Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மே 31st, 2007

Paul Wolfowitz – World Bank, Girlfriend, Shaha Riza, Compensation

Posted by Snapjudge மேல் மே 31, 2007

நெட்டில் சுட்டதடா…: பெரிய பதவிக்கு வேட்டு வைத்த சின்னப் பதவி!

பல வருடங்களுக்கு முன்பு ஒரு பொதுத்துறை நிறுவனத்திலிருந்து இண்டர்வியூவுக்கு அழைப்பு வந்திருந்தது. கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸின் முன் பதிவு செய்யப்படாத பெட்டியில், உரித்துப் போட்ட வேர் கடலைத் தோல்களின் நடுவே தரையில் உட்கார்ந்தபடியே டெல்லிக்குப் பயணமானேன். பயணம் நாற்பது மணி நேரம் இருந்தாலும், இண்டர்வியூ என்னவோ நாலே நிமிடத்தில் முடிந்துவிட்டது. ஆச்சரியத்துடன் வெளியே வந்தபோது, அங்கே அட்டெண்டராக இருந்த கோபால் என்ற தமிழர் என் பால் வடியும் முகத்தைப் பார்த்து அனுதாபப்பட்டு ஒரு தகவல் தெரிவித்தார்: ஏற்கனவே அந்த உத்தியோகம் உயர் அதிகாரி ஒருவரின் உறவினருக்குக் கொடுக்கப்பட்டு விட்டதாம்! நான் குமுறிக் கொந்தளித்து ஒரு கல்லை எடுத்துக் கண்ணாடி ஜன்னல் மீது வீசலாமா என்று யோசித்து, பிறகு தைரியம் போதாமல் கனாட் ப்ளேஸில் ஒரு ராஜேஷ் கன்னா படம் பார்த்துவிட்டு ராத்திரியே ரயிலேறிவிட்டேன்.

தான் வகிக்கும் பதவியை உபயோகித்துத் தன்னுடைய உறவினர்களுக்குச் சகாயம் செய்து வைப்பதற்கு ஆங்கிலத்தில் நெபாடிஸம் என்று பெயர். நெஃப்யூ -மருமகன் என்ற வார்த்தையிலிருந்து வந்தது இது. அந்த வார்த்தைக்கு அடி வேர், நபாத் என்ற பழைய சமஸ்கிருதச் சொல். ஒருவேளை, ரிக் வேத காலத்திலேயே நெபாடிஸம் இருந்திருக்கிறதோ?… அமெரிக்காவில் 1933-ம் ஆண்டு டெக்ஸôஸ் மாநிலத்தில் ஒரு சர்வே எடுத்தார்கள். சில அரசுத் துறைகளில் அறுபது சதவிகிதம் வரை ஊழியர்களின் உறவினர்களால் நிரம்பி வழிந்ததைக் கண்டுபிடித்து அதிர்ந்தார்கள். நெபாடிஸ ஒழிப்புக் கமிட்டி என்று ஒன்று போட்டு விசாரணை நடத்தினார்கள். (அந்தக் கமிட்டியில் யார் யாருடைய மருமகப் பிள்ளைகளெல்லாம் இடம் பெற்றார்களோ தெரியவில்லை). பிறகு எல்லா மாநிலங்களும் விதவிதமாக நெபாடிஸ மறுப்புச் சட்டங்கள் இயற்றின. இப்போது பெரிய தனியார் நிறுவனங்களில்கூட வேலைக்குச் சேரும்போதே, “”உங்கள் உற்றார் உறவினர்கள் யாருக்கும் நீங்கள் சுற்றி வளைத்துக் கூட சூபர்வைசராக இருக்க முடியாது; உங்களுக்கு வேண்டியவர்கள் நடத்தும் கடையிலிருந்து ஆபீசுக்கு குண்டூசி கூட வாங்கக் கூடாது” என்றெல்லாம் விதி முறைகள் அச்சடித்துத் தந்து கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இருந்தும் நெபாடிஸம் சாவதாகத் தெரியவில்லை. “”என் மகனுக்கு உன்னுடைய டிபார்ட்மெண்டில் வேலை போட்டுக் கொடு; உன் மகனுக்கு என் டிபார்மெண்டில்” என்று பேசி வைத்துக்கொண்டு சுலபத்தில் நிரூபிக்க முடியாத வகையில் ஊழல் செய்கிறார்கள்.

சமீபத்தில் நெபாடிஸக் குற்றச்சாட்டுக்கு ஆளாகிப் பதவியை இழந்தவர், உலக வங்கியின் தலைவராக இருந்த உல்ஃபோவிச் என்பவர். பிரிட்டிஷ் பிரதமர்கள் கூட ரிட்டையர் ஆன பிறகு உலக வங்கியின் இந்த உயர்ந்த பதவிக்குப் போட்டியிடுவது உண்டு. உலகத்தில் எங்கே வேண்டுமானாலும் பெரிய அளவில் போர், பஞ்சம் போன்றவற்றை ஆரம்பித்து வைக்கவும், முடித்து வைக்கவும் சக்தி படைத்த பதவி அது. உல்ஃபோவிச் வங்கியில் வேலை செய்த தன்னுடைய காதலி ரிஸô என்பவருக்குப் பதவி உயர்வு கிடைக்குமாறு பார்த்துக் கொண்டதுடன், ஒரேயடியாகச் சம்பளத்தையும் உயர்த்திக் கொடுத்துவிட்டார். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் டாலர்; அமெரிக்காவின் மத்திய அமைச்சர்களைவிட அதிகச் சம்பளம்! இந்த ஊழலைக் கண்டு வெகுண்ட சில ஊழியர்கள் மொட்டைக் கடிதாசு எழுதிப் போட்டுவிட்டார்கள். கடும், நெடும் விசாரணை நடந்தது. ஜனாதிபதி புஷ் நேரடியாகத் தலையிட்டுக் காப்பாற்ற முயன்றும் உல்ஃபின் தலை தப்பவில்லை. பொய்ச் சாட்சி சொல்ல மறுத்துத் தன் காலை வாரிய கீழ் மட்ட அதிகாரிகளை வண்டை வண்டையாகத் திட்டிக்கொண்டே வெளியேறினார் உல்ஃபோவிச்.

புனிதப் பீடங்களும் நெபாடிஸத்தின் நெடிய கைகளிலிருந்து தப்பிக்கவில்லை. கத்தோலிக்க போப்பாண்டவர்கள் கல்யாணம் செய்து கொள்வதில்லையாதலால், அவர்களுக்கு நேரடியான வாரிசுகள் இருக்க வாய்ப்பில்லை. எனவே தத்தமது தமக்கை மகன்களைப் பதவிக்குக் கொண்டு வந்து பரம்பரை ஆட்சியை நிலை நாட்டினார்கள். உதாரணமாக போப் கலிக்ஸ்டஸ் என்பவர் தன்னுடைய இரண்டு மருமகன்களைச் சக்தி வாய்ந்த கார்டினல் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தார். அதில் ஒருவர் பிறகு போப் பதவிக்கு உயர்ந்தார். ஆறாவது அலெக்ஸôண்டர் என்ற அந்த போப், தன்னுடைய ரகசிய சினேகிதியின் தம்பியை ராவோடு ராவாக கார்டினல் ஆக்கினார். அந்தத் தம்பியும் பிறகு போப் ஆகிப் பரம்பரை வழக்கத்தைத் தொடர்ந்தார்: தெருவில் பம்பரம் விட்டுக் கொண்டிருந்த தன்னுடைய பதினாலு, பதினைந்து வயது மருமகன்களை சாக்லெட் தந்து அழைத்து வந்து, சீனியர் பிஷப்பாக ஆக்கினார். கடைசியாக பதினேழாம் நூற்றாண்டு முடிவில் போப் இன்னசென்ட் என்பவர்தான் உறவினர்களுக்கு சர்ச் பதவி கொடுக்கும் வழக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார்.

