Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Thiruvengimalai’ Category

Notable Women series in Kumudham: Thiruvengimalai Sarvanan – Rukmani Arundale

Posted by Snapjudge மேல் ஜூலை 28, 2007

குமுதம்
மறக்க முடியாத மங்கைகள்
ருக்மணி அருண்டேல்
திருவேங்கிமலை சரவணன்

25.07.07  தொடர்கள்


‘‘எங்க வீட்டுப் பெண் பரதநாட்டியம் கத்துக்கிறா’’ _ பொது நிகழ்ச்சியில் பட்டுப்புடவை சரசரக்கும் பெண் தன் செல்ல மகளை இன்னொரு பெண்மணிக்கு பெருமையுடன் அறிமுகப்படுத்துவதைப் பார்க்கலாம். இன்று பரதநாட்டியம் கற்றுக்கொள்வது என்பது மிகப்பெரிய கௌரவமாகி விட்டது. குறிப்பாக நகரங்களில் மாலை வேலைகளில் பல வீடுகளில் ‘தக திமி’ ‘தகதிமி’ என்று ஜோராக சலங்கை ஒலி கேட்க முடிகிறது. அது ஒரு இதமான அனுபவம். சொல்லப்போனால் ‘என், பெண் பரதநாட்டியம் ஆடுவாள்’ என்பது பெண் பார்க்கும் படலத்தின் போது கூடுதல் தகுதியாகக் கருதப்படுகிறது. இன்று பரத நாட்டியம் ஒரு தெய்வீக கலையாக தமிழ்நாடு மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் ஊடுறுவி விட்டது:

இந்தக் கலைக்கு மிகப்பெரிய அந்தஸ்தை தந்து தெய்வீக நிலைக்கு உயர்த்திய பெருமைக்குச் சொந்தக்காரர்களில் முக்கியமானவர் ருக்மணி அருண்டேல் என்கிற அற்புதப் பெண்மணி!

‘‘பரதநாட்டியம் என்பது இந்திய பாரம்பரியத்தின் முக்கியமான அடையாளம்!’’ உலகத்தில் இருக்கிற அத்தனை கலை ஆர்வலர்களும் இப்படித்தான் சொல்வார்கள். ஆனால், முன்னொரு காலத்தில் பரதநாட்டியம் என்பது மிகப்பெரிய சமூக இழுக்காக கருதப்பட்டது. அந்தச் சூழலைப் புரிந்து கொண்டால்தான் ருக்மணி என்கிற சாதனைப் பெண்ணின் எதிர்நீச்சல் உங்களுக்குப் புரியும்!

‘கலா«க்ஷத்ரா’ என்ற சாம்ராஜ்யத்தை நிறுவி பரதநாட்டியத்துக்கு மறுபிறவி கொடுத்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் ருக்மணி அருண்டேல்.

நீலகண்ட சாஸ்திரி_சேஷம்மாள் தம்பதியினருக்கு 1904_ம் ஆண்டு பிப்ரவரி 29_ம் நாள் மதுரையில் பிறந்தவர் ருக்மணி. நீலகண்ட சாஸ்திரிகள் வடமொழியில் ஞானம் நிரம்பப் பெற்றவர். நிறைய வேதாந்தப் புத்தகங்கள் எழுதியவர்.

அந்தக் காலகட்டத்தில் பால்ய விவாகம்தான் நடைமுறையில் இருந்தது. சிறுமி ருக்மணிக்கும் குழந்தைத் திருமணம் நடத்த பெரியவர்கள் முற்பட்டார்கள். ஆனால், ருக்மணி ஸ்திரமாய் மறுத்து விட்டார். சின்ன வயதிலேயே கர்நாடக சங்கீதம் பயின்றார். அப்போதே அவருக்கு கலைகளின் மீது நாட்டம் வந்துவிட்டது.

ருக்மணியின் தந்தைக்கு சென்னையிலுள்ள தியாஸாஃபிகல் சொஸைட்டியில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ருக்மணிக்கு வயது ஏழு. தந்தையுடன் சேர்ந்து தியாஸாஃபிகல் சொஸைட்டியில் தானும் சேர்ந்து கொண்டார் ருக்மணி.

அங்கு அவர் வாழ்க்கை கலைகளை நோக்கித் திரும்புகிறது. வாழ்க்கையில் காதலும் வருகிறது. தியாஸாஃபிகல் சொஸைட்டியில் அருண்டேல் என்ற வெளிநாட்டுக்காரரும் பணியாற்றி வந்தார். அருண்டேல் தலை சிறந்த கல்வியாளர். ருக்மணி, அருண்டேல் இருவரின் மன எண்ணங்கள் ஒரே மாதிரியாக இருந்ததால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் தனது பதினாறாவது வயதில் திருமணம் செய்து கொண்டார். அருண்டேலுக்கு அப்போது வயது நாற்பது. பிறகு மும்பையில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்குப் பிறகு தன் கணவருடன் ருக்மணி நிறைய பயணங்களை மேற்கொண்டார். ஒவ்வொரு இடத்திலும் தென்படும் ரசனையான விஷயங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதில் ருக்மணி கெட்டிக்காரர். அப்படித்தான் ரஷ்ய ‘பாலே’ டான்ஸரான ‘அன்னாபாவ்லா’ வின் நடனம் ருக்மணியை ஈர்த்தது. 1928_ல் அன்னாபாவ்லாவின் நடனம் மும்பையில் நடந்தது. தன் கணவருடன் மும்பைக்குச் சென்று பார்த்தார். பிறகு ருக்மணியும், அருண்டேலும் மும்பையிலிருந்து கப்பல் மூலம் ஆஸ்திரேலியாவிற்குப் பயணமானார்கள்.

அதிர்ஷ்டவசமாய் அருண்டேல் தம்பதிகள் சென்ற அதே கப்பலில் ‘அன்னாபாவ்லா‘வும் பயணம் செய்து கொண்டிருந்தார். இதைத் தெரிந்து கொண்ட ருக்மணிக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. ‘அன்னாபாவ்லா’ வைச் சந்தித்து நடன விஷயங்களைப் பற்றி நிறைய பேசித் தெரிந்து கொண்டார்.

அப்போதுதான் ‘அன்னாபாவ்லா’ திடீரென்று ருக்மணியைப் பார்த்து, ‘‘நீங்கள் கலாரசனை உடையவராக இருக்கிறீர்கள். நடனத்திற்கேற்ற உடற்கட்டும் இருக்கிறது. நீங்கள் ஏன் டான்ஸ் கற்றுக் கொள்ளக் கூடாது?’’ என்று கேட்டதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய நடன குருவான ‘கிளியோநோர்டி’யை ருக்மணிக்கு ரஷ்ய நடனம் கற்றுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். ஆக, ருக்மணி முதன் முதலில் ரஷ்ய நடனத்தைத்தான் கற்றார். ‘‘ரஷ்ய பாலே நடனத்தைத் தொடர்ந்து நாட்டியமும் கற்றுக் கொள்ளுங்களேன்…’’ என்று அன்னா பாவ்லாவே ருக்மணிக்கு ஆலோசனை கொடுக்க, ருக்மணியின் ஆர்வம் பரதம் பக்கம் திரும்பியது. அந்தச் சமயத்தில் பரதநாட்டியம் இந்தியாவில் அவ்வளவு பிரபலம் கிடையாது. நாட்டியங்களை பெண்கள் ஆடுவது இழுக்கு என்கிற தவறான எண்ணம் அப்போது மக்களிடையே இருந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் 1933 மியூசிக் அகாடமியில் ‘சதிர்’ எனும் நடனக் கச்சேரியை பந்தநல்லூர் ராஜேஸ்வரி, ஜீவரத்தினம் சகோதரிகள் நிகழ்த்தினார்கள் ‘சதிர்’ நடனத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ருக்மணி அந்த நடனத்தைக் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டார்.

