்தல்தீவு பகுதி வரை இராணுவம் முன்னேறியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம அறிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் இராணுவத்தினர் மன்னார் – பூனகரி பிரதான வீதியில் 12 கிலோ மீட்டர் தூரத்தைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறியிருக்கின்றார்.

உயிலங்குளம் – அடம்பன், உயிலங்குளம் – ஆண்டான்குளம் ஆகிய விடுதலைப் புலிகளின் முக்கிய விநியோக வீதிகள் உட்பட சுமார் 120 சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பிரதேசம் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள அம்பலப்பெருமாள்குளத்திற்கும் கோட்டைகட்டினகுளத்திற்கும் இடையில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச உதவி அரசாங்க அதிபர் நாகலிங்கம் நந்தகுமார் கொல்லப்பட்டுள்ளதாய்த் தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

நாகலிங்கம் மீதான தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தினர்; ஆனால் இராணுவத் தரப்பில் இருந்து இதுகுறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தவிர வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 25 சடலங்களும் இன்று சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரும் உறுதி செய்துள்ளனர்.


பிள்ளையான் – விமல் வீரவன்ஸ சந்திப்பு – ஓர் அலசல்

விமல வீரவன்ஸ
சிவநேசத்துரை சந்திரகாந்தன்





கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் ஜே.வி.பி. அதாவது மக்கள் விடுதலை முன்னணி கட்சியிலிருந்து பிரிந்து சென்று தேசிய விடுதலை முன்னணி என்ற ஒரு புதுக் கட்சியைத் தொடங்கியுள்ள விமல வீரவன்ஸ இடையில் நேற்று சனிக்கிழமையன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இவ்விரு புதிய கட்சிகளும் தங்களுடைய நீண்டகால அரசியல் நலன்களுக்கு ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டும் என்பதை உணருவதால் ஏற்பட்ட ஒரு அரசியல் நகர்வாக இச்சந்திப்பு கருதப்படுகிறது.

இச்சந்திப்பின் அரசியல் பின்புலம் மற்றும் முக்கியத்துவம் குறித்து இலங்கை அரசியல் விவகார ஆய்வாளர் பேராசிரியர் யுவி தங்கராஜா தமிழோசையில் கருத்து வெளியிட்டார்

டி.எம்.வி.பி. போன்ற அமைப்புகள் ஆயுதக் களைவு செய்ய வேண்டும் என்கிற விவகாரத்தில் ஜே.வி.பி. தலைமைத்துவத்தின் நிலைபாட்டிலிருந்து விமல வீரவன்ஸ சற்று முரண்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளிடம் இருந்து அச்சுறுத்தல் நிலவுகின்ற சூழலில் டி.எம்.வி.பி. போன்ற அமைப்பினர் ஆயுதக் களைவு செய்வது சாத்தியமாகாது என்ற கருத்தை வீரவன்ஸ கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் கட்டாயம் உடனடியாக ஆயுதக் களைவு செய்ய வேண்டும் என்பது ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவின் நிலைப்பாடாக இருந்தது. இந்த முரண்பாடானது ஜே.வி.பி. கட்சியிலிருந்து வீரவன்ஸா விலகியதன் காரணங்களுள் ஒன்றாகக் கூறப்பட்டிருந்தது. ஆகவே வீரவன்ஸவுக்கு ஆதரவு வழங்குவதென்பது பிள்ளையானுடைய தார்மீகப் பொறுப்பாக கூட இருக்கலாம் என்று பேராசிரியர் தங்கராஜா தெரிவித்தார்.

அவரது பிற கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 30 ஜூன், 2008

விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து வருகிறார்கள்: இலங்கை இராணுவம்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அரச படைகளிடம் தோல்வியடைந்துவருகிறார்கள் என்று அந்நாட்டின் இராணுவத் தளபதி லெஃப்டினண்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா கூறியுள்ளார்.

நாட்டின் வட பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்துவருவதாகவும் பதுங்கு குழிகளிலிருந்து நடத்தப்படும் தாக்குதல்களையும் ஆர்ட்டிலரி குண்டுகளையும் சமாளித்து அரச படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் மென்மேலும் முன்னேறிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மரபு வழியில் சண்டையிடும் வல்லமையை புலிகள் இழந்துவிட்டார்கள் என்று சரத் ஃபொன்சேகா கூறினார்.

2006ஆம் ஆண்டு போர்நிறுத்தம் முறிந்ததிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஒன்பதாயிரம் பேரை இராணுவத்தினர் கொன்றிருப்பதாகக் கூறிய தளபதி ஃபொன்சேகா, இராணுவத் தரப்பில் இந்த காலகட்டத்தில் 1700 பேரை தாம் இழந்துள்ளதாகக் கூறினார்.

புலிகள் தற்போது கட்டாய ஆட்சேர்ப்புக்களைச் செய்துள்ள நிலையில் இப்போது அந்த இயக்கத்தில் நான்காயிரம் முதல் ஐயாயிரம் பேர் வரை இன்னும் இருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனாலும் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் குறைந்த அளவிலான கெரில்லா யுத்தம் என்பது நீடித்துகொண்டே போகலாம் என்றும் அவர் கூறினார்.

இது பற்றிய மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


தெற்காசியாவிலேயே மிக அதிக பணவீக்கம் இலங்கையில்

இலங்கையின் வருடாந்திர பணவீக்கமானது 28.2 விழுக்காட்டை எட்டியுள்ளதாக திங்களன்று வெளிவந்துள்ள புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் அதிகமான பணவீக்கம் இதுதான்.

உலகமெங்குமே பணவீக்கம் ஒரு பிரச்சினைதான்; ஆனால் இலங்கை மற்றெந்த நாடுகளையும் விட மிக மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது. நுகர்வுப் பொருட்களின் விலைகள் ஒரு ஆண்டுக்கு முன்னர் இருந்ததை விட சுமார் 30 சதவீதம் அதிகரித்துவிட்டன.

இதற்கு உலக அளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததும், நாட்டில் எரிபொருட்களுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டதும்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில் பொருளாதாரம் தவறாக நிர்வகிக்கப்ப்டுகிறது என்றும் அரசாங்கம் மிகவும் அதிகமாக செலவு செய்கிறது என்றும் வேறு சிலர் கூறுகிறார்கள்.

