Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for செப்ரெம்பர் 14th, 2006

Chengalippan – Anjali

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2006

தலைவர்கள் இரங்கல்

சென்னை, செப். 15: சுதந்திரப் போராட்ட தியாகியும் தொழிற்சங்கத் தலைவருமான செங்காளிப்பன் மறைவுக்கு மத்திய அமைச்சர் வாசன், ஐஎன்டியுசி பொதுச் செயலாளர் காளன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வாசன்: கோவை காமராஜர் என்று அன்போடு அழைக்கப்பட்ட வரும், காமராஜர், மூப்பனார் ஆகியோரோடு நெருங்கிப் பழகியவருமான செங்காளிப்பனின் மறைந்த செய்தி அறிந்து துயரமுற்றேன். சிறந்த தொழிற்சங்கவாதியான செங்காளிப்பன் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.

காளன்: கோவை மாவட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு தலை சிறந்த தொழிற்சங்கத் தலைவராக 60 ஆண்டுகளுக்கு மேலாக செயலாற்றி பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு அடிப்படையான உரிமைகளைப் பெற்றுத் தந்து, பல்வேறு ஊதிய உயர்வு ஒப்பந்தங்களையும் பல்வேறு சலுகைகளையும் பெற்று தந்தவர்.

“வெள்ளையனே வெளியேறு’ என்னும் இறுதிக் கட்ட சுதந்திரப் போராட்டத்தில் 7 ஆண்டுகள் கடும் சிறை தண்டனை அனுபவித்தவர்.

Posted in Anjali, Chengalippan, Cong (I), Congress, Congress (I), Cottom Mill Labor, Freedom Fighter, Kovai Kamaraj, Memoirs, Quit India Movement, Union Leader | Leave a Comment »

Incentive Aid for Mixed Race Marriages – Meera Kumar

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2006

கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய திட்டம்

புதுதில்லி, செப். 15: கலப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய திருமணங்களை செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தில்லியில் நடந்த சமூக நலத்துறை செயலர்களின் மாநாட்டில் மத்திய சமூக நலம் மற்றும் அதிகாரப் பரவலாக்கல் துறை அமைச்சர் மீராகுமார் இதை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியது:

கலப்பு மணங்களை ஊக்குவிக்கும் வகையில் அளிக்கும் உதவித் தொகையில் 50 சதவீதத்தை மத்திய அரசும், மீதி 50 சதவீதத்தை மாநில அரசுகளும் ஏற்று கொண்டால் இத்திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றார்.

இத்திட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு வரலாம் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, சிலர் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கலாம். இதற்காக நல்ல திட்டங்களை கொண்டு வராமல் இருக்க முடியாது என்றார்.

Posted in Caste, Incentives, Inter-race, Intre-racial, Marriages, Meera Kumar, Mixed, Race, Religion, Welfare | Leave a Comment »

New Planet named as Iris

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2006

புதிய கோளுக்கு பெயர் சூட்டப்பட்டது

புதிய கிரகம்
புதிய கிரகம்

சூரிய மண்டலத்தின் புதிய கோள் ஒன்றுக்கு சண்டைக்களுக்கான கிரேக்க பெண் தெய்வமான இரிஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகளால் கடந்த ஆண்டு முதன் முதலாக இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்ட நாள் தொடக்கம், உலக வானியல் நிபுணர்கள், தமக்குள் சண்டையிட்டு, விவாதங்களில், கோள்கள் என்றால் அதில் என்னென்ன இடம்பெற்று இருக்க வேண்டும் என்று விவாதித்தனர்.

இரிஸ் புளூட்டோ வினை விடப் பெரியது, ஆதலால் இவை இரண்டையும் கோள் என அழைப்பதா அல்லது கோள்களே அல்ல என முடிவெடுப்பதா என விஞ்ஞானிகள் குழப்பம் அடைந்து இருந்தனர்.

இறுதியில், இரண்டையுமே “குள்ளக் கிரகங்கள்”என்று விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர்.

Posted in Astronomy, Iris, Milky Way, Planetarium, Planetary System, Planetrary System, Pluto, Small Planets, Tamil | Leave a Comment »

Dell will open Production Facilities in Tamil Nadu

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2006

இந்தியாவில் டெல்லின் தொழிற்சாலை

டெல் காட்சி அறை
டெல் காட்சி அறை

அமெரிக்காவின் கம்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான டெல் நிறுவனம் இந்தியாவில் தனது முதலாவது உற்பத்தித் தொழிற்சாலையினை நிறுவ இருப்பதாக அறிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் நிறுவப்படவுள்ள இந்த டெல் கணனி நிறுவனம் அடுத்த ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கும் என்றும் இதில் 60 மில்லியன் டாலர்களை அடுத்த பத்தாண்டு காலத்தில் டெல் முதலீடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறைக்கான சந்தையில் டெல் நிறுவனமும் பரந்த அடிப்படையில் கலந்து கொள்ள இந்த தொழிற்சாலை உதவும் என்று இந்தியாவுக்கான டெல் நிறுவனப் பிரதிநிதி ராஜன் ஆனந்தன் தெரிவித்தார்.

டெல் நிறுவனத்தின் தயாரிப்புகளின் விற்பனை, இந்தியாவில் ஏற்கனவே அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த 3 மாதங்களில் இந்தியாவிற்கான டெல் பொருட்களின் ஏற்றுமதி 82 சதவிகிதம் அதிகரித்தது.

இந்தியாவில் விற்பனை மூலம் டெல் நிறுவனத்திற்கு கிடைத்த வருமானமும் 63 சதவிகிதம் அதிகரித்தது.

ஆசியக் கண்டத்தில் டெல் நிறுவனம் ஏற்கனவே மலேசியாவிலும், சீனாவிலும் தயாரிப்பு தொழிற்சாலைகளை திறந்திருக்கிறது.

Posted in Asia, Business, computers, Dell, Economy, Factory, Jobs, Manufacturing, Production, Tamil, Tamil Nadu | Leave a Comment »

Jeyamohan’s Kaadu – Review by Re Karthigesu in Marathadi

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2006

காடு

தமிழ்ப் புத்திலக்கிய வரலாற்றில் ஜெயமோகனின் பெயர் நின்று நிலைக்கும் என்பதை இந்தக் கட்டுரையின் ஆதியிலேயே நான் சொல்லிவிட விரும்புகிறேன். “காடு” என்ற அவரின் நாவலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் வேதசகாய குமார் அவரை “தமிழில் ராட்சசக் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது” என வருணித்திருக்கிறார். இது ஒப்புக்கொள்ளக் கூடியதே.

