Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘FC’ Category

Pasumpon Muthuramalinga Thevar – Biosketch, History

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

நூற்றாண்டு: ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள்!

தெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரை இந்நாட்டுக்காக ஈன்றளித்த பெருமைக்குரியோர் உக்கிர பாண்டியத் தேவரும், இந்திராணி அம்மையாரும்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமமே இவர் அவதரித்த திருத்தலமாகும். 30.10.1908 இவர் பிறந்த பொன்னாளாகும். இவர் ஆறு மாதக் குழந்தையாய் இருந்தபோதே அன்னையை இழந்தார். சாந்தபீவி எனும் இஸ்லாமிய அம்மையாரே இவருக்குத் தாய்ப்போல் ஊட்டி வளர்த்தார். இவருக்குக் குருவாக அமைந்து கற்பித்தவரோ கிறித்துவப் பாதிரியார் ஒருவர். எனவே இவரது மத நல்லிணக்கத்திற்கு இதுவே வித்து எனலாம்.

தொடக்கத்தில் தம் இல்லத்திலும், பின்னர் கமுதி, பசுமலை, மதுரை, இராமநாதபுரம் முதலிய இடங்களிலும் கல்வி கற்றார். இவர் இளமை முதலே நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். தம் பத்தொன்பதாம் அகவையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாசக அய்யங்காரின் வழிகாட்டுதலால் அரசியலில் அடியெடுத்து வைத்தார். காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு விடுதலை வேள்வியில் தீவிரமாகப் பங்கேற்றார். காந்திஜி அறிவித்த கள்ளுக் கடை மறியலின் போது தமக்குச் சொந்தமான பனை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

ஒரு சமயம் இராமநாதபுரம் பகுதிக்கு மூதறிஞர் இராஜாஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த போது அவரை மாட்டு வண்டியில் அமர்த்தி இவரே சாரதியாகச் செயல்பட்டார். தீரர் சத்தியமூர்த்தியுடன் இணைந்து தமிழகமெங்குமுள்ள பட்டி தொட்டிகள் எல்லாம் சுற்றி அனல் பொறி பறக்கப் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்த்தார். இவர் பெரு நிலக்கிழாராயினும் தம் நிலங்களை உழுபவர்களுக்கே உரிமையாக்கிய உத்தம சீலராவார். தேசியமும் தெய்வீகமும் இவரது இரு கண்கள். இவர் நாட்டு நலனில் நாட்டம் கொண்டதால் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.

ஒரு சமயம் காமராஜர் விருதுநகர் நகராட்சித் தலைவரானதற்குத் தேவரின் தீவிரப் பிரச்சாரமே காரணமாகும். 1933 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவர் பதவி தேவருக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தும் அதனைப் பெருந்தன்மையோடு தம் ஆத்ம நண்பரான – பின்னாளில் சென்னை மாகாண முதல்வராகவும், ஒரிசா ஆளுநராகவும் பதவி வகித்த – இராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்கு விட்டுக் கொடுத்தார்.

ஜமீன் ஒழிப்புப் போராட்டத்திலும், மதுரை மீனாட்சி ஆலைத் தொழிலாளர் போராட்டத்திலும், கைரேகை மறுப்புச் சட்டப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டு அவற்றை வெற்றி பெறச் செய்தார். ஆங்கில அரசு அமுல்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கப் போராடி அதிலும் வெற்றி கண்டார். இவரது செயல்பாடுகளைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு இவரைப் பேசவிடாது வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்த பின்னரும் பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.

1937 மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மாநாட்டுத் தலைவராக நேதாஜியைத் தேர்வு செய்ய தேவர் அரும்பாடு பட்டார். அது முதல் அவரோடு நெருங்கிய நட்புப் பூண்டு அவரது சீடராகவே மாறினார்.

08.07.1937 ல் அன்றைய முதல்வர் ராஜாஜியும் விடுதலை வீரர் வைத்தியநாத ஐயரும் தாழ்த்தப்பட்டோரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்விக்க முயன்றனர். ஜாதி வெறியர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தாழ்த்தப்பட்டோர் பலரைத் தம் இல்லத்தில் வைத்து ஆதரித்து வந்த பசும்பொன் தேவரின் ஒத்துழைப்பால் தான் அது வெற்றிகரமாக நிறைவேறியது.

நேதாஜியின் தொடர்புக்குப் பின்னர் காந்திஜியின் மிதவாதப் போக்கைக் காட்டிலும், நேதாஜியின் போர்க் கொள்கையே நம்நாட்டு விடுதலைக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்தார். தேவரின் அழைப்பிற்கிணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரை வந்து தம் கொள்கையை மக்களிடையே பரப்பினார். நேதாஜி அமைத்த போர்க்குழுவில் தேவரும் இடம் பெற்றார்.

1946 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆந்திர கேசரி பிரகாசம் இவரைத் தொழிலமைச்சராகப் பதவி ஏற்குமாறு இருமுறை வற்புறுத்தியும் இவர் இணங்கினாரில்லை. இந்நிகழ்வுகளால் இவருக்குப் பதவி ஆசை அறவே இல்லை என்பது கண்கூடு.

இவர் இப்புவியில் வாழ்ந்த காலம் 55 ஆண்டுகள்தாம். ஆனால் சிறையில் வாடியதோ 10 ஆண்டுகளுக்கு மேல். இவரது அருந்தொண்டினைக் காணப் பொறுக்காத காலன் 30.10.1963 அன்று இப்பூவுலகை விட்டே அபகரித்துச் சென்றான்.

ஒரு பக்கம் நாட்டு விடுதலைக்காகப் போராடியவராகச் செயல்பட்டாலும் மறுபக்கம் சிறந்த முருக பக்தராகவும் ஆன்மீகவாதியாகவும் விளங்கினார் தேவர்.

பஸ் போச்சு; எரிப்பதற்கு ஏர்பஸ் வந்தாச்சு

Posted in Arms, Assassin, Assassination, Assassinations, Belief, Biosketch, Bloc, Brahmins, Caste, Chandrabose, Community, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Convict, Correctional, Courts, Dalit, dead, Emmanuel, employees, Faces, Faith, FB, FC, Forward Bloc, Forward Block, Freedom, Gandhi, Harijans, Hinduism, Hindutva, History, Immanuel, Independence, Jail, Jameen, Judge, Justice, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Karthik, Law, Madurai, Muthuramalinga, Muthuramalingam, Nethaji, Oppression, Order, people, Prisons, Rajaji, Religion, Sathiamoorthy, Sathiamurthy, Sathiyamoorthy, Sathiyamurthy, Shubash, Subash, Temple, Thevar, War, Weapons, workers | 142 Comments »

Tamil Nadu Reservations for the Minority – Benefit Analysis by Dinamalar

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 23, 2007

.யாருக்கு பாதிப்பு?

தமிழக மக்கள் தொகையில் 11 சதவீதம் உள்ள முஸ்லிம், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஏழு சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பார்கள். ஆனால், தமிழக அரசு ஏழு சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி மொத்தம் ஆறு கோடியே 24 லட்சத்து ஐந்தாயிரத்து 679 மக்கள் உள்ளனர்.

  1. இதில், இந்துக்கள் ஐந்து கோடியே 49 லட்சத்து 85 ஆயிரத்து 79 பேர். அதாவது மொத்த மக்கள் தொகையில் 88.1 சதவீதத்தினர் இந்துக்கள்.
  2. முஸ்லிம்கள் மக்கள் தொகை 34 லட்சத்து 70 ஆயிரத்து 647. மொத்த மக்கள் தொகையில் 5.5 சதவீதம்.
  3. கிறிஸ்தவர்கள் மக்கள் தொகை 37 லட்சத்து 85 ஆயிரத்து 60. இது 6.06 சதவீதம்.

தற்போது தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில்,

  • ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு 19 சதவீதமும்,
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும்,
  • பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதமும்

பிரித்து வழங்கப்படுகிறது.

இந்த பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீதத்தில் இருந்து

  • ஏழு சதவீதத்தை பிரித்து முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும்,
  • கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் உள்ஒதுக்கீடு

அளிக்க தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது

.தற்போதுள்ள 37 லட்சம் கிறிஸ்தவர்களில் 65 முதல் 75 சதவீதம் பேர் மதம் மாறிய ஆதிதிராவிடர்கள். இவர்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தேசிய அளவில் போராடி வருகின்றனர். இதற்கான கமிஷன் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளும் பிரதமரிடம் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பிரிவினரை ஒதுக்கிவிட்டு பார்த்தால், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மொத்த மக்கள் தொகையில் இரண்டு சதவீதம் கூட இருக்க மாட்டார்கள். எனவே, மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில், தற்போது வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீடு மிகவும் அதிகமானதாகி விடும்.

இதேபோல, முஸ்லிம்களிலும் பல்வேறு பிரிவினர் உள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 5.5 சதவீதத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் என பிரித்து அவர்களுக்கு 3.5 சதவீத ஒதுக்கீடு வழங்கியிருப்பது, அந்த மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் இடஒதுக்கீடு வழங்குவது போலாகும்.

அதன்படி பார்த்தால், இந்துக்கள் 88.1 சதவீதத்தினர் உள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 23 சதவீத இடஒதுக்கீடு தான் கிடைக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இந்துக்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

தற்போதைய தமிழக அரசின் அவசரச் சட்டத்தால் இந்துக்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது போல, இந்துக்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும் என்பதே பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.

Posted in AA, AathiDravidar, ADMK, Affirmative, Affirmative Action, Analysis, Anthropology, BC, Benefit, Brahmins, Calculations, Caste, Castes, Census, Christianity, Christians, Community, Demography, Dinamalar, DMK, Dravidian, Education, Employment, FC, Islam, Jobs, MBC, minority, Muslims, OBC, Observations, OC, Op-Ed, Opportunity, Percentage, Population, Reservation, Reservations, SC, Social, Sociology, ST, Stats, Tamil Nadu, TamilNadu, TN | Leave a Comment »

Pupils go hungry in Bihar because cook is low-caste

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007

தலித் பெண் சமைத்த மதிய உணவை சாப்பிட மாணவர்களுக்கு தடை: பிகாரில் தொடரும் ஜாதிக் கொடுமை

சசாராம் (பிகார்), ஆக. 13: பிகாரில் அரசு நடத்தி வரும் தொடக்கப்பள்ளியில் தலித் பெண் சமைத்த மதிய உணவை மாணவர்கள் சாப்பிட பள்ளிக்குழு செயலர் கடந்த ஒரு மாதமாக தடை விதித்துள்ளார்.