ஆனால், அவர் நினைத்த மாதிரி அவ்வளவு எளிதாக கற்றுக்கொள்ள முடியவில்லை. பல பரதநாட்டிய ஆசிரியர்கள், ருக்மணியைப் பார்த்து. ‘‘நீங்கள் எல்லாம் புதுமை, புரட்சி என்ற பேரில் வருவீர்கள். இதெல்லாம் கலைக்கு உதவாது’’ என்று அவரை ஏளனமாக விமர்சித்தார்கள். ஆனால், ருக்மணிக்கு இந்தக் கலையை எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம். பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் சிஷ்யை ஆனார். சிறப்பாகக் கற்றார்.

தியாஸாஃபிகல் சொஸைட்டியின் வைர விழா நிகழ்ச்சியில் சுமார் இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு முன்னிலையில் நடந்த பிரமாண்ட நடன நிகழ்ச்சியில் ருக்மணியின் பரதம் அரங்கேறியது. சீனிவாச சாஸ்திரி, ராமசாமி ஐயர், சிவஸாமி ஐயர் என்று ஏகப்பட்ட ஜாம்பவான்கள் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் ருக்மணியின் நடனத் திறமை பளீரென்று பளிச்சிட்டது.

ஜேம்ஸ் கஸின்ஸ் என்கிற பிரபலமான அயர்லாந்துக் கவிஞர் ருக்மணியின் அந்த நடனத்தை வெகுவாகப் பாராட்டினார். அது மட்டுமில்லாமல், ‘‘ருக்மணி தன்னுடைய இந்த அற்புதமான நடனத் திறமையை நாலு பேருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்காக ஒரு நடன மையத்தை ருக்மணி ஏற்படுத்த வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். இந்த வார்த்தைதான் ருக்மணிக்கு நடன மையத்தை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது.

நினைத்ததோடு மட்டுமில்லாமல் செயலிலும் சுறுசுறுப்பாக இறங்கினார் ருக்மணி. ஆரம்பத்தில் தான் ஆரம்பித்த நடனப் பள்ளிக்கு ‘இன்டர்நேஷனல் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ்’ என்று பெயர் வைத்தார். பல முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் நடனப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இதுவே பின்னர் கலா«க்ஷத்ராவாக உருப்பெற்றது.

ருக்மணியின் நடன குருக்களான பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும், அவரது மருமகனான சொக்கலிங்கப் பிள்ளையும் தான் கலா«க்ஷத்ராவின் முதல் நடன ஆசிரியர்கள். ஆரம்பத்தில் கலா«க்ஷத்ராவில் நடனம் கற்றுக் கொள்ள வந்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் நான்குதான்.

துவக்க காலத்தில் ருக்மணி தேவியின் நடனத்திற்கு டாக்டர் பத்மாஸினியும், கமலா ராணியும்தான் பாடுவார்களாம். அப்போது வீடு வீடாகச் சென்று டிக்கெட்டுகளை விற்று நடன நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். ருக்மணி தேவியின் ஒரே குறிக்கோளே ‘நடனத்தில் இருக்கிற சர்ச்சைக்குரிய சில விஷயங்களை நீக்கினாலே மக்கள் எல்லோருமே நடனத்தை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். நடனத்துக்கென்று ஒரு புனிதத் தன்மை இருக்கிறது. அதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்’ என்பதுதான்.

கொஞ்சம், கொஞ்சமாக நடனமும் ஓர் அற்புதமான கலைதான் என்பதை ருக்மணி அருண்டேல் எல்லோருக்கும் புரிய வைத்தார். கலா«க்ஷத்ராவை ருக்மணி தேவி கலைகளின் பிறப்பிடமாகவே நினைத்தார். அதனால்தான் கலா«க்ஷத்ராவில் நடனத்திற்கு மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளுக்கும் முக்கியத்துவம் தந்தார். பல்வேறு சமூகப் பணிகளிலும் கலா«க்ஷத்ரா ஈடுபட்டது.

ருக்மணி அருண்டேல் தமிழ் மொழி மேல் அளவு கடந்த பற்று வைத்திருந்தார். உ.வே.சா. கண்டெடுத்த ஓலைச் சுவடிகளையெல்லாம் ஒன்று திரட்டி ‘டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் லைப்ரரி’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் தமிழ் மக்களுக்குக் கிடைத்திட வழி செய்தார்.

1939_ல் மரியா மாண்டிஸோரி வரவழைத்து குழந்தைகள் பள்ளிகளை இந்தியாவில் பல இடங்களிலும் துவக்கினார். 1945_ல் ருக்மணியின் கணவர் அருண்டேல் இறந்த பிறகும் கூட இவரது சமூகப் பணிகள் ஒளிவிட்டுப் பிரகாசித்தன. பரத நாட்டியக் கலைஞர்களுக்கான ஆடைகளைச் சீரமைத்த பெருமை ருக்மணி அருண்டேலுக்கு உண்டு. நடனத்துக்காகவே பாடுபட்ட ருக்மணி விலங்குகளின் நேசிப்பாளர். பெண் குலத்திற்கே ஒரு ரோல்மாடலாக விளங்கிய இவர். தனது 82வது வயதில் 1986_ல் மறைந்தார். பரதநாட்டியத்தின் ஒவ்வொரு அசைவும், அந்த மகா மேதையை உச்சரித்துக் கொண்டே இருக்கும்!.

Posted in Arundale, Biography, Biosketch, Faces, Females, Kumudam, Kumudham, Notable, Notes, people, Rukmani, Rukmani Arundale, Sarvanan, Series, She, Thiruvengimalai, Thiruvenkimalai, Women | 1 Comment »

Thiruvengimalai Saravanan: Thillaiyaadi Valliammai (Notable Women Series in Kumudham)

Posted by Snapjudge மேல் ஜூலை 7, 2007

குமுதம்
மறக்க முடியாத மங்கைகள்
தில்லையாடி வள்ளியம்மை

திருவேங்கிமலை சரவணன்

போராளிகளில் எத்தனையோ வகை உண்டு. அதிலும் பெண் போராளிகளின் வாழ்க்கை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அதில் மிகவும் உருக்கமானது தில்லையாடி வள்ளியம்மையின் கதை. தியாகம், லட்சியம், அர்ப்பணிப்பு இந்த மூன்று வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்ல வேண்டுமென்றால் அதற்கு அவருடைய பெயர் ஒன்று போதும்.

தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள சிறிய ஊர்தான் தில்லையாடி. அதில் வசித்து வந்த ஜானகி என்கிற பெண்மணியை மணம் முடித்தார். பாண்டிச்சேரியைச் சேர்ந்த முனுசாமி என்கிற இளைஞர். நெசவுதான் அவர்களின் தொழிலாக இருந்தது. வாழ்க்கை ஏதோ சுமாராகப் போய்க் கொண்டிருந்தது. அது பிரிட்டிஷ் ஆட்சிக்காலம். திடீரென்று இங்கிலாந்திலிருந்து துணி வகைகள் இறக்குமதியானதால் உள்ளூர் நெசவுத் துணிகளுக்கு மவுசு குறைந்தது. முனுசாமியின் குடும்பமும் வறுமையில் வீழ்ந்தது. செய்வதறியாது தவித்தார் முனுசாமி.

அவரைச் சந்தித்த ஒரு கங்காணி (வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் ஏஜெண்ட்) “தென்னாப்பிரிக்காவுக்கு போ, அங்கே சுகமாக வாழலாம். நிலம் வாங்கலாம், வீடு வாங்கலாம்” என்று ஆசை காட்டினார். முனுசாமியும் கையிலிருந்த பணத்தை எல்லாம் புரட்டிக் கொடுத்து கர்ப்பிணியாக இருந்த தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு கப்பலேறினார்.

தென்னாப்பிரிக்காவில் கரை இறங்கி ஜோகன்ஸ்பர்க் நகரத்தில் சிறிய உணவு விடுதியைத் தொடங்கினார். நாட்கள் செல்லச் செல்லத்தான் கறுப்பர்களுக்கும் இந்தியர்களுக்கும் தென்னாப்பிரிக்கா எப்படிப் பட்ட நரக பூமி என்பது அவர்களுக்குப் புரிந்தது. தென்னாப்பிரிக்காவின் கறுப்பர் இனத்து மக்கள் தங்களை அடிமையாக்கிச் சுரண்டிய வெள்ளையர்களிடம் மோதல் போக்கைக் கொண்டிருந்ததால் வைரச் சுரங்கங்களில் வேலை செய்ய மலிவான சம்பளத்துக்கு இந்தியர்களை, குறிப்பாக தமிழர்களை, குடியமர்த்திக் கொண்டிருந்தார்கள் வெள்ளையர்கள்.

ஆனால் அவர்களின் உரிமைகளைப் பறித்து, சுகாதாரமற்ற இழிவான வாழ்க்கை நிலைக்குத் தள்ளி, இனரீதியாக ஒதுக்கி வைத்து மிக மோசமாக நடத்தினார்கள். அதையெல்லாம் பார்த்து முனுசாமிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போதுதான் 1898_ம் வருடம் மகளாகப் பிறந்தார் வள்ளியம்மை. வெள்ளையர்கள் தமிழர் களைப் புழு பூச்சிகளை விடக் கேவலமாக நடத்தியதைக் கண்டவாறு வளர்ந்தாள் வள்ளியம்மை.

வெள்ளையர்களால் புறக்கணிக்கப்பட்ட சேரிப் பகுதியில் வளர்ந்த வள்ளியம்மைக்கு, நாமும் மனிதர்கள்தானே, நம்மை ஏன் இப்படி மிருகங்களுக்கும் கீழாக நடத்துகிறார்கள் என்பதே புரியாமல் இருந்தது. இந்திய வம்சாவளியினர் அங்கே வாழ வேண்டுமானால் 3 பவுண்ட் தலை வரி கட்ட வேண்டும், அனுமதியின்றி வெள்ளையர் பகுதிக்குள் நுழையக்கூடாது. சிறுவர்கள் வெள்ளயர் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பக்கமே செல்லக் கூடாது. வாக்குரிமை கிடையாது. வெள்ளை எஜமானர்கள் அவர்களை அடிக்கலாம், உதைக்கலாம். என்ன கொடுமை செய்தாலும் யாராலும் எதையும் கேட்க முடியாது.

இந்த நிலையில்தான் இந்தியர்களின் விடிவெள்ளியாக அங்கே தோன்றினார் காந்திஜி. ஒரு வழக்கு விஷயமாக தென்னாப்பிரிக்கா வந்தவர் அவர்களின் நிலை கண்டு வருந்தி, அவர்களுக்காகப் போராட முடிவு செய்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார். பல போராட்டங்களை சாத்வீகமான முறையில் போராட ஆரம்பித்திருந்தார். வெள்ளையர்களின் கறுப்புச் சட்டத்தை எதிர்த்து அவர் அங்கே நடத்தத் துவங்கியிருந்த போராட்டத் தீ இந்தியர்களிடையே காட்டுத் தீ போல் பரவிக் கொண்டிருந்த நேரம் அது. சிறுமி வள்ளியம்மை தன் தாய் தந்தையருடன் காந்திஜியின் போராட்டங்களில், கூட்டங்களில் கலந்து கொண்டாள். காந்திஜியின் போராட்ட குணம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

1913_ம் வருடம் கேப்டவுன் நீதி மன்றம் ஒரு விபரீதமான சட்டத்தைப் பிறப்பித்தது. “கிறிஸ்துவச் சட்டப்படியும் திருமணப் பதிவாளர் சட்டப்படியும் நடக்காத எந்தத் திருமணமுமே செல்லாது” என்கிற அந்த சட்டம் இந்தியர்களை நிலைகுலையச் செய்தது. இதனால் இந்திய தமிழ்ப் பெண்கள் தங்களின் மனைவி என்கிற சட்டபூர்வமான அந்தஸ்தை இழந்தார்கள். குழந்தைகள் தங்களின் வாரிசு உரிமையை இழந்தார்கள். இந்த கொடுஞ்சட்டத்தை எதிர்த்து காந்திஜி பெரும் போராட்டத்தை அறிவித்தார்.

அப்போது வள்ளியம்மைக்கு வயது 16. தன்னைப் பெற்றவர்களையே கூட அப்பா, அம்மா என்று அழைக்க முடியாத படி மாற்றிய அந்தக் கொடு மையை எதிர்த்து காந்தியடிகளின் அறப்போராட்டத்தில் சேர்ந்தாள் வள்ளியம்மை. தன் தந்தை உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அதைப் பொருட்படுத்தாமல் களத்தில் குதித்தாள்.

1913_ம் வருடம் அக்டோபர் மாதம் 29_ம் தேதி ஜோகன்ஸ்பர்க் நகரத்திலிருந்து நியூகாசில் நகருக்கு ஒரு பெண்கள் சத்தியாகிரகப் படை புறப்பட்டது. அதில் காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயுடன் வள்ளியம்மையும் கலந்து கொண்டாள். இந்தப் படை செய்த பிரசாரம் தொழிலாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வெலை நிறுத்தத்தில் போய் நின்றது. ஊர் ஊராகச் சென்று சுரங்கத் தொழிலாளர்களைச் சந்தித்து வள்ளியம்மை செய்த பிரசாரத்தைக் கண்டு காந்திஜி உள்ளம் பூரித்தார். தடைகளை மீறி அனுமதி இல்லாத இடங்களுக்குச் சென்று வந்ததற்காக வெள்ளையர்கள் போராட்டக்காரர்களைக் கைது செய்தனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 16 வயது வள்ளியம்மையும் கடுங்காவல் தண்டனையை ஏற்று சிறைக்குச் சென்றார். கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு சிறையில் அளிக்கப்பட்ட வேலைகளும் தண்டனைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. உரிய அபராதத் தொகை கட்டினால் விடுதலை செய்வோம் என்று வெள்ளையர்கள் சொன்னர்கள். ஆனால் வள்ளியம்மை மறுத்து விட்டாள். மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை.

சிறையில் வள்ளியம்மையின் உடல் நிலை மிகவும் மோசமாகியது. Êசத்தியாகிரக போரட்டத்தில் இளமைத் துள்ளலோடு மிடுக்குடன் நடந்து சென்ற வள்ளியம்மை இப்போது கிழிந்து போன வாழை நாராய் நிலைகுலைந்து போனாள். இதற்கு மேலும் சிறையில் இருந்தால் உயிருக்கே ஆபத்து என்கிற நிலையில் விடுதலை செய்யப்பட்டாள். ஒரு ஜமுக்காளத்தில் துணியோடு துணியாய் கிடத்தப்பட்டிருந்த எலும்புக் கூடு போன்ற வள்ளியம்மையைப் பார்த்து காந்திஜி மனம் வருந்தி கண்ணீர் விட்டார். “வள்ளியம்மா, சிறை சென்றதற்காக இப்போது நீ வருந்துகிறாயா?’’ என்று குரல் கம்மக் கேட்டார். வள்ளியம்மையிடமிருந்து பளிச்சென்று பதில் வந்தது. “வருத்தமா? இப்போது கூட இன்னொரு முறை சிறை செல்ல நான் தயார். தாய் நாட்டிற்காக உயிர் கொடுக்க விரும்பாதவர் யார் இருப்பார்?’’ நெகிழ்ந்து போனார் காந்திஜி.

ஆனால் வள்ளியம்மையின் உடல் நிலை மேலும் மேலும் மோசமடைந்தது. நோயிலிருந்து மீள முடியாமல் 22.2.1914_ம் வருடம் திரும்பி வர முடியாத மரணத்தை அடைந்தாள் வள்ளியம்மை. காந்திஜி உள்ளிட்ட எல்லா தலைவர்களும், கறுப்பு இனத்தவர்களும் கண்ணீர் விட்டனர். ஜோகன்ஸ்பர்க் நகரத்தில் ஒரு நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்த காந்திஜி, “இந்த நகரத்தின் முக்கிய அம்சமே இது வள்ளியம்மா பிறந்த இடம் என்பதுதான். அந்த இளம் பெண்ணின் உருவம் என் கண் முன்னாலேயே நிற்கிறது. சத்தியத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவள் வள்ளியம்மை” என்று மனம் உருகிப் பேசினார். வள்ளியம்மையின் உயிர்த் தியாகம் வீண் போகவில்லை. போராட்டத்துக்கு பயந்து கறுப்புச் சட்டத்தை வாபஸ் பெற்றது வெள்ளை அரசாங்கம்.

அதன் பிறகு இந்திய விடுதலைப் போராட்டத்துக்குத் தலைமை ஏற்க இந்தியா திரும்பிய காந்திஜி தன்னுடன் வள்ளியம்மையின் நினைவுகளையும் தாங்கி வந்தார். பல பொதுக்கூட்டங்களில் வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி உணர்ச்சிகரமாகக் குறிப்பிட்டார். தன்னுடைய புத்தகங்களில், கட்டுரைகளில் எல்லாம் அந்த இளம் பெண்ணிடம் இருந்த லட்சிய வேட்கை பற்றி பக்கம் பக்கமாக எழுதினார். தமிழ்நாட்டுக்குப் பயணம் வந்தபோது வள்ளியம்மையின் சொந்த ஊரான தில்லையாடிக்கு வந்து அந்த மண்ணை வணங்கிப் போற்றினார்.

இன்றைக்கும் தில்லையாடி கிராமம் தன் மண்ணின் மகளான வள்ளியம்மையின் நினைவுகளைப் பெருமையுடன் தாங்கியபடி இருக்கிறது.

நன்றி : த. ஸ்டாலின்
குணசேகரன் தொகுத்த ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ (எஸ். சோமசுந்தரன்), நிவேதிதா
பதிப்பகம் வெளியீடு.

Posted in Biosketch, Faces, Kumudham, Life, people, Saravanan, Thillaiaadi, Thillaiyaadi, Thillaiyadi, Thiruvengimalai, Valliammai, Valliyammai, Women | Leave a Comment »

Thiruvengimalai Saravanan – Soolamangalam Sisters (Rajalakshmi): Notable Women Series in Kumudam

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2007

‘‘சஷ்டியை நோக்க சரவண பவனார்

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்’’

நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் கந்த சஷ்டிகவசத்தை அதிகாலையில் கேட்கும்போது அந்த முருகனே நம்மை நேரில் வந்து தட்டி எழுப்புவது போன்று ஒரு சிலிர்ப்பான உணர்வு ஏற்படும். வரிகள் மட்டுமல்ல, கவசத்தை உச்சரிக்கும் அந்தத் தேன் குரல்களும் நம்மை இனம்புரியாத ஒரு பரவச நிலைக்குக் கொண்டு செல்வது நிஜம்.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் காதுகளில் ஒலிக்கும் அமுதகீதம் அது. பாடலைக் கேட்கும்போதே சூலமங்கலம் சகோதரிகள் ஜெயலட்சுமியும், ராஜலட்சுமியும் மின்னலாக நம் நினைவிற்கு வருவார்கள். சமயத்தில் அது இரண்டு குரலா அல்லது ஒரே குரலா என்ற சந்தேகம் கூட ஏற்படும். அத்தனை ஸ்ருதி சுத்தம். அத்தனை புரிந்துகொள்ளுதல்! அது கர்நாடக சங்கீதமாக இருந்தாலும் சரி, மெல்லிசை பக்திப் பாடல்களாக இருந்தாலும் சரி இவர்கள் குரலில் ஒரு தெய்வீகத் தன்மை இருக்கும்.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் சூலமங்கலம்! அந்த ஊர் கர்ணம் ராமசாமி ஐயர் _ ஜானகி தம்பதிக்குப் பிறந்த சகோதரிகள்தான் ராஜலட்சுமியும், ஜெயலட்சுமியும். மூத்தவர் ஜெயலட்சுமி. இளையவர் மறைந்த ராஜலட்சுமி. சகோதரிகளில் கடைக்குட்டி சரஸ்வதி! தங்கள் சங்கீத வாழ்க்கையில் இவர்கள் குடும்பம் சந்தித்த கடுமையான போராட்டங்களும், சோகமான நெருக்கடிகளும் ஏராளம்! ஆனால், எந்தக் கட்டத்திலும் அவர்கள் தாங்கள் நேசித்த சங்கீதத்தை விட்டுவிடவில்லை. எட்டு வயதில் குடும்பச் சுமையை சுமக்கப் போகிறோம் என்பது சின்னப் பெண் ராஜலட்சுமிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!

மாயவரம் பக்கத்திலுள்ள திருச்செம்பொன்பள்ளி மாரியம்மன் இவர்கள் குலதெய்வம். அங்கு சின்ன வயதில் ராஜலட்சுமி கூட்டத்தில் காணாமல் போய்விட்டாராம். உறவினர்கள் அனைவரும் ஆளுக்கொரு மூலையில் தேடியபோது, ஒரு கிராமத்தின் வயல் பரப்பில் ஒரு பெண், குழந்தை ராஜலட்சுமியை கையில் பிடித்து கொண்டிருந்தாராம். ஓடி குழந்தையை எடுத்து அணைத்துக்கொண்டபோது அந்த அம்மாளைக் காணவில்லை. மாரியம்மனே தன் குழந்தையைக் காப்பாற்றியதாக உணர்ந்த அவர்கள், குழந்தை ராஜலட்சுமியை ‘மகமாயி பிச்சை’ என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

சூலமங்கலம் கிராமத்தில் வருடத்திற்கு ஒருமுறை ராதா கல்யாண உற்சவம் பத்து நாட்கள் அமர்க்களமாக நடக்கும். இந்த விழாவில் பாட, பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரிய பெரிய சங்கீத மேதைகள் வருவார்கள். இவர்களது கச்சேரிகளைக் குழந்தைகள் ஜெயலட்சுமியும், ராஜலட்சுமியும் தனது பெற்றோருடன் சென்று கேட்பது வழக்கம். இதனால் இவர்கள் சின்ன வயதிலேயே இசையால் ஈர்க்கப்பட்டார்கள். பெற்றோர் குழந்தைகளின் இசை ஆர்வத்தைப் பார்த்து கிராமத்தில் இருந்த வைத்தியநாத பாகவதரிடம் சங்கீதம் கற்க அனுப்பி வைத்தார்கள்.

குட்டிப் பெண் ராஜலட்சுமியின் இசை ஞானத்தை அப்போதே பலர் பிரமிப்புடன் பார்த்தனர். ஏழு வயதிலேயே மேடை ஏறி கச்சேரி செய்தார். சுற்று வட்டாரங்களில் குழந்தையின் பாடலைக் கேட்க பலர் ஆர்வத்தோடு வந்தார்கள். எட்டு வயது இருக்கும்போது ராஜலட்சுமியின் தந்தை மரணம் அடைந்தபோது, அந்தக் குடும்பம் நிலை குலைந்துபோனது. வீட்டில் எல்லாருமே சின்னஞ்சிறுசுகள்! ராஜலட்சுமியின் தங்கை சரஸ்வதிக்கு ஆறு வயது. தம்பி சேதுராமனுக்கு மூன்று வயது. நான்கு குழந்தைகளை வைத்துக்கொண்டு, என்ன செய்வதென்று புரியாமல் ராஜலட்சுமியின் தாயார் ஜானகிஅம்மாள் தவித்துப் போனார். அந்த நேரம் அவருடைய சகோதரர் ராணுவத்தில் உயர்பதவியில் இருந்தார். குழந்தைகளை வைத்துக்கொண்டு தனது சகோதரி தடுமாறுவதைப் பார்த்து சகோதரர் தனது வேலையை ராஜினாமா செய்தார். உடனே சூலமங்கலத்திலுள்ள வீடு, நிலங்களை விற்று தன் சகோதரி குடும்பத்தாரை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார். சென்னை மைலாப்பூரிலுள்ள நாட்டு சுப்புராய முதலி தெருவில் குடியேறினார்கள்.

இதனால் ராஜலட்சுமிக்கு ஸ்கூல் படிப்பு பாதியோடு நின்றது. சென்னையில் வைத்தியநாத அய்யர், நாரதர் ஸ்ரீனிவாசராவ் ஆகிய இருவரும் அந்தக் குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்தனர். சகோதரிகள் இருவரையும் பத்தமடை கிருஷ்ணனிடம் (பாரதியார் மருமகன்.) முறைப்படி சங்கீதம் கற்க வைத்தார். ஏறக்குறைய பத்து ஆண்டுகள் கற்றுக்கொண்டனர். மாலை நேரங்களில் சின்னச் சின்ன கோயில்களில் ராஜலட்சுமியின் கச்சேரி நடக்கும். கூடவே அக்காள் ஜெயலட்சுமியும் சேர்ந்து பாடுவார். சிறுமி ராஜலட்சுமி பாடியது அனைவரையும் கவர்ந்தது. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கச்சேரிகளில்கூட பாடும் வாய்ப்புக் கிட்டியது. கச்சேரிகள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றினார்கள். கூடவே கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் புகழ் பரவ ஆரம்பித்தது. குழந்தைகளின் பாட்டைக் கேட்டு பாராட்டாதவர்களே இல்லை.

ஒருமுறை நாரதர் சீனிவாசராவ் நடத்திய கண்காட்சியில் சூலமங்கலம் சகோதரிகள் பாடினார்கள். அப்போதுதான் சிறையிலிருந்து வெளியே வந்திருந்த தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் இவர்களின் கச்சேரியைக் கேட்க வந்திருந்தார்கள். சகோதரிகள் பாடும் திறமையைக் கண்டு அசந்து போய்விட்டார்களாம். பாகவதர், சிறுமி ராஜலட்சுமியை அழைத்து பல தீட்சிதர் கிருதிகளைப் பாடச் சொல்லிக் கேட்டு ஆனந்தப்பட்டார். பி.யூ.சின்னப்பா தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகளின்போது சிறுமி ராஜலட்சுமியை அழைத்து, அவரைப் பாடச்சொல்லி, தான் கஞ்சிரா வாசிப்பது வழக்கமாகவே ஆகிவிட்டது.

லேனா செட்டியார் தயாரித்த ‘கிருஷ்ணபக்தி’ (1948) படத்தில் வரும் ‘கடவுளைக் கண்டேன், கண்ணன் மேல் காதல் கொண்டேன்’ என்ற பாடல்தான் ராஜலட்சுமி பாடிய முதல் சினிமா பாடல். அப்போது அவருக்கு வயது பன்னிரண்டு. அந்த வயதில் அவருக்கிருந்த ஞானமும் மனோதைரியமும் பலரைக் கவர்ந்தது. இதைத் தொடர்ந்து பல பாடல்களுக்குப் பாடும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன.

‘கொஞ்சும் சலங்கை’யில் ‘காணக் கண் கோடி வேண்டும்’, ‘படிக்காத மேதை’யில் ‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா…’ ‘குங்குமம்’ படத்தில் ‘குங்குமம், மங்கள மங்கையர் குங்குமம்..’ என்று நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடி தமிழ்த் திரை இசை உலகிற்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தார்.

1957_ல் ராஜலட்சுமிக்குத் திருமணம் நடந்தது. அப்போது சினிமா துறையில் உதவி இயக்குநராக இருந்த பாலகிருஷ்ணனைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அடுத்த ஆண்டே ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையனின் பெயர் முரளி.

பழனியில் பங்குனி உத்திரம் தங்கத்தேர் அன்று இவர்கள் கச்சேரி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். ‘பழனி என்னும் ஊரிலே பழனி என்னும் பேரிலே, பவனி வந்தான் தேரிலே, பலனும் கண்டான் நேரிலே…’ என்று பாடும்போது தங்கத்தேரில் சரியாக முருகன் உலா வருவாராம். பக்தர்கள் இவர்கள் பாடலையும் முருகனையும் ஒரு சேர தரிசிப்பதைப் பாக்கியமாகக் கருதினார்கள்.

‘முருகனுக்கொரு நாள் திருநாள்’ உள்ளிட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை தன் சகோதரியோடு பாடியிருக்கிறார் ராஜலட்சுமி. ‘தேவரின் தெய்வம்’ படத்தில் ‘வருவான்டி, தருவான்டி’ பாடல்தான் ராஜலட்சுமி பாடிய கடைசி சினிமா பாடல்.

கந்தசஷ்டி கவசத்தை ராஜலட்சுமி, தன் சகோதரி ஜெயலட்சுமியுடன் பாடிப் பதிவு செய்து வெளியிடவேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால், பல கிராமபோன் ரிக்கார்டு கம்பெனிகள் முதலில் மறுத்தன. ‘‘ஓதுவார்கள் பலர் பாடியும் அது மக்களைச் சரியாக சென்றடையவில்லை. வேண்டாம் வீண் முயற்சி’’ என்றார்கள். ஆனால் ராஜலட்சுமி விடவில்லை. அக்கா ஜெயலட்சுமியுடன் சேர்ந்து இந்த கந்தசஷ்டி கவசத்திற்கு எப்படி டியூன் போட்டுப் பாடினால் நன்றாக இருக்கும் என்று யோசித்து முதலில் ‘ஆபேரி’ அடுத்து ‘சுப பந்துவராளி’. அதனைத் தொடர்ந்து ‘கல்யாணி’. இறுதியாக ‘தோடி’. இப்படி நான்கு ராகத்தில் பாடல் பாடப்பட்டு 1970_ல் ரிக்கார்டு செய்யப்பட்டது. முதலில் 500 எல்.பி. ரிக்கார்டுதான் போடப்பட்டது. பிறகு, அதுவே ரிக்கார்டு விற்பனையில் மிகப் பெரிய சாதனையாக மாறிவிட்டது.

1992_ல் ஜூன் மாதம் மஞ்சள் காமாலை நோய் வந்து சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ராஜலட்சுமி. சிகிச்சை பலனளிக்காமல் தனது 54 வயதில் ராஜலட்சுமி மரணம் அடைந்தார்.

மந்தைவெளியில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில்தான் இன்றைக்கும் ராஜலட்சுமியின் அக்காள் ஜெயலட்சுமியும், தங்கை சரஸ்வதியும் வாழ்கிறார்கள். ‘‘தங்கை ராஜலட்சுமி இறந்தபிறகு நான் பாடுவதையே நிறுத்திவிட்டேன். சின்ன வயசிலிருந்தே அவளுக்கு அவ்வளவு இசைஞானம். சகோதரிகளுக்குள் சண்டை போட்டுக் கொண்டதே இல்லை. அவள் அடிக்கடி என்னைப் பார்த்துச் சொல்லுவாள், ‘நீ இராமனாக நடந்துகொண்டு இருக்கிறே… நான் சீதையாகப் பின் தொடர்வேன்’ என்பாள். இப்போது எனக்கு முன்னால் சென்றுவிட்டாள்’’ என்றபோது குரல் கரகரத்தது. ‘‘கந்த குரு கவசம்’ ரிக்கார்டு செய்து கொண்டு இருந்தோம். இது கேசட்டில் கந்த சஷ்டி கவசத்திற்கு அடுத்த பக்கம் வருவது. இருவரும் ஒரு பத்து பன்னிரண்டு வரி பாடியிருப்போம். திடீரென்று ராஜலட்சுமிக்கு வீரஆவேசம் வந்துவிட்டது. தனியாகவே பாட ஆரம்பித்தாள். நான் பாடுவதை நிறுத்திக்கொண்டேன். இறுதியில் முடிக்கும்போது சேர்ந்தே பாடிமுடித்தோம்’’ என்று பழைய நினைவலைகளில் மூழ்கிவிட்டார் ஜெயலட்சுமி.

ஜெயலட்சுமிக்கும் சரஸ்வதிக்கும் குழந்தை பிராப்தம் இல்லை. ராஜலட்சுமியின் மகன் முரளியைத்தான் தங்கள் மகனாக நினைக்கிறார்கள். முரளி_ வசந்தி தம்பதியருக்கு ஒரே பையன் விஷால். இன்ஜினீயரிங் படிக்கிறார்.

நாம் விடைபெறும் நேரம் ஜெயலட்சுமியிடம், ‘‘ராஜலட்சுமியுடன் சேர்ந்து பாடிய திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் பாடலை எங்களுக்காகப் பாடுங்களேன்’’ என்றபோது சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாடினார். பல்லவியை முடித்துவிட்டு, அனுபல்லவியில் ‘‘பழனியிலே இருக்கும் கந்தப்பழம்! உன் பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்!’’ என்கிறபோது அவர் குரல் உடைகிறது. ‘‘ராஜலட்சுமி இந்த இடத்தில் என்னமாய் பாடுவா!’’ என்று சொல்லும்போது, ஜெயலட்சுமியின் கண்களில் நீர் முட்டுகிறது. அதற்குமேல் அவரால் பாட முடியவில்லை. அவர்கள் மட்டுமே உணரக்கூடிய பாசம் அது.

Posted in Audio, Biography, Biosketch, Cinema, Faces, Jayalakshmi, Kandar, Kandha, Kavacam, Kavacham, Kavasam, Kumudam, Lady, Movies, music, people, Playback, Rajalakshmi, Refer, Reporter, Saravanan, Sashti, Series, She, Singer, Sisters, Soolamangalam, Soolamankalam, Sulamangalam, Sulamankalam, Talent, Thiruvengimalai, Women | 4 Comments »

Kumudhini: Notable Women series in Kumudham: Thiruvengimalai Sarvanan

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

குமுதம் ரிப்போர்ட்டர்
மறக்க முடியாத மங்கைகள்
குமுதினி
திருவேங்கிமலை சரவணன்

1934. அன்றைய ஆனந்த விகடனில் ‘குமுதினி’ என்ற நாவல் வெளிவந்தது. தாகூர் எழுதிய கதையின் தமிழாக்கம்தான் அது. அந்த நாவல் கொளுத்திப்போட்ட தீப்பொறி வெளிச்சத்தில் பெண் சமுதாயமே விழித்துக் கொண்டது. பெண்களுக்கு அவர்கள் பெறும் தாய்மையே ஒரு சிறைவிலங்காக மாறும் அவலத்தை எதிர்த்துப் போராடும் ஒரு பெண்ணின் கதை இது.

பெண்களைப் படிக்கவிடாமல், அடக்கி ஒடுக்கி வைத்திருந்த காலகட்டத்தில் இப்படியரு நாவல் வந்தது, பலரை உணர்வு கொண்டு எழச் செய்தது.

பெண்ணிய சிந்தனையாளர்கள் இந்நாவலை தமிழில் எழுதிய பெண்ணை வியந்து பார்த்தார்கள். தொடர்ந்து அவர் எழுதிய பல கதைகளிலும் கட்டுரைகளிலும் காந்தியமும் பெண்ணியமும் ஆட்சி செய்ததைக் கண்டு தேடிப்பிடித்துப் படித்தார்கள்.

அந்தப் பெண்ணின் பெயர் ‘குமுதினி’. இயற்பெயர் ரங்கநாயகி. நாவலில் வரும் கதாநாயகி ‘குமுதினி’யின் பெண்ணிய போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு, தன் பெயரை ‘குமுதினி’ என்றே மாற்றிக் கொண்டவர்.

ரங்கநாயகியின் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாச்சாரியார், லக்ஷ்மி தம்பதியினருக்கு மகளாக, 1905, நவம்பர் மாதம் இருபத்து மூன்றாம் தேதி பிறந்தவர். இவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள், மூன்று சகோதரர்கள். நல்ல வசதியான குடும்பம். படித்தவர்கள் நிறையப் பேர் அந்தக் குடும்பத்தில் இருந்தார்கள். ஆசாரமான குடும்பம்.

பெண்களைப் படிக்க வைக்காமல், வீட்டில் முழுநேர வேலைக்காரியாகவும், திருமணத்திற்குப் பிறகு அவர்கள் குழந்தை பெற்றுத்தரும் இயந்திரமாகவும் கருதப்பட்ட காலத்தில் பிறந்தவர் ரங்கநாயகி.

பெண்களை பள்ளிக்கு அனுப்புவது வழக்கமில்லாமல் இருந்ததால், ரங்கநாயகியின் தந்தை அவரை பள்ளிக்கு அனுப்பாமல் ஆசிரியர் ஒருவரை வரவழைத்து தமிழும், சமஸ்கிருதமும் கற்றுக் கொடுத்தார். பாடம் பயின்ற அத்தனை மாணவிகள் மத்தியில் ரங்க நாயகியின் அறிவாற்றலையும், கல்வி கற்பதில் உள்ள ஆர்வத்தையும் கண்டு ஆசிரியர் மட்டுமல்ல, பெற்றோரும் சந்தோஷப்பட்டார்கள். ஸ்ரீனிவாச்சாரியார் சட்டம் பயின்றவர். மாவட்ட நீதிபதியாகவும் இருந்தவர். அவருக்கு இலக்கியத்தில் இயல்பாக ஈடுபாடு உண்டு. தமிழ், சமஸ்கிருதம், இந்தி இந்த மூன்று மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர் என்பதால், தொடர்ந்து மகளுக்கு கல்வியிலும் இலக்கியத்திலும் பயிற்சி அளித்தார்.

அந்தக் காலத்தில் பெண்கள் சிறுமியாக இருக்கும்போதே பால்ய விவாகம் நடப்பது வழக்கம். அதிலிருந்து ரங்கநாயகியும் தப்பவில்லை. பத்து வயதிலேயே இவரது அத்தை மகன் ஸ்ரீனிவாசனுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். திருச்சி ஸ்ரீரங்கத்தின் பிரபலமான தாத்தாச்சாரியாரின் மூத்த மகன்தான் ஸ்ரீனிவாசன்.

ரங்க நாயகிக்கு பதின்மூன்று வயது இருக்கும்போது, ஸ்ரீனிவாசன் தன் மனைவியுடன் ஸ்ரீரங்கத்தில் குடியேறினார். ரங்கநாயகி தனது பதினைந்தாம் வயதில் கருவுற்றார்.

அந்தக் காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய புகழுடைய கல்லூரிகள் திருச்சியில் மட்டுமே இருந்தன. அதனால் கணவருக்கு வேண்டிய உறவினர்களின் ஏழை மாணவர்கள், இவர்களின் வீட்டில்தான் தங்கி, கல்லூரிகளுக்குப் போய் படித்து வந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் சமைத்துப் போடும் பெரிய பொறுப்பு ரங்கநாயகிக்கு வந்தது.

சமையல், வீட்டு வேலை என்று பம்பரமாகச் சுழன்ற அவருக்கு உட்கார்ந்து படிக்க நேரமில்லாமல் போய்விட்டது. நல்ல பொறுப்புள்ள மருமகள் என்ற பெயரை எடுத்திருந்த போதும், அதில் அவருக்கு மனநிறைவில்லை.

ஆண்களைப் போல் வேலைக்குப் போவது, வெளியில் சுற்றி வரும் சுதந்திரம் என்று எதுவுமே தன்னைப் போன்ற பெண்களுக்கு இல்லையே என்று வருந்தினார்.

ஆண்களுக்கு இருக்கும் திறமை நமக்கும் வரவேண்டும் என்றால் முதலில் கல்வியில் தேர்ச்சிபெற வேண்டும். அப்போதுதான் உலக அறிவை நம்மால் பெறமுடியும். அதனால் தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும் இரவிலும் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் என்று விடாமல் படித்து வந்தார். அவரது அப்பா அவருக்கு வேண்டிய நூல்களை வாங்கி அனுப்பி வைத்தார். அவரது கணவரும் வேண்டிய நூல்களை திருச்சி கல்லூரிகளின் நூலகங்களில் இருந்து வரவழைத்து உதவினார். அது ரங்கநாயகிக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருந்தது.

ரங்கநாயகி வீட்டு வேலைகள் செய்தபிறகு, அவருக்கு இன்னொரு பெரிய பொறுப்பு காத்துக் கொண்டிருந்தது. குழந்தைகளுக்கு தினசரி ஏதாவது ஒரு புத்தம் புதிய கதை சொல்ல வேண்டும். இதனால் சார்லஸ் டிக்கன்ஸ், ஸர்வால்டர் ஸ்காட் போன்றவர்களின் கதைகளைப் படித்து, நமது கலாசாரத்திற்குத் தகுந்தாற்போல் சொல்லி வந்தார். கதையைச் சொல்லிக் கொண்டு போகும்போதே ஒரு சுவாரசியமான கட்டத்தில் கதையைச் சட்டென்று நிறுத்தி விடுவார். ‘‘மீதிக் கதையை நாளைக்குச் சொல்கிறேன்’’ என்று கூறி விடுவார். குழந்தைகள் எவ்வளவு கெஞ்சினாலும் சொல்லமாட்டார். கதை கேட்பவர்கள் சின்னக் குழந்தையிலிருந்து 15 வயது வரை இருப்பார்கள். இந்த உத்திதான் பிற்காலத்தில் அவரது கதைகளை வாசகர்கள் தேடிப் பிடித்து படிக்க உதவியிருக்கிறது.

ரங்கநாயகிக்கு இருபத்திரண்டு வயதிருக்கும். ஒரு மகன், ஒரு மகள் என்று வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க் கொண்டிருந்தபோதுதான் அந்த சோகம் நடந்தது.

திடீரென்று அவரது இரண்டு காதுகளும் கேட்காமல் போய்விட்டன. மற்றவர்கள் பேசுவதையும் அவரால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால் அவர் மற்றவர்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டார். அதற்குப் பதிலாக, இது தனக்கு விடப்பட்ட சவாலாகக் கருதி படிப்பதில் முழு கவனத்தைக் கொண்டுவந்தார். அதன்மூலம் எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள முயன்றார்.

தனது மனைவியின் வேதனையைப் புரிந்து கொண்ட ஸ்ரீனிவாசன், அவருக்கு இலக்கியம் ஆறுதல் அளிக்கும் என்று நினைத்து அதில் ஈடுபட வைத்து உற்சாக மூட்டினார். கணவர் கொடுத்த உந்துதலால், அவர் பல கதைகளை எழுதினார். அவை பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்தன. ரங்கநாயகி பத்திரிகைகளில் எழுதுகிறார் என்று அவர்கள் குடும்பத்தார் தெரிந்துகொள்ளவே பல ஆண்டுகள் ஆயின. அந்தளவிற்கு புனைபெயர்களில் எழுதித் தள்ளினார்.

தான் எழுதிய கதைகள் மூலம் முதன்முதலாகத் தான் பெற்ற பணத்தைக் கொண்டு தன் கணவருக்கு மேஜை ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அதை அவர் தன் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தினார். இன்றைக்கும் அந்த மேஜை அவர் நினைவாக அவர் வீட்டை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறது.

சிறுகதை, நாவல், கட்டுரை, பயணக்கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று இலக்கியத்தின் பல தளங்களில் வேகமாக முன்னேறிய ரங்கநாயகி, விடுதலைப் போராட்டத்திலும் தன் பங்கை விட்டு வைக்கவில்லை.

அவருடைய மாமா, கே.வி. ரங்கசாமி ஐயங்கார் காங்கிரஸ்காரர். ராஜாஜி தலைமையில் ஒரு பெரும் தொண்டர் படை திருச்சியிலிருந்து புறப்பட்டது. ரங்கநாயகியும், அவரது கணவரும் அப்போதிருந்தே காந்தியின் சத்தியாகிரகத்தில் ஈடுபடுத்திக் கொண்டனர். கதர் ஆடை மட்டும் உடுத்துவது என்று முடிவெடுத்தார். தனது கதை, கட்டுரைகளில் காந்தியத்தின் உயர்வை ஒலிக்கச் செய்தார்.

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற ரங்கநாயகியின் இன்னொரு பலம் அவர் இந்தியையும் நன்கு கற்றிருந்தார். இந்தி மொழியில் வந்த தாகூரின் ‘யோக யோக்’ என்ற கதையைத்தான் ‘குமுதினி’யாக தமிழுக்குத் தந்து, கல்கி போன்றோரின் பெரும் பாராட்டைப் பெற்றார்.

காந்தியடிகளின் ஆசிரமத்திற்குச் சென்று சேவை செய்ய வேண்டும் என்று ரங்கநாயகி விரும்பினார். ஆனால் முடியவில்லை. அதே நேரம் மகாத்மாவுடன் தொடர்ந்து கடிதத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார். காந்தியடிகள் ரங்க நாயகியைத் தன்னுடைய மகள் என்றே குறிப்பிட்டு கடிதம் எழுதுவார். ரங்கநாயகியின் திறமை, அறிவாற்றலைத் தெரிந்து கொண்ட மகாத்மாகாந்தி, ‘‘இந்தப் பெண்ணுக்கு மட்டும் காது கேட்கும் திறன் இருந்தால் மிகச் சிறப்பான தேச சேவை செய்வார்’’ என்று வருத்தப்பட்டிருக்கிறார். அதற்காக நிறைய வைத்திய முறைகளை ரங்கநாயகிக்குக் கடிதம் மூலம் தெரிவித்து வந்தார் மகாத்மா.

காந்திஜி மரணமடைந்தபோது, டெல்லி சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என்று துடித்தார். அதற்குள் காந்திஜியின் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டதால், மருமகன் பார்த்தசாரதியுடன் வார்தாவில் உள்ள காந்தியின் ஆசிரமத்திற்குச் சென்றார். இங்குதான் பெண்களுக்குப் பல வழிகளில் முன்னேற்றம் தரும் அமைப்பான சேவா சங்கத்தினை ஆரம்பிக்க முடிவு செய்தார். பொன்விழாவைத் தாண்டி இச்சங்கம் திருச்சியில் இன்றும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

குடும்ப சூழ்நிலை காரணமாக ரங்கநாயகி சிறிது காலம் எழுதாமல் இருந்தார். மீண்டும் 70_களில் எழுத ஆரம்பிக்கும்போது, அவரிடம் காந்திய சிந்தனைகள் அதிகம் வெளிவரத் தொடங்கின. காந்தியின் தாக்கத்தால் ஓரிரு நாடகங்கள் எழுதி பெரும் பாராட்டைப் பெற்றார்.

1975ல் பேரன் உத்தமனுடன் மலேசியா, சிங்கப்பூர், பினாங்கு சென்று வந்தார். மகள் தேவகியுடன் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து சென்றார். வெளிநாடுகளுக்குச் சென்றபோதெல்லாம் அவர் தன்னுடைய கதர் மடிசார் புடவையை மாற்றிக் கொள்ளவில்லை. கட்டுப்பாடான தன் வாழ்க்கை முறையையும் விட்டுத் தரவில்லை.

உடல் நலம் குன்றிய நிலையில் கூட அவர் தொடர்ந்து எழுதினார். 1986 அக்டோபர் 16_ம் தேதி அவரது கை எழுதுவதை நிறுத்தியது. உடல் இயக்கத்தை நிறுத்தியது.

பெண்கள் கல்வி கற்பது ஒன்றே ஆண்களுக்கு நிகராக அவர்களைக் கொண்டு செல்லும் என்பதில் ரங்கநாயகி ஒரு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டியவர். அதேசமயம், திருமணம் என்ற நெறியை மீற வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை, சொல்லவும் இல்லை. மாறாக, இந்நெறியை நன்கு பின்பற்றி அவர்கள் உண்மையான இல்லத்தரசிகளாக விளங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். கணவன் மனைவியர் இடையே ஒரு காசுக்கும் பெறாத மனபேதம் வரவே கூடாது என்பதை வலியுறுத்தி வந்திருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் ‘இரு மனைவிகள்’, ‘பிடிவாதம்’ போன்ற கதைகள்.

தன்னை அடக்கிக் கொள்ளுதல், தன் மதிப்பை இழக்காமல் இருத்தல், தனது கடமைகளைச் சரியாகச் செய்தல், பொழுதைச் சிறிதும் வீணாக்காமல் இருத்தல், தன் வீட்டிற்கும் தன் தேசத்திற்கும் சாதகமாக உழைத்தல் இவைதான் குமுதினி தமிழ்ப் பெண் களுக்கு விட்டுச் சென்றிருக்கும் படிப்பினைகள்.

நன்றி: பெண்ணியத்தின் விடிவெள்ளி _ குமுதினி, டாக்டர். பிரேமா நந்தகுமார்
வானதி பதிப்பகம்.

Posted in Biosketch, Kumudhini, Kumuthini, Sarvanan, Series, Thiruvengimalai, Women | Leave a Comment »