Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

1.5 mn Commercial (lorry) vehicles keep off roads in Karnataka – Truckers strike enters second day

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

3-வது நாளாக லாரி ஸ்டிரைக்: பல கோடி வர்த்தகம் பாதிப்பு

நாமக்கல், பிப். 23: தமிழகம் மற்றும் கேரளத்தில் 3-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

வேலை நிறுத்தம் 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது. இதனால், வட மாநிலங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தீப்பெட்டி, ஜவுளி, மஞ்சள், இரும்பு, உதிரிப் பாகங்கள், தொழிற்சாலை பொருள்கள் என அனைத்தும் மூன்று நாள்களாக வட மாநிலங்களுக்கு செல்லாமல் அப்படியே தேங்கி உள்ளன வட மாநிலங்களில் இருந்து வரும் கோழித் தீவன மூலப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், மார்பிள்ஸ், பர்னிச்சர்கள், காய்கறிகள், பழங்கள் வரத்தும் தடைபட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நீடித்தால் கோழித் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை மேலும் உயரும் அபாயமுள்ளது.

கர்நாடகத்தில் தமிழக லாரிகளை தடையின்றி இயக்கலாம்: போக்குவரத்துத் துறை விளக்கம்

சென்னை, பிப். 23: கர்நாடக மாநிலத்தில் தடையின்றி தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை திரும்பப் பெற வலியுறுத்தி, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

தமிழக லாரிகளை தடையின்றி கர்நாடக மாநிலத்தில் இயக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, இணைப் போக்குவரத்து ஆணையர் டி.நாராயணமூர்த்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தைச் சேர்ந்த வாகனங்களை கர்நாடகத்தில் இயக்கும் போது, வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜூன் மாதம் வரை வற்புறுத்தப்பட மாட்டாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

எனவே, தமிழக லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் எந்தவித தடையுமின்றி கர்நாடக மாநிலம் வழியாக தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி
தமிழ்நாட்டில் பலகோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

சென்னை, பிப்.24-

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளன.

லாரிகள் வேலைநிறுத்தம்

கர்நாடகத்தில் ஓடும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு லாரிகள் ஓடவில்லை.

இந்த போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மற்றும் கர்நாடகத்தின் வழியாக செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே கர்நாடகத்துக்கு புறப்பட்டு சென்ற லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

பல கோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

மேலும் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கர்நாடகத்துக்கு செல்ல வேண்டிய லாரிகள் புறப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்குள்ள பார்சல் அலுவலகங்களில் பார்சல்கள் குவிந்து உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தீப்பெட்டி, தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, மஞ்சள் போன்ற பொருட்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கூறினார்.

கோயம்பேடு மார்க்கெட்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக தக்காளி, கோஸ், கேரட், பீன்ஸ் போன்ற முக்கியமான காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காய்கறி வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜிடம் கேட்டபோது, “தினமும் 50 லாரிகளில் தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். நேற்றைய தினம் வழக்கமாக வரும் அனைத்து காய்கறிகளும் வந்து விட்டன. இன்றைய தினம் தான் வழக்கமாக வரும் லாரிகளில் காய்கறிகள் வருமா என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.

விலை உயர வாய்ப்பு

சென்னை கோயம்பேடு எம்.எம்.சி. உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சவுந்திரராஜன் கூறும்போது, “தக்காளி தவிர 60 லாரிகளில் மற்ற காய்கறிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருகின்றன. நேற்றைய தினம் வழக்கமாக வரவேண்டிய காய்கறிகள் வந்தன. இன்றைய தினம் குறைந்த அளவில்தான் காய்கறிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி குறைந்த அளவு காய்கறிகள் வருகின்ற பட்சத்தில் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது:-

வழக்கமாக ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், எண்ணை போன்ற பொருட்கள் கர்நாடகம் மற்றும் மராட்டியம், அரியானா, டெல்லி உள்பட பல வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். கர்நாடகத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் சுமார் 200 லாரிகள் மற்றும் கர்நாடகம் வழியாக செல்லும் லாரிகள் உள்பட சுமார் 1,500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ஈரோட்டில் பல கோடி போய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.எஸ்.கலியபெருமாள் கூறுகையில், கோவை மாவட்டத்திலிருந்து கர்நாடகத்திற்கு லாரிகள் செல்லாததால் தினமும் ரூ. 25 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

சேலம்

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-

லாரிகளுக்கு வேககட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவு தமிழக லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகக்கூடாது என்றால், காய்-கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அழுகும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் லாரியில் கொண்டு செல்லமுடியாமல் பாதிப்பு ஏற்படும். கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கால், சேலம் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சரக்குகள் ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பில் தேக்கம் அடைந்து உள்ளன.

இவ்வாறு சென்னகேசவன் தெரிவித்தார்.

வேலைநிறுத்தம் தொடரும்

இதற்கிடையே கர்நாடக லாரி உரிமையாளர் மற்றும் ஏஜெண்டுகள் சங்க நிர்வாகிகள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமையில் கவர்னரின் ஆலோசகர் தாரகன் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தங்கராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் எந்த ஒரு உறுதி மொழியும் கொடுக்கப்படாததால் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜி.ஆர்.சண்முகப்பா கூறினார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் பஸ், வாடகை கார், சுற்றுலா வேன் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பின்னூட்டமொன்றை இடுக