அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்கள்: விரயமாகும் அரசு நிதி
ப. இசக்கி
திருநெல்வேலி, பிப். 11: தமிழ்நாட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்படும் நூலகங்களால் அரசின் நிதி பெருமளவு விரயமாகும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
பொது நூலகத் துறையின் நூலகங்கள் உள்ள ஊராட்சிகளிலும் இந்த நூலகங்கள் கட்டப்படுவதால் ஒரே ஊராட்சியில் இரண்டு நூலகங்கள் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 12,618 கிராம ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவு செய்யும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஐந்து ஆண்டுகளில் இந்தப் பணிகளை முடிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,525 கிராமங்களை தேர்வு செய்து தலா ரூ. 20 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் கான்கிரீட் சாலை, தெரு விளக்குகள், குளம், இடுகாடு, சுடுகாடு, குடிநீர், விளையாட்டு, கிராம அங்காடிகள் என பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன.
அதில் நூலகம் அமைக்கும் பணியும் ஒன்று.
ஒவ்வொரு ஊராட்சியிலும் நூலகக் கட்டடம், இருக்கைகள், புத்தகங்கள் என்ற வகைக்கு கடந்த நிதியாண்டில் ரூ. 2.3 லட்சம் செலவு செய்யப்பட்டது. நிகழ் நிதியாண்டில் இந்தத் தொகை ரூ. 3.33 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, நூலகக் கட்டடம் கட்ட ரூ. 2.68 லட்சமும், இருக்கைகள், அலமாரிகள் வாங்க ரூ. 30 ஆயிரமும், புத்தகங்கள் வாங்க ரூ. 35 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஊரக நூலகங்கள்:
இந்தத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 425 ஊராட்சிகளில் கடந்த நிதியாண்டில் 82 ஊராட்சிகளும், நிகழ் நிதியாண்டில் 82 ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 164 ஊராட்சிகளிலும் நூலகக் கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 25 ஊராட்சிகளில் ஏற்கெனவே பொது நூலகத் துறையின் கீழ் கிராமப்புற நூலகம் அல்லது பகுதிநேர நூலகம் செயல்பட்டு வருகிறது.
எனவே, அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் முடிவடையும் போது மொத்தமுள்ள 425 ஊராட்சிகளில் கிராமப்புற நூலகம் மற்றும் பகுதிநேர நூலகம் உள்ள 78 ஊராட்சிகளில் இரண்டு நூலகங்கள் இருக்கும்.
இதேபோல, தமிழ்நாட்டில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பொது நூலகத் துறையின் நூலகமும், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகமும் அமையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ஒரே ஊராட்சியில் இரண்டு நூலகங்கள் அமைவதைத் தவிர்க்கும் வகையில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகங்களை அமைக்கும் பணியை பொது நூலகத் துறையிடம் ஒப்படைக்க அத்துறையிடம் அரசு கருத்து கேட்டது. ஏற்கெனவே பொருளாதார ரீதியாக நலிவடைந்து வரும் நூலகத் துறையானது, ஒவ்வொரு நூலகத்தையும் பராமரிக்க ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வரை செலவாகும் என்பதால் அந்த சுமையை தாங்க இயலாது எனக் கருதி மறுத்துவிட்டது.
எனினும், ஓரளவு நல்ல அடிப்படை வசதிகளுடன் இயங்கி வரும் பொது நூலகத் துறையின் நூலகங்கள் உள்ள இடங்களில் மட்டுமாவது அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகத்திற்கான நிதியை அளித்து அவற்றை வலுப்படுத்தலாம் என நூலகத் துறையினர் வலியுறுத்தினர்.
அதன்படி, கடந்த நிதியாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் சில இடங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலக நிதியானது பொது நூலகத் துறை நூலகத்திற்கு கட்டடமாகவோ அல்லது இதர மேம்பாட்டு பணிகளுக்காகவோ பயன்படுத்தப்பட்டது. நிகழ் நிதியாண்டில் அது நிறுத்தப்பட்டுவிட்டது.
பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஊராட்சித் தலைவரின் 29 கடமைகளில் ஒன்று நூலகம் பராமரிக்க வேண்டும் என்பதும் அடங்கும். ஆதலால், அனைத்து ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகத்தை தனியே அமைத்து விடுவது என ஊரக வளர்ச்சித் துறை முடிவு செய்துள்ளது. இதனால் ஒரே ஊராட்சியில் 2 நூலகங்கள் அமைவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதனால் பெரிய பயன் எதுவும் ஏற்படப் போவதில்லை என்பதோடு அரசு நிதி விரயமாவதுதான் மிச்சம் என்கின்றனர் பொது நூலகத் துறையினர்.
புத்தகங்கள் இல்லை:
இவ்வாறு அரசு நிதியில் ஒரு பகுதியை விரயமாக்கி கட்டப்படும் இந்த புதிய நூலகங்களுக்கு இதுவரை புத்தகங்கள் வழங்கப்படவில்லை.
கட்டடம், இருக்கைகள் மட்டும் உள்ள நிலையில் மாதம் ரூ. 750 ஊதியத்தில் பணியாளரும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த முறை திமுக ஆட்சியில் அனைத்து ஊராட்சிகளிலும் தலா ரூ. 5 ஆயிரம் செலவில் புத்தகம் வாங்கப்பட்டு “அய்யன் திருவள்ளுவர் படிப்பகம்’ தொடங்கப்பட்டது. தற்போது பெரும்பாலான கிராமங்களில் அந்த படிப்பகத்தின் அடையாளமே இல்லை. அவற்றின் புத்தகங்கள், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களுக்கு மாற்றப்படுகிறது. எனவே, அய்யன் திருவள்ளுவர் படிப்பகங்களும் விரைவில் அடியோடு மூடப்படும்.
இவ்வாறு ஒன்றை அழித்து மற்றொன்றை உருவாக்கி பொதுமக்கள் வரிப்பணத்தை விரயமாக்குவதைவிட ஏற்கெனவே இருக்கும் பொது நூலகத்தை வலுப்படுத்தினால் நூலகத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் என்பதே சமூக ஆர்வலர்களின் பொதுவான கருத்து.
——————————————————————————————————
சிறுவர் இலக்கியம் புறக்கணிப்பா?
சென்னை, பிப். 18: தமிழகத்தில் அரசு நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதில் சிறுவர் இலக்கிய நூல்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுத்தாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நூல்கள் வாங்குவது தொடர்பான நடைமுறையில் தெளிவு இல்லாததே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மாநிலம், மாவட்டம் என பல்வேறு நிலைகளில் 3 ஆயிரத்து 700-க்கும் அதிகமான நூலகங்கள் செயல்படுகின்றன. இவை அனைத்தும் பொது நூலகத்துறையின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.
இந்த நூலகங்களுக்கு தேவையான நூல்களை தேர்வு செய்து வாங்கும் பொறுப்பும் பொது நூலகத்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது உள்ளிட்ட பணிகளுக்கு கொல்கத்தாவில் உள்ள ராஜாராம் மோகன் ராய் நூலக அறக்கட்டளை ஆண்டுக்கு ரூ. 2 கோடி வரை நிதி உதவி அளிக்கிறது.
மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நூலக வரியாக வசூலிக்கப்படும் நிதியும் மாநில அரசு மூலம் பொது நூலகத்துறைக்கு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு கிடைக்கும் நிதி ஆதாரங்களை பயன்படுத்தி பொது நூலகத்துறை, நூலகங்களின் கட்டமைப்பு வசதி மற்றும் புதிய நூல்களை வாங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது.
நூல்கள் வாங்குதல்: தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறுவர் இலக்கியம் முதல் ஆய்வுக்கட்டுரைகள் தொகுப்பு வரை பல்வேறு பிரிவுகளில் ஏராளமான நூல்கள் பதிப்பிக்கப்படுகின்றன.
