Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘10th’ Category

Lightening the load of 10th Standard Tamil Textbook: State of Tamil Nadu Education

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

தமிழுக்கு அநீதி!

ச. செந்தில்நாதன்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைத்து தமிழக அரசு ஓர் ஆணையை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருக்கிறது. மாணவர்களுக்குச் “சுமை’ அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். இயல்பான வளர்ச்சிக்கு அது குறுக்கே நிற்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் எந்தப் பாடத்தில் அளவைக் குறைக்க வேண்டும், எதை எடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.

அரசாணையில் திருக்குறளின் அளவைக் குறைத்திருப்பது வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளுக்காக மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவரான நாகநாதனைத் தலைவராகக் கொண்ட குழு சென்ற ஆண்டு அமைக்கப்பட்டது. பின்னர் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைப்பது குறித்து அரசுக்கு அறிக்கைதர பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ராஜராஜேஸ்வரி தலைமையில் இன்னொரு குழு அமைக்கப்பட்டது. இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் அறிக்கை தந்திருக்கிறது.

அரசு அந்தக் குழுக்களின் பரிந்துரைகளைப் பரிசீலித்து அதனை ஏற்க, பள்ளி கல்வித்துறைச் செயலர் 26-7-2007-ல் அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த அரசாணைப்படி குறைக்கப்பட்ட பாடத்தில் திருக்குறளும் அடங்கும்.

10-ம் வகுப்பு பாடத்தில் திருக்குறளிலிருந்து

  1. “புகழ்’,
  2. “வெகுளாமை’,
  3. “இடனறிதல்’,
  4. “ஊக்கமுடைமை’

என நான்கு அதிகாரங்கள் இடம் பெற்றன. இவற்றுள் “இடனறிதல்’, “ஊக்கமுடைமை’ ஆகிய இரு அதிகாரங்களிலும் பத்து பத்து வரிகள் – அதாவது, இருபது வரிகள் நீக்கப்பட்டுள்ளன. நம்முடைய கேள்வி, இந்த இருபது வரிகள், மாணவர்களுக்கு ஒரு சுமையா? திருக்குறளைக் கூடுதலாகப் படிப்பது நல்லதுதானே? குறைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே அளவில் குறைந்த குறளின்மேல் ஏன் கைவைக்க வேண்டும்? இந்த இருபது வரிகள் மாணவர்களுக்கு ஒரு சுமையா?
நீக்கப்பட்டவைகளில் ஐந்து வரிகளைக் கொண்ட குறுந்தொகைப் பாடலும் உண்டு. இந்தப் பாடல் நீக்கத்திற்கு வேண்டுமானால் ஒரு சமாதானம் சொல்ல முடியும். அதாவது, அது அகப்பாடல், காதல் சம்பந்தமான பாடல் என்று சொல்லலாம். 16 வயதிலே குறுந்தொகைக் காட்சியைக் காட்ட வேண்டாம் என்று குழு நினைத்திருக்கலாம். ஆனால் குழு ஒன்றைக் கவனிக்க மறந்துவிட்டது. மாணவர்கள் ஏற்கெனவே காதல் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். திரைப்படத்திலும் தொலைக்காட்சியிலும் காணாத காட்சியா குறுந்தொகைக் காட்சி? திரைக்காதலுக்குப் பதிலாக ஓர் ஆரோக்கியமான காதலை அவர்கள் குறுந்தொகையில் தரிசித்து விட்டுப் போகட்டுமே!

கவிஞர் தமிழ் ஒளியின் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற பாடல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல. பாரதி, பாரதிதாசனுக்குப்பின் தமிழுலகம் அறியப்பட வேண்டிய கவிஞர் தமிழ் ஒளி. எனவே அவர் பாடல்கள் பாடத்தில் வருவதுதான் சரியாக இருக்கும். மேலும் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற கவிதை அறிவியல் வளர்ச்சியையும், மனித ஆற்றலையும் வெளிப்படுத்துவது. இதை ஏன் நீக்க வேண்டும்? இளைய தலைமுறை தமிழ் ஒளியை அறிய வேண்டாம் என்று நினைக்கிறார்களா? நீர்த்துப்போன கவிதைகளை எல்லாம் பாடப்புத்தகத்தில் நிறுத்திக்கொண்டு, அடர்த்தியான கவிதைகளை அவசர அவசரமாக நீக்குவதேன்?

