Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Admission’

C Vezhavendhan: The need for quality Instructors – Teacher Training Schools

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

தேவை தரமான ஆசிரியர்களின் சேவை

சி. வேழவேந்தன்

தமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்கள் உள்பட அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை சொற்ப அளவில் மட்டுமே இருந்தன.

எனவே, அப்போது பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகள் மட்டுமே ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேரும் நிலை இருந்தது.

மருத்துவம், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து அங்கே இடம் கிடைக்காத மாணவர்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருவது வழக்கம்.

ஆனால், இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 18 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை அரசு மேலும் குறைத்துள்ளது.

இதன் மூலம் விண்ணப்பித்த அனைவருக்கும் (குறைந்த மதிப்பெண்கள் பெற்றால்கூட) பொறியியல் கல்லூரிகளில் அரசின் கலந்தாய்வு மூலம் இடம் கிடைக்கும் நிலை உள்ளது.

மேலும், சில ஆண்டுகளுக்கு முன்னர் சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் (ரூ. 2 லட்சம் வரை) சீட் கிடைக்தாத நிலையே இருந்துவந்தது.

ஆனால், தற்போது தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதன்மூலம் ஆண்டுதோறும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் உள்ள 40 ஆயிரம் இடங்களில் 25 ஆயிரம் இடங்களை அரசு கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது.

மீதம் உள்ள 15 ஆயிரம் இடங்களுக்கு தனியார் பள்ளி நிர்வாகத்தினர் நேரடியாக மாணவர்களைச் சேர்த்து வருகின்றனர்.

அரசின் கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர் அரசு ஒதுக்கிய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.

போட்டி அதிகமாக இருந்தபோது தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள இடங்கள் தானாக நிரம்பின.

ஆனால் இன்று தனியார் பொறியியல் கல்லூரிகளைப் போலவே, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவிற்கே மாணவர்கள் இல்லாமல் இடத்தை காலியாக வைத்துள்ளன.

எனவே தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முன்னர் ரூ. 2 லட்சத்திற்கு விலை போன இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கான இடம், தற்போது ஆண்டுக்கு ரூ. 35 ஆயிரம் என குறைந்துள்ளது.

இதையும் தவணை முறையில் கொடுக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அரசு சார்பில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வுக்கு 70 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த ஆண்டு 40 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மாணவர்கள் பிரிவில் ஒரு குறிப்பிட்ட இடஒதுக்கீட்டில் குறைந்த பட்ச கட்-ஆப் மதிப்பெண் 470.

இதேபோல, மாணவிகள் பொதுப் பிரிவில் அறிவியல் பிரிவுக்கு 835, கலைப் பிரிவுக்கு 952, தொழில் பிரிவுக்கு 971 என கட்-ஆப் மதிப்பெண் இருந்தது.

பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 470 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவர் அரசு ஒதுக்கீட்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்வதற்கான வாய்ப்பை கடந்த ஆண்டு பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 30 ஆயிரம் பேர் குறைவாகவே கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தரமான ஆசிரியர்களால்தான் தரமான மாணவர்களை உருவாக்க முடியும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆங்கில மோகத்தாலும், தரமான கல்வி கிடைக்குமா என்ற சந்தேகத்தாலும் தமிழகத்தில் மொத்தம் உள்ள 34,208 அரசு, தனியார் தொடக்கப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்துவருகிறது.

ஆனால், அரசிடம் அனுமதிபெற்று இயங்கிவரும் 4622 நர்சரி, பிரைமரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் தொடர்ந்து ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.

300, 400 மாணவர்கள் படித்துவந்த சில தமிழ்வழிப் பள்ளிகள் தற்போது ஒரு மாணவர் கூட இல்லாமல் மூடப்பட்டுவரும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத் தடுக்க ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் பள்ளிகளுக்கு இணையாக தமிழ் வழிப் பள்ளிகளிலும் கற்றல் முறைகளை மாற்றவேண்டும். அதோடு தரமான ஆசிரியர்களின் சேவையும் இன்றைய முக்கியத் தேவையாக உள்ளது.

மேலும், நமது அண்டை மாநிலமான புதுச்சேரியைப்போல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை அரசு தொடங்கி ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஆசிரியர்களை அந்த வகுப்புகளுக்கு நியமிக்கலாம்.

இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதைத் தடுக்க முடியும்.

மேலும், பணக்காரர் வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைத்துவரும் தரமான கல்வி சாமானிய ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்யலாம்.

இன்றைய போட்டி நிறைந்த உலகில் ஆங்கில அறிவும், கணினி அறிவும் அவசியம் என்பதால் அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும்.

Posted in Economy, Finance, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Primary School Education: Nursery kids admission – Tamil Nadu, Children

Posted by Snapjudge மேல் ஜூன் 20, 2008

இது விதியல்ல, சதி!

சமீபத்தில் சென்னை முகப்பேரில் நடந்த சம்பவம் ஒன்று நமது சமுதாயத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் ஏன் நம்மீதே நமக்குக் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது. 24-வயது அனிதா என்ற பெண்மணி தனது மூன்று வயதுப் பெண் குழந்தையை நர்சரி பள்ளியில் சேர்க்க நன்கொடை கொடுக்க முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டாள் என்பதுதான் அந்தத் திடுக்கிடும் செய்தி.

அனிதா தற்கொலை செய்து கொண்டு விட்டாள். ஆயிரக்கணக்கான அனிதாக்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்குப் பல்வேறு தியாகங்களைச் செய்து கொண்டும், வெளியில் சொல்ல முடியாத நரக வேதனையை மனதில் சுமந்து கொண்டும், கடன்காரர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவமானத்தை மென்று விழுங்கிக் கொண்டும் வாழ்கிறார்கள் என்பது ஒன்றும் ரகசியமல்ல. பள்ளிக்கூடம் திறக்கிறது என்கிறபோதே வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பதைபதைக்கும் பெற்றோரும், உற்றார், உறவினர், நட்பு என்று அனைவரிடமும் கைநீட்டிக் கெஞ்சும் பெற்றோரும் ஏராளம் ஏராளம்.

“தம்மிற் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது’ என்பது வள்ளுவப் பேராசானே எழுதி வைத்த குறள். அக்கம்பக்கத்துப் பெண்டிரும், உற்றார் உறவினரும் தத்தம் குழந்தைகளைப் பெரிய பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு அனுப்பும்போது, தங்களது குழந்தைகளுக்கும் அந்தக் கல்வி தரப்பட வேண்டும் என்று எந்தவொரு பெற்றோரும் விழைவது இயல்பு. அப்படித் தர முடியாத நிலையில், விரக்தியும் வேதனையும் ஏற்படுவது தவிர்க்க முடியாதுதான்.

கிராமப்புறங்களிலிருந்து படித்துப் பட்டம் பெற்றுத் தங்கள் வாழ்க்கைத் தரத்தைப் பன்மடங்கு உயர்த்திக் கொண்ட கையோடு, தத்தம் குழந்தைகளை மிகப்பெரிய பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிக்க வைக்க, தங்களுக்கு இயலாமல் போன கனவுகளைப் பூர்த்தி செய்து கொள்ளப் பலர் துடிக்கிறார்கள். அதற்காக எந்த விலையையும் கொடுக்க அவர்கள் தயாராகிறார்கள் என்பதைத்தான் மேலே கூறிய செய்தி உறுதிப்படுத்துகிறது.

சமச்சீர் கல்வி, உயர்கல்வி, மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் என்றெல்லாம் பேசுகிறோமே தவிர, இந்தத் தனியார் பள்ளிகளின் கட்டணத்தையும், நன்கொடையையும் முறைப்படுத்த நமது அரசு ஏன் முன்வருவதில்லை என்பது புதிராகவே இருக்கிறது. காளான்கள் போலத் தனியார் பள்ளிகள் ஆங்காங்கே முளைக்கின்றன. இந்தப் பள்ளிகள் நன்கொடை வசூலித்துத் தங்களது கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கிக் கொள்கின்றன. கேள்வி கேட்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், இது தனியார் முயற்சி என்றும் கூறுகிறார்கள். நாமும் பார்த்துக் கொண்டு வாளாவிருக்கிறோம்.

தனியார் பள்ளிகளை விடுங்கள். அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் அரசின் உதவியுடன் நடத்தப்படும் பள்ளிகளில் அதிகாரபூர்வமற்ற வகையில் நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன. இது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமலா நடைபெறுகிறது? இத்தனைக்கும் தமிழக அரசின் 1972ஆம் ஆண்டு சட்டப்படி இந்த நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தடுக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதியை நிலைநாட்டுகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்கள், இன்னொருபுறம் பள்ளிக் கல்வியில் தனியார் தலையீட்டை அதிகரித்து சமூக ஏற்றத் தாழ்வு என்கிற நஞ்சைப் பிஞ்சு உள்ளங்களில் விதைக்கின்றனர். பணக்காரக் குழந்தைகள் மட்டுமே படிக்கும் தனியார் பள்ளிகள் ஒருபுறம், ஏழைகள் மட்டுமே படிக்கும் அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துப் பள்ளிகளும், அரசு உதவியுடன் நடத்தப்படும் பள்ளிகளும் மறுபுறம்.

பசி, வறுமை, ஏழ்மை என்றால் என்னவென்றே தெரியாமல் வளரும் சமுதாயம் ஒருபுறம். கல்வியில்கூட வறுமையே கதி என்கிற விதியை வரித்துக் கொண்ட குழந்தைகள் மறுபுறம். இட ஒதுக்கீட்டால் ஏற்படும் சமூகநீதிகூட பணக்காரப் பள்ளிகளில் படித்தால் மட்டுமே கைகொடுக்கும் துர்பாக்கிய நிலை. ஏழையாகப் பிறந்த குற்றத்திற்காக அந்தக் குழந்தையும், அந்தக் குழந்தையைப் பெற்ற குற்றத்திற்காக அந்தப் பெற்றோரும் இதையெல்லாம் விதியென்று கருதி வாளாவிருப்பதுதான் சமுதாய நீதியா?

மேலே எழுப்பிய கேள்விகளைப் பெருந்தலைவர் என்று அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் கு. காமராஜ் உணர்ந்திருந்தார். அதனால்தான் கட்டாயக் கல்வி என்கிற பெயரில் அனைவருக்கும் கல்வி அளித்தது மட்டுமல்லாமல் பள்ளிக் கல்வியை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். தனியார் பள்ளிகளும் அரசின் சட்ட மற்றும் பாடத்திட்டங்களுக்கு உள்பட வைத்தார். தமிழகத்தில் சாதி பேதம் மறைந்து சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருமளவில் குறைந்ததற்குக் காமராஜின் கல்விக் கொள்கைதான் தலையாய காரணம்.

பள்ளிக் கல்வியை தனியாரிடமிருந்து அகற்றி அரசே ஏற்று நடத்துவது மட்டும்தான் இதற்கு ஒரே தீர்வு. அதைச் செய்யாத வரையில் சமூக நீதியும் சமச்சீர் கல்வியும், அனைவருக்கும் கல்வியும் உதட்டளவு உபந்நியாசமாகத்தான் தொடரும்!

Posted in Economy, Finance, Govt, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »