Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Profit’ Category

1.5 mn Commercial (lorry) vehicles keep off roads in Karnataka – Truckers strike enters second day

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

3-வது நாளாக லாரி ஸ்டிரைக்: பல கோடி வர்த்தகம் பாதிப்பு

நாமக்கல், பிப். 23: தமிழகம் மற்றும் கேரளத்தில் 3-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

வேலை நிறுத்தம் 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது. இதனால், வட மாநிலங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தீப்பெட்டி, ஜவுளி, மஞ்சள், இரும்பு, உதிரிப் பாகங்கள், தொழிற்சாலை பொருள்கள் என அனைத்தும் மூன்று நாள்களாக வட மாநிலங்களுக்கு செல்லாமல் அப்படியே தேங்கி உள்ளன வட மாநிலங்களில் இருந்து வரும் கோழித் தீவன மூலப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், மார்பிள்ஸ், பர்னிச்சர்கள், காய்கறிகள், பழங்கள் வரத்தும் தடைபட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நீடித்தால் கோழித் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை மேலும் உயரும் அபாயமுள்ளது.

கர்நாடகத்தில் தமிழக லாரிகளை தடையின்றி இயக்கலாம்: போக்குவரத்துத் துறை விளக்கம்

சென்னை, பிப். 23: கர்நாடக மாநிலத்தில் தடையின்றி தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை திரும்பப் பெற வலியுறுத்தி, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

தமிழக லாரிகளை தடையின்றி கர்நாடக மாநிலத்தில் இயக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, இணைப் போக்குவரத்து ஆணையர் டி.நாராயணமூர்த்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தைச் சேர்ந்த வாகனங்களை கர்நாடகத்தில் இயக்கும் போது, வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜூன் மாதம் வரை வற்புறுத்தப்பட மாட்டாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

எனவே, தமிழக லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் எந்தவித தடையுமின்றி கர்நாடக மாநிலம் வழியாக தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி
தமிழ்நாட்டில் பலகோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

சென்னை, பிப்.24-

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளன.

லாரிகள் வேலைநிறுத்தம்

கர்நாடகத்தில் ஓடும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு லாரிகள் ஓடவில்லை.

இந்த போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மற்றும் கர்நாடகத்தின் வழியாக செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே கர்நாடகத்துக்கு புறப்பட்டு சென்ற லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

பல கோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

மேலும் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கர்நாடகத்துக்கு செல்ல வேண்டிய லாரிகள் புறப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்குள்ள பார்சல் அலுவலகங்களில் பார்சல்கள் குவிந்து உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தீப்பெட்டி, தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, மஞ்சள் போன்ற பொருட்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கூறினார்.

கோயம்பேடு மார்க்கெட்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக தக்காளி, கோஸ், கேரட், பீன்ஸ் போன்ற முக்கியமான காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காய்கறி வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜிடம் கேட்டபோது, “தினமும் 50 லாரிகளில் தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். நேற்றைய தினம் வழக்கமாக வரும் அனைத்து காய்கறிகளும் வந்து விட்டன. இன்றைய தினம் தான் வழக்கமாக வரும் லாரிகளில் காய்கறிகள் வருமா என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.

விலை உயர வாய்ப்பு

சென்னை கோயம்பேடு எம்.எம்.சி. உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சவுந்திரராஜன் கூறும்போது, “தக்காளி தவிர 60 லாரிகளில் மற்ற காய்கறிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருகின்றன. நேற்றைய தினம் வழக்கமாக வரவேண்டிய காய்கறிகள் வந்தன. இன்றைய தினம் குறைந்த அளவில்தான் காய்கறிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி குறைந்த அளவு காய்கறிகள் வருகின்ற பட்சத்தில் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது:-

வழக்கமாக ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், எண்ணை போன்ற பொருட்கள் கர்நாடகம் மற்றும் மராட்டியம், அரியானா, டெல்லி உள்பட பல வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். கர்நாடகத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் சுமார் 200 லாரிகள் மற்றும் கர்நாடகம் வழியாக செல்லும் லாரிகள் உள்பட சுமார் 1,500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ஈரோட்டில் பல கோடி போய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.எஸ்.கலியபெருமாள் கூறுகையில், கோவை மாவட்டத்திலிருந்து கர்நாடகத்திற்கு லாரிகள் செல்லாததால் தினமும் ரூ. 25 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

சேலம்

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-

லாரிகளுக்கு வேககட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவு தமிழக லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகக்கூடாது என்றால், காய்-கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அழுகும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் லாரியில் கொண்டு செல்லமுடியாமல் பாதிப்பு ஏற்படும். கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கால், சேலம் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சரக்குகள் ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பில் தேக்கம் அடைந்து உள்ளன.

இவ்வாறு சென்னகேசவன் தெரிவித்தார்.

வேலைநிறுத்தம் தொடரும்

இதற்கிடையே கர்நாடக லாரி உரிமையாளர் மற்றும் ஏஜெண்டுகள் சங்க நிர்வாகிகள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமையில் கவர்னரின் ஆலோசகர் தாரகன் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தங்கராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் எந்த ஒரு உறுதி மொழியும் கொடுக்கப்படாததால் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜி.ஆர்.சண்முகப்பா கூறினார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் பஸ், வாடகை கார், சுற்றுலா வேன் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Posted in Accidents, Biz, commercial, Dangerous, dead, Death, drivers, DUI, DWI, Economy, Employment, Erode, Exports, Finance, Food, Freight, Goods, Impact, Jobs, Karnataka, Law, Limits, Lorry, Loss, Operators, Order, Parcel, Perishable, Profit, Salem, Services, Speed, Strike, Transport, Transporters, Truckers, Trucks, Vegetables | Leave a Comment »

‘Sivaji – The Boss’ celebrations – 175th Day Event Coverage: Rajni speech

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2008

“சிலபேருக்கு கடவுளை பிடிக்காது; ஆனால் அவர்களை கடவுளுக்கு பிடிக்கும்”
கருணாநிதி முன்னிலையில் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை, ஜன.12-

“சிலபேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால் அவர்களை கடவுளுக்கு பிடிக்கும்” என்று ரஜினிகாந்த் பேசினார்.

வெள்ளி விழா

ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் சார்பில் எம்.சரவணன், எம்.எஸ்.குகன் ஆகிய இருவரும் தயாரித்த `சிவாஜி’ படம் 175 நாட்களை தாண்டி ஓடி வெள்ளி விழா கண்டது. இதையொட்டி அந்த படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பரிசளிக்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு `சிவாஜி’ படத்தில் நடித்த நடிகர்-நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார்.

ரஜினிகாந்த்

விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

“சிவாஜி படத்தில், சில அரசியல் விஷயங்கள் இருக்கிறது என்று தெரிந்திருந்தும், அந்த படத்தை பார்த்து பாராட்டிய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பெருமைக்குரிய படத்தில் நான் இருந்தது, பாக்கியம். ஏவி.எம்.சரவணன், ஷங்கர், படத்தில் வேலை செய்த தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பணம்

பணம் இருந்தால், உன்னையே உனக்கு தெரியாது. பணம் இல்லையென்றால் யாருக்கும் நீ தெரியமாட்டாய் என்று சொல்வார்கள். அந்த பணம் இருந்தபோதும், அது தலைக்கு போகாமல் தொழில்தான் முக்கியம் என்று அப்பா ஸ்தாபித்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்காக சரவணன் படும் சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் தலைவணங்குகிறேன்.

அவருடைய மிகப்பெரிய சொத்து, அவருடைய மகன் குகன். தாத்தா மாதிரி நீங்களும் பெரிய பட அதிபர் ஆக, என் மனமார்ந்த வாழ்த்துகள்.

கே.பாலசந்தர்

`சிவாஜி’ படம் பார்த்துவிட்டு என் குருநாதர் கே.பாலசந்தர் எப்படி இப்படி எல்லாம் நடித்தாய்? என்று கேட்டபோது, அவர்கள், மூன்று முடிச்சு, அபூர்வ ராகங்கள் ஆகிய படங்களில் நடித்தபோது, உங்களிடம் எப்படி நான் கேள்வி கேட்காமல் நடித்தேனோ, அதேபோல்தான் ஷங்கர் என்ன சொன்னாரோ, அதைத்தான் செய்தேன் என்று சொன்னேன்.

பாலசந்தர் சாருக்கு பின்னால், நான் புளோரில் ஒரு டைரக்டரை பார்த்தேன் என்றால், அது ஷங்கர்தான். இப்படி சொல்வதால் நான் மற்ற டைரக்டர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டதாக அர்த்தம் அல்ல. ஷங்கர், ஏகலைவன் மாதிரி. அது, பூர்வஜென்ம புண்ணியம்.

கபிலமுனி

நான் செய்யும் `சாங்கியோகா’வை கண்டுபிடித்த கபிலமுனி, “ஆசைப்படு…ஆசைப்பட்டதை அடைவதற்கு விஷயத்தை சேர்த்து வை…அப்படி சேர்த்து வைத்த விஷயத்தை சரியாக செயல்படுத்து…அது கொடுக்கும் பலனை முதலில் நீ அனுபவி… அதில் கொஞ்சம் நீ வைத்துக்கொள். மீதியை மற்றவர்களுக்கு கொடுத்து விடு” என்று கூறியிருக்கிறார்.

சாப்பிட்டதை எல்லாம் உடம்பில் வைத்துக்கொண்டால், உடம்பு கெட்டுப்போய்விடும். சம்பாதித்ததை எல்லாம் நாமே வைத்துக்கொண்டால், வாழ்க்கை கெட்டுப்போய்விடும்.

ஆசைப்படுவதற்கு நமக்கு தகுதி இருக்கிறதா? என்று முதலில் பார்க்கணும். சைக்கிள் வாங்குவதற்கே கஷ்டப்படுகிற ஒருவன், கார் வாங்க ஆசைப்பட்டால் எப்படி? ஆசைப்பட்டதை அடைய வேண்டும் என்றால், சரியான ஆட்களை சேர்த்துக்கொள். அதன்பிறகு ஆகாயமே கீழே விழுந்தாலும், `காம்ப்ரமைஸ்’ ஆகாதே. நினைத்ததை செயல்படுத்திவிடு… இதைத்தான் ஷங்கர் செய்துகொண்டிருக்கிறார்.

`ரோபோ’

அடுத்து, நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யப்போகிற படம், `ரோபோ.’ மிகப்பெரிய படம்.

`ரோபோ’ படம், கடவுள் ஆசீர்வாதத்தில், சிவாஜி அளவுக்கு வெற்றிபெறவேண்டும்.

அடுத்து கே.பாலசந்தர் சாருக்காக ஒரு படம் நடிக்கிறேன். அதையடுத்து சவுந்தர்யா டைரக்ஷனில், `சுல்தான் தி வாரியர்’ படத்தில் நடிக்கிறேன். அதையடுத்து, `ரோபோ’ வரும்.

சாய் பாபா

சாய்பாபாவை நேரில் பார்க்க, நான் நான்கு முறை முயற்சி செய்தேன். பெங்களூரில் இரண்டு தடவை. புட்டபர்த்தியில் ஒரு தடவை. இங்கே சென்னையில் ஒரு தடவை. இங்கே வந்தபோது, அவரை நான் சந்தித்தேன். வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடுங்க, வருவார் என்று சொன்னார்கள். நானும் வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட்டேன். அவர், பெருந்தலைவர் காமராஜர் `டயலாக்’க்கை சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

கடவுளுக்கு பிடிக்கும்

ஆனால், அதே சாய்பாபா கலைஞர் வீட்டுக்கு வந்து, அவரை சந்தித்தார். நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். சில பேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால், கடவுளுக்கு அவர்களை பிடிக்கும்.

வேண்டுகோள்

இந்த சமயத்தில், கலைஞர் அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். கலையுலக விழாவாக இருந்தாலும் சரி, இலக்கிய விழாவாக இருந்தாலும் சரி, உங்களை தவிர யாரும் கண்ணுக்கு தெரியவில்லை. யாரும் கிடையாது. நீங்கதான் கலந்துகொள்ள வேண்டும்.

அதற்காக, உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்.”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

ஷங்கர்

டைரக்டர் ஷங்கர் பேசும்போது, “ரோபோ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டியிருக்கும். அதற்கு தமிழ் பட பட்ஜெட் தாங்காது என்பதால்தான், இந்தியில் படமாக்க முயன்றேன். சில காரணங்களால், அந்த திட்டம் நின்றுபோனது. `சிவாஜி’ படத்தின் வெற்றியும், வசூலும் `ரோபோ’ படத்தை தமிழில் எடுக்கலாம் என்ற நம்பிக்கையை எனக்கு தந்தது. ரஜினி, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப்பெரிய சக்திகள் ஒன்றாக சேர்ந்துள்ளதால், ரோபோவை மிக சிறந்த படமாக கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

வைரமுத்து

கவிஞர் வைரமுத்து பேசும்போது, “ஏவி.எம். நிறுவனத்தின் மகுடம், `சிவாஜி’ படம். நான் ரஜினியை பற்றி ஒரு விஷயம் பேசவேண்டும். ஒரு மனிதன் பேசுவதில்லை. ஆனால் பேசப்படுகிறார். அவர் விளம்பரத்தை விரும்புவதில்லை. ஆனால், அவர் இல்லாமல் விளம்பரம் இல்லை. அவருக்கு அரசியல் இல்லை. ஆனால், அவரை சுற்றி அரசியல் இல்லாமல் இல்லை. தமிழ்நாட்டுக்கு ரஜினி கொடுத்த உற்சாகம் கொஞ்சம் அல்ல. அவர் நினைத்தால், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விதம்விதமாக செய்திகள் சொல்லலாம்” என்றார்.

நடிகை ஸ்ரேயா பேசும்போது, “சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்தது என் அதிர்ஷ்டம். மீண்டும் அவருடன் நான் நடிக்க விரும்புகிறேன். மீண்டும் மீண்டும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்” என்றார்.

ஏவி.எம்.சரவணன்

நடிகர்கள் சுமன், விவேக், வி.எம்.சி.அனீபா, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, பேச்சாளர் ராஜா, கவிஞர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார், எழுத்தாளர் சுஜாதா, ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் ஆகியோரும் பேசினார்கள்.

ஏவி.எம்.சரவணன் வரவேற்று பேசினார். படத்தின் இணை தயாரிப்பாளரான டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் நன்றி கூறினார்.

Posted in 175, Actors, Actress, AVM, Baba, Celebrations, Cinema, Coverage, Events, Films, Functions, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KB, Loss, Movies, Profit, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Robo, Robot, Saibaba, Sankar, Shankar, Shivaji, Shreya, Shriya, Sivaji, Speech, Sreya, Sriya, Tax, The Boss, Vairamuthu | 1 Comment »

The management of MRF Limited: lockout & strikes – Viduthalai Editorial

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2008

எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் அணுகுமுறை மாறட்டும்!

சென்னையை அடுத்துள்ள திருவொற்றியூரில் கடந்த 43 ஆண்டுகாலமாக நடந்துவரும் எம்.ஆர்.எஃப். டயர் நிறுவனம் 3.12.2007 முதல் சட்ட விரோதமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 1500 தொழிலாளர் குடும்பங்கள் பெரும் அவதியில் சிக்கியுள்ளனர். முன்னறிவிப்பு ஏதுமின்றி சட்ட விரோதமாகக் கதவடைப்புச் செய்யப்பட்டுள்ளது.

சிறு முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்றைய தினம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் தொழிலாளர்களின் நேர்மையான உழைப்பும், திறனும்தான்.

இந்த நிறுவனம் அய்ந்து கிளைகளோடு மிகுந்த இலாபகர மாக இயங்கிக் கொண்டு இருந்தும், தொழிலாளர்களை வதைப்பதில் ஏன் இவ்வளவு பேரார்வம் கொண்டு நிருவாகம் நடந்துகொள் கிறதோ தெரியவில்லை.

உரிமை கேட்டுக் குரல் கொடுத்ததற்காக தொழிற்சங்க நிருவாகிகள் இருவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல, தொழிலாளர்கள் 24 பேர்களும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரு தொழிலாளர்களை வேலை நீக்கமே செய்துவிட்டது.

இதுகுறித்து தொழிலாளர் ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 28.11.2007 அன்று தொழிலாளர் ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தி கீழ்க்கண்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

(1) தொழிலாளர்கள் ஏற்கனவே அளித்து வந்த உற்பத்தி அளவினைத் தொடர்ந்து அளிக்கவேண்டும்.

(2) நிருவாகம் விசாரணையை நிலுவையில் வைத்து, இப்பிரிவுகளில் பணிபுரிந்த தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் தற்காலிக வேலை நீக்கத்தை விலக்கிக்கொண்டு, அவர்களுக்கு உடனடியாக பணி வழங்கிட வேண்டும்.

(3) புதிய இயந்திரம் நிறுவப்பட்ட எஃப் 270 பான்பரி பிரிவில் அதற்குரிய உற்பத்தி அளவு, தொழிலாளர்களின் எண்ணிக்கை நிர்ணயம் மற்றும் இதரத் தொடர்புடைய இனங்கள் குறித்து நிருவாகமும், தொழிற்சங்கமும் அதன் முன்னர் நடைபெறும் சமரசப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு தீர்வு காண ஒத்துழைக்கவேண்டும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டது.

ஆனாலும், நிருவாகம் அரசின் இந்த ஆணையைப் பொருட்படுத்தவில்லை என்பதிலிருந்தே, இதில் அடாவடித்தனம் செய்பவர்கள் யார் என்று தெரியவில்லையா?

28.11.2007 இல் தொழிலாளர் துறை ஆணையரின் ஆணை பிறப்பிக்கப்பட்டும் அதன்மேல் சீரான அணுகு முறையை மேற்கொள்ளாமலேயே தொழிலாளர்களைப் பழி வாங்கும் நோக்கத்தோடு நிருவாகம் கதவடைப்பு செய்து வருகிறது.

அரசின் ஆணையை நிறைவேற்றாமல் தடை செய்ய வழக்கம்போல நீதிமன்றத்தை நாடி இடைக்காலத் தடையையும் பெற்றுள்ளது நிருவாகம்.

நாள்தோறும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைக் குரல்களை எழுப்பி வருகிறார்கள். பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்களும் உரிமைக்குரல் எழுப்பி வருகின்றனர்.

எதற்கும் நிருவாகம் அசைந்து கொடுப்பதாகத் தெரிய வில்லை. இதன் காரணமாக தொழிலாளர்கள் மத்தியில் அமைதியின்மை நாளும் வளர்ந்து வருகிறது. அடுத்தகட்டமாக இது வேகப்படும்பொழுது பிரச்சினைகள் வேறு பரிணாமத்தை எட்டக்கூடும். அதற்கு நிருவாகமே பொறுப்பேற்கவேண்டி வரும்.

வேலை வாய்ப்பு என்பது இந்தியாவில் பெரும் பிரச்சினை யாக இருக்கிறது. இந்த நிலையில், ஏற்கெனவே வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கும் நிறுவனங்கள் பல்வேறு தொல்லைகளைக் கொடுக்குமானால், அதன் விளைவு எங்கே கொண்டு போய் விடும் என்பதைச் சிந்திக்கவேண்டும்.

தொழிற்சங்கங்கள் இதனை ஏதோ தொழிற்சங்கப் பிரச்சினையாக மட்டும் கருதி, அந்த வட்டத்துக்குள்ளேயே இதுபற்றிப் பேசிக் கொண்டு இராமல் பொதுமக்கள் மத்தியிலும் கொண்டு செல்லவேண்டும்.

தொழிலாளர்கள் பொதுமக்களின் ஓர் அங்கம்தான். அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் மீது பொதுமக்களுக்கும் அக்கறை உண்டு என்று நிரூபிக்கவேண்டும். அப்பொழுது தான் ஆணவத்தோடு நடந்துகொள்ளும் முதலாளிகள் கொஞ்சம் அடங்கி வருவார்கள்.

மற்ற நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களும் எம்.ஆர்.எஃப். நிறுவனத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுக்க, போராட முன்வருவார்களாக!

Posted in Ads, Advt, Editorial, employees, Employers, Employment, Expenses, Jobs, lockout, Loss, Management, MRF, Poor, Productivity, Profit, Revenues, Rich, Strikes, Tyres, Union, Viduthalai, Work | Leave a Comment »

AVM, Rajni & Shankar: ‘Sivaji – The Boss’ – Profit & Loss, Distribution woes, Balance Sheet, Income

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

சிவாஜி’ த லாஸ்!: சர்ச்சைகளுக்கிடையே ஒரு சாதனை விழா – தினமணி

ஏவி.எம். தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ படத்தின் வெள்ளி விழா (ஜன.11) சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. விழா கொண்டாடும் இந்த நேரத்தில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் இந்தப் படத்தால் தாங்கள் நஷ்டமடைந்துள்ளதாகவும் அதனால் தங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

ஒரு படத்தின் வெற்றியில் எப்படி விநியோகஸ்தர்களுக்குப் பங்கு உண்டோ அதேபோல தோல்வியிலும் உண்டு என்பது திரையுலகில் அனைவரும் அறிந்ததே. அதையும் மீறி சிலர் நஷ்ட ஈடு கேட்பது ஏன் என்பதுதான் கேள்வி.

தமிழகம் முழுவதும் “சிவாஜி’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவருக்கும் நஷ்டம் என்றே கூறப்படுகிறது. அதேபோல நான்கைந்து மாதங்கள் ஓ(ட்)டிய இந்தப் படத்தின் மூலம் சில திரையரங்கள் தவிர எஞ்சிய அனைவருக்கும் நஷ்டமே ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மற்றும் புதுவை உரிமையை டிஸ்ட்ரிபியூஷன் கேரண்டி முறையில் ரூ.4 கோடியே 65 லட்சத்துக்கு வாங்கினோம். ஆனால் படம் ரூ.3 கோடியே 30 லட்சம்தான் வசூல் செய்தது. டிஸ்ட்ரிபியூஷன் கேரண்டி முறையில் வாங்கியதால் இழப்பு ஏற்பட்டால் அதைச் சரிக்கட்டுவார்கள் என நம்பினேன். ஆனால் ஏவி.எம். நிறுவனம் மறுத்துவிட்டது என்கிறார் இந்தப் பகுதி விநியோக உரிமையை வாங்கிய நாக் ரவி.

சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட உரிமையை ரூ.5 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கினோம். படம் வசூலாகாவிட்டால் பார்த்துக்கொள்கிறோம் என்றனர். 4 மாவட்டங்களில் 33 திரையரங்குகளில் வெளியிட்டோம். ஆனால் படத்தின் மூலம் கிடைத்தது ரூ.4 கோடியே 30 லட்சம்தான். இதுபற்றி ஏவி.எம்.நிறுவனத்திடம் தெரிவித்தோம். ஆனால் இதுவரை பதிலே இல்லை என்கிறார் இந்தப் பகுதி உரிமையை வாங்கிய விகாஷ் பிக்சர்ஸ் சி.பிரகாஷ்.

திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 22 சென்டர்களில் வெளியிட ரூ.6 கோடி கொடுத்தோம். ஆனால் படத்தால் ரூ.1 கோடிக்கு மேல் நஷ்டம் என்கிறார் இந்தப் பகுதிகளின் உரிமையை வாங்கிய ஆடிட்டர் ரமேஷ்குமார்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உரிமையை பொன்கனகவல்லி கம்பைன்ஸ் நிறுவனத்தினர் ரூ.3 கோடிக்கு வாங்கி 11 திரையரங்குகளில் திரையிட்டுள்ளனர். நூறு நாள்களைத் தாண்டினாலும் இரண்டு திரையரங்குகளைத் தவிர மற்ற அனைத்துத் திரையரங்குகளுக்கும் நஷ்டமே ஏற்பட்டுள்ளது.

ஒரு திரையரங்கில் ஒரு திரைப்படம் 100 நாள்கள் ஓடி ரூ.90 லட்சம் வசூலானால் அதில் எல்லா செலவுகளும் நீக்கி ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைக்கும். ஆனால் “சிவாஜி’ படம் 150 நாள்கள் ஓடியும் அந்த அளவுக்கு லாபம் ஈட்டவில்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெருத்த நஷ்டம் என்கிறார் ஒரு திரையரங்க மேலாளர்.

இந்த நஷ்டத்தை ஈடுசெய்யுமாறு ஏவி.எம்.நிறுவனத்திடம் ஏற்கெனவே இந்தப் பகுதி விநியோகஸ்தர்கள் தரப்பில் கேட்கப்பட்டதாகவும் அதற்கு அவர்களிடமிருந்து சரியான பதில் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

கோவையைப் பொருத்தவரை பெரிய லாபம் இல்லை என்று கூறப்படுகிறது. “சிவாஜி’யின் தயாரிப்பு செலவு அதிகம். அதனால் படத்தை இதுவரையில்லாத அளவில் அதிக விலைக்கு விற்றுள்ளனர். அதனால் மிகப் பெரிய லாபம் என்று சொல்வதற்கில்லை.

இன்னும் சொல்லப்போனால் கொடுத்த பணத்துக்கும் எதிர்பார்த்ததற்கும் தொடர்பில்லை. “சந்திரமுகி’ திரைப்படம் ரூ.3 கோடிக்கு வாங்கப்பட்டு ரூ.4.5 கோடி லாபம் ஈட்டித் தந்தது. அது எதிர்பார்த்ததற்கும் மேல். அதனுடன் ஒப்பிடுகையில் சிவாஜியால் லாபம் இல்லை என கோவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பகுதிகளில் “சிவாஜி’ படத்தை வாங்கியவர்களிடம் பட வசூல் நிலவரம் குறித்து விசாரித்தபோது, “அப்படி இப்படி என எப்படியோ படத்தின் வெள்ளி விழா வரை வந்துவிட்டார்கள்.

அந்த விழாவிலாவது எங்களுக்கு ஏதாவது நல்ல செய்தி கிடைக்கிறதா என்று பார்ப்போம். அதுவரை எந்தக் கருத்தையும் சொல்லவிரும்பவில்லை” என ஒதுங்கிக்கொண்டனர்.

ஆக… படத்தைப் பற்றி மீடியாக்கள் ஆஹோ ஓஹோ என்று ஒரு மாயத் திரையை உருவாக்கியிருப்பதை அறிய முடிகிறது. “பாபா’ படத்தை ரஜினிகாந்தே தயாரித்ததால் அந்தப் படம் மூலம் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்குகளுக்கும் ஏற்பட்ட நஷ்டத்தை அவரை ஈடுகட்டினார். ஆனால் “சிவாஜி’ படத்தை ஏவி.எம். நிறுவனம் தயாரிததுள்ளது. அந்த நிறுவனம் நஷ்டத்தை ஈடு செய்ய வாய்ப்பில்லை. வேண்டுமானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாங்கள் அடுத்து தயாரிக்கும் திரைப்படங்களின் விற்பனையில் சலுகை காட்டலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் ரஜினிகாந்தின் அடுத்த பிரமாண்டப் படமான “ரோபோ’வின் வியாபாரம் எந்த வகையிலும் பாதிக்காது; “சிவாஜி’ படத்தால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் அந்தப் படத்தை வாங்கத் தயங்கினால் பன்னாட்டு நிறுவனங்களோ அல்லது அந்தப் படத்தைத் தயாரிக்கும் நிறுவனங்களோ நேரடியாகவே “ரோபோ’ படத்தைத் திரையிடும் நிலை ஏற்படலாம்.

திரையுலகுக்கு பல சலுகைகளை வழங்கிய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் “சிவாஜி’ வெள்ளி விழாவில் படத்தால் நஷ்டமடைந்தவர்களுக்கு ஆதரவாக சம்பந்தப்பட்டவர்கள் “வாய்ஸ்’ கொடுப்பார்களா?

இப்படி சர்ச்சைகளுக்கிடையே நடைபெறுகிறது ஒரு சாதனை விழா!

முந்தைய சற்றுமுன்:
1. ஒரு படத்தால் 3 மாதம் பீதி : ‘சிவாஜி’ குறித்து நாசர்

2. சிவாஜி’ (இந்தி) படத்துக்காக ரஜினிகாந்த் நடிக்கிறார்

3. உலகமெங்கும் வசூல் மழையில் சிவாஜி: ரூ.100 கோடியை நெருங்குகிறது

நன்றி: தினமணி

Posted in 4053051, AVM, Baba, Balance, Chandramukhi, Chandramuki, Chanthiramuki, Chanthramukhi, Chanthramuki, Cinema, Distribution, Distributors, Economy, Films, Finance, Income, Kollywood, Loss, Movies, Profit, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Return, Risk, Shankar, Shivaji, Sivaji, Sivaji the Boss, The Boss | 1 Comment »

Indian Budget 2008 by P Chidhambaram: Finance, Economy, Analysis, Taxes, Exemptions

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2008

குறையுமா வரிச்சுமை?

எஸ். கோபாலகிருஷ்ணன்

புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்நிலையில், பலர் மனதில் எழும் கேள்வி, “”வரிச்சுமை குறையுமா?” என்பதே.

மக்களவைக்கு திடீர் தேர்தல் வரக்கூடும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நேர்ந்திருந்தால், இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க ஒரு “தேர்தல் பட்ஜெட்’ ஆக இருந்திருக்கும். சலுகைகளுக்கும் பஞ்சம் இருந்திருக்காது. ஆனால், நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று! குஜராத், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நிலைமையை மாற்றிவிட்டன. மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக்காலம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்னர் மக்களவைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இத்தகைய சூழலில் தற்போதைய மக்களவைக்கு மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் வர இருக்கும் பட்ஜெட்டாகத்தான் இருக்கும்.

ஏற்கெனவே, விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்கள், பட்ஜெட் சுமை தங்களை மேலும் வாட்டாமல் இருக்க வேண்டுமே என்று அஞ்சுவது இயல்பு.

இதை மனதில்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை நிதி அமைச்சர் சிதம்பரம் தனது பட்ஜெட்டில் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

அரசியல் தேவைகள் ஒருபுறம் இருக்க, பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையிலும் புதிய பட்ஜெட் சற்று மென்மையாக இருக்க வேண்டும். காரணம், தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டியுள்ளது. நடப்பாண்டில் மட்டுமல்லாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக ஜி.டி.பி. விகிதம் 8.6 சதவீதமாக உள்ளது. வளர்ச்சி, ஏதோ மின்னல்போல் தோன்றி மறையாமல் ஸ்திரமடைந்து வருகிறது.

மற்றொரு சாதகமான அம்சம், கடந்த சில ஆண்டுகளாக வரி வசூல் படிப்படியாக அதிகரித்து, இப்போது கணிசமாகவே உயர்ந்துள்ளது. துல்லியமாகச் சொல்லுவதானால், 2003 – 04ம் ஆண்டில் வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 302 லட்சமாக இருந்தது. 2006 – 07ம் ஆண்டில் வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 320 லட்சமாகப் பெருகியுள்ளது.

வருமான வரியை மட்டும் எடுத்துக்கொண்டோமானால், இதே காலத்தில், வருமான வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 235 லட்சத்திலிருந்து, 275 லட்சமாக அதிகரித்துள்ளது.

ஆக, தனிநபர் வருமான வரித்தொகையும் சரி, கம்பெனிகளின் வருமானவரித் தொகையும் சரி, சமீபகாலமாக அபரிமிதமாகப் பெருகி வருகிறது. மொத்தத்தில் வருமான வரியாக வசூலிக்கப்படும் தொகை ஆண்டுக்கு ஆண்டு 45 சதவிகிதம் உயர்ந்து வருகிறது.

இதற்கு பொருளாதார வளர்ச்சியும், நிதி அமைச்சகம் எடுத்துக்கொண்ட முயற்சியும் ஒரு காரணம் ஆகும்.

அத்துடன், வரிவிகிதங்கள் நியாயமாகவும், மக்களின் சக்திக்கு ஏற்பவும் இருக்குமானால், வரி ஏய்ப்பு நிச்சயமாகக் குறையும். அதேநேரம், மக்கள் தானாக முன்வந்து வரி செலுத்துகையில், வரிச்சுமை படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படாமல் போனால், தானாக முன்வந்து வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறையக் கூடும். அரசு இதனைக் கருத்தில்கொண்டு செயல்படுவது அவசியம்.

கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்ததுபோலவே இந்த ஆண்டும், நிதி அமைச்சர் விவசாயம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோருடன் பட்ஜெட் குறித்து ஆழமாகக் கலந்து ஆலோசிப்பார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் இழப்புக்கு ஈடுசெய்யும் வகையில் உற்பத்தி வரி உள்ளிட்ட வரிவிகிதங்கள் குறைக்கப்படக் கூடும். ஏற்றுமதி குறைவதால் வேலைவாய்ப்பும் கடுமையாகக் குறைகிறது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால் ரூ. 53 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சரே அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைத்தியநாதன் குழுவின் பரிந்துரையின்படி விவசாயத்துக்கு புத்துயிர் ஊட்டும் நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கலாம்.

இதுதவிர, உணவு மற்றும் உரம் சார்ந்த மானியங்கள், எளிய மக்களைப் பாதிக்காதவண்ணம், திருத்தி அமைக்கப்படக்கூடும் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. இது உலக வங்கியைத் திருப்தி செய்வதற்காக அல்லாமல், உண்மையிலேயே மானியத் தொகை உரியவர்களைச் சென்றடையும் வகையில் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

வருமான வரித் துறையில் அதிகம் கண்டுகொள்ளப்படாத பிரிவினரும் உள்ளனர். உதாரணமாக, மூத்த குடிமக்கள். ஒரு பக்கம் சராசரி வயது உயருகிறது. இன்னொரு பக்கம் விலைவாசி மற்றும் அதிகரிக்கும் மருத்துவச் செலவு. இவர்களுக்குக் கடந்த ஓரிரு ஆண்டுகளில் எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை.

இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், தற்போது வழங்கப்படும் சொற்ப சலுகைகள் நியாயமான அளவு விரிவுபடுத்தப்பட வேண்டும். சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இல்லாத ஒருநிலையில் இது உடனடித் தேவை.

அடுத்து, சிறு முதலீட்டாளர்களுக்கும் கடந்த ஓரிரு ஆண்டுகளில் ஊக்குவிப்பு அளிக்கப்படவில்லை. 80இ பிரிவின்படி, ஒரு லட்சம் ரூபாய்வரை சில குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தால், அந்தத் தொகையை வருவாயிலிருந்து கழித்துக் கொள்ளலாம். இந்தச் சலுகை சிறு முதலீட்டாளர்கள் என்ற பெயரில், பங்குச் சந்தையில் பெரும்பாலும் முதலீடு செய்பவர்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது.

அஞ்சல் அலுவலக முதலீடுகளுக்கும் 5 ஆண்டுகளுக்குக் குறைவான வங்கி முதலீடுகளுக்கும் நீண்டகாலமாக இருந்து வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன என்பதே உண்மை.

5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வங்கி முதலீடுகளுக்கு 80 இ பிரிவின்கீழ் வருமான வரிச்சலுகை அளித்திருப்பது வங்கிகள் டெபாசிட் திரட்டுவதற்கு உதவுகிறது. ஆனால், சிறு முதலீட்டாளர்களுக்கு உதவக்கூடியதாகத் தெரியவில்லை.

அனைத்துக்கும் மேலாக, சிறு முதலீட்டாளர்கள் முக்கியமாக எதிர்பார்ப்பது தற்போதுள்ள E.E.E. (Exempt, Exempt, Exempt) முறை தொடர வேண்டும் என்பதே. அதாவது முதலீடு செய்யும்போது, வரிவிலக்கு. இதைத்தான் ‘E’ (Exempt) என்ற வார்த்தை குறிக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரிவிலக்கு. இதை இரண்டாவது ‘E’ (Exempt) என்ற சொல் குறிக்கிறது. கடைசியாக, முதலீடு முதிர்வடைந்தவுடன் திரும்பப் பெறும்போதும் வரிவிலக்கு கிடைக்கிறது. இதனை மூன்றாவது ‘E’ (Exempt) குறிக்கிறது.

உதாரணமாக, பொது வருங்கால வைப்புநிதி (PPF), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC.) இன்சூரன்ஸ் ஆகிய பெரும்பாலான முதலீட்டுத் திட்டங்கள் EEE. என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன. இது தொடர வேண்டும்.

ஆனால், EET. (Exempt, Exempt, ், Tax) என்ற புதிய முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சர் சிதம்பரம் முன்னதாக அறிவித்திருந்தார். இந்த உத்தேச முறையின் கீழ், மூன்றாவது கட்டத்தில், அதாவது முதலீடு முதிர்வடைந்தவுடன் திரும்பப் பெறும்போது, அதற்கு வரி செலுத்த வேண்டும். இதைத்தான் T(Tax) என்ற சொல் குறிக்கிறது.

இத்திட்டத்தை கேல்கர் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு கேல்கர் குழுவினர் கூறிய காரணங்கள் விசித்திரமானவை. “”பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கு இடையே நிலவும் பாகுபாட்டை அகற்றுவது என்பது ஒன்று. இரண்டாவது, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் இந்த முறை ஏற்கெனவே அமல் செய்யப்பட்டுள்ளது” என்பதுதான் அது.

நம் நாட்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டால் சிறு முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்தப் பரிந்துரையை நிதி அமைச்சர் ஏற்கலாகாது.

ஏட்டளவில் பணவீக்கம் 3.5 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், வரிச்சுமையாவது குறைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

————————————————————————————————————————————————————

சீனாவின் சவாலை எதிர்கொள்ள…

புது பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் முன்னர் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்த முன்னணி தொழிலதிபர்கள் வழக்கமான வரிச்சலுகைகளுடன் கூடுதலாக ஒரு வரம் கேட்டுள்ளனர். அது, சீனத்திலிருந்து இறக்குமதியாகும் பண்டங்கள் மீது 150 சதவீத “இறக்குமதி வரி’ விதிக்க வேண்டும் என்பது.

தசரதனிடம் கைகேயி கேட்ட வரம்போல அல்ல என்றாலும் சீனத்துப் பண்டங்களால் இந்தியத் தொழிலதிபர்களின் தூக்கம் கெட்டு வருவதை இது நன்கு உணர்த்துகிறது. பொம்மை, பேட்டரி, சைக்கிள், மோட்டார் சைக்கிள், டெலிவிஷன், செல்போன், காகிதம், அச்சு இயந்திரம், ஆலைகளுக்கான இயந்திரங்கள், உதிரி பாகங்கள் என்று எல்லா துறைகளுக்கும் தேவைப்படும் பொருள்களைத் தயாரித்து அதை மிகக் குறைந்த விலையில் உலகச் சந்தையில் கொண்டுவந்து குவிக்கிறது சீனா.

தனிநபர் வருமான வரிவிகிதத்தை 30%-லிருந்து 25% ஆகக் குறைக்க வேண்டும், வருமான வரி விலக்கு வரம்பை ஒரேயடியாக

5 லட்ச ரூபாய் வரைக்கும் உயர்த்த வேண்டும், கம்பெனிகள் மீதான வரியை இப்போதுள்ள நிலையிலேயே அனுமதித்துவிட்டு, “”சர்-சார்ஜ்” எனப்படும் கூடுதல் தீர்வையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று நமது தொழிலதிபர்கள் கேட்டிருக்கிறார்கள்.

கம்பெனிகள் தாங்களே மேற்கொள்ளும் ஆராய்ச்சி-வளர்ச்சிகளுக்கான செலவுக்குத் தரும் வரிச்சலுகையை, வேறு நிறுவனங்களிடம் ஒப்படைத்து மேற்கொள்ளும் ஆராய்ச்சிப் பணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்பதும் அவர்களின் முக்கியமான கோரிக்கையாகும்.

மக்களவைக்குப் பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், தொழிலதிபர்கள் கேட்ட வரங்களில் பெரும்பாலானவற்றை “சிதம்பரசாமி’ அருளக்கூடும். ஆனால் சீனாவின் சவாலை எதிர்கொள்ள என்ன செய்யப் போகிறார்?

சீனாவில், குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்ற ஒரு காரணம் மட்டும் அங்கு உற்பத்திக்குச் சாதகமாக அமைந்துவிட முடியாது. கட்டுப்படுத்தப்பட்ட சோஷலிச முறை உற்பத்தி, விநியோகம் எல்லாம் டெங் சியோ பெங் காலத்திலிருந்து படிப்படியாக நீங்கி, உலக அளவில் போட்டி போடத்தக்க கட்டமைப்பு அங்கே வளர்ந்து வந்திருக்கிறது. சீனத்தின் “பட்டுத் திரை’க்குப் பின்னால் நடந்தவை என்னவென்று உலகம் இதுவரையில் புரிந்து கொள்ளவே இல்லை.

சீனத்திலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இருக்கின்றன. அங்கும் தனியார் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படுகிறது. சொந்த வீடு, நகை, வெளிநாட்டு உல்லாசப் பயணம் என்று சீனர்களால் மெல்லமெல்ல வெளியில் வரமுடிகிறது. சீனத்தில் ஒரே சமயத்தில் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தாராளமயம், உலகமயமாக்கலின் சிற்பி என்று இந்தியாவில் நாம் சிலரை அடையாளம் கண்டு பாராட்டி (அல்லது வசைபாடி) வரும் நிலையில், சீனா உண்மையிலேயே விசுவரூபம் எடுத்து நிற்கிறது.

நம் நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் இன்னமும் பெரும் அளவுக்கு லாபகரமாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கின்றன. அறிவியல், தொழில்நுட்பத்தில் நல்ல படிப்பும் பயிற்சியும் பெற்ற தொழில்நுட்ப நிபுணர்களும், தொழில்திறன் உள்ள தொழிலாளர்களும், தகவல் தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த அறிவும்-ஆங்கிலத்தைச் சிறப்பாகக் கையாளும் திறன் உள்ளவர்களும் ஏராளமாக இருக்கின்றனர். இவர்களைப் பயன்படுத்தி, நமது பொருளாதாரத்தை மேலும் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லாமல், அடுத்தடுத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தல்களையும், மத்திய பட்ஜெட்டையுமே மையமாக வைத்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதால், நாம் செக்குமாடு போல ஒரே இடத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கிறோம்.

சீனாவுக்கு இணையான தொழில்வளத்தை நாமும் அடையத் தடையாக இருப்பது எது என்று ஆராய்ந்து, அதை நீக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் தொடர்ந்து பின்தங்கியே இருப்போம்; சீனா, அமெரிக்காவையே மிஞ்சிவிடும்.

———————————————————————————————————–
சிதம்பர ரகசியம்

விவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்பட வேண்டும், முடிந்தால் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் உலக வங்கியும், சர்வதேச நிதியமும் இந்திய அரசை மீண்டும் மீண்டும் வற்புறுத்தும் விஷயம். இதை மாநிலங்களுக்காகத் தரப்படும் நிதி கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கச் செலவிடப்பட வேண்டும் என்பது அவர்களது அபிப்பிராயம்.

மக்கள் நிர்வாகம், தேச நிர்வாகம் போன்ற விஷயங்கள் வியாபார ரீதியாகச் செய்யப்படுபவை அல்ல. லாப நஷ்டங்களை மட்டும் கணக்கில்கொண்டு அரசு செயல்பட முடியாது. குறிப்பாக, இந்தியா போன்ற விவசாயம் சார்ந்த நாடுகள் வேலைவாய்ப்பை மட்டுமல்லாமல் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வேளாண் தொழிலை நம்பி இருக்கும் நிலையில், விவசாய மானியங்களை அகற்றுவது என்பது, இந்தியாவை சோமாலியா ஆக்கும் முயற்சி. அது விபரீதத்தில் முடிந்துவிடும்.

அதேநேரத்தில், அரசின் மானியங்கள் சேர வேண்டிய விவசாயிகளைப் போய்ச் சேர்கிறதா என்பதும், மானியம் பயனுள்ளதாக அமைந்து விவசாய உற்பத்தி பெருக வழிவகுக்கிறதா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய உர அமைச்சகம் நடப்பு ஆண்டுக்குத் தரப்படும் உர மானியம், அடுத்த நிதியாண்டில் இரட்டிப்பு செய்யப்பட்டு சுமார் 50,000 கோடி ரூபாயாக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறது. நிதியமைச்சகம் இந்தக் கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது வேறு விஷயம்.

யூரியா போன்ற உரங்களுக்கான உற்பத்திச் செலவில் பாதிக்கும் குறைவான விலையைத்தான் விவசாயிகள் தருகிறார்கள் என்றும், தங்களுக்குத் தரப்படும் மானியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் உரத் தயாரிப்பாளர்கள் மத்திய உர அமைச்சகத்தின் மூலம் கோரிக்கை எழுப்பி இருக்கிறார்கள். தற்போது, மானியம் விவசாயிகளுக்கு நேரடியாகத் தரப்படாமல் உர உற்பத்தியாளர்களுக்குத் தரப்படுகிறது. அவர்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு உரங்களை வழங்குகிறார்கள். அதனால், ஒரு ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிக்கும், 100 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிக்கும் ஒரே விலையில்தான் உரங்கள் தரப்படுகின்றன.

பெரிய நிலச்சுவான்தார்களுக்கு இந்த மானியத்தின் பயன் சென்றடைய வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி ஒருபுறம் இருக்க, மானியத்தின் பயன் உர உற்பத்தியாளர்களுக்குத்தான் அதிகம் கிடைக்கிறது என்பது அதைவிட வேதனையான விஷயம். தங்களுடைய நிர்வாகச் செலவுகளை அதிகரித்து மானியத்தின் பெரும்பகுதி பயனை உரத் தயாரிப்பாளர்கள் கபளீகரம் செய்து விடுகிறார்கள்.

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது, மானியம் நேரடியாக விவசாயிகளைப்போய் சேரும்படியான வழிமுறைகள் செய்யப்படும் என்று நிதியமைச்சர் கொடுத்த உறுதிமொழி, செயல்படுத்தப்படவே இல்லை. உரத் தயாரிப்பாளர்கள் அதைச் செயல்படுத்தவிடவில்லை என்றுகூடக் கூறலாம். அப்படிச் செய்திருந்தால், பெரிய நிலச்சுவான்தார்கள் மானியம் வழங்கும் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டிருப்பார்கள். சுமார் எட்டு கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகள் பயன்பெற்றிருப்பார்கள்.

தற்போது விவசாயிகள் தாங்கள் எந்த உரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அற்றவர்களாக இருக்கிறார்கள். மானிய விலையில் உரத் தயாரிப்பாளர்கள் வழங்கும் யூரியா போன்ற உரங்களைத் தான் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு. மானியம் நேரடியாக அவர்களைச் சேர்கிறது எனும்போது, தங்களது பயிறுக்கு ஏற்ற கலவை உரங்களைப் பெறும் வசதி அவர்களுக்கு ஏற்படும். விவசாய உற்பத்தி பெருகும்.

சிறு விவசாயிகளை எப்படி அடையாளம் காண்பது? அதில் முறைகேடுகள் இல்லாமல் எப்படித் தடுப்பது?~ இதைக்கூடச் செய்ய முடியாவிட்டால் இந்த அரசும், நிர்வாக எந்திரமும், அதிகாரிகளும் எதற்கு?

விவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்படவோ, நிறுத்தப்படவோ கூடாது. மாறாக, முறைப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் பெயரைச் சொல்லி பெரிய உர நிறுவனங்கள் மானியத்தை விழுங்குவது தடுக்கப்பட வேண்டும். சேர வேண்டியவர்களைப்போய் மானியங்கள் சேராமல் இருப்பதற்கு யார் காரணம்? நிதியமைச்சருக்குத்தான் வெளிச்சம்!

————————————————————————————–

நிதியமைச்சரை நம்புவோமாக!

உலகமயமாக்கல், சந்தைப் பொருளாதாரம் என்று இந்தியப் பொருளாதாரம் திசைதிரும்பிய நாள் முதல், பல்வேறு தரப்பிலிருந்தும் எச்சரிக்கைக் குரல் ஒலித்த வண்ணம் இருக்கிறது. பலமான பொருளாதார அடித்தளம் என்பது ஒரு தேசத்தின் அன்னியச் செலாவணி இருப்பும், ஏற்றுமதியும் மட்டுமல்லாமல், அந்த நாட்டின் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தன்னிறைவும்கூட என்பதைத்தான் இந்த எச்சரிக்கைக் குரல்கள் வலியுறுத்தின.

பங்குச் சந்தைப் பொருளாதாரம் என்பது, தனியார்மயம், உலகமயம் போன்ற கொள்கைகளிலிருந்து இணைபிரிக்க முடியாத விஷயம். சந்தைப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய ஆபத்தே, ஒரு சில தனிநபர்களின் அதிபுத்திசாலித்தனம் பங்குச் சந்தையில் பூகம்பத்தை ஏற்படுத்தி அப்பாவி முதலீட்டாளர்களை ஓட்டாண்டிகளாக்கி விடும் என்பதுதான். ஹர்ஷத் மேத்தா மற்றும் யு.டி.ஐ. மோசடிகள் எத்தகைய மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தின என்பதைத் தங்களது சேமிப்புகளை ஒரே நொடியில் இழந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் சோகக்கதைதான் எடுத்துரைக்கும்.

பங்குச் சந்தைப் பொருளாதாரத்தின் இன்னொரு மோசமான பரிமாணத்தை விரைவில் இந்தியா சந்திக்க இருக்கிறது. உலகமயமாக்கலின் விளைவால், உலக அரங்கில் அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்களும், பிரச்னைகளும் எந்த அளவுக்கு இந்தியாவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பும் என்பதை நாம் சந்திக்க இருக்கிறோம்.

அமெரிக்கப் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்க இருக்கிறது என்பதை உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் மட்டுமன்றி, அமெரிக்க அரசே உணர்ந்திருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட இருக்கும் பின்னடைவைச் சரிக்கட்ட, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் 140 பில்லியன் டாலர் திட்டமொன்றை அறிவித்திருக்கிறார். வரிக்குறைப்பு மூலம் அமெரிக்கப் பொதுமக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதுதான் இதன் நோக்கம். வாங்கும் சக்தி அதிகரிப்பதால் விற்பனையும், அதன் மூலம் உற்பத்தியும் அதிகரிக்கும் என்பதுதான் அதிபர் புஷ்ஷின் எதிர்பார்ப்பு.

பொருளாதாரப் பின்னடைவின் விளைவால், உற்பத்தி குறைந்து, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விடும் என்பதுதான் அவர்கள் கவலை. ஏற்கெனவே புஷ் நிர்வாகத்தின்மீது காணப்படும் அதிருப்தி, இதுபோன்ற வேலைக்குறைப்பு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற விஷயங்களால் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவின் தலைவலி அது.

பெரிய அளவில் அமெரிக்காவுக்கு நமது நாட்டிலிருந்து ஏற்றுமதி இல்லை என்பதால் அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு நம்மைப் பாதிக்காது என்று வாதிடுபவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். நமது ஐ.டி. நிறுவனங்களில் முக்கால்வாசிப் பேர் அமெரிக்காவை நம்பித் தொழில் செய்பவர்கள். நமது இந்தியப் பங்குச் சந்தை மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் அன்னிய மூலதனத்தில் பெரும்பகுதி அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, டாலர்களாக வந்தவை என்பதை மறந்துவிடக் கூடாது.

அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு, அங்குள்ள முதலீட்டாளர்களைத் தங்களது மூலதனத்தை இந்தியாவுக்குத் திருப்பவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதுபோன்ற முதலீடுகள் திடீரென திரும்பப் பெறப்படும்போது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் நமது பொருளாதாரத்தையே தகர்த்துவிடும் தன்மையது என்பதால் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவின் விளைவுகள் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாமல், அமெரிக்காவைச் சார்ந்த அத்தனை நாடுகளும் குழம்பிப் போயுள்ளன.

இந்தியப் பொருளாதாரம் பலமாக இருப்பதாகவும், அமெரிக்கப் பின்னடைவு நம்மைப் பெரிய அளவில் பாதிக்காது என்றும் நிதியமைச்சர் ப. சிதம்பரம் உறுதி கூறியிருக்கிறார். நமது அடிப்படைப் பொருளாதாரம் பலமாக இருப்பதாகவும், அதனால் முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் தைரியம் கூறியிருக்கிறார். நல்லது, நம்புவோம். ஆனாலும் சிறு சந்தேகம்.

ஆறு மாதங்களுக்கு முன்னால் அமெரிக்கப் பொருளாதாரமும் பலமாகத்தானே இருந்தது? எல்லா விஷயங்களிலும் அமெரிக்காவைச் சார்ந்து இருக்கிறோமே, அமெரிக்கா ஆட்டம் கண்டால் நாமும் ஆட்டம் காண மாட்டோமா?

—————————————————————————————-

நேர்முகமா, மறைமுகமா?

மத்திய பட்ஜெட் தயாராகி வருகிறது. வழக்கம்போல தொழில்துறையினர், சேவைத்துறையினர், பொருளாதார நிபுணர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் ஆகியோரை நிதியமைச்சர் ப.சிதம்பரம் அழைத்துப் பேசி ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்.

ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், கணினித்துறையில் ஈடுபட்டோர், மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள், மருந்து-மாத்திரை தயாரிப்பாளர்கள், புத்தக பதிப்பாளர்கள், தகவல் தொடர்பில் முதலீடு செய்தோர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், கட்டுமானத் துறையில் உள்ளோர், கணக்கு தணிக்கையாளர்கள், மருத்துவத் தொழிலைச் செய்வோர், ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்களை நடத்துவோர் என்று வசதி படைத்தவர்களே பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அதைப் பெறும் நிலையில் இருக்கிறார்கள்.

“”மோரீஷஸிலிருந்து முதலீடு செய்தால் வரி விதிப்பு கிடையாது” என்ற மொட்டையான சலுகையைப் பயன்படுத்தி ஏராளமான தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்கின்றனர் என்று “”சமீபத்தில்தான்” நிதி அமைச்சக அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதைத் தடுக்க இந்த பட்ஜெட்டில் உறுதியான நடவடிக்கை வருமாம். மத்திய பட்ஜெட் என்பதே பணக்காரர்கள், வசதி படைத்தவர்களின் நலனுக்காக ஏழைகள் மீது வரியைச் சுமத்தி கறாராக வசூலிப்பதற்குத்தான் என்று எண்ணத் தோன்றுகிறது.

வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவாரா மாட்டாரா என்பது ஒருபுறம் இருக்கட்டும். குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆண்டு ஊதியம் இருந்தால் எல்லோருக்குமே 30%தான் வருமான வரி என்பது எந்த ஊர் நியாயம்? 20 லட்சம் சம்பாதித்தாலும் 20 கோடி சம்பாதித்தாலும், 200 கோடி சம்பாதித்தாலும் உச்ச பட்சம் 30% தான். வாழ்க மத்திய அரசின் சோஷலிசம்.

ஏழைகள், நடுத்தர மக்களின் குடும்பங்களில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், வயதான பெற்றோர்கள், கவனித்தே தீர வேண்டிய ஊனமுற்ற குடும்ப உறுப்பினர்கள், விதவையர், நிரந்தர நோயாளிகள் என்று பல பிரச்னைகள் உண்டு. சம்பாதிக்கும் பணம் போதாமல் கடன் வாங்குவதே இவர்களின் வாழ்க்கையாக இருக்கிறது. வருமான வரிச் சலுகைக்காக வீடு கட்ட ஆரம்பித்தவர்களின் நிலைமை வெளியில் சொல்லும்படியாக இல்லை. நம் நாட்டின் மருத்துவ இன்சூரன்ஸ் லட்சணம் மற்ற எல்லோரையும்விட சிதம்பரத்துக்கே தெரியும். ஆயினும் நடுத்தர வர்க்கத்துக்கு அவர் தரும் நிவாரணம் என்ன?

நடுத்தர வர்க்கத்தின் சேமிக்கும் திறன் வேகமாகக் குறைந்து வருகிறது என்பதை தேசிய புள்ளிவிவர நிறுவனம் சமீபத்திய கணக்கெடுப்பிலிருந்து அறிந்து அரசுக்கு அறிக்கை தந்துள்ளது. இது மிகவும் ஆபத்தான அம்சம். நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பினால்தான் எல்.ஐ.சி. போன்ற நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்று வருகின்றன. அந்தத் தொகையிலிருந்துதான் அரசு, தனக்கு முக்கியச் செலவுகளுக்குக் கடன் பெறுகிறது. விதை நெல்லைப் போன்றதுதான் நடுத்தர மக்களின் சேமிப்பு. அதற்கு வழி இல்லாமல் வருமானம் ஒட்டத்துடைக்கப்படுகிறது என்றால் நிதி நிர்வாகம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம்.

விலைவாசி உயர்வு, ஊதியக் குறைவு, நுகர்வு கலாசாரம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. முதல் இரண்டுக்கும் மத்திய, மாநில அரசுகளும் நம் நாட்டுத் தொழில்துறையும் காரணம். மூன்றாவதற்கு வெளிநாட்டு தனியார் வங்கிகளும் அவர்களுடன் சேர்ந்து களத்தில் இறங்கிவிட்ட நம் நாட்டு நிதி நிறுவனங்களும் காரணம்.

உலகமயம், பொருளாதார தாராளமயம் ஆகியவற்றிலிருந்து நாம் ஒதுங்கியிருக்க முடியாது என்று கூறி சுங்கவரி, உற்பத்தி வரி, இறக்குமதி வரி ஆகியவற்றைக் கணிசமாக குறைக்கிறார் நிதியமைச்சர். வெளிநாடுகளிலிருந்து வரும் தேவையற்ற இறக்குமதியைக்கூட தவிர்க்க முடியவில்லை என்று சொல்கிறார். ஆனால் நேர்மையாக உழைத்து, வருமானத்தை மறைக்க முடியாத நிலையில் உள்ள மாதச் சம்பளக்காரர்களுக்கு சலுகை காட்டுவதை, தேவையற்ற செயல் என்று கருதுகிறார்.

வீட்டு வாடகை, மளிகைச் செலவு, வைத்தியச் செலவு ஆகிய மூன்றும் மாதாமாதம் விஷம்போல ஏறிக் கொண்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை; அவர்களுக்குத் தேவையான அளவுக்கு சம்பளத்தை அவர்களே கூட்டிக்கொண்டுவிடலாம். வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகளுக்கு “”அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்” அளவுக்கு இது தீவிர பிரச்னை கிடையாதே? எல்லாம் நம் தலையெழுத்து!

———————————————————————————————————————–
“சிதம்பர’ ரகசியம் எடுபடுமா?

எம். ரமேஷ்

இம்மாத இறுதியில் மத்திய பட்ஜெட் வெளியாக உள்ளது. தொழில்துறையைச் சார்ந்தவர்களைத் தவிர, மற்றவர்கள் பட்ஜெட்டை ஒரு பொருட்டாகக் கண்டு கொள்வதில்லை.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இது. லீப் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்கள் வரிசையில் சிதம்பரமும் இடம்பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முழு பட்ஜெட் இது.

பட்ஜெட்டின் இறுதிப் பலன் பெருவாரியான நடுத்தர மற்றும் சாதாரணப் பிரிவு மக்களின் வாழ்க்கையைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதாக அமைவதில்லை. பல சமயங்களில் பட்ஜெட், இருக்கின்ற நிலைமைக்கும் வேட்டு வைப்பதாகத்தான் இருக்கிறது.

பட்ஜெட்டிற்கு முன்பும் பின்பும் விலைகள் உயரும். சராசரி இந்தியனுக்குச் சுமை கூடும். அறிவிப்புகள் நிறைய இருக்கும். ஆனால் அதனால் யாருக்குப் பலன் என்பது மட்டும் புரியாத “சிதம்பர’ ரகசியமாய் இருக்கும்.

கூடுதல் வரிச் சுமையில் சிக்காமல் தப்பித்தால் போதும் என்று நடுத்தரப் பிரிவு மக்கள் நினைக்கின்றனர். நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்ற சலிப்பே அடித்தட்டு மக்களிடம் அதிகம் நிறைந்திருக்கிறது.

பொதுவாக தாராளமயமாக்கலுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அனைத்துமே நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு சுமையாகத்தான் இருந்துள்ளது.

நாடுகளிடையே தங்கு தடையற்ற வர்த்தக உறவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உலகமயமாக்கலின் ஓர் அங்கமான தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 1991-ல் நிதியமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தினார். அவரை அடியொற்றி சிதம்பரமும் பின்பற்றி வருகிறார். அந்த வகையில் தாராளமயம் தொடரும் என்பது உறுதி.

தாராளமயப் பொருளாதாரம் வேளாண் துறையை அறவே ஒதுக்கிவைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் இந்தப் பட்ஜெட்டில் வேளாண்துறை பக்கம் சிதம்பரம் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

இருப்பினும் இந்தப் பட்ஜெட்டை சுமையில்லா பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யவே சிதம்பரம் விரும்புவார். ஏனெனில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலைச் சந்தித்தாக வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

அதேசமயம், சர்வதேச அளவில் அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அதற்கான கூடுதல் செலவினம், 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் முதலாவது ஆண்டுக்கான ஒதுக்கீடு போன்ற பல பிரச்னைகள் சிதம்பரம் முன் நிற்கும் சவால்களாகும்.

வேளாண் துறை வளர்ச்சி தற்போது 2 சதவீதமாக உள்ளது. வேளாண் உற்பத்தியை 4 சதவீதமாக உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் பல நடவடிக்கைகளை சிதம்பரம் எடுத்தாக வேண்டியுள்ளது.

விவசாயக் கடன் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது பல முனைகளிலிருந்து வலுத்து வருகிறது.

அதேபோல வருமான வரி செலுத்தும் மாத சம்பளதாரர்களிடையே வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.

நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 29,200 கோடி டாலர் உள்ளது. அதேபோல பணவீக்கமும் 4.35 சதவீதமாக கட்டுக்குள் உள்ளதும் திருப்திகரமான விஷயம்.

தொழில்துறை வளர்ச்சி 7.6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு 13.4 சதவீதத்திலிருந்து தற்போது குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வளர்ச்சி இரட்டை இலக்கை எட்டவேண்டுமானால் வேளாண் துறைக்குக் கூடுதல் ஒதுக்கீடு அவசியமாகிறது.

முந்தைய பட்ஜெட்டுகளைப் போலவே மூன்று முக்கிய விஷயங்களுக்கு மட்டும் சிதம்பரம் முன்னுரிமை அளிப்பார் என்பது திண்ணம். ஒன்று நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது, இரண்டு, கட்டமைப்புத் துறையை விரிவாக்குதல், மூன்று, வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவையே.

வெறுமனே அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பதிலோ அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை அளிப்பதிலோ பொருளாதார வளர்ச்சியை எட்டிவிடமுடியாது.

கல்வி, இன்றைய நிலைமைக்கேற்ப வேலைவாய்ப்புப் பயிற்சி, ஆய்வு, புத்தாக்கம் உள்ளிட்ட விஷயங்கள்தானே நீண்டகாலத்தில் உண்மையான, உறுதியான வளர்ச்சிக்கு வித்திட முடியும்? வரும் பட்ஜெட்டில் இதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பதே பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பு.

