Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Theater’ Category

KB Sundarambal – Path breaking Tamil Actress: Chitra Lakshmanan series on Thamizh Cinema History

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

உள்ளதை சொல்கிறேன் – சித்ரா லட்சுமணன்

கே.பி.சுந்தராம்பாள் — எஸ்.ஜி. கிட்டப்பா காதல்

கே.பி.சுந்தராம்பாளின் முழுப் பெயர் : கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்

பிறந்த தேதி : 26.10.1908

மறைந்த தேதி : 24.09.1980

நடித்த படங்கள் : 12

தமிழ் பேசும் படத்தின் முதல் கதாநாயகி டி.பி. ராஜலட்சுமி. அவரைத் தொடர்ந்து எம். எஸ். விஜயாள், கே.டி. ருக்மணி, எஸ்.டி. சுப்புலட்சுமி, எம்.ஆர். சந்தானலட்சுமி என்று எத்தனையோ நடிகைகள் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதிலும் இவர்கள் அனைவரையும் விட புகழோடு விளங்கியவராக இருந்தார் நாடக மேடைகளில் மட்டுமே பாடி நடித்துக் கொண்டிருந்த இசையரசி கே.பி. சுந்தராம்பாள்.

ஏறக்குறைய ஒரு திரைப்படக் கதையைப் போன்றதுதான் கே.பி. சுந்தராம்பாள் அவர்களுடைய வாழ்க்கையும். ஆம், அவருடைய வாழ்க்கையில் தாழ்வு, உயர்வு, வறுமை, செம்மை, காதல், பிரிவு, சோகம் என்று எல்லா அம்சங்களுமே இடம் பெற்றிருந்தன.

தமிழில் முதன் முதலாக லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை என்ற புகழினைப் பெற்ற கே.பி. சுந்தராம்பாள் இசையுலக வாழ்க்கை வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள புகை வண்டியில் பாடி அதன் மூலம் வந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்துகின்ற மோசமான நிலையில்தான் துவங்கியது. ஆனால் அந்த ரயில் பயணங்கள்தான் சுந்தராம்பாள் வாழ்க்கைப் பயணத்தை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி திருப்பிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

கே.பி.எஸ். பாடியபடி பயணம் செய்த புகை வண்டியில் அதிகாரியாக பணியாற்றிய நடேச அய்யர் அவரது இசைஞானத்தைக் கண்டு வியந்தார். அந்த அதிகாரி ஒரு நடிகர். சிறு சிறு வேடங்களில் நடித்தவர். கலைகளில் ஈடுபாடுடைய கலாரசிகரான அவர்தான் வேலு நாயரின் நாடகக் கம்பெனியில் சுந்தராம்பாள் சேரக் காரணமாக இருந்தவர்.

அந்த காலகட்டங்களில் வேலு நாயரின் நாடகக் கம்பெனியில் சேருவது என்பது சாதாரணமான விஷயமல்ல. நடேச அய்யர் அறிமுகப்படுத்தினாலும் சுந்தராம்பாளுக்கு நாடகக் கம்பெனியில் ஒரு தனி இடத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது அவரது கணீர்க் குரல்தான் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும். தனித்துவம் பெற்ற கே.பி.எஸ்.ன் குரலைக் கேட்ட வேலு நாயர் மெய்சிலிர்த்தார்.

உடனே “பாலபார்ட்’ பாத்திரத்தில் நடிக்கின்ற வாய்ப்பையும் தந்தார். “நல்ல தங்காள்’ நாடகத்தில் ஏழாவது குழந்தையாக நடித்து தனது பத்தாவது வயதில் நாடக வாழ்க்கையைத் தொடங்கினார் கே.பி.எஸ்.

சங்கரதாஸ் சுவாமிகள் போன்ற மேதைகளின் பாட்டு வரிகள் திருத்தமான உச்சரிப்பு, அற்புதமான சாரீரம், அருமையான பாவம் போன்ற எல்லாவற்றையும் ஒரு சேர பெற்றிருந்த சுந்தராம்பாள் அவர்களின் மூலம் பாட்டாக வெளிப்பட்டபோது தமிழகம் முழுவதும் அதற்கு தலையாட்டத் தொடங்கியது.

சுந்தராம்பாள் அளவிற்கு உச்ச ஸ்தாயியில் பாடக் கூடிய பெண் கலைஞர் யாரும் இல்லை என்பதால் அவரது புகழ் நாளுக்கு நாள் கூடியது. நாடக வாய்ப்புகளும் தொடர்ந்து வரத் தொடங்கியது. தமிழகம் முழுவதும் தன் இசையால் ஈர்த்த கே.பி.எஸ். பாலபார்ட்டில் இருந்து ஸ்திரீ பார்ட்டுக்கு மாறினார். “வள்ளித் திருமணம்’, “பவளக்கொடி’, “சாரங்கதாரா’, “நந்தனார்’ போன்ற நாடகங்களில் தன் தனி முத்திரையைப் பதித்தார் கே.பி.எஸ்.

அப்போதெல்லாம் பேசும் படங்கள் கிடையாது என்பதால் தினமும் நாடகங்கள் நடக்கும். அதிலும் கே.பி. சுந்தராம்பாள் நடிக்கும் நாடகம் என்றால் இன்று ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு கூடுவதைப் போல கட்டுக்கடங்காத கூட்டம் கூடும். முருக பக்தையான சுந்தராம்பாள் அவர்களின் பெருமை கடல் கடந்தும் பரவியது. அவரது நாடகங்களை இலங்கையில் நடத்த அழைப்பு வந்தது. அதை ஏற்று 1926 ஆம் ஆண்டு தனது பதினெட்டாவது வயதில் இலங்கைக்கு பயணமானார் கே.பி.எஸ்.

அவரது வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பத்தை உண்டு பண்ணப் போகிற பயணம் அது என்று அப்போது அவருக்குத் தெரியாது.

கே.பி.எஸ். போன்று உச்ச ஸ்தாயியில் பிசிறின்றி பாடக் கூடிய ஆற்றல் படைத்த அற்புதமான கலைஞராக விளங்கியவர் எஸ்.ஜி. கிட்டப்பா. காங்கிரசில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த கிட்டப்பா கதர் ஆடைகளைத்தான் அணிவார். தீரர் சத்தியமூர்த்தியுடன் கிட்டப்பாவிற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. சுந்தராம்பாள் ஒரு புறம் தன்து தெய்வீகக் குரலால் நாடக மேடையை கலக்கிக் கொண்டிருந்தார் என்றால் அவருக்கு இணையாக இன்னொரு புறம் மேடைகளை கலக்கிக் கொண்டிருந்தவர் எஸ்.ஜி. கிட்டப்பா.

1906 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் நாள் கங்காதரஅய்யருக்கும், மீனாட்சி அம்மையாருக்கும் திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரம் தாலுகா ஆழ்வார்குறிச்சியில் அவதரித்த கிட்டப்பாவின் ஆரம்ப கால வாழ்க்கை வறுமைக் கோட்டிற்கு மிகவும் கீழேதான் தொடங்கியது.

தந்தை கங்காதர அய்யரின் வருமானம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லாததால் கிட்டப்பாவின் சகோதரர்கள் எஸ்.ஜி. சுப்பையர், எஸ்.ஜி. செல்லப்பா, எஸ்.ஜி. சாமி அய்யர் ஆகிய எல்லோருமே நாடகத் துறையில் ஈடுபட்டனர். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் பணியாற்றிய இவர்களோடு சேர்ந்து கிட்டப்பாவும் தனது ஐந்தாவது வயதில் நடிக்கத் தொடங்கினார். தனது ஆறாவது வயதில் “நல்லதங்காள்’ நாடகத்தில் ஏழு பிள்ளைகளில் ஒருவராக நடித்தார் கிட்டப்பா.

கிட்டப்பாவின் சங்கீத ஞானமும், அயராத அவரது பயிற்சியும் கிட்டப்பாவிற்கென்று ஒரு தனி ரசிகர்கள் வளையத்தை உருவாக்கியது. ஒவ்வொருநாளும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்தது. பின்னாளில் அவரது பாட்டைக் கேட்க பைத்தியமாக பலர் அலையத் தொடங்கினார்கள்.

தங்களது வேலைகளை எல்லாம் விட்டு விட்டு அவரது பாடலைக் கேட்பதற்காக நாடகக் கொட்டகைகளில் தவமிருப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. செம்மங்குடி சீனிவாச அய்யர், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், அரியக்குடி ராமானுஜ அய்யர் போன்ற இசை மேதைகள் எல்லாம் “”கிட்டப்பா நாடக மேடையை விட்டு விட்டு கச்சேரி நடத்த சபா மேடைகளுக்கு வந்தால் நம் நிலை என்னவாகும்?” என்று பேசிக் கொள்வார்களாம்.

தன்னைப் போல பாட எவருமில்லை என்பது கிட்டப்பாவிற்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், தனக்கு இணையாக பாடக் கூடிய பெண் நாடகக் கலைஞர் இல்லையே என்ற வருத்தமும் இன்னொரு புறம் அவரை வாட்டியது. அவருடைய சுதியில் சேர்ந்து பாட முடியாதபடி பல பெண் பாடகிகள் திண்டாடினார்கள்.

