Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Fisheries’

Sri Lankan government continues offensive despite ceasefire offer; 15th SAARC South Asian summit kicks off in Colombo

Posted by Snapjudge மேல் ஜூலை 28, 2008


சார்க் மாநாடு கொழும்பில் ஆரம்பம்

சார்க் சின்னம்

தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்கான சார்க் அமைப்பின் உச்சமாநாடு அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்துடன் ஞாயிறன்று தொடங்கியுள்ளது.

அதிகாரிகளின் கூட்டத்துக்கு பின்னர் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நடக்கும். அதன் பின்னர் சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் சந்திப்பு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் மற்றும் முன்றாம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

சார்க் நாடுகளுக்கிடையே உணவுப் பாதுகாப்புக் கையிருப்பு, சார்க் நிதியம் ஏற்படுத்துதல் மற்றும் மின்வலு பரிமாற்றம் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது.

மாநாட்டின் நிகழ்ச்சித் திட்டம் குறித்து கொழும்பிலிருந்து எமது செய்தியாளர் கருணாகரன் வழங்கும் செய்திக் குறிப்பினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கையில் மோதல்கள் நீடிக்கின்றன

இலங்கை சிப்பாய்

இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார் களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்தில் இருந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்குளத்தை நோக்கிச் செல்லும் வீதியை நோக்கி முன்னேறும் இராணுவத்தினர், மல்லாவிக்கு அருகில் தமது படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் உள்ள கல்விளான் பகுதியைச் சுற்றி வளைக்க முயன்ற இராணுவத்தினரை எதிர்த்து, குட்டிமூலை என்னுமிடத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 25 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் 40 படையினர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த மோதல்களில் விடுதலைப் புலிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளம் களமுனையில் கொல்லப்பட்டு இராணுவத்தினரால் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 30 சடலங்களில் 19 சடலங்கள் ஞாயிறன்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பினர் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.

இதனிடையில் மாந்தை மேற்கு, துணுக்காய் பிரதேசங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம், அக்கராயன் போன்ற பிரதேசங்களை நோக்கி நகர்ந்து பாடசாலைகள், பொது இடங்கள் மற்றும் மரநிழல்களின் கீழ் தஞ்சமடைந்திருப்பதாகவும், இவர்களுக்கான அவசர நிவாரணப் பணிகள் பெரும் சிக்கல்களுக்கு மத்தியிலேயே மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

பாடசாலைகளில் இடம்பெயர்ந்து வந்தவர்கள் தங்கியிருப்பதனால், இப்பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.


மீன் பிடித் தடைகளை அகற்ற திருகோணமலை மீனவர்கள் முதலமைச்சரிடம் வேண்டுகோள்

முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்

திருகோணமலை மாவட்டத்தில் மீன் பிடிப்பதில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் அகற்றப்பட வேண்டுமென அம்மாவட்ட மீனவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனைச் சந்தித்து முறைப்பாடு செய்துள்ளனர்.

மீன்பிடிக்க விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டின் விளைவாக தாங்கள்
பெரும் சிரமங்களை அனுபவித்துவருவதாக இந்தப் பிரதேச மீனவர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர்.

தங்கள் நாளாந்த வாழ்க்கையினைக்கூட நடத்த முடியாது துன்பம் அடைவதாகவும் இவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக தற்போது விதிக்கப்பட்ட மீன்பிடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுதாங்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் முதலமைச்சரைக் கோரியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துப் பேசி இதற்கான
தீர்வினைக் காண்பதாக முதலமைச்சர் இவர்களுக்கு
உறுதியளித்துள்ளார்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Breakaway LTTE, TMVP leader Karuna back in Colombo; US ‘concerned’ over Sri Lanka rights, attacks on media; Victor Perera the new Governor of the Northern Province

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2008

சுயவிருப்பத்துடன் இலங்கை திரும்பினேன்: கருணா

முறைகேடுகள் இல்லாமலும், தனது விருப்பின் பேரிலும்தான் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பியதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான கருணா தெரிவித்துள்ளார். தனது மக்களுக்கு தான் செய்ய வேண்டிய பணிகளைக் கருத்தில் கொண்டு தான் நாடு திரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என்று தான் விரும்பவில்லை என்றும் பிள்ளையான் அப்பதவியில் இருப்பதை தான் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

வடக்கில் நடந்துவரும் மோதல்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எதுவித சம்பந்தமும் கிடையாது; இராணுவத்துக்கு தமது அமைப்பினர் உதவுவார்கள் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழோசைக்கு பிரத்தியேகமாக செவ்வியொன்றை வழங்கிய கருணா அவர்கள், கிழக்கு மாகாணத்தில் அவசரமாக தேர்தல் நடத்தப்பட்டதன் காரணத்தினால் தமது அமைப்புக்கு மேலும் கிடைத்திருக்க வேண்டிய ஆசனங்கள் கிடைக்காமல் போனதாகக் கூறியனார்.

இருந்தபோதிலும் தமது அமைப்பு இந்த தேர்தலில் வெற்றி பெற்றது குறித்தும், தனது கட்சியைச் சேர்ந்த பிள்ளையான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கருத்து

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்சித் தலைவராக கருணா நீடிப்பார் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கருணா அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வருகையைத் தெரிவித்ததாகவும், தனக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் பின்னர் சந்திப்பதாக கருணாவிடம் தெரிவித்துள்ளதாகவும் முதல்வர் கூறினார்.

இவர்களது செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார் கருணா

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய கர்ணல் கருணா பிரித்தானியாவில் குடிவரவு தடுப்பு முகாமிலிருந்து இலங்கைக்கு நேற்று(புதன்கிழமை) திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்துக்காக பேசவல்ல அதிகாரியான டோமினிக் வில்சன் தமிழோசையிடம் உறுதி செய்தார்.

கருணா இலங்கை திரும்பியுள்ளதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளர் ஆசாத் மௌலானாவும் உறுதி செய்துள்ளார்.

வேறு பெயரிலான ஒரு கடவுச்சீட்டுடன் பிரித்தானியவுக்குள் நுழைந்த வழக்கில் பிரித்தானிய அரசால் கைது செய்துபட்ட கருணா அவர்களுக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை முடிவடைந்த பின்னர் அவர் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே கருணா இலங்கை திரும்பிவிட்டாலும், அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட மாட்டாது என்று அவரது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கைக் கடற்பரப்பரப்பில் நுழைந்த பல நூறு இந்திய மீன்பிடிப் படகுகள் விசாரணையையடுத்து விடுவிப்பு

இராமேஸ்வரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள்
இராமேஸ்வரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள்

இலங்கைக் கடற்பரப்பின் மன்னார் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் பல நூறு இந்திய மீன்பிடி படகுகளை இலங்கைக் கடற்படையினர் நேற்றுமாலை கைதுசெய்து, பலமணிநேர தீவிர விசாரணைகளின் பின்னர் விடுவித்திருக்கிறார்கள்.

இது குறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, நேற்று, புதன்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள விடத்தல்தீவு பகுதியை நோக்கி இந்த இந்திய மீன்பிடி படகுகள் சென்று கொண்டிருந்தவேளை, நெடுந்தீவிற்கு மன்னாருக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, தலைமன்னார் கடற்கரைக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வைத்து இவர்கள் மீது கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று
இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று

இதன்பின்னர் சுமார் இரவு 10 மணியளவில் இதில் 299 இந்திய படகுகள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், எஞ்சிய ஒரு படகில் திசையறிகாட்டிபோன்ற கருவிகள் காணப்பட்டதால், மேலதிக சோதனைக்காக அது தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இன்று காலை அதுவும் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சோதனை நடவடிக்கைகளின்போது இந்திய மீனவர்களிடமிருந்தோ அல்லது அவர்களுடைய படகுகளில் இருந்தோ சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, இந்திய மீனவர்கள் இவ்வாறு அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்துவருவது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிவருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கைப் படையினர் இந்திய மீனவர்களைக் கைது செய்ததை கண்டிக்கும் இராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் தலைவரான போஸ் அவர்கள், ஆனால், தமது மீனவர்கள் இலங்கைப் பகுதிக்குள் சென்று மீன்பிடிப்பதையும் ஒப்புக்கொள்கிறார்.

இது குறித்த போஸ் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்


ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் வடக்கு மாகாண ஆளுனராகப் பதவியேற்பு

விக்டர் பெரேரா பதவியேற்கும் காட்சி
விக்டர் பெரேரா பதவியேற்கும் காட்சி

இந்த வார முற்பகுதியில் இலங்கை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற விக்டர் பெரேரா அவர்கள் வடக்கு மாகாணத்தின் ஆளுனராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருக்கிறார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்திருந்த வடகிழக்கு மாகாணம், நீதிமன்றத் தீர்பொன்றின் பின்னர் இருவேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மாகாணத்திற்கென தனியொரு ஆளுனர் நியமிக்கப்படிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இதற்கு முன்னர் தற்போது கிழக்கு மாகாண ஆளுனராகப் பணிபுரிந்துவரும் முன்னாள் கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவே வடக்கு மாகாண ஆளுனராகவும் கடமையாற்றிவந்தார்.


இலங்கை மனித உரிமை நிலவரம் குறித்து அமெரிக்கா கவலை

ஊடகங்கள் மீதான அழுத்தம் அதிகரிப்பதாக கவலை

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தமக்கு மகிழ்சியளிக்கவில்லை என்று அமெரிக்கா இலங்கையிடம் கூறியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைச் சூழல் குறித்தும் ஊடகங்கள் மீதான அழுத்தங்கள் குறித்தும் அமெரிக்கா அதிகமாக கவலைப்படுவதாக, ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலரான இவான் பைஜன்பாம், இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் முடிவில் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், தங்களின் பாதுகாப்பு குறித்து உடகவியலாளர்கள் எழுப்பிய பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஒரு அமைச்சகக் குழு அமைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கையின் வளர்ச்சிக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்றும் பைஜன்பாம் தெரிவித்துள்ளார்.


ஓமந்தை சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ள நிலையில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் – பெட்டகம்

பாதை திறக்காத நிலையில் பயணத்தின் பாதிவழியில்…

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் இடையிலான ஓமந்தை சோதனைச்சாவடி 3 ஆவது நாளாக இன்றும் திறக்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் வன்னிப் பகுதிக்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோக நடவடிக்கைகள் என்பனவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

வன்னிப்பிரதேசத்திற்குச் செல்வதற்காக வவுனியாவில் சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கின்றார்கள்.

கையிலிருந்த பணம் செலவழிந்துவிட்டதனால் சாப்பிடவும் வழியில்லை செலவுக்கும் வழியில்லை என இவர்கள் வவுனியா செயலக அதிகாரிகளிடம் முறையிட்டதை அடுத்து, விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை OFFER என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியோடு அரச அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

போக்குவரத்தின்மை காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் நிவாரண விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Posted in Govt, India, Law, Order, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Sakthi TV journalist killed; Outcry as Sri Lanka’s defence chief Gotabhaya urges censorship: Colombo & Sri Lanka

Posted by Snapjudge மேல் மே 28, 2008

கோதபய ராஜபக்ஷ கூறியதாகத் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு இலங்கை ஊடக அமைப்புகள் எதிர்ப்பு

கோதாபய ராஜபக்ஷ

இலங்கை பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷ கூறியதாகக் கூறப்படும் கருத்துக்களுக்கு இலங்கையின் ஊடக அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இலங்கையின் வடக்கே இராணுவத்துக்கு விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் குறித்து பக்கசார்பற்ற முறையில் செய்திகளை வெளியிடுவதற்கு பாதுகாப்பு செயலரின் பேச்சு அச்சுறுத்தலாக உள்ளதாக ஊடக அமைப்புகள் கருதுகின்றன.

பத்திரிக்கையாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு அடித்துத் துன்புறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த இரண்டு மூத்த பத்திரிக்கையாளர்களை கோதாபய ராஜபக்ஜசே தன்னைக் காணவருமாறு பணித்ததாக ஐந்து ஊடக குழுமங்கள் ஒரு அறிக்கையில் கூறியுள்ளன.

அரசாங்க ஊடகத்தில், இராணுவம் மற்றும் இராணுவத் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் ஏற்புடையவையல்ல என்று பாதுகாப்பு ஆலோசகருடனான இந்தச் சந்திப்பின்போது இவர்களுக்கு கூறப்பட்டதாகவும், அவர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து இலைமறைகாயாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் ஊடக குழுமங்கள் தெரிவித்துள்ளன.


யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் வெட்டிக் கொலை

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் கல்லுண்டாய்வெளியில் புதன் மாலை 4.30 மணியளவில் சக்தி தொலைக்காட்சி சேவையின் யாழ் மாவட்ட செய்தியாளராகிய 32 வயதுடைய பரநிருபசிங்கம் தேவகுமாரன் அடையாளம் தெரியாத ஆட்களினால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக யாழ்பபாணம் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இவருடன் சென்றதாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் செயலக சிற்றூழியராகிய 38 வயதுடைய மகேந்திரன் வரதன் என்பவர் படுகாயமடைந்து யாழ் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறந்ததாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்திய மல்லாகம் மாவட்ட நீதிபதியின் உத்தரவையடுத்து, செய்தியாளர் தேவகுமாரனின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.


இலங்கை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தடுப்புக் காவலில்

இலங்கையின் வடமேற்குக் கடற்பரப்பில் கச்சதீவுக்கு அருகில் செவ்வாய் இரவு தலைமன்னார் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 23 இந்திய மீனவர்களை வியாழன் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் புதனன்று உத்தரவிட்டிருக்கின்றது.

இலங்கைக் கடற்பரப்பில் 4 படகுகளில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தமைக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தலைமன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள்.

தங்கச்சிமடம், இராமேஸ்வரம், பாம்பன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இவர்கள் நாளை மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் எனவும் பொலிசார் கூறியிருக்கின்றனர்.

இதேவேளை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த 13 இந்திய மீனவர்களையும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் நேற்று விடுதலை செய்திருக்கின்றது.

இவர்களை கொழும்பு மீரிஹானையில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி அங்கிருந்து அவர்களை அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் அதிகாரிகளுககு உத்தரவிட்டிருக்கின்றது.


மட்டக்களப்பில் தமிழர்-முஸ்லிம் இடையிலான பதற்றத்தைத் தணிப்பது தொடர்பில் கூட்டம்

கிழக்கு மாகாண முதல்வர்

இலங்கையின் கிழக்கே கடந்த சில தினங்களாக வழமைநிலை பாதிக்கப்ப்டுள்ள மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் வியாழன் முதல் வழமைநிலையை ஏற்படுத்தவது என புதன் மாலை பொலிஸ் நிலையத்தில் மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அமீர் அலி, மாகாண சபை உறுப்பினர்கள், சமய சமூக பிரமுகர்கள் மற்றும் பாதுகாப்பு அதிபாரிகள் உட்பட பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஏறாவூர் எல்லைப் பிரதேசமான ஆறுமுகத்தான் குடியிருப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்டுவரும் காவலரனை அகற்றுமாறு முஸ்லிம்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும், ஆறுமுகத்தான் குடியிருப்பிலிருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அச்சமின்றி மீளக் குடியமர்வதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை முஸ்லிம் பிரதிநிதிகள் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சமாதானத்தை வலியுறுத்தி கொழும்பில் பெண்கள் பேரணி

இலங்கை தலைநகர் கொழும்பில் புதனன்று நூற்றுக்கணக்கான பெண்கள் அமைதிப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

நாட்டில் நடந்துவரும் கொடிய யுத்தத்தினை நிறுத்தவேண்டும், அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சமாதானத்தை நிலைநிறுத்த புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும், அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும், உலக மயமாக்கல் அடிமைத் தனத்திற்கு பணியக்கூடாது போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து, சம்பந்தப்பட்ட தரப்பினர்மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்கும் நோக்கில் போராட்டம் நடத்தப்பட்டது.

சமூக நீதிக்கான பெண்கள் இயக்கம், சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்திக்குமான மக்களுக்கிடையிலான கலந்துரையாடல் போன்ற அமைப்புக்களின் ஏற்பாட்டில் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிற்கு எதிரில் இடம்பெற்ற இந்த அமைதிப் பேரணியில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் பதாதைகளைத் தாங்கிய வண்ணம் கலந்துகொண்டனர்.


Posted in Govt, Law, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »