Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Tirupoor’ Category

Textile Industry: Current Trends, analysis – S Gopalakrishnan (Garment Exports)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள்

எஸ். கோபாலகிருஷ்ணன்

ஜவுளித்துறையில் “கோட்டா’ முறை முடிவுக்கு வந்து சுமார் 3 ஆண்டுகளாகப் போகிறது. ஜவுளித்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது. இந்த மாற்றம் ஏற்படுவதற்கு முன் என்ன நிலைமை இருந்தது?

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்களுக்குத் தேவையான ஆயத்த ஆடைகளை ஒரே நாட்டிலிருந்து வாங்குவதில்லை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா, இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு விகித அடிப்படையில் இறக்குமதி செய்து வந்தன. இதனால், இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இந்த கோட்டா முறை 2005 ஜனவரி முதல் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இந்திய ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. “”இனி தேவையெல்லாம், வணிகத்திறன் மட்டுமே. அதாவது, சர்வதேசச் சந்தையில் போட்டியிடுவதற்குத் தகுந்த சிறப்பான தரம், நியாயமான விலை, குறிப்பிட்ட தேதியில் ஏற்றுமதி செய்தல் ஆகியவையே. இனி எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம்” என்று ஜவுளித்துறையில் பேசப்பட்டது.

2005-ல் வெளியான முக்கிய ஆய்வறிக்கைகள், 2003 – 04-ல் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி 2010-ல் 50 பில்லியன் டாலராக உயரும் என்று தெரிவித்தன. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி). அதேபோல், 2012-ம் ஆண்டில் 55 பில்லியன் டாலராகவும் 2014-ம் ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும் ஜவுளி ஏற்றுமதி உயரும் என்றும் கணிக்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு இணையாக ஜவுளித்துறை உத்வேகம் அடையும் என்றும் பேசப்பட்டது.

ஆனால், நடப்பாண்டில் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 23 பில்லியன் டாலராகவே இருக்கும் என்று தெரிகிறது. அதாவது நிர்ணயிக்கப்பட்டிருந்த 25 பில்லியன் டாலர் இலக்கைவிட குறைவாகவே இருக்கும். கடந்த ஆண்டும் இலக்கைவிட 2 பில்லியன் டாலர் குறைவாகவே ஏற்றுமதி இருந்தது.

எனினும், நான்கு ஆண்டுகளுக்கு முன் வெறும் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது சற்று ஆறுதலான விஷயம்.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரித்துள்ள அளவு, ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கவில்லை என்பதே உண்மை.

சீனா, வங்கதேசம் போன்ற நாடுகள் இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டு கோட்டா முறை ரத்தான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளன. சர்வதேச அளவில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 3 சதவிகிதம்தான்; ஆனால் சீனாவின் ஏற்றுமதி 20 சதவிகிதம்.

இந்தியாவைப் பொருத்தவரை, ஜவுளித்துறைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மூன்றரை கோடி மக்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கும் துறை இது. இந்தியாவின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒன்பது சதவிகிதத்தினருக்கு ஏற்கெனவே வேலைவாய்ப்பு வழங்கிவரும் ஒரு துறை.

மத்திய அரசு அண்மைக்காலமாக சில புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஜவுளித்துறையில் புதிதாக முதலீடுகள் வரவேண்டும் என்ற நோக்கில், 1999-ம் ஆண்டு முதல் ஜவுளித்துறையில் தொழிலியல் மேம்பாடு நிதித் திட்டத்தை (பங்ஷ்ற்ண்ப்ங் மல்ஞ்ழ்ஹக்ஹற்ண்ர்ய் ஊன்ய்க் நஸ்ரீட்ங்ம்ங்) உருவாக்கி தொழிலியல் ரீதியான மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்காக நிதி உதவி செய்து வருகிறது. இத்திட்டம் நடப்பாண்டில் முடிவடையும் நிலையில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாட் (யஹப்ன்ங் அக்க்ங்க் பஹஷ்) உள்ளிட்ட வரிச்சலுகைகள், நவீன இயந்திரங்கள் இறக்குமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், சிறுதொழில்துறையினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பின்னலாடை போன்ற சில பிரிவுகளை பிற தொழிற்கூடங்களுக்கு அனுமதித்தல், வெளிநாட்டு முதலீட்டுக்கான உச்ச வரம்பை 100 சதவிகிதமாக உயர்த்துதல் போன்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

எனினும் ஜவுளித்துறை குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. தொழிலியல் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் பயனாக, உள்நாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான அளவில் புதிய முதலீடுகளை ஜவுளித் துறையில் செய்து வருகின்றனர்.

அதேநேரம், ஜவுளி ஏற்றுமதியில் அனுபவமும், ஆற்றலும் பெற்றுள்ள சில தொழில் முனைவோர் வங்கதேசம் சென்று, ஏற்றுமதி செய்ய முற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அந்த நாட்டில் தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் குறைவு என்பதே இதற்கு காரணம்.

இது ஒருபுறமிருக்க, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. மற்ற ஏற்றுமதியாளர்களைப்போலவே, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இந்த டாலர் வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப் பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் ரூ. 1,400 கோடியில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், இது போதுமானது அல்ல என்பது ஏற்றுமதியாளர்களின் கருத்து.

இந்நிலையில், டாலர் மதிப்பு வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, அமெரிக்கச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை மட்டும் நம்பியிராமல், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கதுதான். எனினும், அமெரிக்கச் சந்தையின் தேவையைவிட ஐரோப்பிய நாடுகளின் தேவை மிகக் குறைவு என்பதால், இது ஒரு தாற்காலிக நிவாரணமாகவே அமையும்.

அதேபோல், அமெரிக்காவின் புதிய ஆர்டர்களுக்கு 3 சதவிகித அளவுக்கு விலையை உயர்த்தி வருகிறார்கள் என்று திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்படும் ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஜவுளித்துறையில் நீண்டகாலத்துக்கு உத்வேகம் ஏற்பட வேண்டுமானால், தொழிலியல் ரீதியாக நவீனமயமாக்கல், கட்டமைப்பு மேம்பாடு, காலமாற்றத்துக்கேற்ற புதிய புதிய வணிக உத்திகள் ஆகியவை உடனடித் தேவை. அத்துடன், நெசவு முதல் ஆடைகளைத் தைத்து முடிப்பதுவரை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த உற்பத்திக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

இதைக் கருத்தில்கொண்டு, சர்வதேசத் தரத்துக்கு ஜவுளி ஆலைகளை நிறுவுவதற்காக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களை மத்திய அரசு அமைக்கிறது. இத்திட்டத்தில் 30 ஜவுளி பூங்காக்களை அமைக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 ஆயிரத்து 897 கோடியில் அமையும் இத் திட்டத்தில் மத்திய அரசின் பங்குத்தொகை ரூ. 1,055 கோடி என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருப்பது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

Posted in America, Bangladesh, Budget, Capital, Cash, China, Commerce, Conversion, Dollar, Dress, Dresses, Economy, Employment, EU, Europe, Exchange, Exports, Factory, Fashion, Garments, GDP, Govt, Honduras, Imbalance, Incentives, Income, Indonesia, Industry, Inflation, Jobs, Knit, Loss, Monetary, Money, Nicaragua, Profit, revenue, Rupee, Srilanka, Tariffs, Tax, Textiles, Thirupoor, Thiruppoor, Thiruppur, Thirupur, Tirupoor, Tiruppoor, Tiruppur, Tirupur, Trade, US, USA | Leave a Comment »

Reserve Bank of India’s Loan Policy – Updates, Analysis, Options

Posted by Snapjudge மேல் மே 7, 2007

ரிசர்வ் வங்கியின் புதிய கடன் கொள்கை

எஸ். கோபாலகிருஷ்ணன்

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டுக்கான நிதி மற்றும் கடன் கொள்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி. ரெட்டி ஏப்ரல் 24-ம் தேதி அறிவித்தார்.

நிதித்துறையில் மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு அடுத்தபடியாக மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுவது ரிசர்வ வங்கியின் கடன் கொள்கையே. இது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கியின் நடைமுறையில் வரவேற்கத்தக்க மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தொழில் துறையினரின் தேவைகள், விலைவாசி நிலவரம், பணவீக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப, கடன் கொள்கையில் உடனுக்குடன் சிறு, சிறு மாற்றங்களை அறிவித்து விட்டு, தொலைநோக்கு மாற்றங்களை மட்டுமே அரையாண்டு நிதி மற்றும் கடன் கொள்கையில் அறிவிக்கத் தொடங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. இதனால், இப்போது நிதிக் கொள்கை அறிவிப்பில் பரபரப்பான அம்சங்கள் இடம்பெறுவதில்லை.

நிதி மற்றும் கடன் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டு, தொழில், விவசாயம், சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடன் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.

தற்சமயம், உயர்ந்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே அவசரத் தேவை. எனினும் அண்மையில் அறிவிக்கப்பட்ட கடன் கொள்கையில் ரிசர்வ் வங்கியின் பிரதானமான விகிதங்கள் மாற்றப்படவில்லை.

ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் 6 சதவிகிதமாகவே தொடர்கிறது. சி.ஆர்.ஆர். எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு 6.5 சதவிகிதமாகவே இருக்கும்.

அதேபோல், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால அவசரக் கடன்களுக்கு வட்டி விகிதம் 7.75 சதவிகிதமாகவே உள்ளது.

மாறாக, இந்த விகிதங்கள் உயர்த்தப்பட்டிருந்தால் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கு வட்டி உயர்த்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். சி.ஆர்.ஆர். எனப்படும் ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தில் அரை சதவிகிதம் உயர்த்தி இருந்தாலும், வங்கிகளின் நிதி ஆதாரத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முடக்கப்பட்டிருக்கும்.

அதே அளவுக்கு பொது மக்களுக்குக் கடன் கொடுப்பது குறைந்திருக்கும். ஆக, கடன்களுக்கு வட்டி விகிதம் உயராமலும், கடன்தொகை குறையாமலும் புதிய கடன் கொள்கை பார்த்துக் கொண்டது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், வளர்ச்சியின் வேகம் தடைபட்டுவிடக் கூடாது என்பதில் ரிசர்வ் வங்கி உறுதியாக இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, சி.ஆர்.ஆர். மற்றும் ரெப்போ விகிதம் (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால அவசரக் கடனுக்கான வட்டி விகிதம்) கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உயர்த்தப்பட்டது. எனவே அவற்றை மேலும் உயர்த்திக் கடன் பெறுவோர்களின் சுமையை இன்னும் அதிகரிக்க ரிசர்வ் வங்கி விரும்பவில்லை என்பது கண்கூடு.

அப்படியானால், இந்தப் புதிய நிதிக் கொள்கையில் என்னதான் சிறப்பு அம்சம்? நிதிக் கொள்கையில் அனைவரும் முக்கியமாக எதிர்பார்ப்பது ஒன்று உண்டு. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை குறித்து ரிசர்வ வங்கியின் கணிப்பு என்ன என்று அறிந்து கொள்வதுதான் அது. அந்தவகையில், ஜி.டி.பி. எனப்படும் நாட்டின் மொத்த உற்பத்தியின் மதிப்பு 2007 – 08-ஆம் ஆண்டில் 8.5 சதவிகிதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. அத்துடன், தற்சமயம் 6 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ள பணவீக்கம், 5 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதே ரிசர்வ் வங்கியின் குறிக்கோள்.

பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதலாண்டு தற்போது நடந்து வருகிறது. இந்த நிதி ஆண்டில் ஜி.டி.பி. 9 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும் என்பது இலக்கு. எனினும், ரிசர்வ் வங்கி 8.5 சதவிகிதமாக இருக்கும் என்று அடக்கி வாசிப்பதற்கு காரணம் என்ன?

உலக அளவில், நடப்பாண்டு வளர்ச்சி விகிதம் சற்று குறைவாகவே இருக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அடுத்து, இந்தியாவில் பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளின் பலன் வெளிப்பட கொஞ்சம் கால அவகாசம் தேவை.

கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வங்கி டெபாசிட்டுகள் 20 சதவிகிதமாகவும், வங்கிக் கடன்கள் 30 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளன. ஏற்கெனவே இப்படி அதிகரித்துள்ள விரிவான அடித்தளத்தில், மேலும் இதே அளவு வங்கி டெபாசிட்டுகள் அதிகரிக்கும் என்றும், வங்கிக் கடன்கள் 30 சதவிகிதம் உயரும் என்றும் எதிர்பார்க்க முடியாது. வங்கிக்கடன் 24 அல்லது 25 சதவிகிதமே உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிக் கடன் வட்டி விகிதம் உயர்ந்துள்ளதும் இதற்கு ஒரு காரணம். நல்லவேளையாக, ரூ. 20 லட்சத்துக்குக் குறைவான வீட்டுக் கடன்களுக்கு வட்டி உயராது. மாறாக, குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

மேலும், முதல்முறையாக, ரூ. 20 லட்சத்துக்குக் குறைவான வீட்டுக்கடன்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவு ரூபாயின் மதிப்பு வலுவடைந்துள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது நாம் இதற்காக பெருமிதம் கொள்ளக்கூடும்.

கச்சா எண்ணெய் உள்ளிட்ட நமது இறக்குமதிப் பொருள்களுக்குக் குறைந்த ரூபாய் கொடுத்தால் போதுமானது. ஆனால், இன்னொரு பக்கம், ரூபாயின் மதிப்பு வலிவடைவதால், நமது ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் குறையும். காரணம், அவர்களுக்குக் கிடைக்கும் டாலர்களின் மதிப்பு குறைகிறதல்லவா?

இது நமது ஏற்றுமதியை இரண்டு வகையில் பாதிக்கக் கூடும். ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் குறையும். இரண்டாவதாக, நஷ்டப்பட்டுக் கொண்டு ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற மனநிலை ஏற்படக்கூடும். இதனால் ஏற்றுமதி அளவு சரியும். ஏற்றுமதி குறைந்தால், தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும். இது தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும்.

இன்னொரு பக்கம், ஏற்றுமதியாகும் ஒரு பகுதி பண்டங்களின் மூலப்பொருள்கள் இறக்குமதி செய்தவை. இவற்றின் விலை குறைவதால் ஏற்றுமதியாளருக்கு வேறு ஒருவகையில் ஆதாயம் கிடைக்கத்தான் செய்கிறது. ஆகவே, ஏற்றுமதியையும், இறக்குமதியையும் இருவேறு கூறுகளாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

எப்போது ரூபாயின் மதிப்பு ஓர் அளவுக்கு மேல் உயரும்போது, மேற்கூறிய காரணங்களுக்காக, ரிசர்வ் வங்கி தலையிட்டு, அதனைச் சீர்படுத்த முனைவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படிச் செய்வதற்கு இதுவரை முன் வரவில்லை. இன்னும் காலம் கனியவில்லை என்று ரிசர்வ் வங்கி கருதுகிறதுபோலும்.

அன்னியச் செலாவணி தளத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி டெபாசிட்டுகளுக்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளது போன்ற மிகச் சிறிய அளவிலான செயல்பாடுகளை காண முடிகிறது. அதேபோல், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

அதிவேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா ஒன்று. இந்நிலையில் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இல்லாமல், விலைவாசியையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவதே புதிய நிதிக் கொள்கையின் நோக்கம் என்பது வெளிப்படை.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னாள் செனட் உறுப்பினர்.)

================================================

ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம்: குருமூர்த்தி வலியுறுத்தல்

திருப்பூர், மே 9: டாலர் வீழ்ச்சியால் பாதிப்பு ஏற்படுவதால், ஏற்றுமதியாளர்கள் ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை திருப்பூரில் ஏற்றுமதியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார். டாலர் வீழ்ச்சி காரணமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதுடன், தொடர்ந்து இந்நிலையில் ஏற்றுமதி செய்வதில் ஏற்றுமதியாளர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில், ஏற்றுமதியாளர்கள் கையாளவேண்டிய உத்திகள் குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், எஸ்.குருமூர்த்தி ஆலோசனை வழங்கினார்.

குருமூர்த்தி கூறியது: டாலர் வீழ்ச்சியை எதிர்பார்க்கவில்லை என ஏற்றுமதியாளர்கள் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. நம்நாட்டில், கடந்த ஒரு ஆண்டாக விலைவாசி உயர்ந்துள்ளது. இதற்கு பெட்ரோல் விலை உயர்வும் காரணமாக உள்ளது. நமது தேவையில் முக்கால் பங்கு பெட்ரோல் இறக்குமதி செய்கிறோம். பஸ் கட்டணம், உரம் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் பெட்ரோல் விலை உயர்வு பாதிக்கிறது.

ஆதாரமான பொருளாக இருக்கும் பெட்ரோல் விலை அதிகரிக்கும்போது, அது பொருளாதாரத்தை முழு அளவில் பாதிக்கிறது. பெட்ரோல் விலை 5% உயர்ந்தால், மற்ற பொருள்களின் விலை 10% வரை உயர்ந்துவிடுகிறது. பெட்ரோல் விலை உயர்ந்த நிலையிலும், நமது பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை இருந்தது. ஆனாலும் அரசு சரியாக நிர்வாகிக்காத காரணத்தால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. விலைவாசி உயரும் என ரிசர்வ் வங்கிக்கு முன்கூட்டியே தெரியும்.

கடந்த 2 மாதங்களில் டாலர் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் நம்நாட்டில் முதலீடு செய்வதும், ஏற்றுமதி அதிகரித்துள்ளதும், வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பும் பணத்தாலும் அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகமாக உள்ளது.

ரிசர்வ் வங்கி அதிக அளவில் டாலரை வாங்கியதன் காரணமாக நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்தது. தொழிலுக்கு தேவையான பணத்திற்கும் கூடுதலாக பணம் வரும்போது, அதை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கின்றனர். இப்படி, ரூ.2.60 லட்சம் கோடி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி அதிகம் இருப்பதால், அதை அமெரிக்காவிற்கு 2% அல்லது 2.5% என மிகக் குறைந்த வட்டிக்கு கடனாக தருகிறோம். இதனால் ரிசர்வ் வங்கிக்கு நஷ்டம்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அரசை சார்ந்திருக்கும் நிலை இனி இருக்கக்கூடாது. ஏற்றுமதியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடும் நிலை மாறி, இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அரசுக்கு ஆலோசனை சொல்கின்ற நிலைக்கு வரவேண்டும். இதற்காக, ஏற்றுமதியாளர்கள் சிந்தனைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். ஏற்றுமதி வர்த்தகத்தை டாலர் மதிப்பில் நிர்ணயித்து வர்த்தகம் செய்வதைவிட ரூபாய் மதிப்பில் நிர்ணயம் செய்து ஏற்றுமதியாளர்கள் வர்த்தகம் செய்ய வேண்டும் என்றார்.

Posted in Agriculture, Analysis, Banking, Banks, Biz, Bonds, Business, Central Bank, Commerce, Commodity, CRR, Currency, Deflation, Deposits, Dollar, Economy, Employment, Exchange, Export, Exports, FDI, Finance, Foreign, GDP, Growth, House, Housing, Imports, Industry, Inflation, Insurance, Interest, job, Loans, markets, MNC, Money, NRI, Planning, Policy, RBI, Real Estate, Recession, Reserve Bank, Rupee, Rupees, Scheme, SEZ, Shares, Stagflation, Stocks, Thiruppoor, Thiruppur, Thirupur, Tirupoor, Tirupur, Value, workers | Leave a Comment »