இந்தச் சூழ்நிலையில் 1924-ஆம் ஆண்டு ஜூன் 23-ம் நாள் திருநெல்வேலி விஸ்வநாத அய்யர் மகள் கிட்டம்மாளுக்கும் கிட்டப்பாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு கிட்டப்பாவும், காசி அய்யரும் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க இலங்கைக்குப் பயணமானார்கள். அப்போது கே.பி. சுந்தராம்பாள் இலங்கையில் நாடகங்கள் நடத்தி இலங்கை வாழ் மக்களை தன் பக்கம் முழுமையாக ஈர்த்திருந்தார். தமிழ் நாட்டைப் போலவே இலங்கையிலும் அவரது நாடகங்களுக்கு கூட்டம் அலை மோதியது.

எஸ்.ஜி. கிட்டப்பாவிற்கு இணையாக பாடக் கூடிய பெண் கலைஞர் இல்லாதது போல் கே.பி. சுந்தராம்பாளுக்கு இணையாக பாடக் கூடியவர் இல்லாதது அவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. சுந்தராம்பாளுடன் நடிக்கும் நடிகர்கள் அவரோடு இணைந்தும், ஈடு கொடுத்தும் பாட முடியாததால் நாடகம் பார்க்க வந்த ரசிகர்கள் அவர்களை கேலி பேசத் தொடங்கினர். இதனால் பல நடிகர்கள் கே.பி.எஸ். அவர்களோடு நடிக்கவே அச்சப்படத் தொடங்கினர்.

இந்த நேரத்தில் இலங்கை வந்த கிட்டப்பா “தில்லானா மோகனாம்பாள்’ திரைப் படத்தில் பத்மினி நடனத்தைப் பார்க்க சிவாஜி போவாரே, அது போன்று சுந்தராம்பாள் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க கிளம்பினார். அவர்கள் சந்திப்பைப் பற்றி “இசை ஞானம் பேரொளி பத்மஸ்ரீ கே.பி. சுந்தராம்பாள்’ என்ற தனது புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு சுவைபட விவரித்துள்ளார் பாஸ்கரதாசன்.

“”சுந்தராம்பாளின் ஓங்காரமான ரீங்கார நாதத்தைக் கேட்ட கிட்டப்பா கதி கலங்கி, மதி மயங்கி கிறு கிறுத்தும் போனார். “”என்ன சங்கீத ஞானம், என்ன சுகமான சாரீரம், என்ன தெய்வீகமான குரல்” என்று துதிபாட ஆரம்பித்தார். நமக்கு இணையாக பாடக் கூடிய வல்லபி இவர்தான் என்று முடிவு செய்து கொண்டார்.

கிட்டப்பா சுந்தராம்பாளைச் சந்திக்கிறார். ஏற்கனவே கிட்டப்பாவின் மகிமையைக் கேள்விப்பட்டிருந்த சுந்தராம்பாள் அவரை நேரில் பார்த்ததும் காந்தத்தின் வடதுருவமும், தென்துருவமும் சந்திப்பதைப் போல ஈர்க்கப்படுகிறார்.

இருவருமே புகழ் பெற்ற பாடகர்கள். இருவருமே உச்ச ஸ்தாயியில் பாடக் கூடியவர்கள். இருவருமே தங்களுக்கான இசை ஜோடியை தேடிக் கொண்டிருந்தவர்கள். எனவே, இவரும் ஒரு நாடகத்தில் இணைந்து நடிப்பது என்று முடிவு செய்கின்றனர்.
சங்கீத ஜாம்பவான் என்று புகழப்படும் கிட்டப்பாவிற்கு இணையாகப் பாட வேண்டுமே என்ற பயம் சுந்தராம்பாளுக்கும், உச்ச ஸ்தாயியில் பாடும் சுந்தராம்பாளுக்கு ஈடு கொடுத்து பாட வேண்டுமே என்ற அச்சம் கிட்டப்பாவிற்கும் இருந்தது.

இருவரும் சேர்ந்து நடித்த நாடகம் இலங்கையில் அரங்கேறியது. எட்டுக்கட்டை சுதியில் பாடும் கிட்டப்பாவை யாரும் எட்டாத நிலையில் சுந்தராம்பாள் அதே சுதி லயத்தோடு தொட்டுவிட்டார். உச்ச ஸ்தாயியில் பாடலையும், உள்ளத்தையும் ஒரு சேரத் தொட்டுவிட்டார் அவர் என்பது தான் உண்மை.

சுந்தராம்பாளுக்கு இணையாக நடித்த ராஜபார்ட்டுகளை மதிக்காத கலா ரசிகர்கள் சுந்தராம்பாளோடு உச்ச ஸ்தாயியில் ஒன்றிப் போன கிட்டப்பாவின் சங்கீத ரசனையில் மூழ்கித் திளைத்தார்கள்.

ஓங்கிக் குரலெடுத்து இருவரும் பாடினால் ஒரு மைல் தூரத்திற்குக் கேட்கும் என்று பெருமையாக சொல்லிக் கொண்டார்கள். சுந்தராம்பாளும், கிட்டப்பாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தார்கள். ரசிகர்கள் “”இருவரும் நல்ல ஜோடி” என்று அவர்கள் காதுபாட வாழ்த்திப் பேசினார்கள்.

இலங்கைக்குச் சென்ற சில மாதங்களிலேயே இசை மேதைகள் இருவரும் புகழின் உச்சியில் பறந்தார்கள். வானம்பாடியாய் இசை வானில் பாடித் திரிந்தார்கள். ஈடு இணையற்ற ஜோடி என்று நிரூபித்துக் காட்டினார்கள்.

இருவரும் சேர்ந்து நடிப்பதென்றால் நாடகக் கம்பெனிகள் பெரிய தொகையை கொட்டித் தர தயாராக இருந்தனர். அதற்குக் கட்டணமாக ரசிகர்களும் அள்ளித்தர ஆவலாக இருந்தனர். இருவரும் பல இடங்கள் பயணம் செய்து நாடகங்கள் நடித்து ஏராளமாக சம்பாதித்தார்கள். கிட்டப்பா மீது சுந்தராம்பாள் அபரிமிதமான பக்தியும், விசுவாசமும் கொண்டிருந்தார்.

சுந்தராம்பாளின் இசையில் மயங்கிய கிட்டப்பா நாடகத்திற்கு மட்டுமின்றி இல்லறத்திற்கும் சுந்தராம்பாள்தான் சரியான ஜோடி என்ற முடிவில் திட்டவட்டமாக இருந்தார். கலை வாழ்க்கையில் உள்ள உறவும், பரிவும் சுந்தராம்பாளின் வாழ்க்கையிலும் இருந்தது. கிட்டப்பாவையே தனது வாழ்க்கைத் துணையாக ஏற்க சுந்தராம்பாளும் முடிவு செய்தார்.

இந்த முடிவில் சுந்தராம்பாளின் தாய் மாமனான மலைக்கொழுந்துவிற்கு (இவர் தான் கே.பி.எஸ். அவர்களுக்கு நிர்வாகியாக பணியாற்றியவர்) உடன்பாடு இல்லை என்றாலும் சுந்தராம்பாளை எதிர்த்து அவர் ஒன்றும் செய்யவில்லை.

சதிபதிகளின் கலைப் பயணமும், வாழ்க்கைப் பயணமும் ஆரம்பத்தில் இனிதாகவே போய்க் கொண்டிருந்தது.

——————————————————————————————————————————————————————————————

எஸ்.ஜி. கிட்டப்பாவுக்கு
கே.பி.சுந்தராம்பாள் எழுதிய கடிதங்கள்

கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் ஒருவரை ஒருவர் அளவிட முடியாத அளவுக்கு நேசித்தாலும் மேடையில் மட்டும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு பாடுவார்கள். மேடையில் அவர்கள் போட்டி போட்டு நடிப்பதையும், வசனங்கள் பேசுவதையும் பார்த்த பல ரசிகர்கள் இந்தப் போட்டி அவர்கள் வாழ்க்கையில் எந்த விரிசலையும் ஏற்படுத்திவிடக் கூடாதே என்று அஞ்சினார்கள்.

சுந்தராம்பாள் குணக்குன்று. ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர். எந்தவித கெட்ட பழக்கத்திற்கும் ஆளாகாதவர். ஆனால் கிட்டப்பா அப்படிப்பட்டவர் அல்ல. மது போன்ற சில தீய பழக்கங்கள் அவரிடம் குடி கொண்டிருந்தன. இதையெல்லாம் மீறி கிட்டப்பா மீது மாறாத நேசம் கொண்டிருந்தார் கே.பி.எஸ். என்பதுதான் உண்மை.

கிட்டப்பா சுந்தராம்பாளை மணமுடிக்க தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது கே.பி.எஸ். கேட்டது ஒரே கேள்விதான்.

“”என்னைக் கண்கலங்காமல் கடைசிவரை வைத்துக் கொள்வீர்களா?” என்பதுதான் அக்கேள்வி.

“”கடைசிவரை என்னை கைவிடக் கூடாது” என்று சத்தியம் வாங்கிக் கொண்ட பிறகே கிட்டப்பாவை கணவனாக ஏற்றுக்கொண்டார் கே.பி.எஸ்.

