Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Wal-Mart’ Category

The Forward Bloc-controlled agriculture marketing board proposes to do what Reliance would have done

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

ரிலையன்ஸ் வேலையை செய்கிறது பார்வர்டு பிளாக்

கோல்கட்டா :

ரிலையன்ஸ் சில்லரை கடைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த, ஆளும் இடதுசாரி கூட்டணியில் உள்ள பார்வர்டு பிளாக் கட்சி, “ரிலையன்ஸ் கடை’ போல, அமைக்க திட்டமிட்டுள்ளது.

நேரடி கொள்முதல் :

மேற்கு வங்க மாநிலத்தில், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்து காய்கறி முதல் கம்ப் யூட்டர் வரை விற்க, சில்லரை கடைகளை அமைக்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதற்கு அரசு அனுமதிக்க தயாராக இருந்தும், ஆளும் கூட்டணியில் உள்ள பார்வர்டு பிளாக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

“ரிலையன்ஸ் நிறுவனம், அமைப் பது போல நாங்களே கடைகளை அமைக்க தயார். அரசு எங்களுக்கு அனுமதிக்க வேண்டும்’ என்று, முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தது. அரசும் இதற்கு பச்சைக்கொடி காட்டி உள்ளது.

பார்வர்டு பிளாக் கட்டுப்பாட்டில் உள்ள, “விவசாய மார்க்கெட்டிங் போர்டு’ இதற்கான ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

போர்டின் தலைவர் நரேன் சாட்டர்ஜி கூறுகையில், “விவசாயிகளிடம் இருந்து அரிசி, கோதுமை உட்பட உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து, அவர்களுக்கு நல்ல விலை தரவும், நியாயமான விலையில் மக்களிடம் விற்கவும் போர்டு திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக, முதல்வரிடம் 100 கோடி ரூபாய் உதவித்தொகை கேட்டுள்ளோம்’ என்றார்.

இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், “வடக்கு மாவட்டம், ஹால்திபாரியில், வடக்கு 24 பர்கானா ஆகிய பகுதிகளில், முதல் கட்டமாக, பார்வர்டு பிளாக் போர்டு, கடைகளை ஆரம் பிக்கும். ஹால்திபாரியில், தக்காளி, மிளகாய் விளைச்சல் அதிகம். அதனால், அவற்றை வாங்கி, மொத்த விலையில் விற்க நடவடிக்கை எடுக்கும்’ என்று கூறினர்.

“ரிலையன்ஸ் கடைகளை ஆரம்பிக்கப்படுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். தொழில் செய்ய எந்த கம்பெனிக்கும் தடை விதிக்க முடியாது. விவசாயிகளிடம் இருந்து பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்யவும் முடியும். ஆனால், விவசாய கொள்முதல் சட்டத்தை பொறுத்தவரை, விவசாய மார்க்கெட்டிங் போர்டு நேரடியாக கொள்முதல் செய்ய முடியாது. அதனால் தான், விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய சில தன்னார்வ அமைப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளோம்’ என்றும் சாட்டர்ஜி கூறினார்.

தன்னார்வ அமைப்புகள் மூலம், ரிலையன்ஸ் கடைகள் போல கடைகளை உருவாக்கும் பார்வர்டு பிளாக் திட்டத்துக்கு முதல்வர் புத்ததேவ் பச்சைக்கொடி காட்டினாலும், விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Posted in agri-marketing, Agriculture, Bengal, Biz, Business, Center, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Direct, Economy, Farmers, Forward Bloc, Fresh, Govt, Haldibari, infrastructure, job, Jobs, Marketing, Middlemen, Parganas, peasants, Purchases, Purchasing, Reliance, Shop, Shops, Small Biz, State, Vendors, Wal-Mart, Walmart, WB, West Bengal, WestBengal, workers | Leave a Comment »

Impact of MNCs and pricing pressures by Govt. Policy – Harming the local farmer

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2007

ஊருக்கு இளைத்தவன்…

உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது நம் நாட்டுப் பழமொழி.

உலக வர்த்தக ஸ்தாபனத்தின் (டபிள்யூ.டி.ஓ.) ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தியா போன்ற நாடுகள், உரிய தற்காப்பு சட்டங்களை தேசிய அளவில் இயற்றாததால், கவசம் தரித்துக்கொள்ளாத காலாட்படை வீரர்களாய், வளரும் நாடுகளின் விவசாயிகள் களத்தில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.

தோஹாவில் தொடங்கி இன்றுவரை இதன் பேச்சுவார்த்தைகளில், வல்லரசு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டுமே வற்புறுத்தி சம்மதிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

பெரிய நிறுவனங்கள் தயாரித்த விதைகளைப் போட்டால்தான் சாகுபடி நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை விவசாயிகளின் மனங்களில் எப்படியோ விதைத்து விட்டார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில்கூட மன்சான்டோ நிறுவனத்தின் விதைகளும், மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட “”பீட்டா காட்டன்” பருத்தி விதைகளும் சர்வசாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன.

தில்லியை மையமாகக் கொண்ட வர்த்தகம், வளர்ச்சிக்கான மையம் (சென்டாட்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நமது விவசாயிகளும், நுகர்வோர்களாகிய நாமும் எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்று ஓரளவுக்குத் தெரியவந்துள்ளது.

உலகின் பூச்சிகொல்லி விற்பனையில் 65% சந்தையை பேயர்ஸ், சின்ஜென்டா, பிஏஎஸ்எஃப், டெü, மன்சான்டோ என்ற நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.

உலகின் விதை விற்பனையில் 72%, மன்சான்டோ, டூபான்ட், சின்ஜென்டா, குரூப் லிமாகரின் என்ற 10 நிறுவனங்கள் மூலமே நடைபெறுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பனையில் 91% மன்சான்டோ வசம் உள்ளது.

10 நிறுவனங்கள் மட்டும், தின்பண்டங்களுக்கான உலக சில்லறை வர்த்தகத்தில் 24% சந்தையைப் பிடித்துள்ளன. அதன் மதிப்பு -மயக்கம்போட்டு விழுந்துவிடாதீர்கள் -சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் கோடி ரூபாய்கள். அதில் வால்மார்ட், கேரிஃபோர், மெட்ரோ ஏஜி, அஹோட் ஆகியவற்றின் பங்கு 64%.

வாழைப்பழ விற்பனையில் மட்டும் சிகிடா, டோல் ஃபுட்ஸ் என்ற நிறுவனங்கள் 50% சந்தையைப் பிடித்துவைத்துள்ளன.

யூனிலீவர், புரூக்பாண்ட், காட்பரி, ஸ்வெப்பீஸ், அல்லய்ட்-லியான்ஸ் ஆகியவை தேயிலை விற்பனையில் 80 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன.

கார்கில், செனக்ஸ், ஏடிஎம், ஜெனரல் மில்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலகின் தானிய விற்பனையில் 60 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன. கேரிஃபோர் என்ற நிறுவனத்தின் வருவாய், சிலி நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைவிட அதிகம். வால்மார்ட் நிறுவனத்தின் வருமானம் பாகிஸ்தானின் தேசிய வருமானத்தைவிட 3.2 மடங்கு அதிகம்.

கார்கில் நிறுவனத்தின் வருமானம் ருமேனியா நாட்டின் தேசிய வருமானத்துக்குச் சமம்.

இந்தியாவில் தேயிலையின் சில்லறை விற்பனை விலை ஒரு கிலோ ரூ.160. ஆனால் தேயிலைச் சந்தையில் ஏலத்தில் ஒரு கிலோ ரூ.50க்குத்தான் வாங்கப்படுகிறது. மூன்று மடங்கு விலையில் விற்கப்படுகிறது.

உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் அடைத்து கடைகளில் ஒரு கிலோ ரூ. 143-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்குக்குத் தரப்படும் கொள்முதல் விலையைப்போல இது 28 மடங்கு.

கோதுமை இறக்குமதியில் தொடங்கி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எல்லா முடிவுகளுமே விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. அதன் விளைவுதான், பல்வேறு மாநிலங்களில் காணப்படும் விவசாயிகள் தற்கொலை.

மத்திய, மாநில அரசுகளில் உள்ளவர்கள் நமது விவசாயிகளின் நலனைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகின்றனர் என்பதைத்தான் மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. ஊருக்கு இளைத்தவன் உழவுத் தொழில் புரிபவர் என்கிற நிலை தொடர்வது நல்லதல்ல.

Posted in Agriculture, Banana, Biz, Brookebond, Brookebonds, Business, Cadburys, Chips, Commerce, Consumer, Copyrights, Customer, Dalit, Deflation, DNA, Doha, Economy, Exports, Farmer, Farming, Fertilizer, Food, Foodgrains, Genetic, harvest, Imports, Inflation, markets, MNC, Monsanto, Natural, Needy, organic, peasant, Poor, Potato, Prices, Pricing, Recession, rice, Rich, Seeds, Shares, Shopping, Shweppes, Sivaji, Statistics, Stats, Stocks, Subsidy, Suicide, Suicides, Talks, Tax, Tea, Trade, Trademark, Unilever, Urea, Vidharaba, Vidharabha, Vitharabha, Wal-Mart, Walmart, Wealthy, Weeds, Wheat, WTO | Leave a Comment »

N Vittal – How to bring new synergy into current Agriculture practices: Marketing

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

வேளாண்மையும் “பெருந்தொழிலாக’ வேண்டிய நேரம்!

என். விட்டல்

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “”ரிலையன்ஸ்”, தகவல் தொடர்புத் துறையில் ஜாம்பவானாக உருவெடுத்துவரும் சுநீல் மித்தலின் “ஏர்-டெல்’ போன்ற நிறுவனங்கள் இப்போது வேளாண்மைத் துறையில் பெரும் அக்கறை எடுத்துவருகின்றன.

மிகப் பிரம்மாண்டமான அளவில் உற்பத்தி, விநியோகம், விற்பனை என்ற தங்களுடைய தொழில்துறை வெற்றி உத்தியை, வேளாண்மைத்துறையிலும் புகுத்த முயல்கின்றன.

“மனிதர்கள் காலில் போட்டுக்கொள்ளும் செருப்புகளும் பூட்ஸ்களும் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன; வேளாண்துறையில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவை மண்டிகளிலும், வெயிலும் தூசும் நிரம்பிய சந்தைகளிலும், வீதிகளிலும் கோணியைப் பரப்பி விற்கப்படுகின்றன’ என்று ஆமதாபாதில் இந்திய நிர்வாகவியல் மாணவர்களிடையே உரை நிகழ்த்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கவலையோடு குறிப்பிட்டிருந்தார்.

மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மூலம், பெருநகரங்களில் உள்ள அங்காடி வளாகங்களில் வேளாண் விளைபொருள்கள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு, “”பேக்” செய்யப்பட்டு, எடை, தரம், விலை குறியீடுகளுடன் விற்கப்படுமானால் லாலு சுட்டிக்காட்டிய முரண்பாடு மறைந்துவிடும். இது மட்டும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேறினால், இந்திய வேளாண்மைத்துறையில் “”மூன்றாவது புரட்சி” ஏற்பட்டுவிடும்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது கைக்கும் வாய்க்கும் எட்டுகிற நிலைமையில்தான் நமது உணவு தானிய உற்பத்தி இருந்தது. உணவு தானியத் தேவையில் தன்னிறைவு பெற்றவர்களாகக் கூட இல்லை. 1970-களில் அறிமுகப்படுத்தப்பட்ட “”பசுமைப் புரட்சி”யின் விளைவாக நிலைமை தலைகீழாக மாறியது. அதில் பங்கேற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் போன்றவர்கள் “”இரண்டாவது பசுமைப் புரட்சி” இப்போது அவசியம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

வறுமைக் கோட்டுக்குக்கீழே வாழும் ஏழைகளுக்காக இப்போது மீண்டும் கோதுமை, அரிசி போன்றவற்றை இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கிறோம்.

கிராமப்புறங்களில் ஏற்பட்ட இரண்டாவது புரட்சி, பால் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக நம்மை இடம் பெறச் செய்த “”வெண்மைப் புரட்சி”யாகும். அமுல் நிறுவனத்தின் தந்தையும் தலைசிறந்த நிர்வாகியுமான டாக்டர் வர்கீஸ் குரியனும், சிறந்த காந்தியவாதியும் கைதேர்ந்த கூட்டுறவு இயக்க நிபுணருமான டாக்டர் திரிபுவன்தாஸ் படேலும் இந்தப்புரட்சிக்கு முழுமுதல் காரணகர்த்தாக்கள். குஜராத்தில் மட்டும் எல்லா மாநிலங்களிலுமே பால் பண்ணைகள் பெருக இவர்களின் நடவடிக்கைகள் முன்னோடியாகத் திகழ்ந்தன.

பசுமைப்புரட்சி காலத்தில் உரிய நேரத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருள்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்தது. பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. வீரிய விதைகள் விநியோகிக்கப்பட்டன.

விவசாயிகள் சாகுபடி செய்யும் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது, சந்தையில் அந்த விலைக்குக் குறைவாக விற்கும் நிலைமை ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் திட்டத்தை இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலம் அமல்படுத்தியது, நெல், கோதுமை, சர்க்கரை போன்றவற்றை போதிய அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்ள கிடங்கு வசதிகளும், அவற்றுக்கு ரயில் பாதை இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.

இப்போது இந்திய வேளாண்மை பற்றிப் பேசினாலே முதலில் நினைவுக்கு வருவது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதுதான். பருத்தி சாகுபடியில் இறங்கியவர்களும், அதிக பொருள் செலவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி வயலுக்கு அடித்தவர்களும்தான் அதிகம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதைத் தடுக்க, முதலில் விவசாயிகளை அழைத்து அவர்களின் மனத்தளர்ச்சி, விரக்தி மனப்பான்மை நீங்க, நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேச வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து மிகுந்த நம்பிக்கையோடு இறக்குமதி செய்யப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளும், அதிக விலைக்கு வாங்கப்பட்ட பூச்சிக் கொல்லிகளும் பலன் தராமல் பருவமழை பொய்த்ததால் கடன் சுமை அதிகரித்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அப்படி இறக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ஒரு லட்ச ரூபாயை உதவித்தொகையாகத் தருகிறது.

வறுமை தாளாமல் விவசாயக் கூலிகள் தவிக்கும்போது அவர்களுக்கு அரசின் உதவி உரிய முறையில் கிடைக்காமல் போவதால், நக்சல்களின் நெருப்புப் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு நக்சல்களாக மாறுகின்றனர்.

தற்கொலைக்கு அடுத்தபடியாக இந்திய வேளாண்மையை மிகவும் பாதிக்கும் அம்சம் உற்பத்தித் திறன் ஆகும். நம்மைவிடக் குறைந்த சாகுபடி பரப்பைக் கொண்டுள்ள சீனா, நம்மைவிட அதிக அளவு தானிய விளைச்சலைத் தருகிறது.

நிலத்திலிருந்து விளைவது குறைவாக இருப்பது ஒருபகுதி என்றால், விளைந்த தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையும் அறுவடை செய்து எடுத்து வரும்போது சேதாரப்படுத்துவதன் மூலம் 10 சதவீத உற்பத்தியை வீணாக்குகிறோம்.

எல்லா பருவகாலத்திலும் பூச்சி அரிக்காமல், பறவைகள், எலிகள் பாழ்படுத்தாமல் தானியங்களையும் இதர விளைபொருள்களையும் சேமித்து வைக்க கலன்கள், குதிர்கள், கிடங்குகள், குளிர்பதன வசதி இல்லாமல் 40 சதவீதம் வரை வேளாண் சாகுபடி வீணாகிறது.

ஓராண்டு சாகுபடி பற்றாக்குறையாக இருப்பதும் அடுத்த ஆண்டு உபரியாவதும் தொடர்கிறது. பற்றாக்குறையின்போது பணமே கிடைக்காமல் ஏழ்மையில் மூழ்க நேரிடுகிறது என்றால், உபரியின்போது கொள்முதல் விலை சரிந்து, போட்ட அசலைக்கூட எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 60 சதவீத பங்கைப் பிடிக்கின்றனர்.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தில் நேரடியாக ஈடுபட்டு, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீத அளவுக்கு மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.

இந் நிலையில் பெரிய தொழில்நிறுவனங்கள் இத் தொழிலில் ஈடுபட்டால் நிலங்களை வளப்படுத்துவது, பாசன வசதி அளிப்பது ஆகியவை விரிவான அளவில் நடைபெறும். அடுத்து தரமான விதைகள், விலைகுறைந்த இயற்கை உரங்கள், நவீன சாகுபடி உத்தி ஆகியவற்றைப் பின்பற்ற முடியும்.

திசு வளர்ப்பு மூலம் செடிகளையும் கொடிகளையும் வளர்ப்பது, ஒட்டுச் செடிகளைப் பயன்படுத்துவது என்று வேளாண்மையில் லாப நோக்குடன் புதியவை புகுத்தப்படும். அடுத்தபடியாக விளைபொருள்களைச் சேதம் இன்றி அறுவடை செய்வதும் கிடங்குகளுக்கும் விற்பனை நிலையங்களுக்கும் கொண்டு செல்வது சாத்தியம்.

இடைத்தரகர் இன்றி, உற்பத்தியாளருக்கும் கணிசமான தொகை கிடைக்கும் நுகர்வோருக்கும் கட்டுப்படியாகும் விலையில் பண்டங்கள் கிடைக்கும். கூட்டுறவுத்துறை வலுப்பெறும். உற்பத்தி, விநியோகம், விற்பனை போன்றவை விவசாயிகளுக்குச் சாதகமாக மாறும்.

அதன் பிறகு தொழில் நிறுவனங்களின் தலையீட்டால் ஏற்படும் மூன்றாவது வேளாண்மைப் புரட்சியானது “”விவசாயியைச் சார்ந்த வேளாண்மை” என்ற நிலைமையை மாற்றி, “”வேளாண்-வர்த்தகம் சார்ந்த வேளாண் தொழில்” என்ற நிலைமைக்குக் கொண்டு செல்லும்.

(கட்டுரையாளர்: முன்னாள் ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு ஆணையர்.)

——————————————————————————————-

காலச்சுழலில் கழனியும் உழவரும்

 

தமிழக விவசாயி காசி
தமிழக விவசாயி காசி

 

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அறுபது விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் விவசாயத்தையும் அதனைச் சார்ந்த தொழில்களையும் சார்ந்தே வாழ்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும் இப்போது பற்றாக்குறையைப் போக்க உணவு இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், தமிழகத்தில் மாறிவரும் விவசாயச்சூழல் மற்றும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பலவிதமான பிரச்சனைகள் குறித்து அன்பரசன் தயாரித்து வழங்கும் சிறப்புத் தொடர்.

———————————————————————————-

ரிலையன்ஸ் கடைகளுக்கு நிபந்தனை விதிக்க ராமதாஸ் யோசனை
சென்னை, ஜூலை 7: சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்களை விற்கக் கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

ரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட போன்ற பன்நாட்டு நிறுவனங்களும் சில்லறை வணிகத்தில் ஈடுபடத் தொடங்கி இருக்கின்றன. நகரங்கள் தோறும் கடைகளைத் திறந்து வைத்துள்ளன.

இதனால் பாரம்பரியமிக்க சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களும், சில்லறை வணிகக் கடைகளால் வேலை வாய்ப்பு பெற்று வரும் பல லட்சம் தொழிலாளர்களும் நடுத் தெருவுக்கு வரும் ஆபத்து உருவாகி வருகிறது.

இந்த ஆபத்தான நிலைமையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் சென்னை போன்ற நகரங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தாராள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் இந்த கடைகளால் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள பல லட்சம் பேர் வேலை இழக்கும் ஆபத்து ஏற்படப் போகிறது.

கேரளத்தில் அனுமதி இல்லை: இந்நிலையில் பக்கத்து மாநிலமான கேரளத்தில் ரிலையன்ஸ் கடைகளுக்கு இனிமேல் அனுமதி வழங்குவது இல்லை என்றும் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அவற்றை ரத்து செய்வது என்றும் அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

மேற்கு வங்கத்தில் ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்று மிகக் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

கேரளத்தைப் போன்று தமிழகத்திலும் ரிலையன்ஸ் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். இனிமேல் அனுமதி வழங்கக் கூடாது என்று உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்கு ஆணையிட வேண்டும். அல்லது மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனையைப் போன்று உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்ற நிபந்தனையாவது விதிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

———————————————————————————————————————————–

உதட்டளவு அக்கறை கூடாது…!

“விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு’ என்று தனது சுதந்திர தின உரையில் பிரதமர் வலியுறுத்தி இருப்பதும், விவசாயிகளுக்குப் பல சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டிய விஷயங்கள்.

உலகமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம், தாராளமயமாக்கல் போன்ற கோஷங்களுடன் இன்றைய பிரதமர், நிதியமைச்சராக இருந்தபோது இந்தியாவுக்கு ஒரு புதிய பொருளாதாரத் திட்டத்தை வகுத்ததுமுதல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ விவசாயிகளும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களும்தான்.

கடந்த 15 ஆண்டுகளில் விவசாயம் மிகக் குறைந்த ஊக்கத்தையும், வளர்ச்சியையும்தான் காண நேர்ந்தது என்பதைப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. கிராமப்புறங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை, நமது பொருளாதாரப் பத்திரிகைகளும் புதிய பொருளாதாரத் திட்ட விற்பனையாளர்களும் உருவாக்க முற்பட்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், விவசாயமும், விவசாயிகளும் இதுவரை சந்தித்திராத ஒரு சோதனையான கட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான்.

சமீபத்தில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கமிஷன் ஒன்றின் அறிக்கையின்படி, கடனால் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. ஆந்திரத்தில் 82 சதவிகிதம், தமிழகத்தில் 75 சதவிகிதம், பஞ்சாபில் 65 சதவிகிதம் விவசாயிகள், விவசாயத்திற்காக வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் தவிக்கின்றனர் என்கிறது இந்த அறிக்கை. சராசரியாக, இந்திய விவசாயி ஒவ்வொருவரின் கடன் சுமையும் ஏறத்தாழ ரூ. 25,985 என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இப்படிக் கடன் சுமையில் சிக்கிக்கொள்ளும் விவசாயிகளில் பலரும், தனியாரிடம் கடன் வாங்கியவர்களாக இருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

லாபகரமாக இல்லாவிட்டால், ஏன் விவசாயம் செய்ய வேண்டும்? அந்த விளைநிலங்களைப் “ப்ளாட்’ போட்டு வீடு கட்டவோ, தொழிற்சாலை அமைக்கவோ பயன்படுத்திவிட்டு, நமக்குத் தேவையான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாமே? இப்படியொரு யோசனையை முன்வைக்கிறார்கள், புதிய பொருளாதாரக் கொள்கையின் விற்பனைப் பிரதிநிதிகள்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விவசாயிகளுக்கு ஏகப்பட்ட மானியங்களை அந்த அரசுகள் வழங்குகின்றன. தங்களது தேவைக்கு அதிகமாக உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கின்றன. நச்சுப் புகையால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை, இந்தியா போன்ற நாடுகளில் நிறுவ ஊக்குவிப்பதும், அவர்களது தேவைக்கான உணவுப் பொருள்களைத் தாங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதும் இந்த நாடுகளின் நோக்கம் என்று நாம் கூறவில்லை. ஆனால், அந்த நாடுகள் விவசாயத்துக்கு அளிக்கும் ஊக்கத்திற்கு என்ன காரணம் என்று யோசிக்கச் சொல்கிறோம்.

நமது விவசாயிகளுக்குத் தரும் விலையைவிட அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யும் போக்கு சமீபகாலமாகக் காணப்படுகிறது. வேண்டுமென்றே இந்திய விவசாயிகளை விவசாயத்தைப் புறக்கணிக்கச் செய்யும் முயற்சி நடைபெறுகிறதோ என்கிற சந்தேகம்கூட எழுகிறது. அது ஆபத்தை விலைகொடுத்து வாங்கும் செயல்.

ஒரு தேசத்தின் பாதுகாப்பு என்பது எல்லைகளைக் காக்கும் ராணுவத்திடம் மட்டும் இல்லை. தனது நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் தன்னிறைவிலும் இருக்கிறது. அடுத்த வேளைக் கஞ்சிக்கு அயல்நாட்டுக் கப்பலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுமானால், அதைவிட பலவீனமான நாடு எதுவும் இருக்க முடியாது. இதை எழுபதுகளிலேயே புரிந்து கொண்டிருந்ததால்தான், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி “பசுமைப்புரட்சி’ என்கிற கோஷத்துடன் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வழி வகுத்தார்.

இந்திரா காந்தியின் மருமகள் தயவால் பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங்கின், விவசாயிகள் மீதான அக்கறை உதட்டளவில் நின்றுவிடாமல் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று நம்புவோம். விவசாயம் சார்ந்த பொருளாதாரமாகத் தொடர்வதுதான் இந்தியாவின் வருங்காலத்துக்கு நன்மை பயக்கும்!

——————————————————————————————————————

இது புதுசு: நலம், நலமறிய ஆவல்!

வயதிலும் இளைமையாய் ஜொலிக்க வேண்டும் என்பது மக்களின் ஆசையாக இருக்கிறது. ஆனால் உலர்ந்த தலைமுடியைப் பராமரிப்பது எப்படி?, எண்ணெய் பிசுக்கான முகத்தைச் சரி செய்வது எப்படி?, சத்தான உணவு எது?…. என்பது போன்ற பல்வேறு தகவல்களையும் ஒரே இடத்தில் பெறுவது எப்படி என்ற கவலையும் கூடவே தொற்றிக் கொள்கிறது.

மக்களின் எந்தத் தேவையையும் உடனுக்குடன் தெரிந்து கொண்டு அதைப் பணமாக்கத் தெரிந்திருப்பதுதான் பிசினஸýக்கு அழகு. இதற்கு உதாரணமாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் மக்களின் இந்த ஆசையையும் பூர்த்தி செய்ய களமிறங்கியிருக்கிறது. ரிலையன்ஸ் வெல்னஸ் என்ற பெயரில் “ஆரோக்கிய வணிக’த்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

பரீட்சார்த்தமாக முதலில் ஆரம்பித்திருக்கும் இடம் ஹைதராபாத். விரைவில் பெங்களூர், சென்னை, மும்பை நகரங்களில் துவங்க இருக்கிறார்கள்.

இது குறித்து ரிலையன்ஸ் வெல்னஸ் நிர்வாக இயக்குநர் நினு கண்ணாவிடம் பேசினோம்.

“”மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஆனால் ஆரோக்கியம் என்பது ஆரோக்கிய உணவு, ஆரோக்கியம் குறித்த மருந்துகள், அது குறித்த புத்தகங்கள்- சி.டி.கள், உடற்பயிற்சி கருவிகள், யோகா பயிற்சி என பலதுறைச் சம்பந்தமுடையதாக இருக்கிறது. அதை ஒருங்கிணைப்பதற்குத்தான் இந்தத் திட்டம்” என்றார்.

இந்தியா முழுதும் 51 நகரங்களில் இப்படி 1200 நிலையங்களை ஆரம்பிக்க இருக்கிறார்கள். 1500 சதுர அடியில் இருந்து 3,500 சதுர அடி பரப்பில் இது அமையும். காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இயங்கும் இந் நிலையத்தில் இலவசமாக ஆரோக்கியம் குறித்த ஆலோசனை வழங்குவதற்கான மருத்துவர் ஒருவரும், கண் பரிசோதனை செய்வதற்கான மருத்துவரும் இருப்பார்கள். “”தோல் பொலிவு, தலைமுடி பராமரிப்பு, உயரம்- உடல் எடைக்கான விகிதம், சர்க்கரை அளவு போன்றவற்றுக்கான டிப்ஸ் தருவது மட்டும்தான் இந் நிலையத்தில் மருத்துவர் இருப்பதற்கான பிரதான நோக்கம். இது கிளினிக் போலவோ, அல்லது மருந்து கடை போலவோ நோயாளிகளைக் குணப்படுத்தும் இடமாக இல்லாமல், நோய் வராமல் தடுப்பதற்கான ஆரோக்கிய கூடமாகச் செயல்படும். இதற்காக மாதந்தோறும் ஹெல்த் புரோக்ராம்கள் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் அவர்.

அதே போல இங்கு பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் உடல்நிலை குறித்த தகவல்களையும் வெப்சைட்டில் தனிப்பக்கம் ஏற்படுத்திப் பதிவு செய்து வைத்திருப்போம். அதற்கான குறிப்பு அட்டை ஒன்றையும் அவர்களுக்கு வழங்குவோம். திடீர் விபத்து நேரங்களில் அவரைப் பரிசோதிக்கும் மருத்துவர், இந்தக் குறிப்பு அட்டை மட்டும் இருந்தால் அவருடைய ரத்த வகை என்ன, எந்த மாதிரியான அலர்ஜி உள்ளவர், முகவரி என்ன போன்ற தகவல்களை அந்த வெப்சைட்டில் சுலபமாகப் பெறமுடியும்” என்கிறார் நினு கண்ணா.

ரிலையன்ஸ் ஃப்ரஸ்ஸýக்கு சில இடங்களில் எதிர்ப்பு ஏற்பட்டது போல இதற்கு எதிர்ப்புகள் ஏற்பட்டதா? என்றோம். சிரித்துக் கொண்டே சொன்னார்.

“”இந்த நிமிடம் வரை எங்கள் நிலையம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது” .

Posted in Advice, Agriculture, Air-tel, Airtel, Ambani, Analysis, BBC, BigBox, BMI, Boom, Channels, Chat, Consultation, Consulting, Consumers, Cultivation, Customers, Diet, Distribution, Doc, Doctor, Drinks, Eat, Economy, Farmer, Farming, Fat, Fertilizer, Free, Freight, Goods, Growth, Health, Herbs, Ideas, Industry, Interviews, Investment, Lalloo, LalooY, Lalu, Luxury, Malls, Management, Manufacturing, Marketing, medical, milk, Mittal, Mktg, Necessity, Need, Nutrition, Op-Ed, Operations, Paddy, PMK, Podcast, Production, Protein, Ramadas, Ramadoss, Reliance, Reliance Fresh, Reliance Industries Limited, retail, Sell, service, Shopping, Shops, Snippets, solutions, Specials, Suggestions, support, Swaminathan, Tablets, Telecom, Tummy, Vendors, Vitamins, Wal-Mart, Walmart, weight, Wellness, Yadav | Leave a Comment »

Pavannnan – The divide between wealthy & needy

Posted by Snapjudge மேல் மே 23, 2007

இருவேறு உலகங்கள்

பாவண்ணன்

அதிகாலை நடை முடிந்து திரும்பும் தருணத்தில் வழக்கமாக என் கண்களில் படும் முதல் காட்சி கீரைக்கட்டுகளை விற்றுமுடித்த ஆண்களும் பெண்களும் ஊர்திரும்பும் உற்சாகத்தோடு கூடைகளுடன் நிற்கும் தோற்றமாகும்.

வாய்நிறைய வெற்றிலைச் சாறும் புகையிலையுமாக ஒரு மூதாட்டி எனக்காக எடுத்து வைத்திருந்த கீரைக்கட்டுகளைக் கொடுத்து வியாபாரத்தை முடித்துக்கொள்வது அதற்கடுத்த காட்சி.

ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து பார்வையில் தென்படும் இக்காட்சிகளில் இந்த ஒன்றிரண்டு மாதங்களாக ஏற்பட்ட மாற்றங்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. பலருடைய கீரைக்கட்டுகள் எடுத்துப் பார்க்க ஆளின்றிக் கூடைகளில் முடங்கிக் கிடக்கின்றன.

பிரித்து வைத்த கூறுகள் இளஞ்சூரியனின் ஒளியை உள்வாங்கி வாடத் தொடங்குகின்றன. விற்றது பாதி, விற்காதது பாதி என்கிற நிலை சிலருக்கு. காலையிலேயே தெரு உலாவைத் தொடங்கிவிட்ட நகரத்து மாடுகளின் பக்கம் அரைமனத்தோடு கீரைக்கட்டுகளை வீசிவிட்டு அவசரமாக ஊர் திரும்புகிறார்கள் சிலர்.

இந்த எல்லா மாற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் காரணம் பணக்கார நிறுவனங்களால் குளிரூட்டப்பட்ட மாபெரும் கட்டடங்களில் அக்கம்பக்கத்தில் தொடங்கப்பட்ட சில்லறை வணிக விற்பனை.

