Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Grants’ Category

60pc marks for Grants – Restrictions on SC/ST Scholarships: A Flawed Government Policy?

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2008

நிபந்தனைகளும் நியாயங்களும்

இரா.சோமசுந்தரம்

ஒரு சட்டம் அல்லது புதிய நிபந்தனை புகுத்தப்படும்போது அதற்கான காரணங்கள் இல்லாமல் செய்யப்படுவதில்லை.

அத்தகைய நிபந்தனை அல்லது சட்டத்தை எதிர்க்கும்போது ‘இதை இப்போது அமல்படுத்துவதன் அவசியம் என்ன?’ என்று கேள்வி கேட்பதும், அதற்கு அரசு சொல்லும் காரணத்தை விவாதத்துக்கு உட்படுத்துவதும், பெருந்திரளானோரின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அது அமலாகும்படி பார்த்துக் கொள்வதும் நியாயமான அணுகுமுறைதான்.

இப்போது பட்டியல் வகுப்பு மாணவர்கள் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே உதவித்தொகை தரப்படும் அல்லது தொடரும் என்ற நிபந்தனைக்கு பட்டியல் வகுப்பு மாணவர்கள் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள்) எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

திடீரென இப்படியொரு நிபந்தனையை மத்திய அரசு கொண்டுவரக் காரணம் என்ன? என்பது பற்றி மாணவர்களும் சரி, அரசியல் தலைவர்களும் சரி, யாருமே பேசவில்லை.

இந்த நிபந்தனையை மத்திய அரசு விலக்கிக் கொள்ளாவிட்டாலும், மாநில அரசு தனது நிதியில் இந்த மாணவர்களுக்கு உதவித்தொகையை நிபந்தனையின்றி வழங்கும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அவரும்கூட, இதன் பின்னணி என்ன? என்பது குறித்து விளக்கவோ, அல்லது மாணவர்களுக்கு அறிவுறுத்தவோ முயலவில்லை.

ஏன் இத்தகைய நிபந்தனையை மத்திய அரசு மேற்கொள்ள நேரிட்டது?

மத்திய, மாநில அரசுகள் மட்டுமன்றி சில தனியார் அறக்கட்டளைகளும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் உண்டுஉறைவிட வசதியும் அளிக்கின்றன. அல்லது அதற்கான செலவை ஏற்கின்றன.

இந்தத் தனியார் அறக்கட்டளைகளின் கருணை நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இவர்களிடம் சலுகையைப் பெறும் மாணவர், ஒரு பருவத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர் உதவித்தொகை அல்லது இலவச விடுதி சலுகையை இழந்துவிடுவார். மீண்டும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே (எந்தப் பாடத்திலும் ‘அரியர்ஸ்’ இல்லாத போதுதான்) அவருக்கு இலவச சலுகை மறுபடியும் தொடரும். அதுவரை, ஒன்று அவர் விடுதியிலிருந்து வெளியேற வேண்டும். அல்லது பொது மாணவர்களுக்கு இணையாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிபந்தனை, அந்த மாணவர்கள் தங்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் கவனம் சிதறினால், கல்விக் கட்டணம் கையைக் கடிக்கும்.!

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கும் அவர்களது இலவச உண்டுஉறைவிடத்துக்கும் மத்திய, மாநில அரசுகள் ஆயிரம் கோடிக்கும் அதிகமாகச் செலவிடுகின்றன.

இந்த மாணவர்களுக்கு இதுவரையிலும் எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காத மத்திய அரசு, இப்போது அதை நடைமுறைப்படுத்துவது ஏன்? உயர்கல்வியில் இந்த மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு குறைந்துள்ளதுதான் காரணம். இதை உயர்கல்வி உலகம் நன்கு அறியும். ஆனால் அவர்களும் அரசியல்வாதிகள் போலவே மெüனம் சாதிக்கிறார்கள்.

எந்த நிபந்தனையும் இல்லாமல் இருந்துவிட்டு, இப்போது 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று அரசு நிபந்தனை விதிப்பது அதிகபட்சமான எதிர்பார்ப்பாக இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறவேண்டும் (அரியர்ஸ் இருக்கக்கூடாது) என்று எதிர்பார்க்கும் உரிமைகூட அரசுக்கு இல்லாமல் போகுமா?

