சென்னையின் 20 முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமிரா: முதல்வர் அறிவிப்பு
சென்னை, பிப். 3: சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரைக் கண்டுபிடிக்க 20 முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமிரா வைக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.
வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றனரா என்பதைக் கண்டுபிடிக்கவும், விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் இந்த கண்காணிப்பு கேமிரா மூலமான கண்காணிப்பு உதவும்.
ரூ. 2.1 கோடி செலவில் 20 கண்காணிப்புக் கேமிராக்கள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. இவை நிறுவப்படும் இடங்கள்:
- போர் நினைவுச் சின்னம்,
- தலைமைச் செயலக வெளிப்புற வாயில்,
- கத்திப்பாரா சந்திப்பு,
- வள்ளுவர் கோட்டம் சந்திப்பு,
- அண்ணா சிலை சந்திப்பு,
- வீல்ஸ் இந்தியா கம்பெனி சந்திப்பு,
- பெரியார் சிலை சந்திப்பு,
- வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலைய சந்திப்பு,
- மத்திய கைலாஷ் சந்திப்பு,
- ஹால்டா சந்திப்பு,
- ஆளுநர் மாளிகை முதன்மை வாயில் சந்திப்பு,
- எஸ்.ஆர்.பி. டூல்ஸ் நிறுவன சந்திப்பு,
- எஸ்ஐஇடி கல்லூரி -செனடாப் சாலை சந்திப்பு,
- 100 அடி சாலை -வட பழனி சாலை சந்திப்பு,
- போரூர் சந்திப்பு,
- அசோக் பில்லர் சந்திப்பு,
- அண்ணாநகர் ரவுண்டானா சந்திப்பு,
- எஸ்என் செட்டி சாலை -சுங்கச் சாவடி சந்திப்பு,
- விமான நிலைய சாலை சந்திப்பு,
- கிரீன்வேஸ் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் இவை நிறுவப்படும். இந்த சாலை சந்திப்புகளில் உள் சுற்று இணைப்பு தொலைக்காட்சிப் பெட்டிகள் (சிசிடிவி) நிறுவப்பட்டு போக்குவரத்து கண்காணிக்கப்படும் என்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.