Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Vladimir Putin’ Category

Russia, India cement nuclear ties with offer of 4 new nuclear reactors

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகளை அமைக்க ரஷ்யா உதவும்

தமிழகத்தில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்ய உதவியுடன் கட்டப்பட்டு வரும் அணுமின் நிலையத்தில் கூடுதலாக மேலும் நான்கு அணு உலைகளை அமைக்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.

இரண்டு நாள் பயணமாக புதுடில்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இது தொடர்பான உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது.

வியாழக்கிழமை காலை புடின் புதுடில்லி வந்தடைந்தார்.

அதன்பின்னர் இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒன்பது உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

கூடங்குளத்தில் ஏற்கெனவே இரண்டு அணு உலைகள் ரஷ்ய உதவியுடன் கட்டப்பட்டு வருகின்றன. அத்துடன், மேலும் நான்கு அணு உலைகளை அங்கு அமைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இந்தியாவில் வேறு இடங்களிலும் புதிய அணுமின் நிலையங்களை ரஷ்ய தொழில்நுட்பத்துடன் அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகக் கருதப்படுகிறது.

ரஷ்யாவின், உலக கடல்வழி தொடர்புடைய செயற்கைக் கோள் மூலம் கடல்வழி சமிக்ஞைகளை, அமைதிப் பணிகளுக்காக இந்தியா பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

இரு நாட்டு எண்ணெய் நிறுவனங்களும் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணத் திட்டம் தொடர்பான பணிகளை, தங்கள் நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் இணைந்து மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.

புடின் மற்றும் மன்மோகன் சிங், பேச்சுவார்த்தையின் முடிவில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். கடந்த பத்து ஆண்டுகளில், உலக அளவில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பொருத்தவரை, ரஷ்யாவுக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இந்தியாவுடனான சர்வதேச அணுசக்தி ஒத்துழைப்புத் தடைகளை நீக்கியதற்காக ரஷ்யாவுக்கு நன்றி தெரிவித்த மன்மோகன் சிங், பல நோக்கு விமானங்கள் மற்றும் நவீன ரக போர் விமானங்கள் உற்பத்தியில் கூட்டாகச் செயல்பட முடிவு செய்திருப்பது, இரு நாட்டு உறவில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

அதே நேரத்தில், பொருளாதார ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சியடையவில்லை என்றும் அதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்..

ரஷ்யா – இந்தியா -சீனா இடையிலான முத்தரப்பு ஒத்துழைப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த புடின், எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், ரஷ்யா – இந்தியா – சீனா – பிரேசில் நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பும் வருங்காலத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் புடின்.

வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இந்திய குடியரசு தின விழா நிகழ்ச்சியில், கௌரவ விருந்தினராகக் கலந்துகொள்கிறார் புடின்.


Posted in A K Antony, China, Defense Minister, Electricity, energy, India, Kremlin, Kudankulam, Manmohan Singh, MiG-35, Moscow, Nuclear, Nuclear Suppliers' Group, Oil and Natural Gas Corp. Ltd, ONGC, Parade, Power, President, Putin, reactors, Republic Day, Rosneft, Russia, Sakhalin, Sakhalin-1, Sakhalin-3, Sergei Ivanov, T-90 tanks, United States, USSR, Vladimir Putin | Leave a Comment »

Russia can help India meet its N-power needs – Koodankulam Electricity Generation

Posted by Snapjudge மேல் ஜனவரி 22, 2007

கூடங்குளம் விரிவாக்கம்

தமிழகத்தில் மின் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் விரிவாக்கப்படலாம் என்ற தகவல் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ரஷிய அதிபர் புதின் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரும்போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம்.

கூடங்குளத்தில் இப்போது தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இரு அணுமின் நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இவற்றுக்கான பணிகள் முடிவடையும் கட்டத்தில் உள்ளன. முதல் யூனிட்டின் அணு உலைப் பணிகள் இந்த ஆண்டு கடைசியில் நிறைவடைந்து, அடுத்த ஆண்டு மார்ச் வாக்கில் மின் உற்பத்தியைத் தொடங்கும். இரண்டாவது யூனிட்டும் அடுத்த ஆண்டில் மின் உற்பத்தியில் ஈடுபடலாம்.