நகரங்களில் உள்ள கல்லூரியில் இடம் கிடைத்து, இலவச உண்டுஉறைவிடத்தில் தங்குவதற்கும் இடம் கிடைத்துவிட்டால், பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்வியை முடிக்கும்வரை (மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு) கல்வியில் ஆர்வம் செலுத்துவதில்லை.

இந்த உண்மையை அறிந்துகொள்ள ஒரு புள்ளிவிவரத்தை எடுத்துப் பார்க்கலாம். அரசின் கல்வி உதவித் தொகை மற்றும் உணவு உறைவிட சலுகை பெறும் மாணவர்களில் எத்தனை பேர் அனைத்துப் பருவத் தேர்வுகளிலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் (அரியர்ஸ் இல்லாதவர்கள்) என்பதை கல்வித் துறை மிக எளிதில் கணினி உதவியுடன் பட்டியலிட முடியும்.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 60 சதவீத மதிப்பெண் நிபந்தனையை வைத்தால், பெரும்பாலான மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காமல் போகும் என்ற அச்சம் முன்வைக்கப்படுகிறது.

ஆனால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இந்த மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. அத்துடன், பொது ஒதுக்கீட்டிலும் இடம்பெறும் அளவுக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.

அரசின் நிபந்தனையை எதிர்ப்பவர்கள் யார்? கல்லூரியிலும் மாணவர் விடுதியிலும் இடம் கிடைக்கப்பெற்று, கல்வியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, தங்கள் கவனத்தை நகர வாழ்வின் மோகத்தில் சிதறவிடும் மாணவர்கள்தான்.

அனைவரும் 60 சதவீத மதிப்பெண் பெறுவது கடினம் என்று கருதினால், பருவத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் குறைந்தது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நிபந்தனையை மட்டுமாவது ஏற்க முன்வர வேண்டும்.

எந்த நிபந்தனையும் இல்லாமல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கேட்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

Posted in Caste, Castes, Government, Govt, Grants, Marks, Policy, Reservations, restrictions, SC, Scholarships, ST | 1 Comment »

Importance of Agriculture : Farming Economics & Impact

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

வேளாண்மையின் இறக்கம்

ஆர்.எஸ். நாராயணன்

அன்றைய இந்தியா கிராமங்களில் வாழ்ந்தது. இன்றைய இந்தியா நகரங்களில் மட்டுமே வாழ்கிறது. நெல், கோதுமை, சோளம், கம்பு, வரகு, தினை எல்லாம் ஏகபோகமாக விளைந்தன. உண்டி கொடுத்து மக்களை வாழ வைத்த விவசாயிகளை மன்னன் வாழ வைத்தான். ஆட்சிக்கு வருமானமே நிலவரிதான். இதனால் விவசாயிகளுக்கு மரியாதை இருந்தது. இன்றைய இந்தியாவில் ஆட்சியின் வருமானம் நிலவரி இல்லை. வருமான வரி, தொழில் வரி, சுங்க வரி, விற்பனை வரி என்று வேறு தொழில்களிலிருந்து பெறப்படுகிறது. அன்று தேவதானம், பிரம்மதேசம் என்று மானியங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

இன்று மானியங்கள் விவசாயிகளுக்கு இல்லை. விவசாய மானியம் என்ற பெயரில் ரசாயன உரக் கம்பெனிக்கும், பூச்சி மருந்து நிறுவனங்களுக்கும், டிராக்டர் நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது. அன்று விவசாயம் செய்பவனே வளமாக வாழ்கிறான் என்று நிலம் உள்ளவனுக்குப் பெண் கொடுத்தார்கள். இன்று விவசாயிகளுக்குப் பெண் கொடுப்பாரில்லை. மாதச் சம்பளம் பெறும் கடைநிலை ஊழியராக இருந்தாலும் பரவாயில்லை, விவசாயி மாப்பிள்ளை வேண்டாம் என்று பெண்ணைப் பெற்றவர்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். விவசாயம் என்பது அன்று சுகஜீவனம். இன்று துன்பஜீவனம். ஏன் இந்த அவலம்?

பொருளியல் அடிப்படையில் யோசித்தால் உண்மை புரியும். ஒரு விவசாயி எந்த அளவில் ஏமாளியாக வாழ்கிறான் என்பதும் எந்த அளவில் சுரண்டப்படுகிறான் என்பதும் புரியும்.

பொருளாதாரத்திற்கு அடிப்படை ஒரு பண்டத்தின் நிலையான மதிப்பு. அதை நெல் மதிப்பு என்றுகூடச் சொல்லலாம். பணமதிப்பு குறைந்தால் நெல் மதிப்பு அந்த அளவில் உயர வேண்டும். 1960 – 70 விலைவாசியை வைத்து இன்றைய நிலையை அளவிட்டால் வேளாண்மையின் இறக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

அன்று நெல் விலை ரூ. 50. ஒரு மூட்டை 75 கிலோ நெல். 400 மூட்டை நெல் விற்றால் 35 ஏட டிராக்டர் ரூ. 20,000-க்கு வாங்கலாம். 20 மூட்டை நெல் விற்றால் 1 ஜோடி மாடு ரூ. 1000 வாங்கலாம். 7 மூட்டை நெல்லுக்கு 1 பவுன் தங்கம். இன்று நெல்விலை ரூ. 350. டிராக்டர் விலை 5 லட்சம் ஜோடி மாடு 20,000. பவுன் 8,000. 1 டிராக்டர் வாங்க 1000 மூட்டை நெல் விற்க வேண்டும். ஒரு விவசாயி இழப்பது 600 மூட்டை நெல். நெல் விலைக்குக் கட்டுப்பாடு உண்டு. டிராக்டர் விலைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இழந்து வரும் பணமதிப்புக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

கடந்த 30 ஆண்டுகளில் தொழிற்சாலைப் பொருள்கள் விலை 40 மடங்கு உயர்ந்துவிட்டது. அரசு அலுவலர்களின் ஊதியம் 50 மடங்கு உயர்ந்துவிட்டது. ரூ. 250 சம்பளம் வாங்கிய எம்.எல்.ஏ. இன்று லட்ச ரூபாய் வாங்குகிறார். மாத வருமானம் இல்லாத ஒரு விவசாயி தான் விளைவித்த பொருளை விற்று ஜீவனம் செய்கிறார். விலைவாசி ஏறுவதற்கு ஏற்ப அகவிலைப்படி பெற அவர் தகுதியற்றவர். கடந்த 30 ஆண்டுகளில் நெல், கோதுமை விலை 8 மடங்குதான் உயர்ந்துள்ளது.

உணவு உற்பத்தி கூடிய நிலையில் உணவுக் கட்டுப்பாடு ஏன்? இதன் உள்நோக்கம் என்ன? வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு உணவுப்பங்கீட்டால் கிடைக்கும் மானியம் ரூ. 534 என்று புள்ளிவிவரம் கூறுகிறது. உணவுப் பங்கீட்டையும் கட்டுப்பாட்டையும் ரத்து செய்து விட்டு உணவுக்கூப்பன் அட்டை வழங்கி ரூ. 1000 ரொக்கம் வறுமைக்கோட்டு ஏழைகளுக்கு வழங்கலாமே. ஒருவரை வாழவிடாமல் அடித்து ஏழைக்கு வழங்குவது அரசாங்கத்தின் திருட்டுக்குணம் ஆகாதா? ராபின்ஹுட் கூட பணக்காரனிடம் திருடி ஏழைக்கு வழங்கினான். “”தகுதி என வொன்று நன்றே பகுதியார் பாற்பட்டு ஒழுகப்பெறின்” என்ற நடுநிலை தவறுவது ஏன்? அரசுப் பொருளாதாரம் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பாமல் விவசாயிகளின் வயிற்றிலடிப்பது மன்னர் காலத்துக் கொடுங்கோன்மையைவிட மோசமானதல்லவா? இதனால் பாதிக்கப்படுபவன் ஒரு விவசாயி என்று யாருக்கும் புரிவதில்லை.

50 ஆண்டுகளில் அரசில் உள்ளவர்கள் ஐந்து ஊதியக்கமிஷன் அமைத்து ஊதியத்தை உயர்த்திவிட்டனர். “”உண்டி கொடுத்தோன் உயிர் கொடுத்தோன்’ இந்த ஊனும் உயிரும் வாழ வழி செய்து வரும் விவசாயிகளுக்கு அகவிலைப்படி கொடுத்தோமா? இல்லை. ஒரு முழக்கயிறு கொடுத்தோம். லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதைப் பார்வையிட்ட பாரதப் பிரதமர், விவசாயிகளின் கடனுக்கு உண்டான வட்டியை ரத்து செய்தார்.