எதிர்வரும் மாதங்களில் பணவீக்க நிலை சீராகும் என்று மத்திய வங்கி நம்பிக்கை தருகிறது. ஆனால் இதுபோன்ற நம்பிக்கைகள் இதற்கு முன்னாள் பலமுறை பொய்த்துப்போயுள்ளன.

விலைவாசி தொடர்ந்து ஏறிக்கொண்டுதான் வந்துள்ளது. கோபம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சில தொழிற்சங்கங்கள் அடுத்த வாரம் பொது வேலை நிறுத்தமொன்றுக்கு திட்டமிடுகின்றன.


Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

World Refugee Day (WRD): Sri Lanka & Eezham

Posted by Snapjudge மேல் ஜூன் 20, 2008

உலக அகதிகள் தினம்: இலங்கையில் அகதிகள் நிலை

ஜூன் 20ஆம் தேதி உலக அகதிகள் தினமாகும். உலக நாடுகள் பலவற்றிலும் 26 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா.வின் அகதிகளுக்கான தூதரகம் கணக்கிட்டிருக்கின்றது.

உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்கள் பலதரப்பட்ட நிலைகளில் பாதுகாக்கப்பட வேண்டும் என வெள்ளியன்றைய நாளின் தொனிப்பொருளாக ஐ.நா.வின் அகதிகள் நலன் காக்கும் தூதரகம் வலியுறுத்தியிருக்கின்றது.

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள இலங்கையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளுரில் இடம்பெயர்ந்துள்ளதாகக் கணிப்பிடப்பட்டிருக்கின்றது. இலங்கையில் 3 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா.வின் அகதிகள் நலன் காக்கும் அமைப்பு கூறியிருக்கின்றது.

இலங்கையில் பல இடங்களிலும் உலக அகதிகள் தினம் அனுட்டிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையில் பல்வேறு துன்பங்களை இடம்பெயர்ந்த மக்கள் அனுபவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்த மேலதிக தகவல்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

Sakthi TV journalist killed; Outcry as Sri Lanka’s defence chief Gotabhaya urges censorship: Colombo & Sri Lanka

Posted by Snapjudge மேல் மே 28, 2008

கோதபய ராஜபக்ஷ கூறியதாகத் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு இலங்கை ஊடக அமைப்புகள் எதிர்ப்பு

கோதாபய ராஜபக்ஷ

இலங்கை பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷ கூறியதாகக் கூறப்படும் கருத்துக்களுக்கு இலங்கையின் ஊடக அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இலங்கையின் வடக்கே இராணுவத்துக்கு விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் குறித்து பக்கசார்பற்ற முறையில் செய்திகளை வெளியிடுவதற்கு பாதுகாப்பு செயலரின் பேச்சு அச்சுறுத்தலாக உள்ளதாக ஊடக அமைப்புகள் கருதுகின்றன.

பத்திரிக்கையாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு அடித்துத் துன்புறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த இரண்டு மூத்த பத்திரிக்கையாளர்களை கோதாபய ராஜபக்ஜசே தன்னைக் காணவருமாறு பணித்ததாக ஐந்து ஊடக குழுமங்கள் ஒரு அறிக்கையில் கூறியுள்ளன.

அரசாங்க ஊடகத்தில், இராணுவம் மற்றும் இராணுவத் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் ஏற்புடையவையல்ல என்று பாதுகாப்பு ஆலோசகருடனான இந்தச் சந்திப்பின்போது இவர்களுக்கு கூறப்பட்டதாகவும், அவர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து இலைமறைகாயாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் ஊடக குழுமங்கள் தெரிவித்துள்ளன.


யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் வெட்டிக் கொலை

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் கல்லுண்டாய்வெளியில் புதன் மாலை 4.30 மணியளவில் சக்தி தொலைக்காட்சி சேவையின் யாழ் மாவட்ட செய்தியாளராகிய 32 வயதுடைய பரநிருபசிங்கம் தேவகுமாரன் அடையாளம் தெரியாத ஆட்களினால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக யாழ்பபாணம் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இவருடன் சென்றதாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் செயலக சிற்றூழியராகிய 38 வயதுடைய மகேந்திரன் வரதன் என்பவர் படுகாயமடைந்து யாழ் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறந்ததாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்திய மல்லாகம் மாவட்ட நீதிபதியின் உத்தரவையடுத்து, செய்தியாளர் தேவகுமாரனின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.


இலங்கை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தடுப்புக் காவலில்

இலங்கையின் வடமேற்குக் கடற்பரப்பில் கச்சதீவுக்கு அருகில் செவ்வாய் இரவு தலைமன்னார் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 23 இந்திய மீனவர்களை வியாழன் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் புதனன்று உத்தரவிட்டிருக்கின்றது.

இலங்கைக் கடற்பரப்பில் 4 படகுகளில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தமைக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தலைமன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள்.

தங்கச்சிமடம், இராமேஸ்வரம், பாம்பன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இவர்கள் நாளை மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் எனவும் பொலிசார் கூறியிருக்கின்றனர்.

இதேவேளை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த 13 இந்திய மீனவர்களையும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் நேற்று விடுதலை செய்திருக்கின்றது.

இவர்களை கொழும்பு மீரிஹானையில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி அங்கிருந்து அவர்களை அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் அதிகாரிகளுககு உத்தரவிட்டிருக்கின்றது.


மட்டக்களப்பில் தமிழர்-முஸ்லிம் இடையிலான பதற்றத்தைத் தணிப்பது தொடர்பில் கூட்டம்

கிழக்கு மாகாண முதல்வர்

இலங்கையின் கிழக்கே கடந்த சில தினங்களாக வழமைநிலை பாதிக்கப்ப்டுள்ள மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் வியாழன் முதல் வழமைநிலையை ஏற்படுத்தவது என புதன் மாலை பொலிஸ் நிலையத்தில் மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அமீர் அலி, மாகாண சபை உறுப்பினர்கள், சமய சமூக பிரமுகர்கள் மற்றும் பாதுகாப்பு அதிபாரிகள் உட்பட பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஏறாவூர் எல்லைப் பிரதேசமான ஆறுமுகத்தான் குடியிருப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்டுவரும் காவலரனை அகற்றுமாறு முஸ்லிம்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும், ஆறுமுகத்தான் குடியிருப்பிலிருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அச்சமின்றி மீளக் குடியமர்வதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை முஸ்லிம் பிரதிநிதிகள் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சமாதானத்தை வலியுறுத்தி கொழும்பில் பெண்கள் பேரணி

இலங்கை தலைநகர் கொழும்பில் புதனன்று நூற்றுக்கணக்கான பெண்கள் அமைதிப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

நாட்டில் நடந்துவரும் கொடிய யுத்தத்தினை நிறுத்தவேண்டும், அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சமாதானத்தை நிலைநிறுத்த புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும், அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும், உலக மயமாக்கல் அடிமைத் தனத்திற்கு பணியக்கூடாது போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து, சம்பந்தப்பட்ட தரப்பினர்மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்கும் நோக்கில் போராட்டம் நடத்தப்பட்டது.

சமூக நீதிக்கான பெண்கள் இயக்கம், சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்திக்குமான மக்களுக்கிடையிலான கலந்துரையாடல் போன்ற அமைப்புக்களின் ஏற்பாட்டில் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிற்கு எதிரில் இடம்பெற்ற இந்த அமைதிப் பேரணியில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் பதாதைகளைத் தாங்கிய வண்ணம் கலந்துகொண்டனர்.


Posted in Govt, Law, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

There Cannot be Talks with LTTE Alone – Anandasangaree

Posted by Snapjudge மேல் மே 8, 2008

விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தினால் இனப்பிரச்சனை தீருமா?

பல் நாட்டுத் தூதுவர்களுக்கு த.வி.கூ தலைவர் வீ. ஆனந்தசங்கரி அவர்களால் அனுப்பப்பட்ட மகஜர்

கடந்த ஏப்ரல் மாதம் 24ம் திகதி தமிழ் நாடு சட்டசபை ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இருசாராரையும் பேச வைக்க வேண்டுமென இந்திய மத்திய அரசை கோர வேண்டும் என கேட்டுக்கொண்டது. பல்வேறு நாடுகளும் உலகளாவிய பொது ஸ்தாபனங்களும் இலங்கையின் கள நிலைமையை சரியாக புரிந்து கொள்ளாது யுத்தத்தை நிறுத்த வெண்டுமெனவும் விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டுமெனவும் வற்புறுத்தி வருகின்றன. யுத்தம் நிறுத்தப்படத்தான் வேண்டும். ஆனால் பேச்சுவார்த்தை விடுதலைப் புலிகளுடன் மட்டுமானதாக இருக்கக்கூடாது. 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின் நாட்டு நிலைமை முற்றாக மாறிவிட்டது. அந்தநேரம் வடகிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலும், அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் கூட பெருமளவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. விடுதலைப் புலிகள் மிகக் கூடுதலாகவும், அரச படைகள் சிறிதளவும் மொத்தமாக பல்லாயிரக்கணக்கான யுத்த நிறுத்த மீறல்கள் நடந்தமையினால் ஒப்பந்தம் ரத்தாக்கப்பட்டு யுத்தம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இன்று கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்று முழுதாக விடுவிக்கப்பட்டு ஏனைய பகுதிகளிலும் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகள் அவ்வாறு கூறிவந்தாலும் அவர்களை தமிழ் மக்கள் ஏகபிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்ள வில்லை. வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற 22 பாராளுமன்ற தொகுதிகளை விடுதலைப் புலிகள் மோசடி மூலம் தமிழரசுக்கட்சியினூடாக (இலங்கை தமிழரசுக்கட்சி) பெற்றுக்கொண்டு வடகிழக்கு வாழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாது விடுதலைப் புலிகளையே பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர். சமஷ்டி கட்சிகூட இயங்காமல் இருந்தவேளையிலேயே இவர்கள் அதன் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டு நீண்ட நாட்களின் பின்னே அக் கட்சியை இயங்க வைத்தனர். தேர்தல் காலத்தில் நான்கு தேர்தல் கண்காணிப்புக்குழு தமது கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தன. இவர்களின் தெரிவை பற்றி அனைத்துக் குழுக்களும் பாதகமான அறிக்கையை முன்வைத்ததோடு இரு குழுக்கள் வடகிழக்கு தேர்தலை ரத்துசெய்து புதிய தேர்தலை நடத்துமாறு சிபாரிசு செய்தனர். ஆகவே எத்தகைய பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுகின்ற தார்மீக உரிமை அவர்களுக்கு இல்லை. தங்கள் நிலைமையை அவர்கள் உணர்ந்து ஏப்ரல் 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின் எதுவித பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை.

கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக இழந்த நிலையில் விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாண தமிழ் மக்களை பற்றி பேசுகின்ற உரிiமையை இழந்து விட்டனர். வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் இன்றும் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன. ஏனைய மூன்று மாவட்டங்களாகிய யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகியவற்றின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதிலும் அப்பகுதிகளையும் படிப்படியாக இழந்து வருகின்றனர்.

இலங்கை தமிழர்களின் சனத்தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் தென்னிலங்கையில் சிங்கள, முஸ்லீம் மக்கள் மத்தியில் மிக அமைதியாக வாழ்கின்றனர். இன்னுமொரு பகுதியினர் ஐரோப்பா, ஸ்கண்டிநேவியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மிகப் பொருளாதார ரீதியாக வசதியாக வாழ்ந்து கொண்டு தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை ஊட்;டிக்கொண்டு நலமாக வாழ்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்கவும், புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்கின்ற ஏழை மக்களின் பிள்ளைகளை தமது போர் வீரர்களாக சேர்த்து பயிற்சி கொடுக்கவும் பெருந்தொகையாக பண உதவி செய்கின்றனர். இப் பிள்ளைகள் பெருமளவில் யுத்த முனையில் தினமும் மடிந்து கொண்டிருக்கின்றனர். சர்வதேச சமூகத்தை குறி;ப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தை மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படாது நட்புடன் செயல்பட்டு விடுவிக்கக்கூடிய இராணுவத்தை அனுப்பும்படி கோரிக்கை விடுத்திருந்தேன்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்;டில் அடிமைகள்போல் இன்றும் வாழ்கின்ற மக்களே தமிழ் மக்களில் மிகவும் துர்ப்பாக்கியவான்களாவர். அவர்கள் எந்தவித உரிமைகளையும் அனுபவிப்பதில்லை. தாமாக சிந்தித்து செயலாற்ற முடியாது. தாம் விரும்பிய ஒருவருக்கு வாக்களிக்க முடியாது. விடுதலைப் புலிகள் கடத்தி செல்வதை தடுப்பதற்காக மேல் வகுப்புக்களில் படிக்கும் தமது பிள்ளைகளை மறைத்து வைத்து வாழ்கின்றனர். குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். கடுமையான வரிகளை செலுத்துகின்றனர். ஆட்கடத்தல், சித்திரவதை முகாம்கள், இருட்டறை போன்ற தண்டனைகளையும் அனுபவிக்கின்றனர். குறைந்தபட்சம் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் சட்டசபை உறுப்பினர்களையும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் சென்று அங்கு மக்கள் படுகின்ற கஷ்டங்கள், அனுபவக்கின்ற கொடுமைகளையும் நேரடியாக பார்க்கும்படி கோரியிருந்தேன்.

இப்பொழுதுள்ள பிரச்சனை அரசாங்கம் யாருடன் பேச வேண்டும் என்பதே. அரசு விடுதலைப் புலிகளுடன்தான் பேச வேண்டும் என்று கூறுவது நியாயமானதா? இன்றைய சூழ்நிலையை தமக்கு சாதகமாக பாவித்து இடையிலுள்ள சிலர் பல்வேறு மாற்றுத் திட்டங்களை முன்வைக்க முயல்கின்றனர். பிரச்சினை தீர்வுக்கு அவை உதவமாட்டாது. ஓற்றையாட்சியின் கீழ் காணப்படும் தீர்வு சிறுபான்மை தமிழினத்தின் அபிலாசைகளுக்கு ஏற்புடையதல்ல. எத்தகைய தீர்வும் நியாயமானதாகவும், சமத்துவமானதாகவும் அமைய வேண்டும். கடந்த சில வருடங்களாக இந்திய முறையிலானவொரு தீர்வை முன்வைத்து ஆதரவு தேடி வந்துள்ளேன். எல்லாவற்றுக்கு மேலாக இந்திய முறையிலான தீர்விலுள்ள நன்மை யாதெனில் இனப்பிரச்சினை தீர்வுக்கு தமிழ் நாட்டில் முட்டுக்கட்டை கொடுக்கின்ற புலி சார்பான சில சக்திகளை மௌனிக்க வைக்க முடியும்.

யுத்தமுனையில் ஆயிரக்கணக்கானவர்கள் மரணிக்கின்றார்கள். அவ்வாறு மரணிப்பவர்களின் உறவினர்கள், அன்புக்குரியவர்கள் தான் வேதனையை அனுபவிக்கின்றார்களேயொழிய யுத்தத்தை முன்னெடுப்பவர்கள் அல்ல. மனித உரிமை மீறல்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலும் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் ஒருவித தடையுமின்றி நடைபெற்று வருகின்றன. அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் நடப்பதை பலரும் அறிவர். புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடப்பவைகள் முழுதும் மறைக்கப்படுகின்றன. பொது மக்கள் உறுதியாக நின்று ஒத்துழைப்பு கொடுப்பார்களேயானால் அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலே மனித உரிமை மீறல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். ஆனால் புலிகள் பகுதியில் அதற்கு சாத்தியமில்லை.

சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியா அக்கறையின்றி இருக்க முடியாது. அரசுக்கு எல்லா வழியாலும் சர்வதேச சமூகத்துக்கு ஏற்புடையதாகிய ஓர் நியாயமான தீர்வை முன் வைக்குமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். சர்வதேச சமூகம் திருப்தியடையும் பட்சத்தில் அதை ஏற்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் வற்புறுத்த வேண்டும். விடுதலைப் புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு சர்வதேச சமூகத்தின் சிபாரிசை ஏற்க வேண்டும்.

சர்ச்சைக்குரிய 13வது திருத்தம் அரை நூற்றாண்டு காலமாக பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை இழந்த நிலையில், நிரந்தர தீர்வாக அமையாது. இருப்பினும் இறுதித் தீர்வை காணும் வரைக்கும் 13வது திருத்தத்தை ஒரு தற்காலிக தீர்வாக ஏற்றுக்கொள்ளலாம்.

மாட்சிமை தங்கிய தூதுவர் அவர்களே! இலங்கையில் தற்போது நிலவும் நிலமையை தங்கள் அரசுக்கு விளக்கிக்கூறி சம்பந்தப்பட்ட அனைவரையும் ஓர் நியாயமான தீர்வுக்கு உடன்பட வைக்க போதிய அழுத்தம் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் தாங்க முடியாத எல்லை மீறி மக்கள் துன்பப்படுகின்றார்கள். இது சம்பந்தமாக தங்களுடன் நேரில் பேசுவதற்கு உரிய நாள், நேரம் குறித்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »

Aviation branch of Tamil Tigers in Eezham: LTTE AirForce – Kumudam Reporter

Posted by Snapjudge மேல் மே 8, 2008

விடுதலைப்புலிகளின் விமான ரகசியங்கள் – அதிர்ச்சியில் இலங்கை ராணுவம்
– ஆர். முத்துக்குமார்

ஏப்ரல் 25, 2008. நள்ளிரவு நேரம். மணி 1.25 ஆகியிருந்தது. இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஓடுபாதையில் இருந்து இரண்டு சிறிய ரக போர் விமானங்கள் புறப்பட்டு, வானத்தில் மிதக்கத் தொடங்கின. கிட்டத்தட்ட அதே நேரத்தில் இரணமேடு என்ற இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று வானத்தை நோக்கிக் கிளம்பியது.

சரியாக 1.32 ஆனபோது மணலாறு பகுதியை ஒரு விமானம் நெருங்கியிருந்தது. சில நொடிகள் இடைவெளியில் இரண்டு குண்டுகள் விமானத்தில் இருந்து தரையை நோக்கி வீசப்பட்டன. குண்டுகள் தாக்கிய இடம், இலங்கை ராணுவத்துக்குச் சொந்தமான மணலாறு முன்னரங்கு நிலையம். அதற்குள் இன்னொரு விமானம் சிங்கபுரா என்ற இடத்தை நெருங்கியிருந்தது. அங்குள்ள பிராந்திய கட்டளையிடும் தலைமையகத்தை நோக்கி விமானத்தில் இருந்து ஒரு குண்டு வீசப்பட்டது.

குண்டுகள் இலக்கைத் தாக்கிய பதினெட்டாவது நிமிடத்தில் இரண்டு விமானங்களும் முல்லைத்தீவுக்கு அருகில் உள்ள முல்லியவெளி ஓடுபாதையில் வந்து இறங்கின. இந்த ஓடுபாதை முல்லைத் தீவில் இருந்து ஏழாவது கிலோமீட்டரில் இலங்கை ராணுவத்தினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, புலிகளால் உருவாக்கப்பட்டதாகும்.

தாக்குதலை நடத்திய விமானங்கள் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானவை என்பது சொல்லித் தெரிய வேண்டிய விஷயமில்லை. (இரணமேட்டில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் இலங்கை ராணுவத்தின் கவனத்தைத் திசை திருப்பும் காரியத்தில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது தனிக்கதை). ஆனால், விமானங்கள் தரையிறங்கிய பிறகு, நடந்த காரியங்கள் இலங்கை ராணுவம் உள்ளிட்ட பலருடைய புருவங்களையும் உயர வைத்துள்ளன.

அப்படி என்ன நடந்துவிட்டது தரையில்?

விமானங்கள் கீழே இறங்குவதற்கு வசதியாக சமிக்ஞை கொடுக்கும் விதமாக, விமான ஓடுபாதையில் விளக்குகளை எரியவிட்டுக் காத்துக்கொண்டிருந்தனர் புலிகள். விமானங்கள் கீழிறங்கியதும் எரிந்து கொண்டிருந்த பெரும்பாலான விளக்குகள் அணைக்கப்பட்டன. குறைவான வெளிச்சத்தில் விமானங்களின் இறக்கைகளைப் பக்குவமாக மடக்கினர் புலிகள். பாகங்கள் மின்னல் வேகத்தில் கழற்றப்பட்டன. சில நிமிடங்களுக்கு முன்னர் விண்ணில் வட்டமிட்ட விமானங்கள் இரண்டும் தற்போது சின்னச்சின்ன உதிரிபாகங்களாக மாறியிருந்தன. எல்லாம் ஒன்றாக பார்சல் செய்யப்பட்டு, அங்கே தயாராக நின்று கொண்டிருந்த புலிகளுக்குச் சொந்தமான டிராக்டர் ஒன்றில் ஏற்றப்பட்டன. பைலட்டுகள் உள்ளிட்ட புலிகள், டிராக்டரில் ஏறிக்கொள்ள, வனப்பகுதியை நோக்கி விரைந்து சென்று மறைந்தது டிராக்டர்.

இந்த இடத்தில் இருந்துதான் ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. அது எப்படி புலிகளால் விமானங்களைத் தனித்தனி பாகங்களாகப் பிரித்து டிராக்டரில் எடுத்துச் செல்ல முடிந்தது? அந்த அளவுக்கு நவீன ரக விமானங்கள் புலிகளுக்கு எப்படிக் கிடைத்தன? எங்கிருந்து கிடைத்தன? அவற்றை இயக்கியது யார்? இப்படிப் பல கேள்விகளுக்கான விடைகள் தற்போது அம்பலமாகியுள்ளன.

விடுதலைப்புலிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே தங்களுடைய வான்வழித் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். கட்டுநாயக விமானத் தளத்தின் மீதான தாக்குதல்தான் இவற்றுக்குப் பிள்ளையார் சுழி. அவ்வப்போது இடைவெளிவிட்டு மூன்று தாக்குதல்கள் நடந்தேறின. தற்போது நடந்துள்ள மணலாறு தாக்குதல், புலிகளின் ஐந்தாவது வான்வழித் தாக்குதல் சம்பவம். அனைத்துக்குமே புலிகள் பயன்படுத்தியது ஞீறீவீஸீ க்ஷ் 143 லி என்ற மாடலைச் சேர்ந்த சிறிய ரக விமானங்கள்தான்.

செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த மொரவன் ஏவியேஷன் என்ற நிறுவனத்தின் பெருமைக்குரிய தயாரிப்பு இந்த விமானங்கள். இதுவரை சுமார் ஆறாயிரம் விமானங்களுக்கு மேல் தயாரித்து, அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்துள்ளது இந்த நிறுவனம்.

மொரவன் நிறுவனம் தயாரிக்கும் விமானங்களில் மிகவும் எடை குறைவானது, புலிகள் பயன்படுத்தும் கிசிடிண 143 மாடல்தான். இதன் எடை வெறும் 850 கிலோ. வெகு எளிதாக இவற்றின் பாகங்களைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்துவிட முடியும். அதேபோல, அதிக சிரமமில்லாமல் பாகங்களை ஒருங்கிணைத்துவிடவும் முடியும். இந்த அம்சம்தான் புலிகளை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.

நான்கு பேர் அமர்ந்து செல்லக்கூடிய வகையில் தயாரிக்கப்படும் இந்த விமானம், புலிகளுக்காகவே பிரத்யேகமாக இரண்டு பேர் மட்டும் செல்லத்தக்க வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. முக்கியமான விஷயம், விமானம் ஓட்டத் தெரிந்த பைலட் எவர் வேண்டுமானாலும் இந்த விமானங்களை இயக்க முடியாது என்பதுதான். சிறப்புப் பயிற்சிகள் பெற்றவரால் மாத்திரமே இயக்க முடியும். இதற்கு புஷ் ஃப்ளையிங் என்று பெயர்.

சரி.. இந்தப் பயிற்சிகள் எப்படி புலிகளுக்குத் தரப்பட்டன?

செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தாலும், இவற்றைப் புலிகள் வாங்கியது தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஃபிளையிங் கிளப் என்ற நிறுவனத்திடம் இருந்துதான். அந்த நிறுவனமே புலிகளுக்கு புஷ் ஃபிளையிங் பயிற்சிகளை அளித்துள்ளன. முக்கியமாக, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெரும்பாலான பைலட்டுகள் இந்த புஷ் ஃபிளையிங் கலையில் நிபுணர்கள்.

புலிகள் பயன்படுத்தும் விமானங்கள் பற்றி இலங்கையில் இருந்து வெளியாகும் ‘தி பாட்டம் லைன்’ வார இதழில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை தகவல்களும் அவர்களுடைய வான்படைக்கு எந்த அளவுக்கு சக்தி இருக்கிறது என்பதை அப்பட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளன. அடுத்த தாக்குதலை புலிகள் எப்போது வேண்டுமானாலும் நிகழ்த்தலாம் என்பதால், இலங்கை ராணுவத்தின் வயிற்றில் புளி கரைந்து கொண்டிருக்கிறது, வேக வேகமாக!

– குமுதம் ரிப்போர்ட்டர்

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »

Apr 27 – LTTE, Eezham, Sri Lanka: News & Updates from BBC

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 28, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 மே, 2008

வட மாகாணத்துக்கு சிறப்புச் செயற்பாட்டுக்குழு

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கென்று புதிய சிறப்பு செயற்பாட்டுக்குழு ஒன்றை அமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் முன்வைத்த பிரேரணை ஒன்றுக்கு, நேற்று புதன்கிழமை கூடிய இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

இந்தக் குழுவில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிஷாத் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இடம்பெறுகிறார்கள்.

அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால பரிந்துரைகளில் வட மாகாணத்திற்கு என்று ஒரு இடைக்கால சபை ஒன்றை நிறுவ வேண்டும் என்ற பரிந்துரைப்படி, நிறுவப்படக் கூடிய இடைக்கால நிர்வாக சபைக்கான ஒரு முன்னோடியாக இந்தக் குழு அமையும் என்று இந்தக்குழுவின் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசைக்குத் தெரிவித்தார்.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட பல பணிகளை இந்தக்குழு நிறைவேற்றும் என்றும் அவர் கூறினார்.

இவை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


சம்பூர் அனல் மின் நிலையத்துக்கு அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எதிர்ப்பு

இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்

இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு பிரதேசத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு அந்த பிரதேச குடியிருப்பாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

2006 ஆம் ஆண்டு அந்த பிரதேசத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக அங்கிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இன்னமும் தங்கியிருக்கின்றார்கள்.

தாங்கள் இடம் பெயர்ந்துள்ள நிலையில், தமது குடியிருப்புப் பகுதிகளில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு பயன்படுத்தப்படுவதை எதிர்க்கும் இவர்கள், இந்தியா இதற்கு உதவுவது குறித்து இந்தியா மீது தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்கள்.

விசேட நிபுணர்களின் குழுவின் தீர்மானத்தின் படியே இந்த இடத்தை தாம் தெரிவு செய்ததாகக் கூறும் இலங்கை மின்சக்தி எரி பொருட்துறை அமைச்சர் ஜோன் செனவிரட்ன, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த பகுதி, தற்போது சுற்றுலாப் பயணத்துறைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளதால் அது பொருத்தமற்றது என்கின்றார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


‘இலங்கை விவகாரத்தில் இந்தியா மீண்டும் தலையிட வேண்டும்’- பண்ருட்டி ராமச்சந்திரன்

பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு இரு தரப்புக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று தமிழக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் இந்தியா தலையீடு செய்ய வேண்டுமென்று தமிழக சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

அதனையடுத்து இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான ராஜ்நாத் சிங் அவர்கள் கூட இதே வகையான கருத்தை சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அந்த நிலையிலேயெ ராமச்சந்திரன் அவர்களின் இந்தக் கருத்தும் வந்துள்ளது.

இன்று இலங்கையில் கடுமையான உள்நாட்டுப் போர் நடக்கும் நிலையில், அங்கு ஒரு அரசாங்கமே மக்களின் மீது தாக்குதலை நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டும் ராமச்சந்திரன் அவர்கள், இந்த விடயத்தில் தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கூட பிரச்சினையின் முழுமையை உணர்ந்து மேற்கொள்ளப்பட்டதாக இல்லை என்று கூறியுள்ளார்.

இவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 ஏப்ரல், 2008


வட இலங்கையில் கடுமையான மோதல்

இரு தரப்பாலும் கடுமையான எறிகணை வீச்சுகள் நடத்தப்பட்டுள்ளன
இரு தரப்பாலும் கடுமையான எறிகணை வீச்சுகள் நடத்தப்பட்டுள்ளன

இலங்கையின் வடக்கே மன்னார், வெலிஓயா பகுதிகளில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடி மற்றும் எறிகணை வீச்சு மோதல்கள் இடம்பெற்றதாகவும் மன்னார் பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் ஒன்றை இராணுவம் கைப்பற்றியிருப்பதாகவும் இலங்கை தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

மன்னார் பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் பேஸ் -18 எனப்படும் முக்கிய தளம் உட்பட்ட வேப்பங்குளம், கள்ளிக்குளம் பிரதேசம் முழுமையாக இராணுவத்தினரால் இன்று கைப்பற்றப்பட்டிருப்பதாகவும், இங்கு இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 40 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இப்பகுதியில் இராணுவத்தினருக்கு உதவியாக எம்.ஐ தாக்குதல் உலங்கு வானூர்திகளும் விடுதலைப் புலிகள் மீது வான் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இதேவேளை, வெலிஓயா எனப்படும் மணலாறு பகுதியில் இன்று காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான எறிகணை வீச்சு மோதல்கள் இடம்பெற்றதாக இரு தரப்பினரும் தெரிவித்திருக்கின்றனர்.

இதன்போது, விடுதலைப் புலிகளினால் சிறிபுர பகுதிமீது நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினர் நெடுங்கேணி பகுதி மீது நடத்திய எறிகணை தாக்குதல்களில் சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இளம் தாய் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

யுஎன்டிபி ஊழியர் கைத்துப்பாக்கியுடன் கைது

இதனிடையில் யுஎன்டிபி எனப்படும் ஐநாவின் அபிவிருத்திக்கான நிறுவனத்தின் கிளிநொச்சி அலுவலகத்தில் ஊழியர் எனக் கூறுப்படும் ஒருவர் இன்று மாலை வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடியில் மைக்ரோ பிஸ்டலுடன் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

மட்டக்களப்பைச் சேர்ந்த இவர் கிளிநொச்சியில் இருந்து மட்டக்களப்பிற்குச் செல்லும் வழியில், ஈரப்பெரியகுளம் வீதிச்சோதனையில் இவரை சோதனையிட்ட பொலிசார் இவரிடமிருந்து இந்த கைத்துப்பாக்கியைக் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவரை வவுனியா பொலிசார் விசாரணை செய்து வருவதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.


பிரபாகரன் திரைப்பட வழக்கை ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை

பிரபாகரன் திரைப்படத்தின் இயக்குனர்
பிரபாகரன் திரைப்படத்தின் இயக்குனர்

பிரபாகரன் திரைப்படத்துக்கான தடை குறித்த வழக்கை சென்னை முதலாவது உரிமையியல் உதவி நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னதாக விசாரிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் படச் சுருள்களை ஜெமினி கலர் லாப் நிறுவனத்தில் இருந்து எடுத்துச் செல்லவும், அந்த திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கு தடை விதிக்கவும் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் சென்னை முதலாவது உரிமையியல் உதவி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு ஜூன் மாதம் 9 ஆம் திகதி விசாரிக்கப்படும் என்று முன்னர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதுவரை படச்சுருள்களை எடுத்துச் செல்லவும் அது தடை விதித்திருந்தது.

ஆனால், அந்த வழக்கை முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று அந்த திரைப்படத்தின் இயக்குனரான துஷார பீரிஸ் பதில் மனு தக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், வழக்கை இன்று ஏப்ரல் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கவிருந்தது. ஆனால், அதனை எதிர்த்து திருமாவளவன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த வழக்கை ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் விசாரிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து திருமாவளவனின் சார்பிலான வழக்கறிஞர் ஆர்வலனின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


நளினிக்கு முதிரா விடுதலை கோரி மனுத்தாக்கல்

தனது கணவர் முருகனுடன் நளினி
தனது கணவர் முருகனுடன் நளினி

ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளியான நளினியை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் சார்பில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது ஆயுட் தண்டனையாக குறைக்கப்பட்டது.

வழமையாக ஆயுட்தண்டனைக் குற்றவாளிகள், 14 வருட சிறைவாசத்துக்குப் பின்னர் விடுதலை செய்யப்படுவது வழக்கம். ஆனால் நளினி ஏற்கனவே 17 வருடங்களை சிறையில் கழித்த நிலையில், அவர் தற்போது விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனக்கு முதிரா விடுதலை வழங்கப்பட வேண்டும் என்று 2005ஆம் ஆண்டு முதல் நளினி அரசாங்கத்தைக் கோரி வந்துள்ளார். ஆனால் அவை நிராகரிக்கப்பட்டு விட்டன. ஆனால், அவ்வாறு நிராகரித்தமை தவறு என்று கூறியே தற்போதைய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவை குறித்து நளினியின் சார்பிலான வழக்கறிஞரான துரைசாமி அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 ஏப்ரல், 2008


திருகோணமலை பிரச்சாரக் கூட்டத்தில் ரணில்

பிரச்சார மேடையில் ரணில் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர்
பிரச்சார மேடையில் ரணில் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர்

திருகோணமலை மாவட்டத்தில், இந்திய உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் அனல் மின்நிலையத்தை, சம்பூரில் அல்லாமல், ஏற்கனவே திட்டமிட்டபடி பவுல் பொயிண்டில் அமைக்க முயற்சி எடுக்கப்போவதாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க அவர்கள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி இந்த மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்திய அதிகாரிகளுடன் பேசி ஏற்கனவே திட்டமிட்டபடி அனல் மின்நிலையத்தை பவுல் பொயிண்டில் அமைப்போம் என்றும், சம்பூரையும் அதனை அண்டிய 23 கிராமங்களையும் சேர்ந்த இடம்பெயர்ந்த பதினேழாயிரம் மக்களையும் அவர்களது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்வோம் என்றும் கூறினார்.

அத்தோடு, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அனைத்து சமூகங்களும் ஏற்கக் கூடிய ஒரு தீர்வையே தாம் முன்வைப்போம் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் களம்

இலங்கையின் கிழக்கு மாகாண தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் தமது பிரச்சாரக் கூட்டங்களை ஆரம்பித்துள்ளன.

தமது கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான நோக்கம், கட்சியின் கொள்கை உட்பட தமது பலவிதமான கருத்துக்களையும் அந்த பிரச்சாரங்களின் போது அந்தந்தக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் முன்வைத்து வருகிறார்கள்.

இவை குறித்து எமது மட்டக்களப்புச் செய்தியாளர் உதயகுமார் தயாரித்து வழங்கும் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


பிரிட்டனில் விடுதலைப்புலிகள் குறித்த விசாரணைக்காக மூவர் கைது

படிங்டன் கிறீன் போலிஸ் நிலையத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
படிங்டன் கிறீன் போலிஸ் நிலையத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான விசாரணையின் ஒரு கட்டமாக மூன்று பேரை கைது செய்துள்ளதாக பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் இருவர் வேல்சில் கைது செய்யப்பட்டதாகவும் மூன்றாவது நபர் லண்டனில் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

வெளிநாடுகளில் தீவிரவாதச் செயல்களை, ஏற்பாடுகளை செய்ய முற்பட்டது, தீவிரவாத செயல்களை தூண்டியது அல்லது தீவிரவாத செயல்களுக்காக தயார் செய்தது போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு 2001 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 28 ஏப்ரல், 2008

மடு தேவாலயப் பகுதி சமாதான வலயமாக அறிவிக்கப்படுகின்ற உத்தரவாதம் கிடைத்த பின்னரே மடு மாதா திருச்சொரூபம் ஆலயத்துக்கு கொண்டுவரப்படும் என மன்னார் மறை மாவட்ட குருமார் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் மடு பகுதியை ராணுவம் சில நாட்களுக்கு முன்னர் கைப்பற்றியதை அடுத்து, மடு மாதா தேவாலயத்திலிருந்து சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்ட மடுமாதாவின் திருச்சொருபத்தை மீண்டும் அங்கு கொண்டுவரவேண்டும் என்ற பிரச்சினை குறித்து ஆராய திங்களன்று மன்னார் மறை மாவட்ட குருக்கள் மன்னாரில் கூடினர்.

