சிம்பு என் மச்சான் தனுஷ்
சிம்புவுக்கும், எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருவரும் மாமா, மச்சான் என்றுதான் பேசிக் கொள்வோம் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
சிம்புவும், தனுஷûம் பள்ளிக் கூட தோழர்கள். ஆனால் நடிக்க வந்த பிறகு இருவருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. தனுஷை கிண்டலடித்து தனது படங்களில் சிம்பு வசனம் வைக்கும் அளவுக்கு நிலைமை போனது.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் சிம்பு எதிரே வர, மறுபக்கம் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் (இவரும் சிம்புவின் தோஸ்து தான், ஒருகாலத்தில்!) வர ஹலோ சொல்லிக் கொள்வார்கள் என எல்லோரும் எதிர்பார்க்க கண்டு கொள்ளாமல் விருட்டென்று ஐஸுடன் பறந்து விட்டார் தனுஷ்.
இப்படி அனலும், உலையுமாக இருவரும் இருந்து வரும் நிலையில் திடீரென சிம்புவை தூக்கி வைத்துப் பேசியுள்ளார் தனுஷ். ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள பொறி படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ்,
இங்கே மேடையில் உள்ள அனைவருமே இளைஞர்கள். சந்தோஷமாக இருக்கிறது. என் நண்பன் சிம்புவும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவர் இந்த மேடையில் இல்லாதது குறையாக உள்ளது.
எங்களைப் பற்றி வெளியில்தான் வேறு மாதிரியாக பேசுகிறார்கள். எங்களுக்குள் மோதல் என்ற இமேஜ் இருக்கிறது. ஆனால் உண்மையில், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். மாமன், மச்சான் என்றுதான் பேசிக் கொள்வோம் (மாமா யாரு, மச்சான் யாரு??). சத்தியமா நம்புங்க, சிம்பு என் நண்பன்தான்.
இதை நான் தனியாக சொன்னால் நன்றாக இருக்காது. நான் சின்னப் பையன் மாதிரி இருப்பது தான் என் பலமும் பலவீனமும்.
திருடா திருடி மூலம் என்னைத் தூக்கி விட்டவர் சுப்ரமணியம் சிவா. மன்மத ராசாவை மறக்க முடியுமா? அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பொறியும் சிறப்பாக அமையும். இப்படத்தில் தீப்பொறி உள்ளது. நிச்சயம் ஜீவா சாதிப்பார். படமும் வெற்றி பெறும் என்றார் தனுஷ்.
நண்பன் ‘துயரத்தில்’ இருக்கும்போது கை கொடுப்பவன், ஆறுதல் சொல்பவன்தான் உண்மையான நண்பன் என்பார்கள். ‘லிட்டில்’ சிம்பு இப்போது ‘கஷ்டத்தில்’ இருப்பதை உணர்ந்து அவருக்கு ஆறுதல் கூறுவது போல பேசியுள்ளார் தனுஷ்.
இதுவல்லோ நட்பு!