உரைநடைப் பகுதியில் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் எழுதிய மனையியல் என்ற கட்டுரை எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து துணைப்பாடத்தில் இரண்டு கதைகள் நீக்கப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட ஒரு கதை அசோகமித்திரனின் “விடிவதற்குள்’ என்ற சிறு கதையாகும். சென்னை நகரில் தண்ணீர் பஞ்சத்தால், விடிவதற்குள் தண்ணீர் பிடித்து வைப்பதற்காக அலையும் ஒரு குடும்பத்தலைவியின் கதை இது. தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும்போது, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதைச் சித்திரிக்கும் கதை இது.

தண்ணீர்த் தட்டுப்பாட்டை இப்படி படம்பிடித்துக் காட்டினால், அரசு மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்ற எண்ணமோ தெரியவில்லை; நீக்கிவிட்டார்கள். இது ஒரு யதார்த்தமான கதை. ஒரு வாழ்க்கைப் பதிவு. அப்படித்தான் குழு பார்த்திருக்க வேண்டும். ஆனால் குழு அரசியல் நோக்கில் கணக்குப்போட்டு கழித்தல் வேலையைச் செய்திருக்கிறது. இப்படிப் பார்த்தால் வாழ்க்கையின் சிரமங்களைச் சித்திரிக்கும் எந்தக் கதையும் பாடப் புத்தகத்தில் இடம் பெற முடியாமல் போய்விடும்.

முற்போக்கு எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாளின் “மண்ணாசை’ நீக்கப்பட்ட, இன்னொரு கதை. இந்தக் கதையின் நீக்கத்திலும் அரசியல் இருக்கிறது.

பட்டாளத்தில் வேலைபார்த்து சொந்த மண்ணுக்குத் திரும்பும் பட்டாளத்தார் தாம் கொண்டுவந்த பணத்தை எல்லாம் நிலத்தில்கொட்டி மா, பலா, கொய்யா என்று மரங்களை வளர்த்து, தன் வாழ்க்கையையே அவற்றோடு பிணைத்துக்கொள்கிறார்.

அவருடைய மகன் கொஞ்சம் தோட்டத்தை வைத்துக்கொண்டு, மீதித் தோட்டத்தை எல்லாம் மனைகளாகப் பிரித்து, புதிய நகரை உருவாக்கப்போகும் நபர்களுக்கு விற்க ஏற்பாடு செய்து, கடைசியில் தோட்டம் விற்கப்படுகிறது. பத்திரத்தைப் பதிவு செய்துவிட்டு வரும் பட்டாளத்தார், அதற்குள் மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்து, மரத்தோடு மரமாய் சரிந்து விழுகிறார். மரணப் படுக்கையில் நாள்கள் ஓடுகின்றன. மண்ணாசைதான் உயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் அவருடைய மைத்துனர், தோட்டத்திற்குப்போய் மண் எடுத்து வந்து, தண்ணீரில் கரைத்து பட்டாளத்தார் வாயில் ஊற்றுகிறார். சிறிது நேரத்தில் ஒரே விக்கலோடு உயிர்போய்விடுகிறது.

இந்தக் கதையைப் பாடத்திலிருந்து விலக்குவதில் ஓர் உள்ளார்ந்த அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. நிலங்களைக் கையகப்படுத்தும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், பெரும் தனியார் நிறுவனங்களுக்கும் மக்கள் மத்தியில் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்தச் சூழலில் “மண்ணாசை’ கதையைப் படித்தால் மண்ணாசை அதிகமாகுமே என்ற எண்ணமும் இக்கதையை நீக்க ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

தமிழ் ஒளி, சோலை சுந்தரபெருமாள் போன்றவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர்கள். முற்போக்கு வாசத்தை மாணவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்பதும் குழுவின் குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும். திருக்குறளின் அளவைக் குறைப்பது என்பது குழுவின் நோக்கமாக இருந்திருக்காது. தாங்கள் அரசியல்நோக்கில் எடுத்த முடிவை அமலாக்க “திருக்குறளிலேயே சில குறள்களை எடுத்துவிட்டோம்’ என்று காரணம் காட்டுவதற்குத்தான் திருக்குறளிலும் கைவைத்திருக்கிறார்கள் என்று கருதத் தோன்றுகிறது.

மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கைதான். அதற்காக மாணவர்கள் சிரமப்படும் பாடங்களில் சுமையைக் குறைக்க வேண்டுமே தவிர, சிந்திக்க வைக்கும் பாடங்களை நீக்கக்கூடாது.

தமிழக அரசு தாமதம் செய்யாமல் தன்னுடைய அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும்.

(கட்டுரையாளர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர்)

Posted in 10th, Ami, Answers, Asokamithiran, Asokamithran, Asokamitran, Avoid, Books, Conservative, Couplets, Decrease, Delete, Education, Exams, Fiction, Kural, Kurunthogai, Kurunthokai, Language, Learn, Lessons, Liberal, Life, Lighten, Literature, Load, Main, Non-detail, Obsolete, PAK, papers, Planning, Poems, Poet, Questions, Read, Reduce, Sample, Sangam, Schools, Second, Songs, standard, State, Students, Tamil, Tamil Nadu, TamilNadu, Teach, Teachers, Tenth, Textbook, Textbooks, Thirukkural, Thirukural, Thiruvalluvar, TV, Valluvar | Leave a Comment »

Sample Tamil Exam paper – Questions on Thamizh Grammar & Poems

Posted by Snapjudge மேல் ஜனவரி 23, 2007

பிளஸ் டூ பொதுத் தேர்வு (மாதிரி) வினா – பொதுத் தமிழ்

பகுதி-1 – தமிழ் – முதல் தாள்
(செய்யுளும், இலக்கணமும்)

  • காலம்: 3 மணி
  • மதிப்பெண்: 100

குறிப்பு: (1) விடைகள் தெளிவாகவும் குறிப்பிட்ட அளவினதாகவும் சொந்த நடையில் அமைதல் வேண்டும்.

(2) வினா யஐ-க்கான விடை மட்டும் செய்யுள் வடிவில் அமைதல் வேண்டும்.

1. பின்வரும் வினாக்களுள் எவையேனும் நான்கனுக்கு ஐந்து வரிகளில் விடை எழுதுக.

4*2 =8

1. புறநானூற்றால் அறியப்படும் செய்திகள் யாவை?

2. எதனை மறத்தல் எதனினும் நன்று?

3. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் யாவை?

4. தேவார மூவர் யாவர்?

5. நாம் தூங்கிக் கிடந்ததால் நடந்ததாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?

6. நாடெங்கும் புத்தக சாலை ஏன் வேண்டும்?

2. பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்குப் (பத்து வரிகளில்) விடை தருக.

3*4 = 12

7. இந்தியர் அனைவரும் எவ்வெண்ணத்தைக் கைக்கொள்ள வேண்டும்?

8. நரிவெரூஉத்தலையார் பயனில்லாத முதுமை உடையாரை விளித்துக் கூறுவன யாவை?

9. பொறையுடைமையின் சிறப்பை திருவள்ளுவர் வழிநின்று விளக்குக.

10. கண்ணகியைக் கண்டு ஊரவர் திகைத்துக் கூறியன யாவை?

11. பாண்டியன் பரிசு பேழைக்குள் இருந்தன யாவை?

3. பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்குப் (பத்து வரிகளில்) விடை தருக.

3*4 = 12

12. தென் கரை நாட்டின் வளம் குறித்து முக்கூடற்பள்ளு உரைப்பனவற்றை எழுதுக.

13. உவமைக் கவிஞர் சுரதா எவ்வெவற்றைச் சிக்கனம் எனப் பட்டியலிட்டுள்ளார்?

14. மனித நேயம் பற்றிக் கவிஞர் கூறுவன யாவை?

15. மூலையில் கிடக்கும் வாலிபனிடம் தாராபாரதி கூறும் அறிவுரைகள் யாவை?

16. நாயினேன் மறந்து என்னினைக்கேனே என்று சுந்தரர் உருகுமாற்றினை விளக்குக.

4. பின்வரும் வினாக்களுள் ஏதேனும் ஒன்றனுக்கு (இருபது வரிகளில்) விடை தருக.

1*8 = 8

17. அறிவுடைமை அதிகாரத்தில் இடம்பெற்ற குறட்பாக்களின் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக.

18. கோலியாத்து என்ற அரக்கனின் வருகையும், தாவீரன் அவனை வென்ற திறத்தினையும் எழுதுக.

19. பாரதியார் காட்டும் அந்திவான வருணனையைத் தொகுத்து வரைக.

5. பின்வரும் செய்யுளின் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.

4*1 = 4

20. யாருமில்லை தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

(அ) பாடல் இடம் பெற்ற நூல் எது?
(ஆ) இப்பாடலின் ஆசிரியர் யார்?
(இ) “”கள்வன்” யார்?
(ஈ) இப்பாடல் யார் யாருக்குச் சொன்னது?

(அல்லது)

21. “நீயடா வெதிர் நிற்பதோ மதம் பொழ கரிமேல்
நாயடா வினை நடத்துமோ?’

(அ) இப்பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?
(ஆ) இப்பாடலின் ஆசிரியர் யார்?
(இ) யார் யாரிடம் கூறியது?
(ஈ) “கரி’ என்பதன் பொருள் யாது?

6. 22. “கண்டனென்’ எனத் தொடங்கும் கம்பராமாயணச் செய்யுளை அடிபிறழாமல் எழுதி அதன் பாவகையையும் எழுதுக.

(4+2 = 6)

23. காலத்தினால்’ எனத் தொடங்கும் குறளையும், “செயல்’ என முடியும் குறளையும் அடிபிறழாமல் எழுதுக.
(2+2 = 4)

7. 24. எவையேனும் இரண்டு சொற்களுக்கு உறுப்பிலக்கணம் தருக.
2*2 = 4

(அ) வேண்டேன் (ஆ) களையாத (இ) கேட்டி (ஈ) ஏகுவாய் (உ) பொறுத்தல் (ஊ) சொல்லுமின்

25. கீழ்க்கோடிட்ட தொடர்களுள் எவையேனும் மூன்றனுக்கு இலக்கணக் குறிப்பு எழுதுக.
3*2 = 6

(அ) கயன்முன் (ஆ) திரைகவுள் (இ) கூர்ம்படை (ஈ) படூஉம் (உ) சிறைப்பறவை (ஊ) வல் விரைந்து

26. எவையேனும் இரண்டு தொடர்களுக்குப் புணர்ச்சி விதி தருக.
2*2 = 4

(அ) வினைத்திட்பம் (ஆ) பெருந்தேர் (இ) வீறெய்தி (ஈ) நிறைஉடைமை (உ) இற்பிறப்பு (ஊ) சின்னாள்

27. சான்று தந்து விளக்குக.
1*4 = 4

பொதுவியல் திணை (அல்லது) வினை முற்றிய தலைமகன் தேர்பாகற்குச் சொல்லியது.

28. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

இக்குறளில் பயின்று வந்துள்ள அணியை விளக்குக.

(அல்லது)

எடுத்துக்காட்டு உவமையணி அல்லது தற்குறிப்பேற்ற அணியை விளக்குக.
1*4 = 4

8. பொருத்துக
4*1 = 4

தினை தெய்வம்

29. குறிஞ்சி (அ) வருணன்
30. நெய்தல் (ஆ) துர்க்கை
31. பாலை (இ) திருமால்
32. முல்லை (ஈ) இந்திரன்
(உ) முருகன்

Posted in +2, 10th, Answers, Exam, Examination, Examples, Grammar, Higher Secondary, HSS, Literature, Poems, Q&A, Question Paper, Questions, Reference, School Exam, Tenth, Thamizh | 2 Comments »

Exemplary out of state Tamil language students to be rewarded – M Karunanidhi

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 26, 2006

வெளிமாநிலங்களில் தமிழில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு: கருணாநிதி அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பிற மாநிலங்களில் தமிழ் மொழி வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாண வர்களை ஊக்குவிக்கும் வகையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும், பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்தவிலும் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு பரிசு வழங்கும் திட்டம் செயல் படுத்தப்படும்.

  1. முதல் பரிசு ரூ.10 ஆயிரம்,
  2. 2-ம் பரிசு ரூ.5 ஆயிரம்,
  3. 3-ம் பரிசு ரூ.3 ஆயிரம்

எனப் பரிசுகள் வழங்கப்படும்.

  • புதுடெல்லி,
  • மகாராட்டிரம்,
  • மேற்கு வங்காளம்,
  • கர்நாடகம்,
  • ஆந்திரா மற்றும்
  • கேரளா ஆகிய 6 மாநிலங்களில் 2,16,000 ரூபாய் செலவில் இத் திட்டம் செயற்படுத்தப்படும் முதல்-அமைச்சர் அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் புது டெல்லி, மேற்கு வங்காளம், கர்நாடகம், ஆந்திரா மற் றும் கேரளா ஆகிய 6 மாநி லங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்ற ஒவ்வொரு மாணவருக்கும், ஒவ்வொரு மாநிலத்திலும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்றும், இத் திட்டம் இனி ஒவ்வொரு ஆண்டிலும் தொடர்ந்து செயல் படுத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

Posted in 10th, 12th, Curriculum, India, Karunanidhi, Language, M Karunanidhi, MK, MuKa, reward, Schools, standard, State, Students, Tamil Nadu | Leave a Comment »