மடு தேவாலயப் பகுதியை சமாதான வலயமாக அறிவித்து, அங்கு இடம்பெயர்ந்த மக்கள் வாழ்வதற்கு அனுமதியளிக்க இலங்கை இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் எழுத்துமூல உத்தரவாதம் வழங்கிய பின்னரே மாதா சிலையை மீண்டும் மடுவுக்கு கொண்டுவருவது என்று இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

படையினர் அனுமதிக்கும் பட்சத்தில் தற்போதைக்கு மூன்று குருமார்களை ஆலயத்திற்கு அனுப்பி அதனை மீண்டும் வழிபாட்டுக்குரிய ஒரு இடமாக ஒழுங்கு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை தமிழோசையிடம் வெளியிட்ட கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையில் மழை, வெள்ளம், மண் சரிவுக்கு குறைந்தபட்சம் 7 பேர் பலி

இரத்னபுரியில் மழை வெள்ளம்

இலங்கையில் பல்வெறு பகுதிகளில் இன்று கடுமையான மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இரத்தினபுரி, மாத்தறை, களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் இந்த அனர்த்தங்கள் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளன.

இரத்தினபுரி பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதுடன், அங்கு பல பகுதிகளில் அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, யட்டியாந்தோட்டைப் பகுதியில் இடம்பெற்ற மண் சரிவில் ஒரு பெண் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்து மகாசமுத்திர பிரந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இந்த கடுமையான மழை பெய்வதாகவும், களுகங்கைப் பகுதியில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், கரையோரத்தில் வாழும் மக்கள் விழிப்பாக இருக்குமாறும் இலங்கை வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.


விடுதலைப் புலிகள் மீண்டும் வான்தாக்குதல்

வான் தாக்குதல்
வான் தாக்குதல்

இலங்கையின் வடக்கே வெலிஓயா எனப்படும் மணலாறு இராணுவ முன்னரங்க பகுதிகள் மீது விடுதலைப் புலிகள் ஞாயிற்றுகிழமை அதிகாலை விமான குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இந்தத் தாக்குதல் குறித்து தகவல் வெளியிட்ட இராணுவத்தின் தரப்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள்,
ஞாயிற்றுகிழமை அதிகாலை 1.43 மணியளவில் விடுதலைப்புலிகளின் இரண்டு விமானங்கள் வெலிஓயா பகுதியில் உள்ள இராணுவ முன்னரங்குகள் மீது 3 குண்டுகளை போட்டதாகவும், அங்கு தரையில் இருந்த படையினர் அந்த விமானங்களை நோக்கித் தாக்குதல் நடத்தினார்கள் என்றும் கூறினார்.

விடுதலைப்புலிகளின் விமானங்களை ராடர் கருவிகளும் காட்டியதையடுத்து, விமானப்படையினர் விடுதலைப்புலிகளின் விமானங்களைத் தடுத்து தாக்கும் தமது விமானங்களைச் செலுத்தினார்கள் என்றும், எனினும் விடுதலைப்புலிகளின் விமானங்கள் முல்லைத்தீவு பகுதியை நோக்கித் தப்பிச் சென்று விட்டதாகவும், இந்த சம்பவத்தில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.


மடு மாதா ஆலய நிர்வாகத்தை திரும்ப எடுப்பது குறித்து திங்கட்கிழமை ஆலோசனை – மன்னார் ஆயர்

மடுமாதா தேவாலயம்
மடுமாதா தேவாலயம்

மடுமாதா ஆலயத்தின் நிர்வாகத்தை ஏற்குமாறு இலங்கை இராணுவம் தங்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தப்போதிலும், இது குறித்து திங்கட்கிழமை நடைபெறவுள்ள குருமார்களின் ஆலோசனைக் கூட்டத்தில்தான் முடிவு எடுக்கப்படும் என மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் கூறியுள்ளார். அத்தோடு இராணுவத்தின் இணையத்தளம் கூறுவது போல தாங்கள் இன்னும் ஆலயத்தின் பொறுப்பை ஏற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆலயத்தை பொறுப்பேற்பதும், மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் மடு ஆலயத்தில் நிறுவுவது ஆகியவை இரண்டு வெவ்வேறு விடயங்கள் என்றும், திங்கட்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் ஆலயத்தை பொறுப்பேற்பது மட்டுமே ஆலோசிக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழோசையிடம் பேசிய அவர், ஆலய வளாகத்திற்குள் சீருடையில் ஆயுதம் தாங்கிய துருப்புகளின் நடமாட்டத்தை தாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்றும், ஆலயம் அமைந்திருக்கும் பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவிக்க இராணுவம் முயற்சி எடுத்தால் அதற்கு தாங்கள் தடையாக இருக்க மாட்டோம் என்றும் கூறினார்.

அனுராதபுரம் மற்றும் காலி ஆயர்களுடன் தாம் விடுதலைப் புலிகளை சந்தித்து மடுமாதா ஆலயத்தில் மீண்டும் மாதாவின் திருச்சொரூபத்தை நிறுவுவது தொடர்பாக பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் எந்த வழியாக எடுத்து வருவது என்பது இருதரப்பாரின் நிலைப்பாடு மற்றும் ஒத்துழைப்பை பொறுத்தே அமையும் என்றும் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தார்.

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | Leave a Comment »