Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Translations’ Category

Writer Tha Naa Kumarasamy – Biosketch, Profile: Charukesi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

தொடர்கட்டுரை  – எழுதுங்கள் ஒரு கடிதம்!

சாருகேசி

தமிழ் எழுத்தாளர் த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைச் சென்ற வாரம் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில், சுமார் நூறு பேரே கலந்துகொண்ட மிக எளிமையான நிகழ்ச்சியாக, அவர் குடும்பத்தினர் கொண்டாடினார்கள். அவருடைய உறவினர்கள் சிலருக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்கள்.

த.நா. குமாரசுவாமியின் மகன் அசுவினிகுமார் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், த.நா.கு.வுடன் நெருங்கிப் பழகிய சா. கந்தசாமி பேசும்போது, அவருடைய எளிமையையும் நட்புணர்வையும் நினைவுகூர்ந்தார். ஒருமுறை ஆனந்தகுமாரசாமியின் “த டான்ஸ் ஆஃப் சிவா’ என்ற நூல் தமக்குத் தேவைப்படுகிறது என்றாராம் கந்தசாமி. பரணில் இருந்த பெட்டியில் இருந்து புத்தகத்தைத் தேடி எடுத்துக்கொண்டு இரண்டு மாடி ஏறி வந்து கொடுத்தாராம் குமாரசுவாமி.

“”த.நா. குமாரசுவாமியின் நூல்கள் இப்போது அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டன. நான் க.நா.சு.வின் நூல்களும், த.நா. குமாரசுவாமியின் நூல்களும், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் நூல்களும் அரசுடைமை ஆக்கப்படவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வரும். அப்படியும், என் கடிதம் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களிடத்தில் சேர்ந்து, உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. நான் செலவழித்தது என்னவோ ஏழே ரூபாய்தான். அதேபோல, சாகித்திய அகடமிக்கு நீங்களும் ஒரு கடிதம் எழுதுங்கள். “த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கடிதம் எழுதி அனுப்புங்கள். அவர்கள் அதைக் கவனிப்பார்கள். அவருடைய நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் சோம்பல்பட்டு, கடிதம் அனுப்பாமல் மட்டும் இருக்கக் கூடாது!” என்றார் சா. கந்தசாமி.

இன்றைய தலைமுறைக்கு த.நா. குமாரசுவாமி என்ற ஓர் எழுத்தாளர் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. ஆனால் அவருடைய ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா முதலிய நாவல்களையும், சந்திர கிரகணம், கன்யாகுமரி, இக்கரையும் அக்கரையும், நீலாம்பரி ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் படித்தவர்கள், அவர் கையாண்ட தமிழ் நடையில் சொக்கிப் போய் விடுவார்கள். “அரசு’ பதில்களில் ஒரு முறை எஸ்.ஏ.பி. த.நா. குமாரசுவாமியின் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, த.நா.கு. மட்டும் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல், தேர்ந்தெடுத்த தமிழ் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து எழுதுவார்’ என்று கூறியிருக்கிறார்.

வங்க நாவலாசிரியர் பங்க்கிம் சந்திரரின் “விஷ விருட்சம்’, “ஆனந்த மடம்’, “கபால குண்டலா’, “கிருஷ்ணகாந்தன்’, “உயில்’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்தவர். தாகூரின் நாவல்கள், சிறுகதைகளையும், பின்னர் தாரா சங்கர் பானர்ஜியின் “ஆரோக்கிய நிகேதன்’ முதலிய நாவல்களையும் த.நா.கு. மொழி பெயர்த்திருக்கிறார்.

ஏ.கே.செட்டியார் காந்திஜி பற்றிய டாகுமென்டரி படத்தைத் தயாரித்தபோது, விளக்க உரையை எழுதிக் கொடுத்தவர் த.நா.கு.

நேதாஜியின் “புது வழி’, “இளைஞன் கனவு’ ஆகிய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். காந்திஜியின் நூல்களைத் தமிழில் வெளியிட அமைக்கப்பட்ட குழுவில் அவரும் பணியாற்றியிருக்கிறார். அவருடைய நூல்கள் மட்டுமல்லாது, வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். (கருத்து வேறுபாடு காரணமாக, பிறகு அந்தப் பணியிலிருந்து விலகி வந்துவிட்டாராம்.)

அவருடைய சிறிய நாவல் “ஒட்டுச் செடி’ கிராமப்புறத்துக் காதல் காவியம். பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்படும்போது வீட்டையும் கிராமத்தையும் இழந்து வரும் விவசாயியின் பின்புலம் கொண்ட கதை. முடிவு புரட்சிகரமான முடிவு. இன்றைய நவீன எழுத்தாளர் எவரும் கூட நினைத்துப் பார்கக முடியாதபடி அமைந்திருந்தது. (திரைக்கதை தேடி ஓடுபவர்கள் “ஒட்டுச் செடி’ நாவலை ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்!)

காந்திஜியின் கொள்கைகளில் இயற்கையாகவே ஈடுபாடு கொண்டவர் த.நா.கு.

“”சென்னையை அடுத்த பாடி கிராமத்தில், தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஓர் ஏக்கரை ஜாதிக் கலவரத்தால் வீடுகளை இழந்த ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கி, அகிம்சை முறையில் தங்களுடைய உரிமைகளை நிலை நாட்டத் தூண்டினார் த.நா.கு. ஊர் மக்கள் அவரை “காந்தி ஐயர்’ என்று அழைத்தனர்.

“”சிவன் கோயில் பல்லக்கில் காந்திஜியின் படத்தை வைத்து ஊர்வலமாக ஊர் வீதிகளில் வலம் வந்த பிறகு, சேரிப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய போது, சாதிக் கட்டுப்பாட்டை மீறி நாங்கள் வர முடியாது என்று மேட்டுக் குடியினர் மறுத்தனர். நானும் என்னுடைய இரு சகோதரர்களும் மற்றும் ஓர் உறவினரும் பல்லக்கைத் தூக்கி, ஆதி திராவிடர் வசித்த தெருவில் கொண்டு நிறுத்தினோம். அப்போது அந்த மக்களின் உள்ளத்தில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது” என்று த.நா.கு. கூறியதாக, அவருடைய டைரி குறிப்புகளிலிருந்து “சக்தி’ சீனிவாசன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

“”சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தாயுமானவர், ராமலிங்க சுவாமிகள், பாரதியார் ஆகியோர் பாடல்களில் அவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது. சங்கக் கவிதைகள் பலவற்றை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்” என்கிறார் சா. கந்தசாமி. அப்படியானால் ஏ.கே. ராமானுஜன் மொழிபெயர்ப்புக்கு முன்னேயே த.நா.கு.வின் கவிதைகள் வெளியாகி இருக்க வேண்டுமே? “”பிரசுரம் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே இல்லை!” என்கிறார் கந்தசாமி, தன் கட்டுரையில்.

காஞ்சிப் பெரியவர் பக்தர்கள் சிலருடன் பாடியில் வசித்த த.நா.குமாரசுவாமியின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். அவருடைய எதிர்பாராத வருகை த.நா.கு. குடும்பத்தினரை மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியதாம். “த ஏஜ் ஆஃப் சங்கரா’ என்ற நூலை த.நா.கு.வின் தகப்பனார் எழுதியிருந்தார். அதில் பல புதிய தகவல்களைச் சேர்த்து முழுமையான ஆய்வு நூலாக த.நா.கு. உருவாக்கினார் என்று கூறுகிறார் “சக்தி’ சீனிவாசன்.

சுமார் 25 மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர் த.நா.கு. அவருடைய குமாரர் அசுவினிகுமார் தம் தந்தை பற்றி எழுதிய நூல் ஒன்றை சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கிறது. தவிர, மறைந்த எழுத்தாளர் “முகுந்தன்’ இலக்கியச் சிந்தனைக்காக எழுதிய “குடத்திலிட்ட விளக்கு’ என்ற வானதி பதிப்பக வெளியீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாயிற்று.

தேவனின் இனிய நண்பர் த.நா.குமாரசுவாமி. விகடன் தீபாவளி மலர் தயாரிக்கும் சமயம் த.நா.கு.வுடன் கலந்து ஆலோசனை செய்ய, வீடு தேடி வருவாராம்.

தாகூரை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார் த.நா.குமாரசுவாமி. ஆனால் சாந்திநிகேதனில் தங்கி, வங்காள மொழி கற்க முயன்றும், அங்கே போதிய ஆதரவு கிடைக்காததால், தாமே பிறகு அம்மொழியைக் கற்றவர்.

இத்தனை தகுதிகள் இருக்கிற ஓர் எழுத்தாளரின் நூற்றாண்டு விழாவை விரிவாக, கருத்தரங்கம், ஆய்வுரைகள், சொற்பொழிவுகள் என்று குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் கொண்டாடலாம். சாகித்திய அகாதெமி கொண்டாடுகிறதோ இல்லையோ, தமிழ் எழுத்தாளர் சங்கம் கொண்டாடலாம். தமிழ் அன்பர்கள் கொண்டாடலாம். த.நா.கு.வின் படைப்புகளை ரசித்த நண்பர்கள் கொண்டாடலாம். தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் இவரைக் கண்டுகொள்ளாததுதான் வருத்தம் தரும் செய்தி.

“கல்கி’, உ.வே.சா., மஞ்சேரி ஈசுவரன், பி.எஸ். ராமையா, க.நா.சு., கி.வா.ஜ. தவிர தம் சகோதரர் த.நா. சேனாபதி ஆகியோரைப் பற்றி நிறையப் பேசுவாராம். ஆனால் அவர் நெருங்கிப் பழகி, அதிகம் குறிப்பிடுவது “தேவன்’ பற்றியும், “மர்ரே’ ராஜம் பற்றியும்தான் என்கிறார் சா. கந்தசாமி.
———————————————————————————————————————————————-

சாரா ஆப்ரகாம் எண்பது வயதுப் பெண்மணி. பெங்களூரில் பெரிய ஆர்ட் காலரி நடத்தி வந்தார். அந்த காலரியிலேயே நடன நிகழ்ச்சிகளும் கூட நடத்தியிருக்கிறார். அவருடைய 80-வது வயதைக் கொண்டாடுகிற வகையில், அவர் ஐம்பது ஆண்டுகளாகச் சேர்த்திருந்த ஓவியங்களை சென்னையில் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள “கேலரி சுமுகா’வில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.பிப்ரவரி மாதம் 23ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் கண்காட்சியைக் காணலாம்.

லட்சுமண் கெüட், கே.ஜி.சுப்பிரமணியன், எம்.எஃப். ஹூசைன், பி.வி. ஜானகிராமன், கிருஷேன் கன்னா, ராம்குமார் என்று வெவ்வேறு பிரபல ஓவியர்களின் ஓவியங்களில், தனித்துத் தெரிகிற மூன்று ஓவியங்கள் இருக்கின்றன.

ஒன்று ரவிவர்மாவின் ஓவியம். ஒரு பெண் உல்லாசமாக அமர்ந்திருக்கிறாள். ஆனால் என்ன ஒய்யாரம்!

இரண்டாவது ஷ்யாமல் தத்தா ரே வரைந்தது. ஒரு பெரிய, சிதைந்த பாத்திரம். ஆளுயர தடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காப்பது போல் நிற்கும் மனிதர்கள்.

மூன்றாவது, மிகப்பெரிய குடும்பச் சித்திரம். சாரா ஆபிரகாம் கணவர், குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் இந்த ஓவியத்தின் தத்ரூபம் நம்மை அசத்துகிறது. ஓவியர் பிகாஷ் பட்டாசார்ஜி.

புரியாத ஓவியங்கள் என்று ஒன்றிரண்டு இருக்கின்றன. (நமக்குப் புரியவில்லை என்பதற்காக அவை ஓவியங்களாக இல்லாமல் போய்விடுமா என்ன?)

ஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து ஓவியங்களைச் சேகரித்து வைத்திருக்கும் சாராவை, எம்.எஃப். ஹூசைன் ஓர் ஓவியமாக வரைந்திருக்கிறார்!

Posted in artists, Arts, Author, Biosketch, Chaarukesi, Charukesi, Coomarasaami, Coomarasaamy, Coomarasami, Coomarasamy, Devan, Display, Exhibitions, Faces, Famous, Gallery, Gandhi, Kumarasaami, Kumarasaamy, Kumarasami, Kumarasamy, Kumaraswami, Kumaraswamy, Mahatma, names, Painters, Paintings, people, profile, Translations, Translator, Works, Writer | Leave a Comment »

Interview with Writer Meena Kandhasamy – Translator, English Author from Tamil Nadu

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

முகங்கள்: இரண்டு மடங்கு பணி! நான்கு மடங்கு வேகம்!

அவர் ஐந்து புத்தகங்களைத் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஆங்கிலத்தில் அவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதற்குப் புகழ்பெற்ற எழுத்தாளர் கமலாதாஸ் முன்னுரை எழுதியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் நிறையக் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் எழுதியிருக்கிறார்.

அவர் 24 வயதேயான மீனா கந்தசாமி. இவ்வளவு சிறிய வயதில் இத்தனை புத்தகங்களை, அதுவும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ஒரே தமிழ்ப்பெண்ணாக இவர்தான் இருக்கக்கூடும்.

பாடப்புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு ஓய்ந்துவிடுவது அல்லது வெற்றுப் பேச்சுகளில் மூழ்குவது என்றிருக்கும் நமது இளம்வயதினரிடையே மீனா கந்ததாமி ஒரு வித்தியாசமான பெண்ணாய்த் திகழ்கிறார்.

ஆங்கிலத்தில் முதுகலை பயின்றிருக்கும் அவர் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி.

மீனா கந்தசாமியை அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். நேரில் பார்க்கும்போது நமது ஆச்சரியம் இன்னும் அதிகமாகிவிடுகிறது.

உங்களுடைய புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

நான் தமிழில் இருந்து 5 புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். அதில் இரண்டு புத்தகங்கள் தொல்.திருமாவளவனுடையது. அவர் இந்தியா டுடே இதழில் எழுதிய 34 கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். அது நூலாக வெளியாகியுள்ளது. அப்போது எனக்கு வயது 19. அதுபோல அவருடைய சொற்பொழிவுகளை மொழிபெயர்த்தேன். அதுவும் புத்தகமாக வெளிவந்துள்ளது. தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டிக்காக ஒரு புத்தகமும், நக்கீரன் கோபாலின் புலனாய்வு இதழியல் குறித்த புத்ககம் ஒன்றையும் மொழிபெயர்த்தேன். கவிஞர் காசி ஆனந்தனின் “நறுக்குகள்’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.

நான் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் “டச்’ என்கிற பெயரில் 2006 இல் வெளிவந்தது. அதற்கு பிரபல எழுத்தாளர் கமலாதாஸ் ஓர் அருமையான முன்னுரை கொடுத்துள்ளார். அவர் கைப்பட எழுதிய அந்த முன்னுரையை நான் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

இதுதவிர ஆங்கிலத்தில் நிறையச் சிறுகதைகள் எழுதிவருகிறேன். அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடும் எண்ணம் உள்ளது.

இவ்வளவு சிறிய வயதில் இப்படிக் கடுமையாக உழைக்கிறீர்களே, என்ன காரணம்?

சமூகத்தில் பலருக்கும் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மற்றவர்களுடைய பாதிப்புகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்.

நமது நாட்டில் வாய்ப்புகள் ஓர் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. வாய்ப்புகளை யார் போய் அள்ளிக் கொள்கிறார்களோ அவர்களே முன்னேற முடியும். வாய்ப்புகளை அள்ளிக் கொள்ள பிறரைவிட 2 மடங்கு வேலை செய்ய வேண்டும். 4 மடங்கு வேகமாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் சாதிக்க முடியும். ஏனென்றால் சமூக ஏற்றத் தாழ்வு காரணமாக நமது சமூகத்தில் எல்லாருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. எல்லாருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் நிலை வந்தால் இப்படிக் கஷ்டப்படத் தேவையிருக்காதோ, என்னவோ?

உங்களுக்குத் தாய்மொழி தமிழாக இருக்கும்போது ஆங்கிலத்திலேயே எழுதுகிறீர்களே?

தமிழில் நிறையப் பேர் எழுதுகிறார்கள். அவர்கள் செய்யும்போது நான் எதற்கு? ஆங்கிலத்தில் நான் எழுதக் கூடிய விஷயங்களை எழுதுபவர்கள் மிகவும் குறைவு. எனவே ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

மேலும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் பெரும்பாலோர் உண்மையான இந்திய வாழ்க்கையைக் காட்டுவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த உலகத்தை அவர்களுடைய கோணத்தில் காட்டுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இடத்தை அவர்கள் கொடுப்பதில்லை. இந்தியா என்றால் தாஜ்மஹால் உள்ள நாடு என்பது போல சர்வதேச அளவில் இந்தியாவின் முகத்தைக் காட்டுகிறார்கள். இது, இருக்கிற நிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்ற விருப்பத்தைக் காட்டுவதாகத் தெரியவில்லை. எனவே இந்தியாவின் உண்மையான நிலை இந்திய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் தெரிய வேண்டும். அதன்மூலம் பின்தங்கியுள்ள மக்கள் வளர்ச்சி நோக்கி மேல் எழுந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

நிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கும் இளம்வயதினருக்கு உண்மையான நாட்டுநிலை கண்ணில் தெரிய வேண்டும் என்பதற்காகவும் ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

கவிதையில் நாட்டம் ஏன்?

ஒரு விஷயத்தைக் கூர்மையாகவும், அந்த விஷயத்தின் சாரத்தையும் சொல்ல கவிதை ஒரு நல்ல வடிவம்.

எனது கவிதைகள் பெரும்பாலும் அரசியல் கவிதைகள். சமூகம் சார்ந்த கவிதைகள். காதல் கவிதைகள் சில எழுதியிருக்கிறேன். ஆனால் அதிலும் ஒரு சமூகம் சார்ந்த பார்வையிருக்கும்.

கவிதை மொழியைக் கொண்டு செயல்படுவது. மொழியை மறுஉருவாக்கம் செய்யக்கூடியது.

மொழி என்பது எல்லாருக்கும் பொதுவான ஒரு கருவி என்றாலும் அதைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்குச் சாதகமாக அதைப் பயன்படுத்த முடியும். மொழியைப் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆணாதிக்கத்தன்மை இப்போது உள்ளது. எனவே பெண்ணியம் சார்ந்த கவிதைகள் அதற்கான புதிய மொழியை உருவாக்கி மொழியை மறுஉருவாக்கம் செய்கின்றன என்று சொல்லலாம்.

சிறுகதை நூல் வெளியிடப் போவதாகச் சொன்னீர்கள். அதைப் பற்றி?

டெல்லியில் உள்ள ஸýபான் பதிப்பகம் 40 வயதுக்குக் கீழ் இருக்கும் இந்தியப் பெண் எழுத்தாளர்கள் 21 பேரின் சிறந்த கதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. அதில் நான் எழுதிய சிறுகதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. ஒரு பத்துக் கதைகள் சேர்ந்துவிட்டால் ஒரு தொகுப்புக் கொண்டுவரலாம் என்றிருக்கிறேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்கில இலக்கியத்தில் இடம் தருவதற்காகப் புத்தகம் எழுதுவதாகச் சொல்கிறீர்கள். அதை அவர்களுடைய தாய்மொழியில் எழுதுவதுதானே சிறந்தது?

பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்ய நேரடியான களப்பணியில் ஈடுபடுவதே சரி. புத்தகம் எழுதுவது சரியாகாது. நான் அவர்களுடைய வாழ்க்கையை, பிரச்சினைகளை எனது புத்தகங்களில் பதிவு செய்கிறேன்.

என்னை மாதிரி வாழ்நிலை உள்ளவர்களுக்கு } ஆங்கிலம் படித்தவர்களுக்கு } என்னுடைய கருத்துகள் போய்ச்சேர வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் புத்தகங்களை எழுதுகிறேன். கட்டுரைகளை எழுதுகிறேன்.

இதற்கு ஆங்கிலத்தை ஒரு கருவியாக நான் பயன்படுத்துகிறேன்.

படங்கள் : ஏ.எஸ். கணேஷ்

Posted in Anna, Authors, English, Essays, Fiction, Interview, Kamaladas, Kamaladoss, Kandasamy, Kandhasami, Kandhasamy, Kanthasami, Kanthasamy, Kasi Anandhan, Kasi Ananthan, Literature, Meena, Nakkeeran, Nakkiran, Ph.d, Poems, Researchers, Reviews, Story, Tamil Nadu, TamilNadu, Translations, Translators, Writer | Leave a Comment »

Amrutha Publications: Interview with Prabhu Thilak on Chennai Book Fair 2008

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

முகங்கள்: படித்தது மருத்துவம் பிடித்தது புத்தகம்!

அவர் எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர். தற்போது சேலம் வினாயக மிஷன்ஸ் கிருபானந்தவாரியார் மருத்துவக் கல்லூரியில் மயக்க மருந்தியல்துறையில் எம்.டி.படிக்கும் மாணவர். ஆனால் அவர் புத்தகங்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார். அம்ருதா பதிப்பகம் என்கிற பெயரில் நல்ல நூல்களைத் தேடிப் பிடித்துப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் பிரபுதிலக்.

அவர் காவல்துறை உயர் அதிகாரியும் எழுத்தாளருமான திலகவதியின் மகன்.

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கான புத்தக வெளியீட்டில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்…

“”நான் படித்தது மருத்துவம் என்றாலும் இலக்கியங்களில் எனக்கு ஈடுபாடு அதிகம். காரணம் எங்கள் வீட்டு கிச்சன் முதல் பெட்ரூம் வரை புத்தகங்கள் எப்போதும் இருக்கும். அம்மா ஒரு பெரிய இலக்கியவாதி. இந்தச் சூழலில் வளர்ந்த எனக்குப் புத்தகங்களின் மேல் எப்போதும் விருப்பம் அதிகம்.

அம்ருதா அறக்கட்டளையின் சார்பாக இந்தப் பதிப்பகத்தை 2005 இல் ஆரம்பித்தோம். இதுவரை 40க்கும் மேற்பட்ட தலைப்பில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம்.

ஏற்கனவே நிறையப் பதிப்பகங்கள் இருக்கின்றன. எனவே நாங்கள் புத்தகப் பதிப்பில் இறங்கும் போது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம்.

புத்தக வெளியீடு என்பது இப்போது வியாபாரம் ஆகிவிட்டது. இதற்கு எழுத்தாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன. பதிப்பாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன.

நிறைய எழுத்தாளர்களுக்கு தங்களுடைய புத்தகங்களை வெளியிட நல்ல பதிப்பகம் அமைவதில்லை. தான் எழுதியவை புத்தகமாக வெளிவருமா என்று புத்தகம் வெளியிட வாய்ப்புக் கிடைக்காத எழுத்தாளர்கள் ஏங்கும் நிலை உள்ளது.

அதிலும் கவிதைத் தொகுதியை வெளியிடுவதற்கு பெரும்பாலான பதிப்பகங்கள் முன் வருவதில்லை.

சில பதிப்பகங்கள் எழுத்தாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு புத்தகங்களை வெளியிடுகின்றன.

இம்மாதிரியான சூழ்நிலையில் அதிகம் அறிமுகம் ஆகாத எழுத்தாளர் என்றாலும் தரமான படைப்பு என்றால் வெளியிடுகிறோம். உதாரணமாக சேலம் இலா.வின்சென்ட் என்பவரின் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாப்லோ அறிவுக் குயிலின் “குதிரில் உறங்கும் இருள்’ என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாலுசத்யாவின் “காலம் வரைந்த முகம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டோம்.

மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் நிறைய வெளிவந்திருக்கின்றன. ஆனால் நாங்கள் அதிலும் புதுமையாகச் செய்ய வேண்டும் என்று விரும்பினோம். மொழிபெயர்ப்பு நூல்கள் என்றால் முதலில் ரஷ்ய நூல்கள், அமெரிக்க நூல்கள், பிரெஞ்ச் நூல்கள் என்றுதான் மொழிபெயர்த்தார்கள். இப்போது லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால் அவற்றிற்கு நிகரான இலக்கிய வளம் நமது ஆசிய நாட்டு இலக்கியங்களுக்கு உள்ளது. மிகப்பெரிய அமெரிக்காவைப் போரில் வீழ்த்திய வியட்நாம் அதன் ஆயுத பலத்தால் மட்டுமா வீழ்த்தியது? அதன் ஆன்மபலமும் அல்லவா அமெரிக்காவின் வீழ்ச்சிக்குக் காரணம்? அமெரிக்கா போன்ற நாடுகள் செல்வ வளத்தில் பெரிய நாடாக இருக்கலாம். ஆனால் ஞான வளம் ஆசிய நாடுகளுக்கே உரியது. நபியாகட்டும், கன்பூசியஸ் ஆகட்டும், கெüதம புத்தராகட்டும் எல்லாரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களே. நமது இந்தியாவிலேயே சிறந்த சிந்தனையாளர்கள், வளமான இலக்கியங்கள் உருவாகவில்லையா? அந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடத் தீர்மானித்தோம்.

மலையாள இலக்கியவாதி என்றால் பெரும்பாலோருக்கு தகழி சிவசங்கர பிள்ளையைத் தெரியும். வைக்கம் முகம்மது பஷீரைத் தெரியும். பிற எழுத்தாளர்களை அவ்வளவாகத் தெரியாது. பொற்றேகாட், கேசவதேவ், மலையாற்றூர் ராமகிருஷ்ணன், சி.ஏ.பாலன் போன்றோரைச் சிலருக்குத்தான் தெரியும்.

பால்சக்கரியாவின் “அன்புள்ள பிலாத்துவுக்கு’ என்ற நாவலை வெளியிட்டோம். நாங்கள் பலருக்கும் தெரியாத பி.சுரேந்திரன் என்ற மலையாள எழுத்தாளரின் “மாயா புராணம்’ என்ற நாவலை வெளியிட்டோம். கோயில் நுழைவுப் போராட்டத்தை மையமாக வைத்து கன்னடத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய நாவலை “பாரதிபுரம்’ என்கிற பெயரில் வெளியிட்டிருக்கிறோம். தாகூரின் “சிதைந்த கூடு’ நூலை வெளியிட்டிருக்கிறோம்.

எங்கள் பதிப்பக வெளியீடுகள் எந்தக் குறிப்பிட்ட சார்புநிலையும் எடுப்பதில்லை. மனித மேம்பாட்டுக்கு, சமூக மேம்பாட்டுக்கு உதவும் நூல்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். யாரையும் யாரும் காயப்படுத்தக் கூடாது. இவைதான் எங்கள் நோக்கம். விருப்பம்.

நமது மகாபாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் இல்லாத விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா?

நல்லது கெட்டது, கெட்டதில் உள்ள நல்லது எல்லாம் மகாபாரதத்தில் உண்டு. எல்லாரும் மன்னிக்கும்தன்மையுடனும் பெருந்தன்மையுடனும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய இதிகாசங்கள் தோன்றின. ஆனால் இன்றைய வாழ்க்கை எப்படி உள்ளது? கொலை, கொள்ளை, வெறுப்பு, இப்படி ஆரோக்கியமில்லாத சமூகமாகிவிட்டது. அர்த்தமுள்ள பொழுது போக்குகள் இல்லை. இவற்றை மாற்றி நல்ல சமுதாயத்தை அமைக்க விரும்பும் பலர் குதிரைக்குக் கண்பட்டை அணிந்ததுபோல் ஒரே கோணத்தில் பார்க்கிறார்கள். அப்படியில்லாமல் மனித மேம்பாட்டுக்கு உரிய நல்ல கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு உள்ளது.

அதனால்தான் “கிறிஸ்து மொழிக் குறள்’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம். “நபி(ஸல்) நமக்குச் சொன்னவை’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம்.

“சல்வடார் டாலி’ என்ற பெண்ணியச் சிறுகதைகளின் தொகுப்பை வெளியிட்டிருக்கிறோம். இதில் இந்தியப் பெண் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். இதில் பெண்ணின் வாழ்வு யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது, பெண்ணிய நோக்கில். பெண்ணியம் என்றால், “நீ சிகரெட் பிடித்தால் நான் சிகரெட் பிடிப்பேன்’ “நீ ஜீன்ஸ் போட்டால் நானும் போடுவேன்’ என்கிற மாதிரியான பெண்ணியம் அல்ல. பெண்ணின் சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய சிறுகதைகளின் தொகுப்பு.

விட்டல்ராவ் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர். இன்றைய எந்த இலக்கியக் குழுவிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர். அவர் தமிழ்நாட்டின் பல கோட்டைகளுக்கும் நேரில் போய் அந்தக் கோட்டைகளின் வரலாறு, புவியியல், மக்கள் வரலாறு , மக்களின் கலை, கலாச்சாரம் எனப் பலவற்றை ஆராய்ந்து “தமிழகக் கோட்டைகள்’ என்ற நூல் எழுதியுள்ளார். அந்த அருமையான நூலை முக்கியமான பதிப்பகங்கள் வெளியிடத் தயங்கிய சூழ்நிலையில் நாங்கள் அதை வெளியிட்டோம்.

சிறந்த எழுத்தாளர்கள் 18 பேரின் சிறந்த பத்துக் கதைகளைத் தொகுத்து மாணவர் பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று மாணவர்கள் மத்தியில் இலக்கிய ஆர்வம் குறைந்து வருகிறது. அதுவும் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களிடம் தமிழ் இலக்கியத்தைப் படிக்கும் போக்கு அறவேயில்லை. முந்திய தலைமுறையைச் சேர்ந்த எம்.வி.வி., ந.பிச்சமூர்த்தி, தி.ஜ.ர. போன்றவர்களைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்கு அதிகம் தெரியாது. ஏன் இன்னும் சொல்லப் போனால், ந.பிச்சமூர்த்தியின் இனிஷியல் “ந’ வா? “நா’ வா? என்று கேட்டால் பல இலக்கியவாதிகளே குழம்பினார்கள். எனவே மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நூல் வரிசையைக் கொண்டுவந்திருக்கிறோம்.

இன்று மல்டி நேஷனல் கம்பெனிகள் வந்துவிட்டன. பணம் சம்பாதிப்பதே நோக்கமாகக் கொண்ட சமூக மனோபாவம் வந்துவிட்டது. ஆனால் பணம் சம்பாதிப்பது சந்தோஷத்திற்கான வழிகளில் ஒன்று. பணத்தால் வெளியே ஜில்லென்று குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஏஸியை வாங்கிவிடலாம். ஆனால் மனதுக்கு குளிர்ச்சியைப் பணத்தால் ஏற்படுத்த முடியுமா? அது நல்ல இலக்கியங்களாலும், நூல்களாலும்தான் முடியும். அதனால்தான் இந்தப் பதிப்பக முயற்சியில் “அணில் கை மணல் போல’ நாங்களும் எங்களால் முடிந்த அளவுக்கு ஈடுபட்டிருக்கிறோம்.

Posted in Amruta, Amrutha, Authors, Books, Chennai, Collections, Culture, Essays, Fiction, History, Kannada, Karnataka, Kerala, Literature, Malayalam, publications, Publishers, Readers, Students, Tagore, Tamil, Thilagavathi, Thilagavathy, Thilakavathi, Thilakavathy, Thinkers, Translations, UR, URA, Writers | Leave a Comment »

Charukesi: Ramanujar & Muthusamy Dikshithar – Dinamani Theater Reviews

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

ராமானுஜரும், முத்துசாமி தீட்சிதரும்

ராமானுஜர் மதப்புரட்சி செய்த மகான். சாதிப் பாகுபாடுகளைத் தாண்டி எல்லோரையும் சமமாகப் பார்த்த சன்னியாசி.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமானுஜர் தமிழ் நாடகத்தின் ஆங்கில வடிவத்தை, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை மாணாக்கர் சிலர், பேராசிரியர் ரஜானியின் இயக்கத்தில் நடித்தார்கள். ஆனால் ராமானுஜர் வேடத்தில் நடித்தவர் அம்ருதா கரயில் என்கிற இளம்பெண். குற்றவியல்துறை மாணவி. ஓர் ஆண் கூடவா ராமானுஜர் வேடத்தை ஏற்க முன்வரவில்லை என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ராமானுஜர் வேடமேற்ற பெண் திருப்திகரமாக நடித்தார் என்பது மட்டும் நமக்குப் போதும்.

நாடக வடிவின் நூலைப் பெற்றுக்கொண்ட திருக்காட்டுப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திரா பார்த்தசாரதியின் இருபது வருட நண்பராம். அவர் பேச்சு நவீன இலக்கியவாதியின் உரைபோல இருந்ததே தவிர, அரசியல்வாதியின் “நடை’யாக இருக்கவில்லை.

தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை, அவர் அந்தணர் அல்லாதவர் என்பதற்காக மனைவி அவரைத் திண்ணையில் அமரச் செய்து அமுது படைத்ததற்காக, ராமானுஜர் அவளுடன் தன் வாழ்க்கையையே முறித்துக்கொண்டு விடுகிற நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது.

தனக்கு எதிர்க் கருத்துக்களைக் கொண்ட பலரையும் மனம் மாறச் செய்து வெல்ல முடிந்த ராமானுஜரால், மனைவியின் மனத்தை மாற்ற முடிந்திருக்காதா? அவர் அப்படிச் செய்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை, நூலை வெளியிட்ட “ஹிந்து’ ஆசிரியர் ரவியும், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் எழுப்பினர். தம் உரையில் இந்திரா பார்த்தசாரதி இதற்கு பதில் ஏதும் தரவில்லை. “நாடகத்தைப் படைத்தேன்’ அத்தோடு என் பணி முடிந்தது என்றார்.

மொழிபெயர்ப்பில், குறிப்பாக பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மகானின் வரலாறு பற்றிச் சொல்லும்போது, ஆங்கிலத்தில் எத்தகைய சொற்-சங்கடங்கள் எழுகின்றன என விவரித்தார் பேராசிரியர் ஸ்ரீமான். இவர் ஆங்கில மற்றும் அயல்நாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர். (ஆனால் மொழியாக்கம் தமக்குத் திருப்தி அளித்ததாகவே இந்திரா பார்த்தசாரதி அங்கீகரித்துவிட்டார்.)

ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிடி பிரஸ்ஸின் இந்திய படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடும் பணியை மேற்கொண்டிருக்கும் மினி கிருஷ்ணன் உரை “மினி உரை’ என்றால், நூலுக்கு நீண்ட முன்னுரை வழங்கியிருக்கும் ஆங்கிலப் பேராசிரியர் சி.டி.இந்திரா, இந்த நூல் வெளிவர, தாம் தில்லி வரை சண்டை போட்டுவிட்டு வந்த சரித்திரத்தை சாங்கோபாங்கமாக “மாக்ஸி உரை’யாக நிகழ்த்தினார். (நமக்குப் பொறுமையைச் சோதித்த பேச்சுதான். ஆனால் அவருடைய ஆதங்கத்தை இந்த இடத்தில் வெளியிடாமல் வேறு எங்கே, எப்போது வெளியிடுவார், பாவம்!)

“நந்தன் கதை’ போலவே “ராமானுஜரு’ம் இந்திரா பார்த்தசாரதியின் மனித சாதியிடையே பிரிவு காணலாகாது என்ற சிந்தனையை வெளிப்படுத்தும் படைப்பு. தமிழில் இந்த நாடகத்தை விரைவில் மேடையில் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கர்நாடக இசையின் சரித்திரத்தில், மூன்று கிறிஸ்துவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. ஒருவர் ஆபிரகாம் பண்டிதர். இன்னொருவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மூன்றாமவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவர்தான் ஏ.எம்.சின்னசாமி முதலியார் என்கிற கத்தோலிக்க கிறிஸ்தவர். “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ என்ற தெலுங்கு நூலை வெளிச்சத்துக்கு கொண்டு வர தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்த அந்நாளைய அரசு ஊழியர். ஆங்கிலேய ஆட்சியில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பணிபுரிந்த இந்த அபூர்வ மனிதரைப் பற்றிய காலை நேரச் சொற்பொழிவு ஒன்றில், இணையற்ற ஆங்கிலப் பேச்சாளர் வி.ஸ்ரீராம் தொகுத்து அளித்த விவரங்கள் இதுவரை யாரும் அறியாதவை.

“சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ நூல் இசை மாணாக்கர்களுக்கு தேவையான ராக லட்சணங்களையும், ஸ்வரங்களையும், கமகங்களையும் அறிமுகப்படுத்தும் நூல். இவருக்குத் துணை நின்றவர் முத்துசாமி தீட்சிதரின் சகோதரர் பாலுசாமி தீட்சிதரின் மகன் சுப்பராம தீட்சிதர். ஒருசமயத்தில் எட்டயபுர சமஸ்தான வித்துவானாக இருந்தவர். (இவரைக் குறித்து மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கூட ஒரு பாடல் புனைந்திருக்கிறார்.)

மின்சாரம் கிடையாது, கம்ப்யூட்டர் கிடையாது, நவீன அச்சுக்கோக்கும் எந்திரம் கிடையாது. இத்தனை “கிடையாது’-களுக்கும் இடையே, மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமாகி, சென்னையை விட்டுப் புறநகர் போய் வசிக்கும் சூழ்நிலையிலும், சின்னசாமி முதலியார் மனம் தளர்ந்துவிடவில்லை. பென்ஷன் தொகை எல்லாம்கூட நூலுக்காகச் செலவிடுகிறார். கடன் ரூ.28000-த்தைத் தாண்டி விடுகிறது. மனைவியின் நகைகளை எல்லாம் விற்றுவிடுகிறார். ஆனால் அவர் குறிக்கோள் எல்லாம் எப்படியாவது நூல் வெளியாக வேண்டும் என்பதே.

கர்நாடக இசையின் பங்களிப்பில் பங்கு கொண்ட அத்தனை வாக்யேக்காரர்களின் பாடல்களையும் திரட்டி, அவற்றை ஆங்கில இலைக்கலைஞர்களும் பாடும் அல்லது வாசிக்கும் வகையில் ஸ்டாஃப் நொட்டேஷன் செய்து பரப்ப இவர் எடுத்துக் கொண்ட முயற்சி இவ்வளவு, அவ்வளவு அல்ல. “”ஜெயதேவர், புரந்தரதாசர், நாராயண தீர்த்தர், அருணாசலக் கவி ஆகியோரின் பாடல்களைவிட, நவீன ஓரியண்டல் இசை என்று எடுத்துக் கொண்டால், தியாகராஜ சுவாமிகளின் பாடல்களுக்குத்தான் முதல் இடம்’ என்று தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஐரோப்பிய வயலின் இசைக் கலைஞர்களைக் கொண்டு, நொட்டேஷன்-களின்படியே இசைக்கச் செய்து வெற்றி கண்டவர் இவர்.

முத்துசாமி தீட்சிதரின் கிருதிகளை வெளியே கொண்டு வர, சின்னசாமி முதலியார் பட்டபாடு இருக்கிறதே, அது “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ அச்சில் கொண்டு வர அவர் பட்ட பாட்டைப் போலவே உருக்கமானது.

இறுதியில் சுப்பராம தீட்சிதர் பணியாற்றிய எட்டயபுரம் சமஸ்தான மன்னரின் உதவியோடு, அங்கேயே அச்சகம் நிறுவச் செய்து, 1906-ல் சுப்பராம தீட்சிதரே அந்த நூலை வெளியிடும் சமயம், சின்னசாமி முதலியார் காலமாகிவிடுகிறார். ஆனால் அதற்காகப் பாடுபட்ட தன் நண்பரின் நினைவுக்கு அந்த நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார் சுப்பராம தீட்சிதர்.

முத்துசாமி தீட்சிதரின் பாடல்களை, அவர் தமது பிரதம சீடர்களான தஞ்சை நால்வர்களுக்கும், தேவதாசிகளுக்கும், நாதஸ்வர வித்துவான்களுக்கும் கற்றுக்கொடுத்தார். அதனால் ராமானுஜர் போலவே, முத்துசாமி தீட்சிதரும் சாதியுணர்வு தாண்டி நின்ற மேதை எனலாம்.

சாருகேசி

Posted in Authors, Books, Carnatic, Chaarukesi, Charukesi, Classical, Dikshithar, Dinamani, Drama, Indira Parthasarathy, Indra Parthasarathy, IPa, IPaa, Literature, music, Muthusami, Muthusamy, Oxford, publications, Publishers, Ramanujam, Ramanujan, Ramanujar, Reviews, Saarukesi, Sarukesi, Shows, Stage, Tamil, Theater, Theatre, Translations, Works, Writers | Leave a Comment »

Frankfurt Book Fair: Interview with Kizhakku Pathippagam’s Badri

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

அக்கரை சந்தை:உலக மொழிகளில் தமிழ் நாவல்கள்!

ஃப்ராங்பர்ட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்று திரும்பியிருக்கிறார் கிழக்குப் பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் பத்ரி.

உலகமெங்கும் உள்ள பல் மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் கூடும் இடமாக இருக்கிறது இக் கண்காட்சி. ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் இக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்களும் இடம்பெறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இக் கண்காட்சி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பத்ரி.

“”இது புத்தகப் பதிப்பாளர்களுக்கான கண்காட்சி என்பதுதான் சரியாக இருக்கும். புதன் கிழமை ஆரம்பிக்கும் இச் சந்தை ஞாயிற்றுக்கிழமையோடு முடிகிறது. இதன் முதல் மூன்று நாட்கள் பதிப்பாளர், அச்சிடுவோர், விநியோகஸ்தர் ஆகியோருக்கானது. சனி, ஞாயிறு தினங்களில் பொது மக்களும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

புத்தக உரிமை, மொழி பெயர்ப்பு உரிமை, ஒப்பந்தங்கள் சம்பந்தமான வர்த்தக பரிவர்த்தனைகள்தான் இக் கண்காட்சியின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு “கெஸ்ட் ஆஃப் ஹானர்’ என்று கெüரவிக்கப்படும். கடந்த ஆண்டு நான் முதல் முறையாகக் கலந்து கொண்ட போது இந்தியாவுக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்தது கூடுதல் மகிழ்ச்சி. இந்த ஆண்டு செடலோனியா (ஸ்பெயின்) நகருக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது.

ஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சுரா பதிப்பகத்தினர் கலந்து கொண்டு வருவதை அறிந்தேன். மற்ற தமிழ்பதிப்பகங்கள் எதுவும் இதில் ஆர்வம் காட்டாததற்குக் காரணம், இது புத்தக விற்பனைக்கான சந்தையாக இல்லாமல் பதிப்பாளர்களுக்கான ஒரு தளமாக இருக்கலாம். ஒரு முறை இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுத் திரும்புவதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் எந்த விதத்திலும் நம் புத்தகங்கள் விற்பனை அந்த அளவுக்கு நடைபெற வாய்ப்பில்லை. ஆனால் இதனால் வேறு மாதிரியான வர்த்தக விரிவாக்கங்களுக்கு முயற்சி செய்ய முடியும் என்பதுதான் என் கருத்து.

இப்போது நம் தமிழ்ப் புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை வெளியிடத் தொடங்கியிருக்கிறோம். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், பிரபஞ்சன், நீல.பத்மநாபன், யூமா வாசுகி போன்றோரது 20 நாவல்களை இப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறோம். இவற்றை அக் கண்காட்சியில் இடம் பெற்ற இங்கிலாந்து பதிப்பகத்தார் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். “இந்தியன் ரைட்டிங்ஸ்’ என்ற பிரிவின் கீழ் எங்கள் பதிப்பகத்தில் இவற்றை வெளியிடுகிறோம். அதே போல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நம் எழுத்தாளர்களின் இந்த நாவல்களை மற்ற ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடவும் முயற்சி செய்கிறோம். இது இக் கண்காட்சியில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட திருப்பம். நாம் இங்கிருந்து போனில் பேசுவதன் மூலம் இதை நிறைவேற்ற முடியாது. நேரில் பேச வேண்டும்; நம் புத்தகங்களின் சாம்பிள்களைக் கொடுக்க வேண்டும். இப் பயணத்தின் மூலம் உலக நூல்களை, இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கான முயற்சிகளையும் செய்ய முடியும். முஷாரப்பின் “தி லைன் ஆஃப் ஃபயர்’ நூலை வெளியிட்டது அத்தகைய முயற்சிதான்.

நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா பல முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை இந்திய மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. ஆயினும் இத்தகைய அமைப்புகளும் இதைச் செய்யாதது ஏன் என்று தெரியவில்லை” என்ற வருத்தக் கேள்வியோடு சொன்னார் அவர்.

“”தமிழ்நூல்களுக்கு நூலக ஆணை மட்டுமே பிரதான வரவாக இருக்கும் சூழ்நிலையில் இப்படியான முயற்சிகளில் இறங்குவது எப்படி?” என்றோம்.

“”நூலகங்களில் புத்தகம் வாங்குவது வருமானத்தின் ஒரு பகுதி மட்டுமே. பொது மக்கள்தான் எங்கள் நிலையான வாங்கும் சக்திகள். நாம் பதிப்பிக்கும் நூல்கள் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களும் சென்று சேருவதற்காக 30 மாவட்டங்களிலும் விற்பனைக் கூடங்கள் வைத்திருக்கிறோம். அதுமட்டுமன்றி நூல்விற்பனை நிலையங்கள் மட்டுமன்றி பல சிறிய கடைகளிலும் எங்கள் புத்தகங்களை விற்பதற்கு முயற்சி செய்கிறோம். ஆயிரம் பிரதிகள் விற்பதற்கே அல்லல் படும் நிலையிருந்தும் சோம வள்ளியப்பனின் “அள்ள அள்ள பணம்’ என்ற நூலை இந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனை செய்திருக்கிறோம். பதிப்பு முறையிலும் விற்பனை விஷயத்திலும் கவனம் செலுத்தினால் புத்தக விற்பனை வெற்றிகரமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை” என்கிறார் நம்பிக்கையுடன்.

தமிழ்மகன்.

Posted in Agents, Annual, audiobooks, Authors, Books, Business, Catalan, Catalonia, Channels, classics, Deals, Deutsch, Deutschland, Distribution, English, EU, Events, Exhibition, exhibitors, Faces, Fair, Fiction, forum, Frankfurt, German, Germany, India, Industry, Interview, Kilakku, Kizakku, Kizhakku, Language, Literary, Literature, Marketing, Media, Meet, Multilingual, NBT, network, Networking, New Horizon, Novels, Outlets, people, publications, Publishers, Reach, Read, Reader, Readers, Reports, sales, Sell, Spain, Story, Sura, Tamil, Trade, Translations, Translator, wholesalers, Works, World | Leave a Comment »

Gowri Kirupanandhan: Interview – Telugu to Tamil Translations

Posted by Snapjudge மேல் மே 31, 2007

முகங்கள்: ஒரு நாளில்…எட்டுமணி நேரம்!

உலகிலேயே மிகக் கடினமான காரியம் என்னவென்று பள்ளி மாணவர்களிடம் கேட்டுப் பாருங்களேன், “”தமிழைத் தவறில்லாமல் எழுதுவதுதான்” என்பார்கள். எந்த “ர’ போடுவது, எந்த “‘ந போடுவது என்பதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் தகராறுதான். இத்தனைக்கும் மழலையர் வகுப்பில் இருந்து தமிழை ஒரு பாடமாகவேனும் 12 ஆம் வகுப்பு வரை படித்திருப்பார்கள்.அவர்களுக்கே இந்தக் கதி.

ஆனால் இருபத்தொரு வயது வரை தமிழே தெரியாமல் இருந்துவிட்டு அதன் பின் தமிழ் கற்று இப்போது தெலுங்கிலிருந்து தமிழில் புத்தகங்களை ஒருவர் மொழிபெயர்க்கிறார் என்றால் அது சாதாரண விஷயமா? ஆம். அந்தச் சாதனையாளர் கௌரி கிருபானந்தன்.

அவர் தெலுங்கில் இருந்து கிட்டத்தட்ட நாற்பது புத்தகங்களுக்கு மேல் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறுகதைகளைத் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். அந்தச் சாதனையாளரை சென்னை பெசண்ட் நகரில் அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். உங்கள் தாய்மொழி எது?

எனது தாய்மொழி தமிழ்தான். ஆனால் நான் வளர்ந்தது படித்தது எல்லாம் ஹைதராபாத்தில். சிறுவயதில் இருந்தே தெலுங்கு மீடியத்தில்தான் படித்தேன். எனக்கு சிறுவயதில் தமிழே தெரியாது. எனக்கு 21 வயதில் திருமணம் ஆனது. அதன்பின்தான் தமிழ் படிக்க ஆரம்பித்தேன்.

தமிழில் என்ன படித்தீர்கள்?

தமிழில் பெரும்பாலும் நான் படித்தது கதைகள், நாவல்களே. அசோகமித்திரன், தி.ஜானகிராமன், இந்திராபார்த்தசாரதி, சுஜாதா, சிவசங்கரி, ராஜம்கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை விழுந்து விழுந்து படிப்பேன். ஏற்கனவே தெலுங்கு நாவல்களைப் படிக்கும் பழக்கம் இருந்தது.

தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

என்னுடைய 35 வது வயதில் – கிட்டத்தட்ட தமிழ் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து 14 ஆண்டுகள் கழித்து – ஒரு தெலுங்கு மொழிபெயர்ப்பு நாவலைத் தமிழில் படித்தேன். அந்த நாவலை ஏற்கனவே நான் தெலுங்கில் படித்திருந்ததால் தமிழில் அதை எந்த அளவுக்குக் கொலை செய்திருந்தார்கள் என்பதை அந்த நாவலைப் படிக்கும் போது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். ஏன் நாமே அதைத் தவறில்லாமல் தமிழில் மொழிபெயர்க்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. முதன்முதலாக எண்டமூரி வீரேந்திரநாத்தின் “பந்தயம்’ என்ற சிறுகதையை மொழிபெயர்த்தேன். அது குங்குமச் சிமிழ் இதழில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்தது.

தொடர்ந்து மொழிபெயர்க்கக் காரணம்?

என்னுடைய ஈடுபாடு என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் என் அப்பாவும் என் கணவரும் உற்சாகப்படுத்தினார்கள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டதால் அவர்களை கவனிக்க அதிக சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லாமல் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக எனது புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட அல்லயன்ஸ் பப்ளிஷர்ஸ் எனக்குக் கிடைத்தது முக்கியக் காரணம். அவர்கள் கிடைக்கவில்லையென்றால் இத்தனை புத்தகங்களை மொழிபெயர்த்திருப்பேனோ என்னவோ?

தெலுங்கிலிருந்து யார் எழுதிய புத்தகங்களை அதிகமாக மொழிபெயர்த்துள்ளீர்கள்?

எண்டமூரி வீரேந்திரநாத் புத்தகத்தை அதிகமாக மொழிபெயர்த்துள்ளேன். 20 நாவல்களுக்கும் மேலாக மொழிபெயர்த்திருக்கிறேன். அதற்கடுத்து யத்தனபூடி சுலோசனா ராணியின் புத்தகங்கள், டி.காமேஸ்வரியின் புத்தகங்கள் என கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறேன்.

முறையாகத் தமிழ் படிக்கவில்லை என்கிறீர்கள். அப்படியிருக்க தமிழில் மொழிபெயர்ப்பது சிரமமாக இல்லையா?

ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. என் அப்பா எனக்குப் பெரிதும் உதவினார். நான் மொழிபெயர்த்து வைத்திருப்பதை எல்லாம் எடுத்து எத்தனை பக்கமானாலும் சரி பார்த்துத் தருவார். அவருக்கு தமிழ் நன்றாகத் தெரியும். இரண்டாவதாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் அமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். நிறைய ஒற்றுமைகள் இருக்கும். குறிப்பாக தெலுங்குக்கும் கன்னடத்திற்கும் நிறைய ஒற்றுமை இருக்கும். தமிழுக்கும் மலையாளத்திற்கும் நிறைய ஒற்றுமை இருக்கும். எனவே மொழிபெயர்க்கும் போது வாக்கிய அமைப்பில் சிக்கல் எதுவும் வரவில்லை. மேலும் நான் மொழிபெயர்ப்பது நன்றாக இருப்பதால்தானே எல்லாரும் என் மொழிபெயர்ப்பைப் படிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள் என்ற எண்ணம் இருந்தது. அது உற்சாகத்தை அதிகப்படுத்தியது. ஒரு நாளில் சுமார் எட்டு மணி நேரம் மொழிபெயர்ப்புக்காகச் செலவிடுகிறேன்.

தமிழில் இருந்து தெலுங்குக்கு மொழிபெயர்த்திருக்கிறீர்களா?

தமிழில் இருந்து சிறுகதைகளை தெலுங்கில் மொழிபெயர்த்திருக்கிறேன். அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி, சுஜாதா, அனுராதாரமணன், உஷாசுப்பிரமணியன், ஜெயகாந்தன் ஆகியோரின் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். யாருடைய கதையை மொழிபெயர்த்தாலும் அவர்களிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் மொழிபெயர்ப்பேன்.

உங்களுடைய பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் புத்தகமாக மட்டும்தான் வந்திருக்கிறதா? இல்லை இதழ்களிலும் வெளிவந்திருக்கிறதா?

என்னுடைய கதைகள் கணையாழி, மஞ்சரி, குங்குமம், மங்கையர் மலர், மஞ்சுளா ரமேஷின் சிநேகிதி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன.

மலையாள நாவல்களைப் படித்ததுண்டா? தமிழ், தெலுங்கு, மலையாள இலக்கியங்களில் என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்?

நான் சிறிதுகாலம் திருவனந்தபுரத்தில் இருந்திருக்கிறேன். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க நூலகத்தில் நிறைய புத்தகங்களை எடுத்துப் படித்திருக்கிறேன். எழுத்தாளர் நீல.பத்மனாபனின் அறிமுகம் அப்போது கிடைத்தது.

மலையாளத்தில் தகழி சிவசங்கரபிள்ளை, எம்.டி.வாசுதேவன் நாயர் ஆகியோரின் நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் படித்திருக்கிறேன். நான் படித்தவரை மலையாள நாவல்கள், கதைகள் ஆழமான வாசிப்புக்கு உகந்தவை. பொழுதுபோக்காக, மேம்போக்காக அவற்றைப் படிக்க முடியாது. தமிழ், தெலுங்கு நாவல்கள், கதைகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை என்னால் பார்க்க முடியவில்லை.

தெலுங்கிலிருந்து நீங்கள் சரித்திர நாவல்கள் எதையும் மொழிபெயர்த்துள்ளீர்களா?

இல்லை. நான் மொழிபெயர்த்தவை எல்லாம் சமூக நாவல்கள். குறிப்பாக பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டவை. அவர்களின் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் போன்றவையே நான் மொழிபெயர்த்த கதைகளின் கருப்பொருள்கள்.

தமிழில் இருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்தேன் என்கிறீர்கள். தமிழில் வட்டார வழக்கு நாவல்கள், கதைகள் அதிகம் எழுதப்பட்டுள்ளன. அவற்றை மொழிபெயர்க்கும் எண்ணம் உண்டா?

இல்லை. என்னால் அது முடியாது என்றே தோன்றுகிறது. எந்த மொழியிலிருந்து மொழிபெயர்த்தாலும் அந்த மொழியில் உள்ள வாசனை மாறாமல், சாயை கெடாமல் மொழிபெயர்க்க வேண்டும் என்பதே என் விருப்பம். வட்டாரத் தமிழில் எனக்கு அதிக பரிச்சயம் இல்லாததால் அதை மொழிபெயர்த்தால் நன்றாக வராது.

சமீபத்திய உங்கள் முயற்சி?

சுலோசனா ராணி தெலுங்கில் எழுதிய மீனா என்ற நாவலைத் தமிழில் “முள்பாதை’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன். அது ரொம்பவும் ஃபேமஸôன நாவல். சினிமாவாகக் கூட எடுத்தார்கள். இரண்டு பாகங்களாக உள்ள அந்த நாவலை மொழிபெயர்க்க ஒன்பது மாதங்கள் ஆனது.

Posted in Ambalam, Andhra, Andhra Pradesh, AP, Author, Books, Endamoori, Endamoori Virenderanath, Endamuri, Entamoori, Entamuri, Fiction, Gouri, Gowri, Gowri Kirupanandhan, Interview, Kameshwari, Kanaiaazhi, Kirubanandan, Kirupanandhan, Kirupananthan, Krupanandhan, Krupananthan, Kunguma Chimizh, Literature, Malayalam, Mangaiyar Malar, Novels, Story, Sulochana Rani, Tamil, Telugu, Translations, Translator, Veerenderanath, Veerendranath, Virenderanath, Virendranath, Writer | Leave a Comment »

Georgina – Earn money from Home: Translate Tamil to English

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

இது புதுசு: டாலரில் சம்பாதிக்கலாம் வாங்க!

ரவிக்குமார்


ஜார்ஜினா

“”நீங்கள் ஆங்கிலத்தில் சரளமாக எழுதும் திறனுள்ள இல்லத்தரசியா? இணைய வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் உங்களிடம் இருந்தால் போதும், டாலரில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை பல இணைய தளங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்றன” என்கிறார், தனது செல்ல நாய்க்குட்டியான டிரிக்ஸியைக் கொஞ்சியபடி ஜார்ஜினா!

ஜார்ஜினா- ஆங்கில மொழியில் பாடல் எழுதும் பாடலாசிரியர். குழந்தைகளுக்காக இவர் ஆறு கம்ப்யூட்டர் சி.டி. ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். ஒவ்வொருவரின் மனத்திலும் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கும் “மெட்டி ஒலி’யின் ஆறு எபிசோட்களின் ஸ்கிரிப்ட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அமெரிக்காவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்து சுமதி ராம் என்னும் பெண் இயக்குனர் எடுத்த “விஷ்வதுளசி’ படத்தில் வரும் “கண்ணம்மா..’ என்று தொடங்கும் பாடலை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

“”தமிழில் எனக்குப் பெரிய புலமை எல்லாம் கிடையாது. ஆனாலும் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அந்த வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகளை எழுதுவதற்குத் தெரியும்…” என்ற ஜார்ஜினாவுடன் பேசியதிலிருந்து…

இணையத்தைப் பயன்படுத்தி இல்லத்தரசிகள் டாலரில் பணம் சம்பாதிக்கலாம் என்கிறீர்களே…எப்படி?

உண்மைதான். ஆங்கிலத்தில் பரவலாக எல்லாத் துறைகளுக்கும் இணையதளங்கள் உள்ளன. இதில் சில இணையதளங்களில் உயர்தரமான ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கு, வீட்டிலிருந்தபடியே பணி செய்வதற்கு எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. நண்பர் ஒருவரால் எனக்கு அப்படி அறிமுகமான ஓர் இணையதளம்தான், http://www.proz.com இந்த இணையதளம், பல மொழிகளில் இருந்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகளை நாடுபவர்களுக்கும், மொழிபெயர்ப்பாளர்களுக்கும் ஒரு பாலமாக இருக்கின்றது. இதில் மொழி பெயர்ப்புகளைச் செய்ய விரும்புபவர்கள், அவர்களின் கல்வித் தகுதி, மொழிபெயர்ப்புப் பணியில் அவர்கள் இதுநாள் வரை செய்திருக்கும் விஷயங்கள், அவர்களைப் பற்றிய விவரங்களைக் கொடுத்து இணைத்துக் கொள்ளலாம். அப்படி இணைத்துக் கொள்பவர்கள், இணையதளத்தில் சென்று பார்த்தால், வெவ்வேறு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யக்கோரி பலரின் ஆர்டர்கள் இருக்கும். பணியின் விவரம், செய்துமுடிப்பதற்கான கடைசி நாள், பணிக்குக் கிடைக்கும் ஊதியம் போன்ற விவரங்கள் இருக்கும். இந்த விவரங்களைப் பின்பற்றி எவரும் இந்தப் பணியைச் செய்யலாம்.

ஆங்கிலப் புலமைக்குப் பிரத்யேகப் பயிற்சி ஏதாவது எடுத்துக் கொண்டீர்களா?

சென்னை, ஹோலி ஏஞ்சலீஸ் பள்ளியில் 17 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. பள்ளியில் ஆசிரியர்கள் வட்டத்திலேயே என்னை “நடமாடும் அகராதி’ என்றுதான் செல்லமாக அழைப்பார்கள். அந்த அளவுக்கு சின்ன சின்ன வார்த்தையாக இருந்தாலும் அதன் பொருளை, அதற்கான எளிய வார்த்தையை எழுதிவைத்துக் கொள்வேன். இந்த ஆர்வம்தான் மொழிபெயர்ப்பிலாகட்டும், ஆங்கிலத்தில் பாடல்களை எழுதுவதிலாகட்டும் எனக்கு அடிப்படையாக அமைந்தது.

சம்பாதிப்பதற்கு இந்த ஓர் இணையதளம் மட்டும்தானா?

தேடிப்பார்த்தால் இன்னும் எவ்வளவோ இணையதளங்கள் கிடைக்கக் கூடும். நான் மொழிபெயர்ப்புக்கான இணையதளமான பிராக்ஸ் டாட் காம்-ல் தான் முதலில் என்னைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்திருந்தேன். இதற்குப் பின்தான் எனக்கு “அகாடமியா ரிசர்ச்’ Academia_Research. com என்னும் இணையதளத்திலிருந்து பகுதி நேரமாகப் பணிபுரிய விருப்பமா? என்று கேட்டு எனக்கு ஈ-மெயில் வந்தது. இதற்கு நான் விருப்பம் தெரிவித்தவுடன், எனக்கு தலைப்பைக் கொடுத்து ஒரு கட்டுரையை அனுப்பச் சொன்னார்கள். இது ஆங்கிலமொழிப் புலமை அதிகம் இல்லாத பல நாடுகளில் பல மொழி பேசும் மாணவர்களுக்குத் தேவைப்படும் ஆய்வுக் கட்டுரைகளையும், அவர்களுக்கான தீஸிஸ்களையும் பெற்றுத் தருவதற்காக நடத்தப்படும் இணையதளம். இதில் கட்டுரைகள் நம்முடைய சொந்த வார்த்தைகளில் இருக்கவேண்டும் என்பது கடுமையான விதி. கட்டுரையில் இந்தந்த விஷயங்கள் இருக்கவேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். அந்த விஷயங்கள் குறித்த தேடுதல் வேட்டையை இணையதளத்தில் நாம் நடத்தி, அதைத் தொகுத்து, முறைப்படி அதை நம்முடைய வார்த்தைகளில் அலங்காரமாக வடித்துத் தரவேண்டும்.

ஒரு மாணவன் தேர்வுக்காக செய்யவேண்டிய ஆய்வுகளை அவனுக்கு மாற்றாகச் செய்கிறோமே…என்ற குற்ற உணர்ச்சி உங்களுக்கு இல்லையா?

இதில் குற்ற உணர்ச்சிக்கு இடமே இல்லை. கல்விக்காக இன்றைக்கு மாணவர்கள் நாடுகளை விட்டும், கண்டங்களை விட்டும் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பல மொழி பேசுபவர்களாக இருந்து, ஆங்கில மொழியில் போதிய புலமை இல்லாதவர்களாக இருக்கும் பட்சத்தில்தான் இந்த இணையத்தளத்தை அவர்கள் நாடுகிறார்கள். அவர்களுக்காக நான் தேர்வு எழுதினால்தான் தவறு. அவர்களுக்காக கட்டுரைகளை எழுதுவது தவறல்ல.

இணையத்தில் செய்யப்படும் இந்தப் பணியில் இருக்கும் முக்கியமான வசதி என்ன?

நம்மால் செய்ய முடிந்த வேலையை நாம் யோசனை செய்து நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி இதில் இருக்கிறது. உதாரணத்துக்கு, உலக அளவில் கணிதம் பாடத்திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களைக் குறித்து ஒருவர் ஒரு கட்டுரையைக் கேட்டிருந்தால், நான் “எஸ்கேப்’ ஆகிவிடுவேன். ஏனென்றால் நான் கணிதத்தில் பூஜ்யம். இதுபோல் நம்மால் செய்யமுடிந்த பணியை நாமே தேர்ந்தெடுத்து, அதைக் குறிப்பிட்ட அவகாசத்தில் செய்து கொடுத்துவிட வேண்டும். அது மிகவும் முக்கியம்.

அப்படி என்னென்ன துறைகளில் நீங்கள் கட்டுரையை அனுப்பியிருக்கிறீர்கள்?

அறிவியல், சட்டம் தொடர்பான கட்டுரைகளைக் கூட நான் எழுதி அனுப்பியிருக்கிறேன். உலக அளவில் இசை மற்றும் இசை தொடர்பான விஷயங்களில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களைக் குறித்து கூட கட்டுரை எழுதியிருக்கிறேன். இசையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. கட்டுரைக்காக தேடும்போது, உலகத்தின் மிகப் பெரிய இசைப் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனமான உ.ங.ஐ. மிகச் சமீபத்தில், ஒருபக்கம் ஆடியோ சி.டியாகவும், இன்னொரு பக்கம் டி.வி.டி.யாகவும் இரட்டைப் பயன் தரும் டிஸ்க்குகளை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ள விஷயத்தைத் தெரிந்து கொண்டேன்.

லண்டனையே ஸ்தம்பிக்க வைத்த, தீயணைப்பு வீரர்களின் புரட்சிகரமான வேலை நிறுத்தம் பற்றி கூட, லண்டனின் வரலாறு என்னும் கட்டுரையில் எழுதியிருக்கிறேன். இன்னொரு கட்டுரை, கரு முட்டைகளை அளிக்கும் பெண்களைப் பற்றி, அவர்களின் உரிமைகள், கடமைகள், பொறுப்புகள், அவர்களுக்கு ஊதியம் கொடுப்பது சரியா? தவறா? என்ற அலசல் கட்டுரை..இப்படி நிறைய எழுதியிருக்கிறேன். இது போன்ற பணியில் ஆர்வமிருப்பவர்கள் என்னை அணுகினால் அவர்களுக்கு என்னால் இயன்ற ஆலோசனைகளைச் சொல்வதற்குத் தயாராக இருக்கிறேன்.

ஆங்கிலத்தில் பாட்டு எழுதும் நீங்கள், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்க்கும் நீங்கள் தமிழில் எப்போது எழுதப் போகிறீர்கள்?

தமிழில் எழுதும் அளவுக்கு எனக்குப் புலமை இல்லை. அதனால் என்ன? தமிழ்ப் படத்தில் ஆங்கிலப் பாடல் எழுதும் வாய்ப்புதான் எனக்கு நிறைய வந்து கொண்டிருக்கிறதே…! சமீபத்தில் கூட, கமல்ஹாசனின் “தசாவதாரம்’ படத்தில் பின்னணி பாடுவதற்காக என்னுடைய மகள் சென்றிருந்தாள். அதில் தமிழ் பாடல்களுக்கு இடையில் ஆங்கிலத்திலும் ஒரு பாடல் வருகிறதாம். அதற்காக ஏற்கனவே வேறொருவரிடமிருந்து எழுதி வாங்கிய பாடல் சரியாகப் பொருந்த வில்லையாம். அப்போது அங்கிருந்த என்னுடைய மகள், “என் அம்மாவும் இங்கிலீஷ் பொயட்தான்’ என்று சொல்ல, வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இப்போது மேலும் இரண்டு தமிழ்ப் படத்தில் ஆங்கிலத்தில் பாடல் எழுத இருக்கிறேன்.

– “எல்லாம் சரி…கடைசி வரையில் அவரின் மகள் யாரென்று சொல்லவே இல்லையே?’ என்று மறக்காமல் கடிதம் எழுதும் வாசக நக்கீரர்களின் கவனத்திற்கு…ஜார்ஜினாவின் செல்ல மகள்தான் பாப் ஷாலினி!

Posted in English, Georgina, Internet, Interview, Money, Proz.com, Rich, Schemes, Translate, Translations, Vishvathulasi, Vishwathulasi | 1 Comment »