Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Villages’

C Vezhavendhan: The need for quality Instructors – Teacher Training Schools

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

தேவை தரமான ஆசிரியர்களின் சேவை

சி. வேழவேந்தன்

தமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்கள் உள்பட அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை சொற்ப அளவில் மட்டுமே இருந்தன.

எனவே, அப்போது பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகள் மட்டுமே ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேரும் நிலை இருந்தது.

மருத்துவம், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து அங்கே இடம் கிடைக்காத மாணவர்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருவது வழக்கம்.

ஆனால், இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 18 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை அரசு மேலும் குறைத்துள்ளது.

இதன் மூலம் விண்ணப்பித்த அனைவருக்கும் (குறைந்த மதிப்பெண்கள் பெற்றால்கூட) பொறியியல் கல்லூரிகளில் அரசின் கலந்தாய்வு மூலம் இடம் கிடைக்கும் நிலை உள்ளது.

மேலும், சில ஆண்டுகளுக்கு முன்னர் சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் (ரூ. 2 லட்சம் வரை) சீட் கிடைக்தாத நிலையே இருந்துவந்தது.

ஆனால், தற்போது தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதன்மூலம் ஆண்டுதோறும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் உள்ள 40 ஆயிரம் இடங்களில் 25 ஆயிரம் இடங்களை அரசு கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது.

மீதம் உள்ள 15 ஆயிரம் இடங்களுக்கு தனியார் பள்ளி நிர்வாகத்தினர் நேரடியாக மாணவர்களைச் சேர்த்து வருகின்றனர்.

அரசின் கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர் அரசு ஒதுக்கிய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.

போட்டி அதிகமாக இருந்தபோது தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள இடங்கள் தானாக நிரம்பின.

ஆனால் இன்று தனியார் பொறியியல் கல்லூரிகளைப் போலவே, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவிற்கே மாணவர்கள் இல்லாமல் இடத்தை காலியாக வைத்துள்ளன.

எனவே தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முன்னர் ரூ. 2 லட்சத்திற்கு விலை போன இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கான இடம், தற்போது ஆண்டுக்கு ரூ. 35 ஆயிரம் என குறைந்துள்ளது.

இதையும் தவணை முறையில் கொடுக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அரசு சார்பில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வுக்கு 70 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த ஆண்டு 40 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மாணவர்கள் பிரிவில் ஒரு குறிப்பிட்ட இடஒதுக்கீட்டில் குறைந்த பட்ச கட்-ஆப் மதிப்பெண் 470.

இதேபோல, மாணவிகள் பொதுப் பிரிவில் அறிவியல் பிரிவுக்கு 835, கலைப் பிரிவுக்கு 952, தொழில் பிரிவுக்கு 971 என கட்-ஆப் மதிப்பெண் இருந்தது.

பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 470 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவர் அரசு ஒதுக்கீட்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்வதற்கான வாய்ப்பை கடந்த ஆண்டு பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 30 ஆயிரம் பேர் குறைவாகவே கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தரமான ஆசிரியர்களால்தான் தரமான மாணவர்களை உருவாக்க முடியும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆங்கில மோகத்தாலும், தரமான கல்வி கிடைக்குமா என்ற சந்தேகத்தாலும் தமிழகத்தில் மொத்தம் உள்ள 34,208 அரசு, தனியார் தொடக்கப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்துவருகிறது.

ஆனால், அரசிடம் அனுமதிபெற்று இயங்கிவரும் 4622 நர்சரி, பிரைமரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் தொடர்ந்து ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.

300, 400 மாணவர்கள் படித்துவந்த சில தமிழ்வழிப் பள்ளிகள் தற்போது ஒரு மாணவர் கூட இல்லாமல் மூடப்பட்டுவரும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத் தடுக்க ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் பள்ளிகளுக்கு இணையாக தமிழ் வழிப் பள்ளிகளிலும் கற்றல் முறைகளை மாற்றவேண்டும். அதோடு தரமான ஆசிரியர்களின் சேவையும் இன்றைய முக்கியத் தேவையாக உள்ளது.

மேலும், நமது அண்டை மாநிலமான புதுச்சேரியைப்போல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை அரசு தொடங்கி ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஆசிரியர்களை அந்த வகுப்புகளுக்கு நியமிக்கலாம்.

இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதைத் தடுக்க முடியும்.

மேலும், பணக்காரர் வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைத்துவரும் தரமான கல்வி சாமானிய ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்யலாம்.

இன்றைய போட்டி நிறைந்த உலகில் ஆங்கில அறிவும், கணினி அறிவும் அவசியம் என்பதால் அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும்.

Posted in Economy, Finance, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

U Ra Varadarasan: Rural Economy – Agriculture, Industry, Services

Posted by Snapjudge மேல் ஜூன் 21, 2008

கிராமப்புற பொருளாதாரம் – சில கவலைகள்!

உ . ரா. வரதராசன்

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு துறைகளின் பங்கு (2001 – 02ஆம் ஆண்டில்) கீழ்வருமாறு அமைந்திருந்தது.

விவசாயம் – 15 சதவிகிதம், தொழில் – 31 சதவிகிதம், சேவைப்பணிகள் – 54 சதவிகிதம்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு 15 சதவிகித அளவிலேயே வேளாண்துறையின் பங்களிப்பு இருக்கிறது.

ஆனால் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் சற்றொப்ப 60 சதவிகிதத்தினர் வேளாண் துறையையே சார்ந்து வாழ்பவர்களாக உள்ளனர்.

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பான 1.30 லட்சம் கிலோ மீட்டரில் 17.59 சதவிகிதம் காடுகளாகும்.

இவை நீங்கலாக உள்ள நிலப்பரப்பில் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் நிலங்களில் பாசன வசதி அமையப்பெற்றது 48 சதவிகிதம் மட்டுமே; மீதமுள்ள 52 சதவிகித நிலங்கள் பாசன வசதியற்றவையாகும்.

1979 – 80இல் தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 48.1 சதவிகிதம் பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்தப்பட்ட நிலை இருந்தது.

இது 2005 – 06இல் 38.5 சதவிகிதமாகச் சுருங்கிவிட்டது என்பது அலட்சியப்படுத்த முடியாததோர் அபாய அறிவிப்பாகும்.

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் மொத்த நிலத்தில், பாசன வசதி கிடைக்கப்பெறும் நிலங்கள் சரிபாதிக்கும் குறைவு என்பது ஒன்று.

இந்தப் பாசன வசதியும், பருவமழையைப் பொறுத்ததுதான் என்பது இங்கே நினைவில் கொள்ள வேண்டிய மற்றொன்று.

பருவமழை பொய்க்கும்போது, தமிழ்நாடு வறட்சி நிலைமைகளைச் சந்திப்பது தொடர்ந்து நாம் அனுபவித்து வந்துள்ள துயரமான நிகழ்வுகள் என்பது மறக்கக்கூடியதல்ல.

தமிழ்நாட்டு விவசாயத்திற்குப் பாசன வசதியைப் பெருக்குவது என்பது, நமது அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை மிகவும் சிக்கலாக நீடித்து வருவதால், உடனடியாக சாத்தியப்பாடு இல்லாத விஷயம்.

எனினும், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவது, பருவமழை சராசரி அளவுக்கும் அதிகமாகப் பெய்யும் காலங்களில் மாநிலத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை மீறி நீர் வெளியேறிக் கடலில் கலப்பதைத் தடுப்பது, பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்படுவது, நீர் சேதாரத்தைத் தவிர்க்கும் வகையிலான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது, பயன்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றின் கொள்ளளவை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வேளாண்துறையைப் பலப்படுத்த உதவும்.

மாநிலத்தில் விவசாயிகள் கையில் உள்ள நில அளவு மற்றோர் அடிப்படையான அம்சமாகும்.

1995 – 96ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் 74.3 சதவிகிதம் உள்ள ஏழை – குறு விவசாயிகளிடத்தில் மொத்த விளைநிலத்தில் 30 சதவிகிதமே இருந்தது என்று அறியப்பட்டுள்ளது.

சிறிய – நடுத்தர – பெரும் விவசாயிகளின் சதவிகிதம் 10 மட்டுமே; ஆனால் அவர்கள் கையில் உள்ள நிலம் 46.1 சதவிகிதம் என்று அதே கணக்கீடு எடுத்துச் சொல்கிறது.

இந்தக் குறு விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிவருவதும், இதனால் தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடிகளில் ஒரு பெரும் பகுதி ஏழ்மையில் தள்ளப்படுவதும் தொடர்கிறது என்பதையும் அரசுத்தரப்பு ஆவணங்களே ஒப்புக்கொள்கின்றன.

இந்த நிலைமைகளைக் கணக்கில் கொண்டு எடுக்கப்பட வேண்டிய முன்னுரிமை நடவடிக்கை என்பது அடிப்படை நிலச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதாகும்.

தமிழ்நாட்டில் இன்றைய திமுக அரசு அறிவித்துள்ள இலவச நில விநியோகத் திட்டம் விரிவாக்கப்படுவதும், விரைவுபடுத்தப்படுவதும் அவசர அவசியத் தேவையாகும்.

இதில் செல்வாக்குப் படைத்த தனியாரிடத்தில் உள்ள புறம்போக்கு மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களைக் கண்டறிந்து கையகப்படுத்தும் முயற்சிகளில் அரசு இறங்க வேண்டியது உடனடிக் கடமையாக முன்நிற்கிறது.

இந்த இலவச நில விநியோகத் திட்டத்தையும் தாண்டிச் சென்று, தமிழகத்தின் கிராமப்புறங்களில் இன்று நிலவுகிற நிலக் குவியலைத் தகர்ப்பதற்கான நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டியவையாக உள்ளன.

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படும் நிலத்தின் அளவு 1979 – 80இல் 62.59 லட்சம் ஹெக்டேராக இருந்தது; இது 2005 – 06இல் 50.10 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது.

சதவிகிதக் கணக்கில் 48.56}லிருந்து 38.46ஆக இதே காலகட்டத்தில் சுருங்கியுள்ளது. இந்தப் பின்புலத்தில், சிறப்புப் பொருளாதார மண்டலங்களும், “ரியல் எஸ்டேட்’ கட்டுமானத் துறையில் வேகவேகமாக நுழைய அனுமதிக்கப்படும் வெளிநாட்டு – உள்நாட்டுப் பெரு முதலாளிகளின் நிறுவனங்களும், சாகுபடிக்கு உட்படுத்தப்படும் நிலத்தின் அளவை மேலும் வெட்டிச் சுருக்க அனுமதிப்பது. கிராமப்புறங்களில் ஒரு ஆபத்தான சூழலை உருவாக்கிவிடும்.

இதே போக்கு இந்தியா முழுவதிலும் நிகழ்ந்து வருவது கண்கூடு. எனவே இந்த நிகழ்ச்சிப் போக்கைத் தடுத்து நிறுத்தாவிட்டால், 100 கோடியைத் தாண்டிவிட்ட இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

பொருளாதார வளர்ச்சியில் வேளாண்துறையின் பங்கு குறைந்து வருவதையடுத்து, இதைச் சார்ந்து நிற்கும் சற்றொப்ப 60 சதவிகித மக்களைப் படிப்படியாக வேறு துறைகளுக்கு மாற்றுவது என்பது தவிர்க்க முடியாதது.

ஆனால் இன்று இந்தக் கணிசமான மக்கள் பகுதியினருக்குப் பயனுள்ள – வருவாய் ஈட்டத் தகுந்த – மாற்று வேலைகள் பெற்றுத் தருவது என்பது சுலபமல்ல.

எனவே கிராமப்புறங்களிலேயே வேளாண்துறையைச் சார்ந்த இதர தொழில்களை வளர்ப்பதில் ஒரு திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்படுவது இன்றியமையாததாகும்.

தமிழக கிராமப் பொருளாதாரம் தொடர்பான இந்தக் கவலைக்குரிய அம்சங்களில் மாநில அரசு உடனடியாகக் கவனம் செலுத்துமா என்பதே கேள்வி!

(கட்டுரையாளர்: தேசியச் செயலர், சி.ஐ.டி.யூ.)

Posted in Economy, Finance, Govt, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »