இலங்கை வடமாவட்டங்களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் – ததேகூ புதிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்
இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினராக இருந்த ஈழவேந்தன் அவர்கள் பதவி இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு யாழ்பாண மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரஜீம் முகமது இமாம், அந்தக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியிருக்கும் ஒரே முஸ்லிம் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசியலில் ஒரு நெருக்கடியான நிலை நிலவி வருவதாகக் கூறப்படும் நிலைமையில் அவரது இந்த நியமனம் வந்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறான சூழலில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினரான ரஜீம் முகமது இமாம் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டப்போது, வடமாகாணங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அவர்களது சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்பது தான் தன்னுடைய விருப்பம் என்றும் அதற்காக பாடுபடுவேன் என்றும் கூறினார்.
உதயன் செய்தித்தாளுக்கு அச்சுறுத்தல்
![]() |
![]() |
ஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக புகார் |
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் உதயன் செய்தித்தாள் அலுவலகத்திற்கு அண்மையில் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தொலைபேசி மிரட்டலையடுத்து, அந்த நிறுவனத்தின் செய்தியாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசுக்கு அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது.
கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி உதயன் அலுவலகத்தினுள் புகுந்த ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தின்போது 2 பேர் கொல்லப்பட்டார்கள். 2 பேர் காயமடைந்தார்கள். இந்தச் சம்பவத்தையடுத்து உதயன் நிறுவனத்திற்கு அரசாங்கம் பொலிஸ் பாதுகாப்பு வழங்கியிருந்தது.
எனினும் தமது நிறுவனத்திற்கு இருந்த அச்சுறுத்தல்கள் குறையவில்லை என உதயன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரவணபவன் ஈஸ்வரபாதம் குறிப்பிடுகின்றார். தமது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, பொதுவாக இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே பணியாற்றி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
மன்னார் தாக்குதலில் 11 மாணவர்கள் உட்பட 18 பேர் பலி
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுமாதா ஆலயத்திற்கு அண்மையில் உள்ள தட்சணாமருதமடு என்னுமிடத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பேருந்து வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணி வெடித் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.
இந்தத் தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரே நடத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.
இந்தக் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.
![]() |
![]() |
கிளேமோர் கண்ணிவெடி |
பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களும் ஆசிரியர்களுமே இந்த வண்டியில் அதிகமாக இருந்ததாகவும் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகிய பஸ் வண்டி பாதையைவிட்டு விலகி மரமொன்றில் மோதி காட்டுக்குள் சென்று நின்றதாகவும் காயமடைந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் இறந்தவர்களின் உடல்களும் காயமடைந்தவர்களும் பள்ளமடு மற்றும் முழங்காவில் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இந்தச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 6 பேர் முதல் தொகுதியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களும் இறந்தவர்களும் அதிகமாக மடுக்கோவில் பகுதியில் வசிப்பவர்கள் எனவும், இதனால் மடுக்கோவில் பகுதி ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியிருப்பதாகவும் மடுக்கோவில் பகுதியில் உள்ள ஒருவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.