Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘French’ Category

2008 – International year of sanitation, languages, planet Earth and the potato

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த 2008

இதற்கு முந்தைய ஆண்டுகளை விட புதிய 2008ம் ஆண்டு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக உள்ளது.

  • சர்வதேச சுகாதார துாய்மை ஆண்டு,
  • சர்வதேச மொழிகள் ஆண்டு,
  • சர்வதேச புவி ஆண்டு மற்றும்
  • சர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டாக 2008ம் ஆண்டை ஐ.நா., அறிவித்து, பெருமைப்படுத்தியுள்ளது.

இந்த நான்கு முக்கிய நோக்கங்களுடன் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஐ.நா., முயற்சி செய்து வருகிறது. சர்வதேச சுகாதார துாய்மை ஆண்டு: நாம் வாழும் பகுதியை துாய்மையாக வைத்திருந்து சுகாதாரம் பேணுவதே 2008ம் ஆண்டின் நோக்கமாக ஐ.நா., அறிவித்துள்ளது. உலகில் 260 கோடி மக்களுக்கு கழிப்பிட மற்றும் சுகாதார வசதி இது வரை கிடைக்கவில்லை.

இவர்கள் ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 41 சதவீதம். இதனால், 20 கோடி டன் மனிதக்கழிவுகள் திறந்த வெளியில் நோய் உற்பத்திக் கூடங்களாக உள்ளன. வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும், இது பிரச்னையாகவே உள்ளது. இது போன்ற சுகாதார சீர் கேட்டால் எளிதில் தவிர்த்துவிடக்கூடிய வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்றுக் நோய்களுக்கு ஏழைகள் ஆளாகிறார்கள். இந்த பிரச்னையால், உலக அளவில் 20 வினாடிக்கு ஒரு குழந்தை இறப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. தடுக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு 15 லட்சம் குழந்தைகள் இறப்பதைத் தடுக்க முடியும். 2015ம் ஆண்டுக்குள் உலகில் அடிப்படை சுகாதார வசதி இல்லாத மக்களில் பாதிப்பேருக்காவது அந்த சுகாதார வசதி கிடைக்க செய்ய வேண்டும் என்ற ஐ.நா.,வின் மில்லினிய இலக்குக்காகத்தான் இந்த ஆண்டை கடைபிடிக்க 2006ம் ஆண்டிலேயே ஐ.நா., முடிவு செய்தது.
சர்வதேச மொழிகள் ஆண்டு: உலகின் பல்வேறு மொழிகளை சிறப்பிக்கும் வகையில் சர்வதேச மொழிகள் ஆண்டாக 2008ஐ கடைபிடிப்பது என ஐ.நா., பொதுச்சபை முடிவு செய்துள்ளது. உலகின் வேறுபட்ட கலாசாரம், பன்முகத்தன்மையை இது வளர்க்கும் என்று ஐ.நா., நம்புகிறது.

  1. அரபு,
  2. சீனம்,
  3. ஆங்கிலம்,
  4. பிரெஞ்சு,
  5. ரஷ்யன் மற்றும்
  6. ஸ்பானிஷ்

ஆகிய ஆறு மொழிகள் ஐ.நா.,வின் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. இந்த ஆறு மொழிகளுடன் இந்தி மற்றும் போர்ச்சுக்கீசிய மொழிகளுடன் மொத்தம் 8 மொழிகள்தான் உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றன.உலகம் முழுவதும் 6 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன.இவற்றில் பெரும்பாலான மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. 417 மொழிகள் மிக மோசமான நிலையில் உள்ளன. கலாசாரம் மற்றும் நாகரிகம் ஆகியவற்றை அளவிடும் அளவுகோல்களாக மொழிகள் கருதப்படுகின்றன. மொழி அழிவது ஒரு சமூகம் அழிவதையே குறிப்பிடும். ஆகவே, அவற்றை காப்பாற்றும் பொறுப்பு அரசுகளுக்கு உண்டு. இதையடுத்து யுனெஸ்கோ நிறுவனம், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் அழியும் நிலையில் உள்ள மொழிகளை காப்பாற்ற அழைப்பு விடுத்துள்ளது.

சர்வதேச புவி ஆண்டு: சர்வதேச புவி ஆண்டாக 2008 அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட முக்கிய விஷயங்களில், இந்த ஆண்டு கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இயற்கை மற்றும் மனித முயற்சிகளால் நாம் வாழும் உயிர்கோளத்துக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி அறிந்து கொள்வது.

இயற்கை மாற்றத்தால் உடல்நலப் பாதிப்புகளை தவிர்ப்பது, மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது.

ஒரு குறிப்பிட்ட இயற்கை வளத்தை அதிகமாக பயன்படுத்தி, இயற்கை சேதப்படுத்துவதை விட, புதிய இயற்கை வளங்களை கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்த முயற்சி செய்வது.

நகர்ப்புறங்களில், மக்கள் வாழ்வதற்கு தகுந்த வசதிகளை ஏற்படுத்தித் தருவது.

பருவ நிலை மாற்றத்தால் வாழும் மக்களுக்கு நன்மை விளைய வேண்டும். தீமைகளை தவிர்க்க முயற்சி செய்வது.

நிலத்தடி நீர் வளத்தை முறையாக பயன்படுத்துதல். தற்போது உலகம் முழுவதும் 4 லட்சம் புவி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்கள் உள்ளனர். இவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பல்கலைக்கழகங்களில் புவி தொடர்பான அறிவியல் பாடங்களை அதிகமாக அறிமுகம் செய்ய வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு அரசுகள் பொறுப்புடன் நடந்து கொண்டு உயிர் வாழ்வதற்கு உள்ள இந்த ஒரே உயிர்கோளத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஐ.நா., தெரிவித்துள்ளது.


சீனாவுக்கு இயற்கை விடும் சவால்!

க. ரகுநாதன்


கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உறை பனியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது சீனா.

சீனாவின் மத்திய, தெற்கு மாகாணங்களில் பனி படர்ந்த சாலைகளால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டத்தால் விமானப் போக்குவரத்தும் நின்றுவிட்டது. இருக்கும் ஒரே வழி ரயில்வே மட்டுமே.

பிப்.7-ம் தேதி தொடங்கிய புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக இப்பகுதியில் இருந்து சென்ற லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்துப் போயினர். 4 லட்சம் பேருக்கு 3 ஆயிரம் ரயில்களே இயக்கப்பட்டன. மின் உற்பத்தி பாதிப்பால் பல நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளன. ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இயற்கை விடுத்த சவாலை எதிர்கொண்டாக வேண்டிய நிலையில் சீன அரசு உள்ளது.

ஒருபுறம் தனது பொருளாதார வலிமை, உள்கட்டமைப்பு பிரமாண்டம் ஆகியவற்றை உலக நாடுகளுக்குப் பறைசாற்றும் பொன்னான வாய்ப்பாக ஒலிம்பிக் போட்டியை சீனா கருதுகிறது. மறுபுறம் ஜனநாயக சக்திகள் சீன அரசின் அடக்குமுறையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தயாராகி வருகின்றன. இன்னொரு புறம் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசு அரசுக்குப் பெரும் சவாலாக உள்ளது.

ஒலிம்பிக் வீரர்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகலாம் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாரத்தான் போன்ற ஒரு சில போட்டி அட்டவணை மாற்றப்படலாம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இதனால் காற்று மாசடைவதைத் தடுக்க சீன சுற்றுச்சூழல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், போட்டியின்போது மழை வந்துவிடக் கூடாது என்பதற்காக அதைத் தடுக்க அரசும், விஞ்ஞானிகள் குழுவும் தயாராகி வருகின்றன. இதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

கடும் உறை பனிக்கு “லா நினோ’ எனும் கடலடி குளிர் நீரோட்டமே காரணம் என்று அரசு கூறினாலும், இதற்கு புவி, வெம்மை அடைவதுதான் முதன்மைக் காரணம் எனலாம்.

உலகின் ஓரிடத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றம் மற்றோரிடத்தில் நிச்சயம் பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இதைப் போன்ற காலநிலை மாறுபாடுகள் உதாரணம்.

உலகில் குறிப்பாக வளர்ந்த நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, நிலக்கரி, பெட்ரோல், டீசல் பயன்பாட்டால் எழும் புகை ஆகியவற்றால் வெளியேறும் கரியமில வாயு வளிமண்டத்தில் டன் கணக்கில் கலந்துள்ளது. இவைதான் புவி வெப்பம் அதிகரிக்க மூல காரணம். இது கடலடி நீரோட்டத்தையும் பாதிப்பதால் நிலப் பகுதியில் இது போன்ற பருவநிலை மாறுபாடு ஏற்படுகிறது.

பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க 1997-ம் ஆண்டு கியோட்டோ ஒப்பந்தம் உலக நாடுகளால் கொண்டு வரப்பட்டது. அது 2012-ம் ஆண்டுடன் முடிவடைகிறது.

மரபுசாரா எரிசக்தியை அதிகரிப்பதன் மூலம் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறுவதை 2008-12ம் ஆண்டுக்குள் 5 சதவீத அளவுக்கு வளர்ந்த நாடுகள் குறைக்க வேண்டும் என்பது முக்கிய விதி.

இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டாலும், தொழிலதிபர்கள் நிர்பந்தம், அரசியல் காரணங்களால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதுவரை ஒப்புதல் பெறப்படவில்லை (கடந்த டிசம்பரில் செனட் சபை மட்டும் ஒப்புதல் அளித்துள்ளது). இதனால் அதை நிறைவேற்றும் நிர்பந்தம் அரசுக்கு இல்லை. இதை நிறைவேற்றினால் தங்களது பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறிவருகிறது.

உலக அளவில் இந்தியாவும், சீனாவும் 10 சதவீத வளர்ச்சியை நோக்கிச் சென்றாலும், உலக பசுமைக்குடில் வாயுவை 10 சதவீதமே வெளியேற்றுகின்றன. ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் 42 சதவீதம் வெளியிடுகின்றன.

வாயுக்கள் வெளியாவதைக் குறைப்பதற்காக தங்களது தொழில் வளர்ச்சிக்குத் தடையான கொள்கைகளை ஏற்க வளரும் நாடுகள் தயங்குகின்றன. வளர்ந்த நாடுகளும் (குறிப்பாக அமெரிக்கா) தங்களது உரிமையை விட்டுக் கொடுக்க மறுக்கின்றன. இதனால் 2012-ம் ஆண்டுக்குப் பிறகு எத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்யாமல் டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடந்த பருவநிலை மாறுபாட்டுக்கான மாநாடு முடிந்துள்ளது.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், விவசாய மானியத்தைக் குறைக்கக் கோரும் உலக வர்த்தக ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களை வற்புறுத்தி உலக நாடுகளைப் பணியவைக்கும் அமெரிக்கா, உலகையே அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் உடன்பாட்டிற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற மறுப்பது வேடிக்கையானது.

எல்லாவற்றிலும் தனது முன்னிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா, சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புவி வெம்மையைக் குறைக்க முன்வர வேண்டும்.

உலக வெம்மை அதிகரிப்பால் புயல், பெரும் மழை வெள்ளம், கடும் வறட்சி, கடும் உறை பனி, அதன் காரணமாக உணவு உற்பத்தி பாதிப்பு, பஞ்சம் என்று பல்வேறு இன்னல்களை மனித குலம் சந்திக்க வேண்டி வரும். இவை முதலில் பாதிக்கப்போவது ஆப்பிரிக்க, ஆசியக் கண்டத்தில் உள்ள வளரும் நாடுகளைத்தான்.

பொருளாதார வளர்ச்சியைவிட முக்கியமானது, நாம் வாழும் பூமி வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பது. இயற்கையை அழித்து பொருளாதார வளம் பெறும் சமுதாயம் நீண்ட காலம் நிலைக்காது. எனவே இயற்கை வளத்தைப் பெருக்கி, பசுமையைக் காப்பது மட்டுமே எதிர்கால உலக நலனுக்கு உகந்தது என்பதை வளரும் நாடுகள் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளும் உணர வேண்டும்.

இல்லாவிடில் காதல் போயின்…காதல் போயின்…மட்டுமல்ல, பசுமை போயினும் சாதல்தான்!

Posted in 2007, 2008, 2009, 3899810, Arabic, Carbon, China, Chinese, Culture, Earth, emissions, Environment, France, French, Heritage, Hindi, International, Languages, Latin, Mandarin, Nature, Pollution, Portugese, portuguese, Potato, Russia, Russian, sanitation, Spanish, Tamil, UN, UNICEF, Year | Leave a Comment »

Central African Republic: Law and Order Collapsing as Civilians Flee Violence and Killings

Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2007

மத்திய ஆப்ரிக்க குடியரசு குறித்து அம்னெஸ்டி கவலை

 

மத்திய ஆப்ரிக்க குடியரசில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீரழிந்து குலைந்துவிடும் நிலையின் விளிம்பில் உள்ளது என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கூறியுள்ளது.

அங்கு, பிரான்ஸ் நாட்டின் 700 துருப்புகளின் ஆதரவு இருந்தாலும் அரசின் அதிகாரம் தலைநகர் பாங்குயில் மட்டும்தான் செல்லுபடியாகிற நிலையில் உள்ளது.

அந்த நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் அண்டை நாடுகளான சாட், சூடான் மற்றும் காமெரூன் ஆகியவற்றுக்கு வெளியேறிச் சென்றுள்ளார்கள் என அண்மையில் அங்கிருந்து திரும்பியுள்ள ஒரு ஆய்வாளர் தெரிவிக்கிறார்.

கிளர்ச்சியாளர்கள், கொள்ளையர்கள் மற்றும் அரசுத் துருப்புக்களால் தாக்கப்பட்டதாலேயே தாம் அங்கிருந்து வெளியேறியாதாக அவர் கூறுகிறார்.

அங்கு அரச துருப்புக்களால் பொதுமக்கள் தாக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, அந்நாட்டின் அதிபரின் சார்பில் பேசவல்ல அதிகாரி புறந்தள்ளியுள்ளார். மேலும் இந்தக் குற்றச்சாட்டு கேலிக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக மத்திய ஆப்ரிக்க குடியரசில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில், அது பல பாதிப்புகளை சந்தித்துள்ளது.

2003 ஆம் ஆண்டு இராணுவத்தின் முன்னாள் தளபதி ஃபிரான்சுவா பொழியே அதிரடியாக ஆட்சியைப் பிடித்த பிறகு, அங்கு நிலைமைகள் மேலும் மோசமடைந்துள்ளன.


Posted in abuse, africa, AI, Amnesty, Amnesty International, Arms, Bangui, car, Central African Republic, CFA Francs, Chad, Children, Conflict, Criminal, defence, Defense, Democracy, ethnic, Ethnicity, Exploit, Extremism, France, Francs, French, Govt, HR, killings, Law, Military, Money, Opposition, Order, Peace, Poor, Power, Republic, Rich, Security, Sudan, Terrorism, troops, UN, Violence, War, Weapons, West Africa | 1 Comment »

FRANCE’S FUTURE Sarkozy Vows Reform: How Far Can He Go?

Posted by Snapjudge மேல் மே 8, 2007

பிரான்ஸ் மக்கள் அனைவருக்காகவும் பாடுபடுவேன்: புதிய அதிபர் உறுதி

பாரீஸில் உள்ள கன்கார்டு சதுக்கத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றுகிறார், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள (இடமிருந்து 2-வது) நிகோலஸ் சர்கோசி. உடன் (இடமிருந்து) பாதுகாப்புத் துறை அமைச்சர் மிச்செலா எலியட் மேரி, சர்கோசியின் மனைவி செசிலியா மற்றும் அவரது ஆலோசகர் பிரங்காய்ஸ் ஃபில்லன் (வலது ஓரம்).

பாரீஸ், மே 5: பிரான்ஸ் மக்கள் அனைவருக்காகவும் பாடுபடுவேன் என்று கூறியுள்ளார் பிரான்ஸின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வலதுசாரித் தலைவர் நிகோலஸ் சர்கோசி (52).

அமெரிக்க அதிபர் புஷ், பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், ஜெர்மன் பிரதமர் (சான்சலர்) மெர்க்கரா ஏஞ்சல் மற்றும் பல ஐரோப்பியத் தலைவர்கள் சர்கோசிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தற்போது பிரான்ஸின் அதிபராக உள்ள ஜேக்கஸ் சிராக்கும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பாரீஸிலும் பிற நகரங்களிலும் நூற்றுக்கணக்கில் திரண்ட சர்கோசி எதிர்ப்பாளர்களை போலீஸôர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், நீரைப் பீய்ச்சியடித்தும் கலைத்து விரட்டினர்.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் நிகோலஸ் சர்கோசி, 53 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. வலதுசாரி (பழமைவாத) தலைவரான இவர், பிரான்ஸில் அடிப்படைவாதச் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என குரல் கொடுத்து வருபவராவார். இவரது கருத்துகளுக்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் உள்ளன.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் கட்சித் தலைமையகத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சர்கோசி, “”எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்காகவும் குரல் கொடுப்பேன்” என்றார்.