பணக்கார நிறுவனங்கள் நினைத்த நேரத்தில் நினைத்த தொழிலை மிக எளிதாக இந்த நாட்டில் தொடங்கிவிட முடிகிறது. பெட்ரோல் முதல் தேங்காய் எண்ணெய் பாக்கெட் வரை அனைத்தையுமே அவை விற்று வருகின்றன.

இன்சூரன்ஸ் துறை முதல் தொலைபேசித் துறை வரை எல்லாத் துறைகளிலும் கூடாரத்தில் ஒட்டகம் நுழைந்த கதையாக முன்னங்கால்களை ஊன்றிவைத்தாகிவிட்டது. உப்பையும் தண்ணீரையும்கூட விட்டுவைக்கவில்லை.

கோதுமை மாவு, கொழுப்பு அகற்றப்பட்ட எண்ணெய், விதவிதமான குழம்புகளுக்குத் தேவையான விதவிதமான மசாலாப் பொடிகள் எனப் பல சில்லறைப் பொருள்கள்கூட கடைகளில் கண்ணாடிப் பேழைகளிலும் தாங்கிகளிலும் விற்பனைக்காக அடுக்கப்பட்டுவிட்டன. இந்த வரிசையில் இப்போது கீரைக்கட்டுகளும் காய்கறிகளும் இடம்பெறத் தொடங்கிவிட்டன.

காலம் முன்னகரும் வேகத்தில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பது உண்மை. மாற்றம் என்னும் காந்தம் குறிப்பிட்ட ஒருசில கூட்டத்தினரை மட்டுமே ஈர்த்துத் தன்னுடன் இணைத்துக் கொள்கிற சக்தியாக மட்டுமே இயங்குகிறது என்பதுவும் உண்மை.

ஈர்க்கப்பட்டவர், ஈர்க்கப்படாதவர் என இருபெரும் பிரிவுகளாக உலகம் பிளவுபட்டுத் துண்டுகளாக மாறத் தொடங்கிவிட்டது என்பது மிகவும் கசப்பான உண்மை.

செக்கடிக்குச் சென்று எண்ணெய் வாங்கியது ஒரு காலம். பலசரக்குக் கடைகளில் எண்ணெய்யும் ஒரு விற்பனைச் சரக்காக இடம்பெறத் தொடங்கியது இன்னொரு காலம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருக்கிற காலம் இன்று.

உப்பு முதல் புளி வரையான பல பொருள்களின் விற்பனை முறைகள் உருமாறி உருமாறி இன்று வேறொரு விதமாக மாறிவிட்டன. காலந்தோறும் ஒவ்வொரு விற்பனை முறையும் மாற்றமடையும்போதெல்லாம் விற்பனைமுறைகளில் ஈடுபட்டிருந்தவர்களின் பிழைப்புக்கான வழியில்தான் முதல் அடி விழுகிறது. அந்த அடியின் வேகத்தில் பாதியளவினர் சிதறி வேறு வாழ்க்கை முறையைத் தேடிப் போகிறார்கள். மீதியுள்ளவர்கள் புதுமுறையின் நவீனப் பகுதிகளுக்குத் தகுந்தபடி தம்மைத் தகவமைத்துக் கொண்டு மீண்டுமொரு வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள்.

இன்றுவரை உருவாகிவந்த மாற்றங்கள் ஏற்படுத்தித் தந்திருக்கும் சில வசதிகளைப்போலவே இன்று உருவாகும் மாற்றத்திலும் சில வசதிகள் உள்ளதை மறுப்பதற்கில்லை. வேலைநேரம் என்பதே அடியோடு மாறிவிட்ட சூழலில் இருபத்திநாலு மணி நேரமும் இயங்க வேண்டிய நெருக்கடிகளில் சிக்கி நகரங்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் காலம் இப்போது.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளைச் சேர்ந்த அலுவலகங்களின் கிளை அலுவலகங்களால் நிரம்பத் தொடங்கிவிட்டன இந்திய நகரங்கள். ஒன்பது அல்லது பத்து மணிக்குத் தொடங்கி ஐந்து அல்லது ஆறு மணிக்கு வீடு திரும்பிய சூழல் இப்போது இல்லை.

“”சிக்காகோவின் தெருக்களிலே சிந்திய ரத்தம் போதாதா?” என்னும் தொழிற்சங்க முழக்கங்கள் நினைவூட்டும் எட்டு மணி நேர வேலைத் திட்டம் இன்று கண் முன்னிலையிலேயே குளிரூட்டப்பட்ட அலுவலகச் சுவர்களிடையே சிதைந்து கொண்டிருக்கிறது. கசக்கிப் பிழிய ஆளில்லாமலேயே கசங்கிப் போகவும் மணிக்கணக்கில் கண் விழிக்கவும் பழகிவிட்ட இளந்தலைமுறையினரை இந்த அலுவலகங்கள் உருவாக்கிவிட்டன.

இன்றைய தனியார் வணிகத்தின் மாபெரும் இலக்கு இந்த இளந்தலைமுறை. மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள செருப்புமுதல் மூன்று ரூபாய் மதிப்புள்ள கீரைக்கட்டுவரை இனி எதை விற்றாலும் இவர்களை நோக்கிதான் விற்க வேண்டும்.

அகால நேரத்தில் வேலைக்குச் சென்று திரும்புகிற இந்தக் கூட்டத்தினருக்கு ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க நேரமில்லை.

எல்லாமே ஒரே கூரையின் கீழ் இருக்க வேண்டிய வசதியை எதிர்பார்க்கிறது அவர்கள் மனம். தேவையானவற்றையெல்லாம் அள்ளி ஒரு பெரும் உறையிலிட வேண்டும். எடுத்துச்செல்ல ஒரு வாகனமும் வேண்டும். அவ்வளவுதான். நாள்கணக்கில் பாதுகாக்க குளிர்அறைப்பெட்டி இருக்கும்வரை எக்கவலையும் இல்லை. பதப்படுத்தப்பட்ட கீரைக்கட்டுகள் குளிரூட்டப்பட்ட அடுக்குகளில் வைக்கப்பட்டு விற்கப்படுவது இவர்களுக்காகவே.

வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ சில மாற்றங்கள் இவ்விதத்தில் மௌனமாக நிகழ்ந்தபடியேதான் உள்ளன. இந்த மாற்றங்களை இன்று சப்தம் போட்டு விளம்பரப்படுத்தும் ஊடகங்களின் பெருக்கத்தாலும் நிறுவனங்களின் குறைந்தவிலைத் தந்திரங்களாலும் இது ஏதோ ஒரு மாபெரும் புரட்சியாக உருப்பெருக்கிக் காட்டப்படுகிறது.

இந்த வியாபார அமைப்பு புதிய இளந்தலைமுறையினரையே பிரதான இலக்காகக் கொண்டதாக இருப்பினும் அந்த இலக்கில் விழும் இரையோடு மட்டுமே நிறைவடைய வியாபார நிறுவனங்கள் தயாராக இல்லை. கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஒற்றை இலக்கை மட்டுமே அடைவதில் என்ன லாபம் என்னும் கணக்கால் உருவானதுதான் விலைக்குறைப்புத் தந்திரம்.

ஒரு பொருளுக்கு இரண்டு ரூபாய் என்பது அடக்கவிலையில் பாதிதான் என்பது வாங்குகிறவனுக்கே தெரிகிற நிலையில் விற்றுக்காட்டும் சாகசத்தில் நடுத்தட்டு மக்களையும் அடித்தட்டு மக்களையும் இரையாக்கி உண்ண விரும்பும் வேகமே வெளிப்படுகிறது. முந்தைய மாற்றங்களுக்கும் இன்றைய மாற்றத்துக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இது.

மலிவாகக் கிடைக்கிறவரை வாங்கி அனுபவித்துக் கொள்ள வேண்டியதுதான் என்னும் நடுத்தட்டின் மனக்கணக்கு நிறுவனங்களுக்குப் புரியாத புதிரல்ல. வாங்குதல் என்னும் தற்செயல் நிகழ்ச்சி கைப்பழக்கமாகவும் மனப்பழக்கமாகவும் மெல்லமெல்ல மாறும்வரை இந்த மலிவுவிலை நாடகம் தொடரும்.

நாடகம் முடிந்து என்றாவது ஒருநாள் ஒரு கீரைக்கட்டு பத்து ரூபாய் என்று விலைத்தாள் தொங்கவிடப்படும்போது பிரதான இலக்கான இளந்தலைமுறைக்கு அது எவ்விதமான ஆச்சரியத்தையும் தரப்போவதில்லை. கடன் அட்டையில் பதியப்படும் எண்களைக் கவனிக்கக்கூட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

மூன்றுக்கும் பத்துக்குமான வேறுபாடு பொருள்படுத்தத் தேவையற்ற ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடிய மனநிலையைத் தொட்டுவிட்ட அவர்களுக்கு அந்த உயர்வு ஒரு விஷயமாகவே இருக்கப் போவதில்லை.

அதிர்ச்சியில் குலைந்து சொல்லிச்சொல்லி ஆதங்கப்படப்போவது நடுத்தட்டும் அடித்தட்டும் மட்டுமே. ரோஷத்தில் வெளியேறி மீண்டும் பழைய பழக்கத்தைத் தொடர ஒருபுறம் அவர்கள் மனம் இடம் தரலாம்.

ஆனால் இன்னொரு புறத்தில் பிழைப்பைத் தொடர முடியாத தள்ளுவண்டிக்காரர்களும் கூடைக்காரர்களும் பிழைப்புக்காக மாற்று வழியைக் கண்டறிந்தவர்களாக மாறிவிட்டிருப்பார்கள்.

விலை ஏறும்போது விலகிவிடலாம் என்று மாற்றுத் தந்திரத்தோடு இயங்கியவர்கள் இரண்டு பக்கங்களிலும் திகைப்பையே எதிர்கொள்ள நேரும்.

சூழல்களின் நெருக்கடிகளால் வணிகத்துறை நிர்ணயித்த இலக்குக்குக் கூடுதல் இரைகளாக இவர்களும் படிப்படியாக மாறக்கூடும்.

மாபெரும் சாகசமாக இந்த வணிகச் சாதனையைத் திரித்துக் காட்டும் ஊடகமே இன்னொரு திசையில் நிகழும் வேலை இழப்பை மாபெரும் வலியாக உருக்கமாகக் காட்டுகிறது.

சாகசம், உருக்கம் என்பன அனைத்தும் ஊடகங்கள் அவ்வப்போது அணியும் புனைவுகள். மண் மீது நிகழும் அனைத்தையும் தன் படக்காட்சிகளாக மாற்றிவிடத் துடிக்கிறது நவீன ஊடகம். உண்மையில் வணிகச்சாதனையால் உருவாகத் தொடங்கிவிட்ட சமூகவலி என்பது வேறு விதமானது.

தனியார் நிறுவனங்களின் கட்டற்ற பங்கேற்பு என்பது எவ்வித பேதங்களுமற்று எல்லாவிதத் துறைகளிலும் தன் அசுரக்கால்களை ஊன்றத் தொடங்கிவிட்ட நிலையில் இந்த உலகம் இரு பெரும் பிரிவுகளாகப் பிளவுபட்டு நிற்பது துல்லியமாகத் தெரியத் தொடங்கிவிட்டது.

இன்று பணமுள்ளவர்கள் உலகம் வேறு. பணமற்றவர்கள் உலகம் என்பது வேறு. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், களியாட்டக்கூடங்கள், உணவு விடுதிகள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்கங்கள் எனச் சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் பணமுள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டுவிட்ட பெரும்பட்டியலில் இன்னோர் அம்சமாக இன்று விற்பனை நிலையங்களும் சேர்ந்துவிட்டன.

Posted in Analysis, Backgrounder, Bangalored, Call Center, City, Commodity, Communism, Compensation, Consumer, Customer, Deflation, Divide, Economy, Education, Finance, GDP, Globalization, Healthcare, Hospitals, Inflation, InfoTech, Insights, IT, Jobs, Labor, Labour, Marxism, Media, Metro, MNC, Needy, Offshoring, Op-Ed, Outsourcing, Pavannnan, Poor, Prices, Private, Recession, Reliance, Reliance Fresh, Rich, Rural, Salary, Socialism, Spinach, Stagflation, Suburban, Union, Urban, Village, Wal-Mart, Walmart, Wealth, Wealthy, Work, Young, Youth | Leave a Comment »

101 farmers commits suicide in Kerala in last 10 months

Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007

10 மாதங்களில் கேரளத்தில் 101 விவசாயிகள் தற்கொலை

திருவனந்தபுரம், மார்ச் 28: கடந்த 10 மாதங்களில் கேரளத்தில் 101 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இத்தகவலை கேரள வேளாண்துறை அமைச்சர் முல்லைக்கரை ரத்னாகரன் சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்தப் பட்டியலில் வயநாடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 46 விவசாயிகளும், கோழிக்கோட்டில் 11 விவசாயிகளும், திருவனந்தபுரத்தில் 10 விவசாயிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ரத்னாகரன் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட 549 விவசாயிகளின் குடும்பத்துக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டதாக ரத்னாகரன் கூறியுள்ளார்.

==============================================================
சிறு வியாபாரிகளைச் சீரழிக்கும் பன்னாட்டு மூலதனம்

இரா. செழியன்

இந்தியாவின் சிறு வியாபாரிகளை ஒடுக்கும் வகையில், உள்நாட்டு வர்த்தக நிறுவனங்களின் துணையுடன் வெளிநாட்டு பெரும் மூலதன நிறுவனங்கள் படையெடுத்துவர ஆரம்பித்துள்ளன.

இந்தியாவில் உள்ள 1 கோடி 20 லட்சம் வியாபாரிகளில் பெரிய அளவில் வர்த்தக நிறுவனங்கள் வைத்திருப்பவர்களின் அளவு 4 சதவீதம் என்று கூறப்படுகிறது. எஞ்சிய 96 சதவீதம் பேர் சிறு விற்பனையாளர்கள்.

சிறிய கடைகள் வைத்திருப்பவர்களிலிருந்து மார்க்கெட்டில் கூறுகட்டி காய்கறி, பழங்களை விற்பவர்கள் வரை ஒவ்வொருவரும், அதிகமான மூலதனம் இல்லாமல், தனிப்பட்டு தானே முதலாளியாக, தொழிலாளியாக, விற்பனையாளராக, தொழில் நடத்தி, நாள்தோறும் கிடைக்கும் குறைந்த வருமானத்தை வைத்து தனது குடும்பத்தைக் கட்டிக் காப்பதில் அவதிப்படுகின்றனர்.

தொடர் சில்லறைக் கடைகளை இந்தியாவில் அமைக்க பிரமாண்டமான வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ள நிலைமை, சிறு வியாபாரிகளை இந்திய வணிகத்துறையிலிருந்து அடியோடு அகற்றிவிடும்.

சில்லறைக் கடைகளை அமைக்க இந்திய ரிலையன்ஸ் நிறுவனம் ஆரம்பித்துவிட்டது. இந்த நிறுவனத்தின் முதலாளி முகேஷ் அம்பானி உலகப் பிரசித்த பெற்ற செல்வச் சீமான். 2007 ஆம் ஆண்டின் உலக செல்வந்தர்களின் பட்டியலில் அவர் 14-வது இடத்தில் இருக்கிறார். அவரிடம் உள்ள நிறுவனங்களின் சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர் – இந்திய மதிப்பீட்டில் அது 88 ஆயிரம் கோடி ரூபாய்.

“ரிலையன்ஸ் பிரெஷ்’ என்ற பெயரில் சில்லறைக் கடைகளை அம்பானி நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள முதலீடு 800 கோடி ரூபாய். தில்லியில் 8 சில்லறைக் கடைகள் திறக்கப்பட்டு விட்டன. சென்னையிலும் அதன் கடைகள் வந்துவிட்டன.

காய்கறிகள், பழங்கள், மாமிசம், மீன்வகை, உணவுப் பொருள்கள், அன்றாட அடிப்படைத் தேவைக்கான பண்டங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் விற்கும் இந்த அமைப்புகளுக்குத் தேவையான, குளிர் சாதனக் கிடங்குகள், குளிர்சாதன லாரிகள், குளிர்சாதன விற்பனைக்கூடங்கள், பாதுகாப்பு அறைகள், பனிப்பெட்டிகள், விளம்பரத் தட்டிகள் எல்லாவற்றையும் மேல்நாட்டு முறையில் அமைத்து, தோட்டத்தில் விளைந்த காய்கறி பழங்களை நேரடியாக, சில்லறைக் கடையில் “புதிதாக’த் தருவதால், அந்தக் கடைகளுக்கு, “ரிலையன்ஸ் பிரெஷ்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்தச் சில்லறைக் கடைகள் மூலம் நடைபெறும் விற்பனை இன்னும் மூன்றாண்டு காலத்தில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வந்துவிடும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

ஹைதராபாத், ஜெய்ப்பூர், சென்னை ஆகிய மூன்று நகரங்களில் வைக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் கடைகளுக்கு வரக்கூடிய 2 லட்சம் வாடிக்கையாளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த “கர்ரேபோர்’ என்ற நிறுவனம் சில்லறை விற்பனையில் உலகத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அந்த நிறுவனத்திற்கு 30 நாடுகளில் 12 ஆயிரம் கடைகள் இருக்கின்றன. அதற்குச் சென்ற ஆண்டில் நடைபெற்ற வியாபாரத்தின் அளவு சுமார் 40 லட்சம் கோடி ரூபாய்! தாம் ஆரம்பித்த இந்திய நாட்டு சில்லறை வியாபாரத்துக்குத் துணைபுரிய அந்தப் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் ரிலையன்ஸ் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது.

பிரான்ஸ் நிறுவனத்துக்கு உலகில் இரண்டாவது இடம் என்றால், சில்லறை வியாபாரத்தில் உலகில் முதலிடத்தில் உள்ள “வால்மார்ட்’ என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டு “பாரதி’ என்று மற்றோர் இந்திய நிறுவனம் சில்லறை வியாபாரத்தில் இறங்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட “வால்மார்ட்’ உலக அளவில் சென்ற ஆண்டில் செய்த விற்பனையின் அளவு 350 பில்லியன் டாலர்; அதாவது 15 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்! நமது இந்திய அரசின் சென்ற ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தின் மொத்த அளவு 5 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய்!

111 கோடி மக்களை ஆட்சிசெய்யும் ஒரு நாட்டின் வரவு- செலவைவிட, சில்லறை வியாபாரத்தில் ஒரு நிறுவனத்தின் ஓர் ஆண்டு விற்பனையின் அளவு இரண்டரை மடங்குக்கும் மேலாக இருக்கிறது. சில்லறை வியாபாரம், ஆனால் கல்லாப்பெட்டி வசூல் உலக நாடுகளின் பலவற்றின் வருமானத்தைவிடப் பெரியது, பிரமாண்டமானது.

டாடா நிறுவனமும் சில்லறைக் கடைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “உல்வொர்த்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட ஆரம்பித்திருக்கிறது. “உல்வொர்த்’ நிறுவனத்தின் ஆண்டு விற்பனை அளவு 1 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்!

பெருத்த அளவில் சில்லறைக் கடைகளை வைத்திருக்கும் வணிக முறை வெளிநாடுகளில் வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள வியாபாரத்தில் 85 சதவீதம் பெரிய நிறுவனங்களிடம் இருக்கிறது. அதன் அடிப்படையில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் சில்லறை வியாபாரத்தை பன்னாட்டு நிறுவனங்களின் சங்கிலித் தொடர் அமைப்புகளிடம் ஒப்படைப்பது, 96 சதவீதமுள்ள சிறு வியாபாரிகள் கை – கால்களில் இரும்புச் சங்கிலிகளைப் போட்டு வாழ்நாள் முழுவதும் வறுமைச் சிறையில் அவர்களை அடைத்து வைப்பதாக முடியும்.

2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தை வெளியிட்டது. இதில் அரசின் ஆறு அம்ச அடிப்படைக் குறிக்கோள்களில் ஒன்றாகக் கூறப்பட்டிருப்பது: “”7 முதல் 8 சதவீத அளவில் வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில், எல்லோருக்கும் வேலை வாய்ப்பைத் தந்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாதுகாப்பான நிலையான நல்வாழ்க்கை அளிக்க முற்படுவோம்”.

ஆனால் இன்று உள்நாட்டு முதலாளிகளுடன் இணைந்து ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று மூலதனம் உடைய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து, இந்தியப் பொருளாதாரத்தைச் சீரழிப்பதுடன், சிறு வியாபாரிகளின் வாழ்வை அடியோடு அழித்துவிட முயல்வது சரியா?

“”எல்லோருக்கும் வேலை”, “”ஒவ்வொரு குடும்பத்தின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்” என்று இக்கூட்டணியின் சார்பில் தரப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆயிற்று? கிடைத்த வேலைகள் போகின்றன, இருந்த நல்வாழ்வு நாசமாகிறது!

நடுத்தரக் குடும்பத்தினரின் சுயவேலை வாய்ப்புத் திட்டமாக விளங்கும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.

அன்னிய மூலதன உதவியுடன் ரிலையன்ஸ், பாரதி, டாடா என்று அடுத்தடுத்து இந்திய நிறுவனங்கள் தொடர் சில்லறைக் கடைகளை அமைக்க ஆரம்பித்துவிட்டன!

சிறிய மீன்களை பெரிய மீன்கள் விழுங்கிவிடுவதைப்போல, இந்தியாவின் சிறு வியாபாரிகளை விழுங்க பெரிய நிறுவனங்கள் வந்துவிட்டனவே! இந்தப் பேராபத்தைத் தடுக்க மத்திய – மாநில அரசுகள் என்ன செய்துள்ளன?

உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில், சில்லறைக் கடைகளில் நடைபெறும் விற்பனையில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பெறுகிற “வால்மார்ட்’ இந்தியாவின் சில்லறை மார்க்கெட்டில் நுழைந்து விட்டதே! “வால்மார்ட்’ அமைப்புக்கு வால் பிடிக்கும் அமைப்பாக இந்திய அரசும் இந்தியப் பொருளாதாரமும் ஆகிவிட்டனவா?

சுதந்திர இந்தியாவில், சுயவேலையில், சுயமுதலீட்டில், சுயமாகப் பாடுபட்டு, சுயமரியாதையுடன் வாழ்வு நடத்தும் எண்ணற்ற சிறு வியாபாரிகள் வேலையிழந்து, வீடிழந்து, பொருளிழந்து, வாழும் வகை இழந்து, பிறந்த நாட்டில் அகதிகளாக, அநாதைகளாக, அலைய வேண்டிய நிலைமை வேகமாக வந்து கொண்டிருக்கிறது.

சுனாமிப் பேரலை தாக்கினால், கடலோரத்தில் உள்ள சிற்றூர்களும் சிறு குடிசைகளும் அழிக்கப்பட்டு மணல் மேடுகளாக மாறுவதைப்போல், உலகளாவிய பொருளாதாரப் பேரலை உழைப்பவர்களை, உழைத்துப் பிழைக்கும் சிறு வியாபாரிகளைக் கல்லறைகளுக்கு அனுப்பும் காலதேவனாக ஆகிவிடும்.

கடல் அலை கொந்தளித்தால், நாடு தாங்காது. ஏழைகளின் மனம் கொந்தளித்தால் நாடாளும் அரசு தாங்காது.

(கட்டுரையாளர்: நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்).


ரிலையன்ஸ் நிறுவனத்தால் சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பு வராது என்கிறார் பொருளாதார வல்லுநர்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடையின் துவக்கம்
ரிலையன்ஸ் நிறுவனக் கடையின் துவக்க விழா-ஆவணப் படம்

ரிலையன்ஸ் நிறுவனம் காய்கனிகளை விற்க சென்னையில் சூப்பர் மார்க்கெட்டுகளை தொடங்கியது முதலே அரசியல் சர்ச்சை ஏற்பட்டது.

70 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னை மாநகரில் உள்ள பெருகி வரும் மத்தியதர மக்களிடையே உள்ள மேல்தட்டு மக்களை குறிவைத்துதான் இந்தக் கடைகள் திறக்கப்பட்டுள்ள எனவும், இதனால் சிறு வியாபாரிகளுக்கு எந்த பாதிப்பும் வராது எனகிறார் பொருளாதார வல்லுநர் பேராசிரியர் ஜனகராஜன்.

ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்லாமல், இது போன்ற வர்த்தகத்தில் பல நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர், வெளிநாட்டிலிருந்து பெரிய அளவில் அந்த நிறுவனங்கள் கொள்முதல் செய்வதால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்க முடிகிறது எனவும் கூறுகிறார்.

இது போன்ற நிறுவனங்கள், இடைத் தரகர்கள் இன்றி விவசாயிகளிடமிருந்து பொருட்களை நேரடியாக வாங்குவதால் விவசாயிகளும் பலனடைவார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

உலக மயமாக்கலில் ஒரு நாடு ஈடுபடும் போது, குறிப்பிட்ட துறைகளுக்குத் தான் தமது சந்தை திறந்திருக்கும் எனக் கூறமுடியாது என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Posted in Agency, Agents, Agriculuture, Ambani, Analysis, Business, Capitalism, Commerce, Consumers, Economy, Exploitation, Farmers, Farming, Farmlands, Finance, Foreign, Globalization, Industry, investors, Kerala, Kozhikode, Loans, Malayalam, Merchants, Middlemen, MNC, Mullakkara Ratnakaran, Reliance, service, SEZ, Small Biz, SSI, Suicide, THIRUVANANTHAPURAM, Trivandrum, Vendors, Wal-Mart, Walmart | Leave a Comment »

Wal-mart entry into Retail business in India – Impact & Globalization

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

வாடப் போகும் வாழ்க்கை ஆதாரம்

மா.பா. குருசாமி

நமது நாட்டில் உலகமயமாக்கலின் விளைவாக மிகப்பெரிய நிறுவனங்கள் தொழில், வாணிபத்தில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கின்றன.

உற்பத்தியிலும், விற்பனையிலும் சிறிய அளவில் நடைபெறும் தொழில்களை ஓரங்கட்டிவிட்டு, கோடிக்கால பூதங்களாக பெரிய நிறுவனங்கள் கோலோச்சப் போகின்றன. இவற்றால் ஒவ்வொரு துறையிலும் வாழ்க்கை ஆதாரத்தை இழந்து லட்சக்கணக்கான மக்கள் தவிக்கப் போகின்றனர். இதற்கோர் எடுத்துக்காட்டு சில்லறை வாணிபம்.

வேளாண்மையில் இன்றும் கோடிக்கணக்கான மக்கள் சின்னஞ்சிறு அளவில் இரண்டு ஏக்கர், மூன்று ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்கின்றனர். இவர்கள் சாகுபடி செய்யும் உணவு தானியங்களும், காய்கறிகளும், தொழிலுக்கு வேண்டிய மூலப் பொருள்களும் நாடு முழுவதும் இருக்கின்ற நுகர்வோருக்கும் தொழிற்சாலைகளுக்கும் செல்கின்றன.

இதேபோல பெரிய, சிறிய தொழிற்கூடங்களில் உற்பத்தியாகின்ற எண்ணற்ற ஏராளமான பொருள்கள் கோடிக்கணக்கான நுகர்வோர்களுக்குச் செல்கின்றன. இவை எப்படிப் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கும். இவை மொத்த வியாபாரிகளிடம் கைமாறி, இடைப்பட்ட வணிகர்களிடம் சென்று, இறுதியில் சில்லறை வியாபாரிகள் கைகளுக்கு வருகின்றன. அவர்களிடமிருந்து நுகர்வோருக்குப் போகின்றன.

சில்லறை வியாபாரிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையினர் லட்சக்கணக்கில் முதலீடு செய்து பெரிய கடைகளாக அமைத்து, எல்லா வகைப் பொருள்களும் ஓரிடத்தில் கிடைக்கின்ற வகையில் இருப்பு வைத்து விற்பனை செய்பவர்கள். பெரும்பாலும் இப்படிப்பட்ட கடைகள் நகரங்களில் இருக்கும். இவர்களிடம் நுகர்வோர் மட்டுமன்றி சிறிய வியாபாரிகளும் பொருள்களை வாங்குவார்கள்.

இரண்டாம் வகையினர் ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து சிறுகடைகளாக, பெட்டிக்கடைகளாக அமைத்துக் கொண்டு வாணிபம் செய்பவர்கள்.

மூன்றாம் பிரிவினர் நூற்றுக்கணக்கில் முதலீடு செய்து கூடைகளில், பெட்டிகளில், தள்ளுவண்டிகளில் பொருள்களை வைத்து தெருத்தெருவாக பொருள்களை விற்றுப் பிழைப்பவர்கள்.

மொத்தத்தில் நாடு முழுவதும் கணக்கெடுத்தால் பல லட்சம் பேர் சில்லறை வாணிபத்தில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பதை அறியலாம். இவர்களுக்கு வாணிபம் வாழ்க்கை முறை. விற்றால் சாப்பாடு; இல்லையேல் பட்டினி.

அளவும் விளைவும்: நமது நாட்டில் சில்லறை வாணிபத்தின் அளவு எவ்வளவு இருக்கும்? கருத்தியல் அடிப்படையில் நுகர்பொருள் உற்பத்திக்குச் சமமாக சில்லறை விற்பனை இருக்குமென்று கூறலாம்.

நமது நாட்டில் மிகுதியாக மக்கள் தொகை இருப்பதால் உலகில் நமது நாடு பெரிய சந்தையாகக் கருதப் பெறுகின்றது. இதனால்தான் வளர்ச்சி பெற்ற நாடுகளும், மிகுதியாக ஏதாவது ஒன்று அல்லது சில பொருள்களை உற்பத்தி செய்யும் நாடுகளும் அவர்களது எச்சப் பொருள்களை நமது நாட்டில் வந்து கொட்டத் தயாராக இருக்கின்றன.

நமது மக்களிடம் வளர்ந்து வருகின்ற நுகர்வுக் கலாசாரம் கையில் பணமிருந்தால், கடன் கொடுக்க ஆளிருந்தால் எதனையும் வாங்கலாம் என்ற மனப்பான்மையை வளர்த்திருக்கிறது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு “செல்போன்’.

இந்த அங்காடி முறை வளர்ச்சியையும், சில்லறை வாணிபத்தில் வெளியில் தெரியாமல் இலைமறை காயாக இருக்கும் வளத்தையும் வாய்ப்பையும் புரிந்து கொண்டதால் மிகப் பெரிய நிறுவனங்கள் சில்லறை வாணிபத்தில் முதலீடு செய்ய வரிந்து கட்டிக் கொண்டு முன்வருகின்றன.

வரப்போகும் ஆபத்து: நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெரு நகரங்களில் பேரங்காடிகளை அமைத்து வருகின்றனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் சில்லறை வாணிபம் பேரங்காடிகள் மூலம் நடைபெறுகிறது. ஓர் அங்காடிக்குள் நுழைந்தால் வேண்டிய எல்லாப் பொருள்களையும் அங்கு வாங்கலாம். அங்குள்ள மக்களுக்கு அது ஏற்ற முறையாக இருக்கிறது. நமது நகர மக்களுக்கு பேரங்காடிப் பழக்கம் வந்து கொண்டிருக்கிறது.

தென் மாநிலங்களில் ஸ்பென்சர்ஸ் டெய்லி, நீல்கிரிஸ், சுபிக்ஷா, திரிநேத்ரா ஆகிய பெரிய நிறுவனங்கள் நகரங்களில் பேரங்காடிகளை அமைத்து ஓரளவு வெற்றிகரமாகச் சில்லறை வாணிபத்தில் ஈடுபட்டு வருகின்றன. வடக்கு, மத்திய மாநிலங்களில் பண்டாலூன் ரீடெய்ல் என்ற நிறுவனம் 60 உணவுப் பொருள் பேரங்காடிகளை அமைத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் பார்த்த ரிலையன்ஸ் நிறுவனம் நாம் கற்பனை செய்ய முடியாத அளவில் மிகப் பெரிய திட்டத்தோடு சில்லறை வாணிபத்தில் நுழைந்திருக்கிறது. 2006 நவம்பர் மத்தியில் ஹைதராபாதில் ஒரே நாளில் அதிரடியாக 11 “ரிலையன்ஸ் பிரஷ் அவுட்லெட்ஸ்’ என்னும் மிகப்பெரும் விற்பனை நிலையங்களை அமைத்ததன் மூலம் நாட்டையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

ரிலையன்சின் திட்டம் மிகப் பெரியது. 2010 – 11இல் இந்தியாவில் சில்லறை வாணிபத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாயோடு முதலிடத்தில் இருக்க வேண்டுமென்பது நோக்கம். அதன் தொடக்கம் 22 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு.

ரிலையன்சோடு போட்டி போட்டுக் கொண்டு இன்னும் சில பெரிய நிறுவனங்கள் சில்லறை வாணிபத்தில் பங்கு பெற பெரும் முதலீட்டோடு அங்காடி ஆடுகளத்தில் நுழையப் போகின்றன.

ஆதித்யா பிர்லா குழுமம் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப் போகிறதாம். பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கோப்பர்ஸ் என்ற நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சில்லறை வாணிபத்தில் பெரிய நிறுவனங்கள் 412 பில்லியன் டாலர் முதலீடு செய்யுமென்று மதிப்பிடுகிறது.

இந்த பெரும் பூதங்களான நிறுவனங்கள் ஆயிரங் கோடிகள் என்ற கணக்கில் முதலீடு செய்கின்றபோது சிறிய, பெரிய நகரங்களில் எல்லாம் இவற்றின் கிளை அங்காடிகள் இருக்கும். குறைந்த விலையில் விற்பனை செய்வதாகக் கூறுவார்கள். பொருள்களை மொத்தமாகக் கொள்முதல் செய்வதால் அவர்களால் குறைந்த விலைக்கு வாங்க முடியும். சிறிய உற்பத்தியாளர்கள், விவசாயிகள் அவர்களிடம் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவார்கள். வாங்கும் விலையை அவர்கள்தான் நிர்ணயிப்பார்கள். அவர்களோடு சாதாரண வியாபாரிகளால் போட்டி போட முடியாது.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை விலையில் 10 அல்லது 15 சதவீதம் தள்ளுபடி தருவார்கள். இது போதாதா நமது மக்களைக் கவர்வதற்கு? நடுத்தர, மேல்மட்ட மக்கள் இத்தகைய முறையால் பல நன்மைகள் கிடைப்பதாக நம்புவார்கள். இதனால் சங்கிலித் தொடராக இருக்கும் பேரங்காடிகள் கொடி கட்டிப் பறக்கும்; சில்லறை வணிகர்கள் செல்லாக் காசுகளாவார்கள்.

இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் நகரங்களோடு நின்றுவிடாது. இவர்கள் முகவர்கள் மூலமாகவோ புதிய விற்பனை முறைகளின் மூலமாகவோ கிராமங்களிலும் ஊடுருவுவார்கள். கைக்கு எட்டிய தூரம்வரை இவர்களது சில்லறை வாணிபம் பரந்து விரியும்.

பொருளாதாரத்தின் ஏகபோக நடவடிக்கைகள் செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்கும்; ஏழைகளை மேலும் ஏழைகளாக்கும். சிந்திக்கக்கூடிய நடுத்தர மக்கள் கிடைக்கும் சில்லறை நலன்களுக்காக நாட்டு நலனை அடகு வைக்க நினைக்கக் கூடாது.

குவிதல் முறைக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். காட்டு வெள்ளப் போக்காக வரும் பெரும் முதலீட்டால் சில்லறை வணிகர்களை அழியாமல் காப்பது அரசின் கடமை. வருகிற ஆபத்தை சில்லறை வணிகர்களும் சிறு உற்பத்தியாளர்களும் உணர வேண்டும்; அறிய வேண்டும்; இணைய வேண்டும்; போராட வேண்டும்.

நமது நாட்டில் கடைநிலை மக்களைக் காக்காமல், கவனிக்காமல் வளத்தையும் வளர்ச்சியையும் காண இயலாது.

(கட்டுரையாளர்: இயக்குநர், குமரப்பா ஆராய்ச்சி நிறுவனம், தாயன்பகம், திண்டுக்கல்).

==================================================
ஒரு விவசாயியின் எதிர்காலம்?

ச. குப்பன்

எனக்குத் தெரிந்த நண்பர் ஒரு சிறு விவசாயி.

அவருக்கு ஏரிப் பாசனத்தில் நிலமிருந்தது. ஏரிக்கு நீர் வரும் வழிகளில் கல்குவாரிக்காக பள்ளம் தோண்டி கற்களை வெட்டியெடுத்ததால் ஏரியானது முழுவதுமாக நிரம்பி பல ஆண்டுகளாகிவிட்டன. அதனால் விவசாயம் செய்வதற்குச் சிரமமான நிலையில் இருந்தபோது நிலவள வங்கியொன்று புதிய குழாய் கிணறு அமைப்பதற்கு அவருக்கு கடன் கொடுத்தது. டீசல் விற்கும் விலையில் நீர் இறைக்க டீசல் எஞ்சினைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால் கையும்காலும்கூட மிஞ்சாது என்பதால் குழாய் கிணற்றிலிருந்து நீர் இறைக்க மின் மோட்டார் அமைத்தால் நல்லது என எண்ணினார்.

மின்வாரியமானது தொழில்துறைகளுக்கெல்லாம் கேட்டவுடன் மின் இணைப்பு கொடுத்துவிடும். ஆனால் ஒரு விவசாயி விண்ணப்பிக்கும்போது மட்டும் வரிசை முன்னுரிமைப்படி தோராயமாக பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் மின் இணைப்பு கொடுப்பதற்கு உத்தரவிடுவார்கள். இதற்கு மாற்று வழியாக மின்வாரியத்தில் ரூ. 25 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தினால் உடனடியாக இணைப்பு கிடைக்கும் என்பதால் மின்மோட்டார், இதர உபகரணங்கள் மற்றும் மின்வாரிய வைப்புத்தொகையையும் சேர்த்து நிலவள வங்கியில் நீண்டகாலக் கடனாகப் பெற்று குழாய் கிணறு தோண்டி மின் மோட்டாரும் அமைத்தார்.

அந்த ஆண்டு சிறிதளவு கூடுதலாக மழை பொழிந்தால் நன்செய் பயிர் செய்யலாமே என நெற்பயிரை நட்டு பராமரித்து வந்தார். இதற்கான நடைமுறை மூலதனமாக கைமாற்று வாங்கி சரி செய்தார். நெல் அறுவடையாகி களத்து மேட்டிற்கு வரும்போது கைமாற்றாக வாங்கிய கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்தும்படி நெருக்கியதால் விளைந்து வந்த நெல்லை வேறுவழியின்றி மிகக் குறைந்த விலைக்கு விற்று கடனைத் தீர்த்தார்.

சரி நிலவள வங்கி மற்றும் இதுபோன்ற கடன் தொல்லையைத் தீர்ப்பதற்கு பணப்பயிரான கரும்பைப் பயிரிட விரும்பினார். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே கரும்புப் பயிரைப் பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

எனவே தனியார் சர்க்கரை ஆலைகள் நல்ல விலை கொடுக்கின்றனரே என்று பதிவில்லாமல் பயிரிடலாமே என மனைவியின் காதில் மூக்கில் இருந்த நகைகளை அடமானம் வைத்துப் பயிரிட்டார். அந்த ஆண்டு கரும்பு விளைச்சல் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருந்ததாலும் சர்க்கரை ஆலையில் பதிவு செய்யாது கரும்பைப் பயிரிட்டதாலும் “அடிமாட்டு விலைக்கு’ விற்றார்.

கரும்பும் பழி வாங்கிவிட்டது என கலங்கி கரும்பின் வேர்கட்டையை பறித்துப்போட்டுவிட்டு, நிலத்தை உழுது, எள்ளைத்தான் விதைத்துப் பார்ப்போமே என முடிவெடுத்தார்.

அறுவடையின்போது இதுவும் (எள்ளும்) சரியான விலையில் விற்பனை ஆகாததால் வேறு கூடுதல் பணியாக ஆடு வளர்க்கலாம் என்று நிலவள வங்கியிலிருந்து மேலும் கடன் பெற்று ஆடுகள் வாங்கி வளர்த்தார். அந்த ஆடு முழுவதும் நோய் வந்து இறந்து போனதால் இழப்பை ஈடுகட்டுவதற்காக காப்பீட்டு நிறுவனத்தை அணுகியபோது பிரிமீயத் தொகை வாங்குவதற்கு மட்டும் குழைய குழையத் தேடி வந்தவர்கள் இழப்பீடு கேட்கும்போது மட்டும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வரியில் இதற்கான விதி சேர்க்கப்படவில்லை என்றும் அதனால் இந்த இழப்பீடு தொகை கிடைக்காது எனவும் கூறி கைவிரித்து விட்டனர். சரி வேறு என்னதான் செய்வது என எண்ணி மீண்டும் தன்னுடைய நிலத்தில் கத்தரி பயிரிட்டார். திருஷ்டிபடும்படி கத்தரி செடி ஆள் உயரம் வளர்ந்து நல்ல காய் காய்த்தது. இவருடைய துரதிர்ஷ்டம் அந்த ஆண்டில் விளைச்சல் அதிகமாக இருந்ததால் காய் பறித்த கூலி, ஏற்றிச் சென்ற பேருந்துக் கட்டணம் மற்றும் இறக்குக் கூலியைக் கூட கத்தரிக்காயின் விற்பனை வருவாயில் சரிக்கட்ட முடியவில்லை.

இந்த நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்காக இவருடைய நிலத்திற்கு அருகில் சென்ற ஓடையில் பெரிய குழாய்க் கிணறு ஒன்றை அமைத்து நீரை உறிஞ்சியதால் இவருடைய சிறிய குழாய்க் கிணற்றில் நீர் வற்றிவிட்டது. அரசு நிர்வாகத்துடன் போட்டி போட்டுக் கொண்டு அந்த அளவுக்கு ஆழமாக குழாய்க் கிணறு அமைக்க வசதி இல்லாததாலும் நிலவள வங்கிக் கடனை உடனே திரும்பச் செலுத்தவேண்டிய நிர்பந்தத்தினாலும் என்ன செய்வது என்று தத்தளித்தார்.

இச்சமயத்தில் நிலவள வங்கியில் கடன் பெற்று நிலுவையாக உள்ளவர்களின் கடனுக்கான வட்டியில் பாதியையும் மற்றும் அசல் தொகை முழுவதையும் செலுத்தினால் எஞ்சிய பாதி வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. உடனடியாக 25 சதவீதம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சுற்றத்தாரிடம் கைமாற்றுக் கடன் வாங்கி கால்பங்கு தொகையை அவர் செலுத்தினார்.

குழாய்க் கிணற்றில் நீர்வற்றிவிட்டதால் தொடர்ந்து நிலத்தில் பயிரிட முடியவில்லை; என்ன செய்வது என நிலத்தை விற்று நிலவள வங்கி மற்றும் இதர கடன்களையாவது தீர்த்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என எண்ணினார். இதுதான் சமயம் என அவருடைய நிலத்தை மிகக் குறைந்த விலைக்குக் கேட்டனர். கடனை மட்டும் சரி செய்கிற அளவுக்காவது தொகை வந்தால் போதும் என்று நிலத்தை விற்று கடன் அனைத்தையும் தீர்த்துவிட்டார்.

