Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Barathi’ Category

Bharati in Puthiya Kalacharam

Posted by Snapjudge மேல் திசெம்பர் 18, 2006

ஜூனியர் விகடனில் ரவிக்குமார் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து நீங்கள் (ஹரியண்ணா) எழுதியிருந்ததைப் படித்தேன். ரவிக்குமார் கட்டுரையை படிக்க வில்லை, ஆதலால் என்னவென்று புரியவில்லை. இதோ ‘புதிய கலாச்சாரம்’ இதழில் வந்திருக்கும் ஒரு கட்டுரை

அன்புடன்
சாபு
துபாய்
—————-
கட்டபொம்மனைப் பாடாத பாரதி

பாரதியின் பார்ப்பனக் கண்ணோட்டம் பற்றி நாம் விமர்சிக்கும் போதெல்லாம், ‘பாரதியை அவனது வரலாற்றுப் பின்புலத்தில் ¨¨த்துப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்வது வறட்டுவாதம், பார்ப்பன துவேஷம்” என்று கூறி விமர்சிப்போர் மீதே முத்திரை குத்துவார்கள் பாரதி ஆய்வாளர்கள்.

சரி வரலற்றுப் பின்புலத்தில் வைத்தே பரிசிலிப்போம். பாரதி சத்ரபதி சிவாஜியைப் பாடியிருக்கிறான், கோகலே தாதாபாய் நவ்ரோஜி, திலகர், லாலா லஜபதிராய் போன்ற வட இந்திய தலைவர்களப் பற்றி பாடியிருக்கிறார். இத்தாலி, பெல்ஜியம்,ரசிய்யா வைப்பற்றி எல்லாம் பாடியிருக்கிறார். காக்கை,குயில்,கிளி மரம் மட்டை அனைத்தையும் பாடியிருக்கிறார்..

ஆனால் அவருடைய பக்கத்து ஊரான பாஞ்சாலக்குறிச்சியில் பிறந்த கட்டபொம்மனை பற்றி ஒரு வரி கூடப் பாடியதில்லை.சிவகங்கைச் சீமையின் சின்ன மருதுவைப் பற்றியும் பாடியதில்லை. பாரதியைப் போன்று இலக்கிய அறிவோ,உலக ஞானமோ இல்லாத அப்பகுதி மக்கள் கட்ட பொம்மனைப் பற்றியும் மருதுவைப் பற்றியும் ஏராளமான கதைப்பாடல்களையும் நாடகங்களையும் உருவாக்கி நிகழ்த்தியும் வந்திருக்கிறார்கள். ஆனால் பாரதி மட்டும் பாடதது ஏன்?

ஒரு வேளை இதையும் நாம் பாரதியின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும் போலும்.

“எட்டப்பனின் ஊரான எட்டயபுரத்தில் பிறந்து எட்டப்பனின் வாரிசான மண்ணுக்குத் தோழனாக இருந்து அவனை அண்டிப்பிழைத்த ஒரு கவிஞன் கட்டபொம்மனைப் பற்றி எப்படி எழுத முடியும்? என்று கூட மேற்படி ஆய்வாளர்கள் நம்மிடம் கேள்வி எழுப்பக் கூடும்.

“நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி, அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்” அடேயப்பா ஈட்டி போல் பாயும் சொற்கள் பக்கத்து ஊரில் தூக்கில் தொங்கிய விடுதலை வீரனைப் பற்றி எழுத முடியாத தன்னுடைய நேர்மைத் திறத்தைப் பற்றி பாரதி ஏதாவது சொல்லியிருக்கிறாரா? அல்லது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி பஜனை மண்டலியினர் தம்முடைய ஆய்வுக்ளில் இதைப்பற்றி ஏதாவது எழுதியிருகிறார்களா?

வே.மணிக்கம் எழுதிய ‘தானபதிப்பிள்ளை வரலாறு” என்ற நூலுக்கான முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி.

“கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டயபுரத்தைச் சேர்ந்த பாரதி, கட்டபொம்மனைபற்றியோ பாஞ்சாலக்குறிச்சிப் பற்றியோ தம் எழுத்துக்களில் எங்கும் சுட்டாதது குறிப்பிடத்தகுந்தது. புதுச்சேரியிலிருந்து மீண்டு மிகுந்த நலிவுற்று பொருள் ஆதரவு வேண்டி எட்டயபுரம் மன்னருக்கு 1909 ல் ஓலைத்தூக்கும் சீட்டுக்கவியும் எழுதி ஏமாற்றமுற்ற நிலையில் ஸ்வாமி தீட்சிதர் என்பவர் எட்டயபுரம் ஜமீன் பற்றி எழுதிய “விம்சமணி தீபிகை'(1878) நூலை செம்மைபடுத்தி தர பாரதி முன் வந்தார். எட்டயபுரம் மன்னர் இந்த வேண்டுகோளையும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் கட்டபொம்மனைப்பற்றி எதிர்மறையாக எழுதும் தீயூழைப் பாரதி தவிர்க்க முடிந்ததே என்று நாம் ஆறுதல் அடையலாம்

அதாவது எட்டயபுரம் மன்னர் மட்டும் காசு கொடுத்திருந்தால் கட்டபொம்மனை அவதூறு செய்து எழுதவும் பாரதி தயங்கியிருக்க மாட்டார் என்கிறார் வெங்கடாசலபதி.அத்தகைய தீயூழிலிருந்து பரதியைக் காப்பாற்றிய அந்த எட்டப்பன் பரம்பரைக்கே பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள் பாரதி பக்தர்கள்.

புதிய கலாச்சாரம்
நவம்பர் 2006
ஆசிரியர் வி. வல்லபேசன்
puthiyakalacharam@rediffmail.com

————————————————————————————————-
முழுமையான சுதந்திரக் கவி

கா. செல்லப்பன்

“சுதந்திரம் நமது பிறப்புரிமை; அதை நாம் அடைந்தே தீருவோம்’ என்று சூளுரைத்தார் பாலகங்காதர திலகர். அதை அடைந்துவிட்டதாகவே, அன்றே ஆனந்தகூத்தாடியவர் தீர்க்கதரிசனக் கவி பாரதியார். “சுதந்திரத்தை மற்றவர்கள் தந்து பெற்றுக் கொள்ளப் போவதில்லை. அதை எப்போது வேண்டுமோ அப்போது நானே எடுத்துக் கொள்வேன்’ என்று ஓர் ஐரிஷ் விடுதலைப் போராட்ட வீரர் கூறினார்.

ஒவ்வொரு மனிதனும் சுதந்திரத்தைத் தன் ஆத்மாவின் உண்மையான நிலை என உணரும்போது, “விட்டு விடுதலையாகி’ விடுகிறோம் என்று பாரதியார் கருதினார். அதேபோல, ஒரு தேசம் தன்னை உணர்ந்து கொள்ளும்போது, அது அகவிழிப்பு பெற்று ஆற்றலுடன் எழுச்சி பெறும்போது, உண்மையான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்குகிறது. அந்த விழிப்பையும் எழுச்சியையும் மக்களின் மொழியிலேயே அற்புதக் கவிதையாக்கியவர்தான் மகாகவி பாரதியார்.

சுதந்திர பூமியைக் கவிஞன் வலம் வந்து, வணங்கி வாயார வாழ்த்தும்போது அதைத் தன் சொற்களால் சொந்தமாக்கிக் கொள்கிறான். “வெள்ளிப் பனிமலை மீதுலாவுவோம், மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்’ என்று தனது பிரம்மாண்ட தேசத்தில் கம்பீரமாக உலவுவதாகவும், மலையையும் கடலையும் மனித ஆற்றலால் வெல்வதாகவும் கவிஞர் கூறுகிறார்.

ஆனால் ஒரு தேசம் பிறப்பது, வெறும் பூகோளம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; அது மனித பந்தங்களாலும் வரலாற்றுச் சொந்தங்களாலும் உருவாவது. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியிருந்ததுமிந்நாடே; அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே’ என்று தன்னை ஒரு வரலாற்றுச் சங்கிலியோடு இணைத்து, அதனை “வந்தே மாதரம்’ என்ற புதிய மந்திரத்தால் வணங்குகிறார்.

தன் மூதாதையர்களை, அர்ஜுனனை, இராமனை, சகுந்தலையின் மகன் பரதனை நினைவுகூர்ந்து, பாரதத்தை ஒரு புதிய தொன்மமாகப் படைக்கிறார். தொன்மங்கள்தான் (ஙஹ்ற்ட்ள்) ஒரு சமூகத்தைப் பிணைக்கும், சமுதாயத்தின் கனவுகள். பாரதி ஒரு புதிய தேசியத் தொன்மத்தை உருவாக்குகிறார். இந்தத் தொன்மம், பழங்கதையல்ல; ஒரு சமுதாயத்தின் உயிர்ப்பாற்றல். பாரத மாதாவுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடி, சமயக் குறியீடுகளுக்குச் சமூக அர்த்தங்களைத் தந்தவர் பாரதி.

பாரதி, இந்த மண்ணின், மக்களின் ஆற்றலைப் பாரத சக்தியாகவும் பராசக்தியாகவும் உருவகித்தார். பாரதியின் பராசக்தி வழிபாடு, மக்களின் அடிமன ஆற்றலை வெளிப்படுத்தும் வீரவழிபாடாகவே தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக, அவர் பெண் கடவுள்களைப் போற்றியது, இந்த மண்ணும் பெண்ணும் விலங்கொடிந்து விடுதலை பெற விழைந்ததால்தான். அவர் பாஞ்சாலி சபதம் இயற்றியதும் பெண்ணடிமையையும் மண்ணடிமையையும் போக்குவதற்கே. இந்த இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பாரதி உணர்ந்தார்.

வீட்டிலே பெண்களைப் பூட்டி வைத்த சமுதாயம், அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. பாண்டவர்கள் பாஞ்சாலியைப் பணயம் வைத்திழந்தபோது, தங்களது மண்ணை மட்டுமல்ல, உள்ளாற்றலையும் இழந்தனர். “தன்னை இழந்த தருமன், என்னை இழப்பதற்கு உரிமை இல்லை’ என்று பாஞ்சாலி வாதாடும்போது, பாரதத் தாயின் குரலை, இந்த நாட்டில் பன்னெடுங்காலமாக அடக்கப்பட்டிருந்த பெண்மையின் வீர முழக்கத்தைக் கேட்கிறோம்.

பெண் விலங்கறுத்து வீறுபெற்று எழுந்தால்தான், இந்த மண் மாண்பு பெறும் என பாரதி பாடினார். எனவேதான் “பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும்’ – பாரினில் வந்ததாகப் பெண்களே பேசுவதாக மகாகவி அன்றே கூறினார்.

பாரதியின் சுதந்திரம், பாரத சமுதாயத்தின் முழுமைக்குமான பொதுவுடைமை. இங்கு வாழும் அத்தனை பேருக்கும் – மறவருக்கும் – பறையருக்கும் – புலையருக்கும் விடுதலை, விடுதலை என வீர முழக்கமிட்டார். சுதந்திரத்தின் இன்னொரு கூறாகச் சமத்துவத்தைக் கண்டார். எனவேதான், “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு’ என்று கூறினார். நாம் “எல்லோரும் ஓர்குலம்; எல்லோரும் ஓர் விலை, ஓர் நிறை’ என உறுதிபடக் கூறினார்.

சுதந்திரத்தை உலக நாடுகள் அனைத்தும் அனுபவிக்க வேண்டும் என பாரதி விழைந்தார். அதனால்தான் பெல்ஜியத்துக்கு வாழ்த்து பாடினார். புரட்சியை மாகாளி பராசக்தியாக உருவகித்த கவிஞர், ரஷியாவில் ஜார் மன்னன் வீழ்ந்ததை, “”ஆகாவென எழுந்தது பார் யுகப் புரட்சி, அலறி வீழ்ந்தான் கொடுங்கோலன்’ என்று ஆர்ப்பரித்துப் பாடினார். “தனியொருவனுக்கு உணவிலை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சூளுரைத்தபோது அவரது சர்வதேசச் சமத்துவச் சிந்தனை வெளிப்பட்டது.

பாரதி, இந்த மண்ணில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் மட்டுமன்றி, விண்ணில் பறக்கும் பறவைகளுக்கும் சுதந்திர கீதம் பாடிய கவிஞன். “”காக்கை, குருவி எங்கள் ஜாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்” என்று பிரபஞ்சத்தில் எங்கும், எதிலும் தன்னையே தன் கூட்டத்தையே கண்டு, அத்வைதத்தை ஓர் அகன்ற ஏகத்துவமாக விளக்கிக் காட்டினார். குருவி, விடுதலையுணர்வுக்கும் காக்கை, சமத்துவ உணர்வுக்கும் குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியும் வலுவும் அதன் எல்லாப் பகுதிகளும் ஏற்றத்தாழ்வின்றி, இணைந்து வாழ்வதைப் பொருத்தது என அவர் கருதினார். “கங்கை நதிப் புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்’ என்று புதிய பண்டமாற்றுத் தத்துவம் பேசுகிறார். அனைத்துக்கும் மேலாக, மாநிலங்களிடையே நீர்ப் பங்கீடு தேவை என அன்றே உணர்ந்த கவிஞர், “வங்கத்தின் ஓடிவரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்’ என்று பாடினார். இந்த ஒற்றுமையுணர்வு இன்னும் வராதது, சுதந்திரத்தின் பலன்களை முழுமையாக நுகர்வதற்குத் தடையாக உள்ளது.

இறுதியாக, இன்றைய உலகமயச் சூழலில், எந்த நாடும் தனித்தியங்க இயலாது. அதேநேரத்தில் நாம் மற்ற நாடுகளோடு கொள்ளும் உறவுகளும் செய்யும் ஒப்பந்தங்களும் நம்முடைய சுதந்திரத்துக்கு எள்ளளவும் பாதகமாக அமையக் கூடாது. கண்ணீரும் செந்நீரும் விட்டு வளர்த்த சுதந்திரத்தை, கண்ணின் மணிபோல காப்பது நம் கடன்.

சுதந்திரமில்லாமல், சொர்க்க பூமியில் வாழ்வதைவிட, சுகங்களேயில்லாத சுதந்திர பூமியில் வாழ்வது மேல். இதுதான், “விதந்தரு கோடியின்னல் விளைந்தெனை யழித்திட்டாலும், சுதந்திர தேவி, நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே’ என்று பாடிய மகாகவியின் நிரந்தரச் செய்தி.

(இன்று பாரதியார் நினைவுநாள்) (கட்டுரையாளர்: பேராசிரியர்)

Posted in Aa Raa Venkatachalapathy, AR Venakatachalapathi, Award, Barathi, Bharathiyaar, Bharathy, British, Females, Feminism, Fighter, Freedom, French, Harikrishnan, Independence, India, Integration, Kattabomman, Kavithai, Liberation, Literature, Mahakavi, Nationalism, Panchali, Panjali, Poems, Poet, Pondicherry, Prize, Puthiya Kalacharam, Puthucherry, Ravi kumar, Ravikkumar, Saabu, Spirit, Tamil-Ulagam, V Vallabesan, Women | Leave a Comment »

Bharathi scholar Seeni Viswanathan on his encounters with Subramaniya Bharathiyaar

Posted by Snapjudge மேல் திசெம்பர் 16, 2006

இலக்கியப் பயணம்: பாரதி தேடல்கள் – அனுபவம் புதுமை!

சீனி. விசுவநாதன்

சீனி. விசுவநாதன்

பாரதியின் படைப்புகளை காலவரிசைப்படி ஆய்வுக் குறிப்புகளோடு தொகுத்துள்ளார் ஆய்வாளர் சீனி.விஸ்வநாதன். அவரைத் தமிழுலகுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. இப்படி ஓர் அரிய பணியை மேற்கொள்ள அவர் எத்தனை கடுமையாக உழைத்திருக்க வேண்டும் என்பதை அந்தப் பதிப்புகளே சொல்லும். பாரதியின் படைப்பு தொடர்பாக தனக்குத் தேவையான ஆவணங்களைத் தேடி அவர் மேற்கொண்ட பயணங்களே ஒரு தனி படைப்பாகும். அதில் ஒரு பகுதி இங்கே தரப்படுகிறது.

நான் 1960 ம் ஆண்டு முதற்கொண்டே பாரதிநூல்கள் பதிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தபோதிலும்

1979 ம் ஆண்டிலிருந்துதான் தேடல் முயற்சிகளில் முழுமையாக ஈடுபட நேர்ந்தது.

தேடல் முனைவுகளில் நான் ஈடுபட்ட தருணத்தில் எனக்கு நேர்ந்த அனுபவங்கள் மிக சுவாரஸ்யமானவை. புதுமையானவையுங் கூட.

வருடங்கள் பல கடந்துவிட்ட நிலையிலும் தேடல் அனுபவ நிகழ்ச்சிகள் நெஞ்சத்திலே பசுமையாக நிலைத்துவிட்டிருக்கின்றனவே.

பாரதி “நூற்பெயர்க்கோவை’ தொகுதிக்கான பாரதி நூல்களை நான் தேடிக் கொண்டிருந்த நேரம்.

மதுரையில் ஒரு பழைய புத்தக வியாபாரி. அவர் கடைக்கு நான் சென்றேன். அவர் எனக்கு ஓரளவு பரிச்சயமானவர். அவர் என்னைக் கண்டதும் தம்மிடம் பாரதியின் அரிய நூல் தொகுதி இருப்பதாகவும், தேவைப்பட்டால் கொண்டு வந்து தருவதாகவும் தெரிவித்து, முன் பணமாக நூறு ரூபாயைக் கேட்டார்.

எனக்கோ தாங்க முடியாத சந்தோஷம். அதனால் உடனே அவரிடம் நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டேன். மறுநாள் அவரே நான் தங்கி இருந்த ஓட்டலுக்குப்

புத்தகக் கட்டுடன் என்னைத் தேடி வந்து விட்டார்.

உள்ளபடியே பெரிய தொகுதிகள் கொண்ட கட்டுதான்.

அவசரம் அவசரமாக அவரிடமிருந்து கட்டைப் பெற்றுப் பிரித்துப் பார்த்தேன். உடனே அதிர்ச்சி அடைந்தேன். நான் ஆவலோடு எதிர்பார்த்த பாரதி நூல்களாக அவை இல்லை. ஒரு கணம் பேச நாவெழவில்லை.

என் முகவாட்டத்தைக் கண்ட அந்தப் புத்தக வியாபாரி, “”என்ன சார், பாரதியின் அரிய நூல்களைக் கொண்டு வந்து தந்திருக்கிறேன். பேசாமல் இருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

“”இவை அரிய நூல்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பாரதி நூல்கள் இல்லை. வேறொருவர் எழுதியவை” என்று நான் கூறினேன்.

ஆனால் அவரோ “”நான் கொண்டு வந்தவை பாரதி நூல்களே. விலை அதிகம் கேட்பேன் என்று நினைத்து நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களா? நான் நியாயமான விலையைத்தான் கேட்பேன். முதலில் புத்தகங்களைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். பிறகு விலையை முடிவு செய்து கொள்ளலாம்” என்றார்.

நான் அவரிடம் சற்று விளக்கமாக, “”புத்தகங்களின் பெயரையும், ஆசிரியரின் பெயரையும் பாருங்கள். நூலின் ஆசிரியர் பெயர் வரகவி அ.சுப்பிரமணிய பாரதியார் என்று உள்ளது. நூல் தொகுதிகளின் பெயரோ ஜடாவல்லபர் என்பதாகும். நான் தேடும் நூல்களின் ஆசிரியர் சி.சுப்பிரமணிய பாரதியார்” என்று தெரிவித்தேன்.

அப்போது அந்த வியாபாரி, “”என்ன சார், நீங்கள் சொல்லும் பாரதியை வரகவி என்று தானே குறிப்பிடுகிறார்கள். சொல்லின் ஆரம்ப எழுத்தின் பேதத்தைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? அ.சுப்பிரமணிய பாரதியா? சி.சுப்பிரமணியபாரதியா? என்று. நீங்கள் பாரதி நூல்கள் தேவை என்று சொன்னதால், என் வசம் இருந்த இந்த நூல்களைக் கொண்டுவந்தேன். எனக்கும் இப்போதுதான் விஷயம் புரிகிறது.” என்பதாகச் சொல்லி, என்னிடம் பெற்ற முன் பணத்தொகையைத் திருப்பித் தர முன்வந்தார்.

அவர் எனக்காக எடுத்துக் கொண்ட பிரயாசைக்காக ஐம்பது ரூபாய் கொடுக்க விரும்பினேன். முதலில் மறுத்த அவர், என்னுடைய வற்புறுத்தலினால் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.

மூர்மார்க்கெட்டில்தான் அதிகமான பாரதி நூல்களைத் தேடிப் பெற்றேன். ஒரு சமயம் நான் வாடிக்கையாக வாங்கும் புத்தகக் கடைக்காரரிடமிருந்து என்னை வரச் சொல்லிக் கடிதம் வந்தது. நான் உடனே வியாபாரியைச் சந்தித்தேன். அவரிடம் பரலி சு.நெல்லையப்பர் பதிப்பித்த 1917 ம் வருடத்தின் “கண்ணன் பாட்டு’ முதல் பதிப்பு நூல் இருக்கக் கண்டேன். நூலைப் பார்த்ததும் எனக்கு ஆனந்தமான ஆனந்தம்.

வியாபாரி என்னிடம், “”உங்களுக்காகவே நான் வாங்கி வைத்துள்ள புத்தகம் இது.”என்றார்.

“”நான் இதற்கு என்ன தொகை தரவேண்டும்?” என்று கேட்க, அந்த வியாபாரி சற்றும் அலட்டிக் கொள்ளாமல் “”ஐநூறு ரூபாய்” என்றார். அவர் சொன்ன தொகையைக் கேட்டதும் நான் அசந்து விட்டேன். புத்தகத்தின் விலை 4 அணா என்பதாக நினைவு. அதை மனதில் கொண்டு, “”இந்தப் புத்தகத்தின் விலை 4 அணா தானே! இதற்குப் போய் நீங்கள் ஐநூறு கேட்கலாமா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர், “”வேறு யாராகவாவது இருந்திருந்தால் ஆயிரம் ரூபாய் கேட்டு இருப்பேன். வெளிநாட்டுக்காரர் என்றால் இதன் மதிப்பு டாலர் கணக்கில்தான். நீங்கள் என் வாடிக்கையாளர். அதனால், நியாயமாகக் கேட்டேன். உங்களுக்கு விருப்பமுண்டானால் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரே விலை; கறார் விலை; பேரத்திற்கே இடமில்லை” என்று தெரிவித்துவிட்டார். நூலின் தன்மை பற்றியறிந்த நானும் அவர் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டுப் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டேன்.

செட்டிநாட்டுப் பகுதிகளில் மிக மிக அரிதான பழைய பழந்தமிழ்நூல்கள் பழைய புத்தக வியாபாரிகளிடம் கிடைக்கும் என்பதையறிந்த நான், ஒரு சமயம் காரைக்குடிக்குச் சென்றேன். அங்கு மணிக்கூண்டு அருகில் இருந்த பழைய புத்தகக் கடைக்குச் சென்றேன். உள்ளபடியே மிக அருமையான தமிழ்நூல்கள் இருப்பதைக் கண்டேன். எனக்குத் தேவைப்பட்ட நூல்களை எடுத்துக் கொண்டு, அவற்றிற்கான தொகையை நான் பேரம் பேசியே கொடுத்தேன்.

கடையிலிருந்து நான் வெளிவரும் சமயத்தில் ஒரு மூலையில் அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பேப்பர் கட்டுகளைப் பார்க்க நேர்ந்தது.

“”அவை என்ன கட்டுகள்?” என்று கேட்க, அவர் “”இந்தப் பகுதியில் அந்தக் காலத்தில் நடைபெற்ற சினிமா, டிராமா விளம்பர நோட்டீஸ் கட்டுகள். நேற்றுத்தான் எடுத்து வந்தேன்.” என்றார்.

அவர் அப்படிச் சொன்னதும், அப்படி என்னதான் அந்த நோட்டீஸ்களில் இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன். வந்ததற்கு அவற்றையும் ஒரு பார்வை சும்மா பார்த்துவிடலாமே என்ற தாகம் ஏற்பட்டது. அவரும் கட்டுகளைப் பார்வையிட எடுத்துத் தந்தார்.

எல்லாம் விளம்பர நோட்டீஸ்கள். பல வண்ணங்களில், பலவித அளவுகளில். “யாரோ மிகவும் சிரமப்பட்டுச் சேகரம் செய்ததை எடைக்குப் போட்டுவிட்டார்களே’ என்று நினைத்த சமயத்தில் அந்த நோட்டீஸ்களின் இடையில் பாரதி புதையலைக் கண்டேன். சிரமப்படாமல்தானே கிடைத்த அற்புதப் புதையல் அது. காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தார் மீது பாரதி பாடிக் கொடுத்த வாழ்த்துப் பாட்டுக்களின் அச்சுப் பிரதி அதுவாகும்.

அச்சுப் பிரதியை நான் எடுத்துக் கொள்வதாகச் சொன்னவுடன் அந்த வியாபாரி, “”எடுத்துக் கொள்ளுங்களேன். இருபத்தைந்து ரூபாய் தாருங்கள்” என்றார். எனக்கோ ஒரே வியப்பு! காரணம் அருமையான பொக்கிஷம். இதன் அருமை தெரியாமல் குறைவாகக் கேட்கிறாரோ என்று நான் நினைத்தேன். என் மனது கேட்கவில்லை. நூறு ரூபாயை அவரிடம் கொடுத்தேன். பேரம் பேசி, மீதித் தொகையை நான் கேட்கக்கூடும் என்று அவர் நினைத்தார் போலும். நான் மீதித் தொகை வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துவிட்டேன். கேட்ட தொகையைவிட அதிகமாகத் தருவேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. நான் அவரிடமிருந்து பெற்ற அச்சுப் பிரதியின் மகிமையை எடுத்துச் சொன்னவுடன் அவர் விஷயத்தைப் புரிந்து கொண்டு எனக்கு நன்றி தெரிவித்தார்.

இப்படி நான் பாரதி தேடல் பணியில் ஈடுபட்டிருந்ததை அறிந்த கோவை நண்பர் ஒருவர் தனக்கு வேண்டப்பட்டவரிடம் இந்தியா பத்திரிகைப் பிரதிகள் இருப்பதாகத் தெரிவித்து, உடனடியாக என்னைக் கோவைக்கு வரும்படி கடிதம் எழுதினார். நானும் உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டே கோவையைச் சென்றடைந்தேன்.

நண்பரும் நானும் அவர் தெரிவித்திருந்த நண்பர் வீட்டிற்கும் சென்றோம். சிறிது நேர உரையாடலுக்கும், உபசாரத்திற்கும் பின் ஓர் அறைக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகளில் ஒன்றை என்னிடம் கொடுத்து, “”இதைப் பாருங்கள்” என்றார். கட்டை மிகுந்த ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

என்னை நான் ஒருவாறாகச் சுதாரித்துக் கொண்டு, “”நான் தேடிக் கொண்டு இருப்பது பாரதியார் ஆசிரியராக இருந்த இந்தியா பத்திரிகைப் பிரதிகளை. நீங்கள் என்னிடம் தந்திருப்பதோ நவஇந்தியா பத்திரிகைக் கட்டுகள்” என்றேன்.

அப்போதுதான் நண்பர்களுக்கு விஷயம் புரிந்தது.

நவ இந்தியா பத்திரிகை அந்தக் காலத்தில் கோவையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த செல்வாக்கான பத்திரிகையாகும். சென்னையிலிருந்தும் சில காலம் பத்திரிகை பிரசுரம் ஆனது.

இப்படி எத்தனையோ அனுபவங்களை நான் என் பாரதி தேடல்களில் பெற்றேன்.

வெளிஉலக வட்டாரத்தில் நான் பெற்ற அனுபவங்கள் ஒருபுறமிருக்க, என் வீட்டிலேயே ரஸமான அனுபவத்தைப் பெறவும் நேர்ந்தது.

வீட்டிற்கு வேண்டிய பொருள்களை என் மனைவி வாங்கி வரும்படி லிஸ்ட் கொடுத்து அனுப்புவாள். ஆனால் வெளியில் செல்லும் நானோ எனக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு மனைவி கொடுத்த சாமான் லிஸ்டை மறந்து விடுவதுண்டு. இல்லையென்றால் தேவையான அளவு சாமான்கள் வந்து சேராத நிலை ஏற்பட்டது.

என் போக்கைக் கண்ட என் மனைவி நாசுக்காக ஒருநாள், “”இனிமேல் உங்கள் தேவையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்திற்கு வேண்டிய தேவையை நானே பார்த்துக் கொள்கிறேன்.” என்று சொல்லி, வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுவிட்டாள்.

ஆக என்னுடைய பாரதி தேடலில் நான் பெற்ற இன்ப அதிர்ச்சியான அனுபவங்களைச் சொல்லி முடியாது.

அன்று நடந்த நிகழ்ச்சிகளை இன்றும் அசை போட்டுப் பார்ப்பதிலும் தனி இன்பம் இருக்கத்தானே செய்கிறது.

Posted in Barathi, Bharathi, Bharathiyaar, Books, Cheeni Vishwanathan, Dhinamani, Documents, Kathir, Literature, Poems, Poet, Research, Scholar, Seeni Viswanathan, Tamil | Leave a Comment »