Archive for the ‘Therapy’ Category
Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2007
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இடுப்புத் தண்டுவடத்தை வலுப்படுத்த…
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
எனது மகளுக்கு 41 வயது ஆகிறது. 5 ஆண்டுகளுக்கு முன் வயலில் நெல் நாற்று கத்தைகளைக் கலைத்துப் போடும்போது பின்புறம் இடுப்பில் தண்டுவடத்திற்கு அருகில் ஒரு நரம்புப் பகுதியில் “கட்’ ஆகிவிட்டது. அலோபதி வைத்தியம் பார்த்து சரியாகவில்லை. ஆழியார் வேதாத்திரி மகரிஷி வைத்தியப் பிரிவில் சில மூலிகைத் தைலம் கொடுத்து தேய்க்கச் சொன்னார்கள். தைலப்பசை இடுப்பில் இருக்கும்போது வலி இல்லை. தைலம் தடவாமல் விட்டுவிட்டால் வலி வந்து விடுகிறது. இதற்கு ஆயுர்வேதத்தில் என்ன மருந்து இருக்கிறது?
முதுகுத் தண்டுவட எலும்புப் பகுதியில் ஓர் எலும்பு அடுத்த எலும்புடன் உராயாமலிருக்கவும், வேகமான நடை, வண்டிப் பயணம், குதித்தல் போன்ற செய்கைகளில் ஏற்படும் அதிர்வலைகளைச் சமாளித்து ஒரு குஷன் போல செயல்படும் வில்லைகள் இருக்கின்றன. உங்கள் மகள் அதிக நேரம் குனிந்து கொண்டு வேலை செய்யும்போது, இந்த வில்லைகளில் அழுத்தம் அதிகரித்திருக்கக் கூடும். அது மாதிரியான நிலையில் பதட்டத்துடன் திடீரென்று திரும்புவது, இடுப்பில் ஏற்படும் வலியால் தடாலென்று தரையில் அமர்வது, குளிர்ந்த தண்ணீரை அதிக அளவில் குடிப்பது; “சில்’ என்று இருக்கும் தண்ணீரில் நிற்பது போன்ற செய்கைகளினால் நீங்கள் கூறும் நரம்பு பிய்த்துக் கொண்ட நிலை ஏற்படலாம். “பதறாத காரியம் சிதறாது’ என்பார்கள். வீட்டில் காலிங்பெல் அடித்தவுடன், விருட்டென்று தலையைத் திரும்பிப் பார்ப்பதன் விளைவாக கழுத்து எலும்பின் வில்லை இடம் பிசகி, கடும் வலியை ஏற்படுத்துவதைப் போல தங்கள் மகளுக்கும் வில்லைப் பகுதி இடுப்பில் பிசகி இருப்பதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளன.
மூலிகைத் தைலத்தின் தேய்ப்பால் வலி குறைவதாகக் கூறியுள்ளீர்கள். தேய்க்கவில்லையென்றால் வலி கூடுகிறது. எலும்புகளின் உராய்வைத் தைலப்பசை தடுப்பதை இது காட்டுகிறது. வில்லை செய்ய வேண்டிய வேலையைத் தைலப்பசை செய்கிறது. வில்லை நிரந்தரமாகச் செய்ய வேண்டிய வேலையைத் தைலப்பசை தற்காலிகமாகச் செய்கிறது. வில்லை தன் இருப்பிடத்திற்குத் திரும்பி, தான் இழந்த ஊட்டத்தைப் பெற்று மறுபடியும் எலும்புகளைத் தாங்கி நிறுத்தும் சக்தியைப் பெற பசும்பாலில் வேக வைத்த பூண்டு உதவும். 50 கிராம் தோல் உரித்த சுத்தமான பூண்டு எடுத்து லேசாக நசுக்கி 400 மிலி பசும்பாலுடன் சேர்க்கவும். ஒரு லிட்டர் 600 மில்லி லிட்டர் தண்ணீர் கலந்து அடுப்பில் ஏற்றி, 400 மிலி அதாவது பால் மீதம் ஆகும்வரை கொதிக்கவிட்டு வடிகட்டவும். இந்தப் பாலை, வெதுவெதுப்பாக காலை மாலை வெறும் வயிற்றில் 200 மில்லி லிட்டர் சாப்பிடவும். இதில் தான்வந்திரம் 101 எனும், நெய் மருந்தை 10 சொட்டு கலந்து சாப்பிட மிகவும் நல்லது.
வில்லைகளுக்கு ஏற்படும் ஊட்டத் தடையை மாற்றி போஷாக்கை ஏற்படுத்தும் இம்மருந்தைத் தொடர்ந்து 21 நாள்கள் முதல் 48 நாள்கள் வரை சாப்பிடலாம்.
பாதிக்கப்பட்டுள்ள இடுப்பு தண்டுவடப் பகுதியில் மூலிகைத் தைலத்தைத் தேய்ப்பதைவிட ஊற வைப்பதே நல்லது. ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய முறிவெண்ணெய்யுடன் சிறிது தான்வந்திரம் தைலத்தைக் கலந்து இரும்புக் கரண்டியில் சூடாக்கி, சிட்டிகை உப்பு, எண்ணெய்யில் கரைத்த பிறகு பஞ்சில் முக்கி வலி உள்ள இடத்தில் போடவும், சுமார் ஒரு மணிநேரம் ஊறிய பிறகு வேறு ஒரு துணியால் துடைக்கவும். காலை இரவு இருவேளை உணவிற்கு முன்பாக இதுபோலச் செய்யவும்.
ஆஸனவாய் வழியாகச் செலுத்தப்படும் மூலிகைத் தைலமும், கஷாயமும் குடல்காற்றை அடக்கி இடுப்பு எலும்பு மற்றும் வில்லைகளுக்கு வலிவூட்டும் சிகிச்சை முறைகளாகும். இப்படி வாய்வழியாகவும், ஆஸனவாய் வழியாகவும், தோல் வழியாகவும் முதுகு தண்டுவடத்தை பலமாக்கி, வில்லைகளை நேராக்கி, வலியிலிருந்து விடுபடலாம்.
ஆயுர்வேத மருந்துகளில் சஹசராதி கஷாயம், மஹாராஸ்னாதி கஷாயம், க்ஷீரபலா 101 போன்ற மருந்துகள் சாப்பிட நல்லதாகும்.
மூலிகை இலைகளால் ஒத்தடம் கொடுத்தல், பாலில் வேகவைத்த நவர அரிசியினால் தேய்த்து விடுதல், உணவில் பருப்புப் பண்டங்களைக் குறைத்தல், பளுவான பொருட்களைத் தூக்காதிருத்தல், குனிந்த நிலையில் வேலை செய்யாதிருத்தல் போன்றவற்றின் மூலமாகவும் இடுப்புத் தண்டுவடத்தை வலுபடுத்தலாம்.
Posted in Aches, Alternate, Aspirin, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Bones, Herbs, Hip, Muscles, Natural, Pain, Sprain, Strain, Therapy, Tylenol | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அறிவாற்றலுக்கு – உரைமருந்து!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
என் மகனுக்கு ஏழு வயதாகிறது. படிப்பதிலும், வாசிப்பதிலும், எழுதுவதிலும் போதிய வேகம் இல்லை. டி.வி. கார்ட்டூன் பார்க்க அதிக ஆர்வம் காட்டுகிறான். பள்ளிக்குச் செல்வதற்கு, சிணுக்கம், பயம் கொள்கிறான். மற்றபடி பொதுவாக துறுதுறுப்பும் அறிவும் உள்ளவனாகவும் இருக்கிறான். அவனது மெலிந்த உடல் தேறவும், எழுத்து மற்றும் படிப்பில் திறம் பெறவும் வழி கூறவும்.
தனக்குப் பிறந்த குழந்தை நல்ல அறிவாற்றலோடு நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று ஒரு தாய் நினைப்பது இயற்கையே. இவை அனைத்தையும் பெற அந்தக் காலங்களில் உரை மருந்து ஒன்றைத் தயாரித்து சிசுக்களுக்கும் கொடுப்பார்கள். இந்த உரை மருந்து இன்று மறந்துபோய்விட்டது. அதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குப் பிறந்த 10-15 நாட்களிலிருந்து 5-7 வயது வரை தொடர்ந்து கொடுத்து வந்திருந்தால் நீங்கள் கூறும் உபாதைகள் அனைத்தையும் தவிர்த்திருக்கலாம். காலதாமதமானாலும் பரவாயில்லை, இப்போதும் அந்த உரை மருந்து தங்கள் மகனுக்கு உதவக்கூடும்.
கடுக்காய், சித்தரத்தை, சுக்கு, ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு என்ற ஆறு கடைச்சரக்குகள். நெல்லைப் புழுக்குவதற்கு வேக வைக்கும்போது நெல்லுடன் இவற்றை அப்படியே வெள்ளைத்துணியில் முடித்து வைத்துவிடவும். அரை வேக்காடு ஏற்பட்டதும் (காய்களை அழுத்தினால் அழுந்தும் பதம் வந்தவுடன்) எடுத்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். உரை மருந்து தயார்.
கை அகலத்திலுள்ள உரைகல் ஒன்று தேவை. அதில் வெந்நீர், வெற்றிலைச் சாறு, துளசிச் சாறு, ஓமகஷாயம், இஞ்சிச் சாறு இவற்றில் ஒன்றைவிட்டு ஒவ்வொன்றையும் வயதிற்கேற்றபடி 2-15 தடவை உரைத்து வந்த விழுதைத் தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொடுக்கவும். வாயு, சளி -வெந்நீர்; சளி, மப்பு -வெற்றிலைச்சாறு, துளசிச் சாறு, தேன்; வயிறு மந்தம், வயிற்றுப்போக்கு-ஓமகஷாயம், தேன். மப்பு, ஜ்வரம், வாந்தி -இஞ்சிச்சாறு, தேன் என்று மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
கடுக்காய் :
நல்ல ஜீரண சக்தி, பசி தரும். மலத்தை இளக்கும். புளிப்பு(வயிற்றில்) அதிகமாவதைத் தடுக்கும். அஜீரண பேதியைத் தடுக்கும். குடல், இரைப்பை, கல்லீரல் சரியே இயங்கச் செய்யும்.
