Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Transparency’ Category

Institutions averse to parting with information under RTI: Report

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

தகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க பல துறைகள் கோரிக்கை

‘அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான போக்கு இருக்க வேண்டும், ஊழல் குறைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தகவல் பெறும் உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், பல அரசு துறைகள் இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன’ என்று மத்திய தகவல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய தகவல் கமிஷனின் ஆண்டு அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கோரி வருகிறது.

தகவல் கொடுப்பதால், நீதித்துறையின் தனித்தன்மை, நீதித்துறையின் நிர்வாகம் பாதிக்கப்படும் என்பது உச்சநீதிமன்றத்தின் வாதமாக உள்ளது.

இதே போல சி.பி.ஐ., மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி.,) ஆகியவையும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளன.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை உளவு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கிறது. ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தவிர பிற தகவல்களை இரண்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள துறைகள் அளிக்க வேண்டாம். இந்த இரண்டாவது அட்டவணையில் தங்கள் துறையையும் சேர்க்க வேண்டும் என்பது சி.பி.ஐ.,யின் கோரிக்கையாக உள்ளது.

தேர்வு மற்றும் பணி நியமன தகவல்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கோரி வருகிறது. டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருவதால், எவ்வித தகவலும் அளிக்க டி.எம்.ஆர்.சி., முன்வர மறுக்கிறது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் செயல்பட்டால், கூடுதல் சுமை ஏற்படும் என்பது அந்த அமைப்பின் கருத்தாக உள்ளது.

கட்டணம் உயர்வு?

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நுகர்வோர் விவகாரம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், சுரங்கம் ஆகிய அமைச்சகங்கள் ஆலோசனை வழங்கியுள்ளன. கேட்கப்படும் தகவல் நீண்ட காலத்துக்கு உரியதாக இருந்தால், முறையான அமைப்பில் இடம் பெறாத தகவல்களாக இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அந்த அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அதை பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல்., தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் தகவலை அளிக்க போதிய கட்டமைப்பு வசதி இல்லை என சில துறைகள் தெரிவித்துள்ளன.

மத்திய நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமான கார்ப்பரேஷன், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் துறையையும் கொண்டு வர வேண்டும். இல்லாவிடில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு துறைகளை சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மீது ஏகபோக உரிமை கொண்டாடுகின்றனர். குறைந்த கட்டணத்துக்கு அதிக தகவல்களை தெரிவிப்பதா என்ற எண்ணம் அவர்களிடம் காணப்படுகிறது. இது போன்ற எண்ணம் கொண்ட அதிகாரிகளின் கருத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted in Affairs, Afraid, Architecture, authority, Avoid, BHEL, Buildings, CBI, Central Information Commission, CIC, Construction, Consumer, Corruption, Courts, CPSC, Customer, Delays, Delhi, Disclosure, DMRC, Economy, Exempt, Express, family, Fast, Government, Govt, HC, Health, Hide, HR, immunity, Info, Information, Intelligence, Judges, Judiciary, Jury, Justice, kickbacks, Law, Metro, mines, NBCC, Order, OSA, parliament, Protect, Protection, PSU, PSUs, Rails, Railways, Recommendation, rights, RTI, SC, Scared, Secrets, Security, Trains, Transparency, Transport, Violation, Welfare | Leave a Comment »

Press Freedom, Corruption of the Justice system, Media Exposure – Sting Operations

Posted by Snapjudge மேல் ஜூன் 7, 2007

“உண்மை’யைக் காட்டறீங்களா, கூடவே கூடாது!

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

சில நாள்களுக்கு முன்பு “”பி.எம்.டபிள்யு.” வழக்கு என்ற கொலை வழக்கு தொடர்பாக, அரசுத்தரப்பு வழக்கறிஞரும், பிரதிவாதியின் தரப்பும் சந்தித்துப் பேசி வழக்கைச் சீர்குலைக்க நடத்திய பேரம் பற்றிய ரகசிய காட்சிகளை “”என்.டி.டி.வி.” படம் பிடித்து நேயர்களுக்கு நேரடியாகப் போட்டுக் காட்டியது.

பணம் கொடுத்தால் அரசு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவரைத் தப்ப விடுவார் என்பதை அப்பட்டமாக சுட்டிக்காட்டும் காட்சி அது. அதே நாளில் பத்திரிகையில் மற்றொரு செய்தி கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. அது, தனியார் தொலைக்காட்சிகளும், பண்பலை வானொலிகளும் கடைப்பிடிக்க வேண்டிய செய்தி ஒளி-ஒலிபரப்பு தொடர்பான நடத்தை நெறிகளைப் பற்றியது.