கிராமப்புற வேலைவாய்ப்பு, அடிப்படை வசதி மேம்பாடு, வறுமை ஒழிப்பு, விவசாயத் தொழிலாளர்கள் முன்னேற்றம் போன்றவையெல்லாம் தாராளமய அலையில் எங்கோ தள்ளப்பட்டு விட்டன.

காங்கிரஸ் கூட்டணிக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்வதுடன் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளைத் திருப்திபடுத்த வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் சிதம்பரத்துக்கு உள்ளது.

வேளாண்மை மற்றும் மகளிர்க்கு இந்தப் பட்ஜெட்டில் அதிக சலுகை காட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். எனவே அவரது வார்த்தைகளைப் பூர்த்தி செய்ய சில நடவடிக்கைகளை சிதம்பரம் எடுப்பார் என உறுதியாக நம்பலாம்.

மற்றபடி, கிட்டத்தட்ட இன்னொரு மன்மோகன் சிங் பட்ஜெட்டாகவே இது இருக்கும் என்று நம்பலாம்.

Posted in 2008, America, Analysis, Balance, Budget, Business, Cheap, Chidambaram, Chidhambaram, China, Chithambaram, Commerce, Corporate, Currency, Deflation, Dollar, Economy, Exchange, Exempt, Exemptions, Expenses, Exports, Finance, Imports, Income, India, Industry, Inflation, Loss, Monetary, Profit, Recession, Rupees, sectors, SEZ, Tax, Taxes, US, USA | Leave a Comment »

Nothing macho about India’s forex reserves – Impact on growth and prices: Varadharajan

Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2007

அன்னியச் செலாவணி கையிருப்பு “நீர்க்குமிழியா’?

உ .ரா. வரதராசன்

“இந்திய நாட்டின் பொருளாதாரம் இமயமென உயர்ந்து நிற்கிறது’ என்று வளர்ச்சியின் பரிணாமங்களை வியந்து போற்றுகிற ஆட்சியாளர்களும் வல்லுநர்களும் அதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டுவது நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு பற்றிய புள்ளிவிவரங்களாகும்.

உலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து அமல்படுத்தத் தொடங்கியது 1991 ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் அன்னியச் செலாவணிக் கையிருப்பாக இருந்த தொகை 580 கோடி அமெரிக்க டாலர் மட்டுமே. இது படிப்படியாக உயர்ந்து 2007 மார்ச் இறுதியில் 19,920 கோடி டாலராக ரிசர்வ் வங்கியில் அம்பாரமாகக் குவிந்து கிடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியதற்குப் பிரதான காரணங்களாகச் சொல்லப்பட்டவற்றில் ஒன்று, நாடு சந்தித்த அன்னியச் செலாவணி நெருக்கடி. மறைந்த சந்திரசேகர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அன்னியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வேறு வழியில்லாமல், மத்திய அரசு ரிசர்வ் வங்கியிலிருந்த தங்கத்தை டன் கணக்கில் எடுத்துக்கொண்டு போய் இங்கிலாந்து (மத்திய) வங்கியில் அடமானம் வைக்க நேரிட்டது என்பது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய நிகழ்வு. அந்த நிலைமை இப்போது தலைகீழாய் மாறியிருக்கிறது என்பதையே தற்போதைய அன்னியச் செலாவணிக் கையிருப்பு விவரங்கள் உணர்த்தும் நிலவரம்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில், இது மிகவும் திருப்திகரமானதொரு நிலைமை என்றே தோற்றமளிக்கலாம். இதை அளவுகோலாகக் கொண்டால், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெரும் வெற்றியை நம் நாட்டுக்குத் தேடித் தந்துள்ளதாகவே முடிவுக்கு வரத் தோன்றும். ஆனால், இந்தக் கையிருப்பின் கணக்குகளை சற்றுக் கருத்தூன்றிப் பரிசீலித்தால், கவலையே மிஞ்சுகிறது.

1991 முதல் 2007 வரையிலான 16 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் நமக்குச் சாதகமான பலன்கள் விளைந்தனவா என்பது முதலில் பார்க்க வேண்டிய கணக்கு.

  • 1990 – 91ஆம் ஆண்டில் நமது இறக்குமதிகளின் மொத்த மதிப்பு ரூ. 50,086 கோடி;
  • ஏற்றுமதிகளின் மதிப்பு ரூ. 33,152 கோடி மட்டுமே.
  • நிகர பற்றாக்குறை ரூ. 16,934 கோடி!
  • இது டாலர் கணக்கில் 944 கோடி.
  • இதுவே, 2005-06ஆம் ஆண்டில் ரூ. 2,29,000 கோடி பற்றாக்குறையாக உயர்ந்தது;
  • டாலர் கணக்கில் இந்தப் பற்றாக்குறை 5,184 கோடியாகும்.

கடந்த பதினாறு ஆண்டுகளில் ஓர் ஆண்டில்கூட நம் நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதி மதிப்பைவிடக் கூடுதலாக இல்லை என்பதுதான் புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை.

இந்தப் பதினாறு ஆண்டுகளில் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிகர பற்றாக்குறை – ஏற்றுமதியை விஞ்சிய இறக்குமதியால் சந்திக்க வேண்டிய சுமை – 3,410 கோடி டாலர் என்று ரிசர்வ் வங்கிக் கணக்கு கூறுகிறது. (ரூபாய் மதிப்பில் இன்றைய நிலவரப்படி இது 1,37,000 கோடி ரூபாய் பற்றாக்குறையாகும்!)

இப்படியிருக்கையில், நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பது எப்படி என்ற கேள்வி எழுவது இயல்பே!

சர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தக நிலவரம் நமக்குச் சாதகமாக அமையாத பின்னணியில், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் அன்னியச் செலாவணி வரத்தைக் குறியாகக் கொண்டு, நிதித்துறை சீர்திருத்தங்கள் பலவற்றையும் அமலாக்கி வந்துள்ளனர்.

இதன் முதல் கட்டமாக 1991 ஆம் ஆண்டு தொடங்கி நமது நாட்டுப் பொருளாதாரத்தின் சகல துறைகளும் – பாதுகாப்புத்துறை உள்பட – அன்னிய முதலீட்டுக்காகத் திறந்துவிடப்பட்டு வந்துள்ளன. புதிதாகத் தொழில் தொடங்க நூற்றுக்கு நூறு சதவீத முதலீட்டுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் தொழில் நிறுவனங்களை விலைபேசி கையகப்படுத்துவதற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டது.

இரண்டாவதாக 1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொழில் முதலீட்டுக்கு மட்டுமன்றி, பங்குச் சந்தை வர்த்தகத்திலும் அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் நுழைய அனுமதிக்கப்பட்டன.

இந்த இரண்டு வகையிலும், பன்னாட்டு நிதி மூலதனம் நம் நாட்டுக்கு வருவதற்கு ஊக்கம் அளிப்பதற்காக அடுக்கடுக்கான சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.

இவற்றில், முதல் வகையில் நேரடித் தொழில் முதலீடுகளாக வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, இரண்டாவது வகையில், பங்குச் சந்தை வர்த்தகத்திற்காக வந்த தொகைகள் பல மடங்காகும்.

நேரடித் தொழில் முதலீட்டிலும், புதிய தொழில்களைத் தொடங்க வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, உள்நாட்டு நிறுவனங்களை கபளீகரம் செய்வதற்காக வந்த மூலதனமே மிகுதியாகும்.

இரண்டாவது வகையாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் (சூதாட்டத்தில்) நுழைந்துள்ள அன்னிய மூலதனத்தின் வளர்ச்சி திகைப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதற்கு அனுமதி வழங்கப்பட்ட 1993 ஆம் ஆண்டில், அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் இந்தியாவின் பங்குச் சந்தையில் ஈடுபடுத்திய தொகை 83 கோடி அமெரிக்க டாலர்கள். இதுவே 2007 மார்ச் இறுதியில் 5200 கோடி டாலர்களாக “விசுவரூபம்’ எடுத்தது! இப்படி மூலதனக் கணக்கில் வரவாக வந்த அன்னியச் செலாவணிதான் ரிசர்வ் வங்கியில் ஏகபோகமாக குவிந்து நிற்கிறது!

இதற்கு விலையாக நமது நாடு கொடுத்தவை ஏராளம், ஏராளம்!

இந்த அன்னிய மூலதன வரவுக்கு எந்தக் கட்டுப்பாடும், நிபந்தனையும் கிடையாது. அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் கொண்டு வரும் நிதி மூலதனத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் யார் என்று தெரிவிக்க வேண்டியது கட்டாயமில்லை!

இந்த முதலீடுகள் கொழிக்கும் லாபத்துக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு உண்டு. இதற்காக மொரிஷியஸ் நாட்டோடு பாஜக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டு, அந்த நாட்டின் வழியாக வந்து போகும் அன்னிய மூலதனம் எந்த வரிவிதிப்புக்கும் உட்படாது. (இதை மறுபரிசீலனை செய்வோம் என்று குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் கூறியுள்ள இன்றைய மத்திய அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளாக இதைக் கண்டுகொள்ளவே இல்லை!)

இந்த அன்னிய மூலதனம்தான் நமது நாட்டின் பங்குச் சந்தையை ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்களில் 30 கம்பெனிகளின் பங்குகளின் விலை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் “சென்செக்ஸ்’ குறியீடு ஒரு மாயாஜால விளையாட்டாக மாறியுள்ளது.

1990 ஜனவரியில் 1000 என்று இருந்த சென்செக்ஸ் புள்ளிகள் 2004 ஆம் ஆண்டு வரை 7000 புள்ளிகளுக்குக் கீழாகவே இருந்தது. 2005 ஜூன் மாதம் 7000 புள்ளியை எட்டிப்பிடித்த சென்செக்ஸ், இப்போது 20,000 புள்ளிகள் வரை நாலு கால் பாய்ச்சலில் எகிறிக் குதித்துள்ளது! இதன் ஏற்ற இறக்கங்களில் பல லட்சம் கோடி ரூபாய்கள் நாள்தோறும் ஒரு பிரிவினருக்கு லாபமாகவும், இன்னொரு பிரிவினருக்கு இழப்பாகவும் பரிமாற்றமாகின்றன.

சென்செக்ஸ் பற்றி நாட்டின் நிதியமைச்சர் ப. சிதம்பரம் “சில நேரங்களில் வியப்பாகவும், சில நேரங்களில் கவலையளிப்பதாகவும்’ இருக்கிறது என்று அண்மையில் கூறியிருந்தார். அதைத் தாண்டி இந்த “மாயா பஜார்’ விளையாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி சிந்திக்கக்கூட அரசு மறுப்பதுதான் வேதனை!

எனவேதான், அரசுத் தரப்பில் ஆர்ப்பரிப்போடு பேசப்படுகிற அன்னியச் செலாவணிக் கையிருப்புப் பெருக்கம், பொருளாதார வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல; அது சோகை பிடித்த பொருளாதார நீரோட்டத்தின் மேற்பரப்பில் தென்படும் நீர்க்குமிழி போன்றதே!

பொருளாதாரச் சீர்திருத்தங்களின் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல – ஆதரவாளர்களே ஆழ்ந்த கவலையோடு பரிசீலிக்க வேண்டிய நிலைமை இது!

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)

Posted in ADR, Agflation, America, APR, Balance, Balance sheet, Balancesheet, Banks, Benefits, Budget, Conversion, Currency, Deficit, Deflation, Dollar, Economy, Exchange, Exports, FDR, Finance, financial, forex, Funds, GDP, Growth, Imbalance, IMF, Impact, Imports, Index, India, Indices, Inflation, Interest, investments, Loans, Loss, markets, MNC, Monetary, Numbers, PC, Policy, Prices, Profit, Rates, RBI, reserves, Return, ROI, Shares, Statistics, Statz, Stocks, Tariffs, Tax, US, USA, Varadharajan, Varadharasan, WB | Leave a Comment »

Probing the rice seizures in Tamil Nadu – AK Venkatasubramanian

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2007

இரண்டு ரூபாய் அரிசி
மின்சார அதிர்ச்சி
அதிரடித் தகவல்கள்

கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதியன்று புதுச்சோரி மாநில உணவுக் கடத்தல் தடுப்புப் பி¡ரிவு போலீஸார், புதுச்சோரி ரயில் நிலையத்தில் வழக்கமான கண்காணிப்பை மேற்கொண்ட போது, 40 வேகன்களில் அ¡ரிசி ஏற்றப் பட்டு, ஒரு சரக்கு ரயில் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தது. அனுப்பப்படும் சரக்கு, அ¡ரிசி என்றதும் சற்று விழித்துக்கொண்டது போலீஸ். ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் 2,400 டன் அ¡ரிசி அந்த வேகன்களில் ஏற்றப்பட்டு, ஆந்திராவில் உள்ள பிக்காவொலு என்ற இடத்துக்கு அனுப்புவதற்காகப் பதிவு செய்யப்பட்டது தொரிய வந்தது.

“யார் பதிவு செய்தது; பதிவு செய்தவர்களுக்கு அ¡ரிசி எப்படி வந்தது; முறையான அத்தாட்ச யுடன் அ¡ரிசி செல்கிறதா?” என்று கேள்விகள் தொடர்ந்தன. விசாரணையில் பெங்களூரூவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் என்ற நிறுவனம் பதிவு செய்ததாகத் தொரிய வந்தது. ஆனால், விதி முறைகளுக்கு உட்பட்டு எடுத்துப் போகப்படும் அ¡ரிசி’ என்று சொல்லும் ஆவணங்கள், ரயில்வே துறையிடம் இல்லை.

கடத்தவிருந்த சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் இன்னமும் துருவியபோது அம்பலமானதுதான், இப்போது தமிழகம் மற்றும் புதுவையில் அலசப்படும் மெகா அ¡ரிசிக் கடத்தல் விவகாரம்.

தொடர்ந்து மேற்கொண்ட அதிரடி விசாரணையில், அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. கடத்தப்படவிருந்த அ¡ரிசி பொது விநியோகத்துக்கு வழங்கப்பட்ட, முன்பே நான்கு முறை புதுச்சோரி ரயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்டிருக்கிறது! கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக 39 வேகன்களில் 2,340 டன் அ¡ரிசி வங்க தேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அடுத்து, அதே செப்டம்பர் மாதம் 20 வேகன்களில் 1,247 டன் அ¡ரிசி அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹாட் என்ற இடத்துக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மொத்தம் 60 வேகன்களில் 3,765 டன் அ¡ரிசி அஸ்ஸாம் கவுகாத்திக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எந்தக் கிடங்கிலிருந்து கொண்டு வரப்பட்டது என்று புலனாய்வு செய்ததில், புதுவையில் உள்ள மா புட்ஸ் மற்றும் ஜே.ஆர். புட்ஸ் என்ற நிறு வனங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் சேகாரிக்கப்பட்டு கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

அந்தக் கிடங்குகளைச் சோதனை செய்ததில் 3,500 டன் அ¡ரிசி சிக்கியது.

சென்னை சேத்துப்பட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அன்னம்மாள் காசி எக்ஸ்போர்ட்ஸ். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் போலியான முகவாரியைக் கொடுத்து நடத்தி வந்த நிறுவனமாம் இது. ஆறுமுகம் ‘ஓஹோ’ வென்று அ¡ரிசி வியாபாரம் செய்வதாகச் சொல்லி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 2005ஆம் வருடம், நவம்பாரில், பத்து கோடி ரூபாய் கடன் கேட்டிருக்கிறார். அவர் பெயருக்கு ஐந்து கோடி, நிறு வனத்துக்கு ஐந்து கோடி!

2006-ஆம் வருடம், மார்ச் மாதம், பத்து கோடியையும் வழங்கிவிட்டது வங்கி. ஆனால், மாதத் தவணை திருப்பிக் கட்டப்படாததால் கவலையடைந்த வங்கி, ஒரு கட்டத்தில், இந்த நிறுவனம் சேகாரித்து வைத்திருந்த அ¡ரிசியைக் கைப்பற்றி ஏலம் விட்டு விட்டது.

ஏலத்தில் அ¡ரிசியை எடுத்த பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் ரயிலில் அனுப்பும்போதுதான் மாட்டிக்கொண்டது. இந்த முக்கியக் கதையில் சில கிளைப் பாத்திரங்களும் உண்டு. வங்கிக்கும் ஆறுமுகத்துக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டது, மும்பையைச் சேர்ந்த நேஷனல் கொலட்ரல் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்ற நிறுவனம். அ¡ரிசிக் கடத்தல் விவகாரத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு குறித்துத் தீவிர விசாரணை நடக்கிறது. தவிர, விசாரணை வலை இறுகும்போது ரயில்வே ஊழியர்களும் சிக்குவார்கள் என்று தொரிகிறது; இதுவரை ஆறு பேர் கைதாகியிருக்கிறார்கள்.

ரயில்வே ஊழியர்கள் சரக்கைப் பதிவு செய்யும்போது, உ¡ரிய ஆவணங்களை ஏன் கேட்டுப் பெறவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒரு பொருளை ரயிலில் அனுப்பப் பதிவு செய்யும் போது, அந்தப் பொருள் அனுப்பும் நபருடையதுதான் என்று நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் கொடுக்க வேண்டும். அதிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பும் போது, ரயில்வேயிடம் வழங்கும் மனுவில் உ¡ரிய அதிகா¡ரியின் அத்தாட்சி குறிப்பிடப்பட வேண்டும். அ¡ரிசி, கோதுமை என்றால் வட்டார வழங்கல் அதிகா¡ரி அல்லது வரு வாய்த்துறை அதிகா¡ரிகளிடம் அத்தாட்சி பெற்றிருக்க வேண்டும். ரயில்வே அதிகா¡ரிகள் துணையில்லாமல் இந்தக் கடத் தல் நடந்திருக்க முடியாது.

இப்போது மற்றொரு முக்கியக் கேள்வி எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. கடத்தப்பட்ட அ¡ரிசி எந்த மாநிலத்தை சேர்ந்தது? “பிரச்னையில் சிக்கிய நிறுவனம் சென்னை முகவாரியைக் கொடுத்துச் செயல்பட்டிருக்கிறது. எங்கள் மாநிலத்தில் பொது விநியோகத்துக்கு வெளி மார்க்கெட்டிலிருந்து அ¡ரிசி வாங்குகிறோம். எனவே, தமிழ்நாட்டிலிருந்து தான் இந்த அ¡ரிசி கடத்தி வரப்பட்டிருக்கக்கூடும்” என்று உறுதியாகச் சொல்கிறார்கள் புதுவை அதிகா¡ரிகள். ரேஷனில் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்கப் படும் அ¡ரிசி, கடத்தப்பட்டு வடகிழக்கு மாநிலங்களை அடையும்போது கிலோ இருபது ரூபாயாக எகிறுகிறது. இந்தத் தகவலே மின்சார அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்த விவகாரமும் 2006-ஆம் வருடம் மே மாதத்துக்கு முன்பே ஆரம்பித்து விட்டது. இருந்தாலும், ‘முழு உண்மையைக் கண்டறிய சி.பி.ஐ. விசாரணை கோ¡ரியிருக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறது தமிழக அரசு. சி.பி.ஐ. விசாரணை கோ¡ரினாலும், தமிழக அரசின் சிவில் சப்ளை போலீஸ் துறை தனியாக, தீவிரமாக விசாரணை நடத்தி சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளைக் கண்டறிந்துள்ளதாக, கோட்டை வட்டாரம் சொல்கிறது.

“2006ம் வருடம் மே மாதத்துக்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் பொது விநியோகத் துறை முடுக்கிவிடப்பட்டது. உணவு அமைச்சரே மாநிலம் முழுவதும் இரவும், பகலும் சுற்றி ரேஷன் அ¡ரிசி கடத்தல்காரர்களை வேட்டையாடினார். இதுவரை 45 கடத்தல்காரர்கள் உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதில் ஐந்து பேர் குண்டர்கள் சட்டத்தில் இருக்கிறார்கள். நிறைய லா¡ரிகள் கைப்பற்றப் பட்டன.

கடத்தலுக்குத் துணைபோன ஊழியர்கள், அதிகா¡ரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் 40 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்தப் போலி கார்டுகள் மூலம் வாங்கப்பட்ட அ¡ரிசியே சேகாரிக்கப் பட்டுக் கடத்தப்பட்டது. ஒரு கோடியே 94 லட்சம் கார்டுதாரர்களுக்கு முறையே மாதம் 20 கிலோ அ¡ரிசி தவறாமல் வழங்கிவிடுகிறோம்.

அதேசமயம் முன்பு, அ.தி.மு.க. ஆட்சியில் உணவுக் கழகத்திடம் கொள்முதல் செய்த அ¡ரிசியின் அளவு மூன்று லட்சம் டன். நியாயமான கார்டுதாரர்களின் எண்ணிக்கை கொஞ்சம் உயர்ந்த போதும் இப்போது கொள்முதல் செய்யும் அளவு இரண்டேமுக்கால் லட்சம் டன்தான்.

இதில் இடைப்பட்ட அளவு உள்ள அ¡ரிசியே அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட் டது. இப்போது உணவுக் கழகத்திட மிருந்து அ¡ரிசி கொள்முதல் செய்த லா¡ரி, எந்த வழித்தடத்தில் செல்கிறது என்பதையும் மானிட்டர் செய்யும் வசதி இருக்கிறது. கடந்த ஆட்சியில் ஓர் அமைச்சரே தினசாரி 20 லா¡ரிகளில் ரேஷன் அ¡ரிசியைக் கடத்தியிருக்கிறார் என்பது தொரிய வந்திருக்கிறது” என்ற திடுக் தகவலுடன் முடித்தார் அந்தத் துறை சார்ந்த இந்நிலையில், அதிகா¡ரி ஒருவர்.

புதுவையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கிடங்குகள் ஒரு வருடத்துக்கு முன்புதான் எடுக்கப்பட்டதாக ஜெயலலிதா சொல்கிறார். இப்போதைய தி.மு.க. ஆட்சியில் கடத்தல் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்று சொல்லப்படுவது எந்த வகையில் சமாதானமாக அமைய முடியும்!

யாருமே அ¡ரிசி கடத்தல் அதிகாரித்துள்ளது என்று ஒப்புக்கொள்ளப் போவதில்லை. பொதுவிநியோகம் என்றாலே ஊழலுடன் கைகோத்துக்கொண்டு தான் நடக்கிறது. ஒன் றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் தொடர்பான விவகாரம் இது. சி.பி.ஐ. விசாரணை, ‘கடத்தல் நடந்த கால கட்டத்தை’ கண்டு பிடித்து வெளியிடும்போது, யார் யார் தலை உருளுமோ?

– ஸ்ரீநி
——————————————————————————————————–

“பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கப்படும் அ¡ரிசி கடத்தப்பட்டு, வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது ஒரு தொடர்கதையே” என்று சொல்லி நம்மை திடுக்கிட வைக்கிறார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகா¡ரி, அ.கி.வேங்கட சுப்பிரமணியம். பல ஆண்டுகள் உணவு மற்றும் பொது விநியோகத் துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர் இவர்.

“நமது நாட்டில் ஏறத்தாழ ஐந்து லட்சம் நியாய விலைக் கடைகள் மூலம், 20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 20,000 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசி, கோதுமை, மண் ணெண்ணெய் ஆகியவை தீய சக்திகளால் கடத்தப்படுவது பல்லாண்டுகளாக நடந்து வரும் ஒரு விஷயம்.

1998-ஆம் வருடம் நாடு முழுவதும் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது குறித்த ஆய்வை எடுக்குமாறு டாடா நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அந்த ஆய்வின்படி தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசியில் மூன்றில் ஒரு பாகம் கடத்தப்படுகிறது என்பது தொரிய வந்தது. மாதம் ஒன்றுக்கு விநியோகிக்கப்படும் சுமார் மூன்று லட்சம் டன் அ¡ரிசியில், ஒரு லட்சம் டன் அ¡ரிசி கடத்தப்படுகிறது என்ற அடிப்படையில் பார்த்தால், கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் லாபம் அடிக்கும் பட்சத்தில், வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி, கடத்தல்காரர்களின் பாக்கெட்டுகளுக்குப் போகிறது.

கடத்தலைக் கண்டுபிடிக்க சிவில் சப்ளை போலீஸ் இருக்கிறது. ஆனால், ஒரு கடத்தல் லா¡ரியைப் பிடித்து விட்டால் அதிலுள்ள ஆட்களைக் கைது செய்து, லா¡ரியைப் பறி முதல் செய்து வழக்குப் பதிவு செய்கிறார்களே தவிர, அந்தக் கடத்தலுக்கு மூலம் யார்? அ¡ரிசி எங்கு போகிறது என்றெல்லாம் ‘பல காரணங்களால்’ ஆய்வு செய்வதில்லை.

கடத்தலுக்கு முக்கிய காரணம் போலி ரேஷன் கார்டுகளும், அ¡ரிசி வாங்காத கார்டுகளும்தான். இதைக் கண்டுபிடிப்பது எப்படி? 1997-ஆம் ஆண்டு தமிழக அரசின் உணவுத் துறை (எ..225) ஆணை ஒன்று போட்டிருக்கிறது. அதன்படி ஒருவர், ரேஷன் கடைக்குச் சென்று கார்டுதாரர்கள் பட்டியலைக் கொண்ட ¡ரிஜிஸ்டரைப் பார்வையிட்டு, நகல் எடுக்கலாம். அதே போல் ஸ்டாக் ¡ரிஜிஸ்டரையும் சோதிக்கலாம். பேட்டை ரவுடிகள், அரசியல்வாதிகள் மிரட்டல் மற்றும் அராஜகம் காரணமாக, தனி மனிதர்கள் இந்த வேலைகளில் ஈடுபடத் துணிய மாட்டார்கள். கார்டுதாரர்களின் பட்டியலை எடுத்து ஏ¡ரியாவில், வீடு, வீடாகச் சோதனைச் செய்து, போலி கார்டுகளின் பட்டியலை உ¡ரிய அதிகா¡ரிக்குக் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம். இதனால் ஊழல் ஒழிய வாய்ப்பிருக்கிறது” என்கிறார் அ.கி.வேங்கடசுப்ரமணியம்.

————————————————————————————————————————-
விலைக் கொள்கையில் நெல்லும் கோதுமையும்

ஆர்.எஸ். நாராயணன்

தேசிய விவசாய விளைபொருள் விலை நிர்ணயக் கொள்கை விவசாய உற்பத்தி வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

ஏனெனில் விலை என்பது கேள்வியின் ஆற்றலுக்கும் வழங்கலின் விளைவுக்கும் இடைப்பட்ட ஒரு சமரசக்குறியீடு. இது வளர்ச்சியைக் கண்காணிக்கும் குறியீடும் ஆகும். கேள்வியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த விலைக்குறைப்பை ஏற்படுத்தியும், விலையை உயர்த்தி வழங்கலையும் பெருக்க வேண்டும்.

திட்ட நிர்ணயப்படி விளைபொருள் உற்பத்தி உயரும்போது வழங்கல் அதிகமாகும். வழங்கல் கூடினால் விலை வீழ்ச்சியுறும். விலை வீழ்ச்சியுற்றால் உற்பத்தி குறையும். திட்டமிட்டபடி உற்பத்தியை உயர்த்த விலை நிர்ணயம் தேவை. எனவே, உணவு உற்பத்தியை உயர்த்தும் ஒரு மார்க்கமாகவே விலை நிர்ணயக் கொள்கை உதவி வந்துள்ளது.

இருப்பினும் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு – குறிப்பாக நமது பொதுவிநியோகத்துக்கு வழங்கும் நெல், கோதுமை விவசாயிகளுக்கு – மத்திய அரசு வழங்கி வரும் ஊக்க விலைக்கும் மொத்தவிலைக்குறியீட்டு எண் காட்டும் விலைக்கும் உள்ள சமச்சீர்மை என்றோ தொலைந்துவிட்டது.

நெல் அல்லது அரிசியில் வெளிஅங்காடி வழங்கல் கூடுதலாகவும் கோதுமையில் வெளிஅங்காடி வழங்கல் குறைவாகவும் உள்ளது. அரிசியில் ஏற்றுமதி உள்ளது. கோதுமையில் இறக்குமதி உள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு 2007 – 08-க்கான அரசின் நெல், கோதுமை விலைகளால் இரு தரப்பு விவசாயிகளும் நொந்து போயுள்ளனர்.

வடக்கே – குறிப்பாக பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உ.பி. ஆகிய மாநிலங்களின் விவசாயிகளே அரிசி மற்றும் கோதுமைகளை மத்தியத் தொகுப்புக்கு வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றனர். இம்மாநில விவசாயிகளின் கோரிக்கைகளை வைத்துத்தான் மத்திய அரசின் விலைநிர்ணயம் உருப்பெருவதாகத் தோன்றுகிறது.

கடந்த 9-10-2007 அன்று நடப்புப் பருவத்திற்குரிய வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைகளை மத்திய அமைச்சரவைக்குழு அறிவித்தது.

அதன்படி, கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,000, “ஏ’ ரக நெல் ரூ. 725 என நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த பருவத்தைவிட நடப்புப் பருவத்திற்கு (2007 – 08) கோதுமைக்கு ரூ. 150 உயர்த்தப்பட அதேநேரம் நெல்லுக்கு ரூ. 30 மட்டுமே உயர்த்தப்பட்டது. இந்த வித்தியாசம் ஒருபுறம் இருக்கட்டும்.

கோதுமையுடன் நெல்லை ஒப்பிடும்போது கோதுமையை அப்படியே மாவாக (ஆட்டாவாக) மாற்றி சமைத்து விடலாம். கழிவும் அற்பமே. ஆனால் நெல்லை அரிசியாக மாற்றித்தான் சமைக்க முடியும். நெல்லில் மூன்றில் ஒரு பங்கு உமியாகவும் தவிடாகவும் மாறிவிடும். எனினும் தவிட்டுக்கு விலை உண்டு. குருணைக்கும் விலை உண்டு.

நெல்விலை என்றால் 66.6 சதவீத அரிசி விலைக்குச் சமம். 100 சதவீதம் அரிசி என்பது ரூ. 966 என்றாலும் ரூ. 34 குறைகிறது.

நெல் விலையையும் கோதுமை விலையையும் சமவிகிதத்தில் உயர்த்தாமல் விலை நிர்ணயம் செய்துள்ள விவசாய விலை மதிப்பீட்டு விலைக்குழு பாரபட்சம் காண்பிப்பது ஏன்?

மத்திய அரசின் மத்தியத் தொகுப்புக்கு குறைந்த அளவுக்கு வழங்கல் செய்யும் தமிழ்நாட்டு விவசாயிகள் இப்போது கிளர்ந்தெழுந்துள்ளனர். அதேசமயம் விலைநிர்யணமாவதற்கு முன்பே வடக்கில் பாரதிய விவசாயிகள் சங்கம் கிளர்ந்தெழுந்துவிட்டது.

பொதுவாக ஒப்பிடும்போது கோதுமை விலையில்தான் பிரச்னை அதிகம். உலகச் சந்தையில் கோதுமையின் விலை ரூ. 1,600. மத்திய அரசு (உணவுக் கார்ப்பரேஷன்) இவ்வளவு அதிகமான விலை கொடுத்து சுமார் 10 லட்சம் டன் வரை கோதுமையை இறக்குமதி செய்துள்ளது.

கோதுமையில் உள்ள பற்றாக்குறை அரிசியில் இல்லை. அரிசி ஏற்றுமதியாகிறது. கோதுமையோ இறக்குமதியாகிறது. கோதுமை உள்ளூர் வியாபாரத்திலும் உணவுக் கார்ப்பரேஷன் ஏகபோகம் செய்கிறது.

கோதுமையின் வெளிச்சந்தைக்கும் உணவுக் கார்ப்பரேஷனே வழங்கல் செய்கிறது. அரிசியில் வெளிச்சந்தை தெளிவாக உள்ளது.

ஆகவே, பாரதிய விவசாயிகள் சங்கம் கோதுமைக்கு உலகச் சந்தையில் உள்ள விலையை வழங்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தும் கிடைத்த விலை ரூ. 1000 மட்டுமே.

இப்போது கோதுமை விவசாயிகள் ரூ. 1,240 தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்கின்றனர். கோதுமை விலையை மொத்த விலைக்குறியீட்டெண் அடிப்படையில் நிர்ணயம் செய்யாததால் கடந்த 25 ஆண்டுகளில் கோதுமை விவசாயிகளின் இழப்பு ரூ. 20,000 கோடி என்று பாரதிய விவசாயிகள் சங்கம் ஒரு புள்ளிவிவரத்தை மத்திய அரசின் அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பியுள்ளது.

பாசுமதி அரிசி தவிர்த்த இதர ரக அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுவும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பஞ்சாபில் குருதாஸ்பூர், பெரோஸ்பூர், அமிருதசரஸ் மாவட்டங்களில் விளையும் சர்பதி, பூசா சன்னரகம் ஏற்றுமதி காரணமாக ரூ. 1,600 என விற்ற விலை இன்று ரூ. 1,200-க்கு இறங்கிவிட்டது.

ஆகவே பாசுமதி சாராத இதர அரிசி ரகங்களின் ஏற்றுமதித் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு கூடியுள்ளது.

மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கிரிக்கெட் போதையில் உள்ளார். விவசாயப் பிரச்னையைவிட வெங்சர்க்கார் விலகல் பிரச்னைதான் இப்போது அவருக்கு முக்கிய விஷயமாகிவிட்டது!

கடந்த பல ஆண்டுகளாக வேளாண்மை உற்பத்தி மதிப்பு சரிந்துவிட்ட சூழ்நிலையில் கொள்முதல் விலைக்கும் சாகுபடிச் செலவு மதிப்புக்கும் இடைவெளி மிகவும் குறுகிவிட்டது.

எனினும், விவசாய விலை மதிப்பீட்டுக் குழு பின்வரும் பத்து விலை நிர்ணய ஆக்கக் கூறுகளை, ஜா கமிட்டி பரிந்துரைத்தபடி பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. அவையாவன:

1. சாகுபடிச் செலவு மதிப்பு.

2. பயிர் முதலீடுகளின் விலை மாற்றம்.

3. பயிர் முதலீட்டுப் பொருள் விலைக்கும் உள்ள இணைவீதம்

4. அங்காடி விலைகளின் போக்கு.

5. கேள்வியும் வழங்கலும்

6. சகபயிர் விலைகள்

7. தொழில்துறை செலவு மதிப்பின் மீது ஆதரவு விலை ஏற்படுத்தும் விளைவு.

8. பொதுவான விலைவாசி ஏற்படுத்தும் விளைவு.

9. வாழ்க்கைச் செலவு மீது ஏற்படுத்தும் விளைவு.

10. அகில உலகச் சந்தை விலை.

இவற்றில் முதல் ஐந்து ஆக்கக் கூறுகளுடன் வாழ்க்கைச் செலவு – விவசாயிகளின் வாழ்க்கைச் செலவையும் – ஒட்டிப் பின்பற்றினால் வேளாண் உற்பத்தி மதிப்பு உயர வழி உள்ளது.

சரி. இதில் தமிழக அரசின் பங்கு என்ன? வேளாண்மை, உணவு எல்லாம் அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அதிகாரத்திற்குட்பட்டது என்று கூறி, திமுக அரசு உணவுக் கார்ப்பரேஷனுக்கு இணையாக தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனைத் தோற்றுவித்து உணவுக் கார்ப்பரேஷன் வரம்பைக் கட்டுப்படுத்தியுள்ளது.

இதே மனஉணர்வை மனத்தில்கொண்டு உயிர்ப்பாதுகாப்புக்கு உறுதுணையாயுள்ள உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு உயர்ந்தபட்சமாக நெல் விலையை ரூ. 1200க்கு உயர்த்தத் தமிழ்நாடு அரசு முன்வருமா?

நெல் கொள்முதலில் ஏகபோகம் செய்வது தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் சப்ளை கார்ப்பரேஷன் என்பதால் நெல் விலையை உயர்த்தும் ஒரு கடமை மாநில அரசுக்கு இல்லையா?

(கட்டுரையாளர்: இயற்கை வேளாண்மை பொறியியல் நிபுணர்)

Posted in abuse, ADMK, Agriculture, Ask, Bid, Biz, Black markets, Bribery, Bribes, Business, Capture, Commodites, Commodity, Consumption, Contracts, Corruption, Council, Deflation, Demand, Distribution, DMK, Economy, Exports, FAO, Farming, Food, Futures, GDP, godowns, Govt, Growth, Hijack, Illegal, Imports, Inflation, Investigation, kickbacks, Law, Loss, markets, Options, Order, organic, P&L, Paddy, PDS, PnL, Policy, Power, Prices, Production, Profit, Reliance, retail, retailers, rice, seize, Shipments, Storage, Supply, Wheat | Leave a Comment »

Kamal gets subpoenaed by Supreme Court regarding the export of ‘Kurudhi punal’ Tamil movie

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2007

நடிகர் கமல்ஹாசனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுதில்லி,நவ. 23: வருமான வரிச் சலுகை தொடர்பான வழக்கில் நடிகர் கமல்ஹாசனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கமல்ஹாசன், அர்ஜுன், கவுதமி நடித்த குருதிப்புனல் திரைப்படம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை கமல்ஹாசன் வழங்கினார். ஒரு சரக்கை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் வருமான வரியில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின் 80 எச்சிசி பிரிவின்படி இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ரூ.54.50 லட்சம் வருமான வரிச் சலுகைக் கேட்டார் கமல்ஹாசன்.

திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை மட்டும்தான் குறிப்பிட்ட கமல்ஹாசன் வழங்கியுள்ளார். இது சரக்கு ஏற்றுமதி ஆகாது. திரைப்படத்தின் உரிமை என்பது சரக்கு அல்ல. எனவே வரிச்சலுகை வழங்க முடியாது என்று வருமான வரித்துறை கூறியது. இதை எதிர்த்து கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தார்.

வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும், சென்னை உயர் நீதிமன்றமும் இவ்வழக்கில் கமல்ஹாசனுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கின. இதை எதிர்த்து வருமான வரித்துறை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி அசோக் பான் தலைமையிலான பெஞ்ச், பதில் அளிக்குமாறு கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Posted in 420, Accounting, Accounts, Actor, America, Arjun, Ashok Baan, Ashok Ban, Ashok Bhan, Cinema, Claims, content, Courts, Dasavadharam, Dasavatharam, deductions, Evasion, Exports, Films, Finance, Forgery, Goods, Illegal, Income, Income Tax, IT, Judges, Justice, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Kurudhippunal, Kurudhipunal, Kuruthippunal, Kuruthipunal, Law, legal, Loss, merchandise, Movies, Nadiadvala, Nadiadwala, Order, Pictures, Producer, Profit, rights, SC, Scam, subpoena, Tax, Taxes, telecast, US, USA | 1 Comment »

India to curb foreign funds deluge – Volatile stock market & Participatory note policy

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007

பாடாய்ப்படுத்தும் பங்குச்சந்தை!

பங்குச் சந்தை என்பது நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகளின் ஆரோக்கியத்தையும், மக்களுடைய வருமானம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் வளத்தையும் ஒருசேர உணர்த்தும் உரைகல். ஆனால் சமீப காலமாக -அன்னிய நேரடி முதலீடு காரணமாக -பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனை மதிப்பும், பங்குகளின் தனி மதிப்பும் மிக அதிகமாக உயர்ந்து வருகின்றன.

செவ்வாய்க்கிழமை 19,000 புள்ளிகளை எட்டிய குறியீட்டெண் புதன்கிழமை 20,000-ஐ எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 1,744 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. பங்கேற்புப் பத்திரத்தை “செபி’ என்கிற பங்குச் சந்தை கண்காணிப்பு -கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்துவிடும் என்ற வதந்தி காரணமாக இப்படிக் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்துகொண்டு, தரகர்கள் மூலம் முதலீடு செய்கிறவர்கள் பயன்படுத்தும் புதுவகை அடையாள பங்குப் பத்திரமே, “பங்கேற்பு பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. அவற்றைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்த பிறகே சந்தையில் விற்பனை மீண்டும் உயர்ந்தது.

கடந்த வாரம்தான் பங்குச் சந்தையில் குறியீட்டெண் வேகவேகமாக உயர்ந்து வருவது குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் வியப்பும் கவலையும் ஒருங்கே தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. “சிறிய முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் அசட்டுத் துணிச்சலில் அதிகப் பணத்தை முதலீடு செய்து, கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று உரிய நேரத்தில் அவர் எச்சரித்திருந்தார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரும், ஊக வணிகர்களும் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய பணத்தை இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதை வேண்டாம் என்று சொல்வது சரியான வணிக உத்தி இல்லை. இந்த முதலீடு இருவகைப்படும். வெளிநாடுகளில் உள்ள தனி முதலீட்டாளர்கள் நேரடியாக நமது பங்குகளை வாங்குவது ஒருவகை. வெளிநாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் நம்முடைய பங்குகளை வாங்குவது மற்றொரு வகை. இவ்விருவகையிலான நேரடி முதலீடுமே நமக்கு அவசியம்தான்.

இந்த முதலீட்டாளர்கள், லாபம் வரும் என்றால் முதலீடு செய்வார்கள். நஷ்டம் வரும் என்றால் முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். இது பங்குச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல. எனவே இவ்வகை முதலீட்டாளர்களின் முதலீட்டில் 10% தொகையை, ஓராண்டுக்குத் திரும்ப எடுக்க முடியாமல் கட்டாய டெபாசிட்டாகப் பெற வேண்டும் என்று அரசுக்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், பொருளாதார வல்லுநருமான எஸ்.எஸ். தாராபூர் ஆலோசனை கூறியிருக்கிறார். இதை அமல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

போக்குவரத்து, சாலை வசதிகள், தகவல்தொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார உற்பத்தி போன்ற அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம் என்று அரசு பலமுறை கூறி ஓய்ந்துவிட்டது. ஆனால் அத்தகைய முதலீட்டை ஏற்கும் நிறுவனங்களோ, பங்கு வெளியீடுகளோ, கடன் பத்திரங்களோ சந்தையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இப்படியொரு ஏற்பாட்டைத் தனியார் நிறுவனங்கள் செய்யாது; அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும். வங்கிகளில் தரப்படும் வட்டிவீதத்தைவிட கவர்ச்சிகரமான வருவாயை அளிப்பதாக அரசு உறுதி கூறினால் உள்நாட்டிலிருந்து மட்டும் அல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இந்தியர்கள் முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். இனியாவது அரசு அத்தகையதொரு முயற்சியைத் தொடங்குமா?

Posted in ADR, Assets, Biz, Bonds, Brokers, BSE, Commerce, crash, DJIA, Economy, FII, Finance, fiscal, Foreign, Funds, GE, GM, Goldman Sachs, Govt, Index, Indices, Infy, Interest, International, investors, Invsetors, IPO, Loss, markets, Merryll Lunch, MF, MNC, Morgan Stanley, NRI, NSE, PE, PIO, Planning, Portfolio, Profit, Rates, ratio, Shares, Stocks, Traders, Trading, Wipro, World | Leave a Comment »

Textile Industry: Current Trends, analysis – S Gopalakrishnan (Garment Exports)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள்

எஸ். கோபாலகிருஷ்ணன்

ஜவுளித்துறையில் “கோட்டா’ முறை முடிவுக்கு வந்து சுமார் 3 ஆண்டுகளாகப் போகிறது. ஜவுளித்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது. இந்த மாற்றம் ஏற்படுவதற்கு முன் என்ன நிலைமை இருந்தது?

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்களுக்குத் தேவையான ஆயத்த ஆடைகளை ஒரே நாட்டிலிருந்து வாங்குவதில்லை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா, இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு விகித அடிப்படையில் இறக்குமதி செய்து வந்தன. இதனால், இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இந்த கோட்டா முறை 2005 ஜனவரி முதல் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இந்திய ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. “”இனி தேவையெல்லாம், வணிகத்திறன் மட்டுமே. அதாவது, சர்வதேசச் சந்தையில் போட்டியிடுவதற்குத் தகுந்த சிறப்பான தரம், நியாயமான விலை, குறிப்பிட்ட தேதியில் ஏற்றுமதி செய்தல் ஆகியவையே. இனி எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம்” என்று ஜவுளித்துறையில் பேசப்பட்டது.

2005-ல் வெளியான முக்கிய ஆய்வறிக்கைகள், 2003 – 04-ல் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி 2010-ல் 50 பில்லியன் டாலராக உயரும் என்று தெரிவித்தன. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி). அதேபோல், 2012-ம் ஆண்டில் 55 பில்லியன் டாலராகவும் 2014-ம் ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும் ஜவுளி ஏற்றுமதி உயரும் என்றும் கணிக்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு இணையாக ஜவுளித்துறை உத்வேகம் அடையும் என்றும் பேசப்பட்டது.

ஆனால், நடப்பாண்டில் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 23 பில்லியன் டாலராகவே இருக்கும் என்று தெரிகிறது. அதாவது நிர்ணயிக்கப்பட்டிருந்த 25 பில்லியன் டாலர் இலக்கைவிட குறைவாகவே இருக்கும். கடந்த ஆண்டும் இலக்கைவிட 2 பில்லியன் டாலர் குறைவாகவே ஏற்றுமதி இருந்தது.

எனினும், நான்கு ஆண்டுகளுக்கு முன் வெறும் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது சற்று ஆறுதலான விஷயம்.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரித்துள்ள அளவு, ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கவில்லை என்பதே உண்மை.

சீனா, வங்கதேசம் போன்ற நாடுகள் இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டு கோட்டா முறை ரத்தான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளன. சர்வதேச அளவில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 3 சதவிகிதம்தான்; ஆனால் சீனாவின் ஏற்றுமதி 20 சதவிகிதம்.

இந்தியாவைப் பொருத்தவரை, ஜவுளித்துறைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மூன்றரை கோடி மக்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கும் துறை இது. இந்தியாவின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒன்பது சதவிகிதத்தினருக்கு ஏற்கெனவே வேலைவாய்ப்பு வழங்கிவரும் ஒரு துறை.

மத்திய அரசு அண்மைக்காலமாக சில புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஜவுளித்துறையில் புதிதாக முதலீடுகள் வரவேண்டும் என்ற நோக்கில், 1999-ம் ஆண்டு முதல் ஜவுளித்துறையில் தொழிலியல் மேம்பாடு நிதித் திட்டத்தை (பங்ஷ்ற்ண்ப்ங் மல்ஞ்ழ்ஹக்ஹற்ண்ர்ய் ஊன்ய்க் நஸ்ரீட்ங்ம்ங்) உருவாக்கி தொழிலியல் ரீதியான மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்காக நிதி உதவி செய்து வருகிறது. இத்திட்டம் நடப்பாண்டில் முடிவடையும் நிலையில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாட் (யஹப்ன்ங் அக்க்ங்க் பஹஷ்) உள்ளிட்ட வரிச்சலுகைகள், நவீன இயந்திரங்கள் இறக்குமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், சிறுதொழில்துறையினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பின்னலாடை போன்ற சில பிரிவுகளை பிற தொழிற்கூடங்களுக்கு அனுமதித்தல், வெளிநாட்டு முதலீட்டுக்கான உச்ச வரம்பை 100 சதவிகிதமாக உயர்த்துதல் போன்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

எனினும் ஜவுளித்துறை குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. தொழிலியல் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் பயனாக, உள்நாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான அளவில் புதிய முதலீடுகளை ஜவுளித் துறையில் செய்து வருகின்றனர்.

அதேநேரம், ஜவுளி ஏற்றுமதியில் அனுபவமும், ஆற்றலும் பெற்றுள்ள சில தொழில் முனைவோர் வங்கதேசம் சென்று, ஏற்றுமதி செய்ய முற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அந்த நாட்டில் தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் குறைவு என்பதே இதற்கு காரணம்.

இது ஒருபுறமிருக்க, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. மற்ற ஏற்றுமதியாளர்களைப்போலவே, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இந்த டாலர் வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப் பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் ரூ. 1,400 கோடியில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், இது போதுமானது அல்ல என்பது ஏற்றுமதியாளர்களின் கருத்து.

இந்நிலையில், டாலர் மதிப்பு வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, அமெரிக்கச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை மட்டும் நம்பியிராமல், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கதுதான். எனினும், அமெரிக்கச் சந்தையின் தேவையைவிட ஐரோப்பிய நாடுகளின் தேவை மிகக் குறைவு என்பதால், இது ஒரு தாற்காலிக நிவாரணமாகவே அமையும்.

அதேபோல், அமெரிக்காவின் புதிய ஆர்டர்களுக்கு 3 சதவிகித அளவுக்கு விலையை உயர்த்தி வருகிறார்கள் என்று திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்படும் ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஜவுளித்துறையில் நீண்டகாலத்துக்கு உத்வேகம் ஏற்பட வேண்டுமானால், தொழிலியல் ரீதியாக நவீனமயமாக்கல், கட்டமைப்பு மேம்பாடு, காலமாற்றத்துக்கேற்ற புதிய புதிய வணிக உத்திகள் ஆகியவை உடனடித் தேவை. அத்துடன், நெசவு முதல் ஆடைகளைத் தைத்து முடிப்பதுவரை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த உற்பத்திக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

இதைக் கருத்தில்கொண்டு, சர்வதேசத் தரத்துக்கு ஜவுளி ஆலைகளை நிறுவுவதற்காக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களை மத்திய அரசு அமைக்கிறது. இத்திட்டத்தில் 30 ஜவுளி பூங்காக்களை அமைக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 ஆயிரத்து 897 கோடியில் அமையும் இத் திட்டத்தில் மத்திய அரசின் பங்குத்தொகை ரூ. 1,055 கோடி என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருப்பது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

Posted in America, Bangladesh, Budget, Capital, Cash, China, Commerce, Conversion, Dollar, Dress, Dresses, Economy, Employment, EU, Europe, Exchange, Exports, Factory, Fashion, Garments, GDP, Govt, Honduras, Imbalance, Incentives, Income, Indonesia, Industry, Inflation, Jobs, Knit, Loss, Monetary, Money, Nicaragua, Profit, revenue, Rupee, Srilanka, Tariffs, Tax, Textiles, Thirupoor, Thiruppoor, Thiruppur, Thirupur, Tirupoor, Tiruppoor, Tiruppur, Tirupur, Trade, US, USA | Leave a Comment »

Election Mela in Karnataka: Tracking Poll Expenses and Party Expenditure

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2007

கர்நாடக அரசியல் குழப்பத்தால் மத்திய அரசுக்கு ரூ.75 கோடி செலவு! * தேர்தலில் கட்சிகளும் கோடிகளை கொட்ட தயார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இடைத் தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இடைத் தேர்தல் வந்தால், குறைந்தபட்சம் ரூ.75 கோடி ரூபாயை அரசு செலவழிக்க வேண்டியிருக்கும்.

மூன்று கட்சிகள் பலத்த போட்டியுடன் களம் இறங்கும் நிலையில் உள்ளதால், தேர்தல் வந்ததும் இக்கட்சிகள் சர்வ சாதாரணமாக ரூ.500 கோடி வரை செலவழிக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. கர்நாடகாவில் அரசியல் குழப்பம் உச்ச கட்டம் அடைந்துள்ளது.

கர்நாடக முதல்வராக 2004, மே 28ல் பொறுப்பேற்ற காங்., கட்சியைச் சேர்ந்த தரம் சிங்குக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவளித்தது. துணை முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சித்தராமையா நியமிக்கப்பட்டார்.

தரம் சிங்கின் பதவி 20 மாதங்களே நீடித்தது. கூட்டணியாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் குடைச்சல் கொடுக்கத் துவங்கி, தனது ஆதரவை வாபஸ் பெற்றது. சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வழியில்லாமல், 2006, ஜன., 28ம் தேதி தரம் சிங் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், மீண்டும் தேர்தல் வேண்டாம் என்ற முடிவில், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு பா.ஜ., ஆதரவு அளிப்பதாகக் கூறி, அரசு அமைக்க ஒத்துழைத்தது. இவர்கள் இருவரிடையே ஒரு ஒப்பந்தமும் ஏற்பட்டது.

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான தேவகவுடாவின் மகன் குமாரசாமியை முதல்வர் ஆக்குவது என்றும், மொத்தமுள்ள 40 மாதங்களில், 20 மாதங்கள் இக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்றும், மீதமுள்ள 20 மாதங்களுக்கு பா.ஜ., கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற முடிவில் தான் கடந்த 3ம் தேதி வரை குமாரசாமி அதிகாரப்பூர்வ முதல்வராக இருந்தார்.

குமாரசாமி அரசு 20 மாதங்களை முடித்து விட்ட நிலையில், கடந்த வாரம் ஆட்சிப் பொறுப்பை பா.ஜ.,விடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகவுடாவுக்கு, தன் மகனைப் பதவியிலிருந்து இறக்க மனம் இல்லை.

பா.ஜ.,வுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதால், அக்கட்சியை மெதுவாக சூகழற்றி’விட்டு, காங்.,கிடம் ஆதரவு கேட்பதற்காக டில்லிக்கு பயணித்தது பலன் தரவில்லை. பா.ஜ., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

கட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் நேற்று முன்தினம் முறைப்படி வாபஸ் பெற்றனர். இதையடுத்து, அமைச்சரவையைக் கலைக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி ஆட்சியைப் பரிந்துரைக்குமாறு கோரியும், கவர்னர் தாக்கூரிடம் காங்., கட்சி கோரிக்கை வைத்தது. இதையடுத்து, சட்டசபையில் பெரும்பான்மை இழந்த குமாரசாமியிடம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கவர்னர் பரிந்துரைத்தார்.

நேற்று முன்தினம் தனது பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமலாக்கம் செய்ய, மத்திய அமைச்சரவையும் ஜனாதிபதிக்கு தன் சிபாரிசை அனுப்பியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அம்மாநில அரசியல்வாதிகள் நடத்தும் நாடகத்தால், மீண்டும் தேர்தல் என்கிற போது மக்களின் வரிப் பணம் தான் விரயமாகிறது.

கர்நாடகாவில் 2004ல் நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு ரூ.40 கோடி செலவழிக்கப்பட்டது. இப்போது மாறியுள்ள அரசியல் சூழ்நிலையால், இடைத் தேர்தல் நடத்த வேண்டுமெனில் மேலும் ரூ.35 கோடி கூடுதலாக செலவாகும். இந்த தகவலை தெரிவித்தவர் கர்நாடக இணை தேர்தல் அதிகாரி பெரோஸ் ஷா கானம்.

கடைசியாக நடந்த சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதிக்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் ரூபாய் வரை செலவானது. உல்லால், சாமுண்டீஸ்வரி தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆன செலவு ரூ.20 லட்சத்தையும் தாண்டியது’ என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சட்டசபை தேர்தல் நடந்தால், தேர்தல் அதிகாரிகள் நான்கு பேரை கூடுதலாக நியமிக்க வேண்டும். ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.200 செலவாகிறது. தேர்தலின் போது அதிகாரிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.150 செலவாகிறது.

22 ஆயிரம் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்துக்கும் பேட்டரி பொருத்தவும் செலவு ஏற்படுகிறது. ஒரு வேட்பாளர் ரூ.10 லட்சம் வரை செலவிடலாம் என்றாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லை.

பெரிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், ஒரு தொகுதிக்கு ரூ.50 லட்சம் வரை செலவழிக்கின்றனர்’ என்று சிட்டிசன் உரிமை அமைப்பின் தலைவர் நாகராஜ் கூறுகிறார். பெங்களூரு என்.ஜி.ஓ., இயக்கத்தினர் கூறுகையில், சூஎல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக ரூ.600 கோடி செலவழிப்பதாக கூறுகின்றனர்.

வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் 70 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை செலவிடுகின்றனர்’ என்றனர். கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெரிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஒரு தொகுதிக்கு தனது வேட்பாளர்களுக்கு ரூ. இரண்டு கோடியிலிருந்து மூன்று கோடி ரூபாய் வரை செலவழிப்பதாகவும் கட்சியினர் கூறுகின்றனர்.

Posted in Accord, Allegations, Alliance, Balance, Bangalore, Bengaluru, BJP, candidates, Clean, CM, Coalition, Commerce, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Coomarasami, Coomarasamy, Corruption, Crores, deal, Devegowda, EC, Economy, Election, Elections, Expenditure, Expenses, Forecasting, forecasts, Gowda, Income, Janata, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JanSakthi, JanSakti, JD, Karnataka, kickbacks, Kumarasami, Kumarasamy, Lakhs, Mela, Minister, MLA, MLC, MP, P&L, parliament, Party, Politics, Poll, Polls, Profit, Projections, Rich | 1 Comment »

Controlling Inflation & Avoiding Recession – RBI & Stagflation

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

ரிசர்வ் வங்கியின் கை வைத்தியம்!

ரிசர்வ் வங்கிக்கு உள்ள பல கடமைகளில் தலையாய கடமை, பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதுதான் என்பது அதன் சமீபகால நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது எளிதில் புலனாகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5%-க்கும் மேல் இருக்கிறது, பணவீக்க விகிதம் 5%-க்கும் குறைவாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சமீபகாலத்தில் அதிகரித்து சராசரியாக 40 ரூபாயாக இருக்கிறது. வங்கிகளிடம் டெபாசிட் பணம் அபரிமிதமாக இருக்கிறது. இத்தனை இருந்தும் மக்களிடம் நிம்மதியோ, வாங்கும் சக்தியோ குறிப்பிடும்படி இல்லை.

“”மக்கள்” என்று இங்கே நாம் குறிப்பிடுவது பெரும்பாலானவர்களான நடுத்தர, ஏழை மக்களைத்தான். நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்திக்கே சவால் விடுவதைப் போல தங்கத்தின் விலையும், நிலத்தின் விலையும் (வீட்டுமனை) உயர்ந்துகொண்டே வருகின்றன. இந்நிலையில் அவர்களுடைய சேமிப்பைப் பாதுகாக்கவும், அதற்கு சுமாரான வருமானத்தையும் தருவது வங்கிகள் தரும் வட்டிவீதம்தான். ஆனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்த வட்டிவீதத்துக்குத்தான் ரிசர்வ் வங்கி குறிவைக்கிறது என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்.

உலக அரங்கில், இந்தியப் பொருளாதாரத்தின் வலிமைக்கான காரணங்களாக உள்ள அம்சங்களை ஆராய்ந்த வல்லுநர்கள், வருவாயில் ஒரு பகுதியைப் பிற்காலத்துக்காகச் சேமித்துவைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவின் ஏழைகளிடம்கூட இருப்பதையும், அதைச் செயல்படுத்துவதையும் சுட்டிக்காட்டி, பாராட்டியுள்ளனர். ரிசர்வ் வங்கி இந்த சேமிப்புப் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்க முயல வேண்டுமே தவிர, மக்களை விரக்தியின் விளிம்புக்கு விரட்டக் கூடாது.

நஷ்டம் வரக்கூடாது என்று மத்திய அரசே முனைப்புக் காட்டி வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைப்பதும், வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டியைக் குறைப்பதும் நல்லதல்ல. அந்த நடவடிக்கைகளை நடுத்தர, ஏழை மக்களின் சேமிப்பு மீதான “”மறைமுக வரி” என்றே கூற வேண்டும்.

வங்கிகளிடம் மிதமிஞ்சி சேர்ந்துவிட்ட டெபாசிட்டுகளால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உபரிப் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. அதை உறிஞ்சுவதற்காக, வங்கிகளின் ரொக்கக் கையிருப்பை மேலும் 0.5% அதிகரித்து, 7% ஆக்கியிருக்கிறது. இப்படி ரொக்கக் கையிருப்பு விகிதத்தை உயர்த்திய பிறகும்கூட அதிகபட்சம் 16 ஆயிரம் கோடி ரூபாயைத்தான் புழக்கத்திலிருந்து உறிஞ்ச முடியும். வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.4,90,000 கோடியாகும்.

வீடுகட்ட கடன் வாங்கியவர்களும், இனி வாங்க நினைப்பவர்களும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் மனம் தளர்ந்து போய்விட்டார்கள். வீட்டுக் கடனுக்கான வட்டி வீதத்தைக் குறைத்து, வீடமைப்புத் திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்வேகத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது பொய்த்துவிட்டது. இனி வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்ந்தாலும் வியப்பதற்கு ஏதும் இல்லை.

விலைவாசியைக் கட்டுப்படுத்த, பண அச்சடிப்பைக் கட்டுப்படுத்துவது ஒரு வழி என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்றால் உற்பத்தியைப் பெருக்குவதும், பொது விநியோக முறையை வலுப்படுத்துவதும்தான் உற்ற வழிகள்.

இடைத்தரகர்கள், ஊகபேர வியாபாரிகள், கள்ளச்சந்தைக்காரர்கள், முன்பேர வர்த்தகர்கள் ஆகியோரை ஒடுக்காவிட்டாலும், எச்சரிக்கும் விதத்திலாவது ஓரிரு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தால் சற்று ஆறுதலாக இருக்கும்.

சிக்கனத்துக்கும் சேமிப்புக்கும் பெயர்பெற்ற இந்தியர்களைக் கடன் சுமையில் ஆழ்த்தவே பன்னாட்டு வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் 24 மணி நேரமும் தீவிரமாக உழைக்கின்றன. நம் மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கியாவது செயல்படலாம் இல்லையா? இதனால் சில நூறு கோடி ரூபாய்கள் வருமானம் குறைந்தாலும்கூட அதைப் பெரிய இழப்பாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கருதலாமா?

————————————————————————————————–
கவலைப்பட யாருமே இல்லையா?

Dinamani op-ed (August 7 2007)

வீட்டுக் கடன்களுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை என்று அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். பணவீக்க விகிதம் குறைந்தால் மட்டுமே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என்றும் கூறியிருக்கிறார்.

இருக்க இடம் என்பது, உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் இயற்கையான லட்சியம். ஆனால், சொந்த வீடு என்கிற இந்த கனவு நனவானதுடன் நிற்காமல், ஒரு நிரந்தர நரகமாகவும் ஆகிவிட்டால் எப்படி இருக்கும்? வீட்டுக் கடன் வாங்கிக் கனவு நனவானவர்களின் நிலைமை அதுதான்.

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர், அத்தனை வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வீட்டுக் கடன் வழங்க முன்வந்தன. நகர்ப்புறங்களில் திரும்பிய இடத்திலெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் காளான்கள்போல முளைத்தன.

வாடிக்கையாளர்களிடம் இரண்டு வகையான வீட்டுக் கடன் வசதி முன்வைக்கப்பட்டது. முதலாவது வகை வீட்டுக் கடனில் வட்டி விகிதம் அதிகம். ஆனால், கடன் அடைந்து முடியும்வரை இந்த வட்டி விகிதம் மாறாது என்பதால் திருப்பி அடைக்க வேண்டிய மாதாந்திரத் தவணைத் தொகையும் மாறாது. ஆனால், இரண்டாவது வகை வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், அவ்வப்போது வங்கியின் வட்டிவிகித ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்றபடி மாறும் தன்மையது. இதற்கான வட்டி குறைவு என்பதால், பலரும் இந்த முறையிலான வீட்டுக் கடனையே விரும்பி ஏற்றனர்.

அப்போதிருந்த நிலையில், வங்கிகளின் வட்டி விகிதம் குறைந்து வந்த நேரம். அதனால், மேலும் வட்டி குறையும்போது அதன் பயன் கிடைக்குமே என்கிற நம்பிக்கையில் இந்த முறை வட்டிக் கடனைத் தேர்ந்தெடுத்தவர்களே அதிகம். ஆனால், இப்போது இந்த இரண்டாவது வகை வீட்டுக் கடன் முறையைத் தேர்ந்தெடுத்து வீடு வாங்கியவர்கள் நிலைமை மிகவும் பரிதாபகரமாகிவிட்டது.

வட்டி விகிதம் குறைவதற்குப் பதிலாக, வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி விட்டிருக்கின்றன. அதனால், வீட்டுக் கடன் வாங்கியவர்கள் உடனடியாக தங்களது கடனில் ஒரு பகுதியைத் திருப்பிக் கட்டினால் ஒழிய, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவே முடியாது. இந்தத் தவணைகள் வட்டிக்குத்தான் சரியாக இருக்குமே தவிர அசல் குறையாது. அதாவது, வாழ்நாள் முழுவதும் வட்டி மட்டும் கட்டிக் கொண்டிருக்கலாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது. 6.5 சதவிகிதத்திலிருந்து இப்போது 11 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில், அதிகரித்த வட்டி விகிதத்தை ஈடுகட்ட வங்கிகள் தவணைகளை அதிகப்படுத்தின. இன்றைய நிலையில், தவணைகள் 25 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட்டாலும் கடன் அடைந்து தீராது என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

மாறும் வட்டி விகித முறையில், ஒரு லட்ச ரூபாய்க்கான 20 ஆண்டு வீட்டுக் கடனுக்கு 7.25% வட்டியானால் மாதாந்திரத் தவணை ரூ. 790. இப்போதைய 11.25% வட்டிப்படி கணக்கிட்டால், மாதாந்திரத் தவணைத்தொகை ரூ. 900. ஆரம்ப ஆண்டுகளில், சுமார் ஐந்து ஆண்டு வரை, ஒருவர் அடைக்கும் ரூ. 790 தவணைத்தொகையில் அசலுக்குப் போகும் பணம் வெறும் ரூ. 79 மட்டுமே. அதனால், இப்போது வட்டி விகிதம் அதிகரித்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடன் வாங்கிய பலருடைய அசல் தொகையில் பெரிய அளவு பணம் திருப்பி அடைக்கப்படாத நிலைமை.

வீட்டுக் கடன் வாங்கிய லட்சக்கணக்கான மத்தியதர வகுப்பினர் மனநிம்மதி இழந்து, தூக்கம்கெட்டுத் தவிக்கும் நிலைமை. வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள் அழுபவர்கள் பலர். இதற்கெல்லாம் காரணம், சராசரி மனிதனின் உணர்வுகளையும் கஷ்டங்களையும் புரிந்துகொள்ளாத மத்திய நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் வங்கித் துறையும்தான்.

இந்த நிலைமையைப் பற்றிக் கவலைப்பட யாருமே இல்லையா?

Posted in Ahluwalia, APR, Balance, bank, Banking, Biz, Budget, Business, Center, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Commerce, Common, Consumer, Control, Currency, Customer, Deposits, Dinamani, Dollar, Economy, Exchanges, Expenses, Exports, Finance, fiscal, GDP, Governor, Govt, Growth, Homes, Houses, Imports, Industry, Inflation, Insurance, Interest, Land, Loans, Loss, Manmohan, Monetary, Money, Op-Ed, PPP, Profit, Property, Rates, RBI, Real Estate, Recession, Revenues, Rupee, Spot, Stagflation, USD | Leave a Comment »

S Gopalakrishnan – Banking services in Rural Areas

Posted by Snapjudge மேல் ஜூலை 23, 2007

கிராமங்களில் வங்கிச் சேவை

எஸ். கோபாலகிருஷ்ணன்

பாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோராட் அண்மையில் தெரிவித்துள்ள தகவல் ஒன்று கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இப்போது மொபைல் தொலைபேசி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சம். அதேசமயம், அனைத்து வங்கிகளிலிருந்தும் கடன் வசதி பெறுபவர்களின் எண்ணிக்கை மொபைல் தொலைபேசி வைத்திருப்பவர்களைவிட குறைவு என்பதே அது.

இதை சற்று கூர்ந்து கவனிப்போம்: நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் வெறும் 9 கோடி பேருக்குத்தான் வங்கிக் கடன் கிடைக்கிறது. இதில் பெரும் தொழில், சிறு தொழில் மற்றும் விவசாயக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் என எல்லா வகை வங்கிக் கடன்களும் அடங்கும்.

மேலும், 2006ஆம் ஆண்டில் வங்கிகளின் கடன் வசதி பெற்றவர்களில் 93 சதவிகிதத்தினர் தலா ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான தொகையே கடனாகப் பெற்றுள்ளனர். இது மொத்த வங்கிக் கடன் தொகையில் 18 சதவிகிதமே.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிக் கடன் வசதி ரத்தநாளம் போன்றது என்பார்கள். அந்த வகையில் பெரும் நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பரவலாக இந்தக் கடனுதவி கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். ஒட்டுமொத்த வங்கிக் கடன் தொகையில் 56 சதவிகிதம் தொகையை மும்பை, தில்லி, சென்னை, கோல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 மாநகரங்கள் பெற்று விடுகின்றன. மேலும் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வங்கிகள் வழங்கிய கடனுதவி 10.4 சதவிகிதத்திலிருந்து 8.3 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பதுதான்.

இந்தச் சரிவுக்கு என்ன காரணம் என்றால், கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 2001 டிசம்பரில் 32,496 வங்கிக் கிளைகள் செயல்பட்டன. ஆனால், 2006 டிசம்பரில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 30,586 ஆக குறைந்துவிட்டன. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் 1910 கிளைகள் மூடப்பட்டுள்ளன. பாரத ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் தகவல் அறிக்கை (டிசம்பர் 2006)யில் இந்த விவரங்கள் உள்ளன.

ஒருபக்கம், தேசிய வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக் கொண்டு பெரும் நகரங்களிலும், வணிக மையங்களிலும் புதிய கிளைகளை அமைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், தேசிய வங்கிகள் வெளிநாடுகளில் அன்றாடம் புதிய கிளைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை தவிர்த்து வந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கூட இந்திய வங்கிகள் கிளைகளைத் தொடங்குகின்றன. ஆனால், உள்நாட்டில் கிராமக்கிளைகளை இழுத்து மூடுகின்றன. ஓரிரு பெரிய வங்கிகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் கிடைத்த தகவல் இதுதான்: “”லாபம் ஈட்டாத சிறிய கிளைகளை அருகில் உள்ள பெரிய கிளைகளோடு இணைத்து விட்டோம். நாங்கள் ஒன்றும் கிளைகளை மூடவிடவில்லை.” என்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயத் தேவையில்லை. வங்கிகளின் லாபநோக்கம்தான் முக்கியக் காரணம்.

1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை அடுத்து, கிராமங்களில் கிளைகளைத் தொடங்குவதற்கு முழுமூச்சுடன் களம் இறங்கின. அஞ்சல் அலுவலகம், காவல் நிலையம் இல்லாத கிராமங்களில்கூட வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அந்த நிலை நீடித்தது. அதன் பின்னரே இதில் சுணக்கம் ஏற்பட்டது மட்டுமல்ல; வணிகரீதியில் லாபம் தராத கிளைகள் மூடப்பட்டன.

கிராமங்களில் வாழும் மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குதல், அவர்களிடம் வைப்புத்தொகைகளைத் திரட்டுதல் மற்றும் அவர்களுக்குப் பயிர்க்கடன், கால்நடைக் கடன் போன்ற விவசாயக் கடன் உதவி வழங்குதல், அளவுக்கு அதிகமான வட்டி வசூலிக்கும் தனியார் வட்டிக் கடைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுதல் ஆகியவையே அந்த காலகட்டத்தில் அரசின் நோக்கமாக இருந்தது.

1991-ல் அறிமுகமான பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப்பின்னர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வணிக ரீதியில் செயல்பட்டு லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒரு வங்கியின் செயல்திறனுக்கு அடையாளம் அது ஈட்டும் லாபமே என்று கருதப்பட்டது. இப்புதிய சூழலில், கிராமக்கிளைகள் ஒரு சுமையாகக் கருதப்பட்டன.

நல்லவேளையாக, காலம் தாழ்ந்தேனும், மீண்டும் அரசின் எண்ண ஓட்டம் மாறத் தொடங்கியுள்ளது. பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்டக் குழுவின் தலைவரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி. ரங்கராஜன் அண்மையில் வெளியிட்டுள்ள யோசனை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. கிராமங்களில் மீண்டும் வங்கிக்கிளைகளை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அவர்.

வங்கிகள் தங்கள் கிளைகளைக் கிராமங்களில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கிராமங்களில் புதிய கிளைகளை அமைக்கும் வங்கிகளுக்கே பெரிய நகரங்களில் கிளைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்துள்ளார் ரங்கராஜன். பார்க்கப்போனால், இப்படி ஒரு திட்டம் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ரிசர்வ் வங்கியும் அடுத்தடுத்து பொறுப்பேற்ற அரசுகளும் கிராமக்கிளைகளை அமைப்பதில் முனைப்பு காட்டத் தவறிவிட்டன என்பதே உண்மை.

தற்போது, பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது குறித்து பெருமிதம் அடைகிறோம். ஆனால், வேளாண்துறை, தொழில்துறை மற்றும் சேவைத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் பரவலாக, ஒரே சீராக வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, ஒருபக்கம், தொழில் உற்பத்தித் துறையும், இன்னொருபக்கம், தகவல்தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, ஹோட்டல் தொழில், சுற்றுலாத் தொழில் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அண்மைக்காலமாக அபரிமித வளர்ச்சி கண்டுள்ளன. இதன் பயனாகவே 9 சதவிகித வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. இதில் வேளாண் துறையின் பங்கு குறைவே. எனவேதான், கிராமப்புறங்களில் வளர்ச்சியின் பலன் தென்படவில்லை. வறுமை ஒழிப்பு கைகூடவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.

இதை உணர்ந்துதான், மத்திய அரசு வேளாண் துறையில் ரூ. 25,000 கோடி வேளாண் துறையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கு அரசின் புதிய முதலீடுகள் அவசியம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதுமட்டும் போதாது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், சரியான அளவில் விவசாயக் கடன் தங்குதடையின்றி கிடைக்கச் செய்வதும் அவசியம். அதேபோல், கிராம மக்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல், அவர்களது வைப்புத்தொகைகளைத் திரட்டி நியாயமான வட்டி வழங்குதல் போன்ற பணிகளைச் செம்மையாக மேற்கொள்வதற்கு, கிராமங்களில் வங்கிகள் இயங்க வேண்டும்.

கிராமக் கிளைகளில் பணிபுரிய, ஊழியர்களைத் தேர்வு செய்வதிலும் கவனம் தேவை. நகர வாழ்க்கை முறைகளில் ஊறிப்போன ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி கிராமங்களுக்கு அனுப்பினால், உரிய பலன் கிடைக்காது என்பதைக் கடந்தகால அனுபவம் உணர்த்தியுள்ளது. கிராமச்சூழலில் பணிபுரிய, விருப்ப அடிப்படையில் ஊழியர்களைத் தேர்வு செய்தால், அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வளர்ச்சியின் பலன் கிராமங்களில் வாழும் மக்களுக்கும் விரைவில் வந்து சேரும் என்பதற்கான அறிகுறியாக புதிய வங்கிக் கிளைகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

——————————————————————————————————————————
சீரழியும் சிறுதொழில்கள்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில் சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் ஈடுபடுகின்ற தொழில்கள் யாவும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.

கைதயாரிப்பு தீப்பெட்டித் தொழிலில்

  • சிவகாசி,
  • ராஜபாளையம்,
  • கோவில்பட்டி,
  • எட்டயபுரம்,
  • கழுகுமலை,
  • சங்கரன்கோவில்,
  • வாசுதேவநல்லூர்,
  • குடியாத்தம்,
  • செய்யாறு

போன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். முதலில், சிவகாசி அய்ய நாடார் குடும்பத்தினர் கோல்கத்தா சென்று தொழில்நுட்பத்தை அறிந்து வந்து சிவகாசியில் முதன்முதலாக தீப்பெட்டித் தொழிலைத் தொடங்கினர். இத்தொழிலில் சி, டி என்ற இரண்டு பிரிவுகள் உண்டு.
வானம் பார்த்த பூமியில் பல குடும்பங்களுக்கு இத்தொழில் விளக்கேற்றியது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த இரண்டு பிரிவுகளும் நலிந்து வருகின்றன. தமிழகம் வந்து தீப்பெட்டியைக் கொள்முதல் செய்த வட மாநில வியாபாரிகள் உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் தற்பொழுது தொழிலைத் தொடங்கிவிட்டனர். இதனால் இங்கு உற்பத்தி அளவு குறைந்துவிட்டது.

இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேவைப்படுகின்றன. விம்கோ தீப்பெட்டி நிறுவனம் 13 சதவிகிதம் மற்ற இயந்திரத் தீப்பெட்டி ஆலைகள் 18 சதவிகிதம், மீதமுள்ள 69 சதவிகிதம் கைதயாரிப்புப் பிரிவுகளாக இருந்தன. ஆனால், தற்பொழுது, விம்கோ, ஐ.டி.சி போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சில தனியாரும் இயந்திரம் மூலமாகத் தேவையான தீப்பெட்டிகளை உற்பத்தி செய்து விடுகின்றனர்.

ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகள் இயந்திரங்களிலேயே செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் இரண்டு லட்சம் பண்டல்கள் உற்பத்தி செய்ய இரண்டு லட்சத்து 45 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை. இதனால் அதிகமான அளவில் வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது இயந்திரமயம் காரணமாக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. தீப்பெட்டி ஆலை அதிபர்கள் தங்களுக்கு லாபம் என்று கருதி இயந்திரங்களின் மூலம் உற்பத்தியைத் தொடங்கிவிட்டனர்.

இதுமட்டுமல்லாமல், தீப்பெட்டிக்கான மூலப்பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துவிட்டன. கைதயாரிப்பு தீப்பெட்டி உற்பத்திச் செலவு அதிகரிப்பதனால் தீப்பெட்டி விலையும் அதிகரிக்கிறது. ஐ.டி.சி. போன்ற பெரிய நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. குறைந்த விலைக்கே தீப்பெட்டிகளை வழங்கக்கூடிய நிலையில் உள்ளன.

விலை அதிகரிப்பால் குடிசைத்தொழில் தீப்பெட்டி பண்டல்கள் விற்பனை ஆகாமல் கிடங்குகளில் முடங்கியுள்ளன. குளோரேட் என்ற மூலப்பொருள் பற்றாக்குறையால் சிறு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதால், ஏழை மக்கள் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர். பன்னெடுங்காலமாக தெற்கேயுள்ள கரிசல் பூமியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த அட்சயப் பாத்திரமாக விளங்கிய தொழில் தற்போது படிப்படியாகச் சிதைந்துள்ளது.

இத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தீப்பெட்டிக்குத் தேவையான மூலப்பொருள்களை மானிய விலையில் வழங்க வேண்டும். ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகையும் வங்கிக் கடன்களும் கிடைக்க வேண்டும். கூட்டுறவு சங்க தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அரசே உதவ வேண்டும். ஐ.டி.சி. போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்ற தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெறாமல் இயங்கும் இயந்திரத் தீப்பெட்டி தொழிற்சாலைகளை அனுமதிக்கக்கூடாது.

நெடுங்காலமாக இன்னொரு சிறுதொழில் – சாத்தூரில் நடந்து வந்த பேனா நிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியா மட்டுமல்லாமல் மேலை நாடுகளுக்கும் நிப்புகள் இங்கிருந்து அனுப்பப்பட்டன. அலுமினியக் கழிவுகளிலிருந்து செய்யப்படும் இந்த நிப்பு குடிசைத் தொழிலாக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்தது. பால்பாயிண்ட் பேனா வந்ததிலிருந்து இந்தத் தொழில் நசித்துவிட்டது. அதை நம்பியிருந்த குடும்பங்கள் இன்றைக்கு வறுமையில் வாடுகின்றன.

சிவகாசி வட்டாரத்தில் பட்டாசு, காலண்டர் மற்றும் அச்சகத் தொழில்களில் பணியாற்றிய பலர், இயந்திரங்கள் வந்ததால் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். முக்கூடலில் பீடித்தொழிலும் நசித்து வருகின்றது.

தூத்துக்குடி, திருச்செந்தூர், வேம்பார் போன்ற பகுதிகளில் உப்பளத் தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் செய்யும் உப்பளத் தொழில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. தற்போது பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி நின்றுவிட்டது. மழைக்காலத்தில் இத் தொழிலுக்கு பாதுகாப்பின்மை, ரயிலில் அனுப்பத் தடை, மின் கட்டண உயர்வு, நிலத்தடி நீர் குறைவு ஆகிய காரணங்களால் இத் தொழில் நசிந்துள்ளது.

  • திண்டுக்கல் பூட்டு,
  • சுருட்டுத் தொழில்,
  • கும்பகோணம் பாத்திரத்தொழில்,
  • நெசவுத் தொழில் மற்றும்
  • உடன்குடி பகுதியில் பனைத்தொழில் –
  • சில்லுகருப்பட்டி,
  • பவானி ஜமுக்காளம்,
  • மதுரை சுங்கடி,
  • கூறைப்புடவை போன்றவற்றோடு
  • மீன்பிடித் தொழில்,
  • கருவாடு தொழில் என
  • நடுத்தர,
  • கீழ்த்தட்டு மக்கள் ஈடுபட்ட தொழில்கள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டன.

மதிமுக பொதுச் செயலர் வைகோவும் தீப்பெட்டி தொழில் பிரச்னையை மத்திய அரசின் கவனத்துக்குப் பலமுறை கொண்டு சென்றுள்ளார். ஆனால் தீர்வு இல்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களால் இத்தொழில்கள் சீரழிந்தாலும், இந்த மண்ணின் அன்றாட அடையாளங்களாக

  • நெல்லை அல்வா,
  • கடம்பூர் போளி,
  • உடன்குடி சில்லுக்கருப்பட்டி,
  • குற்றாலம் முறுக்கு,
  • திருவில்லிபுத்தூர் பால்கோவா,
  • கல்லிடைக்குறிச்சி அப்பளம்,
  • தூத்துக்குடி மக்ரோன்,
  • கோவில்பட்டி கடலை மிட்டாய்,
  • சாத்தூர் சேவு,
  • திண்டுக்கல் மலைப்பழம்,
  • குடந்தை வெற்றிலை சீவல்

போன்ற தின்பண்டங்கள் இன்றைக்கும் மீதமுள்ள எச்சங்களாகும்.
இத் தொழில்களை நம்பிய மக்கள் வேலைவாய்ப்பை இழந்து திருப்பூர் பனியன் ஆலையில் வேலை கிடைக்கும் என்று அங்கு செல்லத் தொடங்கினர். அங்கும் வேலை இன்றி, பலர் துயருறுகின்றனர்.

ஒரு சில ஆதிக்க சக்திகள்தான் இயந்திரமயமாக்கலில் பயனடைகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து விரட்டப்பட்ட மேற்கத்திய சக்திகளுக்கு மீண்டும் இங்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறோம்.

வ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்திற்கு ஆங்கிலேயர்கள் பல தொல்லைகள் கொடுத்து பங்குதாரர்களை எல்லாம் பங்குகளை வாபஸ் பெறச் செய்தனர். 1896-ல் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர், எட்டையபுரம் மன்னர் கொடுத்த கிராமத்தில் பருத்தி அரைவை ஆலையை நிறுவினார். அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியது. அதைப்பொறுக்காத பிரிட்டிஷார், அந்த ஆலையை மூடக்கூடிய வகையில் எட்டையபுரம் அரசின் பங்குகளைத் திரும்பப் பெறச் செய்தது மட்டுமல்லாமல், ஆலை நிலத்தையும் திரும்பப் பெற்று ஆலையை மூடச் செய்தனர்.

உலகமயமாக்கலால் ஏற்கெனவே லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாதிரியான கொடுமைகள் நமக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், தற்போது ஏற்பட்டுள்ளது.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

————————————————————————————————–

கிராம மக்களுக்கு கடன் வசதி

எஸ். கோபாலகிருஷ்ணன்

கந்து வட்டிக் கொடுமை பற்றி பேசாத மனிதர்கள் இல்லை; எழுதாத ஏடுகள் இல்லை. எனினும் அவசரத் தேவை என்றால், கிராமவாசிகளுக்கு வேறு என்னதான் வழி?

இந்த அவலத்தை ஒழித்துவிடுவோம் என்று 38 ஆண்டுகளுக்கு முன் புறப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இதனைச் செய்யவில்லை.

தேசிய வங்கிகள், ஆர்.ஆர்.பி. எனப்படும் கிராமிய வங்கிகள் என எந்த ஓர் அமைப்பும் பிரச்னையின் விளிம்பைக்கூடத் தொடவில்லை. மத்திய அரசு அவ்வப்போது செயல்படுத்திய திட்டங்கள், அமைத்த நிபுணர் குழுக்கள் ஆகியவையும் பயனளிக்கவில்லை.

அதீத வட்டி வசூலிக்கும் வட்டிக் கடைகள் அல்லது லேவாதேவிப் பேர்வழிகளின் கோரப் பிடியிலிருந்து எளிய மக்களைக் காப்பாற்ற இயலவில்லை.

தற்போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் அமைப்புகள் முறையாகப் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்றும், வேறு சில விதிமுறைகளை உள்ளடக்கியும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களின் தன்மையும், கூர்மையும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனினும் அவற்றின் நோக்கம் அதீதவட்டி வசூலிப்பதை தடுப்பதும், கந்து வட்டியாளர்களைக் கட்டுப்படுத்துவதுதான். பஞ்சாப், ஹரியாணா போன்ற சில மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை.

சட்டம் இயற்றப்பட்ட மாநிலங்களிலும் சட்டத்தின் நோக்கம் எந்த அளவு ஈடேறி உள்ளது என்பது கேள்விக்குறியே. வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் கடைகளோ, அமைப்புகளோ விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் வட்டிவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை. அவ்வளவு ஏன்? கந்து வட்டி தொடர்பாகக் கொடுக்கப்படும் புகார்கள் உரியமுறையில் பரிசீலிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறதா என்பதும் சந்தேகமே.

2002-ம் ஆண்டு அகில இந்திய கடன் மற்றும் முதலீடு தொடர்பான ஆய்வு அறிக்கையில் காணப்படும் தகவல்கள் இங்கு நினைவுகூரத் தக்கவை.

கிராமப்புற மக்கள் 1991-ம் ஆண்டில், தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கிய தொகை அப்பகுதியின் மொத்த கடன் தொகையில் 17.5 சதவீதமாகத்தான் இருந்தது. 2001-ல், 29.6 சதவிகிதமாக உயர்ந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட எந்த நடவடிக்கையும், கிராமவாசிகள் தனியார் வட்டிக்கடைகளைத் தேடிப் போவதைக் குறைக்கவில்லை. மாறாக, இந்தத் தேவை அதிகரித்துள்ளது.

இந் நிலையில் மீண்டும் ஒரு புதிய முயற்சியாக, பாரத ரிசர்வ் வங்கி இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில், கடந்த ஆண்டு ஒரு தொழிலியல் குழுவை அமைத்தது. ரிசர்வ் வங்கியின் பிரதான சட்ட ஆலோசகரின் தலைமையில் அமைக்கப்பட்ட இக் குழுவில் இதர அங்கத்தினர்களாக அதே வங்கியின் அனுபவமிக்க அதிகாரிகள் இருந்தனர். இக்குழு தனது பரிந்துரைகளை அண்மையில் அளித்தது. அவற்றின் சாரம் வருமாறு:

கிராமப்புறங்களில் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள், பதிவு செய்து கொண்டால் மட்டும் போதாது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனைப் புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டும். தவிர, சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்கள், உரிய பரிசீலனைக்குப்பின், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” ( Accredited Loan Providers) வங்கிகளால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் கிராமவாசிகளுக்கு கடன்வழங்குவதற்குத் தேவையான தொகையை வங்கியே நியாயமான வட்டியில் கடனாகக் கொடுக்கும். இதற்காக, ஒவ்வொரு “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும்” ஒரு வங்கியுடன் இணைக்கப்படுவார்.

கிராமவாசிக்கு கடன் கொடுக்கும்போது, கொடுப்பவர் தனது சொந்தப் பொறுப்பில்தான் கடன் வழங்குவார். வங்கி அதற்கு பொறுப்பல்ல. அங்கிகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர் வங்கியிலிருந்து வாங்கிய கடனை, வங்கிக்கு திரும்பச் செலுத்த வேண்டியது அவரது பொறுப்பு.

கிராம வாசிகளுக்கு கடன் வழங்கும்போது அதிகபட்ச வட்டிவிகிதத்தை மாநில அரசு நிர்ணயித்து அறிவிக்கும். இந்த வட்டி விகிதம் குறித்த கால இடைவெளியில், மறு ஆய்வு செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதத்துக்கு அதிகமாக வட்டி வசூல் செய்தால் தண்டனை விதிக்கப்படும்; அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். வங்கியும் இதைத் தொடர்ந்து கண்காணிக்கும்.

ஏற்கெனவே வட்டிக்கடை வைத்திருப்பவர்கள் விவசாயப் பண்டங்களில் வாணிபம் செய்பவர்கள் விவசாய கமிஷன் ஏஜென்டுகள், வாகன விற்பனையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போன்ற – கிராமவாசிகளுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” நியமிக்கத் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். இவர்களையும், இப்பொறுப்புக்கு தகுதி உடைய பிறரையும் வங்கி உரியமுறையில் பரிசீலித்து, “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்”களாக நியமனம் செய்யும்.

வங்கியும் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும், தத்தம் கடமைகள், உரிமைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். அவசியம் நேரும்போது அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு விதிமுறை அனுமதிக்கும் புகார்கள் மற்றும் குறைதீர்ப்பு நடைமுறை எளிமையாக இருக்கும்.

அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு தரப்படும் வங்கிக் கடன், வங்கிகளைப் பொருத்தவரை, முன்னுரிமை ( Priority Sector) கடனாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அரசின் விதிமுறைகளின்படி, வங்கிக் கடனில் 40 சதவிகிதத் தொகையை விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட முன்னுரிமைப் பிரிவினருக்குக் கடனாக வழங்க வேண்டும். அந்த வகையில், வங்கிகள் தங்கள் கடமையை எளிதாக நிறைவேற்ற ஒரு வழி கிடைத்துள்ளது எனலாம்.

இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் புதிய சட்டம் இயற்றவேண்டும். அதற்கான வரைவு மசோதா ஒன்றை ரிசர்வ் வங்கியின் குழு ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளது.

குழுவின் பரிந்துரையை ரிசர்வ் வங்கியும் மத்திய, மாநில அரசுகளும் விரைந்து ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். முதன்முறையாக, நடைமுறைக்கு உகந்ததாக, எளிதானதாக மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் லாபம் தரும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடன் வாங்குபவர் வங்கிக்குச் சென்று அலைக்கழிக்கப்படாமல், தனக்குப் பரிச்சயமான ஒரு நபரிடமிருந்து கடன் பெறலாம். காலதாமதத்துக்கு வழியில்லை. வட்டி விகிதமும் நியாயமானதாக இருக்கும்.

கடன் வழங்குபவருக்கு சொந்த முதலீடு தேவையில்லை. கடன் வழங்குவதற்கு, வங்கியிடமிருந்து தேவையான பணத்தைக் கடனாகப் பெறலாம். கடன் வாங்குபவர், வழங்குபவருக்குப் பரிச்சயமான கிராமவாசி; நேரடித் தொடர்புடையவர். எனவே கடனை வசூல் செய்வதில் சிரமம் இருக்காது; வாராக் கடனாக மாறாது.

வங்கியைப் பொருத்தவரை, எண்ணற்ற கிராமவாசிகளைத் தொடர்பு கொள்வதற்குப் பதில், தங்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கு கடன் வழங்கி, கடனைத் திரும்ப பெறுவதில் பிரச்னை இருக்காது. அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு கொடுக்கப்படும் கடன்தொகை, முன்னுரிமைக் கடன் என்று கருதப்படும். கிராமவாசிகளுக்கு நேரிடையாக கடன் வழங்குகையில், உள்ளூர் அரசியல் புள்ளிகளின் தலையீடு இருக்கக்கூடும். புதிய திட்டத்தில் இது அறவே தவிர்க்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு இத்திட்டம் நன்மைபயக்கவல்லது.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்பார்த்தப்படி, கிராமவாசிகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையும், நட்புறவும் மலரவில்லை என்பதே உண்மை. புதிய திட்டத்தின் மூலம் இவ்விரு தரப்புக்கும் இடையே ஒரு பாலமாக “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்கள்” திகழ்வார்கள் என்று எதிர்ப்பார்கலாம்.

தொழில்நுட்ப மேம்பாட்டின் பலனாக, படித்த, வசதிபடைத்த நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்குச் சேவைகள் வழங்கி, லாபம் ஈட்டினால் மட்டும் போதாது; ஏழை, எளிய மக்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில் வங்கிகள் செயல்படவேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பு. இதற்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

Posted in Al, Aluminium, APR, Assets, Auto, Balance, Ballpoint, Banking, Banks, Biz, branch, Business, Calendar, Cellphone, Cheyyaar, Cheyyaaru, Cheyyar, Citi, City, Commerce, Compensation, Crackers, Diary, Dindugul, Dindukal, Dindukkal, Economics, Education, Educational, Employment, Ettayapuram, Exim, Expenses, Export, Exporters, Factory, Finance, Fireworks, Garments, GDP, Globalization, Growth, Gudiatham, Gudiyatham, Home, Housing, ICICI, Imports, Income, Industry, Installment, Instalment, Interest, ITC, Jobs, Kalugumalai, Kalukumalai, Kazhugumalai, Kazhukumalai, Kazugumalai, Koilpatti, Kovilpatti, Kudiatham, Kudiyatham, Loans, match, Matchbox, Matches, Metro, Mobile, Monetary, Motor, Nibs, Opportunity, Pen, Private, Profit, Purchase, Purchasing, Rajapalayam, Rates, RBI, Refill, Revenues, Reynolds, Rural, Sangarankoil, Sangarankovil, Sangarankoyil, Sankarankoil, Sankarankovil, Sankarankoyil, SBI, Sivakasi, Small Biz, Small scale, SSI, Tamil, Textiles, Thiruchendhur, Thiruchendoor, Thiruchendur, Thoothukudi, Thuthukudi, Tuticorin, VaiGo, VaiKo, Vasudevanalloor, Vasudevanallur, Villages, Wimco, Work, Writing | Leave a Comment »

Living with a strong rupee – Impact on Exports & Commerce

Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2007

ரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும்

எஸ். கோபாலகிருஷ்ணன்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 9 ஆண்டுகளில், முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம் ஒரு டாலர் ரூ. 44.12 ஆக இருந்த மதிப்பு, தற்போது ரூ. 40.50 என்ற அளவை எட்டியுள்ளது. கடந்த 6 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 9 சதவீதம் உயர்ந்துள்ளது.

ரூபாயின் மதிப்பு உயருவதால் நன்மை, தீமை இரண்டும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவு குறையும். ரூபாயின் மதிப்பு உயர்ந்து டாலரின் மதிப்பு சரிவதால், இறக்குமதி செய்பவர்கள் செலுத்த வேண்டிய பணம் குறைகிறது. இது நன்மை.

அதேநேரம், நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விலை நமக்கு டாலரில் வருகிறது. டாலரின் மதிப்பு சரிந்திருப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது. இது நமக்குப் பாதகமானது.

கடந்த காலங்களில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்தபோது, ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை எடுப்பது வழக்கம். அதாவது, சந்தையில் பெரிய அளவில் டாலரை வாங்குவதன் மூலம் வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பை ரிசர்வ் வங்கி சரி செய்துவிடும். ஆனால், இந்த முறை ரிசர்வ் வங்கி அவ்விதம் செய்யவில்லை. ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அண்மைக் காலமாக, ரிசர்வ் வங்கியும் சரி, மத்திய அரசும் சரி, கடுமையாக உயர்ந்திருந்த பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ரூபாய் மதிப்பின் உயர்வை, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டன.

டாலர் சரிந்திருப்பதால் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி விலை குறைந்துள்ளது. இது விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கு உதவியது.

இதனாலும் ரிசர்வ் வங்கியின் இதர நடவடிக்கைகளாலும் பணவீக்கம் தற்போது 4.03 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், ரூபாய் மதிப்பின் உயர்வால் விளைந்துள்ள பாதகங்களை இனியும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கலாகாது. ஏற்றுமதி கடுமையாக சரிந்து வருகிறது. 2005-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி 26.3 சதவிகித அளவு வளர்ச்சி கண்டது. 2006-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி வளர்ச்சி 19.3 சதவிகிதமாகச் சரிந்தது. ரூபாய் மதிப்பு அபரிமிதமாக உயர்ந்திருக்கும் நடப்பாண்டின் முன்பாதியில் எந்த அளவுக்கு ஏற்றுமதி சரிந்துள்ளது என்னும் விவரங்கள் அடுத்த ஓரிரு மாதங்களில்தான் தெரியவரும்.

ரூபாயின் மதிப்பு உயர்ந்திருப்பதன் விளைவாக, ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ஜவுளி, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், மருந்து உற்பத்தியாளர்கள், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்கள் பொறியியல் தொடர்பான தொழில்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 35 சதவிகிதம் அமெரிக்காவுக்குத்தான் அனுப்பப்படுகிறது. ஜவுளி ஏற்றுமதியில் கோட்டா முறை ரத்து செய்யப்பட்டது இந்தியாவுக்கு நல்லவாய்ப்பாக அமைந்தது. உற்சாகமாக, உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில், ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பெற்று, உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்திய ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி ஆர்டர்களைப் பெறும்போது டாலரின் மதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், சரக்கை அனுப்ப வேண்டிய நேரத்தில் டாலரின் மதிப்பு சரிந்துவிட்டது. இதனால் பலகோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஏற்றுமதியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் தினசரி ரூ. 3.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ஜவுளித்துறையில் 3.50 கோடி பேர் பணியாற்றுகின்றனர். எனவே தற்போதைய நிலை கவலை அளிக்கக்கூடியாதக உள்ளது.

சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்றுமதியாளர்கள் நாணயப் பரிமாற்றத்தால் பாதிக்கப்படவில்லை. அந்த நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை கடந்த பல ஆண்டுகளாக ஒரேநிலையில் வைத்திருக்கின்றன. இதனால் அமெரிக்கச் சந்தையில் சீனாவின் ஜவுளி விலை உயராது. ஆனால் இந்தியாவின் ஜவுளி விலை அதிகரிக்கும்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள பெரிய நிறுவனங்களைப் பொருத்தவரை, அவர்களது ஏற்றுமதிக்கான லாபம் கணிசமாகச் குறைந்துள்ளது. இதனால், பன்னாட்டுச் சந்தையில் போட்டியிடும் சக்தி அவர்களுக்கும் குறையும்.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் ஈடுபடும் தொழில்கள் கடும் பாதிப்பிலிருந்து தப்பியுள்ளன. அந்த வகையில், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரணங்களை ஏற்றுமதி செய்வோர் நிலை சற்று ஆறுதல் அளிக்கக் கூடியது. இவர்கள் உற்பத்திக்குத் தேவையான கச்சாப் பொருள்களை வெளிநாடுளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். கற்களை பட்டைதீட்டியும் புதிய ஆபரணங்களாகத் தயாரித்தும் ஏற்றுமதி செய்கிறார்கள். இவர்களுக்கு இறக்குமதிச் செலவு கணிசமாகக் குறைகிறது. இந்த உபரி லாபம் ஏற்றுமதி இழப்பை ஈடு செய்ய உதவுகிறது.

பொறியியல் ஏற்றுமதியைப் பொருத்தவரை, 2006-07-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 30 சதவிகிதம் அதிகரித்தது. கடந்த ஏப்ரலில் இந்த வளர்ச்சி 23.92 சதவிகிதம் சரிந்துள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஒருபுறமிருக்க, புதிய வேலைவாய்ப்புகள் பறிபோனதுதான் பெரும் சோகம். ஜவுளி ஏற்றுமதி குறைந்ததால், 2007-08ம் ஆண்டில் 5,79,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்று இந்திய ஜவுளி சம்மேளனத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் 2.72 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும் மற்றும் தொடர்புடைய தொழில்களில் உருவாகக்கூடிய வேலைவாய்ப்புகளும் அடங்கும்.

விசைத்தறி நெசவாளர்களும் புதிய சூழ்நிலையில் வருவாய் இழப்பை எதிர்கொள்ள நேரும். ரூபாய் மதிப்பின் ஏற்றம் மற்றும் டாலரின் சரிவு, இந்திய ஏற்றுமதியை, தொழில் வளர்ச்சியை குறிப்பாக, வேலைவாய்ப்புகளை மோசமாகப் பாதித்துள்ளது என்பது கண்கூடு. எனவே இதற்குரிய பரிகாரம் தேடியாக வேண்டும். பணவீக்கம் ரூபாய் மதிப்பு ஆகிய இரு பிரச்னைகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது கம்பிமேல் நடப்பது போல்தான். எனினும் பாரத ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இதில் தீவிரகவனம் செலுத்தும் நேரம் வந்துவிட்டது.

இது ஒருபுறமிருக்க, நீண்டகால அடிப்படையில் மின்சாரம், போக்குவரத்து, துறைமுகங்களில் நேரும் காலதாமத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளின் மேம்பாடுதான் ஏற்றுமதிக்கு உதவும். ஏற்றுமதியாளர்களும் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொண்டு, உற்பத்திச் செலவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். தங்கள் லாபத்துக்கு எல்லா நேரங்களிலும் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்க முடியாது.

எனினும், தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு உடனடி தீர்வாக ஏற்றுமதியாளர்களுக்கு சில சலுகைகளை வழங்குவது பொருத்தமாக இருக்கும். உதாரணமாக, Duty Drawback எனப்படும் ஏற்றுமதிக்கான சலுகைத் தொகையை அதிகரிக்கலாம். ஏற்றுமதிக்கான பொருள்களை உற்பத்தி செய்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் வழங்குதல் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 80 ஏ.ஏ.இ. பிரிவின் கீழ் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரிச்சலுகை, சேவை வரித் தள்ளுபடி ஆகிய நடவடிக்கைகளின் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

Posted in Agriculture, Appreciation, APR, Balancesheet, Banks, Biz, Call-Centers, Call-Centre, Capital, Commerce, Commodity, Currency, Deals, Deflation, Deposits, Diesel, Dollar, Duty, Economy, Employment, Euro, Exchange, Expenses, Exports, FDI, Finance, Fluctuations, forecasts, Garment, Gas, GDP, Growth, IMF, Imports, Industry, Inflation, Inflows, InfoTech, Interest, International, investments, Jobs, Loans, markets, MNC, Money, oil, Outflows, Outsourcing, Petrol, Portfolio, pound, Pricing, Productivity, Profit, Profits, Rates, RBI, Recession, Rupee, Sales Tax, service tax, slowdown, Software, Statement, Strength, Tax, Telecom, Textiles, Trading, Transfer, US, USA, Valuation, volatility, WB, World, Yen | Leave a Comment »

The woes of a Tamil Cinema Producer – GV Films shoots off balance sheets

Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007

யாரைத்தான் நம்புவதோ?

ஜீ.வி. பிலிம்ஸ் நிறுவனம், புதிய படங்களை எடுப்பதோடு, பழைய கடன்களையும் பைசல் செய்து வருகிறது.

கம்பெனிக்கு வரும் இயக்குனர்களை முழுதாய் நம்பி, “முதல் பிரதி’ அடிப்படையில் படம் தயாரித்து வருகிறார்கள்.

“கைவந்த கலை’ படத்துக்கு பாண்டியராஜன் கொடுத்த பட்ஜெட்டைவிட பத்து லட்சம் அதிகம் செலவானதாம்!

அடுத்து ஜீவாவின் (சமீபத்தில் மறைந்த இயக்குனர்) உதவியாளர் சங்கர் கே. என்பவர் ஐம்பது லட்சம் செலவில், “திருடி’ என்ற படத்தை எடுப்பதாகக் கூறி ஒரு கோடி வரை செலவை இழுத்துவிட்டாராம்.

ஜீ.வி. பிலிம்சுக்கு, இப்போது “உற்சாகம்’ என்ற படத்தை இயக்கிவரும் ரவிச்சந்திரன் (ஏற்கெனவே, கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்த வேளை, மஜ்னு படங்களை இயக்கியவர்) அனுபவம் உள்ள டைரக்டர் என்பதால் அவர் கேட்ட பட்ஜெட்டை கொடுத்து உதவினர் தயாரிப்பாளர்கள். ஆனால், ரவிச்சந்திரன் கொடுத்த பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவழித்து படத்தை உருவாக்கி இருக்கிறாராம்.

பழைய இயக்குனரும் கொடுத்த பட்ஜெட்டைக் காப்பாற்றவில்லை. புதிய இயக்குனரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. யாரைத்தான் நம்புவதோ என்று நேர்மையாக புலம்புகிறது தயாரிப்பு தரப்பு.

Posted in Budget, Cinema, Director, Economic, Expenses, Films, Finance, Flop, Gossip, GV, Hit, Jeeva, Kai Vantha Kalai, Kisukisu, Loss, Majnu, Manirathanam, Manirathnam, Maniratnam, Movies, Pandiarajan, Pandiyarajan, Profit, Ravichandran, Rumour, Rumours, Shankar, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Blogs, Tamil channels, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Magaizine, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, Thirudi, Urchagam, Urchakam, Venkatesvaran, Venkateswaran, Woes | Leave a Comment »