Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘veterinary’ Category

RS Narayanan – Cows, Biodiversity, Organic Growth & Environment

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

அழிந்து வரும் பாரம்பரியப் பசுக்கள்

ஆர்.எஸ். நாராயணன்

நமது இயற்கை அற்புதங்களின் முக்கிய அம்சம் “பயோடைவர்சிட்டி’ என்ற பல்லுயிர்ப் பெருக்கம்.

இப் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு நமது தாவரங்கள், பறவைகள், பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் வேற்றுமைப் பண்புகள் அடிப்படை. உதாரணமாக நெல்லில் மட்டும் 5 ஆயிரம் வித்தியாசமான ரகங்கள் உண்டு. கத்தரிக்காயில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் தமிழ்நாட்டில் உண்டு.

இயற்கையின் அற்புதத்தால் நிகழ்ந்த பல்லுயிர்களின் வேற்றுமை குணங்களின் பல்லாயிரம் ஆண்டுக்காலப் பெருக்கமே நமது தேசியச் செல்வம். நவீன விவசாயத்தாலும், நவீன கால்நடை வளர்ப்பினாலும் நமது தேசியச் செல்வங்கள் “”விதைவங்கி” “”ஜீன்வங்கி” என்ற பெயரில் கொள்ளை போனது ஒரு பங்கு. அரசின் ஆதரவு இல்லாமல் அழிந்தவை பல பங்கு.

எதிர்கால வேளாண்மைக்கு வளம் சேர்க்கும் இலக்கில் நாம் இழந்துவிட்ட நெல் ரகங்களைத் தேடிப் பாதுகாத்து அதன் சாகுபடியை உயர்த்த தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நமது பாரம்பரிய நெல்லில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் பல விவசாயிகள் கிச்சலி, சீரகச்சம்பா, பெருங்கார், சம்பா, வையக்குண்டான் என்று தேடி அலைந்து பயிர் செய்யவும் ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் இதே விழிப்புணர்வு பாரம்பரியப் பசுக்களின் மீட்பில் இல்லை. “”மூர்த்தி சிறிது, ஆனால் கீர்த்தி பெரிது” என்று பெயர் பெற்ற புங்கனூர்க் குட்டை எங்கே? காங்கேயம் எங்கே? உம்பளச்சேரி எங்கே? காங்கிரஜ் எங்கே? ரதி எங்கே? சாசிவால் எங்கே? தார்ப்பார்க்கர் எங்கே? தாங்கி எங்கே? சிந்தி எங்கே? என்று கேட்பாரில்லை. இன்றுள்ள சீமைரகக் கலப்பினங்களை விடவும் அல்லது அதே அளவும் அதைவிடக் கெட்டியான பால் வழங்கும் இயல்புள்ளவை நாம் வளர்த்த பாரம்பரியப் பசுக்கள்.

இந்தியாவின் செல்வங்களை மதிப்பீடு செய்ய முகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்திலேயே ஆங்கிலேயர்கள் இங்கு வந்து நமது மேழிச் செல்வத்தைக் கண்டு வியந்தனர். நாட்டினப் பசுக்களின் பால், காளைகளின் உழைப்புத்திறன், நோயற்ற நிலை கண்டு புகழ்ந்துரைத்தனர்.

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் லிட்டில்வுட், ஓல்வர், மெக்கென்னி என்று கால்நடைத் துறையில் பணியாற்றிய பலரின் குறிப்புகள் கவனத்திற்குரியவை.

18, 19 ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்திய மாடுகள் பிரேசில், வடஅமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாயின. அன்றுதொட்டே இந்திய நாட்டு மாடுகளுக்கு அந்நாடுகளில் மிகுந்த மரியாதை உண்டு. அகராதியில் திமில் பருத்த மாட்டு இனம் என்று பொருள். இந்தியப் பசுக்களை அந்நியர்கள் இப்பெயரில் அழைப்பார்கள். சீமை இன மாடுகளுக்கு திமில் இல்லை. இந்தத் திமில் காரணமாகவே இந்திய மாடுகள் வெப்பத்தைத் தாங்கும் சக்தியுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் இருந்தது.

சீமை மாடுகளின் இயல்புப்படி அந்த நாட்டின் தட்பவெப்பம் வளர்ப்பு காரணமாக அதிக பால் தந்தாலும் வலுக்குன்றியவை. நோய் எதிர்ப்புச் சக்தி இல்லை. இறைச்சியிலும் ருசி இல்லை. இறைச்சி ருசிக்காகவும் நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் திமில் பருத்த மாடுகள் கடல் கடந்து சென்றன.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது கறவைக்காகவும் சில மாடுகளின் தூயரகம் போற்றப்பட்டு இனப்பெருக்கம் செய்யப்பட்டவற்றில் காங்கிரஜ், தார்ப்பார்க்கர், சிவப்பு சிந்தி, சாஹிவால், நெல்லூர், புங்கனூர், காங்கேயம் குறிப்பிடத்தக்கவை.

அம்ரித்மகால், ஹள்ளிகர், ஓங்கோல் காளைகளின் சக்தி குதிரை சக்தியைவிட அதிகம். இவற்றில் ஹள்ளிகர், அமரித்மகால் செல்லும் வேகத்தினால் திப்புசுல்தானுக்குப் போர் வெற்றி கிடைத்துள்ளது. ராணுவத் தளவாடங்களைச் சுமந்து செல்லும் வண்டிக்குப் பூட்டப்பட்ட இக் காளைகள் சிட்டாய்ப் பறந்து வெள்ளைக்காரர் குதிரைகளை வென்றனவாம். அம்ரித்மகால் இன காளைகளை உருவாக்கியவர்கள் உடையார் மன்னர்கள். வளர்த்தவர்கள் ஹைதர் அலியும் திப்பு சுல்தானும்.

தமிழ்நாட்டில் காங்கேய இனம் அழிந்து வருகிறது. கூடவே கொரங்காடு மேய்ச்சல் நிலமும் அழிகிறது. சில தலைமுறைகளுக்கு முன்பு பாளையங்கோட்டை ஜமீன் மன்றாடியார் வம்சத்தினர் காங்கேய மாடுகளின் இனப்பெருக்கத்தையும் கொரங்காடு மேய்ச்சல் நிலத்தையும் தொடங்கினர். காங்கேயம் பகுதி கறவைப் பசுக்களுடன் ஹள்ளிகர் – அம்ரித் மகால் கலப்பினமாக காங்கேயம் உருவானது. ஓங்கோல் கலப்பும் இருக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உம்பளச்சேரி இனப்பெருக்கத்துக்கு வேலாயுதம்புரையர் என்ற ஜமீன்தார் 435 ஏக்கர் நிலம் வழங்கி 1950-ல் கொற்கைப் பண்ணையை உருவாக்கினார். சரியான தூய உம்பளச்சேரி இனத்திலிருந்து 4 லிட்டர் பால் பெறலாம்.

இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட நல்ல கறவை இனங்களான காங்கிரஜ், நெல்லூர், தார்ப்பார்க்கர், காங்கேயம், புங்கனூர், சிந்தி ஆகியவற்றின் தூய்மை இனம் காப்பாற்றப்படாமல் ஜெர்சி – எச்.எஃப் ப்ரீசியன் சீமை இனங்கள் கொண்டு வந்து நமது நாட்டு மாடுகளுக்குக் கருஊட்டம் செய்தனர்.

சீமை மாடுகளை இந்தியாவில் வளர்க்க குளிர்சாதன அறைகள் வேண்டும். செலவு மிக்கது. நோய்மிக்கது. இப்படி உருவாக்கப்பட்ட கலப்பினத்தில் சீமை இனப் பண்புகள் மாறியதால் சராசரி பால் அளவு 5 லிட்டர்தான் தேறுகிறது. கொடி கோமாரி நோய் தொற்றுகிறது. இம் மாடுகளின் இறப்பு வீதமும் அதிகம். இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிப்பதால் வந்த வினை.

இந்திய மாடுகளில் மிகவும் குள்ள ரகத்தை அடையாளம் செய்து வளர்த்தவர் புங்கனூர் ராஜா. சித்தூர் மாவட்டத்தில் இது மதனப்பள்ளி – பாலமனூர் பகுதி என்பதால் சென்னை – வேலூர் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்க வாய்ப்புண்டு. மிகவும் குறைந்த எடையுள்ள இந்த மாட்டில் சராசரி 4 லிட்டர் பால் பெறலாம். வளர்க்கும் செலவு குறைவு.

