Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Fights’

LTTE’s Parappakkadantan Stronghold Falls – June 27: Tamil Eelam, Sri Lanka, War Updates

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 ஜுலை, 2008

விடுதலைப்புலிகள் பகுதியில் 8 விமானங்கள் ஒரே நேரத்தில் குண்டு வீச்சு

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் மாங்குளத்திற்கு வடகிழக்கே 8 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள விடுதலைப் புலிகளின் பயிற்சித்தளம் ஒன்றின் மீது இன்று காலை இலங்கை அரசாங்க விமானப்படைக்குச் சொந்தமான 8 குண்டு வீச்சு விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் வான்படையினர் போன்ற விசேட அணியினருக்கான இந்தப் பயிற்சி நிலையத்தின் மீதான இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்தத் தாக்குதல் பற்றியோ, இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றியோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஓமந்தையில் இருந்து ஐ சி ஆர் சி மீண்டும் விலகல்

ஓமந்தை சோதனைச் சாவடி
ஓமந்தை சோதனைச் சாவடி

இதற்கிடையில், ஓமந்தை சோதனைச்சாவடிப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையடுத்து, அந்தச் சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபடுவதிலிருந்து தாங்கள் விலகியிருப்பதற்கு முடிவு செய்திருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

இந்தச் சோதனைச்சாவடி ஊடாகப் பயணம் செய்யும் பிரயாணிகளினதும், தமது ஊழியர்களினதும் பாதுகாப்பு தமக்கு முக்கியமானது என்பதனால், இந்தப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டதும் தமது பணியாளர்கள் திரும்புவார்கள் என்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் தகவலதிகாரி தெரிவித்தார்.

எனினும் அங்கு நடைபெற்ற சம்பவம் என்ன என்பது தொடர்பான விபரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
இதனிடையில், நாளை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் ஓமந்தைக்கு கடமைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் என்ற தகவல் அந்தக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகளினால் கிளிநொச்சி மற்றும் வவுனியா அரசாங்க அதிபர்களுக்கு இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அந்த அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே ஓமந்தையில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை விலகச் செய்யும் வகையில் இன்று என்ன சம்பவம் நிகழ்ந்தது, என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஜெனிவாவில் உள்ள பேச்சாளர் கார்லா ஹடட் அவர்களிடம் பிபிசி சிங்கள சேவையின் சார்பில் கேட்டதற்கு பதிலளித்த அவர், அது ஒரு வெடிப்பு சம்பவம் என்றும், இருந்த போதிலும் அது குறித்த தெளிவான தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும், இது குறித்து தாம் சம்பந்தப்பட்ட தரப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.


ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டர் தொடரணியை சேர்ந்த வாகனத்தின் மீது தாக்குதல்?

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பயணித்த ஹெலிக்கொப்டர் தொடரணியைச் சேர்ந்த ஒரு ஹெலிக்கொப்டர் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சேன சுரவீர அவர்கள் பாதுகாப்புக்கான ஹெலிக்கொப்டர் ஒன்றே மோட்டார் தாக்குதலில் சேதமடைந்ததாகவும், அதற்கு சிறிய சேதம் மாத்திரமே ஏற்பட்டதாகவும் கூறினார்.

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் அறுகம்பை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பாலம் ஒன்று மீளமைக்கப்பட்டதை அடுத்து அதனைத் திறப்பதற்காக அங்கு சென்ற ஜனாதிபதி அங்கிருந்து திரும்பிய வேளையில், அவர் சென்ற ஹெலிக்கொப்டருடன் கூடச் சென்ற ஹெலிக்கொப்டர் ஒன்றே இவ்வாறு விடுதலைப்புலிகளின் ராக்கட் தாக்குதலுக்கு உள்ளானதாக தாம் கேள்விப்பட்டதாக பொத்துவில் பகுதிக்கான சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்து, தரையிறக்கப்பட்ட ஹெலிக்கொப்டர் சேதமடைந்திருந்ததை தான் நேரில் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


வவுனியா சுற்றிவளைப்பில் பலர் கைது

கைது செய்யப்பட்டவர்களை மீட்க காத்திருப்போர்
கைது செய்யப்பட்டவர்களை மீட்க காத்திருப்போர்

இலங்கையின் வடக்கே வவுனியாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கையையடுத்து நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் நேற்று நடைபெற்ற திடீர் தேடுதலின் போது பெருமளவானோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை வவுனியா பொலிஸார் இரவு முழுதும் தடுத்து வைத்ததையடுத்து உறவினர்கள் அச்சமடைந்தனர். பதற்றமும் நிலவியது.

இன்று காலை பெரும் எண்ணிக்கையான உறவினர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தின் எதிரில் கைது செய்யப்பட்டவர்களை மீட்டு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட 91 பேரில் இருவரைத் தவிர ஏனையோரை பொலிஸார் விடுதலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திப் பெட்டகத்தில் கேட்கலாம்.