மேலும் கடன் பெற வழிசெய்து விட்டார். பேராசைக்கு ஒரு தூண்டுதல். மேலும் பலர் தற்கொலை செய்து கொள்ளும் வழி அல்லவா கடன். விவசாயம் ஆசையை நிறைவேற்றும் தொழில் இல்லை. அடிப்படை ஆசையைக்கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளபோது பேராசையை நிறைவேற்ற முடியுமா?

ஆகவே, விவசாயிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் ஒரு முழக்கயிறு வேண்டாம். பசுமைப்புரட்சி வரும் முன்பு நமது முன்னோர்கள் எந்த விதைகளைக் கொண்டு எந்த முறையில் எந்த நீரைக் கொண்டு யாருக்காக விவசாயம் செய்தார்கள் என்பதை உணர்ந்து வெளியிலிருந்து எந்த இடுபொருளும் கொண்டு வராமல், நிலத்திற்கு ஓய்வும் கொடுத்து உடலுழைப்போடு அத் தொழிலைச் செய்யுங்கள். கிடைப்பதைக் கொண்டு வாழுங்கள். கடன் வாங்காதீர்கள். “”விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்” என்ற பட்டுக்கோட்டையார் பாடல்தான், விவசாயிகளின் வேதம்.

Posted in Agriculture, Economy, Farmers, Government, Grants, Politics, RS Narayanan | Leave a Comment »

The ills of Indian Agriculture – RS Narayanan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

புல்லும் ஓர் ஆயுதம்

ஆர்.எஸ். நாராயணன்

இருபத்தி ஐந்து மாடுகளை வைத்துக்கொண்டு இயற்கை விவசாயம் செய்யும் எங்களுக்குத் தீவனத் தட்டுப்பாடு வந்தது. இதைச் சரி செய்யப் புல் வளர்க்க யோசித்தோம். மானாவாரியாக எதைப் பயிர் செய்யலாம், பாசனமாக எதைப் பயிர் செய்யலாம் என்று திட்டமிட்டு புல்விதை விலைகளை விசாரித்தோம். மயக்கம் வந்துவிட்டது. குதிரை மசால் விதையின் விலை கிலோ ரூ. 200. கொழுக்கட்டைப்புல் விதை ரூ. 90. நெல் விதை 6 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

இந்தியாவின் விவசாயப் பிரச்சினைகளை நெல்லால் தீர்க்க முடியாதபோது, புல்லால் தீர்த்து விடலாம் என்று தோன்றுகிறது. மாடுகளையும் பட்டினி போட வேண்டாம். பச்சைப்புல்லைக் கொடுத்தால் பாலும் நிறையக் கிடைக்குமே. பழைய நினைவுகளை அசைபோட்டுப் பார்த்தபோது டாக்டர் ராமசாமி, ஐ.ஐ.ங. பேராசிரியர் (ஓய்வு), கூறிய கருத்து மனத்தில் பளிச்சிட்டது. அவர் இவ்வாறு கூறுகிறார்: காளை மாடுகளை உழவுக்கும், பாரம் சுமக்கும் வாகனமாகவும் பயன்படுத்தினால் 60 லட்சம் டன் பெட்ரோலியத்தை மிச்சப்படுத்தலாம்.

இதன் மதிப்பு ரூ. 20,000 கோடி. நவீன முறையில் வண்டிகளைத் திருத்திச் சில மாற்றங்களைச் செய்தல், கால்நடைகளுக்கு நல்ல தீவனம் வழங்கிப் பராமரித்தல் ஆகிய தொழில்கள் மூலம் கிராமங்களில் 2 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கலாம். நாட்டுக்கும் நன்மை. ராமசாமியின் கருத்துப்படி இந்தியக் கால்நடைத்துறை – கால்நடைகள் மூலம் பெறும் வருமான மதிப்பு – மொத்த எசட யில் ஏழு சதவீதம். ஆனால் கால்நடை மேம்பாட்டுக்கும் புல் வளர்ப்புக்கும் செலவுத்திட்டம் (  allocation) 0.3 சதவீதமே என்று நொந்து கொள்கிறார்.

