Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Tribes’ Category

Parambikulam Wildlife Sanctuary – Parks & Forests – Tourism development without Intrusions

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

முன் மாதிரி: காடர்… மலசர்… நேச்சுரலிஸ்ட்!

வி. கிருஷ்ணமூர்த்தி

எங்கு, என்ன புதிய திட்டம் என்றாலும், முதன் முதலில் அடிபடுவது அங்கு பல ஆண்டுகளாக வசித்து வரும் மண்ணின் மைந்தர்கள்தாம். அங்கு வசிப்பவர்களை வெளியேற்றுவது நமது நாட்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வாடிக்கை. ஆனால் இதிலிருந்து மாறுபட்டு செயல்பட்டிருக்கிறது பரம்பிக்குளம் விலங்குகள் சரணாலயம்.

இந்த மாற்றத்தின் பின்னணி என்ன?

வன விலங்கு சரணாலயங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்களில் அவர்களுக்கு அந்தப் பகுதிகளைப் பற்றிய தகவல்களைச் சொல்ல வழிகாட்டிகள் இருப்பார்கள். ஆனால், தமிழக எல்லையில், கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் வனப்பகுதியில் பார்வையாளர்களுக்கு வழிகாட்ட அப்படி தனிப்பட்ட “கைடுகள்’ கிடையவே கிடையாது.

இங்குவரும் பார்வையாளர்களுக்கு வன வளம், விலங்குகள், பறவைகள், பூச்சியினங்கள் பற்றியெல்லாம் சொல்ல இந்தப் பகுதியின் மண்ணின் மைந்தர்களான பழங்குடியின இளைஞர்களை “நேச்சுரலிஸ்ட்’ என்ற பெயரில் வனத்துறையினர் பணியமர்த்தி உள்ளனர் என்பதுதான் இங்கே சிறப்பு. அவர்கள்தான் அங்கு கெய்டு, வழிகாட்டி எல்லாம்.

இந்தச் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நண்பர்களாய், வழிகாட்டியாய், தகவல் களஞ்சியமாய் இந்த “நேச்சுரலிஸ்ட்’கள் ஆற்றிவரும் பணிகள் அடடா…உண்மையிலேயே பாராட்டுக்குரியவை. பறவைகள், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் பெயர்களை வேறுமொழி கலப்பில்லாமல், துல்லியமாக உச்சரித்து விளக்கும் இவர்களில் பலர் மழைக்குக் கூட பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்காதவர்கள் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலையில் ஒரு பகுதியாக அமைந்துள்ளதுதான் இந்தப் பரம்பிக்குளம் வனப்பகுதி. இங்கு காடர், மலசர், மடுவர், மலமலசர் ஆகிய 4 பழங்குடி பிரிவினர் வாழ்ந்து வருகின்றனர். 300 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இந்த வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் முன்னோர்கள் வாழ்ந்த குகைகள் எல்லாம் இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இவர்கள் தவிர, தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக 1950-ம் ஆண்டுகளில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் அணை கட்டும் பணிகளுக்காகத் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்து வேலைக்காக வந்த குறிப்பிட்ட பிரிவு மக்களும் இங்கு குடியேறினர்.

பரம்பிக்குளம் ஆழியாறு அணைத் திட்டம், இங்கு தண்ணீரின் போக்கை மனிதனின் வசதிகளுக்காகத் தடம் மாற்றியது. அதுமட்டுமா, இந்தப் பகுதி பழங்குடியினரின் வாழ்க்கைப் பாதையையும் வேறு நாகரிகமான முறையில் மாற்றியமைத்து விட்டதே.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளுடன் பாதுகாப்புக்கு உடன் செல்லும் உதவியாளர்களாக இந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்களை வனத்துறையினர் நியமித்தனர். இது இங்கு நிகழ்ந்த ஒரு திருப்பம்.

அங்கு வனத்துறை அதிகாரியாகப் பணி புரிந்த நெல்சன் என்பவர் பறவையியல் அறிஞர் சலிம் அலி எழுதிய புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பெயர்களைத் துல்லியமாக உச்சரிக்க இவர்களுக்குப் பயிற்சி அளித்தார். இதனால் பறவைகள், விலங்குகளின் அத்தனை ஆங்கிலப் பெயர்களும் இவர்கள் நாவில் துள்ளி விளையாடுகின்றன.

இந்நிலையில் இங்கு வனப்பாதுகாவலராக வந்த சஞ்சயன் குமார் என்பவர் இவர்களுக்கு முறையான ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுத்தார். இங்கு வரும் பார்வையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ஒரு தொகுப்பு நிதியாக உருவாக்கியுள்ளார்.

பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தச் சூழலியல் மேம்பாட்டு கவுன்சில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பழங்குடியினரும் உறுப்பினர்கள்.

இங்கு பள்ளியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள பழங்குடியினர் அனைவருக்கும் தாய்மொழி தமிழ். ஆனால் கல்வி கற்பிக்கப்படுவதோ மலையாளத்தில். அது ஒன்றுதான் வேதனை!

இவர்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள பழக்கங்களின்படி சில கிலோ மீட்டர்கள் தொலைவில் வரும் விலங்குகளைக் கூட வாசனை மூலம் அறிந்து கொள்கிறார்கள். பறவைகளை பார்க்காமலேயே அதன் குரல் ஓசையை வைத்தே இன்ன பறவையென்று இவர்களால் சொல்ல முடியும்.

“”வன வளப் பாதுகாப்பில் இவர்களுக்கு இணை இவர்களேதான்” என்கிறார் “நேச்சர் டிரஸ்ட்’ அமைப்பின் திருநாரணன்.

இங்குள்ள பழங்குடியினரின் பாரம்பரிய இசையையும், நினைவு சின்னங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றையும் பார்வையாளர்களுக்கு விளக்கும் வகையிலான திட்டங்களும் வனத்துறையினரால் உருவாக்கப்பட்டுள்ளன.

மண்ணின் மைந்தர்களான பழங்குடியினரை வெளியேற்றாமல் அவர்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் பரம்பிக்குளம் வன விலங்கு சரணாலயத்தை மட்டுமல்ல, நாட்டின் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் சிறப்பாக நிறைவேற்றலாம் என்பதற்கு இந்தத் திட்டமே ஒரு பெரிய சிறந்த உதாரணம்.

Posted in Anamalai, Caste, Community, Development, Displaced, Environment, Forests, Guides, Intrusions, Kerala, Naturalist, Nature, Palacad, Palacaud, Palacaut, Palacode, Palaghat, Palagode, Palakkad, Palakode, Parks, Protection, Refugee, reservoir, safari, Sanctuary, SC, ST, Tour, Tourism, Tourist, Travel, Traveler, tribal, Tribes, Visit, Visitor, Wild, Wildlife | Leave a Comment »

Interview with ‘Ramanujan’ Documentary filmmaker MV Bhaskar – Dinamani Kathir

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

ஆவணம்: “”கலையும் அறிவியலும் கலந்த இடம்தான் கோவில்!”

சமூகத்தில் பிரமிக்கதக்க சாதனைகளைச் செய்திருப்பவர்களைப் பாருங்கள். பெரும்பாலும் சப்தமே இல்லாமல் வேலை செய்து கொண்டிருப்பவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் எம்.வி. பாஸ்கர் – பன்முக ஆளுமை.

விளம்பரத் துறையில் பாஸ்கருடைய பணிகள் சர்வதேச அளவிலான விருதுகளை அவருக்குப் பெற்றுத் தந்திருக்கின்றன. அவருடைய “ராமானுஜன்’ ஆவணப் படம், கணித மேதை ராமானுஜன் பற்றிய காட்சிப் பதிவுகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. யேல் பல்கலைக்கழகத்துக்காக அவர் செய்த “ஊர்’ விவரணப் படம் தமிழ் மரபின் ஆதார வேர்களைத் தேடிச் சென்றது. பழங்குடியின மக்களின் கலாசாரத்தை, அவர்களுடைய வாழ்வியலைப் பதிவு செய்த “ட்ரைபாலஜி’ ஆவணப் படத்தில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது.

“”கலையும் அறிவியலும் சந்திக்கும் இடங்கள் எனக்கான தளங்கள்” எனக் குறிப்பிடும் பாஸ்கர், தமிழில் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு சிலரில் குறிப்பிடத்தக்கவர்.

மறைந்து கொண்டிருக்கும் சுவரோவியங்களைப் பதிவுகளாக்கி அடுத்தத் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்.

ஒரு வரலாற்று ஆய்வாளனின் வேட்கையோடு கலை, அறிவியல், இசை, ஒளிப்பதிவு, இயக்கம், மின்பதிப்பு எனப் பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் பாஸ்கரைப் பற்றி எழுதுவதைவிடவும் முக்கியமானது அவரிடம் பேசுவது. தமிழில் பாஸ்கரைப் பற்றிய முதல் பதிவு இது. இனி பாஸ்கருடன்…

வெவ்வேறு துறை அறிமுகம் பலமா, பலகீனமா?

பலம்தான். ஒரே விஷயத்தைத் திரும்பத்திரும்ப செய்வது அயர்வையே தருகிறது. மாறாக வெவ்வேறு விஷயங்கள் மீதான ஈடுபாடு, நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது. தவிர, ஒரு துறையில் பெற்ற அனுபவம் மற்றொரு துறையில் ஏதேனும் ஒரு வகையில் உதவும். அதுவே உங்களை வித்தியாசப்படுத்தவும் செய்யும்.

விளம்பரப் படமும் ஆவணப் படமும் இருவேறு உலகங்கள். உங்களிடம் இவை இரண்டையும் இணைத்தது எது?

ஒரு படைப்பாளி எத்தனை ஈடுபாட்டுடன் செய்தாலும் விளம்பரங்கள் பிறருடைய திருப்தியையே முதல் நோக்கமாகக் கொண்டவை. மிகைப்படுத்தலும் போலித்தனமும் அங்கு அதிகம். தொடக்கக் காலத்திலிருந்தே இது என்னை அழுத்திக் கொண்டிருந்தது. நாம் செய்ய வேண்டிய காரியங்கள் வேறு என்பதை நன்கு உணர்ந்திருந்தேன்.

இந்நிலையில்தான், ராமானுஜத்தின் நூற்றாண்டையொட்டி அவர் பற்றிய ஆவணப் படத்தை இயக்கினேன். அப்போது அது எனக்குத் திருப்தி அளிப்பதாக இருந்தது.

ஓர் இடைவெளிக்குப் பின்னர், “ட்ரைபாலஜி’ செய்தோம். ஒரிஸôவில் வாழும் பழங்குடி இன மக்களின் கலாசாரம் குறித்த பதிவு அது. அதன் பின்னர், “ஊர்’. பேராசிரியர் இ. அண்ணாமலை எனக்கு அளித்த வேலை அது. வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் நமது கலை, கலாசாரம், பாரம்பரிய மரபுகள் பற்றிய ஓர் அறிமுகமாகவே அப்பணியைச் செய்தோம்.

நவீன வாழ்வு பழங்குடிகளைப் பாதித்திருக்கிறதா?

பழங்குடிகள் குறித்த நமது பார்வை மலிவானவை. பழங்குடிகளில் இன்றைய நவீன வாழ்வின் அனைத்து வசதிகளோடும் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்; தன் ஆதி அடையாளம் மாறாமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

பணம் இல்லாத ஒரு வாழ்வை ஒரு கணமேனும் நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா? ஆனால், பணமே இல்லாத ஒரு வாழ்க்கை அவர்களுக்குச் சாத்தியமாகி இருக்கிறது. அவர்களுடைய வீடுகளை அவர்களே கட்டுகிறார்கள். அவர்களுடைய உணவை, உடைகளை அவர்களே தேடிக் கொள்கிறார்கள். அவர்களுடைய ஒவ்வொரு தேவையையும் அவர்களால் சுயமாக அடைய முடிகிறது. இயற்கையோடான அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்வது.

“ஊர்’ அனுபவம் எப்படி?

தமிழின் உன்னதங்கள் உறைந்திருக்கும் 88 இடங்களுக்கு அந்தப் படத்துக்காகச் சென்றோம். உண்மையாகவே சொல்கிறேன். நம்மைவிடவும் மோசமான ஒரு சமூகம் இருக்க முடியாது. உலகளவில் போற்றத்தக்க எத்தனையோ கலைகள், கலைப் படைப்புகள் நம்மிடம் இருக்கின்றன. அவை அனைத்தையும் சாகடித்துக் கொண்டிருக்கிறோம் நாம். நம்முடைய மோசமான செயல்பாட்டுக்கு கோயில்களின் இன்றைய நிலை ஓர் உதாரணம்.

கோயில்கள் அழிந்து கொண்டிருக்கின்றனவா?

ஆமாம். நம்முடைய வாழ்க்கை முறையே கோயில் சார்ந்ததாகத்தான் இருந்திருக்கிறது. கோயில்கள்தான் எல்லாமும். கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் கூடிய அங்குதான் எல்லா கலைகளும் வாழ்ந்திருக்கின்றன.

கலையும் அறிவியலும் ஒன்றுகூடிய இடம் கோயில். இன்றைய நிலையோ வேறு. மதம் சார்ந்த விஷயமாக மட்டுமே கோயில் அணுகப்படுகிறது. உன்னதமான சிற்பங்களும் சுவரோவியங்களும் அழிந்து கொண்டிருக்கின்றன. கோயில் சார்ந்த கலை மரபுகள் வழக்கொழிந்து வருகின்றன. கலைஞர்கள் அருகி வருகிறார்கள். கலையின் அழிவும் கலைஞர்களின் அழிவும் ஒரு சமூகத்தினுடைய அடையாளத்தின் அழிவு.

நம் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்துச் செல்வது?

நிறைய பணிகள் இருக்கின்றன. முக்கியமாகத் திணிப்பு கூடாது. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதிக்க வேண்டும். குழந்தைகளுக்கான கதைகள், இசை, கலை என எதையும் நாம் சிந்திப்பதே இல்லை. அவர்களை, பணம் பண்ணும் இயந்திரமாக்க நாம் துடித்துக்கொண்டிருக்கிறோம். நம் குழந்தைகளை முதலில் வீடுகளைவிட்டு வெளியே அழைத்து வர வேண்டும்; எந்தவித நோக்கமும் இல்லாமல். அதாவது, ஊர் சுற்றுவதுபோல்.

வாசிக்கும் பழக்கமும் ஊர் சுற்றும் பழக்கமும் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும். வாழ்க்கை கொண்டாட்டத்துக்குரியது. கொண்டாட்டங்களின் – கேளிக்கைகளின் ஒரு வடிவம்தான் கலை. நம்முடைய கலை, கலாசார ஆதாரங்களை அடுத்தத் தலைமுறைக்கு எப்படியேனும் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ் சமூகம் எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய சவால் அதுதான்.

Posted in Ads, Advertisements, Advt, Archeology, Arts, Bhaskar, Castes, Cinema, Community, Culture, Documentary, Films, Heritage, Hindu, Hinduism, History, Movies, MV Bhaskar, MV Bhaskhar, Paintings, Raamanujan, Raamanujar, Ramanujan, Ramanujar, SC, Science, ST, Temples, Tribes, Vaishnavism, Vaishnavite | Leave a Comment »

Gujarat Elections: BJP & Narendra Modi – Caste Politics & Poll Calculations

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2007

குஜராத்தில் ஜாதி அரசியல் ஆதிக்கம்

ஆமதாபாத், ஆக.4: குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவில் ஜாதி அரசியல் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் ஜாதி அரசியல் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது.

மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா பாஜக என்ற கேள்வியும் குஜராத் அரசியலில் இதனால் எழுந்துள்ளது.

முந்தைய தேர்தல்களில் குஜராத்தில் ஜாதிய அரசியல் முக்கியத்துவம் பெற்றிருந்த போதிலும் அதைக் காட்டிலும் மத ரீதியிலான அரசியல் கடந்த 20 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தியது. இதற்கு முக்கிய காரணம் பாஜக போன்ற கட்சிகளால் உருவான ஹிந்துத்துவா அலையே ஆகும்.

ஆனால் தற்போது அந்த அலை குஜராத்தில் குறைந்து விட்டது என்றே சொல்லாம். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜாதி அரசியலே கோலோச்சும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் வாக்கு வங்கியாக கடந்த 20 ஆண்டுகளாக இருந்து படேல் ஜாதி இருந்து வந்தது என்று கூறலாம். ஆனால் அந்த ஜாதியில் உள்ள லோவா படேல் பிரிவினர் பாஜகவுக்கு எதிராக தற்போது திரும்பியுள்ளனர்.

இப் பிரிவினர் சர்தார் படேல் சமிதி என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக தாலுகா அளவில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். மாநிலத்தில் 102 தாலுகாவில் இதே போன்ற பிரசாரத்தை தேர்தலுக்கு முன்னதாக நடத்தி முடிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். குஜராத் மக்கள் தொகையில் படேல் ஜாதியினர் 20 சதவீதம் உள்ளனர்.

மோடிக்கு எதிரணியில் இருக்கும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கேசுபாய் படேல் லேவா படேல் பிரிவைச் சேர்ந்தவர். அண்மையில் பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 5 பாஜக எம்.எல்.ஏ.க்களும் அதே பிரிவைச் சேர்ந்தவர்கள்தான்.

படேல் ஜாதியில் மற்றொரு பிரிவு கத்வா படேல். இவர்கள் நரேந்திர மோடியை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கோலி ஜாதியினர் குஜராத் மக்கள் தொகையில் 15 சதவீதம் உள்ளனர். இந்த ஜாதியைச் சேர்ந்த பெண் கற்பழிக்கப்பட்டு கடந்த மே மாதம் கொலை செய்யப்பட்டார். குற்றவாளியை இதுவரை போலீஸôர் கைது செய்யவில்லை. இது அந்த ஜாதியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கோலி வகுப்பைச் சேர்ந்தவரான பாஜக எம்.பி. சோம படேல் முதல்வர் நரேந்திர மோடியின் எதிர்ப்பாளராகி விட்டார். முதல்வருக்கு எதிரான பொதுக்கூட்டங்களுக்கு அவர் பகிரங்கமாகவே ஏற்பாடு செய்துவருகிறார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்.பி.யான நளின் பட் பிராமணர்களை பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன் பொருட்டு அவர் விரைவில் கூட்டம் ஒன்றை கூட்ட இருப்பதாகவும் சொன்னார்.

இதனிடையே, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள காங்கிரஸ் கட்சி இப்போதே நடவடிக்கையை தொடங்கிவிட்டது.

தெற்கு, மத்திய குஜார் பிராந்தியத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர். காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்த அவர்கள் கடந்த 2002 தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பழங்குடியினர் வாக்குகளை மீண்டும் பெற காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் பேரணிகள், பொதுக்கூட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை எதிர்கொள்ளும் வகையில் பழங்குடியினருக்கு ரூ.13,000 கோடி அளவிலான திட்டங்களை தடாலடியாக நரேந்திர மோடி அரசு அறிவித்தது. இவ்வாறு பழங்குடியினர் வாக்குகளை கைப்பற்றுவதில் காங்கிரஸ்- பாஜக இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

குஜராத் மக்கள் தொகையில் சிறுபான்மையினர் 14 சதவீதம் பேர் உள்ளனர். அவர்கள் மதச்சார்பற்ற கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸின் வாக்கு வங்கியாக தொடர்ந்து இருந்து வருகின்றனர். சத்ரிய வகுப்பைச் சேர்ந்த சங்கர் சிங் வகேலா காங்கிரஸ் கட்சிக்கு சென்றதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு அந்த வகுப்பினரின் ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளது.

ஜாதி அரசியலின் ஆதிக்கம் குஜராத் அரசியலில் ஆட்சி மாற்றத்தை இந்த முறை ஏற்படுத்தும் வாய்ப்பை மறுப்பதற்கு இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். பாஜக தரப்பில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர். காங்கிரஸ் ஆட்சி குஜராத்தில் மீண்டும் மலரும் என்கின்றனர் அக்கட்சியினர்.

Posted in Assembly, BC, BJP, Brahmins, Cabinet, Caste, Community, Conflict, Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Divide, Elections, FC, forecasts, Gujarat, Mandal, Modi, Narendra, OBC, Party, Patel, Politics, Polls, Religion, SC, Sect, Sectarian, ST, Tribes, Vote, voters | 1 Comment »

Rajasthan CM – Gujjars talks: Quota’s macabre face in Rajasthan Gujjar ire and police brutality

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மீனா சமூகத்தினர் எதிர்ப்பு

ஜெய்ப்பூர், மே 30: பழங்குடியினர் பட்டியலில் குர்ஜார் சமூகத்தினரைச் சேர்த்தால் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மீனா சமூகத்தினர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

‘ராஜஸ்தானில் மீனா சமூகத்தினர் மட்டுமே பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். அதில் பிற பிரிவினரைச் சேர்ப்பதை ஏற்க முடியாது. அவ்வாறு சேர்ப்பதைத் தடுக்க எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக தியாகங்களைச் செய்ய தயாராக உள்ளனர்’ என்று ராஷ்ட்ரீய மீனா மகாசபை தலைவர் பன்வர் லால் மீனா கூறினார்.

குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் வசுந்தரா ராஜே அரசு சேர்த்தால் அவர் மீண்டும் பதவிக்கு வர முடியாது என்றும் அவர் கூறினார்.

தௌசா, பண்டி மாவட்டங்களில் நடந்த தீவைப்பு சம்பவங்களுக்கு மீனா சமூகத்தைச் சேர்ந்த காவல்துறையினரே காரணம் என்று கூறப்படுவது குறித்து கேட்டபோது, “இது ஆதாரமற்ற, முட்டாள்தனமான குற்றச்சாட்டு” என்றார்.

———————————————————————————————-
07.06.07 ஹாட் டாபிக்
குமுதம் ரிப்போர்ட்டர்
நேற்று நந்திகிராம்
இன்று ராஜஸ்தான்

தொடரும் துப்பாக்கிச்சூடு கலாசாரம்

இருள் விலகி கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது. சரக்கு லாரிகளும், ஏர் பஸ்களும் சீரான இடைவெளியில் ராஜஸ்தான் மாநிலம் தௌசாவின் _ ஜெய்ப்பூர் _ ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தன. அத்தனை அதிகாலையில் அந்த நெடுஞ்சாலையில் திடீரென பொதுமக்கள் குழும ஆரம்பித்தனர். பேருந்தில் சென்றவர்கள் எல்லாம் ஒன்றும் புரியாமல் யோசித்தபடியே சென்று கொண்டிருந்தனர். அதிகாலை ஐந்து மணிக்கு வெறும் நான்காயிரம் பேர்தான் கூடியிருந்தனர். அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் பொதுமக்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்தது.

விஷயம் கேள்விப்பட்ட காவல்துறை, சம்பவ இடத்துக்கு விரைந்தது. என்ன ஏது என்று விசாரித்ததில் அவர்கள் எல்லாம் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் தங்கள் இனத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபடவே குழுமியிருப்பதாகவும் தெரிய வந்தது. அவ்வளவுதான். அடுத்த அரை மணி நேரத்தில் தடியடி. கண்ணீர்ப் புகை. துப்பாக்கிச்சூடு. கலவரம். ரத்தத் தெறிப்பு. எல்லாம் வரிசைக்கிரமமாக நடந்தது. இரண்டு காவலர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக பதினான்கு உயிர்கள் காவு வாங்கப்பட்டன.

நந்திகிராமத்தில் நடந்ததற்குக் கொஞ்சமும் சளைக்காமல் நடந்துள்ள இந்தச் சம்பவம் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. துணை ராணுவப்படை எல்லாம் குவிக்கப்பட்டுள்ளது. பதற்றம் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது. ராஜஸ்தானின் முக்கிய மாவட்டங்களான டோங்க், ஜெய்ப்பூர், தௌசா, புண்டி, சவாய் மதோபூர், கரௌலி ஆகியவற்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? யார் இந்த குஜ்ஜார் மக்கள்? அவர்களுடைய பின்னணி என்ன?

குஜ்ஜார் என்பது கிழக்கு ராஜஸ்தானில் அதிக அளவில் வசிக்கும் மக்களின் இனப்பெயர். குர்ஜார் என்றும் சொல்வார்கள். இவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, ஒசாமா பின்லேடன் புகழ் ஆப்கானிஸ்தானிலும் இருக்கிறார்கள். பர்வேஸ் முஷாரப் இருக்கும் பாகிஸ்தானிலும் இருக்கிறார்கள். இந்த இனத்தில் சுமார் ஐநூறு உட்பிரிவுகளும் இருக்கின்றன. ஆரம்பத்தில் குஜ்ஜார் இனத்தில் இந்துக்கள் மட்டும்தான் இருந்தனர். பின்னர், அராபிய முஸ்லிம்கள் இந்த இனத்தால் கவரப்பட்டு, அந்த இனத்தோடு உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதன்பிறகு, தங்கள் பெயரோடு குஜ்ஜார் என்பதையும் சிலர் இணைத்துக் கொண்டனர். உதாரணம் குஜ்ரன் வாலா, குஜார் கான். இதனால் இந்தியாவில் இந்த இனம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிந்தது. இந்து குஜ்ஜார்கள், முஸ்லிம் குஜ்ஜார்கள். இவை எல்லாமே எட்டாம் நூற்றாண்டில் இருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை நடந்த சங்கதிகள்.

இந்தியாவில் மட்டும் இந்த இன மக்களின் எண்ணிக்கை மூன்று கோடியைத் தாண்டும். இவர்கள் அனைவருக்கும் பொதுவான மொழி கோஜ்ரி. ஆனால், தாங்கள் வசிக்கும் இடத்தில் என்ன மொழி புழக்கத்தில் இருக்கிறதோ, அதைப் பழகிக் கொண்டனர். சர்தார் வல்லபபாய் படேல், இந்தர் குமார் குஜ்ரால், ஃபக்ருதீன் அலி அகமது, ராஜேஷ் பைலட் ஆகிய அரசியல் ஜாம்பவான்கள், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் போன்றோர் இந்த இனத்தவர்கள்தாம். இந்த இன மக்களின் முக்கியத் தொழில் விவசாயம், மாடு வளர்ப்பு, பால் விற்பனை.

கிழக்கு ராஜஸ்தானில் மிகப்பெரிய வாக்கு வங்கியைக் கொண்டுள்ள இவர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள். கண்ணை மூடிக் கொண்டு கை சின்னத்துக்கு வாக்களிப்பவர்கள். ராஜஸ்தானில் குஜ்ஜாரைப் போலவே மேலும் இரண்டு இனங்கள் இருக்கின்றன. ஜாட் மற்றும் மீனா. இவர்களில் ஜாட் இனத்தை 1999_ல் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தனர்.

ஏற்கெனவே தங்கள் இனம் அரசு வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுகிறது, ஜாட் இன மக்களே உயர்பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள் என்று மனம்புழுங்கிக் கொண்டிருந்த குஜ்ஜார் மக்களை, இந்த அறிவிப்பு சிந்திக்க வைத்தது. ‘இனிமேல் வேலைவாய்ப்பு விவகாரங்களில் ஜாட் இனத்தவரோடு போட்டி போட வேண்டியிருக்கும். இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்குச் சமம். ஆகவே, எங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துவிடுங்கள்’ என்று போராட ஆரம்பித்தனர்.

இந்தச் சமயத்தில்தான் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் வந்தது. அப்போது குஜ்ஜார் இனத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தான் உதவுவதாக வசுந்தரா வாக்குறுதி அளிக்கவே, அதுநாள்வரை காங்கிரஸை ஆதரித்த அவர்கள் தாமரைக்குக் கை நீட்டினர். ஆட்சிக்கு வந்தார் வசுந்தரா ராஜே. அவ்வளவுதான். அத்தோடு எல்லாவற்றையும் மறந்துவிட்டு தனது பணிகளில் பிஸியாகிவிட்டார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த குஜ்ஜார்கள் போராட்டத்தில் குதித்தனர். விளைவு.. இப்போது பன்னிரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதல் குறித்து குஜ்ஜார் சங்கர்ஷ் சமிதியின் தலைவர் பைய்ஸ்லா, “எங்கள் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகரானது’’ என்று கொதித்துள்ளார்.

“சாலை மறியலில் ஈடுபடுவது நமது போராட்ட முறைகளுள் ஒன்று. இதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தி மரண தண்டனை கொடுத்திருக்கிறது பா.ஜ.க. அரசு. இதற்குத் தகுந்த பதிலை அவர்கள் சொல்லியாக வேண்டும்’’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சின் பைலட். இவரும் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்தான்.

“நான் எந்த வாக்குறுதியையும் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்து, சரிசெய்யவேண்டிய விஷயம். இருந்தாலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளேன். இதுகுறித்து ஒரு முடிவெடுக்க குறைந்தது 15 நாட்களாவது அவகாசம் தேவை. அதுவரை பொறுமை காப்பது அவசியம்’’ என்று கூறியுள்ளார் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா.

ஆனால், இதுகுறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பாதவரை போராட்டம் நிறுத்தப்படாது என்று கூறியிருக்கின்றனர் குஜ்ஜார் அமைப்பினர்.

‘இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் விதமாக குஜ்ஜார் இனத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் நாங்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என்று திடீரென போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றனர் ராஜஸ்தானின் மீனா இன மக்கள். இவர்கள்தாம் ராஜஸ்தானில் இருக்கும் ஒரே பழங்குடியின மக்கள். ஆக, ஒரு பிரச்னையின் தீர்வு அடுத்த பிரச்னைக்கான ஆரம்பமாக இருக்கக்கூடாது. ஆகவே, மிகவும் எச்சரிக்கையாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ராஜஸ்தான் அரசு! ஸீ

– ஆர். முத்துக்குமார்

—————————————————————————-

அன்னியப்பட்ட ஆட்சியாளர்கள்!

நீரஜா சௌத்ரி – தமிழில்: சாரி

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜர் என்ற சமூகத்தவர் தங்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி, வன்செயல்களுடன் மேற்கொண்ட கிளர்ச்சி உச்ச கட்டத்தை அடைந்திருப்பதைப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து வருகிறோம்.

ஆண்டுக்கு 9.5% பொருளாதார வளர்ச்சியை எட்டிவரும் நாட்டில், 21-வது நூற்றாண்டில் கால்பதித்துள்ள நிலையில் நடைபெறக்கூடிய சம்பவங்கள் அல்ல இவை. ஆனால் அப்படிப்பட்ட சம்பவங்கள்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன.

அரசு வேலை வாய்ப்புக்காகத்தான் குஜ்ஜர்கள் திடீரென்று இப்படியொரு வன்முறைக் கிளர்ச்சியில் இறங்கினார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. அரசுப் பணியிலும் அரசுத் துறைகளிலும் மட்டும் அல்லாது தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அவசியம் என்று வலியுறுத்திவரும் நேரம் இது.

இட ஒதுக்கீட்டுக்காக இப்படி வன்முறையில் இறங்க வேண்டிய அவசியம் குஜ்ஜர்களுக்குக் கிடையாது. அப்படியானால் வன்செயல்கள் ஏன் நிகழ்ந்தன, அவர்களுடைய உண்மையான நோக்கம்தான் என்ன?

மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, பிற்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது என்று வி.பி. சிங் தலைமையிலான அரசு எடுத்த முடிவையடுத்து காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் பின்னாலிருந்து தூண்டிவிட்டு, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்தன.

ஆனால் பிறகு தேர்தலில் வெற்றிபெற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளும் அவசியம் என்பதால் காங்கிரஸ், பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே இட ஒதுக்கீட்டு கொள்கையை ஏற்று, அமல்படுத்த ஆரம்பித்தன.

ராஜஸ்தானில் ஜாட் சமூகத்தவருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அந்தஸ்தை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் அளித்தது.

இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று முதலில் தீர்மானித்த வி.பி. சிங்கால் கூட அமல்படுத்த முடியாத காரியம் அது. ஜாட் சமூகத்தவருக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகையை அளித்திருந்தால் தேவிலாலின் ஆதரவு வி.பி. சிங்குக்குத் தொடர்ந்திருக்கும், மத்திய ஆட்சியும் பிழைத்திருக்கும். வட இந்திய அரசியல் வரலாறுகூட மாறியிருக்கும்.

வாக்கு வங்கிகள் மூலமே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதால், இட ஒதுக்கீடு என்பதை இனி எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று புரிகிறது. நேற்று ஜாட் சமூகத்தவர் போராடிப் பெற்றனர். இன்று குஜ்ஜர்கள் போராடுகின்றனர். நாளை மற்றொரு சமூகம் போராடத் தொடங்கலாம்.

குஜ்ஜர்கள் சமீபகாலமாக மிகவும் கொந்தளிப்பாக இருக்கின்றனர் என்பது உண்மையே. ராஜஸ்தான் மாநில மக்கள் தொகையில் 5% ஆக இருக்கும் குஜ்ஜர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுகின்றனர்.

ஜாதீய அடுக்கில் மேலே உள்ள ஜாட்டுகளுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அந்தஸ்து தரப்பட்டதும், இட ஒதுக்கீட்டின்கீழ் வரும் பதவிகளையும் இடங்களையும் அவர்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டனர். எனவேதான் குஜ்ஜர்கள் இப்போது பழங்குடி அந்தஸ்து கேட்டுப் போராடுகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் இமாசலத்திலும் குஜ்ஜர்கள் பழங்குடி சமூகத்தவராகவே பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் ராஜஸ்தான் மக்கள் தொகையில் 10% ஆக இருக்கும் “”மீனா” வகுப்பினர், குஜ்ஜர்களுக்கு பழங்குடி அந்தஸ்து தரப்படுவதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். அப்படித் தந்தால் தங்களுக்குரிய இடம் குறைந்துவிடும் என்பதுதான் அவர்களுடைய அச்சம்.

தெüசா மாவட்டத்தில் மீனா-குஜ்ஜர் இடையிலான மோதலில் 8 பேர் இறந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் இவ்விரு சமூகத்தவரும் அருகருகில் வசிக்கின்றனர். இருவரும் க்ஷத்திரியர்கள். எனவே மோதல் தீவிரமானால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்னால், குஜ்ஜர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தவர் வசுந்தரா ராஜ சிந்தியா என்பது உண்மை. ஆட்சிக்கு வந்த பிறகு அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த விஷயம் குறித்துப் பரிசீலிக்க 18 மாதங்களுக்கு முன்னால் ஒரு கமிட்டியை நியமித்தார். அதைப்பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்புகூட வெளியிடப்படவில்லை. அந்தக் கமிட்டியில் இருக்கிறோம் என்பதே சில உறுப்பினர்களுக்குத் தெரியாது!

வாக்குறுதிகளைத் தருவதும் ஆட்சிக்கு வந்தபிறகு அதை மறப்பதும் ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை. ஆனால் சில அரசியல்வாதிகள், இப்படிப்பட்ட நிலைமை தோன்றியவுடனேயே சுதாரித்துக் கொண்டு, நிலைமை முற்றாமல் ஏதாவது செய்துவிடுவார்கள். ஆனால் வசுந்தராவோ அகந்தையின் உச்சத்தில் இருக்கிறார். அவரை கட்சித் தொண்டர்கள்கூட எளிதில் பார்க்க முடிவதில்லை.

தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயகத்தில் அனுமதித்துள்ளபடி கிளர்ச்சி செய்தனர் குஜ்ஜர்கள். ஆட்சியாளர்கள் சொல்லாமல் போலீஸôர் அடித்து நொறுக்கமாட்டார்கள். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிலருடைய மார்பிலே குண்டுகள் பாய்ந்துள்ளன. வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவதாக இருந்தால்கூட காலில்தான் சுட்டிருக்க வேண்டும்.

இச் சம்பவம் நடந்த 48 மணி நேரத்துக்குப் பிறகுகூட, “”கிளர்ச்சிக்காரர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என்று முதல்வர் பேசியிருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல இருந்தது. பிறகு பாரதீய ஜனதாவின் தேசியத் தலைவர்கள் தில்லியிலிருந்து அளித்த நெருக்குதல் காரணமாக, குஜ்ஜர் சமூகத் தலைவர்களுடன் பேச குழுவை நியமித்தார். பிறகு வழக்கமாக அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தார்.

இட ஒதுக்கீட்டின்படி ஒதுக்கிய இடங்கள் முழுவதையும் ஜாட் சமூகத்தவரே கைப்பற்றிவிடாமல் தடுக்க, பிகார் பாணியில் “”இணைப்பு 1”, “”இணைப்பு 2” என்று ஜாட்டுகளுக்கும் குஜ்ஜர்களுக்கும் தனித்தனியாக இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை அளித்திருக்கலாம். ஆனால் குஜ்ஜர்களும் இந்த இட ஒதுக்கீட்டை வேலைக்காக மட்டும் கேட்கவில்லை.

இப்போது ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பழங்குடிகளுக்கென்று 31 தனித் தொகுதிகள் உள்ளன. அவற்றை மீனாக்கள் பெற முடிகிறது. பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிலுமே சேர்த்து மொத்தம் 7 குஜ்ஜர்கள்தான் வெற்றிபெற முடிந்தது. இதனால் அரசியல்ரீதியாக அதிகாரம் செலுத்தும் இடத்தில் குஜ்ஜர்கள் இல்லை. இதற்காகத்தான் அவர்கள் தீவிரமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்திய சமுதாயத்திலே புதிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அரசியல் கட்சி வாரியாக மக்கள் இப்போது அணி திரள்வதில்லை. அவரவர் சமூகத்தின் பின்னணியில்தான் அணியாக உருவெடுத்து வருகின்றனர்.

கலிங்க நகர், சிங்கூர், நந்திகிராமம், தெüசா ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி உணர்த்துவது இதுதான். புதிய பொருளாதார வளர்ச்சியின் பலன் மக்களுக்குக் கிடைக்கவில்லை.

சமுதாயரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரே சமூகமான மக்கள் தங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டு உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் போராட ஆரம்பித்துள்ளனர்.

இதை உணரமுடியாத அளவுக்கு ஆட்சியாளர்கள் மக்களிடமிருந்து மிகவும் அன்னியப்பட்டு நிற்கின்றனர். இது நம்நாட்டு ஜனநாயக முறைக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

Posted in AA, abuse, Agitation, Ashok Gehlot, Assembly, Attack, Banjaras, BC, BJP, brutality, Caste, Community, Conflict, Congress, Crisis, Dausa, dead, Devi lal, Devilal, Education, EEO, Elections, Employment, FC, Gadia Lohars, Gujar, Gujjar, Gujjar Sangharsh Samiti, Gujjars, Himachal Pradesh, HP, institution, J&K, Jaipur, Jammu, Jammu & Kashmir, Jammu and Kashmir, Jobs, Karauli, Kashmir, Kirori Lal Meena, Law, Lohars, Mandal, Mathur, MBC, Meena, Meena-Gujjar, Meenas, Nadhigram, Nandhigram, Nandigram, OBC, OC, Order, Police, Polls, Power, Protest, Quota, Rajasthan, Raje, Rajnath, Rajnath Singh, Reservation, SC, scheduled tribes, Shiv Charan Mathur, ST, State, Talks, Tribes, UPA, Vasundhra, Vasundhra Raje, Violence, VP Singh | 3 Comments »

Jegamathy Kalaikkoodam’s Regai – Docu-drama review by Ravikkumar

Posted by Snapjudge மேல் ஜனவரி 27, 2007

ஆவணம்: அது இருண்ட காலம்!

ரவிக்குமார்

இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துவங்கி அறுபது ஆண்டுகள் ஆகின்றது. மாபெரும் ஜனநாயகக் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு ஐம்பத்தேழு ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் நாட்டில் எல்லோரின் சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் இருக்கின்றதா? இரட்டைக் குவளை முறை ஒழிந்துவிட்டதா? உத்தரப்பிரதேசத்திலிருந்து அசாமிற்குச் செல்லும் மக்களைக் கொன்று குவிக்கும் உல்ஃபா தீவிரவாதம் மறைந்துவிட்டதா? ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் சாதியின் பெயராலும், இனத்தின் பெயராலும் அவர்களால் விதைக்கப்பட்ட வேற்றுமைகள் இன்றுவரையிலும் அப்படியேதான் இருக்கின்றன” என்னும் ஆதங்கத்தை சற்று உரக்கவே சொல்கிறது ஜெகமதி கலைக்கூடம் வெளியிட்டிருக்கும் “ரேகை’ என்னும் ஆவணப்படம்.

“”பிரிட்டிஷ் ஆட்சி செய்த நாடுகளில் அதற்கு எதிராகச் செயல்பட்ட இனக்குழுக்களையும், சமூகங்களையும் அடக்குவதற்கு பலவிதமான வழிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் கடைப்பிடித்தது. அதில் முக்கியமான ஒன்றுதான் “குற்றப் பழங்குடிகள் சட்டம்.’ இந்தச் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்ட குழுக்களில் இருக்கும் ஆண்கள் அத்தனை பேரும், அவர்கள் பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் உள்ள பதிவேட்டில் தங்களின் கைவிரல் ரேகையைப் பதித்துவிட்டு, இரவு முழுவதும் தங்கியிருக்கவேண்டும். இந்த அடக்குமுறைச் சட்டத்தை உலகம் முழுவதும் தான் ஆட்சி செய்த நாடுகளில் பிரயோகித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். இந்தியாவில் முதல் சுதந்திரப் போர் முடிவடைந்ததும், ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடும் குழுக்கள் எவையெவை என நாடு முழுவதும் சர்வே எடுக்கப்பட்டது. விவசாய நாடான இந்தியாவில், விவசாயம் செய்வதற்குப் பயன்படும் மண்வெட்டி, கதிர் அறுக்கும் அருவா வைத்திருந்த விவசாயிகள் கூட பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். இந்தியா முழுவதும் 200 க்கும் அதிகமான சாதிக் குழுக்களை இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் 90-க்கும் அதிகமான சாதிகளைப் பதிவு செய்திருக்கின்றனர். ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பிடியில் நாம் அனைவருமே குற்றப்பரம்பரைகளாக இருந்தவர்கள் தான். அப்போது ஒற்றுமை என்ற ஒன்று இருந்ததால்தான், ஆசியாவிலேயே இந்தச் சட்டத்தை நம்மவர்களால் முதன்முதலாக எதிர்க்கமுடிந்தது. ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு, அன்றைக்கு ஒற்றுமையாக இருந்த சாதிகளுக்குள் இன்று பகைமையை வளர்த்துக் கொண்டிருப்பது சரியா? என்ற கேள்வி, ரேகை ஆவணப்படத்தைப் பார்ப்பவர்களின் மனதில் எழும்ப வேண்டும். இதுதான் இந்தப் படத்தின் நோக்கம்” என்றனர் தயாரிப்பாளர் தீனதயாள பாண்டியனும், இயக்குனர் தினகரன் ஜெய்யும்.

ரேகை ஆவணப்படமாக இருந்தாலும், அதில் முழுக்க முழுக்க ஆவணங்களுக்கும், குறிப்புகளுக்கும் மட்டுமே இடம் தராமல், தேவையான இடங்களில் போராட்டக் காலத்தை நம் கண்முன்னே நிறுத்தும் வகையில் சிறந்த நடிகர்களைப் பயன்படுத்தி “டாக்கு-டிராமா’ யுக்தியில் படம்பிடித்துள்ளனர். நிறைய காட்சிகளுக்கு தெய்வாவின் ஓவியங்களையும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

“”இந்தக் குற்றப் பழங்குடி சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த சாமான்ய மக்களிடமும் இருந்தது. சுபாஷ் சந்திர போஸ் பிறந்த சாதியையும் இந்தச் சட்டத்தை எதிர்த்ததற்காக குற்றப் பழங்குடியினர் லிஸ்ட்டில் சேர்த்திருந்தனர். ஆந்திராவில் உச்சாலியா என்னும் தாழ்த்தப்பட்ட இனத்தின் வேரையே இந்தச் சட்டம் நிர்மூலமாக்கியிருக்கிறது.” என்றார் இயக்குனர் தினகரன் ஜெய்.

மதுரைக்கு அருகிலிருக்கும் பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பதினேழு பேர்கள்தான், ஆசியா கண்டத்திலேயே இந்தச் சட்டத்தை எதிர்த்து முதன்முதலாகக் களப்பலி ஆனவர்கள். இவர்களில் மாயக்காள் என்னும் பெண்ணும் ஒருவர். மாயக்காளாக “விருமாண்டி’ படத்தில் நடித்த சுகுணா பாத்திரத்தின் தன்மை உணர்ந்து மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இந்த வரலாற்றுச் சம்பவத்தை நம் கண்முன்னே நேர்த்தியான ஆவணமாக்கியிருக்கிறது-“ரேகை’

Posted in British Rule, Deenathayala Pandiyan, Deenathayala Panidyan, Dheenadhayala Panidyan, Dheenathayala Pandian, Dheenathayala Panidyan, Dhinakaran Jai, Dinakaran Jai, Docu Drama, Documentary, Independence, India, Jegamadhy Kalaikoodam, Jegamathy Kalaikoodam, Jekamadhy Kalaikkoodam, Jekamathy Kalaikoodam, Mayakkaal, Movies, Ravikkumar, Ravikumar, Regai, Rekai, Republic, Short Films, Suguna, Suhuna, Sukuna, Terrorism, Tribes, ULFA, Virumandi | 2 Comments »