பரப்புக்கடந்தானை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரைக்குளத்திற்கு வடக்கே உள்ள பரப்புக்கடந்தான் கிராமப்பகுதியை இராணுவத்தினர் இன்று கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளுடனான கடும் சண்டைகளின் பின்னர் இந்தப் பிரதேசம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆண்டான்குளம் பகுதியில் மேலும் 7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவான நிலப்பகுதியை இராணுவத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை மீட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

மன்னார், வவுனியா, வெலிஓயா களமுனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது வெள்ளிக்கிழமை நடத்திய வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் 44 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள்

மன்னார் ஆண்டான்குளம், பாப்பாமோட்டை, நெடுவரம்பு மற்றும் வவுனியா வெலிஓயா போர்முனைகளில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் சண்டைகளின்போதே விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டிருக்கின்றது.

கடந்த வியாழக்கிழமை மன்னார் சிராட்டிக்குளம் பகுதியில் கொல்லப்பட்ட 25 விடுதலைப் புலிகளின் சடலங்களையும் வவுனியா மாவட்ட நீதிபதி எம்.வை.எம்.இஸடீன், வவுனியா வைத்தியசாலையில் பார்வையிட்டு விசாரணை நடத்தியதையடுத்து, இந்தச் சடலங்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சடலங்கள் நாளை சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இதேவேளை, யாழ்ப்பாணம் பருத்தித்துறை கலிகை சந்திக்கருகில் நேற்றிரவு 8 மணியளவில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட வீதியோரக் குண்டுத் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் மல்லாவி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பப்பெண் ஒருவர் நேற்றிரவு 7.30 மணியளவில், அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். கொல்லப்பட்டவர் வவுனியா நகரில் புடவைக் கடையொன்றில் பணியாற்றி வந்ததாக பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 27 ஜூன், 2008


வட இலங்கை மோதல்களையடுத்து விடுதலைப்புலிகளின் 25 சடலங்களை மீட்டதாக இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடமேற்கே மன்னார், வவுனியா முன்னரங்க பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 25 சடலங்களை தாம் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இந்தச் சடலங்கள் இன்று இரவு 7.30 மணியளவில் வவுனியா பொது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இந்தச் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

மன்னார் சிராட்டிக்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் சடலங்கள் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றிய பின்னர், இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலின் போது கண்டெடுக்கப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

மன்னார் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு சண்டையின் போது 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், வவுனியா பாலமோட்டை பகுயில் இடம்பெற்ற இன்னுமொரு மோதலின்போது 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், வவுனியா நவ்வி என்ற இடத்தில் இராணுவத்தினர் மேலும் ஒரு விடுதலைப்புலி உறுப்பினரின் சடலத்தைக் மீட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள்

இந்தச் சண்டைகள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் வவுனியா பாலமோட்டை பகுதியில் இராணுவத்தினர் நேற்று மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தங்களால் முறியடிக்கப்பட்டதாகவும், இதில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய பயிற்சி முகாம் ஒன்றினை விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் இன்று காலை குண்டுவீசித் தாக்கியுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.


கடத்தப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டார்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில், கடந்த வியாழக்கிழமை கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினரொருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

28 வயதான காளியப்பன் குணசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நபர், கடந்த 19ஆம் திகதி கறுவாக்கேணியிலுள்ள காரியாலயத்திலிருந்து தண்ணீர் எடுக்க வெளியே சென்றிருந்த வேளையில் காணாமல் போனதாக கூறப்பட்டிருந்தது.

விநாயகபுரம் காட்டுப் பகுதியில் புதையுண்ட நிலையில் இவரது சடலம் வெள்ளி நண்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

இந்நபர் கடத்தப்பட்டு காணாமல் போனமைக்கு டி.எம்.வி.பி அமைப்பினரே பொறுப்பு என ஈ.பி.டி.பி. யினர் குற்றம்சாட்டியிருந்தனர். ஆனால் ரி.எம்.வி.பி அமைப்பினர் இக்குற்றச்சாட்டை மறுத்திருந்தனர்.


புலர்ந்தும் புலராத விடியல் – பாகம் 4

மீளக்கட்டப்பட்ட வாகரை மருத்துவமனை
மீளக்கட்டப்பட்ட வாகரை மருத்துவமனை

இலங்கையின் கிழக்கே திருகோணமலை – மட்டக்களப்பு மாவட்டங்களில் மீள் குடியேற்றப் பகுதிகளில் மோதல்களுக்குப் பின்னர் பொருளாதார மீட்சி மந்தகதியிலேயே நடந்துவருகிறது.

வேலை இல்லாத் திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது; விலைவாசிகள் மிக வேகமாக உயர்ந்துவருகிறன.

