Mooligai Corner: Herbs & Naturotherapy – Gandan Kathiri
Posted by Snapjudge மேல் மே 1, 2007
மூலிகை மூலை: காய்ச்சல் போக்கும் கண்டங்கத்திரி!
விஜயராஜன்
முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீலநிற மலர்களையும் சிறுகத்திரிக்காய் வடிவிலான காய்களையும் மஞ்சள் நிறப்பழங்களையும் உடைய நேராக உயர்ந்து வளரும் சிறுசெடியின் வகை கண்டங்கத்திரி. இதன் தண்டுப் பகுதி முதல் இலைகள் வரை பூனை முட்கள் செடி முழுவதும் இருக்கும். இது கத்திரியின் வகைகளில் ஒன்றாகும். இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் ஆகியவை மருத்துவ குணமுடையவை. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தரிசு நிலங்களிலும் தானே வளர்கின்றது. கோழை அகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் பயன்படுகின்றது.
வேறு பெயர்கள்: பாப்பார முள்ளி, கண்டம், கண்டு, கபநாசம், கண்டங்காரி துற்பஞ்சா, நிதித்திகா, பிறசோதி, நிராட்டிகா, சிங்கி, நிசப்பிரிய வாணாதாகி, சுவாக்கனி, கண்டநியா.
ஆங்கிலப் பெயர்: Solqnumsuraltense, Burmfi solqnqceae
மருத்துவ குணங்கள்:
கண்டங் கத்திரியின் வேர் ஐந்தும் பூனைக் காலி வேர் ஒன்றும் எடுத்து 200 மில்லி நீரில் போட்டு 50 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து 2 வேளைக்கு 25 மில்லி வீதமாக, அம்மையில் அடிபட்டு தேறிய குழந்தைகளுக்குக் கொடுத்தால் அம்மைக்குப் பிறகு தொடரும் இருமல் குணமாகும்.
கண்டங்கத்திரியின் வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 2 சிட்டிகை, கொத்தமல்லி ஒரு பிடி, ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு 1/2 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 6 முறை வேளைக்கு 100 மில்லி அளவாகக் குடித்து வர சீதளக் காய்ச்சல், சளிக் காய்ச்சல், நுரையீரல் பற்றிய எந்தக் காய்ச்சலும் குணமாகும்.
கண்டங் கத்திரி விதைகளை எடுத்து ஒரு கரண்டியில் கொஞ்சம் நெருப்பை எடுத்து அதில் இந்த விதைகளைக் கொட்டினால் புகை வரும். இந்தப் புகையைப் பல்வலி உள்ளவர்களுக்குக் காட்டினால் புகை உள்ளே சென்று வலி நீங்கும். சொத்தைப் பூச்சிகளும் வெளியேறிவிடும்.
கண்டங்கத்திரி சமூலம் ஒரு பிடி, ஆடாதொடை ஒரு பிடி, விஷ்ணு காந்தி அரை பிடி, பிற்பாடகம் அரை பிடி, சீரகம், சுக்கு வகைக்கு 10 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 6 முறை 100 மில்லியளவு குடித்து வர புளுக்காய்ச்சல், நிமோனியா காய்ச்சல், மண்டை நீர் ஏற்றக்காய்ச்சல் குணமாகும்.
கண்டங்கத்திரி வேர், ஆடாதொடை வகைக்கு 40 கிராம், அரிசித் திப்பிலி 5 கிராம் சேர்த்து எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, 4 வேளை 100 மில்லியளவு குடிக்கக் கொடுக்க இரைப்பிருமல் (ஆஸ்துமா) என்புருக்கி (சயம்), ஈளை, இருமல், கப இருமல், பீனிசம் குணமாகும்.
கண்டங் கத்திரி இலைச்சாறு 100 மில்லியளவு எடுத்து அதைக் கொப்பரைத் தேங்காயில் எடுக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் அரை லிட்டருடன் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி, அந்த எண்ணெயை உடலில் தேவையான அளவு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் உடம்பிலுள்ள கற்றாழை நாற்றம் சிலர் உடம்பில் இருந்து காற்றில் மிதந்து வரும் கசண்டு எண்ணெய் நாற்றம் போன்றவை நீங்கும்.
கண்டங் கத்திரிப் பழம், துளசி, வெற்றிலை இவற்றின் சாறு, கஞ்சாகியாழம், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர் எடுத்து கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி தலை முழுகி வர இரத்த பீனிசம், சிரேசு பீனிசம் நீங்கும்.
Parthiban said
மிக மிக பயனுள்ள தகவல் …
பார்த்திபன் said
மிக மிக பயனுள்ள தகவல் …