Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Vidharba’ Category

Farmer suicides – Turning risk into an opportunity: Case study of a Agriculture Success Story

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

முகங்கள்: பத்து லட்சம் கடன்… முப்பது லட்சம் வட்டி!

ந.ஜீவா

“கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது கம்பராமாயண வரிகள். ஆனால் கடன் பெற்றவர்கள் கலங்கினால் அது தற்கொலையில்தான் முடியும். நாடெங்கும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம், கடன்… வட்டி… விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமை அல்லது தண்ணீர்ப் பஞ்சம், பூச்சிகளினால் விவசாயம் பாதிக்கப்படல் இன்னும் பல.

ஆனால் கோவை ஏ.ஜி.புதூரைச் சேர்ந்த சுப்பையன் என்கிற விவசாயி கலங்கவில்லை. வட்டியும் கடனுமான நாற்பது லட்சம் ரூபாயைத் தனது கலங்காத மன உறுதியாலும் தெளிவாகத் திட்டமிடும் திறனாலும் கடுமையான உழைப்பாலும் திருப்பி அடைத்து வெற்றிகரமாக கடன் தொல்லையில் இருந்து மீண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்…

நாற்பது லட்சம் ரூபாய் கடன் எப்படி ஆனது?

நான் நான்கு வருடத்துக்கு முன் கோவையில் இருந்து மைசூர் அருகே உள்ள குண்டன்பேட்டைக்குப் போய் 35 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணினேன். அதற்காக எங்கள் பகுதியில் உள்ளவர்களிடம் நான்கு வட்டிக்கும் மூன்று வட்டிக்குமாகப் பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். நானும் இன்னும் நான்கு பேரும் சேர்ந்து மைசூர்-குண்டன்பேட்டைக்குப் போனோம். அங்கே போய் வெங்காயம், கனகாம்பரம், கரும்பு, மஞ்சள் எல்லாம் பயிர் செய்தோம். ஆனால் நாங்கள் விவசாயம் பண்ணின நேரம் உற்பத்தி பண்ணின பொருள்களெல்லாம் விலை குறைந்துபோனது. பத்துலட்சம் வாங்கின கடன் இரண்டு வருடத்துக்குள்ளே வட்டியெல்லாம் சேர்த்து நாற்பது லட்சம் ரூபாய் ஆகிவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் ஊருக்குத் திரும்பி வந்துவிட்டேன்.

திரும்பி வந்து என்ன செய்தீர்கள்?

இங்கே எனக்குப் பத்து ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விவசாயம் செய்ய முடியவில்லை. நிலத்தடி நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத அளவுக்குக் கெட்டுப் போயிருந்தது. நொய்யல் ஆற்று நீரில் கோயம்புத்தூர் நகர்க் கழிவு எல்லாம் கலந்ததால் அது ஓடுகிற எங்கள் பகுதியில் நிலத்தடி நீரும் உப்பாகப் போய்விட்டது. செடி வளர்க்க இந்தத் தண்ணீர் ஆரோக்கியம் இல்லை.

இந்தக் கெட்டுப் போன தண்ணீரை வைத்துக் கொண்டு எப்படி விவசாயம் பண்ணுவது? என்ன விவசாயம் பண்ணுவது? கடனையெல்லாம் எப்படி அடைப்பது? யோசனை பண்ணிப் பார்த்தேன்.

எங்கள் பகுதிக்குத் தோட்டக்கலைத்துறை, விரிவாக்கத்துறை அதிகாரிகள் எல்லாரும் வருவார்கள். வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சி.ராமசாமி அடிக்கடி வருவார். அவர்களிடம் கேட்டதில் எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது என்று தெரிய வந்தது. வேறு எந்த வேளாண்மை பண்ண வேண்டும் என்று யோசித்து கீரை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இந்தத் தண்ணீருக்குக் கீரை நன்றாக வரும். குதிரை மசால் நன்றாக வரும். தென்னை நன்றாக வரும்.

அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, சிறுகீரை என விவசாயம் செய்தேன். இதில் 30 சதம் செலவு ஆகும். 70 சதம் லாபம் வரும்.

குதிரை மசால் என்பது கால்நடைகளுக்கானத் தீனி. இது தவிர கறிவேப்பிலை இரண்டரை ஏக்கரில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். எனது 10 ஏக்கர் நிலம் தவிர மேலும் 20 ஏக்கர் நிலத்தைக் குத்தகை எடுத்தேன். 12.5 எச்பி மோட்டார் போட்டு கிணற்றில் தண்ணீர் எடுத்து விவசாயம் பண்ணினேன். கிணற்று தண்ணீர் நாளொன்றுக்கு 3 ஏக்கர் நிலத்திற்குப் பாயும்.

எங்கள் விவசாயத்தில் அதிக அளவு ரசாயன உரங்கள் போடுவதில்லை. மண்புழு உரம், மாட்டுச்சாணம் போடுவோம். கோயம்புத்தூரில் ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் பகுதியில் நிறைய மாடுகள் வளர்க்கிறார்கள். அதனால் மாட்டுச் சாணிக்கென்று நாங்கள் அலைய வேண்டியதில்லை.

விவசாயம் செய்து விளைவித்த பொருள்களை எங்கே விற்பனை செய்கிறீர்கள்?

கீரை ஒரு நாளைக்கு 5000 கட்டிலிருந்து 10000 கட்டு வரை விற்பனையாகும். ஒரு நாளைக்கு சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு கீரை விற்பனையாகும். கறிவேப்பிலை ரூ.1500 க்கு விற்பனையாகும். கடைகளுக்கு வாடிக்கையாக கறிவேப்பிலையைக் கொடுத்துவிடுவோம். கிலோ ரூ.10 இலிருந்து ரூ.15 வரை போகும். குதிரைமசால் 400 கிராம் கட்டு சுமார் 3000 கட்டுவரை விற்பனையாகும்.

காலையிலே எங்கள் காட்டுக்குள்ளிருந்து இந்தப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வண்டிகள் வெளியே போகும். எத்தனை வண்டி எவ்வளவு பொருள் என்பதையெல்லாம் கணக்கு வைத்துக் கொள்வார்கள்.

கால்நடைத் தீவனமாக நாங்கள் விவசாயம் செய்யும் குதிரை மசாலை சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் பகுதியில் மாடு வளர்ப்பவர்களே வாங்கிக் கொள்வார்கள்.

காலையில் டெம்போவில் குதிரை மசாலை ஏற்றிக் கொண்டு கிளம்புவோம். சிட்டி பஸ் குறித்த நேரத்தில் எந்த ஸ்டாப்பில் எந்த நேரத்தில் நிற்குமோ அதைப் போல இந்த டெம்போ ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிற்கும். அந்தப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் அங்கு வந்து வாங்கிக் கொள்வார்கள்.