“”என்னைப் பொருத்த வரையில், நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் பிரான்ஸ் தேசம் என்பது அதையெல்லாம் தாண்டி ஒன்றுதான். பிரெஞ்சு மக்கள் அனைவருக்குமான அதிபராக நான் இருப்பேன். அவர்கள் அனைவருக்காகவும் பாடுபடுவேன்” என்று கூறியுள்ளார் சர்கோசி.

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சேஷலிஸ்டு கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.


அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கு தயாராகிறது பிரான்ஸ்

பிரான்சின் புதிய அதிபர் நிகோலோ சர்கோசி
பிரான்சின் புதிய அதிபர் நிகோலோ சர்கோசி

பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக வலதுசாரி அரசியல்வாதியான நிக்கோலோ சர்கோசி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். 53 சதவீத வாக்குகளைப் பெற்று சோஷலிசக் கட்சியின் வேட்பாளாரான செகொலீன் ரோயேலை அவர் வெற்றி கொண்டுள்ளார்.

அவரது வெற்றியை தலைநகர் பாரிஸில் அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அவரது வெற்றியின் மூலம் பிரான்ஸ் ஒரு அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தத்த காலத்திற்கு தயாராகி வருகிறது.

இம்மாதம் 16 ஆம் தேதியன்று பதவியேற்கவுள்ள அவர், பதவி விலகும் அதிபர் ஜாக் சிராக் அவர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்த கொள்கைகளால் ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்யவுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக அடுத்த மாதம் பிரான்ஸில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றியை கைப்பற்ற அவர் முயற்சிகளை மேற்கொள்வார் என செய்தியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.


மாறுதல் வரும்!

பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் பிரான்ஸýக்கு எடுத்த காரியத்தை முடிக்கும் ஆளுமை உள்ள தலைவர் அவசியத் தேவை. நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் சர்கோசி அத்தகைய ஆளுமை உள்ள மனிதர்தான்.

அவருக்கு வாக்களித்த மக்கள் பலரும் அவரை ஒரு செயல்வீரராகக் கருதுகிறார்கள். “சர்கோசி எப்போதும் நினைத்ததைச் சாதிக்காமல் ஓயமாட்டார். எப்போதும் ஓர் அடி முன்னால் இருப்பவர்’ என்கின்றனர். அவரை எதிர்ப்பவர்கள் பயப்படுவதற்குக் காரணமும் இந்த அதிவேகம்தான்.

இருப்பினும் இன்றைய அதிரடி நடவடிக்கைகள்தான் பிரான்ஸ் பொருளாதாரத்தை மீண்டும் தூக்கி நிறுத்த முடியும்.

பிரான்ஸில் வேலையில்லாத் திண்டாட்டம் 9 சதவீதமாக உள்ளது. 24 வயதுக்குள்பட்ட இளைஞர்களில் 25 சதவீதம் பேருக்கு வேலை இல்லை. வேலை அளிக்கப்படும் முறையும் பணிப்பாதுகாப்பு அளிப்பதாக இல்லை. இதனால் பிரான்ஸில் இளைஞர்கள் வீதியில் இறங்கி, போராட்டங்களையும் வன்முறைகளையும் நடத்தினர்.

அனைவருக்கும் வேலைவாய்ப்பைத் தரும் வகையில் பிரான்ஸ் அரசு கொண்டுவந்த “வாரத்துக்கு 35 மணி நேர வேலைத் திட்டம்’ பணியாளர்களுக்கும் பயனளிக்கவில்லை; நிறுவனங்களுக்கும் பயனளிக்கவில்லை. கொடுத்த சம்பளத்துக்கு வேலை வாங்க இயலாத நிலை ஏற்பட்டதால் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.

பணியாளர்களுக்கு சம்பளம் உயராத நிலையில் பொருள்களின் விலை மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பதும் மற்றொரு பிரச்சினை. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த பிரெஞ்சு அரசால் முடியவில்லை. பிரெஞ்சு நாணயத்தைக் கொடுத்து ஐரோப்பிய நாணயமாக மாற்றுவதில் ஒவ்வொரு நாளும் சிக்கல். தீர்மானிக்க இயலாதபடி விலைஉயர்வில் ஏற்றத் தாழ்வுகள்.

சர்கோசின் தேர்தல் முழக்கமே அதிகபட்சம் 35 மணிநேர வேலை உறுதி என்பதை குறைந்தபட்சம் 35 மணி நேர வேலை உறுதி என்று மாற்றுவேன் என்பதுதான். பிரெஞ்சு மக்களுக்கான வேலைவாய்ப்புகள் வேறு நாடுகளுக்குப் போவதைத் தடுப்பேன் என்றும் அவர் உறுதி கூறியுள்ளதால் நல்ல மாற்றத்தை எதிர்நோக்கலாம்.

மத அடையாளச் சின்னங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவது தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வருவதும் சீக்கிய மாணவர்கள் தலைப்பாகை அணிந்து வருவதும் பிரச்சினைக்குரியதாக மாறின. வெற்றி உரையாற்றியபோது “பர்தா அணியும் பெண்களை விட்டுவிடமாட்டோம்’ என்று கூறியிருப்பதன் மூலம் புதிய மாற்றங்கள் வரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரான்ஸில் வசிக்கும் 20 சதவீதம் பேர், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்த பிரெஞ்சு காலனிகளிலிருந்து வந்தவர்கள். இவர்கள் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள். என்றாலும் இன்றைய பொருளாதார நெருக்கடிகளும், வேலையில்லாத் திண்டாட்டமும் பிரெஞ்சு “மண்ணின் மைந்தர்களிடம்’ புதிய மனநிலையை உருவாக்கியுள்ளன. பிரெஞ்சு காலனியிலிருந்து வந்தவர்களையும் குடிபெயர்ந்தவர்களாகவே கருதும் நிலை உருவாகியுள்ளது. இவர்களுக்காக அரசு செலவிடும் தொகை வீணானது அல்லது அளவுக்கு அதிகமானது என்ற கருத்து உள்ளது.

உதாரணமாக, இந்தியாவில் புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் சுமார் 6 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்களிப்பதோடு சரி. ஆனால் பிரெஞ்சு மக்களுக்கு அளிக்கப்படும் அத்தனை சலுகைகளும் இவர்களுக்கு உண்டு. விசா இல்லாமல் பிரான்ஸýக்கு செல்லலாம். மாதம்தோறும் உதவித்தொகைகளும் வந்து கொண்டிருக்கின்றன.

அதிபர் சர்கோசி முறையற்ற குடிபெயர்வுக்கு எதிரான மனிதர். இதனால் புதுச்சேரியில் சர்கோசிக்கு எதிர்ப்பு அதிகம். அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் அவர் படங்கள் கிழித்தெறியப்பட்டன.


 

Posted in Election, EU, Europe, External, External Affairs, Foreign, France, French, Indo-French, Indo-US, IndoFrench, NICOLAS SARKOZY, Polls, President, Reform, Relations, Sarkozy, US-French, Victory | 2 Comments »

Presidental Elections in France – SEGOLENE ROYAL vs. NICOLAS SARKOZY

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 24, 2007

பிரான்ஸ் நாட்டுத் தேர்தலின் அடுத்த கட்ட போட்டிக்குத் தயாராகும் இரு வேட்பாளர்கள்

அடுத்த கட்டத் தேர்தலுக்குத் தயாராகும் வேட்பாளர்கள்
அடுத்த கட்டத் தேர்தலுக்குத் தயாராகும் வேட்பாளர்கள்

பிரான்ஸில் மே மாதம் ஆறாம் திகதி நடக்கவுள்ள இறுதி முடிவுக்கான, இரண்டாவது கட்ட அதிபர் தேர்தல் வாக்களிப்புகளுக்கு முன்னதாக, முதற்சுற்றில் வெற்றி பெற்றவர்களான வலதுசாரி நிக்கொலஸ் சர்கோஷி மற்றும் சோசலிஸ எதிர்க்கட்சியைச் சேர்ந்த செகொலென் றோயல் ஆகியோர் தமது இரு வாரகால பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்கள்.

சர்கோஷி அவர்கள் டிஜொனிலும் றோயல் அவர்கள் தென்கிழக்கே வலன்ஸிலும் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்கள்.

முதற்சுற்றில் சர்கோஷி அவர்கள் 30 வீத வாக்குகளையும், றோயல் அவர்கள் 26 வீத வாக்குகளையும் பெற்று, போட்டியிட்ட 12 வேட்பாளர்களில் முதல் இரு இடங்களைப் பெற்றனர்.

ஆகவே அடுத்த வாக்கெடுப்பில் இவர்கள் இருவர் மாத்திரம் போட்டியிடுவார்கள்.

