Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Harijans’ Category

Pasumpon Muthuramalinga Thevar – Biosketch, History

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

நூற்றாண்டு: ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள்!

தெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரை இந்நாட்டுக்காக ஈன்றளித்த பெருமைக்குரியோர் உக்கிர பாண்டியத் தேவரும், இந்திராணி அம்மையாரும்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமமே இவர் அவதரித்த திருத்தலமாகும். 30.10.1908 இவர் பிறந்த பொன்னாளாகும். இவர் ஆறு மாதக் குழந்தையாய் இருந்தபோதே அன்னையை இழந்தார். சாந்தபீவி எனும் இஸ்லாமிய அம்மையாரே இவருக்குத் தாய்ப்போல் ஊட்டி வளர்த்தார். இவருக்குக் குருவாக அமைந்து கற்பித்தவரோ கிறித்துவப் பாதிரியார் ஒருவர். எனவே இவரது மத நல்லிணக்கத்திற்கு இதுவே வித்து எனலாம்.

தொடக்கத்தில் தம் இல்லத்திலும், பின்னர் கமுதி, பசுமலை, மதுரை, இராமநாதபுரம் முதலிய இடங்களிலும் கல்வி கற்றார். இவர் இளமை முதலே நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். தம் பத்தொன்பதாம் அகவையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாசக அய்யங்காரின் வழிகாட்டுதலால் அரசியலில் அடியெடுத்து வைத்தார். காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு விடுதலை வேள்வியில் தீவிரமாகப் பங்கேற்றார். காந்திஜி அறிவித்த கள்ளுக் கடை மறியலின் போது தமக்குச் சொந்தமான பனை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

ஒரு சமயம் இராமநாதபுரம் பகுதிக்கு மூதறிஞர் இராஜாஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த போது அவரை மாட்டு வண்டியில் அமர்த்தி இவரே சாரதியாகச் செயல்பட்டார். தீரர் சத்தியமூர்த்தியுடன் இணைந்து தமிழகமெங்குமுள்ள பட்டி தொட்டிகள் எல்லாம் சுற்றி அனல் பொறி பறக்கப் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்த்தார். இவர் பெரு நிலக்கிழாராயினும் தம் நிலங்களை உழுபவர்களுக்கே உரிமையாக்கிய உத்தம சீலராவார். தேசியமும் தெய்வீகமும் இவரது இரு கண்கள். இவர் நாட்டு நலனில் நாட்டம் கொண்டதால் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.

ஒரு சமயம் காமராஜர் விருதுநகர் நகராட்சித் தலைவரானதற்குத் தேவரின் தீவிரப் பிரச்சாரமே காரணமாகும். 1933 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவர் பதவி தேவருக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தும் அதனைப் பெருந்தன்மையோடு தம் ஆத்ம நண்பரான – பின்னாளில் சென்னை மாகாண முதல்வராகவும், ஒரிசா ஆளுநராகவும் பதவி வகித்த – இராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்கு விட்டுக் கொடுத்தார்.

ஜமீன் ஒழிப்புப் போராட்டத்திலும், மதுரை மீனாட்சி ஆலைத் தொழிலாளர் போராட்டத்திலும், கைரேகை மறுப்புச் சட்டப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டு அவற்றை வெற்றி பெறச் செய்தார். ஆங்கில அரசு அமுல்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கப் போராடி அதிலும் வெற்றி கண்டார். இவரது செயல்பாடுகளைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு இவரைப் பேசவிடாது வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்த பின்னரும் பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.

1937 மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மாநாட்டுத் தலைவராக நேதாஜியைத் தேர்வு செய்ய தேவர் அரும்பாடு பட்டார். அது முதல் அவரோடு நெருங்கிய நட்புப் பூண்டு அவரது சீடராகவே மாறினார்.

08.07.1937 ல் அன்றைய முதல்வர் ராஜாஜியும் விடுதலை வீரர் வைத்தியநாத ஐயரும் தாழ்த்தப்பட்டோரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்விக்க முயன்றனர். ஜாதி வெறியர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தாழ்த்தப்பட்டோர் பலரைத் தம் இல்லத்தில் வைத்து ஆதரித்து வந்த பசும்பொன் தேவரின் ஒத்துழைப்பால் தான் அது வெற்றிகரமாக நிறைவேறியது.

நேதாஜியின் தொடர்புக்குப் பின்னர் காந்திஜியின் மிதவாதப் போக்கைக் காட்டிலும், நேதாஜியின் போர்க் கொள்கையே நம்நாட்டு விடுதலைக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்தார். தேவரின் அழைப்பிற்கிணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரை வந்து தம் கொள்கையை மக்களிடையே பரப்பினார். நேதாஜி அமைத்த போர்க்குழுவில் தேவரும் இடம் பெற்றார்.

1946 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆந்திர கேசரி பிரகாசம் இவரைத் தொழிலமைச்சராகப் பதவி ஏற்குமாறு இருமுறை வற்புறுத்தியும் இவர் இணங்கினாரில்லை. இந்நிகழ்வுகளால் இவருக்குப் பதவி ஆசை அறவே இல்லை என்பது கண்கூடு.

இவர் இப்புவியில் வாழ்ந்த காலம் 55 ஆண்டுகள்தாம். ஆனால் சிறையில் வாடியதோ 10 ஆண்டுகளுக்கு மேல். இவரது அருந்தொண்டினைக் காணப் பொறுக்காத காலன் 30.10.1963 அன்று இப்பூவுலகை விட்டே அபகரித்துச் சென்றான்.

ஒரு பக்கம் நாட்டு விடுதலைக்காகப் போராடியவராகச் செயல்பட்டாலும் மறுபக்கம் சிறந்த முருக பக்தராகவும் ஆன்மீகவாதியாகவும் விளங்கினார் தேவர்.

பஸ் போச்சு; எரிப்பதற்கு ஏர்பஸ் வந்தாச்சு

Posted in Arms, Assassin, Assassination, Assassinations, Belief, Biosketch, Bloc, Brahmins, Caste, Chandrabose, Community, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Convict, Correctional, Courts, Dalit, dead, Emmanuel, employees, Faces, Faith, FB, FC, Forward Bloc, Forward Block, Freedom, Gandhi, Harijans, Hinduism, Hindutva, History, Immanuel, Independence, Jail, Jameen, Judge, Justice, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Karthik, Law, Madurai, Muthuramalinga, Muthuramalingam, Nethaji, Oppression, Order, people, Prisons, Rajaji, Religion, Sathiamoorthy, Sathiamurthy, Sathiyamoorthy, Sathiyamurthy, Shubash, Subash, Temple, Thevar, War, Weapons, workers | 142 Comments »

Se Ku Thamizharasan – Panchami Lands: Dalit empowerment & Self sufficiency

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2007

“பஞ்சமி நிலம்’-தேடலும் தீர்வும்!

செ.கு.தமிழரசன்

பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும்…, பஞ்சமி நிலம் பற்றிய வெள்ளை அறிக்கை தேவை…, பஞ்சமி நில மீட்பு ஆணையம் அமைக்க வேண்டும் என்ற முழக்கங்களை தலித் இயக்கங்களின் போராட்டங்களில் அதிகமாகக் கேட்கலாம். கழகங்கள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல தரப்பிலும் பஞ்சமி நிலத்தைப் பற்றி பேசத்தான் செய்கிறார்கள். தேர்தல் அறிக்கைகளிலும் பஞ்சமி நிலம் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. பஞ்சமி நிலத்தின் பின்னணியைப் பார்ப்பது அவசியம்

“இந்தியா’-என்றொரு நாடு இல்லாமலிருந்த காலகட்டம் அது. புரோகிதத் தொழில் புரியும் பிராமணர்களுக்கு கையடக்க நிலம் கொடுத்த நிலை வளர்ந்து, கிராமத்தையே தானமாகக் கொடுக்கும் நிலை வந்தது. இதற்கு “சதுர்வேதி மங்கலம்’ என்னும் நாமகர்ணம் சூட்டப்பட்டது. இது பின்னர் மதியூகி மந்திரிகளுக்கும் மண்ணுரிமை என்று விரிந்து, இறுதியில் அரசனுக்குப் பிடித்த புலவனுக்கும் போய்ச் சேர்ந்து. இதற்கு ஆதாரமான கல்வெட்டுகள் உள்ளன.

1600-ல் தான் லண்டனில் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது. 1611-ல் மசூலிப்பட்டணத்தில் தனது வணிகக் கிளையைத் தொடங்கிய கம்பெனி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நிலங்களை- ராஜ்ஜியங்களை விலைக்கு வாங்கிச் சேர்த்த தொடர்பணியில் 1641-ல் சென்னை ஜார்ஜ் கோட்டையை கட்டியது. வியாபாரக் கம்பெனி வாங்கிப்போட்ட ராஜ்ஜியத்தின் மீதான தனது உரிமையை நிலைநாட்ட நிலவரியை வசூல் செய்து, அதற்கு நிர்வாக ரீதியான சில ஏற்பாடுகளையும் செய்து கொண்டது. அதற்கான ஆட்களையும் நியமித்தது. அந்த வகையில் “ஜாகிர்தாரி முறை’ அமலுக்கு வந்தது.

இந்நிலையில், கிழக்கிந்திய கம்பெனிக்குச் சொந்தமான இந்திய நிர்வாகத்தை பிரிட்டிஷ் பேரரசு தனது நேரடி அதிகாரித்துக்கு 2.8.1858-ல் மாற்றிக்கொண்டது. அதன் பின்னர் ஏற்பட்ட நிர்வாகச் சீர்திருத்தத்தில் நிலச்சீரமைப்பும் மாற்றம் பெற்றது.

சதுர்வர்ண சாதிய அமைப்புக்கு அப்பாற்பட்ட “அவர்ணா’ என்ற மக்கள் திரள் எவ்வித மனித உரிமையுமின்றி, ஊருக்குப் புறத்தே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு எண்ணற்றத் தடைகளைப் போட்டு, கொத்தடிமைகளை விடக் கேவலமாக தீண்டாமைக் கொடுமைக்குள் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்கள் தமிழ்நாட்டில் பள்ளு-பறை பதினெட்டு சாதி என்று குறிப்பிடப்பட்டாலும் “பஞ்சமர்’ என்ற ஒரு பெயருக்குரியவர்களானார்கள். இவர்களுக்கான மனித உரிமை வேண்டி, பண்டிதர் அயோத்திதாசர் முதல் எண்ணற்ற தலைவர்கள் போராடிக்கொண்டிருந்தார்கள்.

இதையடுத்து பிரிட்டிஷ் அதிகாரிகள் இரக்கம் காட்டத் தொடங்கினர். அதில் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவர், அன்றைய செங்கல்பட்டு ஜில்லா கலெக்டராக இருந்த “ட்ரிமென்கிரி’ என்பவர். இவர் இம் மக்களின் அன்றாடத் துயரங்களை ஆராய்ந்து, அதற்கு வடிகாலாக இவர்களுக்கு நிலமான்யம் வழங்க வேண்டிய அவசியத்தை மேலிடத்தில் வலியுறுத்தினார்.

அதன் விளைவாக 1891-ம் ஆண்டு, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பஞ்சமர்களுக்கு நிலம் கொடுக்கும் பிரச்னைக்கு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கான அரசாணை எண்.1010, 30-9-1892-ல் வெளியானது. இதனடிப்படையில் சென்னை மாகாண பிரிட்டிஷ் அரசு, பஞ்சமர்களுக்கு டி.சி.லேண்ட் என்ற பெயரில் நிலங்களைப் பகிர்ந்தளித்தது. இதுவே “பஞ்சமி நிலம்’ என்று பெயர் பெற்றது. இந்நிலங்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டன.

நிலம் பெற்ற பத்தாண்டுகளுக்குள் அதை எவருக்கும் குத்தகைக்கு விடவோ, அடமானம் வைக்கவோ, தானம் கொடுக்கவோ, விற்கவோ கூடாது. அப்படிச் செய்தால் அது செல்லுபடியாகாது. பத்தாண்டுகளுக்குப் பின்னர் அந்நிலத்தை பஞ்சமர்களுக்குள்ளே மட்டும் குத்தகைக்கு விடவோ, அடமானம் வைக்கவோ, தானம் கொடுக்கவோ, விற்கவோ செய்யலாம்.

இத்தகைய கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தாலும் காலப்போக்கில், என்னதான் நிலமிருந்தாலும் அதில் பயிர் விளைவிக்கும் அனைத்து வசதிகளுக்கும் அந்நியரையே சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தில் இம்மக்களின் வாழ்நிலை அமையப்பட்டிருந்தால் சுலபமாக வஞ்சிக்கப்பட்டனர். அதனால் இவர்களின் நிலங்களை அந்நியர்கள் கைப்பற்றினர். சிலர் வறுமையினால் ஏமாற்றப்பட்டு அதன் விளைவாய் விற்றனர்.

இந்த இழிநிலையைக் கண்ணுற்ற சமுதாயத் தலைவர்கள் ரெட்டைமலை சீனிவாசன், சிவராஜ், எம்.சி.ராஜா போன்றவர்கள் மீண்டும் உரிமை மீட்க வாதாடியதால், 1933-ல் பஞ்சமி நிலங்களுக்கான பட்டாக்களை புதுப்பித்து வழங்கியது பிரிட்டிஷ் அரசு. மேலும் விதிமுறையை வலியுறுத்தி நிலையான அரசாணை 1.10.1941-ல் வெளியிட்டது.

ஆனாலும் பஞ்சமி நிலங்கள் அப்பாவி மக்களிடமிருந்து பறிமுதலாவதை முற்றிலுமாய் நிறுத்த முடியவில்லை. செங்கை மாவட்டத்தில் காரணை, கிராமத்தில் தலித் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரை 10-101994-ல் சந்திக்க வந்த தலித் மக்கள் மீது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டால், இரு இளைஞர்கள் பலியானார்கள். இதையொட்டி கண்டனக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என்று தலித் இயக்கங்களால் தமிழகமெங்கும் நடத்தப்பட்டன.

இன்றைய நிலையில் “பஞ்சமி நிலம்’ பல கை மாறியிருக்கும். ஆனாலும் மூலப் பத்திரத்தை பார்ப்பது என்பது கடினமல்ல. ஏனெனில், நிலங்களைப் பற்றிய நிலையான பதிவேடுகள் சென்னையிலுள்ள ஆவணக் காப்பகத்தில் உள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள ஓட்டு மொத்த பஞ்சமி நிலம் பற்றிய தகவல்களை 1832-லிருந்தே திரட்டிக் கொள்ளலாம்.

ஆனால், இதற்கு அரசு நிர்வாகம் வேகமாக முடுக்கிவிடப்படவேண்டும். தன்னலமர்ற அர்ப்பணிப்பு மனோநிலை கொண்ட ஊழியர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

பஞ்சமி நில மூலத்தைக் கண்டுபிடித்தாலும் அது யாரிடம் உள்ளது, என்ன நிலை, மீட்பது எப்படி என்பது ஒரு கேள்விக்குறி. அடுத்தது அந்த நில உரிமையாளர்களைக் கண்டறிந்து பணத்தை யாரிடம் திருவது என்பதும் மற்றொரு கேள்வி.

பஞ்சமி நிலத்தை மீட்டுக்கொடுப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால் எப்படிச் செயலாக்கப் போகிறது என்பதை இதுவரை எடுத்துரைக்கவில்லை. ஆனால், ஏழை விவாசயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலமென்று யார் யாருக்கோ, எங்கெங்கோ பூதானம் செய்து கொண்டிருக்கிறது.

“”ஆண்டுக்கு ஏழாயிரம் தலித் குடும்பங்களுக்கு நிலம் வாங்க, தலா இரண்டு லட்சம் ரூபாய் அதிக பட்சக் கடனாக வழங்குவது, அதில் ஒரு லட்சம் ரூபாயை மானியமாக தருவது” என்ற திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது. தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேல் உள்ள தலித் மக்களில் தொண்ணூறு சதவீதம் நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகள்தான். இவர்களைக் கணக்கெடுத்து ஆண்டுக்கு பத்தாயிரம் குடும்பங்களுக்கு நிலம் வாங்க கடன் வழங்கத் தொடங்கினாலே, பத்தாண்டுக்குள் அப்பணி முழுமை பெற்றுவிடும். தமிழக அரசு இதை நிறைவேற்ற வேண்டும்.

காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்க உரிமையில்லை. காஷ்மீர் நிலம் காஷ்மீரியர்களுக்கே என்பது சட்டமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில், தலித் மக்களுக்கு நிலம் வழங்க திட்டமிடுவதும் சாத்தியமே.

தமிழக அரசு, பஞ்சமி நிலத்தை மீட்க கடுமையான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் திட்டப்படி தற்போது கிட்டத்தட்ட தொண்ணூறு ஆயிரம் பேருக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பலனைப் பெற்றவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் தானேயொழிய, தலித் மக்களல்ல. அதிலும் நிலம் பெற்ற குறைந்த அளவு தலித் மக்களும் தாங்கள் ஏற்கெனவே அனுபவ பாத்தியதையில் வைத்துள்ள சிறிதளவு புறம்போக்கு நிலங்களுக்கு மட்டுமே பட்டா வழங்குவதாக புலம்புகிறார்கள். இவையெல்லாம் ஏழை தலித் மக்களை ஏமாற்றும் செயலாகவே தோன்றுகிறது.

தங்களுக்குரிய பஞ்சமி நிலம் மீட்கப்படும் வரை தலித் மக்களின் போராட்டம் தொடரும். அரசு என்ன செய்யப்போகிறது. கடுமையான நடவடிக்கை எடுத்து, பஞ்சமி நிலத்தை மீட்டுத்தரப் போகிறதா ? அல்லது கனிவான நடவடிக்கை எடுத்து பஞ்சமர்களுக்கு நிலத்திற்காக ஈடுகட்டப்போகிறதா? தலித் மக்கள் தமது பஞ்சமி நிலத்தை மீட்க போராடிக்கொண்டிருக்கிறார்கள்- நாளை தலைமுறை அந்த வெற்றியில் திளைக்கும் என்ற நம்பிக்கையில்!

(கட்டுரையாளர்-தலைவர், தமிழ்நாடு இந்தியக் குடியரசுக் கட்சி.)

Posted in Agriculture, Assets, Britain, British, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Cultivation, Dalit, Famers, Farming, Freedom, GO, Govt, Harijan, Harijans, Independence, J&K, Jammu, Kashmir, Lands, Pancami, Panchami, Panjami, Property, rice, Tamilarasan, Tamizarasan, Tamizharasan | 3 Comments »

Viduthalai Siruthaigal & DMK Convention in Thirunelveli

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

மண்ணுரிமை மாநாடு சாதித்தது என்ன?

ப. இசக்கி

திருநெல்வேலி, ஜூன் 19: சக “தலித்’ அமைப்புகள் சிலவற்றின் விமர்சனத்துக்கு இடையே, விடுதலைச் சிறுத்தைகளின் மண்ணுரிமை மாநாடு திருநெல்வேலியில் சுமுகமாக நடந்து முடிந்துள்ளது.

சுமார் 20 ஆயிரம் பேர் திரண்ட இந்த மாநாடு மூலம் விடுதலைச் சிறுத்தைகள் சாதித்தது என்ன என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கிறது.

“தமிழனுக்குத் தேவை தன்னுரிமை; தலைநிமிரத் தேவை மண்ணுரிமை’ என்ற கோஷத்துடன் “அனைவருக்கும் வீடு, நிலம்; அரசு சொத்துகளில் குத்தகை உரிமை’ என்பதை வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி நடத்தவிருந்த இந்த மாநாடு, முதல்வர் கருணாநிதியால் வர இயலாததால் தள்ளிவைக்கப்பட்டுத் தற்போது நடத்தப்பட்டது.

நெல்லையில் ஏன் மாநாடு?

வட மாவட்டங்களில் ஓரளவு பலம் பெற்றுள்ள சிறுத்தைகளுக்கு தென் மாவட்டங்களில் பெரிய அளவில் அடித்தளம் இல்லை. எனவே, கட்சிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்துவது; அதற்கு தற்போது சிதறுண்ட நிலையில் இருக்கும் “தலித்’ மக்களில் பெரும்பான்மையினரான “பறையர்’ இன மக்களை ஒன்று திரட்டுவது; அவர்களைக் கவர வீடு, நிலம், குத்தகைப் பங்கு என கவர்ச்சிகரமான கோரிக்கைகளை முன்வைப்பது; முதல்வர் கருணாநிதியை பங்கேற்கச் செய்வதால் பாமர மக்களிடையே இயக்கம் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது; அதன்மூலம் அரசியல் ஆதாயத்தை ஏற்படுத்திக் கொள்வது என்பதுதான் மாநாட்டின் பிரதான நோக்கங்களாக இருந்திருக்க வேண்டும்.

திருநெல்வேலிக்கு வருவது குறித்து “தில்லி செல்லாமல் இருந்தாலும் இருப்பேனே தவிர, நெல்லைக்குச் செல்லாமல் இருக்க மாட்டேன்’ என கருணாநிதியே கூறியதாக திருமாவளவன் மாநாட்டு மேடையில் தெரிவித்தார். அப்படி அக்கறையோடு கருணாநிதி இங்கு வரக் காரணம் என்ன?.

திமுக கூட்டணில் உள்ள பாமக, தற்போது சற்று “குளிர்ச்சி’ அடைந்திருந்தாலும், அது அடுத்த தேர்தலிலும் நீடிக்குமா என்பது அவர்களுக்குதான் தெரியும். கூட்டணியைவிட்டு பாமக விலகினால், அதை ஈடுகட்ட வட மாவட்டங்களில் வாக்கு வங்கி பலம் உள்ள சிறுத்தைகளைத் தங்களுடனே தக்கவைத்துக் கொள்ளவும், தென் மாவட்டங்களில் சிறுத்தைகள் வளர்ந்தால் அதுவும் திமுகவுக்கு கூடுதல் பலமே என்ற நோக்கத்தில்தான் முதல்வர் இந்த மாநாட்டு வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

முதல் வெற்றி:

மாநாட்டில் திரண்ட சுமார் 20 ஆயிரம் பேரில் 90 சதம் பேர் வட மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். எஞ்சிய 10 சதம் பேர் மட்டுமே தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

திருமாவளவன் அளித்த 23 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமானால் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும் என்பதை தனது பேச்சில் மறைமுகமாகக் குறிப்பிட்டார் கருணாநிதி.

பொருள்காட்சித் திடலில் கூடிய அந்த கட்டுக்கோப்பான கூட்டம் தென் மாவட்ட “தலித்’ மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சக “தலித்’ இயக்க தலைவர்களை கவலை அடையச் செய்துள்ளது. இதை முதல் வெற்றியாகக் கருதலாம்.

இந்த வெற்றி வாக்கு வங்கியை உருவாக்குமா, அது திமுகவுக்கு பலம் சேர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

————————————————————————————–
குமுதம் ரிப்போர்ட்டர்
தேவர் சமுதாய மக்களின் மனதைக் கவர்ந்த கலைஞர்
(நெல்லை அதிரடி)

– அ. துரைசாமி

தன் மீது அதிருப்தியாக இருந்த தேவர் சமுதாய மக்களின் மனங்களை, ‘ஒரு சமயோசித அறிவிப்பால்’ குளிரச் செய்திருக்கிறார் முதல்வர் கலைஞர்.

நெல்லையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மண்ணுரிமை மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, மாநாட்டிற்குப் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக, சிறுத்தைகளின் சகோதர இயக்கமான மக்கள் தேசம் கட்சியினர் வெளிப்படையாக ‘மண்ணுரிமை மாநாட்டிற்கு’ எதிர்ப்புத் தெரிவித்ததோடு நில்லாமல், ‘அதில் கலைஞர் கலந்துகொள்ளக் கூடாது’ என்று உயர்நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்தனர். அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது வேறு விஷயம்.

மாநாட்டிற்கு முன்தினம் டாக்டர் கிருஷ்ணசாமிகூட ‘மண்ணுரிமை மாநாட்டில் கலைஞர் கலந்துகொள்ளக்கூடாது’ என்று அறிக்கை விடுத்ததோடு, மண்ணுரிமை மாநாட்டிற்கு எதிராக ‘புதிய தமிழகம் கட்சி’யினரை ஆர்ப்பாட்டம் செய்யவும் வைத்தார்.

இப்படி விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக அதன் சகோதர இயக்கங்களே போர்க்கொடி தூக்கும்போது, மண்ணுரிமை மாநாட்டிற்கு எதிர்த்தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பக் கேட்கவா வேண்டும்?

தென்மாவட்டங்களில் கணிசமாக வாழும் தேவர் சமுதாய மக்கள் இந்த ‘மண்ணுரிமை மாநாட்டை’ கடுமையாக எதிர்த்து வந்தனர். தி.மு.க.வில் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கும் தேவரின மக்களுக்குக் கூட கலைஞர், விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் கலந்து கொள்வது அடியோடு பிடிக்கவில்லை. இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்ட உளவுத்துறை கோட்டைக்குத் தகவல் அனுப்பியுள்ளது. அதன் பிறகே, பல தேவரின பிரமுகர்கள் ‘ஆஃப்’ செய்யப்பட்டனர்.

வட மாவட்டங்களில் இருந்து வரும் சிறுத்தைகள் வன்முறையில் ஈடுபட்டால் ‘கலைஞர் மாநாட்டிற்கு வரமாட்டார்’ என்றும் அறிவுறுத்தப்பட்டது. புதிய தமிழகம், மக்கள் தேசம் கட்சியினரின் எதிர்ப்பை அவ்வளவாகப் பொருட்படுத்தாத கலைஞர், தேவரின மக்களின் அதிருப்தியை மட்டும் சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

‘தேவரின மக்களை சமாதானம் செய்ய என்ன வழி?’ என்று யோசனை செய்தவாறே கடந்த பதினேழாம் தேதி காலை ரயில் மூலம் நெல்லை வந்து இறங்கினார். அன்று காலையில் பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், சுமார் 470 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். அதில் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

விழா மேடையில் கூட தேவர் சமுதாய மக்களின் அதிருப்தியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த கலைஞருக்கு, அவர்களைச் சமாதானம் செய்ய அடியெடுத்துக் கொடுத்தார் நெல்லை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன்.

அவர் பேசும்போது ‘‘நெல்லை நகரில் போக்குவரத்து அதிகரித்துவிட்டது. ஆனால், ஒரே ரோடுதான் இருக்கிறது. எனவே, வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் சிலை அமைந்திருக்கும் இடத்தில் புதிய மேம்பாலம் கட்டவேண்டும். இதற்காக 18 கோடியில் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது!’’ என்று பேசியதைக் கேட்ட கலைஞரின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் விளக்கின் பிரகாசம். உடனடியாய் மேயரை அருகில் அழைத்து புதிய மேம்பாலம் பற்றிக் கூடுதல் தகவல்களைக் கேட்டறிந்துகொண்டார்.

பின்னர் முதல்வர் கலைஞர் பேசத் தொடங்கியதும் எடுத்த எடுப்பிலேயே புதிய மேம்பாலம் பற்றித்தான் பேசினார். ‘‘மேயர் ஏ.எல்.சுப்பிரமணியனுக்கு பலவற்றை மறுத்த நான், அவரது கோரிக்கையான புதிய மேம்பாலம் கட்ட அனுமதிக்கிறேன். அதற்கு அரசு நிதியிலிருந்து பதினெட்டுக் கோடி ஒதுக்கப்படும்’’ என்றதும் பயங்கர கரகோஷம்.

மேயர் ஏ.எல்.சுப்பிரமணியனுக்கோ இன்ப அதிர்ச்சி. உடனடியாக எழுந்து வந்து கலைஞரின் காலைத் தொட்டுக் கும்பிட்டார். அதோடு விடவில்லை கலைஞர். அவர் அடுத்துச் சொன்னதுதான் தேவரின மக்களைக் கவர்ந்த விஷயம்.

அதாவது ‘‘புதிய மேம்பாலத்திற்கு ‘செல்லபாண்டியன் பாலம்’ என்ற பெயரையும் சூட்டுகிறேன்’’ என்று கலைஞர் அறிவித்ததுதான் தாமதம்… விண்ணதிரக் கரகோஷம் கேட்டது. கலைஞரின் இந்த அறிவிப்பு தென் மாவட்டத் தேவரின மக்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. காரணம், முன்னாள் சபாநாயகரான செல்லபாண்டியன் தேவரினத்தைச் சேர்ந்தவர்.

‘‘செல்லபாண்டியன் பாலம் என்று ஒரு தேவரினத் தலைவரின் பெயரைச் சூட்டியதன் மூலம் தலித் மக்களின் மாநாட்டில் கலந்து கொள்வதனால் ஏற்பட்ட அதிருப்தியை சரிக்கட்டி விட்டார் தலைவர்’’ என்றார் தி.மு.க. அமைச்சர் ஒருவர்.

அன்று மாலை நெல்லைப் பொருட்காட்சித் திடலில் விடுதலைச் சிறுத்தைகளின் மண்ணுரிமை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் ‘தலித் பழங்குடியினருக்கு 5 சென்ட் நிலத்தில் வீடு கட்டித்தர வேண்டும்’ என்ற கோரிக்கை உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் திருமாவளவன், கலைஞர் இருவர் மட்டுமே பேசினர். பல்லாயிரக்கணக்கான சிறுத்தைகள் திரண்டிருந்த போதும், மாநாட்டில் சின்ன சலசலப்புக்கூட இல்லை. இது சிறுத்தைகளின் சகோதர இயக்கங்களை அப்செட் ஆக்கியிருக்கிறது.

மாநாட்டில் பேசிய கலைஞர் ‘‘சிறுத்தைகளின் இரண்டு எம்.எல்.ஏ.க்களும் நன்றாகச் செயல்படுகிறார்கள். இதற்குக் காரணம், அவர்கள் திருமாவளவனின் தயாரிப்பு. திருமாவளவன் தன்னை தளபதி என்கிறார். அப்படியல்ல, அவர்தான் மேஜர் ஜெனரல்’’ என்று சொல்லி சிறுத்தைகளைத் தன்பால் கட்டிப் போட்டார்.

‘‘ஒரே நேரத்தில் தேவர் சமுதாய மக்களின் மனதிலும், தலித் சமுதாய மக்களின் இதயத்திலும் இடம்பிடித்துள்ளார் கலைஞர். இது அவரது சாணக்கியத் தனத்தையே காட்டுகிறது’’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

– அ. துரைசாமி

Posted in Alliance, Appeasement, BC, Bridge, Caste, Chellapandiyan, Coalition, Community, Convention, Dalit, deal, Devar, DMK, Equations, Harijans, Leader, MBC, Nellai, OBC, Party, Politics, Puthia Thamilakam, Puthia Thamizhagam, Puthiya Thamilagam, Puthiya Thamilakam, Puthiya Thamizagam, Puthiya Thamizakam, Puthiya Thamizhagam, Puthiya Thamizhakam, SC, Sellapandiyan, ST, Thevar, Thiruma, Thirumavalavan, Thirunelveli, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Viduthalai Siruthaikal, Vituthalai Chiruthaigal, Vituthalai Chiruthaikal, Vituthalai Siruthaigal, Vituthalai Siruthaikal, voter, Votes | 3 Comments »

A Marx on Gandhi, Dalits, Varnasramam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

சாதியத்தை எதிர்த்தாரா மகாத்மா?

அ. மார்க்ஸ்

இந்த ஆண்டு காந்தி பிறந்த நாள், “சத்தியாக்கிரகம்’ என்கிற போராட்ட முறையை அவர் உலகுக்குத் தந்த நூற்றாண்டில் அமைகிற வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றது. காந்தியின் அகிம்சை, சத்தியாக்கிரகம் முதலியன அரசுக்கு எதிராக ஒருவர் தன்னை வகுத்துக் கொண்டு அழிந்து போகிற முட்டாள்தனமான ஒரு காரியமல்ல. பரந்துபட்ட பெருந்திரளான மக்களைச் சட்டத்தை மறுக்க வைக்கிற, மீற வைக்கிற, அதன் மூலம் அரசைப் பணிய வைக்கிற போராட்ட வடிவம் அது.

சட்டம் மீறுகிற போராட்ட வடிவங்கள் என்பன ஆயுதம் தாங்கிய சிறு முன்னணிப் படையால் நடத்தப்படுவன என்கிற நிலையை மாற்றியமைத்தவர் அவர். மக்களின் மீது அதிகாரமுள்ள முன்னணிப்படை (Vanguard ) என்கிற கருத்தாக்கம் இதன் மூலம் அழிந்தது. அனைவரும் அதில் படைவீரர்கள். துயரைத் தாங்குதல், அதே நேரத்தில் அதிகாரத்தை எதிர்த்தல் என்பதே காந்தியடிகளின் கொள்கை.

காந்தியின் தென் ஆப்பிரிக்க வாழ்க்கை (1893 – 1914) நிறவெறித் தீண்டாமைக்கெதிரான போராட்டக் களமாக மட்டுமன்றி சுயநலமற்ற நேர்மையான அரசியலுக்கான சோதனைக் களமாகவும் இருந்தது. அங்கு அவர் உருவாக்கிய ஃபீனிக்ஸ் பண்ணை மற்றும் டால்ஸ்டாய் பண்ணைகள் என்பன மார்க்ஸியர்கள் கனவு கண்ட ஒரு “கம்யூன்’ வடிவத்தின் மிகச் சிறந்த மாதிரியாக இருந்தது. பண்ணையிலுள்ள அனைவரும் தமது வருமானங்களைப் பொதுவாக்கி, கூடி உழைத்துப் பகிர்ந்து கொள்ளுதல் அங்கே கடமையாக்கப்பட்டன. தனது பெரும் வருமானம் அனைத்தையும் அவர் பண்ணையில் பகிர்ந்து கொண்டார்.

இந்திய அரசியல் சட்ட உருவாக்கத்தில் அவருக்கு நேரடியான பங்கில்லை என்றபோதிலும் இது ஒரு “மதச்சார்பற்ற குடியரசாகப்’ பிரகடனப்படுத்தப்பட்டதில் காந்தியின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. “மதச் சார்பின்மை’ (Secularism) என்கிற தத்துவக் கருத்தாக்கத்தை ஓர் அரசியல் சொல்லாடலாக மாற்றியமைத்ததில் காந்தியின் பங்கை இன்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெண் விடுதலை குறித்துச் சனாதனமான கருத்துகளைப் பேசியதாகவே நாம் அவரை அறிந்து வந்துள்ளோம். ஆனால் பெண்களைக் குடும்பத்திற்குள் சிறைப்படுத்தாமல் ஆசிரம வாழ்விற்கும், அரசியல் களத்திற்கும் ஈர்த்தவர் அவர். அவரளவிற்குப் பெண்களைப் போராட்டக் களத்தில் இறக்கியவர்கள் யாருமில்லை. உப்புச் சத்தியாக்கிரகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

காந்தியை விமர்சிப்பவர்களில் பலர் அவரை முழுமையாக வாசித்ததில்லை. எனவே அவர் குறித்த தவறான புரிதல்கள் பல இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று,

“அவர் தீண்டாமையை எதிர்த்தபோதும் சாதியத்தை எதிர்க்கவில்லை; வருணாசிரமத்தை ஆதரித்தார்”

என்பது. இன்று உலகெங்கிலும் காந்தி மறுவாசிப்பிற்குள்ளாகிக் கொண்டுள்ளார். இத்தகைய மறுவாசிப்பாளர்களில் ஒருவரான அனில் நவுரியா கருத்தை ஆதாரபூர்வமாக மறுக்கிறார்.

1927-ல் சிங்களவர்கள் மத்தியில் பேசும்போது, “”மகிந்தரையும் பவுத்தத்தையும் உங்களுக்குத் தந்ததற்காக இந்தியா பெருமைப்படும் அதே நேரத்தில் சாதி வேறுபாடு எனும் சாபத்தையும் உங்களுக்கு அறிமுகம் செய்ததற்காக அது வெட்கப்படுகிறது” என்றார். சாதியை “”முன்னேற்றத்திற்குத் தடையானது” எனவும் “”சமூகக் கொடுமை”, “”காலத்திற்கு ஒவ்வாதது”, “”ஒழிக்கப்பட வேண்டியது” என்றும் தொடர்ந்து கூறி வந்தார்.

தொடக்க காலங்களில் அவர் வருணாசிரமத்தை ஆதரித்துக் கருத்துகள் கூறிய போது கூட தனது ஆசிரமங்களில் “வருணவியவஸ்தா’விற்கு இடமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். “”தீண்டாமை ஒழிப்போடு சேர்ந்து சாதியும் ஒழிந்தால் நான் ஒரு சொட்டுக் கண்ணீர் கூடச் சிந்த மாட்டேன்” என்றார் (1927). வருண முறையை ஆதரித்தபோதும்கூட அவர் பிறவியால் வருணமும், தொழிலும் தீர்மானிக்கப்படுதல் என்பதை ஏற்கவில்லை.

மதங்களில் ஏற்றத் தாழ்வுக்கு இடமில்லை என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். என்னுடைய மதத்தில் எனக்குக் கீழான ஒருவர் என்கிற கருத்து சாத்தியமில்லை என்றார். தலித்களுக்கும் மற்றவர்களுக்குமான திருமண உறவை வலியுறுத்தினார். “”இறுதியில் ஒரே சாதிதான் இருக்க வேண்டும். “பங்கி’ (துப்புரவாளர்) என்கிற அழகிய பெயருக்குரியது அது. அதாவது எல்லா அழுக்குகளையும் நீக்கிச் சீர்திருத்துபவர். அந்நிலை விரைவில் வர வேண்டுமென நாம் எல்லோரும் வேண்டிக் கொள்வோம்” என்றார் (1946).

சுதந்திர நாள் நெருங்கிய போது பிரார்த்தனைக் கூட்டமொன்றில் (ஜூன் 1, 1947) “”பங்கிகளின் ஆட்சி” இங்கே உருவாக வேண்டும் என்றார். தீண்டாமைக் கொடுமைக்குள்ளானவர்களிலும் ஆகக் கீழாக ஒதுக்கப்பட்டவர்களின் மீது அவரது கரிசனம் கூடுதலாக இருந்ததையே இது வெளிப்படுத்துகிறது. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பேசும்போது (ஜூன் 14, 1947) சுதந்திர இந்தியாவில் சவர்ண ல அவர்ண வேற்றுமை ஒழிய வேண்டும் என்றார். சூத்திரர், தீண்டத்தகாதோர், ஆதிவாசிகள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றார். மற்றொரு பிரார்த்தனைக் கூட்டத்தில் (ஜூன் 2, 1947) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ஒரு “”தலித் பெண்ணாக” இருக்க வேண்டும் என்றார்.

“தலித்’ என்கிற சொல்லையும் காந்தி 1927, 1931ம் ஆண்டுகளிலேயே பயன்படுத்தினார் என்பது நம்மை வியக்க வைக்கும் ஒரு செய்தி. “தலித்’ என்னும் சொல் “மிகச் சரியாகவே’ பயன்படுத்தப்படுகிறது எனக் கூறிய காந்தி, ஏனெனில் அம் மக்கள் (தானாக) “”அழுந்தியவர்கள்”(depressed) அல்ல; மாறாக “”அழுத்தப்பட்டவர்கள்” (Suppressed) என விளக்கமும் அளித்தார். எனினும் இத்தகைய சொற்கள் சுட்டும் சமூக நிலை ஒழிக்கப்பட்டு, இத்தகைய சொற்களே தேவையற்றதாகிவிட வேண்டும் எனவும் அவர் சொல்லத் தயங்கவில்லை (பார்க்க: தொகுப்பு 33, பக். 196 மற்றும் தொகுப்பு 46, பக். 342).

“”வருணாசிரமத்தை நம்புபவர்களாயினும் தீண்டாமைக் கொடுமையை எதிர்க்கக் கூடியவர்களையும் இணைத்து ஒரு கூட்டுப் போராட்டமாக” நடத்த நேர்ந்த அவசியத்தை அவர் விளக்கியுள்ளார் (1933). “”இப்போதைக்கு தீண்டாமை ஒழிப்போடு இது வரையறைப்படுத்தப்பட்டாலும், இறுதியில் வருணாசிரமம் தொடர்ந்து அவலட்சணமாகத் தோன்றினால் மொத்தமுள்ள இந்தச் சமூகமும் சேர்ந்து அதையும் எதிர்க்கும்” என்றார்.

காந்தியின் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்திற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் வருணாசிரம ஆதரவாளர்களிடமிருந்து உருவாகியது (1933-34). பிஹாரில் அவர் சென்று கொண்டிருந்த கார் மீது கற்கள் வீசப்பட்டன. காசியில் கருப்புக் கொடிகள் காட்டப்பட்டன. பூனாவில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சில் பலர் காயமடைந்தனர். தமிழகத்தில் காந்தியை வசைபாடி “தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம்‘ முதலிய நூற்கள் வெளியிடப்பட்டன (1932).

காந்தி கொல்லப்பட்டதற்கான காரணம் அவர் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்தது மட்டுமன்றி, தீண்டாமை, சாதி வேறுபாடு, வருணாசிரமம் ஆகியவற்றிற்கு எதிராக இருந்ததும் ஒரு காரணம் என இன்றைய ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

சாதி, வருணப் பிரச்சினையில் அவர் தொடர்ந்து தன்னை வளர்த்துக் கொண்டவராகவே காட்சியளிக்கிறார். “”நான் ஒரு கருத்தை ஏற்பது என்பது ஒன்று. சமூகத்திலுள்ள எல்லோரையும் அக் கருத்தை ஏற்பவர்களாகச் செய்வது என்பது வேறு. என் மனம் தொடர்ந்து முன்னோக்கி வளர்ந்து கொண்டிருப்பதாகவே நான் நம்புகிறேன். எல்லோரும் அதே வேகத்தில் என்னைப் பின்பற்றுவார்கள் எனச் சொல்ல இயலாது. எனவே நான் அதிகபட்சப் பொறுமையைக் கடைப்பிடித்து மெதுவாகச் செல்ல வேண்டியுள்ளது” என்கிற அவரது தன்னிலை விளக்கம் குறிப்பிடத்தக்கது (1946).

மகாத்மா காந்தியின் இந்த முற்போக்கான நகர்வுக்கு அவரது சொந்த அரசியலனுபவங்கள் மட்டுமன்றி சம காலச் சிந்தனையாளர்களான அண்ணல் அம்பேத்கர், பெரியார் ஈ.வெ.ரா ஆகியோருடன் அவர் மேற்கொண்ட உரையாடல்களும், விவாதங்களும் ஒரு பங்கு வகித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

Posted in A Marx, crimes, Dalit, Freedom, Gandhi, Harijans, Independence, Liberation, Mahathma, MK Gandi, Satyagraha, Tamil, Untouchability, Varnasramam | 3 Comments »