Archive for the ‘Warming’ Category
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 29, 2007
குறு ஒளிர் விளக்குகள் } நல்ல தீர்வா?
என். ரமேஷ்
தொழிற்சாலைகள், போக்குவரத்து உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த அனைத்துப் பிரிவுகளிலும் பயன்படுத்தப்படும் நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட எரிபொருள்களால் உருவாகும் கரியமில வாயு காரணமாக புவி வெப்பம் அதிகரித்து வருகிறது; இதனால் கடல் நீர்மட்டம் உயர்வு, புயல் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள், வறட்சி, உணவு உற்பத்தி குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை உலக சமுதாயம் உணரத் தொடங்கியுள்ளது.
புவி வெப்பத்தால் ஏற்படக் கூடிய பேரழிவிலிருந்து தப்பிக்க, வளர்ச்சியடைந்த நாடுகள் வெளியிடும் கரியமில வாயு அளவைக் குறைக்க வகை செய்யும் கியோட்டோ ஒப்பந்தம் உள்ளிட்ட வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இப் பிரச்னையின் தீர்வுக்கு, உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை நேரடியாக வழங்க வீடுகள், வணிக நிறுவனங்களில் உள்ள டங்ஸ்டன் இழை கொண்ட “குண்டு பல்பு’களை குறு ஒளிர் விளக்குகளாக (compact fluorescent lamp-cfl) மாற்ற வேண்டும் எனப் பெரும் இயக்கமே நடைபெற்று வருகிறது.
பிரேசில், வெனிசுலா போன்ற நாடுகள் “குண்டு பல்பு’களை சிஎஃப்எல்-ஆக மாற்றும் இயக்கத்தைத் தொடங்கிவிட்டன. ஆஸ்திரேலியா 2010-க்குள்ளும், கனடா 2012-க்குள் முழுமையாக சிஎஃப்எல்-லுக்கு மாற முடிவு செய்துள்ளன.
இந்தியாவில் கிரீன் பீஸ் போன்ற தன்னார்வ அமைப்புகளும், தில்லி மாநில அரசு – அங்கு செயல்படும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களும் இந்த இயக்கத்தில் முனைப்புடன் செயல்படுகின்றன.
சென்னை போன்ற பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள பெரும்பாலான மேல்தட்டு, நடுத்தரக் குடும்பங்கள் தற்போது சிஎஃப்எல்-லுக்கு மாறி வருகின்றன. சிஎஃப்எல் எனப்படும் இந்த குறு ஒளிர் விளக்குகள், குண்டு பல்புகளைவிட ஏறத்தாழ ஐந்து மடங்கு குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. 100 வாட் குண்டு பல்பு வழங்கும் ஒளியை 20 வாட் சிஎஃப்எல் விளக்கு வழங்குகிறது. இதன்மூலம் ஐந்தில் ஒரு பங்கு மின்சாரச் செலவையும், அதற்குரிய கட்டணத்தையும் குறைக்க முடியும்.
மேலும், ஒரு குண்டு பல்பு செயலிழக்கும் வரை, சராசரியாக 1,000 மணி நேரம் எரியும் என்றால், சிஎஃப்எல் விளக்குகள் அதைவிடப் பலமடங்கு நேரம் எரியக் கூடியவை. இதனால் ஆண்டுக்கு ஒரு சிஎஃப்எல் பயன்பாடு மூலம், அதற்குக் கொடுக்கும் கூடுதல் விலை உள்ளிட்ட அனைத்துச் செலவும் போக, ரூ. 300-க்கும் அதிகமாகச் சேமிக்க முடியும்.
நுகர்வோருக்கு நேரடியாகக் கிடைக்கும் இந்த லாபம் தவிர்த்து, மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் நிலக்கரி, தண்ணீர் போன்றவற்றின் பயன்பாட்டு அளவும் குறைகிறது. 1,000 மணி நேரம் ஒரு குண்டு பல்பு மின்சாரம் வழங்க 71 கிலோ நிலக்கரி தேவையென்றால், சிஎஃப்எல்லுக்கு 14.2 கிலோ மட்டும் போதுமானது. இதேபோன்று, குண்டு பல்புக்கு 535 லிட்டர், சிஎஃப்எல்லுக்கு 107 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு குண்டு பல்பு 1,000 மணி நேரம் எரிவதற்கான மின் சக்தி உற்பத்தியில் 99.7 கிலோ கரியமில வாயு வெளியிடப்படும். ஆனால், சிஎஃப்எல் எரிவதால் 19.94 கிலோ மட்டும் வெளியிடப்படும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் சல்பர்-டை-ஆக்சைடு, நுண் துகள்கள், எரி சாம்பல் போன்றவையும் சிஎஃப்எல் பயன்பாட்டால் குறையும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் பலர் கூறுகின்றனர்.
ஆனால், “டாக்சிக்ஸ் லிங்’ (Toxics Link) என்ற தன்னார்வ அமைப்பு, சிஎஃப்எல்-லுக்கு மாறுவதற்கு முன் ஆழ்ந்து யோசிக்க வேண்டியுள்ளது என எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது. இதற்குக் காரணம், சிஎஃப்எல், நாம் வழக்கமாக பயன்படுத்தும் குழல் விளக்குகள் போன்ற ஒளிர் விளக்குகளில் பயன்படுத்தப்படும் பாதரசம் மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்தது என்பதுதான்.
நமது சூழலில் மிகச் சிறு அளவில் இருந்தாலும் நரம்பு மண்டலம், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் கைகால் அசைவு, நினைவாற்றல் ஆகியவற்றையும் பாதிக்கக் கூடியது பாதரசம்.
ஒரு சராசரி சிஎஃப்எல் விளக்கில் 0.5 மில்லி கிராம் பாதரசம் உள்ளது. இந்த விளக்குகள் உடைந்தால் பாதரச ஆவி வெளிப்பட்டு வீட்டில் உள்ளோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். உடையாமல் செயலிழந்து (ப்யூஸ்) போன பின்னரும் வழக்கமாக இவை மாநகராட்சி, நகராட்சி குப்பைக் கிடங்குகளுக்கே செல்கின்றன. அங்கு இவை உடைக்கப்பட்டாலும் அந்த பாதரச ஆவி நமது சுற்றுச்சூழலில் கலந்து பாதிப்பை உருவாக்கும்.
தற்போது இந்தியாவில் எரியும் விளக்குகளில் 10 சதம் சிஎஃப்எல் விளக்குகள். ஆண்டுதோறும் சிஎஃப்எல் விளக்குகள் தயாரிப்பில் 56 டன் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. முழுவதும் சிஎஃப்எல் விளக்குக்கு மாறினால் இந்த அளவு ஆண்டுக்கு 560 டன்னாக உயரும். எனவே, பசுமைக் குடில் வாயுக்களைக் குறைப்பதற்காக மற்றொரு ஆபத்தை விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை என பாதரசத்தை எதிர்ப்போர் தெரிவிக்கின்றனர்.
சிஎஃப்எல்-லுக்கு மாற்றாக ஒளி உமிழும் டையோடுகளைப் ( Light Emitting Diodes-எல் ஈ டி) பயன்படுத்த முடியும் என இவர்கள் வாதிடுகின்றனர். பாதரசத்தைப் பயன்படுத்தாத இவை சிஎஃப்எல்களைவிடக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதுடன் பல்லாயிரம் மணி நேரத்துக்கு மேல் எரியக் கூடியவை.
ஆனால், நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் போதும் பாதரசம் வெளியாகிறது. சிஎஃப்எல்லைப் பயன்படுத்தும் போது இந்த பாதரசம் வெளியாகும் அளவு குறைய வாய்ப்புள்ளது. ஆனால், மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மட்டும் பாதரசம் வெளியாவதைக் கட்டுப்படுத்துவது எளிதானது. கோடிக்கணக்கான வீடுகளில், குப்பை மேடுகளில் வெளியாகும் போது கட்டுப்படுத்துவது கடினம்.
எனவே, எல்ஈடி போன்ற மாற்றுகள் பரவலான பயன்பாட்டுக்கு வரும் வரை, இடைக்கால ஏற்பாடாக கனடா போன்ற நாடுகளில் சிஎஃப்எல்-களைப் பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாதரசத்தை மீட்டு எடுக்கலாம். செயலிழந்த சிஎஃப்எல்களைத் திரும்பப் பெறுவது, மறுசுழற்சி செய்வது போன்றவற்றுக்கு ஆகும் செலவை சிஎஃப்எல்லைப் பெருமளவு உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஏற்கச் செய்யலாம்.
———————————————————————————————————–
நதியோரம் தேயும் நாகரிகம்!
இரா. சோமசுந்தரம்
வாழ்வின் எல்லா நேரங்களிலும் நாம் ஒருவகையில் அன்றாடம் காய்ச்சிகளின் மனநிலையில்தான் இருக்கின்றோம். அன்றைய தேவை நிறைவடைந்தால் சரி.
அது தேர்தல் என்றாலும், ஊழல் என்றாலும் அல்லது , கொலை, கொள்ளை, விபத்து, மரணங்கள், குண்டுவெடிப்பு – எதுவென்றாலும் சரி, அன்றைய நாளுடன் மறக்கப்படும்.
இந்தப் பட்டியலில் தண்ணீரும் ஒன்று. வீட்டு இணைப்பில் குடிநீர் வந்தது என்றால் அத்துடன் அதை மறந்துவிடுகிறோம். ஆனால் அந்த குடிநீரை வழங்கும் நதிக்கு எத்தகைய கேடுகளைச் செய்து வருகிறோம் என்பதைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது.
இந்திய நதிகள் யாவும், அவை பெரியன என்றாலும் சிறியவை என்றாலும், மழைக்காலத்தில் வெள்ளமும் மற்ற நாட்களில் சாக்கடையும் ஓடும் என்ற நிலைக்கு மாறிவிட்டது. எல்லாக் கழிவுகளும் நதிகளில் கலக்கின்றன.
இது காலங்காலமாக நடந்து வருவதுதானே? இப்போது மட்டும் என்ன புதிதாகத் தீங்கு வந்துவிட்டது?
காலங்காலமாக நதியில் குளித்த மனிதர்கள் வேதிப்பொருள் கலந்த சோப்பைப் பயன்படுத்தவில்லை. அவர்களுக்கு “தோல் வெளுக்க சாம்பலுண்டு. துணி வெளுக்க மண்உண்டு’. அவர்கள் ஆற்றோரம் திறந்தவெளிகளையும், வயல்வரப்புகளையும் கழிப்பிடமாகப் பயன்படுத்தினார்கள். அப்போதெல்லாம் தொழிற்சாலைகள் இல்லை. அன்றைய சாயத் தொழில்கூட மரம், செடி, மலர், மரப்பட்டைகள் என இயற்கைப் பொருள்களைக் கொண்டு நடந்தது. யாருக்கும் பாதிப்பில்லை.
இன்றோ நிலைமை வேறு; இவை யாவும் தலைகீழாக மாறிவிட்டன.
தற்போது நதியில் கலக்கும் மாசுகளில் 80 சதவீதம் மனிதக் கழிவுகள்! ஏனையக் கழிவுகள் தொழில்துறையைச் சேர்ந்தவை.
எல்லா வீடுகளிலும் “ஃபிளஷ் அவுட்’ நவீன கழிப்பறை உள்ளது; இன்று இது தவிர்க்கமுடியாத ஒன்று.
ஒரு குடும்பத்துக்கு சுமார் 1.5 கிலோ மலஜலத்தை “”சாக்கடையில் தள்ளிவிட” குறைந்தது 300 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
இந்தத் தண்ணீரும் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல. பெரும்பாலும், மாநகராட்சி அல்லது நகராட்சி சுத்திகரித்து, வீட்டு இணைப்பில் வழக்கும் குடிநீர்தான்.
சில வெளிநாடுகளில் இத்தகைய ஃபிளஷ் அவுட்களில் பயன்படுத்த மறுசுழற்சி-நீர் விநியோகம் உண்டு. இந்தியாவில் அதற்கு வாய்ப்பே கிடையாது.
உள்ளாட்சி அமைப்புகள், இந்தக் கழிவுகளை ஊருக்கு வெளியே ஒன்றுதிரட்டி, அவற்றை ஓரளவு சுத்திகரித்து பின்னரே நதியில் கலக்கவேண்டும் என்பதற்கு முயற்சிகள் பல எடுக்கப்பட்டன.
அதன் விளைவுதான் நதிகள் பாதுகாப்புத் திட்டம். பல ஆயிரம் கோடி ரூபாயை, இத்திட்டத்திற்காக “ஒதுக்கினார்கள்’.
நகரத்தின் சாக்கடையைச் சுத்திகரித்து இயற்கை உரங்கள் தயாரிப்பு, கீரை காய்கறி வளர்ப்பு – என்றெல்லாம் செய்திகள் வந்தனவே தவிர, நடைமுறையில் எதுவுமே நடக்கவில்லை. சுத்திகரிக்கப்படாத வீட்டுச் சாக்கடைக் கழிவுகள் நேரடியாக நதிகளில் கலந்துகொண்டே இருக்கின்றன. இன்றளவும்!
ஒரு மனிதனின் மல, ஜலத்தில் அவனுக்குத் தேவைப்படும் அளவுக்கு உணவுப் பொருளை விளைவிக்கப் போதுமான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் அனைத்தும் உள்ளன. ஆனால் அவற்றைப் பயன்படுத்த இயற்கை சில விதிமுறைகளை வைத்திருக்கிறது. நீரில் கரைந்து நீர்த்துப்போகிறபோதுதான் சிறுநீர் ஒரு நல்ல உரமாக மாறும். வெயில் காய்ந்து கிருமிகள் அழிந்த உலர்மலம்தான் தீங்கற்ற உரமாக மாறும். ஆனால் இதற்கு மனித நாகரிகம் இடம் இல்லாமல் செய்துவிட்டது. ஆகவே மலக்கிருமிகள் நேரடியாக நதியைச் சென்றடைகின்றன.
ஓடும் நதிக்கு தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொள்ளும் சக்தி உள்ளது என்பது உண்மையே. நதியில் கலக்கும் உயிர்க்கழிவுகளின் மூலக்கூறுகளைச் சிதைத்து, உருமாற்றம் செய்ய போதுமான அளவு ஆக்சிஜன் நதிநீரில் இருக்க வேண்டும்.
ஆனால் ரசாயன கழிவுகள் நீரை மாசுபடுத்தி, அதன் இயற்கையான சக்தியை ஒடுக்கிவிடுகின்றன. இயற்கையான சுத்திகரிப்புக்கு ஆற்றுமணல் அவசியம். அதுவும் இப்போது பெருமளவில் சுரண்டப்படுகிறது.
நதிநீரைக் காப்பாற்ற ஏதாவது செய்தாக வேண்டும்; இல்லையெனில், குடிநீருக்காகப் பெரும்பணத்தைச் செலவிட நேரும்.
மனிதன் பெரிய அறிவுஜீவிதான்!
அதற்கு ஒரு சின்ன உதாரணம்:
ஒரு மாநகராட்சிப் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறைகளை இணைத்து, அதிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை அந்த வளாகத்தில் உள்ள டீ கடைகள், ஹோட்டல்களில் பயன்படுத்தினால் எரிபொருள் செலவு மிகமிகக் குறையும் என்ற திட்டத்தை முன்வைத்தபோது, காது, கண், மூக்கு எல்லாவற்றையும் மூடிக்கொண்டு “அய்யய்யே..எப்படி வியாபாரம் நடக்கும்?’ என்று எதிர்த்தார்கள்.
அதே கழிப்பறைகளின் மலஜலம் அனைத்தையும் பக்கத்தில் உள்ள நதியில் கலந்து, அந்த தண்ணீரைத்தான் மீண்டும் விநியோக்கிறோம் என்று அதிகாரிகள் சொன்னபோது, “சுடுகாடு கூடத்தான் ஆத்தோரம் இருக்குது. எல்லாம் வெள்ளத்துல போறதுதானே’ என்றார்கள்.
Posted in Alternate, Atomic, Biogas, Brazil, Burn, Carbon, Cauvery, CFL, Coal, Conservation, Crap, dead, Degradable, Detergents, Diesel, Disposal, Drill, Drinking, Drought, Earthquake, Electricity, Emission, emissions, energy, Environment, ethanol, Flowers, Flush, Food, Fuel, Ganga, Ganges, Garbage, Gas, Gore, Incandescent, Integration, Interlink, Kyoto, Lamps, Laundry, LED, Lights, Lignite, Lumniscent, Mercury, Mineral, Motor, Nature, Nuclear, Ozone, Petrol, Plants, Pollution, Power, Pump, Purify, Rain, Recycle, Removal, Restrooms, River, Shit, Soaps, Toilets, Toxics, Trash, Trees, Tsunami, Tube, Tubelight, Underground, Urea, Urine, Warming, Waste, Water, Well | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007
கனிமங்களின் சாதம், தாதுக்களும் பிரமாதம்
நெல்லை சு.முத்து
பூமி சூடேறி வருவதால் பனிப்படலங்கள் வட துருவப் பிரதேசத்தில் இருந்து உருகி அட்லாண்டிக் கடலில் கலக்கின்றன. இது பழைய செய்தி. ஆனால் ஒவ்வொரு 40 மணி நேரமும் கிரீன்லாந்து பனிப்படலங்கள் ஒரு கன கிலோமீட்டர் அளவுக்குக் கரைந்து வருகிறதாம். பாசதேனாவில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் எரிக் ரிக்னாட் தரும் தகவல் இது.
இந்த நீர், சென்னை போன்ற பெரு நகரங்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் தண்ணீர் அளவுக்குச் சமம். தமிழ்நாடு முழுவதும் 8 மில்லிமீட்டர் தண்ணீர் நிறைந்த மாதிரி. சென்னையில் மட்டும் இந்த வடதுருவப் பனி உருகிய நீரைக் கொண்டு வந்து ஊற்றினால் இரண்டு மாடி வீடுகள் நீருக்குள் மூழ்கிவிடும்.
சுற்றுச்சூழல் என்றதுமே நம்மவர் நினைவுக்கு வருவது
- ஓசோன்,
- கரியமில வாயு,
- வாகனப்புகை – உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுச் சமாச்சாரங்கள் மட்டும்தாம். எல்லாரும் இன்று வாகனப்புகை பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறோம். “”மீட்டர் போட்ட ஆட்டோ வேண்டும். புகைவிடாத லாரி வேண்டும்” என்று புதுக்கவிதை பாடுகிறோம். ஆனால் அதைக் காட்டிலும் இன்னோர் அபாயம் காத்திருக்கிறது.
தர்மம் தலைகாக்கும் என்ற நம்பிக்கை இங்கு பலருக்கு இல்லை. தலைக்கவசம் அணிந்துதான் பயணம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 67 லட்சத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவற்றால் சாலைகளில் பெரும் போக்குவரத்து நெருக்கடி.
இங்கிலாந்தில் கார்டிஃப் பல்கலைக் கழகத்தின் புவிவளப் பேராசிரியை ஹேசல் ப்ரிச்சார்டு என்ற பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம். “”இங்கு தெருவெல்லாம் இவ்வளவு சுத்தமாக இருக்குதே” என்று அசந்து போனார். சாலையில் ஒரு வண்டி கூட இல்லையே என்ற அர்த்தத்தில் அல்ல. வியப்புக்குக் காரணம்- வீதி உண்மையிலேயே துடைத்துப் போட்ட மாதிரி இருந்ததாம். தெருவின் புழுதி எல்லாம் பாதசாரிகளின் காலணிக்குள் அல்லவா தஞ்சம் புகுந்து இருந்தது.
காலுறைகளில் வெறும் வியர்வை நாற்றம்தான்; ஆனால் காலணியின் புறப்பகுதியில் சகதி, சாணி போன்றவை ஒட்டி இருக்கும். அவர் காலணியிலோ கொஞ்சம் பிளாட்டினம் படிந்து இருந்ததாம். காலில் வெள்ளிக் கொலுசு அணியலாம். தங்கக் காப்பு கூட தரிக்கிறார்கள். ஆனால் பிளாட்டினம் அணிந்த உலகின் முதல் பெண்மணி ஹேசல் ப்ரிச்சார்டு. பிளாட்டினம் உண்மையில் மிகவும் அரிய வகை உலோகம். பூமியில் பிளாட்டினமோ, ரேடியமோ, சுமார் 79,840 டன்கள் செறிந்து உள்ளது. 89,700 டன்கள் தங்கம்; ஆனால் பிளாட்டினத்திற்குத் தங்கத்தைக் காட்டிலும் விலை அதிகம்.