இந்த நடவடிக்கை முடிந்த சமயத்தில் புதியதாகப் பொறுப்பேற்ற அரசு நிலவள வங்கியில் நிலுவையில் உள்ள கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது என அறிவித்தது. அது மட்டுமன்றி, அவருடைய ஊரின் அருகாமையிலுள்ள தரிசு நிலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப் போவதாகவும் அறிவித்தது. அதனால் அவர் விற்ற நிலத்தை அவரிடம் அடி மாட்டு விலைக்கு வாங்கியவர் “யானை விலை குதிரை விலையாக’ மிக அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் கண்டார். ஆனால் இவரோ இப்போது ஒரு நிலமற்ற ஏழை கூலி விவசாயத் தொழிலாளியாகப் பிழைப்பைத் தேடி நகரத்தை நோக்கிச் சென்றார். இவருடைய இந்த நிலைமையை யாரிடம் சென்று முறையிடுவது?

இத்தகைய விவசாயிகளைக் காப்பதற்கு என்னதான் செய்ய வேண்டும்? ஒவ்வொரு கிராமத்திலும் அறுவடை சமயத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை நல்ல விலை கிடைக்கும்போது விற்பதற்கு ஏதுவாக சிறிது காலம் பாதுகாப்பாக விளைபொருள்களை வைத்திருப்பதற்கான குளிர்பதன கிடங்கை அமைக்க வேண்டும். அதுவரையில் நடைமுறைச் செலவை ஈடுகட்டுவதற்காகக் குறைந்த வட்டியில் இந்த விளைபொருள்களை அடமானம் வைத்துக் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதன்மூலம் இவரைப் போன்ற விவசாயிகளுக்கு விளைவித்த பயிர்களிலிருந்து முழு வருமானமும் கிடைக்கும். அவர்களின் வாழ்வும் ஏற்றும் பெறும்.

வங்கிகள் நடைமுறை மூலதனம் வழங்கும்போது பயிர்கள் மூலம் சரியான வருமானம் கிடைக்காதபோது அடுத்த பயிருக்கான கடனை முந்தைய கடனை அடைத்தால்தான் மறுபடியும் கடன் கொடுக்க முடியும் என மறுக்கக் கூடாது. அதற்குப் பதிலாக மேலும் சிறிது கடனைக் கொடுத்து நொடிந்த விவசாயிகளை கைதூக்க உதவ வேண்டும்.

விவசாயிகளின் பயிர்கள், கால்நடைகள் போன்றவற்றுக்கு இழப்பு ஏற்படும்போது காப்பீட்டு நிறுவனங்கள் சரியான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க தகுந்த ஏற்பாடு செய்தால் மட்டுமே அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த முடியும். அதை மட்டும் செய்தாலே போதும். விவசாயிகள் தற்கொலை பெருமளவில் தடுக்கப்பட்டுவிடும்.

(கட்டுரையாளர்: தலைமைக் கணக்கர், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மூங்கில்துறைப்பட்டு).
==================================================

Posted in Agriculture, Analysis, Backgrounder, Bankruptcy, Banks, Bharti, Birla, Biz, Brinjal, Business, Cane, Capitalism, Collars, Commerce, Consumer, Customer, Diesel, EB, Eggplant, Electricity, Engine, Expenses, Farmer, Finance, Food, Fresh, Fruits, Futures, Globalization, harvest, harvesting, Impact, Income, India, Industry, Inflation, Investment, Irrigation, Lake, Loan, Manufacturing, markets, Motor, Operations, Options, Plants, Power, Premium, Prices, Rain, Recession, Reliance, retail, sales, Small Business, Small scale, SSI, Sugar, Sugarcane, Tap, Trading, Vegetables, Venture, Wal-Mart, Walmart, Water | 1 Comment »

Sonia sparks debate on ‘Wal-Mart effect’ of foreign investment

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: நடுநிலைப் பாதையே சோனியாவின் கருத்து

புது தில்லி, பிப். 8: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய நடுநிலைப் பாதையை பின்பற்ற வேண்டும் என்றுதான், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் சோனியா காந்தி வலியுறுத்தி இருப்பதாகக் கருத வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் பார்தி -வால் மார்ட் கூட்டு தொழில் முயற்சியின் பின்னணியில், மன்மோகன் சிங்குக்கு எச்சரிக்கையுடன் செயல்படுமாறு ஆலோசனை கூறி சோனியா காந்தி கடிதம் எழுதியதாகக் கூறப்படுவது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி இவ்வாறு பதில் அளித்தார்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தடை செய்ய வேண்டும் என்றோ அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளே இல்லாமல் அதை அனுமதிக்க வேண்டும் என்றோ இரு வேறு அதீதங்களை அந்தக் கடிதம் வலியுறுத்துவதாகக் கருதக் கூடாது.

சாதாரண மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் கட்சி ஆர்வம் கொண்டுள்ளது. ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்புகளுடன் கூடிய நடுநிலைப் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலை என்றார் அபிஷேக் சிங்வி.

சோனியா காந்திக்கும் மன்மோகன் சிங்குக்கும் இடையில் கலந்துரையாடல் இல்லை என்ற பாஜக குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.

சில்லறை வியாபாரத்துக்கு பாதிப்பு

சில்லறை வியாபாரத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கும் முன் அது குறித்து முழுமையாக அலசி ஆராய வேண்டும், நாட்டையும் சாதாரண மனிதனையும் பாதுகாப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இதைப் பரிசீலனை செய்த பிரதமர் மன்மோகன் சிங் இவ் விஷயத்தை வர்த்தக அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு வெளிநாட்டினர் முதலீடு தேவை என்பதால் பல்வேறு பெரிய தொழில்களில் முதலீடு செய்ய அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் சிறிய தொழில்களில் கூட அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.

சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கும் சில்லறை வியாபாரிகளுக்குப் போட்டியாக சில இந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கறி முதல் பருப்பு, உளுந்து வரை பல்வேறு பொருள்களை விற்பனை செய்யும் மையங்களைத் தொடங்கியுள்ளன. இத்தகைய மையங்களில் விற்கப்படும் பொருள்களின் விலை சந்தை விலையை விட சற்றே குறைவாக உள்ளது. காரணம் பொருள்களை உற்பத்தியாகும் இடத்துக்கே சென்று கொள்முதல் செய்து வருகின்றனர். மேலும் விற்பனை மையங்கள் அதி நவீன வசதியுடன் உள்ளன.

இது தவிர, ஒரு குறிப்பிட்ட தொகைக்கு பொருள்கள் வாங்கினால் அவற்றை வீட்டுக்கே அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தொடர்ந்து வாங்கினால் சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. இத்தகைய கவர்ச்சிகரமான திட்டங்களால் மக்கள் சாதாரண வியாபாரிகளைப் புறக்கணிக்கும் போக்கு காணப்படுகிறது.

நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான சில்லறை வியாபாரிகள் உள்ளனர். தமிழகத்தில் சென்னையில் மட்டும் லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். பெரிய நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் சிறு வியாபாரிகள் திணறுகின்றனர். இந்த நிறுவனங்கள் இப்போது பெரிய நகரங்களில் மட்டுமே தங்கள் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளன. காலப்போக்கில் சிறிய நகரங்களுக்கும் அவை விரிவுபடுத்தப்படலாம்.

இதனால் வட்டிக்கு வாங்கி சில ஆயிரங்கள் அல்லது சில லட்சங்கள் முதலீடு செய்து தொடங்கப்பட்ட சிறு கடைகள் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து விடும் என்று வணிகர் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும் காலப்போக்கில் சிறு கடைகள் அழிந்தபிறகு, பெரிய நிறுவனங்கள்தான் சந்தை விலையை நிர்ணயம் செய்யும். அப்போது மக்கள் நலன் புறந்தள்ளப்பட்டு லாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும். இதனால் விலைவாசி அதிகரிப்பதுடன், இந்த விற்பனையகங்களிலேயே பொருள்கள் வாங்க மக்கள் நிர்பந்திக்கப்படுவார்கள். இதன் காரணமாக, பல லட்சம் பேர் வேலையை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும். வணிகம், விவசாயம், நெசவு போன்ற தொழில்கள் பெருமளவு பாதிக்கப்படக்கூடும் என்றும் வணிகர் அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே ஆன் லைன் என்ற ஊக வர்த்தகம் மூலம் பல்வேறு பொருள்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன.

எனவே, பல லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாக இது உள்ளது. இதில் அரசு துரிதமாகத் தலையிட்டு, பல்வேறு அமைப்புகளைக் கொண்ட குழு அமைத்து, இதன் பாதிப்பைக் கண்டறிந்து, சிறு வியாபாரிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஏழைகள் நிறைந்த நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும். அது பல்வேறு தொடர் பிரச்சினைகளுக்கு வழி வகுத்துவிடும்.சில்லறை வியாபாரத்துக்கு பாதிப்பு

Posted in Analysis, Assets, Background, Bharti, Big Box, Biz, Business, Commerce, Cong(I), Congress, Congress (I), Congress Party, Dinamani, Economics, Economy, FDI, Finance, Foreign investment, Indira Congress, Indra Congress, Interest, Investment, Loans, Manmohan Singh, Market, Monopoly, Op-Ed, Opinion, PM, Protection, retail, Retailer, Safeguards, Small Business, Sonia Gandhi, Sonia Gandi, Sudeshi, Swades, Wal-Mart, Walmart | Leave a Comment »

Left sees red in Wal-Mart’s retail foray in India

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006

சில்லறை விற்பனைத் துறையில் பன்னாட்டு நிறுவனம் நுழைய முயற்சி: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை, நவ. 29: சில்லறை விற்பனைத் துறையில் பன்னாட்டு நிறுவனம் நுழையும் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சில்லறை விற்பனைத் துறையில் பன்னாட்டு நிறுவனமான மார்ட் நுழைவதற்கு வகை செய்யும் முறையில் இந்திய நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் ஏற்பாடு செய்துள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாகும்.

பல லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் என்பதாலேயே சில்லறை விற்பனைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடதுசாரி கட்சிகளுடன் வியாபாரிகள் அமைப்புகள் உள்பட பல அமைப்புகளும் எதிர்த்து வந்துள்ளன. இந்தப் பின்னணியில் மறைமுகமாக பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் நுழைய அனுமதியளிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடனடியாக தலையிட்டு இந்த முயற்சியை தடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. சில்லறை விற்பனைத் துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழையும் முயற்சியை ஒன்றுபட்டு முறியடிக்க முன்வருமாறு அனைத்துப் பிரிவு மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

Posted in Bharti Enterprises, Commerce Minister, Communism, Communist, Communist parties, Communists, CPI, CPI (M), CPI(M), ecosystem, Kamal Nath, Reliance, Sunil Mittal, supply chain management, Wal-Mart | Leave a Comment »