Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Unicode’ Category

Reading e-books in Cell phone – Mobile Technology for Tamil

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

இது புதுசு: செல்போனில் கலந்த “செம்புலப் பெயல்நீர்’!

அருவி

“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங் கலந்தனவே’

-“குறுந்தொகை’ பாடலான இதில் வரும் “செம்புலப் பெயல்நீர்’ என்கிற உவமைநீர் தரும் ஈரம் மட்டும் இன்னும் காய்ந்தபாடில்லை. வற்றாத ஜீவநதியாய் ஊற்றெடுத்து பலவற்றோடு கலந்து ஓடிக்கொண்டே இருக்கிறது.

இலக்கியவாதிகளின் இதயங்களோடு கலந்து, கட்டுரை, கவிதை எனப் பலவற்றிலும் ஓடி, இப்போது கலந்திருப்பது செல்போனில்!

சங்கப் பாடல்களைப் படித்துப் புரிந்தவர்கள் பலாச்சுளையைச் சுவைத்ததுபோல மகிழ, புரியாதவர்கள் ஊமத்தங்காயைச் சாப்பிட்டதுபோல வருந்தி நிற்பதுதானே இன்றைய நிலை?

இது சற்று பெரிய அரிய விஷயம்தான். ஆனால் ஒன்றும் புரியாத விஷயமில்லை. செல்போனிலும் புத்தகங்கள் படிக்கிற வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது “மொபைல்வேதா’ நிறுவனம். கோயமுத்தூர் உடுமலைபேட்டையைச் சேர்ந்த கே.ஆர்.கணேஷ்ராம்தான் இதன் நிறுவனர். முதலில் சங்கப் பாடல்களை எல்லாம் தொகுத்து புத்தகமாகக் கொடுத்து இருக்கிறார்கள். போகப் போக வாரஇதழ், மாத இதழ், நாளிதழ், நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் என எல்லாப் புத்தகங்களையும் வெளிக்கொண்டு வரவும் இருக்கிறார்கள்.

இதைப்பற்றி முழுவிவரத்தையும் சொல்கிறார் கணேஷ்ராம்:

“பி.காம் படித்திருக்கிறேன். முதலில் கோவை பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்புகளை மட்டும் தெரிவிக்கும் வெப்சைட் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் வேலைவாய்ப்பு வெப்சைட்டைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்திவிட்டேன். இந்தத் தருணத்தில்தான் வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் புதுமை தொழில்நுட்ப ஆய்வுகளைக் கண்டறியும் முகாம் ஒன்றை நடத்தியது. இருநூறுக்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்துகொண்டோம். இதில் பதினைந்து பேரின் ஆய்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. வெப்2.0 மற்றும் செல்போன் தொடர்பாக நான் செய்த ஆய்வும் தேர்ந்தெடுக்கப்பட்டது. வெப்சைட்டில் வெப்1.0-தான் இப்போது இருக்கிறது. இதற்கு மாற்றாக வெப்2.0-வெர்ஷனை அமைப்பது குறித்து ஆய்வு செய்திருந்தேன்.

இதனையடுத்து வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் அடைகாப்பு மையம் சார்பில் நாலு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் எங்களுக்கு லோனாகக் கொடுக்கப்பட்டது. இதைக் கொண்டு “மொபைல்வேதா’ நிறுவனத்தைத் தொடங்கினேன். பல்கலைக்கழக வளாகத்திலேயே இது இயங்கி வருகிறது. மொபைல் மதிப்பு கூட்டு சேவைத் துறையில் (value added services) புதிய தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்வதுதான் இந்நிறுவனத்தின் பணி. முதல் பணியாகத்தான் செல்போன் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். இந்தச் சிந்தனை முழுக்க முழுக்க எங்களுடையது என்று சொல்ல முடியாது. செல்போன் புத்தகங்கள் ஜப்பான், சீனாவில் அமோக வரவேற்புப் பெற்று, புத்தகங்கள் நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றில் வந்த செய்தியைப் படித்துப் பார்த்துவிட்டு நான் முயற்சித்தேன். முடிந்தது.

பெரியார் இயக்கத்தைப் பற்றிய ஆங்கிலப் புத்தகத்தைத்தான் முதலில் செல்போனில் வெளியிட்டோம். இதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதனையடுத்து “பெரியாரின் வாழ்க்கை வரலாறு’ என்ற தமிழ்ப் புத்தகத்தை வெளியிட்டோம். இதற்கும் கிடைத்த வரவேற்பையடுத்துதான் சங்க இலக்கியங்களை செல்போன் புத்தகங்களாக மாற்றித் தருகிறோம்.

