Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Vetrilai’ Category

Kavitha Deepan :: Vetrilai, Paakku, Thaamboolam

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006

பாரம்பரியம்: கும்பகோணம் சீவலே… சீவல்!

இ. கவிதாதீபன்

“கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்’ என்று நாட்டாமை திரைப்படத்தில் குஷ்பு சிவக்கச் சிவக்க வெற்றிலை- சீவல் போட்டு சரத்குமாருடன் ஆடும் காட்சியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

வெற்றிலையும் சீவலும் போட்டு குஷியாக இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. முதல் மணக்க மணக்க தாம்பூலம் போட்டு வாய் சிவக்க பாட்டு எழுதிவரும் கவிஞர் வாலி வரை எல்லோருமே வெற்றிலை சீவலின் ரசிகர்கள்தாம்.

அர்ச்சனைத் தட்டில் இறைவழிபாட்டுப் பொருளாகவும், ஆலய விழாக்களில் “விடையமாய்’ கொடுக்கப்படுவதாகவும், நம் வீட்டு விழாக்களுக்கு நட்பை, உறவை, ஊர் மக்களை அழைப்பதற்கு முன்வைப்பதாகவும், தடபுடலான விருந்துக்குப் பின் தாம்பூலம் தரிப்பதாகவும் இந்தத் தொன்மைக் கலாசாரம் இன்றும் தொடர்கிறது.

இன்றைய நாட்களில் இந்தப் பாக்குகள் “போதைப் பாக்குகளாக’ மாறி ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு கடைகளில் தொங்கி, நம் இளைஞர்களின் வாய்களில் தங்கி, மெல்ல மெல்ல அவர்களின் உயிரை வாங்கிவிடுவதும் உண்டு.

ஆனால் உண்மையில் மருத்துவக் குணங்கள் நிரம்பியதும், செரிமான சக்தியைத் தூண்டுவதும், சந்தோஷத்தைத் தருவதுமான கொட்டைப்பாக்கு சீவல் நம் தஞ்சை விவசாயிகளின் இடுப்பில் நீங்காத உடுப்பு. ஒவ்வொரு விவசாயி வீட்டிலும் இந்தத் தாம்பூலம் நிறையவே இருக்கும்.

உழைக்கும் விவசாயி முதல் உயர்ந்த கலைஞர்கள் வரை உற்சாகமாய்ப் பணிபுரியத் தூண்டும் “தாம்பூலத்தின் தாயான’ கொட்டைப் பாக்கு சீவலைப் பற்றி அறிய, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள “சங்கு சீவல்‘ நிறுவனத்தின் உரிமையாளர் கே. குணசேகரனிடம் கேட்டோம்…

“”எங்களுக்குச் சொந்த ஊர் புதுக்கோட்டை அருகே உள்ள கீரனூர். என்னுடைய அப்பா கிருஷ்ணமாச்சாரி சின்ன வயசிலேயே பிழைப்புக்காக கும்பகோணம் வந்துட்டாங்க. அந்தக் காலத்துல, அதாவது 1943ல அப்பா கைச் சீவலைப் பாக்கு வெட்டி மூலமா தயாரிச்சு அக்கம்பக்கம் விற்க ஆரம்பிச்சாங்க. இந்தச் சீவலுக்கு முக்கியமான மூலப்பொருள் கொட்டைப் பாக்குதாங்க!

கொட்டைப் பாக்கு மரம் பனை மர வகையைச் சேர்ந்தது. ஒல்லியாக, நல்ல உயரமாக வளர்ந்து, தலைப்பாகம் மட்டும் பச்சை நிறமாக இருக்கும். காய் பச்சையா, பழங்கள் மஞ்சளா குண்டு குண்டா அழகாயிருக்கும்.

இது வருடாந்திரப் பயிர் ரகம். விளையிற பாக்கை ரெண்டு மூணுவாட்டி பறிப்பாங்க. முதல் பறிப்பும் கடைசிப் பறிப்பும் அவ்வளவு தரமா இருக்காது. நடுப் பறிப்பை மட்டும் அறுவடை முடிச்சு காய வைச்சு காய் மேல இருக்கிற மட்டையோட பத்திரப்படுத்தி ஒரு வருசத்துக்கு மேல விவசாயிங்க இருப்பு வைப்பாங்க.