அரசியல்வாதிகளின் வாரிசுள், அப்பா மாதிரி முள் பாதையில் நடந்து மலையேறத் தேவையின்றி நேரடியாக ஹெலிகாப்டரில் ஏறி உச்சிக்குப் போய்விடுவது உலகம் முழுவதும் வழக்கம்தான். மலேசியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று நம்மை நாலு புறமும் சூழந்து கொண்டு இதற்கு உதாரணங்கள் உண்டு. உற்றார் உறவினர் தயவில், ஒரு வார்த்தை கூட ஃப்ரெஞ்சு மொழி தெரியாதவர்கள் ஃப்ரான்ஸ் நாட்டுக்குத் தூதராக நியமிக்கப்பட்ட வினோதமும் நடந்திருக்கிறது; தன் கணவருடைய நாற்காலிக்கு நெருக்கடி நேர்ந்தபோது கொல்லைப்புறத்தில் வறட்டி தட்டிக் கொண்டிருந்த மனைவி கையை அலம்பிக் கொண்டு வந்து பதவிக்கு பிரமாணம் எடுத்துக் கொண்ட விசித்திரமும் நடந்திருக்கிறது. அறுபதுகளில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான், தலைமை வக்கீல் பதவிக்கு ராபர்ட் என்பவரை நியமித்தது பெரிய சர்ச்சையானது. ஏனெனில் இரண்டு பேரின் குலப் பெயரும் கென்னடி! (தம்பியும் அண்ணன் போல அரசியலில் நுழைந்து தேர்தல்களில் ஜெயித்தார்; அண்ணன் போலவே சுட்டுக் கொல்லப்பட்டார்.)

இப்படி உள்ளிருப்பவரின் உறவினர்கள் குறுக்கு வழியில் நுழைந்துவிடுவதால், தகுதியும் திறமையும் கொண்ட வேறு பலருக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடுகிறது என்பதுதான் இதன் பிரச்சினை. ஆனால் எல்லா நம்பிக்கைகளையும் தட்டிக் கேட்கும் அமெரிக்காவில், நெபாடிஸம் நல்லதா, கெட்டதா என்றே ஒரு விவாதம் நடக்கிறது. ஆடம்பெல்லோ என்ற அறிஞர் பல வருடம் ஆராய்ச்சி செய்து பி.எச்.டி லெவலில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். நெபாடிஸம் என்பது, மனிதன் உள்பட எல்லாப் பிராணிகளின் இயற்கையான இனம் தழைக்கும் உந்துதலால் ஏற்படுவது என்கிறார் அவர். எறும்புக் காலனிகளில் எவ்வளவோ எறும்புகள் பசித்திருக்க, கிடைத்த உணவைத் தன் ரத்த சம்பந்தங்களுக்குக் கொடுப்பதை விஞ்ஞானிகள் கவனித்திருக்கிறார்கள். (ஆயிரம் எறும்புகளில் எந்த எறும்புக்கு எந்த எறும்பு சித்தப்பா என்பதை எப்படித்தான் அடையாளமிட்டுக் கண்காணித்தார்களோ?) தன்னுடைய நேரடி வாரிசுகளுக்கு உணவும் உடையும் கட்சிப் பதவியும் தந்து கவனித்துக் கொள்வது, நல்ல பெற்றோருடைய கடமைதானே என்கிறார் பெல்லோ.

ஜாப்ஸ்டர் போன்ற வேலை வாய்ப்பு தளங்களிலும் இதையேதான் நவீன பகவத் கீதை மாதிரி உபதேசிக்கிறார்கள். “”இந்தக் காலத்தில் வேலை கிடைப்பதே கழுதைக் கொம்பாக இருக்கிறது, இதில் லட்சிய வாதமெல்லாம் பேசிக்கொண்டு “சொந்தக் காலில்தான் நிற்பேன், சிபாரிசு பிடித்து வேலைக்கு அலையமாட்டேன்’ என்ற வறட்டு கெüரவத்தால் வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள். தகுதி அடிப்படையில் வேலை தானாகக் கனிந்து வந்து விழும் என்று மடியை விரித்துக் கொண்டு காத்திருந்தது, போன தலைமுறை. இப்போதையே டிஜிட்டல் தலைமுறைக்கு அவ்வளவு பொறுமையெல்லாம் கிடையாது. இது சோஷல் நெட்வொர்க்கிங் யுகம்: உங்களுக்கு யாரைத் தெரியும், அவர்களுக்கு யார் யாரையெல்லாம் தெரியும் என்ற இந்த வாலைப் பின்னல்தான் சமுதாயத்தில் நம்மைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. எனவே உங்கள் அப்பாவோ, மாமாவோ கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருக்கும் நன் மதிப்பைக் கூச்சமில்லாமல் உபயோகித்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள். இதற்குக் கூடப் பயன்படவில்லையென்றால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்ததுதான் என்ன பயன்?”

ஒரு அலுவலகத்தின் சீனியர் அதிகாரி, அங்கே வேலை செய்யும் வாலிபனிடம் சொன்னாராம்: “”இளைஞனே! நீ போன வருடம் இங்கே கடை நிலை க்ளார்க் வேலையில் சேர்ந்தாய்; மூன்றே மாதத்தில் கடின உழைப்பால் சூபர்வைசராக உயர்ந்தாய். ஆறு மாதம் கழித்து முதுநிலை மானேஜர் மண்டையைப் போட்ட போது, உன் திறமையின் காரணமாக அந்தப் பணியில் உன்னை அமர்த்தினேன். இப்போது உன் புத்திசாலித்தனத்தினால் உப தலைவர் பதவியும் உன்னுடையதாகிவிட்டது. அடுத்தது என்னுடைய நாற்காலிதான் பாக்கி. இப்போது நான் செய்ய வேண்டும்?

“”சீக்கிரமே ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டுவிடுங்கள், டாடி!” என்றான் இளைஞன்.

Posted in Analysis, Ancestry, Backgrounder, Blood, Compensation, dynasty, Favor, Friend, Girlfriend, hierarchy, Nepotism, Paul Wolfowitz, Raman Raja, relative, Riza, Salary, Scandal, Shaha Riza, WB, Wolfowitz, world bank | Leave a Comment »

Interview with Author Jeevabharathy – Tamil Literature researcher, Writer

Posted by Snapjudge மேல் மே 31, 2007

சந்திப்பு: “”முன்னோர்களை அடையாளம் காட்டுவதே முக்கியப்பணி!”

கே இளந்தீபன்

பாரதி பிறந்த எட்டயபுர மண்ணுக்கு பக்கத்துக் கிராமமான பூதலபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஜீவபாரதி. வேலுச்சாமி, கந்தசாமி என்ற இருபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் கந்தசாமியின் வாரிசாகப் பிறந்து- எழுத்து வயலில் பட்டுக்கோட்டைக் கவிஞனை முன் ஏர் உழவனாகக் கொண்டு- கவிதை, கட்டுரை, கள ஆய்வு, வரலாறு, புதினம், சிறுவர் இலக்கியம், தொகுப்பு நூல்கள் என்று பல்வேறு தளங்களில் 1970 முதல் எழுதிவருபவர்.

தற்போது தமிழ் எழுத்தாளர் சங்கப் பரிசை “லெனின்’ என்ற நூலுக்குப் பெற்று மகிழ்ச்சியும் களைப்புமாகத் திரும்பியிருந்தவரைச் சந்தித்தோம்.

எழுத்துத் துறைக்கு எப்போது வந்தீர்கள்?

ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற போது இட்டுக் கட்டிப் பாடத் தொடங்கினேன். எங்கள் ஊருக்கு அருகே மரியக்கண்ணு என்ற தாழ்த்தப்பட்ட சகோதரரை உயர் சாதியினர் கொன்றது என் பாடு பொருளானது. இந்தப் பாடல்தான் எனது ஊர்ப் பகுதியில் என்னைக் கவிஞனாக, பாடகனாக அறிமுகப்படுத்தியது.

முதல் படைப்பு பற்றி?

1969-ல் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் தோழர் பால தண்டாயுதத்தால் வேலைக்குச் சேர்க்கப்பட்டேன். அங்கு வேலை பார்த்த பழனி சுந்தரேசனிடம் “முல்லைச்சரம்’ இதழ் ஆசிரியர் பொன்னடியான் கவிதை கேட்டிருந்தார். அவருடைய கவிதையுடன் என்னுடைய கவிதையையும் கொடுத்தனுப்பினார். பூதலபுரம் ராமமூர்த்தி என்ற என் சொந்தப் பெயரில் கவிதை பிரசுரமானது. பொன்னடியான் என்னைப் புனைப் பெயர் வைத்துக் கொள்ளுமாறு ஆலோசனை சொன்னதால் நான் நேசிக்கும் ஜீவாவையும் பாரதியையும் இணைத்து ஜீவபாரதி ஆனேன்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பக்கம் உங்கள் கவனம் திரும்பியதற்கு என்ன காரணம்?

சின்னவயசில் பட்டுக்கோட்டையாருடைய “தூங்காதே தம்பி தூங்காதே’ பாடலைத்தான் எப்போதும் பாடிக்கொண்டு இருப்பேன். இதன்பிறகு என்.சி.பி.எச்.-ல் பணியாற்றியபோது பட்டுக்கோட்டையார் பாடல்களைத் தொகுத்து வெளியிட்ட பி.இ.பாலகிருஷ்ணன் தொடர்பால் பட்டுக்கோட்டையார் மீது தனிக்கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

பட்டுக்கோட்டையார் பாடல்களை காலவாரியாகத் தொகுத்து வெளியிட்டது, பட்டுக்கோட்டை நகரத்தில் அவருக்கு சிலை வைத்தது, அவருக்கு நினைவாலயம் அமைக்கவும் அவரது பாடல்களை நாட்டுடமை ஆக்கவேண்டும் என்றெல்லாம் குரல் எழுப்பி இரண்டும் நடந்துள்ளது. இந்த முயற்சிகளுக்கு எனக்குப் பக்கபலமாய் இருந்தவர் முன்னாள் அமைச்சர் அமரர் எஸ்.டி.சோமசுந்தரம் என்பதை பெருமையோடு சொல்வேன்.

திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் சாரிடம் சத்யராஜ் நடித்த “24 மணி நேரம்’ படம் துவங்கி, “பாலைவன ரோஜாக்கள்’, “சந்தனக்காற்று’, “தீர்த்தக்கரையினிலே’ என்று 11 படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன். “இனி ஒரு சுதந்திரம்’ படத்தில் கங்கை அமரன் இசையில் எழுதிய “கைகளிலே வலுவிருக்கு’ என்ற பாடலும் -சந்தனக்காற்று திரைப்படத்தில் சங்கர் கணேஷ் இசையில் விஜயகாந்துக்காக ஓபனிங் சாங் “சந்தனக்காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே’ என்ற பாடலும் அடிக்கடி ரீங்காரமிடுவதை நேயர்கள் பலரும் அறிவர். இப்போதும் எழுதத் தயாராய் இருக்கிறேன் தரமான பாடல்களுக்கு…


பாரதிதாசன் பற்றிய ஆய்வு பட்டுக்கோட்டை, ஜீவா, பசும்பொன்தேவர், போன்றவர்களின் படைப்புகளைத் தொகுப்பது என்று நீங்கள் பாதை வகுத்துக் கொண்டது ஏன்?

பாரதிதாசனைப் பற்றி விருப்பு வெறுப்புடன் ஆய்வுகள் நடந்து வந்ததால் முழுமையான புதுமையான ஆய்வுக்காக பாவேந்தரிடம் கூடுதல் கவனம் செலுத்தினேன். பட்டுக்கோட்டையாரை விஞ்சிவிட்டதாக சில அறிவுஜிவிகள் தங்களுக்கு வேண்டியவர்களைக் கொண்டு எழுதியபோது பட்டுக்கோட்டையின் கம்பீரத்தை நெஞ்சு நிமிர்த்திச் சொன்னேன். தமிழக அரசியல் உலகில் தியாகத்தால் உயர்ந்தவரும் மகாத்மா காந்தியால் “தேசத்தின் சொத்து ஜீவா’ என்று பாராட்டப்பட்ட அமரர் ஜீவாவை தமிழர்கள் கண்டு கொள்ளாததால் அவரை அவரது படைப்புகள் மூலம் முன்னிறுத்தியுள்ளேன். என்னுடைய முன்னோர்களைச் சரியாக அடையாளம் காட்டுவதன் மூலம் என் எழுத்துப் பணியைத் தனித்துவமாக்கியுள்ளேன் என்பதை ஆன்றோர்கள் பலர் அறிவர்.

பாரதி காலமும்-கவிதையும் என்று மிகப்பெரிய ஆய்வு நூல் பணியில் ஈடுப்பட்டிருக்கிறீர்களாமே?

அது மிகப்பெரிய ஆய்வு பணி. என்னுடைய நூல்களில் இது தனித்து இருக்கும். பாரதியைப் பற்றி சிலம்பொலி செல்லப்பனார், பேராசிரியர் சாலமன் பாப்பையா போன்றவர்களிடம் விவாதித்து வருகின்றேன். பாரதி என் பார்வையில் நிச்சயம் புதுமைக்கவிஞனாய் மிளிர்வான் என்பதை நூல் பணி நிச்சயம் நிரூபிக்கும்.

தமிழ் இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது?

வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடுகளே இங்கு நடைமுறையில் இருக்கிறது. படைப்புகளைப் பார்க்காமல் படைப்பாளியைப் பற்றிய செய்திகளே முன்னிறுத்தப்படுகின்றன. எவன் சமூகத்திற்கு தேவையானவன் என்பதைவிட எவன் நமக்குச் சாதகமானவன் என்ற கருத்தோட்டமே இங்கு கால் பரப்பி சிரிக்கின்றது. அத்தனையும் தாண்டி நல்ல படைப்பாளிகளும் படைப்புகளும் நேசிக்கப்படுவதும் வாசிக்கப்படுவதும் ஆரோக்கியமான அம்சம்தானே!

சாகித்ய அகாடமி, ஞானபீடம் என்று ஏதேனும் லட்சியம் உண்டா?

இதெல்லாம் எனக்கு லட்சியமாகப்படவில்லை. இதுபோன்ற பரிசுகளும் விருதுகளும் படைப்பாளியின் தகுதிக்குத் தரப்படுகிறதா? அல்லது படைப்பாளிகளால் தட்டப்பட்டு தரப்படுகிறதா? என்பது ஆய்வுக்குரியது. இந்த நிறுவனங்களின் மேல் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் விமர்சனங்கள் வைக்கிறேன். பட்டுக்கோட்டையாரைப் பற்றியும் ஜீவாவைப் பற்றியும் அதிக நூல்கள் எழுதியது நான்தான். இவர்களைப்பற்றி நூல் எழுத வேறு ஒருவரைத் தெரிவு செய்கிறார்கள். அவர்கள் எனது நூல்களைப் பார்த்து எழுதி பயனடைகின்றனர். இப்படிப்பட்ட நிறுவனர்கள் கொடுக்கும் விருதுகள் எப்படி இருக்கும்? என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

சரி. வேறு ஏதேனும் பரிசுகள், விருதுகள்?

“உலகப்பன் காலமும் கவிதையும்’ என்ற பாரதிதாசனைப் பற்றி முழுமையான ஆய்வு நூலும், “பொன்விழா சுற்றுலா’ என்று சிறுவர் இலக்கிய நூலும் தமிழ் வளர்ச்சித்துறையின் முதல் பரிசினைப் பெற்றுள்ளது. “அறிவை வளர்க்கும் சிறுவர் பாடல்கள்’ என்ற நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் விருதும் -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் விருதும் “வேலுநாச்சியார்’ என்ற வரலாற்று புதினத்திற்கு பாரத வங்கியின் விருதும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பரிசும் பெற்றுள்ளதுடன், மூன்று மாணவிகள் என் நூல்களை ஆய்வு செய்து எம்.பிஃல் பட்டமும் பெற்றுள்ளனர். என்னுடைய கவிதை நூல்கள் அனைத்தையும் கும்பகோணம் கல்லூரி மாணவர் ஒருவர் ஆய்வு செய்து எம்.பிஃல் பட்டமும் பெற்றுள்ளார்.

வீரபாண்டிய கட்டபொம்மனைப்பற்றி நான் எழுதிய நூல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைப்பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழ் எழுத்தாளர் சங்கம் என்னுடைய “லெலின்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலுக்குப் பரிசு வழங்கி கெüரவித்துள்ளது. அதுமட்டுமின்றி மன்னார்குடியில் உள்ள “செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை’ எனது எழுத்துப் பணிகளைப் பாராட்டி “இலக்கியச் செம்மல்’ என்ற பட்டத்தையும் ஐம்பதினாயிரம் ரொக்கப்பரிசையும் தந்தது.

என்னுடைய வாசகர் ஒருவர் தனது குழந்தைக்கு எனது பெயரைச் சூட்டி மகிழ்கிறார். இன்னொரு வாசகர் தான் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு “ஜீவபாரதி இல்லம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். எல்லா விருதுகளையும் விட இவைகள் எல்லாம் என்னைப் பொறுத்தவரை மிகமிக உயர்ந்தது.

Posted in Author, Bharathi, Bharathidasan, Bharathy, Interview, Jeeva, Jeevabharadhi, Jeevabharadhy, Jeevabharathi, Jeevabharathy, Lenin, Literature, NCBH, Pasumpon, Pattukkottai, Pattukottai, Research, Writer | Leave a Comment »

Healthcare Advice – Fat content vs Thin weight: Exercise, Dietary Restrictions, Lifestyle choices

Posted by Snapjudge மேல் மே 31, 2007

ஆரோக்கியம்: பெண்ணுக்கு இளமை எதுவரை?

ரவிக்குமார்
Doctor Kausalya Nathan

என் பாதவிரல்களைப் பார்க்கமுடியாமல்

நானே எனக்கு எதிரியாய்…!

– இது தொந்தியால் ஏற்படும் பிரச்சினையைச் சொல்லும் ஒரு நொந்த கவிதை!

மாடிப்படியேறுவது தொடங்கி, உட்கார்ந்து, எழுந்து கொள்வதற்குக்கூட மூச்சு முட்டும். காரணம், நம் உடல் பருமன்.

உடல் பருமனுக்கான காரணங்கள், அதைத் தவிர்ப்பதற்கான விஷயங்கள் குறித்து இங்கே நமது கேள்விகளுக்கு நறுக்குத் தெறித்தாற்போல் பதில் கூறியிருப்பவர் டாக்டர் கௌசல்யா நாதன். சென்னையிலிருக்கும் அப்பல்லோ மற்றும் மலர் மருத்துவமனைகளில் வயது நிர்வாக மருத்துவ நிபுணரான டாக்டர் கௌசல்யா இனி உங்களுடன்…

Apollo Doctor Kowsalya

பொதுவாகவே நம் பெண்கள் பக்தியை வெளிப்படுத்துவதற்காக நாளுக்கொரு கடவுளுக்கு விரதம் இருப்பார்கள். விரதம் இல்லாத நாட்களிலும் சராசரி குடும்பத்தில் இருக்கும் பெண்கள் உணவு உண்பதில் ஆர்வம் காட்டாமல்தானே இருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்களுக்கு உடல் பருமன் ஏன்?

விரதம் இருக்கும் நாட்களிலும் பழங்கள் சாப்பிடலாம். பாயசம், சூப்.. என ஏதாவது குடிக்கலாம். எதுவுமே சாப்பிடாமல் இருந்தால், நம் உடலில் ஹார்மோன்களின் சுழற்சி சமச்சீராக இருக்காது. வயிற்றில் சுரக்கும் அமிலங்களால் பலவிதமான விளைவுகள் ஏற்படுகின்றன. 18 முதல் 40 வயது நிலைகளில் இருக்கும் பெண்கள் பெரும்பாலோர்க்கு உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது.

“உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு’ என்று ஒüவையார் கூறியது தெரிந்தோ என்னமோ.. இன்றைய இளம் பெண்கள் குண்டாகி விடக்கூடாது என்பதில் ரொம்பக் கவனமாக இருந்து, அநியாயத்திற்கு மெலிதான உடல்வாகுடன் இருப்பது சரியா?

குண்டாகி விடக்கூடாது என்பதில் விழிப்புணர்வுடன் இருப்பது ஆரோக்கியமான விஷயம்தான். அதற்காகப் பிறர் பரிதாபப்படும் அளவுக்கு மெலிந்து போய்விட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஒவ்வொருவரின் உயரத்திற்கு ஏற்ற எடையை, அந்தந்த வயது நிலைகளுக்கு ஏற்ப கடைப்பிடிக்க வேண்டும்.

ஒருபக்கம் வீட்டில் தயாராகும் உணவுகளைக் குண்டாகிவிடுவோம் என்ற காரணத்துக்காகத் தவிர்க்கும் இன்றைய இளம் பெண்கள், துரித வகை உணவுகள், ஏற்கனவே தயார் செய்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், பர்கர், பீட்ஸô, பாஸ்தா, குளிர்பானங்கள்… என நமது உணவுப் பழக்கத்தில் இல்லாத உணவுகளை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உணவுப் பழக்கங்களிலும் இன்றைய இளம் பெண்கள் தகுந்த விழிப்புணர்வைப் பெற்றிருக்க வேண்டும். இந்த மாதிரியான உணவுப் பழக்கங்கள் அவர்களை நிச்சயம் உடல் பருமன் பிரச்சினையில்தான் கொண்டு போய்விடும்.

உடல் பருமன் இந்தியாவில் மட்டுமே உள்ள பிரச்சினையா அல்லது உலகம் முழுவதும் உள்ள பிரச்சினையா?

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது. அமெரிக்காவில் 60 சதவீதத்தினருக்கு இந்த உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது. இந்தியாவில் 40 சதவிதத்தினருக்கு இருக்கிறது.

உடல் பருமனுக்கு தைராய்ட் பிரச்சினை முக்கியக் காரணமா?

அதுவும் ஒரு காரணம். தைராய்ட் பிரச்சினையைத் தவிர, பெண்களுக்கு வரும் பாலிசிஸ்டிக் ஓவரிஸ் நோய், மெனோபாஸ் காலங்களும் உடல் பருமன் நோய்க்கான இதர காரணங்கள்.

இது பரம்பரையாகத் தொடரும் நோயா?

பெரும்பாலும் உடல் பருமனுக்குப் பரம்பரை தொடர்பான காரணங்களும் இருக்கின்றன. இது தவிர, தூக்கமின்மை, ஒருவர் எந்தமாதிரியான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் முக்கியம். ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி செய்யும் பணியிலிருப்பவர்களுக்கும், ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த நோய் அதிகம் இருக்கிறது. இதுதவிர, மன அழுத்தம், பதட்டத்தில் இருப்பதும்கூட உடல் பருமனுக்குக் காரணமாகிறது.

இது வயதினால் வரும் கோளாறா?

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி பொதுவாக 40 வயதை நெருங்கும் போது கொஞ்சம் சதை போடும்தான். ஆண்களை விட பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் பருவம் முடியும்போது, சமச்சீரற்ற ஹார்மோன் பெருக்கத்தால் இடுப்பு, தொடை பகுதிகளில் சதை அதிகளவு போடும். வயதை ஒரு காரணமாகச் சொல்லலாமே தவிர அதுவே காரணமாகிவிடாது. சின்னச் சின்ன குழந்தைகளுக்குக்கூட உடல் பருமன் நோய் இருக்கிறது!

இந்த நோயிலிருந்து எப்படி ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்?

ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் 8-லிருந்து 10 டம்ளர் தண்ணீரை அருந்துங்கள். சில பெண்கள் இரவுப் பொழுதில் எதுவும் சாப்பிடாமல் தூங்குவார்கள். சில பேர் சாப்பாடு பாழாகிவிடக்கூடாதே என்பதற்காக, இருப்பதை எல்லாம் சாப்பிட்டு முடிப்பார்கள். பட்டினியாகப் படுப்பதும் தவறு. அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டுப் படுப்பதும் தவறு. ஒருசிலர் தலைவலி முதல் எந்தப் பிரச்சினை வந்தாலும் மருத்துவர்களை நாடாமல் அவர்களாகவே ஏதாவது மருந்து மாத்திரைகளை வாங்கிப் போட்டுக்கொண்டு சமாளித்து விடலாம் என்று நினைப்பார்கள். இது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.

அடிக்கடி இனிப்பு வகைகளைச் சாப்பிடுவது உடல் பருமனை வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பது மாதிரி அமைந்துவிடும். மாதத்திற்கு ஓரிரு முறை தரமான இனிப்பு வகைகளை, ஐஸ் க்ரீமை ருசிக்கலாம்.

காபி, டீக்கு சர்க்கரைப் போட்டு குடிப்பதைவிட வெல்லம் போட்டுக் குடியுங்கள். மது, சிகரெட் போன்ற எந்த கெட்ட பழக்கம் இருந்தாலும் அதை விட்டொழிப்பது நல்லது.

சுத்திகரிக்கப்பட்ட கார்போ-ஹைட்ரேட் உணவுகளான மைதா, கோதுமை, பாசுமதி அரிசி போன்றவற்றையும், நொறுக்குத் தீனிகளான நூடுல்ஸ், பீட்ஸô, சிப்ஸ் போன்றவற்றையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

சில ஹெல்த்-சென்டர்களில் உடல் பருமனைக் குறைக்க மூன்று வேளை உணவுக்குப் பதில், ஐந்து வேளை உணவு உண்ணும் முறையைப் பரிந்துரைப்பது சரியா?

மூன்று வேளை உணவு; இரண்டு வேளை ஸ்நாக்ஸ் என்னும் அடிப்படையில் அப்படி சொல்லியிருப்பார்கள். பொதுவாக 90 கிலோவிலிருந்து 130 கிலோ எடை வரை இருப்பவர்களுக்கென்று பலவிதமான குணப்படுத்தும் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதில் இதுவும் ஒன்று. நீங்கள் சாப்பிடும் உணவு குறித்த நேரத்தில் சக்தியாக மாற்றப்பட வேண்டும். உணவின் மூலமாகக் கிடைக்கும் கலோரி எரிக்கப்பட வேண்டும். உடல் உழைப்பு இல்லாத நேரத்தில் நம் உடலில் தங்கும் அதீத கொழுப்பு உடல் பருமனுக்குக் காரணமாகிறது.

பரதநாட்டியம் கற்றுக் கொண்டு பாதியில் நிறுத்தி விடுவது, விளையாட்டில் ஈடுபட்டு பாதியில் நிறுத்திவிடுவது போன்ற காரணத்தால் கூட உடல் குண்டாகிவிடுமா?

எட்டு இட்லி சாப்பிட்டுவிட்டு பரதநாட்டியம் ஆடியிருப்பீர்கள் அல்லது ஒரு கேம் டென்னிஸ் ஆடியிருப்பீர்கள். நாளடைவில் விளையாட்டை, நடனத்தை உங்களால் தொடரமுடியாத சூழ்நிலை ஏற்படலாம். அப்போது என்ன ஆகும்? பரதநாட்டியம் ஆட மாட்டீர்கள். ஆனால் வழக்கம் போல் எட்டு இட்லியைச் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவே மாட்டீர்கள். நீங்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற உணவைப் பழகிக் கொண்டீர்கள் என்றால், அதிலேயே உடல் பருமன் பிரச்சினைக்குப் பாதி விடை கிடைத்துவிடும்.

“பெண்ணுக்கு இளமை எதுவரை? பிள்ளைகள் இரண்டு பெறும் வரை..’ என்கிறது கண்ணதாசனின் ஒரு திரைப்பாடல். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இளமை மனதுக்கா, உடலுக்கா? என்பதை நாம் யோசிக்க வேண்டும். அகத்தின் அழகுதான் முகத்தில் தெரிகிறது. நம் மனதை எந்தளவுக்குப் பக்குவமாக வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம். வயதின் காரணமாகப் புற அழகில் எத்தனையோ மாறுதல்கள் நடக்கும்தான்.

30 வயதிலிருப்பவர்கள் 50 வயதானவர்களைப் போல் தளர்ந்து போய், சோகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது. 30 வயதிலிருப்பவர்கள் அந்த வயதுக்குரிய அழகுடனும், தெளிவுடனும் இருந்தாலே போதும். பெண்களுக்குத் தன்னம்பிக்கைதான் என்றைக்கும் அழகு.

Posted in Advice, Aerobic, choices, Cycling, Diet, Dietary, Doctor, Exercise, Fat, Female, Food, Girl, Habits, Health, Healthcare, Kid, Lady, Life, Lifestyle, Muscle, Run, She, Slim, Thin, Tips, Treadmill, weight, Weights, Women | 1 Comment »

Gowri Kirupanandhan: Interview – Telugu to Tamil Translations

Posted by Snapjudge மேல் மே 31, 2007

முகங்கள்: ஒரு நாளில்…எட்டுமணி நேரம்!

உலகிலேயே மிகக் கடினமான காரியம் என்னவென்று பள்ளி மாணவர்களிடம் கேட்டுப் பாருங்களேன், “”தமிழைத் தவறில்லாமல் எழுதுவதுதான்” என்பார்கள். எந்த “ர’ போடுவது, எந்த “‘ந போடுவது என்பதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் தகராறுதான். இத்தனைக்கும் மழலையர் வகுப்பில் இருந்து தமிழை ஒரு பாடமாகவேனும் 12 ஆம் வகுப்பு வரை படித்திருப்பார்கள்.அவர்களுக்கே இந்தக் கதி.

ஆனால் இருபத்தொரு வயது வரை தமிழே தெரியாமல் இருந்துவிட்டு அதன் பின் தமிழ் கற்று இப்போது தெலுங்கிலிருந்து தமிழில் புத்தகங்களை ஒருவர் மொழிபெயர்க்கிறார் என்றால் அது சாதாரண விஷயமா? ஆம். அந்தச் சாதனையாளர் கௌரி கிருபானந்தன்.

அவர் தெலுங்கில் இருந்து கிட்டத்தட்ட நாற்பது புத்தகங்களுக்கு மேல் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறுகதைகளைத் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். அந்தச் சாதனையாளரை சென்னை பெசண்ட் நகரில் அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். உங்கள் தாய்மொழி எது?

எனது தாய்மொழி தமிழ்தான். ஆனால் நான் வளர்ந்தது படித்தது எல்லாம் ஹைதராபாத்தில். சிறுவயதில் இருந்தே தெலுங்கு மீடியத்தில்தான் படித்தேன். எனக்கு சிறுவயதில் தமிழே தெரியாது. எனக்கு 21 வயதில் திருமணம் ஆனது. அதன்பின்தான் தமிழ் படிக்க ஆரம்பித்தேன்.

தமிழில் என்ன படித்தீர்கள்?

தமிழில் பெரும்பாலும் நான் படித்தது கதைகள், நாவல்களே. அசோகமித்திரன், தி.ஜானகிராமன், இந்திராபார்த்தசாரதி, சுஜாதா, சிவசங்கரி, ராஜம்கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை விழுந்து விழுந்து படிப்பேன். ஏற்கனவே தெலுங்கு நாவல்களைப் படிக்கும் பழக்கம் இருந்தது.

தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

என்னுடைய 35 வது வயதில் – கிட்டத்தட்ட தமிழ் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து 14 ஆண்டுகள் கழித்து – ஒரு தெலுங்கு மொழிபெயர்ப்பு நாவலைத் தமிழில் படித்தேன். அந்த நாவலை ஏற்கனவே நான் தெலுங்கில் படித்திருந்ததால் தமிழில் அதை எந்த அளவுக்குக் கொலை செய்திருந்தார்கள் என்பதை அந்த நாவலைப் படிக்கும் போது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். ஏன் நாமே அதைத் தவறில்லாமல் தமிழில் மொழிபெயர்க்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. முதன்முதலாக எண்டமூரி வீரேந்திரநாத்தின் “பந்தயம்’ என்ற சிறுகதையை மொழிபெயர்த்தேன். அது குங்குமச் சிமிழ் இதழில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்தது.

தொடர்ந்து மொழிபெயர்க்கக் காரணம்?

என்னுடைய ஈடுபாடு என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் என் அப்பாவும் என் கணவரும் உற்சாகப்படுத்தினார்கள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டதால் அவர்களை கவனிக்க அதிக சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லாமல் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக எனது புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட அல்லயன்ஸ் பப்ளிஷர்ஸ் எனக்குக் கிடைத்தது முக்கியக் காரணம். அவர்கள் கிடைக்கவில்லையென்றால் இத்தனை புத்தகங்களை மொழிபெயர்த்திருப்பேனோ என்னவோ?

தெலுங்கிலிருந்து யார் எழுதிய புத்தகங்களை அதிகமாக மொழிபெயர்த்துள்ளீர்கள்?

எண்டமூரி வீரேந்திரநாத் புத்தகத்தை அதிகமாக மொழிபெயர்த்துள்ளேன். 20 நாவல்களுக்கும் மேலாக மொழிபெயர்த்திருக்கிறேன். அதற்கடுத்து யத்தனபூடி சுலோசனா ராணியின் புத்தகங்கள், டி.காமேஸ்வரியின் புத்தகங்கள் என கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறேன்.

முறையாகத் தமிழ் படிக்கவில்லை என்கிறீர்கள். அப்படியிருக்க தமிழில் மொழிபெயர்ப்பது சிரமமாக இல்லையா?

ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. என் அப்பா எனக்குப் பெரிதும் உதவினார். நான் மொழிபெயர்த்து வைத்திருப்பதை எல்லாம் எடுத்து எத்தனை பக்கமானாலும் சரி பார்த்துத் தருவார். அவருக்கு தமிழ் நன்றாகத் தெரியும். இரண்டாவதாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் அமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். நிறைய ஒற்றுமைகள் இருக்கும். குறிப்பாக தெலுங்குக்கும் கன்னடத்திற்கும் நிறைய ஒற்றுமை இருக்கும். தமிழுக்கும் மலையாளத்திற்கும் நிறைய ஒற்றுமை இருக்கும். எனவே மொழிபெயர்க்கும் போது வாக்கிய அமைப்பில் சிக்கல் எதுவும் வரவில்லை. மேலும் நான் மொழிபெயர்ப்பது நன்றாக இருப்பதால்தானே எல்லாரும் என் மொழிபெயர்ப்பைப் படிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள் என்ற எண்ணம் இருந்தது. அது உற்சாகத்தை அதிகப்படுத்தியது. ஒரு நாளில் சுமார் எட்டு மணி நேரம் மொழிபெயர்ப்புக்காகச் செலவிடுகிறேன்.

தமிழில் இருந்து தெலுங்குக்கு மொழிபெயர்த்திருக்கிறீர்களா?

தமிழில் இருந்து சிறுகதைகளை தெலுங்கில் மொழிபெயர்த்திருக்கிறேன். அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி, சுஜாதா, அனுராதாரமணன், உஷாசுப்பிரமணியன், ஜெயகாந்தன் ஆகியோரின் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். யாருடைய கதையை மொழிபெயர்த்தாலும் அவர்களிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் மொழிபெயர்ப்பேன்.

உங்களுடைய பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் புத்தகமாக மட்டும்தான் வந்திருக்கிறதா? இல்லை இதழ்களிலும் வெளிவந்திருக்கிறதா?

என்னுடைய கதைகள் கணையாழி, மஞ்சரி, குங்குமம், மங்கையர் மலர், மஞ்சுளா ரமேஷின் சிநேகிதி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன.

மலையாள நாவல்களைப் படித்ததுண்டா? தமிழ், தெலுங்கு, மலையாள இலக்கியங்களில் என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்?

நான் சிறிதுகாலம் திருவனந்தபுரத்தில் இருந்திருக்கிறேன். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க நூலகத்தில் நிறைய புத்தகங்களை எடுத்துப் படித்திருக்கிறேன். எழுத்தாளர் நீல.பத்மனாபனின் அறிமுகம் அப்போது கிடைத்தது.

மலையாளத்தில் தகழி சிவசங்கரபிள்ளை, எம்.டி.வாசுதேவன் நாயர் ஆகியோரின் நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் படித்திருக்கிறேன். நான் படித்தவரை மலையாள நாவல்கள், கதைகள் ஆழமான வாசிப்புக்கு உகந்தவை. பொழுதுபோக்காக, மேம்போக்காக அவற்றைப் படிக்க முடியாது. தமிழ், தெலுங்கு நாவல்கள், கதைகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை என்னால் பார்க்க முடியவில்லை.

தெலுங்கிலிருந்து நீங்கள் சரித்திர நாவல்கள் எதையும் மொழிபெயர்த்துள்ளீர்களா?

இல்லை. நான் மொழிபெயர்த்தவை எல்லாம் சமூக நாவல்கள். குறிப்பாக பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டவை. அவர்களின் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் போன்றவையே நான் மொழிபெயர்த்த கதைகளின் கருப்பொருள்கள்.

தமிழில் இருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்தேன் என்கிறீர்கள். தமிழில் வட்டார வழக்கு நாவல்கள், கதைகள் அதிகம் எழுதப்பட்டுள்ளன. அவற்றை மொழிபெயர்க்கும் எண்ணம் உண்டா?

இல்லை. என்னால் அது முடியாது என்றே தோன்றுகிறது. எந்த மொழியிலிருந்து மொழிபெயர்த்தாலும் அந்த மொழியில் உள்ள வாசனை மாறாமல், சாயை கெடாமல் மொழிபெயர்க்க வேண்டும் என்பதே என் விருப்பம். வட்டாரத் தமிழில் எனக்கு அதிக பரிச்சயம் இல்லாததால் அதை மொழிபெயர்த்தால் நன்றாக வராது.

சமீபத்திய உங்கள் முயற்சி?

சுலோசனா ராணி தெலுங்கில் எழுதிய மீனா என்ற நாவலைத் தமிழில் “முள்பாதை’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன். அது ரொம்பவும் ஃபேமஸôன நாவல். சினிமாவாகக் கூட எடுத்தார்கள். இரண்டு பாகங்களாக உள்ள அந்த நாவலை மொழிபெயர்க்க ஒன்பது மாதங்கள் ஆனது.

Posted in Ambalam, Andhra, Andhra Pradesh, AP, Author, Books, Endamoori, Endamoori Virenderanath, Endamuri, Entamoori, Entamuri, Fiction, Gouri, Gowri, Gowri Kirupanandhan, Interview, Kameshwari, Kanaiaazhi, Kirubanandan, Kirupanandhan, Kirupananthan, Krupanandhan, Krupananthan, Kunguma Chimizh, Literature, Malayalam, Mangaiyar Malar, Novels, Story, Sulochana Rani, Tamil, Telugu, Translations, Translator, Veerenderanath, Veerendranath, Virenderanath, Virendranath, Writer | Leave a Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy – Madhulai (Pomegranate)

Posted by Snapjudge மேல் மே 31, 2007

மூலிகை மூலை: மாதுளையின் மகிமை!

விஜயராஜன்

நீண்ட சின்னதான இலைகளையும், சிவப்பு நிறப் பூக்களையும் பழத்தினுள் சாறுள்ள விதைகளையும் உடைய முத்துக்களையும் உடைய முள் உள்ள செடி இனமாகும். ஆனால் இது செடி வகையிலும் சேராமல், மர வகையிலும் சேராமல் நடுத்தர வகையாக வளரக் கூடியது. ஐந்து அடி வரை வளர்கின்றது. இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவக் குணம் உடையவை.

நோயை நீக்கவும், உடலைத் தேற்றவும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யவும் உபயோகப்படுத்தப்படுகின்றது. பழம் மிகவும் குளிர்ச்சியைத் தருகின்றது. இந்தியாவிலும், தமிழகம் எங்கும் பழத்திற்காகவே தோட்டங்கள் வளர்க்கப்படுகின்றன.

வேறு பெயர்கள்: பல சாடவம், பலபூரகம்

ஆங்கிலத்தில் : Punica granetum, Linn; Punicaceze

மருத்துவக் குணங்கள்: மாதுளை பூச்சாறு பதினைந்து மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டு கலந்து இருவேளை தொடர்ந்து குடித்து வர வாந்தி, மயக்கம், உடல் சூடு, மூலக் கடுப்பு, அடிக்கடி மலம் கழிக்கும் உணர்ச்சி, இரத்த மூலம் குணமாகும்.

மாதுளம் பிஞ்சு, கொழுந்து, நாவல் மரப்பட்டை அல்லது நாவல் கொழுந்து வகைக்கு கைப்பிடியளவு எடுத்து அரைத்து சாறு பிழிந்து சங்களவு 48 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர நீரிழிவு இருந்த இடம் தெரியாமல் குணமாகும். இதைத் தொடர்ந்து குடித்து வர, சீதபேதி, இரத்த மூலம், மது மேகம், வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

மாதுளம் பூச்சாறும், அருகம்புல் சாறும் வகைக்கு 10 மில்லியளவு வீதம் எடுத்துக் கலந்து 3 வேளையாகக் குடித்து வர மூக்கில் இருந்து இரத்தம் வடிதல் நிற்கும்.

மாதுளம் பூவை கைப்பிடியளவு எடுத்து அத்துடன் கசகசாவை கொஞ்சம் எடுத்து வறுத்துச் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து அத்துடன் பொடுதலை பூண்டுக்காய் 5-ம், சிறிது நன்னாரி வேர் இரண்டையும் அரைத்து பாக்களவு எடுத்து நன்கு புளித்த மோரில் கலந்து முதலில் உள்ள மாதுளம் பூ விழுதையும் சேர்த்துக் கலக்கி தொடர்ந்து 21 நாட்கள் காலையில் மட்டும் வெறும் வயிற்றில் குடித்துவர நீரிழிவு, சொருக்கு மூத்திரம் குணம் அடையும்.

மாதுளம் பூ உலர்ந்தது 10 கிராம், பட்டை 20 கிராம், 2 டம்ளர் நீரில் போட்டு சிறிது படிகாரம் சேர்த்துக் கொதிக்க வைத்து வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், தொண்டை ரணம், விழுங்க முடியாத வலி குணமாகும்.

மாதுளம் பிஞ்சை அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட உடனே பேதி நிற்கும். மாதுளம் பழச்சாற்றை புழு வெட்டு உள்ள இடத்தில் சூடேறத் தேய்க்க 3 நாளில் அரிப்பு நிற்கும். நாளடைவில் அந்த இடத்தில் முடியும் முளைக்கும்.

மாதுளம் பழத்தோலை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து அதேயளவு சுக்கு, மிளகு, சீரகம் பொடி செய்து கலந்து சிறிது நெய் அல்லது வெண்ணையோடு சாப்பிட காய்ச்சல் குணமாகும்.

மாதுளம் வேர்ப்பட்டை, செடிப்பட்டை விதை சம அளவாக எடுத்து இடித்து பொடி செய்து 3 கிராம் எடுத்து 2 வேளை வெந்நீரில் சாப்பிட்டு வர கர்ப்பாயாச நோய் தீர்ந்து பிள்ளைப் பேறு உண்டாகும். மாதுளம் பழச்சாறுடன் சிறிது கற்கண்டு கலந்து குடித்து வர உடல் சூடு தணிந்து குளிர்ச்சியடையும். மாதுளம் பழச்சாறு 100 மில்லியுடன் 20 மில்லி இஞ்சிச்சாறு, 30 மில்லி தேன் கலந்து 2 வேளையாக குடித்து வர ஈளை, இருமல் குணமாகும். மாதுளம் வித்தை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர மேகக் கடுப்பு நீங்கும்.

Posted in Antioxidants, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Health, Healthcare, Healthy, healthy snacks, Herbs, Madhulai, Madulai, Mathulai, Mooligai, Moolikai, Naturotherapy, Pomegranate, Punica granetum, Punicaceze | 1 Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid swelling in legs

Posted by Snapjudge மேல் மே 31, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் : “கால்’ வீக்கம் முழு நீக்கம்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே)

இருதய வியாதிக்குப் பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டவர் என் தம்பி. மேலும் சர்க்கரை வியாதிக்கு இன்சுலின் 2 வேளையும் போட்டுக்கொள்கிறார். இரண்டு பாதங்களிலும் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறது. நடக்கமுடியவில்லை. வயது 72. விரைவில் குணமடைய வைத்திய ஆலோசனை கூறவும்.

என்.ஆர்.சீனுவாசன், பண்ருட்டி.

கால் பகுதியில் சேரும் நீரின் அம்சங்களை ரத்தம் தன் அணுக்களின் சக்தியால் குழாய்களின் மூலம் எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஏற்படும் செயல்களின் தொய்வு இது போன்ற நீர்த்தேக்கத்தை கால்களில் ஏற்படுத்துகிறது. இருதயப் பகுதியில் ஏற்பட்டுள்ள பலவீனம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த செயற்கையான மருந்துகளின் உட்சேர்க்கை போன்றவற்றாலும் திசுக்களின் செயல்பாடுகளின் தொய்விற்கு வழி வகுக்கும்.

தசைகள், வியர்வைக் கோளங்கள், சிறுநீரகம், ரத்தஅணுக்கள், திசுக்கள் போன்ற பகுதிகள் வலுப்பெறும் மருந்துகளால் மட்டுமே உங்கள் தம்பிக்கு கால் வீக்கம் வராமல் பாதுகாக்க முடியும். நெருஞ்சி விதையை 10 கிராம் எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டிச் சாப்பிட்டால் கால் வீக்கம் வடியும்.

வாழைத் தண்டின் நீரைப் பருக நீர்ச்சுருக்கு, நீர்க்கல்லடைப்பு, சிறுநீரக அழற்சி, எலும்புருக்கி இவற்றில் குணம் கிட்டும். பசளைக் கீரை உணவில் அதிகம் சேர்க்க சிறுநீரை அதிகம் வெளியேறச் செய்யும். மலமிளக்கியாகவும் செயல்படும். பருப்புக் கீரையும் சாப்பிட நல்லது.

பழைய புழுங்கலரிசியை சிறிய அளவில் சாதமாக வடித்து அதில் பயித்தம் பருப்புக் கஞ்சியும், சுக்கு, மிளகு திப்பிலி ஆகியவற்றை வகைக்கு ஒரு கிராம் பொடித்துக் கலந்து, சிறிதளவு இந்துப்பு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட நல்ல உணவாகும். மதிய வேளையில் ஒரு கிளாஸ் (250-300 மிலி) கொள்ளு ரசத்துடன், சிட்டிகை திப்பிலி சூரணத்தைக் கலந்து வெதுவெதுப்பாகக் குடிக்கலாம். புளிப்பில்லாத மோர் அருந்த வீக்கம் வடியும். மதிய உணவாக கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட சுக்கா ரொட்டியும் வெந்த காய்களுடன் சாப்பிட நல்லது.

கால் வீங்கியுள்ள பகுதியில் எருக்கு இலை போட்டுக் காய்ச்சிய தண்ணீரை வெதுவெதுப்பாக விடவும். பஞ்சாம்ல தைலம் எனும் ஆயுர்வேத மூலிகைத் தைலத்தை காலை மாலை உணவிற்கு முன்பாக கால்களில் வீக்கம் உள்ள பகுதிகளில் தடவி அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊறி அதன் பின்னர் எருக்கு மூலிகைத் தண்ணீரால் கழுவி விடுவதும் நல்லதே.

முருங்கைப் பட்டையைப் பசு மூத்திரத்துடன் அரைத்து வீக்கம் வந்துள்ள பகுதியில் இரவில் பூச, வீக்கம் வலி குறைந்து விடும்.

தவிர்க்கப்பட வேண்டியவற்றில் புலால் உணவு, உலர்ந்த கறிகாய் எனக் கலக்கப்பட்ட சாதம், வெல்லம் கலந்த நீர், மாவுப் பண்டங்களாகிய இட்லி, தோசை போன்றவை, தயிர், அதிக உப்புக் கலந்த பொருட்கள், வெண்ணெய், நெய், புளிப்பான மதுவகை, எண்ணெய்யில் பொரித்தவை, எளிதில் ஜீரணிக்காததும், பழக்கமில்லாததும், நெஞ்செரிவு உண்டாக்கக்கூடியதுமான உணவு, பகல் தூக்கம், பெண் சேர்க்கை ஆகியவை முக்கியமானவை.

ஆயுர்வேத மருந்துகளில் பலாபுனர்நவாதி கஷாயமும், பிருகத்யாதி கஷாயமும், கோகிலாக்ஷம் எனும் கஷாயமும் சிறந்தவை. வகைக்கு 5 மிலி எடுத்து 60 மிலி சூடானதைத் தண்ணீருடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். நல்ல பசியிருந்தால், தசமூலஹரீதகீ லேஹ்யம் ஒரு ஸ்பூன் (5 கிராம்), காலை இரவு -உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாக நக்கிச் சாப்பிடவும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Foot, Health, Healthcare, insulin, legs, Medicines, Natural, Sugar, surgery, Swaminathan, Swell, swelling | Leave a Comment »

How to ensure quality participation & responsibility from MLAs and MPs?

Posted by Snapjudge மேல் மே 31, 2007

தேவை திரும்ப அழைக்கும் உரிமை!

பி. சக்திவேல்

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய பதவிக் காலத்தில் தவறிழைத்தாலோ அல்லது அவர்களது கடமையில் தவறினாலோ அவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி சமீபத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கூறியுள்ளார்.

இது மக்களாட்சி சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று எண்ணுகின்ற அனைவராலும் வரவேற்கக்கூடிய கருத்தாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமையானது ஒரு சில மக்களாட்சியின் சிறப்பு அம்சமாகும். மக்கள் பிரதிநிதிகள் சரிவரச் செயல்படவில்லை என்றால் அவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமை அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிரேக்க காலத்திலிருந்து இன்றுவரை பல நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது.

நம் நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. தேர்தல் நேரத்தில் வாக்குக் கேட்டு வரும் பிரதிநிதிகளை மீண்டும் அடுத்த தேர்தலில்தான் நம்மால் பார்க்க முடிகிறது!

இந்த ஐந்து ஆண்டுகள் அவர்கள் சரிவரச் செயல்படவில்லை என்றாலும், லஞ்சம் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டாலும் நாம் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைதான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். மேலும் நாடாளுமன்ற ஜனநாயகம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் திரும்ப அழைக்கும் உரிமையானது அவசியமானது. அத்துடன்அத்தியாவசியமான உரிமையும் ஆகும்.

மேலைநாடுகளில் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள சில மாகாணங்களிலும் சுவிட்சர்லாந்து, ஜமைக்கா, வெனிசுலா போன்ற நாடுகளிலும் இந்த உரிமையானது வாக்காளர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

2003-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு மாநில ஆளுநர் சரியாகச் செயல்படவில்லை என்கிற காரணத்திற்காக பதவியிலிருந்து மக்களால் திரும்ப அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்

இந்தியாவில் சமீபகாலமாக இந்தக் கோரிக்கை எழுவதற்கான காரணங்கள்:

நம் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லாதது; இந்த ஆண்டு தொடக்கத்தில் கேள்வி கேட்பதற்காக லஞ்சம் வாங்கியதற்காக 11 எம்.பி.க்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டது; போலி பாஸ்போர்ட் மோசடியில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது; அதிக அளவு குற்றப்பின்னணி உள்ள உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும் சில மாநில சட்டப்பேரவைகளில் இடம்பெற்ற சம்பவங்கள்.

தற்போதைய நாடாளுமன்றத்தில் கிரிமினல் மற்றும் குற்றப்பின்னணி உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 136. இவர்களில் சுமார் 26 பேர் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இந்தச் சூழ்நிலையில்தான் சரிவர செயல்படாத மற்றும் குற்றம்புரிந்த பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையானது மேலும் வலுப்பெற்றுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை நடவடிக்கைகள் 73 மணி நேரம் அலுவல் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. தனிநபர் விமர்சனம் மற்றும் முக்கியமில்லாத பிரச்னைகளுக்காக அமளியை உருவாக்குவதால் மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகள் விவாதிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

பட்டினியை எவ்வாறு நம் நாட்டிலிருந்து நீக்குவது என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் மே 5-ஆம் தேதி நடைபெற்றது. ஆரம்பத்தில் 6 உறுப்பினர்களோடு விவாதம் தொடங்கி மொத்தம் 12 உறுப்பினர்களோடு விவாதம் முடிவடைந்தது. இது மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் இரண்டு சதவீதம் மட்டுமே ஆகும். கலந்து கொண்ட உறுப்பினர்களில் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் ஆவர்.

அதேசமயம் மற்ற நேரங்களில் தங்களது கட்சித் தலைவரை கைது செய்தாலோ அல்லது அரசியல் லாபத்திற்காக ஏதேனும் பிரச்னைகளை எழுப்ப வேண்டும் எனில் அனைத்து உறுப்பினர்களும் ஆஜராகி விடுகின்றனர்.

எதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து தேர்தல் நடத்தி நாம் நம்முடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றோம்? மக்களுக்காக, மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடக்கூடிய உறுப்பினர்கள்தான் இன்றைய காலகட்டத்தில் நமக்குத் தேவை. அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் திரும்ப அழைக்கும் உரிமையானது மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் மூலமாக இந்திய குடிமக்களுக்கு வாக்குரிமையும் அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் சரிவர செயல்படாத மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடிய பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் அதிகாரத்தையும் அடிப்படை உரிமையாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு இதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இந்த உரிமை வழங்கப்படுவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புகள் உருவாகும். பிரதிநிதிகள் மக்களுக்குக் கட்டுப்பட்டவராகவும் மக்களுக்குப் பொறுப்பானவர்களாகவும் மாறக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளின் கண்ணியமும் பாதுகாக்கப்படும்.

இதன் மூலம் மக்களுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை மற்றும் அதிக அளவில் பங்கேற்கக்கூடிய நிலை உருவாகும். பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்பது நிரந்தரமல்ல; சிறப்பாகச் செயல்பட்டால்தான் பதவியில் நீடிக்க முடியும் என்ற சூழ்நிலையும் உருவாகும். இது நிச்சயமாக இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்தும்; மேலும் வலுப்படுத்தும்.

(கட்டுரையாளர்: இணைப்பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.)

Posted in Assembly, Attendance, Carrot, Corruption, Courts, Criminal, Democracy, discussion, Elections, Fire, Governor, Impeach, Impeachment, Incentives, Judge, Justice, kickbacks, Law, Lok Saba, Lok Sabha, LokSaba, LokSabha, Member, Minister, MLA, MP, Order, Performance, Politics, Polls, Quality, Removal, Representation, Stick, Suspension, Vote, voter | 1 Comment »