கோயம்புத்தூரில் உள்ள வாடிக்கையாளர்கள் தவிர கொடைக்கானலிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அங்கே உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் 67 மாடுகள் வைத்திருக்கிறார்கள். 10 ரேஸ் குதிரைகள் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்திற்காக எங்களிடம் ரெகுலராக குதிரை மசால் வாங்குகிறார்கள்.

இவ்வளவு வேலைகளையும் செய்ய வேண்டுமென்றால் ஆட்களை வேலைக்கு வைக்க வேண்டுமே?

எங்களிடம் முதலில் 40 பேர் வேலை பார்த்தார்கள். இப்போது 20 பேர் பார்க்கிறார்கள். வேலைக்கு ஆள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இத்தனைக்கும் பெண்களே ஒரு நாளைக்கு ரூ.140 வரை சம்பளம் வாங்குகிறார்கள்.

எங்களிடம் வேலை செய்பவர்களை நாங்கள் மரியாதையாக நடத்துகிறோம். வாடா, போடா என்றெல்லாம் பேசுவது கிடையாது. அவர்கள் எல்லாரும் ரொம்பவும் விசுவாசமான ஆட்கள்.

வழக்கமாகப் பயிர் செய்யும் நெல், கரும்பு, வாழை போன்றவற்றைப் பயிர்செய்யாமல் இப்படிக் கீரைகளை விவசாயம் பண்ண வேண்டும் என்று எப்படித் தோன்றியது?

நான் விவசாயத்துக்கு முதன்முதல் வந்த போது எங்கள் ஏரியாவில் பருத்திதான் அதிகம் போடுவார்கள். நான்தான் முதன் முதலில் கனகாம்பரம் துணிந்து பயிர் செய்தேன். எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றவை விளைவிக்க நல்ல தண்ணீர் இல்லாததும் ஒரு காரணம்.

நமது அண்டை மாநிலமான ஆந்திரா, வடமாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்களே?

இந்தியாவில் விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகப் பேப்பரில் படிக்கிறோம். எனக்கு மாதிரி அவர்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருந்திருந்தால் ஒருவேளை என்னைப் போலவே அவர்களும் கடினமாக உழைத்துக் கடனை அடைத்திருப்பார்களோ, என்னவோ. எல்லாருக்கும் எனக்கு போலவே வாய்ப்புக் கிடைக்க வேண்டுமே.

இப்போது மார்க்கெட் வசதி அபாரமாக இருக்கிறது. அரசாங்கம் நிறையக் கடன் கொடுக்கலாம். கந்துவட்டியை ஒழிக்கச் சட்டம் போட்டிருந்தாலும் நாடு முழுக்க கந்துவட்டி இருக்கிறது. அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் கந்துவட்டியை ஒழிக்கலாம். பத்துலட்சம் வாங்கின கடனுக்கு முப்பது லட்சம் வட்டி கட்டணும் என்றால் விவசாயி தற்கொலை பண்ணிக் கொள்ளாமல் என்ன செய்வான்?

Posted in Agriculture, Analysis, Banking, Banks, Case study, deaths, Economy, Faces, Farmers, Farming, Farmlands, Finance, Foodgrains, Forests, Fruits, Greens, harvest, horticulture, Incidents, Interview, Life, Loans, markets, Opportunity, Paddy, people, Persons, Prices, Real, rice, Risk, Saline, Salt, success, Suicides, Trees, Turnaround, Vegetables, Vidharaba, Vidharaba Jan Andolan Samithi, Vidharabha, Vidharba, Vidharba Jana Andolan, Vidharbha, Vidhrabha, Vitharabha, Vitharba, Vitharbha, Waste, Water, Wheat | 2 Comments »

Agricultural Loans – Rich vs Poor farmers: Banking

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007

கைப்புண்ணுக்குக் கண்ணாடி!

sainath_farmer_suicides_agriculture.jpgவங்கிகள் மூலம் விவசாயத்திற்கு வழங்கப்படும் கடன்தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக, மத்திய அரசின் அறிக்கையொன்று கூறுகிறது. இந்த அறிக்கை, விவசாய முன்னேற்றத்திற்கும், விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் எந்த அளவுக்குத் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், அரசின் விவசாயத் துறையும் முனைப்புடன் செயல்படுகின்றன என்பதை புள்ளிவிவரங்களுடன் விளக்க முற்பட்டிருக்கிறது.

ஒருபுறம், விவசாய உற்பத்தியில் பின்னடைவு, வளர்ச்சியில் தளர்ச்சி, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி என்று செய்திகள் வந்துகொண்டிருக்கும் வேளையில், விவசாயத்துறைக்கு அளிக்கப்படும் நிதியுதவி, எதிர்பார்த்த இலக்கைவிட அதிகம் என்கிற செய்தி வியப்பை ஏற்படுத்துகிறது.

2006-2007 நிதியாண்டுக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ. 1,75,000 கோடியைத் தாண்டி, மொத்த கடன்தொகை அளிப்பு மட்டும் ரூ. 2,03,269 கோடி கொடுக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், விவசாயக்கடன் நிவாரணத் திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அதிக அளவு கடன் வழங்குவது என்றும், தனியார் deaths_suicides_india_farming_peasants.jpgகடன் சுமை மற்றும் விவசாய மூலதனமின்மையை அகற்றுவது என்றும் அரசு தீர்மானித்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில், நலிந்துவரும் விவசாயத்துறையை மீண்டும் புத்துயிர் பெற வைப்பது என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

நடப்பாண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில், குறைந்தது 50 லட்சம் விவசாயிகளிடையே முறைப்படுத்தப்பட்ட வங்கிச்சேவையை அறிமுகப்படுத்துவது என்றும், ரூ. 2,25,000 கோடியை விவசாயக் கடனுக்காக ஒதுக்குவது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடன்தொகை வங்கிகள் மூலம் அளிக்கப்பட்டது என்றும், அதிக அளவில் விவசாயிகள் தனியாரிடம் கடன் வாங்கி விவசாயம் செய்வதைத் தவிர்த்து வங்கிகள் மூலம் தங்களது நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்டுகிறார்கள் என்றும், அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான புள்ளிவிவரங்களும் தரப்படுகின்றன.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துவிட்டார்களா, விவசாயம் லாபகரமாக நடக்கிறதா, விவசாய உற்பத்தி அதிகரித்துவிட்டிருக்கிறதா என்று கேட்டால், அதைப்பற்றி இந்த அறிக்கையோ, புள்ளிவிவரங்களோ எதுவுமே பேசுவதில்லை. கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளை வைத்துப்பார்த்தால், இத்தனை கோடி ரூபாய்கள் – ஒன்றா, more_deaths_dead.jpgஇரண்டா, பல லட்சம் கோடி ரூபாய்கள்-விவசாயத்துறைக்கும், விவசாயிகளுக்கும் தரப்பட்டும், கிராமங்களில் அதன் தாக்கம் காணப்படவில்லை என்பதுதான் உண்மை.

