Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Zia’ Category

Worldwide tentacles of the nexus between Politics, Bribery & Corruption

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2007

லஞ்சத்தில் சிக்கிய தலைவர்கள்

டி. புருஷோத்தமன்
“மக்கள் பணியே மகேசன் பணி’ என்கின்ற நிலைமாறி “பணம் குவிப்பதே குறிக்கோள்’ என்ற பேராசைக்கு அடிமையாகிவிட்டனர் பெரும்பாலான அரசியல்வாதிகள்.

கட்சியை வழிநடத்தவும் அபரிமிதமான தேர்தல் செலவை ஈடுகட்டவும் பதவிபோனாலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவும் கோடிக்கணக்கில் பணம் தேவை என்பதில் அரசியல் தலைவர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த பேராசைதான் லஞ்சஊழலுக்கு அடித்தளமாக அமைகிறது.

சாதாரண அரசியல்வாதிகளில் இருந்து கட்சித் தலைவர்கள் வரை இருந்த லஞ்சஊழல் படிப்படியாக அமைச்சர்கள் அளவிலும் பின்னர் முதல்வர்கள் என்ற நிலைக்கும் முன்னேறியது.

இதன் உச்சகட்டமாக பிரதமர், அதிபர் போன்றோரும் லஞ்சலாவண்யத்தில் சிக்குவது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. லஞ்சமும் ஊழலும் செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளில்தான் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களை முன்னேற்ற வேண்டிய அந்நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் சொந்த நலனில் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிடுகின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம்.

பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. நாடு சுபிட்சம் அடைந்து நாமும் வளம் பெறுவோம் என வங்கதேச மக்கள் கண்ட கனவு பொய்யாகிவிட்டது.

அந்நாட்டின் அதிபராக இருந்த எர்ஷாத் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஊழல் விவகாரங்களிலும் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலத்தில் இரு சரக்கு முனையங்களைக் கட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் அளிக்க கோடிக்கணக்கில் அவர் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக அவருடைய இரு மகன்கள் அராபத் ரஹ்மானும் தாரிக் ரஹ்மானும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காலிதா ஜியாவின் குடும்பமே ஊழலில் சிக்கித் திளைத்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வங்கதேசத்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் லஞ்ச விவகாத்தில் சளைத்தவர் அல்ல என்பதை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அறிந்துகொள்ளலாம். இரு தொழில் அதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதற்காக அவர் பெற்ற லஞ்சம் ரூ. 6 கோடி.

ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் அரசியல் எதிரிகளை கொலைசெய்யவும் அவர் தயங்கவில்லை. நான்கு எதிரிகளை அவர் படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வங்கதேச உள்துறை அமைச்சராக இருந்த முகம்மது நசீம் என்பவர் தனது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வருமானத்துக்கு முரணான வகையில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தையும் அந்நாட்டு அரசு பறிமுதல் செய்துவிட்டது.

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷிண் சினவத்ராவும் அவர் மனைவியும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். நிலபேர விவகாரத்தில் அவர்கள் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு முறைகேடாக அவர்கள் வாங்கியிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள 14 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என அந்நாட்டு அரசுக்கு அட்டார்னி ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.

தைவான் நாட்டின் முன்னாள் அதிபர் சென்னும் அவருடைய மனைவியும் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை அவர்கள் சூறையாடியதாக தைவான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நான்கு தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் என்ற பெயரில் பணத்தை தனது கட்சிக்கு லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மற்றும் அவருடைய கணவர் ஜர்தாரி ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான். சுவிஸ் வங்களில் கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தை மறைத்து வைத்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜர்தானி மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு லஞ்ச வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் நாடு கடத்தப்பட்டார். பலமுறை முயன்றும் அவர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்லை. இறுதியாக தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.

இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்தோ ஊழலில் திளைத்தவர். ஏழை நாடு என்ற சிந்தனை ஏதுமில்லாமல் மக்களைச் சுரண்டி, சுகபோக வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை சூறையாடினார்.

பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஊழல் புரிவதில் சாதனை படைத்தவர். 20 ஆண்டு பதவிக்காலத்தில் அவர் சுருட்டிய பணத்தின் மதிப்பு ரூ. 4,000 கோடியாகும். என்னே அவருடைய மக்கள் சேவை! அவர் மனைவி இமெல்டா விலைமதிப்புள்ள மூவாயிரம் ஜோடி செருப்புகளை வைத்திருந்தவர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெர்டினண்ட் மார்க்கோஸýக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர்களும் பிரதமர்களும்தான் இப்படி என்றால் ராணுவ ஆட்சியாளர்களின் செயல்பாடு அதைவிட மோசம் என்றே கூறலாம். மியான்மர் நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் கோரி கிளர்ச்சி நடத்திய மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினர்.

இராக் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் எண்ணெய்க்கு உணவு பேரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.

மக்கள் நலனை மறந்து ஆடம்பர மாளிகையில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த சதாமை அமெரிக்கா தூக்கிலிட்டு கொன்றுவிட்டது.

எனவே, மன்னராட்சி, மக்களாட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என எந்த ஆட்சியானாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமும் ஊழலும் என்ற நிலை உருவாகி விட்டது.

மக்களைக் காக்க வேண்டிய மன்னர்களும், அதிபர்களும், பிரதமர்களும், சர்வாதிகாரிகளும் லஞ்ச ஊழலில் திளைத்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.

—————————————————————————————————————————–
லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?

இரா. சோமசுந்தரம்

திருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே, திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் என்ற செய்தி!

இந்த நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, இதற்கெல்லாம் மேலான ஓர் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதாவது: “”அட, எல்லாரும்தான் வாங்குறாங்க. இவங்க, வாங்கினத நியாயமா பங்குபோட்டு மேல கொடுக்காம அமுக்கப் பாத்திருப்பாங்க, ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க” என்பதுதான் அந்த விழிப்புணர்வு.

இந்த மனநிலைக்குக் காரணம் அரசு அலுவலகங்களில் இன்று நிலவும் சூழ்நிலைதான்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டுமானால், உண்மைக்கு மாறாக வருமானத்தைக் காட்ட விரும்புபவர் மட்டுமே அரசு அலுவலர்களைக் “கவனிக்க’ வேண்டியிருக்கும். ஏழைகள் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கப்படுவார்களே தவிர, சான்றிதழ் இலவசமாகக் கிடைத்துவிடும். ஆனால் இப்போது இலவசம்கூட இலவசமாகக் கிடைப்பதில்லை. தகுதி இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதுதான் மக்களின் இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம்.

அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம் ஆகியவற்றில் காணப்படாத பிரமாண்டம், தமிழக அரசு விழாக்களில் மட்டும் இருக்கிறது. வரம்புக்கு மீறிய, சட்டம் அனுமதிக்காத செலவுகள் நிறைய!

பல அரசு உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் பெயரில் “ரூம்’ மட்டும் போடப்படும். ஆனால் அவர்கள் தங்குவது நட்சத்திர ஓட்டலில். அத்துடன் வேறுசில சொல்லப்படாத செலவுகளும் உண்டு, அந்தச் செலவை உள்ளூர் அதிகாரிகள் ஏற்க வேண்டும்!

சட்டத்தை மீறிய செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு துறையிலும்- வருவாய்த் துறை என்றால் கிராம நிர்வாக அலுவலர் வரை-ஒரு வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.

தேன் எடுத்தவன் புறங்கையை சுவைக்காமல் விடுவானா? ருசி பார்த்த பூனைகளுக்கு சூடு மறத்துப் போகிறது. மனிதம் மறைகிறது.

ஆதலால், வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்தாலும் “டிரைவிங் ஸ்கூல்’ மூலம்தான் உரிமம் பெற்றாக வேண்டும். அதே ஜாதி, அதே சம்பளத்துக்காக சான்றிதழ் கேட்டாலும் “கொடுத்து’தான் பெற முடியும்.

அரசு நிர்ணயிக்கும் நில மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைப்பட்ட ஒரு மதிப்பை தீர்மானிக்கும் அதிகாரம் ஒருவரிடம் இருக்கும்போது, குறைக்கப்படும் பெருந்தொகைக்கு ஏற்ப ஒரு சிறுதொகையை இழக்க வேண்டும்.

விபத்துக்காக முதல் தகவல் அறிக்கை எழுதவேண்டுமானால், காவல்நிலையம் சொல்லும் வழக்கறிஞரை ஏற்று, காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம், 30 சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.

இலவச கலர் டிவி பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற ரூ.100 வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பல நாளிதழ்களில் வந்தாகிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.

அரசு அறிவிக்கும் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு பொருளோ, வங்கி வரைவோலையோ தயாராக இருந்தாலும், “ரொக்கத்தை’ கொடுத்தால்தான் அவை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

பொதுமக்களிடம் பெறும் லஞ்சத்தைவிட அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் பல மடங்காக இருக்கிறது.

பல ஏழை விவசாயிகளின் நிலங்களில் மானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பெழுதி, கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய் மானியம் ஆண்டுதோறும் “முளை’ காட்டாமல் மறைந்து விடுகிறது.

ஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அவர்களது செலவுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால், தணிக்கைத் துறை அலுவலர்களையே ஏமாற்றுகிற அளவுக்கு பொய் ரசீதுகளும் சட்டத்தின் ஓட்டைகளும் சரிபார்ப்பவரை சரிகட்டுவதும் தாராளமாக இருக்கின்றன.

லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுத்தாலும் எத்தனை வழக்குகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்?

இவை யாவும் மக்கள் ஏற்படுத்திய பழக்கம் என்றும், அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் என்றும் சொல்லப்படும் பொதுவான கருத்து ஏற்புடையதாக இல்லை.

முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, அரசு அலுவலகங்களில் பரவியுள்ள ஊழலை அரசு அலுவலர்களால்தான் தடுக்க முடியும்.

எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்தத் துறை மற்றும் எந்தெந்த அலுவலர் மூலமாக எவ்வளவு தொகை போகிறது என்ற கணக்கெல்லாம்கூட பொதுவாகப் பேசும்போது ஊழியர் சங்கங்கள் வெளிப்படையாகப் பேசுகின்றன. ஆனால் அதை ஓர் அறிக்கையாகக்கூட இச் சங்கங்கள் வெளியிட்டதில்லை.

“”அரசு விழாக்களுக்கு செலவாகும் கூடுதல் தொகைக்காக எங்கள் ஊழியரை வசூல் வேட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று எந்த தொழிற்சங்கமும் போர்க்கொடி தூக்கியதில்லை. ஊழல் செய்யும் அமைச்சரின் முகமூடியைக் கிழிப்பதில்லை.

எந்தெந்த அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பது சக ஊழியருக்குத் தெரியும். ஊழியர் சங்கத்துக்கும் தெரியும். தெரிந்திருந்தும், லஞ்சம் வாங்கும் ஊழியரை இடைநீக்கம் செய்தாலோ, பதவியிறக்கம் செய்தாலோகூட சங்கம் கொதித்தெழுகிறது. அவரைப் பாதுகாக்கிறது. அதே சமயம், அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. சங்கத்தைவிட்டு அவரை வெளியேற்றியதும் இல்லை.

எத்தனை அறிவார்ந்த தத்துவம் பேசும் அரசியல் கட்சியைச் சார்ந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஊழல் அலுவலரை உறுப்பினராக வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதில்லை.

இப்போது சொல்லுங்கள்…

லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?

Posted in abuse, Allegations, America, Assassinations, Bangladesh, Biz, Blair, Bribery, Bribes, British, Burma, Bush, Business, Cabinet, Campaign, China, Commonwealth, Contribution, Corruption, crimes, Democracy, Dictators, Dictatorship, Dubya, Elections, England, English, Ferdinand, Finance, Food, Freedom, GWB, Haseena, Hasina, Imelda, Independence, India, Indonesia, Iraq, Khaled, Kingdom, Kings, Laundering, Law, Leaders, Lokpal, London, Luxury, Marcos, Military, Minister, MLA, Money, MP, Murder, Mynamar, Nawaz, Needy, nexus, oil, Order, Pakistan, Party, Phillipines, PM, Politics, Polls, Poor, Power, President, Prince, Princes, Princess, Princesses, Queens, Rich, Saddam, Sharif, Sheikh, Shoes, Suhartho, Suharto, Taiwan, Tamil, Thailand, Tony, UK, US, USA, Wealth, Zia | Leave a Comment »

Corruption & Powerful world Leaders – Lobbying, Kickbacks in the International Politics

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 2, 2007

உறுத்து வந்து ஊட்டும் ஊழல் வினை!

க. ரகுநாதன்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர்கள் ஷேக் ஹசீனா, கலீதா ஜியா, பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா, தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ரா – இவர்கள் அனைவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. எல்லோரும் அந்தந்த நாடுகளின் இப்போதைய அரசுகளால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்.

இவர்களுள் தக்ஷின ஷினவத்ரா தவிர மற்ற மூவரும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் வெளிப்படையான காரணமாக இருப்பவை – ஊழல் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவையே.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தமது ஆட்சிக்காலத்தில் தஜுல் இஸ்லாம் ஃபரூக் என்ற தொழிலதிபரை மிரட்டி சுமார் 4 லட்சத்து 41 ஆயிரம் டாலர்கள் பெற்றது, எதிர்க்கட்சியினரைக் கொலை செய்யத் திட்டமிட்டது உள்ளிட்ட புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டார்.

கலீதா ஜியா தமது இளைய மகன் அராஃபத் ரஹ்மான் கோகோவின் நிறுவனத்துக்கு அதிகாரத்தை, தவறாகப் பயன்படுத்தி சலுகை வழங்கியதாக அந்நாட்டு இடைக்கால அரசால் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்தின் ஷின் கார்ப்பரேஷன், தொலைபேசி சேவை உள்பட பல்வேறு தொழில்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனம். இது அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ராவின் குடும்பத்துக்குச் சொந்தமானது. இதை விற்றபோது 190 கோடி டாலர்கள் வரிஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த பல்வேறு அரசியல் குழப்பங்கள், எதிர்ப்பை அடுத்து, கடந்த ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார் ஷினவத்ரா. ராணுவ வீரர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ராணுவப் புரட்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

எல்லோருக்கும் உண்டு அரசியல் ஆசை; குறிப்பாக, திரைப்பட நடிகர்களுக்கு. சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து அரசியல் ஆசையில் களம் கண்டு வெற்றியும் பெற்று இறுதியில் வீழ்ந்தவர் பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா (70). அண்மையில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது; அதுமட்டுமன்றி, அவர் இனி எந்த ஒரு பதவியையும் வகிக்க முடியாதபடி தடை விதிக்கப்பட்டது.

பிலிப்பின்ஸின் ஏழைப் பங்காளனாகவே பார்க்கப்பட்டவர் ஜோசப் எஸ்ட்ரடா. ஏழ்மையில் இருக்கும் ஒவ்வொரு பிலிப்பின்ஸ் குடிமகனுக்கும் எஸ்ட்ரடாவைத் தெரியும் என்பார்கள். காரணம், சுமார் 100 திரைப் படங்களில் ஏழைகளின் பாதுகாவலனாக நடித்து அதன்மூலம் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அவர்.

அவருக்கும் வந்தது அரசியல் ஆசை!. 1969-ம் ஆண்டு தலைநகர் மணிலா அருகே உள்ள ஸôன் ஜுவான் நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது துவங்கியது அவரது அரசியல் பயணம். ஏறக்குறைய 16 ஆண்டுகள் அந்நகரின் மேயராக இருந்தார்.

அடுத்து அவர் வைத்த குறி, அதிபர் பதவி. 1998-ம் ஆண்டு நடந்த தேர்தலில், நம் ஊர் போலவே அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்து அதிபர் பதவி அளித்தனர் அந்நாட்டு மக்கள்.

பதவிக்கு வரும் வரை ஏழைப் பங்காளனாக இருப்பேன் என்று கூறுவோர், பதவி கிடைத்தும் பின் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் திளைப்பது வழக்கம்தான். இதற்கு இந்த முன்னாள் நடிகர் ஜோசப் எஸ்ட்ரடாவும் விதிவிலக்கல்ல.

நாட்டில் சட்டவிரோதமாக நடந்த சூதாட்டத்தை ஆதரித்தார் எஸ்ட்ரடா. சூதாட்டக்காரர்கள் வென்ற பணத்தில் இருந்து 80 லட்சம் அமெரிக்க டாலரை அவர் லஞ்சமாகப் பெற்றார். “அதை நான் வாங்கிக் கொடுத்தேன்’ என அந்நாட்டின் மாகாண ஆளுநர் லூயிஸ் ஸிங்ஸன் கூறியபோதுதான் வந்தது வினை. புகையிலை விவசாயிகள் கூட்டுறவு சங்கத்துக்கான அரசு மானியத்தில் 26 லட்சம் டாலர் ஊழல் செய்ததாகவும் எஸ்ட்ரடா மீது புகார் எழுந்தது.

இதையடுத்து 2000-ம் ஆண்டு எஸ்ட்ரடாவைப் பதவிநீக்கம் செய்ய முயன்றது பிலிப்பின்ஸ் நாடாளுமன்றம். எனினும் அது நிறைவேறவில்லை.

2001-ம் ஆண்டு ராணுவம் அவரைப் பதவியில் இருந்து விரட்டிவிட்டு, துணை அதிபர் குளோரியா மகபாகல் அரோயாவை அதிபர் ஆக்கியது.

மொத்தம் 8 கோடி டாலர் ஊழல் தொடர்பாக நடந்த வழக்கில் எஸ்ட்ரடாவுக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம். பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஃபெர்டினாட் இமானுவல் மார்கோஸ், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபருமான எர்ஷாத், தனது அமைச்சரவை சகாக்களின் மீதான ஊழல் புகார்களை அடுத்து அண்மையில் ராஜிநாமா செய்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பெரு நாட்டில் மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் செய்தததை அடுத்து, சிலியில் தஞ்சம் புகுந்து, அந்நாட்டு நீதிமன்றத்தால் அண்மையில் வெளியேற்றப்பட்ட பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பெர்ட்டோ ஃபுஜிமோரி என – பலரைக் குறிப்பிடலாம். ஊழல் விஷயத்தில் நம் நாட்டின் தலைவர்கள் பற்றி நீண்ட பட்டியலே போடலாம்!.

நல்லவர்களாகத் தெரியும் இத் தலைவர்கள் ஆட்சிக்கு வந்தால் வல்லவர்களாக இருப்பர். நம்மைச் சூழ்ந்துள்ள இன்னல்களைக் களைவர் என்று நம்பும் சாதாரண மக்களின் நம்பிக்கை சிதைக்கப்படும் போது அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது இதுபோன்ற நீதிமன்றத் தீர்ப்புகளே.

முன்னர் செய்த செயலுக்குரிய விளைவுகள் ஒருவனை வந்தடைந்தே தீரும் என்பதற்காக “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்றது சிலப்பதிகாரம். ஊழ்வினை மட்டுமல்ல, “ஊழல்’ வினையும்தான் உரிய தண்டனையைப் பெற்றுத் தரும்.

Posted in Abe, Army, Bangladesh, Bhutto, Biz, Business, Cinema, Corruption, Courts, Democracy, Films, Freedom, Govt, Hasina, HC, Independence, International, Japan, Justice, Khaleda Zia, Khaledha, kickbacks, Law, Leaders, Lobbying, Military, Movies, Musharaf, Musharaff, Musharaph, Musharraf, Nawaz, Order, Peru, Pervez, Phillipines, Politics, Rule, SC, Sharif, Sheriff, World, Zia | Leave a Comment »

President Iajuddin Ahmed intervenes in crisis in Bangladesh

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006

வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் அந்நாட்டின் அதிபர்

வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக அந்நாட்டு அதிபர் இஜாவூதின் அஹமது பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

வங்கதேசத்தின் பிரதான அரசியல் கட்சிகள், வேட்பாளர் ஒருவரை ஏற்க மறுத்தத்தினை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சர்ச்சையினை நீக்கும் முயற்சியாக அதிபர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

வங்கதேசத்தின் தேர்தல் சட்டங்களின்படி, ஜனவரி மாதம் நடைபெறும் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதற்கு, கட்சி சார்பில்லாத ஒருவர் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை ஏற்க வேண்டும்.

முன்னதாக அரசாங்கம் தெரிவித்த வேட்பாளரை எதிர்கட்சிகள் ஏற்காத காரணத்தினால், வேறு ஒரு வேட்பாளரை நிறுத்த நான்கு பிரதான கட்சிகளுக்கும், அதிபர் இன்று வரை கால அவகாசத்தினை கொடுத்திருந்தார்.

இந்நிலையில் வங்கதேச அதிபர் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்று இருப்பதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான அவாமி லீக், தொடர்ந்து போராட்டம் நடத்த போவதாக கூறியுள்ளது.

அரசியல் சர்ச்சையினால் வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி பதினெட்டுப் பேர் பலியாகியுள்ளனர்.

Posted in Bangladesh, caretaker, Chief Justice K.M. Hasan, Crisis, Government, Iajuddin Ahmed, President, Sheikh Hasina, South Asia, Zia | Leave a Comment »