அது சரி, இந்தப் பிளாட்டினம் காலில் ஒட்டியது எப்படி? வேறு என்ன, வாகனப் புகைதான். பெட்ரோல், டீசல் எரிவாயுக்களால் ஏற்படும் மாசு மட்டுமே நம்மை மூச்சு முட்டப் பண்ணுகிறது. அந்த வாயுக்களை வாகன எஞ்ஜினில் எரியச் செய்யும் மின்பொறியில் பிளாட்டினம் தகடு இருப்பது நமக்குத் தெரியாது. அதனைக் காற்றில் புகையுடன் கலக்கப்போவது யாரு? நீங்கள்தாம். ஒவ்வொரு முறையும் ஸ்கூட்டர், கார், லாரி, ஆட்டோக்களை இயக்கும்போது பிளாட்டினம் தேய்ந்து காற்றில் கலக்கிறதாம்.
இந்தத் தகவல் அதிர்ச்சி அளிக்கிறதா? ஆனால் சமையல் மணக்கச் செய்யும் வனஸ்பதி தயாரிப்புத் தொழில்துறையில் கிரியா ஊக்கியே இந்தப் பிளாட்டினம்தான். பூமியில் இந்த உலோகப் புதையல் வறண்டு வருகிறது. ஏறத்தாழ 50 கோடி வாகனங்களை இத்தகைய எரிமின் கலன்களில் இயக்கினால் அவ்வளவுதான். அடுத்த 15 ஆண்டுகளில் பிளாட்டினம் இல்லாத பாலைவனம் ஆகிவிடும் நம் பூமி. பூமியில் கையிருப்பே 79,840 டன்கள்தான்.
பிளாட்டினம் மட்டுமா, வேறு பல அரிய உலோகங்களையும் நாம் சுரண்டி வருகிறோம். மணல் முதல் சணல் வரை அனைத்து வணிக ஒப்பந்தங்களும் கட்சிக்காரர்களுக்கே வாய்க்கும். உலோகச் சுரங்கம் தோண்டலில் மட்டும் கட்சி பேதம் இல்லை.
உலகில் வறண்டு வரும் மற்றோர் அரிய உலோகம் இண்டியம். இது ஏறத்தாழ 6000 டன்கள் செறிந்து உள்ளது. ஆனால் இன்று இந்த உலோகத்தைத் தகவல் தொழில்நுட்பக் கருவிகளுக்கான எல்.சி.டி தயாரிக்கும் துறை விழுங்கி வருகிறது. நவீனத் தொலைக்காட்சி, கணினித் திரைகள் வடிவமைப்பில் இடம்பெறும் திரவப் படிக ஒளிர் முனையங்கள் இவை. அடுத்த பத்தாண்டுகளில் இண்டியம் வளமும் மறையும் நிலை என்கிறார் ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானி.
2003 ஜனவரியில் கிலோ 60 டாலருக்கு விற்ற இண்டியம் இன்று 1000 டாலர். நான்கே ஆண்டுகளில் பதினாறு மடங்கு விலையேற்றம். இதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படும் நிலை இல்லை.
பூமி கஜனாவில் காலியாகிவரும் இன்னோர் அரிய உலோகம் காலியம். சூரிய மின்கலன்கள் தொழில்நுட்பத்தின் இதயம் போன்றது இது. இண்டியம் – காலியம் ஆர்சனைடுப் பொருளால் ஆனவையே. மின்னணுவியலில் பெரிதும் பயன்படுவது. இனி வரும் காலங்களில் சூரிய மின்கலன்களின் ஒரு சதவீதத் தேவைக்கு மட்டுமே இந்த காலியம், இண்டியம் உலோகங்கள் கைகொடுக்கும். நெதர்லாந்து நாட்டில் லெய்டன் பல்கலைக்கழக நிபுணர் ரேனே க்ளெய்ஜின் கணிப்பு இது.
கணிப்பொறித் திரைதான் பூமியை விழுங்கி ஏப்பம் விடுகிறது என்றால் நம் காதோரம் நெருங்கி உறவாடும் செல்ஃபோன் கூட பூமியின் வளத்தைப் பறித்து வருகிறதாம். என்ன செல்பேசித் தொழில்துறையினர் டான்டலம் என்கிற மற்றோர் அரிய உலோகத்தை இதற்காக அபகரித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் உலோகத் தாதுக்களில் பாதி டான்டலம் தானாம். அடுத்தபடி யுரேனியம். நாலில் ஒரு பங்கு. ரஷியாவிலோ அங்குள்ள உலோகங்களில் ஆறில் ஒரு பங்கு யுரேனியம். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் உலோகச் செல்வத்தில் பத்தில் ஒரு பங்கு யுரேனியம். உலகின் யுரேனிய வளம் 33 லட்சம் டன்கள். அணுமின் சக்தித் துறையினால் இந்த யுரேனியத்தின் பற்றாக்குறை வேறு தலைவிரித்து ஆடப்போகிறது.
உலகில் மிக அதிகமாகக் காணப்படும் உலோகத் தாதுக்களில்
- முதலிடம் பெறுவது அலுமினியம் -அதாவது 3235 கோடி டன்கள்.
- அடுத்தபடி தாமிரம் (94 கோடி டன்கள்),
- குரோமியம் (78 கோடி டன்கள்),
- துத்தநாகம் (46 கோடி டன்கள்),
- நிக்கல் (14 கோடி டன்கள்) போன்ற புழக்கத்தில் உள்ள உலோகங்களுக்கும் அடுத்த தலைமுறைக்குள் தட்டுப்பாடு வரும். ஆன்டிமனிக்கும் இதே முடிவுதானாம். அடுத்த பத்தாண்டுகளில் இதன் வளமும் வறண்டுவிடும்.
இன்று – “கனிமங்களின் சாதம், தாதுக்களும் பிரமாதம்’ என்று தலைவாழையில் உலோகங்களை உண்ணும் பகாசுரர்கள் யார்?
அமெரிக்காவில் 30 கோடி மக்கள். ஒவ்வொருவரும் ஆண்டுதோறும்
- 107 கிலோ பாஸ்வரம்,
- 20.3 கிலோ அலுமினியம்,
- 8.1 கிலோ தாமிரம்,
- 4.5 கிலோ துத்தநாகம்,
- 5.3 கிலோ காரீயம் உண்டு வருகிறார்கள்.
நாமோ “பிளாட்டினம் இட்லி, வெள்ளித் தோசை, தங்கச் சோறு, பாஸ்வரச் சாம்பார், குரோமியக் குழம்பு, காரீயச் சட்னி, துத்தநாகத் துவையல்’ எல்லாம் சாப்பிடப் போவது மாதிரி நடந்து கொள்கிறோம். துறைதோறும் பணத்தைச் சுரண்டுவதற்கே வாதங்கள் புரிகிறோம். சுற்றுச்சூழல் என்ற உச்சரிப்பிலேயே “ஊழல்’ ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் எப்படி கனிமவள வறட்சியைத் தடுக்கப்போகிறோம் என்பதே இப்போதைய கேள்வி.
Posted in Air, Alloys, Aluminium, Antimony, Arctic, Auto, Automotive, Carbon, Cars, Cell, Cellphone, Chromium, Cooking, Copper, Earth, emissions, Empty, Environment, Expiry, Exploration, Gallium, Gas, Indium, Land, legs, Metals, Minerals, mines, Mobile, Natural, Nickel, oil, Ozone, Phones, Platinum, Pollution, Protection, Research, Rich, Shoes, Slippers, Socks, Surface, Tantalum, tantulum, Traffic, Warming, Water, Zinc | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007
நெட்டில் சுட்டதடா…: மைல் கணக்கில் நின்ற மலைப் பாம்பு வரிசை!
ராமன் ராஜா
முன்பு ஒருமுறை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு மும்பை செல்ல வேண்டிய விமானத்தைக் கோட்டை விட இருந்தேன். ரிஷப ராசிக்கு “விரயம்’ என்று ஒற்றை வார்த்தையில் ரத்தினச் சுருக்கமாக தினப்பலன் போட்டிருந்ததை மதிக்காமல் டாக்ஸியில் புறப்பட்டு, அண்ணா சாலையில் திரும்ப வேண்டிய நேரத்தில் போக்குவரத்து போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டேன். ஒரு முக்கிய பிரமுகர் அந்த வழியாக வருகிறாராம்; அவருக்கு ஓட்டுப் போட்டு முக்கிய பிரமுகராக்கியவர்கள் அனைவரும் காத்திருக்க வேண்டுமாம். அடுத்த நாற்பது நிமிடம், பல்லைக் கடித்துக் கொண்டு எஃப் எம் ரேடியோவில் “தமில்ப்’ பாட்டு கேட்டுக் கொண்டு கழித்தேன். நல்லவேளை, நான் பிரசவத்துக்குப் போய்க் கொண்டிருக்கும் பெண்மணியாக இல்லையே என்று நிம்மதியுடன் அடி வயிற்றைத் தடவிவிட்டுக் கொண்டேன். கடைசியில் விமான நிலையம் போய்ச் சேர்ந்தபோது, ப்ளேனும் ஒரு மணி நேரம் தாமதம் என்று தெரிய வந்தது. (பைலட்டும் பக்கத்துக் காரில்தான் வந்தாரோ?)
போக்குவரத்து நெரிசல் என்பது முன்னேறிய நாடுகள் எல்லாமே முன்னேற்றத்துக்குத் தப்பாமல் கொடுக்கும் விலை. இந்தியாவிலும் வங்கிகள் வண்டிக் கடன்களை “ஊரான் வீட்டு நெய்யே’ என்று வாரி வழங்குவதால், இப்போது ஏழை எளியவர்கள் அனைவரும் வாகனம் வாங்குவது சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் ஒரு பிரச்னை: தமிழ் நாட்டில் ஓடும் சற்றேறக்குறையத் தொண்ணூறு லட்சம் வாகனங்களில் கால் பாகத்தை, பிடிவாதமாக அவர்கள் சென்னை நகரத்தில்தான் கொண்டு வந்து ஓட்டுகிறார்கள். இதைக் கண்ட பன்னாட்டுக் கம்பெனிகள், “சிக்கியதடா ஒரு மார்க்கெட்’ என்று இங்கே வந்து கடை பரத்தி, நம் ஜனத் தொகையை விட வேகமாகக் கார், டூ வீலர் முதலியவற்றை உற்பத்தி செய்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு, எனக்கு இருபது நிமிட தூரத்தில் இருந்த அதே அலுவலகம் இப்போது அறுபது நிமிடமாகிவிட்டது. டெல்லி, கல்கத்தா எங்கும் இதே கதைதான். பெங்களூரோ, ஏற்கனவே “பூட்ட கேஸ்’ என்று முடிவு கட்டப்பட்டு விட்ட நகரம். சென்னையில் நகைச்சுவை உணர்வு மிக்க உணவு விடுதிக்காரர் ஒருவர், தன் கடைக்கு ஹோட்டல் டிராபிக் ஜாம் என்று பெயர் வைத்திருக்கிறார்.
இங்கிலாந்தில் உள்ள எம்6 என்ற நெடுஞ்சாலையில் 87-ம் வருடம் ஒரு நெரிசல் ஏற்பட்டது. ஐம்பதாயிரம் வாகனங்களில் இரண்டு லட்சம் பேர் மாட்டிக் கொண்டார்கள். இருபது லட்சம் கெட்ட வார்த்தைகளில் அரசாங்கத்தைத் திட்டித் தீர்த்தார்கள். உலகத்திலேயே மிக நீளமாக நின்ற டிராபிக் ஜாம் எது என்று கின்னஸ் புத்தகத்தைப் புரட்டினால், மிரட்டுகிறது: 1980-ம் வருடம், காதலர் தினத்துக்கு இரண்டு நாள் கழித்து ஃப்ரான்ஸில் நடந்தது அது. விடுமுறைக்கு ஜாலியாக எல்லாரும் பனிச் சறுக்கு விளையாடிவிட்டு பாரீஸ் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இடையில் எங்கோ ஒரு லாரி மக்கர் செய்ய, மழை வேறு சேர்ந்துகொள்ள, திடீரென்று ட்ராபிக் ஜாம். லியான் நகரில் ஆரம்பித்து பாரீஸ் வரை, சுமார் 176 கிலோ மீட்டருக்கு அடைத்துக் கொண்டு நின்று விட்டது. ஒரு வழியாக விடுபட்டு வீடு போய்ச் சேர்ந்ததும், பல பேர் கடுப்பில் தத்தம் கார்களைக் கொளுத்தியிருப்பார்கள்!
டிராபிக் ஜாம் என்பது ரோட்டில்தான் ஏற்பட வேண்டும் என்பதில்லை; எங்கெல்லாம் அவசரக்காரர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தவறாமல் இது நடக்கும். வெனிஸ் நகரின் கால்வாய்ப் போக்குவரத்தில் அவ்வப்போது படகுகள் ஜாம் ஆகி நிற்பது உண்டு. பாங்காக் நகரின் மிதக்கும் மார்க்கெட்களில், படகுகள் சிக்கித் திணறுகின்றன என்று கால்வாய்களையெல்லாம் தூர்த்து சாலைகளாக்கினார்கள். இப்போது அவற்றில் கார்கள் நெரிசலாடுகின்றன!
போக்குவரத்து நெரிசல்கள் ஏன், எப்படி ஏற்படுகின்றன என்பதை கம்ப்யூட்டர் உதவியுடன் விஞ்ஞானிகள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். ஃப்ளூயிட் டைனமிக்ஸ் என்று குழாயின் வழியே தண்ணீர் ஓடுவதுடன் ஒப்பிட்டு, போக்குவரத்தைக் கணித சூத்திரங்களில் அடக்கமுடியும். இப்போது டிராஃபிக் எஞ்சினியரிங் என்பதை பட்டப் படிப்பாகவே எடுத்துப் படிக்கலாம். ஆனால் இந்தியாவுக்கே உரிய சாலைத் தொல்லைகளான சாக்கடைப் பள்ளங்கள், எருமை மாடுகள், வி.வி.ஐ.பிகள் போன்றவற்றை எந்த கம்ப்யூட்டராலும் மாடலிங் செய்ய முடியாது. எனவே என்னதான் புள்ளியியல் புரபசராக இருந்தாலும், தெருவில் இறக்கிவிட்டால் அவருக்கும் இதே கதிதான் ஏற்படுகிறது. ஒரு முறை இந்தியப் பிரதமரின் காரைத் தப்பான சாலையில் திருப்பி விட்டு, அவரும் நம்முடைய அவஸ்தைகளைச் சில மணித் துளிகள் அனுபவித்தார். (அங்கே டூட்டியில் இருந்த போலீஸ்காரர்களைப் பாராட்டுவதற்குப் பதிலாகச் சஸ்பென்ட் செய்தார்கள், பாவம்).
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் பல வழிகளை ஆலோசித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, ரோட்டில் வண்டி ஓட்டுவதற்குக் காசு வசூலிப்பதுதான். டோல் ரோடுகள், டோல் பாலங்கள் என்று முக்கியமான பிரதேசங்களையெல்லாம் கட்டணப் பகுதிகளாக அறிவிக்க ஆரம்பித்தார்கள். லண்டன் நகரின் பயணம் செய்ய “நெரிசல் கட்டணம்’ ஐந்து பவுண்டு என்று தொடங்கி, வருடா வருடம் விலை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் பல ரோடுகளில் அலுவலகம் போகும் பீக் அவர் நேரங்களில், தெருவில் வீல் வைத்தால் டிக்கெட் வாங்க வேண்டும். சனி, ஞாயிறு இலவசம். அதிலேயே சிக்கனமான சிறிய கார்களுக்கு சற்றுக் குறைந்த கட்டணம், மண்ணெண்ணை கலந்து கரும் புகை கக்கினால் அதிக சார்ஜ் என்று பல பாலிசிகளை ஒன்றாகக் கலந்து குழப்படி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
சாலைக் கட்டணங்களை மறுக்கவும் எதிர்க்கவும் பலர் கோஷ்டிகள் அமைத்து கோஷம் போடுகிறார்கள். “”சாலைகள் போடுவது, அசோகர் காலத்திலிருந்தே அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல் மீது பயங்கரக் கந்து வட்டி வரி என்று உறிஞ்சிக் கொழுத்தது போதாமல், இப்போது தெருவில் போவதற்கும் காசு கேட்கிறீர்களா? இது மனிதனின் அடிப்படையான நடமாடும் உரிமையையே கட்டுப்படுத்துகிறதே” என்பது அவர்களுடைய அனல் மூச்சு. “” வழியில் இருக்கிற ஒவ்வொரு தெருவுக்கும் பாலத்துக்கும் தண்டல் கட்டிவிட்டுத்தான் போக வேண்டும் என்றால், பணக்காரர்கள் எப்படியும் பயணம் செய்துவிடுவார்கள். அடித்தட்டு மக்கள்தான் நாலு இடத்துக்குப் போய் வேலை செய்து பிழைக்க முடியாமல் தன்னுடைய பேட்டைக்குள் சிறைப்பட்டு விடுவார்கள்” என்பதும் நியாயமாகவே படுகிறது.
கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றால் அடுத்த ஆயுதம், வாகனம் ஓட்டுவதில் முடிந்த அளவு தடைகள் ஏற்படுத்துவது. கூட்டம் கூடும் பகுதிகளில் வேண்டுமென்றே பார்க்கிங் வசதிகளைக் குறைத்து விடுவது. தியேட்டர் அருகே காரை நிறுத்த இடமில்லாமல் லொட்டு லொட்டென்று ஒரு கிலோமீட்டர் நடந்து போய் சினிமா பார்க்க வேண்டுமென்றால், பலர் விடுமுறை நாள்களில் அங்கே போய் அம்முவதைத் தவிர்ப்பார்கள். அமெரிக்காவில் ஒற்றை ஆள் ஒருவர் தன்னந்தனியாகக் காரில் சென்றால் பொதுப் பாதையில் நீண்ட வாகன வரிசையில்தான் போக வேண்டும்; ஒரே காரில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து போனால், ரோடு ஓரத்தில் தனியாக ராஜ பாட்டையில் சல்லென்று சீக்கிரமாகப் போகலாம். கார்பூல் பாதை என்ற இந்த வசதிக்காகவே, ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் முறை போட்டுக் கொண்டு தினம் ஒருவருடைய காரில் சேர்ந்து பயணம் செய்வார்கள். நெரிசலைக் குறைப்பதற்கு எல்லாவற்றையும் விடச் சிறந்த ஆயுதம், பஸ், ரயில்தான்!
சாலைச் சுங்கம் வசூலிக்கும் சாவடிகளில் தினமும் லட்சக் கணக்கான வண்டிகளுக்கு எச்சில் தொட்டு டிக்கெட் கிழித்துக் கொடுத்து நாக்கு உலர்ந்து போய்விட்டதால், ஆட்டோ பாஸ், டெலி பாஸ் போன்ற தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் சுங்கச் சாவடியில் நிறுத்தவோ, வேகத்தைக் குறைக்கவோ கூடத் தேவையில்லை; ரேடியோ அலைகள் வழியே தொடர்பு கொண்டு காரே போகிற போக்கில் தன் கட்டணத்தைக் கட்டி விடும். சிங்கப்பூரில் நகர மையத்துக்குப் போகிற எல்லா ரோடுகளிலும் வருக வணக்கம் என்று தோரண வாயில்கள், வளைவுகள் உண்டு. எல்லாம் தானியங்கிப் பணம் பிடுங்கி வளைவுகள்! கலீலியோ என்று செயற்கைக் கோள் அமைப்பின் வழியாக ரோட்டில் போகும் அத்தனை வண்டிகளையும் கடவுள் போல் கண்காணித்து நீங்கள் எப்போது, எந்தத் தெருவில் எத்தனை நேரம் பயணம் செய்தீர்கள் என்று கூட துல்லியமாக பில் போட்டு வசூலித்து விடமுடியும். அரசியல், பிசினஸ் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்தத் தொழில் நுட்பத்தில் இருக்கும் துஷ்பிரயோக வசதியைக் கருதி, இதைப் பல நாடுகளில் பரவலாகக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள். இடது சாரிகள் “உயிரே போனாலும் ஒப்புக் கொள்ள மாட்டேன்’ என்று எதிர்க்கிறார்கள்.
பப்லுவுக்குப் பிடித்த புராதனமான கடி ஜோக் ஒன்று: பசியுடன் இருந்த ஒருவன், காலை உணவுக்கு ப்ரெட் வாங்கி வெண்ணை தடவிக் கொண்டு மவுண்ட் ரோடில் போய்க் காத்திருந்தானாம். ஏன்? அங்கே ட்ராபிக் ஜாம் கிடைக்கும், தொட்டுத் தின்னலாம் என்று!
Posted in Accidents, Auto, Carpool, Cars, Chennai, City, Comfort, Commute, Congestion, Diesel, Dinamani, Driver, Environment, Freeway, Gas, Highway, infrastructure, Insurance, Kathir, LA, Lights, Limo, Limousine, London, Luxury, Manufacturing, Metro, NYC, Paris, Parking, Parkway, Patterns, Petrol, Pollution, Pooling, Raman Raja, Roads, Rotary, Rural, Signals, Singapore, Sprawl, Street, Suburban, Tax, Toll, Traffic, Transport, Travel, UK, Urban, Warming | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007
நெட்டில் சுட்டதடா…: மழையைத் திருடிய மனிதர்கள்!
நடிகர் கமல்ஹாசன் நல்ல கவிஞரும்கூட என்பது அவருடைய ரசிகர் வட்டத்திற்குள் மட்டும் தெரிந்த விஷயம். அவருடைய கவிதைகளில் நான் ரசித்த ஒன்று இது:
பெய்யெனப் பெய்யுமா மழை?
மழைக்குமெனில், உன் தாயிடம் சொல்;
நாடு நனையட்டும்.
திருவள்ளுவர் காலத்தில் மழையை ஆணையிடுவதற்குப் பத்தினிப் பெண்களே போதுமானதாக இருந்தார்கள். கிரேக்கர்கள் மழை வேண்டுமென்றால் ஜீயஸ் கடவுளுக்கு லஞ்சம் கொடுத்துப் பார்த்தார்கள். பிறகு அமிர்தவர்ஷிணி ராகம், கழுதைக்குக் கல்யாணம் என்று பல உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டும் ஒன்றும் பலனில்லை. ஆனால் தற்போதைய விஞ்ஞானத்தின்படி, சில வேதிப் பொருட்களை மேகத்தில் செலுத்திச் செயற்கையாக மழை பெய்விக்க முடியும். செயற்கை மழை என்றால் செயற்கையாக மேகத்தை உற்பத்தி செய்வது அல்ல. (அவ்வளவு தண்ணீரைக் காய்ச்சவல்ல அடுப்பு கிடையாது!) இருக்கும் மேகத்தை, நம்ம ஊருக்கு நேர் மேலே வரும்போது கப்பென்று பிடித்துக் கொண்டு கையிலிருப்பதைக் கொடுத்துவிட்டுப் போ என்று சொல்ல முடியும். cloud seeding மேக விதைப்பு முறைகளை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்து வருகிறார்கள். விமானத்தில் பறந்து போய் மேகத்தின் அருகில் வெள்ளி அயோடைடு குச்சிகளைக் கொளுத்தி தீபாராதனை காட்டுவார்கள்; நீராவி குவிந்து மழைத் துளியாக மாறிக் கீழே வரும். சென்ற ஆண்டு சீனாவில் பயங்கரமாகப் புழுதிப் புயல் அடித்து நகரங்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தன. கீழே இருந்தே ராக்கெட் மூலம் சிகரெட் சைஸ் வெள்ளி அயோடைடு குச்சிகளை விண்ணில் செலுத்தி மழையைக் கொண்டு வந்து பெய்ஜிங் நகரத்தையே சுத்தமாக அலம்பிவிட்டார்கள்.
சீனாவின் வட பகுதிகளில் பஞ்சம் போக்கவும், காட்டுத் தீயை அணைக்கவும் தேவைப்பட்ட போதெல்லாம் மழை பெய்விக்க ஓர் அரசாங்க டிபார்ட்மெண்ட்டே இயங்குகிறது. சில சமயம் வெறும் உப்பு, சில சமயம் உலர்ந்த பனி இப்படி எதையாவது மேகத்தில் தூவி மழைபெய்ய வைக்கிறார்கள். (உலர் பனி என்பது கார்பன் டை ஆக்ûஸடை அமுக்கி சுருக்கப்பட்ட பனிப் பொடி. அதை மேகத்தின் மேல் தூவினால் மேகத்துக்கு உச்சி குளிர்ந்துவிடும்.!)
ஆனால் இதெல்லாம் உண்மையிலேயே வேலை செய்கிறதா என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன. சிலர் செயற்கையை நம்ப மறுத்து, “”இயற்கையாக மழை பெய்யும் போதெல்லாம் அதிகாரிகள், தங்கள் முயற்சியால்தான் பெய்தது என்று வருண பகவானின் பி.ஏ. மாதிரி அறிக்கை விட்டுவிடுகிறார்கள். வடக்கு சீனாவில் விவசாயத்துக்குக் கன்னா பின்னாவென்று தண்ணீரை உபயோகிப்பதால் ஆறுகள் வறண்டு கோபி பாலைவனம் வேகமாகப் பரவி கொண்டிருக்கிறது. அதை மறைக்கத்தான் செயற்கை மழை என்று பிலிம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.
இயற்கையுடன் விளையாட ஆரம்பித்தால் அது என்ன மாதிரியெல்லாம் திருப்பம் எடுக்கும் என்பதுதான் யாருக்குமே தெரியாத புதிர். 1952 -ம் ஆண்டு நம்ம ஆகஸ்ட் 15-ம் தேதி பிரிட்டனில் உள்ள எக்ஸ்மூர் நதியில் கடும் மழை காரணமாக வெள்ளம். குறுகிய பள்ளத்தாக்கின் வழியே ஒன்பது கோடி டன் தண்ணீர் சீறிப் பாய்ந்து ஓடியது. பாறாங்கற்களையெல்லாம் அடித்துப் புரட்டிக் கொண்டு வந்த வெள்ளத்தின் வழியில் மாட்டிக் கொண்டது, டெவான் என்ற சிற்றூர். நிமிட நேரத்தில் வீடுகள் கடைகள் பாலங்கள் எல்லாம் இடிந்து விழ, முப்பத்தைந்து பேர் பலியானார்கள். “”கடவுளின் வினோத விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. ஆமென்” என்று அவசர அவசரமாகக் கேûஸ மூடி விட்டது அரசாங்கம்.
இதற்கு ஐம்பது ஆண்டுகள் கழித்து பி.பி.சி. ரேடியோவிடம் சில ரகசிய ஆவணங்கள் கிடைத்தன. அப்போது முற்றிலும் வேறு கதை விரிந்தது. வருடா வருடம் பெய்வதைப் போல 250 மடங்கு மழை திடீரென்று அன்று பெய்ததற்குக் காரணம், ராயல் விமானப்படை செய்த ஒரு சிறு திருவிளையாடல். ஆபரேஷன் க்யுமுலஸ் என்று பெயர் வைக்கப்பட்ட அந்த செயற்கை மழைப் பரிசோதனையில் பங்கு கொண்ட ஒரு விமானி சொன்னார்: “”மேகக் கூட்டத்துக்கு மேலே குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து உலர்ந்த பனியைத் தூவினோம். கொஞ்ச நேரம் கழித்து மேகத்துக்குக் கீழே வந்து பார்த்தால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டிருக்கிறது! எங்கள் தலைமையகத்திற்குத் திரும்பி உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் ரேடியோவில் வெள்ளம், உயிர்ச் சேதம் பற்றிய நியூஸ் சொன்னார்கள். உடனே அத்தனை பேரும் கப்சிப் என்று கற்சிலை மாதிரி ஆகிவிட்டோம்….”
பருவ நிலையைச் சீண்டி விளையாடுவதில் அமெரிக்க ராணுவத்துக்கு என்றுமே ஆர்வம் உண்டு. “”உலகத்தின் தட்பவெப்ப நிலை என்பது காட்டுக்குதிரை மாதிரி கட்டுக்கடங்காததோடு, எல்லாருக்கும் பொதுச்சொத்தாக வேறு இருக்கிறது. அதை முழுவதும் நம் கண்ட்ரோலில் கொண்டு வந்துவிட்டுத்தான் மறுவேலை” என்று கோடிக்கணக்கில் செலவழித்தார்கள். அலாஸ்கா மாநிலத்தில் ஹார்ப் ( HAARP ) என்று மாபெரும் ரேடியோ ஆன்டெனா வயல் ஒன்று அமைத்தார்கள். சக்தி வாய்ந்த ரேடியோ அலைகளை அனுப்பி வானத்தில் இருக்கும் அயனோஸ்பியர் என்ற மின்சாரப் போர்வையை மெல்லச் சூடாக்கி, என்ன ஆகிறது என்று பார்க்கும் ஆராய்ச்சி இது. மைக்ரோவேவ் அடுப்பில் நெருப்பில்லாமல் உருளைக்கிழங்கு வேக வைப்பது போலத்தான்; ஆனால் அவர்கள் சமைத்தது, வானத்தை! அந்தச் சூட்டில் அயனோஸ்பியர் போர்வையை ஒரு மாபெரும் பபிள் கம் மாதிரி உப்பிக் கொண்டு டன் கணக்கில் காற்றை உள்ளிழுக்கும். இந்த ஆயுதத்தை வைத்துக்கொண்டு எதிரி நாட்டின் ஏவுகணைகளையும் விமானங்களையும் அப்படியே உறிஞ்சித் துப்பிவிடலாம்; விண்ணையே மின்சார விரிப்பினால் மூடி, எதிரியின் சாட்டிலைட் செய்தித் தொடர்புகளைத் துண்டிக்கலாம் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். பிறகு ஹார்ப்புக்கு என்ன ஆயிற்று என்பதை அறிய, இன்னும் ஐம்பது வருடம் காத்திருப்போமாக.
இருபதாம் நூற்றாண்டின் நடுவில் அமெரிக்காவின் கிழக்குக் கரையை அடுத்தடுத்துப் பல புயல்கள் தாக்கிப் பலத்த சேதம். “”விஞ்ஞானிகள் எல்லாம் தண்டச் சம்பளம் வாங்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே, இந்தப் புயல் பயலை அடக்க ஏதாவது செய்யக்கூடாதா?” என்று எரிச்சல்பட்டார் ஜனாதிபதி ஐசன்ஹோவர். அப்படித்தான் ஆரம்பித்தது அமெரிக்காவின் புயல் பரிசோதனைகள். விஞ்ஞானி லாங்ம்யூர் என்பவர் தைரியமாகப் புயலின் கண்ணில் புகுந்து புறப்பட்டு உலர் ஐûஸத் தூவினார். புயலில் உள்ள தண்ணீரையெல்லாம் வடிய வைத்துவிட்டால் அதன் வீரியம் குறைந்துவிடும் என்று நினைத்தார். ஆனால் கடலில் மையம் கொண்டிருந்த புயல், ஒரு டைவ் அடித்துத் திசைமாறி ஜியார்ஜியாவைப் போய்த் தாக்கியது! பக்கத்து வீட்டுக் கண்ணாடியைப் பந்தடித்து உடைத்த சிறுவன்போல, வீட்டுக்கு ஓடிப் போய்ப் போர்த்திப்படுத்துவிட்டார் லாங்ம்ப்யூர்.
ப்ராஜெக்ட் புயல் வெஞ்சினம் ( storm fury ) என்று அறுபதுகளில் ஆரம்பித்து, ஓர் இருபது வருடம் புயல்களுடன் மல்லாடினார்கள் அமெரிக்கர்கள். ஆனால் இவர்கள் செய்யும் ஆராய்ச்சிகளுக்கு ஏதாவது பலன் இருக்கிறதா, அல்லது தானாகவேதான் புயல் பலவீனமடைந்துவிட்டதா என்பதைக் கடைசி வரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சில தடவை புயலடைத்தது; சில சமயம் பிசுபிசுத்தது. கடைசியில் இதெல்லாம் கதைக்குதவாது என்று ஆர்வம் இழந்துவிட்டார்கள். ஆனால் சீனா, ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகள் மட்டும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சீனாவில் விவசாயிகள் ஆடிப் பட்டம் தேடி விதைத்துவிட்டு, தண்ணீருக்கு விமான எதிர்ப்பு பீரங்கிகளை நாடுகிறார்கள். அவற்றில் கெமிக்கல் குண்டுகளை நிரப்பி, மேகங்களை அடித்துக் கீழே வீழ்த்த முடியுமா என்று முயற்சிக்கிறார்கள். இதில், “”எங்க ஊருக்கு வர இருந்த மழையை உங்க ஊரிலேயே தடுத்துத் திருடி விட்டீர்களே” என்று ஒரு பேட்டைக்கும் மற்றொரு பேட்டைக்கும் சண்டை நடக்கிறது. ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் சண்டை நடக்கிறது. (வேறு எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை?)
மழையைக் கொண்டு வருவது ஒரு புறமிருக்க, கிரிக்கெட் மாட்ச்சுக்கு ஐநூறு ரூபாய் தந்து டிக்கெட் வாங்கியிருக்கும் நாட்களில் மழையை வராமல் தடுக்கவும் வழிகள் யோசித்திருக்கிறார்கள். ரஷ்யாவில் விளையாட்டுப் போட்டிகள், வி.ஐ.பி பொதுக்கூட்டங்களின் போது மழையை முளையிலேயே கிள்ளுவதற்கு ஏற்பாடுகள் இருக்கின்றன. 2008-ல் சீனாவில் ஒலிம்பிக்ஸ் நடக்கப்போகிறது. மழை பெய்து ஆட்டத்தைக் கலைத்து விடக்கூடாதே என்பதற்காக இப்போதே ஓர் அரசாங்க இலாகா அமைத்து ஆள் படைகளுக்கெல்லாம் சம்பளம் கொடுத்து உட்கார்த்தி வைத்திருக்கிறார்கள். ஆனாலும், என்னதான் மனிதன் முயன்றாலும், “”நமக்கு மேலே இயற்கைன்னு ஒண்ணு இருக்கில்லே?” என்றுதான் சொல்கிறார்கள் அந்த அதிகாரிகள்.
ஆர்.கே. லட்சுமணனின் புகழ் பெற்ற கார்ட்டூன் ஒன்று; பார்த்தவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. மழை நிறைந்த காலை நேரத்தில் பஸ் ஸ்டாப்பில் ஏழெட்டு பேர் குடை, ரெயின் கோட்டுடன் நிற்கிறார்கள். ஒரே ஒருவர் மட்டும் குடையில்லாமல் சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு நிற்கிறார்.
“”அட, ஆமாம் நான் வானிலை இலாகாவிலேதான் வேலை செய்யறேன். எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”
————————————————————————————————————————————————
மக்களும் மழைநீரும்!
கி. சிவசுப்பிரமணியன், அறிவியல் ஆய்வாளர்
சூரியனால் வெளிப்படுத்தப்படும் வெப்பம் சுமார் 6,000 டிகிரி சென்டிகிரேட். இதில் ஒரு சிறு பகுதியே பூமிக்கு கிடைக்கிறது.
இந்த வெப்பநிலையே கடல்நீரை ஓரளவு ஆவியாக்கி மேகங்கள் மூலம் நமக்கு மழையாகக் கிடைக்க உதவுகிறது. இந்த வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும்பொழுது பருவகால மாற்றம் ஏற்படுகிறது. எனினும் எந்த ஆண்டிலும் மழையே இல்லாமல் அறவே பொய்த்துப் போவது இல்லை. இதுவே இயற்கை.
தமிழகம் தவிர இந்தியா முழுமையும் தென்மேற்குப் பருவகாலத்தில் ஏறத்தாழ 80 சதவிகித மழை கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் வடகிழக்குப் பருவகாலத்தில் அதிக அளவு மழை கிடைக்கிறது. இது இயற்கையின் நியதி.
தமிழகத்தின் சராசரி மழையளவு ஏறத்தாழ 960 மி.மீ. இதில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மழை இரு முக்கிய பருவ காலங்களான தென்மேற்கு (332 மி.மீ) மற்றும் வடகிழக்கு (465 மி.மீ) பருவகாற்றினால் கிடைக்கிறது.
வடகிழக்குப் பருவமழை (அக்டோபர் – டிசம்பர்) இந்த ஆண்டு தமிழகத்தில் அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கியது. ஆண்டின் மொத்த மழையில் பாதியளவு இம்மூன்று மாத காலத்திலேயே பெய்துவிடுகிறது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் இப்பருவ மழையின்போதுதான் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவு அதிகரிக்கிறது.
எனவே, இக்குறுகிய காலத்தில் எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு மழைத்துளியையும் மிகச்சிறந்த முறையில் நிலத்திலும் (குளம், குட்டை, ஏரி போன்றவை) மற்றும் நிலத்திற்கு கீழும் (கசிவுநீர்க் குட்டைகள், மழைநீர் அறுவடை, கிணறுகள் போன்றவை) சேமிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
“மகேசனை நம்பலாம் ஆனால் மழையை நம்ப முடியாது’. இது கிராமப்புற மக்களின் கூற்று. நகர்ப்புறங்களில் மழை குறைந்தாலும் பாதிப்புகள் அதிகம் இல்லை. ஆனால் விவசாயத்தையே நம்பியுள்ள கிராமங்களுக்கு மழையே உயிர் மூச்சு. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை சென்னைக்கு மிக அதிக அளவு மழையை அளித்துள்ளது. ஆனால், வடகிழக்குப் பருவமழை அந்த அளவுக்கு சிறப்பாகப் பெய்யவில்லை.
எனினும், அடைமழைபோல் அவ்வப்போது தூறலுடன் பெய்த தொடர் சிறுமழை நிலத்தடிநீர் மேம்பாட்டிற்கு மிகவும் உகந்ததாகும்.
பெய்கின்ற சிறுதூறல் மழையில் பெரும்பகுதியை பூமி நிதானமாக உள்வாங்கி மண்ணுக்கு அடியில் எங்கெல்லாம் துவாரங்கள் உள்ளதோ அங்கெல்லாம் நீரைப்புகுத்தி நிலத்தடி நீர்மட்டம் மேம்பட அடிப்படையாக அமைய வழிவகுத்தது இந்த சிறுதூறல் மழையே. இக்கருத்தின் வெளிப்பாடே “சிறுதுளி பெருவெள்ளம்’ என்பதாகும்.
உதாரணமாக, சென்னையில் அக்டோபர் மாதத்தின் சராசரி மழையளவு 270 மி.மீ. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 15 நாள்களில் 257 மி.மீ. மழை பெய்தது. ஆனால் ஒரே நாளில் மட்டும் (அக்டோபர் 28) 140 மி.மீ மழை பெய்துள்ளது. எனவே மீதமுள்ள இந்த ஒருமாதத்தில் பெய்கின்ற மழைநீரைச் சிறப்பாகச் சேமிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.
தமிழகத்தின் பெருவாரியான மாவட்டங்களில் அமைந்துள்ள மழைநீர் சேமிப்பு அமைப்புகளான ஏரிகள் மூலம் ஓரளவுக்கு மேல் பெய்கின்ற பெருமழைநீரைத் தேக்கினால் அது மழையற்ற கோடைகாலத்திற்கு பெரிதும் உதவும்.
எக்காரணத்தைக் கொண்டும் ஏரிகளை எவரும் ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது. அவை எதிர்காலத்தின் நீர் ஆதாரங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
நகரங்களில் வீடுகளுக்கு மழைநீர் சேகரிப்பு எவ்வளவு கட்டாயமோ அவ்வளவு கட்டாயம் கிராமங்களில் மழைநீர் சேகரிப்பதும் ஆகும். எனவே கிராமப்புறங்களில் உள்ள ஏரிகளையும், குளங்களையும் மராமத்து செய்து அவற்றின் முழு கொள்ளளவுக்கு தயார் செய்வது அரசு மற்றும் அனைத்து மக்களின் இன்றியமையாத கடமையாகும். ஆனால் இவைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டாலும், செயல்பாடுகள் மிகவும் குறைவே. இதுவே ஒட்டுமொத்த நீர்ப்பற்றாக்குறைக்கு அடிப்படைக் காரணமாகும்.
ஆண்டுதோறும் கிடைக்கின்ற மழை நம் தேவைக்கும் அதிகமாகவே கிடைக்கிறது. ஆனால் அதை உரியமுறையில் சேமித்துவைக்க நாம் தவறிவிடுகிறோம் என்பதே உண்மையாகும்.
“காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப கிடைக்கின்ற மழைநீரை உரிய முறையில் சேகரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.
பருவகாலங்களில், மிகக் குறுகிய நாள்களில் அளவுக்கு அதிகமாக பெருமழை பெய்து, பேரளவு வெள்ளம் வீணாகக் கடலில் கலக்கிறது. இப்படி அதிகமாகப் பெய்யும் மழைநீரை முடிந்தவரையில் சேமித்து, அதை வறட்சி மற்றும் பற்றாக்குறைக் காலங்களில் பயன்படுத்திக்கொள்ளும் முறையே நீர் மேலாண்மையின் அடிப்படையாகும்.
இக்கருத்து விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீர் சேமிப்பிற்கும் பொருந்துவதாகும். இம்மழைநீரைப் பயன்படுத்திக்கொள்ள மழைநீர் தேங்கும் இடங்களில் சிறிய குளம், குட்டைகளை அமைக்க அரசும், மக்களும் முயற்சிக்க வேண்டும். இவற்றையே கசிவுநீர்க் குட்டைகள் என்கிறோம்.
இக்குட்டைகளுக்கு மழைநீர் வரத்தொடங்கியதும் நிலத்தால் அது உறிஞ்சப்படுகிறது. எங்கெல்லாம் நீர் பூமியில் வேகமாக உறிஞ்சப்படுகிறதோ அங்கெல்லாம் நிலத்தடி நீர் வளம் அதிகமாக உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு அதன் உவர்நீர்த் தன்மையும் மாறி நன்னீர் பெறத் துணைபுரிகிறது. இக்கருத்துகளின் அடிப்படையில் மழைநீர் சேமிப்பின் அவசியத்தை மக்களும், அரசும் முழுமையாக உணர்ந்து ஆக்கபூர்வ வழியில் செயல்பட வேண்டும்.
ஆண்டுதோறும் நமது தேவைக்கு அதிகமாகவே மழைநீர் கிடைக்கிறது. ஆனால் அதை நாம் சரிவர பயன்படுத்திக் கொள்வது இல்லை. உதாரணமாக, ஒரு கிரவுண்டு (2400 சதுர அடி) நிலத்தில் 1 மி.மீ. மழை பெய்தால் அது 223 லிட்டர் நீருக்குச் சமம்.
சென்னையில் ஆண்டுதோறும் சராசரியாக 1300 மி.மீ. மழை பெய்கிறது. இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை 677 மி.மீ. மழையும் அக்டோபர் முதல் நவம்பர் வரை 354 மி.மீ. மழையும் பெய்தது. டிசம்பர் மாதம் 150 மி.மீ. மழை பெய்தது.
எனவே எதிர்காலத்தில் ஒவ்வொரு தனிமனிதரும் தத்தம் வீடுகள் மற்றும் நிலங்களில் இயன்ற அளவு மழைநீரைச் சேமித்து பூமிக்குள் செலுத்த வேண்டியது முக்கிய கடமையாகும். மேலும் பொது இடங்களில் கிடைக்கும் பேரளவு மழைநீரைச் சேமிக்க அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டுதோறும் தவறாமல் இத்தகைய செயல்பாடுகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டால் நமது நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்துக்கே இடமிருக்காது.
Posted in Agriculture, Backgrounder, cloud seeding, Clouds, Cyclones, Disaster, Drought, Dry, Environment, Facts, Farming, Floods, groundwater, History, Monsoon, Pollution, Rain, River, storms, Thunderstorms, Tsunami, Twisters, Warming, Water | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007
உயிர் எரிசக்தி மாயை-ஓர் அபாயம்!
ஆர்.எஸ்.நாராயணன்
உயிர் எரிசக்தி அதாவது தாவரங்கள் மூலம் பெறப்படும் எரிசக்தி, இன்று நிலவும் கச்சா எண்ணெய் எரிபொருள் நெருக்கடிக்குரிய சரியான தீர்வாகவும் பூமி வெப்பமடைதலைத் தணிக்கவல்லது என்றும் ஒரு தவறான எண்ணம் தலைதூக்கியுள்ளது.
புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணமே வல்லரசு நாடுகளின் வரம்பற்ற எரிசக்திப் பயன்பாடு. இதனால்தான் நச்சுப்புகைகளின் பசுமையக விளைவு ஏற்பட்டு ஓசோன் மண்டலம் ஓட்டையாகிறது. வல்லரசுகளான வடக்கு நாடுகளுடன் ஒப்பிடும்போது வளரும் நாடுகளின் எரிசக்திப் பயன்பாடு 10 சதத்திற்கும் குறைவுதான்.
வல்லரசுகள் தங்களின் எரிசக்திப் பயன்பாட்டின் அளவைக் குறைத்துக் கொள்வதற்கு முன்வராமல் இருக்கவே “”தாவர எரிசக்தி- உயிர் எரிசக்தி” என்ற மாயையைத் தோற்றுவித்து சுகம் பெறுகின்றன. வளரும் நாடுகளோ இந்த உயிர் எரிசக்தியை ஏற்றுமதிக்குரிய சந்தைப்பொருளாக மதித்து ஆர்வம் காட்டிவருகின்றன.
உயிர் எரிபொருள் எவை? இன்று அதிகபட்சம் உயிர் எரிசக்தியாக பயோ எத்தனால் பயன்படுகிறது. பின்னர் தாவர எண்ணெய் மூலம் பெறப்படும் பயோ டீசல். உணவுப் பொருள்களான பல்வேறு புஞ்சைத் தானியங்களின் மாவைப் புளிக்கவைத்தும், சர்க்கரைச்சோளம் என்ற பயிரின் தண்டைப் பிழிந்து சாறெடுத்தும் கரும்புச் சாற்றிலிருந்தும் பயோ எத்தனால் எடுக்கப்பட்டு அது பெட்ரோலில் கலந்து பயன்படுத்தப்படுகிறது.
உணவாகப் பயன்படக்கூடிய மக்காச் சோளமும் எத்தனாலாகிறது. சோயா மொச்சை, கடுகு, எண்ணெய்ப்பனை போன்ற எண்ணெய் வித்துப் பயிர்களும் பயோ டீசலுக்குப் பயனாகிறது. பசிபிக் தீவுகளில் தேங்காய் எண்ணெய், ஆப்பிரிக்க நாடுகளில் எண்ணெய் காட்டாமணக்கும் அடக்கம்.
தாவர எண்ணெய்களை எரிபொருளாகப் பயன்படுத்துவது புதிய விஷயமல்ல. ஆமணக்கு எண்ணெயின் பெயரே விளக்கு எண்ணெய்தான். மன்னராட்சிக் காலத்தில் இலுப்பை மர வளர்ப்புக்கு தேவதானம் (கோயில் மானியம்) வழங்கப்பட்டதைச் சோழர்காலத்துச் செப்போடுகள் கூறும்.
தீவட்டி, தெருவிளக்கு, கோயில் தீபம் எல்லாவற்றுக்கும் பயன் தர இலுப்பை மரங்கள் இருந்தன. ஏழைகளுக்கும் பழங்குடிகளுக்கும் வாழ்வளித்தன. இன்றோ இலுப்பை மரமே அரிதாகிவிட்டது.
கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்றாகத் தாவர எண்ணெய்களைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. இதன்மூலம் ஏழை விவசாயிகளுககும் பழங்குடி மக்களுக்கும் வருமானம் கிடைக்கும். ஆனால், இந்த அடிப்படையில் மாற்று எரிசக்தி திட்டம் அணுகப்படவில்லை. கச்சா எண்ணெய் எரிபொருள்களை மிக அதிகமாகப் பயன்படுத்தும் வடக்கு நாடுகள் அற்பவிலை கொடுத்து உயிர் எரிபொருள்களை ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொண்டு தங்களுடைய நுகர்வுத் திட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்யத் தயாராக இல்லை. அதேசமயம், ஏழைநாடுகளில் உள்ள பணக்காரர்கள் உலக வர்த்தகத்தில் உயிர் எரிபொருள் அங்காடியில் தங்கள் பங்கை வளர்த்துக்கொள்ளும் போட்டியில் இறங்கிவிட்டனர்.
இந்தப் போட்டா போட்டியின் விளைவுகள் அபாயகரமானவை. ஒரு மாயவலை பின்னப்படுகிறது. “” உயிரி எரிபொருள்கள் சுற்றுச்சூழலின் காவலர்கள்” என்றும் இவை பசுமையக (எழ்ங்ங்ய் ஏர்ன்ள்ங்) விளைவுகளான நச்சுப் புகைகளைக் கணிசமாகக் குறைக்கும்” என்றும் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த மாற்று உயிர் எரிபொருள் திட்டமே வடக்கு நாடுகளின் சதித்திட்டம் என்பதை ஏழை நாடுகள் எள்ளளவும் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
இதனால் நிகழப்போகும் அபாயங்கள் எவை?
சர்வதேச உயிர் எரிபொருள் அங்காடியில் பலியாகும் உணவுப் பயிர்களில் முக்கியமானவை மரவள்ளிக்கிழங்கு, சோயா மொச்சை, மக்காச்சோளம், மணிலாப் பயிறு, கரும்பு, எண்ணெய்ப் பனை, ரேப்சீட் என்ற கடுகுவகை போன்றவை. ஆகவே உயிர் எரிபொருள் அங்காடி வலுப்பெற்றால், உணவுப் பயிர்களின் வழங்கல் பாதிப்புறலாம். முன்பு கவனிக்கப்படாமல் இருந்த எண்ணெய் காட்டாமணக்கு, புங்கன் இன்று கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால், வேம்பு, இலுப்பை, சால் உரிய கவனம் பெறவில்லை.
உயிர் எரிபொருள் உற்பத்தியில் வல்லரசுகளின் கவனம் திரும்பிவிட்டதால் விவசாய நிலம், தண்ணீர் நெருக்கடி வலுப்பெறும். இப்போது மொத்த விவசாய நிலத்தில் சுமார் 30 சதம் உயிர் எரிபொருள் உற்பத்திக்கு என்று திட்டமிடப்படுகிறது. இந்தியாவில் காட்டாமணக்கு ஜூரம் தலைக்கேறி விட்டது. தமிழ்நாட்டில் வாழை, நெல், பயிரிட்ட இடங்களில் காட்டாமணக்கு நட வங்கி உதவி, மானியம் கிட்டுகிறது. காட்டாமணக்கு புஞ்சைப் பயிர் அல்ல . வாழை, கரும்புக்குப் பாயும் நீரைவிட அதிகம் பாய்ச்சினால்தான் நிறைய விதைகள் கிட்டி நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.
ஆப்பிரிக்க மக்களுக்கு மக்காச்சோளம் முக்கிய உணவு. அடுத்து மரவள்ளிக்கிழங்கு மாவு. இன்று மக்காச்சோளத்தின் சர்வதேச விலை உயர்ந்துவிட்டது. உயிரி எரிபொருள் பயனுக்கு என்றே ஆப்பிரிக்கச் சோளம் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு டாலர், யூரோ நோட்டுகளைப்பெற ஏற்றுமதி தொடங்கிவிட்டது. இதனால் உள்ளூரில் மக்காச்சோள விலை உயரும்போது மக்களின் உணவுப் பிரச்னைமட்டுமல்ல; மாடு, கோழிகளின் உணவுப் பிரச்னையும் ஏற்படும். மக்காச்சோளம் மாவு கால்நடைகளின் திட உணவும் கூட. கோழிகளுக்கும் மக்காச்சோளம் பிரதான உணவு.
எண்ணெய்ப்பனை அதிகம் விளையும் மலேசியாவும் இந்தோனேசியாவும் இணைந்து தங்களின் பாமாயில் உற்பத்தியில் 40 சதவீதத்தை பயோடீசலுக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளன. அதாவது, அமெரிக்க- ஐரோப்பிய ஏற்றுமதியால் பாமாயில் விலை உயர்ந்தால் முதல் பாதிப்பு இந்தியாவுக்கே.
ஏற்கெனவே சர்க்கரை விலை உயர்ந்துவருகிறது. உலகிலேயே கரும்புச் சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில் சர்க்கரை மலிவாக விறகப்படவில்லை. இந்தியாவுக்கு இணையாக கரும்பு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் பிரேசிலில் சுமார் 50 சதம் எத்தனால் உற்பத்திக்குச் செல்கிறது. கூடிய விரைவில் இந்தியாவும் பிரேசிலைப் பின்பற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது. பயோடீசலை விட பயோ பெட்ரோலிய எத்தனாலின் பயன்பாடு நடைமுறை சாத்தியமானது. எத்தனாலுக்குக் கரும்புச்சாறு அல்லது மாவுப்பொருள் புளித்த காடி போதும். இவை உணவு அல்லவா? மொலசஸ் என்ற சர்க்கரைப் பாகுக் கழிவும் கால்நடை உணவுக்குப் பயனாகிறது.
முக்கிய உணவுப்பொருள்களை பயோ பெட்ரோலாக மாற்றும் தொழில் வளர்ந்து வரும் சூழ்நிலையில், வருங்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படும் என்பதுதானஅ நிதர்சன உண்மை. விளைபொருள் விலைகள் கட்டுப்படியாகாமல் நிலத்தை விற்றுக்கடனை அடைக்கும் விவசாயிகள் ஒரு கட்டத்தில் தொழிலைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். அடிமட்டத்து மக்கள் ரொட்டித்துண்டுக்கு அலையும் பைரவர்களாவார்கள்.
மேலைநாடுகள் விவசாயத்துக்கு மானியம் வழங்க அவரவர் நாட்டு விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்றுவதுடன், உணவு உற்பத்தியில் தன்னிறைவும் ஏற்றுமதிக்கான உபரி உற்பத்தியும் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றன. இந்தியா போன்ற நாடுகள் உணவுப் பற்றாக்குறை நாடுகளாகும்போது அந்த மேலை நாடுகளை எதிர்பார்த்து வாழ வேண்டிய அபாயம் ஏற்படும்.
அடுத்த 50 வருடத்தில் நமது உணவுத்தேவை 75 சதவீதம் உயரும். உணவு உற்பத்தியைப் பாதிக்காத அளவில் உயிர் எரிபொருள் உற்பத்தியை உயர்த்துவதுதான காலத்தின் கட்டாயம். இதை முறையாக திட்டமிட்டு நமது அரசு செய்யத் தவறினால் அடுத்த வேளைச் சோறுக்கு அந்நிய நாட்டுக் கப்பலை எதிர்நோக்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுவோம்.
———————————————————————————————
பசுமை இல்ல வாயுக்கள்: புகாருக்கு இந்தியா பதில்
நியூயார்க், ஆக. 3: காற்று மண்டலத்தை மாசுபடுத்தும் பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற வளர்ந்த நாடுகளின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.
பசுமை இல்ல வாயுக்களால் (கார்பன் டை ஆக்ûஸடு, நைட்ரஸ் ஆக்ûஸடு, மீத்தேன்) தட்பவெப்ப நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து விவாதிக்க ஐக்கிய நாட்டு பொதுசபையின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை கூட்டப்பட்டது. அதில் பங்கேற்ற ஐநாவுக்கான இந்தியத் தூதர் நிருபமா சென், இந்தியா மீதான வளர்ந்த நாடுகளின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.
ஐநா சபையில் மேலும் அவர் பேசியது:
தற்போது காற்றுமண்டலத்தில் நிலைகொண்டுள்ள பசுமை இல்ல வாயுக்களும், அதனால் தட்பவெப்பநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றமும் கடந்த ஓர் நூற்றாண்டில் வளர்ந்த நாடுகளால் உமிழப்பட்ட பசுமை இல்ல வாயுக்களின் விளைவே ஆகும்.
மறுக்கவில்லை:
அதேவேளை, பசுமை இல்ல வாயுக்களை இந்தியா வெளியிடவே இல்லை என்று கூறவில்லை. பசுமை இல்ல வாயுக்களை அதிகமாக உமிழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதைத்தான் மறுக்கிறோம். இந்தியாவில் 17 சதவீத மக்கள்தான் பசுமை இல்ல வாயுக்கள் உருவாவதற்கு காரணமாக உள்ளனர்.
காற்று மண்டலத்தில் நிலைகொண்டுள்ள பசுமை இல்ல வாயுக்களின் மொத்த அளவில் 4 சதவீதத்திற்குதான் இந்தியா பொறுப்பாகும். இந்த அளவையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் தொழிற்சாலைகள் அதிகரித்து அதற்குத் தேவையான எரிபொருள் அளவும் அதிகரித்துள்ளது.
இருப்பினும், இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகளால் காற்று மண்டலம் மாசுபடக்கூடாது என்பதில் இந்தியா கவனமாக உள்ளது. இந்தியாவில் பெட்ரோலியம், டீசல் உள்ளிட்ட மரபுசார் எரிபொருள்கள்தான் அதிகம் பயன்பாட்டில் உள்ளன.
இந்த எரிபொருள்கள் எரிந்து கழிவாக வெளியேறும் போது காற்று மண்டலத்தை சீர்கெடுப்பவையாக உள்ளன. இதனால் இவற்றிற்கு மாற்று எரிபொருள்களை கண்டுபிடிப்பதிலும் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.
வளர்ந்த நாடுகள் முன்னிலை:
பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதில் வளர்ந்த நாடுகள்தான் முன்னிலை வகிக்கின்றன. இந்த விஷயத்தில் வளர்ந்த நாடுகளோடு வளரும் நாடுகளை எந்தவிதத்திலும் ஒப்புமைபடுத்தக் கூடாது என்பதை எங்கள் நாட்டு பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண அறிவியல் ரீதியான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பசுமை இல்ல வாயுக்களின் அறிகுறிகள் என்ன என்பதை விவாதிப்பதை விட்டு, அது உருவாவதற்கு காரணம் என்ன என்றும், அதை தடுப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.
இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் ஒரு வழியாக வளர்ந்த நாடுகள் தங்களது தொழில்நுட்பத்தை வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றார் நிருபமா சென். ஐநா சபையின் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் சுற்றுச்சூழல் அமைச்சர் முக்டூம் பைசல் ஹாயத், பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு “கியோடோ புரோட்டோகால்’ ஒப்பந்தத்தின் படி வளர்ந்த நாடுகளுக்கு உண்டு என்றார்.
Posted in Agriculture, Alternate, Analysis, Backgrounder, Brazil, Corn, Crisis, Deforestation, Diesel, Earth, Electricity, energy, Environment, ethanol, Farming, Food, Forest, Fuel, Gas, Greenhouse, Gulf, Harms, Imports, Kyoto, Land, Ozone, Perspectives, Petrol, Pollution, Power, Prices, Property, Rich, solutions, Soy, soybean, Warming | 2 Comments »
Posted by Snapjudge மேல் ஜூன் 5, 2007
நிலத்தில் வெளியேறும் புகை: பீதி வேண்டாம் புவியியல் துறை அதிகாரி தகவல்
உதகை, ஜூன் 5: தலைக்குந்தா வனப்பகுதியில் நிலத்திற்கடியிலிருந்து வெளிவரும் புகை 2 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
தலைக்குந்தா வனப்பகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதியிலிருந்து நிலத்திற்கடியிலிருந்து தொடர்ந்து புகைவெளிவருகிறது. இதில் கடந்த 2 நாட்களாக புகையுடன் தீக்கனல்களும் வெளிவந்ததால், அருகிலிருந்த செடி, கொடிகளும் அவ்வப்போது திடீரென தீப் பிடித்து எரிந்தன. இதனால், உதகை பகுதி மக்கள் பெரும் பீதியடைந்திருந்தனர்.
இது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தலைக்குந்தா வனப்பகுதியில் நிலத்திற்கடியில் படிந்த ஒரு வனப்பகுதி நாளடைவில் மட்கி ஒரு படிமம்போல உருவாகியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இப்பகுதியில் ஏற்பட்ட வனத்தீயின் வெப்பத்தால் இப்பகுதி தூண்டப்பட்டு அதிலிருந்து தற்போது புகை வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய படிமங்கள் நிலத்திற்கடியில் சுமார் 300 மீட்டர் நீளம் வரை உள்ளது.
தற்போது நடத்தப்பட்ட சோதனையில் 2 மீட்டர் ஆழத்திற்கு கீழே நெருப்பு, சுட்ட மண் எதுவும் வராததால் அதற்கு கீழே புகை வர வாய்ப்பில்லை. எனவே, மொத்தமுள்ள 300 மீட்டர் நீள பரப்பளவிலிருந்தும் நிலத்திற்கடியிலேயே எரிந்து புகை வரும். அதன்பின்னரே இது முழுமையாக அணையும் என்றார் அவர்.
——————————————————————–
நெருப்புகிரியானதா நீலகிரி?
எரிமலை பீதியால் ஏற்பட்ட பரபரப்பு
குமுதம் ரிப்போர்ட்டர்
03.06.07
மூடுபனி முக்காடு போட்டிருக்கும் இடம் நீலகிரி. குளுகுளுவென குளிர் கூடாரம் போட்டுத் தங்கியிருக்கும் அங்கே நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு விபரீதம் நிகழ்ந்து வருகிறது. அங்கே பூமிப்பிளவு ஒன்று திடீரென கரியையும், புகையையும், சாம்பலையும் கக்கத் தொடங்கியிருப்பதால் எரிமலை பீதியில் உள்ளனர் நீலகிரி மக்கள். இது நீலகிரியா? நெருப்பு கிரியா? என்ற சந்தேகம் அவர்களிடம் உழன்று வருகிறது.
நீலிகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தலைகுந்தா. இங்கிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றால் மீப்பி வனப்பகுதி. இதற்கு அரை கிலோ மீட்டர் தூரத்தில் முத்தநாடு மந்து, அத்திக்கல் நீபி ஆகிய மலைவாழ் மக்களின் கிராமங்கள் உள்ளன.
மீப்பி வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அப்போது இந்தப் பகுதியில் அடர்ந்த கரும்புகை வருவதை மலைவாழ் மக்கள் பார்த்திருக்கிறார்கள். ‘கோடைக்காலம் இல்லையா? ஏதாவது காட்டுத்தீ ஏற்பட்டிருக்கும்!’ என்று, அவர்கள் அலட்சியமாக இருந்து விட்டனர்.
வழக்கமாக மழைக்குப் பிறகு காட்டுத்தீ அணைந்து விடும். ஆனால், இந்த மர்மப்புகை விடாமல் தொடர்ந்திருக்கிறது. கூடவே கடந்த 24_ம் தேதி பெய்த மழையின் போது காதைப் பிளக்கும் இடிச்சத்தம் கேட்டதோடு தீப்பிழம்பும் தெரிந்து, புகைமூட்டம் அதிகமாகியிருக்கிறது.
இதனால் பயந்துபோன முத்தநாடு மந்துவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், அடுத்த நாள் அந்தப் பகுதிக்குப் போய் பார்த்திருக்கிறார்கள். அங்கு நடந்திருந்த பயங்கரத்தை அவர்களது கண்களே நம்ப மறுத்துவிட்டன. அங்கே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மரங்கள் வேரோடு சரிந்து பூமிப்பிளவுக்குள் சிக்கியிருக்க, அதிலிருந்து அக்னி குண்டம் போல புகையும், நெருப்பும் வந்து கொண்டிருந்தது. அரண்டு போன இளைஞர்கள், அதுபற்றி பக்கத்து ஊரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவரும் இதை நேரில் பார்த்து விட்டு அதிர்ந்து போயிருக்கிறார்.
‘‘இது நிச்சயம் எரிமலைதான்!’’ என்று முடிவு கட்டிய அவர், ஊட்டியில் உள்ள தீயணைப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் ஓட்டமாய் ஓடி வந்திருக்கிறார்கள். பூமிப்பிளவுகளில் இருந்து வெளிவரும் புகையை ஒருவித மிரட்சியுடன் பார்த்த அவர்கள், அது கக்கிய கரி, மண் ஆகியவற்றை எடுத்து ஆராய்ந்திருக்கின்றனர். அந்த மண் சுண்ணாம்புப் பவுடர் போலவும், கரிக்கட்டைகள் நிலக்கரி போலவும் இருப்பதைப் பார்த்து நிலைகுலைந்த அவர்கள், மாவட்ட கலெக்டருக்கும், புவியியல்துறை நிபுணர்களுக்கும் தகவல் அனுப்பினார்கள்.
அதையடுத்து, குன்னூரில் உள்ள புவியியல்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம், அந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார். அவர் நடத்திய முதல் கட்ட ஆய்வில் தெளிவாக எதையும் அறிவிக்க முடியவில்லை. அந்தப் பாறை இடுக்குகளிலிருந்து கந்தகம் போன்ற ஒருவித துர்நாற்றம் வீசியதால், ஒரு தீக்குச்சியை நீட்டி பாலசுப்ரமணியம் ஆராய்ந்திருக்கிறார். அது ‘பக்’கென பற்றிக் கொண்டு ஜூவாலை விட்டு எரிந்திருக்கிறது. ஆகவே, அங்கு மீத்தேன் வாயு கசிந்து கொண்டிருக்கலாம்’ என்றார் பாலசுப்பிரமணியம்.
அதுமட்டுமல்ல! ஒருவேளை உயரழுத்த மின்கம்பிகள் மண்ணில் புதைந்திருந்து அதன் காரணமாகக்கூட பூமி இப்படி புகை கக்கலாம் என்று இரண்டு விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார் பாலசுப்பிரமணியம். இதனால், அங்கு நின்ற இயற்கை மற்றும் சமூக ஆர்வலர்கள் குழம்பிப் போனார்கள். ‘‘இது நிச்சயம் எரிமலைதான். மக்கள் பீதியடையக் கூடாது என்பதற்காகத்தான், இந்தத் தகவலை மறைக்கிறார்கள்’’ என அடித்துப் பேசினார்கள் அவர்கள்.
‘‘இங்குள்ள முத்தநாடு மந்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உசில்மேடு என்ற குன்று உள்ளது. அது நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் எரிமலையாக இருந்து அணைந்து போனது. அது நிச்சயம் ஒருநாள் மீண்டும் வெடித்து தீக்குழம்பைக் கக்கும். அதன் ஆரம்ப அறிகுறிதான் இது’’ என்றார் இயற்கை ஆர்வலர் ஒருவர். இதுபற்றி நிலவியல் நிபுணர்கள் உரிய விளக்கம் எதையும் சொல்லாததால், ‘இது எரிமலைதான்’ என்று மீடியாக்கள் எழுத, இந்தப் பகுதியில் பதற்றம் பந்தி போடத் தொடங்கி விட்டது.
இந்தச் செய்திகள் வெளியானதையடுத்து வெளிமாநில விஞ்ஞானிகள், சுற்றுலா வாசிகளின் படையெடுப்பு அங்கே தொடங்கி விட்டது. கல்லூரி மாணவ, மாணவிகளின் கூட்டமும் களை கட்ட ஆரம்பித்து அவர்கள் மண் மாதிரிகளையும், கரிக்கட்டிகளையும் ஓடி ஓடிச் சேகரிப்பதும், ஆராய்வதுமாக இருந்தனர். நில வெடிப்புகளில் இருந்து வெளிவந்து விழும் கரிக்கட்டிகளும் சாம்பலும் படுபயங்கர சூடாக இருந்தன. அவற்றைத் தொடக்கூட முடியவில்லை. அத்துடன் அந்தப் பகுதி நிலம் வெப்பத்தால் தகதகத்தது. பலர் புகையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மயக்கமடைந்து விழுந்து விட்டனர். இதையடுத்து அந்தப் பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு போலீஸ் காவல் போடப்பட்டு அந்நியர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா ஓர் அறிக்கை வெளியிட்டார், அதில் ‘‘நீலகிரியில் எரிமலை ஏற்பட வாய்ப்பே இல்லை. எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை. பூமியில் ஏற்பட்ட இந்த மாறுதல் குறித்து புவியியில் ஆய்வு மையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டிருந்தார் அவர்.
‘‘சரி! நீலகிரியில் தோன்றியிருப்பது எரிமலையின் அறிகுறியா?’’ இப்படியரு கேள்வி நம் கழுத்தைப் பிடித்து உந்த, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலத்தியல் பேராசிரியர் மணிமாறனிடம் இதுபற்றிப் பேசினோம். அவர் அழுத்தம் திருத்தமாக சில விவரங்களைத் தந்தார்.
‘‘நீலகிரியில் எரிமலை வெடிப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை. பூமியில் அடித்தட்டுகள் இரண்டு ஒன்றையன்று முட்டக்கூடிய இடத்தில்தான் எரிமலை ஏற்படும். ஆனால் நீலகிரி ஒரு மலைப்பகுதி என்பதுடன், அது நிலத்தட்டுகளுக்கு வெகு தூரத்தில் உள்ளது. ஆகவே அங்கு எரிமலை ஏற்பட நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை.
ஆனால், நீலகிரியில் இப்போது புகை வெளியாகிக் கொண்டிருக்கும் பகுதியில் நிலக்கரி, லிக்னைட் போன்றவற்றுக்கு முந்தைய கரிப்படிவம் இருக்க வாய்ப்புள்ளது. பூமியில் புதையும் மரங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் வெப்பத்தால் இறுகி நமக்கு நிலக்கரியாகக் கிடைக்கிறது. நிலக்கரிக்கு முந்தைய லிக்னைட் படிவமாகவும் நமக்குக் கிடைக்கிறது.
இப்படி பலகோடி ஆண்டுகளாக பூமிக்கு அடியில் இருக்கும் நிலக்கரி, லிக்னைட் போன்றவை எளிதில் தீப்பற்றக் கூடிய பாஸ்பரஸ், ஸல்ஃபர் போன்ற வேதியியல் பொருட்களை உருவாக்குகிறது. பூமிக்குள் கிடைக்கும் வெப்பத்தால் சிலவேளைகளில் இவை எரியவும் ஆரம்பிக்கின்றன. கோடை மழையின் போது பூமி நன்றாகச் சுருங்கி விரியும். அந்தத் தருணத்தில் எங்கே இடைவெளி கிடைக்கிறதோ அங்கே இவை பொத்துக் கொண்டு புகையாகவும், நெருப்பாகவும் தலைகாட்டுகின்றன.
இதை வைத்து, இந்தப் புகை வரும் இடத்துக்கு நேர் கீழே நிலக்கரி இருப்பதாகக் கருதிவிட முடியாது. நிலக்கரி, லிக்னைட் படிவங்கள் பல மைல்களுக்கு அப்பால் இருந்து பீறிட்டால் கூட புகையும் நெருப்பும் அந்தப் பகுதியில் தரைக்கு மேலே தலை நீட்ட முடியாமல் பல மைல்களுக்கு அப்பால் உள்ள ஓரிடத்தில் தலைகாட்ட வாய்ப்புள்ளது.
நிலத்துக்கு வெளியே இந்த மாதிரி வெளியாகும் புகையும், நெருப்பும் இரண்டு மாதங்கள் வரை கூட நீடிக்கும். அதன் பிறகு தானே அடங்கி விடும். பூமிக்குள் இப்படி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை, வெளிநாடுகளில் செயற்கைக் கோள் மூலம் படம்பிடித்துத் தெரிந்து கொள்கிறார்கள்!’’ என்றார் அவர். ஸீ
– கா.சு. வேலாயுதன்
Posted in Aravenu, Blue Mountains, Coimbatore, Disaster, Disasters, Dodabetta, Earth, Earthquake, Environment, Fire, Forest, Gudalur, industrialisation, Kattabettu, Kodanadu, Kotagiri, Kunjapanai, Land, Marlimundh, Mettupalayam, Mountain, Mudumalai, Munnamachi, Nature, Nilgiris, Ootacamund, Ooty, Padanthorai, Perar, Pollution, Protection, Recovery, Smoke, Srimadurai, ST, Thalaigunda, Thalaigundha, Thalaikunda, Thalaikundha, Thalaikuntha, theppakadu, Thorapalli, Threat, tribal, Ubrrani Hada, UDHAGAMANDALAM, Volcano, Warming, Water, WetLand, Wetlands | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 18, 2007
நெட்டில் சுட்டதடா…: சுவாசிக்கும் முன் யோசி!
ராமன் ராஜா
சென்னையில் ஒரு கார் மெக்கானிக் ஷாப். குளிர் சாதனம் பொருத்திய கார் ஒன்று சர்வீசுக்காக வந்து நிற்கிறது. ராத்திரி முதலாளி வீட்டுக்குக் கிளம்பின பிறகு, பட்டறையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்கள் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறார்கள். காரில் ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டு என்ஜினை ஆன் செய்கிறார்கள். கோடையின் புழுக்கத்துக்கு இதமாக ஏ.ஸியை முழு வேகத்தில் திருப்பிக் கொள்கிறார்கள். நாள் முழுவதும் ஸ்பானர் பிடித்த களைப்பில் சுகமாகத் தூக்கத்தில் நழுவுகிறார்கள்…. ஆனால் காலையில் பார்க்கும்போது இருவரின் உயிரற்ற உடல்கள்தான் காரில் இருக்கின்றன. ஒரு காயமில்லை, ரத்தமில்லை, விஷம் சாப்பிட்ட அறிகுறியும் இல்லை. என்னதான் நடந்திருக்கும்?
சில மாதங்களுக்கு முன்னால் -பூனாவில் ஒரு கல்லூரி ஹாஸ்டல். பத்தொன்பது வயது மாணவி அர்ச்சனா, நள்ளிரவில் தனியாகப் படித்துக் கொண்டிருக்கிறார். டிசம்பர் குளிருக்கு எல்லாக் கதவு ஜன்னலும் நன்றாக அடைத்திருக்கிறது. திடீரென்று பவர் கட். மறுநாள் பரீட்சை என்பதால், ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு படிப்பைத் தொடருகிறார் மாணவி. வட இந்தியா பக்கமெல்லாம் கிடைக்கும் வாசனை மெழுவர்த்தி; ஓர் அடி நீளம் இருக்கும். பெரிய சுடர்… சற்று நேரத்தில் அர்ச்சனாவின் கண் சொக்குகிறது. அப்படியே ஒரு பத்து நிமிடம் டேபிளில் சாய்ந்து தூங்கலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அடுத்த நாள் காலையில் பரீட்சை எழுதுவதற்கு அர்ச்சனா இல்லை. விடுதி வார்டன் கதவை உடைத்துக் கொண்டு போய்ப் பார்த்தபோது கிடைத்த ஒரே சாட்சி, முழுவதும் எரிந்து முடிந்த மெழுகுவர்த்தியின் மிச்சங்கள்தான்.
கத்தியின்றி ரத்தமின்றி ஏற்பட்ட இந்த மூன்று மரணங்களின் மர்மம், போஸ்ட் மார்ட்டத்தில்தான் தெரிய வந்தது. இவர்கள் எல்லோரும் கார்பன் மோனாக்ûஸடு வாயுவை சுவாசித்ததால் இறந்திருக்கிறார்கள். இந்த கார்பன் மோனாக்ûஸடு (சுருக்கமாக கா.மோ.) என்பது கரியும், ஆக்ஸிஜனும் சரிவிகிதத்தில் கலந்தது. எங்கே எது எரிந்தாலும் இந்த வாயு வெளிப்படும். பொருள் எரிவதற்குப் போதுமான காற்று சப்ளை இல்லாவிட்டால் ஏராளமாக கா.மோ வாயுதான் உற்பத்தியாகும். வாகனங்கள், விறகு-கரி அடுப்பு, பர்னர் சரியில்லாத ஸ்டவ், ஜெனரேட்டர் செட்டுகள் எல்லாம் கார்பன் மோனாக்ûஸடைத் துப்பும் எமன்கள்! (சிகரெட் புகைத்தாலும் சுருள் சுருளாக கா.மோ.தான் ஜாக்கிரதை). புகைபோக்கி வைத்துப் பாதுகாப்பாக வெளியே விட்டால் உலகம்தான் குட்டிச்சுவராகுமே தவிர, நமக்கு உடனடி ஆபத்தில்லை. அதுவே மூடின சின்ன அறையில், அல்லது காருக்குள் ஆளைச் சூழ்ந்துகொண்டால் சில நிமிடங்களில் மரணம்தான்.
கார்பன் மோனாக்ûஸடைப் பார்க்க முடியாது. வாசனை எதுவும் இருக்காது என்பதால் கண்டுபிடிப்பது கஷ்டம். ரத்தத்தில் உள்ள ஹிமோக்ளோபினைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு மூளையைச் செயலிழக்கச் செய்துவிடுவதால், எழுந்து ஜன்னலைத் திறக்கவேண்டும் என்ற எளிய செயலைக் கூடச் செய்ய முடியாமல் கை கால் ஓய்ந்துவிடும். உலகத்தில் வருடா வருடம் சில நூறு பேர் கார்பன் மோனாக்ûஸடைச் சுவாசித்து இறக்கிறார்கள். மேலை நாடுகளில் கா.மோ சூழ்ந்திருப்பதைக் கண்டுபிடிக்கக் கருவிகள் வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் கூடத் தேவையில்லை; நமக்கு கார்பன் மோனாக்ûஸடு பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதா என்பதை அறிவது சுலபம்: காற்று புகுந்து புறப்பட இடமில்லாமல் பெட்டி மாதிரி அடைபட்ட அறையில் இருக்கிறீர்களா? அடுப்பு, கணப்பு, ஜெனரேட்டர் செட் ஏதாவது புகைகிறதா? தலை வலி, மறதி, மனக்குழப்பம், அசதி, வாந்தி என்று சித்த வைத்தியசாலை விளம்பரத்தில் வரும் அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா? ஆம் எனில் அனேகமாக நீங்கள் அளவுக்கு மீறி கா.மோ.வை சுவாசித்திருக்கக் கூடும். கதவைத் திறந்து வையுங்கள்; காலாற நடந்து போய் சுத்தமான காற்றை நெஞ்சில் நிரப்பிக் கொண்டு வாருங்கள்; சரியாகிவிடும். கார்பன் மோனாக்ûஸடிலிருந்து தப்பிக்க ஒரே வழி, காற்றோட்டம் ஏற்படுத்துவதுதான். காரில் போனால், எஞ்சினை ஓட விட்டுக் கொண்டு ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்கக்கூடாது.
மூடிய அறைக்குள்தான் இந்த ஆபத்து என்றால், நாகரிக உலகில் ஜன்னலைத் திறந்து வைத்தால் வெளியிலிருந்து வேறுவிதமான பேராபத்து காத்திருக்கிறது! போபால் நகரத்தில் யூனியன் கார்பைட் கம்பெனியிலிருந்து விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானவர்கள் இறந்ததை, இறந்து கொண்டிருப்பதை மறக்க முடியுமா? அந்த மரண இரவில், கதவு ஜன்னல்களை டைட்டாக அடைத்துக்கொண்டு ஏ.ஸி. அறையில் தூங்கியவர்கள் பலர் பிழைத்துக் கொண்டார்கள். தொழிற்சாலைகளின் விஷ வெளிப்பாடுகளால் உடனடியாக மரணம் நேர்ந்தால்தான் தலைப்புச் செய்தியாகிறது; ஆனால் பல ஊர்களில், எந்தப் பேப்பரிலும் பிரசுரமாகாமல் தினம் கொஞ்சம் கொஞ்சமாக ஜனம் செத்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுடைய அவல ஓலத்தைக் கேட்க முடியாமல் அதிகாரிகள் காதில் சில்லறை நாணயங்கள் அடைத்துக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது.
கடலூருக்குப் பக்கத்தில் சில கிராமங்கள் இருக்கின்றன. அவற்றின் பக்கம் மாலை வேளைகளில் ஒரு கிலோ மீட்டர் வாக்கிங் போனால் விதவிதமான வாசனைகள் மூக்கைத் துளைக்கும். நெயில் பாலிஷ், கொசுவர்த்திச் சுருள், முட்டைக்கோஸ், அழுகின சப்போட்டாப் பழம், செத்த எலி, என்று பத்தடிக்கு ஒரு நறுமணம். அங்கே இருக்கும் சிப்காட் தொழிற்பேட்டையின் ரசாயன ஆலைகளிலிருந்து வெளியாகும் கெமிக்கல் புகைதான் இத்தனை விதத்தில் நாறுகிறது. இடிப்பாரை இல்லாத ஏமரா அரசாங்கம், 1980 வாக்கில் தொழிலை வளர்க்கிறேன் பேர்வழி என்று கண்ட கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கும் வரிவிலக்கு, விதி விலக்கு எல்லாம் கொடுத்துப் புகுந்து விளையாடச் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டது. அவர்கள் அம்மோனியா, அசிடேட் என்று அகர வரிசைப்படி ஆரம்பித்து ஊரிலுள்ள அத்தனை விஷப் பொருள், வேதிப் பொருள்களையும் உற்சாகமாக ஊதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். பொழுதன்னிக்கும் இதைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களுக்குத்தான் பாவம், போக்கிடமே இல்லை. சில சமயம் அவர்கள் இருமல் தாங்க முடியாமல் காறித் துப்புகிற கோழை கூட பஞ்சுமிட்டாய் நிறத்தில் வருகிறது. பயங்கரம்!
நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்கு நிமோகோனியாசிஸ் என்ற வியாதி வரும். கரித் தூசியைச் சுவாசித்து சுவாசித்து, நுரையீரல்கள் முழுவதும் ரயில் இஞ்சினின் பாய்லர் மாதிரி கறுத்துவிடும். சீக்கிரமே வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு கொடைக்கானல் மாதிரி நிறைய இயற்கைக் காற்று கிடைக்கும் ஊரில் போய் செட்டில் ஆகிவிட்டால் ஓரளவுக்கு உடல் தேற வாய்ப்பு உண்டு. மணல் அள்ளுவது, கல் குவாரி வேலை போன்றவை செய்பவர்களுக்காக இதைவிட அருமையான ஒரு வியாதி இருக்கிறது: ‘நிமோனோ…’ என்று ஆரம்பித்து, இடையில் ஏகப்பட்ட எழுத்துகளை இட்டு நிரப்பி, ‘… கோனியாசிஸ்’ என்று முடியும் 45 எழுத்து வியாதி. இந்த நுரையீரல் நோயின் பெயர்தான் இப்போதைக்கு ஆங்கில அகராதியிலேயே மிக நீளமான வார்த்தை! (பெருமையாகச் சொல்லிக் கொள்ளவாவது உதவும்.)
டோக்கியோ போன்ற பெரு நகரங்களில் டிராபிக் போலீஸ்காரர்கள் நாள் முழுவதும் வாகனப் புகையில் நிற்பதால் அவர்களுக்கு ஆக்ஸிஜன் முகமூடி கொடுத்திருக்கிறார்கள். நம்ம ஊரிலும் இதற்கு சற்றும் குறையாத மாசுதான். தூசுதான். ஆனால் முகத்தில் சும்மா ஒரு கர்சீப் சுற்றிக்கொண்டு காவலர்கள் கடமையாற்றுவதைப் பார்க்கும்போது அனுதாபம் ஏற்படுகிறது. (அடுத்த முறை அந்தப் பத்து ரூபாயைக் கொடுக்க நேரும்போது பல்லைக் கடிக்காமல் கொடுத்தால் என்ன?) மேலை நாடுகளில் ஆக்ஸிஜன் பார்லர்கள் இருக்கின்றன.
இவற்றில் ஒரு கட்டணம் செலுத்தினால் கொஞ்ச நேரம் சுத்தமான காற்றைச் சுவாசித்து விட்டு வரலாம். இப்போது சென்னை உள்படப் பல நகரங்களிலும் வந்துவிட்டது. நாம் சாய்வு நாற்காலியில் ஓய்வாகப் படுத்திருக்க, பின்னணியில் அமைதியான இசை ஒலிக்க, கிராம்பு சந்தனம் என்று மெல்லிய நறுமணம் கலந்த ஆக்ஸிஜன் ஒரு குழாய் வழியே மூக்கில் இறங்க, க்ரெடிட் கார்டு கடன் தொல்லைகளைக் கூட மறந்து மனது அமைதியாகும் அந்த நிலையைத்தான் ஞானிகள் பேரின்பம் என்றார்கள். இதற்காகும் செலவு? அரை மணி மூச்சு விடுவதற்கு இருநூற்றைம்பது ரூபாய் வரை ஆகும்.
கவலைப்படாதீர்கள். இப்போது நாம் குடி தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவதில்லையா? அது போல மூச்சுக் காற்றையும் எல்லோரும் விலைக்கு வாங்கித்தான் சுவாசிக்க வேண்டும் என்ற நிலை கூடிய சீக்கிரம் வரும்போது, ஆக்ஸிஜன் விலையும் கணிசமாகக் குறைந்துவிடும்.
கல்கத்தா பொலிஸாருக்கு பிராணவாயு ஊக்குவிப்புக் கருவிகள்
 |
 |
கல்கத்தா போக்குவரத்துப் பொலிஸார் |
இந்திய நகரான கல்கத்தாவில் தெருக்களில் பணிபுரியும் போக்குவரத்துப் பொலிஸார், அங்கு சுற்றாடலில் காணப்படும் மாசுபடிந்த வாயுவின் பாதிப்பைத் தவிர்த்துக் கொள்வதற்காக, அவர்களுக்கு பிராண வாயுவின் மட்டத்தை ஊக்குவிக்கும் சிறப்புக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த நகரப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
8 மணிநேர பணியை முடித்த பிறகு குறைந்தபட்சம் பொலிஸார் 20 நிமிடங்களுக்காவது பிராணவாயுவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளதாக, கல்கத்தாவின் போக்குவரத்துப் பொலிஸின் தலைவர் கூறியுள்ளார்.
அந்த நகரவாசிகளில் சுமார் 70 வீதமானவர்கள், ஒருவகையான சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களில் போக்குவரத்துப் பொலிஸாரும் அடங்குகிறார்கள் என்றும் தேசிய புற்றுநோய் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Posted in Air, Auto, bhopal, Breath, Calcutta, cancer, Carbon, Carbon Monoxide, Coal, emissions, Environment, Factory, Fuel, Fumes, Gas, Global Warming, Health, Healthcare, Kolkata, Lignite, Lung, Mine, mines, Oxygen, Ozone, Petrol, Poison, poisoning, Pollution, Poor, Ramanraja, Tamil, toxic, Tunnel, UCC, vehicle, Warming, Worker | 1 Comment »
Posted by Snapjudge மேல் மே 10, 2007
உணவு தானியத்துக்குப் பாதுகாப்பு
மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. எனவே அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில் அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உற்பத்திப் பொருளுக்குக் கட்டுபடியாகாத விலை, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, வேலைக்குப் போதிய தொழிலாளர்கள் கிடைக்காமை போன்ற காரணங்களால் குறுகிய கால பயிர் அல்லது செலவை ஈடுகட்டும் அளவுக்காவது வருமானம் அளிக்கும் பணப் பயிர்கள் மீது விவசாயிகளின் நாட்டம் அதிகரித்து வருகிறது. பயிர் செய்துவிட்டு காத்திருந்து இயற்கையுடன் போராடி இறுதியில் போட்ட முதலுக்கு ஆதாயம் கிடைக்குமா என்ற நிச்சயமற்ற நிலை காரணமாக வேளாண் துறையில் நுழைய இளைய சமுதாயம் தயக்கம் காட்டுகிறது. இதனால் இப்போது வேளாண்மையில் ஈடுபட்டுள்ளவர்களை நம்பியே எதிர்கால உணவு உற்பத்தி உள்ளது.
இந்த நிலையில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக தாவரங்களிலிருந்து எரிபொருள் பெறுவதற்கான திட்டத்தை அமல்படுத்த உலகம் முழுவதும் முழுவீச்சில் இயக்கம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் காரணமாகக் காடுகள் அழிக்கப்படும். சிறு விவசாயிகள் உணவுதானிய சாகுபடியைக் கைவிட்டுவிடுவார்கள். நிலைமையைச் சரியாகக் கையாளவில்லை என்றால் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும், வறுமை தலைதூக்கும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமாயில், மக்காச்சோளம், கரும்பு, சோயா, ஆமணக்கு போன்ற பயிர்கள் மீது விவசாயிகளின் கவனம் திரும்பியுள்ளது.
உலக வெப்ப நிலை மாறுதலால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க எரிபொருளுக்காக இந்தத் தாவரங்கள் பெருமளவு பயிரிடப்பட வேண்டும் என்று பணக்கார நாடுகள் விரும்புகின்றன. அவற்றின் உற்பத்தி கச்சா எண்ணெய் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமன்றி புதிய சந்தையையும் ஏற்படுத்தும். ஏழைகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு நல்ல விலையைப் பெற்றுத் தரும் என்பது அவர்களின் கருத்து. மாற்று எரிபொருள் மூலம் உலக எரிபொருள் தேவையில் 20 ஆண்டுகளில் 25 சதவீதத்தை நிறைவு செய்துவிட முடியும் என்றும் கணித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் பயிரான மக்காச் சோளத்தில் பெருமளவு எரிபொருள் தயாரிக்க அனுப்பப்பட்டது. பிரேசில், சீனா ஆகியன 5 கோடி ஏக்கரில் இப் பயிரைச் சாகுபடி செய்கின்றன. 2020க்குள் மொத்த எரிபொருள் உற்பத்தியில் 10 சதவீதம் தாவரங்களிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் குறிப்பிட்டுள்ளது. இது பெட்ரோல், டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும்போது வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையினால் ஏற்படும் பாதிப்புகள் வெகுவாகக் குறையும்.
மேலும் இதன் காரணமாக பெட்ரோலியப் பொருள்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அது ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் ஏற்கெனவே சமையல் எண்ணெய்க்காக பாமாயில் உற்பத்திக்கு காடுகள் அழிக்கப்படுவதால் பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு அது எதிர்பாராத ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பது சுற்றுச்சூழல் நிபுணர்களின் கருத்தாகும். மேலும் இதனால் வன விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படலாம்.
மேலும் எரிபொருளுக்காக காடுகளை அழிக்கும்போது அது மண் அரிப்புக்கும் காரணமாகிவிடும். இது தவிர ஏற்றுமதியை மனதில் கொண்டு மண்வளம் மிக்க நிலங்களே பயிர்ச் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படும் என்பதால் சாதாரண நிலங்கள் வைத்துள்ள ஏழைகளுக்கு இதனால் பலன் கிடைக்காது என்பது ஒரு தரப்பினரின் வாதம். எனவே, இது நடைமுறைக்கு வந்த பிறகுதான் இதன் விளைவுகளைத் துல்லியமாக மதிப்பிட முடியும்.
—————————————————————————————————–
புவி வெப்பம்: சிக்கல்களும் தீர்வுகளும்
கொ. பாலகிருஷ்ணன்
உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற பிரச்னைகளில் பூமி வெப்பமடைதல் மிக முக்கியமானதாகும்.
பூமியைச் சுற்றியுள்ள 8 கி.மீ. தொலைவுக்கு கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ûஸடு மற்றும் குளோரோ புளோரா கார்பன் போன்ற வாயுக்களின் அடர்த்தி அதிகமாவதால் வாயு மண்டலம் சூடாகியுள்ளது.
இவ்வாயுக்களை பசுமைக் கூடார வாயுக்கள் என்று அழைக்கின்றனர். இவ்வாயுக்கள் வாயுமண்டலத்தில் நிலைகொண்டு சூரியனின் ஒளிக் கதிர்களை உள்வாங்கி வெப்பமடைந்து வாயுமண்டலத்தை சூடாக்குகிறது. இவ்வாறு பூமி வெப்பமடைவதை பசுமைக் கூடார விளைவு என்று அழைக்கிறோம்.
இதனால் எதிர்காலத்தில் பூமியின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கலாம், மழை குறைந்து குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் பஞ்சம் பட்டினி ஏற்படலாம்.
பல நோய்கள் உருவாகலாம். மக்கள்தொகை அதிகரிப்பு, காடுகளை அழித்தல், அதிக அளவில் வாகனங்கள், பெட்ரோலியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துதல், குளிர்சாதன உபகரணங்களைப் பயன்படுத்துதல், வளர்ந்த நாடுகளில் தேவைக்கு அதிகமாக தனிநபர் மின் உபயோகம் மற்றும் வரைமுறை இல்லாத இயற்கை வளங்களை ஆடம்பர வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பசுமைக் கூடார வாயுக்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு பசுமைக் கூடார வாயுக்களே காரணம். இவ்வாயுக்களின் மூலக்கூறுகள் சூரிய ஒளியின் நீள அலைவரிசை ஒளிக்கற்றைகளை ஈர்த்து தன்னகத்தே உள்வாங்கி வெப்பத்தை நீண்ட நேரம் தேக்கி வைப்பதால் வாயுமண்டலம் வெப்பமாகிறது.
கரியமில வாயு பூமியை வெப்பமாக்குவதில் அதிகப் பங்கு வகிக்கிறது. வாயுமண்டலத்தில் கரியமில வாயு இதே அளவில் உயருமானால் 2100-ஆம் ஆண்டில் 540 – 970 பிபிஎம் ஆக உயர வாய்ப்புள்ளது. கரியமிலவாயு உற்பத்தியில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா ஏழாவது இடத்திலும் உள்ளன. நிலக்கரியை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவு பசுமைக் கூடார வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக இதில் கரியமில வாயுவின் அளவு அதிகம்.
மக்கள்தொகைப் பெருக்கம், தொழில் வளர்ச்சி, காடுகளை அழித்தல், அதிக அளவு பெட்ரோலியம் உபயோகித்தல் போன்ற காரணங்களால் இதன் விளைவு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.
கரியமில வாயுக்களின் துகள்கள் சூரிய ஒளியின் வெப்பத்தை உட்கொண்டு நீண்ட நேரம் தன்னகத்தே வைத்துக்கொள்ளும் தன்மையுடையது. காற்று மண்டலத்தில் இதன் ஆயுள்காலம், சுமார் 50 – 2000 ஆண்டுகளாகும். இது எளிதில் வெப்பத்தைக் கடத்தாது. எனவே, இவ்வாயுவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கும்.
தற்போது மீத்தேனின் அளவு 1783 பிபிபி – யன்களாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 37 பிபிபி-யன்கள் அதிகம். காற்று மண்டலத்தில் சுமார் 10 ஆண்டுகள் வரை தங்கி வெப்பத்தை உண்டாக்கக் கூடியது. வெப்பத்தை உண்டாக்குவதில் கரியமில வாயுவைவிட இருமடங்கு சக்தி அதிகம்.
60 சதவீத மீத்தேன் பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி உபயோகிப்பதாலும் நெல் வயலிலிருந்தும் கால்நடைகளின் கழிவுகளிலிருந்தும் உற்பத்தியாகின்றது. மீதமுள்ள 40 சதவீதம் சதுப்பு நிலம், தண்ணீர் தேங்கி ஈரமான நிலங்களிலும் மற்றும் கரையான்கள் மூலமாகவும் உற்பத்தி செய்கின்றது.
குளோராபுளோரோ கார்பன் என்பது ஒரு சாதாரண ரசாயனப் பொருள். இதில் பல வகை உண்டு. இருப்பினும் இஊஇ 11 மற்றும் இஊஇ 12 ஆகியவை குறிப்பிடத்தக்கவை. குளிர்சாதனம் மற்றும் இதன் சார்புடைய சாதனங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. காற்று மண்டலத்தில் இதன் ஆயுள்காலம் 65 – 130 ஆண்டுகள். அதாவது காற்று மண்டலத்தில் பல ஆண்டுகள் தங்கி வெப்பத்தை உண்டாக்கக்கூடியது. இது கரியமில வாயுவைவிட 10 ஆயிரம் மடங்கு வெப்பத்தை உருவாக்கும் சக்தி படைத்தது. மேலும் இது ஓசோன் படத்தை அழித்து புற ஊதாக் கதிர்களைப் பூமியில் விழச் செய்து பாதிப்பை உண்டாக்குகின்றது.
நைட்ரஸ் ஆக்ûஸடு காற்று மண்டலத்தில் உள்ள அளவு 318.6 பிபிபி (டடக்ஷ) யன்களாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டை விட 8 பிபிபி – யன்கள் அதிகம். இது கரியமில வாயுவைக் காட்டிலும் 200 மடங்கு வெப்பத்தை உண்டாக்கும் தன்மையுடையது. வாயுமண்டலத்தில் இதன் ஆயுள்காலம் சுமார் 150 ஆண்டுகள்.
ஓசோன் அளவு சராசரியாக 30 முதல் 50 பிபிஎம் (டடங) வரை இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் இது 50 – 100 பிபிஎம் வரை இருக்கும். 40 – 70 பிபிஎம் அதிகமாகும்போது பயிர்களில் மகசூல் குறையும்.
பூமியிலிருந்து 8 கிலோமீட்டர் வரை உள்ள வாயுமண்டலப் பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. கடந்த 1000 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதிகபட்ச வெப்பம் கடந்த ஆண்டுகளில் அதிகமாக உயர்ந்துள்ளது.
புவி வெப்பம் அதிகரிப்பால் தண்ணீர்ப் பற்றாக்குறையும், அதனால் வேளாண்மை உற்பத்தியில் பாதிப்பும் அதிகமாக இருக்கும். ஏழை நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படலாம்.
புவி வெப்பத்தால் துருவப் பனிப்பாறைகள் 13 ஆயிரம் ச.கிலோமீட்டர் உருகியுள்ளது. 1970-ல் இருந்ததைவிட தற்போது 40 மடங்கு குறைந்துவிட்டது. மேலும், இது 2070-ல் பனிப்பாறைகள் முற்றிலும் உருக வாய்ப்புள்ளன. உலகில் கடல் மட்டம் உயரும்போது வங்கதேசம் மற்றும் மோரிஷஸ் நாடுகளில் அபாயம் ஏற்படலாம், இந்தியா உள்ள 27 நாடுகள் அதிகம் பாதிக்கப்படலாம்.
கடல் மட்டம் உயர்வு சென்ற நூற்றாண்டுகளுக்கு ஒப்பிடும்போது 2 – 6 மடங்கு இந்த நூற்றாண்டில் அதிகரித்துள்ளது. கடல் நீர் உட்புகுவதால் விளைநிலங்கள் பாதிக்கப்படலாம்.
தொடர்ந்து உயரும் கரியமில வாயுவின் அடர்த்தியின் காரணமாக ஒளிச் சேர்க்கையும் பாதிக்கப்படுகிறது. வாயு மண்டலத்தில் கரியமில வாயு அதிகரிக்கும்போது பயிர்களில் இலைத் துளைகள் சிறுத்து வாயுக்களைக் கடத்தும் தன்மை குறைகிறது. இதனால் இலைகளிலிருந்து வெளிவரும் நீராவி குறைகிறது.
மேலும் அளவுக்கு அதிகமாக கரியமில வாயு அதிகரிக்கும்போது இலைத்துளைகள் மூடிக் கொள்ளும். இதனால் இலைகளின் வெப்பம் அதிகமாகி பயிர்களின் நீர்த்தேவையும் அதிகரிக்கிறது.
புவி வெப்பம் 2 – 4 டிகிரி செல்சியஸ் உயரும்போது வெப்பமண்டலப் பயிர்களின் மகசூல் பாதிக்கப்படக்கூடும். பகலில் அதிக வெப்பத்தால் ஒளிச் சுவாசம் அதிகமாகி ஒளிச்சேர்க்கை குறையும். இரவில் இரவுச் சுவாசம் அதிகரித்து பயிர்களின் உலர் எடை அதிகரிக்காது. இதனால் மகசூல் குறையும்.
புவி வெப்பம் அதிகரிப்பதால் நெல் உற்பத்தி பாதிக்கப்படலாம் என பிலிப்பின்ஸில் உள்ள உலக நெல் ஆராய்ச்சி நிலையம் கூறுகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் புவி வெப்பம் அதிகரிப்பதால் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு பல லட்சம் மக்கள் உயிர் இழக்க நேரிடலாம்.
கரியமில வாயுவைக் கிரகிக்க அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும். மேலும் காடுகளைப் பாதுகாக்க வேண்டும்.
நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதைவிட இயற்கை வாயுவிலிருந்து மின்சாரம் தயாரிப்பதால் கரியமில வாயுவின் உற்பத்தியைக் குறைக்க முடியும்.
மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காற்றிலிருந்தும் கடலிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.
குறைந்த எரிசக்தியில் அதிக தூரம் செல்லக்கூடிய வாகனங்களை உருவாக்க வேண்டும். போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
உயிர்எரிசக்திக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், கரும்பு மற்றும் சர்க்கரைக் கிழங்கு உற்பத்தி செய்வதன் எத்தனாலை மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தலாம். காட்டாமணக்கிலிருந்து பயோடீசல் தயாரிக்க முன்னுரிமை அளிக்கலாம்.
மீத்தேனை ஆக்ஸிடேசன் மூலம் அளிக்கக்கூடிய வேர்களைக் கொண்ட புதிய நெல் ரகங்களை உருவாக்க வேண்டும்.
மக்கள்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
வளர்ந்த நாடுகள் தனது ஆடம்பர வாழ்க்கையில் சிறிது தியாகம் செய்து கரியமில வாயு உற்பத்தியைக் குறைத்து ஏழை நாடுகளைப் பாதுகாக்க வேண்டும்.
மரபுவழி இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
புவி வெப்பமாவதை முற்றிலும் தடுக்க முடியாது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பசுமைக் கூடார வாயுக்களின் உற்பத்தியைக் குறைத்து / இவ்வாயுக்களின் அளவைக் கட்டுப்படுத்தி இவ்வுலகை வருங்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
(கட்டுரையாளர்: பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, மதுரை.)
Posted in Agriculture, Alternate, Analysis, Backgrounders, Cash, CFC, Consumption, Corn, Crops, Employment, Environment, ethanol, Farming, Food, Fuel, Gas, Gloabal Warming, Grains, Growth, Hunger, Industry, Jobs, Manufacturing, oil, Op-Ed, Paddy, Petrol, Pollution, Poor, Population, Price, rice, Rich, solutions, Swaminathan, Warming, Wealthy, Wheat, workers | 1 Comment »
Posted by Snapjudge மேல் மே 1, 2007
விழிப்புணர்வு: எங்கே…எங்கே…சிட்டுக்குருவிகள்?!
ஞாயிறு
‘காணவில்லை… கண்டுபிடித்துக் கொடுங்கள்’ என்று காவல்நிலையங்களை சென்னைவாசிகள் முற்றுகைதான் இடவில்லை! மற்றபடி எல்லாவகையிலும் அழுது புலம்புகிறார்கள் ஏதோ தங்கள் பிள்ளைகளைத் தொலைத்துவிட்டது போல்! இப்போது சென்னைவாசிகள் தொலைத்து நிற்பது சிட்டுகளை.. தேன் சிட்டுகளை!
எல்லாப் பறவைகளும் மரங்களிலும் பாறைகளிலும் கூடு கட்டி வசிக்கிறது என்றால் சிட்டுக்குருவி மட்டும் மனிதரின் “நெஞ்சாங்கூட்டில்’ அல்லவா வசிக்கிறது!
சாமி போட்டோக்களுக்குப் பின்புறம் கூடு அமைத்துக் கொண்டு “சிடுக் சிடுக்’கெனப் பறந்து வலம் வரும் சிட்டுக்குருவியை சாமியாகவே பாவித்தவர்கள் உண்டு.
மின் விசிறிகளில் அடிபட்டு இறந்த சிட்டுக்குருவிக்காக கண்ணீர்விட்டு அழுது இரண்டொரு நாள் சாப்பிடாமல் இருந்தவர்கள் உண்டு.
“ஏ… குருவி; சிட்டுக்குருவி; உன் ஜோடி எங்கே… அத கூட்டிக்கிட்டு; இந்த வீட்டுக்குள்ள வந்து கூடு கட்டு; பொல்லாத வீடு; கட்டு பொன்னான கூடு; இப்ப பொண்டாட்டி இல்ல; வந்து எங்கூட பாடு…’ என்று சிட்டுக்குருவியைப் பார்த்துப் பாடி மனைவியைக் கேலி செய்யும் கணவர்கள் உண்டு. இப்படி எல்லாவகையிலும் ஒவ்வொரு குடும்பத்தோடும் இரண்டறக் கலந்துவிட்ட சிட்டுகளுக்கு என்ன கோபம்? ஏன் எல்லாச் சிட்டுகளும் சென்னையை விட்டு சென்றுவிட்டன? பூமி பராமரிப்பு (இஹழ்ங் உஹழ்ற்ட்) அமைப்பின் இயக்குநர் ரஞ்சித் டேனியல்ஸ் சொல்கிறார்:
“”சிட்டுக்குருவிகள் அழிந்து போய்விட்டன என்பது தவறான தகவல். இடம்மாறி சென்றுவிட்டன என்பதுதான் உண்மையான தகவல். சென்னை போன்ற நகரங்களில் சிட்டுக்குருவிகள் இல்லை என்பது உண்மைதான். அதேசமயம் சென்னையை ஒட்டிய பகுதிகளில் சிட்டுக்குருவிகள் இருக்கின்றன. வேளச்சேரியை ஒட்டிய பகுதிகளில்கூட சிட்டுக்குருவிகள் காணப்படுகின்றன.
சிட்டுக்குருவியில் பலவகைகள் இருக்கின்றன.
இந்தியாவில் மொத்தம் ஆறுவகை சிட்டுக் குருவிகள் இருக்கின்றன. இதில் நாம் பார்ப்பது மக்கள் வசிப்பிடங்களைச் சார்ந்து வாழும் சிட்டுக்குருவிகள். நாய், பூனை போன்றவை வீட்டு விலங்குகளாக எப்படி இருக்கின்றனவோ அப்படித்தான் இந்தச் சிட்டுக்குருவிகளும்.
பொதுவாக குளிர்பிரதேசங்களில் வசிக்கக்கூடிய வகையைச் சேர்ந்தது சிட்டுக்குருவிகள். ஐரோப்பியாவில்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. இங்கு பிரிட்டிஷார் வந்தபோது சாலையோரங்களில் இருந்த மரங்களில் பூச்சடித்துப்போய் இருப்பதைப் பார்த்தார்கள். இந்தப் பூச்சிகளை அழிப்பதற்காகத்தான் சிட்டுக்குருவிகளை இங்கு கொண்டு வந்து மரங்களில் விட்டார்கள். இது அப்படியே பல்கிப் பெருகிவிட்டது. இன்று ஒவ்வொரு வீட்டின் உறுப்பினராகவும் ஆகிவிட்டது.
சென்னையை விட்டு சிட்டுக்குருவிகள் எல்லாம் திடீரெனச் சென்றுவிடவில்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாகவே கொஞ்சம் கொஞ்சமாக சிட்டுக்குருவிகள் இடமாறி வருகின்றன. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
சென்னையில் நிலவும் வெப்பம் முக்கியக் காரணம். வாகனங்களில் இருந்து வரும் புகையின் காரணமாக சென்னை அதிக உஷ்ணப் பகுதியாக இருக்கிறது. குளிர்பிரதேசப் பறவைகளான சிட்டுக்குருவிகளுக்கு இது ஆகாது. அதனால் சிட்டுக்குருவிகள் சென்னையை விட்டுச் செல்லலாம். இரண்டாவது இங்கு சிட்டுக்குருவிகள் வசிப்பதற்கு போதுமான வசதி வாய்ப்புகள் இல்லை. பறவைகளில் துறவி என்றால் சிட்டுக்குருவியைச் சொல்லலாம். எளிய வாழ்க்கைதான் வாழும். வைக்கோல் கொண்டு ஓட்டு வீட்டு தூண், வீட்டுக்கூரை, மீட்டர் பெட்டி, சாமி போட்டோக்களுக்குப் பின்புறம் கூடு கட்டும். உள்அறை வரை வந்து உலா போகும். சிந்திக் கிடக்கும் தானியங்களைத் கொத்திப்போகும். இதுபோன்ற வசதி வாய்ப்புகள் இப்போது இல்லை. சென்னையில் பெரியபெரிய கட்டடங்கள் உருவெடுத்துவிட்டன. அதுவும் குளிர்சாதன அறைகளாகிவிட்டன. இதனால் அவை கூடு கட்டி வாழ முடியவில்லை. புறாக்கள் வசிப்பதற்குத்தான் சென்னை சாதகமாக இருக்கிறது.
இதனால் சென்னையில் புறாக்கள்தான் அதிகமாக இருக்கின்றன. பெரும்பாலும் புறாக்கள் கற்பாறைகளில்தான் வசிக்கும். இங்கிருக்கக்கூடிய பெரிய பெரிய கட்டடங்கள் புறாக்களுக்கு கற்பாறைகளாகத் தெரிகின்றன. இதனால் எந்தக் கவலையும் இல்லாமல் புறாக்கள் இங்கு சுகவாழ்க்கை வாழ்கின்றன. இதைப்போல காகம், அணில், எலி போன்றவையும் அதிகளவில் வசிக்கின்றன.
இந்தப் புறா, காகம், அணில், எலி போன்றவற்றாலும் சிட்டுக்குருவிகள் ஆபத்துக்கு உள்ளாகின்றன. காகங்கள் பெரியஅளவில் சிட்டுக்குருவியின் குஞ்சுகளை வேட்டையாடுகின்றன. ஒருவகையில் காகங்கள்தான் சிட்டுக்குருவிகளுக்குப் பருந்து எனவும் கூறலாம்.
முன்பு வீடுகளுக்குள் கூடு கட்டியதுபோல் இப்போது அவற்றால் கட்டமுடியவில்லை. வெளியில் கூடு கட்டி முட்டையிடுகிறபோது அதைக் காகம், அணில், எலி போன்றவை எளிதில் தாக்கி முட்டையைக் குடித்துச் சென்றுவிடுகின்றன. இதுபோன்ற காரணங்களால்தான் சிட்டுகள் சென்னையை விட்டுச் சென்றுவிட்டன. இது சென்னையில் மட்டும் நிகழ்ந்துவிட்ட ஒன்றல்ல. பெரு நகரங்கள் எல்லாவற்றிலும் இதேநிலைதான்.
“லேகியத்திற்காக சிட்டுக் குருவிகள் பிடித்துக் கொல்லப்படுகின்றன. அதனால் சிட்டுக்குருவிகள் அழிந்து போகின்றன’ என்பதை என்னால் நம்பமுடியவில்லை. பறவையைச் சுட்டால் தண்டனை கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. இதனால் சுட்டுக் கொல்லமாட்டார்கள் என்று கருதுகிறேன். நான் சுட்டுக் கொன்றதைப் பார்த்ததும் இல்லை. உண்மையில் சிட்டுக்குருவி லேகியம் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்பதெல்லாம் பொய்யான விஷயம். டைகர் பாம் என்று விற்கிறார்கள். அது என்ன உண்மையில் டைகரில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒன்றா? இதைப்போலத்தான் சிட்டுக்குருவி லேகியமும் ஒரு ஏமாற்று வேலைதான்.
சிட்டுக்குருவிகள் அழியாவிட்டாலும், பரவலாகப் பறவை இனங்கள் அழிகிறது என்பது உண்மைதான். உயிரினங்கள் மொத்தமாக 80 லட்சத்திலிருந்து ஒரு கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் பத்து சதவிதம்கூட நமக்குத் தெரியாது. நமக்குத் தெரிந்து அழிந்தது என்று பார்த்தால் சிறுத்தைப்புலியைத்தான் சொல்லவேண்டும். சிறுத்தைப்புலிகள் இந்தியாவில் அதிகமாக இருந்தன. திருநெல்வேலி போன்ற பகுதிகளில்கூட இருந்தது. அதி வேகமாக ஓடும் விலங்கு இதுதான். இன்று இந்தியாவில் சிறுத்தைப்புலிகளே இல்லை. ஆப்பிரிக்கக் காடுகளில்தான் காணப்படுகின்றன. அந்தக் காலத்தில் ராஜாக்கள் சிறுத்தைப்புலிகளைப் பிடித்து வந்து பழக்கப்படுத்தி வேட்டைகளுக்காகப் பயன்படுத்தினர். ஒவ்வொரு ராஜாவிடமும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைப்புலிகள் இருக்கும். இதை அவர்கள் சொத்தாகவே கருதினார்கள். இப்படிப் பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டு சிறுத்தைப்புலிகள் இருந்ததால் இனப்பெருக்கம் படிப்படியாகக் குறைந்து இன்று இந்தியாவில் சிறுத்தைப்புலிகளே இல்லாமல் போய்விட்டன.
பறவைகள் மற்றும் பல உயிரினங்கள் அழிந்துபோவது உலக அழிவின் முன்னோடி என்று சொல்லமுடியாது. இது
குறித்து வெவ்வேறு விதமான கருத்துகள் இருக்கிறது. பூமியினுடைய வெப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் உலகம் முழுவதும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் உலகம் அழிந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது. சிட்டுக்குருவிகள் உட்பட எல்லா உயிர்களையும் அழிவிலிருந்து காப்பதற்கு காடு வளர்ப்பு ஒன்றுதான் சரியான தீர்வாக இருக்கும். காடு வளர்ப்பு என்றதும் புதிய இடங்களில் காடு வளர்ப்பது என்பது சரியான ஒன்றல்ல. காடு இருந்த இடங்களில்தான் காடு வளர்க்க வேண்டும். காடு இல்லா இடங்களில் புதிதாக காடுகளை அமைத்தால் அங்கிருக்கிற நீர்நிலைகளை மரங்கள் உறிஞ்சிவிடும். இது வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
பறவைகள் உட்பட எல்லா உயிரினங்களுமே அததற்கு உரிய சீதோஷ்ண நிலையில்தான் வாழும். அதைக் கெடுத்துவிடக் கூடாது. வயல், முள் மரங்கள் நிறைந்த வெட்டவெளி வெப்பப் பகுதிகளில்தான் காடை, கெüதாரி போன்றவை இருக்கும். இந்த இடத்தில் மரங்கள் அடர்ந்து இருந்து நிழல் போர்த்தியிருந்தால் அங்கு எப்படிக் காடையும், கெüதாரியும் வாழும்?
இயற்கை பராமரிப்பு ஒழுங்காக இருந்தால் எந்தப் பிரச்சினையும் உயிர்களுக்கு இல்லை. காற்றுமண்டலத்தில் நைட்ரஜன்தான் அதிகமாக இருக்கிறது. இரண்டாவது கார்பன் டை ஆக்ûஸடு, மூன்றாவது இடத்தில் ஆக்ஸிஜன். இந்த ஆக்ஸிஜன் இல்லாவிட்டால் மனிதர்களுடைய கதி? தாவரங்களிலிருந்துதான் ஆக்ஸிஜன் நமக்குக் கிடைக்கிறது. எனவே எல்லா உயிரினங்கள் அததனுடைய பணியை ஒழுங்காகச் செய்வதுடன், மற்ற உயிரினங்களின் பணியையும் ஒழுங்காகச் செய்யவிட்டால் பூமி எப்போதும் மூச்சை நிறுத்தாது” என்கிறார் ரஞ்சித் டேனியல்ஸ்.
Posted in Birds, Chennai, Crow, Environment, Extinct, Madras, Myna, Mynah, Pigeon, Pollution, Rat, Sparrow, Squirrel, Warming | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007
நகர வனம் நன்மை தரும் வனப்பு
ப. இளங்குமரன்
இயற்கையின் எதிர்விளைவால் பூமியின் பயன்பாட்டு அளவு சுருங்கிக்கொண்டு வருகிறது.
இதனால் எரிமலைகள் உமிழ்தல், கடல் நீர் உட்புகுந்து பூமி பரப்பு குறைதல், ஏரிகள் அளவு குறைதல், நில நீர் மட்டம் தாழ்ந்து பாலைவனமாக மாறுதல், வளி மண்டலத்தில் பழுப்பு மேகம் மூலம் அமில நீர் பொழிவு, பருவ நிலையில் கோளாறு, உயிரின மண்டலம் பரிதவிப்பு, உயிரினங்கள் அழிவு என பல்வேறு பாதக விளைவுகள்.
மனிதன் நாகரிக காலத்தில் என்று அடி எடுத்து வைத்தது முதல் இயற்கைக்கும் உயிரினச் சுற்றுச்சூழல் மூலாதாரங்களுக்கும் சீர்கேடுகளை உருவாக்கத் தொடங்கினான். இதன் பலன் புவி வெப்பமுறல், காலச்சூழ்நிலையின் மாற்றம், வெள்ளம், பூகம்பம், வறட்சி போன்றவையுடன் மண்ணில் உள்ள மலைகள், ஆறுகள், காடுகள், நீர்நிலைகள், அவற்றின் தனித்தன்மையை இழந்து ஆறுகள் நீர் அற்றனவாகவும், பனிமலைகள் வறண்டும் காடுகள் அழிந்தும் காணப்படுகின்றன.
காடுகள் சுரண்டப்பட்டதன் விளைவு மண்ணின் மகத்துவ குணம் மாறி வருகிறது.
உலக நாடுகளில் நகரங்களினால் உருவாக்கப்பட்ட இயந்திரத் தொழிற்சாலைகளில் இயற்கைச் சூழல் கட்டமைப்பு சிதைந்து கொண்டு வருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு மூலகாரணமாகச் சமன் செய்யக்கூடிய வனப்பரப்பை உயர்த்த வேண்டும் என்றும் வாகனப் போக்குவரத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அறிவியலாளர்கள் கூறிவருகின்றனர்.
தற்போது நகரங்களின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்களின் வாழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, வெப்பம் அதிகரிப்பு, மன உளைச்சல், வெப்ப நோய்கள் இதனால் பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. உலகத்தில் சராசரி வெப்ப நிலை 1950 ஆம் ஆண்டு 13.83 செல்சியஸ் அளவு இருந்தது. இன்று 14.36 செல்சியஸ் அளவுக்கு மேற்பட்டு வருகின்றது.
நகர வனம் என்பது நகரப் பகுதிகளில் சாலை ஓரங்களில் மரங்கள் வளர்ப்பது மட்டுமல்லாமல் “மாதிரிக் காடுகளை’ குறைந்த பரப்பளவில் ஏற்படுத்துவதும் ஆகும்.
நகரை ஒட்டிய பகுதிகளில் சுமார் 100 ஹெக்டேர் நிலப்பரப்பளவில் வனங்களை உருவாக்குவது ஆகும். இந்த வனங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து இப்பகுதிகளில் கசிவு நீர் குட்டைகளையும் உருவாக்க வேண்டும்.
இம்மாதிரி வனப்பகுதிக்கான நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். தற்போது அரசு கட்டடம், சாலைகள், பேருந்து நிலையம், அரசு தொழிற்சாலைகள் அமைக்க எவ்வாறு நிலங்களை கையகப்படுத்துகிறோமோ அதைப்போன்றே நகரவனம் உருவாக்க நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும்.
“நகர வனத்தில்’ நீண்ட நாள்கள் மற்றும் அடர்த்தியாக வளரக்கூடிய மரங்களை நட வேண்டும். சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் வனம் ஏற்படும்போது நகரின் வெப்பம் குறையும். நகரின் காற்றுமாசு சமன் செய்யப்படும்.
நிலைத்து நீடிக்கும் சுற்றுச்சூழலை உருவாக்க இதுபோன்ற வனம் பல வழிகளில் உதவி செய்யும். உயிரின மாற்றம் ஏற்பட்டு மனித சுகாதாரம் மேம்பாடு அடையும். நகரின் காற்று சீர்பட்டு தரமான காற்றை சுவாசிக்க முடியும். நகரின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.
நீர்வளம் பெருகும். மண் அரிப்பு தடுக்கப்பட்டு மண்ணின் உயிரின சூழல் பாதுகாக்கப்படும். மரங்களின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.
செழிப்பான பூமி என்பது இயற்கை சீர்கேடு விளைவிக்கும் காரணிகளை வேரறுத்து வனப்புமிக்க மரங்களை நடுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.
நாம் இன்றைய தினம் இயந்திரத் தொழில் நுட்பத்தில் முன்னேறிச் சென்றாலும் இயற்கை பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பின்னடைந்து வருகிறோம்.
எனவே இயற்கை மூலாதாரங்களைப் பெருக்கும் வகையில் இயற்கை மறுசீரமைப்பு பணிகளில் பயணிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.
(இன்று உலக காடுகள் தினம்).
குடிநீர் வள நெருக்கடி அதிகரிக்கிறது, ஐ.நா மன்றம் எச்சரிக்கை
 |
 |
தண்ணீரைத் தேடி…. |
உலக குடிநீர் தினமான இன்று ஐ.நா மன்றம் வெளியிட்ட ஒரு எச்சரிக்கையில், முக்கியமான இந்த குடிநீர்வளம் வழங்கப்படுவது எல்லாக் கண்டங்களிலும் கடும் அழுத்தத்தில் வருவதாக கூறியுள்ளது.
உலகின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர், அதாவது, 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு, சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்று மிகச்சமீபத்திய ஐ.நா மன்ற புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
சீதோஷ்ண மாற்றம் வறட்சியை அதிகரித்து, மழை பெய்யும் பருவங்களை மாற்றி, மலைகளின் பனிமுகடுகளிலிருந்து பனி உருகி தண்ணீர் கிடைப்பதைக் குறைக்கும் நிலையில் , இந்த நிலைமை அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் மோசமடையக்கூடும் என்று ஐ.நா மன்றம் கூறுகிறது.
2025ம் ஆண்டு வாக்கில் பூமியில் உள்ள மக்களில் மூன்றில் இரு பங்கினர் குடிநீர் பற்றாக்குறையில் வாழக்கூடும் என்று அது கூறுகிறது.
இந்த ஆண்டின் நீர் தினத்தன்று தண்ணீரை சேமிப்பதன் அவசியம் மற்றும் கிடைக்கும் தண்ணீரை அனைவரும் நியாயமாக பகிர்ந்து கொள்வதன் தேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று தான் விரும்புவதாக ஐ.நா மன்றம் கூறுகிறது.
துருவப் பகுதி வானிலையும் அதன் தாக்கமும்
இரா. நல்லசாமி
ஆண்டுதோறும் மார்ச் 23-ஆம் நாளை உலக வானிலை ஆய்வுக் கழகமும் அதன் 187 உறுப்பு நாடுகளும் “உலக வானிலை ஆய்வு நாளாக’ கொண்டாடுகின்றன.
1950-ல் உலக வானிலை ஆய்வுக் கழகம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 1951 முதல் ஐக்கிய நாட்டு சபையின் சிறப்பு முனையமாக அங்கீகரிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்நாள் ஒரு மையக்கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும். இவ்வாண்டின் மையக்கருத்து “துருவப் பகுதி வானிலையும் அதன் உலகளாவிய தாக்கமும்’ என்பதாகும்.
2007 – 08 உலக துருவப் பகுதி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துருவப் பகுதி ஆண்டு அனுசரிக்கப்படுவது மூன்றாவது முறையாகும். துருவப் பகுதிகளின் வானிலை ஏனைய உலகப் பகுதிகளின் வானிலையோடு நுணுக்கமான தொடர்புடையது.
1882 – 83ஐ முதல் துருவப்பகுதி ஆண்டாகவும், 1932 – 33ஐ இரண்டாம் துருவப்பகுதி ஆண்டாகவும் அனுசரிக்கப்பட்டது. மேலும் 1957 – 58இல் “உலக மண்ணியற்பியல் ஆண்டு’ கொண்டாடப்பட்டது.
துருவப் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி குறைவாகையால் வானிலை ஆய்வு நிலையங்களும் குறைவு. எனவே இப்பகுதிகளின் வானிலையைப் பற்றி அறிய “துருவசுற்று செயற்கைக்கோள்களையே’ பெரிதும் நம்பியிருந்தனர். துருவப்பகுதிகளில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாகவும், அடுத்த ஆறு மாதங்கள் தொடர்ந்து இரவாகவும் இருக்கும்.
தற்போது செயற்கைக்கோள்களில் சிறந்த தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவிகளின் மூலம் தரையிலிருந்து 16 கி.மீ. உயரம் வரையிலான துருவப் பகுதிகளின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் திசைவேகம், உறைபனிப் பாறைகளின் அளவு, அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைப் பெற வழியேற்பட்டுள்ளது.
மேலும் அங்கே அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் மேலும் பல தகவல்களைத் தருகின்றன.
துருவப் பகுதி வானிலை ஆய்வுகளுடன் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தொடர்பு 1981-ல் தொடங்கியது. இந்தியாவின் முதல் “அண்டார்டிகா அறிவியல் பயணம்’ அந்த ஆண்டு தொடங்கியது. அண்டார்டிகாவில் “தக்ஷிண்கங்கோத்ரி’ என்று பெயரிடப்பட்ட இடத்தில் ஒரு தாற்காலிக வானிலைக் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
தரைநிலை வானிலைத் தகவல்கள், பனிப்படலத்தின் இயற்பியற் தன்மைகள், பெறப்படும் சூரிய வெப்பம், பனிப்படலங்கள் பிரதிபலிக்கும் சூரிய ஒளி ஆகியவை அந்நிலையத்தில் அளந்தறியப்பட்டது.
1984-ம் ஆண்டு முதல் “ஆண்டு முழுவதும் துறை அதிகாரிகளால் பராமரிக்கப்படும் நிலையமாக’ இது செயல்படத் தொடங்கியது. இரண்டாவது வானிலை கண்காணிப்பு நிலையம் அண்டார்டிகாவின் கிர்மேகர் மலைப்பகுதியில் “மைத்ரி’ என்ற இடத்தில் 1988 – 89-ல் அமைக்கப்பட்டது.
ஒன்பதாவது அண்டார்டிகா அறிவியல் பயணத்தின்போது தொடங்கப்பட்ட இந்நிலையம் ஒரு நிரந்தர வானிலை நிலையமாகும். 1990 முதல் “மைத்ரி’யில் மட்டும் நமது வானிலைக் கண்காணிப்பு நிலையம் செயல்படுகிறது “தக்ஷிண்கங்கோத்ரி’ நிலையம் மூடப்பட்டுவிட்டது.
உலக வானிலையோடு தொடர்புடைய பல தகவல்கள் “மைத்ரி’ வானிலைக் கண்காணிப்பு நிலையத்தில் சேகரிக்கப்படுகின்றன. “மைத்ரி’ நிலையத்தின் முக்கியமான பணிகள் வருமாறு:
தரைநிலை வானிலைத் தகவல்களைச் சேகரித்தல், சேகரிக்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் உலக வானிலை மையங்களுக்கு அனுப்புதல். தரைநிலை ஓசோன் மற்றும் வளிமண்டல ஓசோன் பற்றிய கணிப்புகளைச் சேகரித்தல். இதற்கென வளிமண்டலத்தில் பலூன் அனுப்பித் தகவல் சேகரிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது.
கதிரவனின் பல்வேறு கதிர்வீச்சுகளால் வளிமண்டலத்தில் ஏற்படும் “வெப்பக் கலப்பு’ எவ்வளவு என்பதை “சன் – போட்டோமீட்டர்’ கொண்டு அளக்கப்படுகிறது.
துருவசுற்று செயற்கைக்கோள் மூலமாக மேகங்கள் பற்றிய தகவல்களும் வளிமண்டல வெப்பம், காற்று பற்றிய தகவல்களும் சேகரித்தல், பனிப்புயல்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல். 1981-ல் தொடங்கி 2000 முடிய இருபது “அண்டார்டிகா அறிவியல் பயணங்கள்’ மேற்கொள்ளப்பட்டுள்ளன.
துருவப் பகுதி வானிலையை அறிய வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுவது இயற்கை.
துருவப் பகுதிகள் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் கணிசமான அளவில் கிடைக்கும் இடங்களாகும். இது சம்பந்தமான பணிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகள் தேவைப்படுகின்றன. அங்கு வாழும் “எஸ்கிமோக்கள்’ போன்ற பழங்குடியின மக்களையும் “பனிக்கரடி’, “பென்குயின்’ ஆகிய துருவப் பகுதி விலங்குகளையும் பாதுகாக்க வானிலை ஆய்வுகள் பயன்படுகின்றன.
மேலும் பல நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் குழுக்கள் துருவப் பகுதிகளில் பல்துறை ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பான பயணம், வாழ்க்கை ஆகியவற்றுக்கும் துருவப் பகுதி வானிலை பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன.
மேலும் துருவப் பகுதிகளின் வானிலை உலகின் ஏனைய பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. பூமத்தியரேகைப் பகுதி, துருவப் பகுதிகளைக்காட்டிலும் ஐந்து மடங்கு அதிக சூரிய வெப்பசக்தியைப் பெறுகிறது.
இதன் தொடர்வினையாக பெருங்கடல்களும் வளிமண்டலமும் இவ்வெப்பச் சக்தியை துருவப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. இதனால் துருவப் பகுதியின் பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கலாம். பனிப்பாறைகள் உருகும்போது, கடல் நீரோட்டங்களின் தன்மை மாறிவிடும் அபாயம் உள்ளது. கடல் நீரோட்டங்களின் தன்மை மாறும்போது உலக வானிலையில் பெருமாற்றங்கள் தோன்றலாம். சுருங்கிவரும் பனிப்படலத்தின் காரணமாக கடல்நீரின் மட்டம் உயரக்கூடும்; உப்புத்தன்மை குறையக்கூடும்; கடல்வாழ் உயிரினங்கள் அழியக்கூடும்; உறைபனி, துருவப்பகுதி வானிலை மாற்றத்தால் உருகத்தொடங்கும்போது பசுங்குடில் வாயுக்களில் ஒன்றான “மீத்தேன்’ வெளியிடப்படும். இது ஓசோன் படலத்தில் மாறுதல்களையும் அதன் தொடர்ச்சியாக உலகளாவிய வானிலை மாற்றங்களையும் ஏற்படுத்தும்.
வரையறுக்கப்படாத எல்லைகளை உடைய அறிவியல் துறைக்கு “வானிலையியல்’ ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும். “துருவப்பகுதி வானிலை’ இவ்வாண்டில் இயற்பியல், உயிரியல், வானிலையியல் மற்றும் சமூகவியல் அறிஞர்களால் மிக நுணுக்கமாக ஆராயப்படும் என்பதே இதனை நன்கு புலப்படுத்தும்.
உலகம் வளர்ச்சி பெற, துருவப்பகுதி வானிலையைக் கண்காணித்தலும், சரிவரப் புரிந்துகொள்வதும் மிக மிக அவசியமாகும். அதற்கு இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.
(கட்டுரையாளர்: உதவி வானிலை விஞ்ஞானி, மண்டல வானிலை ஆராய்ச்சி மையம், சென்னை).
Posted in Acid Rain, Air, Antarctica, Arctic, Building, Carbon, City, Climate, Concerns, Drought, Dry, Earth, Earthquakes, emissions, Environment, Extinct, Floods, Forests, Gardens, Greenery, Ice, Impact, Industrialization, Issue, Kyoto, Lakes, Land, Nature, Ozone, Plants, Pollution, Population, Quality, Research, Rivers, satellite, Science, Snow, Trees, Village, Warming, Water, Weather | 5 Comments »
Posted by Snapjudge மேல் ஜனவரி 22, 2007
கூடங்குளம் விரிவாக்கம்
தமிழகத்தில் மின் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் விரிவாக்கப்படலாம் என்ற தகவல் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ரஷிய அதிபர் புதின் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரும்போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம்.
கூடங்குளத்தில் இப்போது தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இரு அணுமின் நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இவற்றுக்கான பணிகள் முடிவடையும் கட்டத்தில் உள்ளன. முதல் யூனிட்டின் அணு உலைப் பணிகள் இந்த ஆண்டு கடைசியில் நிறைவடைந்து, அடுத்த ஆண்டு மார்ச் வாக்கில் மின் உற்பத்தியைத் தொடங்கும். இரண்டாவது யூனிட்டும் அடுத்த ஆண்டில் மின் உற்பத்தியில் ஈடுபடலாம்.
கூடங்குளம் திட்டம் 2002-ம் ஆண்டில் தொடங்கப்பட்டபோதே அங்கு மொத்தம் எட்டு யூனிட்டுகளை நிறுவுவதற்கான வகையில் வசதிகள் அமைக்கப்படலாயின. நாட்டில் அணுசக்தி மூலம் மின் உற்பத்தியைப் பெருக்குவதில் முனைப்புக் காட்டி வரும் மத்திய அரசு, கூடங்குளத்தில் மேலும் நான்கு மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ விரும்பியது. அந்த வகையில்தான் இப்போது உடன்பாடு கையெழுத்தாக இருக்கிறது. புதிதாக நான்கு யூனிட்டுகள் நிறுவப்படும்போது தமிழகம் நல்ல பலன் பெறும். முதல் இரு யூனிட்டுகளும் உற்பத்தி செய்ய இருக்கும் 2,000 மெகாவாட் மின்சாரத்தில் தமிழகத்தின் பங்காக 1,200 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். மேலும் நான்கு யூனிட்டுகள் நிறுவப்படும்போது தமிழகத்துக்கு கூடுதலாக மின்சாரம் கிடைக்கும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் இந்தியாவின் அணு மின்துறையில் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைப்பதாகக் கூறலாம். இந்தியாவில் ஏற்கெனவே 16 அணுமின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் நான்கு நீங்கலாக மீதி அனைத்தும் இந்தியா சொந்தமாக உருவாக்கி, அமைத்துக் கொண்டவை. ஆனாலும், இவற்றில் பெரும்பாலானவை தலா 220 மெகாவாட் அளவுக்குத்தான் மின்சாரத்தை உற்பத்தி செய்பவை. கூடங்குளம் அணுமின் நிலையம் ஏற்கெனவே கூறியதுபோல, தலா 1000 மெகாவாட் திறன் கொண்டது. தவிர, இவை செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பயன்படுத்தும்.
கூடங்குளத்தில் சோவியத் யூனியனின் உதவியுடன் அணுமின் நிலையங்களை நிறுவ, 1988-ம் ஆண்டிலேயே உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் ரஷிய அதிபர் கொர்பச்சேவும் கையெழுத்திட்டனர். ஆனால் சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்ததால் இத் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை. 1999-ல் இத் திட்டம் புத்துயிர் பெற்று 2002-ல் பணிகள் தொடங்கின.
நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில் அணுமின் நிலையங்களின் பங்கு இப்போது மூன்று சதவீதமாக, அதாவது சுமார் 4 ஆயிரம் மெகாவாட் அளவில் உள்ளது. இதை 2030-ம் ஆண்டுவாக்கில் 40 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் அணுசக்தி தொடர்பாகச் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் இதற்கு வழிவகுக்கலாம். இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அணுஉலைகளையும் அணுசக்தி எரிபொருள்களையும் அளிப்பது தொடர்பான பல கட்டுப்பாடுகள் அகற்றப்படலாம். அக் கட்டத்தில், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைக்க முன்வரும். ஏற்கெனவே பல வெளிநாட்டு நிறுவனங்கள் இவ் விஷயத்தில் அக்கறை காட்டி வருகின்றன. இது ஒருபுறமிருக்க, அணுமின் நிலையங்களை அமைக்க இந்தியாவின் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்படலாம் என்பதற்கான குறிப்புகள் உள்ளன. இந்தியாவும் ரஷியாவும் கூட்டாகப் புதிய வகை அணு உலைகளை வடிவமைத்துத் தயாரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
—————————————————————————————-
ரூ. 2,176 கோடியில் புதிய அனல் மின் நிலையம்
சென்னை, ஜூலை 27: சென்னை அருகே ரூ. 2,176 கோடியில் 500 மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின் நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா எண்ணூர் கிராமத்தில் உள்ள வடசென்னை அனல்மின் நிலைய வளாகத்தில் இந்த புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து வடசென்னை அனல்மின் நிலையத்தின் தலைமைப் பொறியாளர் (பொறுப்பு) என். சங்கமேஸ்வரன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
வடசென்னை அனல்மின் நிலையம் (நிலை-1) தற்போது தலா 210 மெகாவாட் திறனுள்ள 3 பிரிவுகள் மூலம் ஆண்டுக்கு 1.5 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்து வருகிறது. இதன்மூலம் சென்னையின் 60 சதவீத மின் தேவை நிறைவேற்றப்படுகிறது.
தற்போது இதே வளாகத்தில் 500 மெகாவாட் திறனுள்ள புதிய அனல்மின் நிலையம் (நிலை-2) ரூ. 2,716 கோடியில் 180 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது.
தமிழக மின் வாரியத்தின் சார்பில் இத் திட்டத்துக்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. வரும் ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் இந்த ஒப்பந்தப்புள்ளிகள் முடிவு செய்யப்படும்.
இதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். நவீனத் தொழில்நுட்ப அடிப்படையில் சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் இந்த அனல் மின்நிலையம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அமைக்கப்படும்.
தேசிய மின் கழகம் இதற்கான இடத்தை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதிய அனல்மின் நிலைய வளாகத்தில் நிலக்கரி தூசுக்களை சுற்றுச் சூழல் மாசுபடாத வகையில் நீரில் படியும் முறையில் அகற்ற தனிப் பிரிவு அமைக்கப்படும்.
வரும் 2011-ல் மின் உற்பத்தி தொடக்கம்: இப் பணிகள் நிறைவடைந்த பின் வரும் 2011-ம் ஆண்டில் இருந்து புதிய அனல் மின் நிலையம் தனது மின் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 1.2 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இந்த அனல்மின் நிலையம் மூலம் சுமார் 1,500 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.
தற்போது அனல் மின் நிலையங்களில் ஒரு யூனிட் மின் உற்பத்திக்கு தலா ரூ. 2.30 செலவிடப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மூலம் சூழல் பாதிப்பு மிகக் குறைவாக உள்ளது என்றார் சங்கமேஸ்வரன்.
—————————————————————————————
5 புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டம்
சென்னை, ஜூலை 27: தமிழகத்தில் மேலும் 5 புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகம் தற்போது 10,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. இதில் வடசென்னை, எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி ஆகிய அனல்மின் நிலையங்கள் மூலம் 2,970 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
சென்னை பேசின்பிரிட்ஜ், ராமநாதபுரம் அருகே வழுத்தூர், மன்னார்குடி அருகே கோயில்களப்பால், குத்தாலம் ஆகிய இடங்களில் எரிவாயு மின் நிலையங்கள் மற்றும் நீர் மின் நிலையங்கள், கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந் நிலையில் மேட்டூரில் கூடுதலாக 500 மெகாவாட் மின் நிலையமும், தூத்துக்குடியில் 1,000 மெகாவாட் மின் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எண்ணூர் மின் நிலையத்தின் மின் உற்பத்தித் திறன் 300 மெகாவாட் அளவாகக் குறைந்துள்ளது. இதையடுத்து எண்ணூரில் கூடுதலாக 500 மெகாவாட் மின் நிலையம் கட்டப்பட உள்ளது.
இதே போல நெல்லை அருகே உடன்குடியில் 800 மெகாவாட் திறனுள்ள 2 அனல்மின் நிலையங்கள் அமைக்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளன.
இதுதவிர குந்தாவில் 500 மெகாவாட் திறனுள்ள நீர் மின் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
Posted in 1000 MW, Atomic Power, Capacity, Chennai, Electricity, Energedar, Ennore, Ennur, Environment, Generation, Gorbachev, India, Jobs, Kanyakumari, Koodankulam, Madras, Megawatt, Mikhail Gorbachev, MW, Nuclear, PCIL, Plans, Pollution, Ponneri, Power, Power Corporation of India Ltd, Power Plants, Putin, Rajeev Gandhi, Rajiv Gandhi, Russia, Thiruvalloor, Thiruvallur, Vladimir Putin, VVER-1000, Warming | Leave a Comment »