இன்னும் சொல்லப்போனால், இத்தனை லட்சம் கோடி ரூபாய்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கிராமப்புறங்களிலுள்ள விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டதாகச் சொன்னாலும், விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு மக்களின் இடம்பெயர்தல் தொடர்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதிகம் படிக்காத அரைகுறைப் பாமரனுக்கு இதற்கான காரணம் தெரியும்.

இந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகள் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிட்டுதான் தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த விவசாயிகளில் பத்து சதவிகிதத்தினர்கூட வங்கிச்சேவையைப் பற்றித் தெரியாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். அப்படியே தெரிந்திருந்தாலும், தனியாரிடம் வாங்கிய கடனுக்குக் கட்டுப்பட்டு, அவர்களது பிடியிலிருந்து தப்பமுடியாமல் தவிப்பவர்களாக இருப்பவர்கள். வங்கிகளிலிருந்து இவ்வளவு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி அனுபவிப்பவர்கள் பெரிய நிலச்சுவான்தார்களே தவிர இதுபோன்ற ஏழை விவசாயிகள் அல்லர்.

எங்கே போயிற்று இத்தனை லட்சம் கோடி ரூபாய்களும் என்று ஆராய்ச்சி செய்வது கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேடும் வேலை. ஆட்சியாளர்களின் ஆராய்ச்சி தொடரும்வரை, ஏழை விவசாயிகளின் தற்கொலைகளும் தொடரும்.

—————————————————————————————————————————————————

விவசாயத்தில் ரசாயனங்கள் ஆதிக்கம்

இரா. மகாதேவன்

இயற்கை வேளாண் முறைகளை பெரும்பான்மையான விவசாயிகள் தவிர்த்து வருவதால் விவசாயத்தில் ரசாயனங்களின் ஆதிக்கம் தொடர்கிறது.

நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏராளமான வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகும் உழவர்கள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டிய நிலையே நீடித்து வருகிறது.

விவசாயத்தையும், உழவர்களையும் முன்னேற்றுவதற்காக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, மின்சாரம் போன்றவற்றுக்கு மானியம் அளித்தும் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தபாடில்லை.

நாடு முழுவதும் பரவலாக விவசாயிகளின் பட்டினிச் சாவுகள் தெரிந்தும், தெரியாமலும் நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்நிலைக்கு காரணங்கள் ஆராயப்பட்டு வந்தாலும், விவசாயம் உழவர்களுக்கு லாபகரமானதாக இல்லை என்பதும், நவீன விவசாய முறைகள் அவர்களை உயர்வுக்கு இட்டுச் செல்லவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மையாக விளங்கி வருகிறது.

இந்நிலையின்தான் விவசாயத்தை லாபகரமானதாகவும், கேடு இல்லாததாகவும் மாற்ற இயற்கை வேளாண் ஆர்வலர்கள் அதீத முயற்சி எடுத்து வருகின்றனர்.

விவசாயம் மனித வாழ்விற்கு அடிப்படையான உணவு உற்பத்தி மையம் என்ற நிலை மாறி, தற்போது சந்தைப் பொருளான பிறகு அதன் தன்மை என்ன என்பதையும், உணவு தானியங்களே மனித நோய்களின் தோற்றுவாய் என்ற நிலை எவ்வாறு உருவானது என்பதற்கும் இயற்கை வேளாண் ஆர்வலர்கள் பல காரணங்களைக் கூறுகின்றனர்.

இயற்கை உழவிற்கு முக்கிய அடிப்படையான கால்நடைகள் வளர்ப்பு பெருமளவில் குறைந்து, அவை இறைச்சிக்காக உற்பத்தி செய்யப்பட்டு, அழிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக ரசாயன உர உபயோகமும், பூச்சிக்கொல்லியின் பயன்பாடும் பல மடங்காக உயர்ந்துள்ளன.

உதாரணமாக, 1960-61 ஆம் ஆண்டு காலகட்டத்தில், வயல்களில் 5000 டன் ரசாயன உரம் இடப்பட்டது. இது 1998-99-ல் 13 லட்சம் டன்னாக (சுமார் 260 மடங்கு) உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலையில் பயன்பாடு மேலும் உயர்ந்துகொண்டே உள்ளது.

ஆனால், ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளின் விலை உயர்ந்த அளவிற்கு விளைச்சலோ அல்லது விளைபொருள்களின் விலையோ உயரவில்லை என்பது நிதர்சனம்.

இயற்கை விவசாயத்திற்கான ஆய்வுகளுக்கும், இடுபொருள்களுக்கும் அரசின் முழுமையான உதவி தேவை என்கின்றனர் இயற்கை வேளாண் ஆர்வலர்கள்.

இயந்திரங்களும், ரசாயனங்களும் மக்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொண்டதால் போதிய உணவு அல்லது சத்தான உணவு இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அயல் நாட்டு நிறுவனங்கள் மரபணு மாற்ற விதைகளைத் திணித்ததன் விளைவாக நம் நாட்டின் பாரம்பரிய விதைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

நவீன விவசாயத்தைக் கைவிட்டு, நிலைத்து நீடித்திருக்கவல்ல ஓர் உழவாண்மையை நாம் கையிலெடுக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

கடுமையான, உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட அதேசமயம் நமது நாட்டில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பூச்சிமருந்துகளால் இன்று நாம் உண்ணும் ஒவ்வொரு உணவுப் பொருளும் எஞ்சிய நஞ்சின் மிச்சங்களால் நிறைந்திருக்கின்றன.

இந்த நஞ்சுகள் விதவிதமான புற்றுநோய்களையும், சிறுநீரகக் கோளாறுகளையும், பிறவி நோய்களையும், மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளையும் நடமாடச் செய்கின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

இயற்கை வேளாண் ஆர்வலர்களின் கூற்றுப்படி, மூதாதையர்கள் கண்டறிந்த இயற்கை வேளாண் முறை மனிதர்கள், கால்நடைகள், பயிர்கள் ஆகிய 3 துறைகளிலும் மருந்தாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது.

நோயில்லாத உலகை உருவாக்கவும், விவசாய முதலீடு லாபம் சார்ந்த தொழிலாக மாறவும் உழவர்கள் இயற்கை வேளாண் முறைகளுக்கு முழுமையாக மாற வேண்டும் என்பது இயற்கை வேளாண் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

இதை உழவர்கள் முழுமையாக உணர்ந்து அந்நிலைக்கு மாற நீண்ட காலம் பிடிக்கலாம். அவர்களை இயற்கை வேளாண்மைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

இயற்கை வேளாண் முறைகளைக் கடைப்பிடிக்கும் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு நில வரியை தள்ளுபடி செய்வது, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், ஊக்கிகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக மண்புழு உரம், இயற்கை பூச்சிவிரட்டிகள், ஊக்கிகளை விற்பனை செய்தல்.

சுயஉதவிக் குழுக்களுக்குப் பயிற்சியளித்து மக்கும் உரங்கள், மண்புழு உரங்கள் உள்ளிட்ட இயற்கை வேளாண் முறைகளுக்கான இடுபொருள்களை தயாரிக்க கடன் வழங்குதல்.