கூடங்குளம் திட்டம் 2002-ம் ஆண்டில் தொடங்கப்பட்டபோதே அங்கு மொத்தம் எட்டு யூனிட்டுகளை நிறுவுவதற்கான வகையில் வசதிகள் அமைக்கப்படலாயின. நாட்டில் அணுசக்தி மூலம் மின் உற்பத்தியைப் பெருக்குவதில் முனைப்புக் காட்டி வரும் மத்திய அரசு, கூடங்குளத்தில் மேலும் நான்கு மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ விரும்பியது. அந்த வகையில்தான் இப்போது உடன்பாடு கையெழுத்தாக இருக்கிறது. புதிதாக நான்கு யூனிட்டுகள் நிறுவப்படும்போது தமிழகம் நல்ல பலன் பெறும். முதல் இரு யூனிட்டுகளும் உற்பத்தி செய்ய இருக்கும் 2,000 மெகாவாட் மின்சாரத்தில் தமிழகத்தின் பங்காக 1,200 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். மேலும் நான்கு யூனிட்டுகள் நிறுவப்படும்போது தமிழகத்துக்கு கூடுதலாக மின்சாரம் கிடைக்கும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் இந்தியாவின் அணு மின்துறையில் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைப்பதாகக் கூறலாம். இந்தியாவில் ஏற்கெனவே 16 அணுமின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் நான்கு நீங்கலாக மீதி அனைத்தும் இந்தியா சொந்தமாக உருவாக்கி, அமைத்துக் கொண்டவை. ஆனாலும், இவற்றில் பெரும்பாலானவை தலா 220 மெகாவாட் அளவுக்குத்தான் மின்சாரத்தை உற்பத்தி செய்பவை. கூடங்குளம் அணுமின் நிலையம் ஏற்கெனவே கூறியதுபோல, தலா 1000 மெகாவாட் திறன் கொண்டது. தவிர, இவை செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பயன்படுத்தும்.

கூடங்குளத்தில் சோவியத் யூனியனின் உதவியுடன் அணுமின் நிலையங்களை நிறுவ, 1988-ம் ஆண்டிலேயே உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் ரஷிய அதிபர் கொர்பச்சேவும் கையெழுத்திட்டனர். ஆனால் சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்ததால் இத் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை. 1999-ல் இத் திட்டம் புத்துயிர் பெற்று 2002-ல் பணிகள் தொடங்கின.

நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில் அணுமின் நிலையங்களின் பங்கு இப்போது மூன்று சதவீதமாக, அதாவது சுமார் 4 ஆயிரம் மெகாவாட் அளவில் உள்ளது. இதை 2030-ம் ஆண்டுவாக்கில் 40 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் அணுசக்தி தொடர்பாகச் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் இதற்கு வழிவகுக்கலாம். இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அணுஉலைகளையும் அணுசக்தி எரிபொருள்களையும் அளிப்பது தொடர்பான பல கட்டுப்பாடுகள் அகற்றப்படலாம். அக் கட்டத்தில், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைக்க முன்வரும். ஏற்கெனவே பல வெளிநாட்டு நிறுவனங்கள் இவ் விஷயத்தில் அக்கறை காட்டி வருகின்றன. இது ஒருபுறமிருக்க, அணுமின் நிலையங்களை அமைக்க இந்தியாவின் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்படலாம் என்பதற்கான குறிப்புகள் உள்ளன. இந்தியாவும் ரஷியாவும் கூட்டாகப் புதிய வகை அணு உலைகளை வடிவமைத்துத் தயாரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

—————————————————————————————-

ரூ. 2,176 கோடியில் புதிய அனல் மின் நிலையம்

சென்னை, ஜூலை 27: சென்னை அருகே ரூ. 2,176 கோடியில் 500 மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின் நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா எண்ணூர் கிராமத்தில் உள்ள வடசென்னை அனல்மின் நிலைய வளாகத்தில் இந்த புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து வடசென்னை அனல்மின் நிலையத்தின் தலைமைப் பொறியாளர் (பொறுப்பு) என். சங்கமேஸ்வரன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

வடசென்னை அனல்மின் நிலையம் (நிலை-1) தற்போது தலா 210 மெகாவாட் திறனுள்ள 3 பிரிவுகள் மூலம் ஆண்டுக்கு 1.5 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்து வருகிறது. இதன்மூலம் சென்னையின் 60 சதவீத மின் தேவை நிறைவேற்றப்படுகிறது.