குறுந்தகவல் சேவை போன்றுதான் இதுவும் என இதனைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. 165 வார்த்தைகள்தான் குறுந்தகவல் சேவையில் இருக்கும். ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகங்களையும் இதில் கொண்டு வரமுடியும்.

செல்போனில் புத்தகங்களை வடிப்பதற்காக புதிய சாஃப்ட்வேர் எதையும் நாங்கள் கொண்டு வரவில்லை. ஏற்கனவே இருக்கக்கூடிய ஜாவா தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் புத்தகமாக்குகிறோம். செல்போனில் கேம்ஸ் அமைப்பதற்கு இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

சாதாரணமாக நாம் படிக்கிற புத்தகங்களுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அட்டை, அழகான படங்கள் என அனைத்து அம்சங்களும் இருக்கும்.

சங்க இலக்கியத்தை முதலில் நாங்கள் கொண்டு வருவதற்கு முக்கியக் காரணம் பழந்தமிழரின் வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இரண்டாவது, ராயல்டி இல்லாமல் வெளியிடக்கூடிய ஒன்றாக இருப்பதும் ஒரு காரணம். தற்போது சங்க இலக்கியப் பாடல்களுக்குப் பொழிப்புரை தருவதற்கும் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் புத்தகங்களைப் பெறுவது சிரமமான காரியம் ஒன்றுமில்லை. இதற்காகவே www.thinnai.info ் என்ற வலைத்தளத்தை உருவாக்கி இருக்கிறோம். இன்டர்நெட் வசதியுடன் கூடிய செல்போன் வைத்திருப்பவர்கள் அப்படியே செல்லிலேயே இன்டர்நெட் ஓப்பன் செய்து எங்கள் வலைத்தளத்திலிருந்து நேரடியாகவே டவுன்லோடு செய்துகொள்ளலாம். இன்டர்நெட் வசதி இல்லாமல் ப்ளூ டூத், இன்ஃபராரெட், டேட்டாகேபிள் வசதி உள்ளவர்கள் கணிப்பொறியில் எங்கள் வலைத்தளத்திற்குள் நுழைந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இதற்கு நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இலவசமாகவே இதை வழங்கி வருகிறோம். இந்தச் செல்போன் தமிழ்ப் புத்தக வெளியீட்டை கடந்த 22-ந்தேதிதான் தொடங்கினோம். அதற்குள் 250-க்கும் மேற்பட்டோர் சங்க இலக்கியப் புத்தகத்தை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.

இதன் அடுத்தகட்டமாக நாவல், சிறுகதை தொகுப்புகள், கட்டுரை புத்தகங்கள் என எல்லாவகையான புத்தகங்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இதைப்போல பரபரப்பாக விற்கும் வார இதழ், மாத இதழ், நாளிதழ்களையும் கொண்டு வர இருக்கிறோம். இது தொடர்பாக எல்லாப் பத்திரிகை நிறுவனங்களோடும் எழுத்தாளர்களோடும் பேச இருக்கிறோம். இதை இலவசமாக வழங்க முடியாது.

ஓர் உதாரணத்துக்கு “ஹிந்து’ ஆங்கில நாளிதழை அவர்கள் அனுமதியுடன் வெளியிடுகிறோம் என்றால், அதற்கான கட்டணத்தை செல்போன் ரீடர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள திட்டம் வைத்திருக்கிறோம். ஒரு சினிமாப் பாடலை ரிங்டோனாக வைத்துக்கொண்டால் செல்போன் ஆபரேட்டார் அதற்காகும் கட்டணத்தைப் பிடித்துக் கொள்வதுபோல நாளிதழுக்காகும் கட்டணத்தையும் ஆபரேட்டார்களையே பிடித்துக்கொள்ள சொல்லலாம். வார இதழ்கள், மாத இதழ்கள், பெரிய எழுத்தாளர்களின் நாவல் என எல்லாப் புத்தகங்களையும் இந்த முறையில் வெளியிடுவது பற்றி யோசித்து வருகிறோம். எழுத்தாளர்களுக்கு முழுப் பணமும் கிடைக்கும். செல்போன் வழியாக சிற்றிதழ்கள் நடத்த விரும்புகிறவர்களும் நடத்தலாம்.

கம்ப்யூட்டரிலேயே படித்தால் கண் கெட்டுப் போய்விடும் என்ற கவலையும் இல்லாதளவு செல்போனிலேயே “கூல் டெக்ஸ்ட்’ தொழில்நுட்பமெல்லாம் வந்திருக்கிறது. இதனால் கண் கெட்டுப் போகாததுடன், செல்போன் புத்தகமும் தெளிவாகத் தெரியும்” என்கிறார் கணேஷ்ராம்.

செல்போன் புத்தகம் பற்றி பேசியபோது ஒரு கல்லூரி மாணவி சொன்னாள்:

“”ஐ… பரீட்சைக்குப் புத்தகத்தையே செல்போனில் கொண்டு போயிடலாமே”

“”என்ன கொடுமை சார் இது”

Posted in Author, Books, Cellphone, Display, Fonts, iPhone, Magazines, Magz, Mobile, Newpapers, News, Reader, service, SMS, SOA, Software, Tamil, Technology, Tools, Unicode, Utility, Zines | 1 Comment »

Standardizing Tamil fonts – Mu Ananthakrishnan leads the effort

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006

தமிழ் எழுத்துருவைத் தரப்படுத்த ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் பணிக்குழு

சென்னை, நவ. 14: தமிழ் எழுத்துருவைத் தரப்படுத்துவதற்காக ஒரு பணிக்குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன (எம்.ஐ.டி.எஸ்.) தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான இக்குழுவின் துணைத் தலைவராக எஸ்.ஆர்.எம். பல்கலை. இயக்குநர் மு.பொன்னவைக்கோ உள்ளார்.

இதில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் விவரம்:

  • ம. இராஜேந்திரன் (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை),
  • என்.பாலகிருஷ்ணன் (இணை இயக்குநர், இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூர்),
  • ஏ.மோகன் (இணை இயக்குநர், தேசிய தகவல் தொழில்நுட்ப மையம், சென்னை),
  • விஞ்ஞானி சுவரண் லதா (மத்திய தகவல்தொடர்புத் துறை),
  • எஸ். ராமகிருஷ்ணன் (செயல் இயக்குநர், சி.டி.ஏ.சி., புனே),
  • எம்.என். கூப்பர் (மாடுலர் இன்ஃபோடெக், புனே),
  • பி.செல்லப்பன்,
  • மா. ஆண்டோ பீட்டர் (இருவரும் கணித்தமிழ்ச் சங்கம்),
  • வி.கிருஷ்ணமூர்த்தி (கிரெசன்ட் பொறியியல் கல்லூரி),
  • என்.அன்பரசன் (ஆப்பிள்சாஃப்ட், பெங்களூர்).

இவர்களுடன், வெளிநாட்டில் வசிக்கும்

  • மணி. மணிவண்ணன் (கலிபோர்னியா, யு.எஸ்.),
  • கே.கல்யாணசுந்தரம் (சுவிட்சர்லாந்து),
  • கலைமணி (சிங்கப்பூர்) ஆகிய வெளிநாட்டவரும் இடம்பெற்றுள்ளனர்.

கணிப்பொறியில் தமிழ் எழுத்துகளை இடம்பெறச் செய்ய “8 பிட்’ எனப்படும் இட அளவு ஒதுக்கப்பட்டுள்ளது. மாறாக, “16 பிட்’ இட அளவை ஒதுக்கவேண்டும் என்று தமிழ் அறிஞர்களும் விஞ்ஞானிகளும் கருதுகின்றனர். தற்போது ஆங்கில எழுத்துகள் அவ்வாறு உள்ளன. இந்த விரிவாக்க முறை தமிழுக்கும் செயல்படுத்தப்பட்டால், கணினியில் தமிழை வெகு விரைவாகப் பயன்படுத்த இயலும்.

இது தொடர்பான கருத்தரங்கு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அண்ணா பலைகலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இப்பணியை மேற்கொள்ள ஆனந்தகிருஷ்ணன் குழு அமைக்கப்பட்டது.

இத்தகவலை தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குநர் ப.அர. நக்கீரன் தெரிவித்தார்.

Posted in Ananthakrishnan, Applesoft, CDAC, Crescent Engg, IISc, K Kalyanasundaram, Kalaimani, Mani M Manivannan, MIDS, Modular Infotech, TAB, TAM, Tamil fonts, Tamil Software, TSCII, Tune, Type, Typing Help, Unicode | 1 Comment »

G Murugan – Tamil Software, Fonts, OS & Future Steps

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006

தமிழ் மென்பொருள்: தேவை உறுதியான நடவடிக்கை

ஜீ.முருகன்

எல்லாத் துறைகளும் கணினி மயமாகிக் கொண்டிருக்கிற இன்றைய சூழ்நிலையிலும் தமிழ் மென்பொருள் குறித்துத் தெளிவான முடிவுகள் எட்டப்படாதது பெரும் பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் இதனால் காலவிரயமும் பணவிரயமும் ஏற்படுகின்றன. கோப்புப் பரிமாற்றங்களில் குழப்பங்கள் நிலவுகின்றன.

எல்லா அரசு அலுவலகங்களும் ஒரே மென்பொருளைப் பயன்படுத்தினால் இப்படிப்பட்ட குழப்பங்கள் ஏற்படாது. ஆனால் அரசு இதுவரை இந்த விஷயத்தில் உறுதியான முடிவுகள் எதையும் எடுக்காதது வியப்பாக உள்ளது.

10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தமிழ் மென்பொருள்கள் இன்று புழக்கத்தில் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களுகென்று தனிவகையான எழுத்துருக்களையும் (Fonts) உருவாக்கி வைத்திருக்கின்றன. ஒன்றை ஒன்று பதிலீடு செய்ய முடியாத வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. Old Typewriter, New Typewriter, Phonetic, Translitration, Tamil 99 என 5 வகையான தட்டச்சு முறைகள் பயன்பாட்டில் உள்ளன.

தமிழ் மென்பொருள் ஆர்வலர்களும் அரசும் பல மாநாடுகளை நடத்தி சில முடிவுகள் எட்டப்பட்டிருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதில் பொதுத்தன்மை இன்னும் உருவாகவில்லை. TAM, TAB வகை எழுத்துருக்கள் இந்த முயற்சியில் உருவானவைதான்.

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள “தமிழ் மென்பொருள் கருவிகள்’ என்ற இலவச சிடியில் இதற்கான முயற்சி தெரிந்தாலும் தெளிவான அணுகுமுறை இதில் பின்பற்றப்படவில்லை. சில நிறுவனங்கள் கொடுத்த மென்பொருள்கள் கலவையாகச் சேர்த்து நிரப்பப்பட்டுள்ளன, அவ்வளவுதான்.

  • இந்தத் துறையில் சிறந்த நிபுணர்களை வைத்து அதை எளிமையாக ஒழுங்குபடுத்தியிருக்கலாம்.
  • தரமான சில எழுத்துருக்களை மட்டும் தேர்ந்தெடுத்து எல்லா அரசு அலுவலகங்களும் இவற்றையே பயன்படுத்தவேண்டும் என்று கட்டாயமாக்கியிருக்கலாம்.

இந்த முயற்சிகளை எடுக்காததால் அது வெளியிடப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறாமலேயே போய்விட்டது.
இணையதளங்களில் தமிழைப் பயன்படுத்தும் முயற்சிகள் இதுபோன்றே இன்னும் குழப்ப நிலையில் உள்ளன. சமீபத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எல்லா பல்கலைக்கழகங்களையும் இணையதளத்தில் இணைக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் இதை எப்படி நிறைவேற்றுவது?

“கன்வர்ட்டர்’ என்ற முறை இப்போது இந்தப் பிரச்சினைகளை தீர்த்து வைத்தாலும் இது தலையைச் சுற்றி காதைத் தொடுவதற்கு ஒப்பானதே. காலவிரயத்திற்கே இட்டுச்செல்லக்கூடியவை. மேலும் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இப்போது அரசாங்க அலுவலகங்களில் ஒரு நிறுவனத்தின் எழுத்துருவை மட்டும் பயன்படுத்தும் முறை வழக்கத்தில் உள்ளது. இதற்காக ஒவ்வோர் அலுவலகமும் அந்த நிறுவனத்திடம் சில ஆயிரங்களைக் கொடுத்து அந்த மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன. அரசாங்கமே இலவசமாக இப்படிப்பட்ட மென்பொருளை உருவாக்கித் தந்தால் இப்பிரச்சினையை தீர்த்துவிட முடியும். ஆங்கில எழுத்துருக்கள் இலவசமாகக் கிடைக்கும்போது தமிழ் எழுத்துருக்களை மட்டும் ஏன் விலைகொடுத்து மக்கள் வாங்கவேண்டும்? அதிலும் அரசாங்க அலுவலகங்கள்!

Windows, linux, Unix போன்ற ஆப்ரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கக்கூடிய வகையில் ஒரு மென்பொருளை அரசாங்கமே தயாரித்து ஏன் இலவசமாகவே தரக்கூடாது? அதை எல்லா அரசாங்க அலுவலகங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்று ஏன் ஆணை பிறபிக்கக்கூடாது?

சமீபத்தில் நடந்த ஒரு மாநாட்டில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இன்றைய கணினி யுகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் 16 bit தமிழ் மென்பொருள் ஒன்றை உருவாக்கும் முயற்சி நடப்பதாக அறிவித்திருக்கிறார். அதைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரும்போது அது பெரும்பாலான மக்களுக்குப் போய்சேரும்படியும், அரசு அலுவலகங்களில் கோப்புப் பரிமாற்றங்களை எளிதாக்கும்படியும் பார்த்துக்கொள்வது நல்லது.

Posted in Dayanidhi maran, Dinamani, Fonts, G Murugan, Software, TAB, TAM, Tamil, Tamil Help, Tech, Technology, Transliteration, Translitration, TSCII, Tune, Typing, Unicode, Word Processors | 3 Comments »