சுக்கு :
வயிற்றில் வாயு சேர விடாது. வயிறு உப்புசம், மலஜலம் சரியாக வெளியேறாதிருத்தல், மப்பால் வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி இவற்றைப் போக்கும். ஆனால் வயிற்றில் அழற்சி, கடுப்புடன் சீதத்துடன் மலம் வெளியாதல் ரத்தப்போக்கு போன்றவை இருந்தால் சுக்கை உரைத்துக் கொடுக்கக்கூடாது.
சித்தரத்தை :
தொண்டை மார்பு இவற்றில் கபக்கட்டு, உடலில் கடுப்பு வலி இவற்றில் நல்லது. எண்ணெய் தேய்த்தால் ஜ்வரம் சளி பிடிக்கும் என்ற நிலையில் இதனைத் தொடர்ந்து கொடுக்கலாம். தொண்டை-வாய்ப்புண், வறட்டிருமல், வயிற்று வேக்காளம் உள்ள நிலையில் சித்திரத்தையைக் கொடுக்கக்கூடாது. கபக்கட்டுள்ள நிலையில் இதனையும், சுக்கையும் அதிகம் உபயோகிக்கலாம்.
ஜாதிக்காய் :
இரைப்பையை நன்கு தூண்டி, ருசி சுவை கூட்டி பசி ஜீரண சக்தி தரும். சிடுசிடுப்பு, பரபரப்பு, காரணம் புரியாத அழுகை முதலியதைக் குறைத்து அமைதியாகத் தூக்கம் வரச் செய்யும். இளகிச் சூட்டுடன் அடிக்கடி மலம் போவதை இது தடுக்கும்.
மாசிக்காய் :
வேக்காளத்தைக் குறைக்கும். வாய்ப்புண், இரைப்பைப் புண், குடல் புண் இவற்றைக் குறைக்கும். பற்களைக் கெட்டியாக அழகாக வளரச் செய்யும். உடலில் விஷசக்தி பரவாமல் தடுக்கும். சிறுநீர் தாராளமாக வெளியாகும். தொண்டைச் சதை வளர்ச்சி, உள்நாக்கு வளர்ச்சி, சீத ரத்தத்துடன் மலப்போக்கு, வாயில் உமிழ்நீர் அதிகம் பெருகுதல் இவற்றைக் கட்டுப்படுத்தும்.
வசம்பு :
இதுவும் கடுக்காயும், பிள்ளை வளர்ப்பான் என்ற பெயர் பெற்றவை. பசியின்மை, சுறுசுறுப்பின்மை, ருசியின்மை இவற்றைப் போக்கும். பரபரப்பு, சிடுசிடுப்பு, அமைதியின்மை இதனைச் சீராக்கும். பால் ஜீரணமாகாமல் வெளுத்து மலம் போவது, கீரிப்பூச்சி, உப்புசம், வயிற்றுவலி, மார்பில் கபச்சேர்வை இவற்றைப் போக்கும். உடல் சீராக வளர உதவும்.
கார மருந்து என இதற்குப் பெயர். அதனால் உரைத்த மருந்தை சிறுகச்சிறுகச் புகட்ட வேண்டும். தேன் சர்க்கரை சேர்த்து இனியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். சிறு சிசுவிற்கு 10-15 உரைப்பு வரை தேவைப்படும். மூளைக்கும் குடலுக்கும் நல்ல செயல் திறனைத் தரும் இம்மருந்தை நீங்கள், உங்கள் மகனுக்கு ஏழு அல்லது எட்டு வயது முடியும் வரை தொடர்ந்து கொடுத்து வரலாம். எழுத்து மற்றும் படிப்பில் திறமை வளரும்.
Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Child, Children, doctors, Herbs, Kids, medical, Newborn, Pregnancy, Pregnant, Therapy, Traditions, Urai marundhu, Urai marunthu, Uraimarundhu, Uraimarunthu | 1 Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2007
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை நோய் வருவது எதனால்?
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
வயது 63. கடந்த 25 வருடங்களாக சர்க்கரை நோயாலும், உயர் ரத்த அழுத்தத்தாலும் சிரமப்படுகிறேன். தற்போது வலது கை, இடது கால் மரத்துப் போகிறது. கால் பாத எரிச்சலும் உள்ளது. கூடவே மலச்சிக்கலும். பிராஸ்டெட் சுரப்பி வீக்கத்தின் காரணமாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் தூக்கமும் கெடுகிறது. இவை நீங்க வழி என்ன?
“குணகர்மவிகல்பம்’ என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவாகட்டும், செய்யும் செயலாகட்டும், சாப்பிடும் மருந்தாகட்டும் இவை அனைத்திலும் குணமும்; கர்மமும் நிறைந்துள்ளன. குணத்திற்கு உதாரணமாக எளிதில் செரிக்காதவை, எளிதில் செரிக்கக்கூடியவை, குளிர்ச்சியானவை, சூடானவை, எண்ணெய்ப் பசையை உடலுக்குத் தருபவை, வறட்சியை ஏற்படுத்துபவை போன்ற உணவு வகைகளைக் குறிப்பிடலாம். கர்மம் என்றால் செயலைச் செய்பவை, உதாரணமாகக் கடுக்காய்த் தோலைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்குகிறது, தேன் சற்று தூக்கலாகவும், நெய் சற்று குறைவாகவும் குழைத்து வாய்ப்புண்ணில் பூச அது விரைவில் குணமடைவதும் செயல்திறனால் ஏற்படுகின்றன.
இந்தக் குணமும் கர்மமும்தான் சர்க்கரை வியாதியையும் தோற்றுவிக்கின்றன. ஒரே இருக்கையில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்யும் உத்யோகம், அதிக நேரம் படுக்கையில் படுத்து உறங்குதல், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, நீர்வாழ் மிருகங்களையும் அதிகமாக உணவில் சேர்த்துச் சாப்பிடுதல், அடிக்கடி பால் சாப்பிடுதல், புதிய அரிசி, வெல்லத்தினால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுதல் போன்ற காரணங்களால் நம் உடலில் நெய்ப்பு, குளிர்ச்சி, உடல்கனம், மந்தநிலை, ரத்தத்திலும், சதையிலும் கொழுப்பு, வழுவழுப்பு போன்ற குணங்கள் அதிகரிக்கின்றன. இதை வெளியேற்றுவதற்கான வழியை உடல் தேடுகிறது. சிறுநீரகம் இந்தக் குணங்களை இழுத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. இதை அறியாது காரணத்தைத் தொடரும்போது இந்தக் குணங்கள் ரத்தத்திலும் சிறுநீரிலும் மிகைப்பட்டு காணுவதால் ரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர்ப் பரிசோதனையில் நாம் சர்க்கரை நோயாளி என்ற தீர்ப்பு வழங்கப்பட்டு அதன்பிறகு தினமும் ஒரு பயம் காலந்த வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.
முன் குறிப்பிட்ட காரணங்களுக்கு நேர் எதிரான செயல்களைச் செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். அதாவது ஓர் இருக்கையில் அதிகம் அமர வேண்டாம், குறைந்தது ஒருமணிநேரமாவது நடக்கவேண்டும். பகல் தூக்கம் கூடாது, மாமிச உணவில் கட்டுப்பாடு, அரை லிட்டர் அளவுதான் பால், அரிசியைக் குறை, இனிப்புப் பண்டங்கள் வேண்டாம் போன்ற மருத்துவரின் கட்டளைகளை ஏற்று அவற்றிற்கு நேர் எதிரான கசப்பு, துவர்ப்பு, காரச் சுவைகளை உணவில் சேர்க்கத் தொடங்கும்போது பல ரஸôயன மாற்றங்களை நம் உடல் சந்திக்கிறது. இந்தச் செயல்களின் வாயிலாக, குடலில் வாயுவின் சீற்றம் மிகைப்படுகிறது. காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை வாயுவிற்கு மிகவும் அனுகூலமானவை. வாயுவின் சீற்றம் ஏற்படுவதால் நீங்கள் குறிப்பிடும் மரத்துப் போதல், கால் பாத எரிச்சல், மலச் சிக்கல், பிராஸ்டேட் சுரப்பி வீக்கம் போன்றவை ஏற்படும்.
குடலில் வாயுவின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த விளக்கெண்ணெய் நல்ல மருந்தாகும். விளக்கெண்ணெய்யை இளஞ்சூடாக வயிற்றின் மீது உருட்டித் தேய்க்கவும். வலது கீழ் வயிற்றுப் பகுதியில் தொடங்கி இடது பக்கமாகக் கீழ் வயிற்றுப் பகுதி வரை சுமார் 20-25 நிமிடங்கள் தடவி விடவும். தொப்புளின் உள்ளேயும் நன்றாக எண்ணெய்யை ஊறவிடவும். கை, கால் மரத்துப் போன பகுதிகளிலும், கால் பாதத்திலும் விளக்கெண்ணெய்யை வெதுவெதுப்பாகத் தடவவும். நன்றாக ஊறிய பிறகு வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்.
விளக்கெண்ணெய்யைக் கலந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளும் தங்களுக்கு நல்ல பலனைத் தரக்கூடும். சுகுமாரம் கஷாயத்துடன் 1/4, 1/2 ஸ்பூன் ஹிங்குதிரிகுணம் எனும் எண்ணெய் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட நல்லது. இம்மருந்து மலச்சிக்கலைப் போக்கி, பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். குடல் வாயுவின் சீற்றத்தை அடக்கி, நரம்புகளுக்கு வலுவூட்டும்.
Posted in Alternate, Blood sugar, Bloodsugar, Body, Cures, diabetes, Disease, Disorder, Doctor, Gas, insulin, Liver, medical, Natural, Potassium, Prostate, Restroom, Sodium, Sugar, Swaminathan, Therapy, Toilet, Urine, Water | 1 Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 18, 2007
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூட்டு வலி குணமாக…
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
வயது 56. தொழுகையின்போது தரையில் தலை வைத்து எழுந்திருக்கும் போது, இருகால் முட்டியில் சத்தம் வருகிறது. வலியும் இருக்கிறது. குளிர் நாட்களில் மூட்டுக்கு மூட்டு வலி உள்ளது. தொண்டை கரகரப்புக்கு மருந்து சாப்பிடாவிட்டால் இருமல், தும்மல், மூச்சிரைப்பு ஏற்படுகிறது. இவை நீங்க மருந்து கூறவும்.
மூட்டுக்கு மூட்டு வலி வருவது இன்று பெருமளவில் காணப்படுவதற்கான காரணத்தை ஆயுர்வேதம் கீழ்க்காணும் வகையில் கூறுகிறது.
உப்பையும் புளியையும் காரமான சுவையையும் உணவில் அதிகம் சேர்ப்பவர்களுக்கும், சூட்டைக் கிளப்பும் உணவுப் பண்டங்களுடன் எண்ணெய்யைக் கலந்து அஜீரண நிலையில் சாப்பிடுவது, அதாவது மசாலா பூரி, பேல் பூரி, சமோஸô போன்றவை, குடலில் பிசுபிசுப்பை ஏற்படுத்தும் பிரட், சாஸ் வகைகள், நீர்ப்பாங்கான நிலைகளில் வாழும் உயிரினங்களை மாமிச உணவாகச் சாப்பிடுதல், புண்ணாக்கு, பச்சை முள்ளங்கி, கொள்ளு, உளுந்து, அவரைக்காய், தயிர், புளித்த மோர் போன்றவற்றை அதிக அளவில் சாப்பிடுதல், கடுங்கோபத்துடன் உள்ள மனநிலையில் உணவைச் சாப்பிடுதல், சாப்பிட்ட பிறகு பகலில் படுத்து உறங்குதல், இரவில் கண்விழித்து தூக்கத்தை கெடுத்துக் கொள்ளுதல் போன்றவை நம் உடலில் ரத்தத்தை கெடுக்கும். அதன்பிறகு செய்யப்படும் சைக்கிள் சவாரி, பஸ்ஸில் நின்றுகொண்டு செய்யும் பயணம் ஆகியவற்றால் ஏற்படும் வாத தோஷத்தின் சீற்றம், கெட்டுள்ள ரத்தத்துடன் கலந்து கால்பாதத்தின் பூட்டுகளில் தஞ்சம் அடைந்து பூட்டுகளில் கடும் வலியை ஏற்படுத்துகின்றன.
சூடு ஆறிப்போன பருப்பு வடை, பஜ்ஜியை சாப்பிட்டு, அதன்மேல் சூடான டீ குடித்து, சிகரெட் ஊதுபவர்கள் இன்று அதிகமாக டீ கடைகளில் காணப்படுகின்றனர். இவர்களுக்கு விரைவில் ரத்தம் கேடடைந்து மூட்டு வலி வர அதிகம் வாய்ப்பிருக்கிறது.
பூட்டுகளின் உள்ளே அமைந்துள்ள சவ்வுப் பகுதியும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராயாமலிருக்க அவற்றின் நடுவே உள்ள எண்ணெய்ப் பசையும் தங்கள் விஷயத்தில் வரண்டுள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு ஆகும் பட்சத்தில் எலும்புகளில் தேய்மானம் ஏற்பட்டு, அவை ஒன்றோடு ஒன்று உரசும் தருவாயில் வலியை ஏற்படுத்துகின்றன. பூட்டுகளின் அசைவுகள் எளிதாக இருக்க அதனைச் சுற்றியுள்ள தசை நார்கள் உதவி செய்கின்றன. குளிர்நாட்களில் தசை நார்கள் சற்றே இறுக்கம் கொள்வதால் பூட்டுகளின் அசைவுகள் எளிதாக இல்லாமல் மேலும் வலியை அதிகப்படுத்துகின்றன. நம் உடல் பாரத்தை தாங்குவதற்கான வேலையை கால் முட்டிகளும், கணுக்கால் பூட்டுகளும் முக்கியமாகச் செய்வதால் அவைகளை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய உடல் பகுதிகளாகும்.
உங்களுக்கு தொண்டை கரகரப்புக்கு மருந்து சாப்பிட வேண்டிய நிர்பந்தமும் உள்ளது. பூட்டுகளில் ஏற்பட்டுள்ள வலியும் போக வேண்டும். வாத-கப தோஷங்களின் சீற்றத்தை அடக்கி அவைகளை சம நிலைக்குக் கொண்டு வரும் மருந்துகளால் உங்களுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், ரத்தத்தில் உள்ள கேட்டையும் அகற்ற வேண்டும். அவ்வகையில் ஆயுர்வேத கஷாயமாகிய மஹாமஞ்சிஷ்டாதி சாப்பிட நல்லது. 15 மிலி கஷாயத்தில், 60 மிலி கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். குறைந்தது 21 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை மருந்தைச் சாப்பிடவேண்டும். முதல் பாராவில் குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்க்கவேண்டும்.
குளிர் நாட்களில் வலி கடுமையாக இருந்தால் முருங்கை இலை, எருக்கு இலை, புளி இலை, வேப்பிலை, ஆமணக்கு இலை, நொச்சி இலை, ஊமத்தை இலை, ஆமணக்கு இலைகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டுக் காய்ச்சிய வென்னீர் ஒத்தடம் கொடுக்க நல்லது. நொச்சி இலை, ஊமத்தை இலை, ஆமணக்கு இலை இம்மூன்றையும் நன்கு சிதைத்து வேப்பெண்ணெய்யுடன் விட்டுப் பிசிறி அடுப்பின் மேல் இரும்பு வாணலியிலிட்டு சிறிது வேகும்படி பிரட்டி, இளஞ்சூட்டுடனிருக்கும் போது அப்படியே வலியுள்ள பூட்டுகளில் வைத்துக் கட்ட வலி குறையும். வீக்கம் இருந்தால் அதுவும் வாடிவிடும்.
முட்டைக் கோஸ் இலை இலையாகப் பிரியக் கூடியது. ஒரு இலையை லேசாக தோசைக் கல்லில் சூடாக்கி முட்டியில் வலி உள்ள பகுதியில் போட்டு, 15, 20 நிமிடங்கள் கழித்து எடுத்துவிடவும். இது நல்ல வலி நிவாரணியாகும். பக்கவிளைவில்லாத எளிய சிகிச்சை முறையாகும். காலை இரவு உணவிற்கு முன்பாக இதுபோல செய்வது நலம்.
நீங்கள் உணவில் பருப்பு வகைகளைக் குறைக்கவும். குளிர்ந்த நீரைக் குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்த வேண்டாம். வென்னீர்தான் நல்லது. பகலில் படுத்து உறங்கக் கூடாது. தினமும் சிறிது விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், நல்லெண்ணெய் சமமாகக் கலந்து இளஞ்சூடாக மூட்டுகளில் தடவி, சிறிது நேரம் ஊறிய பிறகுக் குளித்து வர, முட்டிகளில் சத்தம் வருவது நிற்பதோடு, வலியும் நன்றாகக் குறைந்து விடும்.
Posted in Advice, Alternate, arthritis, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, cure, Doc, Doctor, Fat, Herbal, Joints, Knee, legs, Medicine, Natural, pains, Swaminathan, Therapy | 2 Comments »
Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007
மூலிகை மூலை: நச்சுக் காய்ச்சல் குணமாக…
எஸ். விஜயராஜன்
கரும்புத் தோகையைப் போன்று இலைகளையும், கணுக்களாக மிக மென்மையான பல கிளைகளையும் கொண்ட சிறு செடி இனமாகும் பற்பாடகம். இதன் கிளைகளைச் சேர்த்துக் கசக்கினால் வழுவழுப்பான சாறு வரும். செடி முழுவதும் மருத்துவப் பயன் உடையது. வியர்வை பெருக்குதல், நோயை நீக்கி உடலைத் தேற்றுதல், காய்ச்சலைப் போக்குதல், முறை நோயை அகற்றுதல் போன்ற குணம் கொண்டது. தமிழகம் எங்கும் தானாகவே வளர்கின்றது.
வேறு பெயர்கள் : பற்படி கொத்தம், சுகண்டகம், கவந்தித்தோ, நரைதிரை மாற்றி, சீதப் பிரிய சூட்சுபத்திரி, திரிசணக்கி, நாபாஞ்சம், திரிதோசமகராசவேணு, சீதளசக்தி, சீதம், பற்படாம்.
ஆங்கிலத்தில்: Mollugo cerviana; Ser; Aizoqceae
இதன் மருத்துவக் குணங்களைப் பார்ப்போம். பற்பாடகத்தை பாலில் அரைத்துத் தடவிக் குளித்து வரக் கண் பிரகாசிக்கும். உடலிலுள்ள துர்நாற்றம் நீங்கி, உடல் சூடு தணியும்.
பற்பாடகம், கண்டங் கத்திரி, ஆடாதொடை, சுக்கு, விஷ்ணு காந்தி வகைக்கு 40 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினமும் 4 வேளை 50 மில்லியளவாக 3 நாள் குடிக்க காய்ச்சல் குணமாகும்.
பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, சீரகம், அதிமதுரம் வகைக்கு 10 கிராம் எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினமும் 6 வேளை 50 மில்லியளவு குடித்து வர நச்சுக் காய்ச்சல் குணமாகும்.
பற்பாடகம், மரம்பட்டை, கோரைக்கிழங்கு, இலவம்பிசின், கஞ்சாங்கோரை, வெட்டி வேர், சுக்கு, கொத்தமல்லி வகைக்கு 5 கிராம் இடித்துப் பொடியாக்கி கலந்து 1 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக வற்றக் காய்ச்சி வடிகட்டி 4 வேளையாக 50 மில்லியளவு குடித்துவர பேதியுடன் கூடிய நச்சுக் காய்ச்சல் குணமாகும்.
பற்பாடகம், அதி மதுரம், பேய்ப்புடல், சீந்தில் கொடி, சீந்தில் வேர், கொடுப்பை வேர், கோரைக் கிழங்கு, சுக்கு, கொத்தமல்லி வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை அல்லது கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி சிறிது தேன் கலந்து 30 மில்லியளவாக 3 வேளைக்கு 3 நாள்களுக்கு குடித்து வர எந்தவிதமான காய்ச்சலும் குணமாகும். இது ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருகின்ற காய்ச்சலுக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.
