Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ami’ Category

Chennai Events & Tamil Literary Happenings – Asokamithran meet in Adyar Club

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

சொல்றாங்க..

நகர்வலம்: அசோகமித்திரன் வெட்டிய கேக்!

சாருகேசி

சென்னை அடையாறு காந்திநகர் கிளப், அந்த வட்டார பிரமுகர்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே உரிய, பிரம்மாண்ட அமைப்பு என்று சென்ற வாரம் வரை நினைத்தது தவறு என்று புதன்கிழமையன்று புரிந்தது.

அப்படிப்புரிய வைத்தவர் வி.ஆர்.அனில்குமார். சிறுதொழில் அதிபர். தொழில் ஆலோசகர். சமஸ்கிருத மொழியில் பி.எச்டி. மேற்கொண்டிருப்பவர். “காந்திநகர் கிளப்பில் எங்கள் நூலகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவுக்கு அசோகமித்திரனைப் பேச ஏற்பாடு செய்ததற்கு நன்றி. நீங்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினார். முதலில் தயக்கமாக இருந்தாலும், பிறகு அசோகமித்திரன் பேச்சைக் கேட்க வேண்டும் என்ற ஆவலில் கிளப்புக்குப் போனேன்.

ஒரு பெரிய நீண்ட சதுர மேசையைச் சுற்றி நாற்காலிகளில் அங்கத்தினர் அமர்ந்து கொள்ள, எந்தவித பந்தாவும் இல்லாமல், வெகு இயல்பாக வரவேற்றார் செயலர். அப்படியே தலைவரும். கடந்த வருடத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் புதன்கிழமையன்று எந்தெந்த எழுத்தாளர் அல்லது பிரமுகர் எந்தப் புத்தகம் குறித்துப் பேசினார் என்பதை ஒரு சிறு பட்டியல் போல் வாசித்து, அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் அனில் குமார். அவர்களில் ஸ்ரீகுமார் வர்மா, சயிதா ராதாகிருஷ்ணா (சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்), நரசய்யா

முதலியவர்கள் வந்திருந்தார்கள்.

அசோகமித்திரன் உடல்நலம் குன்றியிருந்தபோதும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வந்திருந்து, சிறிது அறிமுக உரைபோலப் பேசிவிட்டு, தமது சிறுகதை (மெüனம்), கட்டுரை (பேட்டி) இரண்டின் ஆங்கில மொழிபெயர்ப்பை வாசித்தார். சுதந்திரம் பெறுவதற்கு முன்னால், திருநெல்வேலியில் நடந்தது போல எழுதப்பட்ட “டூ மென்’ (மெüனம்), ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த சிறுகதைகளின் தொகுப்பில் வெளியானது. அசோகமித்திரனே மொழிபெயர்த்தது. “பேட்டி’யும் அவருடைய மொழிபெயர்ப்புத்தான். இரண்டையும் அவரே படிக்கக் கேட்டபோது அதன் தாக்கம் புலப்பட்டது. உறுப்பினர்கள் அத்தனை பேரும் ரசித்துக் கேட்டார்கள். எங்கெல்லாம் கேலியும், நகைச்சுவையும் வெளிப்பட்டதோ அங்கெல்லாம் குபீரென்று சிரித்தார்கள். (இந்தச் சமயத்தில், மறைந்த தமிழ் எழுத்தாளர் சுப்பிரமணிய ராஜு சொன்னது நினைவுக்கு வந்தது: “அசோகமித்திரனின் படைப்பை எந்த மொழியில் வேண்டுமானாலும் மொழி பெயர்க்கலாம். கொஞ்சம்கூட நெருடாது. ஏனென்றால் அவர் கதைகளில் மனிதாபிமானமும் மனித உறவுகளும் மட்டுமே முக்கிய அம்சங்களாக இருக்கின்றன’)

காந்தி நகர் கிளப்பின் நூலகம் விரிவடைந்து வருகிறது என்றார் அனில் குமார். பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டும் அல்லாமல், தொழில்துறை பிரமுகர்கள் இப்படி நூல்கள் குறித்தும், படைப்புகள் குறித்தும் எழுத்தாளர்களை அழைத்துப் பேசச் சொல்லி மகிழ்வது ஆரோக்கியமான செயலாகப்படுகிறது.

நண்பர் (ரொட்டேரியன்) வி.ஆர்.அனில்குமார், கூட்ட முடிவில் இரண்டாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் “கேக்’ வெட்ட அசோகமித்திரனைக் கேட்டுக் கொண்டார்.

கேக், விரித்து வைக்கப்பட்ட புத்தகம் போலவே உருவாக்கப்பட்டிருந்தது!

“மெட்ராஸ் புக் கிளப்’ உறுப்பினர்கள், சென்ற வாரம் பாக்கியம் செய்திருந்தார்கள் என்று சொல்லலாம்.

ஏனென்றால் சொற்பொழிவாற்ற வந்தவர் டாக்டர் சித்ரா மாதவன். தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் வரலாற்று நிபுணர். ஒருமுறை ஸ்ரீரங்கம் திருக்கோயில் பற்றி இவர் பேசக் கேட்டவர்கள், அவரைப் பல மேடைகளுக்குப் பேச அழைத்துவிட்டார்கள். தங்கு தடையற்ற ஆங்கிலப் பேச்சு மட்டுமல்ல; ஏராளமான தகவல்களை நக நுனியில் வைத்துக் கொண்டு சரளமாகப் பேசும் பாணி, எவரையும் கவர்ந்துவிடும்.

“தென்னாட்டுக் கோயில்களின் அமைப்பு’ பற்றி சித்ரா மாதவன் நிகழ்த்திய (படங்களுடன் கூடிய) சொற்பொழிவுக்குப் பிறகு, கேள்வி நேரத்தில் அவரை நோக்கி வீசப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும், அவர் அவ்வப்போதே அளித்த விடைகள் அவர் எவ்வளவு தெளிவாகச் சிந்தித்து வைத்திருக்கிறார் என்பதைக் காண்பித்தது.

குகைக் கோயில்கள் அமைப்பிலிருந்து துவங்கி, ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் வரை, கொடுத்த ஒரே மணி நேரத்தில் அவர் நிகழ்த்திய உரை, புக் கிளப் உறுப்பினர்களை அசரவே வைத்துவிட்டது.

சித்ரா மாதவனின் சமீபத்திய நூல், “விஷ்ணு டெம்பிள்ஸ் இன் செüத் இன்டியா’வில் “திவ்ய தேசங்கள்’ எனக் குறிப்பிடப்படும் திருக்கோயில்களும் இருக்கின்றன. அதிலும் சென்னை மற்றும் காஞ்சிபுரத்தையடுத்த கோயில்கள். பல அதிகம் அறியப்படாதவை.

ஒரு துண்டுச் சீட்டில்கூடக் குறிப்புகள் ஏதும் எழுதி வைத்துக் கொள்ளாமல், கி.வா.ஜகன்னாதனைப் பற்றி “கி.வா.ஜ. நினைவுச் சொற்பொழிவு’ ஆற்றினார் “கலைமகள்’ ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்; முன்னாள் “தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனின் பேரர்.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் முதன்மைச் சீடர் கி.வா.ஜ.வின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் பலவற்றை ஒவ்வொன்றாக கீழாம்பூர் சொல்லி வந்தபோது, பிரமிப்பும், மகிழ்ச்சியும் உண்டாயிற்று.

கி.வா.ஜ.வின் திருமணத்தை உ.வே.சா. நிச்சயித்த நிகழ்ச்சி அவற்றில் ஒன்று. கி.வா.ஜ.வின் மனைவி ஆகப் போகிறவரின் வீட்டில் ஒரு வியாழக்கிழமை போய், தாம் ஞாயிறன்று அவர்கள் வீட்டுக்கு வரப்போவதாகத் தகவல் சொல்லிவிட்டு வரச் சொல்கிறார் ஆசிரியப்பிரான். சீடரும் அந்த வீட்டுக்குப் போய்த் தகவல் சொல்லுகிறார். “என்ன அருந்துகிறீர்கள்?’ என்று வீட்டுக்கார அம்மாள் கேட்க, “தண்ணீர் மட்டும் போதும்’ என்றாராம். “முதல்முதலாக எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள். காபியாவது சாப்பிட வேண்டும்’ என்று அவர்கள் வற்புறுத்தவே, “நான் காபி அருந்துவதில்லை. பால் ஒரு தம்ளர் கொடுங்கள்’ என்று கூறினாராம். ஞாயிறன்று தம்முடன் சீடர் கி.வா.ஜ.வையும் அழைத்துக் கொண்டு போனப் போது, அன்று பால் கொண்டு வந்து கொடுத்த அந்த வீட்டு உறவுக்காரப் பெண் (கி.வா.ஜ.வின் வருங்கால மனைவி) மற்றவர்களுக்கு காபி கொண்டு வந்து வைத்துவிட்டு, கி.வா.ஜ.வுக்கு மட்டும் பால் கொண்டு வந்து வைத்தாராம்! (“குறிப்பறிதல்’ என்ற சொல்லுக்குப் பெண்கள்தான் சிறந்த உதாரணம் என்றார் கீழாம்பூர்.)

சொற்பொழிவில் தம் பெருமைக்குரிய தாத்தா ஏ.என்.எஸ். பற்றிய தகவல் துளிகளையும் அங்கங்கே தூவினார். (ஏ.என். சிவராமன் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னீர்களே கீழாம்பூர் சார், நூல் எப்போது வெளியாகும்?)

கி.வா.ஜ. எப்படி ஊர் ஊராகப் போய் தமிழ்ப் பழமொழிகள் சேகரித்தார் என்று விவரித்தார் கிழாம்பூர். கி.வா.ஜ.வின் திருக்குறள் விளக்கவுரை இதுவரை யாரும் முயற்சி செய்யாத வகையில், பரிமேலழகர் முதல் சமீபத்திய அறிஞர் வரை சேர்த்துத் தொகுத்த அற்புதமான படைப்பு என்றார்.

இளம் பாடகர் ராகவ் கிருஷ்ணா, வயலின் கலைஞர் வி.வி. ரவியின் புதல்வர். நாலு வயதிலேயே தம் குரல் வளத்தால் கேட்பவர்களை மகிழ வைத்தவர்.

அவர் வழங்கிய சுப்பிரமணிய புஜங்கம், சுப்பிரமணிய அஷ்டகம், சுப்பிரமணிய கலாவரம்பம் ஆகியவை கொண்ட சிடியையும், அவர் பாடிய 11 பாடல்கள் கொண்ட “பிருந்தாவனம்’ என்ற சிடியையும் மியூசிக் அகடமி தலைவர் முரளி, தியாகராஜ வித்வத் சமாஜ சந்நிதியில் வெளியிட, ராகவ் கிருஷ்ணாவின் குரு இசைக் கலைஞர் பி.எஸ். நாராயணசுவாமி பெற்றுக் கொண்டார். (வி.வி. ரவியை அவர் தகப்பனார் நம்மிடம் இசை பயில அழைத்து வந்ததையும் பிறகு ரவியின் தமையனார் வி.வி.எஸ்.ஸின் மகன் முராரியை ரவி அழைத்து வந்ததையும், பிறகு ரவி தம் மகன் ராகவ் கிருஷ்ணாவை இசைப் பயிலத் தம்மிடம் அழைத்து வந்ததையும் குறிப்பிட்டு, “ஒரு குடும்பம் முழுவதுக்கும் ஆசிரியராக இருந்துவிட்டேன். இனி ராகவ்வின் மகன், பேரனுக்கும்கூட குருவாக இருக்கும் பேறு தமக்குக் கிடைக்கக்கூடும் என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார் பி.எஸ்.என்.) “பிருந்தாவனம்’ ஓர் அருமையான, அதிகம் தமிழ்ப் பாடல்கள் கொண்ட தொகுப்பு. “நன்றாகப் பாயிடியிருக்கிறான் ராகவ்’ என்று குருவே பாராட்டி விட்டார்!

Posted in Ami, Asogamithiran, Asogamithran, Asogamitran, Asokamithiran, Asokamithran, Asokamitran, Chennai, City, Events, Literature, Madras, Meetings | Leave a Comment »

Lightening the load of 10th Standard Tamil Textbook: State of Tamil Nadu Education

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

தமிழுக்கு அநீதி!

ச. செந்தில்நாதன்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைத்து தமிழக அரசு ஓர் ஆணையை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருக்கிறது. மாணவர்களுக்குச் “சுமை’ அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். இயல்பான வளர்ச்சிக்கு அது குறுக்கே நிற்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் எந்தப் பாடத்தில் அளவைக் குறைக்க வேண்டும், எதை எடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.

அரசாணையில் திருக்குறளின் அளவைக் குறைத்திருப்பது வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளுக்காக மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவரான நாகநாதனைத் தலைவராகக் கொண்ட குழு சென்ற ஆண்டு அமைக்கப்பட்டது. பின்னர் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைப்பது குறித்து அரசுக்கு அறிக்கைதர பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ராஜராஜேஸ்வரி தலைமையில் இன்னொரு குழு அமைக்கப்பட்டது. இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் அறிக்கை தந்திருக்கிறது.

அரசு அந்தக் குழுக்களின் பரிந்துரைகளைப் பரிசீலித்து அதனை ஏற்க, பள்ளி கல்வித்துறைச் செயலர் 26-7-2007-ல் அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த அரசாணைப்படி குறைக்கப்பட்ட பாடத்தில் திருக்குறளும் அடங்கும்.

10-ம் வகுப்பு பாடத்தில் திருக்குறளிலிருந்து

  1. “புகழ்’,
  2. “வெகுளாமை’,
  3. “இடனறிதல்’,
  4. “ஊக்கமுடைமை’

என நான்கு அதிகாரங்கள் இடம் பெற்றன. இவற்றுள் “இடனறிதல்’, “ஊக்கமுடைமை’ ஆகிய இரு அதிகாரங்களிலும் பத்து பத்து வரிகள் – அதாவது, இருபது வரிகள் நீக்கப்பட்டுள்ளன. நம்முடைய கேள்வி, இந்த இருபது வரிகள், மாணவர்களுக்கு ஒரு சுமையா? திருக்குறளைக் கூடுதலாகப் படிப்பது நல்லதுதானே? குறைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே அளவில் குறைந்த குறளின்மேல் ஏன் கைவைக்க வேண்டும்? இந்த இருபது வரிகள் மாணவர்களுக்கு ஒரு சுமையா?
நீக்கப்பட்டவைகளில் ஐந்து வரிகளைக் கொண்ட குறுந்தொகைப் பாடலும் உண்டு. இந்தப் பாடல் நீக்கத்திற்கு வேண்டுமானால் ஒரு சமாதானம் சொல்ல முடியும். அதாவது, அது அகப்பாடல், காதல் சம்பந்தமான பாடல் என்று சொல்லலாம். 16 வயதிலே குறுந்தொகைக் காட்சியைக் காட்ட வேண்டாம் என்று குழு நினைத்திருக்கலாம். ஆனால் குழு ஒன்றைக் கவனிக்க மறந்துவிட்டது. மாணவர்கள் ஏற்கெனவே காதல் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். திரைப்படத்திலும் தொலைக்காட்சியிலும் காணாத காட்சியா குறுந்தொகைக் காட்சி? திரைக்காதலுக்குப் பதிலாக ஓர் ஆரோக்கியமான காதலை அவர்கள் குறுந்தொகையில் தரிசித்து விட்டுப் போகட்டுமே!

கவிஞர் தமிழ் ஒளியின் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற பாடல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல. பாரதி, பாரதிதாசனுக்குப்பின் தமிழுலகம் அறியப்பட வேண்டிய கவிஞர் தமிழ் ஒளி. எனவே அவர் பாடல்கள் பாடத்தில் வருவதுதான் சரியாக இருக்கும். மேலும் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற கவிதை அறிவியல் வளர்ச்சியையும், மனித ஆற்றலையும் வெளிப்படுத்துவது. இதை ஏன் நீக்க வேண்டும்? இளைய தலைமுறை தமிழ் ஒளியை அறிய வேண்டாம் என்று நினைக்கிறார்களா? நீர்த்துப்போன கவிதைகளை எல்லாம் பாடப்புத்தகத்தில் நிறுத்திக்கொண்டு, அடர்த்தியான கவிதைகளை அவசர அவசரமாக நீக்குவதேன்?

உரைநடைப் பகுதியில் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் எழுதிய மனையியல் என்ற கட்டுரை எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து துணைப்பாடத்தில் இரண்டு கதைகள் நீக்கப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட ஒரு கதை அசோகமித்திரனின் “விடிவதற்குள்’ என்ற சிறு கதையாகும். சென்னை நகரில் தண்ணீர் பஞ்சத்தால், விடிவதற்குள் தண்ணீர் பிடித்து வைப்பதற்காக அலையும் ஒரு குடும்பத்தலைவியின் கதை இது. தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும்போது, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதைச் சித்திரிக்கும் கதை இது.

தண்ணீர்த் தட்டுப்பாட்டை இப்படி படம்பிடித்துக் காட்டினால், அரசு மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்ற எண்ணமோ தெரியவில்லை; நீக்கிவிட்டார்கள். இது ஒரு யதார்த்தமான கதை. ஒரு வாழ்க்கைப் பதிவு. அப்படித்தான் குழு பார்த்திருக்க வேண்டும். ஆனால் குழு அரசியல் நோக்கில் கணக்குப்போட்டு கழித்தல் வேலையைச் செய்திருக்கிறது. இப்படிப் பார்த்தால் வாழ்க்கையின் சிரமங்களைச் சித்திரிக்கும் எந்தக் கதையும் பாடப் புத்தகத்தில் இடம் பெற முடியாமல் போய்விடும்.

முற்போக்கு எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாளின் “மண்ணாசை’ நீக்கப்பட்ட, இன்னொரு கதை. இந்தக் கதையின் நீக்கத்திலும் அரசியல் இருக்கிறது.

பட்டாளத்தில் வேலைபார்த்து சொந்த மண்ணுக்குத் திரும்பும் பட்டாளத்தார் தாம் கொண்டுவந்த பணத்தை எல்லாம் நிலத்தில்கொட்டி மா, பலா, கொய்யா என்று மரங்களை வளர்த்து, தன் வாழ்க்கையையே அவற்றோடு பிணைத்துக்கொள்கிறார்.

அவருடைய மகன் கொஞ்சம் தோட்டத்தை வைத்துக்கொண்டு, மீதித் தோட்டத்தை எல்லாம் மனைகளாகப் பிரித்து, புதிய நகரை உருவாக்கப்போகும் நபர்களுக்கு விற்க ஏற்பாடு செய்து, கடைசியில் தோட்டம் விற்கப்படுகிறது. பத்திரத்தைப் பதிவு செய்துவிட்டு வரும் பட்டாளத்தார், அதற்குள் மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்து, மரத்தோடு மரமாய் சரிந்து விழுகிறார். மரணப் படுக்கையில் நாள்கள் ஓடுகின்றன. மண்ணாசைதான் உயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் அவருடைய மைத்துனர், தோட்டத்திற்குப்போய் மண் எடுத்து வந்து, தண்ணீரில் கரைத்து பட்டாளத்தார் வாயில் ஊற்றுகிறார். சிறிது நேரத்தில் ஒரே விக்கலோடு உயிர்போய்விடுகிறது.

இந்தக் கதையைப் பாடத்திலிருந்து விலக்குவதில் ஓர் உள்ளார்ந்த அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. நிலங்களைக் கையகப்படுத்தும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், பெரும் தனியார் நிறுவனங்களுக்கும் மக்கள் மத்தியில் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்தச் சூழலில் “மண்ணாசை’ கதையைப் படித்தால் மண்ணாசை அதிகமாகுமே என்ற எண்ணமும் இக்கதையை நீக்க ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

தமிழ் ஒளி, சோலை சுந்தரபெருமாள் போன்றவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர்கள். முற்போக்கு வாசத்தை மாணவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்பதும் குழுவின் குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும். திருக்குறளின் அளவைக் குறைப்பது என்பது குழுவின் நோக்கமாக இருந்திருக்காது. தாங்கள் அரசியல்நோக்கில் எடுத்த முடிவை அமலாக்க “திருக்குறளிலேயே சில குறள்களை எடுத்துவிட்டோம்’ என்று காரணம் காட்டுவதற்குத்தான் திருக்குறளிலும் கைவைத்திருக்கிறார்கள் என்று கருதத் தோன்றுகிறது.

மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கைதான். அதற்காக மாணவர்கள் சிரமப்படும் பாடங்களில் சுமையைக் குறைக்க வேண்டுமே தவிர, சிந்திக்க வைக்கும் பாடங்களை நீக்கக்கூடாது.

தமிழக அரசு தாமதம் செய்யாமல் தன்னுடைய அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும்.

(கட்டுரையாளர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர்)

Posted in 10th, Ami, Answers, Asokamithiran, Asokamithran, Asokamitran, Avoid, Books, Conservative, Couplets, Decrease, Delete, Education, Exams, Fiction, Kural, Kurunthogai, Kurunthokai, Language, Learn, Lessons, Liberal, Life, Lighten, Literature, Load, Main, Non-detail, Obsolete, PAK, papers, Planning, Poems, Poet, Questions, Read, Reduce, Sample, Sangam, Schools, Second, Songs, standard, State, Students, Tamil, Tamil Nadu, TamilNadu, Teach, Teachers, Tenth, Textbook, Textbooks, Thirukkural, Thirukural, Thiruvalluvar, TV, Valluvar | Leave a Comment »