நமது கால்நடைத்துறையினர் அந்த இனத்தைக் கண்டுபிடித்து, பெருக்கி விவசாயிகளுக்கு அளித்தால் பேருதவியாக இருக்கும் அல்லவா?

Posted in Agriculture, Animal, Animal Husbandry, Biodiversity, Bulls, Chittoor, Chittore, Chittur, Cows, Environment, Farming, milk, organic, Ox, Vet, veterinary | Leave a Comment »

Veterinary Medicine Research – Hearts of Creatures

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

ஆராய்ச்சி: லப்டப்…லவ்டப்!

ஞாயிறு

“இதயங்களோடு “விளையாடும்’ காதலர்கள்’ போல் அல்ல… “இதயங்களோடு உறவாடும்’ பேராசிரியர்கள் சாலமன் விக்டர், ஆர்.ரவீன்! இதயங்களின் காதலர்கள்! இதய ஆராய்ச்சியே இவர்களின் இதயத்துடிப்பு!

மனித இதயம் முதற்கொண்டு மீன், மான், சிறுத்தை, புலி எனச் சகல இதயங்களின் ஆராய்ச்சி! இதற்காக இவர்கள் சேகரித்தது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகளின் இதயங்கள்.

இந்தச் சேகரிப்பை 93-ஆம் ஆண்டு இருவரும் தொடங்கினர். கடந்த ஆண்டு சாலமன் விக்டர் மறைந்துபோக, தற்போது ரவீன் தொடர்கிறார்.

சேகரித்த இதயங்கள் அனைத்தையும் பெரியார் அறிவியல் மையத்திடம் ஒப்படைத்து, அங்கு நிரந்தரக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடு: சாலமன் விக்டர் மனைவியும் எயிட்ஸ் மருத்துவத்தில் இந்தியாவிலேயே முதன்மை மருத்துவருமான சுனிதி சாலமன் விக்டர்.

“”இறந்துபோன விலங்குகள் பற்றிய செய்தி கிடைத்ததும், அந்த இடத்துக்கு ஓடிப் போய் இதயங்களை வெட்டி எடுத்துக்கிட்டு வருவார். சட்டையெல்லாம் ஒரே இரத்தமும் அழுக்குமாக இருக்கும். “உங்களுக்கு இந்த வேலை தேவையா?’என்று கோபமாகக் கேட்பேன். அதற்கு, “நான் செய்கிற வேலையோட அருமை உனக்கு இப்பத் தெரியாது. ஒரு நாளு தெரியும்’ என்று சொல்லிவிட்டு இதய ஆராய்ச்சியில் இறங்கிடுவாரு. உலகத்துல யாருமே செய்யாத காரியத்தைச் செய்துகிட்டு இருந்திருக்காருன்னு இப்போது புரியுது. சேகரித்த இதயங்களை எல்லாம் அமெரிக்காவுல ஒரு பல்கலைக்கழகத்துல விலைக்குக் கேட்டாங்க. கொடுக்கல. இந்தியாவில இருக்கிற மாணவர்கள் படிக்கணும்… குறிப்பா தமிழகத்துல இருக்கிற மாணவர்கள் படிச்சிப் பயன்பெறணும்னு பெரியார் அறிவியல் மையத்திலேயே கண்காட்சியாக வைத்துவிட்டோம். இப்போது ரவீன், அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்கிறார்” என்கிறார் வருத்தத்துடன் சுனிதி சாலமன் விக்டர்.

“”கிறிஸ்துவக் கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியராக இருக்கிறேன். விலங்குகளுடைய இதயங்களைச் சேகரித்தல் மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியது சாலமன் விக்டர் சார்தான்.

93-ம் வருடம். ஒரு செத்த பாம்பை எடுத்துக்கொண்டு என்னைப் பார்க்க காலேஜுக்கு வந்தார். பாம்பினுடைய இதயம் எப்படிச் செயல்படுகிறது. இரத்தம் எப்படி சர்குலேட் ஆகிறது என்று பார்க்க வேண்டும் என்றார். அன்றுதான் எங்கள் இருவருக்குமிடையே இந்த ஆராய்ச்சி தொடர்பான நட்பு ஏற்பட்டது.