மீளுமா இந்திய வேளாண்மை? என்று எஸ். ஜானகிராமன் ஒரு கொக்கி போட்டுள்ளார் (22-8-06 துணைக்கட்டுரை). அரசு வழங்கும் மானியங்களைக் கால் பங்காகக் குறைத்து விட்டு வேளாண்மைப் பொது முதலீட்டை நான்கு பங்காக உயர்த்தக் கோரியுள்ளார். மானியங்களைக் குறைக்க வேண்டாம். இந்த மானியங்கள் நிஜமாகவே விவசாய உற்பத்திக்கு வழிவகுத்துள்ளதா என்று யோசித்து இதனால் யார் பயனடைகிறார்கள் என்று பார்ப்பது நல்லது.

  • உர மானியம் என்பது மண் வளத்தை அழிக்கும் ரசாயன உரக் கம்பெனிக்கு வழங்கப்படுகிறது.
  • கருவிகள் – இயந்திர மானியம், டிராக்டர் கம்பெனிக்கு வழங்கப்படுகிறது.
  • இதே மானியத்தை இயற்கை இடுபொருள்களுக்கும், கால்நடை – தீவனப் பராமரிப்புக்கும் மாற்றியமைத்துவிட்டாலே போதும். இந்தியா ஒரு வல்லரசாக மாறிவிடும்.

உலகில் பிற நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியா செலவிடும் மானியம் குறைவுதான். உலகளாவிய அளவில் ஒரே சட்டம் அமல் செய்து விவசாயிகளுக்கு இவ்வாறு மறைமுகமாக வழங்கப்படும் மானியம் நிறுத்தப்பட்டு விட்டால், முதலில் அழிவது அமெரிக்காதான். அமெரிக்காவில் சிறு விவசாயி என்பவருக்கு 1,000 ஹெக்டேர் நிலம் இருக்கும். எல்லா அமெரிக்க விவசாயிகளும் ஹைடெக் . அங்கு தேச வருமானத்தின் பெரும்பகுதி இந்த ஹைடெக் விவசாயத்திற்குச் செலவாகிறது. இந்த ஹைடெக் விவசாயம் முழுக்க முழுக்க மானியத்தை நம்பியுள்ளது. ஓர் இந்திய விவசாயி மானியத்தை நம்பாமல் தனித்து இயங்கும் வாய்ப்பு இங்கு உள்ளதுபோல் வேறெங்கிலும் இல்லை. அடித்தளமே இல்லாத அமெரிக்க விவசாயத்தை விடவும் ஒரு பலமான வாழ்வியல் அடித்தளத்துடன் இயங்கும் இந்திய விவசாயத்தை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள, விவசாயம் பற்றி மகாத்மா காந்தியும் ஜே.சி. குமரப்பாவும் எழுதியுள்ளதைப் படித்தாலே போதுமானது. தீர்க்க தரிசனம் புலப்படும்.

இந்தியாவில் விவசாயப் பொருளாதார மேம்பாட்டுக்குத் திட்டமிடும் வல்லுநர்கள், அடித்தளம் இல்லாத அமெரிக்காவை மாடலாக வைத்து உருவாக்கிய திட்டத்தில் ரசாயன உரங்களுக்கும் – டிராக்டர் போன்ற இயந்திரங்களுக்கும் மானியங்கள் வழங்கப்படுகின்றன.

அமெரிக்காவில் கிராமங்களே இல்லை. இரண்டு ஏக்கர் திட்டமும் இல்லை. இருக்கும் இரண்டு ஏக்கரில் 8 துண்டு. “”துண்டு” என்று நான் அதைச் சொல்லவில்லை. 25 செண்டு என்ற sub division Fragmentation  என்று கூறப்படும் துண்டான நிலத்தை நினைவில் கொள்ள வேண்டும். இதையே “”இந்திய விவசாயத்தைப் பற்றியுள்ள நோய்”   என்று மேலைநாட்டு அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். குமரப்பாவும் காந்தியும் இதை நோயாகப் பார்க்காமல், “”காளை உழவுக்கு ஏற்ற கால்காணியே விவசாயிகளை வாழ வைக்கும்” என்று புரிய வைத்தும் நாம் புரிந்து கொள்ளாமல், சந்தைப் பொருளாதாரத்திற்கு ஏழை விவசாயிகளை அடிமைகளாக்கி, நகரத்துச் சேரிகளுக்கு அனுப்பி வைக்கிறோம்.

