Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Traffic’ Category

Chennai Ranganathan Street – Infrastructure, Safety & Traffic issues due to Illegal Construction

Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007

விதிமுறை மீறல்கள்!

ஒரு திரையரங்கம் கட்டுவதாக இருந்தால் கூட, அதில் இத்தனை நபர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் கட்டடத்துக்குள் கூடுவார்கள் என்பதற்கான அதிகபட்ச நிர்ணயம் உண்டு. ஆனால், வணிக வளாகங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத அளவுக்கு நெரிசலை சந்திக்க வேண்டிய கட்டாயம். அதுவும், தொலைக்காட்சி வந்த பிறகு, பண்டிகைக் காலங்களில் இத்தனை சிறிய தெருவில் இத்தனை மக்களா என்று திகைப்பும், பயமும் ஏற்படுகிறது.

இந்த வர்த்தக நிறுவனங்கள் அள்ளி வீசும் இலவசங்களும், சலுகைகளும் பண்டிகைக் காலங்களில் புற்றீசல்போல வாடிக்கையாளர்களை மொய்க்க வைத்துவிடுகின்றன. அந்த அளவுக்குக் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு அந்தக் கட்டடங்களில் இடமில்லை என்பது மட்டுமல்ல, தெருக்கள் அகலமும் இல்லை. உதாரணம், சென்னை ரங்கநாதன் தெருவும் அதிலுள்ள வணிக வளாகங்களும்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் மட்டும் சுமார் 35 கட்டடங்கள் எப்.எஸ்.ஐ. (ஊ.ந.ஐ.) என்று அழைக்கப்படும் அதிகபட்சக் கட்டுமானப் பரப்பு விகிதத்தை மீறி எழுப்பப்பட்டவை என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இது ஏதோ அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடக்கும் விஷயமல்ல. 10 மீட்டர் அகலமுள்ள சென்னை ரங்கநாதன் தெருவில் பல அடுக்குக் கட்டடங்கள் எதுவும் அனுமதிக்கப்படவே கூடாது. ஆனால், விதிமுறைகளை மீறி சுமார் 14 கட்டடங்கள் எப்படி கட்டப்பட்டன? எந்தவொரு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் தெரியாமலா இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டன?

உஸ்மான் சாலையில் இலக்கம் 128 மற்றும் 129 எண்களிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட எப்.எஸ்.ஐ. 1.5 தான். ஆனால், கட்டப்பட்டிருப்பதோ 8.99. சட்டப்படி இந்தக் கட்டடத்துக்கு 266 கார்களை நிறுத்துவதற்கான இடம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சைக்கிள் நிறுத்தக் கூட இடமில்லை. இது எப்படி நிகழ்ந்தது?

உஸ்மான் சாலையிலுள்ள ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் வரம்பை மீறி ஐந்து மாடிகள் கட்டியது கண்ணில் படவில்லையா?

இல்லை, புதிய சரவணா ஸ்டோர்ஸ் நான்கு மாடிகள் கட்டியது யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்டதா?

  • கோடம்பாக்கம் சேகர் எம்போரியமும்,
  • உஸ்மான் ரோடு சரவணா கோல்டு ஹவுசும்,
  • ரங்கநாதன் தெருவுக்கு நேர் எதிரில் எழுந்து நிற்கும் சரவணா செல்வரத்தினத்தின் கட்டடமும்,
  • ரங்கநாதன் தெருவிலுள்ள வணிக வளாகங்களும்

ஊரறிய உலகறிய கட்டப்பட்டபோது, அதிகாரிகள் தூங்கிக் கொண்டா இருந்தார்கள்? சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் நல்லி நிறுவனத்தின் கட்டடத்திலேயே விதிமுறை மீறல் இருப்பதாகச் சொல்கிறார்களே, அது எதனால்?
முறையான அனுமதி பெற்று கட்டடம் கட்டத் தொடங்குவார்கள் – இரண்டு அடுக்கு முடிந்ததும், மூன்றாவது அடுக்கு கட்டத் தொடங்கும்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். மாநகராட்சியைக் கேட்டால், எங்களிடம் அனுமதி வாங்கியது இரண்டு அடுக்குக்குத்தான். அதற்குமேல் கட்டப்படும் கட்டடங்களுக்கு பெருநகர் வளர்ச்சிக் குழுமம்தான் பொறுப்பு என்று தட்டிக் கழித்து விடுவார்கள். சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகித் தடை பெற்று விடுவார். அதைக் காரணம் காட்டி பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கண்களை மூடிக் கொள்ளும்.

இதையெல்லாம் மீறி, பொது நல வழக்குத் தொடர்ந்து விடாப்பிடியாக உச்ச நீதிமன்றம் வரை போய் இந்தக் கட்டடங்களில் காணப்படும் விதிமுறை மீறல்களை இடித்துத் தள்ள உத்தரவு வாங்கி வந்தால், சட்டம் இயற்றி இவர்களைக் காப்பாற்ற அரசு முன்வருகிறது. அதாவது, இந்த விதிமுறை மீறல்களுக்கு உடந்தையாக சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், அரசும் செயல்படுகின்றன என்றால், ஆட்சியும் அதிகாரமும் யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.

முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இந்தக் கட்டடங்களைக் கட்ட உதவும் என்ஜினீயர்களும், காண்ட்ராக்டர்களும். விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகும் இவர்களது பட்டம் பறிக்கப்படும், உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தால், இந்த விதிமுறை மீறல்கள் பெரிய அளவில் தடுக்கப்படும். படித்த பொறியியல் பட்டதாரிகள் இந்த விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகத் தயாராவதுதான் அடிப்படைக் குற்றம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

தவறான சிகிச்சைக்கு மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டு அவர்களது உரிமம் பறிக்கப்படுவதுபோல, விதிமுறை மீறல்களுக்குத் துணை போகும் என்ஜினீயர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமானால், இதுபோன்ற விதிமுறை மீறல்கள் நிச்சயம் குறையும்.

Posted in authority, Biz, Bribery, Bribes, Buildings, Business, Cars, Chennai, Citizen, City, Commerce, Congestion, Construction, Consumer, Corruption, Crackers, Customer, Deepavali, Deepavalli, Departments, Dept, Discount, Diwali, DMK, Dress, Economy, Finance, Fire, Fireworks, Floors, Gold, Hassle, Hazards, Illegal, Incentives, Industry, infrastructure, Jewelery, Jewels, Jewlery, kickbacks, Lanes, Law, License, Madras, Malls, Metro, MMDA, multi storey, Multi story, officers, Order, Parking, Permits, Ranganathan st, Ranganathan street, Rebates, Renganathan st, Renganathan street, retail, Safety, Saravana, Saravana Gold House, Saravana GoldHouse, Saravana Selvarathanam, Saravana Selvarathanam Stores, Saravana Stores, Sarees, Saris, Season, Sector, Sekar Emporium, Shopping, Shops, Sri sankarapandian, Sri sankarapandian Stores, Srisankarapandian, Srisankarapandian Stores, Suspend, Trade, Traffic, Usman Road | Leave a Comment »

Road Accidents & Traffic Deaths – Travel Safety issues

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 18, 2007

சவால்விடுக்கும் சாலை விபத்துகள்!

சா. ஜெயப்பிரகாஷ்

உலகில் ஒவ்வொரு வினாடியும் சாலை விபத்துகளில் 6 பேர் பலியாகின்றனர், அல்லது பலத்த காயமடைகின்றனர்.

2002-ல் உலகில் 12 லட்சம் மக்கள் சாலை விபத்துகளால் இறந்தனர். அவர்களில் 70 சதம் பேர் ஆண்கள். இந்தியாவில் சாலை விபத்தில் பலியாவோர் எண்ணிக்கை 2020-களில் தற்போதைய எண்ணிக்கையைவிட 147 சதம் உயரும் என்றும் கூறப்படுகிறது’. இவை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விடுக்கும் எச்சரிக்கை.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகப் பயணம், ஹெல்மெட் உள்ளிட்ட போதிய பாதுகாப்பு சாதனங்கள் இன்றி பயணம், மோசமான சாலைகள்- சாலைச் சூழல்கள், பாதுகாப்பில்லாத வாகன வடிவமைப்பு போன்றவையே சாலை விபத்துகளுக்குக் காரணங்கள்.

முடிந்தவரை விபத்துகளைத் தவிர்ப்பது, அடுத்த கட்டமாக, மரணத்தைத் தவிர்ப்பது என்று படிப்படியாகச் சிந்தித்தல் அவசியம்.

தமிழக அரசின் 2007-08 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக, சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்ள ரூ. 6 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், குறிப்பிடும்படியான, பயனுள்ள வகையிலான பிரசாரங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. நடந்ததாகக் கூறப்படும் சில பிரசாரங்களும் பெயரளவில் ஆங்காங்கே நடந்துள்ளன.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, கோர விபத்துகளைப் படம்பிடித்து குறும்படங்களாக்கி கல்லூரிகளில், திரையரங்குகளில் காட்டி, அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அந்தப் படங்களில், சாலை விதிகளை மதித்தல், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதன் தீமைகள், அதிவேகப் பயணத்தால் ஏற்படும் பாதிப்பு போன்றவை குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கலாம்.

தமிழ்நாட்டிலுள்ள எந்த அரசு மருத்துவமனையிலும் தலைக்காயத்துக்கு சவால்விட்டு சிகிச்சை அளிக்கும் நிலை இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டாக வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில்கூட பெரும்பாலும் “சாதனை முயற்சி’ என்ற பெயரிலே இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் மூளை – நரம்பியல் நிபுணர்கள் உள்ளனர். பணிப்பளு காரணமாக இரவில் இவர்கள் யாரும் பணியில் இருப்பது சாத்தியமில்லை.

சென்னை போன்ற பெருநகரங்களிலும் இதே நிலை. மாநகரங்கள், நகரங்கள் தாண்டி, நாட்டின் பெரிய பரப்பை ஆக்கிரமித்திருக்கும் கிராமங்களில் தலைக்காயத்துக்கான உயர் சிகிச்சையை எதிர்ப்பார்ப்பதே தவறுதான்.

அரசு மருத்துவர்களுக்கு, மண்டை ஓட்டைப் பிளந்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்கான நவீன ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அவற்றுக்கான வசதிகளைத் தாராளமாகச் செய்து தரவும் அரசு திட்டமிட வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆராய்ச்சித் தளத்தை விரிவுபடுத்தி பெருநகரங்களில் தலைக்காய நவீன அறுவைச் சிகிச்சைகளை அதிக அளவில் மேற்கொள்ளலாம்.

“பேரிடர் மேலாண்மை’ என்று பெரும் முயற்சியுடன் திட்டங்களைச் செயல்படுத்துவதைப்போல “விபத்து மேலாண்மை’த் திட்டத்தையும் வகுத்து செயல்படுத்தலாம்.

விபத்து நேர்ந்தவுடன் பாதிக்கப்பட்டவர்களை அறிவியல்பூர்வமாகப் பாதுகாத்து, முதலுதவி அளித்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுதல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் விதிமுறைகள் ஒரு குறுக்கீடாக அமையக்கூடாது.

“”முன்னைவிட நோயாளி தற்போது மேம்பட்டுள்ளார். நினைவின்றிக் கிடந்தவர் தற்போது கை, கால்களை அசைக்கிறார். தேறிவிடுவார். என்றாலும், தலைக்காயம்… எதுவும் சொல்ல முடியாது” என்று நமது அரசு மருத்துவர்கள் கூறுவதைப் படிப்படியாகவாவது குறைக்க வேண்டும்.

சாலை விதிகளை மதிப்போம்; விபத்துகளைத் தவிர்ப்போம்; விதியையும் மதியால் வெல்வோம்!

Posted in Accidents, Auto, Automotive, Bus, car, Chennai, Construction, CoP, dead, deaths, deduction, Fast, Helmet, Highway, infrastructure, Injured, Injury, Insurance, Kill, Law, Limb, Madras, Metro, Obey, Order, passenger, Police, Policy, Premium, Reimbursement, Rikshaw, Road, rules, Safe, Safety, Speed, Street, Traffic, Travel | Leave a Comment »

Chennai Marina Beach – Small vendors & Encroachment: Business vs Environment

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2007

மெரீனா கடற்கரையில் 400 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, ஆக. 29-

சென்னை நகருக்கு அழகு சேர்ப்பதில் மெரீனா கடற்கரை முக்கிய பங்கு வகிக்கிறது. ஏழை, நடுத்தர மக்களின் ஒரே பொழுது போக்கு மெரினா கடற்கரைக்கு சென்று வருவதுதான்.

சென்னை நகர மக்கள் தொகை அதிகரிப்பது போல, மெரீனா கடற்கரையில் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோல சிறுசிறு கடைகளும் அங்கு அதிகரித்து வருகிறது. முறையில்லாமல் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு உருவாகும் கடைகளால், கடற்கரைக்கு வந்து போகும் பொதுமக்களுக்கு இடைïறு ஏற்படுகிறது. மெரீனா கடற்கரை அழகு பாதிக்கப்படு கிறது என்று புகார்கள் கூறப்பட்டன.

இதையடுத்து, பொதுமக்களுக்கு இடைïறாக கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பலர் ஆண்டுக்கணக்கில் மெரீனாவில் கடை வைத்து பிழைத்து வருகிறார்கள்.

பல ஆக்கிரமிப்பு கடைகள் முறையான அனுமதி இல்லா மல் சமீபத்தில் உருவாகி உள்ளன. அவற்றின் எண்ணிக்கை 400-க்கும் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை அகற்றப்போவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

புதிய ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று முன்தினம் போலீஸ் உதவியுடன் அகற்ற மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால் குப்பை அகற்றும் பணிக்கு மாநகராட்சி ஊழியர்கள் செல்ல வேண்டியுள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் 2 நாட்களில் கடற்கரையில் உள்ள புதிய ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பல நடமாடும் கடைகள் இரவில் கடற்கரையில் நிறுத்தப்படுகின்றன. அவற்றையும் ஒழுங்குப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இது குறித்து மேயர் மா. சுப்பிரமணியன் கூறும்போது, “மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே பலர் 10 முதல் 15 ஆண்டுகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் கடந்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் புதிதாக தோன்றிய கடைகள் இடைïறாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி தினமும் ஏராளமான புகார்கள் வருகின்றன. புதிய ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவதும் மெரீனா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதிதான்” என்று கூறினார்.

சென்னை நகரை அழகு படுத்த ரூ.25 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதில் 17 கோடி ரூபாய் மெரீனாவை அழகுபடுத்த செலவிடப்படுகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக கடற்கரை அழகை பாதிக்கும் புதிய ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுகின்றன.

இது கடற்கரையை நம்பி பிழைக்கும் சிறு வியாபாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அண்ணா, எம்.ஜி.ஆர். கடற்கரை மணல் பரப்பு சிறு வியாபாரிகள் சங்க துணை தலைவர் ராமலிங்கம் கூறும்போது, “நாங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வியாபாரம் செய்து வருகிறோம். எங்கள் கடைகள் எந்த வகையிலும் இடைïறாக இல்லை” என்றார்.

காந்தி சிலை கடற்கரை மணல் பரப்பு சிறு வியாபாரிகள் சங்க செயலாளர் நாராயணன், “நாங்கள் கடைகளை இரவில் இங்கிருந்து அப்புறப்படுத்த தயாராக இருக்கிறோம். மாநகராட்சி சிறு வியாபாரிகளுக்கு முறைப்படி அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.

இதுபோல பல்வேறு வியாபாரிகள் தங்கள் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற பயத்தில் உள்ளனர். மாநகராட்சி கடற்கரை சிறு வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

————————————————————————————————–

கோயம்பேடு பஸ் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்: போக்குவரத்து போலீஸ் கூடுதல் ஆணையர்

சென்னை, ஆக. 30: சென்னையில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண கோயம்பேடு பஸ் நிலையத்தை 3-ஆக பிரித்து வெவ்வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என மாநகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் ஆணையர் சுனில் குமார் தெரிவித்தார்.

சி.எம்.டி.ஏ. உருவாக்கியுள்ள 2-வது மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கை குறித்த பயிலரங்கில் அவர் புதன்கிழமை பேசியது:

சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஏற்படுவதாகக் கூறி நகரின் உள்ளே இருந்த வெளியூர் பஸ் நிலையத்தை கோயம்பேட்டுக்கு மாற்றினார்கள்.

தற்போது கோயம்பேடு பஸ் நிலையத்தால் பூந்தமல்லி நெடுஞ்சாலை, உள்வட்ட சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இதற்கு தீர்வாக, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பஸ்கள் ஆகியவற்றுக்கான பஸ் நிலையத்தை 3 பிரிவாக பிரிக்க வேண்டும்.

இவ்வாறு பிரித்து பூந்தமல்லி வழியாகச் செல்லும் பஸ்களுக்கு பூந்தமல்லியிலும், தாம்பரம் வழியாகச் செல்லும் பஸ்களுக்கு தாம்பரத்திலும், கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகச் செல்லும் பஸ்களுக்கு அந்த பகுதியிலும் தனித்தனி பஸ் நிலையங்கள் அமைக்கலாம்.

கோயம்பேடு பஸ் நிலையம் தற்போதுள்ள இடத்திலேயே தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் போக்குவரத்து மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும்.

சென்னைக்கு வெளியே கண்டெயினர் லாரிகளுக்கான டெர்மினலை அமைப்பதாக முதலாவது மாஸ்டர் பிளானில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அத்தகைய டெர்மினல் இதுவரை அமைக்கப்படவில்லை. சென்னையில் வாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதி இல்லாதது, போக்குவரத்து நெரிசலுக்கும், சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்து விடுகிறது.

சென்னையில் இருக்கும் பூங்காக்களில் தரைகீழ்தள வாகன நிறுத்தும் இடங்களை அமைக்கலாம்.

மேலும், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வுகான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடும் நாள்களை மாற்றி அமைக்கலாம். அதேபோல, அதிக அளவில் கடைகள் இருக்கும் மார்க்கெட் பகுதிகளுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கலாம். இந்த புதிய அணுகுமுறைகளை திட்டமிட்டு நிறைவேற்றினால் பல்வேறு பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வு ஏற்படும் என்றார் சுனில் குமார்.
————————————————————————————————–

Posted in Beach, Beauty, Biz, Business, Chennai, Citizen, Commerce, Consumer, Customer, Economy, encroachment, Environment, Govt, Kannagi, Kannaki, Koyambedu, Koyampedu, Law, Madras, Mareena, Marina, Mayor, Nuisance, Obstruction, Order, Pleasure, Poor, Traffic, Vendors, Water | Leave a Comment »

Chennai’s new Commissioner of Police Nanjil Kumaran

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

காசிப்ஸ்: கூடுதல் கமிஷனரை காப்பாற்றிய தாதா

சென்னை மாநகரில் புதிய கமிஷனராக நாஞ்சில் குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் என்ன விஷேசம் என்று நீங்கள் கேட்கலாம். இவர் கோவை மாநகர் கமிஷனராக இருந்த போதுதான், தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தினர். அந்த சம்பவத்துக்கு தண்டனை கடந்த 1ம் தேதி வழங்கப்பட்டது. அதே நாளில் நாஞ்சில் குமரன் சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். என்ன ஒரு பொருத்தம்.

கமிஷனர் லத்திகாவை மாற்றும் போதே, கூடுதல் கமிஷனர் ஜாங்கிட்டையும் மாற்ற அரசு நினைத்தது. இதை எப்படியோ அறிந்து கொண்ட ஜாங்கிட், வெள்ளை ரவியை சுட்டு தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார். முதல் நாள் தூத்துக்குடியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள சென்று இருந்தார். ஆனால் வெள்ளை ரவி சுட்டுக் கொன்ற போது, அவர் அங்கு இருந்ததாக கமிஷனர் லத்திகா சொல்லவில்லை. ஆனால் பத்திரிகைகளில் அவருக்கு காயம் இருந்ததாக செய்திகள் வந்தது. தூத்துக்குடியிலும் ஓசூரிலும் ஓரே நபர் எப்படி இருந்திருக்க முடியும். இது மெடல் பெறுவதற்காக போட்ட நாடகம் என்று ஜாங்கிட்டுக்கு எதிர் தரப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஜான்கிட்டுக்கும் குமரனுக்கும் அவ்வளவாக ஆகாது. எனவே அவர் விரைவில் மாற்றப்படுவார். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருக்கும், ராதாகிருஷ்ணன் கூடுதல் கமிஷனராக பதவி ஏற்க கூடும் என்றும் சொல்லப் படுகிறது.


சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன்சென்னை, ஆக. 2:சென்னை நகர போலீஸ் கமிஷனராக ஜி. நாஞ்சில் குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ். மாலதி பிறப்பித்துள்ளார்.உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் ஜி. நாஞ்சில் குமரன், தற்போது சென்னை நகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நகர கமிஷனராக இருந்து வந்த லத்திகா சரண் தற்போது கூடுதல் டிஜிபியாக நிர்வாகத் துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோல நிர்வாகத் துறையில் ஏடிஜிபியாக பணியாற்றி வந்த கே. ராமானுஜம் தற்போது தமிழ்நாடு 3-வது போலீஸ் கமிஷனின் முழுநேர உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நிர்வாகத் துறையுடன் 3-வது போலீஸ் கமிஷனின் உறுப்பினர் செயலர் பதவியை கூடுதல் பொறுப்பாக இவர் கவனித்து வந்தார். தற்போதைய உத்தரவின்படி, இவர் முழுநேர உறுப்பினர் செயலராக பணியாற்றுவார்.—————————————————————————————————–

சென்னை கமிஷனர் இன்று பதவி ஏற்றார்: பதவி சவாலானது- நாஞ்சில் குமரன் பேட்டி

சென்னை, ஆக. 2-

சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள நாஞ்சில் குமரன் இன்று பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் மாறுதலாகி செல்லும் கமிஷனர் லத்திகாசரண் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

புதிய கமிஷனராக பொறுப்பேற்றதும் நாஞ்சில் குமரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது:-

தமிழக அரசும், முதல்- அமைச்சரும் என் மீது நம்பிக்கை வைத்து மிகப்பெரிய பொறுப்பான கமிஷனர் பதவியை வழங்கி உள்ளனர். சவாலான இந்த பணியை பொதுமக்கள் திருப்திபடும் அளவுக்கு உழைத்து நிறைவேற்றுவேன்.

பொதுமக்களுக்கு சேவை செய்ய கிடைத்த நல்ல வாய்ப்பாக கருகிறேன். சட்டத்துக்கு உட்பட்டு குற்றங்களை தடுக்க நிலுவையில் உள்ள வழக்கு களை விரைந்து முடிக்க தீவிர கவனம் செலுத்துவேன்.

குறிப்பாக சென்னை மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சிக்கி திணறும் சூழ்நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய அனைத்து முயற்சி களையும் எடுப்பேன். சென்னையில் குற்றங்களை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த தனிப்படைகள் விரிவாக்கப்பட்டு வலுவூட்டப்படும்.

கேள்வி: போலீஸ் நிலையங்களில் அரசியல் குறுக்கீடு அதிகமாக உள்ளதே?

பதில்: இது பொதுப்படையான கேள்வி. போலீஸ் நிலையங்களுக்கு அனைத்து தரப்பினரும் வருவார்கள். இதில் குறுக்கீடு என்பது பணிகள் செய்யாதே என்று தடுப்பதாகும். ஆனால் போலீஸ் நிலையத்துக்கு வந்து பொதுமக்களுக்கு பயன் தரும் விஷயங்களை செய்யுங்கள் என்று சொல்வது வேறு. பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அனைவரும் தேடி வரும் இடமாகத்தான் போலீஸ் நிலையங்கள் இருக்கிறது.

கேள்வி: லஞ்ச ஊழல் அதிகரித்துள்ளதே?

பதில்: லஞ்சம் உலகளாவியது. தனிப்பட்ட முறையில் யார் மீது புகார் செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி: போலீஸ் பொது மக்கள் நல்லுறவு எப்படி உள்ளது?

பதில்: ரவுடிகள் அட்டகாசம் இல்லை. பொதுமக்கள் இரவு நேரங்களிலும் பயமில்லாமல் நடமாடும் சூழ்நிலை நிலவுகிறது. பொதுமக்களுடனான உறவுக்கு இதுவே சாட்சி.

கேள்வி: மத்திய குற்றப்பிரிவு போலீசில் நில மோசடி வழக்குகள் ஏராளமாக நிலுவையில் உள்ளது. நில மோசடியை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

பதில்: இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் ஒரு நிருபர் எல்லோரும் கமிஷனர் பதவிக்கு வர ஆசைப்படுவார்கள். இந்த பதவிக்கு நீங்கள் வந்துள்ளீர்கள். என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த நாஞ்சில்குமரன், போலீஸ் வேலையை செய்ய போகிறேன் என்றார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுனில்குமார், இணைகமிஷனர்கள் ரவி, பாலசுப்பிரமணியம், துரைராஜ், சந்தீப்ராய் ரத்தோர், உளவுபிரிவு போலீஸ் துணை கமிஷனர் நல்லசிவம், உதவி கமிஷனர்கள் இளங்கோ, பன்னீர் செல்வம் மற்றும் துணை கமிஷனர்கள் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள்.—

———————————————————————————————-
புதிய டிஜிபி ராஜேந்திரன்

சென்னை, ஆக. 30: தமிழக காவல்துறை தலைவராக பி.ராஜேந்திரன் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை, தமிழக உள்துறை செயலர் எஸ்.மாலதி புதன்கிழமை பிறப்பித்துள்ளார்.

தமிழக காவல்துறை தலைவராக உள்ள டி.முகர்ஜியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் (யுஎஸ்ஆர்பி) தலைவராக உள்ள பி.ராஜேந்திரன், புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கிறார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பயோ-டேட்டா: 7.12.1947-ல் திருநெல்வேலியில் பிறந்த பி.ராஜேந்திரன், இந்தியக் காவல் பணியில் (ஐபிஎஸ்) 1973-ம் ஆண்டு தமிழக பிரிவில் தேர்ச்சி பெற்றார். இவர் ஏஎஸ்பியாக வேலூரில் பணிக்குச் சேர்ந்தார். பின்னர் ராமநாதபுரம் எஸ்பியாகப் பணியாற்றியுள்ளார். அதைத்தொடர்ந்து கியூ பிரிவு எஸ்பியாகவும் இருந்துள்ளார்.

சிவில் சப்ளை பிரிவில் டிஐஜி ஆகவும், கடலோரப் பாதுகாப்பு பிரிவு டிஐஜி ஆகவும் இருந்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவில் ஐ.ஜி.யாகப் பணிபுரிந்துள்ளார். கோவை நகர கமிஷனராகவும், தலைமை அலுவலகத்தில் கூடுதல் டிஜிபியாகவும் (நிர்வாகம்) பணிபுரிந்துள்ளார்.

Posted in Action, Additional Director General of Police, Arms, Bombs, Bribery, Bribes, CB-CID, CBI, Charan, Chat, Chennai, CID, Citizen, Commissioner, Common, Congestion, CoP, Correctional, Corrections, Corruption, CP, Dada, DGP, Force, IAS, Intelligence, Interview, Investigation, IPS, Jaangid, Jaangit, Jaangittu, Jangid, Jangittu, Jankittu, Karunanidhi, kickbacks, Kumaran, Lathika, Latika, Law, Lethika, Letika, Letika Saran, Madras, Naanjil, Nanjil, Nanjil Kumaran, Official, Opinions, Order, Plan, Police, Rajendhiran, Rajendhran, Rajendran, Rajenthiran, Rajenthran, Ravi, Rowdyism, Saran, Traffic, Uniform, USRB, Vellai, Vellai Ravi, Violence, Weapons | Leave a Comment »

Depletion of world Mineral reserves – Consumption of Antimony, Gallium, Tantalum, Indium

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

கனிமங்களின் சாதம், தாதுக்களும் பிரமாதம்

நெல்லை சு.முத்து

பூமி சூடேறி வருவதால் பனிப்படலங்கள் வட துருவப் பிரதேசத்தில் இருந்து உருகி அட்லாண்டிக் கடலில் கலக்கின்றன. இது பழைய செய்தி. ஆனால் ஒவ்வொரு 40 மணி நேரமும் கிரீன்லாந்து பனிப்படலங்கள் ஒரு கன கிலோமீட்டர் அளவுக்குக் கரைந்து வருகிறதாம். பாசதேனாவில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் எரிக் ரிக்னாட் தரும் தகவல் இது.

இந்த நீர், சென்னை போன்ற பெரு நகரங்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் தண்ணீர் அளவுக்குச் சமம். தமிழ்நாடு முழுவதும் 8 மில்லிமீட்டர் தண்ணீர் நிறைந்த மாதிரி. சென்னையில் மட்டும் இந்த வடதுருவப் பனி உருகிய நீரைக் கொண்டு வந்து ஊற்றினால் இரண்டு மாடி வீடுகள் நீருக்குள் மூழ்கிவிடும்.

சுற்றுச்சூழல் என்றதுமே நம்மவர் நினைவுக்கு வருவது

  • ஓசோன்,
  • கரியமில வாயு,
  • வாகனப்புகை – உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுச் சமாச்சாரங்கள் மட்டும்தாம். எல்லாரும் இன்று வாகனப்புகை பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறோம். “”மீட்டர் போட்ட ஆட்டோ வேண்டும். புகைவிடாத லாரி வேண்டும்” என்று புதுக்கவிதை பாடுகிறோம். ஆனால் அதைக் காட்டிலும் இன்னோர் அபாயம் காத்திருக்கிறது.

தர்மம் தலைகாக்கும் என்ற நம்பிக்கை இங்கு பலருக்கு இல்லை. தலைக்கவசம் அணிந்துதான் பயணம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 67 லட்சத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவற்றால் சாலைகளில் பெரும் போக்குவரத்து நெருக்கடி.

இங்கிலாந்தில் கார்டிஃப் பல்கலைக் கழகத்தின் புவிவளப் பேராசிரியை ஹேசல் ப்ரிச்சார்டு என்ற பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம். “”இங்கு தெருவெல்லாம் இவ்வளவு சுத்தமாக இருக்குதே” என்று அசந்து போனார். சாலையில் ஒரு வண்டி கூட இல்லையே என்ற அர்த்தத்தில் அல்ல. வியப்புக்குக் காரணம்- வீதி உண்மையிலேயே துடைத்துப் போட்ட மாதிரி இருந்ததாம். தெருவின் புழுதி எல்லாம் பாதசாரிகளின் காலணிக்குள் அல்லவா தஞ்சம் புகுந்து இருந்தது.

காலுறைகளில் வெறும் வியர்வை நாற்றம்தான்; ஆனால் காலணியின் புறப்பகுதியில் சகதி, சாணி போன்றவை ஒட்டி இருக்கும். அவர் காலணியிலோ கொஞ்சம் பிளாட்டினம் படிந்து இருந்ததாம். காலில் வெள்ளிக் கொலுசு அணியலாம். தங்கக் காப்பு கூட தரிக்கிறார்கள். ஆனால் பிளாட்டினம் அணிந்த உலகின் முதல் பெண்மணி ஹேசல் ப்ரிச்சார்டு. பிளாட்டினம் உண்மையில் மிகவும் அரிய வகை உலோகம். பூமியில் பிளாட்டினமோ, ரேடியமோ, சுமார் 79,840 டன்கள் செறிந்து உள்ளது. 89,700 டன்கள் தங்கம்; ஆனால் பிளாட்டினத்திற்குத் தங்கத்தைக் காட்டிலும் விலை அதிகம்.

அது சரி, இந்தப் பிளாட்டினம் காலில் ஒட்டியது எப்படி? வேறு என்ன, வாகனப் புகைதான். பெட்ரோல், டீசல் எரிவாயுக்களால் ஏற்படும் மாசு மட்டுமே நம்மை மூச்சு முட்டப் பண்ணுகிறது. அந்த வாயுக்களை வாகன எஞ்ஜினில் எரியச் செய்யும் மின்பொறியில் பிளாட்டினம் தகடு இருப்பது நமக்குத் தெரியாது. அதனைக் காற்றில் புகையுடன் கலக்கப்போவது யாரு? நீங்கள்தாம். ஒவ்வொரு முறையும் ஸ்கூட்டர், கார், லாரி, ஆட்டோக்களை இயக்கும்போது பிளாட்டினம் தேய்ந்து காற்றில் கலக்கிறதாம்.

இந்தத் தகவல் அதிர்ச்சி அளிக்கிறதா? ஆனால் சமையல் மணக்கச் செய்யும் வனஸ்பதி தயாரிப்புத் தொழில்துறையில் கிரியா ஊக்கியே இந்தப் பிளாட்டினம்தான். பூமியில் இந்த உலோகப் புதையல் வறண்டு வருகிறது. ஏறத்தாழ 50 கோடி வாகனங்களை இத்தகைய எரிமின் கலன்களில் இயக்கினால் அவ்வளவுதான். அடுத்த 15 ஆண்டுகளில் பிளாட்டினம் இல்லாத பாலைவனம் ஆகிவிடும் நம் பூமி. பூமியில் கையிருப்பே 79,840 டன்கள்தான்.

பிளாட்டினம் மட்டுமா, வேறு பல அரிய உலோகங்களையும் நாம் சுரண்டி வருகிறோம். மணல் முதல் சணல் வரை அனைத்து வணிக ஒப்பந்தங்களும் கட்சிக்காரர்களுக்கே வாய்க்கும். உலோகச் சுரங்கம் தோண்டலில் மட்டும் கட்சி பேதம் இல்லை.

உலகில் வறண்டு வரும் மற்றோர் அரிய உலோகம் இண்டியம். இது ஏறத்தாழ 6000 டன்கள் செறிந்து உள்ளது. ஆனால் இன்று இந்த உலோகத்தைத் தகவல் தொழில்நுட்பக் கருவிகளுக்கான எல்.சி.டி தயாரிக்கும் துறை விழுங்கி வருகிறது. நவீனத் தொலைக்காட்சி, கணினித் திரைகள் வடிவமைப்பில் இடம்பெறும் திரவப் படிக ஒளிர் முனையங்கள் இவை. அடுத்த பத்தாண்டுகளில் இண்டியம் வளமும் மறையும் நிலை என்கிறார் ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானி.

2003 ஜனவரியில் கிலோ 60 டாலருக்கு விற்ற இண்டியம் இன்று 1000 டாலர். நான்கே ஆண்டுகளில் பதினாறு மடங்கு விலையேற்றம். இதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படும் நிலை இல்லை.

பூமி கஜனாவில் காலியாகிவரும் இன்னோர் அரிய உலோகம் காலியம். சூரிய மின்கலன்கள் தொழில்நுட்பத்தின் இதயம் போன்றது இது. இண்டியம் – காலியம் ஆர்சனைடுப் பொருளால் ஆனவையே. மின்னணுவியலில் பெரிதும் பயன்படுவது. இனி வரும் காலங்களில் சூரிய மின்கலன்களின் ஒரு சதவீதத் தேவைக்கு மட்டுமே இந்த காலியம், இண்டியம் உலோகங்கள் கைகொடுக்கும். நெதர்லாந்து நாட்டில் லெய்டன் பல்கலைக்கழக நிபுணர் ரேனே க்ளெய்ஜின் கணிப்பு இது.

கணிப்பொறித் திரைதான் பூமியை விழுங்கி ஏப்பம் விடுகிறது என்றால் நம் காதோரம் நெருங்கி உறவாடும் செல்ஃபோன் கூட பூமியின் வளத்தைப் பறித்து வருகிறதாம். என்ன செல்பேசித் தொழில்துறையினர் டான்டலம் என்கிற மற்றோர் அரிய உலோகத்தை இதற்காக அபகரித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் உலோகத் தாதுக்களில் பாதி டான்டலம் தானாம். அடுத்தபடி யுரேனியம். நாலில் ஒரு பங்கு. ரஷியாவிலோ அங்குள்ள உலோகங்களில் ஆறில் ஒரு பங்கு யுரேனியம். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் உலோகச் செல்வத்தில் பத்தில் ஒரு பங்கு யுரேனியம். உலகின் யுரேனிய வளம் 33 லட்சம் டன்கள். அணுமின் சக்தித் துறையினால் இந்த யுரேனியத்தின் பற்றாக்குறை வேறு தலைவிரித்து ஆடப்போகிறது.

உலகில் மிக அதிகமாகக் காணப்படும் உலோகத் தாதுக்களில்

  1. முதலிடம் பெறுவது அலுமினியம் -அதாவது 3235 கோடி டன்கள்.
  2. அடுத்தபடி தாமிரம் (94 கோடி டன்கள்),
  3. குரோமியம் (78 கோடி டன்கள்),
  4. துத்தநாகம் (46 கோடி டன்கள்),
  5. நிக்கல் (14 கோடி டன்கள்) போன்ற புழக்கத்தில் உள்ள உலோகங்களுக்கும் அடுத்த தலைமுறைக்குள் தட்டுப்பாடு வரும். ஆன்டிமனிக்கும் இதே முடிவுதானாம். அடுத்த பத்தாண்டுகளில் இதன் வளமும் வறண்டுவிடும்.

இன்று – “கனிமங்களின் சாதம், தாதுக்களும் பிரமாதம்’ என்று தலைவாழையில் உலோகங்களை உண்ணும் பகாசுரர்கள் யார்?

அமெரிக்காவில் 30 கோடி மக்கள். ஒவ்வொருவரும் ஆண்டுதோறும்

  • 107 கிலோ பாஸ்வரம்,
  • 20.3 கிலோ அலுமினியம்,
  • 8.1 கிலோ தாமிரம்,
  • 4.5 கிலோ துத்தநாகம்,
  • 5.3 கிலோ காரீயம் உண்டு வருகிறார்கள்.

நாமோ “பிளாட்டினம் இட்லி, வெள்ளித் தோசை, தங்கச் சோறு, பாஸ்வரச் சாம்பார், குரோமியக் குழம்பு, காரீயச் சட்னி, துத்தநாகத் துவையல்’ எல்லாம் சாப்பிடப் போவது மாதிரி நடந்து கொள்கிறோம். துறைதோறும் பணத்தைச் சுரண்டுவதற்கே வாதங்கள் புரிகிறோம். சுற்றுச்சூழல் என்ற உச்சரிப்பிலேயே “ஊழல்’ ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் எப்படி கனிமவள வறட்சியைத் தடுக்கப்போகிறோம் என்பதே இப்போதைய கேள்வி.

Posted in Air, Alloys, Aluminium, Antimony, Arctic, Auto, Automotive, Carbon, Cars, Cell, Cellphone, Chromium, Cooking, Copper, Earth, emissions, Empty, Environment, Expiry, Exploration, Gallium, Gas, Indium, Land, legs, Metals, Minerals, mines, Mobile, Natural, Nickel, oil, Ozone, Phones, Platinum, Pollution, Protection, Research, Rich, Shoes, Slippers, Socks, Surface, Tantalum, tantulum, Traffic, Warming, Water, Zinc | 1 Comment »

Raman Raja – Caught in the Traffic (Dinamani Kathir)

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

நெட்டில் சுட்டதடா…: மைல் கணக்கில் நின்ற மலைப் பாம்பு வரிசை!

ராமன் ராஜா


முன்பு ஒருமுறை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு மும்பை செல்ல வேண்டிய விமானத்தைக் கோட்டை விட இருந்தேன். ரிஷப ராசிக்கு “விரயம்’ என்று ஒற்றை வார்த்தையில் ரத்தினச் சுருக்கமாக தினப்பலன் போட்டிருந்ததை மதிக்காமல் டாக்ஸியில் புறப்பட்டு, அண்ணா சாலையில் திரும்ப வேண்டிய நேரத்தில் போக்குவரத்து போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டேன். ஒரு முக்கிய பிரமுகர் அந்த வழியாக வருகிறாராம்; அவருக்கு ஓட்டுப் போட்டு முக்கிய பிரமுகராக்கியவர்கள் அனைவரும் காத்திருக்க வேண்டுமாம். அடுத்த நாற்பது நிமிடம், பல்லைக் கடித்துக் கொண்டு எஃப் எம் ரேடியோவில் “தமில்ப்’ பாட்டு கேட்டுக் கொண்டு கழித்தேன். நல்லவேளை, நான் பிரசவத்துக்குப் போய்க் கொண்டிருக்கும் பெண்மணியாக இல்லையே என்று நிம்மதியுடன் அடி வயிற்றைத் தடவிவிட்டுக் கொண்டேன். கடைசியில் விமான நிலையம் போய்ச் சேர்ந்தபோது, ப்ளேனும் ஒரு மணி நேரம் தாமதம் என்று தெரிய வந்தது. (பைலட்டும் பக்கத்துக் காரில்தான் வந்தாரோ?)

போக்குவரத்து நெரிசல் என்பது முன்னேறிய நாடுகள் எல்லாமே முன்னேற்றத்துக்குத் தப்பாமல் கொடுக்கும் விலை. இந்தியாவிலும் வங்கிகள் வண்டிக் கடன்களை “ஊரான் வீட்டு நெய்யே’ என்று வாரி வழங்குவதால், இப்போது ஏழை எளியவர்கள் அனைவரும் வாகனம் வாங்குவது சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் ஒரு பிரச்னை: தமிழ் நாட்டில் ஓடும் சற்றேறக்குறையத் தொண்ணூறு லட்சம் வாகனங்களில் கால் பாகத்தை, பிடிவாதமாக அவர்கள் சென்னை நகரத்தில்தான் கொண்டு வந்து ஓட்டுகிறார்கள். இதைக் கண்ட பன்னாட்டுக் கம்பெனிகள், “சிக்கியதடா ஒரு மார்க்கெட்’ என்று இங்கே வந்து கடை பரத்தி, நம் ஜனத் தொகையை விட வேகமாகக் கார், டூ வீலர் முதலியவற்றை உற்பத்தி செய்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு, எனக்கு இருபது நிமிட தூரத்தில் இருந்த அதே அலுவலகம் இப்போது அறுபது நிமிடமாகிவிட்டது. டெல்லி, கல்கத்தா எங்கும் இதே கதைதான். பெங்களூரோ, ஏற்கனவே “பூட்ட கேஸ்’ என்று முடிவு கட்டப்பட்டு விட்ட நகரம். சென்னையில் நகைச்சுவை உணர்வு மிக்க உணவு விடுதிக்காரர் ஒருவர், தன் கடைக்கு ஹோட்டல் டிராபிக் ஜாம் என்று பெயர் வைத்திருக்கிறார்.

இங்கிலாந்தில் உள்ள எம்6 என்ற நெடுஞ்சாலையில் 87-ம் வருடம் ஒரு நெரிசல் ஏற்பட்டது. ஐம்பதாயிரம் வாகனங்களில் இரண்டு லட்சம் பேர் மாட்டிக் கொண்டார்கள். இருபது லட்சம் கெட்ட வார்த்தைகளில் அரசாங்கத்தைத் திட்டித் தீர்த்தார்கள். உலகத்திலேயே மிக நீளமாக நின்ற டிராபிக் ஜாம் எது என்று கின்னஸ் புத்தகத்தைப் புரட்டினால், மிரட்டுகிறது: 1980-ம் வருடம், காதலர் தினத்துக்கு இரண்டு நாள் கழித்து ஃப்ரான்ஸில் நடந்தது அது. விடுமுறைக்கு ஜாலியாக எல்லாரும் பனிச் சறுக்கு விளையாடிவிட்டு பாரீஸ் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இடையில் எங்கோ ஒரு லாரி மக்கர் செய்ய, மழை வேறு சேர்ந்துகொள்ள, திடீரென்று ட்ராபிக் ஜாம். லியான் நகரில் ஆரம்பித்து பாரீஸ் வரை, சுமார் 176 கிலோ மீட்டருக்கு அடைத்துக் கொண்டு நின்று விட்டது. ஒரு வழியாக விடுபட்டு வீடு போய்ச் சேர்ந்ததும், பல பேர் கடுப்பில் தத்தம் கார்களைக் கொளுத்தியிருப்பார்கள்!

டிராபிக் ஜாம் என்பது ரோட்டில்தான் ஏற்பட வேண்டும் என்பதில்லை; எங்கெல்லாம் அவசரக்காரர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தவறாமல் இது நடக்கும். வெனிஸ் நகரின் கால்வாய்ப் போக்குவரத்தில் அவ்வப்போது படகுகள் ஜாம் ஆகி நிற்பது உண்டு. பாங்காக் நகரின் மிதக்கும் மார்க்கெட்களில், படகுகள் சிக்கித் திணறுகின்றன என்று கால்வாய்களையெல்லாம் தூர்த்து சாலைகளாக்கினார்கள். இப்போது அவற்றில் கார்கள் நெரிசலாடுகின்றன!

போக்குவரத்து நெரிசல்கள் ஏன், எப்படி ஏற்படுகின்றன என்பதை கம்ப்யூட்டர் உதவியுடன் விஞ்ஞானிகள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். ஃப்ளூயிட் டைனமிக்ஸ் என்று குழாயின் வழியே தண்ணீர் ஓடுவதுடன் ஒப்பிட்டு, போக்குவரத்தைக் கணித சூத்திரங்களில் அடக்கமுடியும். இப்போது டிராஃபிக் எஞ்சினியரிங் என்பதை பட்டப் படிப்பாகவே எடுத்துப் படிக்கலாம். ஆனால் இந்தியாவுக்கே உரிய சாலைத் தொல்லைகளான சாக்கடைப் பள்ளங்கள், எருமை மாடுகள், வி.வி.ஐ.பிகள் போன்றவற்றை எந்த கம்ப்யூட்டராலும் மாடலிங் செய்ய முடியாது. எனவே என்னதான் புள்ளியியல் புரபசராக இருந்தாலும், தெருவில் இறக்கிவிட்டால் அவருக்கும் இதே கதிதான் ஏற்படுகிறது. ஒரு முறை இந்தியப் பிரதமரின் காரைத் தப்பான சாலையில் திருப்பி விட்டு, அவரும் நம்முடைய அவஸ்தைகளைச் சில மணித் துளிகள் அனுபவித்தார். (அங்கே டூட்டியில் இருந்த போலீஸ்காரர்களைப் பாராட்டுவதற்குப் பதிலாகச் சஸ்பென்ட் செய்தார்கள், பாவம்).

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் பல வழிகளை ஆலோசித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, ரோட்டில் வண்டி ஓட்டுவதற்குக் காசு வசூலிப்பதுதான். டோல் ரோடுகள், டோல் பாலங்கள் என்று முக்கியமான பிரதேசங்களையெல்லாம் கட்டணப் பகுதிகளாக அறிவிக்க ஆரம்பித்தார்கள். லண்டன் நகரின் பயணம் செய்ய “நெரிசல் கட்டணம்’ ஐந்து பவுண்டு என்று தொடங்கி, வருடா வருடம் விலை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் பல ரோடுகளில் அலுவலகம் போகும் பீக் அவர் நேரங்களில், தெருவில் வீல் வைத்தால் டிக்கெட் வாங்க வேண்டும். சனி, ஞாயிறு இலவசம். அதிலேயே சிக்கனமான சிறிய கார்களுக்கு சற்றுக் குறைந்த கட்டணம், மண்ணெண்ணை கலந்து கரும் புகை கக்கினால் அதிக சார்ஜ் என்று பல பாலிசிகளை ஒன்றாகக் கலந்து குழப்படி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

சாலைக் கட்டணங்களை மறுக்கவும் எதிர்க்கவும் பலர் கோஷ்டிகள் அமைத்து கோஷம் போடுகிறார்கள். “”சாலைகள் போடுவது, அசோகர் காலத்திலிருந்தே அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல் மீது பயங்கரக் கந்து வட்டி வரி என்று உறிஞ்சிக் கொழுத்தது போதாமல், இப்போது தெருவில் போவதற்கும் காசு கேட்கிறீர்களா? இது மனிதனின் அடிப்படையான நடமாடும் உரிமையையே கட்டுப்படுத்துகிறதே” என்பது அவர்களுடைய அனல் மூச்சு. “” வழியில் இருக்கிற ஒவ்வொரு தெருவுக்கும் பாலத்துக்கும் தண்டல் கட்டிவிட்டுத்தான் போக வேண்டும் என்றால், பணக்காரர்கள் எப்படியும் பயணம் செய்துவிடுவார்கள். அடித்தட்டு மக்கள்தான் நாலு இடத்துக்குப் போய் வேலை செய்து பிழைக்க முடியாமல் தன்னுடைய பேட்டைக்குள் சிறைப்பட்டு விடுவார்கள்” என்பதும் நியாயமாகவே படுகிறது.

கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றால் அடுத்த ஆயுதம், வாகனம் ஓட்டுவதில் முடிந்த அளவு தடைகள் ஏற்படுத்துவது. கூட்டம் கூடும் பகுதிகளில் வேண்டுமென்றே பார்க்கிங் வசதிகளைக் குறைத்து விடுவது. தியேட்டர் அருகே காரை நிறுத்த இடமில்லாமல் லொட்டு லொட்டென்று ஒரு கிலோமீட்டர் நடந்து போய் சினிமா பார்க்க வேண்டுமென்றால், பலர் விடுமுறை நாள்களில் அங்கே போய் அம்முவதைத் தவிர்ப்பார்கள். அமெரிக்காவில் ஒற்றை ஆள் ஒருவர் தன்னந்தனியாகக் காரில் சென்றால் பொதுப் பாதையில் நீண்ட வாகன வரிசையில்தான் போக வேண்டும்; ஒரே காரில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து போனால், ரோடு ஓரத்தில் தனியாக ராஜ பாட்டையில் சல்லென்று சீக்கிரமாகப் போகலாம். கார்பூல் பாதை என்ற இந்த வசதிக்காகவே, ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் முறை போட்டுக் கொண்டு தினம் ஒருவருடைய காரில் சேர்ந்து பயணம் செய்வார்கள். நெரிசலைக் குறைப்பதற்கு எல்லாவற்றையும் விடச் சிறந்த ஆயுதம், பஸ், ரயில்தான்!

சாலைச் சுங்கம் வசூலிக்கும் சாவடிகளில் தினமும் லட்சக் கணக்கான வண்டிகளுக்கு எச்சில் தொட்டு டிக்கெட் கிழித்துக் கொடுத்து நாக்கு உலர்ந்து போய்விட்டதால், ஆட்டோ பாஸ், டெலி பாஸ் போன்ற தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் சுங்கச் சாவடியில் நிறுத்தவோ, வேகத்தைக் குறைக்கவோ கூடத் தேவையில்லை; ரேடியோ அலைகள் வழியே தொடர்பு கொண்டு காரே போகிற போக்கில் தன் கட்டணத்தைக் கட்டி விடும். சிங்கப்பூரில் நகர மையத்துக்குப் போகிற எல்லா ரோடுகளிலும் வருக வணக்கம் என்று தோரண வாயில்கள், வளைவுகள் உண்டு. எல்லாம் தானியங்கிப் பணம் பிடுங்கி வளைவுகள்! கலீலியோ என்று செயற்கைக் கோள் அமைப்பின் வழியாக ரோட்டில் போகும் அத்தனை வண்டிகளையும் கடவுள் போல் கண்காணித்து நீங்கள் எப்போது, எந்தத் தெருவில் எத்தனை நேரம் பயணம் செய்தீர்கள் என்று கூட துல்லியமாக பில் போட்டு வசூலித்து விடமுடியும். அரசியல், பிசினஸ் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்தத் தொழில் நுட்பத்தில் இருக்கும் துஷ்பிரயோக வசதியைக் கருதி, இதைப் பல நாடுகளில் பரவலாகக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள். இடது சாரிகள் “உயிரே போனாலும் ஒப்புக் கொள்ள மாட்டேன்’ என்று எதிர்க்கிறார்கள்.

பப்லுவுக்குப் பிடித்த புராதனமான கடி ஜோக் ஒன்று: பசியுடன் இருந்த ஒருவன், காலை உணவுக்கு ப்ரெட் வாங்கி வெண்ணை தடவிக் கொண்டு மவுண்ட் ரோடில் போய்க் காத்திருந்தானாம். ஏன்? அங்கே ட்ராபிக் ஜாம் கிடைக்கும், தொட்டுத் தின்னலாம் என்று!

Posted in Accidents, Auto, Carpool, Cars, Chennai, City, Comfort, Commute, Congestion, Diesel, Dinamani, Driver, Environment, Freeway, Gas, Highway, infrastructure, Insurance, Kathir, LA, Lights, Limo, Limousine, London, Luxury, Manufacturing, Metro, NYC, Paris, Parking, Parkway, Patterns, Petrol, Pollution, Pooling, Raman Raja, Roads, Rotary, Rural, Signals, Singapore, Sprawl, Street, Suburban, Tax, Toll, Traffic, Transport, Travel, UK, Urban, Warming | Leave a Comment »

Dinamani Kathir Weekly Variety: Book, Computer User, Gadam, Traffic, Helmets

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2007

படித்ததில் கிடைத்தது

சலூர், ஆரிகரு, நிகமா, கொரூலா, பொதுகே, மனார்பா – இதெல்லாம் என்ன என்கிறீர்களா? ஒரு வேளை ஜப்பானிய வார்த்தைகளோ என்று குழம்புகிறீர்களா? குழப்பம் வேண்டாம்.

சலூர் அல்லது சாலூர் என்றால் சேலம்.

ஆரிகரு என்றால் திருச்சி உறையூர்.

நிகமா என்றால் நாகப்பட்டினம்

கொரூலா என்றால் காரைக்கால்.

பொதுகே என்றால் பாண்டிச்சேரி.

மனார்பா என்றால் சென்னை மயிலாப்பூர்.

இப்படி நம்ம ஊர்ப் பெயர்களை வாய்நிறைய அழைத்தவர் தாலமி. கி.பி.119 – 161 ஆண்டுகளில் எகிப்தில் வாழ்ந்த அறிஞர். அவர் எழுதிய புவியியல் புத்தகம் ஏழாம் தொகுதியில் இந்தத் தகவல்கள் இருக்கின்றன.

(வி.எஸ்.வி.இராகவன் எழுதிய “தாலமி’ என்ற நூலிலிருந்து கிடைத்த தகவல்)

ஆராய்ச்சி: கம்ப்யூட்டர் – கீ போர்டு – கைகள்!

ந.ஜீவா

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எல்லாருடைய வீடுகளிலும் ரேடியோ கூட இல்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு எல்லாருடைய வீடுகளிலும் டி.வி.இல்லை. ஆனால் இப்போது குடிசைகளின் கதவைத் தட்டி டி.வி. நுழைந்துவிட்டது. இன்னும் பத்தாண்டுகளில் கம்ப்யூட்டர் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்குக் காலம் மாறிவருகிறது.

கம்ப்யூட்டர் படிப்பும் அந்தத் துறையில் வேலைவாய்ப்பும் பெருகிவிட்டதைப் போலவே அது தொடர்பான பிரச்சினைகளும், உடல் நலக் குறைபாடுகளும் அதிகரிப்பது இயல்பானதே.

ஒரு நாளைக்குப் பத்து, பன்னிரண்டு மணி நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி, கழுத்து வலி, கண்ணில் பிரச்சினைகள், தலைவலி போன்றவை ஏற்படுவது சாதாரணம்.

மணிக்கட்டில் வலியும் அதைத் தொடர்ந்து விரல்களில் பாதிப்பும் பின்னர் கம்ப்யூட்டரில் வேலை செய்ய முடியாத அளவுக்குக் கைகள் பாதிக்கப்படுவதும் வெளிநாடுகளில் எப்போதோ ஏற்பட்டுவிட்டன. நமது நாட்டில் அவ்வாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்று ஆராய்ச்சி செய்துள்ளனர் தஞ்சை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் கே.முகம்மது அலியும் சென்னை ஸ்ரீஇராமச்சந்திரா மெடிக்கல் காலேஜைச் சேர்ந்த டாக்டர் சத்தியசேகரனும். போலந்தில் இருந்து வெளிவரும் Intertnational journal of JOSE occupational safety and Ergonomics என்ற உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சி இதழில் அவர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரை வெளிவந்து சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் பாதிப்புகள் ஏற்படாமல் எவ்வாறு தடுத்துக் கொள்வது என்பது பற்றியும் டாக்டர் முகம்மது அலியிடம் பேசினோம்.

டாக்டர் கே. முகம்மது அலி

நம்முடைய நாட்டில் குறிப்பாகச் சென்னையில் கடந்த பத்தாண்டுகளாகவே ஐ.டி. கம்பெனிகள் அதிகரித்துவிட்டன. நிறையப் பேர் கம்ப்யூட்டர் படித்துவிட்டு இரவும் பகலும் கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து வேலை செய்கின்றனர். இந்த ஐ.டி.கம்பெனிகளில் வேலைசெய்யும் பலர் ஒரு நாளைக்கு பத்துமணி நேரம், பன்னிரண்டு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்கிறார்கள். அது தவிர, வீட்டுக்கு வந்தும் அலுவலக வேலைகளைச் செய்பவர்களும் உள்ளனர். போதாக் குறைக்கு இன்டர்நெட் கனெக்ஷன் வேறு வாங்கி வைத்திருப்பவர்கள் வீட்டிற்கு வந்து மேலும் இரண்டுமணி நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருப்பார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். கழுத்து வலி, முதுகு வலி, கண்எரிச்சல், தலைவலி, உடல்பலவீனமாக உணர்தல், மன இறுக்கம் எல்லாம் சாதாரணம் என்று சொல்லக் கூடிய அளவில் மணிக்கட்டில் வலி ஏற்படும். மணிக்கட்டுப் பகுதியில் உள்ள மீடியன் நரம்பில் ஏற்படும் பாதிப்பினால் இது ஏற்படுகிறது. இதனால் கைவிரல் மரத்துப் போகும். இரவுநேரத்திலும் காலையில் எழும்போது கைவிரல்களில் வலி அதிகமாகத் தெரியும். ஆரம்ப நிலையிலேயே இதைக் கவனிக்கவில்லையென்றால் பின்னர் கைத் தசைகள் பாதிக்கப்பட்டு கைகளினால் வேலையே செய்ய முடியாத நிலை ஏற்படும். இந்த நோய்க்கு Carpal tunnel syndrome என்று பெயர்.

நமது நாட்டில் கம்ப்யூட்டர் வேலை வாய்ப்புகள் பெருகி வரும் சமயத்தில் இந்த மாதிரியான பாதிப்புகள் எந்த அளவுக்கு உள்ளன என்பதைப் பற்றி அறிய ஆராய்ச்சி மேற்கொண்டோம். நானும் டாக்டர் சத்தியசேகரனும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டோம்.

சென்னையில் உள்ள சுமார் 33 கம்பெனிகளில் இந்த ஆராய்ச்சிக்காக ஏறி இறங்கினோம். ஆராய்ச்சி செய்வதற்கான அனுமதி வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. பெரும்பாலான கம்பெனிகள் மல்ட்டி நேஷனல் கம்பெனிகளாக இருப்பதால் அதன் தலைமையகங்கள் வெளிநாடுகளில் உள்ளன. அவர்கள் முறைப்படி அனுமதி பெற வேண்டியிருந்தது. கடைசியில் எங்கள் ஆராய்ச்சிக்கு உட்பட்ட கம்பெனிகள் வெறும் 21 தான். அதில் மொத்தம் பணிபுரியும் 4276 பேரில் 648 பேரை “ராண்டம் சாம்பிளிங்’ என்கிற முறையில் தேர்ந்தெடுத்து ஆராய்ச்சியை மேற்கொண்டோம்.

ஆராய்ச்சியின் முடிவில் எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தன. கம்ப்யூட்டரில் வேலைசெய்பவர்களில் எட்டுப் பேருக்கு ஒருவருக்கு இந்த மணிக்கட்டு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

எங்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் தாம். அதிலும் ஆண்களே அதிகம். பொதுவாகப் பெண்களைவிட இந்தத் துறையில் ஆண்களே அதிக நேரம் வேலை செய்வதும் எங்கள் ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்தது. ஆண்கள் சராசரியாக 12 மணி நேரம் செய்தால் பெண்கள் 8 மணிநேரம்தான் வேலை செய்வது தெரிந்தது. இதனால் ஆண்களுக்கு இந்தப் பாதிப்புகள் அதிகம். மேலும் ஆண்கள் வீட்டிற்குப் போயும் இன்டர்நெட்டில் மூழ்கிவிடுவதும், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவையும் காரணம்.

டாக்டர் சத்தியசேகரன்

இந்தப் பிரச்சினை வருவதற்கு முக்கியக் காரணம், கம்ப்யூட்டரில் கீ போர்டில் டைப் செய்யும் போதும், மெüûஸப் பயன்படுத்தும் போதும் மணிக்கட்டு அருகே கை மடங்கியிருக்கும்படி வேலை செய்வதுதான். அதனால் மீடியன் நரம்பு பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க முழங்கையும் மணிக்கட்டும் நேர்கோட்டில் இருக்கும்படி வைத்து வேலைசெய்ய வேண்டும். இதற்கு உட்காரும் இருக்கை வேலை செய்பவரின் உயரத்திற்குத் தக்கபடி ஏற்றி இறக்கி அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்படி இருக்க வேண்டும்.

பலர் வீடுகளில் கம்ப்யூட்டர் வாங்கி விடுவார்கள். ஆனால் அதற்கேற்ற பொருத்தமான மேஜையோ, நாற்காலியோ வாங்கமாட்டார்கள்.

அதற்கடுத்து தொடர்ச்சியாக வேலை செய்யாமல் அரை மணிநேரத்துக்கு ஒரு தடவை 5 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். 2 – 3 மணி நேரங்கள் தொடர்ந்து வேலை செய்தால் குறைந்தபட்சம் கால் மணி நேரமாவது ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும்.

மானிட்டருக்கும் கைக்கும் உள்ள தூரத்தைப் பொருத்தமான அளவில் வைக்க வேண்டும். மணிக்கட்டு ஒரு போதும் மடங்கவே கூடாது.

2004 ல் நாங்கள் செய்த இந்த ஆராய்ச்சியை நாங்கள் போலந்தில் உள்ள ஆராய்ச்சி இதழுக்கு அனுப்பி வைத்தோம். அந்த இதழ் சர்வதேச தொழிலாளர் அமைப்பாலும் (ILO), சர்வதேச எர்கானமிக்ஸ் அமைப்பாலும் (IEA) அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. எந்த ஆராய்ச்சிக் கட்டுரையை அனுப்பி வைத்தாலும் அவர்கள் உடனே “ஓகே’ சொல்லிவிடமாட்டார்கள். இத்துறை சார்ந்த பல நிபுணர்களின் பார்வைக்கு கட்டுரை அனுப்பி வைக்கப்படும். அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகே கட்டுரை பிரசுரிக்கப்படும். அது 2006 டிசம்பர் மாதம் பிரசுரிக்கப்பட்டது.

எல்லாராலும் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை மட்டுமே வெளியிடும் இணையதளமான www.pubmed.com ் இலும் எங்களுடைய கட்டுரை வெளிவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியை இந்தியாவிலேயே நாங்கள்தான் முதன் முறையாகச் செய்துள்ளோம்.

2004 இல் சண்டிகாரில் நடந்த IAPSM – இன் தேசியமாநாட்டில் இந்தக் கட்டுரைக்கு “இளம் ஆண்விஞ்ஞானிகளின் சிறந்த ஆராய்ச்சிக்கான விருது கொடுத்தார்கள்.

இந்த ஆராய்ச்சியைச் செய்து உண்மையைக் கண்டுபிடிப்பது மட்டும் எங்கள் நோக்கமல்ல. கம்ப்யூட்டரில் தொடர்ந்து பணிபுரிபவர்களுக்கு இம்மாதிரியான பிரச்சினைகள் இனியும் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

எனவே இதுகுறித்து கம்ப்யூட்டரில் பணிபுரிபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். அவர்கள் வேலை செய்யும் கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு தேவையான ஆலோசனைகளைச் சொல்கிறோம். குறிப்பாக ஸீட்டிங் அரேன்ஜ்மென்ட் பற்றிச் சொல்கிறோம். அரசுக்கும் இந்த ஆராய்ச்சி முடிவுகளைத் தெரிவிக்க முயற்சி எடுத்து வருகிறோம்.

முகங்கள்: நீதியின் ஏ.கே.47!

ஞாயிறு

ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வலம் வரும் டிராஃபிக் ராமசாமி (74) அநீதிகளுக்கு எதிரான ஓர் ஏ.கே.47!

பொதுமக்கள், போலீஸ், அரசியல்வாதி, வக்கீல், முதல்வர் என யார் தவறு செய்தாலும் “பொது நல வழக்கு’ மூலம் தட்டிக் கேட்பவர்! வெற்றி பெறுபவர்!

லேட்டஸ்ட் வெற்றி -“ஹெல்மெட் கட்டாயம்!

இந்த டிராஃபிக் ராமசாமி தன் டெரிஃ”பிக்’ பயண அனுபவத்தை அவரே இங்கு சொல்கிறார். நோ டிராஃபிக் “ஜாம்’!

“”ஏப்ரல் ஒண்ணு முட்டாள்கள் தினம். அன்னைக்குதான் நான் பிறந்தேன். வருஷம் 1934. முட்டாள்கள் தினத்தில் பிறந்தவர்கள் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள் என்பதை மாற்றவேண்டும் என்கிற எண்ணம் எனக்குச் சின்ன வயதிலிருந்தே உண்டு. அதை இப்போது நான் அறிவாளிகள் தினம்னு மாற்றியிருக்கிறேன் என்று கூடச் சொல்லுவேன். தனக்குச் சரியென்று பட்டதைச் சரியென்றும் தவறென்று பட்டதைத் தவறு என்றும் சொல்வது தவறே இல்லை. இந்த எண்ணமும், இந்தக் கொள்கையும்தான் என் மூச்சே. இதை நான் சின்ன வயதிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன்.

பச்சையப்பன் கல்லூரியில் ஃபெல்லோ ஆர்ட்ஸ் முடிச்சிட்டு பி.அண்ட்.சி மில்லுல படிப்படியா முன்னேறி அதிகாரியா வேலை செஞ்சேன். எங்க அப்பாவும் அங்க வேலை பார்த்தார். எனக்குக் கல்யாணம் செய்து வைக்க அப்பா முடிவு செய்தார். பொண்ணு பார்த்து நிச்சயதார்த்தம் முடிச்சு கல்யாணப் பத்திரிகையும் அடிச்சாச்சு. எனக்குத் தெரியாமலேயே எங்கப்பா பொண்ணு வீட்டாரிடம் வரதட்சணை கேட்டிருக்கிறார். ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரதட்சணை. இந்த விஷயம் தெரிந்ததும், வரதட்சணை வாங்கக்கூடாதுனு சொன்னேன். எங்கப்பா ஒத்துக்கல. வாங்கியே ஆகணும்னு ஒத்தக் கால்ல நின்னாரு. வாங்கக்கூடாதுனு நான் ரெட்டைக் கால்ல நின்னேன். இது ரெண்டு பேருக்குள்ளேயும் பெரிய எதிர்ப்பா கிளம்பிடுச்சு. பத்திரிகை அடிச்சு கொடுத்தப் பிறகும் கல்யாணத்தை நிறுத்துவதற்கு அப்பா முயற்சித்தார். பி.அண்ட்.சி மில்லுல எனக்கு மேல இருந்த அதிகாரிகளிடம் சொல்லி வேலையைவிட்டுத் தூக்கிடுவதாக மிரட்டினார். நான் அஞ்சவில்லை. எதிர்ப்புகளை மீறி வரதட்சணை வாங்காம நிச்சயம் செய்த பெண்ணையே மணம் முடித்தேன். வீட்டைவிட்டு தனியாகவும் வந்துவிட்டேன். எங்கூட பிறந்தவங்க பத்துபேரு. கூட்டுக் குடும்பமா இருந்தோம். அதோடு பிரிந்ததுதான், இன்று வரை சேரவில்லை. சில காலத்திற்கு பிறகு பி.அண்ட்.சி மில்லு வேலைய உதறிவிட்டு வந்து, சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக்கேட்பதுதான் என் வேலை என்று உறுதி எடுத்துக்கொண்டேன்.

ஆரம்பத்தில் தவறு செய்கிற ஊழியர்கள் மீது பெட்டிஷன் போட்டு நடவடிக்கை எடுத்தேன். அப்போது அதிகாரிகளும் உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுத்தார்கள். போகப் போக பெட்டிஷனுக்கு மதிப்பு இல்லாமல் போனது. போட்ட பெட்டிஷன்கள் குப்பைக் கூடைக்குத்தான் போயின. இதன்பிறகுதான் பொதுநல வழக்குப் போடத் தொடங்கினேன்.

முதல் வழக்கு ஐகோர்ட்டு பகுதியில் உள்ள ஒரு ரோட்டை ஒன்வேயாக மாற்றியது தொடர்பானது. ஐகோர்ட்டு உள்ள பாரிமுனை பகுதி நெரிசல் மிகுந்த பகுதி. ஒன் வே மாற்றிய பிறகு பல விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். ஒன் வேயாக மாற்றிய முதல்நாள் ஒரு கண்டக்டர் உயிரிழந்தார். ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு ரோடைக் கிராஸ் செய்கிறபோது வேனில் அடிபட்டு இறந்துபோனார். இப்படி ஒன்றரை வருடத்தில் 28-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது இருவழிச் சாலையாக இருந்தபோது விபத்தில் இறந்தோர் எண்ணிக்கையைவிட அதிகம். இந்தப் புள்ளிவிவரங்களுடன், இறந்தவர்கள் போட்டோ உட்பட அனைத்து விவரங்களையும் சேகரித்து பொதுநல வழக்குத் தொடர்ந்தேன். போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் என் கருத்தை ஒத்துக்கொள்ளவில்லை. கோர்ட்டில் ஒரு போக்குவரத்து காவல்துறை அதிகாரி, “”ஐகோர்ட்டு உள்ள பாரிமுனை பகுதியை ஜெர்மனியில் உள்ள சாலை அமைப்புகள் போல மாற்றி அமைக்கப்போகிறோம். இதில் ஒரு கட்டம்தான் ஒன் வே. இது இங்கு அவசியமானது” என்றார். அதற்கு நான் “”இந்த அதிகாரி ஜெர்மனிக்குதான் லாயக்கு… தமிழ்நாட்டுக்கு லாயக்கில்லை. அவரை அங்கேயே மாற்றிவிடுங்கள்”என்று சொன்னேன். இதன் பிறகு நீதிபதிகள் விசாரித்து பாரிமுனை பகுதிக்கு ஒன் வே சரிவராது என்று தீர்ப்பு வழங்கினர். இந்த வழக்கில் ஒரு சோகச் சம்பவம் என்னவென்றால். எந்த அதிகாரி பாரிமுனை பகுதியை ஜெர்மனியாக மாற்றி அமைக்கிறேன் என்று சொன்னாரோ அவருடைய சகோதரி கணவர் தீர்ப்பு வருவதற்கு முதல்நாள் விபத்தொன்றில் அதே சாலையில் இறந்துபோனார். அதன் பிறகு மீன்பாடி வண்டிகள் குறித்து வழக்குத் தொடர்ந்தேன். சைக்கிள் ரிக்ஷா தொழிலாளர்களின் நலனின் அக்கறை கொண்டு, .25 குதிரை திறனுள்ள மோட்டாரை சைக்கிள் ரிக்ஷாவில் பொருத்திக்கொள்ள அனுமதி கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆனால் போகப்போக சைக்கிள் ரிக்ஷா என்ற பெயரில் மீன்பாடி வண்டியில் மோட்டார் வாகனங்களுக்குப் பொருத்தக்கூடிய மோட்டாரைப் பொருத்தி ஓட்டி வந்தனர். இந்த மீன்பாடி வண்டியில் அடிபட்டு இறந்தால் எந்த நஷ்ட ஈடும் பெற முடியாது. இதைக் கருத்தில்கொண்டு பொதுநல வழக்குத் தொடர்ந்தேன். முதல்கட்டமாக சென்னைக்குள் மீன்பாடி வண்டிக்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. புறநகர் பகுதிகளில் மட்டும் இப்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. அங்கேயும் இதற்கு தடைவிதிப்பது தொடர்பாக வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

அதைப்போல அடுக்ககங்கள் தொடர்பாக வழக்குத் தொடர்ந்தேன். 85 அடிகள் கொண்ட சாலையில் 3 மூன்று மாடிக் கட்டடங்கள்தான் கட்டலாம். ஆனால் அனுமதி பெறாமல் பலர் பலமாடி கட்டடங்கள் கட்டியுள்ளனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னையில் 32 அடுக்ககங்களை இடிக்கச் சொல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி பல தரப்பிலும் இருந்து மிரட்டல் வந்தன. 30 லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும் கூறினார்கள். நான் வாங்க மறுத்துவிட்டேன்.

இந்த வழக்கில் மட்டுமல்ல பல வழக்குகளில் மிரட்டப்பட்டுள்ளேன். ஒருமுறை ஐகோர்ட்டு அருகில் போக்குவரத்துகளைச் சரிசெய்துகொண்டிருந்தேன். வழக்கு போடுவது மட்டும்தான் என் வேலை என்று நினைக்கக்கூடாது. போக்குவரத்துகளைச் சரிசெய்கிற பணியிலும் ஈடுபடுவேன். போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரமும் செய்கிறேன். ஐகோர்ட்டு அருகில் போக்குவரத்தைச் சரிசெய்து கொண்டிருக்கும்போது மாலை நேரம். கூட்டம் அதிகம். எனக்கு ஒரு கண் சரியாகத் தெரியாது. அதற்காகக் கண்ணாடி போட்டிருப்பேன். இதைத் தெரிந்துகொண்ட ஒருவன் கண்ணாடியைத் தட்டிவிட்டு கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டான். இத்தனைக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் சிறிது தூரத்தில்தான் நின்றிருந்தார். அவரிடம் புகார் கொடுத்தேன் அவருக்குத் தெரிந்துதான் இந்தச் சம்பவம் நடந்தது. ஒரு நடவடிக்கையும் இல்லை. ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தேன். அவர்கள் உத்தரவின்பேரில் எனக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. போலீஸ் பாதுகாப்பு அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல. மக்களும் கேட்டுப் பெறலாம் என்பதற்காகத்தான் போலீஸ் பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டேன். என்னைப் போல என் வீட்டாருக்கு எந்தவித தொந்தரவும் வரக்கூடாது என்பதற்காக நான் அவர்களோடு இல்லை. கோடம்பாக்கத்தில் ஒரு நண்பர் வீட்டில் இருக்கிறேன். நாளுக்குநாள் எதிரிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். வக்கீல்கள், அரசியல்வாதிகள், முதல்வர்கள் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இது எனக்குச் சந்தோஷத்தையே அளிக்கிறது. என் ரோல் மாடல் இராஜாஜி. தவறென்றால் எங்கும், யாரையும் தட்டிக் கேட்பேன்.” என்று கையில் கேமரா எடுத்துக்கொண்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் சகிதம் எங்காவது தவறுகள் நடக்கிறதா என்று பஸ்ஸில் ஏறி பயணிக்கத் தொடங்குகிறார் டிராஃபிக்!

மேடை: இங்கே கடம்; அங்கே க்ளே}டிரம்!

ரவிக்குமார்

கர்நாடக இசை உலகில் மூத்த தலைமுறை, சமகாலத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் தலைமுறை, வளர்ந்து வரும் இளந்தலைமுறை, இந்த மூன்று தலைமுறை இசைக் கலைஞர்களும் தங்களின் கச்சேரிக்கு கடம் வாசிப்பதற்கு ஃபர்ஸ்ட் சாய்ஸôக விரும்புவது, “கடம்’ சுரேஷ்!

“”கடவுள் அனுக்கிரகத்தோடு, அனுசரிப்புடன் கூடிய வாசிப்பு முறையை நான் பின்பற்றுவதுதான், மூத்த தலைமுறை கலைஞர்கள் முதல் இளந்தலைமுறை கலைஞர்கள் வரை பலரும் நான் பக்கவாத்தியம் வாசிக்கவேண்டும் என்று விரும்புவதற்குக் காரணம்” என்கிறார் அடக்கத்தோடு சுரேஷ்.

கடம் தவிர மிருதங்கம், கஞ்சிரா, மோர்சிங் போன்ற வாத்தியங்களை இசைப்பதிலும், கொன்னக்கோலிலும் சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கும் சுரேஷ், சமீபத்தில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடந்த இரண்டாவது உலகளாவிய தாள வாத்தியக்காரர்கள் பங்கேற்ற இசைத் திருவிழாவில் பங்கேற்று கடம் வாசித்திருக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்த ஒரே இந்தியக் கலைஞர் “கடம்’ சுரேஷ் என்பதால், இந்தியர்கள் “காலரை’த் தூக்கி விட்டுக் கொள்ளலாம்! இனி அவரின் இசைப் பயணத்திலிருந்து சில ஞாபகத் துளிகள்!

நான் இன்றைக்கு இசையுலகில் நல்லதொரு நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் எனக்குக் கிடைத்த குரு பரம்பரையினர்தான். லய மேதை ஹரிஹர சர்மா தான் எனக்கு முதல் குரு. இவர் விக்கு விநாயகராமின் தந்தை. விக்கு விநாயகராமிடமும் என்னுடைய பாடத்தைத் தொடர்ந்தேன். அதன்பின், உமையாள்புரம் நாராயணசுவாமியிடம் அவரின் கடைசி காலத்தில் அவரிடமிருந்த மிகப்பெரிய பொக்கிஷத்தை நான் அறிந்து கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அது, அவரின் தந்தை கோதண்டராம ஐயர் கடம் வாசிப்பில் தனக்கென உண்டாக்கியிருந்த பாணி. கையின் விரல்களைப் பயன்படுத்தித்தான் பெரும்பாலும் கடம் வாசிப்பார்கள். ஆனால் அவரது பாணி, கையின் விரல்கள், விரல் நகங்கள், விரல் மூட்டுகள்..என அனைத்தையும் பயன்படுத்தி வாசிக்கும் முறை. அதேபோல் டி.வி. கோபாலகிருஷ்ணனிடமும் இருபது வருடங்கள் வரை லயப் பயிற்சி பெற்றேன். 1980-லேயே டி.வி.ஜி.யுடன் இணைந்து கர்னாடிக் ஜாஸ் இசை நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கி விட்டேன். அப்போது திலீப் கீ-போர்டு வாசிப்பார். சிவா டிரம்ஸ் வாசிப்பார். அதன்பின் ஒவ்வொருவரும் தனித் தனி டிராக்கில் பிஸியாகிவிட்டோம். சிவா- டிரம்ஸ் சிவமணியாகி மும்பையில் செட்டிலாகிவிட்டார். திலீப், ஏ.ஆர். ரஹ்மானாக புகழ்பெற்ற இசையமைப்பாளராகி விட்டார். நானும் பிரபல வித்வான்களுக்கு கடம் வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.

வீணை எஸ். பாலசந்தர் சீனாவில் இசை நிகழ்ச்சி வழங்கும் போது அவருக்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மூத்த இசைக் கலைஞரான உமையாள்புரம் சிவராமன் ஜப்பானில் வழங்கிய இசை நிகழ்ச்சிக்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் பெருமையை எனக்கு அளித்தார்.

பொதுவாக நடனத்துக்கு கடம் வாத்தியத்தைப் பயன்படுத்துவது அரிது. ஆனால் மறைந்த நாட்டிய மேதை சந்திரலேகா “மகா காளி’ என்னும் பெயரில் மரபும், நவீனமும் கலந்த நாட்டிய நிகழ்ச்சியை ஐரோப்பா மற்றும் கனடா நாடுகளில் நடத்தினார். இந்த நிகழ்ச்சிகள் முழுவதிலும் நான் கடம் வாசித்தேன்.

கொல்கத்தாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞரான விக்ரம்கோஷ் தலைமையில் உருவான “ரிதம்ஸ்கேப்’ என்ற குழுவில் நானும் இடம்பெற்றேன். நாங்கள் 2004-ல் பார்சிலோனாவில், ஓர் இசை நிகழ்ச்சியை அளித்தோம்.

இன்றைக்கு பல உலக நாடுகளிலும் என்னுடைய கடத்தின் ஒலி கேட்பதற்குக் காரணம், மிருதங்க மேதையான காரைக்குடி மணிதான். அவரின் “ஸ்ருதிலயா’வின் மூலமாக மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.

தற்போது நான் பங்கேற்ற பார்சிலோனா இசை விழாவில், இரண்டு நாட்கள் என்னுடைய மியூசிக் கன்ஸர்ட் நடந்தது. என்னுடன் சேர்ந்து பெüலோ சிமினோ என்பவர் “ஃபிரேம் டிரம்’ என்ற தாள வாத்தியத்தை வாசித்தார். இந்த வாத்தியம் நம்மூரில் வாசிக்கப்படும் “டேப்’ மாதிரி இருக்கும். ஆனால் இதை கையில்தான் வாசிக்கவேண்டும். கடம் வாத்தியக் கலைஞர்களுக்கு மேற்கத்திய நாடுகளில் ஏகப்பட்ட வரவேற்பு இருக்கிறது. அங்கு கடத்திற்குப் பெயர் க்ளே-டிரம்! அதன் நாதத்திற்கு மயங்காத மேற்கத்தியர்களே கிடையாது எனலாம். ஃபிரேம் டிரம் வாசிக்கும் பெüலோ சிமினோ கூட என்னிடம் கடம் வாசிக்கக் கற்றுக் கொள்கிறார். எப்படி என்கிறீர்களா? எல்லாம் இ-மெயில், சாட்டிங், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித்தான்!

நான் இங்கிருந்து கடம் வாசித்து அதை ஒரு ஃபைலில் பதிவு செய்து, இ-மெயிலில் அனுப்பி விடுவேன். அந்த ஃபைலில் ஒரு மாதத்துக்கு தேவையான பாடம் இருக்கும். சந்தேகம் என்றால், சாட்டிங்கில் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வார். இப்படி என்னிடம் இணையத்தின் வழியாக இசை படிப்பவர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் பெரும்பாலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள். பெüலோ சிமினோ போன்று சில வெளிநாட்டவர்களும் உண்டு. தாகா என்ற ஜப்பானியருக்கு எப்படியோ நான் கடம் வாசித்திருக்கும் சி.டி. கிடைத்திருக்கிறது. அதில் கடத்தின் நாதத்தில் மனதைப் பறிகொடுத்த தாகா ஆகி குனோ, இந்த வாத்தியத்தைக் கற்றுக் கொண்டே தீருவது என்ற முடிவோடு இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னைச் சந்தித்தார். அவருடைய ஆர்வம் எனக்குப் பிரமிப்பூட்டியது. மடமடவென்று கடம் வாசிப்பில் இருக்கும் நுணுக்கங்களைத் தெரிந்து கொண்ட தாகா, இன்றைக்கு மானாமதுரைக்குச் சென்று கடம் வாத்தியங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கும் அளவுக்குத் தேறிவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

குரு, சிஷ்ய பாணிதான் இசையைக் கற்றுக்கொள்வதற்கான சரியான முறை. வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நம்முடைய கலாசாரத்தின் வேரை இழக்காமல், கலை வடிவங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது இன்றைய தொழில்நுட்பம். இதை நான் தவறென்று சொல்லமாட்டேன். ஆனால் உள்ளூரில் இருப்பவர்கள் எல்லாம் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி இசையைக் கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தால் அவர்களை நான் ஆதரிப்பது கிடையாது. அவர்கள் நேரடியாகக் கற்றுக் கொள்வதுதான் நல்லது.

நமது மதத் தத்துவங்களின்படி மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை உடன் வருவது பானை. இப்படிப் பானை தொடர்பான தத்துவங்களை, சிந்தனைகளை தனது (ஒரு குயவன் அரை கடவுள்)‘அ ல்ர்ற்ற்ங்ழ் ஹ க்ங்ம்ண் எர்க்’ என்ற நூலில் 1960-ம் ஆண்டு எழுதியுள்ளார் பிரெஞ்ச் எழுத்தாளரும், தத்துவவியலாளருமான ழான் கேன்டீன். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு ராஃப்பேல் ஓப்ரியான் என்னும் பிரெஞ்ச் குறும்பட இயக்குனர் “யதி’ என்னும் பெயரில் 45 நிமிடங்கள் ஓடும் ஒரு குறும்படத்தை 1996-ல் எடுப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்தார். அந்தக் குறும்படத்தின் பின்னணி இசையில் முழுக்க முழுக்க நான் கடம் வாசித்திருந்தேன். இந்தக் குறும்படத்துக்கு சிறந்த குறும்படத்திற்கான பரிசும் கிடைத்தது.

எந்த வேளையில் சிவதாண்டவமாடினாலும் அப்போதெல்லாம் வாசிக்கப்படும் பெருமையைப் பெற்ற இசை வாத்தியம் கடம். அதன் புகழ் வெளிநாட்டவர்களின் இந்தக் குறும்படத்தில் வெளிப்படுகிறது என்றால் அது மகிழ்ச்சியான விஷயம்தானே!” என்கிறார் சுரேஷ்.

-கடத்தின் நாதத்திற்கு நிகரேது!

Posted in Book, Computer, Dinamani, Everything, Gadam, Helmets, Junk, Kathir, Traffic, User, Variety | Leave a Comment »

Four new flyovers for Chennai to overcome traffic congestion

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2007

தென் சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரூ.58 கோடியில் 4 புதிய மேம்பாலங்கள்: ஸ்டாலின் அறிவிப்பு

 

 


 
  • Location: Chamiers Rd. & Turnbulls Rd. junction, Length: 646.9m & Width: 7m
  • North Usman Rd. & Kodambakkam High Rd. junction, 464.5m & 7m
  • GN Chetty Rd. & Thirumalai Rd. junction, 505m & 14m
  • Usman Rd. & Duraisamy Rd. junction, 789m & 10m

     

  •  

    The project is expected to ease congestion at the junctions of Turnbulls Road and Chamiers Road, North Usman Road and Kodambakkam High Road, G.N. Chetty Road and Thirumalai Road and Usman Road and Duraisamy Road with two-way flyovers.

    சென்னை, மார்ச் 5: சென்னையில் ரூ. 58.5 கோடியில் கட்டப்பட உள்ள நான்கு புதிய மேம்பாலங்களுக்கு பத்து நாளில் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்ட உள்ளதாக உள்ளாட்சி அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

    மேம்பாலம் கட்டப்பட உள்ள தி.நகர் உஸ்மான் சாலை -துரைசாமி சாலை சந்திப்பு, கோபதி நாராயணா சாலை -திருமலை சாலை சந்திப்பு, வடக்கு உஸ்மான் சாலை -எம்.ஜி.ஆர். சாலை சந்திப்பு, முத்துராமலிங்கம் சாலை -டர்ன்புல் சாலை சந்திப்பு ஆகிய இடங்களை தமிழக உள்ளாட்சி அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

    ஆய்வுக்குப் பின் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியது:

    இந்த நான்கு மேம்பாலங்களையும் கட்டுவதற்கு கேமன் இந்தியா என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த மேம்பாலங்கள் 15 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். இவை அனைத்தும் இருவழிப் பாதையாக அமையும். நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் மேம்பாலம் கட்டும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாது.

    பனகல் பூங்காவில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தைக் கட்டுவது குறித்து சி.எம்.டி.ஏ. வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    பசும்பொன் முத்துராமலிங்கம் சாலை -டர்ன்புல் சாலை சந்திப்பில் கட்டப்படும் மேம்பாலம் 646 மீட்டர் நீளமும் 7 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். மதிப்பீட்டுத் தொகை ரூ. 12.5 கோடி. இதன் மூலம் ஆழ்வார்பேட்டை, கோட்டூர்புரம், சி.ஐ.டி. நகர், நந்தனம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.

    வடக்கு உஸ்மான் சாலை -டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை சந்திப்பில் கட்டப்படும் மேம்பாலம் 464 மீட்டர் நீளமும் 7 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். மதிப்பீட்டுத் தொகை ரூ. 9.72 கோடி. இதன் மூலம் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம், தி.நகர் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.

    தி.நகர் வாணிமஹால் அருகே கோபதி நாராயணா சாலை -திருமலை சாலை சந்திப்பில் கட்டப்படும் மேம்பாலம் 505 மீட்டர் நீளமும் 14 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். இதன் மதிப்பீட்டுத் தொகை ரூ. 16.5 கோடி. இதன் மூலம் தி.நகர், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.

    உஸ்மான் சாலை -துரைசாமி சாலை சந்திப்பில் கட்டப்படும் மேம்பாலம் 789 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். இதன் மதிப்பீட்டுத் தொகை ரூ. 19.8 கோடி. இதன் மூலம் தி.நகர், கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என்றார் அவர்.

    Posted in Chennai, Congestion, DMK, Flyovers, Government, infrastructure, Karunanidhi, Madras, Mayor, MK Stalin, MuKa, Planning, South Chennai, South Madras, Stalin, Town, Traffic | Leave a Comment »

    80 year old bridge over Nasuvini collapses in Tamil Nadu

    Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

    80 ஆண்டு பழமையான பாலம் ஆற்றுக்குள் இடிந்து விழுந்தது

    பட்டுக்கோட்டை, ஜன. 25: பட்டுக்கோட்டை அருகே பழஞ்சூர் நசுவினியாற்றில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலைப் பாலம் செவ்வாய்க்கிழமை மாலை இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.

    அப்போது எந்த வாகனமும் பாலத்தில் செல்லவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது.

    சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலத்தின் நீளம் 40 மீட்டர், உயரம் சுமார் 4 மீட்டர். இதில் சுமார் 25 மீட்டர் நீளத்துக்கு பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

    இதனால் அதிராம்பட்டினம் -மன்னார்குடி (துவரங்குறிச்சி வழி) மார்க்கத்தில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

    புதிய பாலம் கட்டப்படும் வரை இவ்வழித்தடத்தில் வாகனப் போக்குவரத்துக்காக இடிந்த பாலம் அருகில் இன்னும் 1 மாதத்தில் மாற்றுப் பாதை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    Posted in Adhirampattinam, Bridge, Congestion, Dam, Floods, Issue, Mannargudi, Mannarkudi, Mullai Periyar, Nasuvini River, Palanjoor, Palanjur, Pattukkottai, Pattukottai, Pazhanjoor, Pazhanjur, Safety, Thuvarangurichi, Thuvarankurichi, Traffic, Water | Leave a Comment »

    Vijayganth’s Marriage Hall demolition to make way for Traffic Congestion – Rs 8.55 Crores compensation to be paid

    Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

    திருமண மண்டபம் இடிப்பு: விஜயகாந்த்துக்கு ரூ.8.55 கோடி நஷ்டஈடு திங்கட்கிழமை வழங்கப்படுகிறது

    சென்னை, டிச. 16-

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதற்காக சர்வதேச தரத்துக்கு இணையாக மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கத்திப்பாரா சந்திப்பு, பாடி, விமான நிலையம் எதிரில் தற்போது பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    அந்த வரிசையில் கோயம்பேடு சந்திப்பிலும் மிக பிரமாண்டமான, நவீன அடுக்கு மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக கோயம்பேடு சந்திப்பு பகுதியில் உள்ள 165 பேரின் நிலம் மற்றும் கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்தி உள்ளது.

    165 பேரின் கட்டிடங்களில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபமும் ஒன்றாகும். இந்த திருமண மண்டபத்தின் ஒரு பகுதி, சாலை விரிவாக்கத்துக்கு தேவைப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை கூறியது. இதற்கு விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மண்டபத்தை இடிக்காமல் மேம்பாலம் கட்டலாம் என்று கூறிய அவர், அதற்காக மாற்றுத்திட்டம் ஒன்றை வரையறுத்து, அதை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி டி.ஆர்.பாலுவுக்கு அனுப்பினார். அந்த மாற்றுத் திட்டத்தை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், அது சாத்தியப்படாது என்று கூறி நிராகரித்து விட்டனர்.

    இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் வருவாய் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து கோயம்பேடு பகுதியில் நிலத்தை கையகப்படுத்தவும், அதற்குரிய நஷ்ட ஈட்டை அளிக்கும் பணியைத் தொடங்கி உள்ளனர். பாலத்துக்காக நிலத்தை இழக்கும் 165 பேருக்கும் வருவாய் துறை நோட்டீசு அனுப்பி உள்ளது.

    அதில், நிலத்தை கையகப்படுத்துவதற்காக தரப்படும் நஷ்டஈடு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அவர் மனைவி பிரேமலதா பெயரில் இருப்பதால் அவருக்கு கடந்த 8-ந்தேதி வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்துவதற்கு நஷ்டஈடாக ரூ. 8.55 கோடி வழங்கப்படும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சீபுரத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்து ரூ. 8.55 கோடி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு பிரேமலதாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ரூ. 8.55 கோடி தொகை டி.டி. மூலம் வழங்கப்படும் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு பிரேமலதா தரப்பில் இருந்து ஏதேனும் பதில் வந்ததா? என்று கேட்டதற்கு, “இதுவரை எந்த தகவலும் வரவில்லை” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நிலம் கையகப்படுத்துவதற்காக மொத்தம் ரூ. 23 கோடி இழப்பீடு வழங்க தேசிய நெடுஞ்சாலை துறை முன் வந்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் செல்லும் சாலையில் உள்ள 20 பேரும் தங்கள் இடத்தை கொடுக்க உள்ளனர்.

    இவர்கள் அனைவருக்கும் வரும் திங்கட்கிழமை இழப்பீடு தொகை வழங்கப்படும். ஒரிஜினல் நிலப்பத்திரத்தை காட்டி இவர்கள் இழப்பீடு தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இழப்பீடு வழங்கப்பட்டதும் கோயம்பேடு சந்திப்பை சுற்றி உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி விரைவில் தொடங்கும். அவை முழுமையாக அகற்றப்பட்டதும் பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்படும்.

    Posted in acquisition, Andaala Azhagar, Congestion, Demolition, DMDK, flyover, Highways, Kathipaara, Koyambedu, Land, Maduravayal, Marriage Hall, NHD, Premalatha, RTO, Tamil, Traffic, Transportation, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | Leave a Comment »

    Automatic electronic tolls to be installed in National Highways

    Posted by Snapjudge மேல் நவம்பர் 9, 2006

    2 ஆண்டில் சுங்கச்சாவடிகள் நவீனமயம்: வாகனங்கள் நிற்காமல் செல்லலாம்- டி.ஆர். பாலு தகவல்

    புதுதில்லி, நவ. 9: அடுத்த இரண்டு ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் சுங்கச் சாவடிகள் நவீனமயமாக்கப்பட உள்ளன. இதன் மூலம் வாகனங்கள் நிற்காமல் செல்லக்கூடிய சூழல் ஏற்படும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு அறிவித்தார்.

    பொருளாதார பத்திரிகை ஆசிரியர் மாநாட்டில் புதன்கிழமை பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறியதாவது:

    இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைத்து வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. அதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் மிகுந்த காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து பரவலாக புகார்கள் வந்துள்ளன.

    இதையடுத்து, இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தங்க நாற்கர சாலை மற்றும் வடக்கு -தெற்கு மற்றும் கிழக்கு -மேற்கு இணைப்புத் திட்டத்தில் அமைக்கப்படும் நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் நிறுவப்பட உள்ளன.

    அதாவது, வாகனங்களில் சிறிய மின்பொறி பொருத்தப்படும். அதற்குத் தொடர்புடைய முக்கிய மின்பொறி, சோதனைச் சாவடியில் அமைக்கப்படும். வாகனம் சோதனைச் சாவடி அருகே வரும்போது, அதிலுள்ள மின்பொறியின் சமிக்ஞைக்கும் சோதனைச் சாவடி மின்பொறிக்கும் தொடர்பு ஏற்படும். அப்போது, அந்த வாகனத்துக்கான சுங்கச் சாவடிக் கட்டணம் தானாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளும்.

    அதாவது, சுங்கச் சாவடிக் கட்டணத்தை முன்னதாகவே செலுத்தியதற்கான தகவல், வாகனத்தில் உள்ள மின்பொறியில் பதிவு செய்யப்பட்டுவிடும். எப்போதெல்லாம் வாகனம் சுங்கச் சாவடியைக் கடக்கிறதோ, அப்போது தேவையான கட்டணம் குறைந்துவிடும். அதற்காக, வாகனம் அந்த இடத்தில் நிற்க வேண்டிய தேவை இருக்காது. தடையற்ற பயணம் உறுதி செய்யப்படும்.

    இதேபோன்று எல்லா சோதனைச் சாவடிகளையும் நவீனப்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது.

    ஏற்கெனவே, விவசாயிகளின் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்கச் சாவடிக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உள்ளூர் மக்களுக்கும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை கத்திப்பாரா சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமைக்கப்படும் மேம்பாலம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று திறந்து வைக்கப்பட உள்ளது. திட்டமிட்டபடி பணிகள் நடந்து வருகின்றன என்றார் டி.ஆர். பாலு.

    Posted in Chennai, Congestion, Economic Editors Conference, EZ-Pass, Flyovers, Golden Quadrilateral, Highway construction, Madras, Minister, National Highway Development Project, Road Transport and Highways, Shipping and Surface Transport, Toll, TR Baalu, TR Balu, Traffic | Leave a Comment »

    ‘Pookkadai, Purasaiwakkam, Pondy Bazaar Shops should be removed by Pongal’

    Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006

    பூக்கடை, புரசைவாக்கம், பாண்டி பஜார் நடைபாதை கடைகளை பொங்கலுக்குள் அகற்ற வேண்டும்: ஐகோர்ட்டு வற்புறுத்தல்

    சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சென்னையில் முக் கிய இடங்களில் நடைபாதை கடைகள் அதிகமாக உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. இதற்கு மாற்று ஏற்பாடு செய்து வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதிகள் ஏ.பி.ஷா, நீதிபதி பிரபாஸ்ரீதேவன் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் நடைபாதை கடைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி தலைமையில் ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டனர்.

    இந்த குழு நடைபாதை கடைகளால் ஏற்படும் பாதிப்பு மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தயாரித்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.அதில் பூக்கடை பகுதி என்.எல்.சி. போஸ் ரோட்டில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும், பார்க் டவுன் ரெயில் நிலையம் முன் பகுதியில் உள்ள கடைகளை அகற்றி அல்லிகுளம் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இதை போல புரசைவாக்கம் பகுதி கடைகளையும் அகற்றி அல்லிகுளத்திற்கு கொண்டு வர வேண்டும். பாண்டி பஜார் பகுதியில் உள்ள கடைகளை அந்த பகுதியில் 4 மாடி கட்டி டம் ஒன்று கட்டி அங்கு மாற்ற வேண்டும் என்று சிபாரிசு செய்தனர்.

    இந்த அறிக்கை அடிப்படை யில் இன்று விசாரணை நடந்தது. தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் இந்த அறிக்கையை ஏற்பதாக அறிவித்தனர். அறிக்கையின் அடிப்படையில் பொங்கலுக்குள் கடைகளை அகற்ற வேண்டும். மாற்று இடங்களுக்கான ஏற்பாடும் செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். இது தொடர்பான முழு தீர்ப்பு விரைவில் கூறப்படும் என்று கூறினார்கள்.

    Posted in Allikulam, Association, Congestion, High Court, Judgement, Madras, Merchants, NSC Bose Road, Police, Pondy Bazaar, Pongal, Pookkadai, Purasaiwakkam, Ramasamy, Removal, Shops, Small Business, Street Vendors, Traffic | 2 Comments »