இதன் முதல் காரணம் 2003இல் மட்டுமே தீவிர இலக்கியத்தில் தீவிரமாக இருக்கும் இந்த எழுத்தாளாரின் முக்கிய நாவல்கள் இரண்டு வெளியாகியுள்ளன. இரண்டும் மிகுந்த உழைப்பைக் கொண்டு, தங்கள் கருப்பொருளுக்கேற்ப விவரணைகளை அள்ளிக் கொடுக்கின்றன. அதே ஆண்டில் 5 திறனாய்வு நூல்களையும் பதிப்பித்துள்ளார். இளைஞரான இவர்பைதுவரை ரப்பர் என்னும் நாவல் தொடங்கி, விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல்கள், கன்னியாகுமரி, காடு, ஏழாம் உலகம் ஆகிய நாவல்களை எழுதியிருப்பதுடன் கொற்றவை என்ற காப்பிய வடிவிலான நாவல் ஒன்றையும் எழுதியுள்ளார். இவை அனைத்துமே புதுத்தமிழ் இலக்கிய இதழ்களாலும் விமர்சகர்களாலும் அணுக்கமாக விமர்சிக்கப்பட்ட நாவல்கள்.

இப்படி எழுதிக் குவிப்பதினாலேயே இவர் சிறந்த எழுத்தாளர் என்று அர்த்தமாகி விடாது. மாத நாவல்கள் எழுதுவோரும், கால வாரி இதழ்களுக்கு எழுதுவோரும் இவரை விட அதிகமாக எழுதிக் குவிக்கிறார்கள். ஆனால் ஜெயமோகனின் எழுத்துக்கள் வணிக லாப நோக்கம் சற்றும் இல்லாத, வாசகனைப் பற்றி அநேகமாக கவலைப் படாத தூய இலக்கிய வடிவங்கள். அதோடு புதிய, தரமான இலக்கியம் என்பது பற்றிய பிரக்ஞை அவருக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. எழுத்தாளன் என்பதில் பெருமிதமும் விமர்சனங்களைப் பற்றிக் கவலை கொள்ளாத  கர்வமும் உண்டு. இதனாலேயே இவருடைய விமர்சனங்களிலும் மூர்க்கத்தனம் தெரிந்து எழுத்தாளர்களைப் பெரிதும் எரிச்சல் படுத்தியிருக்கிறது. அண்மையில் மலேசியாவில் இவரைக் கண்டவர்கள் இதனை நேரில் அறிந்திருப்பார்கள்.

காடு 474 பக்கங்கள் கொண்ட பெரும் நாவல். காடுகள் பற்றி சில நாவல்கள் தமிழில் உண்டு. காட்டை அழிப்பதைப்பற்றிய சா. கந்தசாமியின் சாயாவனம் அதில் முக்கியமானது. அதில் கத்தநாயகன் காட்டை வெல்கிறான். ஆனால் ஜெயமோகனின் இந்த நாவலில் காடே கதாநாயக அந்தஸ்து பெற்று அனைத்தையும் வெல்கிறது.

நாவலின் எல்லாப் பக்கங்களிலும் நாம் காட்டைச் சந்திக்கிறோம். அதன் மரங்கள், பூச்சிகள், விலங்குகள், மழை, நீரோடைகள், காய்ந்த சருகுகள், மலைகள், பள்ளங்கள், காடுவாழ் மக்கள், அவர்களின் தெய்வங்கள் என அனைத்தும் பார்க்கிறோம். மொத்ததில் காடு அதன் மர்மம், கொடுமை, ஆக்கினை, வீரியம் ஆகிய அனைத்துடனும் சித்தரிக்கப் படுகிறது.

இந்தக் காடு தமிழ்நாட்டு மலையாள எல்லையில் உள்ளது. அதன் மக்கள் அதிக மலையாளம் கலந்த ஒரு மொழி பேசுகிறார்கள். அதில் ஒரு 30 முதல் 40 விழுக்காட்டுச் சொற்கள் எனக்குப் புரியவில்லை. இருந்தும் வாசகப் பயணத்தை அது தடை செய்யவில்லை. கிரிதரன் என்ற ஒரு நாயகன் இருக்கிறான். காட்டில் சாலை அமைக்கும் காண்டிராக்டரிடம் வேலை செய்கிறான். காட்டிலேயே முகாம் அடித்து வாழ்கிறான். அந்த மக்களோடு பழகி ஒரு மலைப் பெண்ணைக் காதலிக்கவும் செய்கிறான்.

ஆனால் ஜெயமோகன் தனது எந்த நாவலிலும் தனது தலைமைப் பாத்திரங்கள் மேல் கருணை உள்ளவர் அல்ல. ஆகவே அந்தக் காதல் ஒன்றுமில்லாமல் போவது மட்டுமன்றி கிரியின் இறுதி நாளில் அவன் பெண்டாட்டியை அடித்து, பிள்ளையால் ஒதுக்கப்பட்டு, சுருட்டுப் பிடித்துக்கொண்டு தனிமையில் வாழும் இயலாமையில்தான் முடிக்கிறார்.

கதையின் செறிவான நிகழ்வுகள் வாசகன் முன்னறிந்து சொல்ல முடியாத திசைகளுக்குள் செல்கின்றன. எப்படி நமது அன்றாட வாழ்விலும் அடுத்து என்ன நடக்கும் என்று சொல்ல முடியாமல் இருக்கிறதோ, அப்படியே இவர் கற்பித்துக் கொண்ட கதயையும் செலுத்துகிறார். இதனால் கதையில் எப்பொழுதும் சோர்வில்லாத திருப்பங்கள் தோன்றிக்கொண்டே உள்ளன.

ஆனாலும் இந்த நாவலில் அவனுடைய இந்த வாழ்வு என்பது முக்கியமானது போல் நமக்குத் தோன்றவில்லை. நாவல் கிரிதரன் பற்றியதல்ல. அவனைச் சுற்றியும் அவன் மனசுக்குள்ளும் காடு நடத்தும் விளையாட்டுக்களே இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

காடு பற்றிய இவ்வளவு விவரணைகளைத் தான் தர முடிந்ததற்கு காட்டுத் துறை வல்லுநர் தியோடோர் பாஸ்கரன் தந்த விளக்கங்கள் உதவியதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் கொஞ்சம் சொந்த அனுபவமில்லாமல் இவ்வளவு எழுதி வாசகனையும் அந்தக் காட்டின் அனுபவங்களில் தோய்த்தெடுப்பது முடியாது.