“”முத்ரா ராக்ஷசம்” என்ற சம்ஸ்கிருத நாடகத்தை மையமாக வைத்து ஆர்.எஸ். மனோகரின் நாடகமான சாணக்கிய சபதத்தில் ஒரு காட்சி வரும். சாணக்கியர், “”அர்த்த சாஸ்திரம்” எழுதியவர். அதாவது “”பொருளாதார விஞ்ஞானம்”. அப்படிப்பட்ட அறிஞர், ஒரு புல் தடுக்கி விழுந்துதான் சபதம் செய்தாராம். இந்தியாவுக்கு முதல் பொருளாதாரத் திட்டத்தை வகுத்துக் கொடுத்த மாபெரும் ராஜதந்திரியை ஒரு புல் வீழ்த்தியுள்ளது. புல்லை நாம் அலட்சியப்படுத்த முடியாது. வல்லவர்களான இந்திய விவசாயிகளுக்கு இன்று நெல்லைவிடப் புல்லே நல்ல ஆயுதமாகப்படுகிறது.

Posted in Agriculture, Budget, Farmer, Finance, Grants, India, Policy, Strategy, Subsidy, Tamil, USA | Leave a Comment »

Unemployment Benefits to Youth – Issues

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006

அரசு வழங்கும் உதவித் தொகை பெற வங்கிக் கணக்கு: இளைஞர்கள் அதிருப்தி

சென்னை, செப். 11: அரசு வழங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகையைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கு அவசியம் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இது உதவித் தொகைபெற விண்ணப்பிக்கும் இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

படித்து வேலையில்லாத இளைஞர்கள் தமிழக அரசின் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

படித்து ஐந்தாண்டுகளுக்கு மேல் வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அக்டோபர் 2-ம் தேதி முதல் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தகுதியுள்ள இளைஞர்களுக்கு இத்தகைய உதவித் தொகை மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தில் உதவித் தொகை பெற விரும்பும் இளைஞர்கள் பொதுத்துறை வங்கிகளில் வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்க வேண்டும். வங்கிகள் மூலமாகத்தான் இந்த நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக சிதம்பரம் கூறினார்.

ரூ. 500 தேவை: அரசு தரும் உதவித் தொகையைப் பெறுவதற்கு தற்போது ரூ. 500 செலுத்தி வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு பெரும்பாலான இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், உதவித் தொகை பெறுவதற்கு தாய் அல்லது தந்தை, கணவர் அல்லது மனைவியின் மாத வருமானம் ரூ. 2 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதிமுறையும் பலரிடையே அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.

சென்னை போன்ற பெருநகரில் வாழ்வதற்கு நாளொன்றுக்கு ரூ. 75 அவசியம் தேவை. பிற நகரங்களில் கட்டாயம் ரூ. 50 தேவை. இந்நிலையில், விண்ணப்பங்கள் அனுப்புவதற்காக அரசு அளிக்கும் உதவித் தொகை பெரும்பாலான இளைஞர்களுக்கு பயன் தருவது சந்தேகம் என்றே பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும் அஞ்சல் வழிக் கல்வி பயில்வோருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படாது என்ற விதிமுறையும் கடுமையானது என்று பல இளைஞர்கள் கருதுகின்றனர்.

Posted in Assistance, Benefits, Cash, Employment, Grants, Jobless, Subsidy, Tamil, Unemployed, Youth | Leave a Comment »

Jury announced for Granting Govt. Subsidies for Tamil Cinema

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

திரைப்படங்களுக்கு அரசு மானியம்: குழு அமைப்பு

சென்னை, செப். 7: அரசு மானியம் பெற தகுதியுடைய திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2005 ஆம் ஆண்டில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அரசு மானியம் பெறுவதற்கு தகுதியுடைய திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கு நீதிபதி பாஸ்கரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சரோஜா தங்கவேலு, ஸ்ரீபிரியா ஆகியோர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

Posted in Art, Culture, Docu Drama, Documentary, Government, Grants, Justice Bhaskaran, Kollywood, Movie, Saroja Thangavelu, Short Film, Sri Priya, Subsidy, Tamil, Tamil Cinema, Tamil Movies, Tamil Nadu, TN | Leave a Comment »