தற்போது இதே வளாகத்தில் 500 மெகாவாட் திறனுள்ள புதிய அனல்மின் நிலையம் (நிலை-2) ரூ. 2,716 கோடியில் 180 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது.

தமிழக மின் வாரியத்தின் சார்பில் இத் திட்டத்துக்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. வரும் ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் இந்த ஒப்பந்தப்புள்ளிகள் முடிவு செய்யப்படும்.

இதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். நவீனத் தொழில்நுட்ப அடிப்படையில் சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் இந்த அனல் மின்நிலையம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அமைக்கப்படும்.

தேசிய மின் கழகம் இதற்கான இடத்தை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கியுள்ளது.

புதிய அனல்மின் நிலைய வளாகத்தில் நிலக்கரி தூசுக்களை சுற்றுச் சூழல் மாசுபடாத வகையில் நீரில் படியும் முறையில் அகற்ற தனிப் பிரிவு அமைக்கப்படும்.

வரும் 2011-ல் மின் உற்பத்தி தொடக்கம்: இப் பணிகள் நிறைவடைந்த பின் வரும் 2011-ம் ஆண்டில் இருந்து புதிய அனல் மின் நிலையம் தனது மின் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 1.2 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இந்த அனல்மின் நிலையம் மூலம் சுமார் 1,500 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.

தற்போது அனல் மின் நிலையங்களில் ஒரு யூனிட் மின் உற்பத்திக்கு தலா ரூ. 2.30 செலவிடப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மூலம் சூழல் பாதிப்பு மிகக் குறைவாக உள்ளது என்றார் சங்கமேஸ்வரன்.

—————————————————————————————

5 புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டம்

சென்னை, ஜூலை 27: தமிழகத்தில் மேலும் 5 புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகம் தற்போது 10,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. இதில் வடசென்னை, எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி ஆகிய அனல்மின் நிலையங்கள் மூலம் 2,970 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

சென்னை பேசின்பிரிட்ஜ், ராமநாதபுரம் அருகே வழுத்தூர், மன்னார்குடி அருகே கோயில்களப்பால், குத்தாலம் ஆகிய இடங்களில் எரிவாயு மின் நிலையங்கள் மற்றும் நீர் மின் நிலையங்கள், கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந் நிலையில் மேட்டூரில் கூடுதலாக 500 மெகாவாட் மின் நிலையமும், தூத்துக்குடியில் 1,000 மெகாவாட் மின் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எண்ணூர் மின் நிலையத்தின் மின் உற்பத்தித் திறன் 300 மெகாவாட் அளவாகக் குறைந்துள்ளது. இதையடுத்து எண்ணூரில் கூடுதலாக 500 மெகாவாட் மின் நிலையம் கட்டப்பட உள்ளது.

இதே போல நெல்லை அருகே உடன்குடியில் 800 மெகாவாட் திறனுள்ள 2 அனல்மின் நிலையங்கள் அமைக்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளன.

இதுதவிர குந்தாவில் 500 மெகாவாட் திறனுள்ள நீர் மின் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

Posted in 1000 MW, Atomic Power, Capacity, Chennai, Electricity, Energedar, Ennore, Ennur, Environment, Generation, Gorbachev, India, Jobs, Kanyakumari, Koodankulam, Madras, Megawatt, Mikhail Gorbachev, MW, Nuclear, PCIL, Plans, Pollution, Ponneri, Power, Power Corporation of India Ltd, Power Plants, Putin, Rajeev Gandhi, Rajiv Gandhi, Russia, Thiruvalloor, Thiruvallur, Vladimir Putin, VVER-1000, Warming | Leave a Comment »