அந்த நடத்தை நெறிகள் என்னவென்ற விவரம் என்னிடம் கிடையாது; ஆனால் பத்திரிகைகளில் பிரசுரமானவற்றைப் படித்தபோது, நம்பமுடியாத, வியப்பை ஊட்டுகிற, அடக்குமுறையான கட்டுப்பாடுகள் பல இருப்பதை உணர முடிந்தது.

அதில் முதலாவது, “”நட்பு நாடுகளை விமர்சிக்கக்கூடாது” என்பது. பாகிஸ்தானைக்கூட இப்போது நட்பு நாடு என்றே வகைப்படுத்திவிட்டோம். தென்னாப்பிரிக்காவும் இஸ்ரேலும் நமக்கு வேண்டாத நாடுகளாக இருந்த காலம் மலையேறிவிட்டது. அப்படி என்றால், நாம் எந்த நாட்டையுமே விமர்சனம் செய்யக்கூடாது.

அதாவது, “”இராக்கை எத்தனை அடாவடியாக ஊடுருவினீர்கள் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைப் பாராட்ட வேண்டும்; எங்கள் நாட்டு என்ஜினீயர்களுக்கும் டாக்டர்களுக்கும் “”எச் 1 பி” விசா தர மறுக்கும் உங்களுடைய பண்பாடுதான் என்னே என்று வியக்க வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டையும் நாம் விமர்சிக்கக் கூடாது; இதைவிட கேலிக்குரியவர்களாக நாம் ஆக முடியுமா?

நீதித்துறையின் நேர்மையைச் சந்தேகிக்கவோ, விமர்சிக்கவோ கூடாது என்று நடத்தை நெறி கூறுகிறது. 2006-வது ஆண்டில் இந்தியாவின் கீழ் நீதிமன்றங்களில் ரூ.2,630 கோடி லஞ்சமாகக் கைமாறியது என்று “”டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்” என்ற அமைப்பு வெளியிட்ட தகவலை பத்திரிகைகள் பிரசுரிக்கலாம்; ஆனால் வானொலியோ தொலைக்காட்சியோ பயன்படுத்தக்கூடாது.

(இந்த ரூ.2,630 கோடி என்பதே குறைவு, உண்மையில் இதைப்போல பல மடங்கு லஞ்சமாகக் கைமாறுகிறது என்பதே என் கருத்து!)

வழக்குகளில் சாதகமான தீர்ப்புப் பெற லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது, வழக்கு முடிய நீண்ட காலம் காத்திருக்க நேர்கிறது என்ற தகவல்களால் நீதித்துறையையே சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் அம்சம் அதிகரித்து வருகிறது.

இதைப் பத்திரிகைகள் பிரசுரிக்கலாம்; ஆனால் வானொலி, தொலைக்காட்சிகளில் வரக்கூடாது என்பது எவ்வளவு கேலிக்கூத்தாக இருக்கிறது. பத்திரிகைகளை ஒரு மாதிரியாகவும் வானொலி, தொலைக்காட்சிகளை வேறு மாதிரியாகவும் நடத்துவது அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு அளிக்கும் சுதந்திரத்துக்கே முரணாக அமைந்துவிடும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் அல்லவா என்று கேட்டால் சரி, “”இனி பத்திரிகைகளும் பிரசுரிக்கக்கூடாது என்று கூறி விடுகிறோம்” என்ற பதில் கிடைக்கலாம்.

எவருடைய அந்தரங்க விஷயங்களிலும் தலையிட்டு, அவதூறு கற்பிக்கக்கூடாது என்பது அடுத்த கட்டுப்பாடு. இதைக் கூற இந்த கட்டுப்பாடு அவசியமே இல்லை, இது ஏற்கெனவே சட்டமே கொடுத்துள்ள அதிகாரம். அவதூறாகப் பேசினாலோ எழுதினாலோ நடவடிக்கை எடுக்க சட்டம் இடம் தருகிறது. எது அந்தரங்க வாழ்க்கை, எது பொது வாழ்க்கை என்று பிரித்துப் பார்ப்பது எப்படி?

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் லஞ்சம் வாங்குவதை படம் பிடித்தால், “”அவர் ஏதோ சொந்தச் செலவுக்காக முயற்சி எடுத்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்” என்று கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டுமா?

அரசுத் தரப்பு வழக்கறிஞரும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரும் ரகசியமாகச் சந்தித்து, குற்றஞ்சாட்டப்பட்டவரைத் தப்பிக்கச் செய்ய ஏதாவது திட்டம் தீட்டினால், வழக்கறிஞர்களுக்கும் சாட்சிக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம் அது என்று கண்ணை மூடிக்கொண்டு அப்பால் போய்விட வேண்டுமா? தனிப்பட்ட வாழ்க்கையையும் லஞ்ச, ஊழல் நடவடிக்கைகளையும் பிரிக்கும் கோடு எது?

“”உள்ளதை உள்ளபடியே காட்டும் கேமரா” என்று தொலைக்காட்சிகளில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வீதியிலும் பொது இடங்களிலும் அப்பாவிகள், தங்களை ஒரு கேமரா கண்காணிக்கிறது என்று தெரியாமல், பித்துக்குளித்தனமாக நடப்பதைப் படம் பிடித்து ஒளிபரப்புகின்றனரே அதுவல்லவோ, தனிப்பட்ட வாழ்க்கையில் குறுக்கிடும் சம்பவம்! அதை அனுமதித்துவிட்டு மற்றதைத் தடுப்பது எதற்காக? லஞ்சம், ஊழல்களை யாரும் அம்பலப்படுத்திவிடாமல் தடுப்பதற்காகவா?

லஞ்சமும் ஊழலும்தான் அன்றாட வேலைகள் என்றாகிவிட்ட நாட்டில், இந்த நாட்டை ஆள்கிறவர்கள் எப்படிப்பட்ட சுயநலவாதிகள், மோசடிப் பேர்வழிகள் என்பதை மக்களுக்கு அவ்வப்போது நினைவூட்ட, ஊழலை அம்பலப்படுத்தும் இத்தகைய நிகழ்ச்சிகள்தான் உதவுகின்றன.

ஊழல்பேர்வழிகள் தயக்கமின்றிக் கொள்ளையடிக்கவா இந்த கட்டுப்பாடுகள்? அரசின் நடத்தை நெறிகளின் நோக்கமோ அல்லது விளைவோ இதுவாக இருந்தால் அது மிகவும் துயரகரமானது.

நடத்தை நெறியின் மற்றொரு அம்சம் சுவாரஸ்யமானது. தேசியத் தலைவர்கள் அல்லது மாநிலத் தலைவர்களின் உடலமைப்பு பற்றிய காட்சிகளை ஒளிபரப்புவதில் எச்சரிக்கை தேவை என்கிறது.

அதாவது இந்திரா காந்திக்கு முடி நரைத்துவிட்டதையோ, வாஜ்பாய் பேசும்போது திடீரென சில விநாடிகளுக்குத் தொடர்ந்து மெüனமாக இருப்பதையோ காட்டக்கூடாது!

இப்படிப்பட்ட தேசியத் தலைவர்களை இஷ்டப்படி கேலிச்சித்திரமாக வரைந்துதள்ளும் சுதந்திரம் பத்திரிகைகளுக்கு உண்டு, தொலைக்காட்சிகளுக்குக் கிடையாது என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

தாமதப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி என்பது முதுமொழி. ஒவ்வொரு கட்டத்திலும் வழக்கு வாய்தா வாங்குவதே நமது நீதிமன்ற நடைமுறைகளின் தனிச்சிறப்பு. ஜெயலலிதா, லாலு பிரசாத் மீது ஏகப்பட்ட வழக்குகள் இருந்தாலும் அவர்கள் தலைவர்களாக நீடிக்கவும் ஆட்சி செய்யவும் சட்டபூர்வ தடை ஏதும் இல்லை.

இந்த வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடக்கும், அவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள்தானா அல்லது குற்றம் செய்தவர்களா என்பதைத் தெரிவிக்காமலே அவர்களைத் தொடர்ந்து ஆளவிடுவது சரியா? அவர்கள் நல்லவர்கள் என்றோ குற்றவாளிகள் என்றோ நான் கூறவில்லை; ஆனால், அப்படிப்பட்டவர்களின் உண்மையான நிலைமை என்ன என்பது மக்களுக்குச் சந்தேகம் இல்லாமல் தெரிய வேண்டாமா?

அவதூறாகவோ, உள்நோக்கத்துடனோ பேசினால், எழுதினால் தண்டிக்க சட்டங்கள் உள்ளன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்குத் தொடுக்க முன்வருவதில்லை. நீதிமன்ற நடைமுறையால் வழக்கு தாமதம் ஆவது முக்கிய காரணம்.

இந்நிலையில் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் இச்செய்திகள் இடம் பெறுவதைத் தடுப்பதென்பது, பொது மக்களின் கண்களுக்குத் தெரியாமலேயே பல முறைகேடுகள் நடந்து முடிக்கச் சாதகமாக போடும் புகைத் திரையாகவே மாறிவிடும். முறைகேடுகள் வெளியே தெரியக்கூடாது, அவற்றை எதிர்த்து யாரும் வழக்கு போட்டுவிடக்கூடாது என்பது அரசின் நோக்கமாக இருக்காது என்றே நம்புகிறேன்.

அரசு தனது புதிய நடத்தை நெறிகளை வானொலி, தொலைக்காட்சி நிர்வாகிகள் மீது திணிக்க முற்பட்டால், ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் அந்த நெருக்குதல்களை எதிர்க்க முடியாமல் பணிந்து போகக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிடும். வானொலி, தொலைக்காட்சி நடத்தவும் விரிவுபடுத்தவும் மத்திய அரசின் தயவு அவர்களுக்குத் தேவை.

வானொலி, தொலைக்காட்சிக்கான புதிய கட்டுப்பாடுகள் என்பவை அரசுக்கும் தனியார் ஒளி, ஒலிபரப்புக்காரர்களுக்கும் இடையிலே மட்டும் உள்ள ஒரு விவகாரம் அல்லவே? இதில் மக்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. ஒலிபரப்பாவது அனைத்தும் மக்களுக்காகவே. மக்களின் நலன்தான் முக்கியமானது; நடத்தை நெறி என்ற பெயரில் தகவல் பெற மக்களுக்கு உள்ள உரிமையை எந்த வகையிலும் தடுக்கக் கூடாது.

ஜனநாயக நாட்டில் எந்தவொரு அமைப்பும் மக்களின் ஆய்வுக்கு அப்பாற்பட்டது அல்ல.

நாட்டின் முக்கிய நபர்கள் மீதும் அமைப்புகள் மீதும் தொலைக்காட்சி கேமராக்களின் வெளிச்சம் தடையின்றிப் பாயட்டும். அது நீதித்துறையாக இருந்தாலும், சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த சட்டமன்ற, நாடாளுமன்ற அமைப்புகளாக இருந்தாலும், அரசின் பொது நிர்வாகமாக இருந்தாலும் -அது எதுவாக இருந்தாலும் மக்களின் பார்வைக்கும் விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)

Posted in abuse, Advocate, Attorney, Bribery, Bribes, Cartoons, Censor, Censure, Citizen, Collusion, Corruption, Courts, Defamation, Defame, Democracy, Ethical, ezine, FM, Freedom, Govt, HC, Independent, journalism, Journals, Judges, Justice, kickbacks, Law, Lawsuits, Leaders, Magazines, Mags, Media, Moral, MSM, NDTV, News, Newspaper, Order, Party, Police, Politics, Power, Preempt, Press, Prohibit, Radio, Republic, Research, SC, Shackles, Sting, Survey, Television, TI, Transparency, TV | Leave a Comment »

Annamalai – The life and the path of Mahathma Gandhi

Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007

காந்தியடிகளின் சத்திய வாழ்க்கை சாத்தியமா?

அண்ணாமலை

எளிமையான வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை என வாழ்ந்து காட்டியவர் காந்தியடிகள். பிரிவினையால் பிளவுபட்டு நின்ற பாரத தேசத்தில் தன்னுடைய இன்னுயிரையே கொடுத்து அமைதியை ஏற்படுத்தி நாம் வாழ வழிகாட்டிச் சென்ற உத்தமர் காந்தியடிகள்.

அவர் நம்மிடைய இருந்து பிரிந்து இன்றோடு 49 ஆண்டுகள். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம். இன்றும் காந்தி என்ற சொல் மந்திரச்சொல் போல் உலக நாடுகளிலெல்லாம் பேசப்படுகிறதே. ஏன்? அவர் வாழ்க்கை அப்படி என்ன சிறப்புப் பண்புகளைக் கொண்டிருந்தது என்பதை அவருடைய நினைவு நாளான இன்று சிந்தித்துப் பார்ப்பது எதிர்காலச் சந்ததியினருக்கு மிகவும் அவசியம்.

போராட்டம் என்றால் ஒன்று வெற்றியாக இருக்கும் அல்லது தோல்வியாக இருக்கும். ஆனால் இரண்டையும் கடந்து நாம் யாரை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறோமோ அவர்களையும் வெற்றியடையச் செய்து நாமும் வெற்றிபெற உன்னத வழியைக் காண்பித்தவர் காந்தியடிகள்.

ஆகவேதான் , உப்புச் சத்தியாகிரகத்தின்போது வைஸ்ராயாக இருந்த லார்டு இர்வின் கூறுகிறார், “”நீங்கள் காந்திஜியை ஒருபோதும் நம்பக்கூடாது என்று என்னிடம் கூறியிருக்கிறார்கள். நான் அறிந்தவரை அவரைக் கட்டாயம் நம்பலாம், நான் நம்பினேன் என்றே சொல்லுவேன். எத்தனையோ தடவைகள் எங்கள் பேச்சுகளுக்கிடையில், நான் சில விஷயங்களை உங்களிடம் சொல்லப் போகிறேன். நீங்கள் உங்கள் மனத்திலேயே இதையெல்லாம் வைத்திருக்க வேண்டும். உங்களை நம்பிச் சொல்லுகிறேன் என்று காந்திஜியிடம் சொல்லியிருக்கிறேன். அப்படிச் சொன்னவைகளில் ஒரு வார்த்தை கூட அவர் வாயிலிருந்து ஒரு நாளும் எந்த இடத்திலும் வெளிவந்ததில்லை” என்று கூறுகிறார். எதிரியையும் நம்ப வைக்கும் சாதுர்யம் காந்தியடிகளுக்கு எப்படி வந்தது?

இதேபோல் தென்னாப்பிரிக்காவில் 21 ஆண்டுகளாக இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடிய பின்னர் இந்திய நாட்டிற்குத் திரும்பும் செய்தி அறிந்த தென்னாப்பிரிக்க உயர் அதிகாரி, “”எங்களுக்குத் தேவையேற்படும் பொழுதெல்லாம் நீங்கள் எங்கள் உதவிக்கு வருகிறீர்கள். நீங்கள் வன்முறைக்குச் செல்ல மாட்டீர்களா என்று எண்ணுவதுண்டு. ஆனால் கஷ்டங்களையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொண்டு எங்களையல்லவா நிராயுதபாணியாக்கி விட்டீர்கள்,” என்றார் ஜெனரல் ஸ்மட்ஸின் செயலர்.

செயலாளர் இப்படிக் கூறுகிறார்; ஆனால் ஜெனரல் ஸ்மட்ஸ் என்ன சொல்லுகிறார்? தென்னாப்பிரிக்காவின் ஜெனரல் ஸ்மட்ஸýக்கு, தான் சிறையிலிருந்தபோது செய்த செருப்பை விடுதலையாகும்போது பரிசாக வழங்கினார் காந்தி. “”அதை நான் பல நாள் போட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் இப்பொழுதெல்லாம் அவ்வாறு செய்வதில்லை. அந்த உயர்ந்த மனிதரால் செய்த காலணி மீது நிற்க பொருத்தமானவனா என்று எண்ணுகின்றேன்” என்று கூறி ஜெனரல் ஸ்மட்ஸ் அவற்றை இந்தியாவிற்கே திருப்பி அனுப்பி விட்டார். அவை இன்றும் மும்பையிலுள்ள மணிபவனில் உள்ளது.

காந்தியடிகளை நேரில் காணாமலே அவர் மேல் அளவு கடந்த அன்பு செலுத்தியவர் ரொமெய்ன் ரோலண்டு எனும் பிரெஞ்சு நூலாசிரியர். அருமையான வாழ்க்கை வரலாற்றை எழுதி மேலை நாடுகளில் காந்தியடிகளின் புகழ் பரவக் காரணமாக இருந்தவர்.

மேடம் ஸ்லேடு (மீரா பென்) என்ற பெண்மணியை காந்தியடிகளிடம் அனுப்பிய பெருமையும் இவரையே சாரும். வட்டமேஜை மாநாடு முடிந்து சுவிட்சர்லாந்தில் ரொமெய்ன் ரோலண்டை காந்தியடிகள் சந்திக்கிறார். காந்தியடிகளை முதன் முதலாகப் பார்க்கும்போது அப்படியே ஆரத்தழுவிக் கொண்டனர் இருவரும். அதைப்பற்றி கூறும்போது ஏதோ புனிதர் பிரான்சிஸ் ஆப் அசிசியையே தழுவிக் கொண்ட உணர்வு ஏற்பட்டது என்கிறார் ரொமெய்ன் ரோலண்டு.

வன்முறைக்குப் பெயர்பெற்ற பத்தானியர் பிரிவைச் சேர்ந்தவர் கான்அப்துல் கபார்கான். சிலர் அவரிடம் நீ ஓர் இஸ்லாமியராக இருந்து கொண்டு காந்தியடிகளுடன் இருக்கலாமா என்று கேட்கிறார்கள். “உணவு இல்லாதவர்களுக்கு உணவும் உடை இல்லாதவர்களுக்கு உடையும் கொடுக்கச் சொன்னார் நபிகள் பெருமான். காந்தியடிகளும் அதைத்தானே செய்கிறார்’ என்று கூறுகிறார் கபார்கான். எத்தனை ஆழமான தெளிவான பதில்!

காந்தியடிகளின் அகிம்சைப் போராட்டத்தில் ரகசியத்திற்கு இடமேயில்லை. உப்புச்சத்தியாகிரகம் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு மைல்கல். உப்புச் சத்தியாகிரகத்தை எப்படி நடத்துவது என்ற திட்டமிடும் கூட்டம். ரகசிய போலீஸôர் சபர்மதி ஆசிரமத்தைச் சுற்றி வருகிறார்கள்.

காந்தியடிகள் அவர்களையும் அழைத்துத் திட்டமிடும் கூட்டத்தில் அமர்த்தி, குறிப்பையும் எடுக்கச் சொல்லி விடுகிறார். உப்புச் சத்தியாகிரகத்தில் யார் யார் கலந்து கொள்கிறார்கள், எந்த வழியில் யார் ஏற்பாட்டில் நடக்கிறது, யார் யார் பொறுப்பாளர்கள் என்று அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் எந்த ஒரு ரகசியமும் இல்லாமல் தெரிவித்துவிட்டார். இனிமேல் எதிராளி என்ன செய்வார்? காந்தியடிகளை நம்பித்தானே ஆக வேண்டும். நம்முடைய வாழ்க்கை எந்தவோர் ஒளிவு மறைவுமின்றி இருந்துவிட்டால் பரஸ்பர நம்பிக்கை வளரத்தானே செய்யும்?

வன்முறைக்கு முக்கியக் காரணம் நம் அடிமனத்திலிருக்கும் பய உணர்ச்சியே. காந்தியடிகளின் வாழ்க்கை இந்தியர்களுக்குக் கொடுத்த கொடை எது என்றால் அது நிச்சயமாக ஓர் அச்சமற்ற வாழ்க்கையைத்தான் என்று சொல்லலாம்.

ஜனவரி 30-ல் சுடப்பட்டு இறப்பதற்கு 10 நாள்களுக்கு முன்னர் சிலர் கையெறி குண்டு வீசி காந்தியடிகளைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். குண்டு வெடிக்கிறது. அந்தச் சத்தம் கேட்கிறது. மக்களைப் பார்த்து அமைதியாய் இருங்கள், அமைதியாய் இருங்கள் என்று காந்தியடிகள் கூறுகிறார். மக்களும் அமைதியாகக் குண்டு வெடித்த இடத்திலேயே அமர்ந்து அவர்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“”காந்தியடிகள் துவேஷமோ பகையோ பாராட்டாதவர். அவருக்கு வெறுப்புணர்ச்சியும் இல்லை. பிறரை வெறுக்கவே அவரால் முடியாது” என்று அறிஞர் லூயி பிஷர் கூறுகிறார். எதிரியையும் நேசி என்ற சொல்லாக்கத்தையும் தாண்டி எதிரியாகவே யாரையும் எண்ணாதவர்தான் காந்தி.

இந்திய சமூகம் ஒற்றுமையாக வாழ வேண்டும், அனைத்துச் சமூகப் பிரிவினரும் எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் இன்றி வாழ வேண்டும் என்று அனுதினமும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர் காந்தியடிகள். மானுட சமுதாயம் ஓர் எல்லையில்லா பேரின்பத்தை அடைய வழிகாட்டியவர்.

இன்றைய இளைஞர்கள் காந்தியடிகளின் நற்கருத்துகளை கவனத்துடன் தெரிந்துகொண்டு, தன்னலமற்ற சேவைக்கு அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர்: இயக்குநர், காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம், தி.நகர், சென்னை).

Posted in Dinamani, Fasting, Gandhi, History, Honesty, Independence, Life, Mahathma Gandhi, Mahathma Gandi, Mahatma Gandhi, Mahatma Gandi, Peace, Satyagraha, Transparency | Leave a Comment »