21-ம் நூற்றாண்டிலும் இத்தகைய ஜாதிக் கொடுமைகள் நடப்பது சமூக நீதி ஆர்வலர்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரோடாஸ் மாவட்டத்தில் உள்ளது பிப்ரி கிராமம். உயர்ஜாதி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது.

இப்பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பணியை தலித் பெண் செய்து வருகிறார். இவர் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிடக் கூடாது என பள்ளிக் குழு செயலர் உமா சங்கர் திவாரி என்பவர் தடை விதித்துள்ளார்.

மகிளா சமாக்ய சங்கம் என்ற அரசு சாரா அமைப்பு பள்ளியில் மதிய உணவு தயாரிக்க தலித் பெண் நியமித்துள்ளது. அவர் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிட நான் அனுமதிக்க மாட்டேன் என உமா சங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மகிளா சமாக்ய சங்க ஒருங்கிணைப்பாளர் சிகா குமாரி கூறியது:

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிப்பதற்காக 3 தலித் பெண்களும் 2 மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்த பெண்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி செயலரிடம், மாணவர்களை மதிய உணவை சாப்பிட விடுங்கள் என பல முறை வற்புறுத்தியும் பலன் இல்லை. மாணவர்கள் தொடர்ந்து மதிய உணவு சாப்பிடாமல் செல்கின்றனர்.

திவாரியும் அவரது ஆட்களும் சமையல் கூடத்தை சேதப்படுத்தி சமையல் பாத்திரங்களையும் எடுத்து சென்று விட்டனர் என்றார்.

மனித வள துணை செயலர் ராஜேந்திர பிரசாத்துடன் பிப்ரி கிராமத்திற்கு திங்கள்கிழமை சென்று இது விசாரணை நடத்த உள்ளதாக மனித வள செயலர் எம்.எம். ஜா பாட்னாவில் கூறினார்.

இது குறித்து சதார் காவல் நிலையத்தில் திவாரிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகி விட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரச்னைக்குரிய பள்ளியில் 39 தலித் மாணவர்கள் உட்பட 87 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்காக நீண்ட விடுப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர் மீதும் பள்ளிக் குழு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Posted in Bihar, Caste, cook, Dalit, Eat, FC, Food, Hinduism, Hindus, Meals, Oppression | Leave a Comment »

Gujarat Elections: BJP & Narendra Modi – Caste Politics & Poll Calculations

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2007

குஜராத்தில் ஜாதி அரசியல் ஆதிக்கம்

ஆமதாபாத், ஆக.4: குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவில் ஜாதி அரசியல் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் ஜாதி அரசியல் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது.

மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா பாஜக என்ற கேள்வியும் குஜராத் அரசியலில் இதனால் எழுந்துள்ளது.

முந்தைய தேர்தல்களில் குஜராத்தில் ஜாதிய அரசியல் முக்கியத்துவம் பெற்றிருந்த போதிலும் அதைக் காட்டிலும் மத ரீதியிலான அரசியல் கடந்த 20 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தியது. இதற்கு முக்கிய காரணம் பாஜக போன்ற கட்சிகளால் உருவான ஹிந்துத்துவா அலையே ஆகும்.

ஆனால் தற்போது அந்த அலை குஜராத்தில் குறைந்து விட்டது என்றே சொல்லாம். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜாதி அரசியலே கோலோச்சும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் வாக்கு வங்கியாக கடந்த 20 ஆண்டுகளாக இருந்து படேல் ஜாதி இருந்து வந்தது என்று கூறலாம். ஆனால் அந்த ஜாதியில் உள்ள லோவா படேல் பிரிவினர் பாஜகவுக்கு எதிராக தற்போது திரும்பியுள்ளனர்.

இப் பிரிவினர் சர்தார் படேல் சமிதி என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக தாலுகா அளவில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். மாநிலத்தில் 102 தாலுகாவில் இதே போன்ற பிரசாரத்தை தேர்தலுக்கு முன்னதாக நடத்தி முடிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். குஜராத் மக்கள் தொகையில் படேல் ஜாதியினர் 20 சதவீதம் உள்ளனர்.

மோடிக்கு எதிரணியில் இருக்கும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கேசுபாய் படேல் லேவா படேல் பிரிவைச் சேர்ந்தவர். அண்மையில் பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 5 பாஜக எம்.எல்.ஏ.க்களும் அதே பிரிவைச் சேர்ந்தவர்கள்தான்.

படேல் ஜாதியில் மற்றொரு பிரிவு கத்வா படேல். இவர்கள் நரேந்திர மோடியை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கோலி ஜாதியினர் குஜராத் மக்கள் தொகையில் 15 சதவீதம் உள்ளனர். இந்த ஜாதியைச் சேர்ந்த பெண் கற்பழிக்கப்பட்டு கடந்த மே மாதம் கொலை செய்யப்பட்டார். குற்றவாளியை இதுவரை போலீஸôர் கைது செய்யவில்லை. இது அந்த ஜாதியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கோலி வகுப்பைச் சேர்ந்தவரான பாஜக எம்.பி. சோம படேல் முதல்வர் நரேந்திர மோடியின் எதிர்ப்பாளராகி விட்டார். முதல்வருக்கு எதிரான பொதுக்கூட்டங்களுக்கு அவர் பகிரங்கமாகவே ஏற்பாடு செய்துவருகிறார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்.பி.யான நளின் பட் பிராமணர்களை பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன் பொருட்டு அவர் விரைவில் கூட்டம் ஒன்றை கூட்ட இருப்பதாகவும் சொன்னார்.

இதனிடையே, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள காங்கிரஸ் கட்சி இப்போதே நடவடிக்கையை தொடங்கிவிட்டது.

தெற்கு, மத்திய குஜார் பிராந்தியத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர். காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்த அவர்கள் கடந்த 2002 தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பழங்குடியினர் வாக்குகளை மீண்டும் பெற காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் பேரணிகள், பொதுக்கூட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை எதிர்கொள்ளும் வகையில் பழங்குடியினருக்கு ரூ.13,000 கோடி அளவிலான திட்டங்களை தடாலடியாக நரேந்திர மோடி அரசு அறிவித்தது. இவ்வாறு பழங்குடியினர் வாக்குகளை கைப்பற்றுவதில் காங்கிரஸ்- பாஜக இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

குஜராத் மக்கள் தொகையில் சிறுபான்மையினர் 14 சதவீதம் பேர் உள்ளனர். அவர்கள் மதச்சார்பற்ற கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸின் வாக்கு வங்கியாக தொடர்ந்து இருந்து வருகின்றனர். சத்ரிய வகுப்பைச் சேர்ந்த சங்கர் சிங் வகேலா காங்கிரஸ் கட்சிக்கு சென்றதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு அந்த வகுப்பினரின் ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளது.

ஜாதி அரசியலின் ஆதிக்கம் குஜராத் அரசியலில் ஆட்சி மாற்றத்தை இந்த முறை ஏற்படுத்தும் வாய்ப்பை மறுப்பதற்கு இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். பாஜக தரப்பில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர். காங்கிரஸ் ஆட்சி குஜராத்தில் மீண்டும் மலரும் என்கின்றனர் அக்கட்சியினர்.

Posted in Assembly, BC, BJP, Brahmins, Cabinet, Caste, Community, Conflict, Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Divide, Elections, FC, forecasts, Gujarat, Mandal, Modi, Narendra, OBC, Party, Patel, Politics, Polls, Religion, SC, Sect, Sectarian, ST, Tribes, Vote, voters | 1 Comment »

Thirumavalavan – Dalits entry into Salem Kanthampatty Temple

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில்
ஆகஸ்டு 6-ந் தேதி ஆலயப் பிரவேச போராட்டம்
திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, ஜுலை.18-

சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி தடைகளை தாண்டி உள்ளே நுழையும் ஆலயப் பிரவேச போராட்டம் செய்ய போவதாக திருமாவளவன் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் கிராமப்புற கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களிலும் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கும், வழிபாடு செய்வதற்கும் உரிமை வழங்கி தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுசெயலாளர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான கோவில்கள் இந்து அற நிலையத்துறைக்கு சொந்தமானவை. ஆனால் அந்த கோவில்களில் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத நிலை உள்ளது.

சாமிக்கும் ஜாதி

காந்தியடிகள் காலத்தில் அனைத்து சாதியினரும் கோவிலில் நுழைந்து வழிபடுவதற்கு கோவில்களை திறந்து விட சொன்னது வரலாறு. அப்போது, தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எ.எஸ்.வைத்தியநாத அய்யர் தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம் செய்தனர்.

ஆனால் 60, 70 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் கூட, கிராமப்புறங்களில் உள்ள அம்மன், சிவன், அய்யனார், முருகன் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை. சாதீய வன்கொடுமை இன்னும் தலைவிரித்தாடுகிறது.

சேலம் மாநகரத்தில், கந்தம்பட்டியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை தன் வசம் எடுத்துக் கொண்டது. ஆனால் அந்த கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைந்து வழிபாடு செய்ய அனுமதி இல்லை. இந்து மதத்தில் மட்டும்தான் சாமிக்கும் ஜாதி சாயம் பூசுகின்ற கொடுமை நடக்கிறது.

புதிய சட்டம்

சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி என்னுடைய தலைமையில் தடைகளை தாண்டி கோவிலுக்குள் நுழைய இருக்கிறோம். ஆயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் இந்த ஆலய பிரவேச போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் அந்த நிலைமை ஏற்படாதவாறு அதற்கு முன்னதாக, அனைத்து சாதியினரும் அனைத்து கோவில்களிலும் நுழைந்து வழிபடுவதற்காக புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.

சிதம்பரம் கோவில்

கோவில்களுக்கு சொந்தமான 12 லட்சம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி, நிலமற்ற விவசாயிக்கு 2 ஏக்கர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வழங்கவேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் தமிழில் வழிபாடு செய்ய முடிவதில்லை. தேவாரம் போன்ற திருமறைகள் பாடுவது தடுக்கப்படுகிறது. அனைத்து கோவில்களிலும் தமிழில் வழிபடும் கட்டாயத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள், பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Posted in Caste, CE, Chidamabram, Chidambaram, Chidhambaram, Community, Dalit, Dalits, Dhroupathy, Drowpathy, FC, Fight, God, Hindu, Hinduism, Kandhambatty, Kandhampatty, Kanthambatty, Kanthampatty, Liberation, Metro, Oppression, Panchaali, Panjali, Poor, Ravikkumar, Ravikumar, Religion, Rural, Salem, SC, Sidhambaram, ST, Temple, Thiruma, Thirumavalavan, Thol, Throupathy, Viduthalai, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Viduthalai Siruthaikal, Village, Vituthalai Chiruthaigal, Vituthalai Chiruthaikal, Vituthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | Leave a Comment »

MBBS, BDS merit list released – Details, Statistics, Admission results

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவு “கட்-ஆப் மார்க்’ 197: மாவட்டங்களைச் சேர்ந்த 7 மாணவர்கள் 200-க்கு 200

சென்னை, ஜூன் 28 : தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் (2007-08) மாணவர்கள் சேருவதற்கு

‘கட்-ஆஃப் மார்க்’ விவரம்:

  1. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான “கட்-ஆஃப் மார்க்’ 197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 194.50;
  3. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 191.75;
  4. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் – 187.25;
  5. பழங்குடி வகுப்பினர் – 179.

மாவட்டங்களுக்கே சிறப்பிடம்:

ராசிபுரம், நாமக்கல், ஓசூர், கோவை, மார்த்தாண்டம் (கன்னியாகுமரி), பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 வாங்கி முதல் ஏழு சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் ஏழு பேரும் எம்.பி.பி.எஸ். ரேங்க்கை நிர்ணயம் செய்யும் இயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் 200-க்கு 200 பெற்றவர்கள்.

14 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ரேங்க் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் புதன்கிழமை வெளியிட்டுக் கூறியதாவது:-

1,552 எம்.பி.பி.எஸ். இடங்கள்:

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் மேலே சொன்ன மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 154 எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 1,552 இடங்களுக்கு ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி வழக்குத் தொடர்ந்துள்ளதால், அந்தக் கல்லூரியில் உள்ள 98 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இந்த ரேங்க் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

பி.டி.எஸ். (பல் மருத்துவப் படிப்பு):

சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள் மற்றும் 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு 326 பி.டி.எஸ். இடங்களுக்கும் சேர்த்து ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ரேங்க் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்”” என்றார் அமைச்சர் ராமச்சந்திரன்.

———————————————————————————————–

2004-ல் பிளஸ் 2; 2007-ல் எம்.பி.பி.எஸ்.: பொள்ளாச்சி மாணவர் சாதனை

பொள்ளாச்சி, ஜூன் 28: நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக, தான் கனவு கண்டபடி மூன்று ஆண்டுகள் கழித்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சிறப்பிடம் பெற்று நுழைந்துள்ளார் பொள்ளாச்சி மாணவர் ஜி.கே. அஸ்வின்குமார்.

பிளஸ் 2 முடித்த பிறகு பல் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தும் அதில் சேராமல் 3 ஆண்டுகள் காத்திருந்தார் இவர்.

சென்னையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 கூட்டு மதிப்பெண் பெற்று 7-வது சிறப்பிடத்தைப் பெற்றுள்ளார்.

பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்தவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன். பெத்தநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிகிறார். அவரது மகன் ஜி.கே.அஸ்வின்குமார். கடந்த 2003-04-ல் பொள்ளாச்சியில் உள்ள பி.வி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார்.

அப்போது அவர் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 1169.

சம்ஸ்கிருதம் 196, ஆங்கிலம் 183, கணிதம் 190, இயற்பியல் 200, வேதியியல் 200, உயிரியல் 200. ஆக, மருத்துவ படிப்புக்கான கூட்டு மதிப்பெண்ணாக 200-ஐ வைத்திருந்தார்.

இதில் கடந்த 2 முறை நுழைவுத் தேர்வு எழுதியதில் ஒருமுறை பல் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தது.

ஆனால் அஸ்வின்குமார் அதில் சேரவில்லை. ஒரு முறை நுழைவுத் தேர்வு எழுதவில்லை.

இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு ரத்தாகி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதில் அஸ்வின்குமார் தமிழக அளவில் 7-வது ரேங்க் பெற்றுள்ளார். மருத்துவக் கல்வியில் முன்னோடியாக விளங்கும் சென்னை மருத்துவக் கல்லூரியை கவுன்சலிங்கில் அவர் தேர்வு செய்யும் நிலையில் இடம் கிடைக்கும்.

மருத்துவப் படிப்பு முடித்து இதய அறுவைச் சிகிச்சையில் தனித்துவம் பெற்ற மருத்துவராவதுதான் தனது எதிர்காலத்திட்டம் என்று அஸ்வின்குமார் தெரிவித்தார்.

வயது வரம்பு கிடையாது:

நுழைவுத் தேர்வு ரத்து, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு கிடையாது என்பதால் அஸ்வின்குமார் போன்று கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில் அதிக கூட்டு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் இந்த ஆண்டு பலன் அடைந்துள்ளனர்.

இத்தகைய மாணவர்கள் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அதிகமாக எடுக்காததால் கடந்த ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியவில்லை.

எம்.பி.பி.எஸ்.-ஐப் போன்று பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கவும் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. எனவே நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் பலர் பி.இ. ரேங்க் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு உண்டு எனக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

———————————————————————————————–
எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல்: பயன் தராத ரேண்டம் எண்

சென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவோருக்கு கம்ப்யூட்டர் மூலம் அளிக்கப்பட்ட சிறப்பு எண் (ரேண்டம் நம்பர்) எந்தப் பயனையும் அளிக்கவில்லை.

நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டதால், மாணவர் அட்மிஷனுக்கு புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்துப் பாடங்களிலும் சமமான மதிப்பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்டோர் பெற்றிருந்தால், அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது பிறந்த தேதி அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அதிலும் சமமாக இருந்தால், கம்ப்யூட்டர் சிறப்பு எண் (ரேண்டம் நம்பர்) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இதற்காக, விண்ணப்பித்தோருக்கு சில வாரங்களுக்கு முன் கம்ப்யூட்டர் மூலம் சிறப்பு எண் தரப்பட்டது. இவர்களில் யாருடைய எண் பின்னால் வருகிறதோ அவருக்கு முன்னுரிமை அளிப்பது என்றும் அரசு அறிவித்திருந்தது.

“”இரு மாணவர்கள் மட்டுமே சமமான மதிப்பெண்ணைப் பெற்றிந்தனர். எனினும், அவர்கள் இருவரும் அதிகமான மதிப்பெண் பெற்றிருந்ததால், அரசுக் கல்லூரியில் அவர்களுக்குத் தாராளமாக இடங்கள் கிடைத்துள்ளன. இதனால் ரேண்டம் எண் அடிப்படையில் அவர்களை மதிப்பிடத் தேவையே ஏற்படவில்லை” என்று மருத்துவக் கல்வி வட்டாரம் தெரிவித்தது.

மாநிலம் முழுவதும் 14 அரசுக் கல்லூரிகளிலும், 3 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மொத்தம் 1,552 இடங்கள் உள்ளன.

———————————————————————————————–
எம்.பி.பி.எஸ். : ஒரு மார்க் வித்தியாசத்தில் 74 பேர்

சென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான ரேங்க் பட்டியலில் கூட்டு மதிப்பெண் 200-க்கும் 199-க்கும் இடையே 74 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டு மதிப்பெண்ணில் ஒவ்வொரு 0.25 மதிப்பெண்ணுக்கும் இடையே ரேங்க் பட்டியலில் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மருத்துவப் படிப்பில் சேர

  • 200-க்கு 200 கூட்டு மதிப்பெண்ணை மாவட்டங்களைச் சேர்ந்த 7 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • இதற்கு அடுத்தபடியாக 199.75 கட்-ஆஃப் மார்க்கை 12 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • 199.50 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 17 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • 199.25 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 13 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • 199 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 25 மாணவர்கள் வாங்கியுள்ளனர்.
  • ஆக, கட்-ஆஃப் மார்க் 200-க்கும் 199-க்கும் இடையில் ஒரு மார்க் வித்தியாசத்தில் 74 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கட்-ஆஃப் மார்க் 199-க்கும் 198-க்கும் இடையே மட்டும் 114 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். மாநில அளவில் முதலிடம் பெற்ற சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவி எஸ். ரம்யாவின் மருத்துவப் படிப்புக்கான கூட்டு மதிப்பெண் 198.25. எனவே அவர் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பிறகு இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.பி.எஸ். படிப்பில் பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 197 என்பதால், கூட்டு மதிப்பெண் 196.5, 196, 195 என வாங்கியுள்ள பொதுப் பிரிவு மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
———————————————————————————————–
எம்.பி.பி.எஸ். : முதல் 7 ரேங்க் பெற்றவர்கள்

சென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் நாமக்கல், கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் 200-க்கு 200 கூட்டு மதிப்பெண் பெற்று சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர்.

ஒரு சென்னை மாணவர்கூட 200-க்கு 200 மதிப்பெண் பெற்று சிறப்பிடத்தைப் பெறவில்லை.

ரேங்க் வாரியாக சிறப்பிடம் பெற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளி குறித்த விவரம்:

1. பி. பிரவீண்குமார், எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்;

2. ஆர். நித்யானந்தன், குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்;

3. எம். கார்த்திகேயன், மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, ஓசூர்;

4. எச். மீனா, அவிலா கான்வென்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, வெங்கிடாபுரம், கோவை;

5. சி. ஜெரீன் சேகர், குட் ஷெபர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி;

6. எஸ். தாசீன் நிலோஃபர், எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்;

7. ஜி.கே. அஸ்வின் குமார் (படம்), பி.வி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி.
———————————————————————————————–

Posted in Admission, backward, BC, BDS, candidates, Caste, Chennai, Colleges, Competition, Cut-off, Cutoff, Dental, Dentist, Details, Doctor, Education, eligibility, Evaluation, FC, Health, Healthcare, Info, IRT, Madras, Marks, MBBS, MD, medical, Medicine, Merit, MMC, Moogambigai, Moogambikai, Mookambigai, Mookambikai, OBC, OC, Perunthurai, Porur, PSG, Ramachandra, Random, Rasipuram, Reservation, Results, SC, selection, self-financing, ST, Statistics, Statz, Students, Study, University | Leave a Comment »

State of the BJP in Madhya Pradesh – Uma Bharti, BJS, Dalit, Bypolls

Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2007

ம.பி. பாரதீய ஜனதாவில் அதிருப்தி பரவுகிறது

போபால், ஜூன் 27: “”பிஜ்லி, சடக், பானி” (பி.எஸ்.பி.) என்ற 3 பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த பாரதீய ஜனதா கட்சிக்குள் இப்போது அதிருப்தி புகைந்து கொண்டிருக்கிறது.

மின்சாரம், சாலை, குடிநீர் ஆகிய இம் மூன்றையும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்க பாரதீய ஜனதா அரசால் முடியவில்லை. சட்டம், ஒழுங்கு நிலைமையிலும் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை. விலைவாசியும் கட்டுப்படுத்தப்படாமல் உயர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்த சித்தி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலிலும், சிவபுரி சட்டப் பேரவை இடைத் தேர்தலிலும் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் தோற்றுள்ளனர்.

கட்சியில் விசுவாசமான தொண்டர்கள் மதிக்கப்படுவதில்லை, மாற்றுக் கட்சிகளிலிருந்து வருகிறவர்களும், பணம்-செல்வாக்கு உள்ளவர்களும்தான் கவனிக்கப்படுகின்றனர் என்ற அதிருப்தி கட்சித் தொண்டர்களிடம் உள்ளது. அதை அவர்கள் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர். எனவே தேர்தல் வேலைகளில் அவர்கள் உற்சாகம் காட்டுவதில்லை. அரசு அதிகாரிகள் தொண்டர்களை மதிப்பதே இல்லை.

உமா பாரதி, பாபுலால் கெüர் ஆகியோருக்குப் பிறகு சிவராஜ் சிங் செüஹான் முதலமைச்சர் பதவிக்கு வந்திருக்கிறார். உமா பாரதியின் கட்சிக்கு அமோக செல்வாக்கு வந்துவிடவில்லை என்றாலும் தேர்தல்களில் பாரதீய ஜனதாவின் வாக்குகளைப் பிரித்து அதைத் தோல்வி அடையச் செய்யும் செல்வாக்கு அதற்கு இருப்பதையே சித்தி, சிவபுரி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

புதிய அணி சேர்ப்பு:

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்குக் கிடைத்துள்ள வெற்றியால் மத்தியப் பிரதேசத்திலும் புதிய அணி சேர்ப்பு நடக்கிறது. முற்பட்ட வகுப்பினர் தலித்துகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெறுவது குறித்துச் சிந்தித்து வருகின்றனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது, சட்டம், ஒழுங்கை அமல் செய்வதிலிருந்து தவறியது, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை விரிவுபடுத்தத் தவறியது என்று பாரதீய ஜனதா அரசு மீது அடுக்கடுக்காகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த அரசு பதவிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆட்சிக்கு எதிரான உணர்வு மக்களிடம் வேரூன்றி வருகிறது. அடுத்த தேர்தலில் மாற்றுக் கட்சி என்ன என்று பார்க்கும் தேடலில் மக்கள் மனத்தைச் செலுத்தி வருகின்றனர். பாரதீய ஜனதாவுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரே விஷயம், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸýக்குள் இப்போது ஒற்றுமை இல்லை. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பான தலைவர் அங்கு இல்லை.

பாரதீய ஜனதாவின் மாநிலத் தலைவர் நரேந்திர சிங் தோமார், முதல்வர் சிவராஜ் சிங் செüஹான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தும் இடைத் தேர்தலில் சித்தி, சிவபுரி தொகுதிகளில் கட்சி பெற்றுள்ள தோல்வி தலைமையைக் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. எஞ்சியுள்ள ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிலைமையைச் சீர்திருத்தும் ஆற்றல் முதல்வருக்கு இருப்பதுபோலத் தெரியவில்லை.

Posted in Alliance, Assembly, Babulal, Bhander, Bharathiya Jan Shakthi, Bharathiya Jan Shakti, Bharathy, Bharatiya Jan Shakthi, Bharatiya Jan Shakti, Bharatiya JanShakti, bhopal, BJP, BJS, BSP, by-elections, Caste, Center, Chauhan, Congress, Dabra, Dalit, Deosar, Dhauni, Drink, Elections, Electricity, FC, Gantantra, GGP, Gondwana, Gondwana Gantantra, Gondwana Gantantra Party, Govt, Gwalior, Inflation, JanSakthi, JanSakti, JanShakthi, JanShakti, Law, Lok Saba, LokSaba, LokSabha, Madhya Pradesh, MadhyaPradesh, Manifesto, Mid-term, midterm, MLA, MP, Necessity, OC, Order, Party, Polls, Power, Reserved, Roads, RSS, SC, Scindia, Shivapuri, Shivpuri, Shivraj, Shivraj Singh Chauhan, siddhi, Sidhi, Sithi, Sivapuri, Sivarajsingh, Sivpuri, ST, State, Transport, Transportation, tribal, Udaipura, Uma, Uma Bharathi, Uma Bharathy, Uma Bharthi, Uma Bharti, UP, Water, Yashodhara | Leave a Comment »

Bringing caste into equation for the Visually Challenged: Government’s Discrimination with Reservations for the Blind

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2007

அரசின் “பார்வை’ சரியா?

சென்னை, ஜூன் 17: பார்வையற்றவர்களில் ஜாதிப் பிரிவுண்டா? உண்டு என்கிறது இந்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை.

இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை, பார்வையற்றவர்களின் மத்தியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது அதிர்ச்சி தரும் செய்தி.

உடல் ஊனமுற்றோர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது வரவேற்கத் தக்கது. இந்தியாவில் 2.5 கோடி ஊனமுற்றோரில் 12 லட்சம் பேர் கண்பார்வை அற்றவர்கள். இந்தக் கண்பார்வை அற்றோரில் “பிரெய்லி’ மொழி மூலம் படித்தவர்கள் பலர் உள்ளனர். படிக்காதவர்களும் உள்ளனர்.

கடந்த 1982 முதல் அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் பார்வையற்றோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கை மனிதநேயத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு: அரசு வேலைகளில் பார்வையற்ற, உடல் ஊனமுற்றவர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், ஒரு சதவீதம் பார்வையற்றோருக்கும், ஒரு சதவீதம் உடல் ஊனமுற்றோருக்கும், மீதமுள்ள ஒரு சதவீதம் மனவளர்ச்சி குன்றியோருக்கும் வழங்கப்படுகிறது.

இதேபோன்று, அரசு கல்வி நிறுவனங்களில் மொத்தமுள்ள 4 சதவீத இட ஒதுக்கீட்டில், பார்வையற்றோருக்கு 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

பார்வையற்றவருக்கான இட ஒதுக்கீடு பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொதுப் பிரிவு என்ற நிலையில் வழங்கப்படுகிறது. பொதுப் பிரிவில் உயர் வகுப்பைச் சேர்ந்த பார்வையற்றவர்கள் வருகிறார்கள்.

“இட ஒதுக்கீட்டில் பாகுபாடு?’

இதன் மூலம், ஒருவர் பார்வையற்றவராகவும், பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவராகவும் இருந்தால்தான் அவருக்கு இட ஒதுக்கீடு உறுதி. பிற வகுப்பைச் சேர்ந்தவர் என்றால் அவருக்கு இட ஒதுக்கீட்டில் இடம் கிடையாது.

பார்வையற்றவர்கள் எல்லோரையும் ஒரே பிரிவாகக் கருதாமல் அவர்களுக்கு மத்தியிலும் ஜாதிப் பாகுபாட்டை ஏற்படுத்தி பேதப்படுத்துவது மனித நேயமே இல்லாத கண்மூடித்தனம்.

“”பார்வையற்றவர்களை உயர் வகுப்பினர், பின்தங்கிய வகுப்பினர் எனப் பிரித்து ஜாதி அடிப்படையில் கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிர்ணயிப்பது நியாயம் இல்லை என்கிறார் “நந்தினி வாய்ஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர் எஸ்.என். வெங்கட்ராமன்.

இது குறித்து, தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியும் எந்த பதிலும் வரவில்லை என்றார் வெங்கட்ராமன்.

இட ஒதுக்கீட்டில் மாற்றம் வருமா?

ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதால், திறமையிருந்தும் வேலை கிடைக்காத நிலையில் பார்வையற்றோர் பலர் உள்ளனர். இதனால், ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. பார்வையற்றோரில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் என வகைப்படுத்தாமல் தகுதியும் திறமையும் உள்ள அனைவருக்கும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது என்னங்க நியாயம்?

தொலைபேசி பேசுவதற்காக வருவோரிடம் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார் சென்னை தி. நகரில் பிசிஓ நடத்தும் பார்வையற்றவரான மீனாட்சி சுந்தரி.

அந்தப் பேச்சில் தன்னம்பிக்கை மிளிர்கிறது. ஆனால், அருகே சென்று பேசினால், இந்த நம்பிக்கை பல சமயங்களில் உடைக்கப்படுவதாக சோகத்துடன் கூறுகிறார் மீனாட்சிசுந்தரி. அதுவும் அரசின் இட ஒதுக்கீட்டால் என்கிறார்.

மீனாட்சிசுந்தரி பிறந்த 6 மாதங்களுக்குள் காய்ச்சல் காரணமாக கண் பார்வை இழந்தார். தூத்துக்குடியில் பிறந்த அவர், தனது பள்ளிப் படிப்பை பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் படித்தார்.

தொடர்ந்து விடாமுயற்சியுடன் கல்வியைத் தொடர்ந்த அவர் பட்டப்படிப்பு வரை படித்தார். “”கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் உயர் கல்வி நிறுவனத்தில் இளங்கலை ஆங்கிலம் படித்தேன். இதன்பின், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் படித்தேன்.

1989-ல் பட்டப்படிப்பை முடித்த பின்பு, சென்னை வந்தேன். சுருக்கெழுத்து மற்றும் தொலைபேசி ஆபரேட்டர் பயிற்சியில் சேர்ந்தேன். இரு பயிற்சிகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்” எனக் கூறும் மீனாட்சி சுந்தரி, தொலைபேசி ஆபரேட்டராக 2 வருடங்கள் அனுபவம் பெற்றுள்ளார்.

“”இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தொலைபேசி ஆபரேட்டர் வேலைக்கு விண்ணப்பித்தேன். தகுதியிருந்தும் மறுக்கப்பட்டது. ரயில்வே துறை ஏராளமான எழுத்தர் வேலைகளுக்கு விண்ணப்பித்தேன். அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்குள் நான் வரவில்லை. காரணம், உயர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதுதான்” என்றார் மீனாட்சி சுந்தரி.

இவரைப் போன்று இன்னும் எத்தனை பேர் இருக்கின்றனரோ? பார்வையற்றவர் மீதான அரசின் இந்தப் பார்வை சரியா?

Posted in AA, Action, Affirmative, Applicant, Aryan, Autism, BC, Blind, Braille, Caste, Challenged, Colleges, Community, Denial, Development, Disabled, Discrimination, Disease, Disorder, disturbed, Dravidian, Education, EEO, Employment, Equal, Eyes, FC, Forward, Govt, Handicapped, Health, Ill, Jobs, MBC, Mental, Merit, NGO, OBC, OC, Opportunity, PCO, prejudice, psychological, Qualification, Race, Reservation, SC, Schizophrenia, Schools, service, sightless, Society, ST, Students, Study, Treatment, University, Vision, Volunteer | Leave a Comment »

Rajasthan CM – Gujjars talks: Quota’s macabre face in Rajasthan Gujjar ire and police brutality

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மீனா சமூகத்தினர் எதிர்ப்பு

ஜெய்ப்பூர், மே 30: பழங்குடியினர் பட்டியலில் குர்ஜார் சமூகத்தினரைச் சேர்த்தால் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மீனா சமூகத்தினர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

‘ராஜஸ்தானில் மீனா சமூகத்தினர் மட்டுமே பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். அதில் பிற பிரிவினரைச் சேர்ப்பதை ஏற்க முடியாது. அவ்வாறு சேர்ப்பதைத் தடுக்க எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக தியாகங்களைச் செய்ய தயாராக உள்ளனர்’ என்று ராஷ்ட்ரீய மீனா மகாசபை தலைவர் பன்வர் லால் மீனா கூறினார்.

குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் வசுந்தரா ராஜே அரசு சேர்த்தால் அவர் மீண்டும் பதவிக்கு வர முடியாது என்றும் அவர் கூறினார்.

தௌசா, பண்டி மாவட்டங்களில் நடந்த தீவைப்பு சம்பவங்களுக்கு மீனா சமூகத்தைச் சேர்ந்த காவல்துறையினரே காரணம் என்று கூறப்படுவது குறித்து கேட்டபோது, “இது ஆதாரமற்ற, முட்டாள்தனமான குற்றச்சாட்டு” என்றார்.

———————————————————————————————-
07.06.07 ஹாட் டாபிக்
குமுதம் ரிப்போர்ட்டர்
நேற்று நந்திகிராம்
இன்று ராஜஸ்தான்

தொடரும் துப்பாக்கிச்சூடு கலாசாரம்

இருள் விலகி கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது. சரக்கு லாரிகளும், ஏர் பஸ்களும் சீரான இடைவெளியில் ராஜஸ்தான் மாநிலம் தௌசாவின் _ ஜெய்ப்பூர் _ ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தன. அத்தனை அதிகாலையில் அந்த நெடுஞ்சாலையில் திடீரென பொதுமக்கள் குழும ஆரம்பித்தனர். பேருந்தில் சென்றவர்கள் எல்லாம் ஒன்றும் புரியாமல் யோசித்தபடியே சென்று கொண்டிருந்தனர். அதிகாலை ஐந்து மணிக்கு வெறும் நான்காயிரம் பேர்தான் கூடியிருந்தனர். அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் பொதுமக்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்தது.

விஷயம் கேள்விப்பட்ட காவல்துறை, சம்பவ இடத்துக்கு விரைந்தது. என்ன ஏது என்று விசாரித்ததில் அவர்கள் எல்லாம் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் தங்கள் இனத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபடவே குழுமியிருப்பதாகவும் தெரிய வந்தது. அவ்வளவுதான். அடுத்த அரை மணி நேரத்தில் தடியடி. கண்ணீர்ப் புகை. துப்பாக்கிச்சூடு. கலவரம். ரத்தத் தெறிப்பு. எல்லாம் வரிசைக்கிரமமாக நடந்தது. இரண்டு காவலர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக பதினான்கு உயிர்கள் காவு வாங்கப்பட்டன.

நந்திகிராமத்தில் நடந்ததற்குக் கொஞ்சமும் சளைக்காமல் நடந்துள்ள இந்தச் சம்பவம் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. துணை ராணுவப்படை எல்லாம் குவிக்கப்பட்டுள்ளது. பதற்றம் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது. ராஜஸ்தானின் முக்கிய மாவட்டங்களான டோங்க், ஜெய்ப்பூர், தௌசா, புண்டி, சவாய் மதோபூர், கரௌலி ஆகியவற்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? யார் இந்த குஜ்ஜார் மக்கள்? அவர்களுடைய பின்னணி என்ன?

குஜ்ஜார் என்பது கிழக்கு ராஜஸ்தானில் அதிக அளவில் வசிக்கும் மக்களின் இனப்பெயர். குர்ஜார் என்றும் சொல்வார்கள். இவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, ஒசாமா பின்லேடன் புகழ் ஆப்கானிஸ்தானிலும் இருக்கிறார்கள். பர்வேஸ் முஷாரப் இருக்கும் பாகிஸ்தானிலும் இருக்கிறார்கள். இந்த இனத்தில் சுமார் ஐநூறு உட்பிரிவுகளும் இருக்கின்றன. ஆரம்பத்தில் குஜ்ஜார் இனத்தில் இந்துக்கள் மட்டும்தான் இருந்தனர். பின்னர், அராபிய முஸ்லிம்கள் இந்த இனத்தால் கவரப்பட்டு, அந்த இனத்தோடு உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதன்பிறகு, தங்கள் பெயரோடு குஜ்ஜார் என்பதையும் சிலர் இணைத்துக் கொண்டனர். உதாரணம் குஜ்ரன் வாலா, குஜார் கான். இதனால் இந்தியாவில் இந்த இனம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிந்தது. இந்து குஜ்ஜார்கள், முஸ்லிம் குஜ்ஜார்கள். இவை எல்லாமே எட்டாம் நூற்றாண்டில் இருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை நடந்த சங்கதிகள்.

இந்தியாவில் மட்டும் இந்த இன மக்களின் எண்ணிக்கை மூன்று கோடியைத் தாண்டும். இவர்கள் அனைவருக்கும் பொதுவான மொழி கோஜ்ரி. ஆனால், தாங்கள் வசிக்கும் இடத்தில் என்ன மொழி புழக்கத்தில் இருக்கிறதோ, அதைப் பழகிக் கொண்டனர். சர்தார் வல்லபபாய் படேல், இந்தர் குமார் குஜ்ரால், ஃபக்ருதீன் அலி அகமது, ராஜேஷ் பைலட் ஆகிய அரசியல் ஜாம்பவான்கள், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் போன்றோர் இந்த இனத்தவர்கள்தாம். இந்த இன மக்களின் முக்கியத் தொழில் விவசாயம், மாடு வளர்ப்பு, பால் விற்பனை.

கிழக்கு ராஜஸ்தானில் மிகப்பெரிய வாக்கு வங்கியைக் கொண்டுள்ள இவர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள். கண்ணை மூடிக் கொண்டு கை சின்னத்துக்கு வாக்களிப்பவர்கள். ராஜஸ்தானில் குஜ்ஜாரைப் போலவே மேலும் இரண்டு இனங்கள் இருக்கின்றன. ஜாட் மற்றும் மீனா. இவர்களில் ஜாட் இனத்தை 1999_ல் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தனர்.

ஏற்கெனவே தங்கள் இனம் அரசு வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுகிறது, ஜாட் இன மக்களே உயர்பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள் என்று மனம்புழுங்கிக் கொண்டிருந்த குஜ்ஜார் மக்களை, இந்த அறிவிப்பு சிந்திக்க வைத்தது. ‘இனிமேல் வேலைவாய்ப்பு விவகாரங்களில் ஜாட் இனத்தவரோடு போட்டி போட வேண்டியிருக்கும். இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்குச் சமம். ஆகவே, எங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துவிடுங்கள்’ என்று போராட ஆரம்பித்தனர்.

இந்தச் சமயத்தில்தான் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் வந்தது. அப்போது குஜ்ஜார் இனத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தான் உதவுவதாக வசுந்தரா வாக்குறுதி அளிக்கவே, அதுநாள்வரை காங்கிரஸை ஆதரித்த அவர்கள் தாமரைக்குக் கை நீட்டினர். ஆட்சிக்கு வந்தார் வசுந்தரா ராஜே. அவ்வளவுதான். அத்தோடு எல்லாவற்றையும் மறந்துவிட்டு தனது பணிகளில் பிஸியாகிவிட்டார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த குஜ்ஜார்கள் போராட்டத்தில் குதித்தனர். விளைவு.. இப்போது பன்னிரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதல் குறித்து குஜ்ஜார் சங்கர்ஷ் சமிதியின் தலைவர் பைய்ஸ்லா, “எங்கள் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகரானது’’ என்று கொதித்துள்ளார்.

“சாலை மறியலில் ஈடுபடுவது நமது போராட்ட முறைகளுள் ஒன்று. இதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தி மரண தண்டனை கொடுத்திருக்கிறது பா.ஜ.க. அரசு. இதற்குத் தகுந்த பதிலை அவர்கள் சொல்லியாக வேண்டும்’’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சின் பைலட். இவரும் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்தான்.

“நான் எந்த வாக்குறுதியையும் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்து, சரிசெய்யவேண்டிய விஷயம். இருந்தாலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளேன். இதுகுறித்து ஒரு முடிவெடுக்க குறைந்தது 15 நாட்களாவது அவகாசம் தேவை. அதுவரை பொறுமை காப்பது அவசியம்’’ என்று கூறியுள்ளார் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா.

ஆனால், இதுகுறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பாதவரை போராட்டம் நிறுத்தப்படாது என்று கூறியிருக்கின்றனர் குஜ்ஜார் அமைப்பினர்.

‘இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் விதமாக குஜ்ஜார் இனத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் நாங்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என்று திடீரென போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றனர் ராஜஸ்தானின் மீனா இன மக்கள். இவர்கள்தாம் ராஜஸ்தானில் இருக்கும் ஒரே பழங்குடியின மக்கள். ஆக, ஒரு பிரச்னையின் தீர்வு அடுத்த பிரச்னைக்கான ஆரம்பமாக இருக்கக்கூடாது. ஆகவே, மிகவும் எச்சரிக்கையாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ராஜஸ்தான் அரசு! ஸீ

– ஆர். முத்துக்குமார்

—————————————————————————-

அன்னியப்பட்ட ஆட்சியாளர்கள்!

