‘நிலைமை சீராகும் வரை எத்தியோப்பியப் படையினர் சோமாலியாவில் தங்கியிருப்பார்கள்’
சோமாலியாவில் இருந்த இஸ்லாமியப் படைகளை விரட்டியடித்துள்ள எத்தியோப்பியப் படையினர் நிலைமை சீராகும் வரை அங்கேயே இருப்பார்கள் என்று சோமாலியாவின் இடைக்கால அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நிலைமை சீராக பல மாதங்களாகலாம் என்று சோமாலியாவின் பிரதமர் அலி முகமது கெடி பிபிசியிடம் தெரிவித்தார்.
சோமாலியாவின் எத்யோப்பிய படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் நோக்கம் பெருமளவில் நிறைவேறிவிட்டதாகவும் தமது படையினர், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நாடு திரும்புவார்கள் என்றும் எத்யோப்பிய பிரதமர் மீலீஸ் ஜெனிவாய் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய நீதிமன்றங்களின் கூட்டமைப்பின், முக்கிய தலைவர்கள், படையினர் சூழ குறைந்தது 60 வாகனங்களில் தெற்கு சோமாலியாவில் உள்ள துறைமுகர் நகரான கிஸ்மாயோ நகருக்கு, வட மேற்குகில் உள்ள ஒரு நகர் வழியாக சென்றாதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். கிஸ்மயோ பகுதி அரசப் படைகளால் திங்கட்கிழமையன்று கைப்பற்றப்பட்டது.
சோமாலியாவுடனான எல்லையை கென்யா மூடுவது குறித்து ஐ.நா கவலை
![]() |
![]() |
அச்சத்தில் சோமாலிய மக்கள் |
சோமாலியாவின் இடைக்கால அரசின் வேண்டுகோளுக்கு ஏற்ப, சோமாலியாவுடனான தனது எல்லையை கென்ய அதிகாரிகள் மூட முயற்சி மேற்கொண்டுள்ளது குறித்து சோமாலியாவுக்கான ஐக்கிய நாடுகளின் மனித உதவி ஒருங்கிணைப்பாளர் கவலை தெரிவித்துள்ளார்.
பி பி சியிடம் கருத்து வெளியிட்ட சோமாலியாவுக்கான ஐ நாவின் மனித உதவி ஒருங்கிணைப்பாளர் எரிக் லா ரவுச், எல்லையைக் கடக்கும் மக்களின் எண்ணிக்கை சமீப நாட்களில் மிகவும் சொற்பமாக குறைந்துவிட்டது என்று கூறினார்.
அதே சமயத்தில் மக்களுடைய பிரச்சனைகள் முன்பு கணிக்கப்பட்டதைப் போல் மிகவும் மோசமாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சோமாலியாவில் இருந்து எத்தியோப்பியத் துருப்புகள் வெளியேறுகின்றன
![]() |
![]() |
எத்தியோப்பிய துருப்புக்கள் |
சோமாலியாவில் உள்ள எத்தியோப்பியத் துருப்புகள் இன்னும் சில தினங்களில் அங்கிருந்து வெளியேறத் தொடங்குவார்கள் என்று எத்தியோப்பியப் பிரதமர் மெலெஸ் ஷெனாவி கூறியுள்ளார்.
ஒரு கட்ட வெளியேறலுக்கான இறுதி ஏற்பாடுகள் தற்போது செய்யப்படுவதாக, பிபிசிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் பிரதமர் மெலஸ் கூறியுள்ளார்.
சோமாலிய இடைக்கால அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் கடந்த டிசம்பரில் சோமாலியாவுக்கு எத்தியோப்பியப் படைகள் சென்றன.
ஆறு மாதங்களுக்கு முன்னர் சோமாலியாவின் தலைநகர் மொகடிசுவைக் கைப்பற்றியிருந்த இஸ்லாமியக் குழுக்களின் கூட்டமைப்பு, எத்தியோப்பியப் படைகளின் முன்னேற்றத்தை அடுத்து அங்கிருந்து வெளியேறியது.
மிதவாத இஸ்லாமியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு சோமாலிய அரசிடம் அமெரிக்கா வலியுறுத்தல்
![]() |
![]() |
சோமாலிய இடைக்கால அரசின் அதிபர் அப்துலாய் யூசப் |
சோமாலியாவில் இஸ்லாமிய நீதிமன்றங்கள் ஒருங்கிணைப்பின் மிதவாதிகளோடு பேச்சுவார்த்தை நடத்துமாறு சோமாலிய இடைக்கால அரசாங்கத்தை, கென்யாவுக்கான அமெரிக்கத் தூதுவர் மைக்கேல் ரன்னெபெர்கர் வலியுறுத்தியுள்ளார்.
சோமாலியாவில் வலுவாக இருந்த மத்திய மற்றும் தெற்கு பகுதியில் இருந்து கடந்த மாதம் இவர்கள் விரட்டப்பட்டனர்.