இந்தக் கதையில் ஒரு சிறப்பு அம்சமாக ஒரு காட்டுத் துறை மேலாளரைப் படைத்து அவரை சங்க இலக்கியங்களில் விருப்பமுள்ளவராக்கி சங்க இலக்கிய விருந்தையும் படைத்திருக்கிறார். இடையிடையே கூடுதல் சுவை கூட்டுவனவாகவை அமைகின்றன.

இந்த நாவலைக் கையிலெடுக்கும் வாசகர்கள் இன்னும் இரு சுவைகளுக்கும் தயாராக இருக்க வேண்டும். அதில் ஒன்று காமம். மற்றொன்று நகைச்சுவை. இரண்டும் வலிந்து தரப்படாமல் கதையோடு இணைந்து ஒத்திசைவாகவே வருகின்றன.

காடு தமிழுக்குத் தரப்பட்ட அரிய கொடைதான். புத்திலக்கியம் படைக்க தமிழ் மொழியை எப்படி மிகுந்த நெகிழ்ச்சியோடு கையாளலாம் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

Posted in Ilakkiyam, Jeyamohan, Kaadu, Kadu, Marathadi, Maraththadi, Novel, Re Karthigesu, ReKa, review, Tamil, Tamil Literature, Yahoo Group | 2 Comments »

Thamizh Viduthalai Koottani’s Anandha Sankari gets UNESCO Award

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2006

ஆனந்த சங்கரிக்கு ஐ நா மன்ற விருது

தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி அவர்களுக்கு, அஹிம்சை மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தியதற்கான ஐ.நா மன்றத்தின் யுனெஸ்கோ-மதன் ஜீத் சிங் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனந்த சங்கரிக்கு ஐநா அமைப்பின் விருது வழங்கப்பட்டுள்ளது
தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் ஆனந்த சங்கரி

ஒரு லட்சம் அமெரிக்க டோலர் மதிப்புள்ள இந்த விருது ஒரு இலங்கை தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல்முறை.

இந்த விருது வழங்கல் குறித்து யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், ஜனநாயகம் மற்றும் மோதல் தீர்வுக்காக கடுமையாக பாடுபட்டவர் ஆனந்தசங்கரி என்றும் அவர் தமிழர்களின் லட்சியம் குறித்த விழிப்புணர்வை பேச்சுவார்த்தை மூலம் அதிகரிக்க பங்களிப்பை செய்தவர் என்றும் அதே சமயத்தில், இலங்கையில் வன்முறையற்ற தீர்வுகளுக்காகப் பாடுபடவும் , பயங்கரவாதத்தை எதிர்க்கவும் முயன்றார் என்றும் கூறியுள்ளது.

யுனெஸ்கோவின் இந்த விருது ஆனந்தசங்கரிக்கு சர்வதேச சகிப்புத்தன்மை தினமான நவம்பர் 16ல் வழங்கப்படுமென்று அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

இந்த விருது தொடர்பாக ஆனந்த சங்கரி அவர்கள் வழங்கிய செவ்வியில் நேயர்கள் தமிழோசையில் கேட்கலாம்.

Posted in Anandha Sankari, Anantha Sankari, Award, BBC, Eezham, Mathan Jeet Singh, Mthan Jeet Singh, Politics, Sri lanka, Tamil, Thamizh Viduthalai Koottani, UNESCO | 2 Comments »

Happy Birthday TK Chidambaranathan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2006

“ரசனைத் தெய்வம்’

குரு. மனோகரவேல்

“”ரஸத்திலே தேர்ச்சிகொள்” என்று பாரதியார் தனது புதிய ஆத்திச்சூடியில் அறிவுறுத்துவதுபோல், ரசனை உணர்வுக்கும் பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது.

உண்பதற்கும் உடுப்பதற்கும் நடப்பதற்கும் பேசுவதற்கும் குழந்தைகளுக்குப் பயிற்சி தேவைப்படுவதுபோல், மனிதர்களுக்கு ரசிப்பதற்கும் பயிற்சி அளிப்பதில் தவறில்லை.

தமிழில் உள்ள இலக்கிய வளங்களையும் கலை நுட்பங்களையும் உணர்ந்து அறிந்து ரசித்துப் பெருமிதம் கொண்டவர் டி.கே. சிதம்பரநாதன். “”மாந்தருள் ஒரு அன்னப்பறவை” என்றும் “”ரசிகமணி” என்றும் ரசனை நாயகனாக இருந்த டி.கே.சி குற்றாலத்தில் “”வட்டத்தொட்டி” என்று அமைப்பு ஏற்படுத்தி, ரசனையையும் ஒரு கலையாக வளர்த்தார். அற்புதமானவைகளையெல்லாம் உணர்ந்து உணர்ந்து, வியந்து வியந்து ரசித்தார்.

தமிழின் செம்மையில் ஆழ்ந்து, இலக்கியத்தின் இனிமையில் இசைந்து, கலைகளின் நுட்பத்தில் கனிந்து ரசனை உணர்வை ஒரு வேள்வியாக நடத்தியவர் டி.கே.சி. அவரது வட்டத்தொட்டி அமைப்பில் ராஜாஜி, கல்கி, ஜஸ்டீஸ் மகராஜன், பாஸ்கர தொண்டைமான் போன்ற பேரறிஞர்களுடன் இலக்கியச் சுவையையும் பலவித கலைகளின் ரசனையையும் உரையாடல்களாகவும் கடிதங்களாகவும் வெளிப்படுத்தித் தமிழ்மொழியின் உன்னதத்தை உலகம் உணர்ந்திடச் செய்தவர்.

எந்த ஒரு கலைஞனுக்கும் தனது படைப்பு பிறரால் ரசிக்கப்படுகிறது என்ற நிலையில்தான், தான் படைத்ததன் ஆனந்தப் பயன் பெற முடியும். ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தாயின் நிலை அது.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதைகளில் மிகவும் தோய்ந்து உள்ளத்தைப் பறி கொடுத்தார் ரசிகமணி. குழந்தையுள்ளத்துடன் அவர் குறிப்பிடுகின்றார்: “”கண்ணாரக் காண்பதற்கு ஒரு கவிஞர் கிடைத்துவிட்டார் என்று”. இதை ஊர்ஊராகப் பிரசாரமும் செய்தார். ஓர் இலக்கிய அரங்கில் பேசும்போது, கவிமணியின் பாடல்களைப் பாடிய ரசிகமணி, கவிஞருடைய இதயத்தோடு ஒட்டிப் பாடலோடு கரைந்து விட்டார். பாராட்டுரையைக் கேட்டுக் கொண்டிருந்த கவிமணி அப்படியே உருகிவிட்டார்.

“”என்னைப் போன்ற கவிஞனுக்கு உயிர்மூச்சைக் கொடுப்பது பாராட்டுத்தான். எத்தனையோ கவிக் குழந்தைகளைப் பெற்றுப் போட்டுவிட்டு அவைகளின் அருமை தெரியாமல் இருந்தது. ஆனால் டி.கே.சி. அந்தக் குழந்தைகளை எடுத்துக் குளிப்பாட்டி, உச்சிமோந்து, தலைசீவிப் பொட்டிட்டு, முத்தமிட்டுக் கொஞ்சிக் குலாவும்போதுதான் “நான் பெற்ற குழந்தை இவ்வளவு அழகாயிருக்கிறதா’ எனப் புரிகிறது” என்று சொல்லி, வியப்பும் களிப்பும் அடைந்தார்.

தாவரம் முதல் விலங்கு வரையான பலவித உயிரினங்களை விட மனிதன் உயர்ந்தவனாகக் கருதப்பட நகைச்சுவை உணர்வு போன்று எத்தனையோ அம்சங்கள் காரணம். ஆனாலும் அவை எவற்றுக்கும் அடிப்படைத் தேவை ரசனை உணர்வே.

ரசிக்கின்ற ரசனையின் மூலமாகத்தான் கலைகளும் இலக்கியங்களும் அதற்குத் தகவே மொழியும் பொலிவுறுகின்றது.

ஒவ்வொரு தனிமனிதனும் தன் பெயருக்கு முன் தந்தை பெயரின் முதலெழுத்தைச் சேர்த்துத்தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். ரசிகமணி டி.கே. சிதம்பரநாதன் தமிழ் மற்றும் கலை என்பவற்றின் முதலெழுத்துகளையே தன் பெயருடன் சேர்த்து டி.கே.சி. என்றே வைத்துக்கொண்டாரோ எனக் கருதும் வகையில் தமிழைப் பெரிதும் நேசித்தவர். கலைகளை மிகவும் ருசித்தவர்.

அதுமட்டுமல்ல; திருவள்ளுவர் மற்றும் கம்பர் என்ற பெயர்களின் முதல் எழுத்துகளையே, தனது பெயருக்கு முன்எழுத்துகளாகச் சேர்த்திருப்பாரோ என்றும் கருதிடும் வகையில், திருவள்ளுவர் மீதும் கம்பர் மீதும் அவருக்கு ஆழ்ந்த பிடிப்பும் பிணைப்பும் இருந்தது.

திருவள்ளுவரின் அறிவுத்திறத்தை ரசிப்பதற்கு ஒரு கம்பன் வரவேண்டி எழுநூறு ஆண்டுகள் காத்திருந்தோம். கம்பனின் அறிவுத் திறத்தை ரசிப்பதற்கு ஒரு சிதம்பரநாதன் வருவதற்கு ஆயிரம் ஆண்டுகள் கம்பன் காத்திருந்தார் என்று நீதிபதி மகராஜன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ரசிகமணி சிதம்பரநாதனின் கலை நுட்ப, இலக்கிய நுட்ப ரசனையை ரசிப்பதற்கு நாமெல்லோரும் உடனே தொடங்குவோம்.

கிரேக்க – ரோமானிய சமயங்களில் காதல் கலைக்குத் தெய்வங்கள் குறிப்பிடப்படுவதுபோல், இந்திய சமயங்களிலும் மன்மதனைப் போற்றுகின்றோம். அதுபோல் ரசனைக் கலைக்கும் தெய்வமாக டி.கே.சி.யைப் போற்றி மகிழலாம். ரசனைத் தெய்வம் டி.கே.சி. எனலாம்!

(இன்று ரசிகமணியின் 125-வது பிறந்த நாள்)

——————————————————————————————————————————————————–

தமிழுக்கு பெருந்தொண்டாற்றியவர் டி.கே.சி.: வைகோ புகழாரம்

திருநெல்வேலியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற டி.கே.சி. விழாவில் கி.ராஜநாராயணன் எழுதிய “அன்னப்பறவை’ நூலை மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட முதல் பிரதியை பெற்றுக் கொண்டார் நீதிபதி டி.என். வள்ளிநாயகம். உடன் (இடமிருந்து) மதிமுக புறநகர் மாவட்டச் செயலர் ப.ஆ.சரவணன், கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத், எழுத்தாளர் மதுரா, இலக்கிய விமர்சகர் தி.க. சிவசங்கரன், டி.கே.சி.யின் குடும்பத்தைச் சேர்ந்த தீப. நடராஜன், குட்டி என்ற சண்முக சிதம்பரம், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் கே.எம்.ஏ. நிஜாம்.

திருநெல்வேலி, நவ.3: தமிழுக்கு பெருந்தொண்டாற்றியவர் டி.கே.சி. என மதிமுக பொதுச் செயலர் வைகோ புகழாரம் சூட்டினார்.

பாளையங்கோட்டை அரசு ஊழியர் குடியிருப்பில் உள்ள மறுமலர்ச்சி மையம் சார்பில் நெல்லை சந்திப்பில் சனிக்கிழமை இரவு சி.ஏ.ஆர். குட்டி என்ற சண்முக சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற ரசிகமணி டி.கே.சி. விழாவில், டி.கே.சி. குறித்து கி. ராஜநாராயணன் எழுதிய “”அன்னப்பறவை” என்ற நூலை வெளியிட்டு வைகோ மேலும் பேசியதாவது:

டி.கே.சி. இலக்கியம் மட்டுமின்றி எல்லா தளங்களிலும் தீர்க்கமான பார்வை கொண்டவர். அவரது இலக்கிய ஆர்வத்தை போன்றே அவரது வீட்டு விருந்தும் பிரசித்தி பெற்றது. டி.கே.சி. அவரது நண்பரான நீதிபதி மகராஜபிள்ளைக்கு எழுதிய கடிதங்கள் சுவையானவை.

திருநெல்வேலியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெரியாரின் படத்தை திறந்து வைத்தவர் டி.கே.சி. அந்த வகையில் பெரியாரின் பேரன்களில் ஒருவரான நான் அவரை குறித்து பேச தகுதி உள்ளது.

அனைவரிடமும் அன்பு பாராட்டியவர் டி.கே.சி. இசைக்கு பெருமை சேர்க்கும் வகையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் அவர்.

கம்பரின் ராமாயணத்தில் மொத்தமுள்ள சுமார் 10 ஆயிரத்து 500 பாடல்களில் 1515 பாடல்களை மட்டுமே டி.கே.சி. ஏற்றுக் கொண்டார். அதில் 597 பாடல்களில் திருத்தங்களை செய்தார். அந்த திருத்தங்கள் குறித்த சர்ச்சைகளும் உண்டு.ஆனால், அவர் செய்த திருத்தங்கள் பொருத்தமானவை. அவ்வாறு தமிழுக்கு பெருந் தொண்டாற்றியவர் டி.கே.சி.

இந்த மண்ணில் பிறந்த ரா.பி. சேதுப்பிள்ளை, புதுமைப்பித்தன், அண்ணாமலை செட்டியார் போன்றோருக்கு தொடர்ந்து விழா எடுக்க வேண்டும்.

டி.கே.சி. கல்கியில் எழுதிய கம்பராமாயணம் குறித்த தொடரில் தனக்கு பிடித்த பாடல்களை தேர்ந்தெடுத்து எழுதினார். மகன் மீது தேரை செலுத்தி நீதி செய்தது மனுநீதிச் சோழன் காலம். அதுகுறித்தெல்லாம் டி.கே.சி. கூறியுள்ளார். ஆனால், மகனுக்காக எல்லாவற்றையும் இழப்பது இந்த காலம்.

இலங்கைப் பிரச்னை:போரில் கொல்லப்பட்டவர்களை அவரவர் நம்பிக்கையின்படி அடக்கம் செய்ய அனுமதிக்கும் நடைமுறை புராண காலத்திலேயே இருந்துள்ளது. ஜெனிவா உடன்படிக்கையின்படி, தம்மிடம் பிடிபிட்ட சிங்கள ராணுவ வீரர்களை மிகுந்த மரியாதையுடன் (விடுதலைப் புலிகள்) நடத்துகின்றனர். ஆனால், அனுராதபுரத்தில் நடந்த தாக்குதலில் இறந்த 21 பேரின் சடலங்களை நிர்வாணமாக வைத்து சிங்கள ராணுவத்தினர் கூத்தாடி உள்ளனர். தமிழ்ச் செல்வனுக்கு தமிழும், தமிழர்களும் இருக்கும் இடத்தில் எல்லாம் புகழ் பாடப்படும் என்றார் வைகோ.

வைகோ வெளியிட்ட நூலின் முதல் பிரதியை நீதிபதி டி.என். வள்ளிநாயகம் பெற்றுக் கொண்டு நூலை குறித்து பேசினார்.

விழாவில், டி.கே.சி.யின் குடும்பத்தினரான தீப. நடராஜன், தீப. குற்றாலிங்கம், ராமசாமி, செல்லையா ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கெüரவித்தார் வைகோ.

விழாவில், இலக்கிய விமர்சகர் தி.க. சிவசங்கரன், எழுத்தாளர் மதுரா, நாஞ்சில் சம்பத் ஆகியோர் பேசினர்.

————————————————————————————————————————
நகர்வலம்: ரரசிர்களின் மனதில் ரசிகமணி

ரவிக்குமார்

தங்களின் படைப்புகளால் அடைந்த பெருமையை விடவும், டி.கே.சியால் பாராட்டப்பட்டதன் மூலம் மகிழ்ந்த படைப்பாளர்கள் நிறையப் பேர். இசை, நடனம் என கலையின் எந்த வடிவமாக இருந்தாலும் சரி, அந்தக் கலை, பண்டிதர்களிடம் இருந்தாலும் சரி, பாமரர்களிடம் இருந்தாலும் சரி அதை தன்னுடைய உயர்ந்த ரசனையின் மூலம் உலகுக்கு உரைத்தவர் ரசிகமணி டி.கே.சி. அவரின் நினைவு விழாவை சமீபத்தில், சென்னை, தக்கர் பாபா வித்யாலயா வளாகத்தில் நடத்தியது, மல்லிகை காந்தி கல்வி நிலையத்தின் கலை-இலக்கியப் பிரிவு. விழாவிலிருந்து சில துளிகளைத் தருகிறோம்:

இலக்கியத்தின் பல்வேறுவிதமான கூறுகளையும் அலசி ஆராய்ந்து, படைப்பாளிகளையும் தன்னுடைய ரசிப்புத் திறனால் மகிழ்வூட்டிய டி.கே.சி.யின் நினைவுகளை, தனித் தனியாக சிலரைக் கொண்டு பேசவைத்தது, நிகழ்ச்சிக்கு வந்திருந்த இந்தத் தலைமுறையினரிடமும் டி.கே.சி.யின் ரசிப்புத் திறன் குறித்த ஆவலைத் தூண்டியது.

“”நீட்டலும், குறைத்தலும் மூலம் ஒரு படைப்பைப் பற்றி சொல்வதுதான் ரசிகமணியின் கலைப் பண்பு. அவர் மேல்தட்டு மக்களின் கலை வடிவங்களை பாமரனுக்கும் புரியும் வகையில் எளிமையாகக் கூறிய அதேநேரத்தில், நாட்டுப்புறப் பாடல்களின் மேன்மையைப் பண்டிதர்களும் உணர்ந்துகொள்ளும் வகையில் உரைத்தவர். பொதுவாகவே நாட்டுப்புறப் பாடல்களில் என்ன இருக்கு? என்று கேட்பவர்கள் அதிகம். பொருளாதாரம், காதல், வரலாறு, ஈகை… எல்லாமே நாட்டுப்புறப் பாடல்களில் இருக்கின்றது என்பதை தகுந்த ஆதாரங்களோடு வெளிப்படுத்தி, அந்தப் பாடல்களுக்கு பண்டிதர்களிடத்திலும் மரியாதை வருவதற்குக் காரணமாக இருந்தார். மொத்தத்தில் பாராட்டை ஒரு கலையாகவே செய்தவர் டி.கே.சி.” -என்றார் டி.கே.சியின் கலைப்பார்வை குறித்துப் பேசிய பி. சீனிவாசன்.

“”கற்பனை, மொழித்திறன் எல்லாவற்றிலும் கம்பனை மிஞ்சிய கவிஞன் இல்லை என்பார் டி.கே.சி. கம்ப ரசத்தின் அருமை, பெருமைகளை பாமரனுக்கும் புரியும் வண்ணம் எளிமையாக உரைத்தவர். கம்பனுக்குப் பிறகு, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் படைப்புகளை உயர்வாகப் பாராட்டியவர் ரசிகமணி.

வெள்ளைக்கால் சுப்பிரமணிய முதலியாரின் 80-வது பிறந்த நாளுக்காக நடந்த விழாவில், அவரை வாழ்த்தி ஒரு வாழ்த்துப்பா வந்தது. எழுதியவர் பற்றிய குறிப்பும் அதில் இல்லை. ஆனாலும் அந்த வாழ்த்துப்பாவின் அமைப்பையும், அதில் இருந்த உவமைகளையும், இலக்கியத் தரத்தையும் பார்த்து, அந்த வாழ்த்துப் பாவை எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைதான் என்று மிகச் சரியாக அறிவித்தாராம் ரசிகமணி.

ரசிகமணியின் மகனும், கவிஞருமான தீபன் மறைவையொட்டி கவிமணி ஓர் இரங்கற்பாவை எழுதியிருக்கிறார். அந்த இரங்கற்பாவைப் படித்த ரசிகமணி, அந்த துக்கமான தருணத்திலும், “உங்களின் கவிதை எனக்கு உயிர் கொடுத்திருக்கிறது’ என்று கவிமணிக்கு பாராட்டுக் கடிதத்தை எழுதியிருக்கிறார். டி.கே.சியின் பாராட்டும் பண்பை பளிச்சென்று நமக்குக் காட்டும் நெகிழ்ச்சியான நினைவு இது”- என்றார் டி.கே.சியின் கவிதானுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ராஜாராமன்.

நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது டி.கே.சியின் பேரனான தீப. நடராஜனின் பேச்சு.

“”காந்தி மகாத்மா என்றால், டி.கே.சி. மகான். நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தவர் காந்தி; தமிழுக்கு விடுதலை வாங்கித் தந்தவர் டி.கே.சி.

1922-ம் ஆண்டு ராஜாஜி சிறையில் இருக்கிறார். சிறைக்குள் எங்கிருந்தோ கசிந்த நாகஸ்வர ஓசை அவரின் காதில் ஒலிக்கிறது. இப்படியொரு இசையை அனுபவித்து நாம் கேட்டு விட்டோமே என்று நினைத்துக் கொண்டார். இந்த விஷயங்களை ராஜாஜி அவர் எழுதிய “ஜெயில் டைரி’யில் பதிவுசெய்திருக்கிறார். அப்போது டி.கே.சியின் தொடர்பு அவருக்கு ஏற்படவில்லை. டி.கே.சியுடன் ராஜாஜிக்கு ஏற்பட்ட நட்பு, அவரின் ரசனையை வேறு தளத்துக்கு மாற்றியது. “மொழி என்பது இலக்கியத்தில் இல்லை. மக்களின் நாவில் இருப்பது…’ என்னும் டி.கே.சியின் கருத்தை ஏற்றுக் கொண்டதாலேயே தன் பெயரிலிருந்து “இ’யை எடுத்துவிட்டு, “ராஜாஜி’ என்றே தன் பெயரை எழுதினார். மக்களின் பேச்சு வழக்கில் “ராமன்’ என்றே தான் எழுதிய ராமாயணத்தில் குறிப்பிட்டார் ராஜாஜி.

கல்வியில், இசையில், இலக்கியத்தில் இப்படி எந்தத் துறையாக இருந்தாலும் அதிலிருந்த பண்டிதத்தனத்தை தன்னுடைய இயல்பான பாராட்டும் போக்கால் அடியோடு மாற்றியவர் டி.கே.சி.

நாட்டிய மேதை பாலசரஸ்வதியிடம் குற்றாலக் குறவஞ்சிக்கு நாட்டியம் அமைக்கக் கொடுத்தவர் ரசிகமணி டி.கே.சிதான்.” என்றார் நெகிழ்ச்சியுடன் தீப. நடராஜன்.

நிகழ்ச்சியின் இறுதியாக, புகழ்பெற்ற நடனக் கலைஞரான பார்வதி ரவி கண்டசாலாவிடம் நாட்டியம் பயிலும் மாணவிகள் குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகத்தை கண்களுக்கு விருந்தாக நிகழ்த்தினர்.

தீபாவளிக்கு வந்திருக்கும் புதிய திரைப்படங்கள், சளசளவென விடாமல் மழை பொழிந்துக் கொண்டிருக்கும் ஞாயிற்றுக் கிழமை, விதவிதமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்… இவ்வளவையும் பொருட்படுத்தாமல் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்களிடம் ரசிகமணி டி.கே.சி. மானசீகமாக உறைந்திருந்தார்!

Posted in 125, Bhaskara Thondaimaan, Birthday, Desiga Vinayagam, Justice Maharajan, Kalki, Kavimani, Rajaji, Rasigamani, T K Si, Tamil, TK Chidambaranathan, TKC | குறிச்சொல்லிடப்பட்டது: | 2 Comments »

Simple Action Plan for a Facelift

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2006

பாழாகலாமா பொதுக் கட்டடங்கள்!

யோ. கில்பட் அந்தோனி

அனைத்துத் துறையிலுமுள்ள பொதுக் கட்டடங்கள் பெரும்பாலும் தகுந்த பராமரிப்பு இல்லாமல் சீர்கெட்டு மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பது நாம் அன்றாடம் காணும் காட்சி! இதனைத் தகுந்த கவனம் செலுத்தி அவ்வப்போது பழுது பார்ப்பதில்லை. இதனால் சிறிது காலத்திற்குள்ளாகவே இவை மிகவும் பழுதடைந்து சரி செய்ய முடியாத நிலையை அடைகின்றன. இறுதியாக இந்தக் கட்டடங்கள் குறுகிய காலத்திலேயே இடித்துத் தள்ளப்பட வேண்டிய நிலைக்குச் செல்கின்றன. இதனால் பொதுமக்கள் பணம் வீணடிக்கப்படுவதுடன் நாட்டின் செல்வங்கள் அழிவுப் பாதைக்குச் செல்கின்றன. இதனைத் தடுப்பது நமது கடமையாகும். இதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

1. தகுந்த அணுகுமுறை: தொழில் நுட்ப வல்லுநர்களும், அதிகாரிகளும் பராமரிப்பு வேலைகளை எளிதான முறையில் மேற்கொள்ள முதலில் அதனை வகைப்படுத்த வேண்டும்.

அ) சிறிய பழுதுகள், ஆனால் குறுகிய காலத்திலேயே பெரிய அளவில் சிதைவு ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

இத்தகைய வேலைகளைத் தள்ளிப்போட முடியாது. ஒரு குறிப்பிட்ட வேலையைத் தொடங்குவதற்கு முன் அந்தக் கட்டடத்தைப் பயன்படுத்தும் தலைமைப் பொறுப்பு அலுவலரிடம் கலந்து ஆலோசித்து சீர் செய்யப்பட வேண்டிய இடங்களைப் புகைப்படங்கள் எடுத்துக் கணினி மூலம் அதனைச் சிறு குறிப்புகளுடன் பதிவு செய்ய வேண்டும். பணிக்கு ஆகும் செலவுகளை உத்தேச அடிப்படையிலும் சரியான அளவுகளைக் கொண்டும் மதிப்பீடு செய்யலாம்.

இந்தப் பணிகளைச் செய்ய இளம் வயது பட்டதாரி மற்றும் பட்டயச்சான்று பொறியாளர்களை ஒப்பந்தக்காரர்களாகத் தேர்வு செய்யலாம். இவர்களுக்குத் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கான செலவுகளுக்குக் கட்டடத்தைப் பயன்படுத்தும் தலைமை அதிகாரி அங்கீகாரம் கொடுக்கலாம். பழுது வேலைகளுக்கு, சாதாரண வேலைகளுக்கு அளிக்கப்படும் பணத்தைக் காட்டிலும் அதிகமாகக் கொடுக்க வேண்டும். பொதுவாக ஒப்பந்தக்காரர்களும், பொறியாளர்களும் சிறிய வேலைகள் செய்வதற்கு விருப்பப்படுவதில்லை. இதனால் சிறிய பணிகள் பெரிதாகும் வரை காத்திருக்க முனைவார்கள். இந்த வகையான அணுகுமுறை கட்டடத்தைச் சீர்குலைத்துச் சிதைத்து விடும்.

ஆ) பொதுவாக மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கட்டடங்களுக்கு வெள்ளையடிப்பது வழக்கம். இதைச் செய்யும்போது சிறிய பழுதுகளைச் சரிசெய்வது மிகவும் சுலபம். இந்த வழக்கத்தைச் சரிவரக் கடைப்பிடித்தால் கட்டடத்தை நீண்ட நாள்கள் பயன்படுத்தலாம். இந்தப் பணிகளுக்குக் கட்டடத்தைப் பயன்படுத்தும் தலைமை அதிகாரி அங்கீகாரம் கொடுக்கலாம்.

இ) பெரிய அளவு பழுதுகள் – முழு அளவில் செய்யும் வேலைகள் பெரிதாக இருக்க வாய்ப்புள்ளவை. இதற்கு அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்படும். இதனால் பணிகள் தாமதப்படலாம். ஆகவே சிறிய மற்றும் அவசர வேலைகளையும் வழக்கமான வெள்ளையடிக்கும் வேலைகளையும் தனித்தனியே உரிய நேரத்தில் செய்வது அவசியம். பெரிய அளவு பழுதுகளுக்கு விரிவான மதிப்பீடுகள், வரைபடங்கள் மற்றும் புகைப்படங்கள் தேவைப்படும். இதன் செலவு மதிப்பீடுகளுக்கு உரிய உயர் அதிகாரிகள் அங்கீகாரம் கொடுக்கலாம்.

2. கட்டடப் பொறுப்பு அதிகாரி: ஒவ்வொரு கட்டடத்திற்கும் ஒருவர் பொறுப்பு அதிகாரியாக இருக்க வேண்டும். இவர் இந்தக் கட்டடத்தைப் பயன்படுத்தும் தலைமை அலுவலராக இருப்பது நல்லது. இவர் 6 மாதத்திற்கு ஒருமுறையாவது கட்டடத்தில் காணப்படும் குறைகளை, சீர்கேடுகளைப் பதிவு செய்து, அதன் நகலை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். இதில் புகைப்படங்கள் இணைப்பது அவசியம். பணிகள் நடக்கும் காலங்களில் பொறியாளர்களுடன் கலந்து ஆலோசித்துத் தகுந்த முடிவுகளை எடுக்க வேண்டும்.

3. நிதி ஒதுக்கீடு: மேற்கூறப்பட்ட மூன்று வகைப் பராமரிப்புப் பணிகளுக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். முதல் இருவகைப் பணிகளுக்கு எந்தவித காலதாமதமும் இல்லாமல் உடனடியாக நிதி வழங்கலாம். பெருமளவில் தேவைப்படும் பணிகளுக்கு நிதிநிலையைப் பொறுத்து நிதி வழங்கப்படலாம்.

4. ஆராய்ச்சித்துறை: மக்கள், முன்கூட்டியே திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றுக்குத் தகுந்த முக்கியத்துவம் அளித்துச் செயல்பட்டால் ஒவ்வொரு பணியிலும் மிகுந்த பலனை வெளிக்கொணர இயலும். மிகச் சாதாரண வேலைகளில்கூட நல்ல தொழில் நுணுக்கங்கள் ஆராய்ச்சிகள் மூலம் அவ்வப்போது புதிது புதிதாக வெளியிடப்படுவதுண்டு. அதனை நாம் செயல்படுத்தி வெற்றி காணலாம். ஆராய்ச்சி மையங்களில் பொறியாளர்களுக்கும் தொழில் நுட்பப் பணியாளர்களுக்கும் தகுந்த பயிற்சி அளிக்கலாம்.

5. சுற்றுப்புறத்தூய்மை: கட்டடத்தின் பலமும் நலமும் அதைத் தூய்மையாக வைத்துக் கொள்வதைப் பொறுத்து அமையும். ஆனால் ஒரு பொதுக்கட்டடத்தைப் பார்க்கும்போது அதில் காணப்படும் குப்பைகள், ஒட்டடைகள், அழுக்கடைந்த சுவர்கள் மற்றும் தரைகள், நாற்றமெடுக்கும் கழிப்பறைகள், உடைந்த குழாய்கள், உடைந்த நாற்காலி – மேசைகள், கழிவு நீர் தங்குமிடங்கள் ஆகியவை நமது மனத்தைச் சம்மட்டி கொண்டு தாக்குவதுபோல் இருக்கின்றன. இதைச் சரிசெய்ய ஒரு வருடத்தில் மூன்று நாள்கள் தனித்தனியாக தூய்மைப் பணிக்கு ஒதுக்கலாம்.

அ. மொட்டை மாடியைத் தூய்மைப்படுத்தும் நாள்: மொட்டை மாடி தூய்மை நாளன்று அலுவலர்கள், பணியாளர்களின் துணை கொண்டு மொட்டைமாடி, அதில் உள்ள நீர்த்தொட்டி, சன்னல் வெளிப்புற மேல்பகுதி, நுழைவாயில் மேல் அமையும் தளங்கள் போன்ற பகுதிகளைப் பார்வையிட்டு அதிலுள்ள குப்பைகள், பழைய பொருள்கள், உடைந்த மரச்சாமான்கள் அனைத்தையும் சுத்தம் செய்யலாம். இந்த நாளில் கட்டடத்தின் உட்பகுதியிலுள்ள படிக்கட்டு அறைகள், அறைமூலைகள், நடைபகுதிகள் ஆகியவற்றிலும் உள்ள பழுதடைந்த பழைய பொருள்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம். பொங்கல் திருநாளை ஒட்டி இந்தத் தூய்மைநாளைக் கொண்டாடினால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ஆ. கழிப்பறைத் தூய்மை நாள்: இந்தப் பணியை முழுமையாகப் பணியாட்களை வைத்துச் செய்ய வேண்டிவரும். முதலில் குழாய் பழுதுகள், வடிகால்கள் மற்றும் அனைத்து பிளம்பிங் வேலைகள் சரிசெய்யப்பட வேண்டும். கழிப்பறை சன்னல் மற்றும் கதவுகளை தச்சர் துணை கொண்டு சரிசெய்யலாம்.

கழிப்பறைப் பகுதி மற்றும் குழாய்கள் அமையும் பகுதிகளை வெள்ளையடித்து, கதவு – சன்னல்களை எனாமல் பெயின்ட் அடித்துச் சுத்தமாக வைத்தல் அவசியம். செராமிக் ஓடு மற்றும் பீங்கான் பேசின்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குகளையும், உப்புகளையும் தகுந்த வேதித் திரவங்களைக் கொண்டு சுத்தப்படுத்தலாம். இதற்கு ஆகும் செலவுகளை ஒவ்வொரு வருடமும் எந்தத் தயக்கமும் இல்லாமல் கொடுப்பது அவசியம்.

இ. சுற்றுப்புற மனைத் தூய்மை நாள்: பொது அலுவலகக் கட்டடத்தைச் சுற்றியுள்ள மனையைத் தூய்மைப்பகுதியாக மாற்ற வேண்டும். இங்கு செடிகள் மற்றும் மரங்கள் நடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வாகனங்கள் நிறுத்துமிடத்தைத் தெளிவாகக் குறிக்கலாம். உள்ளே உள்ள சாலைகளைச் செப்பனிடலாம். கழிவுநீர் செல்லும் வடிகால்களில் நிறைந்து கிடக்கும் குப்பைகளை முழுவதுமாக மாற்றலாம். மேலும் மனையின் எல்லைகளில் அமைந்துள்ள சுவர்கள், வாகன மற்றும் காவலர் அறைகள், வாயில்கள் அனைத்தையும் பழுது பார்க்கலாம்.

பழைய பழுதடைந்த எந்திரங்கள், வாகனங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தலாம். இந்தப் பழைய பொருள்களைக் கையாள மாவட்ட அளவில் தனியிடங்களைத் தேர்வு செய்யலாம்.

Posted in Action Plan, Advice, Care, Civic, Clean up, Dinamani, Environment, Gilbert Anthony, Mind Dump, Public Buildings, Suggestions, Tamil, Thoughts, Yo Gilbert Antony | Leave a Comment »

New Justices appointed for Madras High Court

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2006

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை, செப். 14: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். சிவகுமார் (52), கடலூர் மாவட்ட நீதிபதி ராஜசூரியா ஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதி சிவகுமாரின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் பெத்தான்வலசை. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. படித்து, புதுச்சேரி சட்டக் கல்லூரியில் பி.எல். படித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

1989-ல் சப் ஜட்ஜாக நியமிக்கப்பட்ட சிவகுமார், பல மாவட்டங்களில் நீதிபதியாகப் பணிபுரிந்தார். 1997-ல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இந்த ஆண்டு மே மாதம் சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஜி.ராஜசூரியா

கடலூர், செப். 14: நீதிபதி நீதிபதி ராஜசூரியா புதுவையைச் சேர்ந்தவர். 23-8-1951-ல் பிறந்தார். தந்தை கோவிந்தராஜ். தாயார் அம்மணி அம்மாள். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் மற்றும் எம்.எல். பட்டம் (முதல் வகுப்பு) பெற்றவர். புதுவை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பிரெஞ்சு சட்டத்தில் முதுகலை டிப்ளமோ படித்தவர்.

20-8-1975-ல் புதுவையில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். 9-1-1980-ல் புதுவையில் மாவட்ட உரிமையியல் நீதிபதியாக பதவி ஏற்றார். பின்னர் சார்பு நீதிபதியாகவும், மாவட்ட அமர்வு நீதிபதியாகவும் பணிபுரிந்தார்.

2005-ல் சென்னையில் குடும்ப நீதிமன்ற நீதிபதியாக இருந்தார், 4-5-2005-ல் கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக மாற்றப்பட்டார்.

Posted in BR Sivakumar, Chennai, High Court, Judges, Justices, Kadaloor, Madras, Puthucherry, Rajasooriya, Sivagangai, Tamil | Leave a Comment »

More Evidence against Karanataka Ministry

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2006

2-வது சி.டி. ஆதாரம் வெளியீடு

பெங்களூர், செப். 14: கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி மீதான ரூ. 150 கோடி லஞ்சப்புகாருக்கு ஆதாரமாக 2-வது விடியோ காஸட் வெளியிடப்பட்டுள்ளது.

முதல்வர் குமாரசாமி, உள்துறை அமைச்சர் எம்.பி.பிரகாஷ், வனத்துறை அமைச்சர் சி.சென்னிகப்பா ஆகியோர் மீது 150 கோடி லஞ்சப் புகாரை சட்ட மேலவை பாஜக உறுப்பினர் ஜனார்த்தன ரெட்டி கூறியிருந்தார். இதற்கு ஆதாரமாக ஒரு சி.டி. காஸட்டை கடந்த மாதம் ஜனார்த்தன ரெட்டி வெளியிட்டார்.

ஆனால் அந்த காஸட்டில் ஜனார்த்தன ரெட்டி புகார் கூறிய யாரும் இல்லை. இந்நிலையில் புதன்கிழமை இந்த லஞ்சப்புகார் தொடர்பான சி.டி.காஸட் புதன்கிழமை தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இதில் வனத்துறை அமைச்சர் சென்னிகப்பா காணப்படுகிறார்.

ஆனால் தெளிவாக இல்லை. அவரது குரலும் தெளிவாக இல்லை. சென்னிகப்பாவுக்கு எதிரே அமர்ந்துள்ள உள்ள நபரும் தெரியவில்லை. அதே சமயத்தில் அவருக்கு முன் மேஜையில் பணம் கட்டுக்கட்டாக கிடக்கிறது. இதுபோதாது இன்னும் வேண்டும் என்று சென்னிகப்பா கூறுவது கேட்கிறது. ஆனால் குரல் தெளிவாக இல்லை.

Posted in BJP, C Sennigappa, CM, Corruption, Deve Gowda, Government, Govt, HD Coomarasamy, Janarthana Reddy, Janatha Dal, Karnataka, Ministry, MP Prakash, Proofs, Tamil | Leave a Comment »