சாலைகள், பொதுக் கட்டிடங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றை சீரமைக்கும் பணிகளும் மந்தமாக நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டை பொது மக்கள் பலர் கூறுகின்றனர்.

மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க அவர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் தேவை என்றபோதிலும், அட்டையைப் பெறுவதில் தாமதங்கள் ஏற்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர். மீனவர்களைப் போலவே விவசாயிகளும் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர்.

கிழக்கிலங்கையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பொருளாதார நிலை குறித்த பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 28 ஜூன், 2008

விடுதலைப் புலிகளிடம் இருந்து விடத்தல்தீவைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகிய விடத்தல்தீவு பகுதி வரை இராணுவம் முன்னேறியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம அறிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் இராணுவத்தினர் மன்னார் – பூனகரி பிரதான வீதியில் 12 கிலோ மீட்டர் தூரத்தைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறியிருக்கின்றார்.

உயிலங்குளம் – அடம்பன், உயிலங்குளம் – ஆண்டான்குளம் ஆகிய விடுதலைப் புலிகளின் முக்கிய விநியோக வீதிகள் உட்பட சுமார் 120 சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பிரதேசம் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள அம்பலப்பெருமாள்குளத்திற்கும் கோட்டைகட்டினகுளத்திற்கும் இடையில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச உதவி அரசாங்க அதிபர் நாகலிங்கம் நந்தகுமார் கொல்லப்பட்டுள்ளதாய்த் தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

நாகலிங்கம் மீதான தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தினர்; ஆனால் இராணுவத் தரப்பில் இருந்து இதுகுறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தவிர வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 25 சடலங்களும் இன்று சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரும் உறுதி செய்துள்ளனர்.


பிள்ளையான் – விமல் வீரவன்ஸ சந்திப்பு – ஓர் அலசல்

விமல வீரவன்ஸ
சிவநேசத்துரை சந்திரகாந்தன்





கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் ஜே.வி.பி. அதாவது மக்கள் விடுதலை முன்னணி கட்சியிலிருந்து பிரிந்து சென்று தேசிய விடுதலை முன்னணி என்ற ஒரு புதுக் கட்சியைத் தொடங்கியுள்ள விமல வீரவன்ஸ இடையில் நேற்று சனிக்கிழமையன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இவ்விரு புதிய கட்சிகளும் தங்களுடைய நீண்டகால அரசியல் நலன்களுக்கு ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டும் என்பதை உணருவதால் ஏற்பட்ட ஒரு அரசியல் நகர்வாக இச்சந்திப்பு கருதப்படுகிறது.

இச்சந்திப்பின் அரசியல் பின்புலம் மற்றும் முக்கியத்துவம் குறித்து இலங்கை அரசியல் விவகார ஆய்வாளர் பேராசிரியர் யுவி தங்கராஜா தமிழோசையில் கருத்து வெளியிட்டார்

டி.எம்.வி.பி. போன்ற அமைப்புகள் ஆயுதக் களைவு செய்ய வேண்டும் என்கிற விவகாரத்தில் ஜே.வி.பி. தலைமைத்துவத்தின் நிலைபாட்டிலிருந்து விமல வீரவன்ஸ சற்று முரண்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளிடம் இருந்து அச்சுறுத்தல் நிலவுகின்ற சூழலில் டி.எம்.வி.பி. போன்ற அமைப்பினர் ஆயுதக் களைவு செய்வது சாத்தியமாகாது என்ற கருத்தை வீரவன்ஸ கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் கட்டாயம் உடனடியாக ஆயுதக் களைவு செய்ய வேண்டும் என்பது ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவின் நிலைப்பாடாக இருந்தது. இந்த முரண்பாடானது ஜே.வி.பி. கட்சியிலிருந்து வீரவன்ஸா விலகியதன் காரணங்களுள் ஒன்றாகக் கூறப்பட்டிருந்தது. ஆகவே வீரவன்ஸவுக்கு ஆதரவு வழங்குவதென்பது பிள்ளையானுடைய தார்மீகப் பொறுப்பாக கூட இருக்கலாம் என்று பேராசிரியர் தங்கராஜா தெரிவித்தார்.

அவரது பிற கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 30 ஜூன், 2008

விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து வருகிறார்கள்: இலங்கை இராணுவம்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அரச படைகளிடம் தோல்வியடைந்துவருகிறார்கள் என்று அந்நாட்டின் இராணுவத் தளபதி லெஃப்டினண்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா கூறியுள்ளார்.

நாட்டின் வட பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்துவருவதாகவும் பதுங்கு குழிகளிலிருந்து நடத்தப்படும் தாக்குதல்களையும் ஆர்ட்டிலரி குண்டுகளையும் சமாளித்து அரச படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் மென்மேலும் முன்னேறிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மரபு வழியில் சண்டையிடும் வல்லமையை புலிகள் இழந்துவிட்டார்கள் என்று சரத் ஃபொன்சேகா கூறினார்.

2006ஆம் ஆண்டு போர்நிறுத்தம் முறிந்ததிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஒன்பதாயிரம் பேரை இராணுவத்தினர் கொன்றிருப்பதாகக் கூறிய தளபதி ஃபொன்சேகா, இராணுவத் தரப்பில் இந்த காலகட்டத்தில் 1700 பேரை தாம் இழந்துள்ளதாகக் கூறினார்.

புலிகள் தற்போது கட்டாய ஆட்சேர்ப்புக்களைச் செய்துள்ள நிலையில் இப்போது அந்த இயக்கத்தில் நான்காயிரம் முதல் ஐயாயிரம் பேர் வரை இன்னும் இருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனாலும் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் குறைந்த அளவிலான கெரில்லா யுத்தம் என்பது நீடித்துகொண்டே போகலாம் என்றும் அவர் கூறினார்.

இது பற்றிய மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


தெற்காசியாவிலேயே மிக அதிக பணவீக்கம் இலங்கையில்

இலங்கையின் வருடாந்திர பணவீக்கமானது 28.2 விழுக்காட்டை எட்டியுள்ளதாக திங்களன்று வெளிவந்துள்ள புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் அதிகமான பணவீக்கம் இதுதான்.

உலகமெங்குமே பணவீக்கம் ஒரு பிரச்சினைதான்; ஆனால் இலங்கை மற்றெந்த நாடுகளையும் விட மிக மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது. நுகர்வுப் பொருட்களின் விலைகள் ஒரு ஆண்டுக்கு முன்னர் இருந்ததை விட சுமார் 30 சதவீதம் அதிகரித்துவிட்டன.

இதற்கு உலக அளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததும், நாட்டில் எரிபொருட்களுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டதும்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில் பொருளாதாரம் தவறாக நிர்வகிக்கப்ப்டுகிறது என்றும் அரசாங்கம் மிகவும் அதிகமாக செலவு செய்கிறது என்றும் வேறு சிலர் கூறுகிறார்கள்.

எதிர்வரும் மாதங்களில் பணவீக்க நிலை சீராகும் என்று மத்திய வங்கி நம்பிக்கை தருகிறது. ஆனால் இதுபோன்ற நம்பிக்கைகள் இதற்கு முன்னாள் பலமுறை பொய்த்துப்போயுள்ளன.

விலைவாசி தொடர்ந்து ஏறிக்கொண்டுதான் வந்துள்ளது. கோபம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சில தொழிற்சங்கங்கள் அடுத்த வாரம் பொது வேலை நிறுத்தமொன்றுக்கு திட்டமிடுகின்றன.


Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Heavy fighting in Mannaar, Sri Lanka: The war dividend; SLA cordon, search in Vadamaraadchi, Thenmaraadchi

Posted by Snapjudge மேல் மே 19, 2008

இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே மோதல் வலுக்கிறது.

இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கு தேர்தெடுக்கப்பட்ட பின்னர் முதல்வர் பதவிக்கு போட்டியிட்டு அது கிடைக்காமல் போன ஹிஸ்புல்லா அவர்களும் மேலும் இரு உறுப்பினர்களும் தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள பிள்ளையான் அவர்களுக்கு தாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை என்று கூறி தனியாகச் செயல்படப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தேர்தெடுக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு உறுப்பினர்கள் தமது தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ஹிஸ்புல்லா அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார். அமைச்சர் அதாவுல்லா அவர்களின் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர் எனவும், சில காரணங்களுக்காக அவர்களின் பெயரை தற்போது வெளியிட இயலாது எனவும் ஹிஸ்புல்லா கூறினார்.

எனினும் இவ்வாறான நடவடிக்கை தமிழ் மக்களுக்கோ அல்லது தற்போதைய முதல்வருக்கோ எதிரான ஒரு நடவடிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்தார். அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்கள்

இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் திட்டமிட்டபடி இராணுவ நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் மன்னார் பாலம்பிட்டி பகுதியை அரச படைகள் கைப்பற்றி அங்கு தமது நிலைகளை பலப்படுத்தி வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

இது குறித்து இராணுவத்தின் தரப்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்கார கூறும்போது, இராணுவத்தினர் தற்போது மன்னார் பிரதேசத்தில் அடம்பன் பகுதிக்குள் முன்னேறியிருக்கின்றார்கள் என்றும், இப்போது இராணுவம் அடம்பனுக்கு வடக்கே செயற்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.

இதனிடையில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தின் வருடாந்திர விழாவையொட்டி, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி இன்றும் ஞாயிற்றுகிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையில் திறந்திருந்தது என்றும் நாளையும் திங்கட்கிழமை ஓமந்தை சோதனைச்சாவடி காலை முதல் திறந்திருக்கும் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறினார்.


வட இலங்கையில் உக்கிர மோதல்கள் நீடிக்கின்றன

இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, மணலாறு, முகமாலை ஆகிய முன்னரங்குகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினர் பரவலாக மேற்கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின்போது, இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இருதரப்பிலும் சேர்த்து குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

ஞாயிறன்றைய சண்டைகளில் 58 விடுதலைப் புலிகளும் 21 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும், 3 இராணுவத்தினரைக் காணவில்லை என்றும் அந்த ஊடகத் தகவல் மையம் விபரம் வெளியிட்டிருக்கின்றது.

ஆனால் விடுதலைப் புலிகளோ, மன்னார் கருங்கண்டல்குளம் பகுதியில் தமது பிரதேசத்தை நோக்கி முன்னேறிய இராணுவத்தினருடன் நடைபெற்ற சண்டைகளில் 25க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும். 50க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

கொல்லப்பட்டவர்களில் 6 இராணுவத்தின் சடலங்கள் மற்றும் ஆயுதத் தளபாடங்கள் என்பவற்றையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

இது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Fresh battles kill more combatants in Sri Lanka: Eezham Clashes Claim Lives of Tamil Tigers & Soldiers

Posted by Snapjudge மேல் மே 5, 2008

பாலம்பிட்டி பாலத்தைக் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வட மேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பாலம்பிட்டியில் உள்ள பாலம் ஒன்றினை இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

இந்தப் பகுதியில், விடுதலைப் புலிகளுடன் பல மணித்தியாலங்கள் நடைபெற்ற மோதல்களின்போது, முன்னேறிச் சென்ற படையினருக்கு ஆதரவாக, இலங்கை விமானப்படையினர் பாலம்பிட்டி பாலத்திற்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் தளம் ஒன்றின் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

இந்தப் பகுதியில் இடம்பெற்ற நேரடி மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.


பிள்ளையான் செவ்வி

பிள்ளையான்
பிள்ளையான்

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களது இருப்பிடத்தில் இல்லாவிட்டாலும், அதற்கு அருகில் இருக்கின்ற இடத்தில் குடியேற்ற முயல்வேன் என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அந்த அமைப்பின சார்பில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிடுபவருமான பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தமது மாகாண சபைக்கு உட்பட்ட விவகாரமாக இல்லாத பட்சத்திலும், அந்த மக்கள் கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது விடயத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமது அமைப்பினரின் பாதுகாப்பு கருதியே தாம் ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறும் பிள்ளையான், விடுதலைப்புலிகள் பலவீனமடைந்து, தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் தாம் ஆயுதங்களைக் களைவோம் என்றும் கூறினார்.

பிள்ளையான் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கு மாகாணத் தேர்தல் குறித்து இடம்பெயர்ந்த மக்கள்

இடம்பெயர்ந்தோரின் குடியிருப்புகள்
இடம்பெயர்ந்தோரின் குடியிருப்புகள்

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒன்றைரை வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் மக்களில் பலர், இந்தத் தேர்தல்கள் குறித்து தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

தேர்தல் பற்றிய தமது கருத்துக்கள், வேட்பாளர்களின் வாக்குறுதிகள், வாக்களிப்பதில் தமக்கு ஆர்வம் இருக்கிறதா, இல்லையா என்பவை பற்றியெல்லாம், அங்கு சென்ற தமிழோசைத் தயாரிப்பாளர் சுவாமிநாதனிடம் அவர்கள் பேசியுள்ளனர்.

இவை குறித்த செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையின் சில மாகாணங்களில் மர்மமான சிறுநீரக நோயினால் 6000 பேர் பாதிப்பு

சிறுநீரகம்
சிறுநீரகம்

இலங்கையின் வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அண்மைக்காலமாக அடையாளம் காணப்படாத சிறுநீரக நோயின் தாக்கத்திற்கு சுமார் ஆறாயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஆளாகியிருப்பதாகவும், சில உயிரிழப்புக்கள் இடம்பெற்றதாகவும் தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில் இந்தநோயின் காரணிகள் குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்காகவும், நோய்க் காரணியைக் கண்டுபிடிப்பதற்கு உதவும் வகையிலும், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின், உலக சுகாதார நிறுவனத்தின் உயர் நிபுணத்துவக் குழுவொன்று இன்று இலங்கை வந்திருக்கிறது.

இந்த நோயின் தாக்கம் குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட, உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் தேசிய நிபுணர், டாக்டர் ஆர். கேசவன், இந்த நோயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோரின் சிறுநீரகம் செயலிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்றும், ஆனாலும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து இதற்கான காரணிகளைக் கண்டறிய முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த நோய் கடந்த ஐந்து வருடங்களாக இருந்துவருகின்ற போதிலும், அண்மைக்காலமாக இது குறித்த முறைப்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 மே, 2008


விடுதலைப் புலிகளை ஆதரித்ததாக பிரித்தானியாவில் மேலும் ஒருவர் கைது.

விடுதலைப் புலிகள்-ஆவணப் படம்
விடுதலைப் புலிகள்-ஆவணப் படம்

இலங்கையிலுள்ள விடுதலைப் புலிகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என பிரத்தானிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனின் தென்மேற்கு நகரமான ஸ்விண்டனில் 51 வயதான ஒருவர்,
வெளிநாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளை நடத்த ஏற்பாடு செய்து, அதற்கு ஊக்குவித்து ஏற்பாடுகளை செய்தார் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பிரித்தானிய போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

இதே விசாரணை தொடர்பாக கடந்த வாரம் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பிரிட்டன் 2001 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு தீவிரவாத இயக்கமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 மே, 2008

இலங்கைக்கான இந்திய ஆயுத உதவியை விஜயகாந்த் ஆதரிக்கிறார்

இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி அளிப்பதை, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தார் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த்.

புதுதில்லியில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது, அரசியல் கூட்டணி உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவிகளைச் செய்து வருவதாகவும், அது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாகவும் விஜயகாந்திடம் சில பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “தமிழர்களுக்கு எதிராகக் கொடுப்பதாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள். அது வியாபார ரீதியாகக்கூட இருக்கலாம்’’ என்றார்.

“சீனாவையும், பாகிஸ்தானையும் தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ள இலங்கை விரும்புகிறது. அது நடக்கக்கூடாது என்று இந்தியா கருதுகிறது. அதுதான் அங்கிருக்கும் சின்னச் சின்னப் பிரச்சினைகள். அதனால், அதுபற்றி நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றார் விஜயகாந்த்.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கில் ஜனநாயக ரீதியான தேர்தலை உறுதிப்படுத்தும்படி ஐ.தே.க தேர்தல் ஆணையாளரிடம் மனு

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர்
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர்

இலங்கையின் கிழக்கில் எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதி நடக்கவுள்ள மாகாணசபைத் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடாத்தப்படுவதனை உறுதிப்படுத்தும்படி கோரி இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான, ஐக்கிய தேசியக் கட்சி இன்று கொழும்பு ராஜகிரிய தேர்தல் செயலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது.

கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ரவி கருணாநாயக்க, மூத்த பாராளுமன்ற உறுப்பினர் மஹரூப், மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் முன்னணியின் தலைவர் மங்கள சமரவீர உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்குள்ள ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைத் தேர்தலுக்கு முன்னர் களையும்படி கோரிக்கை விடுத்தனர்.

இதன் பின்னர் தேர்தல் ஆணையாளரிடம் இது தொடர்பில் இவர்கள் சார்பில் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.


வவுனியாவில் கிளெமோர் தாக்குதலில் இருவர் பலி

இலங்கையின் வடக்கே வவுனியா நகர மத்தியில், நீதிமன்ற வளாகத்திற்கும் பிரதான பொலிஸ் நிலையத்திற்கும் இடையில் இன்று மாலை 5.45 மணியளவில் இராணுவத்தினருக்கு உணவு எடுத்துச் செல்லும் ட்ரக் வண்டியை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இரண்டு சிவிலியன்கள் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வாகனம் சிறு சேதத்திற்கு உள்ளாகியதாகவும், படையினருக்குப் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்படுவதற்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

புளொட் உறுப்பினர் சுட்டுக்கொலை

இதற்கு சற்று முன்னதாக புளொட் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினரும் முக்கியஸ்தருமாகிய பவன் என்றழைக்கப்படும் செல்வராசா என்பவர் பூந்தோட்டம் சந்திக்கருகில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக புளொட் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இவருடன் பயணம் செய்த மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வீதியோரத்தில் மறைந்திருந்தவர்கள் துப்பாக்கிப்பிரயோகத்தின் பின்னர் கொல்லப்பட்டவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளையும் துப்பாக்கிப்பிரயோகம் செய்தவர்கள் அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் மன்னார் முன்னரங்கப் பகுதியில் முன்னேறி வரும் இராணுவத்தினர் சாளம்பைக்குளம் என்ற கிராமத்தை நேற்று அதிகாலை மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின்போது கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 05 மே, 2008

‘வன்முறை காரணமாக நியாயமான தேர்தலுக்கான சூழல் இலங்கை கிழக்கு மாகாணத்தில் இல்லை’

இலங்கையில் எதிர்வரும் சனிக்கிழமை மாகாண சபைக்கான தேர்தல்கள் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் இதுவரை 50க்கும் மேற்பட்ட தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் தேர்தல் செயலகத்தின் தகவல்களின்படி அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் தீவைப்பு உட்பட அம்பாறை மாவட்டத்தில் 29 வன்முறைகள் குறித்த முறைப்பாடுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 முறைப்பாடுகளும், திருகோணமலை மாவட்டத்தில் 12 முறைப்பாடுகளும் என இது வரை 61 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுதக்குழுக்கள் செயற்பாட்டில் இருப்பதாகவும் இது தேர்தல் நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் கஃபே அமைப்பின் பேச்சாளரான கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

சில இடங்களில் வாக்காளர் அட்டைகள் பறிக்கப்பட்டதாகவும், இவை குறித்த முறைப்பாடுகளை தாம் தேர்தல் ஆணையர் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு கொண்டுசெல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, தற்போது கிழக்கு மாகாணத்தில் உருவாகிவருகின்ற நிலைமை அங்கு ஒரு நியாயமான, நீதியான தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு கிடையாது என்பதையே காட்டுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

சித்தார்த்தன்

இதனிடையே, மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க் கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தமிழோசையிடம் பேசிய புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், வேட்பாளர்கள் மிரட்டப்படுகின்ற மற்றும் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்றுவரவே செய்வதாகக் கூறினார்.

வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுவது ஒருபுறம் இருந்தாலும், வாக்காளர்களாகிய மக்கள் அச்சுறுத்தப்படுகின்ற விடயமே தமக்கு மிகுந்த கவலை அளிப்பதாகவும், இந்த அச்சுறுத்தல்கள் காரணமாக மக்கள் உண்மையாகவே பயந்துபோயிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் இப்படிப்பட்ட மிரட்டல்களைச் செய்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அக்கட்சியின் சார்பில் பேசவல்ல ஆஸாத் மௌலானா மறுத்துள்ளார்ர்.

அமைச்சர் தேவானந்தா

இலங்கை சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் கருத்து வெளியிடுகையில், ஓரளவு பிரச்சினைகள் இருப்பது உண்மைதான் என்றாலும் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் மேம்பட்ட நிலைமையே காணப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
இவர்களது செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


முகமாலையில் உக்கிர சண்டை – சேத விபரங்கள் குறித்து முரண்பட்ட தகவல்கள்

இலங்கையின் வடக்கே முகமாலை மற்றும் வடமேற்கே மன்னார் பகுதிகளில் இராணுவத்தினருடன் திங்களன்று இடம்பெற்ற சண்டைகளில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 20 படையினர் காயமடைந்துள்ளதாகவும் கொல்லப்பட்ட படையினரின் 2 சடலங்களையும் இராணுவ தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாக விடுதலைப் புலிகளின் தெரிவித்திருக்கின்றனர்.

எனினும் இந்தத் தாக்குதல்களில் 5 படையினரே கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், 2 படையினர் காணாமல் போயிருப்பதுடன், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.

முகமாலை பகுதியில் விடுதலைப் புலிகளிடமிருந்து தாங்கள் கைப்பற்றியுள்ள பகுதியின் முன்னணி காவலரண்களைத் தாக்கி உட்புகுவதற்கு விடுதலைப் புலிகள் திங்கட்கிழமை காலை முயற்சித்ததாகவும், அந்த முயற்சி படையினரின் எதிர்த்தாக்குதலில் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த மோதல்கள் குறித்து மின்னஞ்சல் வழியான அறிக்கையொன்றில் தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், முகமாலை பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னரங்கப் பகுதியை உடைத்துக்கொண்டு இராணுவமே முன்னேறுவதற்கு முயற்சித்ததாகவும், அந்த முயற்சி தமது எதிர்த்தாக்குதலில் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

இவை குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 மே, 2008


இலங்கையின் வடக்கில் தொடரும் வன்முறை

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களில் இரு தரப்பிலும் 14 பேர் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

மன்னார் மற்றும் மணலாறு பிராந்திய முன்னரங்குகளில் இடம்பெற்ற நேரடி மோதல்கள் மற்றும் வீதியோரக் கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் என்பவற்றில் 11 விடுதலைப் புலிகளும் 3 படையினரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் விபரம் வெளியிட்டிருக்கின்றது.

இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் வியாழக்கிழமை மன்னார் திருக்கேதீஸ்வரத்திலிருந்து வேட்டையாமுறிபை நோக்கி முன்னேற முயன்ற இராணுவத்தினரை கறுக்காய்குளம் பகுதியில் விடுதலைப் புலிகள் எதிர்த்து தாக்குதல் நடத்தி அவர்களின் முயற்சியை விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளதாகவும், இந்தச் சண்டைகளின்போது 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையே, கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் நடைபெற இன்னமும் 7 நாட்களே இருக்கும் வேளையில், இது வரை 53 தேர்தல் வன்முறைகள் பதிவாகியிருப்பதாக பொலிஸ் தேர்தல் செயலகம் கூறுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் 26 வன்முறைகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 வன்முறைகள், திருகோணமலை மாவட்டத்தில் 9 வன்முறைகள் என பதிவாகியுள்ளது.

இந்த வன்முறைகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தேர்தல் செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 04 மே, 2008

இலங்கையில் தொடரும் மோதல்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடபகுதியில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மேலும் கடும் மோதல்கள் எனச் செய்திகள் கூறுகின்றன.

அரச பாதுகாப்புத்துறை அறிக்கையொன்று மன்னார் மாவட்டத்தில் நடந்த மோதலில் குறைந்தது 13 புலிகள் கொல்லப்பட்டதாகவும், ஒரு அரச படையினர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கிறது.

ராணுவத் தரப்பின் வேறொரு செய்தி, மணலாறு – வெலிஓயா பகுதியில் மேலும் 17 புலிகளும் 7 படையினரும் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.

விடுதலைப் புலிகளிடமிருந்து இவை குறித்து எந்த தகவலும் கிடையாது.

சண்டை நடக்கும் பகுதிகளுக்குச் செய்தியாளர்கள் செல்வதற்கு அரசு தடையிருப்பதால் இத்தகைய செய்திகளை ஆராயந்து சொல்வது வழமையாக கடினமாது.


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றால் 3 முக்கிய சட்டங்கள் – ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க

ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க
ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றுமானால் மாகாண சபைக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி பொது மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய வகையில் 3 முக்கியமான சட்டங்கள் உடனடியாக நிறைவேற்றப்படும் என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

ஞாயிற்றுகிழமையன்று மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, இந்த சட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக தமது கூட்டணிக் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைதல், இயற்கை மற்றும் யுத்த அனர்த்தங்களின் போது இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தல்,சுதந்திரமான முறையில் மீன் பிடித் தொழில் ஆகியவற்றறை உள்ளடக்கியே உத்தேசிக்கப்பட்டுள்ள 3 சட்டங்களும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் வடக்கில் அரசு இன்னமும் எதனையும் கைப்பற்றவில்லை என்றும், வடக்கு இன்னும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அங்கே இடைக்கால நிர்வாகம் எதற்கு என்றும் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.


மடுக்கோவில் பிரதேசத்தை யுத்தமில்லாத அமைதிப்பிரதேசமாக்க வேண்டும் என வலியுறுத்தல்

மடு தேவாலயம்
மடு தேவாலயம்

இலங்கையின் வடமேற்கே இராணுவத்தின் பாதுகாப்பில் வந்துள்ள மடுக்கோவில் பிரதேசத்தை யுத்தமில்லாத அமைதிப்பிரதேசமாக்க வேண்டும் என மன்னார் ஆயரும், இலங்கையின் ஆயர் மன்றமும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், இத்தகைய கோரிக்கை அரசாங்கத்திடம் விடுக்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியிருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

ஆயினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், மடுக்கோவில் அமைதிப்பிரதேசமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்திடம் ஒரு வருடத்திற்கு முன்பே எழுத்து மூலமாக விடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன்பின்பு நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பானவரும், ஜனாதிபதியுமாகிய மகிரந்த ராஜபக்ச அவர்களை இரண்டு தடவைகள் நேரடியாகச் சந்தித்து இந்தக் கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தியதாகவும் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

அத்துடன் இந்தக் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அவர்கள் கொழும்பு ஆயர், மற்றும் மடுக்கோவில் பரிபாலகர் ஆகியோர் உடன் இருக்க தமக்கு உறுதியளித்ததாகவும், ஆயினும் உரிய நடவடிக்கைகள் எதுவும் அது தொடர்பில் எடுக்கவில்லை என்றும் மன்னார் ஆயர் தெரிவித்தார்.

இது குறித்த மேலதிக தகவல்களுடன், இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களையும் எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.


பிரிட்டனில் விடுதலைப்புலிகள் குறித்த விசாரணைக்காக மூவர் கைது

படிங்டன் கிறீன் போலிஸ் நிலையத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
படிங்டன் கிறீன் போலிஸ் நிலையத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான விசாரணையின் ஒரு கட்டமாக மூன்று பேரை கைது செய்துள்ளதாக பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் இருவர் வேல்சில் கைது செய்யப்பட்டதாகவும் மூன்றாவது நபர் லண்டனில் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

வெளிநாடுகளில் தீவிரவாதச் செயல்களை, ஏற்பாடுகளை செய்ய முற்பட்டது, தீவிரவாத செயல்களை தூண்டியது அல்லது தீவிரவாத செயல்களுக்காக தயார் செய்தது போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு 2001 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது.


Posted in Govt, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »