Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘WTO’ Category

Impact of MNCs and pricing pressures by Govt. Policy – Harming the local farmer

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2007

ஊருக்கு இளைத்தவன்…

உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது நம் நாட்டுப் பழமொழி.

உலக வர்த்தக ஸ்தாபனத்தின் (டபிள்யூ.டி.ஓ.) ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தியா போன்ற நாடுகள், உரிய தற்காப்பு சட்டங்களை தேசிய அளவில் இயற்றாததால், கவசம் தரித்துக்கொள்ளாத காலாட்படை வீரர்களாய், வளரும் நாடுகளின் விவசாயிகள் களத்தில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.

தோஹாவில் தொடங்கி இன்றுவரை இதன் பேச்சுவார்த்தைகளில், வல்லரசு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டுமே வற்புறுத்தி சம்மதிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

பெரிய நிறுவனங்கள் தயாரித்த விதைகளைப் போட்டால்தான் சாகுபடி நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை விவசாயிகளின் மனங்களில் எப்படியோ விதைத்து விட்டார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில்கூட மன்சான்டோ நிறுவனத்தின் விதைகளும், மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட “”பீட்டா காட்டன்” பருத்தி விதைகளும் சர்வசாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன.

தில்லியை மையமாகக் கொண்ட வர்த்தகம், வளர்ச்சிக்கான மையம் (சென்டாட்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நமது விவசாயிகளும், நுகர்வோர்களாகிய நாமும் எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்று ஓரளவுக்குத் தெரியவந்துள்ளது.

உலகின் பூச்சிகொல்லி விற்பனையில் 65% சந்தையை பேயர்ஸ், சின்ஜென்டா, பிஏஎஸ்எஃப், டெü, மன்சான்டோ என்ற நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.

உலகின் விதை விற்பனையில் 72%, மன்சான்டோ, டூபான்ட், சின்ஜென்டா, குரூப் லிமாகரின் என்ற 10 நிறுவனங்கள் மூலமே நடைபெறுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பனையில் 91% மன்சான்டோ வசம் உள்ளது.

10 நிறுவனங்கள் மட்டும், தின்பண்டங்களுக்கான உலக சில்லறை வர்த்தகத்தில் 24% சந்தையைப் பிடித்துள்ளன. அதன் மதிப்பு -மயக்கம்போட்டு விழுந்துவிடாதீர்கள் -சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் கோடி ரூபாய்கள். அதில் வால்மார்ட், கேரிஃபோர், மெட்ரோ ஏஜி, அஹோட் ஆகியவற்றின் பங்கு 64%.

வாழைப்பழ விற்பனையில் மட்டும் சிகிடா, டோல் ஃபுட்ஸ் என்ற நிறுவனங்கள் 50% சந்தையைப் பிடித்துவைத்துள்ளன.

யூனிலீவர், புரூக்பாண்ட், காட்பரி, ஸ்வெப்பீஸ், அல்லய்ட்-லியான்ஸ் ஆகியவை தேயிலை விற்பனையில் 80 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன.

கார்கில், செனக்ஸ், ஏடிஎம், ஜெனரல் மில்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலகின் தானிய விற்பனையில் 60 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன. கேரிஃபோர் என்ற நிறுவனத்தின் வருவாய், சிலி நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைவிட அதிகம். வால்மார்ட் நிறுவனத்தின் வருமானம் பாகிஸ்தானின் தேசிய வருமானத்தைவிட 3.2 மடங்கு அதிகம்.

கார்கில் நிறுவனத்தின் வருமானம் ருமேனியா நாட்டின் தேசிய வருமானத்துக்குச் சமம்.

இந்தியாவில் தேயிலையின் சில்லறை விற்பனை விலை ஒரு கிலோ ரூ.160. ஆனால் தேயிலைச் சந்தையில் ஏலத்தில் ஒரு கிலோ ரூ.50க்குத்தான் வாங்கப்படுகிறது. மூன்று மடங்கு விலையில் விற்கப்படுகிறது.

உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் அடைத்து கடைகளில் ஒரு கிலோ ரூ. 143-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்குக்குத் தரப்படும் கொள்முதல் விலையைப்போல இது 28 மடங்கு.

கோதுமை இறக்குமதியில் தொடங்கி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எல்லா முடிவுகளுமே விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. அதன் விளைவுதான், பல்வேறு மாநிலங்களில் காணப்படும் விவசாயிகள் தற்கொலை.

மத்திய, மாநில அரசுகளில் உள்ளவர்கள் நமது விவசாயிகளின் நலனைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகின்றனர் என்பதைத்தான் மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. ஊருக்கு இளைத்தவன் உழவுத் தொழில் புரிபவர் என்கிற நிலை தொடர்வது நல்லதல்ல.

Posted in Agriculture, Banana, Biz, Brookebond, Brookebonds, Business, Cadburys, Chips, Commerce, Consumer, Copyrights, Customer, Dalit, Deflation, DNA, Doha, Economy, Exports, Farmer, Farming, Fertilizer, Food, Foodgrains, Genetic, harvest, Imports, Inflation, markets, MNC, Monsanto, Natural, Needy, organic, peasant, Poor, Potato, Prices, Pricing, Recession, rice, Rich, Seeds, Shares, Shopping, Shweppes, Sivaji, Statistics, Stats, Stocks, Subsidy, Suicide, Suicides, Talks, Tax, Tea, Trade, Trademark, Unilever, Urea, Vidharaba, Vidharabha, Vitharabha, Wal-Mart, Walmart, Wealthy, Weeds, Wheat, WTO | Leave a Comment »

WTO, G8, EU, NATO, US Interests vs Developing Countries Financial Development – Focus on Agriculture

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

வளரும் நாடுகளின் பொருளாதாரம் சிதைவதா?

உ.ரா வரதராசன்

உலகமயப் பொருளாதாரத்தை வழிநடத்தும் சர்வதேச மும்மூர்த்திகளில் ஒன்றான உலக வர்த்தக (டபிள்யூடிஓ)அமைப்பு, சர்வதேச வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் வளரும் நாடுகளின் மீது செலுத்தி வரும் பொருளாதார நிர்பந்தங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

உலக நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி-இறக்குமதி (சர்வதேச) வர்த்தகத்திற்கான விதிமுறைகளை வகுத்து வழிநடத்தும் டபிள்யூடிஓ, அதன் இன்றைய ஸ்தாபன வடிவத்தைப் பெற்றது 1995-ம் ஆண்டில்தான். 150 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள டபிள்யூடிஓவின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் டபிள்யூடிஓ அமைச்சர்கள் மட்ட உச்சி மாநாடுதான்.

டபிள்யூடிஓவின் அமைச்சரவை மட்ட நான்காவது உச்சி மாநாடு 2001 நவம்பரில் கத்தார் நாட்டில் தோஹா நகரில் நடைபெற்றது. விவசாயம், தொழில் மற்றும் சேவைப் பணித்துறைகள் உள்ளிட்ட ஒரு நீண்ட பட்டியலில் இடம் பெற்ற பல்வேறு விஷயங்களின் மீது ஒரு புதிய சுற்றுப்பேச்சு வார்த்தையைத் தொடங்க தோஹாவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தப்புதிய சுற்றுப்பேச்சுவார்த்தைக்கு தோஹா வளர்ச்சித் திட்டம் என்று பெயரிடப்பட்டது. இந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முற்றுப்பெற்று, 2005 ஜனவரிக்குள் உடன்பாடு எட்டப்படவேண்டும் என்பது தோஹாவில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு. இன்னும் நீண்டு கொண்டே போகிறது.

தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் பகீரத முயற்சிகளின் ஒரு பகுதியாக, டபிள்யூடிஓ உறுப்பு நாடுகள் சிலவற்றை இணைத்து நடைபெறும் “துணை’ மாநாடுகள் பலவும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பங்கு கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையை வைத்து இந்தத் துணை மாநாட்டுக் குழுக்களுக்கு ஜி-4,ஜி-6,ஜி-20, ஜி-33 என்றெல்லாம் பெயரிடப்பட்டன.

இவற்றில் ஒன்றான ஜி-4 குழு நாடுகளான அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு, பிரேசில், இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கிடையே, ஜெர்மனியில் பாட்ஸ்தாம் நகரில் ஒரு துணை மாநாடு அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு வெளியாகியது. விவசாயப் பொருள்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளில் யுஎஸ்ஸýம் ஐரோப்பிய யூனியனும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க, இந்தியாவும் பிரேசிலும் அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்ததுதான் இந்தப் பேச்சுவார்த்தை முறிவுக்குக் காரணம்.

பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, இந்தியா திரும்பிய நமது வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத் வளர்ச்சியடைந்த நாடுகள் (குறிப்பாக யுஎஸ், ஐரோப்பிய யூனியன் ) மீது இரண்டு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ஒன்று, அவை தத்தம் நாடுகளின் பணக்கார விவசாயிகளுக்கு வழங்கிவரும் அதீதமான மானியங்களை ஒரு நியாயமான வரம்புக்குகூடக் குறைத்துக்கொள்ள மறுத்துப் பிடிவாதம் பிடிக்கின்றன என்பதாகும்.

இரண்டாவது குற்றச்சாட்டு வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகளின் ஒற்றுமையைக் குலைப்பதற்காகப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடிக்கின்றன என்பதாகும்.

ஜி-4 குழுவில் சேர்ந்து இந்தியாவும் பிரேசிலும் யுஎஸ் மற்றும் ஐரோப்பிய யூனியனோடு தனித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதை இதர வளரும் நாடுகள் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றன. ஜி-6 என்று இன்னொரு குழுவில் இந்த நான்கு நாடுகளோடு, ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தும் மற்றொரு ஏற்பாட்டையும் இதர வளரும் நாடுகள் குறைகூறி வருகின்றன. இந்தப் பின்னணியில் “ஜி-4 செத்துவிட்டது’ என்று பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தை முடிவில் கமல்நாத் அறிவித்தது ஒரு விதத்தில் நன்மையே! “ஜி-4′ செத்துவிட்ட பின்னர், “ஜி-6’க்கு எப்படி உயிரூட்ட முடியும் என்று ஆஸ்திரேலியா கவலை தெரிவித்துள்ளது! எனினும், வளரும் நாடுகளின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதில் இந்தியாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், வளர்ச்சியடைந்த நாடுகளோடு சேர்ந்து துணை மாநாடுகள் நடத்துவதற்கான “ஜி-4′, “ஜி-6′ குழுக்களுக்கு மீண்டும் உயிரூட்டும் முயற்சிக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது.

பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பிரேசிலும் சொந்த நாட்டின் விவசாயிகள் நலன்களை விட்டுக்கொடுக்க முடியாது என்று நிலை எடுத்தது,. இரு நாடுகளின் விவசாயிகளுக்கு சாதகமானதுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், கமல்நாத்தின் பேச்சும், பேட்டியும் பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தை விவசாய மானியங்களைப் பற்றியது மட்டுமே என்ற தோற்றத்தை ஏற்படுத்த முற்படுவது பாதி உண்மை மட்டுமே! தோஹா வளர்ச்சித் திட்டம் என்று வருணிக்கப்படுகிற டபிள்யூடிஓவின் இப்போதைய சுற்றுப் பேச்சுவார்த்தைகளில், விவசாயம் மட்டுமன்றி, தொழில் மற்றும் சேவைப் பணிகள் துறைகளும் பிரதானமான இடம் பெற்றுள்ளன என்று ஏற்கெனவே குறிப்பிட்டோம். இதில் வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகளுக்கு மிகுந்த அக்கறையுள்ள அம்சம், விவசாயம் அல்லாத மற்ற வர்த்தகத்திற்கு வளரும் நாடுகளின் சந்தையில் நுழைவதற்கான முயற்சியான “நாமா’ (Non Agricultural Market Access) என்பதாகும். விவசாயம் அல்லாத இதர தொழில்துறைகளின் உற்பத்தி சரக்குகளுக்கு, வளரும் நாடுகள் தங்கள் சந்தையை அகலத் திறந்துவிட வேண்டும். இறக்குமதிகள் மீதான சுங்கத் தீர்வைகளை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகளை வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகள் “நாமா’ தொடர்பாக அழுத்தமாக வலியுறுத்தி வருகின்றன.

இந்த “நாமா’ பேச்சுவார்த்தையில், வளரும் நாடுகளின் வரிசையில் முன்னணியில் உள்ள இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ஒன்று சேர்ந்து “நாமா-11′ என்றொரு குழுவை அமைத்து, வளர்ச்சியடைந்த நாடுகளுடன் உடன்பாடு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகள் விவசாயத்திற்கான மானியங்களைக் குறைக்கும் பட்சத்தில், “நாமா’ பிரச்னையில் ஒரு சமரசத்திற்கு இணங்கி வர இந்த “நாமா-11′ நாடுகள் குழு தயார் என்று ஏற்கெனவே சமிக்ஞை காட்டியுள்ளன என்பது ஒரு கவலைக்குரிய விஷயமாகும்.

பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில், இந்த “நாமா’ பிரச்னையை மையமாக வைத்து ஒரு பேரம் நடத்தப்பட்டது என்பதும், அதிலும் யுஎஸ், ஐரோப்பிய யூனியனுக்கு திருப்திகரமான ஒரு முடிவு வரவில்லை என்பதும், இந்தப் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்னணியாக இருந்தது.

வளர்ச்சியைடைந்த நாடுகளில் கணிசமான மானியங்களைப் பெறும் விவசாயிகள், தங்கள் விளைபொருள்களை வளரும் நாடுகளுக்கு கொண்டுவந்து, விற்பனை செய்யும்போது, அவர்களோடு உள்நாட்டு விவசாயிகள் போட்டிபோட்டு வியாபாரம் செய்யத் திணறுகிறார்கள். இதனால் வளரும் நாடுகளின் விவசாயம் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. விவசாயத்திற்கான இடுபொருள்களின் விலை உயர்வு, விளைபொருள்களுக்குக் கட்டுபடியான விலை கிடைக்காதது ஆகியவை வளரும் நாட்டு விவசாயிகள் சந்தித்து வரும் மிகப்பெரிய சவால்.

இந்தப் பின்னணியில் “நாமா’ பேச்சுவார்த்தையின் விளைவாக, வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழில்துறை உற்பத்திப் பொருள்கள் வளரும் நாடுகளின் சந்தையை ஆக்கிரமிக்க அனுமதித்தால், அது மிகப்பெரிய தொழில்சிதைவுக்கு வழிவகுத்துவிடும். எனவே, டபிள்யூடிஓ பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசு, விவசாயிகளின் நலன்களையும் பாதுகாப்பது என்ற நிலைப்பாட்டோடு நின்றுவிடாமல், நாட்டின் தொழில்களையும், வேலைவாய்ப்புகளையும் பாதுகாக்கும் திசையில் “நாமா’ கோரிக்கைகளையும் உறுதியாக எதிர்க்க வேண்டியது அவசியம். பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் “நாமா’ சம்பந்தமாக பேசப்பட்டது என்ன என்பதைப் பற்றி கமல்நாத் மெüனம் சாதிப்பது ஒரு மிகப்பெரிய அபாயத்தைத் திரையிட்டு மறைக்கும் முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பாட்ஸ்தாம் பேச்சு தோல்வியின் விளைவாக, தோஹா வளர்ச்சித் திட்டப் பேச்சுவார்த்தையின் எதிர்காலம் கேள்விக் குறியாக மாறியிருக்கிறது. தோஹா சுற்றில் “ஏதாவதொரு’ உடன்பாடு “எப்படியாவது’ எட்டப்படுவதன் பாதகங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், எந்த உடன்பாடும் ஏற்படாமல் இருப்பதேகூட வளரும் நாடுகளுக்கு நன்மையாக அமையும் என்பது தெளிவு. உலக வர்த்தக அமைப்பு வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை சிதைப்பதற்கோ, மக்களின் வாழ்வாதாரத்தைக் குலைப்பதற்கோ அனுமதிக்கக் கூடாது என்ற எச்சரிக்கையோடு, மத்திய அரசு செயல்படவேண்டும் என்பதே நமது விருப்பம்.

Posted in Agriculture, America, Asean, Banking, Biz, Business, Commerce, Companies, Conference, Country, Cultivation, Development, Doha, Duty, Economy, EU, Exchanges, Exports, Farmers, Finance, Fine, G8, Imports, Industry, International, Law, markets, NATO, Poor, Protection, Rich, SAARC, Shares, Stocks, Talks, Tariff, Tax, Trade, Treaty, USA, World, WTO | Leave a Comment »

State of SAARC – South Asian Association for Regional Cooperation

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

சார்க்: போகுமிடம் வெகு தூரமுண்டு!

மு. இராமனாதன்


“சார்க்’ (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு) வெறும் “பேச்சு மடம்’ என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

“சார்க்’ கூட்டமைப்பு 1985 முதல் இயங்கி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, இலங்கை ஆகிய ஏழு நாடுகள் அணி சேர்ந்தன.

“சார்க்’ ஒரு பொருளாதார ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பாகத்தான் உருவாக்கப்பட்டது. பரஸ்பர அரசியல் கருத்து வேற்றுமைகள் “சார்க்’ அமைப்பிற்குள் வரலாகாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் அமைப்பின் செயல்பாட்டை பரஸ்பர பேதங்கள் பாதிக்கவே செய்தன.

கடந்த ஏப்ரல் மாதம் புதுதில்லியில் நடந்த “சார்க்’ மாநாடு, தெற்காசிய ஒத்துழைப்பிற்கான சில அடித்தளங்களை அமைத்துக் கொடுத்தது. அதேவேளையில் அவை போதுமானதாக இல்லை என்கிற விமர்சனங்களும் வலம் வருகின்றன.

இந்த மாநாடு 22-வது ஆண்டுக் கூட்டமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது 14-வது கூட்டம்தான். உறுப்பு நாடுகளிடையே, குறிப்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பகைமை காரணமாக பல ஆண்டுக்கூட்டங்கள் நடைபெறவே இல்லை.

தெற்காசிய நாடுகள், 60 ஆண்டுகளுக்கு முன்வரை காலனி ஆதிக்கத்தில் இருந்தவை. இப்போதும் வறுமையும் கல்லாமையும் உள்நாட்டுப் பிரச்னைகளும் தெற்காசியாவின் மீது சூழ்ந்திருக்கின்றன. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் தெற்காசியர்கள்தாம்.

ஆனால் அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உழல்கின்றனர். எல்லா “சார்க்’ மாநாடுகளிலும் குடிமக்களுக்குக் கல்வியும் சுகாதாரமும் வேலைவாய்ப்பும் தடையின்றிக் கிடைக்க வேண்டுமெனத் தலைவர்கள் பேசுவதோடு சரி. செயலாக்கம்தான் இன்றுவரை இல்லை.

இம்முறை “சார்க்’ அமைப்பின் எட்டாவது உறுப்பினராக ஆப்கானிஸ்தான் இணைந்தது. ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்ஸôயின் உரையில் உறுதியும் துணிவும் இருந்தது.

தமது நாடு மத்திய ஆசியாவுக்கும் தெற்காசியாவுக்கும் இடையே ஓர் இணைப்பாக விளங்கும் என்றார் அவர்.

மேலும், கிழக்காசியாவின் பிரதான சக்திகளான சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் முதல்முறையாக “”பார்வையாளர்”களாகப் பங்கேற்றன. சார்க் நாடுகளில் முதலீடு செய்ய சீன நிறுவனங்களை தனது அரசு ஊக்குவிக்கும் என்றார் சீன வெளியுறவு அமைச்சர்.

27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் அடுத்த ஆண்டு முதல் ஈரானும் “சார்க்’ அமைப்பின் பார்வையாளர்களாகப் பங்கேற்க உள்ளன.

உறுப்பு நாடுகளுக்கிடையில் வணிகத்தை மேம்படுத்துவதிலும் இம்மாநாடு கவனம் செலுத்தியது.

சார்க் பிராந்தியத்திற்குள் இறக்குமதித் தீர்வைகளைக் குறைக்க வேண்டும் என்பதை சார்க் நாடுகள் 1993 ஆம் ஆண்டிலேயே ஒப்புக்கொண்டன.

ஆனால் உள்நாட்டுச் சநதையில் பாதிப்பு ஏற்படுத்தாமல், எந்தெந்தப் பொருள்களுக்கு தீர்வைகளை விலக்கிக் கொள்வது அல்லது படிப்படியாகக் குறைப்பது என்பதில் உறுப்பினர்களுக்கிடையில் இணக்கம் ஏற்படவில்லை.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தடையற்ற வணிகம் சில ஆண்டுகளாகவே அமலில் இருந்து வருகிறது. மற்ற “சார்க்’ நாடுகளுக்கும் தீர்வைகளிலிருந்து விலக்களிக்க இந்தியா தயாராகவே இருந்தது.

ஆனால் மற்ற நாடுகளும், எதிர்வினையாக, தமது பொருள்களுக்குத் தீர்வைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தி வந்தது. இது நிறைவேறவில்லை.

வளர்ச்சி குன்றிய வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளின் இறக்குமதிகளுக்கு இனி இந்தியா தீர்வைகள் விதிக்காது என்று அறிவித்தார் பிரதமர் மன்மோகன் சிங். இது பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். பலன் பெறும் நாடுகள் சலுகையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்போவதாக “சார்க்’ மாநாட்டிலேயே அறிவித்தன.

இதனால் அந்நாடுகளின் இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும். தவிர, இந்திய இறக்குமதிகளுக்கு அவை தீர்வைகளைப் படிப்படியாகக் குறைக்கும் சாத்தியங்களும் அதிகரிக்கும்.

வணிகம் வளரும்போது சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, துறைமுக வளர்ச்சி ஆகியவை மேம்படும். மேலும், பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவின் இந்த நடவடிக்கை பிராந்தியத்திற்குள் நல்லெண்ணத்தை வளர்க்கவும் உதவும்.

மற்ற உறுப்பு நாடுகளைவிட பலமடங்கு பெரிய நாடான இந்தியா “சார்க்’ அமைப்பிற்குள் “பெரியண்ணனை’ போல் செயல்படுவதாக நிலவி வரும் நீண்டநாள் குற்றச்சாட்டை மட்டுப்படுத்தவும் உதவும்.

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை இந்தியாவுடன் வணிகத்தை மேம்படுத்த இயலாது என்று கூறிவருகிறது பாகிஸ்தான்.

அமைதிப் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றமும் விவேகமும் தென்படும் இப்போதும்கூட பாகிஸ்தான் தன் பிடிவாதத்திலிருந்து இறங்கி வரவில்லை. காலத்திற்கு ஒவ்வாத இந்த நிலைப்பாடு தேவையா என்பதை பாகிஸ்தான் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தெற்காசியப் பல்கலைக்கழகம், சார்க் உணவு வங்கி போன்ற திட்டங்களும் “சார்க்’ மாநாட்டின் கூட்டறிக்கையில் இடம்பெற்றன. நீராதாரங்கள் பங்கீடு, மின்சக்தி, உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றிலும் கூட்டு முயற்சிகள் வலியுறுத்தப்பட்டன. இவை புதியவை அல்ல. எனினும் முதல் முறையாக இவற்றை நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

“சார்க்’ மாநாட்டின் அறிக்கைகளிலும் தீர்மானங்களிலும் உள்ள பல்வேறு அம்சங்களை வெளிக்கொணர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் அண்டை நாடுகளிடையே நட்புறவும் வணிகமும் கல்வியும் வேலைவாய்ப்பும் வளரும். “சார்க்’ அமைப்பு உலக அரங்கில் ஒரு சக்தியாக உருவெடுக்க இயலும்.

(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்)

Posted in Actions, Asean, Asia, Bangaldesh, Bhutan, Burma, Chat, China, Colombo, Cooperation, Economy, Eelam, Eezham, EU, Exim, Exports, External, External Affairs, extradition, FERA, Finance, Foreign, Govt, IMF, Imports, LTTE, Maldives, Myanmar, NATO, Neighbor, Neighbours, Nepal, Op-Ed, Pakistan, Power, Process, Relations, SAARC, Sri lanka, Srilanka, Talks, Tariffs, Tax, Tibet, UN, WB, WTO | Leave a Comment »

Organization Halts Clinical Trial For Potential Microbicide For Preventing HIV Infection

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

பெண்களுக்கு எயிட்ஸ் பரவாமல் தடுக்கும் மருந்தின் சோதனை நிறுத்தம்

எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஆபிரிக்கப் பெண்
எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஆபிரிக்கப் பெண்

எயிட்ஸ் நோய்க் கிருமி பெண்களுக்கு தொற்றாமல் பாதுகாக்கக் கூடிய மருந்து ஒன்றின் ஆரம்ப மருத்துவப் பரிசோதனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

மைக்ரோபைசைட் என்று பெயரிடப்பட்ட ‘களி’ போன்ற இந்த மருந்து பெண்களுக்கு உதவாமல், அவர்களுக்கு நோய் தொற்றும் வகையில் அவர்களைப் பலவீனமாக்கியது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

தென்னாபிரிக்கா, பெனின், உகாண்டா மற்று இந்தியா ஆகிய நாடுகளில் 1300க்கும் அதிகமான பெண்கள் மீது இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டது.

நைஜீரியா நாட்டில் நடத்தப்பட்டுவந்த இதேபோன்ற பரிசோதனையும் நிறுத்தப்பட்டது.

இந்த மருந்து ஏன் செயற்படவில்லை என்று தெரியவில்லை என்று இந்தப் பரிசோதனைக்கு உதவி வழங்கிய உலக சுகாதார நிறுவனமும், ஐ.நா எயிட்ஸ் ஒழிப்பு நிறுவனமும் கூறியுள்ளன.

Posted in AIDS, cellulose sulfate, CONRAD, Healthcare, HIV, Medicine, microbicide, Nigeria, Prevention, Research, Science, UN, Women, WTO | Leave a Comment »

India ranks first in safeguarding interests of its Production Industries – WTO

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2006

உள்நாட்டு தொழில்துறையை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இந்தியா முதலிடம்

புதுதில்லி, டிச. 7: அன்னியப் பொருள்கள் உள்நாட்டுச் சந்தையில் குவிவதைத் தடுக்க இந்தியா அதிக அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உலக வர்த்தகக் கழகம் (டபிள்யூ.டி.ஓ.) தெரிவித்துள்ளது.

அதேபோல இறக்குமதியாகும் பொருள்களால் உள்நாட்டுத் தொழில்துறை பாதிப்படையாமல் தடுக்க, அதிக எண்ணிக்கையில் காப்பு நடவடிக்கைகளை எடுப்பதிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது என உலக வர்த்தகக் கழகத்தின் புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தகக் கழகத்தின் உறுப்பு நாடுகள், அன்னியப் பொருள் இறக்குமதியால் உள்நாட்டுத் தொழில்துறை பாதிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ள “காப்பு நடவடிக்கைகள்’ எடுக்க அனுமதிக்கப்படுகின்றன. உலக வர்த்தகக் கழக ஒப்பந்தப்படி, ஒரு நாடு காப்பு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக அது தொடர்பாக முழு விசாரணை நடத்தி அந்த அடிப்படையிலேயே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இந்த வகையில், உலக வர்த்தகக் கழகம் உருவாக்கப்பட்ட 1995-ம் ஆண்டிலிருந்து இந்தியா 15 காப்பு நடவடிக்கை விசாரணைகளையும், அதன் அடிப்படையில், பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது 8 முறை காப்பு நடவடிக்கைகளையும் பயன்படுத்தியுள்ளது. இதில் 7 வேதிப் பொருள்கள் மற்றும் அது தொடர்பான தயாரிப்புகள் சார்ந்தது; மற்றொன்று பிளாஸ்டிக்குகள் மீதானது.

இதேபோல, அன்னியப் பொருள்கள் உள்நாட்டுச் சந்தையில் வந்து குவிவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக 448 ஆய்வு விசாரணைகளையும், 323 நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என உலக வர்த்தகக் கழகம் தெரிவித்துள்ளது.

Posted in Business, Chemical, Chemistry, Development, Economy, Finance, GDP, Growth, India, Industry, Plastics, Research, Statistics, Survey, WTO | Leave a Comment »

Liberalization, WTO, US Subsidy Economy, Protection of Developed Countries

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 23, 2006

உலக வணிகம் எட்டாக் கனியா?

மு. இராமனாதன்

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 1999-இல் உலக வணிக அமைப்பின் (World Trade Organisation – WTO) அமைச்சரவை மாநாட்டின்போது நடந்த கிளர்ச்சிகள் பிரபலமானவை. போராட்டக்காரர்களின் முக்கியக் குற்றச்சாட்டு, கட்டற்ற வணிகம் எனும் நஞ்சை, வளரும் நாடுகளின் வாயில் அமெரிக்கா புகட்டுகிறது என்பதாக இருந்தது. ஆனால் கட்டற்ற வணிகம் எனும் இலக்கை அடைய பெருந்தடையே அமெரிக்காதான் என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது. ஜூலை கடைசி வாரத்தில் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்த ரபஞ-வின் பிரதான அமைச்சர்களின் பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்தது. தமது விவசாயிகளுக்கு வழங்கி வரும் அபரிமிதமான சலுகைகளையும் மானியங்களையும் பின்வாங்க அமெரிக்கா மறுத்துவிட்டது. சலுகைகள் மற்றும் மானியங்களால் செயற்கையாக விலை குறைக்கப்பட்ட செல்வந்த நாடுகளின் விவசாய விளைபொருள்களோடு தங்களால் போட்டியிட முடியவில்லை; இந்த வணிகம் சமனாக்கப்பட வேண்டும் என்று வளரும் நாடுகளின் பிரதிநிதிகளான இந்தியாவும் பிரேசிலும் வலியுறுத்தியபோது கட்டற்ற வணிகம் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் கசந்தது. பேச்சுவார்த்தைகள் முறிந்தன. இப்போது வேளாண் மானியங்களை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குமா என்பதிலிருந்து, ரபஞ எனும் அமைப்பே நீடிக்குமா என்பது வரையிலான ஐயங்கள் உறுப்பு நாடுகளிடையே தோன்றியிருக்கின்றன.

செல்வந்த நாடுகள், விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்குவது மட்டுமன்றி, விளைபொருள்களுக்கு ஏற்றுமதிச் சலுகைகள் வழங்கி சர்வதேசச் சந்தையில் அவற்றின் விலை குறைவாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்கின்றன. அதேவேளையில் பிற நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்குத் தீர்வைகள் விதித்து உள்ளூர்ச் சந்தையில் அவற்றின் விலை கூடுதலாக இருப்பதை உறுதி செய்து கொள்கின்றன. இன்னின்ன நாடுகள் இன்னின்ன பொருள்களைத்தான் இறக்குமதி செய்யலாம் என்கிற ஒதுக்கீடுகள் வேறு! மாறாக தீர்வைகளும், மானியங்களும், ஒதுக்கீடுகளும் படிப்படியாக அகற்றப்பட்ட, தடைகளற்ற வணிகம் நிலவி வரவேண்டும் என்பதுதான் ரபஞ -வின் கொள்கை. ஆனால் சமச்சீரான வணிகம் என்பதில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் இரட்டை வேடம் தரித்து வருகின்றன.

வேளாண்மை எப்போதும் செல்வந்த நாடுகளின் செல்லப்பிள்ளை! அமெரிக்காவில் ஆண்டொன்றில் உற்பத்தியாகும் பருத்தியின் மதிப்பு ரூ. 13,500 கோடி. இதற்கு அரசு வழங்கும் மானியங்களோ ரூ. 18,000 கோடி என்கிறார் “கார்டியன்‘ நாளிதழின் கட்டுரையாளர் ஹீதர் ஸ்டீவார்ட். 25 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு – செலவுத் திட்டத்தில் 40% வேளாண் மானியங்களுக்கே போகிறது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல்! ஒன்றியத்தின் மானியங்களில் 80% போய்ச் சேர்வது 20% பணக்கார விவசாயிகளிடமே என்கிறது “தி எகானமிஸ்ட்‘ பத்திரிகை. எனில், செல்வந்த நாடுகளின் பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கு வெறும் 2 சதவீதம்தான். எனினும் இந்நாடுகளில் பணக்கார விவசாயிகளின் அரசியல் செல்வாக்கு அதிகம். வரும் நவம்பரில் செனட் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்திற்கு இது தெரியும். ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய உறுப்பு நாடும், வேளாண் மானியங்களின் குருபீடமுமான பிரான்சின் அதிபர் தேர்தல் மே 2007-இல் வருகிறது. அவர்களுக்கும் இது தெரியும்.

வேளாண் மானியங்களைச் செல்வந்த நாடுகள் எல்லாக் காலங்களிலும் ஆதரித்தே வந்திருக்கின்றன. வேளாண் மானியங்களைக் குறைப்பதற்குக் கைமாறாக அமெரிக்கா அறிவுசார் சொத்துரிமை, காப்புரிமை போன்றவற்றில் தனது கோட்பாடுகளை வளரும் நாடுகள் ஏற்க வேண்டுமென்றது. மேலும் அமெரிக்காவும் ஐரோப்பாவும் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளிலும் வளரும் நாடுகளின் சந்தைகளைத் திறக்க வேண்டுமென்றன. இதில் கணிசமான வெற்றியும் பெற்றன. ஆனால் வேளாண் மானியங்கள் அப்போதும் ஒரு சமரசத்தை எட்டவில்லை. ரபஞ-வின் அமைச்சரவை மாநாடு 2001-இல் வளைகுடா நாடான கத்தாரின் தோஹா நகரில் நடந்தது. வளரும் நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்ற பங்கு உலக வணிகத்தில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பது தோஹா உடன்படிக்கையின் சாரம். இது 2005-க்குள் எட்டப்பட வேண்டுமென இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. பயங்கரவாதிகளின் 2001-செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, சர்வதேச ஒத்துழைப்பு எனும் சித்தாந்தம் வலுப்பெற்று வந்த காலத்தில் நடந்தது தோஹா மாநாடு. ஆனால் இந்த உணர்வு அதிக காலம் நீடித்திருக்கவில்லை.

2003-இல் மெக்ஸிக்கோவின் கான்கன் நகரில் நடந்த மாநாடு ஒத்திசைவின்றி முடிவுற்றது. 2005-இல் ஹாங்காங்கில் நடைபெற்ற மாநாட்டில் “தோஹா சுற்று’ மீண்டும் விவாதத்திற்கு வந்தது. வேளாண் விளைபொருள்களுக்கு வழங்கி வரும் ஏற்றுமதி மானியங்களை 2013-க்குள் விலக்கிக் கொள்ள செல்வந்த நாடுகள் சம்மதித்தன. எனில் அதைவிட பல மடங்கு அதிகமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் மானியங்களைக் குறைப்பதைக் குறித்த தீர்மானத்தை அவை 2006-க்கு ஒத்தி வைத்தன. இதன் தொடர்ச்சியாகத்தான் ஜூலை இறுதியில் ஜெனீவாவில் ஆறு அமைச்சர்களின் (அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், இந்தியா, பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா) பேச்சு வார்த்தை நடந்தது; செல்வந்த நாடுகளின் பிடிவாதத்தால் தோல்வியுற்றது.

இது வளரும் நாடுகளுக்குப் பெரிய பின்னடைவுதான். கடந்த ஆண்டுகளில் கட்டற்ற வணிகத்திற்கு வளரும் மற்றும் ஏழை நாடுகளில் ஆதரவு அதிகரித்திருக்கிறது. தமது மனித வளமும் இயற்கை வளமும் வணிக லாபங்களை ஈட்ட வல்லவை என்பதை அவை உணர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆயினும் இந்தத் தோல்வியின் பின்விளைவுகள் என்ன?

முதலாவதாக, ரபஞ-விற்கு அமைப்பு ரீதியாக ஏற்படும் பாதிப்பு. 1947-இல் 23 உறுப்பு நாடுகளுடன் தொடங்கப்பட்டது “காட்’. அதன் இன்றைய வடிவமான ‘ரபஞ’-வின் உறுப்பினர் எண்ணிக்கை 150. ரபஞ குறைகளற்ற அமைப்பு அல்ல. ஆனால் சர்வதேச வணிகத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரே அமைப்பு. ஐ.நா.வைப்போல பலவான்களுக்கு வீட்டோ அதிகாரம் இல்லாத அமைப்பு. உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஓர் ஓட்டுதான். உறுப்பு நாடுகளிடையே ஏற்படும் வணிகத் தகராறுகளை, இதுவரை பாரபட்சமின்றித் தீர்த்து வைத்திருக்கிறது ரபஞ. கோஸ்டா ரிகா போன்ற ஒரு குட்டித்தேசம் கூட அமெரிக்காவைக் கேள்வி கேட்கக்கூடிய அமைப்பு ரபஞ ஒன்றாகத்தான் இருக்க முடியும். தோஹா சுற்றின் தோல்வி ரபஞ-வை பலவீனப்படுத்தலாம்.

இரண்டாவதாக, சர்வதேச வணிக உடன்பாடு என்பது போய், இனிமேல் நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உடன்பாடுகள் அதிகமாகலாம். இந்தியாவின் வணிக அமைச்சர் கமல்நாத், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்றவற்றுடன் இந்தியா இரு தரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் என்று சொல்லியிருக்கிறார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைப்பான “ஆசியான்’ அமைப்புடனும் இந்தியா வணிக ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகிறது. ஆனால் இதுபோன்ற இரு தரப்பு ஒப்பந்தங்களில் சக்தி மிகுந்த நாடுகள் செல்வாக்கு செலுத்துவதைத் தவிர்க்க முடியாது.

மூன்றாவதாக, கட்டற்ற வணிகம் எனும் சித்தாந்தத்தில் வெறுப்புற்ற நாடுகள் இன்னும் பாதுகாப்புக் கவசங்களைப் பூணலாம். மானியங்களும், ஒதுக்கீடுகளும் அதிகரிக்கலாம்.

இவை எல்லாமே உலகம் முழுமையும் ஒரே சந்தையாக்கும் கட்டற்ற வணிகம் என்னும் தொலைநோக்குத் திட்டத்திற்குப் பின்னடைவே ஆகும். பிரேசிலின் சர்வதேச வணிக உறவுகள் எனும் அமைப்பின் தலைவர் மார்கஸ் ஜாங் சொல்கிறார்: “”பல தரப்புகளை ஒருங்கிணைக்கும் வணிக அமைப்பு அவசியமானது. இது நெருக்கடியான காலகட்டம்தான். ஆனால் இதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும். வருவோம்.” நம்பிக்கைகளால் ஆனதுதானே உலகம்!

(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்.)

Posted in Economy, Globalization, Liberalization, Protection, Subsidy, Tamil, Trade, USA, World Trade Organisation, WTO | 1 Comment »