நீரஜா சௌத்ரி – தமிழில்: சாரி

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜர் என்ற சமூகத்தவர் தங்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி, வன்செயல்களுடன் மேற்கொண்ட கிளர்ச்சி உச்ச கட்டத்தை அடைந்திருப்பதைப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து வருகிறோம்.

ஆண்டுக்கு 9.5% பொருளாதார வளர்ச்சியை எட்டிவரும் நாட்டில், 21-வது நூற்றாண்டில் கால்பதித்துள்ள நிலையில் நடைபெறக்கூடிய சம்பவங்கள் அல்ல இவை. ஆனால் அப்படிப்பட்ட சம்பவங்கள்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன.

அரசு வேலை வாய்ப்புக்காகத்தான் குஜ்ஜர்கள் திடீரென்று இப்படியொரு வன்முறைக் கிளர்ச்சியில் இறங்கினார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. அரசுப் பணியிலும் அரசுத் துறைகளிலும் மட்டும் அல்லாது தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அவசியம் என்று வலியுறுத்திவரும் நேரம் இது.

இட ஒதுக்கீட்டுக்காக இப்படி வன்முறையில் இறங்க வேண்டிய அவசியம் குஜ்ஜர்களுக்குக் கிடையாது. அப்படியானால் வன்செயல்கள் ஏன் நிகழ்ந்தன, அவர்களுடைய உண்மையான நோக்கம்தான் என்ன?

மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, பிற்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது என்று வி.பி. சிங் தலைமையிலான அரசு எடுத்த முடிவையடுத்து காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் பின்னாலிருந்து தூண்டிவிட்டு, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்தன.

ஆனால் பிறகு தேர்தலில் வெற்றிபெற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளும் அவசியம் என்பதால் காங்கிரஸ், பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே இட ஒதுக்கீட்டு கொள்கையை ஏற்று, அமல்படுத்த ஆரம்பித்தன.

ராஜஸ்தானில் ஜாட் சமூகத்தவருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அந்தஸ்தை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் அளித்தது.

இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று முதலில் தீர்மானித்த வி.பி. சிங்கால் கூட அமல்படுத்த முடியாத காரியம் அது. ஜாட் சமூகத்தவருக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகையை அளித்திருந்தால் தேவிலாலின் ஆதரவு வி.பி. சிங்குக்குத் தொடர்ந்திருக்கும், மத்திய ஆட்சியும் பிழைத்திருக்கும். வட இந்திய அரசியல் வரலாறுகூட மாறியிருக்கும்.

வாக்கு வங்கிகள் மூலமே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதால், இட ஒதுக்கீடு என்பதை இனி எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று புரிகிறது. நேற்று ஜாட் சமூகத்தவர் போராடிப் பெற்றனர். இன்று குஜ்ஜர்கள் போராடுகின்றனர். நாளை மற்றொரு சமூகம் போராடத் தொடங்கலாம்.

குஜ்ஜர்கள் சமீபகாலமாக மிகவும் கொந்தளிப்பாக இருக்கின்றனர் என்பது உண்மையே. ராஜஸ்தான் மாநில மக்கள் தொகையில் 5% ஆக இருக்கும் குஜ்ஜர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுகின்றனர்.

ஜாதீய அடுக்கில் மேலே உள்ள ஜாட்டுகளுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அந்தஸ்து தரப்பட்டதும், இட ஒதுக்கீட்டின்கீழ் வரும் பதவிகளையும் இடங்களையும் அவர்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டனர். எனவேதான் குஜ்ஜர்கள் இப்போது பழங்குடி அந்தஸ்து கேட்டுப் போராடுகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் இமாசலத்திலும் குஜ்ஜர்கள் பழங்குடி சமூகத்தவராகவே பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் ராஜஸ்தான் மக்கள் தொகையில் 10% ஆக இருக்கும் “”மீனா” வகுப்பினர், குஜ்ஜர்களுக்கு பழங்குடி அந்தஸ்து தரப்படுவதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். அப்படித் தந்தால் தங்களுக்குரிய இடம் குறைந்துவிடும் என்பதுதான் அவர்களுடைய அச்சம்.

தெüசா மாவட்டத்தில் மீனா-குஜ்ஜர் இடையிலான மோதலில் 8 பேர் இறந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் இவ்விரு சமூகத்தவரும் அருகருகில் வசிக்கின்றனர். இருவரும் க்ஷத்திரியர்கள். எனவே மோதல் தீவிரமானால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்னால், குஜ்ஜர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தவர் வசுந்தரா ராஜ சிந்தியா என்பது உண்மை. ஆட்சிக்கு வந்த பிறகு அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த விஷயம் குறித்துப் பரிசீலிக்க 18 மாதங்களுக்கு முன்னால் ஒரு கமிட்டியை நியமித்தார். அதைப்பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்புகூட வெளியிடப்படவில்லை. அந்தக் கமிட்டியில் இருக்கிறோம் என்பதே சில உறுப்பினர்களுக்குத் தெரியாது!

வாக்குறுதிகளைத் தருவதும் ஆட்சிக்கு வந்தபிறகு அதை மறப்பதும் ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை. ஆனால் சில அரசியல்வாதிகள், இப்படிப்பட்ட நிலைமை தோன்றியவுடனேயே சுதாரித்துக் கொண்டு, நிலைமை முற்றாமல் ஏதாவது செய்துவிடுவார்கள். ஆனால் வசுந்தராவோ அகந்தையின் உச்சத்தில் இருக்கிறார். அவரை கட்சித் தொண்டர்கள்கூட எளிதில் பார்க்க முடிவதில்லை.

தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயகத்தில் அனுமதித்துள்ளபடி கிளர்ச்சி செய்தனர் குஜ்ஜர்கள். ஆட்சியாளர்கள் சொல்லாமல் போலீஸôர் அடித்து நொறுக்கமாட்டார்கள். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிலருடைய மார்பிலே குண்டுகள் பாய்ந்துள்ளன. வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவதாக இருந்தால்கூட காலில்தான் சுட்டிருக்க வேண்டும்.

இச் சம்பவம் நடந்த 48 மணி நேரத்துக்குப் பிறகுகூட, “”கிளர்ச்சிக்காரர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என்று முதல்வர் பேசியிருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல இருந்தது. பிறகு பாரதீய ஜனதாவின் தேசியத் தலைவர்கள் தில்லியிலிருந்து அளித்த நெருக்குதல் காரணமாக, குஜ்ஜர் சமூகத் தலைவர்களுடன் பேச குழுவை நியமித்தார். பிறகு வழக்கமாக அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தார்.

இட ஒதுக்கீட்டின்படி ஒதுக்கிய இடங்கள் முழுவதையும் ஜாட் சமூகத்தவரே கைப்பற்றிவிடாமல் தடுக்க, பிகார் பாணியில் “”இணைப்பு 1”, “”இணைப்பு 2” என்று ஜாட்டுகளுக்கும் குஜ்ஜர்களுக்கும் தனித்தனியாக இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை அளித்திருக்கலாம். ஆனால் குஜ்ஜர்களும் இந்த இட ஒதுக்கீட்டை வேலைக்காக மட்டும் கேட்கவில்லை.

இப்போது ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பழங்குடிகளுக்கென்று 31 தனித் தொகுதிகள் உள்ளன. அவற்றை மீனாக்கள் பெற முடிகிறது. பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிலுமே சேர்த்து மொத்தம் 7 குஜ்ஜர்கள்தான் வெற்றிபெற முடிந்தது. இதனால் அரசியல்ரீதியாக அதிகாரம் செலுத்தும் இடத்தில் குஜ்ஜர்கள் இல்லை. இதற்காகத்தான் அவர்கள் தீவிரமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்திய சமுதாயத்திலே புதிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அரசியல் கட்சி வாரியாக மக்கள் இப்போது அணி திரள்வதில்லை. அவரவர் சமூகத்தின் பின்னணியில்தான் அணியாக உருவெடுத்து வருகின்றனர்.

கலிங்க நகர், சிங்கூர், நந்திகிராமம், தெüசா ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி உணர்த்துவது இதுதான். புதிய பொருளாதார வளர்ச்சியின் பலன் மக்களுக்குக் கிடைக்கவில்லை.

சமுதாயரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரே சமூகமான மக்கள் தங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டு உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் போராட ஆரம்பித்துள்ளனர்.

இதை உணரமுடியாத அளவுக்கு ஆட்சியாளர்கள் மக்களிடமிருந்து மிகவும் அன்னியப்பட்டு நிற்கின்றனர். இது நம்நாட்டு ஜனநாயக முறைக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

Posted in AA, abuse, Agitation, Ashok Gehlot, Assembly, Attack, Banjaras, BC, BJP, brutality, Caste, Community, Conflict, Congress, Crisis, Dausa, dead, Devi lal, Devilal, Education, EEO, Elections, Employment, FC, Gadia Lohars, Gujar, Gujjar, Gujjar Sangharsh Samiti, Gujjars, Himachal Pradesh, HP, institution, J&K, Jaipur, Jammu, Jammu & Kashmir, Jammu and Kashmir, Jobs, Karauli, Kashmir, Kirori Lal Meena, Law, Lohars, Mandal, Mathur, MBC, Meena, Meena-Gujjar, Meenas, Nadhigram, Nandhigram, Nandigram, OBC, OC, Order, Police, Polls, Power, Protest, Quota, Rajasthan, Raje, Rajnath, Rajnath Singh, Reservation, SC, scheduled tribes, Shiv Charan Mathur, ST, State, Talks, Tribes, UPA, Vasundhra, Vasundhra Raje, Violence, VP Singh | 3 Comments »

Uttar Pradesh Elections – Anlaysis: BSP, BJP, Congress, SP

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

உ.பி. மாநிலத் தேர்தல்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இந்த வாரம் தொடங்க இருக்கிறது. எனினும் இம் மாநிலத்தில் கட்சிகளிடையே பெரிய கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு பிரதானக் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரியாகக் கருதுவதே இதற்குக் காரணம். மிஞ்சிப் போனால் இக் கட்சிகள் மாநில அளவிலான சிறு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம்.