அவ்வாறான பொருள்களை வணிக நோக்கில் உற்பத்தி செய்து விற்க முனைவோருக்கு விற்பனை வரி உள்ளிட்டவற்றில் சலுகைகளை வழங்குதல்.

வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வியின்போது, கிராமங்களில் உதவித்தொகையுடன் சேவையாற்ற வேண்டும் என்ற முறையைக் கொண்டுவந்து, அவர்கள் மூலம் இயற்கை வேளாண் நுட்பங்களை உழவர்களிடம் கொண்டுசெல்லுதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் இயற்கை வேளாண் முறைகளை ஊக்குவித்து வந்த போதிலும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், மரபணு மாற்ற விதைகளை அனுமதித்தல் உள்ளிட்டவற்றிலும் தீவிரம் காட்டுவதன் காரணம் தெரியவில்லை.

ரசாயனங்களால் கிடைக்கும் உடனடி பலன்களைப் போல், இயற்கை வேளாண் முறைகளில் கிடைப்பதில்லை என்ற சிலரின் தவறான பிரசாரமும் உழவர்களை இதன்பால் செல்ல யோசிக்க வைத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் கடந்து நோயில்லாத உலகை உருவாக்கவும், விவசாயம் லாபகரமானதாக மாறவும் அவற்றுக்கான மானியங்களை சுமந்து செல்வதிலிருந்து அரசு விடுபடவும் இயற்கை வேளாண் முறைகளே உதவும் என்ற ஆர்வலர்களின் கூற்றை அரசு கூர்ந்து கவனித்து ஆவன செய்ய வேண்டும்.

—————————————————————————————————————————————————-

தேவை புதியதொரு பார்வை!

எம். ரமேஷ்

ஏழை மக்களுக்கான மானிய உதவிகள் உரியவர்களைச் சென்றடையவில்லை. எனவே இதைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளது, ஏழைகள் வயிற்றில் நிச்சயம் புளியைக் கரைத்திருக்கும்.

இந்த ஆண்டு மானிய ஒதுக்கீடு ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் என நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ள நிலையில் பிரதமரின் இந்தப் பேச்சு, ஏழைகளுக்குப் பேரிடியாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

“”பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் அமல்படுத்தப்பட்ட மானியத் திட்டங்கள் உரிய பலனை அளிக்கவில்லை. மானியத் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளதை நமது முந்தைய அனுபவங்கள் உணர்த்துகின்றன. எனவே நாம் அத்தகைய மானியத் திட்டங்கள் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று பிரதமர் கூறியுள்ளதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள ஏழை எளிய மக்களுக்கானத் திட்டங்களில் மானியம் அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் அத்தகைய மானியத் திட்டங்களால் எந்தப் பலனும் இல்லையென பிரதமர் கூறுவது அவர் மனத்தில் மற்றொரு திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளார் என்பதையே உணர்த்துகிறது.

அரசின் மிக மோசமான பொருளாதாரக் கொள்கைகளால்தான் மானியத் திட்டங்கள் தோல்வியடைந்தன என்பதை மறைக்க பிரதமர் முயல்கிறார். இதைக் கருத்தில் கொண்டே, மானியத் திட்டங்கள் பலன் தராததற்கு நிர்வாக முறைகளே காரணம் எனத் தவறாகப் பிரசாரம் செய்வதாகக் பொருளாதார நிபுணர்கள் கூறும் வாதத்தில் பொருள் இல்லாமல் இல்லை.

பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் இத்தகைய பிரசாரத்துக்கு, மானியத் திட்டங்களை மேலும் திறம்படச் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கம் காரணம் அல்ல. மாறாக ஏழைகள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியை மாற்றி பெரும் பணக்கார நிறுவனங்களுக்குச் சலுகைகள் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோலியப் பொருள்களுக்கு அளிக்கும் மானியம் முழுவதையும் எக்ûஸஸ் வரி, “வாட்’ வரி என்று பல்வேறு வரிகளின் பெயர்களில் மத்திய அரசு திரும்ப வசூலித்துக் கொள்கிறது என்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த வகையில் ரூ. 1 லட்சம் கோடியில் அரசுக்கு வரியாகத் திரும்பக் கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதைத் தெரிவிக்க வேண்டிய கடமையும் பிரதமருக்கு உள்ளது.

நேரடி மானியம், மறைமுக மானியம், வர்த்தக மானியம், கொள்முதல் மானியம், நுகர்வு மானியம் என பல வகையில் மத்திய அரசு மானியம் அளிக்கிறது.

மானியத்துக்காக அரசு செலவிடும் தொகையில் 38 சதவீதம் உணவு, உரம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களுக்கே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

உணவுக்கான மானியம் என்பது ரேஷனில் வழங்கப்படும் அரிசிக்கு அளிக்கப்படுவது, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும்போது அளிப்பது ஆகியனவாகும்.

இது தவிர வேளாண்துறையை ஊக்குவிக்க உர மானியம் அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோலியப் பொருள் நுகர்வு அதிகமாக உள்ளது. ஆனால் பெட்ரோலியப் பொருள்களைப் பொருத்தமட்டில் பெருமளவு இறக்குமதியைச் சார்ந்தே இருக்க வேண்டிய சூழ்நிலை நமக்கு. இதனால் மானியத்தில் 50 சதவீதத்துக்கு மேல் பெட்ரோலியப் பொருள்களுக்கு வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தாராளமயமாக்கல் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அதாவது 1990-91-ம் ஆண்டில் உணவுக்கான மானியம் ரூ. 2,450 கோடி மட்டுமே. தற்போது அது ரூ. 30 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது.

உரத்துக்கான மானியம் ரூ. 4,389 கோடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ. 15 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் சலுகையாக ரூ. 1,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

60 ஆண்டுகளான சுதந்திர இந்தியா சுபிட்சமாக இருக்கிறதா? இல்லை, நிச்சயமாக இல்லை. சுபிட்சமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை.

60 ஆண்டுக்கான மக்களாட்சிக்குப் பிறகும் ஏனிந்த நிலைமை?

1947-ல் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படியிருந்தது? 2007-ல் எப்படியிருக்கிறது? 60 ஆண்டுக்கால இடைவெளியில் பொருளாதார ரீதியாக மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது? நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிய பங்கு போய்ச் சேர்ந்திருக்கிறதா? இல்லையெனில் அதற்குக் காரணம் என்ன? அது சேராததற்கு என்ன காரணம்? இடையில் என்ன நடந்தது என்கிற ரீதியில் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

பிரதமர் குறிப்பிடும் கலப்புப் பொருளாதாரம் பலன் தரவில்லை எனில் அது கலப்படப் பொருளாதாரம்தானே? ஏழைகளுக்கு அளிக்கும் மானியங்களைக் குறைத்து பெரும் நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கும் “முதலாளித்துவ பொருளாதாரத்தை’ எப்படி ஏற்க முடியும்.

இந்த அரசுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா முதலான நாடுகளைப் போல சுயசார்பான பொருளாதார வளர்ச்சிக்கு முயல வேண்டும். இதை ஆட்சியாளர்கள் உணர வேண்டிய தருணமிது.

மானியத்தைக் குறைக்க வேண்டும் என உலக வங்கி நிர்பந்திப்பதால், அரசுக்கு இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை, நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வேளாண் துறைக்கு இன்னமும் மானியம் அளிக்கப்படுகிறது. ஆனால் அங்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் அது தொடர்கிறது.

நிர்பந்தம் தொடர்ந்தால், வெளிநாடுகளில் உள்ளதைப் போல ஊக்கத் தொகை என்ற பெயரில் மானிய உதவிகள் தொடர வேண்டும்.

அடித்தட்டு மக்களுக்கான மானிய உதவிகளையும், அவர்களின் மேம்பாட்டுக்கான ஊக்கத் தொகை என்ற பெயரில் தொடர்வதை யாரும் தடுக்க முடியாது.

உலக மக்கள் தொகையில் வறுமையில் வாடுவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர். இவர்களின் வறுமையை அகற்றாமல் தாராள பொருளாதாரமயம் என்ற போர்வையில் தொழிலதிபர்களுக்குச் சலுகை வழங்க முற்பட்டுவிட்டு, மானியத்தின் பலன் உரியவர்களைச் சென்றடையவில்லை என்று கூறும் பிரதமர், அரசின் உதவிகள் உரியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

——————————————————————————————————————
விவசாயக் கடன் யாருக்கு?

எஸ். கோபாலகிருஷ்ணன்

விவசாயிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுதவி, கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு கூறுகிறது. துல்லியமாகச் சொல்லவேண்டுமெனில், 2006 – 2007 நிதியாண்டில், நிர்ணயிக்கப்பட்ட விவசாயக் கடன் இலக்கு ரூ. 1,75,000 கோடி. ஆனால் அந்த ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடனுதவி ரூ. 2,03,269 கோடி என அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதிய விவசாயக் கடன் நிவாரணத் திட்டம் ஒன்றை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிக அளவு வங்கிக்கடன் வழங்கப்படும் என்றும், அடுத்த மூன்று ஆண்டுகளில் வங்கிக்கடன் தொகையை இரண்டு மடங்காக உயர்த்துவதே இலக்கு என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இந்தத் திட்டத்தின் மூலம் நலிந்து வரும் விவசாயிகளுக்குப் புத்துயிர் ஊட்டுவதுதான் அரசின் நோக்கம் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில், விவசாயத்துறைக்கு வழங்கப்பட்ட வங்கிக்கடன் தொகை அரசு நிர்ணயித்திருந்த இலக்கையும் தாண்டிவிட்டது என்பது என்னவோ உண்மை. ஆனால், நலிந்து வரும் விவசாயத் துறை மீண்டும் புத்துயிர் பெற்றுவிட்டதா என்பதே கேள்வி. இந்தத் திட்டத்தின் பயனாக, விவசாயிகள் தனியார் கடன் தொல்லையிலிருந்து மீட்சி அடைந்து விட்டார்களா? விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளதா? கிராமப்புறங்களில் இருந்து வேலைதேடி நகர்ப்புறங்களுக்கு மக்கள் இடம்பெயர்தல் குறைந்துள்ளதா? “”இல்லை” என்பதே இந்தக் கேள்விகளுக்கான பதில். மாறாக, நாட்டின் சில பகுதிகளில், கடந்த காலங்களில் நிகழ்ந்த, விவசாயிகளின் தற்கொலைகள் இன்னமும் தொடர்கின்றன என்பதுதான் சோகம். பல லட்சம் கோடி ரூபாய்கள் விவசாயத்துறைக்கு வங்கிக் கடனாக வழங்கப்பட்ட பின்னரும், மேலே குறிப்பிட்ட எந்த ஒரு பயனும் கிடைக்காமல் போனதற்கு என்னதான் காரணம்?

இந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு இரண்டு அல்லது மூன்று ஏக்கர் விவசாய நிலமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததுதான். இவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கிகளில் நுழைந்ததுகூட இல்லை. இவர்கள் காலம் காலமாக அதிக வட்டிக்கு தனியாரிடமிருந்து கடன் வாங்கி நாள்களைக் கழித்துக்கொண்டு இருப்பவர்கள். அதுமட்டுமல்லாமல், வட்டிக்கடைக்காரர்களின் உடும்புப் பிடியிலிருந்து தப்புவது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறவர்கள்.

சமீபத்தில் வெளியாகியுள்ள பாரத ரிசர்வ் வங்கியின் மாதாந்திர செய்தி அறிக்கையில் காணப்படும் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இப்பிரச்னையின் மற்றோர் அம்சம் பளிச்சிடுகிறது.

1991-92ஆம் ஆண்டில், அதாவது பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அறிமுகமாவதற்கு முந்தைய ஆண்டில், ஒட்டுமொத்த வங்கிக்கடன் தொகையில் 15 சதவிகிதம் விவசாயத்துறைக்குக் கடனாகக் கிடைத்தது. ஆனால் 1999 – 2000 ஆம் ஆண்டில், வங்கிக் கடன்தொகையில், வெறும் 10 சதவிகிதம் மட்டுமே விவசாயத்துறைக்குக் கடனாகக் கிடைத்தது. பொருளாதாரச் சீர்திருத்தம் தொடங்கிய முதல் எட்டு ஆண்டுகளில் விவசாயக் கடன் அளவு 5 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது. பெரிய தொழில்துறைக்கு வங்கிக்கடன் அதிகரித்தபோது, விவசாயக் கடன் சுருங்கியது. இந்த காலகட்டத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறு விவசாயிகளின் புகலிடமாக இருந்தது தனியார் வட்டிக் கடைகளே.

2004 ஆம் ஆண்டில் விவசாயக் கடன் நிவாரணத் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக 2005 – 2006 ஆம் ஆண்டில் வங்கிக்கடனில் 11 சதவிகிதம் அளவுக்கு விவசாயக் கடன் அதிகரித்தது. அடுத்த ஆண்டுகளில் இது மேலும் உயர்ந்தது.

ஆக, விவசாயக் கடன் நிவாரணத் திட்டத்தின் கீழ், வங்கிக் கடனாக பல லட்சம் கோடி ரூபாய் வழங்கிய பின்னரும், அது சிறு விவசாயிகளது பிரச்னையின் விளிம்பைக் கூட தொட முடியவில்லை எனில், அந்தப் பணம் எங்கே போனது?

விவசாயக் கடன் திட்டத்தால் பயன் அடைந்திருப்பவர்கள், அதிக அளவில் நிலம் வைத்துள்ள பெரிய நிலச்சுவான்தார்களே அல்லாமல் ஏழை விவசாயிகள் அல்ல என்பது வெளிப்படை.

இந்நிலையில், உண்மையிலேயே சிறு விவசாயிகளை கைதூக்கிவிட வேண்டுமானால், கடன் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது. நீண்டகாலமாக, தனியாரிடமிருந்து கடன் பெற்று, வட்டியைக்கூட செலுத்த முடியாமல், லேவா தேவிக்காரர்களின் பிடியில் சிக்கி இருக்கும் விவசாயிகளை முதலில் அவர்களிடமிருந்து விடுவிக்க வேண்டும்.

இந்த முயற்சியை சுயமாக மேற்கொள்ளும் நிலையில் விவசாயிகள் இல்லை. எனவே, இதற்கென சிறு விவசாயிகளிடையே ஒரு விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். வங்கிக்கடன் வாயிலாக, தனியார் கடனிலிருந்து விடுபட்டு, தங்கள் வாழ்க்கையை புதிய பாதையில் அமைத்துக்கொள்வதற்கான ஊக்கத்தையும், அதைச் செய்வது சாத்தியமே என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

ஆக, வெறும் கடன் வழங்குவதோடு நின்றுவிடாமல், தேசிய வங்கிகள் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கான சூழலையும், இதர உதவிகளையும், மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் வங்கிகளுக்கு வழங்க வேண்டும்.

சிறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்தொகை பயிர்க்கடனாக மட்டும் இல்லாமல் தனியார் கடனை அடைப்பதற்கும் போதுமானதாக இருத்தல் வேண்டும்.

விவசாயம் லாபகரமானதாக அமைவதற்கு ஏதுவாக, இடுபொருள்கள், சந்தை சார்ந்த தகவல்கள், சந்தைப்படுத்துதலில் உள்ள நெளிவு, சுளிவுகள் மற்றும் விலை நிலவரங்கள் ஆகிய விவசாயம் பற்றிய அனைத்து அம்சங்களிலும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து, விவசாயிகளின் மனநிலையிலும், செயல்முறைகளிலும் ஒரு புதிய உத்வேகத்தை வங்கிகள் உருவாக்க வேண்டும்.

இதைக் கருத்தில்கொண்டு, வெறும் கடன் வழங்கும் இயந்திரங்களாகச் செயல்படாமல் கிராமங்களிலும், குறிப்பாக விவசாயத்திலும், ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கும் உந்துசக்தியாக வங்கிகள் திகழ வேண்டும். இது எளிய காரியம் அல்ல.

கடந்த காலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு, நாளடைவில் நீர்த்துப் போய்விட்ட “விரிவாக்க சேவையை’ (உஷ்ற்ங்ய்ள்ண்ர்ய் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்) வங்கிகளில் விவசாயக் கடன் அதிகாரிகள் மற்றும் கள அலுவலர்கள், புதிய சூழலுக்கு ஏற்ப அளிக்க முன்வர வேண்டும்.

எப்படி அரசு மானியங்களின் பலன் உரியவர்களைச் சென்றடையாமல், வசதி படைத்தவர்களுக்குப் போய்ச் சேரும் நிலை திருத்தி அமைக்கப்பட வேண்டுமோ, அதுபோல், விவசாயக் கடன் சிறு விவசாயிகளுக்குப் போய்ச் சேராமல் பெரும் நிலச்சுவான்தாரர்களுக்கு மட்டுமே போய்ச் சேரும் நிலை உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும்.

பல லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்ட பின்னரும், விவசாயிகளின் ஏழ்மை நீடிப்பதும், தற்கொலைகள் தொடருவதும் பொறுத்துக் கொள்ளக்கூடியது அல்ல.

எனவே, வழங்கப்படும் விவசாயக் கடன் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டால் மட்டும் போதாது. அது சரியான நபர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கையில் இருள் நீங்கி, ஒளி பிறக்கும்படி செய்ய வேண்டும்.

பாரத ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் துணையுடன், தேசிய வங்கிகள் இதை ஒரு சவாலாக ஏற்று, கிராமப்புற மேம்பாட்டுப் பணியை, அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

——————————————————————————————————————

Posted in Agriculture, Artificial, Assets, Banking, Banks, BT, chemicals, Commerce, dead, Death, Economy, Farmers, Farming, Farmlands, Fertilizers, genes, Heritage, Inorganic, Labor, Land, Loans, Modern, Monsanto, Natural, organic, peasants, Suicide, Tariffs, Tax, Urea, Vidarba, Vidarbha, Vidharaba, Vidharaba Jan Andolan Samithi, Vidharabha, Vidharba, Vidharba Jana Andolan, Vidharbha, Vidhrabha, Villages, Vitharabha, Vitharba, Vitharbha | Leave a Comment »

Self-suffiency in Foodgrain Production – KB Prabhakaran

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 23, 2007

உணவு தன்னிறைவு… நிஜமா?

கே.பி. பிரபாகரன்

நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகளான நிலையில், உணவுத் துறையில் திட்டமிடுதல் தொடங்கி 50 ஆண்டுகள் கடந்த நிலையில் “இந்தியா உண்மையிலேயே உணவு தன்னிறைவுடன் உள்ளதா?’ என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

நாட்டு மக்களுக்கு உணவுக்கு உத்தரவாதம் இல்லையெனில் “விடுதலை’ என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியா பெருமளவில் கோதுமையை இறக்குமதி செய்து வருகிறது.

எந்த ஒரு தன்மானமிக்க நாடும் இறக்குமதி செய்யப்பட்ட உணவைக் கொண்டு வாழ்வதில்லை; அதிலும் – நாமே நமக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலையில்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது உணவுப் பற்றாக்குறையால் மட்டுமே அப்போதைய வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டது என்ற புனைவு சரியல்ல. இந்தியாவின் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உணவை, தங்களது போர் நடவடிக்கைகளுக்காகக் கொண்டு சென்றதாலும் எந்த இடத்தில், எந்த நேரத்தில் உணவு தேவையோ அங்கு உணவுப் பொருள்களை அளிக்காததாலுமே அந்தப் பஞ்சம் ஏற்பட்டது. இதேபோலத்தான் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும், ஒரிசா போன்ற பகுதிகளில் பட்டினியால் மக்கள் வாடிக் கொண்டிருந்த போது, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களுக்கு விற்கும் விலையைவிடக் குறைந்த விலையில் கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இந்த ஏற்றுமதி ஒரு மோசடி நடவடிக்கை.

1980 ஆம் ஆண்டுகளில் 2.85 சதவிகிதமாக இருந்த உணவு தானிய உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 1990-களில் 1.6 சதவிகிதமாகக் குறைந்தது.

இந்தக் காலகட்டத்தில்தான் முதல் முறையாக, உணவு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைவிட மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் அதிகரிப்பது நிகழ்ந்தது. இருப்பினும், உணவு உற்பத்தியில் இந்தியாவின் “தன்னிறைவு’ குறித்து மார்தட்டிக் கொள்ளும் வேளாண் வல்லுநர்கள் இந்த மோசமான நிலையை பார்க்கத் தவறிவிட்டனர். இந்தச் சிக்கல் உலகமயத்தால் மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில், 2001 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஒரேநேரத்தில் 2,000 பொருள்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்கியது; இதில் பெரும்பான்மையானவை வேளாண்மை சார்ந்தவை. இதனால், பெருநகரங்களில் பல்பொருள் அங்காடிகளில் அமெரிக்க, ஆஸ்திரேலிய ஆப்பிள்கள் குவிந்தன; மலிவு விலையிலான வியத்நாம் மிளகு, குவாதமாலா ஏலம் ஆகியவையும் இந்தியச் சந்தைகளில் குவிந்தன.

விளைபொருள்கள் வருவாயிலிருந்து, இடுபொருள் செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலைக்கு இந்தியாவின் சிறு, குறு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

450 கிராம் பி.டி. ரக பருத்தி விதைகளை ரூ.1,950 என்ற விலைக்கு வாங்க கட்டாயப்படுத்தப்பட்ட விதர்பா பகுதி விவசாயிகள், மகசூல் வெகுவாகக் குறைந்தபோது, ஆயிரக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டனர்.

வேளாண் வளர்ச்சி 2 சதவிகிதத்துக்கும் குறைவான அளவில் தேக்கமடைந்தது. வேளாண்மையில் ஏற்பட்ட இந்த மிகப் பெரிய நெருக்கடி குறித்து கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பிரதமர் மன்மோகன் சிங், 2005 நவம்பரில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் “வேளாண்மையில் அறிவாற்றல் முன்முயற்சி’ என்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை மையமாகக் கொண்டது.

உணவுப் பற்றாக்குறையைப் போக்க மரபணு மாற்றுப் பயிர்கள் தீர்வு அல்ல. நாட்டின் 14.2 கோடி ஹெக்டேர் பயிர்ச் சாகுபடி பரப்பில் பாசன வசதி பெற்ற 4.7 கோடி ஹெக்டேர் நிலத்திலிருந்து 56 சத உணவு தானியம் கிடைக்கிறது. மீதமுள்ள 9.5 கோடி ஹெக்டேர் பரப்பு வானம் பார்த்த பூமியாகும்.

பெருமளவு முதலீடு செய்திருந்த போதிலும், நீர்ப் பயன்பாடு குறித்த தவறான திட்டமிடல் காரணமாக, மானாவாரிப் பகுதிகள் அளிக்கும் வாய்ப்புகள் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை. பிரம்மாண்டமான பாசனத் திட்டங்களுக்குத் தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்ததே இதற்குக் காரணம்.

இதற்கு மாற்றாக, தண்ணீர் சேகரிப்பை உள்ளடக்கிய, அந்தந்தப் பகுதி நீர் வளத்தை மையப்படுத்திய, பரவலாக்கப்பட்ட சிறிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான வேளாண் அறிவியல் மையங்களை 0.9 சத விவசாயிகளே பயன்படுத்துகின்றனர் என்பது கவலை தரும் அம்சம். வேளாண் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அறியாமல் உள்ள ஏறத்தாழ 50 ஆயிரம் கிராம, வட்டார விரிவாக்க அலுவலர்கள், அரசுக்கு நிதிச் சுமையாக உள்ளனரே தவிர, அவர்களால் பயன் ஒன்றும் இல்லை.

இவர்களுக்கு நேர் எதிராக, சீனாவில் 15 லட்சம் வேளாண் தொழில்நுட்ப முகவர்கள், விவசாயிகளின் வயல்களில் அவர்களுடன் தோளோடு தோளாக வேலை செய்து கொண்டே, அந்நாட்டு மண்ணின் மகசூல் அதிகரிக்க புதுமைகளைப் புகுத்திய வண்ணம் உள்ளனர். இந்தியாவில் நிலைமை, இதற்கு நேர்மாறு.

இந்தியாவின் வேளாண் கொள்கை தானியங்களை மையப்படுத்தியதாக அமைய வேண்டும். சீனாவிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் கோதுமை விலை நமக்கு அபாய அறிவிப்பு செய்கிறது; ஒரே ஆண்டில் 80 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்டு நமது துறைமுகங்களுக்கு வந்து சேரும் கோதுமையின் விலை டன்னுக்கு ரூ. 14,000-க்கு குறையாது. இந்த நிலையில், நமது விவசாயிகள் உற்பத்தி செய்யும் கோதுமைக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 900-க்கும் அதிகமாக விலை தருவதற்கு யோசிக்கிறது மத்திய அரசு.

உணவுத் துறையில் முறையான திட்டமிடல் மூலம், நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், மத்திய அரசு தொடர்ந்து அதிக விலைக்கு கோதுமையை இறக்குமதி செய்வது, நமக்கு அவமானம்.

ஆயிரக்கணக்கான தென்னிந்தியக் குடும்பங்களில் அரிசி உணவின் இடத்தை சப்பாத்தி பிடிக்கத் தொடங்கியுள்ளது. அரைவை ஆலை உரிமையாளர்கள் கோதுமையைக் கொள்முதல் செய்ய அலைந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை அரைவையாளர் கூட்டமைப்பில் சேர்த்து, சிறப்பு கோதுமை மண்டலங்களில் கோதுமை உற்பத்தியில் ஈடுபடுத்தினால் என்ன?

கிழக்கு இந்தியாவில், குறிப்பாக பிகாரில், பயன்படுத்தப்படாமல் உள்ள வளமான நிலப் பகுதியை கோதுமை சாகுபடிக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தலாமே!

——————————————————————————————————————-

வேளாண்மை மேம்பட..!

சி. வேழவேந்தன்

நமது நாடு தொழில் வளர்ச்சியில் 9 சதவிகித அளவை எட்டிவிட்டாலும், வேளாண் துறை வளர்ச்சியில் 2.8 சதவிகிதமாகவே உள்ளது. விவசாயிகளுக்குக் குறைந்தவட்டியில் தேவையான அளவு கடன் வழங்குவதே வேளாண்மை மேம்பாட்டுக்கு அடிப்படைத் தேவை.

கிராமங்களில் விவசாயத்தை விட்டுவிட்டு மாற்றுத்தொழிலுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், பருவ மழை தவறுவதும், விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததும், மத்திய, மாநில அரசுகளின் தவறான வேளாண் கொள்கைகளும்தான்.

நஷ்டமானாலும் பரவாயில்லை, தமது நிலத்தை உழவுசெய்யாமல் போடக்கூடாது என்பதே இன்றைய விவசாயிகளின் உணர்வோட்டமாக உள்ளது.

இன்று விவசாயிகள் முன் உள்ள பெரிய பிரச்னை கடன்தான். விதர்பா பகுதியில் நடப்பதைப்போல, தற்கொலை என்ற தவறான முடிவுக்கு இதுவரை தமிழக விவசாயிகள் வரவில்லை. விவசாயமும் கடனும், நகமும் சதையும்போல பிரிக்க முடியாதவை. சிறிய விவசாயிகளுக்கு சிறிய அளவிலும், பெரிய விவசாயிகளுக்கு அதிக அளவிலும் கடன் உள்ளது.

விவசாயிகளின் கடன்சுமையைப் போக்குவதற்காகத் தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்தது. இதனால், கிராமப் பகுதிகளிலுள்ள விவசாயிகள் பெரிதாகப் பயனடையவில்லை.

கட்சி வேறுபாடு இல்லாமல் கூட்டுறவு வங்கியில் தொடர்புடையவர்களும், அவர்களின் உறவினர்களுமாக “பெரிய விவசாயிகள்’ ஒவ்வொருவரும் வாங்கிய பல லட்சம் மதிப்புள்ள கடன்கள்தான் பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய விவசாயிகளுக்கு இதனால் பெருமளவில் பலன் ஏற்பட்டதாகக் கூறமுடியாது.

இந்தக் கடன் தள்ளுபடியால் எதிர்மறையான விளைவுகள்தான் ஏற்பட்டுள்ளன. இன்று தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. கடன் தள்ளுபடியான பின்னர் கூட்டுறவு வங்கிகளால் டெபாசிட் செய்திருந்தவர்களுக்கு முதிர்வு காலத்திற்குப் பின்னரும் வைப்புத்தொகையை திருப்பிக்கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

விவசாயிகள் இதற்கு முன் மற்ற வங்கிகளை விட, கூட்டுறவு வங்கிகளிலேயே தங்களது நகைகளை அடகுவைத்து கடன்பெற்றனர். இன்று நகைக்கடன்களுக்குக்கூட பணம் கொடுக்க முடியாமல் அவ்வங்கிகள் திணறுவதைக் காணமுடிகிறது.

நிலவள வங்கிகளை மூட அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலவள வங்கிகள் முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு மட்டும் பயனளித்து வந்த வங்கிகள். நிலவள வங்கிகள் செய்த பணியை தற்போது கூட்டுறவு வங்கிகளும், மற்ற வங்கிகளும் ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவில் விவசாயிகளுக்குக் கடன் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உண்மையாக எத்தனை வங்கிகள் விவசாயிகளுக்கு கடன்கொடுக்க முன்வருகின்றன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

குடும்பம் குடும்பமாகக் கிராமங்களை விட்டு நகரங்களைநோக்கி விவசாயிகள் இடம் பெயர்வதால் விவசாயத்தின் நிலை சில ஆண்டுகளில் என்ன ஆகுமோ என்ற பேரச்சம் ஏற்பட்டது.

ஆனால், கடந்த ஆண்டு உளுந்து விலை ஏற்றம் விவசாயிகள் நெஞ்சில் பால் வார்த்தது. 20 – 30 ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் செய்த விவசாயிகள் கூட இதுவரை எந்தப் பயிரிலும் அதிக லாபம் பார்த்ததில்லை.

இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அவர்களது மகிழ்ச்சி இந்த ஆண்டு தொடருமா என்பது கேள்விக்குறியே. காரணம் வெளிநாடுகளுக்கு உளுந்து போன்ற பயறுவகைகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள தடைதான்.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு இன்றைய முக்கியத் தேவை, போதிய அளவில் வங்கிக்கடன்தான்.

சில விவசாயிகள் வங்கிகளில் கடன் வாங்கினால் திருப்பிச்செலுத்த வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளனர் என்பது உண்மையே. இதைப்போக்க விவசாயிகளுக்கு முதலில் சிறிய தொகையைக் கடனாகக் கொடுக்கலாம். அதை முறையாகத் திருப்பிச் செலுத்தும்பட்சத்தில், அந்தத் தொகையை அதிகரித்துக்கொண்டே செல்லலாம்.

விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் போதுமான அளவு வங்கிகள் கடன் அளித்து, புதிய விஞ்ஞான முறைகளைப் புகுத்தினால் மட்டுமே, நாம் எதிர்பார்க்கும் வகையில் வேளாண்மைத் துறையில் வளர்ச்சியைக் காண முடியும்.

Posted in Agriculture, Apples, Arid, Australia, Bengal, China, Commerce, Dhal, Drought, Eat, Economy, Farmer, Farming, Flood, Food, Foodgrain, Foodgrains, GDP, Grains, Grams, Growth, GWB, Loans, Orissa, Policy, Poor, Rains, rice, Rich, Storage, Sudeshi, Sudesi, Sudheshi, Sudhesi, Suicides, Swaminathan, Tamil, Tariffs, Tax, Vidharba, Vidharbha, Vietnam, Vitharba, Vitharbha, War, WB, Wheat | Leave a Comment »

Seven more suicides in Vidharba region

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006

விதர்பா பகுதியில் 7 விவசாயிகள் தற்கொலை

நாகபுரி, அக். 28: கடன்தொல்லையால் மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியில் வியாழக்கிழமை வரை 7 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி விவசாயிகளுக்காக பாடுபடும் விதர்பா ஜன அந்தோலன் என்ற தன்னார்வ அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

  • அகோலா
  • அமராவதி,
  • யவத்மால் மாவட்டங்களில்

இருந்து தலா 2 பேரும் புல்தானா மாவட்டத்தில் இருந்து ஒருவரும் தற்கொலை செய்துகொண்டதாக கூறி, அவர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது அந்த அமைப்பு.
இதன்மூலம் கடந்த ஆண்டு ஜூன் முதல் அப்பகுதியில் 1,035 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அந்த அமைப்பு மேலும் கூறுகிறது.

Posted in Agriculture, Farmers, Irrigation, NGO, peasants, Poor, Poverty, Suicides, Vidarba, Vidharba, Vidharba Jana Andolan | Leave a Comment »

Five more added to 1000+ suicide toll in Vidharbha

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

விதர்பாவில் மேலும் 5 விவசாயிகள் தற்கொலை

நாகபுரி, அக். 25: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் விதர்பா பகுதியில் 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடன் தொல்லை, விவசாய உற்பத்தி பொருள்களுக்கு உரிய விலையின்மை, வறுமை ஆகியவற்றின் காரணமாக இப் பகுதியில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை கடந்த 2005 ஜூன் முதல் இதுவரை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை தொடங்கிய 24 மணி நேரத்தில் மேலும் 5 பேர் தற்கொலை செய்து கொண்டதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

அண்மையில் இப் பகுதிக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங், விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். இருப்பினும், அதன் பிறகும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளது. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் இப் பகுதியில் விளையும் பருத்திக்கு கூடுதல் விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை (அக்.26) தன்னார்வ அமைப்புகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.

Posted in Agriculture, Farmers, Madhya Pradesh, MP, peasants, SNEHA, Suicides, Vidharba, Vidharbha | Leave a Comment »