இஸ்லாமிய மிதவாதிகள் நல்ல எண்ணம் கொண்டவர்கள் என்று குறிப்பிட்ட அவர், சோமாலியாவின் எதிர்காலத்தில் அவர்களுக்கு பங்கு இருக்க வேண்டும் என்று கூறினார்.
எத்தியோப்பிய படைகளின் உதவியோடு தலைநகர் மொகடிஷுவினை அரச படைகள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்து கொண்ட பின்னர் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.
சனிக்கிழமையன்று எத்தியோப்பிய வாகன தொடரணியோடு தொடர்புடைய மோதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
சோமாலிய முக்கிய கிளர்ச்சிக்காரர் ஒருவர் சரண்
![]() |
![]() |
சரணடைந்தவர் |
ஆப்ரிக்காவின் சோமாலியா நாட்டில் இருந்த இஸ்லாமிய நீதிமன்றங்களின் கூட்டமைப்பின் ஆட்சியை, இடைக்கால அரசு ஆதரவுப் படைகள் நீக்கியதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய மூத்த சோமாலிய இஸ்லாமிய பிரமுகர் ஒருவர் தானாகவே கென்ய நாட்டு அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளதாக கென்யாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய நீதிமன்றங்களின் செயற்குழு கவுன்சிலின் தலைவராக இருந்த இந்த ஷேக் ஷரீஃப் ஷேக் அஹ்மத் என்பவர் கென்ய எல்லைப்புற நகரான வாஜிரில் பொலிஸாரிடம் சரணைடைந்ததற்குப் பிறகு இவர் கென்யாவின் தலைநகர் நைரோபிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
சரணடைந்த இந்த நபரை என்ன செய்யலாம் என்பது குறித்து அமெரிக்காவுடன் கென்ய அரசாங்கம் விவாதித்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
சோமாலியாவில் அமைதிகாக்கும் படைக்கான துருப்புக்களை இரட்டிக்க கோரிக்கை
![]() |
![]() |
ஆப்ரிக்க ஒன்றியப் படையினர் |
சோமாலியாவில் அமைதி காக்கும் பணிக்காக ஆப்ரிக்க நாடுகள் அளிக்க முன்வந்துள்ள 8000 துருப்புக்களை இரட்டிப்பாக்கக் கோரி ஒரு அவசர வேண்டுகோளை ஆப்ரிக்க ஒன்றியத் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.
எத்தியோப்பிய நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் நடைபெறும் ஆப்ரிக்க ஒன்றியக் கூட்டத்தின் நிறைவு நாளில் இதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
சோமாலியாவில் கடந்த மாதம் இஸ்லாமியப் படைகளை விரட்டியடித்த எத்தியோப்பியப் படைகளுக்குப் பதில் அங்கு அமைதிகாக்கும் படைகள் விரைவாக பொறுப்பேற்காவிட்டால், அங்கு பெரும் குழப்பம் ஏற்படும் என்று தமது பதவிக்காலம் முடிந்த பிறகு ஆப்ரிக்க ஒன்றியத்தில் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் மாலி நாட்டைச் சேர்ந்த அல்பா ஓமர் கொனரே எச்சரித்துள்ளார்.
ஆப்ரிக்க ஒன்றியத்தின் இந்த உச்சி மாநாட்டில் பங்கு பெறும் ஐ நா வின் புதிய பொதுச் செயலர் பான் கீ மூன் ஆப்ரிக்காவில், மாறி வரும் தட்ப வெப்ப நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
BBC March 1, 2007
சோமாலியாவிற்கு உகாண்டாவின் படைகள்
![]() |
![]() |
சோமாலிய வரைப்படம் |
சோமாலியாவில் ஆப்ரிக்க ஒன்றிய அமைதிப் படைகளின் ஒரு பகுதியாக செல்லும் உகாண்டா நாட்டின் முக்கிய படையணி ஒன்றை அந்த நாட்டின் அதிபர் யொவேரி முசேவினி வழியனுப்பி வைத்துள்ளார்.
இவ்வாறு செல்லும் 1700 பேரைக் கொண்ட தமது நாட்டின் படையணி சோமாலிய அரசுக்கு உதவி செய்வதற்காக செல்கின்ற போதிலும், அங்குள்ள சோமாலிய ஆயுதக் குழுவினரின் ஆயுதங்களை களையும் முயற்சியில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள் என தென்கிழக்கு உகாண்டாவில் நடைபெற்ற இந்த வழியனுப்பும் நிகழ்ச்சியின் போது அதிபர் முசேவினி கூறினார்.
இதற்கு முன்னர் 30 பேர் கொண்ட ஒரு முன் பயணக் குழு ஏற்கெனவே சோமாலிய நகரான பைடோவாவை அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டின் பின் பகுதியில் சோமாலியாவில் இருந்து இஸ்லாமியப் படைகளை விரட்டியடித்து அங்கு தங்கியிருந்த எத்தியோப்பிய படையினருக்கு மாற்றாக இந்த அமைதி காக்கும் படை அங்கு செல்கிறது.
March 21
சோமாலியத் தலைநகர் மொகடிசுவில் மோதல்கள்
சோமாலியாவில் இன்று காலை எத்தியோப்பியப் படைகளின் ஆதரவுடனான இடைக்கால அரசாங்கப் படைகளுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றன.
அதனை அடுத்து, அங்கு தலைநகர் மொகடிசுவில் நடக்கும் இந்த மோதல்கள், நகரின் பல பாகங்களுக்கும் பரவியுள்ளன.
வடகிழக்கு புறநகர்ப் பகுதிகளிலும் மற்றும் ஹவியே இனக்குழுவினரின் பலமிக்க இடங்களிலும் கடுமையான கனரக ஆயுதங்களின் சூட்டுச் சத்தத்தையும் கேட்கக்கூடியதாக இருந்ததாக நகரில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார்.
இந்த ஹவியே இனக்குழுவினர், சோமாலியாவில் எத்தியோப்பியப் படைகளின் பிரசன்னத்தை எதிர்த்து வருகிறார்கள்.
இந்தச் சண்டை தொடர்பாக இஸ்லாமியவாதிகள் மீது இடைக்கால அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.
குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆத்திரமடைந்த கூட்டத்தினர் சிப்பாய்களின் சடலங்களை இழுத்துச் சென்று அவற்றுக்கு தீ மூட்டுவதை காட்டும் படங்களைச் சோமலிய இணையத் தளங்கள் பிரசுரித்துள்ளன.
March 22சோமாலியத் தலைநகர் மொகடிஷுவில் தொடரும் மோதல்கள்
![]() |
![]() |
சோமாலிய அரச படைகள் |
சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் மோதல் நடந்துள்ளது.
கிளர்ச்சியாளர்களுக்கும், எதியோப்பிய படைகளின் ஆதரவு பெற்ற இடைக்கால அரசின் படைகளுக்கும் இடையே நடந்த இந்த மோதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் , ஆறு பேர் காயமடைந்தனர். மொகடிஷுவுக்குத் தெற்கே இருக்கும் எதியோப்பிய படைகளுக்கு வழங்குபொருட்கள் எடுத்துச்செல்லப்படும் சாலையைத் துண்டிக்க கிளர்ச்சியாளர்கள் முயன்றதை அடுத்தும், வட மொகடிஷுவில் ஒரு கால்நடை சந்தைக்கு அருகே இருக்கும் அரசாங்க படைகளை தாக்கியதை அடுத்தும் இந்த மோதல் வெடித்தது.
சாதாரண மக்கள் இந்த சண்டை நடக்கும் பகுதிகளிலிருந்து வெளியே தப்பியோடிக்கொண்டிருக்கிறார்கள்.
கோபாவேசமுற்ற கும்பல் ஒன்று தெருக்களில் , இழுத்துச்சென்றதாக புதன்கிழமையன்று தொலைக்காட்சியில் காட்டப்பட்ட போராளிகளின் உடல்கள், எதியோப்பிய படையினர்களது உடல்கள் என்று வரும் செய்திகளை எதியோப்பியா மறுத்துள்ளது.
சோமாலிய மோதலில் எத்தியோப்பிய ஹெலிகாப்டர்கள்
![]() |
![]() |
சோமாலியத் தலைநகரின் தெருக்களில் சோமலியச் சிபாய்கள் |
சோமாலியாவின் தலைநகர் மோஹதிஷுவில் நடைபெற்று வரும் கடுமையான மோதல்களில், அங்குள்ள இடைக்கால அரசை ஆதரிக்கும் எத்தியோப்பியாவின் ஹெலிகாப்டர்களும் பங்கு பெற்றுள்ளன.
அங்குள்ள அரசுக்கும் ஹவ்யே இனத் தலைவர்களுக்கும் இடையே ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு வெடித்துள்ள இந்த வன்முறைகளில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளார்கள், பலர் காயமடைந்துள்ளார்கள்.
தலைநகர் மோஹாதிஷுவின் தெற்கே, ஹவ்யே இனத்தின் ஆயுததாரிகள் இருக்கும் பகுதிகளைச் சுற்றியுள்ள ஐந்து முக்கிய இடங்களை கைப்பற்றும் விதமாக இன்று அதிகாலை இந்தத் தாக்குதல்கள் தொடங்கின.
இந்தத் தாக்குதல்களில் எத்தியோப்பிய யுத்த டாங்கிகள், துருப்புக்கள் ஹெலிகாப்டர்கள் ஆகியவை சண்டையில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்தத் தாக்குதலை எதிர்த்து, பலத்த எறிகணை வீச்சுக்களைக் மேற்கொண்டு அந்த இனத்தின் ஆயுததாரிகள் மறுதாக்குதலை நடத்தினர்.
அண்மைக் காலத்தின் அங்கு அதிகரித்த வன்முறைகளைகளின் போது ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.