பாஜக இந்த வகையில் ஏற்கெனவே நடவடிக்கையில் ஈடுபட்டு அப்னா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடுகளைச் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. அப்னா தளம் என்பது அடிப்படையில் “குர்மிக்கள்’ எனப்படும் பிரிவினரின் கட்சியாகும். மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும் மத்திய பகுதியிலும் இப் பிரிவினர் பெருவாரியாக உள்ளனர். வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த சிறு கட்சியுடனும் பாஜக தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பினரின் கட்சி என்ற முத்திரையைத் தாங்கிய பாஜக, இந்த ஏற்பாடுகள் மூலம் பிற்பட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற முடியும் என்று கருதுகிறது. 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 88 இடங்களுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தது.

மற்றொரு அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ், உ.பி. தேர்தலில் யாருடனும் கூட்டணி சேரும் திட்டமில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் அக் கட்சி அதே மூச்சில் தொகுதி உடன்பாட்டுக்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது ஒருவேளை வி.பி.சிங்கின் ஆதரவு பெற்ற ஜனமோர்ச்சாவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம். அஜீத் சிங்கின் கட்சி, லாலு கட்சி ஆகியவற்றுடனும் இவ்விதம் தொகுதி உடன்பாடு காணப்படலாம். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 25 இடங்களை அதாவது மொத்த இடங்களில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்களையே பெற்றது. இந்தத் தடவை காங்கிரஸýக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்ல முடியாது.

இப்போது ஆளும் கட்சியாக உள்ள சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் இம் மாநிலத்தில் இரு பெரும் சக்திகளாக விளங்குகின்றன. இந்த இரு கட்சிகளுமே ஒன்றையொன்று பரமவைரிகளாகக் கருதுகின்றன. யாதவ் சமூகத்தினரிடையே செல்வாக்குப் பெற்ற முலாயம் சிங் அண்மைக்காலமாக மற்ற பல சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதில் முனைப்புக் காட்டி வந்துள்ளார். மாநிலத்தில் “வாட்’ வரித் திட்டம் அமலாக்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக முலாயம் சிங் கட்சியின் தோழமைக் கட்சியாக விளங்கி வந்த மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் முலாயம் சிங்குக்கு எதிரான எந்தக் கூட்டணியையும் ஆதரிப்பதில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும்.

மாயாவதியின் கட்சியானது தலித்துகளின் கட்சி என்று அறியப்பட்டதாகும். ஆனால் அண்மைக் காலமாக மாயாவதி தமது கட்சியானது அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். உயர் வகுப்பினர் பலரைத் தமது கட்சியில் சேர்த்துக் கொண்ட அவர், இப்போதைய தேர்தலில் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் தமது கட்சி சார்பில் உயர் வகுப்பினரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். இத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது அவரது நோக்கமாகும்.

உ.பி. மாநிலம் மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்டதாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் நிலையான ஆட்சி நிலவியதாகச் சொல்ல முடியாது. 2002 தேர்தல் மூன்று கட்டங்களில் நடைபெற்றது. இப்போதைய தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதால் தேர்தல் முடிவுகள் மே மாத இரண்டாவது வாரத்தில்தான் தெரிய வரும்.

===========================================================
உ.பி.யில் மாயாவதி போட்டியில்லை; மேல் சாதியினருக்கு அதிக தொகுதிகள்

லக்னெü, மார்ச் 14: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 பேரவைத் தொகுதிகளுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேல் சாதியினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிடவில்லை.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடையே மாயாவதி கூறியது:

உ.பி.யில் எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை.

நான் போட்டியிட்டால் சுற்றிலும் உள்ள தொகுதிகளில் இருக்கும் தொண்டர்கள் அங்கு வந்து பணியாற்ற விரும்புகிறார்கள். இதனால் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே நான் இப்போது போட்டியிடப் போவதில்லை. கட்சி வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு உறுப்பினர் எனக்காக விட்டுக்கொடுப்பார். பின்னர் இடைத்தேர்தல் மூலம் நான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார்.

அவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின்படி

  • 139 தொகுதிகள் மேல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்
  • 86 தொகுதிகள் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
  • 110 தொகுதிகள் பிற்பட்ட வகுப்பினருக்கும்,
  • 93 தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும்,
  • 61 முஸ்லிம்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது இறுதி செய்யப்பட்ட பட்டியலாகும். அதே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை பிற கட்சிகள் நிறுத்தினாலும் எங்கள் வேட்பாளர் தேர்வில் மாற்றம் இருக்காது. எங்கள் கட்சி பெரும்பான்மை பலம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாயாவதி.

முலாயம் சிங் போட்டியிடுவார் என கருதப்படும் குன்னார் தொகுதியில் முகம்மது ஆரிப் என்பவரை பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

================================================

உ.பி.யில் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு அலசப்படுகிறது: தேர்தல் கமிஷன் சிறப்பு நடவடிக்கை

புது தில்லி, ஏப். 2: உத்தரப் பிரதேசத்தின் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு தொகுக்கப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கள்ள வாக்கு போடச் சொல்வது, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுப்பது, வாக்குச் சாவடிக்குள் புகுந்து வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களையும், தேர்தல் அலுவலர்களையும் துப்பாக்கி முனையில் வெளியேற்றிவிட்டு வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி இஷ்டப்படி கள்ள வாக்குப் போடுவது என்று அனைத்துவித தேர்தல் முறைகேடுகளையும் தொகுதி வாரியாக பட்டியலிட்டுத் தருமாறு மத்திய தலைமை தேர்தல் ஆணையும் உத்தரப்பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் இப்போது முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. இக் கட்சி பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே தோழமைக் கட்சியாக இல்லை.

இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தியே தீருவது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தீர்மானித்துவிட்டதையே இந்தப்புதிய நடவடிக்கை தெரிவிக்கிறது.

403 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி வாரியாக பல தகவல்களைத் திரட்டுமாறு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

பணம்-பொருள் கொடுத்து வாக்கு சேகரிக்கப்படும் வாக்குச் சாவடிகள், பிற மத, சாதிக்காரர்களை அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுக்கும் வாக்குச் சாவடிகள், தேர்தல் அதிகாரிகளையும் வாக்குச் சாவடி முகவர்களையும் மிரட்டிவிட்டு தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் வாக்குச் சாவடிகள் என்று முந்தைய வரலாற்றின் அடிப்படையில் அடையாளம்காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சராசரி வாக்குப்பதிவைவிட 15% அதிகம் வாக்குகள் பதிவாகும் தொகுதிகள், சராசரியை விட 15% குறைவாக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிகள் போன்றவற்றை அடையாளம் காணவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வழக்கமான தேர்தல் நடைமுறைகளைவிட இவையெல்லாம் புதுமையாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் ஒரு தொகுதியில்கூட முறைகேட்டை அனுமதிக்காமல் தடுப்பது என்ற உறுதி தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுவிட்டதைப் போலத் தெரிகிறது. தேர்தல் நாள் நெருங்க, நெருங்கத்தான் இதையெல்லாம் தேர்தல் கமிஷனால் சாதிக்க முடிந்ததா என்று தெரிந்து கொள்ளமுடியும். இப்போதைக்கு இது ஆரம்பம்தான்.

தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மத்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக மிகப் பெரும் பொறுப்புகளை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.

=================================================================
ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி: முலாயம் சிங் தேர்தல் வாக்குறுதி

எட்டா, ஏப். 3: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உ.பி. முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் வாக்குறுதி அளித்தார்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மைன்புரி, பெரோஸôபாத், எட்டா ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணிகளில் பங்கேற்று முலாயம் சிங் பேசியதாவது:

சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கு எதிராக பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டு சேர்ந்து நிற்கின்றன.

சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பட்ட மேற்படிப்பு வரை மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

அதிகாரிகளை கூண்டோடு மாற்றியதுதான் லக்னெü, கான்பூர் வன்முறைக்கு காரணம்: தேர்தல் ஆணையம், மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரிகளை கண்மூடித்தனமாக கூண்டோடு இடமாற்றம் செய்து வருகிறது. புதிதாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு அந்தந்தப் பகுதிகளின் நிலவரமே இன்னும் தெரியவில்லை.

லக்னெüவிலும், கான்பூரிலும் முஸ்லிம்களில் இரு பிரிவினருக்கு இடையிலான வன்முறையை அதிகாரிகளால் தடுக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.

முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவி செய்ய வேண்டும் என்றார் முலாயம் சிங்.
=================================================================
அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கீடு: உ.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி

லக்னெü, ஏப். 3: உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்படும்; பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களில் 50% பதவிகள் பெண்களுக்கே தரப்படும் என்று அக் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

பெண்கள், முதியோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நல திட்டங்களை கட்சி அறிவித்துள்ளது.

சட்டம், ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும், விலைவாசி உயராமல் கண்காணிக்கப்படும், பதுக்கல், கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் நடமாடமுடியாதபடி “பொடா’வுக்கு இணையான பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்படும், வங்கதேசத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஊடுருவியவர்கள் கண்டுபிடித்து அகற்றப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

கட்சியின் அனைத்திந்திய துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மாநிலத் தலைவர் கேசரிநாத் திரிபாடி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

“கிரிமினல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு முறிக்கப்படும். மாநிலத்தில் “சிமி’, “ஐஎஸ்ஐ’ ஆகியவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்.

பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.30,000 வளர்ச்சிப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். 21 வயதுவரை அப் பெண்குழந்தையின் படிப்புச் செலவுக்கு அதிலிருந்து பணம் எடுத்துதரப்படும்.

அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கப்படும்.

விதவையருக்கு வழங்கப்படும் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.

மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படும்.

அரசு இடங்களில் உள்ள வீட்டு மனை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

சுகன்யா விவாஹ யோஜனா, கன்யாதான் யோஜனா போன்ற திருமண திட்டங்கள் தொடரும்.

அங்கன்வாடி (பெண்) ஊழியர்களின் பணி வரன்முறைப்படுத்தப்படும்.

வேலை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி அளிக்கப்படும்.

இளைஞர் நலனுக்காக தனி கமிஷன் ஏற்படுத்தப்படும்.

மகளிர் சுய உதவி குழுக்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் பெண்கள் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

முதியோருக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சலுகைக் கட்டணத்தில் அவர்கள் பயணம் செய்யலாம். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறலாம். எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் கட்டித்தரப்படும்.

விலைவாசியைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர், கள்ளச் சந்தையில் விற்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக முறை வலுப்படுத்தப்படும்.

பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம், வந்தே மாதரம் ஆகியவை கட்டாயமாக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

பாஜக வெற்றி பெற்றால் கல்யாண் சிங் முதல்வர் பதவியை ஏற்பார் என்று இரு தலைவர்களும் நிருபர்களிடம் அறிவித்தனர்.

=================================================================

Posted in abuse, Alliances, Allocation, Amar Singh, Amitabh, Anlaysis, Apna Dal, Apna Dhal, Assembly, Ayodhya, Backgrounder, BJP, booth capturing, Boothcapturing, Brahmins, BSP, candidates, Caste, Chief Minister, CM, Communist, Congress, Corruption, CPI, EC, Elections, Electorate, Employment, FC, Females, Filmfare, History, Janata Dal, Jats, Jobs, Kalyan, Kalyan Singh, Kanshiram, Lucknow, Manifesto, Marxist, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MLA, Mulayam, Mulayam Singh Yadav, Muslim, Natwar, OBC, Opinion, Party, pension, Perspectives, Polls, Religion/Politics, Reservation, Samajvadi, Samajwadi, SC, School, seats, Sonia, SP, ST, Surya Namaskar, Tiwari, UP, Uttar Pradesh, Vajpayee, Vande Mataram, Vandhe Mataram, Varanasi, VAT, voters, Votes, VP Singh, Women, Yadav, Yoga, Yogasana, Youth | Leave a Comment »

Conspiracy behind killing of JMM MP: DGP; ‘retaliatory action’: Govt.

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2007

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. கால்பந்து மைதானத்தில் சுட்டுக்கொலை

ஜாம்ஷெட்பூர், மார்ச் 5: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்தவரும், ஜாம்ஷெட்பூரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான சுநீல் மாதோ (38) மாவோயிஸ்ட் நக்சல்களால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் பகூரியா என்ற இடத்தில், ஹோலிப் பண்டிகையையொட்டி நடந்த கால்பந்து போட்டியில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட அவரை, துப்பாக்கிகளுடன் வந்த 15 நக்சலைட்டுகள் பலரும் பார்த்துக் கொண்டிருக்க சுட்டுக்கொன்றனர். மாதோவுடன் அவருடைய மெய்க்காவலர்கள் இருவரும், மற்றொருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். வேறு 2 மெய்க்காவலர்களை அவர்கள் துப்பாக்கி முனையில் பிணையாள்களாக பிடித்துச் சென்றுவிட்டனர்.

சுநீல் மாதோவின் உடலில் 7 குண்டுகள் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

சோம்நாத் இரங்கல்: இச் செய்தியைக் கேட்ட மக்களவைத் தலைவர் சோம்நாத், அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்தார்.

எம்.பி. படுகொலை

மக்களவை உறுப்பினர் சுநீல் மாதோ, ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைவர் முன்னிலையிலும் நக்சலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலராக இருந்தவர் சுநீல் மாதோ. ஒருசமயம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு அவரது பெயரும் அடிபட்டது.

கடந்த பல ஆண்டுகளில் நாட்டில் நக்சலைட் தாக்குதல்களில் பல நூறு போலீஸôரும் மற்றும் கிராம அதிகாரிகளும் உயிர் இழந்துள்ளனர். எனினும் எம்.பி. ஒருவர் நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்படுவது இதுவே முதல் தடவையாக இருக்கலாம்.

சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி என்னும் கிராமத்தில் விவசாயிகள் தொடங்கிய இயக்கம் உருமாறி, வெவ்வேறு போர்வைகளில் பல மாநிலங்களுக்கும் பரவி அரசுகளுக்குச் சவால் விடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. நக்சலைட்டுகள் பிரச்சினை மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய முன்னேறிய மாநிலங்களிலும் உள்ளது. பிகார், ஜார்க்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலங்களிலும் காணப்படுகிறது. ஆந்திரத்தில் தொடங்கி மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் என மேற்கு வங்கம் வரை 9 மாநிலங்களில் 156 மாவட்டங்கள் நக்சலைட் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ஒருபாணி தென்படுகிறது. வறுமை அதிகம் நிலவும் பகுதிகளுக்கு அருகே காடுகளும், மலைகளும் இருக்குமானால் அவை நக்சலைட்டுகளின் புகலிடமாக விளங்குகின்றன.

அரசுக்கு எதிரான புரட்சி தங்களது நோக்கம் என்று நக்சலைட்டுகள் கூறிக் கொள்கின்றனர். ஆனால் மிரட்டிப் பணம் பறித்தல், ஆள் கடத்தல், வழி மறித்து அல்லது கண்ணிவெடி வைத்து போலீஸôரையும் மற்றவர்களையும் கொலை செய்தல் போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். 2005-ல் பிகாரில் ஜகானாபாதில் நக்சலைட்டுகள் சிறையை உடைத்து பல நூறு கைதிகளை விடுவித்துச் சென்றபோது நாடே அதிர்ச்சி அடைந்தது.

ஜார்க்கண்டில் உள்ள 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்கள் நக்சலைட் பிரச்சினை உள்ளவை என்று அறிவிக்கப்பட்டவை. 2000-ஆவது ஆண்டில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாகப் பிரிந்த பின்னர் அங்கு நக்சலைட் பிரச்சினை தணிய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நிகழவில்லை. நக்சலைட்டு தாக்குதல்களால் அம் மாநிலத்தில் 2001-ல் 200 பேர் இறந்தனர் என்றால் 2004-ல் 150 பேர் இறந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், ஜார்க்கண்ட் மாநிலம் இந்தியாவிலேயே இரும்புத்தாது கிடைப்பதில் முதலிடம். நிலக்கரி கிடைப்பதில் இரண்டாவது இடம். தாமிரம் கிடைப்பதில் முதலிடம் என பெருமை பெற்றதாகும். இப்படிப்பட்ட வளங்கள் பல இருந்தும் முன்னேறாத மாநிலங்களில் ஒன்றாக அது உள்ளது. ஜார்க்கண்ட் தோன்றியதிலிருந்து அந்த மாநிலம் கடந்த 6 ஆண்டுகளில் 5 முதல்வர்களைக் கண்டுள்ளது. எனினும் இது ஒன்றை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. நிலையான ஆட்சி உள்ள ஆந்திரத்திலும் நக்சலைட் பிரச்சினையை ஒழிக்க முடியவில்லை.

நக்சலைட் பிரச்சினை உள்ள பகுதிகளில் மிகவும் வறுமை நிலையில் உள்ள மக்கள் பல்வேறு காரணங்களால் நக்சலைட்டுகளின் பிடியில் உள்ளனர். காட்டுப் பகுதியில் காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் நக்சலைட்டுகளுக்கு வலுக்கட்டாயமாகக் கப்பம் கட்டுகின்றனர். ஜார்க்கண்டில் ஒருசமயம் ஒரு சுரங்க நிறுவனத்தை மிரட்டி நக்சலைட்டுகள் ரூ. 7 கோடி கேட்டனர். சில இடங்களில் நக்சலைட்டுகளுக்கு அரசியல் ஆதரவும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

நக்சலைட் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால் அதற்கு பல முனைகளிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. “இரும்புக்கரத்துடன் ஒடுக்குவோம்’ என்று அவ்வப்போது அறிக்கை விடுவது போதாது. ஆனால் ஒன்று. பேச்சுவார்த்தை முலம் இப் பிரச்சினையைத் தீர்க்க இயலாது. ஆந்திர அனுபவம் இதைக் காட்டிவிட்டது.

எம்.பி. கொலைக்கு மாவோயிஸ்ட் பொறுப்பேற்பு

ஜாம்ஷெட்பூர், மார்ச் 7: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி எம்.பி. சுநீல் மகதோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

ஹாதியா மற்றும் லாங்கோ பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களில் மாவோயிஸ்ட் கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பங்கஜ் தரத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

லாங்கோ பகுதியில் மாவோயிஸ்டுகள் 11 பேரைக் கொலை செய்ய கிராமவாசிகளைத் தூண்டிவிட்டவர் சுநீல் மகதோ என்றும், அதற்குப் பழிவாங்கவே அவரைக் கொன்றதாகவும் அந்த போஸ்டர் வாசகம் தெரிவிக்கிறது.

ஜார்க்கண்டில் மீண்டும் சம்பவம் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரின் மகன் சுட்டுக் கொலை

ஜாம்ஷெட்பூர், மார்ச் 9: கடந்த 4 நாள்களுக்கு முன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அங்கு மற்றொரு சம்பவமாக முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரின் மகன், வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்தத் தலைவர் சுகதேவ் ஹெம்ப்ராம். இவரது மகன் லஷ்மண் (25).

லஷ்மணை அவரது தந்தை சக்ரதர்பூரில் உள்ள பஸ் நிலையத்துக்கு பஸ் ஏற்ற அழைத்து வந்தார்.

பஸ்ஸில் ஏறிய லஷ்மனை, அந்த பஸ்ஸில் இருந்த ரத்தன் தியூ என்பவர் துப்பாக்கியால் சுட்டார். இதைக்கண்ட சுகதேவ், தனது பாதுகாவலர்கள் மூலம் அவரை பிடிக்க முயன்றார். இருப்பினும் அவர் தப்பினார்.

உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லஷ்மண் இறந்தார்.

தகவலறிந்த போலீஸôர் விரைந்து சென்று குற்றவாளி தியூவை பிடித்தனர்.

லஷ்மண் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை முன்பாக, முக்தி மோர்ச்சா தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப் பகுதியில் இருந்த பல்வேறு கடைகள் மூடப்பட்டன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜாம்ஷெட்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி, இச் சம்பவம் அரசியல் பிரச்சினைகளால் நடைபெறவில்லை என்றார்.

Posted in Andhra, Andhra Pradesh, Assassination, backward, Bakuria, Bihar, dead, FC, Forest, Hempram, Jamshedpur, Jharkand, Jharkhand, JMM, Lakshman, Landlords, Lashman, Lok Sabha, Madhya Pradesh, Mountains, MP, Naksal, Naxal, Naxalbari, Naxalite, Plateau, Ratan Diu, Separatists, Son, Sugadev, Sukhdev, Sunil Mahato, Terrorism, Violence, WB, West Bengal | Leave a Comment »