பாக்கோட அளவைப் பொறுத்து

  • மோட்டி,
  • மோரா,
  • விச்சாரஸ்,
  • சேவர்தன்,
  • ஜாம்,
  • ஜீனி,
  • ரெண்டி,
  • பூஜா

இப்படின்னு பல ரகம் இருக்கு. இதில நடுத்தரமா சின்னதா இருக்கிற பாக்குதான் இந்தச் சீவல் தொழிலுக்குப் பயன்படுது.
இந்தப் பாக்கு நம்ம தமிழ்நாட்டுல ஊட்டி, மேட்டுப்பாளையம் பக்கம் நிறைய விளையுது. கேரளம், கர்நாடகத்துல முக்கிய பணப் பயிர் இதுதான். குறிப்பா கர்நாடகத்தோட தென் பகுதியும் கேரளத்தோட கடல் பகுதியும் இணைகிற இடத்தில் வளரும் பாக்கு மரத்தில் கிடைக்கும் பாக்கு மிகத் தரமாக இருக்கும். கர்நாடகத்தில் உள்ள புத்தூள், விட்டாலா பக்கம் நல்ல தரமான பாக்கு கிடைக்குது. ஆனா விலை அதிகம். இந்தப் பக்கம் விளைகிற பாக்குக்கு இந்தியா முழுக்க நல்ல சந்தை வாய்ப்பு இருக்கு.

வெளிநாட்டுல மலேசியா, இந்தோனேசியா இங்கெல்லாம் பாக்கு விளைஞ்சாலும் நம்மூரு பாக்கைப் போல தரமா இருக்காது. அந்தமான் தீவுல வெளையுற பாக்கு பெரிசா, லேசா வாசனையோட இருக்கும். இது பெரும்பாலும் கொல்கத்தா சந்தைக்குத்தான் போகும்.

பாக்குல கொட்டைப் பாக்கு, களிப்பாக்கு, பீட்டன் பாக்கு, ஷிமோகா பாக்கு இப்படி நிறைய வகை இருக்கு. அந்தக் காலத்தில எல்லாம் பாக்கைக் கடிச்சு வெத்தலை போடுற அளவுக்கு பல்லு உறுதியா இருந்துச்சு. காலம் மாற மாற பாக்கை சீவலா கொடுக்க வேண்டியதாப் போய்டுச்சு.

எங்க அப்பாதான் முதல் முதல்ல பாக்கிலிருந்து சீவலைத் தயாரிக்கிற மிஷினைக் கண்டுபிடித்தார். இன்னிக்கு பல பேர் சீவல் தொழிற்சாலை வைக்கக் காரணமே அப்பாதான். அப்பாகிட்ட தொழில் கத்துக்கிட்ட பல பேர் இன்னிக்கு பெரிய நிறுவனமா வளர்ந்திருக்காங்க. நாங்களும் அப்பாவை பக்கத்துல வைச்சுக்கிட்டு சிறப்பா தொழில் செஞ்சுக்கிட்டு இருக்கோம். நான் வக்கீலுக்கு படிச்சிருந்தாலும் இந்தத் தொழிலை விடாம செஞ்சுக்கிட்டு வர்றேன்.

பொதுவாக வெத்தலை சீவல் போடுற பழக்கம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலா இருக்கு. நாம எல்லோரும் சாப்பிட்டுட்டு வெத்தலை சீவல் போடுவோம். ஆனா நம்ம விவசாயிகளுக்கு சாப்பாட்டை விட முக்கியமானது இந்த வெத்தலை சீவல்.

இதே சீவலை இன்றைக்குக் கொஞ்சம் நவீனமா சுத்தமான நெய் விட்டு பொன்னிறமாய் வறுத்து நெய்சீவல் என்றும், தேங்காய்ப் பூவுடன், ஏலக்காய், ஜாதிக்காய், கற்பூரம் சேர்த்து புதிய மணத்துடனும் விற்பனை செய்து வருகிறோம். இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியில் இவற்றுக்கு நல்ல வரவேற்பு உள்ளது சந்தோஷம் அளிக்குது” என்றார் குணசேகரன்.

தஞ்சை காவிரிக் கரையில் பயிராகும் இளந்தளிர் வெற்றிலையில் சிறிது சுண்ணாம்பு தடவி, குடந்தை சீவலை வைத்து மடித்து வாயிலிட்டு மென்று, நாவும் உதடும் சிவக்க ஊறும் நறுமண எச்சிலை விழுங்கினால் வருகின்ற ஏப்பம் நல்ல ஜீரணத்தின் அடையாளம்.

என்ன இருந்தாலும் வெற்றிலை சீவல் போடுவோரை பார்க்கும்போது ஒரு வசீகரம் இருக்கத்தானே செய்கிறது.

வெத்தலை பாக்கு சுண்ணாம்பு

பத்திரி ஏலம் கிராம்பு

ரெத்தம் போல சிவந்து போச்சுதே

என் ராஜாத்தி

ஒம் மேலே ஆசையாச்சுதே!

என்று கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் அந்தக் காலத்திலேயே சும்மாவா பாட்டெழுதியிருக்கார்!

Posted in Addiction, Ban, betelnut, Chew, Habit, Kumbakonam, Paakku, Seeval, Thamboolam, Thanjai Ramiah Daas, Vaali, Vethilai, Vetrilai | Leave a Comment »