பற்பாடகத்தை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர வெட்டை, மேகம், எரிச்சல் உபாதைகள் குணமாகும்.
பற்பாடகத்தை கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க காய்ச்சல் தணியும். மேலும் இது சூதக அழுக்கை வெளிப்படுத்தும்.
பற்பாடகத்தின் வேரை 200 கிராம் எடுத்து இடித்து 500 மில்லி ஆமணக்கு எண்ணெயில் போட்டு பதமாகக் காய்ச்சி வடிகட்டி, கீல் வாயு வீக்கங்களுக்கு தடவி வர வீக்கம் தணியும்.
பற்பாடகத்தின் வேரை நீரில் ஊறவைத்து 1 டம்ளர் அளவு குடிக்க நீர் எரிச்சல், கண் எரிச்சல் நீங்கும். பற்பாடகத்தின் வேரை பால் விட்டு அரைத்து தலைக்குத் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வர கண் எரிச்சல் நீங்கிக் கண்கள் குளிர்ச்சி அடையும்.
Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, cure, Herbs, Medicines, Mooligai, Naturotherapy, Palpaadagam, Palpaadakam, Palpadagam, Palpadakam, Parpaadagam, Parpaadakam, Parpadaam, Parpadagam, Parpadakam, Therapy | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2007
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அறிவுக் கூர்மைக்குப் பிராணாயாமம்!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
வயது 32. சுமார் பத்து ஆண்டுகளாக ஓடும்போதும் சைக்கிள் மிதிக்கும்போதும் மாடிப்படி ஏறும்போதும் மூச்சு வாங்குவதுடன் மார்புப் பகுதியில் கடுமையாக வலியும் ஏற்படுகிறது. மேலும் நடுமுதுகுப் பகுதியில் தொடர்ந்து வலி ஏற்படுகிறது. அதிகமாக வியர்க்கிறது. குதிகால் வலி, பாத வெடிப்பு உள்ளது. தகுந்த மருந்து கூறவும்.
மனித உடலில் ஐந்து வகையான வாயுக்கள் உயிர் உள்ளவரை செயலாற்றுகின்றன. அவற்றுக்கு பிராணம்- உதானம்- வியானம்- ஸமானம்- அபானம் என்று பெயர். பிராணவாயு தலையைத் தங்குமிடமாகக் கொண்டது. தொண்டையிலும் மார்பிலும் உலவுகின்றது. அறிவு, புலன்கள், இதயம், மனம், நாடிகள் இவற்றை நிலை நிறுத்தச் செய்கிறது. துப்புதல், தும்மல், ஏப்பம், உள்ளிழுக்கும் மூச்சு, வெளிவிடும் மூச்சு, உணவை உட் செலுத்துதல் ஆகியவை இதன் செயல்களாகும்.
உதான வாயு மார்பில் இருந்து கொண்டு தொண்டை மூக்கு முதல் தொப்புள் வரை உலவும். பேசுதல், செயலில் முயற்சி, புஷ்டி, வலிவு, நிறம், உடல் உட்புறக் குழாய்களை தெளிவாக வைத்திருத்தல், அறிவு, தைரியம், நினைவாற்றல், மனதிற்கு உணர்வுகளைத் தெரிவித்தல் ஆகியவை இதன் செயல்களாகும்.
இந்த இருவாயுக்களும் தங்கள் விஷயத்தில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளன என்று தாங்கள் கூறும் அறிகுறிகள் மூலம் தெரிகிறது. சரியான முறையில் பிராணாயாமம் செய்பவர்களுக்குப் பிராணவாயுவின் செயல்திறன் மேம்பட்டு அவர்களின் அறிவுக் கூர்மை, மனதை ஒருமுகப்படுத்துதல் போன்ற திடமான உள்ளத்தை அவர்கள் அடைந்திருப்பதைக் காண முடிகிறது.
பிராண- உதான வாயுக்களின் போக்குவரத்துக்குத் தடை ஏதும் ஏற்படா வண்ணம் நீங்கள் தலை மற்றும் மார்புப் பகுதியை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகும். அதற்கான சில எளிய வழிகள்-
1. காலையில் பல் துலக்கியதும் வாயை வெதுவெதுப்பான தண்ணீரால் சுத்தப்படுத்தவும், அணுதைலம் எனும் மூக்கில் விடும் மூலிகை எண்ணெய்யை இரண்டு சொட்டு விட்டுக் கொள்ளவும். அதன்பிறகு வாயினுள் வரும் இந்த எண்ணெயைத் துப்பிவிடவும். வெதுவெதுப்பான நல்லெண்ணெய் இரண்டு காதுகளிலும் விட்டுக் கொண்டு பஞ்சால் காதை அடைத்து வைக்கவும். பிறகு காதினுள் உள்ள அழுக்கைத் துடைத்து விடவும். மூளைப் பகுதியை இணைக்கும் இந்த இரு துவாரங்களைச் சுத்தப்படுத்துவதன் விளைவாக பிராண வாயுவின் சஞ்சாரம் தங்கு தடையின்றி நடைபெறும்.
2. யோகாசனப் பயிற்சிகளை தகுந்த ஒரு குருவின் கீழ் கற்றுணர்ந்து, பிராணாயாமத்தை ஆசனப் பயிற்சிகளுக்குப் பிறகு செய்யவும். நுரையீரல் பகுதி வலுப்பட பிராணாயாமம் உதவுவதால் மார்புப் பகுதியைச் சார்ந்த உதான வாயுவின் ஓட்டமும் சீராக இருக்கும்.
தலை மற்றும் மார்புப் பகுதிகளை இணைக்கும் நரம்புகளும் தசைப் பகுதிகளும் வலுப்படுவதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த உபாதை நீங்க வழி உள்ளது. ஒவ்வொரு பிடிச் சோற்றுடன் மருந்தைக் கலந்து உண்பது ஸ்க்ராஸம் என்ற முறையாகும். க்ராஸôந்தரம் என்பது ஒரு பிடிச்சோற்றுக்கும் மற்றொரு பிடிச் சோற்றுக்கும் நடுவில் மருந்து அருந்தும் முறை. இந்த இருமுறைகளும் பிராண வாயுவின் கோளாறினால் ஏற்பட்ட நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் நீங்கள் காலை பலகாரம் சாப்பிடுவதற்குப் பதிலாகச் சூடான சாதத்துடன் ஹங்கு வசாதி எனும் சூரணம் 1/2 ஸ்பூன் அளவில் கலந்து 1 டீ ஸ்பூன் (5மிலி) இந்து காந்தம் கிருதம் எனும் நெய் மருந்தையும் கலந்து ஒவ்வொரு பிடியாகச் சிறிய அளவில் சாப்பிடவும். ஒவ்வொரு பிடி சோற்றுக்கும் நடுவில் விதார்யாதி கிருதம் எனும் நெய் மருந்தை 5 மிலி அளவில் வைத்துக் கொண்டு சிறிது சிறிதாக நக்கிச் சாப்பிடவும்.
உதான வாயுவின் செயல்திறன் மேம்பட மாலை உணவுக்குப் பிறகு மருந்து சாப்பிட மிகவும் நல்லது. அந்த வகையில் நீங்கள் தசமூலாரிஷ்டம் 30 மிலி, தான்வந்திரம் குளிகை எனும் மாத்திரை இரண்டுடன் சாப்பிட உகந்தது.
இவ்விரு வாயுக்களின் சீற்றத்தை அதிகப்படுத்தும் வாயுப் பண்டங்களாகிய கொண்டைக் கடலை, பச்சைப் பயிறு, மொச்சக் கொட்டை, அவரைக்காய், வேர்க்கடலை, கொத்தவரங்காய், காராமணி போன்றவற்றை உணவில் அதிக அளவில் சேர்க்க வேண்டாம். குளிப்பானங்களைத் தவிர்க்கவும். தசமூலரஸôயனம் எனும் லேகியத்தை இரவில் படுக்கும் முன் நக்கிச் சாப்பிட தலை மற்றும் தசைப்பகுதிகள் நன்கு வலுப்படும். குதிகால் வலி, பாதவெடிப்பு நீங்க பிண்டதைலம் எனும் எண்ணெய்யை வெது வெதுப்பாகக் கால்களில் தடவிவிடவும்.
(பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771)
Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Breath, Diet, Exercise, Food, Gayathri, Gayatri, Healing, Medicine, Morning, Natural, Nature, Pranayama, Pranayamam, Therapy, Walk, Yoga | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007
மூலிகை மூலை: தோல்-வியாதிகளைத் துரத்தும் மூலிகை!
விஜயராஜன்
நீளமான சதுர வடிவில் சிறகுக் கூட்டு இலைகளையும் சரம்சரமாய் தொங்கும் மஞ்சள் நிறத்தில் பளிச்சிடும் பூங்கொத்துளையும் கொண்டது கொன்றை. நீண்ட உருளை வடிவத்தில் காய்களையும் உடைய இலையுதிர் மர இனமாகும். பட்டை, பூ, காய் வேர் மருத்துவக் குணம் உடையது. நோயை அகற்றி உடலைத் தேற்றி காய்ச்சலைத் தணிக்கும். வாந்தியை உண்டாக்கி, மலச்சிக்கலைப் போக்கி உடலிலுள்ள தாதுக்களை அழுகாமல் தடுக்கும். பூ வயிற்றில் உள்ள வாயுவை அகற்றும். நுண்புழுக்களைக் கொல்லும். மலச்சிக்கலைப் போக்கும். காயிலுள்ள சதை மலச்சிக்கலைப் போக்கும் குணம் உடையது. தமிழகம் எங்கும் பரவலாகத் தானாகவே வளர்கின்றது.
வேறு பெயர்கள் : கொன்றை, கொண்ணை, பெருங்கொன்றை, கிருதாமல், தாமம், இதழி, கடுக்கை, ஆக்குவதம்.
வகைகள்: கருங்கொன்றை, சிறுகொன்றை, செங்கொன்றை, நரிக்கொன்றை, புலிநகக் கொன்றை, மந்தாரக்கொன்றை, முட்கொன்றை, செம்மயிர்க்கொன்றை, பொன்மயிர்க்கொன்றை.
ஆங்கிலப் பெயர் : Cassie fistula, linn, caesalpiriaceae
மருத்துவக் குணங்கள் : சரக்கொன்றைக் கொழுந்தை கைப்பிடியளவு எடுத்து அவித்துப் பிழிந்த சாறு 200 மில்லியளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்துக் குடிக்க வயிற்றில் உள்ள நுண்புழுக்கள், பூச்சிகள் வெளியேறும்.
சரக்கொன்றை பூவை எலுமிச்சப்பழச் சாறுவிட்டு அரைத்து உடலில் பூசி ஒரு மணிநேரம் வைத்து இருந்து குளிக்கச் சொறி, கரப்பான் தேமல் குணமாகும்.
சரக்கொன்றைப் பூவையும் கொழுந்தையும் சம அளவாக எடுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலக்கிக் குடித்து வர பிரிமியம், வெட்டை, காமாலை, பாண்டு குணமாகும்.
சரக்கொன்றைப் பூவை வதக்கித் துவையலாக்கி உணவுடன் உண்டு வர மலச்சிக்கல் நீங்கும்.
சரக்கொன்றைப் பூவை அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வயிற்றுப் பூச்சிகள் வெளியேறி நோய் அகலும். நீடித்துக் குடித்து வர மதுமேகம் குணமாகும்.
சரக்கொன்றை வேர்ப்பட்டை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் திரிகடுகுச் சூரணம் 5 கிராம் சேர்த்து 2 வேளை 100 மில்லியளவு குடித்து வரக் காய்ச்சல் தணியும். இதய நோய் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வர மேக நோய்ப் புண்கள், கணுச்சூலை குணமாகும். (ஒருமுறை மலம் கழியுமாறு மருந்து அளவைத் திட்டப்படுத்திக் கொள்ள வேண்டும்.)
சரக்கொன்றை காயில் மேலுள்ள ஓட்டைப் பொடியாக்கி, குங்குமப்பூ சர்க்கரை சமஅளவாக எடுத்து பன்னீரில் அரைத்துப் பெரிய பட்டாணி அளவுகளாக மாத்திரைகளை உருட்டி உலர்த்தி, மகப்பேறின்போது வயிற்றினுள் குழந்தை இறந்த நிலையில் பத்து நிமிடத்திற்கு ஒரு மாத்திரை வீதம் கொடுத்து வர இறந்த குழந்தையை வெளியே தள்ளிவிடும்.
சரக்கொன்றை காயிலுள்ள சதைப்புளியை உணவுக்குப் பயன்படுத்துகின்ற புளியுடன் சேர்த்து உணவு செய்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் குணமாகும்.
சரக்கொன்றை சமூலத்தை பாலில் அரைத்து எலுமிச்சம்பழச்சாறு விட்டு அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்து வர சொறி, கரப்பான், தேமல் குணமாகும்.
சரக்கொன்றைப் பூவையும் கொழுந்தையும் அரைத்து எலுமிச்சப்பழம் அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர பிரிமியம், வெட்டை, காமாலை, பாண்டு குணமாகும்.
சரக்கொன்றை இலையைத் துவையல் செய்து சாப்பிட மலங்கழியும்.
சரக்கொன்றை இலையை அரைத்து தடவி வர படர்தாமரை, அழுக்குத் தேமல் போன்ற தோல் வியாதிகள் மறையும்.
சரக்கொன்றை பூவை கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வயிற்று வலி, குடலைப் பற்றிய நோய்கள் குணமாகும்.
சரக்கொன்றைப் பூவை பாலுடன் கலந்து காய்ச்சி குடிக்க உள்ளுறுப்புகளை வன்மைப்படுத்தும். மெலிந்தோர்க்கும் தக்க பலன் தரும்.
Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, cure, Doc, Herb, Herbs, Konrai, Medicine, Mooligai, Moolikai, Nammalvar, Nammalwar, Nammazhvar, Nammazhwar, Natural, Naturotherapy, PAK, Therapy, Tigerclaw, Tigerclaw tree, Yoga | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சேற்றுப்புண் போக்கும் கடுக்காய்!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
என் அம்மாவுக்கு சுமார் 10 ஆண்டுகளாகப் பாதவிரல்களில் அதிக அளவில் சேற்றுப்புண் ஏற்படுகிறது. வலியும் எரிச்சலும் ஏற்படுகிறது. சேற்றுப்புண் மறைய மருந்து கூறவும்.
எல்.சிவா, திருத்தணி.
சேற்றுப்புண் வருவதற்கு முக்கியக் காரணமாக ஈரத்தரை, சேறு, சகதி, குழாயடி, கிணற்றடியிலோ எந்நேரமும் இருந்து வேலை செய்பவர்களுக்கு அங்குள்ள அழுக்கும் கிருமிகளும் காலின் விரல்களின் இடுக்கில் நுழைந்து புண் ஏற்படுத்துவதைக் குறிப்பிடலாம். கால்விரல்கள் அதிக இடைவெளியில்லாமல் மிக நெருக்கமாக இருப்பவர்களுக்குச் சேற்றுப் புண் எளிதில் ஏற்படுகிறது. இந்தப் புண் பார்ப்பதற்கு வெள்ளை நிறமாகவும் ஒருவித நாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அதில் ஏற்படும் அரிப்பைப் போக்க கைவிரல்களை, கால்விரல்களின் இடுக்கில் செருகி “வரட், வரட்’ என்று தேய்க்க அதனால் ஏற்படும் சுகத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. ஆனால் அதன் பிறகு ஏற்படும் எரிச்சல், தீப்புண் போல பற்றி எரியும் தன்மை கொண்டதாக இருப்பதால், அப்போது ஏற்படும் வேதனையும் வார்த்தைகளால் கூற இயலாது.
சொறியச் சொறிய புண் வளர்ந்து கொண்டே போய் ஆழமான புண்ணாகப் பரவிவிடும். நொதநொதப்பான நிலையில் சுகம் தரும் இப் புண் காய்ந்த நிலையில் கடுமையான வலியை ஏற்படுத்தும், அலசம் என்று இந்த உபாதையை வர்ணனை செய்யும் ஆயுர்வேதம், கப-பித்தங்கள் கெடுவதால் அரிப்பையும் சவர்தண்ணீர் கசிவையும் ஏற்படுத்தவதாகக் கூறுகிறது. இந்த உபாதை மாற-
கடுக்காய்த் தோடு சிறிது எடுத்து விழுதாக அரைத்து இரவில் புண்களின் மீது பூசி, மறுநாள் காலையில் கழுவிவிட புண் விரைவில் ஆறிவிடும். கடுக்காய்க்கு அகத்தே நஞ்சு, இஞ்சிக்கு புறத்தே நஞ்சு என்பது பழமொழி. அதனால் கடுக்காய் விதையை உபயோகிக்கக் கூடாது. அதுபோல சமையலில் இஞ்சியின் தோலை நீக்கிய பிறகே சேர்க்க வேண்டும்.
கடுக்காய் தோலுடன் சிறிது மஞ்சளும் சேர்த்து அரைத்தும் பூசலாம்.
மருதாணி இலையை அரைத்தும் பூசலாம். சிந்தூராதிலேபம் எனும் ஆயிண்ட்மெண்ட் பூச, புண் விரைவில் ஆறிவிடும்.
மதுஸ்னுஹீ எனும் பறங்கிச் சக்கை உள்ளே சாப்பிடுவதற்கு நல்ல மருந்தாகும். மதுஸ்னுஹீ சூரணம் எனும் இம் மருந்தை 1/2 ஸ்பூன் (2.5 கிராம்) அளவில் எடுத்து 1 சொட்டுத் தேனும், 1 ஸ்பூன் (5மிலி) மஹாதிக்தகம் எனும் உருக்கி சூடு ஆறிய நெய்யையும் குழைத்து காலை, இரவு உணவுக்கு 1 மணி நேரம் முன்பாகத் தொடர்ந்து 2 வாரங்கள் சாப்பிட மிகவும் நல்லது. சேற்றுப்புண் மட்டுமல்ல, வேறு சிரங்கு சொறிகளும், கிருமி நோய்களும் எளிதில் குணமாக்கும் மருந்து இது.
விரல்களுக்கு இடையிலுள்ள புண்ணை திரிபலாசூரணம் 5 கிராம், கருங்காலிக் கட்டை 5 கிராம் போட்டுக் காய்ச்சிய 1 கிளாஸ் தண்ணீரால் கழுவி, கால்விரல் இடுக்குகளைப் பஞ்சால் துடைத்துச் சுத்தப்படுத்திய பிறகு, வேப்பிலை, எள்ளு அரைத்துப் பூசிவர, புண் விரைவில் குணமாகிவிடும்.
நகத்தின் சதை இணைப்புப் பகுதிகளிலும், கால்விரல் இடுக்குகளிலும் தொடர்ந்து நால்பாமராதி தைலம், தினேச வில்லாதி தைலம் போன்றவற்றில் ஒன்றைப் பூசிவர சேற்றுப்புண் நம்மை அணுகாது பாதுகாத்துக் கொள்ளலாம். சேற்றுப்புண் உள்ளவர்கள் மீன், தயிர், கத்திரிக்காய், நல்லெண்ணெய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. அடிக்கடி தண்ணீரில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
Posted in Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Chethuppun, Chethupun, cure, Dermatologists, Dermatology, Exposure, Herbs, itch, medical, Medicines, Natural, Psoriasis, Rash, Sethuppun, Sethupun, Skin, Swaminathan, Symptoms, Therapy, Water, Work | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007
இது புதுசு: அமெரிக்காவிலிருந்து வந்த ஆர்ட் தெரபிஸ்ட்கள்!
ந.ஜீவா
சில குழந்தைகள் எப்போது பார்த்தாலும் துருதுருவென்று இருப்பார்கள். அவர்களை ஓர் இடத்தில் பிடித்து வைப்பது என்பது பெரும்பாடு. இங்கிருந்து அங்கே குதிப்பார்கள். அங்கிருந்து இங்கே குதிப்பார்கள். சில குழந்தைகளோ அதற்கு நேர்மாறாக எப்போதும் அமைதியாக இருப்பார்கள். “துருதுரு’ குழந்தையோ, அமைதிக் குழந்தையோ அவர்களின் மனதைப் படிப்பது எப்படி? அவர்களுடைய மனப்பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி? இதற்கு விடை சொல்லும் வகையில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பிரபலமாக உள்ள ஆர்ட் தெரபியை இந்தியாவில் அறிமுகப்படுத்த வந்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஜூடித் ஆரோன் ரூபினும், போடா நாரோவும். இருவரையும் இங்கே அழைத்து வந்தவர் அமெரிக்காவில் வாழும் சங்கீதா பிரசாத். இவரும் கூட ஒரு ஆர்ட் தெரபிஸ்ட்தான். சென்னையிலும், பிற நகரங்களிலும் ஆர்ட் தெரபியைப் பற்றிய அறிமுக நிகழ்ச்சியையும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆர்ட் தெரபி ட்ரெயினிங் புரோக்ராமையும் நடத்த வந்திருக்கும் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அதிலிருந்து…
“”ஆர்ட் தெரபி 60 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் புழக்கத்தில் வந்துவிட்ட ஒன்று. குழந்தைகளுக்கு என்றில்லை, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் அனைவருக்கும் இந்த ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். ஆரோக்கியமாக்கலாம்.
இந்த ஆர்ட் தெரபி தொடர்பான ஐடியா முதன் முதலில் ஒரு மனநல மருத்துவருக்குத்தான் வந்தது. மனநல மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் சிலர் படம் வரைந்து கொண்டிருந்ததை அங்கிருந்த மருத்துவர் பார்த்தார். சாதாரணமாக ரொம்பவும் ஆர்ப்பாட்டம் செய்யும் அவர்கள் படம் வரையும் போது மிகவும் அமைதியாகக் காணப்பட்டனர். இது அவருக்கு வித்தியாசமாகப்பட்டது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்றன. அதிலிருந்து பிறந்ததுதான் இந்த ஆர்ட் தெரபி.
அமெரிக்காவைச் சேர்ந்த மார்க்கெரெட் நாம்பர்க் 1947 இல் முதன் முதலாக ஆர்ட் தெரபியைப் பற்றி புத்தகம் எழுதினார்.
ஆர்ட் என்றவுடன் ஏதோ படம் வரைவது மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். படம் வரைவது, களிமண் சிற்பங்கள் செய்தல், ஏன் நாடகம் போடுதல், நடனம் ஆடுதல் எல்லாம் ஆர்ட் என்பதில் அடங்கிவிடும். இந்தக் கலை முயற்சிகளில் ஈடுபடும் பெரியவரோ சிறியவரோ தங்களை மறந்து ஈடுபட்டிருப்பார்கள். அவர்கள் வரைந்த படங்களைப் பார்த்தோமானால் அது அவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கும். இதிலிருந்து அவர்களுடைய மனதைப் படித்துவிடலாம். அவர்களுடைய மனநிலைக்கேற்ப ஆர்ட் தெரபி பயிற்சிகள் கொடுத்து அவர்களுடைய மனதை ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம். இந்தப் பயிற்சி மூன்றுவிதங்களில் நடைபெறும். உளவியல் அடிப்படையிலான அணுகுமுறையுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசுவது, ஆலோசனை கூறுவது, அப்புறம் அவர்களைப் படம் வரையச் சொல்வது. இதில் படம் வரைவதன் மூலம் நோயாளியின் மனநிலையை ஓர் ஆர்ட் தெரபிஸ்ட் படிக்க முடியும். அதே சமயம் படம் வரையும் அந்தச் செயலே மனநலக் குறைபாட்டிற்கான ஒரு மருந்து போலச் செயல்படும். சாதாரணமாக ஒருவர் படம் வரையும் போது அவர் மனம் ரொம்ப ரிலாக்ஸôக இருக்கும். உதாரணமாக எப்போதும் பதட்டமாக எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் ஒருவரை இந்த ஆர்ட் தெரபி மூலம் அமைதியாக்கிவிடலாம். அவருடைய கவனத்தை ஒருமுகப்படுத்தலாம்” என்கிறார் அமெரிக்காவில் தங்கியிருந்து ஆர்ட் தெரபிஸ்டாகப் பணிபுரியும் சங்கீதா பிரசாத்.
“”அமெரிக்காவில் முதலில் எல்லாம் மனநல மருத்துவர்கள்தாம் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி பண்ணலாம் என்று எங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள். இப்போதெல்லாம் நோயாளிகளே நேரடியாக எங்களை அணுகுகிறார்கள். குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த ஆர்ட் தெரபி அங்கு நல்ல பலனளிக்கிறது. ஸ்கூல் டீச்சரே ஒரு பையன் வித்தியாசமாக இருந்தால் எங்களிடம் சொல்லி விடுகிறார்கள். நாங்கள் அந்தப் பையனுக்கு ஆர்ட் தெரபி மூலம் ட்ரீட்மென்ட் கொடுப்போம். ஸ்கூல் டீச்சர்களுக்கு ஆர்ட் தெரபி பயிற்சியும் கொடுக்கிறோம்” என்று சொல்லும் ஜூடித் ஆரோன் ரூபின் ஆர்ட் தெரபித் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர். ஆர்ட் தெரபி தொடர்பான திரைப்படங்களும் எடுத்துள்ளவர்.
“”ஆர்ட் தெரபியைக் குழந்தைகளுக்கு மட்டுமில்லை, எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம். எய்ட்ஸ் நோயாளிகள் வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டிருப்பவர்கள். விரக்தியின் உச்சியில் வாழ்பவர்கள். அவர்களுக்கு மனநலப் பிரச்சினை ஏற்படுவது இயல்பானதே.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி செய்ய முடியும். முதலில் அவர்களுடைய வியாதியைப் பற்றி அவர்களுக்குப் புரிதல் ஏற்பட உதவுவோம். சிலர் மருந்து சாப்பிடக் கூட மாட்டார்கள். சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது? எதற்கு வாழ வேண்டும்? என்றெல்லாம் யோசிப்பார்கள். வாழ்க்கையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த இந்த ஆர்ட் தெரபி பயன்படுகிறது. நோயாளிகளுக்கு மனநிலை சரியாக இருந்தால்தான் அவர்கள் உட்கொள்ளும் மருந்து நன்றாக வேலை செய்யும். மனநிலையைச் சரிசெய்ய ஆர்ட் தெரபி உதவுகிறது.” என்கிறார் போடா நாரோ. இவர் இந்தியாவுக்கு வந்திருப்பது இப்போது இரண்டாவது முறை.
சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமானுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு போடா நாரோ ஆர்ட் தெரபி முறையில் சேவை செய்திருக்கிறார். தீவிர சைவரான இவருக்கு இந்தியா பிடித்திருப்பதற்கு ஒரே காரணம், அங்கே கிடைக்காத விதவிதமான சைவ உணவுகள் இங்கே கிடைப்பதுதானாம்.
“”புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். உடலில் எந்த அளவுக்கு அவர்களுக்கு வலி உள்ளதை என்பதை அவர்கள் சொன்னாலும் யாரும் அதை உணரப் போவதில்லை; தெரிந்து கொள்ளப் போவதில்லை. அவர்களைப் பார்த்துக் கொள்ளும் நர்சுகளுக்கே கூட தெரியாது. அவர்களைப் படம் வரையச் செய்து அதைப் பார்த்தால் அவர்களின் உடல் வேதனையும் அதனால் நேர்ந்த மனவேதனையும் தெரிய வரும். “நாளைக்குச் செத்துப் போவேன்’ என்று அவர்கள் நினைப்பது அவர்கள் வரைந்த படத்தின் மூலமாகத் தெரிய வந்தது.
குழந்தைகள் உடல் தொடர்பாக ஏதாவது சொன்னால் சாதாரணமாக, “சும்மா இருடா’ என்று ஒரு வார்த்தையில் அடக்கி விடுவோம். அவர்களுடைய மனதைப் புறக்கணித்துவிடுவோம். ஆனால் அவர்களைப் படம் வரையச் சொன்னால் அவர்களுடைய மனதையே வரைந்து கொடுத்துவிடுவார்கள்.” என்கிறார் சங்கீதா பிரசாத். அவர் மற்ற இருவரையும் சந்தித்தது சமீபத்தில்தானாம். அவர்கள் மூவரும் இத்தனைக்கும் அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்கள். ஒருவர் கேன்ஸ். இன்னொருவர் பென்சில்வேனியா. மற்றவர் வெர்ஜினியா.
அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸில் நடந்த ஆர்ட் தெரபி தொடர்பாக நடந்த ஒரு கான்ஃபரன்ஸின் போது, “இந்தியாவிற்கு என்னோடு வந்து ஆர்ட் தெரபியைப் பற்றி அறிமுகம் செய்ய யார் வரப் போகிறீர்கள்?’ சங்கீதா பிரசாத் அறைகூவல் விட்டிருக்கிறார். அந்த அறைகூவலின் விளைவுதான் அமெரிக்கப் பெண்களின் இந்த வருகை.
“இந்த ஆர்ட் தெரபி அமெரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு எட்டுமா? இல்லை பணக்காரக் குழந்தைகளுக்கு மட்டும்தானா?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தோம்.
“”எங்களுடைய முன்னாள் பிரசிடென்ட் ஜான் எஃப் கென்னடி காலத்திலேயே “வறுமைக்கு எதிரான போரை’ அமெரிக்காவில் தொடங்கிவிட்டோம். எனவே அமெரிக்காவில் உள்ள சேரிக் குழந்தைகளுக்கு எங்களுடைய சேவை தொடர்கிறது” என்றார் சற்றுச் சூடாக ஜூடித் ஆரோன் ரூபின்.
———————————————————————————————-
நனவாகுமா இவர்கள் கனவு?
வி. கிருஷ்ணமூர்த்தி
ஓரளவு மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு வசதிகள், இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளன.
குழந்தை கருவாக இருக்கும்போது, குழந்தை பிறக்கும்போது, குழந்தை பிறந்தவுடன் ஆகிய மூன்று நிலைகளில் பல்வேறு காரணங்களால் குழந்தைகளின் மூளை நரம்புகளில் வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை மனவளர்ச்சி குன்றியவர்கள் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
இந்த பாதிப்பை மூன்று நிலைகளாக டாக்டர்கள் வகைப்படுத்துகின்றனர். இதில் மூன்றாவது பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு இருப்பதை அவர்களுடன் பேசிப் பழகினாலொழிய, அவர்களைக் கூர்ந்து பார்த்தாலொழிய கண்டுபிடிக்க முடியாது.
உடலளவில் பெரிய பாதிப்பு இல்லாத இவர்களுக்கு, பேசுவதில், சிந்திப்பதில் சிரமம் இருக்கும். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள மற்ற குழந்தைகளைக் காட்டிலும் இவர்களுக்கு அதிக நேரம் பிடிக்கும். மேலும் ஏற்கனவே புரிந்த விஷயத்தை நினைவுபடுத்தி எழுதுவதற்கும் காலதாமதம் ஏற்படும். மனவளர்ச்சி குன்றியவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் – சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் – இத்தகைய நிலையில் உள்ளனர்.
முறையான பயற்சி மற்றும் செயல்வழி கல்வி போன்ற முறைகளில் சில ஆண்டுகளில் இவர்களைப் பூரணமாகக் குணமாக்க முடியும். பிற குழந்தைகளுடன் போட்டி போடும் அளவுக்குத் தயார்படுத்த முடியும். ஆனால், இதற்கான சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா என்பது கேள்விக்குறியே.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தமிழகத்தின் பின்தங்கிய மலைக்கிராமங்களில் ஒன்றான கீழானவயல் என்ற ஊரில் மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் இத்தகைய பாதிப்பு காரணமாக தனது மகன் பிரேம்குமாரை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார். சிறுவன் பிரேம்குமாரால் படிக்க முடியாது என முடிவு செய்த பெற்றோர், அவனை மாடு மேய்ப்பது, வீடுவீடாகச் சென்று பால் விற்பனை செய்வது போன்ற வீட்டு வேலைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றார். இந்தப் பணிகளை எவ்விதக் குறையும் இல்லாமல் பிற குழந்தைகளைப் போலச் சரியாக செய்வதில் பிரேம்குமாரின் சாமர்த்தியம் தெளிவாகத் தெரிகிறது. “நாமும் மற்ற குழந்தைகளை போல பள்ளிக்குச் சென்று படிக்க மாட்டோமா?’ என்ற ஏக்கம் அவனுக்கு இல்லாமல் இல்லை.
இவனைப் போல பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் சூழல் காரணமாக வீட்டு வேலைக்கும், தோட்ட வேலைக்கும் பெற்றோர்களால் பயன்படுத்தப்படுகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை மாநிலப் பாடத்திட்டம் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இத்தகைய குழந்தைகளை வயது வரம்பு பார்க்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இத்தகைய குழந்தைகள் தேர்வு எழுதுவதற்கு, பார்வையற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது போல, ஓர் உதவியாளரை வைத்துக் கொள்வது, டேப்ரெக்கார்டர் வைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. தேசிய திறந்த நிலை கல்வித் திட்டத்திலும் இத்தகைய குழந்தைகள் கல்வி பெற மத்திய அரசு பல்வேறு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
“ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு’ என்ற அமைப்பு மூலம் இவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளை அரசு நடத்தி வருகிறது.
அரசின் இந்தத் திட்டங்கள் எல்லாம் அணையில் தேங்கியுள்ள நீராகவே உள்ளன. அது பிரேம்குமார் போன்ற கடைமடைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குச் சென்று சேரவில்லை. இந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு சமுதாய அடிப்படையிலான செயல் திட்டங்களை வகுத்து அனைத்து மாவட்டங்களிலும் குழுக்களை அமைத்துள்ளது.
அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் இந்தக் குழுக்களின் செயல்பாடு பல மாவட்டங்களில் இன்னமும் பெயரளவிற்குத்தான் உள்ளது. களப்பணிக்கு இந்தக் குழுக்கள் நம்பியுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தொலைதூர கிராமங்களுக்குத் தேடிச்சென்று இத்தகைய குழந்தைகளைத் தேடிப்பிடித்து பள்ளிகளில் சேர்ப்பதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.
நகர்ப்புறங்களில் செயல்படும் தொண்டு நிறுவனங்களில் பணம் படைத்தவர்களின் குழந்தைகளே அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர். குறைந்த வருவாய்ப் பிரிவினரில் பல குழந்தைகள் உள்ள குடும்பங்களில், மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தைக்கு மட்டும் சிறப்புக் கவனம் செலுத்துவதற்கு அவர்களுடைய பெற்றோர்களால் முடிவதில்லை. இதுவே பல குழந்தைகள் கல்வி பெற முடியாததற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.
புரிந்து கொள்ளும் திறன் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டியது தங்களின் கடமை என்பதைப் பெற்றோர்களும், அரசு நிர்வாகமும் புரிந்து கொண்டால் மட்டுமே பிரேம்குமார் போன்ற குழந்தைகளின் கல்விக் கனவு நனவாகும்.
இத்தகைய குறைபாடு இனி பிறக்கும் எந்தக் குழந்தைக்கும் இருக்கக் கூடாது என்பதற்கு போலியோ ஒழிப்புப் பிரசாரம் அளவுக்கு விழிப்புணர்வுப் பிரசாரப் பணிகள் தேவை. அதேசமயம் இவ்வாறு பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதைப் பற்றி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
திட்டங்களை அறிவித்து விட்டோம் என்பதுடன் நின்றுவிடாமல், அந்தத் திட்டம் சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா? அவ்வாறு சென்று சேரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? என்பன போன்றவற்றை ஆய்வு செய்து அதற்கேற்ப செயல்பட வேண்டியது அரசின் கடமை.
Posted in Active, Add, Affected, AIDS, Arts, Attention, Baby, Brain, Challenged, Child, Children, Colleges, Community, Crafts, cure, Deficiency, Disabled, Disorder, Donate, Education, Europe, Group, Handicrafts, Health, Help, Kid, medical, Mental, Needy, Neuro, NGO, Patient, Poor, Procedure, Project, Pshychic, Pshychology, Relax, Releiver, Reliever, Rich, Schizo, School, service, Shrink, Sick, SNEHA, Spastic, Stress, Suicide, Tax, Tension, Therapist, Therapy, Trauma, Treatment, univ, University, univs, US, USA, Volunteer, Wealthy, Work | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூன் 8, 2007
மூலிகை மூலை: நரை போக்கும் மருதோன்றி
விஜயராஜன்
எதிர் அடுக்குகளில் ஈட்டி வடிவமாக அமைந்த இலைகளையும் வாசனையுள்ள கொத்தாக வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி இனமாகும். இது செடி வகைகளிலேயே சிறு மர வகையை சார்ந்தது எனலாம். தண்டு ஆரம்பத்தில் நாற்கோணமாகவும், வளர்ந்து முதிர்ந்ததும் உருண்டையாகவும் சாம்பல் நிறத்திலும் இருக்கும். இதன் காய்கள் ஏறக்குறைய மணத்தக்காளி பழ அளவு இருக்கும். இலை, பூ, விதை, வேர் மருத்துவக் குணம் உடையது. இலை பித்தத்தை அதிகமாக்கும்; சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்; வேர் நோயை நீக்கி உடலைப் பலப்படுத்தி உடல் சூட்டை அகற்றும்; விதை, சதை- நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் குணம் உடையது. தமிழகம் எங்கும் வளர்கின்றது.
வேறு பெயர்கள்:
- மருதாணி,
- மயிலம்,
- ஜவணம்,
- அடிவானம்,
- கினா,
- ஐவரிணி,
- மநோராச்சமரியம்,
- கொண்டோனி,
- காஞ்சனம்,
- தோரசகத்தி,
- செம்பீகாகவனைக் கன்னி,
- செகப்பி,
- கசப்பி,
- அபிமனைமாலி,
- வன்னத்தி,
- சரணம்,
- நிறத்தான்.
வகைகள்: சீமை மருதோன்றி
ஆங்கிலத்தில்: Lawsoniq inermis; Linn (L.Alba, Lumk); Lythreceae.
மருத்துவக் குணங்கள் : மருதோன்றி இலையை இரவு நேரத்தில் பறித்து அத்துடன் பச்சைப் பாக்கு கொஞ்சம் சேர்த்து அரைத்து படுக்கப் போகும் முன் கை, கால் விரல்களிலுள்ள நகங்களில் வைத்து காலையில் சுத்தம் செய்து வந்தால், நன்கு சிவப்பாக பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
மருதோன்றி இலை 10 கிராம், மிளகு, வெள்ளைப் பூண்டுப் பல் 1, மஞ்சள் 5 கிராம் சேர்த்து அரைத்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின்னர் 1 டம்ளர் பால் குடிக்க மேகநோயால் வருகின்ற உடல் நமைச்சல், அரிப்பு குணமாகும். (3 வாரம் தொடர்ந்து சாப்பிடவும். அது சமயம் புகை, புளி, காரம் நீக்க வேண்டும்.)
இலையை அரைத்து நகப் பாலிசுக்குப் பதிலாகப் போட நக இடுக்குகளில் உள்ள நுண்ணிய கிருமிகளை அழித்து, நகச்சுற்று வராமல் தடுக்கும்.
இலையை அரைத்து நீரில் கரைத்து வாய் கொப்பளிக்கச் சிறு காயம், சிராய்ப்பு, அடி, வாய்ப்புண் குணமாகும்.
கைப்பிடியளவு இலையை எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் போட்டு இலைகள் கருகும் வரை காய்ச்சி பின்னர் இறக்கி வடிகட்டி தலைக்குத் தேய்த்துவர முடி உதிர்வது நிற்கும். முடி விழுந்த இடத்தில் முடி முளைக்கும். இளநரை, பித்த நரை, பூனை முடி உள்ளவர்கள் தேய்த்து வர முடி கறுப்பு நிறமாக மாறும்.
இலையை அரைத்து 100 கிராம் அளவு எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் கலந்து சிறு தீயில் பதமாகப் பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வர முடி நன்கு வளரும். மருதோன்றிப் பூவை தேவையான அளவு எடுத்து படுக்கை அறையில் வைத்து இருந்தால் நல்ல தூக்கம் வரும். இதன் வேர்ப்பட்டையை அரைத்துத் தொடர்ந்து கட்டிவர கால் ஆணி குணமாகும். வேர்ப்பட்டையால் இன்னொரு பயனும் உண்டு. இதன் பட்டையைப் பாலில் அரைத்துப் பற்றுப்போட வெண்மேகம் குணமாகும். மருதோன்றி இலையை 20 கிராம் எடுத்து அரைத்து 1 டம்ளர் பாலில் கலந்து காலையில் மட்டும் 3 நாளுக்குக் குடித்து வர வெள்ளை, பெரும்பாடு, அதிகமான சிறு நீர் போக்கு குணமாகும் (மூன்று நாட்களுக்கு பால் சோறு சாப்பிடவும்).
இலையை அரைத்துச் சொத்தை நகங்களுக்கு வைத்துக் கட்டி ஈரம் படாமல் 3 நாட்கள் வைத்திருந்து, மீண்டும் அதேபோல கட்டி வரச் சொத்தை நகம் விழுந்து புதியதாக நல்ல நகம் முளைக்கும்.
இலை, விதை சம அளவாக எடுத்து அரைத்து சிறு துணியில் அரை நெல்லிக்காயளவு முடிந்து கருவாயில் திணித்து வைக்க பெண்களுக்கு உண்டாகும் வெள்ளை, பெரும்பாடு 4 நாளில் குணமாகும். தினமும் புதியதாகச் செய்யவும்.
மருதோன்றியின் முற்றிய வேர்ப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து 5 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு ஊறவைத்து 1 மணி நேரம் கழித்து 100 மில்லியளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை 50 மில்லியளவு குடித்து வர நகச்சொத்தை குணமாகும். தொடர்ந்து குடித்து வர காமாலை, கல்லடைப்பு, சதையடைப்பு, இரத்தப் போக்கு குணமாகும்.
மருதோன்றி இலையுடன் படிகாரம் சேர்த்து அரைத்துப் பூசி வர, கருந்தேமல், படைகள், நரம்பு இழுப்பு, கால் நோய் குணமாகும். 10 கிராம் இலையை எடுத்து பூண்டு ஒன்றும் மிளகு 5-ம் சேர்த்து அரைத்து 5 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு உப்பிலில்லாத பத்தியம் இருக்க மேக நோய்கள் குணமாகும். 10 கிராம் இலையை எடுத்து ஓர் இரவு நீராகாரத்தில் ஊறவைத்து மறுநாள் காலையில் இலையை நீக்கி 20 நாட்கள் வரை காலையில் குடித்து வர, மேகச் சொறி, படைகள் குணமாகும்.
மருதோன்றிப் பூவை, இரவு நேரங்களில் தலையணையின் கீழ் வைத்துப் படுக்க நித்திரை உண்டாகும். உடல் சூடு தணியும். இதன் இலைச் சாற்றை தாளகத்தை இழைத்து வெண்குட்டத்தின் மேல் பூசிவர நிறம் மாறும். மருதோன்றி இலைகளை அரைத்துப் பற்று போட்டால் தலைவலி நீங்கும். இதன் விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தடவி வர உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாகும்.
Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Health, Healthcare, Henna, Herbs, Hina, Lythreceae, Maru thonri, Maruthaani, Maruthani, Maruthonri, Mehendhi, Mehendi, Mehenthi, mehndi, Mooligai, Naturotherapy, Tatoo, Tattoo, Therapy | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 23, 2007
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடற்சூட்டால் வரும் கேடு!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, சரத்பேட்டை- 602 103.
எனக்கு வயது 35. மனைவிக்கு வயது 22. மூன்று வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. எங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் புண்ணியம் இல்லை. எனக்கு விந்தணுக்கள் குறைவாக உள்ளது. சிறு குழந்தைகளைக் கண்டால் கண்களில் நீர் நிறைந்து விடுகிறது. ஏக்கமும் அழுகையும் கட்டுப்படுத்த முடியவில்லை. என் மனைவிக்கும் மாதவிலக்கு நாட்கள் அதிகமாக இருப்பதால், அவளுடைய உடல் நலம் தேறவும், என் உடல் நிலை கோளாறையும் சரி செய்ய என்ன வழி?
எஸ்.ராஜேஷ், மதுரை.
ஆண்கள் பலருக்கும் விந்தணு குறைபாடு இன்று அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு எனும் பூமியின் வெப்பம் அதிகரித்திருப்பதை ஒரு காரணமாகக் கூறுகின்றனர். மனிதனின் தனிப்பட்ட செயல்களாலும் உடற் சூடு அதிகரிக்கக் கூடும். புகைப் பழக்கம், மதுபானம் அருந்துதல், நிதானமற்ற பதட்டமான சூழ்நிலையில் அலுவல் வேலை, சிறு விஷயங்களுக்குக் கூட வீட்டில் கடும் கோபம் கொள்ளுதல், உணவில் அதிகம் காரம், புளி, உப்பு, காரம்மசாலா சேர்த்தல், ஆவக்காய், மாங்காய் ஊறுகாய் அதிகமாகச் சாப்பிடுதல், இரவில் அதிக நேரம் கண் விழித்தல், குழந்தை வேண்டுமே என்ற ஏக்கத்தில் அதிகமான தாம்பத்ய உறவு, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்காதிருத்தல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது பேதி மருந்து சாப்பிடாதிருத்தல் என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
நாம் உண்ணும் உணவு அனைத்தும் ஏழு தாதுக்களால் ஜீரணம் செய்யப்படுகின்றன. உணவின் சாரத்தை முதலில் பெறும் ரஸதாது தனக்கு வேண்டிய சாரத்தைப் பெற்று, கபத்தைக் கழிவாக வெளியேற்றுகிறது. அடுத்த சாரத்தை ரத்தம் ஜீரணம் செய்து தன் பகுதியைப் பெற்றுக்கொண்டு, பித்தத்தைக் கழிவாக வெளியேற்றுகிறது. மாமிசம் உணவின் சாரத்தை உறிஞ்சி, உடலின் உட்புற துவாரங்களில் கழிவைச் சேர்க்கிறது. மேதஸ் எனும் தாது தன் பங்காகிய உணவின் சாரத்தை உறிஞ்சி, வியர்வையைக் கழிவாக வெளியேற்றுகிறது. எலும்பு, உணவின் போஷகாம்சத்தைப் பெற்று நகம், தலைமுடி ஆகியவற்றைக் கழிவாகவும், மஜ்ஜை உணவுச் சத்தை உறிஞ்சி, தோல், கண் பகுதியில் எண்ணெய்ப் பசையைக் கழிவாகவும், இறுதியாக விந்து, உணவின் சாரத்தைப் பெற்று “ஓஜஸ்’ எனும் உடலின் சாராம்சத்தையும் ஏற்படுத்துகிறது. உண்ணும் உணவின் மிகவும் சூட்சமமான சாரத்தைப் பெறும் விந்து, அணுக்களை உற்பத்தி செய்வதில் முழுவதுமாக உணவை நம்பித்தான் இருக்கிறது. நிலம் மற்றும் நீரின் அம்சம் அதிகம் கொண்ட இனிப்புச் சுவை விந்தணுக்களின் உற்பத்திக்கு அதிக அளவில் உதவி செய்கிறது. அதிரஸம், பாயசம், சர்க்கரை கலந்த பாலுடன் உளுந்துக் கஞ்சி, உளுந்து வடை (பசு நெய்யில் பொரித்தது), சர்க்கரைப் பொங்கல் போன்றவை விந்தணுக்களை அதிகப்படுத்துபவை. கீழ்காணும் மூலிகை மருந்துகளை நாட்டு மருந்துக் கடையிலிருந்து வாங்கி நன்றாக அரைக்கவும்.
அமுக்கராக் கிழங்கு, பூனைக் காலி விதை, தண்ணீர்விட்டான் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, பால் முதுக்கன் கிழங்கு, நெரிஞ்சில் விதை, அதிமதுரம், பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரப் பருப்பு.
மேற்கண்ட பருப்புகளையெல்லாம் வகைக்கு 100 கிராம். அரைத்ததை துணியால் சலித்து, கண்ணாடி பாட்டிலில் காற்று புகாதபடி மூடிவைக்கவும். 5 கிராம் சூரணத்தில் 10 மிலி பசு நெய்யும் (உருக்கி), 5 மிலி தேனும் குழைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் நக்கிச் சாப்பிடவும். விந்தணுக் குறைபாட்டை இம்மருந்து தீர்க்கக் கூடும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிடவும்.
உங்கள் மனைவியின் மாதவிலக்கு நாட்கள் அதிகம் ஏற்படுவதற்கான காரணத்தை அறிவது நலம். இருப்பினும் பொதுவாக புஷ்யானுகம் சூரணம் சாப்பிட நல்லது. 5 கிராம் சூரணம் 1 1/2 ஸ்பூன் (7.5 மிலி) சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர், 1/2 ஸ்பூன் தேன் குழைத்து காலையில், மாலையில் உணவிற்கு 1 மணிநேரம் முன்பாகச் சாப்பிடலாம். சதாவரீகுலம், அசோகாரிஷ்டம், பலசர்ப்பிஸ், குமார்யாஸவம் போன்ற மருந்துகள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு கருப்பையின் வலுவை அதிகப்படுத்தலாம்.
Posted in Alternate, Ayurvedha, Birth, Child, conceive, conceiving, conception, Count, couple, couples, Expect, Female, fertile, fertility, Gene, Health, Help, male, Medicines, Natural, Parent, Pregnancy, Pregnant, Sex, Sperm, Suggestions, Swaminathan, Therapy | Leave a Comment »