Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Unemployment Benefits to Youth – Issues

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006

அரசு வழங்கும் உதவித் தொகை பெற வங்கிக் கணக்கு: இளைஞர்கள் அதிருப்தி

சென்னை, செப். 11: அரசு வழங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகையைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கு அவசியம் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இது உதவித் தொகைபெற விண்ணப்பிக்கும் இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

படித்து வேலையில்லாத இளைஞர்கள் தமிழக அரசின் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

படித்து ஐந்தாண்டுகளுக்கு மேல் வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அக்டோபர் 2-ம் தேதி முதல் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தகுதியுள்ள இளைஞர்களுக்கு இத்தகைய உதவித் தொகை மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தில் உதவித் தொகை பெற விரும்பும் இளைஞர்கள் பொதுத்துறை வங்கிகளில் வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்க வேண்டும். வங்கிகள் மூலமாகத்தான் இந்த நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக சிதம்பரம் கூறினார்.

ரூ. 500 தேவை: அரசு தரும் உதவித் தொகையைப் பெறுவதற்கு தற்போது ரூ. 500 செலுத்தி வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு பெரும்பாலான இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், உதவித் தொகை பெறுவதற்கு தாய் அல்லது தந்தை, கணவர் அல்லது மனைவியின் மாத வருமானம் ரூ. 2 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதிமுறையும் பலரிடையே அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.

சென்னை போன்ற பெருநகரில் வாழ்வதற்கு நாளொன்றுக்கு ரூ. 75 அவசியம் தேவை. பிற நகரங்களில் கட்டாயம் ரூ. 50 தேவை. இந்நிலையில், விண்ணப்பங்கள் அனுப்புவதற்காக அரசு அளிக்கும் உதவித் தொகை பெரும்பாலான இளைஞர்களுக்கு பயன் தருவது சந்தேகம் என்றே பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும் அஞ்சல் வழிக் கல்வி பயில்வோருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படாது என்ற விதிமுறையும் கடுமையானது என்று பல இளைஞர்கள் கருதுகின்றனர்.

பின்னூட்டமொன்றை இடுக