அதிரடி மாற்றத்துக்கான வேட்பாளராகப் பார்க்கப்படுகின்ற சர்கோஷிக்கும், தாராளவாத இடதுசாரியாகப் பார்க்கப்படுகின்ற றோயல் அவர்களுக்கும் இடையிலான போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது மே மாதம் 6 ஆம் திகதிதான் தெளிவாகும்.

Posted in Bayrou, centrist, Chirac, Communism, Communist, Elections, France, Francois Bayrou, French, Green, Jacques Chirac, Jean-Marie Le Pen, Jospin, Left, LePen, Lionel Jospin, National Front, NICOLAS SARKOZY, Party, Popular Movement Union, President, Right, Royal, Sarkozy, SEGOLENE, SEGOLENE ROYAL, Socialist, UDF, UMP, Union for French Democracy, Vote, voters | Leave a Comment »

LTTE air power threat to entire South Asian region

Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007

வானில் எழுந்த புதிய கவலை

தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக விமானப்படைத் தளத்தின் மீது நடத்தியுள்ள விமானத் தாக்குதல் இலங்கையில் புதிய போர்ச்சூழலை உருவாக்கியுள்ளது.

இதுநாள் வரையிலும் தரைவழி, கடல்வழி பாதுகாப்பு வளையங்களைப் பலப்படுத்திக் கொண்டிருந்த இலங்கையின் அனைத்து உயர் அதிகார மையங்களும், இனி வானத்தையும் உற்றுப் பார்த்தாக வேண்டும். அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளால் இலங்கை ராணுவத்தை நிலப்பரப்பில் எதிர்கொள்ள முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் புலிகளின் வசமிருந்த பல நகரங்கள், கிராமங்களை இலங்கை ராணுவம் தனது ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டது. இதனால் வான் தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.

2001-ம் ஆண்டு கொழும்பு விமான நிலையத்தில் புலிகளின் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி, பாதிக்கும் மேற்பட்ட விமானங்களை அழித்ததைப் போன்ற சேதம் இப்போது நடைபெறவில்லை என்று இலங்கை அரசு கூறிக் கொண்டாலும் இது முதல் தாக்குதல்; அதுவும் இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்; இந்தத் தாக்குதல் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வழக்கமாக இடம்பெறும் தற்கொலைப்படையினர் வான் புலிகளிலும் இருப்பார்கள். இலங்கை எத்தனை பாதுகாப்பு வளையங்களை அமைத்தாலும் தற்கொலை விமானிகளைத் தடுப்பது அரிது. அல்-காய்தா விமானிகள் உலக வர்த்தக மையக் கட்டடத்தில் மோதியதைப் போல, வான்புலிகளும் இலங்கையின் எந்த அலுவலகத்தையும் எப்போது வேண்டுமானாலும் தாக்கி அழிக்க முடியும்.

இலங்கையின் தரைப்படை, கடற்படை, விமானப்படை மூன்றையும் தாக்கும் திறன் பெற்றுவிட்ட விடுதலைப் புலிகளை இலங்கை அரசு தீவிரமாகத் தாக்கத் தொடங்கும். இதனால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிடும்.

விமானத்துக்குத் தேவையான அலுமினியம் மற்றும் உதிரி பாகங்களை புலிகள் தொடர்ந்து கடத்தி வந்து, போர் விமானங்களை வடிவமைத்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக விமான ஓடுபாதை அமைத்துள்ளனர். இதை எப்படி இலங்கை உளவுத் துறை அறியாமல் இருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

விடுதலைப் புலிகளிடம் தற்போது எத்தனை விமானங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் இந்த விமானங்களை நவீன கருவிகள் மூலம் தொலைவிலேயே கண்காணித்து சுட்டு வீழ்த்தும் நவீன, செலவுமிக்க போர்முறைகளுக்கு மாற வேண்டிய அவசியம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.

புலிகளுக்கு போர் விமானம் தயாரிக்கவும், விமானத்தை இயக்கவும் யார் உதவினார்கள் என்பது இலங்கையின் தலைவலி என்றாலும், அதைவிட பெரிய தலைவலியும் இக்கட்டான நிலைமையும் இந்தியாவுக்குத்தான் இருக்கிறது.

விடுதலைப் புலிகள் மீது பதில் தாக்குதல் நடத்த நவீன ரக விமானங்களை இந்தியாவிடம் இலங்கை அரசு கேட்கும். இலங்கை விமானப் படையில் போர்ப்பயிற்சி பெற்றவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அதனால் அனைவருக்கும் இந்தியாவில் பயிற்சி அளிக்க இலங்கை அரசு கேட்கும். இதைச் செய்தால் இந்தியாவுக்குள் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் எழும்.

புலிகள் தங்கள் தாக்குதலை நடத்தும்போது இந்திய வான் எல்லைக்குள்ளும் பறக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். இந்திய எல்லைக்குள் நுழையும் ஒரு போர் விமானத்தை தாக்குவதா, வேண்டாமா என்பதிலும் இந்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும்.

விமானம் தயாரிக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ள விடுதலைப் புலிகளிடம் ஹெலிகாப்டர்களும் இனி இடம் பெறக்கூடும். தமிழகக் கடலோரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து தங்களுக்கான பொருள்களை எடுத்துச் செல்லும் சம்பவங்களும் இனி நடைபெறலாம். தமிழகக் கடலோரம் கடற்படை ரோந்துகளை அதிகரித்ததைப் போலவே விமானப் படையையும் தமிழகக் கடலோரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்த வேண்டிய நிலை உருவாகும்.

=====================================================

மிரட்டிப் பணம் பறித்ததாக பிரான்ஸில் 17 புலிகள் கைது?

பாரீஸ், ஏப். 2: தனித்தமிழ் ஈழத்துக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் அமைப்புக்காக பிரான்ஸில் வசிக்கும் தமிழர்களிடம் மிரட்டிப் பணம் பறித்ததாக 17 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 பேரும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பயங்கரவாதத் தடுப்பு நீதிபதி ஜீன்-லூயிஸ் புரூஜியரின் உத்தரவின் பேரில் போலீஸôர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். பிரான்ஸில் வசிக்கும் தமிழர் குடும்பங்கள் இந்த அமைப்புக்கு தலா ரூ. 1.21 லட்சம் ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும். அதேபோல் அங்கு வர்த்தகம் செய்யும் தமிழர்கள் ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் வழங்க வேண்டும்.

இவ்வாறு கட்டாயமாக நிதி வசூலித்துத் தருவோர் தங்களது கமிஷனாக 20 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. நிதி வழங்க மறுக்கும் குடும்பத்தினர் கடத்தப்படுவர் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரான்ஸில் 70 ஆயிரம் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

================================================
கேட்டுப் பெற முடியும்

இலங்கையில் மூன்றாவது முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலில் சேதமுற்ற இரண்டு எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளில் ஒன்று இந்திய-இலங்கை கூட்டு நிறுவனத்துக்குச் சொந்தமானது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இலங்கை அரசும் பெட்ரோல் விநியோக நிறுவனத்தை கூட்டாக நிர்வகித்து வருகின்றன. இதில் லங்கா ஐஓசிக்கு (இலங்கையில் செயல்படும் ஐஓசி நிறுவனத்தின் பெயர்) 33 சதவீத பங்கு உள்ளது. இந்திய அதிகாரிகளும் இதில் பணியாற்றுகின்றனர். பெட்ரோல் விநியோகத்தை இலங்கை அரசின் நிறுவனம் கவனித்துக் கொள்கிறது.

கொலநோவா எண்ணெய்க் கிடங்கானது இலங்கை-இந்திய கூட்டு நிறுவனத்துக்குரியது என்பது விடுதலைப் புலிகளுக்கு தெரியாத விஷயமல்ல. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

மேலும், புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் குறிப்பிடும்போது, “”ராணுவத் தீர்வையே இலங்கை அரசு நாடுகிறது. அதனால் வேறு வழியின்றி இலங்கை விமானப் படைக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் இரு எரிபொருள் கிடங்கின் மீது தாக்குதல் நடத்தினோம். தொடர்ந்து தாக்குவோம்” என்று கூறியுள்ளார்.

எரிபொருள் விநியோகம் செய்வதால் இந்திய கூட்டு நிறுவனமாக இருந்தாலும் தாக்குவார்கள் என்றால், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவியோ அல்லது வேறு ராணுவப் பயிற்சியோ அளித்தால் இந்தியாவையும் தாக்குவார்களா?

விடுதலைப் புலிகளுக்குத் தேவையான மருந்துகள், ஆயுதம் தயாரிக்கத் தேவையான பொருள்கள் தமிழகத்திலிருந்துதான் வருகின்றன என்பதுதான் இலங்கையின் புகார். அதற்காக, இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்வதை நியாயப்படுத்த முடியுமா?

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இல்லை என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய அடுத்த நாளே, கன்னியாகுமரி மீனவர்கள் 5 பேரைக் கொன்றவர்கள் கடல்புலிகள் என்று காவல்துறைத் தலைவர் முகர்ஜி கூறினார். “விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களைக் கொண்டு சென்றநேரத்தில் கன்னியாகுமரி மீனவர்கள் அங்கு வந்ததால் அவர்கள் உளவு பார்க்க வந்ததாகக் கருதி தாக்குதல் நடத்தியுள்ளனர்’ என்றும் தெரிவித்தார். இந்த விளக்கமானது, ஆயுதக் கடத்தல் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையான ராமேஸ்வரத்திலிருந்து தெற்கு கடற்கரைக்கு மாறியுள்ளது என்பதையும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் செயல்பாட்டையும் அவரே மறைமுகமாக ஒப்புக் கொள்வதைப்போல உள்ளது.

கடல்புலிகளின் பாதுகாப்பில் உள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவம் பிடித்திருந்தால் இந்திய அரசு தலையிட முடியும். இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இந்திய அரசு எப்படி பேசும்? அப்படிப் பேசினால் மீனவர்களுக்கு ஈடாக புலிகள் எதைக் கேட்பார்கள்?

12 மீனவர்களை மீட்கும் ஒரே வழி தமிழக கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் “தமிழக மீனவர்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்பதுடன், கடத்தி வைத்துள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்று சொல்வதுதான்.

ஏனென்றால், புலிகளின் வான் தாக்குதல்களால் பொருளாதார பாதிப்பை சந்தித்ததுடன், போதுமான ஆயுதங்களோ, படைப் பயிற்சியோ இல்லாமல் திண்டாடும் இலங்கை அரசு நிச்சயமாக இந்தியாவின் உதவியை நாடும். இந்தியா ஆயுத உதவியை அளித்தால் அதை எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடியவர்கள் தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமே. தமிழக மீனவர்களை விடுவிக்காவிட்டால், இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்க மாட்டோம் என்று அறிவிப்பு செய்ய தமிழக அரசியல் கட்சிகளுக்கு உரிமையும் பொறுப்பும் உள்ளது.

Posted in air crafts, Air Force, Arrests, Attack, Commission, Contribution, defence, Defense, Donation, Extortion, Foreign, France, French, Funds, Interpol, Katunayake, kickbacks, Law, Liberation Tamil Tigers of Eelam, LTTE, Mahinda Rajapaksa, Military, Navy, Non-profit, Order, Paris, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, separatist, South Asia, Sri lanka, Srilanka, Suicide, terror, Terrorism, terrorist, Vanni, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal, Wanni | 5 Comments »

Chirac backs Sarkozy in poll race – France Elections

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மைய வலதுசாரி வேட்பாளருக்கு அதிபர் சிராக் ஆதரவு

நிக்கலஸ் சர்கோசி( பின்னணியில் அதிபர் சிராக்கின் படம்)
நிக்கலஸ் சர்கோசி( பின்னணியில் அதிபர் சிராக்கின் படம்)

பிரான்ஸில் மைய வலதுசாரி வேட்பாளரான நிக்கலஸ் சர்கோஷி அவர்களுக்கும், அதிபர் சிராக்குக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாத நிலையிலும், சர்கோசி அவர்களுக்கே எதிர்வரவுள்ள அதிபர் தேர்தலில், ஆதரவு வழங்கப் போவதாக அதிபர் சிராக் கூறியுள்ளார்.

12 வருடமாக அதிபராகப் பணியாற்றிய பின்னர் பதவி விலகவுள்ள, சிராக் அவர்கள், தனது ஆதரவையும், வாக்கையும் சர்கோசி அவர்களுக்கு வழங்குவது முற்றிலும் நடுநிலையானது என்று கூறினார்.

ஒரு காலத்தில் அதிபர் சிராக்கின் அரசியல் வாரிசாக கருதப்பட்ட சர்கோசி அவர்கள், 1995 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது சிராக்கின் போட்டியாளருக்கு ஆதரவு வழங்கியதை அடுத்து, இருவருக்குமிடையிலான உறவு கசப்படைந்தது.

இந்தத் தேர்தலில், சோசலிச வேட்பாளரான, செகொலின் றோயல் மற்றும் மைய வாத அரசியல்வாதியான பிரான்சுவா பைரோ ஆகியோரை விட சர்கோசி முன்னணியில் திகழ்கிறார்.

Posted in Chirac, Elections, Euro, Europe, France, Francois Bayrou, French, PM, Polls, President, Primary, Prime Minister, Race, Sarkozy, support, UMP | Leave a Comment »

France’s Louvre museum to build a branch in Abu Dhabi

Posted by Snapjudge மேல் மார்ச் 6, 2007

அபுதாபியில் அருங்காட்சியகம் அமைக்க பிரான்சுடன் ஒப்பந்தம்

லூவ்ர் அருங்காட்சியகம்

அபுதாபியில் லூவ்ர் அருங்காட்சியகத்தை மாதிரியாகக் கொண்ட ஒரு அருங்காட்சியகத்தை அமைப்பதற்காகன ஒப்பந்தம் ஒன்றில் பிரான்சும், அபுதாபியும் கையெழுத்திட்டுள்ளன.

பாரிஸ் நகரில் உள்ள லூவ்ர் அருங்காட்சியகம் உலகின் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களில் ஒன்று.

ஒரு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான, 33 ஆண்டுகள் நீடிக்கக் கூடிய இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக பிரான்சில் எதிர்பலைகள் தோன்றியுள்ளன.

இதற்கு எதிரான மனுக்களில் ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

பிரான்சின் பெருமைமிகு கலைச் சின்னத்தின் பெயரையும், அதில் இருக்கும் சில கலைப் பொருட்களையும் இரவல் தர சம்மதித்துள்ளதன் மூலம், பிரான்ஸ் நாட்டு அரசாங்கமானது, பிரான்சின் கௌரவமிக்க சின்னத்தின் மதிப்பை குறைத்து விட்டதாக எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சார தொடர்புகள் மேம்படும் என்று பிரான்சும், அபுதாபியும் கூறுகின்றன. பிரான்சால் வடிவமைக்கப்பட்ட புதிய அருங்காட்சியகமானது 2012 ஆம் ஆண்டில் திறக்கப்படும்.

Posted in Abu Dhabi, architect, Art, branch, Culture, France, French, Guggenheim, Gulf, Jacques Chirac, Louvre, Musee d'Orsay, Museum, New York, Paris, Pompidou, satellite, UAE, United Arab Emirates, Versailles, Versailles palace | Leave a Comment »

Bharati in Puthiya Kalacharam

Posted by Snapjudge மேல் திசெம்பர் 18, 2006

ஜூனியர் விகடனில் ரவிக்குமார் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து நீங்கள் (ஹரியண்ணா) எழுதியிருந்ததைப் படித்தேன். ரவிக்குமார் கட்டுரையை படிக்க வில்லை, ஆதலால் என்னவென்று புரியவில்லை. இதோ ‘புதிய கலாச்சாரம்’ இதழில் வந்திருக்கும் ஒரு கட்டுரை

அன்புடன்
சாபு
துபாய்
—————-
கட்டபொம்மனைப் பாடாத பாரதி

பாரதியின் பார்ப்பனக் கண்ணோட்டம் பற்றி நாம் விமர்சிக்கும் போதெல்லாம், ‘பாரதியை அவனது வரலாற்றுப் பின்புலத்தில் ¨¨த்துப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்வது வறட்டுவாதம், பார்ப்பன துவேஷம்” என்று கூறி விமர்சிப்போர் மீதே முத்திரை குத்துவார்கள் பாரதி ஆய்வாளர்கள்.

சரி வரலற்றுப் பின்புலத்தில் வைத்தே பரிசிலிப்போம். பாரதி சத்ரபதி சிவாஜியைப் பாடியிருக்கிறான், கோகலே தாதாபாய் நவ்ரோஜி, திலகர், லாலா லஜபதிராய் போன்ற வட இந்திய தலைவர்களப் பற்றி பாடியிருக்கிறார். இத்தாலி, பெல்ஜியம்,ரசிய்யா வைப்பற்றி எல்லாம் பாடியிருக்கிறார். காக்கை,குயில்,கிளி மரம் மட்டை அனைத்தையும் பாடியிருக்கிறார்..

ஆனால் அவருடைய பக்கத்து ஊரான பாஞ்சாலக்குறிச்சியில் பிறந்த கட்டபொம்மனை பற்றி ஒரு வரி கூடப் பாடியதில்லை.சிவகங்கைச் சீமையின் சின்ன மருதுவைப் பற்றியும் பாடியதில்லை. பாரதியைப் போன்று இலக்கிய அறிவோ,உலக ஞானமோ இல்லாத அப்பகுதி மக்கள் கட்ட பொம்மனைப் பற்றியும் மருதுவைப் பற்றியும் ஏராளமான கதைப்பாடல்களையும் நாடகங்களையும் உருவாக்கி நிகழ்த்தியும் வந்திருக்கிறார்கள். ஆனால் பாரதி மட்டும் பாடதது ஏன்?

ஒரு வேளை இதையும் நாம் பாரதியின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும் போலும்.

“எட்டப்பனின் ஊரான எட்டயபுரத்தில் பிறந்து எட்டப்பனின் வாரிசான மண்ணுக்குத் தோழனாக இருந்து அவனை அண்டிப்பிழைத்த ஒரு கவிஞன் கட்டபொம்மனைப் பற்றி எப்படி எழுத முடியும்? என்று கூட மேற்படி ஆய்வாளர்கள் நம்மிடம் கேள்வி எழுப்பக் கூடும்.

“நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி, அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்” அடேயப்பா ஈட்டி போல் பாயும் சொற்கள் பக்கத்து ஊரில் தூக்கில் தொங்கிய விடுதலை வீரனைப் பற்றி எழுத முடியாத தன்னுடைய நேர்மைத் திறத்தைப் பற்றி பாரதி ஏதாவது சொல்லியிருக்கிறாரா? அல்லது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி பஜனை மண்டலியினர் தம்முடைய ஆய்வுக்ளில் இதைப்பற்றி ஏதாவது எழுதியிருகிறார்களா?

வே.மணிக்கம் எழுதிய ‘தானபதிப்பிள்ளை வரலாறு” என்ற நூலுக்கான முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி.

“கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டயபுரத்தைச் சேர்ந்த பாரதி, கட்டபொம்மனைபற்றியோ பாஞ்சாலக்குறிச்சிப் பற்றியோ தம் எழுத்துக்களில் எங்கும் சுட்டாதது குறிப்பிடத்தகுந்தது. புதுச்சேரியிலிருந்து மீண்டு மிகுந்த நலிவுற்று பொருள் ஆதரவு வேண்டி எட்டயபுரம் மன்னருக்கு 1909 ல் ஓலைத்தூக்கும் சீட்டுக்கவியும் எழுதி ஏமாற்றமுற்ற நிலையில் ஸ்வாமி தீட்சிதர் என்பவர் எட்டயபுரம் ஜமீன் பற்றி எழுதிய “விம்சமணி தீபிகை'(1878) நூலை செம்மைபடுத்தி தர பாரதி முன் வந்தார். எட்டயபுரம் மன்னர் இந்த வேண்டுகோளையும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் கட்டபொம்மனைப்பற்றி எதிர்மறையாக எழுதும் தீயூழைப் பாரதி தவிர்க்க முடிந்ததே என்று நாம் ஆறுதல் அடையலாம்

அதாவது எட்டயபுரம் மன்னர் மட்டும் காசு கொடுத்திருந்தால் கட்டபொம்மனை அவதூறு செய்து எழுதவும் பாரதி தயங்கியிருக்க மாட்டார் என்கிறார் வெங்கடாசலபதி.அத்தகைய தீயூழிலிருந்து பரதியைக் காப்பாற்றிய அந்த எட்டப்பன் பரம்பரைக்கே பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள் பாரதி பக்தர்கள்.

புதிய கலாச்சாரம்
நவம்பர் 2006
ஆசிரியர் வி. வல்லபேசன்
puthiyakalacharam@rediffmail.com

————————————————————————————————-
முழுமையான சுதந்திரக் கவி

கா. செல்லப்பன்

“சுதந்திரம் நமது பிறப்புரிமை; அதை நாம் அடைந்தே தீருவோம்’ என்று சூளுரைத்தார் பாலகங்காதர திலகர். அதை அடைந்துவிட்டதாகவே, அன்றே ஆனந்தகூத்தாடியவர் தீர்க்கதரிசனக் கவி பாரதியார். “சுதந்திரத்தை மற்றவர்கள் தந்து பெற்றுக் கொள்ளப் போவதில்லை. அதை எப்போது வேண்டுமோ அப்போது நானே எடுத்துக் கொள்வேன்’ என்று ஓர் ஐரிஷ் விடுதலைப் போராட்ட வீரர் கூறினார்.

ஒவ்வொரு மனிதனும் சுதந்திரத்தைத் தன் ஆத்மாவின் உண்மையான நிலை என உணரும்போது, “விட்டு விடுதலையாகி’ விடுகிறோம் என்று பாரதியார் கருதினார். அதேபோல, ஒரு தேசம் தன்னை உணர்ந்து கொள்ளும்போது, அது அகவிழிப்பு பெற்று ஆற்றலுடன் எழுச்சி பெறும்போது, உண்மையான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்குகிறது. அந்த விழிப்பையும் எழுச்சியையும் மக்களின் மொழியிலேயே அற்புதக் கவிதையாக்கியவர்தான் மகாகவி பாரதியார்.

சுதந்திர பூமியைக் கவிஞன் வலம் வந்து, வணங்கி வாயார வாழ்த்தும்போது அதைத் தன் சொற்களால் சொந்தமாக்கிக் கொள்கிறான். “வெள்ளிப் பனிமலை மீதுலாவுவோம், மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்’ என்று தனது பிரம்மாண்ட தேசத்தில் கம்பீரமாக உலவுவதாகவும், மலையையும் கடலையும் மனித ஆற்றலால் வெல்வதாகவும் கவிஞர் கூறுகிறார்.

ஆனால் ஒரு தேசம் பிறப்பது, வெறும் பூகோளம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; அது மனித பந்தங்களாலும் வரலாற்றுச் சொந்தங்களாலும் உருவாவது. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியிருந்ததுமிந்நாடே; அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே’ என்று தன்னை ஒரு வரலாற்றுச் சங்கிலியோடு இணைத்து, அதனை “வந்தே மாதரம்’ என்ற புதிய மந்திரத்தால் வணங்குகிறார்.

தன் மூதாதையர்களை, அர்ஜுனனை, இராமனை, சகுந்தலையின் மகன் பரதனை நினைவுகூர்ந்து, பாரதத்தை ஒரு புதிய தொன்மமாகப் படைக்கிறார். தொன்மங்கள்தான் (ஙஹ்ற்ட்ள்) ஒரு சமூகத்தைப் பிணைக்கும், சமுதாயத்தின் கனவுகள். பாரதி ஒரு புதிய தேசியத் தொன்மத்தை உருவாக்குகிறார். இந்தத் தொன்மம், பழங்கதையல்ல; ஒரு சமுதாயத்தின் உயிர்ப்பாற்றல். பாரத மாதாவுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடி, சமயக் குறியீடுகளுக்குச் சமூக அர்த்தங்களைத் தந்தவர் பாரதி.

பாரதி, இந்த மண்ணின், மக்களின் ஆற்றலைப் பாரத சக்தியாகவும் பராசக்தியாகவும் உருவகித்தார். பாரதியின் பராசக்தி வழிபாடு, மக்களின் அடிமன ஆற்றலை வெளிப்படுத்தும் வீரவழிபாடாகவே தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக, அவர் பெண் கடவுள்களைப் போற்றியது, இந்த மண்ணும் பெண்ணும் விலங்கொடிந்து விடுதலை பெற விழைந்ததால்தான். அவர் பாஞ்சாலி சபதம் இயற்றியதும் பெண்ணடிமையையும் மண்ணடிமையையும் போக்குவதற்கே. இந்த இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பாரதி உணர்ந்தார்.

வீட்டிலே பெண்களைப் பூட்டி வைத்த சமுதாயம், அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. பாண்டவர்கள் பாஞ்சாலியைப் பணயம் வைத்திழந்தபோது, தங்களது மண்ணை மட்டுமல்ல, உள்ளாற்றலையும் இழந்தனர். “தன்னை இழந்த தருமன், என்னை இழப்பதற்கு உரிமை இல்லை’ என்று பாஞ்சாலி வாதாடும்போது, பாரதத் தாயின் குரலை, இந்த நாட்டில் பன்னெடுங்காலமாக அடக்கப்பட்டிருந்த பெண்மையின் வீர முழக்கத்தைக் கேட்கிறோம்.