இந்த நூல்களை அந்தந்த நிதி ஆண்டின் இறுதியில் பதிப்பாளர்கள் பொது நூலகத்துறைக்கு அனுப்ப வேண்டும். அத்துடன் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தேசிய நூலகங்களுக்கும் நூல்களின் படிகள் அனுப்பப்பட வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 64 பக்கங்களில், 300 படிகள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு நூலகத்திற்கென நூல்களை வாங்குவதால்தான் பல சிறிய பதிப்பகங்கள் தொடர்ந்து நூல்களைப் பதிப்பிக்கவும், உயிர்வாழவும் முடிகிறது.
எழுத்தாளர்கள் புகார்: அரசு சார்பில் பொது நூலகத்துறை நூல்கள் வாங்கும் நடைமுறைகள், தெளிவில்லாமல் இருப்பதாக எழுத்தாளர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
கடந்த 2006-ம் ஆண்டில் வெளியான நூல்கள் 2007 பிப்ரவரியில் பதிப்பாளர்களிடம் இருந்து பெறப்பட்டன. அவற்றில் குறிப்பிட்ட அளவு நூல்கள் தேர்வு செய்யப்பட்டு வாங்கப்பட்டன.
பல்வேறு துறை நூல்களை வாங்கிய நூலகத்துறை சிறுவர் நூல்களை வாங்கவில்லை என அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சுடர் முருகையா கூறியது:
“”அப்துல் கலாம் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் நாட்டின் எதிர்காலம் குறித்த தங்களது எண்ணங்களில் சிறுவர்களையே மையப்படுத்தியுள்ளனர். அப்படிப்பட்ட வருங்கால தலைமுறையினரின் எண்ணங்களை வலுவாக்க உருவாக்கப்படும் சிறுவர் நூல்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியமானது.
ஆனால், பொது நூலகத்துறை கடந்த ஆண்டு சிறுவர் நூல்களை வாங்குவதை தவிர்த்துவிட்டது. சிறுவர் நூல்கள் பொது நூலகங்களுக்கு வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை.
இது எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்தாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நூல்களை கோரும் போது இன்ன இன்ன விதிகளின்படி நூல்களை அனுப்ப வேண்டும் என பொது நூலகத்துறை அதற்கான விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிட்ட ஓர் ஆண்டில் எந்தெந்த துறைகள் தொடர்பான நூல்களை வாங்கப்போகிறோம் என்பதைத் தெளிவாக அறிவித்தால் அந்தந்த துறைகள் தொடர்பான நூல்களை மட்டும் பதிப்பகத்தினர் அனுப்புவார்கள். இவ்வாறு இல்லாமல், அனைத்து துறை சார்ந்த நூல்களையும் பெற்றுக் கொண்டு துறைகள் தொடர்பான எந்தவித வரையறையும் இல்லாமல் நூல்களை தேர்வு செய்வது இது போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது.
பொது நூலகத்துறைக்கு அனுப்பும் நூல்களில் சில நூல்கள் தேர்வு செய்யப்படாததுக்கான காரணங்களைத் தெரிவிக்க முடியாது என்றும் அதுபற்றி கேட்கவும் கூடாது என்றும் பொது நூலகத்துறை தெரிவிப்பது பிரச்னையை மேலும் வளர்ப்பதாக உள்ளது.
பொது நூலகத்துறையின் இத்தகைய நடவடிக்கை சிறுவர் இலக்கியம் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை எழுத்தாளர்களிடம் ஏற்படுத்தியுள்ளது” என்றார் சுடர் முருகையா.
அதிகாரிகள் பதில்: மக்கள் படிப்பதற்கு ஏற்ற தரமான நூல்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நூலகங்களுக்கு வாங்குவதற்கான நூல்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என பொது நூலகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
துறைவாரியாக பிரித்து நூல்கள் தேர்வு செய்யப்படுவதில்லை என்றாலும், அனைத்து தரப்பு மக்களின் தேவைக்கு ஏற்ற நூல்களே தேர்வு செய்யப்படுகின்றன. இதில் குறிப்பிட்ட எந்த துறையையும் பிரித்துப் பார்ப்பது இல்லை. என்றாலும் நாங்கள் நூலகங்களுக்காக வாங்குவதற்குத் தேர்ந்தெடுத்த நூல்களில் சிறுவர் நூல்களும் இருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.