மனித இதயங்களுக்கும் பாலூட்டி வகையைச் சேர்ந்த விலங்குகளின் இதயங்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன என்பதே எங்கள் ஆராய்ச்சி.

மனித இதயங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை எல்லா நாடுகளிலும் செய்கிறார்கள். மற்ற விலங்கினங்களின் இதயம் தொடர்பான ஆராய்ச்சி செய்வோர் மிகக்குறைவு.

இந்த ஆய்வுக்காக பல்வேறு விலங்குகளின் இதயங்களைச் சேகரித்துள்ளோம். வண்டலூர் மிருகக்காட்சி சாலை அதிகாரிகளிடம் அனுமதிப் பெற்று உள்ளோம். ஏதாவது விலங்குகள் இறந்தால் அவர்கள் தகவல் கொடுப்பார்கள். நாங்கள் விரைந்து சென்று போஸ்ட்மார்ட்டம் செய்கிறபோது இதயத்தைப் பெற்றுக்கொள்வோம்.

ஒரு விலங்கு இறந்த 2 மணிநேரம் அல்லது 3 மணிநேரத்திற்குள் இதயத்தை எடுத்துப் பாதுகாக்க வேண்டும். நேரம் அதிகமாகிவிட்டால் அழுகிப் போய்விடும். கஷ்டப்பட்டு எடுத்தும் பாழ். இதுபோல பல எடுத்து வீணாகப் போயிருக்கின்றன. இப்போது முதலை, திமிங்கலம், யானை, காண்டாமிருகம், நாய், பூனை, சிறுத்தை, குதிரை, குரங்கு, மீன்கள், மான்கள் என நூறு வகைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதயங்களைச் சேகரித்துள்ளோம்.

இதயங்களை வெட்டி எடுத்ததும் ஒரு கண்ணாடிக் குடுவையில் ஃபார்மெலின்  சொலியூஷன் ஊற்றி மூடி வைத்துவிடுவோம். இப்படி வைத்துவிட்டால் நூறு ஆண்டுகள் ஆனால்கூட இதயம் கெடாமல் இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறையோ, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையோ சொலியூஷன் மாற்றி வைப்பது நல்லது.

எடுத்தவற்றிலேயே மிகவும் கஷ்டப்பட்டு எடுத்தது, சாதாரணமாகக் கிடைக்காத திமிங்கலத்தின் இதயம். கடலூர் மூர்த்திக்குப்பம் கடற்கரை பகுதியில் திமிங்கலம் இறந்துகிடப்பதாக டிவியில் செய்தி பார்த்தேன். உடனே அங்கு போனேன். திமிங்கலம் கடற்கரையில் ஒதுங்கிக் கிடந்திருந்தால் சிரமம் கொஞ்சம் குறைந்திருக்கும். தண்ணீரிலேயே கிடந்தது. தனியாக வேறு போயிருந்தேன். கரையில் எடுத்துப்போட்டுதான் இதயத்தை வெட்டி எடுக்க முடியும். ஊர் மக்களை அழைத்தேன். ஆரம்பத்தில் அவர்கள் ஒத்துழைக்க மறுத்தார்கள். இது ஆராய்ச்சிக்காக. உங்கள் பிள்ளைகள்கூட வருங்காலத்தில் படிக்கலாம் என்று சொன்னேன். ஒத்துக்கொண்டார்கள். பிறகு பெரிய வடக்கயிறு இரண்டு கொண்டு வந்தார்கள். திமிங்கலத்தை இழுத்துக் கட்டினோம். ஒரு வடத்தை 250 பேரும் இன்னொரு வடத்தை 250 பேருமாய் நின்று மூச்சு முட்ட இழுத்தோம். வடக்கயிறு முடிச்சுதான் அறுந்துபோனது. திமிங்கலம் கரையேறியபாடில்லை. தண்ணீரில் கிடப்பதால்தான் இழுக்கமுடியவில்லை என்றனர். கடற்கரையில் அலைகள் 6 மணிநேரத்துக்கொருமுறை நன்றாக பின்வாங்கிப் போவது கடலின் இயல்பு. இதற்காகக் காத்திருந்தோம். எதிர்பார்த்தபடியே அலைகள் பின்வாங்கின. திமிங்கலத்தை “ஏக் தம்’ பிடித்து கரையில் இழுத்துப் போட்டோம். விறகு வெட்டுவதுபோல கோடரி கொண்டு வெட்டினோம். இதயத்தை எடுத்து டிரம்மில் போட்டுக் கொண்டு வந்தேன். இறந்த மூன்று மணிநேரத்தில் எடுக்காவிட்டால் இதயம் அழுகிவிடும். இது தண்ணீரிலேயே கிடந்ததால் அழுகவில்லை. இதை என் அதிர்ஷ்டம் என்றுகூடச் சொல்லலாம்.

ஆராய்ச்சியில் நாங்கள் கண்ட ஒரு விசித்திரம் இது. பொதுவாக பாலூட்டிகளுக்கு சுத்தமான இரத்தம் அசுத்தமான இரத்தம் என்று உண்டு. மனிதர்களுக்கு நான்கு இதய அறைகள். அசுத்தமான இரத்தம் ஓர் இதயறையில் இருந்து நுரையீரலுக்குச் சென்று சுத்திகரிக்கப்பட்டு வேறோர் அறையில் சுத்தமான இரத்தமாகச் செல்லும். அசுத்த இரத்தமும் சுத்த இரத்தமும் ஒரே அறையில் சந்திக்காது.

ஆனால் மீன்களுக்கு விசித்திரமாய் இரண்டு இரத்தமும் ஒரே அறையில் சந்திக்கிறது. மீன்களுக்கு இதயத்தில் இரண்டு அறைகள். இதில் இரண்டிலும் அசுத்த இரத்தமும் ஓடுகிறது சுத்த இரத்தமும் ஓடுகிறது. மீன்களின் இரத்தத்தைச் செதில்கள்தான் சுத்திகரித்து உடலின் பல பாகங்களுக்கு அனுப்புகின்றன.

மீன்களைப் போலத்தான் தவளை, பாம்பு, ஆமை, முதலை போன்றவையும். ஆனால் கொஞ்சம் மாறுதல் உடையவை. முதலைக்கு நான்கு அறைகள். மற்றவைக்கு மூன்று அறைகள்.

இதைப் போல பல விசித்திரங்கள் எங்களுடைய ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கின்றன. தொடர்ந்து செய்தால் இன்னும் பல உண்மைகள் புரியவரும். எல்லா விலங்குகளையும் விட சிறுத்தைகள் வேகமாக ஓடுகின்றன. நீர் வாழ்வன நிலத்தில் வாழ்வன என இருக்கின்றன. குரங்குகள் பெரும்பாலும் மரத்திலேயே இருக்கின்றன. இப்படி அவைகளுடைய இயல்பு அமைவதற்கும் இதயத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தெல்லாம் ஆராய்கிறோம்.

மனிதர்களைப் போல எல்லாவகையான பாலூட்டிகளுக்கும் இதய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காட்டில் வாழ்கிற பாலூட்டிகளைவிட வீட்டில் வாழ்கிற பாலூட்டிகளுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இறந்தவர்களை நினைத்து அழுகிறபோது நாம் மாரடித்து அழுவதுபோலெல்லாம் விலங்குகள் அழுவாது. முகப்பாவனைகள் மூலமே அவை தங்கள் அன்பை, வருத்தத்தை வெளிப்படுத்திக்கொள்ளும்” என்கிறார் ரவீன்.

“”இதயமே இல்லாத உயிரினங்கள் இருக்கிறதா?” என்றால் “”வண்ணத்துப்பூச்சி போன்ற பூச்சினங்களுக்கு இதயங்கள் இல்லை” என்கிறார் ரவீன். “ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…’ என டூயட் பாடும் காதலர்களே கவனியுங்கள்!

Posted in Animals, Dr Suniti Solomon, heart surgery, Hearts, hearts of creatures, Madras Medical College, Mammals, Medicine, Microbiology, MMC, Museum, Pathology department, Raveen, Solomon Victor, Sunithy Solomon Victor, surgery, Vandaloor, Vandalur, veterinary | Leave a Comment »