Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Year’ Category

Tamil New Year: Thai Pongal or Chithirai First Day? – S Ramachandran

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2008

சித்திரையில்தான் புத்தாண்டு

எஸ். ராமச்சந்திரன்

இக் கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

சங்க இலக்கியங்களில் “தைந்நீராடல்’ எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.

அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் – சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் – அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

இந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.

கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும் தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் Spring எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.

கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட “ஏரீஸ்’ வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.

இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி – சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது “”மீன மேஷம் பார்த்தல்” என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.

இப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா?

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.

மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். (“”நாஞ்சிற்பனைக் கொடியோன்” – புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.

பலராமனை “புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு’ குறிப்பிடுகிறது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.

பூம்புகாரில் இந்திர விழாவின்போது “”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து” மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 – 69களில் குறிப்பிடப்படுகிறது.

பிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா? இவை இரண்டிற்குமே தெளிவான விடை “”அல்ல” என்பதுதான்.

சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.

ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை – 360 பாகைகளை – 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.

சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

சோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில் “”இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்” என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12).

தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.

பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி – பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.

பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.

வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.

“”திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 – 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட “ஏரீஸ்’ என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.

இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 – 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் – முதுவேனில், கார் – கூதிர், முன்பனி – பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் – ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.

சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 – 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, “”தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்” என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

இனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் “”பிரபவ” தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை “”வியாழ வட்டம்” (Jovian Circle) எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், “இனம் புரிந்த’, இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.

இந்தியா “”தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற” காலகட்டத்தில், “”நேரங் கெட்ட நேரத்தில்” மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் “”தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு” என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் “சுதந்திர’மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: “”சித்திரையில்தான் புத்தாண்டு”.

(கட்டுரையாளர்: தொல்லியல் ஆராய்ச்சியாளர்)
—————————————————————————————————————————-
தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு

தமிழண்ணல்

இன்றும் சோதிடம் பார்ப்பவரிடம் சென்று, பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். கணி, கணியம் – வானநூல். கணியின் – வான நூல் வல்லவன்.

கணியர் – சோதிடம் பார்த்துக் குறி சொல்பவர். இதனைப் ஓர் அறிவியலடிப்படையில் தமிழர்கள் பின்பற்றி வந்ததற்கான சான்றுகள் மிகப் பலவுள. கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே எனத் தொடங்கும் பாடல், அவரது வானநூல் அறிவின் வழிப்பட்டதே யாகும். பக்குடுக்கை நன்கணியார் என்பவர் ஒரு புறநானூற்றுப் புலவர். இவரைப் பற்றி உ.வே.சா. அவர்கள், நன்கணியார் என்பது இவரது இயற்பெயர்; கணி – சோதிடம் வல்லவன் என் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளார்.

பதினெண்கீழ்க்கணக்கில் திணைமாலை நூற்றைம்பது, ஏலாதி எனும் இரு நூல்களை எழுதியவர் கணி மேதாவியார் அல்லது கணிமேதையார் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.

சேரன் செங்குட்டுவன் வடநாட்டு வெற்றி முடித்து, கங்கைக் கரையில் இருந்தபோது, தன்னுடன் இருந்த கணியிடம், வஞ்சி நீங்கி எவ்வளவு காலம் ஆயிற்று என்று அறிய விரும்புகின்றான். அக் காலத்தில் பிறைச் சந்திரனின் வளர்ச்சியையும் தேய்வையும் வைத்துத் தான் நாட்களைக் கணக்கிட்டனர்.

சேரன் வானத்தே யுள்ள பிறையை நோக்கினானாம். அவனது குறிப்பை அறிந்த கணி நாம் வஞ்சி நகரை நீங்கி வந்த முப்பத்திரண்டு மாதங்கள் ஆயின என்றான். பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க; இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன், எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது (காதை 27: 146-149) என்பது காண்க. மதியமே பிறகு மாதம் ஆனது. திங்கள் என்பதும் அதுவே. அற்றைத் திங்கள் எனத் தொடங்கும் பாரி மகளிர் பாட்டும் காணலாம் (புறம்-112) சிலப்பதிகாரத்தில் ஆசான் பெருங்கணி அமைச்சருக்கு நிகராகவும் கருதப்படுகிறான். அவன் அரசனின் அருகில் இருக்கும் தகுதி பெற்றுள்ளான் (சிலம்பு: 22-8, 26-3).

குறுந்தொகையில், கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் பாடிய பாடலொன்றுளது. அதில் கூந்தல் தவழும் தலைவியின் நெற்றி எட்டாம் நாள் பிறைமதி போல அழகாக அளவாக இருந்தது என்ற குறிப்புக் காணப்படுகிறது.

மாக்கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் . . . (குற.129). தமிழ்த் தாத்தா உ.வே.சா. இதற்கு எட்டாவது திதி, அட்டம் என்று விளக்கம் எழுதுகிறார். எண் நாள் பக்கம் – இன்று பக்கம் என்பதையே – பக்ஷம் என வடமொழியாக்கி வழங்குகின்றனர்.

இவ்வளவும் எழுதக் காரணம் தமிழர்கள் வானில் தோன்றிய மதியத்தை, நாட்காட்டியாகக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குவதற்கேயாம். உவாப் பதினான்கு என்பது பிங்கல நிகண்டு. பதினான்கு நாள் வளர்பிறை, பதினைந்தாம் நாள் முழுமதி (பௌர்ணமி). அடுத்த பதினான்கு நாள் தேய்பிறை. பதினைந்தாம் நாள் மறைமதி (அமாவாசை). ஆக முப்பது நாட்களைக் கொண்டு மதியம் (மாதம்), திங்கள் கணக்கிடப்பட்டது.

நாள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்பதே முன்னைய பொருள். கோள்-கிரகம். நாளும் கோளும் என்பது உலக வழக்கு. 27 நாள்கள் (நட்சத்திரங்கள்) என்பதாலும் இரண்டையும் சேர்த்துக் கணக்கிட்டதாலும் மாத நாட்களில் ஒன்றிரண்டு கூடுதல், குறைவானது.

கோள்களை (கிரகங்கள்) வைத்து, ஒரு வாரம் -ஞாயிறு முதலாகக் கணக்கிடப்பட்டது. இராகு கேது நீங்கலாக ஏழு கோள்களுக்கு (கிரகங்களுக்கு) ஏழு நாட்களாயின.

ஆகவே கோள்களை வைத்து ஒரு வாரம் என்பதையும், நாள்களை வைத்தும் மதியத்தை வைத்தும் மாதத்தையும், சூரியனை வைத்து ஆண்டினையும் தமிழர்கள் கணக்கிட்டனர். இதற்கு மேலும் நூறு சான்றுகள் உள.

சித்திரைத் திங்கள் இளவேனிற் காலத்தின் தொடக்கம். இதனை வசந்த காலம் என்பதுண்டு. பனிக் காலம் முடிந்து, இளவேனில் (வசந்தம்) வந்ததும் மக்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அதனை ஆண்டின் தொடக்கம் என்பதற்காகக் கொண்டாடவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் ளுயீசபே எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டு தொடக்கமாகக் கருதினர்; வசந்த காலம் தொடங்குவதற்கு அறிகுரியாகக் கொண்டாடினர் என்று கட்டுரையாளர் (தினமணி 24-1-2008) குறிப்பிடுகிறார். தமிழர்களும் இவ் வசந்த காலத்தைக் கொண்டாடிய செய்தி, நிரம்பக் குறிக்கப் பெற்றுள்ளது.

காதலர்கள் ஆறுகளிலும் அருவிகளிலும் நீராடியும், பூங்காக்களில் விளையாடியும் இன்பம் நுகர்ந்ததோடு, மதுரையில் இலக்கிய விழாக்களும் நடை பெற்றனவாம். புதிய நூல்கள் அரங்கேற்றப் பெற்றனவாம்.
மகிழ்துணைப் புணர்ந்தவர் (காதலர்) வில்லவன் விழவினுள் விளையாடும்பொழுது; நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார், புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுது என்று இது பலவாறு குறிக்கப்படுகிறது (கலி. 35). இவ்விழா – காலப் போக்கில் சமய விழாவாக மாறி, நாயக்க மன்னர் காலத்தில் இன்றைய சித்திரைத் திருவிழா ஆனது.

அதற்காக கிரேக்க, உரோமானியரோ, தமிழரோ இதை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டனர் என்பது முறையாகாது.

இனி, ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி, முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் – தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம், உத்தராயனம் என்பர். இது மேஷராசி யில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது – ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு – முன்பு யாடு என்றே வழங்கியது.

இதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து, பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு- ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர (15) யாண்டு ஓர் அனைய ஆக (90) என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க, ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக, ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71) என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. யாடு (மேடம்) இராசியில் மாறுவதால், யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம், ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர்.

அது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக, விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என (நெடுநல். 160, 161) ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு – மேட ராசியே முதலாவதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்; மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும் என்று தெளிவாக எழுதுகின்றவர், சித்திரை மாதத்தைக் குறிப்பிடுவது தடுமாற்றமாகவுளது.

மேஷம் என்பதற்கு – முற்பட்ட யாடு, ஆடு எனும் சொல் மேட இராசியைக் குறிக்க, அதனடிப்படையில் சூரியனின் சுழற்சியை வைத்து, தமிழர் ஆண்டினைக் கணக்கிட்டதால், தமிழர்களின் வானநூல் முறைப்படி – யாட்டு, யாட்டை, ஆண்டு என மாறி வழங்கிய இதனைச் சான்றாகக் கொண்டு, தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கமெனக் கொள்வதே தக்கதாகும். சித்திரை முதல்நாள் – இளவேனிலின் (வசந்தத்தின்) தொடக்கமாகும். ஆண்டுத் தொடக்கமாகாது. அது இன்று கோடை காலம் ஆனது, பருவ மாற்றங்களின் கொடுமையாகும்.

தமிழறிஞர்கள் சிலர் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, தமிழ்ப் புத்தாண்டை வகுத்துவிட்டனர் எனக் குறிப்பிடுவது, மிகைப்பட்ட நகையாடலாகவுளது. செம்மொழி என அறிவிக்கப்பட்டு, அதன்பின் அச் செம்மொழி பயின்ற தமிழறிஞர்களை அறவே புறக்கணித்துவிட்டுத் தமிழை வளர்ப்பதும், அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதும் கூடி வரும் இந் நாளில், தமிழறிஞர்கள் நகையாடப்படுவது இயல்பேயாகும்.

——————————————————————————————-

அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்

பழ. நெடுமாறன்



தமிழர் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள் என்பதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவைக் கொண்டுவந்து அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்க ஒரேமனதாக நிறைவேற்றுவதற்கு வழிசெய்த முதல்வர் கருணாநிதியைப் பாராட்டுகிறேன்.

தொன்மை வாய்ந்த மொழியான தமிழுக்கும், மூத்த குடியினரான தமிழர்களுக்கும் தனியாகப் புத்தாண்டு என்பது இல்லையா? காலப்பாகுபாடு பற்றிய கருத்தோட்டம் தமிழர்களிடம் கிடையாதா? என்ற கேள்விகள் எழுகின்றன.

சங்ககாலத் தமிழர் ஓர் ஆண்டை ஆறு பருவங்களாகப் பகுத்தனர். ஒவ்வொரு பருவமும் இரண்டு மாதங்களைக் கொண்டிருந்தன. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என வழங்கப்பட்ட இந்த ஆறு பருவங்கள் தமிழுக்கே உரிய அகத்தினை மரபின் அடிப்படையாகும்.

குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் தென்திசையில் நின்ற கதிரவன் வடதிசைக்குச் செல்லத் தொடங்கும் (உத்தராயணம்) நாளையும் இணைத்துக் கொண்டாடினர். இதன் மூலம் தைத்திங்கள் முதல்நாள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றது.

தமிழ்நாட்டில் கிடைத்துள்ள இலக்கிய, கல்வெட்டு சான்றுகளின்படி ஞாயிற்றை அடிப்படையாகக் கொண்டதும் சித்திரையில் தொடங்கப் பெறுவதுமான ஞாயிற்று ஆண்டுக் கணக்கு ஒன்றும், கல்வெட்டுச் சான்றுகளின்படி வியாழனை அடிப்படையாகக் கொண்ட வியாழ ஆண்டுக் கணக்கு ஒன்றும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஞாயிற்று ஆண்டை சோழ மன்னர்களும், வியாழ ஆண்டை பாண்டியர்களும், சேரர்களும் பின்பற்றியுள்ளனர் என முனைவர் க. நெடுஞ்செழியன் கூறியுள்ளார்.

சிந்து சமவெளி நாகரிக மக்களால் பின்பற்றப்பட்ட ஆண்டு வியாழ ஆண்டே என்பதை ருசிய அறிஞர்கள் நிறுவியுள்ளனர். 1985ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற மகாநாட்டில் ஆய்வுரை வழங்கிய அறிஞர்கள் இந்த உண்மையை வெளியிட்டனர். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்துசமவெளியில் பரவியிருந்த நாகரிகம் எகிப்திய மெசபடோமிய நாகரிகங்களைவிட மிக முந்தியது. அதிகமான பரப்பில் பரவியிருந்தது என்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 14-10-85ம் நாளிட்ட தினமணி இதழ் இச்செய்தியை விரிவாக வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 60 ஆண்டு கணக்குமுறை வியாழ ஆண்டிற்கு உரியதாக இருந்தது. பின்னர் ஞாயிற்றாண்டோடு இது கலந்துவிட்டது. இந்த முறை கி.பி. 312ஆம் ஆண்டில் தொடங்கியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயினும் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னர்களால் இம்முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை கல்வெட்டுகள் வழியாக அறிய முடிகிறது.

ஞாயிற்று ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டிற்கு 365 நாள்கள் என வகுத்ததும் தமிழர்களே என்பதை கிரேக்க நாட்டுப் பயணியான மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புகளின் மூலம் அறிகிறோம்.

சாலிவாகன சகம் என்ற ஆண்டுமுறை சித்திரை மாதத்தை முதல் நாளாகக் கொண்டிருந்தது. இதுதவிர பசலி, கொல்லம் என்னும் தொடர் ஆண்டுகளும் தமிழகத்தில் வழக்கில் இருந்தன.

பண்டைத் தமிழ் மக்கள் ஒரு தலைநகரின் தோற்றம் அல்லது பேரரசன் பிறப்பு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடராண்டு கணித்து வந்தனர் என்பது பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுவந்த குறிப்புகளால் அறிய கிடக்கிறது என புலவர் இறைக்குருவனார் கருதுகிறார்.

அரசர்கள் முடிசூட்டிக்கொண்ட ஆட்சித் தொடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வரசர் பெயரோடு ஆட்சி ஆண்டு என்று குறிப்பிடும் மரபு பிற்காலச் சோழர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் எடுத்துக்கூறுகின்றன.

தமிழ்நாட்டிற்கு ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு கிரிகேரியன் ஆண்டு என அழைக்கப்படும் கிறித்துவ ஆண்டுமுறை பழக்கத்திற்கு வந்தது.

கிசிரி முகமதிய ஆண்டுமுறை நபிகள் நாயகம் மக்காவிலிருந்து மதினாவுக்குப் புறப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட ஒன்றாகும். புத்த மதத்தவர் புத்தர் முக்திபெற்ற நாளின் அடிப்படையில் ஆண்டுமுறையை வகுத்துக் கொண்டுள்ளனர். அதைப்போல மகாவீரர் முக்தி பெற்ற நாளினை அடிப்படையாகக் கொண்டு மகாவீரர் நிர்வாண ஆண்டு சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.

எனவே தமிழர்களுக்கு தொடர் ஆண்டு இல்லாத குறைபாட்டினை போக்குவதற்காக கி.பி. 1921ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவராண்டு முறையை தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென முடிவு செய்தனர்.

திருவள்ளுவர் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு என கொண்டு கி.மு. 31ஆம் ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு இந்த ஆண்டுமுறை வகுக்கப்பட்டது. ஆனாலும் பிற்காலத்தில் கிடைத்துள்ள பல்வேறு புதிய சான்றுகளின் மூலம் திருவள்ளுவரின் காலம் இன்னும் பழமையானது எனக் கருதும் அறிஞர்களும் உள்ளனர்.

6-12-2001 அன்று மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாட்டில் தை முதல் நாளே தமிழ் ஆண்டின் தொடக்க நாள் என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும் இறுதியான முடிவு தெரியும்வரை மறைமலையடிகள் தலைமையில் வகுக்கப்பட்ட திருவள்ளுவராண்டு கணக்கினை தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர்.

1972ஆம் ஆண்டில் முதல்வராக கலைஞர் கருணாநிதி பதவி வகித்தபோது திருவள்ளுவராண்டு முறையினை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றது. அரசிதழிலும் அரசு வெளியிட்ட நாள்காட்டி, நாள்குறிப்பு ஆகியவற்றிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

1983ஆம் ஆண்டில் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, தமிழக அரசின் அனைத்து அலுவல்களிலும் திருவள்ளுவராண்டினை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனாலும் தமிழர் ஆண்டு என்ற பெயரில் வடமொழிப் பெயர்களைக் கொண்ட ஆண்டுப்பெயர்கள் கடைப்பிடிக்கப்பட்டன. சித்திரை முதல் நாள் தமிழாண்டு பிறப்பு என்பதும் தொடர்ந்தது. இதன் விளைவாக திருவள்ளுவராண்டு வகுக்கப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அதனை அரசு ஏற்றுக்கொண்ட போதிலும் நடைமுறையில் அது செயலுக்கு வரவில்லை.

எனவே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் சித்திரை முதல்நாளா, தை முதல்நாளா என்ற குழப்பம் நிலவியது.

தமிழறிஞர் கா. சுப்பிரமணியபிள்ளை போன்றவர்கள் ஆவணி மாதமே பண்டைத் தமிழ்நாட்டில் ஆண்டுத் தொடக்க மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டது என கருதினார்கள்.

இந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் முதலமைச்சர் கருணாநிதி தை முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை சட்டப்பூர்வமாக ஆக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால் உலகத் தமிழர்களைக் கணக்கிலோ கவனத்திலோ எடுத்துக்கொள்ளப்படாமல் தமிழக சட்டமன்றத்தில் மட்டும் இத்தகைய சட்டமுன்வடிவு ஏற்கப்படுவது முறையானது அல்ல.

தமிழர் பண்பாட்டுத் தளத்தில் மிக முக்கியமான முடிவு இதுவாகும். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு தலைமுறைதலைமுறையாகத் தமிழர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதுமாகும்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பழமையான அமைப்புகளான மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தை தமிழ்ச்சங்கம், தமிழகப் புலவர் குழு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ்த்துறைத் தலைவர்கள், தமிழ் வரலாற்று அறிஞர்கள், தமிழ் கல்வெட்டு அறிஞர்கள் மற்றும் இலங்கை, மலேசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பல நாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை தமிழக முதலமைச்சர் கூட்டி தை திங்கள் முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை நன்கு ஆராய்ந்து ஏற்கச் செய்து அதன்பிறகு இதனை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருந்தால் அவரது பெருமையும் உயர்ந்திருக்கும். உலகத் தமிழர்களும் இதை மகிழ்ச்சியுடன் பின்பற்றத் தொடங்கியிருப்பார்கள்.

1982ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மறைந்த பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் உரையாற்றிய கூட்டத்தின் முடிவில் மாணவர்கள் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நேரம் அது. அந்த மாணவர் அது குறித்து கேள்வி கேட்டார்.

“”தமிழ்நாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்திருக்கிறீர்களே ஏன் எங்களைக் கேட்கவில்லை. தமிழ் உங்களுக்கு மட்டுமே சொந்தமா?” என்ற கேள்வியை அவர் எழுப்பியபோது நான் ஒரு கணம் திகைத்துப்போனேன். ஆனால் மறுகணமே அந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தை, தவிப்பை உணர்ந்தேன்.

“தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிவிப்பதற்கு முன்னால் ஈழத்தமிழ் அறிஞர்களையும், பிறநாட்டுத் தமிழ் அறிஞர்களையும் அழைத்துக் கலந்துபேசி முடிவெடுத்திருக்க வேண்டும் என்பதை அந்த மாணவரின் கேள்வி எனக்கு உணர்த்திற்று. தமிழகத்திற்கு நான் திரும்பி வந்தபோது, தமிழக சட்டமன்றத்தில் இது குறித்துப் பேசினேன். பேரவையில் இருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என்னை அழைத்துப் பேசி முழு விவரத்தையும் கேட்டறிந்தார். எழுத்துச் சீர்திருத்தம் பிரச்னையில் மட்டுமல்ல. தமிழில் கலைச்சொற்கள், அறிவியல் சொற்கள் போன்றவற்றின் உருவாக்கத்திலும் உலகத் தமிழறிஞர்கள் பங்கேற்க வேண்டிய அவசியத்தை நான் வலியுறுத்தினேன். இல்லையென்றால் வெவ்வேறு விதமான கலை, அறிவியல் சொற்கள் உருவாகிவிடக்கூடிய அபாயத்தையும் சுட்டிக்காட்டினேன். எனது கோரிக்கையின் நியாயத்தை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உணர்ந்தார். உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார்.

திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாள் எது என்பதை முடிவு செய்யும் உரிமையும் நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. உலகத்தமிழர்களுக்கும் சொந்தமானது. அவர்களையும் கலந்துகொண்டு செய்திருந்தால் மட்டுமே அந்த முடிவு நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.

Posted in 60+, Ambedkar, Ancient, Anniversary, Aries, Arya, Aryan, Astronomy, Beeshma, Beeshmar, Belief, Bheeshma, Bheeshmar, Bhishma, Bhishmar, Bishma, Bishmar, Brahminism, Calendar, Celebrations, Cheran, Chithirai, Cholan, Cholas, Chozan, Chozhan, Chozhas, Culture, Customs, Days, Devas, DMK, Dravida, Dravidian, Dravidianism, Events, EVR, Festivals, first, Functions, Greece, Greek, Hindu, Hinduism, Hindutva, History, Holiday, Horoscope, Indhira, Indhiran, Indhra, Indhran, India, Indiran, Indra, Indran, Inthiran, Issues, January, Jovian Circle, Kural, Leave, Literature, months, Moon, New, Paappaan, Pandian, Pandias, Pandiyan, Pandiyas, Pappaan, Parsian, Periyaar, Periyar, Persia, Persian, Pisces, Pongal, Poombugar, Poombuhar, Poombukar, Poompugar, Poompuhar, Poompukar, Religion, Roman, Sangam, Sangamam, Sanskrit, Seasons, Signs, Sithirai, Spring, Summer, Sun, Temples, Thai, Thamil, Thirukkural, Thirukural, Thiruvalluvar, TN, Tradition, Valluvar, Winter, Year, Years | 3 Comments »

2008 – International year of sanitation, languages, planet Earth and the potato

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த 2008

இதற்கு முந்தைய ஆண்டுகளை விட புதிய 2008ம் ஆண்டு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக உள்ளது.

  • சர்வதேச சுகாதார துாய்மை ஆண்டு,
  • சர்வதேச மொழிகள் ஆண்டு,
  • சர்வதேச புவி ஆண்டு மற்றும்
  • சர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டாக 2008ம் ஆண்டை ஐ.நா., அறிவித்து, பெருமைப்படுத்தியுள்ளது.

இந்த நான்கு முக்கிய நோக்கங்களுடன் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஐ.நா., முயற்சி செய்து வருகிறது. சர்வதேச சுகாதார துாய்மை ஆண்டு: நாம் வாழும் பகுதியை துாய்மையாக வைத்திருந்து சுகாதாரம் பேணுவதே 2008ம் ஆண்டின் நோக்கமாக ஐ.நா., அறிவித்துள்ளது. உலகில் 260 கோடி மக்களுக்கு கழிப்பிட மற்றும் சுகாதார வசதி இது வரை கிடைக்கவில்லை.

இவர்கள் ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 41 சதவீதம். இதனால், 20 கோடி டன் மனிதக்கழிவுகள் திறந்த வெளியில் நோய் உற்பத்திக் கூடங்களாக உள்ளன. வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும், இது பிரச்னையாகவே உள்ளது. இது போன்ற சுகாதார சீர் கேட்டால் எளிதில் தவிர்த்துவிடக்கூடிய வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்றுக் நோய்களுக்கு ஏழைகள் ஆளாகிறார்கள். இந்த பிரச்னையால், உலக அளவில் 20 வினாடிக்கு ஒரு குழந்தை இறப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. தடுக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு 15 லட்சம் குழந்தைகள் இறப்பதைத் தடுக்க முடியும். 2015ம் ஆண்டுக்குள் உலகில் அடிப்படை சுகாதார வசதி இல்லாத மக்களில் பாதிப்பேருக்காவது அந்த சுகாதார வசதி கிடைக்க செய்ய வேண்டும் என்ற ஐ.நா.,வின் மில்லினிய இலக்குக்காகத்தான் இந்த ஆண்டை கடைபிடிக்க 2006ம் ஆண்டிலேயே ஐ.நா., முடிவு செய்தது.
சர்வதேச மொழிகள் ஆண்டு: உலகின் பல்வேறு மொழிகளை சிறப்பிக்கும் வகையில் சர்வதேச மொழிகள் ஆண்டாக 2008ஐ கடைபிடிப்பது என ஐ.நா., பொதுச்சபை முடிவு செய்துள்ளது. உலகின் வேறுபட்ட கலாசாரம், பன்முகத்தன்மையை இது வளர்க்கும் என்று ஐ.நா., நம்புகிறது.

  1. அரபு,
  2. சீனம்,
  3. ஆங்கிலம்,
  4. பிரெஞ்சு,
  5. ரஷ்யன் மற்றும்
  6. ஸ்பானிஷ்

ஆகிய ஆறு மொழிகள் ஐ.நா.,வின் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. இந்த ஆறு மொழிகளுடன் இந்தி மற்றும் போர்ச்சுக்கீசிய மொழிகளுடன் மொத்தம் 8 மொழிகள்தான் உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றன.உலகம் முழுவதும் 6 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன.இவற்றில் பெரும்பாலான மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. 417 மொழிகள் மிக மோசமான நிலையில் உள்ளன. கலாசாரம் மற்றும் நாகரிகம் ஆகியவற்றை அளவிடும் அளவுகோல்களாக மொழிகள் கருதப்படுகின்றன. மொழி அழிவது ஒரு சமூகம் அழிவதையே குறிப்பிடும். ஆகவே, அவற்றை காப்பாற்றும் பொறுப்பு அரசுகளுக்கு உண்டு. இதையடுத்து யுனெஸ்கோ நிறுவனம், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் அழியும் நிலையில் உள்ள மொழிகளை காப்பாற்ற அழைப்பு விடுத்துள்ளது.

சர்வதேச புவி ஆண்டு: சர்வதேச புவி ஆண்டாக 2008 அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட முக்கிய விஷயங்களில், இந்த ஆண்டு கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இயற்கை மற்றும் மனித முயற்சிகளால் நாம் வாழும் உயிர்கோளத்துக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி அறிந்து கொள்வது.

இயற்கை மாற்றத்தால் உடல்நலப் பாதிப்புகளை தவிர்ப்பது, மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது.

ஒரு குறிப்பிட்ட இயற்கை வளத்தை அதிகமாக பயன்படுத்தி, இயற்கை சேதப்படுத்துவதை விட, புதிய இயற்கை வளங்களை கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்த முயற்சி செய்வது.

நகர்ப்புறங்களில், மக்கள் வாழ்வதற்கு தகுந்த வசதிகளை ஏற்படுத்தித் தருவது.

பருவ நிலை மாற்றத்தால் வாழும் மக்களுக்கு நன்மை விளைய வேண்டும். தீமைகளை தவிர்க்க முயற்சி செய்வது.

நிலத்தடி நீர் வளத்தை முறையாக பயன்படுத்துதல். தற்போது உலகம் முழுவதும் 4 லட்சம் புவி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்கள் உள்ளனர். இவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பல்கலைக்கழகங்களில் புவி தொடர்பான அறிவியல் பாடங்களை அதிகமாக அறிமுகம் செய்ய வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு அரசுகள் பொறுப்புடன் நடந்து கொண்டு உயிர் வாழ்வதற்கு உள்ள இந்த ஒரே உயிர்கோளத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஐ.நா., தெரிவித்துள்ளது.


சீனாவுக்கு இயற்கை விடும் சவால்!

க. ரகுநாதன்


கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உறை பனியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது சீனா.

சீனாவின் மத்திய, தெற்கு மாகாணங்களில் பனி படர்ந்த சாலைகளால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டத்தால் விமானப் போக்குவரத்தும் நின்றுவிட்டது. இருக்கும் ஒரே வழி ரயில்வே மட்டுமே.

பிப்.7-ம் தேதி தொடங்கிய புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக இப்பகுதியில் இருந்து சென்ற லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்துப் போயினர். 4 லட்சம் பேருக்கு 3 ஆயிரம் ரயில்களே இயக்கப்பட்டன. மின் உற்பத்தி பாதிப்பால் பல நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளன. ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இயற்கை விடுத்த சவாலை எதிர்கொண்டாக வேண்டிய நிலையில் சீன அரசு உள்ளது.

ஒருபுறம் தனது பொருளாதார வலிமை, உள்கட்டமைப்பு பிரமாண்டம் ஆகியவற்றை உலக நாடுகளுக்குப் பறைசாற்றும் பொன்னான வாய்ப்பாக ஒலிம்பிக் போட்டியை சீனா கருதுகிறது. மறுபுறம் ஜனநாயக சக்திகள் சீன அரசின் அடக்குமுறையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தயாராகி வருகின்றன. இன்னொரு புறம் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசு அரசுக்குப் பெரும் சவாலாக உள்ளது.

ஒலிம்பிக் வீரர்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகலாம் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாரத்தான் போன்ற ஒரு சில போட்டி அட்டவணை மாற்றப்படலாம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இதனால் காற்று மாசடைவதைத் தடுக்க சீன சுற்றுச்சூழல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், போட்டியின்போது மழை வந்துவிடக் கூடாது என்பதற்காக அதைத் தடுக்க அரசும், விஞ்ஞானிகள் குழுவும் தயாராகி வருகின்றன. இதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

கடும் உறை பனிக்கு “லா நினோ’ எனும் கடலடி குளிர் நீரோட்டமே காரணம் என்று அரசு கூறினாலும், இதற்கு புவி, வெம்மை அடைவதுதான் முதன்மைக் காரணம் எனலாம்.

உலகின் ஓரிடத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றம் மற்றோரிடத்தில் நிச்சயம் பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இதைப் போன்ற காலநிலை மாறுபாடுகள் உதாரணம்.

உலகில் குறிப்பாக வளர்ந்த நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, நிலக்கரி, பெட்ரோல், டீசல் பயன்பாட்டால் எழும் புகை ஆகியவற்றால் வெளியேறும் கரியமில வாயு வளிமண்டத்தில் டன் கணக்கில் கலந்துள்ளது. இவைதான் புவி வெப்பம் அதிகரிக்க மூல காரணம். இது கடலடி நீரோட்டத்தையும் பாதிப்பதால் நிலப் பகுதியில் இது போன்ற பருவநிலை மாறுபாடு ஏற்படுகிறது.

பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க 1997-ம் ஆண்டு கியோட்டோ ஒப்பந்தம் உலக நாடுகளால் கொண்டு வரப்பட்டது. அது 2012-ம் ஆண்டுடன் முடிவடைகிறது.

மரபுசாரா எரிசக்தியை அதிகரிப்பதன் மூலம் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறுவதை 2008-12ம் ஆண்டுக்குள் 5 சதவீத அளவுக்கு வளர்ந்த நாடுகள் குறைக்க வேண்டும் என்பது முக்கிய விதி.

இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டாலும், தொழிலதிபர்கள் நிர்பந்தம், அரசியல் காரணங்களால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதுவரை ஒப்புதல் பெறப்படவில்லை (கடந்த டிசம்பரில் செனட் சபை மட்டும் ஒப்புதல் அளித்துள்ளது). இதனால் அதை நிறைவேற்றும் நிர்பந்தம் அரசுக்கு இல்லை. இதை நிறைவேற்றினால் தங்களது பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறிவருகிறது.

உலக அளவில் இந்தியாவும், சீனாவும் 10 சதவீத வளர்ச்சியை நோக்கிச் சென்றாலும், உலக பசுமைக்குடில் வாயுவை 10 சதவீதமே வெளியேற்றுகின்றன. ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் 42 சதவீதம் வெளியிடுகின்றன.

வாயுக்கள் வெளியாவதைக் குறைப்பதற்காக தங்களது தொழில் வளர்ச்சிக்குத் தடையான கொள்கைகளை ஏற்க வளரும் நாடுகள் தயங்குகின்றன. வளர்ந்த நாடுகளும் (குறிப்பாக அமெரிக்கா) தங்களது உரிமையை விட்டுக் கொடுக்க மறுக்கின்றன. இதனால் 2012-ம் ஆண்டுக்குப் பிறகு எத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்யாமல் டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடந்த பருவநிலை மாறுபாட்டுக்கான மாநாடு முடிந்துள்ளது.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், விவசாய மானியத்தைக் குறைக்கக் கோரும் உலக வர்த்தக ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களை வற்புறுத்தி உலக நாடுகளைப் பணியவைக்கும் அமெரிக்கா, உலகையே அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் உடன்பாட்டிற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற மறுப்பது வேடிக்கையானது.

எல்லாவற்றிலும் தனது முன்னிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா, சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புவி வெம்மையைக் குறைக்க முன்வர வேண்டும்.

உலக வெம்மை அதிகரிப்பால் புயல், பெரும் மழை வெள்ளம், கடும் வறட்சி, கடும் உறை பனி, அதன் காரணமாக உணவு உற்பத்தி பாதிப்பு, பஞ்சம் என்று பல்வேறு இன்னல்களை மனித குலம் சந்திக்க வேண்டி வரும். இவை முதலில் பாதிக்கப்போவது ஆப்பிரிக்க, ஆசியக் கண்டத்தில் உள்ள வளரும் நாடுகளைத்தான்.

பொருளாதார வளர்ச்சியைவிட முக்கியமானது, நாம் வாழும் பூமி வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பது. இயற்கையை அழித்து பொருளாதார வளம் பெறும் சமுதாயம் நீண்ட காலம் நிலைக்காது. எனவே இயற்கை வளத்தைப் பெருக்கி, பசுமையைக் காப்பது மட்டுமே எதிர்கால உலக நலனுக்கு உகந்தது என்பதை வளரும் நாடுகள் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளும் உணர வேண்டும்.

இல்லாவிடில் காதல் போயின்…காதல் போயின்…மட்டுமல்ல, பசுமை போயினும் சாதல்தான்!

Posted in 2007, 2008, 2009, 3899810, Arabic, Carbon, China, Chinese, Culture, Earth, emissions, Environment, France, French, Heritage, Hindi, International, Languages, Latin, Mandarin, Nature, Pollution, Portugese, portuguese, Potato, Russia, Russian, sanitation, Spanish, Tamil, UN, UNICEF, Year | Leave a Comment »

Fund allocations for River water inter-linking project – Pe Chidhambaranathan

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

நதிகள் இணைப்புக்கு நிதி இல்லையா?

பெ. சிதம்பரநாதன்

நமது நாடு 6 லட்சம் கிராமங்களைக் கொண்டது.

110 கோடி இந்திய மக்களில் விவசாயத்தைச் சார்ந்து இருப்பவர்கள் ஏறக்குறைய 70 கோடி பேர். இவர்களில் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்து வருகின்றனர். வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் 70 கோடிப் பேரை முன்னேற்றிவிட முடியும்.

உத்தமர் காந்திஜி, “”இந்தியாவின் உயிர், கிராமங்களில்தான் உள்ளது” என்று அறிவித்தார். தான் காண விரும்பிய ராஜ்யம் சின்னஞ்சிறு கிராம ராஜ்யம்தான் என்றே அறிவித்தார். அதை மேலும் அழகுபடுத்தி, அதுதான் தனது “ராமராஜ்யம்’ என்றும் கூறினார்.

அவரது சிந்தனைக்கு முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு செயல்வடிவம் கொடுக்க முற்பட்டார்.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் ரூ. 2 ஆயிரத்து 69 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

அத்தொகையில் 1956-க்குள் கட்டப்பட்டதுதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய பஞ்சாப் மாநில பக்ராநங்கல் அணைக்கட்டு.

ஆனால் 1957-க்குப் பிறகு வேளாண்மை முன்னேற்றத்துக்கு அரசின் முக்கியத்துவம் வெகுவாகக் குறைந்துவிட்டது. தொழில் வளர்ச்சிதான் முதன்மையானது.

சென்ற 5 ஆண்டுக்காலத்தில் வேளாண்மை வளர்ச்சி நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 சதவீதம்தான். தொழில்துறை வளர்ச்சியோ 8.5 சதவீதம். விவசாயம் வீழ்ச்சியடைந்தது, தாழ்ச்சியடைந்தது.

இன்றைய உண்மை நிலை என்ன?

மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்ப்பா பிராந்தியம், கர்நாடகத்தின் சில பகுதிகள், ஆந்திரத்தின் தெலங்கானா பகுதி, தமிழகத்தின் தஞ்சைப் பகுதி ஆகிய இடங்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகள், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 2001-2006 க்கு இடைப்பட்ட ஐந்தாண்டுக் காலத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவங்கள் இவை.

கடன் சுமையால் சென்ற ஆண்டு மட்டும் 15 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதில் பெரும்பாலானோர் ஆந்திர மாநிலப் பருத்தி விவசாயிகள்.

இந்தப் பின்னணியில் மத்திய நிதியமைச்சர் சமர்ப்பித்த மத்திய நிதிநிலை அறிக்கை, விவசாயத்திற்கு முதலிடம் தருகிற அறிக்கை என கூறப்பட்டது.

ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடனாக விவசாயிகளுக்கு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் அறிவித்திருந்தார். கேட்பதற்கு இது ஆனந்தமாகத்தான் இருக்கிறது. நடைமுறையில் இந்த ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் இதேபோல ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி விவசாயக் கடனுக்கு ஒதுக்கப்பட்ட பிறகு, அந்த ஓராண்டில் மட்டும் 15 ஆயிரம் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது ஏன்?

ஐந்து காரணங்களால் நமது நாட்டின் விவசாயம் இத்தகைய இழிநிலைக்கு வந்துவிட்டதாக மத்திய நிதியமைச்சர் கூறுகிறார்.

முதல் காரணம், அதிக வட்டிக்கு விவசாயி கடன் வாங்கியதால்தான் தற்கொலை செய்து கொள்கிறான். ஆகவே 7 சதவீதம் வட்டிக்கு விவசாயக் கடன் கிடைக்க வங்கிகளின் வாசல்கள் திறந்துவிடப்பட்டிருக்கின்றன என்று அறிவிக்கிறார்.

இரண்டாவதாக, அவர்களுக்குத் தரமான விதைகள் கிடைக்காத காரணத்தால்தான், அதிக உற்பத்தியைச் செய்ய முடியவில்லையென்றார். இதற்காக தரமுள்ள விதைகள் கிடைக்க வழி வகுத்துத் தந்துள்ளதாகக் கூறுகிறார்.

மூன்றாவதாக, விவசாயப் பயிர்களுக்கு உரம் தேவை. உர விலையோ உயர்ந்து கொண்டே போகிறது. விவசாயிக்கோ வாங்கும் சக்தி இல்லை. ஆகவே, உரத்திற்கான ஒரு பாதி விலையை அரசே மானியமாகக் கொடுத்து, குறைந்த விலையில் உரம் கிடைக்கச் செய்ய ரூ. 22 ஆயிரத்து 450 கோடியை உர மானியமாக அரசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

நான்காவதாக, விவசாயிகளுக்கு முறையான மின்சாரம் இலவசமாகத் தருவதாகவும் அறிவித்துள்ளார்.

ஐந்தாவதாக, பாசன நீர் வசதி. இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிணறுகள் மற்றும் ஏரி, குளங்களைத் தூர்வாரி, ஆழப்படுத்தி, அதிக மழை நீரைத் தேக்கி விவசாயம் செய்வதற்காக சுமார் ரூ. 12 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.

உண்மையில், விவசாயத்திற்குத் தேவையான பாசனநீர் மழையால் மட்டும் கிடைப்பதாகக் கருதி, மழை வரும்பொழுதே கிணறுகள், ஏரிகள், குளங்களில் மழை நீரை நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமா? அவ்வாறு செய்தாலும் ஆண்டு முழுவதும் பாசனத்துக்குத் தேவையான நீர் போதிய அளவில் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

எனவே, தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்க ஒரு சிறப்பான மாற்றுத் திட்டம் உள்ளது. அதுதான் நதிகள் இணைப்பு.

“”இந்திய நதிகளை எல்லாம் இணைத்து விடுங்கள். வெள்ளச் சேதத்தையும் தடுக்கும் – வறட்சியையும் அது போக்கும்” என கடந்த ஐந்து ஆண்டுகளாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறி வருகிறார்.

அவர் மட்டுமல்ல, வடமாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கையே தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசு சமர்ப்பித்த பதில் மனுவில் 2045-ஆம் ஆண்டுக்குள் நதிகள் இணைப்புக்கு ஆவன செய்யப்படும் என குறிப்பிடப்பட்டது.

நதிகளை இணைக்க 40 ஆண்டுகளா என்று ஆச்சரியப்பட்ட தலைமை நீதிபதி, 10 ஆண்டுக் காலத்திற்குள் இணைத்தாக வேண்டும் என்றும் அதற்கான ஒரு வரைவுத் திட்டத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

முந்தைய பாஜக ஆட்சியில் அப்படி வந்ததுதான் தேசிய நதிகளை இணைப்பதற்கான குழு. ஆனால் 2004-ல் ஆட்சி மாறியது. அதன்பிறகு சமர்ப்பிக்கப்பட்ட மூன்று மத்திய பட்ஜெட்களிலும் நதிகள் இணைப்பிற்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதே உண்மை.

தேசிய நதிகளுக்குப் பதிலாக தென்னக நதிகளான மகாநதி முதல் காவிரி வரையாவது நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுமாறு கோரிக்கைகள் பல வந்தன. ஆனால் நதிகள் இணைப்புத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

தென்னக நதிகளை இணைத்தால்தான் தென்மாநில விவசாயத்திற்கான பாசன நீர் பன்மடங்கு அதிகரிக்கும் என்ற உண்மையும் உணரப்படுகிறது.

அவ்வாறு தென்னக நதிகளை இணைத்தால், தென்மாநிலங்களில் ஏறக்குறைய 150 லட்சம் ஏக்கரில் இரு போக சாகுபடி செய்யலாம். விவசாயம் செழிப்படையும்போது கிராமப்புற மக்கள் அனைவருக்கும் போதிய அளவில் வேலை கிடைக்கும். நூல் ஆலைகளுக்குத் தேவையான மூலப் பொருளான பஞ்சுப் பற்றாக்குறையும் தீரும். எண்ணெய் வித்து உற்பத்தியிலும் தன்னிறைவு பெற முடியும்.

விவசாயத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மத்திய நிதிநிலை அறிக்கையில், நதிகள் தரும் பாசன நீரை மறந்துவிட்டால், ஆகாயத்தில்தான் விவசாயத்தை வளர்ச்சி அடையச் செய்ய முடியும்!

=========================================

நதிகள் இணைக்கப்படுவது எதற்காக?

சி.எஸ். குப்புராஜ்

இந்திய நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்து கடந்த 150 ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது.

சர் ஆர்தர் காட்டன் என்ற பிரபல பொறியாளர் இக் கருத்தை 19-ம் நூற்றாண்டிலேயே தெரிவித்தார். ஆனால் அப்போதிருந்த கிழக்கு இந்திய கம்பெனியாரின் அரசு அதை ஏற்கவில்லை. அதற்குப் பின் பிரிட்டிஷ் அரசும், சுதந்திர இந்திய அரசும்கூட இந்தத் திட்டத்தை பரிசீலித்தன. ஆனால் செயல்படுத்த முற்படவில்லை.

இறுதியாக 1982 ஆம் ஆண்டு இதற்காகவே தேசிய நீர்வள மேம்பாடு நிறுவனம் உருவாக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வரைபடங்களும் மதிப்பீடும் தயாரிக்கப்பட்டன. இத் திட்டத்தை உடனடியாக எடுத்துக் கொண்டு விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

இத்திட்டத்தின் அடிப்படைத் தத்துவம் என்னவென்றால், தண்ணீர் அதிகமாக ஓடிக் கடலில் கலந்து வீணாகும் நதிப்படுகைகளிலிருந்து, பற்றாக்குறையாக உள்ள நதிப்படுகைகளுக்குத் திருப்பி விட்டு வீணாகும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்பதே. இந்த அடிப்படையில் தான் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வடநாட்டு நதிகளை இணைப்பதற்கு, அயல்நாட்டு அரசுகளின் சம்மதம் பெற வேண்டி இருப்பதால் தாமதம் ஆகிறது. எனவே தென்னாட்டு நதிகளையாவது முதல் கட்டமாக இணைத்து விடலாம் என்று ஆலோசனை கூறப்பட்டது.

இதுவும் தாமதம் ஆவதால் தமிழ்நாடு நதிகளையாவது இணைத்து விடலாம் என்று நமது குடியரசுத் தலைவர் யோசனை தெரிவித்தார். இந்த அடிப்படையில் பார்த்தால் மூன்று இணைப்புகள் செயல்படுத்தலாம் என்றும் இவற்றைத் தமிழ்நாடு அரசே செயல்படுத்தும் என்றும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் கூறினார். இந்த மூன்று இணைப்புகள் எவை என்றால்;

  • 1. தென் பெண்ணை ஆற்றையும் செய்யாற்றையும் இணைத்தல்.
  • 2. கோரை ஆற்றையும் அக்கினியாற்றையும் இணைத்தல்.
  • 3. தாமிரபரணி ஆற்றையும் நம்பியாற்றையும் இணைத்தல்

தமிழ்நாட்டில் உள்ள நதிகள் எல்லாம் பற்றாக்குறை நதிகளே; உபரி நீர் உள்ள நதிகள் எவையும் இல்லை. எனவே இரண்டு பற்றாக்குறை நதிகளை இணைப்பதால் பயன் ஒன்றுமில்லை.

ஆனால் ஒரு சில நதிகளில் 25 சதவீத நம்பகத்தன்மையின் அடிப்படையில் பார்த்தால் ஓரளவு உபரி நீர் இருப்பதாக 2001 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு 2002 ஆம் ஆண்டில் ஓர் அறிக்கையை அரசுக்கு அளித்தது. அக் குழுவின் அறிக்கையில் கீழ்க்கண்ட நதிகளில் இருக்கும் உபரி நீர் பற்றியும் அந்த உபரி நீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.

25 சதவீத நம்பகத்தன்மையின் அடிப்படையில் உபரி நீர் உள்ள நதிப்படுகைகள் பின்வருமாறு:

  • 1. பாலாறு – 24.34 டி.எம்.சி.
  • 2. வெள்ளாறு – 41.21 டி.எம்.சி.
  • 3. தென் பெண்ணையாறு – 26.40 டி.எம்.சி.
  • 4. காவிரி நதி – 103.56 டி.எம்.சி.
  • 5. தாமிரபரணி நதி – 24.0 டி.எம்.சி.

இந்த உபரி நீர் எல்லாம் ஆற்றின் கடைசிப் பகுதியில் தான் உள்ளன. இந்த நதிகளை இணைப்பதற்கு அந்தக் குழு எந்த ஆலோசனையும் கூறவில்லை. எனவே இந்த இணைப்புகள் பற்றித் தெரிந்து கொள்வதற்காக, பொதுப்பணித்துறையில் விசாரித்து கீழ்க்கண்ட விவரங்கள் பெறப்பட்டன.

இணைப்பு – 1: சாத்தனூர் உயர்நிலைக் கால்வாய் திட்டம்

சாத்தனூர் அணையிலிருந்து உயர்நிலைக் கால்வாய் அமைத்து பல ஏரிகளுக்குத் தண்ணீர் அளித்துவிட்டு இறுதியாக விழுப்புரம் வட்டத்தில் உள்ள நந்தன் கால்வாயுடன் இணைத்தல். தென்பெண்ணை ஆற்றில் சாத்தானூரில் உபரி நீர் இல்லை. திருக்கோவிலூர் அணைக்கட்டிற்கு கீழேதான் உபரிநீர் உள்ளது.

இணைப்பு – 2: கோரையாறு தனிப்படுகையல்ல, காவிரியின் உபநதி. வெள்ளக் காலங்களில் திருச்சி நகரத்திற்கு வெள்ள அபாயம் உண்டாக்குகிறது. எனவே கோரையாற்றையும் ஆரியாற்றையும் கால்வாய் மூலம் இணைத்து அதிலிருந்து 15 ஆயிரம் கனஅடி வெள்ள நீரை அக்னியாறு படுகைக்குத் திருப்புதல்.

இணைப்பு – 3: தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீரைச் சாத்தான்குளம் மற்றும் திசையன்வினை பகுதிகளுக்குத் திருப்புதல்.

சில பொறியாளர்கள் நதிகள் இணைப்பின் தத்துவத்தை உணராமல் இந்தியாவின் நதிகள் அனைத்தையும் சமமட்டக் கால்வாய்கள் மூலம் இணைக்க முடியும் என்றும், அவற்றில் இரண்டு பக்கமும் தண்ணீர் பாயும் என்றும், இத்திட்டம் மத்திய அரசு தயாரித்துள்ள திட்டத்தைவிட மேலானது என்றும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இது செயல்முறைப்படுத்த முடியாத திட்டம். ஓர் ஆற்றிலோ அல்லது கால்வாயிலோ, தண்ணீர் ஓட வேண்டும் என்றால் அடிமட்டச் சாய்வு இருக்க வேண்டும். சாய்வு இல்லாத கால்வாய் எப்படி செயல்படும்? வெறும் பிரசாரத்தால் மட்டும் தண்ணீர் ஓடாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

———————————————————————————————————————————————————–

100 கோடிக்கு 36 லட்சம் கோடி!

பதினோராவது ஐந்தாண்டுத் திட்ட ஆவணத்துக்கு தேசிய வளர்ச்சிமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களும் ஒப்புதல் அளித்துவிட்டனர். 5 ஆண்டுகளில் மொத்தம் 36 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் 4 ஆண்டுகளில் 9% என்றும், கடைசி ஆண்டில் (2011-12) 10% என்றும் பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பின்னர் நிருபர்களிடம் விவரித்தார்.

கல்வி, சுகாதாரம், வறுமையை ஒழிப்பதற்கான வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் ஆகியவற்றின் மூலம் சமூக அடித்தளக் கட்டமைப்பை வலுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அலுவாலியா கூறியுள்ளார்.

நம்முடைய ஐந்தாண்டுத் திட்ட இலக்குகளை எட்ட முடியாதவாறு 3 விஷயங்கள் தடுக்கின்றன.

1. ஐந்தாண்டுத் திட்டங்களை வகுப்பதிலும், அமல் செய்வதிலும், அதன் பலன்களைத் தணிக்கை செய்வதிலும் மக்களை ஈடுபடுத்தத் தொடர்ந்து தவறி வருகிறோம்.

2. அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் கூடி தயாரித்து, நிதி ஒதுக்கி, நிறைவேற்றும் திட்டங்களாகவே இவை நீடிக்கின்றன.

3. திட்டங்களை வகுப்பதில் காட்டும் ஆர்வத்தை அமல்படுத்துவதில் தொடர்ச்சியாகக் காட்டத் தவறுவதால் எல்லா திட்டங்களும் தொய்வடைந்து, பிறகு தோல்வியைத் தழுவுகின்றன.

நதிநீர் இணைப்பு சாத்தியமா என்பது ஒருபுறம் இருக்கட்டும், இருக்கும் நீர்நிலைகளைக் குறைந்த செலவில் பராமரிக்க நம்மிடம் உள்ள தேசியத் திட்டம்தான் என்ன?

ஐந்தாண்டுத் திட்டத் தயாரிப்பு என்பது இன்றளவும் வெறும் சடங்காக மட்டுமே இருக்கிறது. குறைந்த செலவில் அதிக பலன்களைப் பெறும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும். கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்து, ஆயிரக்கணக்கில் பணத்தைத் திருப்பி எடுப்பதாகவே திட்டங்கள் முடிகின்றன. திட்ட அமல்களில் ஏற்படும் காலதாமதத்தால்தான் கோடிக்கணக்கான ரூபாய்கள் விரயம் ஆகின்றன என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் பேசியிருக்கிறார். அதைத் தவிர்க்க என்ன திட்டத்தை இந்தக் கூட்டம் பரிசீலித்தது?

“”கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கிவிட்டது, இது மாநில முதலமைச்சரின் -நிதி அமைச்சரின் வாதத்திறமைக்குச் சான்று” என்று போலியாக பெருமைப்படுவதே வழக்கமாகி வருகிறது.

நபர்வாரி வருமானம் எவ்வளவு உயர்ந்தது, அணைகள் எத்தனை உயர்ந்தன, எத்தனை லட்சம் ஏக்கர்கள் கூடுதலாக பாசன வசதி பெற்றன, எத்தனை ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி ஆனது, எத்தனை லட்சம் பேருக்குக் கூடுதலாக, நிரந்தர வேலைவாய்ப்புக் கிடைத்தது, தொழில், வர்த்தகத்துறையில் ஒட்டுமொத்த விற்றுமுதல் எத்தனை லட்சம் கோடி ரூபாய்கள் அதிகரித்தன என்ற ஆக்கபூர்வமான முடிவுகளே இந்த திட்டங்களின் வெற்றிக்கு உரைகல். அப்படியொரு அறிக்கையையும் இந்த தேசிய வளர்ச்சி மன்றக் கவுன்சிலில் முன்வைத்தால், ஐந்தாண்டுத் திட்ட வெற்றியை நம்மால் மதிப்பிட முடியும்.

நீர்நிலைகளையும், நிலத்தடி நீரையும் பாழ்படுத்தும் தோல் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள், பின்னலாடைத் தொழிற்சாலைகள், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயன ஆலைகள் போன்றவைதான் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறுகின்றன. இப்படிப்பட்ட வளர்ச்சி மாநிலத்துக்கு மட்டும் அல்ல, நாட்டுக்கே தேவை இல்லை என்பதை தேசிய அளவில் விவாதிக்க வேண்டும்.

குறிப்பிட்ட சில இனங்களில் மட்டும் வரிவிதிப்பு அதிகாரத்தை வைத்திருந்த மத்திய அரசு மதிப்புக் கூட்டப்பட்ட விற்பனை வரி (வாட்), சேவை வரி மூலம் தன்னுடைய கரத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டுவிட்டது. இனி போகப்போக ஐந்தாண்டுத் திட்டமிடல் என்பது மத்திய அரசின் தனியுரிமை ஆனாலும் வியப்பதற்கு ஏதும் இல்லை.

Posted in 11, 5, Agriculture, Budget, Cauvery, Cheyaar, Cheyyaar, Cheyyaaru, Civil, Connection, CS Kuppuraj, Damirabarani, Dhamirabharani, doctors, Drinking Water, Economy, Education, Farming, Farmlands, Finance, Five Year Plans, Floods, Food, Fund, Government, Govt, harvest, Health, Healthcare, Hospital, Hygiene, IAS, inter-link, IPS, Kaviri, Korai, Lakes, medical, Nambiyar, officers, Paalar, Paddy, Palaar, Palar, peasants, Pennai, Planning, Plans, Politics, Poor, Project, Rain, rice, River, Sathanoor, Sathanur, service, Seyaar, Seyyaar, Seyyaaru, South Pennai, Tamirabarani, Tamirabharani, Thamirabarani, Thamirabharani, Vellaar, Village, Water, Watersources, Wheat, Year | 1 Comment »