பெண் விலங்கறுத்து வீறுபெற்று எழுந்தால்தான், இந்த மண் மாண்பு பெறும் என பாரதி பாடினார். எனவேதான் “பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும்’ – பாரினில் வந்ததாகப் பெண்களே பேசுவதாக மகாகவி அன்றே கூறினார்.

பாரதியின் சுதந்திரம், பாரத சமுதாயத்தின் முழுமைக்குமான பொதுவுடைமை. இங்கு வாழும் அத்தனை பேருக்கும் – மறவருக்கும் – பறையருக்கும் – புலையருக்கும் விடுதலை, விடுதலை என வீர முழக்கமிட்டார். சுதந்திரத்தின் இன்னொரு கூறாகச் சமத்துவத்தைக் கண்டார். எனவேதான், “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு’ என்று கூறினார். நாம் “எல்லோரும் ஓர்குலம்; எல்லோரும் ஓர் விலை, ஓர் நிறை’ என உறுதிபடக் கூறினார்.

சுதந்திரத்தை உலக நாடுகள் அனைத்தும் அனுபவிக்க வேண்டும் என பாரதி விழைந்தார். அதனால்தான் பெல்ஜியத்துக்கு வாழ்த்து பாடினார். புரட்சியை மாகாளி பராசக்தியாக உருவகித்த கவிஞர், ரஷியாவில் ஜார் மன்னன் வீழ்ந்ததை, “”ஆகாவென எழுந்தது பார் யுகப் புரட்சி, அலறி வீழ்ந்தான் கொடுங்கோலன்’ என்று ஆர்ப்பரித்துப் பாடினார். “தனியொருவனுக்கு உணவிலை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சூளுரைத்தபோது அவரது சர்வதேசச் சமத்துவச் சிந்தனை வெளிப்பட்டது.

பாரதி, இந்த மண்ணில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் மட்டுமன்றி, விண்ணில் பறக்கும் பறவைகளுக்கும் சுதந்திர கீதம் பாடிய கவிஞன். “”காக்கை, குருவி எங்கள் ஜாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்” என்று பிரபஞ்சத்தில் எங்கும், எதிலும் தன்னையே தன் கூட்டத்தையே கண்டு, அத்வைதத்தை ஓர் அகன்ற ஏகத்துவமாக விளக்கிக் காட்டினார். குருவி, விடுதலையுணர்வுக்கும் காக்கை, சமத்துவ உணர்வுக்கும் குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியும் வலுவும் அதன் எல்லாப் பகுதிகளும் ஏற்றத்தாழ்வின்றி, இணைந்து வாழ்வதைப் பொருத்தது என அவர் கருதினார். “கங்கை நதிப் புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்’ என்று புதிய பண்டமாற்றுத் தத்துவம் பேசுகிறார். அனைத்துக்கும் மேலாக, மாநிலங்களிடையே நீர்ப் பங்கீடு தேவை என அன்றே உணர்ந்த கவிஞர், “வங்கத்தின் ஓடிவரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்’ என்று பாடினார். இந்த ஒற்றுமையுணர்வு இன்னும் வராதது, சுதந்திரத்தின் பலன்களை முழுமையாக நுகர்வதற்குத் தடையாக உள்ளது.

இறுதியாக, இன்றைய உலகமயச் சூழலில், எந்த நாடும் தனித்தியங்க இயலாது. அதேநேரத்தில் நாம் மற்ற நாடுகளோடு கொள்ளும் உறவுகளும் செய்யும் ஒப்பந்தங்களும் நம்முடைய சுதந்திரத்துக்கு எள்ளளவும் பாதகமாக அமையக் கூடாது. கண்ணீரும் செந்நீரும் விட்டு வளர்த்த சுதந்திரத்தை, கண்ணின் மணிபோல காப்பது நம் கடன்.

சுதந்திரமில்லாமல், சொர்க்க பூமியில் வாழ்வதைவிட, சுகங்களேயில்லாத சுதந்திர பூமியில் வாழ்வது மேல். இதுதான், “விதந்தரு கோடியின்னல் விளைந்தெனை யழித்திட்டாலும், சுதந்திர தேவி, நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே’ என்று பாடிய மகாகவியின் நிரந்தரச் செய்தி.

(இன்று பாரதியார் நினைவுநாள்) (கட்டுரையாளர்: பேராசிரியர்)

Posted in Aa Raa Venkatachalapathy, AR Venakatachalapathi, Award, Barathi, Bharathiyaar, Bharathy, British, Females, Feminism, Fighter, Freedom, French, Harikrishnan, Independence, India, Integration, Kattabomman, Kavithai, Liberation, Literature, Mahakavi, Nationalism, Panchali, Panjali, Poems, Poet, Pondicherry, Prize, Puthiya Kalacharam, Puthucherry, Ravi kumar, Ravikkumar, Saabu, Spirit, Tamil-Ulagam, V Vallabesan, Women | Leave a Comment »

Medecins Sans Frontieres (Doctors without Borders) withdraws from Eezham

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

யாழ் குடாவில் இருந்து வெளியேறியது மருத்துவ தொண்டு நிறுவனம்

யாழ்ப்பாணம் மருத்துவமனை
யாழ்ப்பாணம் மருத்துவமனை

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பையேற்று யாழ் குடாநாட்டில் பருத்தித்துறை அரச வைத்தியசாலையில் மனிதாபிமான பணியாற்றி வந்த மெடிக்கல் சான்ஸ் ஃபிராண்டியர்ஸ் என்ற பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த மனிதாபிமான மருத்துவ தொண்டு நிறுவனம் தனது பணியாளர்களை அங்கிருந்து விலக்கிக்கொண்டதாக அறிவித்துள்ளது.

உள்ளுர் ஊடகங்களில் தமது நிறுவனம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகவும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், தனது பணியாளர்களின் விசாக்கள் அரசினால் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் தமது நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் நிறுவனப் பணியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே இந்த முடிவை தாங்கள் எடுத்துள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகராகிய பாரிஸ் நகரத்தின் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் இருவர் இலங்கைக்கு வருகை தந்து நிலைமைகள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்தியதையடுத்து. தமது பணியாளர்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டு அவர்கள் தொடர்பான புலன் விசாரணைகள் நடைபெறுவதாக அரசு அறிவித்திருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையில் சண்டைகள் தொடரும் பகுதிகளில் அவசியமாகத் தேவைப்படுகின்ற மனிதாபிமான பணிகளை மேற்கொள்ள தாங்கள் தயாராக இருக்கின்ற போதிலும் பொய்க்குற்றச்சாட்டுக்கள் தம்மீது சுமத்தப்பட்டுள்ளதனால் தமது பணிகளை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in doctors, Doctors without Borders, Eezham, France, French, French humanitarian organization, Help, humanitarian, LTTE, Medecins Sans Frontieres, Medicine, NGO, restrictions, Sri lanka, support, Terrorism, Treatment, Violence, Visa | Leave a Comment »

Turkey says ties damaged by French approval of Armenia genocide bill

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 12, 2006

சர்ச்சையை ஏற்படுத்திய பிரான்சின் சட்டம்

ஆர்மேனிய ஆர்பாட்டாளர்கள் கொண்டு வந்த கேலி பொம்மை
ஆர்மேனிய ஆர்பாட்டக்காரர்கள்

ஆர்மேனியர்களுக்கு எதிராக துருக்கியர்கள் 90 ஆண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலைகளை செய்ததை மறுப்பது, குற்றமாக கருதப்படும் என்கிற பிரெஞ்சு நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு பரவலான கண்டனம் எழும்பியுள்ளது.

இது ஒரு பொறுப்பற்ற செயல் எனறும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளுக்கும் இது ஒரு பெருத்த அடி எனவும் துருக்கிய அரசு கூறியுள்ளது. இது பொருளாதார விளைவுகளையும் ஏற்படுத்தும் எனவும் துருக்கிய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், இந்த விடயம் குறித்து ஏற்படக்கூடிய இணக்கப்பாடு கடினமாகிவிடும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி சேரும் நம்பிக்கையில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

தனது மேலவையில் இது வாக்கெடுப்பிற்கு வரும் போது, இதைத் தொடர்ந்து எதிர்க்கப் போவதாக பிரெஞ்சு அரசு தெரிவித்துள்ளது.

பிரஞ்சு நாடாளுமன்றத்தின் கீழவையில் இந்த மசோதவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல உறுப்பினர்கள் வெளியேறிய பிறகு இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிரெஞ்சு அதிபர் தேர்தலில், ஆர்மேனிய வம்சாவழியினரின் வாக்குகளை கவரவே இந்த வாக்கெடுப்பின் போது பல உறுப்பினர்கள் வெளியேறினர் என விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

Posted in Armenia, bill, France, French, genocide, Turkey, Turkish-French relations | Leave a Comment »

Neelakadal – Review by Re Karthigesu in Marathadi

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 4, 2006

நீலக்கடல்
ரெ கார்த்திகேசு மரத்தடி.காம்

2005இல் பதிப்பிக்கப்பட்ட “நீலக்கடல்” என்னும் இந்த நாவல் தமிழ் நாட்டிலும் அதற்கு வெளியிலும் கூட இன்னும் அதிகம் அறியப்படாமலும் பேசப்படாமலும் கிடக்கிறது. இருந்தும் இந்த நூற்றாண்டில் வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க நாவலாக நான் அதனைக் கருதுவதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

நாவலை எழுதியுள்ளவர் பிரஞ்சுக் குடிமகனாக பிரான்சில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா என்னும் எழுத்தாளர். முன்பு பாண்டிச்சேரியில் வாழ்ந்தவர். இணையத்தில் அதிகம் எழுதும் இவரை இணைய வாசகர்கள் அறிந்திருக்கிறார்களேயன்றி பொதுவான வாசகர்கள் இன்னும் அறியவில்லை. தமிழில் இப்படி இணைய உலகத்தில் முகிழ்த்து அச்சுக்கு வரும் எழுத்தாளர்கள் தொகை இனியும் பெருகப் போவதால் இது ஒரு குறிப்பிடத் தக்க தொடக்கம்.

இதைச் சொல்லும் பொழுது இணையத்தில் வரும் தரமான படைப்புக்களை அச்சுக்குக் கொண்டு வருவதற்கென்றே தோன்றியுள்ள “எனி இந்தியன்” பதிப்பகம் பற்றியும் குறிப்பிட வேண்டும். அமெரிக்கத் தமிழர்களால் நடத்தப்படும் இந்தப் பதிப்பகம் இதுவரை கட்டுரைகள், அறிவியல் புனைகதைத் தொகுப்பு என்ற வடிவில் சில புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறது. http://www.anyindian.com என்ற தளத்தில் விவரங்கள்
பெறலாம்.

நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் அன்றி பிரஞ்சு மொழியையும் நன்கு அறிந்தவர். பிரெஞ்சிலிருந்து பல படைப்புக்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து இணையத்தில் பதிப்பித்துள்ளார். “பிரஞ்சு இலக்கியம் பேசுகிறேன்” என்னும் ஒரு நூலைத் தமிழில்
தந்துள்ளார்.

அவருடைய பாண்டிச்சேரி மற்றும் பிரெஞ்சு மொழிப் பின்னணியைப் பயன் படுத்திக் கொள்ளும் இந்த நீலக்கடல் நாவல் தன் கதைப் பின்னணியை பாண்டிச்சேரியிலும் மொரிஷியசிலும் கொண்டிருக்கிறது. கதை நடக்கும் காலம் பிரஞ்சுக் காலனித்துவ காலமான 18ஆம் நூற்றாண்டும் பின் நிகழ் காலமான 2000ஆம் ஆண்டுகளும் ஆகும்.

2000ஆம் ஆண்டுகளில் பெர்னார் ·போந்தேன் என்னும் ஒரு பிரெஞ்சுக்காரர் பாண்டிச்சேரியில் தன் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை ஆராய வருகிறார். முக்கியமாக 1943இல் தனது மூதாதையர்களில் ஒருவரான பெர்னார் குளோதன் என்பவர் பற்றிய தமிழ்க் கடிதம் ஒன்றின் உண்மையினை அறிய வருகிறார்.

அந்த ஆய்வில் முன் காலத்தில் பாண்டிச்சேரி பகுதியில் செல்வாக்காக இருந்த மதுரை நாயக்கர் வழிவந்த அரச குடும்பங்களின் ரகசியங்கள் சிலவற்றைக் கண்டெடுக்கிறார். இந்த ரகசியங்கள் அவரை ஆற்காடு நவாபு காலத்தில் வஞ்சிக்கப் பட்ட நாயக்கரின் வாரிசான ஒரு பெண், பிரெஞ்சுக்காரர்கள் நிறுவிய இன்னொரு காலனியான மொரிஷியசில் ஒளிந்திருப்பதாக அவருக்குத் தெரிகிறது. இந்தப் பெண் பிரெஞ்சு வீரர் ஒருவரைக் காதலித்ததாகவும் அறிகிறார். இந்த பிரெஞ்சு வீரர் தன் மூதாதையான
பெர்னார் குளோதன் என அறிகிறார்.

இந்தப் பின்கதை பாண்டிச்சேரிக்கும் மொரிஷியசுக்குமாக மாறி மாறி அலைகிறது. அதோடு 18ஆம் நூற்றாண்டுக்கும் நிகழ்காலத்துக்கும் கூட அலைகிறது. அதற்கும் மேலாக இந்தப் பாத்திரங்கள் எல்லாம் இந்தியாவின் வேதகால வரலாற்றிலிருந்து திரும்பத் திரும்ப பிறந்து வந்து இந்த நாடகங்களை ஆடுவதாகவும் அவர் அறிகிறார். பெர்னார் குளோதனின் நிறைவேறாத காதலை அவர் அறிவதோடு கதை முடிகிறது.

ஆனால் இந்தக் காதல் யுகங்கள் தோறும் வெவ்வெறு பாத்திரங்களைக் கொண்டு தொடரக் கூடும் என்று நாவலாசிரியர் கோடி காட்டுகிறார். ஆகவே வரலாறும் மர்மமும் கலந்த புனைவு.

கதைச்சுவையும் சம்பவச் செறிவும் உள்ள நல்ல நாவல்தான் நீலக் கடல். மொரிஷியசைப் பின்னணியாகக் கொண்டு இன்னொரு நாவல் தமிழில் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. இல்லை என்று எடுத்துக் கொண்டால் அந்த வகையில் இது முதல். ஆனால் பாண்டிச்சேரியைப் பின்னணியாகக் கொண்ட இன்னொரு அரிய நாவலான பிரபஞ்சனின் “வானம் வசப்படும்” இங்கு நினைவு கூரத் தக்கது.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் இந்தப் படைப்பில் பிரபஞ்சனின் எழுத்தின் தாக்கம் நிறைய இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இந்த நூலுக்கான முன்னுரையையும் பிரபஞ்சனே எழுதியுள்ளார்.

பிரபஞ்சனைப் போலவே கிருஷ்ணாவும் ஆனந்தரங்கம் பிள்ளை டயரியியிலிருந்து தகவல்களை எடுத்துப் பயன் படுத்தியுள்ளார். ஆனால் பிரபஞ்சனுக்கும் இவருக்கும் உள்ள குறிப்பான ஒற்றுமை இவர் பயன் படுத்தியிருக்கும் நடைதான். ஏறக்குறைய ஆனந்தரங்கம் பிள்ளை டயரியில் உள்ள 18-ஆம் நூற்றாண்டின் நடையே பிரபஞ்சனிடமும் கிருஷ்ணாவிடமும் இருக்கிறது. கிட்டத்தட்ட பரமார்த்த குரு கதை எழுதிய பெஸ்கி பாதிரியர் பயன் படுத்திய நடை போன்றது இது. இது இந்த இருபதாம் நூற்றாண்டு வாசகர்களாகிய நமக்கு ஒரு எரிச்சலையே உண்டு பண்ணுகிறது எனலாம்.

எனினும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதை தொடர்ந்து படிக்கக் கூடியதாக இருக்கின்ற காரணம் தமிழில் இதுவரை நாம் படித்திராத புதிய கதைக் களனில் புதிய செய்திகளை அவர் சொல்கிறார் என்பதுதான். கதை சுவையாகவும் சில மர்மங்களுடனும் பின்னப் பட்டுள்ளது. அதோடு பிரஞ்சு வாழ்க்கை மற்றும் பிரஞ்சு இலக்கியம் பற்றியும் இதற்கு முன் நாம் அறிந்திராத செய்திகளைக் கதையின் ஊடே சுவையாகச் சொல்லிச் செல்லுகிறார். மலேசியத் தமிழ் வாசகர்களைப் பொறுத்தவரை மொரிஷியஸ் நாட்டினை வளப்படுத்த அவர்கள் அப்பாவித் தமிழர்களைப் பிடித்துப் போய் நடத்திய விதம் நம் நாட்டின் ஆரம்ப ஒப்பந்தத் தொழிலாளர்களின் கதையோடு ஒத்திருப்பது இன்னொரு சுவையான ஒப்பீடாக இருக்கும்.

Posted in France, French, Marathadi, Nagarathnam krishna, Neelakadal, Paris, Pondycherry, Prabanjan, Puthucherry, Re Karthigesu, ReKa, Tamil, Vanam Vasappadum | 1 Comment »