Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Tourists’ Category

Feb 06: Eezham, Sri Lanka, LTTE, India Fishermen, Tamil Nadu, War, Media – Updates & News

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 6, 2008

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இலங்கை புகார்

இலங்கைக் கடற்பரப்பினுள் இந்திய மீனவர்கள் பெரும் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அத்துமீறி மீன்பிடித்துவருவதால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் இது குறித்து தகுந்த நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும்படி இந்தியாவிடம் இலங்கை கடற்படை முறைப்பாடு செய்திருப்பதாக தெரியவருகிறது.

இலங்கையின் தலைமன்னார் கடற்பகுதியில் திங்கள் கிழமையன்று ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கடற்படையின் வாட்டர்ஜெட் ரோந்து விசைப்படகொன்று சேதமானதை அடுத்தே இந்த முறைப்பாட்டினை இலங்கைக் கடற்படைத் தலைமையகம் கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மேற்கொண்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இலங்கை கடற்படையினர் இவ்வாறானதொரு முறைப்பாட்டினைச் செய்திருப்பதனை கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதிசெய்திருப்பதோடு, இது குறித்து மத்திய அரசிற்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தனர்.


பிரயாணத் தடையால் பொதுமக்கள் பாதிப்பு

சோதனைச் சாவடியில் நிற்கும் பேருந்துகள்
சோதனைச் சாவடியில் நிற்கும் பேருந்துகள்

இலங்கையின் வடக்கே வவுனியா மன்னார் மாவட்டங்களில் இருந்து தென்பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் மீதான பிரயாணத் தடை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னர் அததியாவசிய தேவைகளுக்காகச் செல்லும் வண்டிகள், பயணிகள் செல்லும் பேருந்து வண்டிகள் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகத் தென்பகுதிக்குச் சென்று திரும்ப அனுமதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த மூன்று தினங்களாக மதவாச்சி சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக வவுனியா மன்னார் மாவட்டங்களில் இருந்து எந்த வாகனமும் மதவாச்சி ஊடாகப் பயணம் செய்ய முடியாது என பொலிசாரினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதனால் பிரயாணிகள், உயர்கல்வி, மாணவர்கள், வைத்தியர்கள் உட்பட்ட துறைசார்ந்தவர்கள், பொதுமக்கள், வர்த்தகரகள் என பலதரப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா வைத்தியசாலைக்குத் தேவையான ஒக்சிஜனைப் பெறுவதற்காக அனுராதபுரத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்ட ட்ரக் வண்டியும் பிரயாண அனுமதி மறுக்கப்பட்டு மதவாச்சி பொலிசாரினால் வவுனியாவுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவிடயம் குறித்து வவுனியா மற்றும் அனுராதபுரம் உயர் பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா வைத்தியசாலையில் கையிருப்பில் உள்ள ஒக்சிஜனின் அளவு நாளாந்தம் குறைவடைந்து செல்வதனால், அதனை அனுராதபுரத்தில் விரைவில் எடுத்து வராவிட்டால் வைத்தியசாலையின் நோயாளர்களின் உயிர்காக்கும் முக்கிய வைத்திய பணிகள் பாதிப்படையும் அபாயம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கை அரசுக்கு ஊடகவியளாளர் அமைப்பு கண்டம்

சுதந்திர செய்தியாளர்களுக்கு அரசு நெருக்கடி அளிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது
சுதந்திர செய்தியாளர்களுக்கு அரசு நெருக்கடி அளிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது

ஊடகவியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலகின் மிகப் பெரிய அமைப்பு இலங்கை அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.

ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி அறிக்கையில், அந்நாட்டின் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறையை அரசு அதிகாரிகள் தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

சுதந்திரமாக செய்திகளை சேகரிக்கும் ஊடகவியலாளர்களின் உரிமை குறித்து, இலங்கை அரசு மிகவும் ஆபத்தான அளவுக்கு அலட்சியம் காட்டுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர்களுக்கு எதிரான வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறு, விடுதலைப்புலிகள், மற்றும் பிற ஆயுதக்குழுக் களை அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

 


புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 பிப்ரவரி, 2008

வவுனியாவில் முழு அடைப்பு

வெறிச்சோடிக் கிடக்கும் வவுனியா சாலை ஒன்று
வெறிச்சோடிக் கிடக்கும் வவுனியா சாலை ஒன்று

இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இன்று கடைகள் மூடப்பட்டு, பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. கொழும்பு கோட்டை ரயில் நிலையம், தம்புள்ள மற்றும் தட்சணாமருதமடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களையும், இவற்றில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதையும் கண்டிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

புளொட் எனப்படும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது. இந்த மாவட்டங்களில் அரச, தனியார் துறை அலுவலகங்கள், வங்கிகள், பாடசாலைகள் என்பன இயங்கவில்லை. வாகனப் போக்குவரத்துக்களும் இடம்பெறவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை இங்கு முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானப்படையினர் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

 


வட இலங்கையில் மோதல்கள் தொடருகின்றன

வடக்கில் வான்வழித் தாக்குதல்கள்
வடக்கில் வான்வழித் தாக்குதல்கள்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்கள் ஒன்று கூடும் தளம் ஒன்றின் மீது இன்று காலை 8.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகள், திருவையாறு வடக்கில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது விமானப்படையின் தாக்குதல் விமானங்கள் இன்று காலை 20 குண்டுகளை வீசியதாகவும், இதன்போது அங்கிருந்தவர்கள் பாதுகாப்பு குழிகளுக்குள் இருந்ததாகவும், குடிசையொன்று சேதமடைந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

கிளிநொச்சி புறநகர்ப்பகுதியாகிய கணேசபுரத்தில் நேற்றுப் பிற்பகல் விமானப்படையினர் நடத்திய வான்தாக்குதலில் 2 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் மேலும் இருவர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் கிளாலி, நாகர்கோவில் உட்பட்ட போர்முனைகளில் இராணுவத்தினர் இன்று காலை 5.50 மணி முதல் 6.30 மணிவரையில் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதலில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

சுமார் 45 நிமிடங்கள் இந்தத் தாக்குதல் நீடித்ததாகத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள் இதில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். தங்கள் தரப்பு சேதங்கள் குறித்து அவர்கள எதுவும் தெரிவிக்கவில்லை.

மன்னார் மற்றும் மணலாறு பகுதிகளில் நேற்றும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும் இதில் இரு தரப்பினருக்கும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதாகவும் இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது

 


ராமேஸ்வரம் மீனவர்களிடம் தமிழக அரசு விசாரணை

மீன்பிடி தொழிலாளர்கள்
மீன்பிடி தொழிலாளர்கள்

இலங்கை தலைமன்னார் கடற்பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமை ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இலங்கை கடற்படையின் வாட்டர்ஜெட் ரோந்து விசைப்படகு ஒன்று சேதமடைந்தது.

இந்த சம்பவம் நடந்தபோது, அங்கிருந்த பெரும் எண்ணிக்கையிலான தமிழக மீனவர்களின் படகுகள் விடுதலைப்புலிகளுக்கு உதவும் விதத்தில் நடந்து கொண்டதாக இலங்கை கடற்படை இந்திய அரசிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, தமிழக அதிகாரிகள் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடம் இன்று புதன்கிழமை விசாரணை நடத்தி யிருக்கிறார்கள்.

தமிழக அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் நடத்திய இன்றைய விசாரணையின்போது, இந்திய கடற்படை அதிகாரிகளும், கடலோர காவல்படையினரும் உடனிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் நடைபெற்ற விசாரணைகள் குறித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான போஸ் தமிழோசையிடம் கூறிய தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 


 புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 பிப்ரவரி, 2008

 


இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை-அம்னெஸ்டி இண்டர்நேஷணல்

அம்னெஸ்டி இண்டர்நேஷணல் அமைப்பின் சின்னம்
அம்னெஸ்டி இண்டர்நேஷணல் அமைப்பின் சின்னம்

இலங்கையில் மோதல்கள் அதிகரிக்கும் நிலையில், ஊடகச் சுதந்திரம் பாதிக்கப்படுவதும், ஊடகவியாலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும், அதிகமாவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை குறைந்தது 10 ஊடகவியலாளர்கள் சட்ட விரோதமாக கொல்லப்பட்டுள்ளதாகவும், இருவர் காணமல் போயுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. பலர் சித்திரவதை செய்யப்பட்டதுடன், அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அந்த அளிக்கை கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் எந்தவொரு சுதந்திர உள்ளூர் ஊடகத்தையும் செயல்பட அனுமதிப்பதில்லை என்றும் ஊடகவியலாளர்களை உன்னிப்பாக கண்காணிப்பதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை கோரியுள்ளது.

இவை குறித்த மேலதிகத் தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Posted in Bus, Condemn, Eelam, Eezham, Fish, fishermen, Fishing, LTTE, Media, MSM, Sea, Security, Sri lanka, Srilanka, Tamil Nadu, TamilNadu, Tourists, transit, Transport, Travel, War | Leave a Comment »

Promoting the lesser known tourist spots: The Tamil Nadu Tourism Development Corporation (TTDC)

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

தமிழகத்தில் பிரபலமாகாத சுற்றுலாத் தலங்கள்- அரசு புது முடிவு

தமிழகத்தில் நன்கு அறிமுகமில்லாத 18 சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்த தமிழக அரசு புதிய முடிவு எடுத்துள்ளது.

இச் சுற்றுலாத் தலங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முன்வரும் தனியார் தொழில் அதிபர்களுக்கு ரூ. 1 கோடி வரை மானியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

27.09.2007-அன்று இதற்கான உத்தரவை அரசு வெளியிட்டதாக சுற்றுலாத் துறை செயலர் வெ. இறையன்பு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியது: உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்கள் நன்கு பிரபலமானவை. ஆனால் அதைப்போல் நல்ல கோடை வாசஸ்தலங்கள் தமிழகத்தில் நிறைய உள்ளன இங்கு ஆண்டு முழுவதும் நல்ல தட்ப வெட்பம், சுற்றுச்சூழல் நிலவுகின்றன. ஆனால் இவை மக்களிடம் பிரபலமாகவில்லை.

தற்போது அரசு இதுபோன்ற 18 சுற்றுலாத் தலங்களை தேர்ந்தெடுத்து அவற்றை பிரபலப்படுத்த முடிவு செய்துள்ளது. இங்கு பயணிகள் தங்கிச் செல்லும் வகையில் ஹோட்டல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

பிரபலப்படுத்தவுள்ள சுற்றுலா தலங்கள்:

  1. பெரியபாளையம் மற்றும்
  2. பழவேற்காடு (திருவள்ளூர் மாவட்டம்),
  3. ஏலகிரி (வேலூர்),
  4. திருக்கடையூர்,
  5. வேதாரண்யம் மற்றும்
  6. தரங்கம்பாடி (நாகப்பட்டினம்),
  7. திருமணஞ்சேரி (தஞ்சை),
  8. சித்தனவாசல் (புதுக்கோட்டை),
  9. புளியஞ்சோலை (பெரம்பலூர்),
  10. தாரமங்கலம் (சேலம்),
  11. கொல்லிமலை மற்றும்
  12. ஒகேனக்கல் (தருமபுரி),
  13. பவானி கூடுதுறை (ஈரோடு),
  14. வால்பாறை (கோயம்புத்தூர்),
  15. மேகமலை (தேனி),
  16. சிறுமலை (திண்டுக்கல்),
  17. திருப்புடைமருதூர் (திருநெல்வேலி),
  18. திருப்பரப்பு (கன்னியாகுமரி).

மேற்கண்ட சுற்றுலாத் தலங்களில் பொழுதுபோக்கு பூங்காக்கள், கோல்ஃப் மைதானம், ரோப் கார், படகுத்துறை உள்ளிட்ட சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தும் தொழில் முனைவோருக்கு மொத்த முதலீட்டில் 10 சதவீத மானியம், அதாவது ரூ. 1 கோடிக்கு மிகாமல் மானியம் வழங்கப்படும்.

மேலும், பாரம்பரிய மிக்க கட்டடங்களைப் பாதுகாப்பது, ஸ்டார் ஓட்டல்கள் கட்டுவது ஆகியவற்றுக்கும் மானியம் தரப்படும்.

புதிய சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்துவதன் மூலம் அப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பும், பொருளாதார முன்னேற்றமும் உறுதி செய்யப்படும்.

இந்த 18 சுற்றுலாத் தலங்களை காலண்டரில் அச்சடித்து வடமாநில ஹோட்டல்களுக்கும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கும் விநியோகிக்க உள்ளோம்.

மாஸ்டர் பிளான்

தமிழக சுற்றுலா துறையில் தனியார் துறையினரை ஈடுபடுத்தும் முக்கிய முடிவை கடந்த ஆண்டு அரசு வெளியிட்டது.

அதன்படி தமிழக சுற்றுலா மையங்களை வெளிநாட்டில் மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்த மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதி ஆண்டில் தமிழக சுற்றுலா துறை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ. 12 கோடி செலவிடப்பட்டது. இந்த ஆண்டு நவம்பர் வரை ரூ. 6 கோடி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன என்றார் இறையன்பு.

Posted in Chithanavasal, Development, Hogenakal, Hogenakkal, Kollimalai, Pazhaverkadu, Periapalaiam, Periapalaiyam, Periyapalaiam, Periyapalaiyam, Places, Puliyancholai, spots, Tamil Nadu, Tharamangalam, Tharangambadi, Thirumanancheri, Thirumananjeri, Tourism, Tourist, Tourists, TTDC, Vaalparai, Valparai, Vedharaniam, Vedharaniyam, Vedharanyam, Vetharaniam, Vetharaniyam, Vetharanyam, Visit, Visitors, Yelagiri | 1 Comment »

Sandalwood smuggler Veerappan’s Area: Encroachments in Sathiyamangalam – Losing ones native lands to power, money & politics

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007

வீரப்பன் காட்டை குறிவைக்கும் அரசியல்வாதிகள்!

பீ.ஜெபலீன் ஜான் ஆர்.சிவக்குமார் டி.சாம்ராஜ்

ஈரோடு, கோவை மாவட்டத்தில் பிரதானக் கட்சிகளில் முக்கிய பொறுப்பை வகித்த, வகிக்கும் அரசியல்வாதிகள், மற்றும் சத்தி தொகுதியில் இதுவரை இருந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோருக்கு சத்தி வனப் பகுதியில் பண்ணைத் தோட்டங்கள் உள்ளன.

ஈரோடு, டிச.4: சந்தன கடத்தல் வீரப்பனுக்கு புகலிடமாக இருந்த சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசியல்வாதிகள் வளைத்துப்போட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு போட்டியாக அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியத் தொழிலதிபர்களும் நிலத்தை வாங்கி வருவதால் பழங்குடியினரின் பாரம்பரிய விளைநிலங்கள் முற்றிலும் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தி வனப்பகுதியில் தாளவாடி, கடம்பூர், ஆசனூர், பர்கூர் உள்ளிட்ட இடங்களில் ஒருகாலத்தில் வீரப்பன் கால்படாத இடமே இல்லை என்று சொல்லும் நிலை இருந்தது.

அப்போது இப் பகுதியில் பழங்குடியினர் தவிர பிற மக்கள் நடமாட்டம் அறவே இருந்ததில்லை.

வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு சில மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறியது. மன இறுக்கத்தைப் போக்கும் இயற்கைச் சூழல், உடலை சிலிர்ப்பூட்டி மகிழ்ச்சி தரும் மிதமான குளிர் போன்ற சிறப்பு அம்சங்களால் இப் பகுதி அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய தொழிலதிபர்களின் கண்பார்வையில் பட்டது.

தங்களது அரசியல் செல்வாக்கு, ஆள்பலம், பண பலம் ஆகியவற்றைப் பயன்படுத்திய இவர்கள், பண்ணைத் தோட்டம், விருந்தினர் இல்லம், ஓய்வு இல்லம் உள்ளிட்டவற்றை மலைப் பகுதியில் உருவாக்கினர்.

இந்நிலை இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஈரோடு, கோவை மாவட்டத்தில் பிரதானக் கட்சிகளில் முக்கிய பொறுப்பை வகித்த, வகிக்கும் அரசியல்வாதிகள், மற்றும் சத்தி தொகுதியில் இதுவரை இருந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோருக்கு சத்தி வனப் பகுதியில் பண்ணைத் தோட்டங்கள் உள்ளன. ஒருபுறம் அரசியல்வாதிகள் என்றால் மற்றொருபுறம் முக்கியத் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளால் பழங்குடியினர் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

வீரப்பன் காட்டுப் பகுதியில் ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் பகுதி தொழிலதிபர்களின் ஓய்வு இல்லங்கள், பண்ணைத் தோட்டங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆசனூரில் பல ஏக்கர் வாங்கியுள்ளார். தொலைதூரத்தில் இருக்கும் தொழிலதிபர்களைக்கூட கவர்ந்து இழுக்கும் இடமாக வீரப்பன் காடு மாறிவிட்டது.

சுமார் 30 ஏக்கர், 50 ஏக்கர் என வாங்கியுள்ள தொழிலதிபர்கள், வார விடுமுறை நாள்களில் இங்கே தங்கியிருந்து இரவு நேரங்களில் தங்களது நிலத்துக்குள்ளேயே மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர் என்பது பழங்குடியினரின் பிரதான குற்றச்சாட்டு.

ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே பணியாற்றிய ஆட்சியருக்கு, ஆசனூரில் பல ஏக்கர் நிலம் உள்ளது என்கின்றனர் பழங்குடியினருக்காக போராடிவரும் தன்னார்வ அமைப்பினர்.

அதுபோல பவானிசாகர் அருகே நரிக் குறவருக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலத்தை முன்னறிவிப்பு இன்றி ஆக்கிரமித்ததாக பிரதான எதிர்க்கட்சி அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழ்நாடு பழங்குடியினர் சங்க மாவட்ட அமைப்பாளர் எஸ்.மோகன்குமார் கூறியது:

ஈரோடு மாவட்ட பழங்குடியினருக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை குடும்பத்தில் ஏதாவது ஒரு வாரிசுதாரர்களிடம் மட்டும் கையெழுத்துப் பெற்றுவிட்டு மற்றவர்களின் கையெழுத்தை போலியாக போட்டு ஆக்கிரமிக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் பலத்துக்கு சமமாக பழங்குடியினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

பழங்குடியினரின் நிலங்களுக்கு பட்டா இல்லாததும், அவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும் நிலத்தை அபகரிப்பவர்களுக்கு சாதகமாக மாறிவிடுகிறது. இதைத் தடுக்க தனிச்சட்டம் தேவை என்றார் மோகன்குமார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் த.உதயச்சந்திரன் கூறியது:

பழங்குடியினர் இடங்களை வேறு நபர்கள் வாங்குவதைத் தடுக்க போதிய சட்டங்கள் இல்லை. இருப்பினும் நிலத்தை அபகரிப்பது, சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

வீரப்பன் காட்டில் களைகட்டும் ரியல் எஸ்டேட் தொழில்

பீ.ஜெபலீன் ஜான் ஆர்.சிவக்குமார் டி.சாம்ராஜ்

ஈரோடு, டிச.5: சந்தன வீரப்பன் காட்டில் ரியல் எஸ்டேட் தொழில் களை கட்டியுள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 ஆயிரமாக இருந்த ஒரு ஏக்கர் நிலம் இப்போது ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனையாகிறது.

“”உதகை, முதுமலை போல வெகுவிரைவில் இதுவும் சுற்றுலாத்தலமாக விளங்கும். விரைவில் பலமடங்கு விலை உயரும்” -இது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வைத்துள்ள விளம்பரத் தட்டிகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்.

வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் இதுபோன்ற பல்வேறு கவர்ச்சிகர வாசகங்கள் அடங்கிய தட்டிகள் மைசூர் பிரதான சாலைகளில் காணப்படுகின்றன.

தங்கும் விடுதி, ரிசார்ட் போன்றவற்றில் இரு நாள்கள், ஒரு வாரம் என தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு, மிதமான குளிர் பிரதேசமான இப் பகுதி மிகவும் பிடித்ததாக மாறி வருகிறது.

சொந்தமாகத் தங்கும் விடுதி கட்டிக்கொண்டால் என்ன? என்ற ஆசை எழும் சுற்றுலாப் பயணிகளை எளிதில் கவர்ந்து விடுகின்றனர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர். தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு ஏதுவாக 15 சென்ட், 20 சென்ட் எனத் தரம் பிரித்து நிலங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தாளவாடி, கடம்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இடம் பழங்குடியினர் வசமிருந்து கைமாறிவிட்டது என்கின்றனர் பழங்குடியினர் நல போராட்ட அமைப்பினர். இப்போது ஆசனூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

இப் பகுதியில் ஒரு சென்ட் இடம் ரூ.18 ஆயிரம் (பிரதான சாலையில் இருந்து 2 கி.மீ. உள்பகுதியில்) முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவை, திருப்பூர் ரியல் எஸ்டேட் நிறுவனங்களே இங்கு பெரும்பாலும் நில விற்பனையில் ஈடுபட்டுள்ளன.

மலைப் பகுதியில் இருக்கும் மக்களிடம் ஆசை வார்த்தை காட்டி மலிவு விலையில் இடத்தை வாங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், சுற்றுலாப் பயணிகளிடம் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

மலைப்பகுதி மக்களிடம் இருக்கும் நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கைமாற்ற இப் பகுதிகளில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் துணைபோகின்றனர் என்பது பழங்குடியினர் நலப் போராட்ட அமைப்பினரின் பிரதான குற்றச்சாட்டு.

தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்க மாநிலத் தலைவரும், நீதிபதி சதாசிவம் கமிஷன் அறிக்கை வெளிவரக் காரணமாக இருந்தவருமான வி.பி.குணசேகரன் கூறியது:

விற்பனைக்காகக் காத்திருக்கும் மனைகள்.

தாளவாடி, கடம்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இடம் பழங்குடியினர் வசமிருந்து கைமாறிவிட்டது என்கின்றனர் பழங்குடியினர் நல போராட்ட அமைப்பினர். இப்போது ஆசனூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

மலைப்பகுதி மக்களின் நிலத்தை, சமவெளி மக்கள் ஆக்கிரமிப்பதால் பழங்குடியினரின் உரிமை, வேலைவாய்ப்பு பறிபோகிறது. தாளவாடி, கடம்பூர், ஆசனூர் பகுதியில்தான் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வந்தது. இப்போது பர்கூர் மலைப் பகுதியையும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் குறிவைத்துவிட்டனர்.

பிகார், மத்தியப்பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் பழங்குடியின நிலங்களை பிறர் ஆக்கிரமிப்பதைத் தடுக்க தனிச்சட்டம் உள்ளது. இதுபோன்ற சட்டம் தமிழகத்திலும் தேவை. 1996-ல் அப்போதைய வனத்துறை அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் செய்த பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார் குணசேகரன்.

இது குறித்து மாநில வனத்துறை வாரிய உறுப்பினரும், மாவட்ட கெüரவ வனஉயிரின காப்பாளருமான ப.கந்தசாமி கூறியது:

தென்னிந்தியாவிலேயே அதிகமாக சத்தியமங்கல வனத்தில்தான் யானைகள், புலிகள், காட்டுமாடுகள், கடமான், புள்ளிமான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள், பல்வேறு ரக பறவைகள் காணப்படுகின்றன. சத்தி வன அழிவுக்குக் காரணமே ரிசார்ட்கள் மற்றும் தங்கும் விடுதிகள்தான். மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் வனவிலங்கள் எண்ணிக்கை குறையத் துவங்கிவிட்டது. வனப் பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றுவது தவறான நடவடிக்கை. வனப்பரப்பு குறைவது மனித இன அழிவுக்கு துவக்கமாக மாறிவிடும் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இதற்குத் தீர்வாக இருக்கும் என்றார் கந்தசாமி.

சமவெளிப் பகுதிகளை வளைத்துப்போட்டு நிலத்துக்கு செயற்கை விலையேற்றத்தை ஏற்படுத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அடுத்த இலக்கு, மலைப் பகுதியாக மாறியுள்ளது. பழங்குடியினர் மட்டுமன்றி வன உயிரினத்தையும் காப்பாற்ற இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Posted in abuse, Acres, ADMK, Agriculture, AIADMK, Assets, Bargoor, Bargur, barkoor, Don, encroachments, Environment, Erode, Estate, Farming, Farmlands, Forest, Govt, Guesthouses, Jaya, Jeya, JJ, Land, MLA, MP, Natives, Plants, PMK, Politics, Power, Real Estate, Representatives, Resorts, Sandal, Sandalwood, Sathiamangalam, Sathiyamangalam, Sathyamangalam, Sathyamankalam, SC, Sightseeing, smuggler, ST, Tourists, Tours, Travel, Travelers, Trees, Tribals, Village, Villager, villagers, Villages, Woods | Leave a Comment »

Ramar Sethu Project – Adams Bridge: Environmental Impact & Scientific facts

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

சேதுத் திட்டம் யாருக்காக?

டி.எஸ்.எஸ். மணி

கடந்த செப்டம்பர்-18, 2007 அன்று “வாஷிங்டன் போஸ்ட்’டில் ஒரு கட்டுரை. “கடல் கால்வாய்த் திட்டம் இந்தியாவில் ஒரு மத உணர்வு தடங்கலால் தடைப்பட்டுள்ளது’ என்ற ராமலட்சுமியின் கட்டுரை.

அதில், “சுற்றுச்சூழல் மற்றும் மீனவர் வாழ்வுரிமைக்கான ஒரு போராட்டம், மத முத்திரையுடன் கெடும் வாய்ப்பாக திசை திரும்பிவிட்டது’ என முடிக்கப்பட்டிருந்தது.

“சுற்றுச்சூழலை அழிக்கும் ஆபத்துகளை, இந்தச் சேது கால்வாய்த் திட்டம் எப்படியெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது எனத் திட்ட ஏற்பாட்டாளர்கள் முன் வைத்த, “”சுற்றுச்சூழல் தாக்கல் பற்றி மதிப்பீடு” மீதே நாம் காணமுடியும்.

* இந்த வங்காள விரிகுடா-பாக் விரிகுடா பகுதி அநேகமாக மென்மையிலிருந்து கடினம் வரையான களிமண்ணை இயற்கையாகக் கொண்டுள்ளது. தனுஷ்கோடிக்கு வடக்கிலும் தெற்கிலும் மணலைக் கொண்டுள்ளது. அதனால்தான் இந்தக் கால்வாய்த் திட்டத்தை, நடைமுறைப்படுத்த முடியாது என 140 ஆண்டுகளாகத் தள்ளிப் போடப்பட்டது. தூர்வாரி ஆழப்படுத்தல் மூலம் கால்வாய் தோண்டினால் ஆண்டுக்கு ஒருமுறை தூர்வார வேண்டி வரும். அதன் செலவு கணக்கிலடங்காது.

* தூத்துக்குடி அருகே உள்ள “வான் தீவு’ ஆதம்பாலத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. “தேசிய கடல் பூங்கா’விலிருந்து 25 கி.மீ.க்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் வரக்கூடாது என்ற “வனவிலங்குச் சட்டம்’ கூறுகிறது. “தேசிய கடல் பூங்கா’ எனவும், “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ எனவும், மன்னார் வளைகுடா, யுனெஸ்கோவால் வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தகைய “சுற்றுச்சூழல் விதிகளை’ மீறி இந்தத் திட்டம் வருகிறது.

* ஏற்கெனவே பாக் விரிகுடா மண்ணில் அதிகளவு கடின உலோகக் குவிதலும், எண்ணெயும் காணப்படுகிறது. அதனால் மாசுபட்டுள்ளது. அங்கே கால்வாய்த் திட்டம் வருமானால் “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ மேலும் கெட்டுவிடும்.

* கடல் விசிறி, கடல் பஞ்சு, முத்துச் சிப்பி, சங்கு, கடல் அட்டை ஆகிய வகைவகையான உயிரியல் ஊற்றுகள் அழியத் தொடங்கும்.

* இங்கு 600 வகை மீன் இனங்கள் உள்ளன. அவற்றில் 200 வகைகள் வணிக முக்கியம் பெற்றவை. அவற்றின் அழிவு வருமானத்தை இழக்கவைக்கும். மீனவர் வாழ்வுரிமையையும் பறித்துவிடும்.

* 1992 முதல் 1996 வரை இந்தப் பகுதியில் மீன் உற்பத்தி 55 ஆயிரம் டன்னிலிருந்து, 2001-ம் ஆண்டு 2 லட்சம் டன்னாக 4 மடங்கு உயர்ந்துள்ளது. அந்த உற்பத்திக்கு இந்தத் திட்டம் ஊறு விளைவிக்கும்.

* தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில், உயிரினங்கள் மன்னார் வளைகுடாவிலிருந்து, பாக் விரிகுடா செல்லும். மற்ற காலத்தில் மறுதிசை செல்லும். அவை பாம்பன் பாலம் வழியாகவும், அரிமுனை வழியாகவும் செல்லும். கால்வாய் தோண்டுவதால் அந்த உயிரினங்களின் நடமாட்டம் தடைப்படும்.

* தூர்வாரி ஆழப்படுத்தினால், கடலுக்கு அடியில் உள்ள தாவர, விலங்கு இனங்கள் அழிந்துவிடும்.

* “அரிதான உயிரினமான’ கடல் பசுக்கள், பருவ மாற்றத்தில் இடம் பெயர்பவை. அவை அழிந்துவிடுமென, மறைந்த பேராசிரியர் சென்னை பல்கலைக்கழக “மானுடயியல்’ துறை தலைவர் சுதர்சன் எச்சரித்திருந்தார்.

* “தமிழ்நாடு அறிவியல் கழக’ முன்னாள் தலைவரான மறைந்த பேராசிரியர் சுதர்சன், “சேது கால்வாய்த் திட்டம்’, சுற்றுச்சூழலையும், மீனவர் வாழ்வுரிமையையும் அழித்து விடுமென ஓர் ஆய்வு அறிக்கையை 2004-ம் ஆண்டே வெளியிட்டார்.

* கட்டுமான காலத்திலும், செயல்படும் காலத்திலும் கடலை மாசுபடுத்தும் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய் துளிகள், கிரீஸ், பெயிண்ட், பிளாஸ்டிக் பைகள் போன்ற மாசுபடுத்தும் பொருள்கள், கடல் நீரோட்டத்தில் கலந்து இயற்கையைத் தொடர்ந்து அழித்து வரும்.

* கப்பல் போக்குவரத்தால், அந்நிய பொருள்களும், உயிர்களும், வங்காள விரிகுடாவிலிருந்து, இந்துமகா கடலுக்கும், திசைமாறிப் பயணமாகி, பகுதிசார் உயிரின வகைகளை, சிதறடித்துவிடும் ஆபத்து அதிகமாக உள்ளது.

* “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதி’ யாக இருக்கும் மன்னார் வளைகுடாவின் செழிப்பான இயற்கை சூழலும், அதன் விசித்திரமான வளமாக இருக்கும் தாவர இனமும், விலங்கு இனமும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது.

* திட்டமிடப்பட்டுள்ள சிறிய கால்வாய் வழியாகச் செல்லும்போது, கப்பல்கள் முட்டிக் கொண்டு விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. அப்போது சிதறும் எண்ணெய், அடித்தள வண்ணப் பூச்சுகள் ஆகியவை கடல் வாழ் உயிரினங்களுக்கும், அவற்றின் வாழ்விற்கும் எதிரானவை.

* அமெரிக்கக் கடலில், 1990 முதல் 1999 வரை 50 ஆயிரம் எண்ணெய் சிதறல்களை, “எண்ணெய் அல்லாத இதர சரக்குகளை ஏற்றி வந்த கப்பல்களே’ ஏற்படுத்தியுள்ளன. அதன் விளைவாக அமெரிக்க கடலில் இப்போதெல்லாம் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் மிகவும் குறைந்துவிட்டன.

* கடந்த 10 ஆண்டுகளில், இத்தகைய எண்ணெய் அல்லாத சரக்கு கப்பல்கள்தான், “சுற்றுச்சூழலை’ கடுமையாகப் பாதித்துள்ளன.

* பவளப்பாறைகள் “மன்னார் வளைகுடா’வின் சிறப்பு அம்சம். அவை கிடைக்கும் தீவுகள் ராமேசுவரத்திற்கும், தூத்துக்குடிக்கும் மத்தியில் உள்ளன. இவை “எண்ணெய் சிதறல்களால் அழிந்துவிடும்.

* கடல் ஆமைகள் இங்கே அதிகம் உள்ளன. கட்டுமானப் பணியே கூட அவற்றின் உயிரைப் பறித்துவிடும்.

* தூர்வாரி ஆழப்படுத்துதலால் ஏற்படும் கடல் நீரோட்ட பாதிப்புகளைப் பற்றி திட்ட ஆதரவாளர்கள் கவலைப்படுவதில்லை.

* தூத்துக்குடிக்கும், ராமேசுவரத்திற்கும் இடையில் இருக்கும் 21 தீவுகள்தான், சுனாமி தாக்குதலிலிருந்து அந்த இரண்டு கரையோர நகரங்களையும் காப்பாற்றியவை. அத்தகைய தீவுகள் இத்திட்டத்தால் அரிக்கப்பட்டு, அழியும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

* ஐ.நா.வின் ஆய்வில், இந்தியாவில் “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதிகளாக’ 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

“யுனெஸ்கோ’வின் அந்தத் தேர்வில், மிக முக்கிய பகுதிகளாக மூன்றை முடிவு செய்தார்கள். அவை நந்தாதேவி, நீலகிரி மற்றும் மன்னார் வளைகுடா. அதில் , “மன்னார் வளைகுடா’வின் பல்லுயிரியலை பாதுகாக்க’ ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டத்திற்கு (UNDP) பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களது பாதுகாப்பு முயற்சி, சேது கால்வாய்த் திட்டத்தால் வீணாகி விடுமென மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

* மத்திய அமைச்சரவை இதை “கிழக்கின் சூயஸ் கால்வாய்’ என அழைக்கிறது. வங்காள விரிகுடாவிலிருந்து, மன்னார் வளைகுடா செல்ல அதிகபட்சம் 24 மணிநேரம் மிச்சப்படும் என்பது அவர்களது வாதம்.

அத்தகைய வாதம் ஒரு மாயை என்பதை கப்பல் துறை நிபுணர்களும், பொருளாதார நிபுணர்களும் கூறுகிறார்கள்.

* பனாமா, சூயஸ் கால்வாய்கள் நிலத்தில் தோண்டப்பட்டவை. சேது கால்வாய் கடல் நீரில் தோண்டப்படுகிறது. பனாமாவும், சூயசும் 1.50 லட்சம் டன் எடையுள்ள கப்பல்கள் பயணிக்க உதவும். ஆனால் சேது கால்வாயில், வெறும் 30 ஆயிரம் டன் எடையுள்ள கப்பல்களை மட்டுமே அனுமதிக்க முடியும்.

ரூ. 2600 கோடி முதல் ரூ. 3500 கோடி வரை சேதுத் திட்டத்துக்குச் செலவாகும். இதுவரை ரூ. 300 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

* ஜேகப் ஜான் என்ற பொருளாதார நிபுணர் மேற்கண்ட ஆய்வில், “திட்ட அறிக்கை நகல்’ அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியில் லாபம் இல்லை என்கிறார்.

“எகனாமிக் அண்ட் பொலிடிகல்’ வீக்லி-2007, ஜூலை-2ல் வெளியான அவரது கட்டுரையில், இத்திட்ட ஆதரவாளர்களின் வாதம் தவறு என விளக்கியுள்ளார். “எந்த ஓர் இந்திய மேற்கு கடற்கரை நகரிலிருந்து, இந்திய கிழக்கு கடற்கரைக்குச் செல்லும் கப்பலும், சேது வழி செல்வதால் எந்தப் பலனும் பெறப்போவதில்லை. சேது கால்வாய் உள்ளே செல்லவும் திரும்ப வெளியே வரவும் , “பைலட் கப்பல்’ இரண்டு மணி நேரம் எடுக்கும். தனியான சர்வதேச வாடகைக் கட்டணம் கோரப்படும். கால்வாய் வழியே செல்வதற்கு தனிக் கட்டணமும் வசூலிக்கப்படும். இவை கப்பலின் செலவைக் கூட்டிவிடும் என்கிறார் அவர்.

* தூத்துக்குடியிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு 22 மணி நேர பயணம் குறையும் என்றால், ஐரோப்பாவிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு வெறும் 8 மணி நேரத்தை மட்டுமே மிச்சப்படுத்தும். ஆகவே, வெளிநாட்டுக் கப்பல்களுக்கு சேது கால்வாய் அதிகம் தேவைப்படாது. இதனால் திட்டத்திற்கு ஆகும் செலவைக்கூட ஈடுகட்ட முடியாமல் இழப்புதான் மிஞ்சும் என்கிறார் அவர்.

(கட்டுரையாளர்: மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்)

————————————————————————————————————————————–

சேது: அபாயத்தின் மறுபக்கம்!

ச.ம. ஸ்டாலின்


சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் “தமிழினத் துரோகிகள்’ என முத்திரை குத்தியிருக்கிறது திமுக அரசு.

உலகெங்கும் சூழலியல் மாற்றங்கள் குறித்த பேரச்சமும் விழிப்புணர்வும் விசுவரூபமெடுத்து வரும் நிலையில், இந்தியா தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு திட்டத்தை இத்தனை சாதாரணமாக நிறைவேற்ற எத்தனிக்க முடியாது.

சூழலியல் மாறுபாடுகளிலேயே மிக அபாயகரமானதும் மர்மமானதும் கடல் சூழல்தான். இந்தியாவைப் பொருத்தவரையில் இதற்குச் சரியான உதாரணம் சேது சமுத்திரத் திட்டம். ஆழம் குறைந்த இந்திய – இலங்கை கடற்பகுதியில் கால்வாய் அமைப்பதன் மூலம் இலங்கையைச் சுற்றிச் செல்லும் கப்பல் போக்குவரத்தை கால்வாய் வழியே மேற்கொள்வதற்கான திட்டம் இது.

தமிழர்களின் நூற்றாண்டு கனவாகவும் மாபெரும் பொருளாதாரப் புரட்சித் திட்டமாகவும் புனையப்பட்டிருக்கும் இத்திட்டத்துக்கு 1860-ல் அடித்தளமிட்டவர் கமாண்டர் டெய்லர். தொடர்ந்து டென்னிசன், ஸ்டோர்டர்ட், ராபர்ட்சன், ஜான்கோட், பிரிஸ்டோ எனப் பலரால் இத்திட்டத்துக்கான சாத்தியம் குறித்து சாதகமான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டபோதும் ஆங்கிலேயே அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தயக்கம் காட்டியது.

சுதந்திர இந்தியாவில் ஏ. ராமசாமி முதலியார், சி.வி. வெங்கடேசுவரன், நாகேந்திர சிங், எச்.ஆர். லட்சுமிநாராயணன் என அனைவரும் சாதகமான அறிக்கைகளையே அளித்தனர். இவர்கள் அனைவரின் அறிக்கைகளிலும் உள்ள முக்கிய ஒற்றுமை – சூழலியல் பிரக்ஞை இல்லாததுதான்.

இத்தகைய திட்டங்களைச் செயலாக்கும் முன் தீவிரமான பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தைப் பொருத்தவரையில் அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கடலியல் விஞ்ஞானிகள், மீனவர்களின் யோசனைகள் ஏற்கப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால் நம் விஞ்ஞானிகளின் வாய்கள் அரசால் இறுகக் கட்டப்பட்டுள்ளன. மீனவர்கள் ஊமைகளாக்கப்பட்டுள்ளனர். சூழலியல் சார்ந்து இங்கு மேற்கொள்ளப்பட்ட ஒரே ஆய்வு “நீரி’ (தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம்) மேற்கொண்ட விரைவு சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மட்டுமே. அதுவும் முழுமையானது அன்று; கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கடல் வெறும் நீர்ப்பரப்பன்று; அது ஓர் உலகம். கடல் எனக் குறிப்பிடப்படுவது அதனுள் இருக்கும் ஆயிரமாயிரம் உயிரினங்களையும் அற்புதங்களையும் அபாயங்களையும் உள்ளடக்கியதுதான்.

சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் மன்னார் வளைகுடா பகுதி ஆசியாவின் உச்சபட்ச பராமரிப்பு கோரும் கடற்கரை உயிரியக்கப் பகுதிகளில் ஒன்று. 5,000-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இருந்த இப்பகுதியில், ஏற்கெனவே, கடல் சூழல் மாசால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிந்துவிட்டன. தற்போதுள்ளதாகக் கருதப்படும் 4000 உயிரினங்களில் 1500 வகைகள் அருகிவரும் வகைகளாகக் கண்டறியப்பட்டவை.

மேலும், இப்பகுதிக்கு கிடைத்துள்ள பெருங்கொடை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதுடைய பவளப்பாறைகள், படிமங்கள். பவளப்பாறை இனங்களில் உலகிலுள்ள 82 சத வகையினங்கள் இங்கு காணப்படுகின்றன.

இத்திட்டத்தால் கடலின் நீரியங்குதிசை, நீரோட்டத்தின் ஒழுங்கு, அலைகளோட்டம், சூரிய ஒளி ஊடுருவல் மாறுபடும். இதன் தொடர்ச்சியாக உயிரினங்களின் வாழ்வியல்பு, உறைவிடம், இடப்பெயர்வு பாதிக்கப்படும்.

சூழலியல் முக்கியத்துவமிக்க இப்பகுதி பேராபத்தானதும்கூட. வானிலையாளர்களால் அதிக கவனத்துடன் கண்காணிக்கப்படும் இப்பகுதி இயற்கைச் சீற்றங்களுக்கு அதிகம் இலக்காகும் அபாயமிக்க பகுதி. இங்கு ஏற்படும் எந்த மாற்றமும் தென்னிந்திய கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இத்தகைய ஒரு பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் போன்ற அசுரத்தனமான திட்டங்களை மேற்கொள்வதற்கும் அணுகுண்டுகளை வெடித்துப்பார்ப்பதற்கும் அதிக வேறுபாடில்லை.

ஒருபுறம், அடிப்படையிலேயே நகர்வுத்தன்மை வாய்ந்த கடலில் கால்வாயின் நிரந்தரத்தன்மை குறித்து தொழில்நுட்ப ரீதியிலான கேள்வி எழுப்பப்படுகிறது. மறுபுறம், இத்திட்டத்துக்கான செலவு, பராமரிப்பு, சுங்க வரி ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியாக லாபகரமானதாக அமையுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இன்னொருபுறம் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், சூழலியலில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயமிக்க இத்திட்டத்தைச் செயலாக்கத் துடிப்பது ஏன் என்ற கேள்விக்கு இன்றளவும் அறிவியல்பூர்வமான – நேர்மையான பதில் அரசிடம் இல்லை.

Posted in Adams, Analysis, Aquarium, Bay, Bay of Bengal, Boats, Bribery, Bridge, Carbon, Catamaran, Commerce, Consumption, coral, Corruption, Eco, Ecology, Economy, emissions, energy, Environment, Exports, Facts, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Fishing, Freight, Gas, Hindu, Hinduism, Hindutva, Impact, Information, infrastructure, kickbacks, Leaks, Life, Mannaar, Mannar, Money, Nature, Nautical, Ocean, oil, Palk Straits, Petrol, Pollution, Project, Ram, Ramar, Rameshvaram, Rameshwaram, Ramesvaram, Rameswaram, RamSethu, Reefs, Religion, Science, Scientific, Sea, Seafood, Sethu, Setu, Ships, Straits, Study, Tourism, Tourists, Transport, Transportation, Trawlers, Tsunami, Tuticorin, UN, UNDP, UNESCO, Water | 1 Comment »

Malaysia eases visa rules for Indians, except from Chennai

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

சென்னையில் இருந்து செல்லும் பயணிகளுக்கு விசா விதிமுறைகளை தளர்த்தியது மலேசியா

கோலாலம்பூர், மார்ச் 16: சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகளுக்கான விசா விதிகளைத் தளர்த்தியுள்ளது மலேசிய அரசு.

இதையடுத்து, சென்னையைத் தவிர தென்னிந்திய நகரங்களில் இருந்து மலேசியாவுக்கு வரும் பயணிகள் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் வந்து இறங்கியதும் விசா பெற்றுக் கொள்ளலாம் என மலேசிய அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் வசிப்போர் அங்குள்ள மலேசியத் தூதரகத்தில் இருந்து முன்கூட்டியே விசா பெறும் வசதி உள்ளதால் அவர்களுக்கு புதிய விதி பொருந்தாது என்று கோலாலம்பூரில் வியாழக்கிழமை தெரிவித்தார் துணைப் பிரதமர் நஜீப் ரஸôக்.

சென்னையில் இருந்து வருவோர் விசாவில் அனுமதிக்கப்பட்ட நாள்களை விட கூடுதல் நாள்கள் மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கி விடுவதை அடுத்து, விசா வழங்குவதைக் கடந்த டிசம்பரில் நிறுத்தியது மலேசியா.

சென்னையில் இருந்து வருவோரில் 25 சதவீதம் பேர் அனுமதிக்கப்பட்ட நாள்களை விட அதிக நாள்கள் சட்டவிரோதமாகத் தங்குகின்றனர் என்று நஜீப் கூறினார்.

மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 19 ஆயிரம். இதில் 3 ஆயிரம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் மத்திய கிழக்கு நாடுகள், ஈரான், இராக், பாலஸ்தீனம் மற்றும் சிரியாவில் இருந்து வருவோருக்கும் கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே விசா வழங்கப்படும் என்று மலேசியா அறிவித்துள்ளது.

Posted in Airport, Chennai, Consulate, Employment, Flight, Illegal, Indians, International, Jobs, Kuala Lumpur, Kualalumpur, Malaysia, overstay, residents, Tourists, Visa, Work | Leave a Comment »

London Diary – London Eye: Eraa Murugan

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

லண்டன் டைரி: “லண்டன் ஐ!’

இரா. முருகன்

தேம்ஸ் நதிக்கரை எம்பாங்க்மெண்ட் படித்துறையில் படகு காத்திருக்கிறது. உள்ளே நுழைந்தபோது, கீழ்த்தட்டில் ஒரு கூட்டம் முந்திய நாள் வெஸ்ட்ஹாம் மைதானத்தில் நடந்த கால்பந்து விளையாட்டைப் பற்றி உரக்க விவாதிக்கும் இரைச்சல். மத்திய வயசு ஆண்கள். எல்லோர் கையிலும் பியர் குவளை. எனக்கு முன்னால் மெல்லிய குரலில் பேசிக்கொண்டு கையில் ஜபமாலையோடு நடந்து கொண்டிருந்த கன்னியாஸ்திரிகள் ஒரு வினாடி தயங்கி, கப்பலின் மேல்தட்டுக்குப் படியேறுகிறார்கள். நானும்தான். பெரிய பறவைபோல் இரண்டு தடவை ஒலியெழுப்பிவிட்டுப் படகு நதியில் மெல்ல நகர்கிறது.

கரையில் பிக்பென் கடியாரக் கோபுரத்தைக் கழுத்து வலிக்கப் பார்க்கும் சகபயணிகளைக் கவனிக்கிறேன். ஜெர்மானிய டூரிஸ்ட்டுகள். அவர்கள் மொழியில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் வழிகாட்டி. ரொம்பக் கடுமையாகக் காதில் விழுகிற மொழி அது. “”உன்னைக் காதலிக்கிறேன்” என்று காதலியிடம் அன்போடு சொல்வது கூட ஜெர்மன் பாஷையில்,

“”நமூனாவை மூணு காப்பி எடுத்து ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி, தாசில்தாரிடம் அட்டஸ்டேஷன் வாங்கி ஒரு வாரத்துக்குள் அனுப்பிவைக்காவிட்டால், அபராதம் செலுத்தவேண்டிவரும்”

என்று அரசாங்க அறிவிப்பைக் கேட்கிறமாதிரி இருக்கும். முன்வரிசை ஜெர்மன் யுவதி காதலன் காதில் ஏதோ சொல்ல அவன் ஆற்றில் குதிப்பதுபோல் போக்குக்காட்டுகிறான். ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்கிவரச் சொல்லியிருப்பாள்.

கன்னியாஸ்திரீகளின் கைகள் ஜபமாலையை நிதானமாக உருட்டிக் கொண்டிருக்க, நதிக்கரையில் வலதுபுறம் இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டடம் கடந்துபோகிறது. பக்கத்தில்தான் அந்தக்கால லண்டன் கார்ப்பரேஷன் என்ற கவுண்டி ஹால் இருந்ததாம். கவுன்சிலர்களின் சத்தம் தாங்காமலோ என்னமோ, அதை இடித்துவிட்டு அங்கே அடுக்குமாடிக் குடியிருப்பையும், கீழ்த்தளத்தில் மீன் காட்சி சாலையையும் கட்டிவிட்டார்கள். மீன்கள் சத்தம் எழுப்பாமல் வாயைத் திறந்துகொண்டிருக்க, கவுன்சிலர்கள் வேறு இடத்தில் சண்டையைத் தொடர்கிறார்கள்.

அடுத்து வருவது லண்டன் ஐ. இது “மெட்ராஸ் ஐ’ போல கண் சிவந்து ரெண்டு நாள் காஷுவல் லீவு போட்டுவிட்டு கறுப்புக் கண்ணாடியோடு வீட்டில் உட்கார்ந்து கேபிள் டிவி பார்க்கிற சமாச்சாரமில்லை என்பதைச் சொல்லியாக வேண்டும். ஆண்டு 2000 பிறந்து, இருபத்தொன்றாம் நூற்றாண்டு தொடங்கியதைக் கொண்டாட எழுப்பப்பட்டது “லண்டன் ஐ’. பொருட்காட்சி ஜயண்ட் வீலுக்குச் சத்துணவு கொடுத்து இன்னும் முப்பது மடங்கு பெரிதாக்கப்பட்டதுபோல சுழலும் இந்த “லண்டன் கண்’ சக்கரத்தில் ஏறி நின்றால் முழு லண்டனையும் சுற்றுப்புறத்தையும் தெளிவாகப் பார்க்கலாம். எனக்கென்னமோ, இந்தச் சக்கரம் லண்டனின் பாரம்பரியம் மிக்க சரித்திரத்தோடு ஒட்டாமல் தனியாக நிற்பதுபோல் தோன்றுகிறது. யார் கண்டது? இன்னும் இருநூறு வருடத்தில், இதுவும் புராதனப் பெருமையோடு சுழலலாம்.

“”கிளியோபாத்ரா மூக்கு”. ஜபமாலையை உருட்டிக் கொண்டிருந்த ஒரு கன்னியாஸ்திரி சொல்கிறார். உலகப் பேரழகி கிளியோபாத்ராவும் அவளுடைய மூக்கும் திடீரென்று இவருக்கு நினைவுவரக் காரணம் என்னவாக இருக்கும்? என்று ஆச்சரியப்பட்டுப் பார்க்கிறேன். அவர் கரையில் நீட்டி நிமிர்ந்து நிற்கும் ஒரு கருங்கல் தூணை மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார். மூவாயிரத்து ஐந்நூறு வருடம் முன்னால் எகிப்தில் உருவாக்கிய இந்த நீளமூக்குத் தூணை, வெறும் இருநூறு வருடம் முன்னால் எகிப்திய மக்கள் இங்கிலாந்துக்கு அன்பளிப்பாகத் தந்திருக்கிறார்கள். ஈராக் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று அந்தக் காலத்திலேயே பிரிட்டனிடம் சூசகமாகச் சொல்லியிருப்பார்களோ என்னமோ.

சொல்லிவைத்தாற்போல் ஒரே நேரத்தில் கன்னியாஸ்திரிகள் நெஞ்சில் சிலுவை வரைந்துகொள்கிறார்கள். நதிக்கரையை ஒட்டி கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது செயின்ட் பால் தேவாலயம். 1666-ம் ஆண்டு லண்டன் மாநகரத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் பழைய ஆலயம் சேதமடைய, இரண்டாம் சார்லஸ் மன்னன் கட்டுவித்தது. பக்கத்திலேயே ஆங்கில நாடக இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் தன்னுடைய படைப்புகளை அரங்கேற்றிய க்ளோப் தியேட்டர். அதுவும் பழைய வனப்பு சேதமடையாமல் புத்தம் புதியதாக எழுந்து நிற்கிறது. வெகு அருகில் டேட் ஓவிய, சிற்பக் கூடம். நவீனப் படைப்புகளுக்கான அரங்கம் இது. புதுமையில் எனக்கு விருப்பம் உண்டுதான். ஆனாலும் இந்த டேட் காலரியில் ரொம்பவே புதுமையாக சில மாதங்கள் முன்னால் இடம் பெற்ற படைப்பு -அழுக்கான அசல் கழிப்பறைப் பீங்கான் , உபயோகித்த சுவட்டோடு சிறுநீர் கழிக்கும் கோப்பை, தகர டப்பாவில் மனிதக் கழிவு, கூடவே, வாடை எல்லாம் போக, எதிரே ஒரு பெரிய மின்விசிறியின் ஓவியம்.

உலகின் பழைய மதுக்கடையைக் கடந்து படகு முன்னே போய்க்கொண்டிருக்கிறது. நங்கூர மது அரங்கம் என்ற இந்த ஆங்கர் டேவர்னில் நங்கூரமிட்டு சுதி ஏற்றிக்கொண்டுதான் ஷேக்ஸ்பியர் சாகாவரம் பெற்ற நாடகங்களை எழுதியிருக்கிறார். இங்கே கோப்பையும் கையுமாகக் குடியிருந்துதான் இலக்கிய மேதை சாம்யுவெல் ஜான்சன் ஆங்கிலப் பேரகராதியைத் தொகுத்திருக்கிறார். கொஞ்சம் படகை நிறுத்தினால் நானும் இறங்கிப்போய் ஒரு காப்பியம் எழுத முயற்சி செய்யலாம் என்று தோன்றுகிறது. தமிழ் இலக்கியத்துக்கு அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் படகு நிற்காமல் விரைகிறது.

டவர் பாலம் பக்கம் பெரிய கப்பல் ஒன்று ஓய்வெடுத்துக்கொண்டு நிற்கிறது. எச்.எம்.எஸ். பெல்ஃபாஸ்ட் என்ற போர்க் கப்பல் அது. இரண்டாம் உலக யுத்த காலத்தில் இங்கிலாந்து கடற்படையில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, ஜெர்மனியை முறியடித்த 1944 ஜூன் மாத இறுதிக்கட்டப் போரில் இந்தக் கப்பலுக்கும் பெரும் பங்கு உண்டு. தற்போது ரிடையராகி தேம்ஸ் நதியில் நங்கூரம் பாய்ச்சி நின்றாலும், இங்கிலாந்து அரசுக்கு இந்தக் கப்பலால் அதிக வருமானமே தவிர ஒரு காசு பென்ஷன் செலவு கிடையாது. கிட்டத்தட்ட ஆயிரம் போர் வீரர்கள் தங்கிப் போரிட்ட கப்பல் தற்போது யுத்தகால அருங்காட்சி சாலையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. “இரண்டாம் உலக யுத்தம் முடிந்தது -இங்கிலாந்து வெற்றி’ என்று இன்றைக்குக் காலையில்தான் பத்திரிகையில் படித்த பரபரப்போடு ஒரு பெரிய கூட்டம் கப்பலுக்குள் விரைந்து ஏறிப் போய்க்கொண்டிருப்பது கண்ணில் படுகிறது. “”நெசம்தான்” என்று ஆமோதித்தபடி இன்னொரு கூட்டம் வெளியே வந்துகொண்டிருக்கிறது. இந்த வருடம் மட்டும் மூன்று லட்சம் பேர் இப்படிக் காசு கொடுத்து கப்பலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, உள்ளே ஓட்டலில் சூடாக ஒரு காப்பி குடித்துவிட்டு இறங்கியதாகத் தகவல்.

“”இது கக்கோல்ட் முனை”. ஏதோ உலக ரெக்கார்டை ஏற்படுத்தப் போவதுபோல் தொடர்ந்து பியர் குடித்தபடி கீழ்த்தளத்திலிருந்து மேலே வந்த கூட்டத்திலிருந்து ஒரு குரல். “”சொல்பேச்சு கேட்காத பெண்டாட்டியை வில்லியம் கக்கோல்ட் இங்கேயிருந்துதான் பிடிச்சுத் தள்ளிவிட்டானாம். திரும்பிப் பார்த்தால், பெரிய கும்பல். என் வீட்டுக்காரியையும் தள்ளி விட்டுடுய்யான்னு அவனவன் க்யூவிலே நின்னு கெஞ்சறான். நோ ப்ராப்ளம்னு ஒருத்தருக்கு ஒரு பென்ஸ் காசு கூலி வாங்கிப் போட்டுக்கிட்டு அப்புறம் அவன் முழுநேரம் இதே உத்தியோகம்தான் பார்த்தானாம்”.

“”தனியாளாக ரொம்பக் கஷ்டப்பட்டு உழைச்சிருப்பான் பாவம்”. கையில் பிடித்த பியர் தரையில் சிந்த, சிரிப்புச் சத்தம் உயர்கிறது. இவர்களைப் பிடித்துத் தேம்ஸ் நதியில் தள்ளிவிட்டால் என்ன என்று யோசித்தபடி டவர் பிரிட்ஜ் படித்துறையில் இறங்குகிறேன்.

Posted in Cruise, England, Era Murugan, Era Murukan, Experiences, German Language, Ira Murugan, Ira Murukan, London Diary, Raayar kaapi klub, Raayarkaapiklub, Rayar kapi klub, Rayarkaapiklub, RKK, St Paul Church, Thames, Tour, Tourists, UK | Leave a Comment »