இஸ்ரேல் தோன்றிய தினத்துக்கு துக்கம் அனுஷ்டிக்கும் பாலஸ்தீனர்கள்
![]() |
![]() |
இஸ்ரேலியக் கொடியை எரிக்கும் பாலஸ்தீனர்கள் |
இஸ்ரேல் தனது உருவாக்கத்தின் 60வது ஆண்டு நிறைவை கடந்த வாரம் கொண்டாடியது. ஆனால் இஸ்ரேல் என்ற நாட்டின் உருவாக்கத்தை அடுத்து, அதனால் பாதிக்கப்பட்ட பாலத்தீனர்கள் இன்று தாம் எதிர்கொண்ட அனர்த்தத்தைக் குறிக்கும் நக்பா என்ற தினத்தை அநுட்டித்தார்கள்.
நக்பா என்ற அரபுச் சொல்லின் அர்த்தம் பேரழிவு, பேரனர்த்தம், பெரும்கேடு என்பதாகும்.
1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவான போது லட்சக்கணக்கான பாலத்தீன மக்களுக்கு அது ஒரு அனர்த்த தினமானது. லட்சக்கணக்கில் பாலத்தீன மக்கள் அன்று இதனால் வீடிழந்தனர், கொல்லப்பட்டனர், இடம்பெயர்ந்தனர். இன்று பல இடங்களில் சிதறிய நிலையில் அவர்கள் அகதி முகாம்களிலும் வேறு இடங்களிலும் தங்கியுள்ளனர்.
தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி 60 ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும், தமது தாயக நிலத்துக்குத் திரும்புவதற்கு, தார்மீக ரீதியிலான மற்றும் சட்ட ரீதியிலான உரிமை தமக்கு இன்னமும் இருக்கிறது என்று அந்த பாலத்தீன மக்கள் நினைக்கிறார்கள்.
நாற்பதுகளின் இறுதியில் உருவான ஐக்கிய நாடுகள் தீர்மானம் ஒன்றும் அதற்கு ஆதரவு வழங்குகிறது.
ஆனால் 40 லட்சம் பாலத்தீனர்கள் நாடு திரும்பும் பட்சத்தில், தமது நாட்டில் தாம் தமது யூத அடையாளத்தை இழந்துவிடுவோம் என்ற இஸ்ரேலியர்களின் அச்சம் இதற்குத் தடையாக இருக்கிறது.
அப்படியானால், பாலத்தீன தனி நாடு என்ற கனவு கானல் நீராகி வருகிறதா?