Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Services’

U Ra Varadarasan: Rural Economy – Agriculture, Industry, Services

Posted by Snapjudge மேல் ஜூன் 21, 2008

கிராமப்புற பொருளாதாரம் – சில கவலைகள்!

உ . ரா. வரதராசன்

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு துறைகளின் பங்கு (2001 – 02ஆம் ஆண்டில்) கீழ்வருமாறு அமைந்திருந்தது.

விவசாயம் – 15 சதவிகிதம், தொழில் – 31 சதவிகிதம், சேவைப்பணிகள் – 54 சதவிகிதம்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு 15 சதவிகித அளவிலேயே வேளாண்துறையின் பங்களிப்பு இருக்கிறது.

ஆனால் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் சற்றொப்ப 60 சதவிகிதத்தினர் வேளாண் துறையையே சார்ந்து வாழ்பவர்களாக உள்ளனர்.

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பான 1.30 லட்சம் கிலோ மீட்டரில் 17.59 சதவிகிதம் காடுகளாகும்.

இவை நீங்கலாக உள்ள நிலப்பரப்பில் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் நிலங்களில் பாசன வசதி அமையப்பெற்றது 48 சதவிகிதம் மட்டுமே; மீதமுள்ள 52 சதவிகித நிலங்கள் பாசன வசதியற்றவையாகும்.

1979 – 80இல் தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 48.1 சதவிகிதம் பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்தப்பட்ட நிலை இருந்தது.

இது 2005 – 06இல் 38.5 சதவிகிதமாகச் சுருங்கிவிட்டது என்பது அலட்சியப்படுத்த முடியாததோர் அபாய அறிவிப்பாகும்.

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் மொத்த நிலத்தில், பாசன வசதி கிடைக்கப்பெறும் நிலங்கள் சரிபாதிக்கும் குறைவு என்பது ஒன்று.

இந்தப் பாசன வசதியும், பருவமழையைப் பொறுத்ததுதான் என்பது இங்கே நினைவில் கொள்ள வேண்டிய மற்றொன்று.

பருவமழை பொய்க்கும்போது, தமிழ்நாடு வறட்சி நிலைமைகளைச் சந்திப்பது தொடர்ந்து நாம் அனுபவித்து வந்துள்ள துயரமான நிகழ்வுகள் என்பது மறக்கக்கூடியதல்ல.

தமிழ்நாட்டு விவசாயத்திற்குப் பாசன வசதியைப் பெருக்குவது என்பது, நமது அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை மிகவும் சிக்கலாக நீடித்து வருவதால், உடனடியாக சாத்தியப்பாடு இல்லாத விஷயம்.

எனினும், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவது, பருவமழை சராசரி அளவுக்கும் அதிகமாகப் பெய்யும் காலங்களில் மாநிலத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை மீறி நீர் வெளியேறிக் கடலில் கலப்பதைத் தடுப்பது, பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்படுவது, நீர் சேதாரத்தைத் தவிர்க்கும் வகையிலான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது, பயன்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றின் கொள்ளளவை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வேளாண்துறையைப் பலப்படுத்த உதவும்.

மாநிலத்தில் விவசாயிகள் கையில் உள்ள நில அளவு மற்றோர் அடிப்படையான அம்சமாகும்.

1995 – 96ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் 74.3 சதவிகிதம் உள்ள ஏழை – குறு விவசாயிகளிடத்தில் மொத்த விளைநிலத்தில் 30 சதவிகிதமே இருந்தது என்று அறியப்பட்டுள்ளது.

சிறிய – நடுத்தர – பெரும் விவசாயிகளின் சதவிகிதம் 10 மட்டுமே; ஆனால் அவர்கள் கையில் உள்ள நிலம் 46.1 சதவிகிதம் என்று அதே கணக்கீடு எடுத்துச் சொல்கிறது.

இந்தக் குறு விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிவருவதும், இதனால் தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடிகளில் ஒரு பெரும் பகுதி ஏழ்மையில் தள்ளப்படுவதும் தொடர்கிறது என்பதையும் அரசுத்தரப்பு ஆவணங்களே ஒப்புக்கொள்கின்றன.

இந்த நிலைமைகளைக் கணக்கில் கொண்டு எடுக்கப்பட வேண்டிய முன்னுரிமை நடவடிக்கை என்பது அடிப்படை நிலச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதாகும்.

தமிழ்நாட்டில் இன்றைய திமுக அரசு அறிவித்துள்ள இலவச நில விநியோகத் திட்டம் விரிவாக்கப்படுவதும், விரைவுபடுத்தப்படுவதும் அவசர அவசியத் தேவையாகும்.

இதில் செல்வாக்குப் படைத்த தனியாரிடத்தில் உள்ள புறம்போக்கு மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களைக் கண்டறிந்து கையகப்படுத்தும் முயற்சிகளில் அரசு இறங்க வேண்டியது உடனடிக் கடமையாக முன்நிற்கிறது.

இந்த இலவச நில விநியோகத் திட்டத்தையும் தாண்டிச் சென்று, தமிழகத்தின் கிராமப்புறங்களில் இன்று நிலவுகிற நிலக் குவியலைத் தகர்ப்பதற்கான நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டியவையாக உள்ளன.

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படும் நிலத்தின் அளவு 1979 – 80இல் 62.59 லட்சம் ஹெக்டேராக இருந்தது; இது 2005 – 06இல் 50.10 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது.

சதவிகிதக் கணக்கில் 48.56}லிருந்து 38.46ஆக இதே காலகட்டத்தில் சுருங்கியுள்ளது. இந்தப் பின்புலத்தில், சிறப்புப் பொருளாதார மண்டலங்களும், “ரியல் எஸ்டேட்’ கட்டுமானத் துறையில் வேகவேகமாக நுழைய அனுமதிக்கப்படும் வெளிநாட்டு – உள்நாட்டுப் பெரு முதலாளிகளின் நிறுவனங்களும், சாகுபடிக்கு உட்படுத்தப்படும் நிலத்தின் அளவை மேலும் வெட்டிச் சுருக்க அனுமதிப்பது. கிராமப்புறங்களில் ஒரு ஆபத்தான சூழலை உருவாக்கிவிடும்.

இதே போக்கு இந்தியா முழுவதிலும் நிகழ்ந்து வருவது கண்கூடு. எனவே இந்த நிகழ்ச்சிப் போக்கைத் தடுத்து நிறுத்தாவிட்டால், 100 கோடியைத் தாண்டிவிட்ட இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

பொருளாதார வளர்ச்சியில் வேளாண்துறையின் பங்கு குறைந்து வருவதையடுத்து, இதைச் சார்ந்து நிற்கும் சற்றொப்ப 60 சதவிகித மக்களைப் படிப்படியாக வேறு துறைகளுக்கு மாற்றுவது என்பது தவிர்க்க முடியாதது.

ஆனால் இன்று இந்தக் கணிசமான மக்கள் பகுதியினருக்குப் பயனுள்ள – வருவாய் ஈட்டத் தகுந்த – மாற்று வேலைகள் பெற்றுத் தருவது என்பது சுலபமல்ல.

எனவே கிராமப்புறங்களிலேயே வேளாண்துறையைச் சார்ந்த இதர தொழில்களை வளர்ப்பதில் ஒரு திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்படுவது இன்றியமையாததாகும்.

தமிழக கிராமப் பொருளாதாரம் தொடர்பான இந்தக் கவலைக்குரிய அம்சங்களில் மாநில அரசு உடனடியாகக் கவனம் செலுத்துமா என்பதே கேள்வி!

(கட்டுரையாளர்: தேசியச் செயலர், சி.ஐ.டி.யூ.)

Posted in Economy, Finance, Govt, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

State of local bodies – Functioning of elected officials in Civic, Panchayats

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 7, 2008

களையப்பட வேண்டிய களைகள்!

ஜி. மீனாட்சி

கோவை மாவட்டத்திலுள்ள குக்கிராமம் ஒன்றுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் தீவிர வரி வசூல் முகாம் நடந்து கொண்டிருந்தது.

கால அவகாசத்தைக் கடந்தும், பல தடவை நோட்டீஸ் அனுப்பியும், இறுதி எச்சரிக்கை விடுத்தும் சரிப்பட்டு வராத நிலையில் கடைசி முயற்சியாக வரி செலுத்தாதவர்களின் இல்லத்திற்குச் சென்று குடிநீர்க் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார் அந்த ஊரின் பெண் பஞ்சாயத்துத் தலைவி.

“”அரசுக்குச் சேர வேண்டிய வரியை வசூலிப்பதில் எத்தனை கஷ்டம் பார்த்தீர்களா? அரசு அதிகாரிகள்கூட இதற்கு ஒத்துழைப்பதில்லை. பல முறை அழைத்த பிறகுதான் வருகிறார்கள். இந்நிலையில், வரி செலுத்தாதவர்களின் கோபம் முழுவதும் பஞ்சாயத்துத் தலைவர்களின் மீதுதான் பாய்கிறது…” என்றார் வருத்தத்துடன்.

அவரது வார்த்தைகளை நிரூபிப்பதுபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு பெண் ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பினர் சென்னையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்துள்ளனர்.

சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், ஊராட்சித் துணைத் தலைவர்களும் தங்களை சுதந்திரமாகச் செயல்பட விடுவதில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

சட்டப் பேரவைத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அமலுக்கு வராத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய விஷயம். இந்த இடஒதுக்கீடு தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதும் பாராட்டுக்குரியது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பெண் பிரதிநிதிகள், சுதந்திரமாகச் செயல்பட முடிகிறதா என்பது கேள்விக்குறியே.

பல ஊராட்சிகளில், ஊராட்சிக் குழுக் கூட்டம் நடக்கும்போது பெண் உறுப்பினர்கள் பங்கேற்பதில்லை என்பதே உண்மை. அவர்களுக்குப் பதிலாக, அவர்களின் கணவன்மார்களோ அல்லது குடும்பத்து ஆண்களோ கூட்டத்துக்கு வருவதாக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி ஒருவரே வருத்தம் தெரிவித்திருந்தார்.

படிப்பறிவற்ற, கிராமத்து, தலித் பெண்களில் பலர் வெற்றி பெற்றும், தங்களின் உரிமைகளை உணர முடியாதவர்களாகவே உள்ளனர். படித்த பெண்களில் பலர் கிராம மக்களுக்குச் சேவை செய்யும் உன்னத உணர்வுடன், உள்ளாட்சி அமைப்புகளில் முக்கியப் பதவி வகித்து வருகின்றனர். ஆனால் அந்தப் பெண் தலைவிகள், தங்கள் பணியை முழுமையாக நிறைவேற்ற முடியாதபடி ஏகப்பட்ட குறுக்கீடுகள்.

எல்லாவற்றையும் திறமையாகச் சமாளித்து மக்கள் பணிகளை நிறைவேற்றும்போது, நிதிப் பற்றாக்குறை, சக ஊழியர்களின் ஒத்துழைப்பின்மை என்று தொடரும் நெருக்குதல்கள்.

பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து உள்ளாட்சி அமைப்புகளில் உரிய முக்கியத்துவம் அளித்ததுடன் அரசின் பணி முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. உள்ளாட்சிப் பெண் பிரதிநிதிகளுக்கு, உள்ளாட்சி நிர்வாகம் குறித்து தேர்ந்த நிபுணர்களைக் கொண்டு அவ்வப்போது பயிற்சி அளித்தல், அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தல், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி கருத்துப் பரிமாற்றம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டங்களில் ஈடுபட வழிவகை செய்தல் போன்றவற்றில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். முக்கியமாக, நிதியைக் கையாளும் முறை குறித்தும் பயிற்சியளிக்க வேண்டும்.

சொந்த ஊரில் பஞ்சாயத்துத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டும், மக்கள் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் கைகள் கட்டப்பட்டுத் தவிக்கும் பெண்கள் ஏராளம். எல்லாவற்றையும் மீறி, ஜாதி, மத, கட்சி வேறுபாடுகளைக் கடந்து, நேர்மையாய் பணியாற்றும் பெண் தலைவிகளுக்கு கொலை மிரட்டல், அச்சுறுத்தல் என்று தொடர்கிறது வன்முறை.

இந்திய அரசியல் அமைப்புச் சட்ட 73-ம் திருத்தத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டு முன்னேற்றத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பொருளாதார மேம்பாடு, சுகாதாரம் போன்றவற்றை ஊராட்சிகளில் ஏற்படுத்தும் வகையில் ஊராட்சிகளுக்கு முழு சுதந்திரமும், அதிகாரமும் அளிக்க அரசமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவற்றை குறைவின்றி நிறைவேற்றும் பொறுப்பும், கடமையும் ஊராட்சித் தலைவிகளுக்கு உள்ளது. அவர்கள் பணியை தடையின்றி நிறைவேற்ற அரசு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினர் ஒத்துழைப்புத் தரவேண்டும்.

பல கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்களை சுதந்திரமாக நடத்தும் உரிமைகூட ஊராட்சித் தலைவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. சொந்த கிராமத்தின் அத்தியாவசியத் தேவைகளை நன்கு அறிந்தவர்கள், ஊராட்சிப் பிரதிநிதிகள் மட்டுமே. ஆனால் கிராம சபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படவேண்டிய தீர்மானங்கள் என்னென்ன என்பது குறித்து முன்கூட்டியே ஆட்சியர் அலுவலகமே ஆணை பிறப்பிக்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இதுபோன்ற பல காரணங்களால், பதவியில் இருந்தும் கடமை ஆற்ற முடியாத நிலைக்கு ஊராட்சித் தலைவிகள் தள்ளப்படுகிறார்கள்.

அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் போன்றவற்றில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வைத்ததுதான் சட்டம். காவல் துறையும் அவர்கள் பின்னே பக்கபலமாய் நிற்கிறது. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் ஆதரவுக் கரம் நீட்டுகிறார்கள். தமிழகத்தில் இன்னும் அந்த நிலை வரவில்லை.

குறைகள் களையப்பட்டு, சுதந்திரமாக, நேர்மையாகச் செயல்படும் வகையில் ஊராட்சிப் பெண் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரமும், அங்கீகாரமும் வழங்கினால் மட்டுமே ஊராட்சியை உவகை மிக்க ஆட்சியாக மாற்ற முடியும்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »