Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘TMVP’ Category

Sri Lanka Muslim Congress party quits Rajapaksa regime – Sri Lanka Majority Cut to One; Budget May Be Defeated

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

இலங்கை அரசுக்கான ஆதரவை முஸ்லிம் காங்கிரஸ் விலக்கிக்கொண்டது

இலங்கையின் பிரதான முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணிக்கு இதுவரை தான் வழங்கிவந்த ஆதரவினை விலக்கிக் கொண்டிருப்பதோடு, இன்று நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் வரிசையிலும் சென்று அமர்ந்துகொண்டிருக்கிறது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளர் ஹசன் அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் பைசர் காசிம் ஆகிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று பிற்பகல் சபை அமர்வின்போது, அரசில் இதுவரை தாம் வகித்துவந்த அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் அனைத்தையும் இராஜினாமாச் செய்துவிட்டு திடீரென எதிர்க்கட்சி வரிசையில் வந்து அமர்ந்து கொண்டார்கள்.

ஆனாலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஏனைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய பிரதி அமைச்சர்கள் பாயிஸ் மற்றும் நிஜாமுதீன் ஆகியோர் கட்சியின் இந்த முடிவில் பங்குகொண்டிருக்கவில்லை என்பதும், கால்நடைகள் பிரதி அமைச்சர் பாயிஸ் கட்சித் தலைமையின் ஒழுக்காற்று நடவடிக்கையின் கீழ் கட்சியிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசினால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுவரும் 2008 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதின் மூன்றாவதும் இறுதியுமான வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாளை மறுதினமான வெள்ளிக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள இந்த வேளையில் இந்தக்கட்சித் தாவல் இடம்பெற்றிருப்பது அரசின் வரவு செலவுத்திட்டத்தினைத் தோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு வலுவூட்டியிருப்பதாகவே அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

கடந்த நவம்பர் 7 ஆம் திகதி நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்றபோது 225 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், அதற்கு ஆதரவாக 118 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் கிடைத்தன. அன்றையதினம் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்கவில்லை. மேலும் இருவர் நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருந்த போதிலும் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் கடத்தல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்

இலங்கை வரவு செலவுத்திட்டம் குறித்த இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நாளை மறுதினம் நடக்கவிருக்கின்ற நிலையில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரது உறவினர்கள் நேற்று ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் மருமகனான தபால் ஊழியர் 28 வயதுடைய அருணாசலம் சிவபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமரின் செயலாளரான 70 வயதுடைய அன்புமணி ஆர்.நாகலிங்கம் ஆகியோர் நேற்றிரவு அவர்களது வீடுகளிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேத்திரனின் சகோதரனான 54 வயதுடைய கிராம சேவை அலுவலகர் எஸ். ஸ்ரீகாந்தசெய அவர்கள் அவரது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் நேற்று மாலை வீதியில் வைத்தும் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி நோர்வேயிலும் பீ.அரியநேந்திரன் நெதர்லாந்திலும் தற்போது தங்கியிருக்கின்றார்கள்

நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடை பெறவிக்கும் இவ் வேளையில் இடம் பெற்றுள்ள இக் கடத்தல் சம்பவமானது தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தடுக்கும் செயல் என்று குற்றஞ்சாட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இதனை மீறி சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டால் கடத்தப்பட்டவர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஆயுததாரிகளினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதே பாணியில் ஏற்கனவே கடந்த 19 ம் திகதி வரவு செலவு திட்டம் மீதான இரண்டாவது வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முதல் நாள் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான ரி.கனகசபையின் மருமகன் கடத்தப்பட்டு வாக்கெடுப்பு முடியும் வரை தடுத்து வைக்கப்பட்டு, கனகசபை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததையடுத்து அன்று இரவு அவர் விடுவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


யாழ்ப்பாணத்தில் சர்வமத சமாதான மாநாடு

உள்நாட்டுப் போர் ஒன்றில் சிக்கியுள்ள இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சமாதானம் தொடர்பான இரண்டுநாள் சர்வதேச சர்வமத மாநாடு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியிருக்கின்றது.

கம்போடியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், ஜப்பான், நேபாளம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த சர்வமதத் தலைவர்கள் சுமார் 11 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.

யாழ்ப்பாண நூலக மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகிய இந்த மாநாட்டை தென்னாபிரிக்காவில் செயற்பட்டு வரும் காந்தி மன்றத்தின் தலைவியும், மகாத்மா காந்தியின் பேத்தியுமாகிய எலாகாந்தி அவர்கள் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

இலங்கையின் சமாதான முயற்சிக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அக்காசி அவர்கள் இந்த மாநாட்டில் விசேடமாகக் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கின்றார்.

யுத்த மோதல்கள் காரணமாக இரத்தம் சிந்தும் நிலை, மக்கள் இடப்பெயர்வு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம், பீதி, அமைதியின்மை ஆகிய பல்வேறு துன்பங்களுக்கும் முடிவு காணப்பட வேண்டும் என்பதை இங்கு உரையாற்றிய இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த சர்வதேசத் தலைவர்களுடன் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த உள்ளுர் மதத் தலைவர்களும் ஒரு முகமாக வலியுறுத்தியுள்ளார்கள்.

இன்றைய முதல்நாள் மாநாட்டு நிகழ்வுகள் குறித்து இதில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய செய்திக்குறிப்பை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 

Posted in Abductions, Ampara, Basheer Cegu Dawood, Batticaloa, Budget, Eelam, Eezham, Faisal Cassim, Finance, Hakeem, Hasan Ali, Islam, Jaffna, Karuna, Karuna Amman, LTTE, majority, Muslim, Opposition, parliament, Rajapakse, Ranil, Ranil Wickremasinghe, Rauff, Rauff Hakeem, Religion, SLMC, Sri lanka, Srilanka, Tamil Makkal Viduthalai Pulikal, Tamil National Alliance, TMVP, TNA, War, Wickremasinghe | Leave a Comment »

Karuna’s trial for “war crimes” urged – Sri Lanka unveils biggest war budget as fighting escalates

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2007

வட இலங்கையில் கடும் மோதல்; உயிர்ச்சேதம் குறித்து அரசு-புலிகள் தரப்புகளிலிருந்து முரண்பட்ட தகவல்கள்

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில், முகமாலை முதல் கிளாலி வரையிலான இராணுவ முன்னரங்க பகுதியில் புதன்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது இருதரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இத்தாக்குதல்கள் பற்றிக் கூறுகையில், அதிகாலை 5.30 மணியளவில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை நோக்கி முன்னேறிச் சென்று அவர்களது முன்னரங்க பகுதிகளைக் கைப்பற்றி புலிகளின் 6 பதுங்குகுழிகளை அழித்து, அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரையில் முன்னேறிச் சென்று சேதங்களை ஏற்படுத்திவிட்டு காலை 7 மணியளவில் படையினர் தமது நிலைகளுக்குத் திரும்பியுள்ளார்கள் என்று கூறினார்.

கிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் ஏ9 வீதிக்கு வடக்காகவும், தெற்காகவும் இந்தச் சண்டைகள் நடைபெற்றன. இதில் 52 விடுதலைப் புலிகளும் 11 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். மேலும் 41 படையினர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என உதய நாணயக்கார தெரிவித்தார்.

அதேநேரம் இந்த மோதல் சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகளின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன், கிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் இன்ற இராணுவத்தினர் பெரும் எடுப்பில் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளார்கள் என்றும், இதன்போது 20க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சண்டையின்போது இராணுவத்தினருக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்றும் உதவியாக தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இராணுவத்தின் டீ55 ரக யுத்த டாங்கியொன்று தங்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்திடமிருந்து பெருமளவு ஆயுதத் தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.


இலங்கை வரவு செலவுத் திட்டம்: அரசு செலவினங்கள் அதிகரித்தது

மஹிந்த ராஜபக்ஷ
ஜனாதிபதி பட்ஜெட் உரையை வாசிக்கிறார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு மத்தியில் இலங்கை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷ 2008 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் மூன்றாவது வரவு செலவுத்திட்டம் இது.

அடுத்த நிதியாண்டிற்கான அரசின் மொத்த உத்தேச வருமானமாக சுமார் 750.74 பில்லியன் ரூபாய்களும், மொத்த உத்தேச செலவினங்களாக 1044.18 பில்லியன் ரூபாய்களும் காட்டப்பட்டிருப்பதோடு, துண்டுவிழும் தொகை சுமார் 293.44 பில்லியன் ரூபாய்களாகவும் கணக்கிடப்பட்டிருக்கின்றன.

கடந்த மாதம் அரசு முன்வைத்த நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின்படி, 2008 ஆண்டு தேசிய பாதுகாப்பு செலவினங்களிற்காக 166.44 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது 2007ஆம் ஆண்டிற்கான உத்தேச தேசிய பாதுகாப்பு செலவினங்களுடன் ஒப்பிடும்போது ஏறத்தாழ 20 சதவீத அதிகரிப்பாகும்.

இலங்கையில் கடந்த இரண்டு வருடகால பொருளாதார வளர்ச்சி வீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த வருடம் இந்த வளர்ச்சி வீத்ததினை 7.5 வீதமாக உயர்த்த சகலரினது ஒத்துழைப்பையும் கோரினார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பினைப் பேணுவதில் தனது அரசிற்கு உண்டான தீவிர கவனத்தினை வெளியிட்டுப் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினைக் காணுவதற்கு முன்பாக நாட்டிலுள்ள பயங்கரவாதம் முற்றாக ஒழிக்ப்படுவது இன்றியமையாதது என்றும் தெரிவித்தார்.

இந்த வரவு செலவுத்திட்டத்தினை ஒரு யுத்த வரவு செலவுத்திட்டம் எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையைப் புறக்கணித்திருந்தார்கள்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டில் 7.5 சதவீதம் இருக்கும் என்று இந்த வரவு செலவுத்திட்டத்தில் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

போர்ச்சூழலில் இந்த வளர்ச்சியை எட்டமுடியுமா? மேலும், பொதுமக்களை பாதிக்கும் பணவீக்கம்,விலைவாசி உயர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் இந்த திட்டத்தில் இருக்கின்றனவா? போன்ற கேள்விகளுக்கு கொழும்பில் உள்ள பொருளாதாரப் பகுப்பாய்வாளர் முத்துக்கிருஷ்ணன் சார்வானந்தன் பதிலளிப்பதையும் நேயர்கள் கேட்கலாம்.


லண்டனில் கைதான கருணாவை சித்ரவதை குற்றங்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

கர்ணல் கருணா
விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய தளபதியாக இருந்தவர் கர்ணல் கருணா

சித்திரவதை செய்தது, சிறார் போராளிகளை பயன்படுத்தியது உட்பட பல்வேறு குற்றங்களை செய்ததாக கர்ணல் கருணா மீது பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சுமத்துகின்றன.

மனித உரிமை அமைப்புகளை சேர்ந்தவர்கள், கருணாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட முயன்று வருகிறார்கள்.

இப்படி திரட்டப்படும் ஆதாரங்களை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கையளித்து, அவர் மீது வழக்கு தொடர முடியும் என்கிற நம்பிக்கையுடன் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

இலங்கையில் நடந்த மனித உரிமை துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான அந்நாட்டின் முக்கிய நபர்களில் ஒருவர் கருணா என்று வர்ணிக்கிறார் ஹூமன் ரைட்ஸ் வாட்ச் என்கிற மனித உரிமை அமைப்பின் சட்ட மற்றும் கொள்கை விவகாரங்களுக்கான இயக்குநர் ஜேம்ஸ் ரோஸ்.

கருணா மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்று தாங்கள் உறுதியாக நம்பு வதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கருணா நடத்திய மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் அவர் மீது இலங்கையில் வழக்கு தொடரப்படும் என்பதில் தங்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்றும், காரணம், இலங்கை அரசு, குறிப்பாக ராணுவ தளபதிகள் கருணா குழுவுக்கு ஆதரவாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கருணா மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து வழக்கு தொடுக்கக்கூடிய அளவுக்கு தேவையான ஆதாரங்கள் இருக்கிறது என்று பிரிட்டிஷ் அதிகாரிகளை இணங்க வைக்கக்கூடிய வலுவான ஆதாரங்களை திரட்டுவது என்பதும், அந்த ஆதாரங்களை கேணல் கருணா பிரிட்டனில் இருக்கும்போதே பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் அளிப்பது என்பதும் மனித உரிமை அமைப்புகள் முன்பிருக்கும் தற்போதைய சவால்.

பிரிட்டனின் குடிவரவு குடியகல்வு பிரிவின் தடுப்புக்காவலில் கருணா தற்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக, பிரிட்டிஷ் உள்துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது.

இவர் மீதான வழக்கு குறித்து மேலதிகமாக பேசுவதற்கு அதிகாரிகள் தயாராக இல்லை.

Posted in Abductions, Airforce, Budget, Conflict, Crime, crimes, Defense, enquiry, Extremism, Fight, Freedom, Govt, HR, Independence, Inquiry, Karuna, Law, LTTE, Mahinda, majority, Military, minority, murders, Navy, Order, Peace, Rajapakse, Rebels, Sinhala, Sinhalese, Soldiers, Sri lanka, Srilanka, Tamils, Terrorism, TMVP, Torture, troops, Vidudhalai, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War | Leave a Comment »