1927-ன் தொடக்கத்தில் மாயவரத்தில் உள்ள கோவிலில் இருவரது திருமணம் நடைபெற்றதாக ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் கே.பி.எஸ்.
தமிழ் நாடாக மேடைகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த ஜோடிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடையாளமாக வாரிசு ஒன்று கே.பி.எஸ். வயிற்றில் வளர ஆரம்பித்தது.

இந்த நேரம் செங்கோட்டை சென்ற கிட்டப்பா, கே.பி.எஸ். அவர்களைப் பார்க்க வரவேயில்லை. கடிதங்கள் மட்டுமே அவரது எண்ணங்களைச் சுமந்து வந்தது. தன் முதல் மனைவியான கிட்டம்மாவுடன் கிட்டப்பா இருந்தாலும் கே.பி.எஸ். அதற்காக பொறாமைப்படவில்லை. ஆனால் யாரோ சிலர் விதைத்த விஷ விதை கிட்டப்பா மனதில் விருட்சமாக வளர்ந்ததால் சுந்தராம்பாளை விட்டு விலகியே இருந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான கே.பி. சுந்தராம்பாள் தன் கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் அவர் எந்த அளவு கிட்டப்பா மேல் பாசமும் நேசமும் கொண்டிருந்தார் என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது.

கரூர். நவம்பர் 1927

அன்புள்ள பதி அவர்களுக்கு, அடியாள் அநேக நமஸ்காரம். என்னிடம் நேரில் சொன்னபடி நடப்பதாகத் தெரியவில்லை. நான் செய்த பாக்கியம் அவ்வளவுதான்.

உங்கள் மீது வருத்தப்படுவதில் பிரயோசனமில்லை. தாங்கள் பார்த்துச் செய்வதென்றால் செய்யலாம். “வளைகாப்பு’ இட வேண்டுமென்று தங்களிடமும் சொன்னேன். தங்கள் அண்ணாவிடமும் சொன்னேன். ஒருவரும் கவனிக்கவில்லை.

என்னைப் பற்றி கவனிக்க ஏதாவது கொடுத்து வைத்திருக்கிறேனா? உங்களுடைய சுக துக்கங்களில் பாத்யப்படும் தன்மையில்தான் இருக்கிறேனா!

நான் இங்கும் நீங்கள் அங்கும் இருக்கும் நிலையில் நீங்கள் ஏன் கவனிக்கப் போகிறீர்கள். ஏதோ என் மீது இவ்வளவு அன்பு வைத்து தவறாமல் எழுதியதைப் பற்றி அளவு கடந்த சந்தோஷமடைகிறேன். தவறாமல் கடிதமாவது அடிக்கடி எழுதிக் கொண்டிருக்க வேண்டுமென்று அன்போடு நமஸ்கரித்துக் கொள்கிறேன்.

எது எப்படியிருந்தாலும், தங்கள் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவும். தங்கள் உடம்பு இளைத்தால் தங்களைத் திட்டமாட்டேன். கிட்டம்மாளைத்தான் திட்டுவேன் என்று அவளிடம் சொல்லுங்கள்.

அடிக்கடி வெளியில் சுத்த வேண்டாம். தூக்கம் முழிக்க வேண்டாம். காலா காலத்தில் சாப்பிடவும். அனாவசிய விஷயங்களில் புத்தியைச் செலவிட வேண்டாம். நானும் அப்படியே நடக்கிறேன்.

மாதமும் ஆகிவிட்டது. தங்களுக்குத் தெரியாதது அல்ல. அவ்வளவுதான் நான் எழுதலாம். நேரில் வாருங்கள். உங்களை என்ன செய்கிறேன் என்று பாருங்கள்.

இப்படிக்கு,

தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள்,
சுந்தரம்.

சுந்தராம்பாளை மணமுடிப்பதற்கு முன்னால் கிட்டப்பா அவருக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே அவர் காப்பாற்றவில்லை என்றபோதிலும் கூட கிட்டப்பாவை தன் மனதில் ஏற்றி வைத்திருந்த இடத்திலிருந்து ஒரு அங்குலம் கூட கீழே இறக்கவில்லை சுந்தராம்பாள்.

1928 ஜனவரி மாதம் 28-ஆம் தேதி சுந்தராம்பாளுக்குப் பிறந்த குழந்தை பத்து நாள் மட்டுமே ஜீவித்திருந்தது. குழந்தையின் பிறப்பு, இறப்பு இரண்டிற்குமே கிட்டப்பா வரவில்லை.

சுந்தராம்பாளின் கடிதங்களுக்கு கிட்டப்பா எழுதிய பதில் கடிதங்களிலும் கேலியும் கிண்டலும் நிறைந்திருந்ததாகத் தெரிகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுந்தராம்பாள் தன் மன உணர்ச்சிகளையெல்லாம் கடிதமாக வடித்து கிட்டப்பாவிற்கு அனுப்பினார்.

தேவரீர் அவர்கள் சமூகத்திற்கு எழுதியது.

தங்கள் லெட்டர் கிடைத்துச் சங்கதி அறிந்தேன். தங்களுக்கு எந்த வகையிலும் நான் துரோகம் செய்தவளல்ல, தாங்கள் அறிந்த கிண்டல் வார்த்தைகளை எனக்கு எழுத வேண்டாம். இந்த மாதிரி எழுதி என் மனம் கொதித்தால் தாங்கள் ரொம்ப காலத்திற்கு úக்ஷமமாக இருப்பீர்கள். அம்மாதிரியெல்லாம் எழுதினால் தங்களுக்கு பலன் மீளாத நரகக் குழிதான்.

கிருஷ்ணலீலா பார்த்ததில்லையே என்று பார்க்கப் போனேன். அதைப் பற்றி வித்தியாசம் என்றால் இருக்கட்டும் எத்தனையோ வித்தியாசங்களில் இதுவும் ஒன்று.

மனம் போலிருக்கும் வாழ்வு. என்னைப் பற்றி கவலையே தங்களுக்கு வேண்டாம். நான் இப்படியெல்லாம் எழுதினேன் என்று வருத்தம் வேண்டாம்.

தங்களுக்கு பதில் போட இஷ்டம் இருந்தால் எழுதவும். இல்லையென்றால் வேண்டாம்.

இதுதான் கடைசி லெட்டர். இதுதான் கடைசி. இதுதான் கடைசி. இது உண்மையென்றும், பொய்யென்றும் பின்னால் தெரியும்.

இப்படிக்கு
சுந்தரம்.

“”தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள் சுந்தரம், தங்கள் அன்பை என்றும் மறவாத காதலி கே.பி. சுந்தராம்பாள்” என்றெல்லாம் எழுதி கடிதத்தை முடித்த சுந்தராம்பாள் மேற்கண்ட கடிதத்தை எந்த அடைமொழியுமின்றி சுந்தரம் என்று முடித்திருப்பதிலிருந்தே அவர் எந்த அளவிற்கு கோபமாக இருந்திருக்கிறார் என்பதை நம்மால் உணர முடிகிறது அல்லவா?

நம்மாலேயே உணர முடியும்போது கிட்டப்பா அதை உணரமாட்டாரா? உணர்ந்தார். அதன் விளைவாக நீண்ட காலத்திற்குப் பின்பு அன்பான கடிதமொன்றை தன் பண்பான மனைவிக்கு எழுதி அனுப்பினார்.

தனியாக இருந்த காலகட்டங்களில் சுந்தராம்பாள் நாடகத்தில் உச்சக் கட்டத்தில் இருந்தபோதிலும் நிம்மதி இல்லாமல் தவித்தார். அதே போன்று கிட்டப்பாவும் நாடகங்களில் புகழோடு இருந்தபோதிலும் சுந்தராம்பாள் இல்லாததால் தவிப்புக்கு ஆளாகியிருந்தார். அவர்களைப் பிரித்த காலமே 1931-ல் மீண்டும் அவர்களை இணைத்தது.

அவர்கள் பெயரிலேயே நாடகக் கம்பெனி அமைத்து இருவரும் நடத்தத் தொடங்கினர். ரசிகர்கள் பெருமகிழ்ச்சியோடு அவர்கள் நாடகத்திற்கு உற்சாக வரவேற்பினைத் தந்தனர். சுந்தராம்பாள் – கிட்டப்பா ஆகிய இருவரது பாடல்களும் இசைத் தட்டாகவும் வெளிவந்து விற்பனையில் சக்கைபோடு போட்டது.

1931-ல் பேசும்பட காலம் வந்த பிறகும் நாடகங்கள் தங்கள் செல்வாக்கை இழக்காது இருந்தன.

“”கே.பி. சுந்தராம்பாள் வேடன், வேலன், விருத்தன் என்று ராஜபார்ட்டாக நடிப்பார். கிட்டப்பா வள்ளியாக ஸ்திரீ பார்ட்டாக நடிப்பார். இருவரும் மேக்அப் போட்டு வெளியில் வருவதற்குள் ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் அதிகமாக இருக்கும். கிட்டப்பா திரைக்கு முன்னால் வந்து ஒரு ஆலாபனை செய்துவிட்டுப் போனால்தான் ரசிகர்கள் கொஞ்சம் அமைதியடைவார்கள்.

சுந்தராம்பாளும் வந்து பாடமாட்டாரா என்று ஜனங்கள் ஏங்கிக் கிடப்பார்கள். இருவருமே உச்ச ஸ்தாயியில் பாடக் கூடியவர்கள். ஒலிபெருக்கி வசதியில்லாத அந்த காலகட்டத்தில் அவர்கள் குரல் கடைசியில் உள்ளவர்களுக்கும் கேட்கும்” என்று கிட்டப்பா – சுந்தாரம்பாள் நாடகங்கள் பற்றி தன் அனுபவங்களைக் கூறுகிறார் குன்னக்குடி வைத்தியநாதன்.

கிட்டப்பா மதுவுக்கு அடிமையாகி இருந்ததால் நாடகங்களில் நடிக்கும்போது ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு வருவதற்கு முன் திரையின் ஓரமாக சாராயத்தை சுடுதண்ணீரில் கலந்து சுடச் சுட குடிப்பார். இந்த குடிப்பழக்கம் தனது நாடக முதலாளியான கன்னையா இறந்த பின் அதிகரித்தது. காலையில் எழுந்தவுடன் காப்பி குடிப்பதற்கு பதில் சுடச் சுட சாராயம் சாப்பிட ஆரம்பித்தார் அவர். அதன் விளைவாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. வருமானம் குறைந்தது. ஆனால் செலவு கூடியது.

உடல் நலம் சரியாக இல்லாததால் நாடக நிகழ்ச்சிகளை குறைத்துக் கொண்டாலும், நாடகத்தில் நடிக்காமலும், பாடாமலும் இருப்பது பித்து பிடித்திருப்பது போல் உள்ளதாக அவர் உணர்ந்தார்.

இந்த சமயத்தில் மீண்டும் விதி அவர்கள் வாழ்க்கையில் தன் விளையாட்டைத் தொடங்கியது. அவர்கள் இருவருக்குமிடையே இருந்த தீவிரமான அன்பையும் மீறி அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் முளைத்தன. மீண்டும் சுந்தாரம்பாளைப் பிரிந்து சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார் கிட்டப்பா. மீண்டும் தனி மரமானார் சுந்தராம்பாள்.

மதுபானம் போன்ற தீய பழக்கங்களால் கிட்டப்பாவின் உடல் நாளுக்கு நாள் மெலிந்தது. 1933 மார்ச் 29-ஆம் நாள் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. தகவல் அறிந்த சுந்தாராம்பாள் அவரை சென்னைக்கு அழைத்து வந்து டாக்டர் பீமாராவ் அவர்களிடம் காட்டினார். அவரைப் பரிசோதித்த பீமாராவ் குடல் வெந்து புண்ணாகி இருப்பதாகவும், ஈரல் சுருங்கிப் போய்விட்டதாகவும், எவ்வளவு செலவு செய்தாலும் அவர் குணமாவதற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது என்றும் கூறினார்.

இருப்பினும் செலவுப் பற்றி கவலைப்படாமல் சிகிச்சையைத் துவங்கச் சொன்னார் சுந்தராம்பாள். தீவிர சிகிச்சை தொடங்கியது. கிட்டப்பாவின் அருகிலேயே இருந்து அவரைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார் சுந்தராம்பாள்.

எந்நேரமும் அவரது நெற்றியில் திருநீறைப்பூசி அவர் செய்த பிரார்த்தனை வீண் போகவில்லை. கிட்டப்பா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொள்வதற்காக மைலாப்பூரில் பெரிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தார் சுந்தாரம்பாள்.

விதி விரட்டவே பூரண குணமடைவதற்கு முன்பே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் செங்கோட்டைச்குச் சென்றுவிட்டார் கிட்டப்பா.

உடல் பூரண குணமடையாத நிலையில் திருவாரூரில் ஒரு நாடகத்திற்கு ஒப்புக் கொண்ட அவர் அதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்தார். அதிலிருந்து படுத்த படுக்கையிலிருக்கும் நிலைக்கு ஆளானார் அவர். கால்கள் வீக்கம் கண்டன. கண்கள் மஞ்சளாயிற்று. நாட்கள் செல்லச் செல்ல அவரது முகம் வெளிறிப் போனது. உடல் துரும்பாக இளைத்தது. மெல்ல பேசும் சக்தியும் குறைந்தது.

1933 டிசம்பர் 2-ஆம் தேதி சனிக்கிழமை காலையில் வயிற்று வலியால் தூடித்த அவரைப் பரிசோதித்த டாக்டர் ஒரு ஊசி போட்டார். கிட்டப்பா நாக்கு வறண்டது. சிறிதளவு தண்ணீரை விழுங்கி விட்டுத் திரும்பிப் படுத்தவர் அதற்குப் பிறகு திரும்பவேயில்லை.

கிட்டப்பாவின் மரணச் செய்தி நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உண்டு பண்ணியது. சுந்தராம்பாளை யாராலும் தேற்ற முடியவில்லை. உயிருக்குயிராக நேசித்த தன் காதல் கணவனின் மறைவைத் தாங்க முடியாது துடித்தார் அவர்.

கிட்டப்பா இறந்தபோது அவரது வயது 28. தனது 20-வது வயதில் அவரை மணந்த சுந்தராம்பாள் ஆறு வருடங்கள் மட்டுமே அவரோடு வாழ்ந்தார். அதிலும் பல மாதங்கள் இருவரும் தனித்தனியே பிரிந்திருந்தனர்.

சாதாரணமாக பெண்கள் மணமுடிக்கும் வயதான 26 வயதில் தன் கணவரை இழந்த சுந்தராம்பாள் மிகுந்த மன உறுதியோடு பொட்டையும், பூவையும் துறந்தார். வெள்ளைச் சேலை உடுத்தத் தொடங்கினார். இல்லற வாழ்விலிருந்து துறவறத்திற்குள் புகுந்தார்.

கணவன் இறந்த பிறகு பல மாதங்கள் கொடுமுடி வீட்டிற்குள்ளேயே அடைந்து கொண்டிருந்தார்.

——————————————————————————————————————————————————————————————
லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற
முதல் நடிகை சுந்தராம்பாள்

இந்தியாவிலேயே திரைப்படத்தில் நடிக்க ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகை சுந்தராம்பாள் அவர்கள்தான். எந்த கால கட்டத்தில் அவர் ஒரு லட்சம் ரூபாயை சம்பளமாகப் பெற்றிருக்கிறார் என்பதை சரியா உணர்ந்தால்தான் கே.பி.எஸ். படைத்திருப்பது எவ்வளவு பெரிய சரித்திரம் என்பதை உணர முடியும்.

கே.பி.எஸ். ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் மதிப்பு 14 ரூபாய். அதன்படி பார்த்தால் ஒரு லட்சம் ரூபாய்க்கு 7143 சவரன் வாங்கலாம். இன்றைய சவரன் விலை தோராயமாக ரூபாய் ஏழாயிரம் என்று வைத்துக்கொண்டு கணக்கிட்டால்கூட கே.பி.எஸ். அன்று பெற்ற தொகை 5 கோடி ரூபாய்க்கு சமம். அதன்படி பார்த்தால் முதலில் மட்டுமல்ல- இன்று வரை அதிக சம்பளம் வாங்கிய ஒரே இந்திய நடிகை கே.பி. சுந்தராம்பாள் மட்டுமே என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

1935-ம் ஆண்டு “பக்த குசேலா’வை முந்திக்கொண்டு “நந்தனார்’ திரைக்கு வந்தது. “நந்தனார்’ வெற்றிப்படமாக அமைந்தபோதிலும் அந்த படத்திற்குப் பின் கே.பி.எஸ். வேறு படங்களில் நடிக்கவில்லை. படங்களில் நடிக்கவில்லையே தவிர காங்கிரஸ் கூட்டங்களில் தேசியப் பாடல்களையும், கோவில் கச்சேரிகளில் தெய்வீகப் பாடல்களையும் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார் அவர். காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும், செயலாளரான காமராசரும் சுந்தராம்பாளை பல கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

காங்கிரஸ் கூட்டங்களில் கூட்டம் சேர கே.பி.எஸ். அவர்களின் பாட்டுக்கள் பெரிதும் உதவியது என்பதை யாரும் மறுக்க முடியாது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜாஜி, “”என்ன இவ்வளவு கூட்டம் கூடியிருக்கிறதே” என்று வியந்தார். “”இது சுந்தராம்பாள் பாட்டுக்கு கூடிய கூட்டம்” என்று சத்தியமூர்த்தி கூறியதும் ராஜாஜி ஆச்சர்யம் அடைந்தார்.

மகாத்மா 1936-ல் தமிழிகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது சுந்தராம்பாள் பிறந்த ஊரான கொடுமுடி அருகே கார் பழுதடைந்தது. அப்போது காந்தி அடிகளை கே.பி.எஸ். இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் சத்தியமூர்த்தி. வீட்டிற்கு வந்த காந்தியடிகளுக்கு வெள்ளி டம்ளரில் பால் தரப்பட்டது. “”பாலோடு இந்த டம்ளரும் எனக்குத்தானே” என்று மகாத்மா கேட்க, முகமலர்ச்சியோடு அதைத் தந்தார் கே.பி.எஸ். அதை ஏலமாக விட்டு நிதியாக காங்கிரஸ் இயக்கத்திற்கு அளித்தார் மகாத்மா.

1935-ஆம் ஆண்டு வெளியான “நந்தனார்’ திரைப் படத்திற்குப் பிறகு 1940-ல் வெளியான “மணிமேகலை’ திரைப்படத்தில் நடித்திருந்தார் கே.பி.எஸ். அதற்குப் பின் எந்தப் படத்திலும் நடிக்க அவர் ஒப்புக் கொள்ளவில்லை. கச்சேரி, தேசியப் பாடல்கள் என்று அவரது வாழ்க்கைப் பயணம் நடைபெற்றது.

1940-க்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த கே.பி.எஸ். மீண்டும் 1948-ல் நடிக்க ஒப்புக் கொண்ட படம் “ஒüவையார்’. அந்த நாட்களில் “ஒüவயார்’ நாடகத்தை டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்தி வந்தனர். அதில் டி.கே. சண்முகம் ஒüவையாராக நடித்தார். மிகச் சிறப்பாக மேடைகளில் ஒüவையாராக நடித்த அவரைத்தான் “ஒüவையார்’ படத்தில் நடிக்க முதலில் அணுகினார் எஸ்.எஸ். வாசன்.

ஆனால் டி.கே. சண்முகம் அவர்கள் “”நான் பெண் வேடம் போட்டது நாடக மேடைக்கு மட்டுமே சரி. சினிமாவிற்கு சரிப்பட்டு வராது. ஒரு பெண் இந்தப் பாத்திரத்தில் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்” என்றார். “”அப்படியென்றால் யாரை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று நீங்களே கூறுங்கள்” என்று எஸ்.எஸ். வாசன் கேட்க, டி.கே. சண்முகம் சொன்ன பெயர்தான் கே.பி. சுந்தராம்பாள்.

ஒüவையாராக நடிப்பதற்கு ஏற்ற தமிழ் உச்சரிப்பும், கணீர்க் குரலும் உள்ள ஒரே நபர் கே.பி.எஸ். அவர்கள்தான். அவர் ஒüவையாராகத் தோன்றினாலே போதும்~ நடிக்கவே தேவையில்லை” என்று டி.கே.எஸ். சொல்ல அதை ஏற்றுக் கொண்டார் எஸ்.எஸ். வாசன்.

கே.பி.எஸ். அவர்களிடம் யார் மூலம் தொடர்பு கொள்வது என்று சிந்தித்த வாசன் அவர்களுக்கு “ஹிந்து’ சீனிவாசன் நினைவு வந்தது. சீனிவாசன் வாசனுக்கு நல்ல நண்பர். கே.பி.எஸ். அவர்களுக்கோ அவர் வழிகாட்டியாக இருந்தார். சீனிவாசன் அவர்கள் துணையுடன் வந்த வாசன் கேட்க தட்டாமல் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார்.

கே.பி.எஸ். படத்தில் நடிக்க வருடம் ஒருலட்ச ரூபாய் சம்பளம், அது தவிர மாதம் ஒரு தொகை தர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த லட்ச ரூபாய் சம்பளத்தின் மதிப்பு எவ்வளவு என்பதை வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இன்னொரு விவரத்தையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நாளில் ஜெமினி ஸ்டூடியோவை வாங்க வாசன் கொடுத்த பணம் 86,496 ரூபாய்தான்.

1947-ல் தொடங்கப்பட்ட “ஒüவையார்’ படம் 15.8.1953 அன்று சுதந்திரதின வெளியீடாக வெளிவந்தது. “”படம் முடிவடைந்ததும் எஸ்.எஸ். வாசன் அவர்கள் அப்போது ஜெமினியில் பொது மேலாளராக இருந்த நம்பியாரிடம் காசோலையைக் கொடுத்தனுப்பி ஆறு வருடத்துக்குரிய தொகையை அம்மையாரையே எழுதிக் கொடுக்கும்படி சொல்லி அனுப்பியிருந்தார்.

ஆனால் சுந்தராம்பாள் அந்த காசோலையில் பெருந்தன்மையுடன் நான்கு லட்சும் ரூபாயை மட்டும் பூர்த்தி செய்து கொள்வதாக அவரிடம் சொன்னார்” என்று “”இசைஞானப் பேரொளி பத்மஸ்ரீ சுந்தராம்பாள்” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் பாஸ்கரதாசன். ஆனால் “”இது ராஜபாட்டை அல்ல” என்ற தனது புத்தகத்தில் நட்சத்திரத்தின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் இந்த சம்பவத்தைப் பற்றி மட்டும் சிவகுமார் எழுதியுள்ள தகவல் பாஸ்கரதாசன் கூற்றுக்கு மாறுபட்டதாக இருக்கிறது.

ஜெமினி உருவாக்கிய ஒரு படம் முடிய ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. படத்தின் கதாநாயகிக்கு (ஆண்டுக்கு) ஒரு லட்சம் சம்பளம் பேசி ஓராண்டுக்குள் படத்தை முடிப்பதாக ஒப்பந்தம். திட்டமிட்ட காலவரைக்குள் படம் முடியவில்லை. காலம் கடந்தாலும் மாபெரும் படைப்பாக அது உருவாகியது.

தனது அந்தரங்கச் செயலாளர் பி.பி. நம்பியாரை அழைத்தார் வாசன். “”ஹீரோயினுக்கு ஓராண்டில் படம் முடிப்பதாகப் பேசி ஒரு லட்சம் சம்பளம் முடிவு செய்தோம். இப்போ ஏழு வருஷம் ஆயிடுச்சு. அதனால நாம கொஞ்சம் கூட்டி நாலு லட்சம் தருவோம்” என்றார்.

பேராசை பிடித்த ஹீரோயின் “”ஐயறு சொன்ன சொல் தவறமாட்டாரு. ஏழு வருஷம் வேலை செஞ்சிட்டு நாலு லட்சம் சந்தா எப்படி?” என்று கேள்வி கேட்டார்.
உடனே நடிகையின் விருப்பப்படி ஏழு லட்சம் தர சம்மதித்தார். ஆனால் அவர் பேராசையைக் கண்டிக்கும் வகையில் ஓராண்டு வருமானம் 7 லட்சம் என்பது போல எழுதி வாங்கிக் கொண்டார்.

வருமானவரி இலாக்காவுக்கு விபரம் தெரிந்தால் ஏழு லட்சத்தில் சுமார் 4.5 லட்சம் ரூபாய் வரியாகப் போய்விடும்” என்பதைப் பின்னர் அறிந்த நடிகை தன் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்க, உடனே ஏழாண்டுக்கும் வருமானத்தைப் பிரித்து எழுதிக் கொடுத்தார்.”

மேற்கண்டவாறு தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் சிவகுமார்.

“ஒüவையார்’ படத்தைப் பார்த்த டி.கே. சண்முகம் “”நீங்கள் நடிக்கவில்லை. ஒüவையாராகவே வாழ்ந்திருக்கிறீர்கள்” என்று கே.பி.எஸ்.ûஸ புகழ்ந்தார்.

“ஒüவையார்’ திரைப்படத்திற்குப் பிறகு கே.பி.எஸ். நடித்த திரைப்படம் கலைஞரின் கை வண்ணத்தில் உருவான “பூம்புகார்’.

“”பூம்புகார்” திரைப்படத்தை எடுப்பது என்று முடிவெடுத்தவுடன் கவுந்தியடிகளாக கே.பி.எஸ், அவர்கள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுத்த கலைஞர் எஸ்.எஸ். ராஜேந்திரனையும் அழைத்துக்கொண்டு கே.பி.எஸ். அவர்களின் சம்மதம் பெற கொடுமுடி புறப்பட்டார். அவர்கள் கோரிக்கையை கேட்டவுடன் முதலில் தனது மறுப்பைத் தெரிவிக்கிறார் கே.பி.எஸ்.

“”கவுந்தியடிகளாக நீங்கள் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும். பொருத்தமாகவும் இருக்கும்” என்று இருவரும் வற்புறுத்த “”நான் கடவுள் மீது தீவிர பக்தி கொண்டவள், நீங்களோ திராவிடர் கழக கொள்கையுடையவர்கள். எப்படிப் பொருத்தமாக இருக்கும்?” என்று தேங்காய் உடைப்பது போல் பட்டென்று உடைக்கிறார் கே.பி.எஸ்.

கலைஞரும் விடவில்லை. “”நாங்கள் எடுப்பது கடவுள் படமோ, கட்சிப் படமோ அல்ல. கற்புக்கரசி கண்ணகி பற்றிய படம். நீங்கள் நடிக்கப் போவது சமணத்துறவி வேடம்” என்கிறார்.

“”சரி, மகனே. பழனிக்குச் சென்று முருகனின் உத்தரவு பெற்ற பிறகுதான் நடிப்பது பற்றி நான் முடிவு சொல்ல முடியும்” என்று இறுதியாக கே.பி.எஸ். சொல்ல, “”முருகனிடம் கேட்கும்போது கருணாநிதி கேட்டதாகச் சொல்லுங்கள். என் கோரிக்கை என்பதால் முருகன் மறுக்கமாட்டார். உடனே ஒப்புதல் அளித்து விடுவார்” என்று விளையாட்டாகச் சொல்கிறார் கலைஞர்.

அவர் விளையாட்டாகச் சொன்னது பலிக்கிறது. சில நாட்களில் கொடுமுடியில் இருந்து கலைஞருக்குத் தகவல் வருகிறது. “”முருகன் உத்தரவு கொடுத்து விட்டான்” என்று.

தன்னுடைய லட்சியத்தில் யாருக்கும் விட்டுக் கொடுக்காத போக்கை கே.பி.எஸ். கொண்டிருந்தார்.

“”கடவுளை நிந்திக்கும் பாடலைப் பாடமாட்டேன்” என்று “பூம்புகார்’ படப்பிடிப்பில் நிர்த்தாட்சண்யமாக அவரால் சொல்ல முடிந்திருக்கிறது. மாற்றப்பட்டது பாடல் வரிகள்” எனது தனது “வியப்பளிக்கும் ஆளுமைகள்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் சாமினாதன்.

“பூம்புகார்’ திரைப் படத்திற்குப் பிறகு கே.பி.எஸ். நடித்த படங்களில் குறிப்பிடத்தக்க படங்கள் என்று “திருவிளையாடல்’, “துணைவன்’ ஆகிய படங்களைச் சொல்லலாம். இவைகள் தவிர “மகாகவி காளிதாஸ்’, “கந்தன் கருணை’, “உயிர் மேல் ஆசை’, “சக்திலீலை’, “காரைக்கால் அம்மையார்’, “திருமலை தெய்வம்’ (கடைசி படம்) ஆகிய படங்களிலும் நடித்தார் அவர்.

கே.பி.எஸ். நடித்து வெளிவராத ஒரே படம் சிவாஜி, தேவிகா ஜோடியாக நடித்த “ஞாயிறும் திங்களும்’. படம் ஏழாயிரம் அடி வளர்ந்த நிலையில் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சடகோபன் இறந்துவிட படமும் நின்று போனது.

அன்று சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதரை “ஏண்டாப்பா’ என்றும், கலைஞர் கருணாநிதியை “”மகனே” என்றும் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தியை “அண்ணா’ என்றும், அழைக்கும் உரிமை பெற்றிருந்த கே.பி. சுந்தராம்பாள் உடல்நிலை 1980-ஆண்டு நலிவடையத் தொடங்கியது.

24.9.80 அன்று இரவு 9.30 மணிக்கு அறிஞர் அண்ணாவால் “”கொடுமுடி கோகிலம்” என்று அழைக்கப்பட்ட கே.பி.எஸ். முருகனடி சேர்ந்தார். உடன் தகவல் அன்றைய முதல்வரான எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கை நடத்த உத்தரவிடும் எம்.ஜி.ஆர். அப்போது நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்த மேஜர் சுந்தரராஜனை அழைத்து செலவுகளுக்கு தன் சொந்தப் பணத்தைத் தருகிறார்.

கலைஞர் காலையில் கே.பி.எஸ். அவர்கள் வீட்டுக்கு வந்து மலர் அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்ல, நடிகர் சங்கத்தில் 25.9.80 அன்று காலை முதல் மாலை வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கே.பி.எஸ். அவர்களின் உடல் வைக்கப்பட்டது. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், சிவகுமார், பி.எஸ். வீரப்பா, எஸ்.வி. சஹஸ்ரநாமம், இயக்குநர்கள் முக்தா சீனிவாசன், பா. நீலகண்டன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

கலைஞர் வானொலியில் இரங்கற்பா பாடினார்

கலை உலகில் தமிழ் இன்பம் கொட்டக் கொட்ட
கொடிகட்டிப் பறந்த கோகிலம் மறைந்ததோ

Posted in Actress, Cinema, Drama, Films, History, Hits, KBS, Kittappa, Lakshmanan, Movies, music, Nandhanar, Singer, Stage, Sundarambaal, Sundarambal, Sundharambaal, Sundharambal, Suntharambaal, Suntharambal, Superhits, Theater, Theatre | Leave a Comment »

Nadigavel MR Radha, Pralayan street theater performances & EVR Periyar – Ki Veeramani on Chennai Sangamam

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2008

எம்.ஆர். ராதா ஒருவர்தான், மக்களை தன் பின்னாலே அழைத்துச் சென்றவர்
மற்ற நடிகர்கள் எல்லாம் மக்கள் பின்னாலே சென்றவர்கள்

எம்.ஆர். ராதா நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் உரை

பிரளயன் அவர்கள் மிக அழகாக எதையுமே சிந்தித்து செயல்படக் கூடியவர்கள்.

அதற்கு முன்னாலே ஜாதியைப்பற்றி அவர்கள் நடத்திய நாடகம் மிக ஆழமான கருத்துகளைத் தொட்ட ஒன்றாகும். அவரைப்பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னாலே பார்த்து எங்களுடைய ஏடுகளிலே கூட எழுதியிருக்கின்றேன்.

அரைமணி நேரத்தில் நல்ல நாடகம்

அதைக்கூட பெரியார் திடலிலே அழைத்து செய்யவேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அந்த வகையிலே பார்க்கும்பொழுது ஒரு 30 மணித்துளி களிலே குடும்பச் சூழல்கள் என்ன என்பதை அவர்கள் நாடக வாயிலாகக் காட்டினார்கள்.

அந்த நாடகத்தில் நடித்தத் தோழியரிடம் நான் ஒரே ஒரு கருத்தைச் சொன்னேன். நாங்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டேயிருக்கின்ற பொழுது ஒரு எண்ணம்தான் என்னு டைய மனதிலே ஓடிற்று.

பெரியாருடைய சிந்தனைகளுக்கு அப்படியே உருவம் கொடுத்ததைப் போல இருந்தது – உங்களுடைய சம உரிமை மாற்றம் என்பது.

இருவருக்கும் சம உரிமை

சமஉரிமை என்று சொல்லுகின்ற நேரத்திலே கூட இப்பொழுது எப்படித் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்பதையும் நீங்கள் இரண்டு காட்சிகளாகக் காட்டினீர்கள்.

உரிமை என்பது அடிமையாக இருக்கக் கூடாது என்பது இரு பாலாருக்கும் உரியது. அந்த அடிமைத் தனம் ஒரு சாராருக்குத்தான் உரியது என்று நினைப்பதோ அல்லது உரிமை என்ற பெயராலே எல்லையற்ற நிலைக்கு கட்டுப்பாடு இல்லாமல் செல்வது அதன்மூலமாக மற்றவர்கள் வெறுப்பது என்பது போன்ற ஒரு நிலையோ இல்லை.

பெரியாரின் பெண்ணுரிமை கருத்து

இருவரும் ஒத்துப் போதல். இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் என்ற அடிப்படையிலேதான் தந்தை பெரியார் அவர்கள் சிந்திந்து கருத்துக்களை சொன்னார்கள். எப்படி நடிகவேள் ராதா அவர்கள் பல நேரங்களிலே நாடகத்தின் மூலமாகச் சொன்ன கருத்துகள் புரட்சிகரமான சிந்தனைகளாக இருந்தாலும் அந்த புரட்சிகரமான சிந்தனைகளுக்கு ஒரு மூலம் எங்கிருந்து அவருக்குக் கிடைத்தது, கரு எங்கிருந்து பெற்றார்கள் என்று சொல்லும்பொழுது அது ஆழமான – தந்தை பெரியார் அவர்களுடைய பெண்ணுரிமை தத்துவ கருத்துகள்.

படிக்காதவர்தான் கலைவாணர்

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களுடைய நகைச்சுவைகள் எல்லாம் அறிவார்ந்த நகைச் சுவைகள் – சமுதாய மாற்றத்தை மய்யப்படுத்துகின்ற நகைச்சுவையாக இருந்தது.

அதிகம் படிக்காத கலைவாணர் அவர்கள் எப்படி ஆழமான சமூக விஞ்ஞானி போல இருந்து நகைச்சுவைச் கருத்துகளை அவருடைய குழுவின் மூலமாகப் பரப்பினார், திரைப்படங்கள் மூலமாகவும் பரப்பினார். உங்களுக்கு ஆசிரியர் யார்? என்று கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களிடத்திலே கேட்டபொழுது, அவர் ஒரு ஆசிரியரைக் காண்பித்தார்.

பச்சை அட்டைக் குடிஅரசு என் ஆசிரியர்

யார் அந்த ஆசிரியர் என்று சொல்லும்பொழுது ஒரு பச்சை அட்டை குடிஅரசை எடுத்துக்காட்டி அந்தக் காலத்திலே தந்தை பெரியார் அவர்கள் நடத்திய அந்தப் புரட்சிக்கரமான ஏட்டைக் காட்டி இவர்தான் எனக்கு ஆசிரியர். இதை நாங்கள் வாராவாரம் படித்துவிட்டுத்தான், இதிலே இருக்கின்ற கருத்துகளை எங்களுக்குத் தகுந்தாற்போல மாற்றிக் கொண்டு பிரச்சாரம் செய்கிறோம். மற்றவர்களைத் திருத்துவதற்காக, சமுதாய மாற்றத்திற்காக செய்து கொண்டு வருகின்றோம் என்று சொன்னார்கள்.

சுயசிந்தனையாளர் எம்.ஆர். ராதா

அதுபோல ராதா அவர்களைப் பொறுத்தவரையிலே, கற்றலினும் கேட்டலே நன்று என்று சொல்லக்கூடிய அளவிலே ஆழமாக ஒரு கருத்தைக் கேட்பார். உடனே அதை எப்படி உருவகப்படுத்தி செய்யவேண்டும் என்று நினைக்கக் கூடிய அளவிற்கு, ரொம்ப சுய சிந்தனையாளராக தன்னை ஆக்கிக் கொள்வார்.

தந்தை பெரியார் அவர்கள் – எப்படி ஒப்பற்ற ஒரு சுய சிந்தனையாளரோ, அந்த ஒப்பற்ற சிந்தனையாளருக்கு, ஒரு நல்ல சுயமாக சிந்திக்கக் கூடிய ஒரு நல்ல ஆற்றல் வாய்ந்த கலைஞராக நடிகவேள் ராதா அவர்கள் கிடைத்தார்கள்.
ராதா அவர்களப்பற்றி எனக்கு முன்னாலே பேசிய கவிஞர் நந்தலாலா அவர்களும், எழுத்தாளர் பாமரன் அவர்களும் மிக அருமையான கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.

நடிகவேள் ராதா அவர்களைப்பற்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கலாம். அவ்வளவு ஆழமான சிந்தனையுள்ளவர்.

சினிமா துறையை கடுமையாகச் சாடக்கூடியவர்

சினிமாத்துறையை மிகக் கடுமையாகச் சாடக்கூடிய தந்தை பெரியார், பெரியார் திடலில் நடிகவேள் ராதா அவர்களுடைய பெயராலே ஒரு மன்றத்தையே அமைத்தார். அந்த மன்றத்தை தந்தை பெரியார் அவர்களே திறந்தார்கள்.
அவர் எப்படி அங்கீகரித்தார் என்பதை அந்த மன்ற அடிக்கல் நாட்டு விழாவின் பொழுதும் சரி, ராதா மன்றத்தைத் திறந்த போதும் தெளிவாக தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.

ராதா வர மறுத்தார்

ராதா அவர்களுடைய பெயராலே மன்றத்தை பெரியார் அமைத்தார். நடிகவேள் ராதா மறுத்தார். . எனது பெயரால் மன்றம் வேண்டாம் என்றெல்லாம் சொன்னார். ராதா மன்றம் திறப்பு விழா நிகழ்ச்சிக்குக் கூட வர மறுத்தார். பெரியார் திடலில் ராதா மன்றத் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.

ராதா ஏன் வரவில்லை என்று அய்யா அவர்கள் கேட்டு, பிறகு கடுமையாகச் சொல்லி, ஏன் ராதா இங்கு வர கூச்சப்படுகிறார்? அவரை வரச் சொல்லுங்கள் என்று சொன்னார். நிகழ்ச்சி பாதி நடந்துகொண்டிருக்கிறது. நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களுடைய வீடு அப்பொழுது தேனாம்பேட்டையில் இருந்தது.

`நடிகர்களுக்குப் புத்தி வரவேண்டும்!`

என்னுடைய வண்டியை அனுப்பி அவரை அழைத்துவரச் செய்து மேடையில் உட்கார வைத்தோம்.

அவரும் தனக்கு இதற்குத் தகுதி உண்டா? என்று கேட்டு தன்னடக்கத்தோடு, கூச்சப்பட்டு மேடையில் அமர்ந்திருந்தார்கள். அந்த நேரத்திலே தந்தை பெரியார் சொன்னார் – நடிகவேள் ராதா அவர்களுக்காக நான் எதையும் செய்யவில்லை. நான் யாரையும் அவ்வளவு சுலபமாக பாராட்டி விடுபவன் அல்ல.

நான் ராதா அவர்களுடைய பெயராலே மன்றத்தைத் திறக்கிறேன் என்று சொன்னால், இது நடிகவேள் ராதா அவர்களுக்காக அமைக்கவில்லை. நடிகர்களுக்குப் புத்தி வரவேண்டும் என்பதற்காக நான் இதைச் செய்திருக்கிறேன். இப்படி செய்வதன் மூலமாக – ஒரு கொள்கையோடு இருந்தால், அவர்களைப் பாராட்டுவதற்கு நாட்டிலே ஆள் இருக்கிறார்கள் என்பதற்காக இதைச் செய்திருக்கிறேன்.

மற்ற நடிகர்கள் மக்களுக்கு ஏற்றாற்போல

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களை ஏன் பாராட்டுகிறேன்? நடிகவேள் ராதா அவர்களை ஏன் பாராட்டுகிறேன் என்றால் மற்றவர்கள் எல்லாம் ரசிகர்கள், பார்வையாளர்கள். பார்ப்பவர்கள் எதை விரும்புகிறார்களோ அதை சொல்லி கைதட்டல் வாங்கிக் கொண்டு அவர்கள் பின்னாலே போகக் கூடியவர்களாகத்தான் நாடகக் கலைஞராக இருந்தவர்கள், நடிகர்கள் எல்லாம்.

ராதா மட்டும்தான் மக்களை தன் பின்னாலே அழைத்தவர்

ஆனால், ராதா ஒருவர்தான் மக்கள் பின்னாலே போகாமல்,. மக்களைத் தன் பின்னாலே அழைத்துக் கொண்டு வந்து ஒரு புரட்சிக்கரமான சிந்தனை உள்ள நடிகர் என்ற அந்தச் சிறப்புக்காகத்தான், ராதா பெயர், காலத்தை வென்று என்றைக்கும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இங்கே அவருக்கு மன்றம் வைக்கிறோம் என்று சொன்னார்கள்.

சிலபேர் சலசலப்பு காட்டிய நேரத்திலேகூட அவர்கள் அதைப் பொருட்படுத்தாமலே, சிறப்பாக அய்யா அவர்கள் அதை செய்தார்கள்.

பெரியார் அங்கீகாரம்

எதற்காக இதைச் சொல்லுகிறோம் என்றால், இதைவிடப் பெரிய அங்கீகாரம் வேறு என்ன இருக்க முடியும்? தந்தை பெரியார் அவர்களே அவரை அங்கீகரித்தார். எம்.ஆர். ராதா அவர்களுக்கு ஒரு நிரந்தரமான நினைவையே அவர்கள் செய்திருக்கின்றார்கள். இன்றைக்கு அந்த மன்றம் புதுப்பிக் கப்பட்டு, என்றைக்கும் அந்தப் பெயர், காலம் காலமாக நிலைத்திருக்கக் கூடிய அளவிற்கு ஒரு அருமையான மன்றமாக, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டினுடைய அங்கீகாரம்.

விருதுகளுக்கு மேலானது

அதுவும் பெரியாரிடம் கிடைத்த அங்கீகாரம் என்பது விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது, மேலானது. அதற்கு என்ன காரணம்? ராதா அவர்கள் ஆங்கில வார்த்தையை சரளமாகப் பேசுவார். ரொம்பப்பேருக்குத் தெரியாது, அவர் ஆங்கிலம் கூட படிக்கத் தெரியாதவர் என்று. அவர் எம்.ஆர். ராதா என்று கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டதே சிறைச்சாலைக்குப் போன பிற்பாடு, எம்.ஆர். ராதா என்று கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டார்.

சிறைச்சாலையிலே புத்தகங்களைக் கொண்டுவரச் சொல்லி ஆங்கிலத்தைப் படித்தார். ஆரம்பக் கட்டத்தில் ஆங்கிலத்தை எப்படிப் படிப்பார்களோ அது மாதிரி எல்லாம் ஆர்வத்தின் காரணமாக ஆங்கிலத்தை அவர்கள் படித்தார்கள்.

பொது அறிவு அதிகமுள்ளவர்

ஆனால், பொது அறிவு அதிகமுள்ளவர். நம்முடைய நாட்டிலே படிப்பிற்கும், பொது அறிவிற்கும் சம்பந்தம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்ட யாரையாவது உதாரணம் காட்ட வேண்டுமானால், எப்படித் தலைவர்களிலே தந்தை பெரியார் அவர்களைக் காட்டுகின்றார்களோ, அதுபோல நடிகர்களில் நடிகவேள்ராதா அவர்களைத்தான் காட்டவேண்டும்.
அந்த அளவிற்கு அவர்கள் தெளிவானவர். அவர் ஒரு நல்ல சுயமரியாதைக்காரர். நல்ல துணிச்சல்காரர். அவருக்குத் தெளிவான அறிவு இருந்தது என்பது மட்டும் முக்கியமல்ல. நல்ல பொது அறிவோடு இருக்கிறார்கள். நல்ல சுயமரியாதைக்காரராக அவர்கள் இருந்தார்கள். சமுதாயப் புரட்சியாளராக வாழ்ந்தார்கள்.

கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்

கலையை ஒரு கருவியாக அவர்கள் பயன்படுத்தினார்கள். கலை ஒரு கருவியாகப் பயன்பட வேண்டுமே தவிர கலை ஒரு வியைட்டாகப் பயன்படக் கூடாது என்று கருதியவர். ஒரு திரைப்படத்தை ஒருவர் 3 மணிநேரம் பார்த்தால் பயனுள்ளதாக இருக்கவேண்டும்.

இங்கு பிரளயன் அவர்கள் நடத்திய அரைமணி நேர வீதி நாடகத்தைப் பார்த்தோம். உடனே அதிலிருந்து பாடத்தோடு வெளியே போகிறோம். அற்புதமான செய்தியை மனதிற்குள் வாங்கிக் கொள்கிறோம்.

கலைத்துறையில் எதிர்நீச்சல்

நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களுடைய நாடகத்தைப் பார்த்து மாறாவதர்களே கிடையாது. அஸ்திவாரத்தை ஆட்டி விடுவார். எதிர் நீச்சல் அடித்து கலைத்துறையிலே வாழ்ந்தவர்.

எப்படித் தந்தை பெரியார் அவர்கள் எதிர்நீச்சல் அடித்த வரோ, அதேபோல பெரியாருடைய கொள்கைகளை நாடகத் தில் நடித்து எதிர்நீச்சல் அடித்தவர். அதுமட்டுமல்ல, எல்லா வற்றிலும் அவர் வரலாறு படைத்தவர்.

நவாப் டி.எஸ். ராஜமாணிக்கம் நாடகம்

அவருக்கு எதிர் துறையிலே யார் நாடகம் நடத்திக் கொண் டிருந்தார்கள் என்று சொன்னால் நவாப் டி.எஸ். ராஜமாணிக்கம். அவருடைய பெருமை எல்லாம் என்னவென்றால் ஏகப்பட்ட காட்சி ஜோடனைகள், சீன்கள் எல்லாம் மிகப் பெரிய அளவுக்கு இருக்கும். உடனே மக்கள் அதைப் பார்த்து பிரமிக்க வேண்டும். அசர வேண்டும் என்று கருதி அவர் புராண நாடகங்களைத்தான் போடுவார். அவர் மறந்தும் சமூக நாடகங்கள் போட மாட்டேன் என்று புராண நாடகமாகப் போட்டுக் கொண்டிருந்தவர். நடிகவேள் ராதா அவர்கள் நேர் மாறான கொள்கை உடையவர்.

சமூக நாடகம்தான் போடுவார்

நான் எதுவும் புராண நாடகம் போடமாட்டேன். சமூக நாடகம்தான் போடுவேன் என்று செயல்படுபவர் நடிகவேள் ராதா. இதுவரையில் நாடகத்தில் புரட்சி, நாடகத்தில் புரட்சி என்று சொல்லுகிறார்கள். வசனத்தில் மட்டும் அல்ல, நாடக அமைப்பிலும் புரட்சி செய்தவர் நடிகவேள் ராதா அவர்கள்.

இங்கே எப்படி, ஒரே ஒரு திரையைக் கட்டி ஒரு அரை மணிநேர நாடகத்தை மிகச் சிறப்பாக நடத்திக் காட்ட முடியும் என்ற ஒரு நிலையை இன்றைக்கு வீதி நாடகத்தில் பார்க் கின்றோம்.

எதிர்ப்புகள் – மறக்கமுடியாத ஒன்று

ராதா நாடகத்தில் இரண்டே இரண்டு திரை இருக்கும் அவ்வளவுதான். முதலில் ஒரு பச்சைக் கலர் படுதாவை எடுத்து விடுவார். அந்த ஸ்கிரினிலேயே காடு, அரண்மனை எல்லாம் இருக்கும். தனித்தனி சீன்கள் எல்லாம் அவருக்குத் தேவையில்லை.

விழுப்புரத்தில் பெரிய கலவரம்

ராதா அவர்கள் எதிர்ப்புகளை சந்தித்த விதம் இருக்கிறதே அது மறக்கமுடியாத ஒன்றாகும். எழுத்தாளர் பாமரன் அவர்கள் பேசும்பொழுது சொன்ன மாதிரி அன்றைய எதிர்க்கட்சி காங்கிரஸ்தான் அதுவும் விழுப்புரத்திலே பெரிய கலவரம் எல்லாம் நடந்தது. எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு அவர் நடத்துகின்ற நாடகத்திற்கு காங்கிரஸ்காரர்கள் தடை வாங்குவார்கள். அந்தத் தடை நீக்குவதற்கு அவர் உயர்நீதி மன்றம் போவார். அங்கே அவர் வழக்கறிஞரை வைத்திருப்பார். உடனே அந்தத் தடையை நீக்கி உத்தரவை வாங்கிக் கொண்டு வந்து ராதா அவர்கள் நாடகம் நடத்துவார்.

எம்.கே. நம்பியார்தான் வழக்கறிஞர்

காவல்துறை நடிகவேள் ராதா நாடகத்திற்குத் தடை போடும். இந்த ஊரில் தூக்குமேடை நாடகம் நடத்தத் தடை – அனுமதியில்லை என்று தடை போடுவார்கள்.

இன்றைக்கு டில்லி உச்சநீதிமன்றத்திலே பிரபலமாக இருக்கக் கூடிய வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அவர்களுடைய தந்தையார் எம்.கே. நம்பியார் என்பவர். சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரேயுள்ள சாலை ஓரத்தில் உள்ள வீட்டில் தான் குடியிருந்தார். அவர்தான் அந்த காலத்திலேயே பிரபலமான வழக்கறிஞர். ராதா அவர்கள் நம்பியாரிடத்திலே சொல்லுவார். அவர் இவருக்கு நிரந்தர வழக்கறிஞர் மாதிரியானவர். உடனே நாடகத்திற்குப் போடப்பட்ட தடையை நீக்கி ஒரு உத்தரவை வாங்கிக் கொண்டு வந்து விடுவார்.

தூக்கு மேடைக்குத் தடையா? மலாயா கணபதி

அதுவரைக்கும் நாடகம் நடத்தாமல் இருக்கமாட்டார். தூக்குமேடை நாடகத்திற்கு இன்றைக்கு அனுமதி இல்லை என்று சொன்னவுடனே அன்று மாலையே மலாயா கணபதி என்ற நாடகம் நடைபெறும் என்று அறிவிப்பார்.

அந்த நாடகத்தைப் பார்த்தால் தூக்குமேடை நாடகம் என்னவோ அதேதான் இருக்கும் ஆரம்பத்தில். சரி மலாயா கணபதி நாடகத்திற்குத் தடை என்று சொன்னால் இன்னொரு பெயரைச் சொல்லுவார்.

தந்தை பெரியார் தலைமையில் நாடகம்

ஒரு ஊரில் தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையிலே நாடகத்தைப் போட்டிருக்கிறார் ராதா அவர்கள். ராதா அவர்களுடைய சமயோசித சிந்தனை என்பது பட்டென்று வரும்.

அய்யா அவர்கள் முன் வரிசையில் அமர்ந்து நாடகம் பார்த்துக் கொண்டிருக்கின்றார். உங்களுக்குத் தெரியும். ஒரு நான்கைந்து சீன்கள் முடிந்தவுடனே பாராட்டிப் பேசுவார்கள். அல்லது நாடக இடைவேளையின் பொழுது பாராட்டிப் பேசுவார்கள்.

ஏ ராதா!

பாதி நாடகம் முடிந்தவுடனே இடைவேளை நேரத்தில், இப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் பேசுவார் என்று ராதா அவர்கள் அறிவித்தார். நாடகம் பார்க்க வந்த காங்கிரஸ்காரர்கள் இரண்டுபேர்கள் திடீரென்று எழுந்திருந்து ஏ ராதா! ரொம்ப ஒருமையிலே – உன் நாடகத்தைப் பார்ப்பதற்குத்தான் நாங்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்திருக்கின்றோம். இங்கே யாருடைய பேச்சையும் கேட்பதற்காக நாங்கள் வரவில்லை. நாடகத்தை தொடர்ந்து நடத்து என்று சொன்னார்கள்.

ஒரே பரபரப்பு

உடனே ஒரே பரபரப்பு. ராதா வருகிறார். ஒலிபெருக்கியை வாங்குகிறார். என்ன சொல்றீங்க என்று கேட்கிறார். நேருக்கு நேர் பேசுவார் – துணிச்சலாக என்ன சொல்றீங்க என்று கேட்டார். இல்லை. உங்களுடைய நாடகத்தைப் பார்ப்பதற்குத்தான் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்திருக்கின்றோம். இங்கே இவருடைய பேச்சை கேட்பதற்காக நாங்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு வரவில்லை என்று சொன்னார்கள்.

நாடகம் முடிந்து போய்விட்டது

அப்படியா? நாடகம் முடிந்துபோய்விட்டது (சிரிப்பு – கைதட்டல்). போகிறவர்கள் போகலாம். இருக்கிறவர்கள் என்றால் அவருடைய பேச்சுக்களை கேட்கலாம். அவ்வளவுதான் என்று எம்.ஆர். ராதா அவர்கள் சொன்னார். டிக்கெட் வாங்கி னீர்கள் அல்லவா? நாடகத்தைப் பார்த்து முடித்து விட்டீர்கள். நாடகம் முடிந்து போய்விட்டது. நீங்கள் போகலாம் என்று ராதா சொன்னார். அப்புறம் மக்கள் என்ன செய்வார்கள்? எல்லோரும் உட்கார்ந்தார்கள். அய்யா அவர்கள் பேசிய பின்பு அதற்கு பிறகு நாடகம் தொடர்ந்து நடந்தது.

சமயோசித புத்தி

இது மாதிரி சமயோசிதமான அவருடைய துணிச்சல் இருக்கிறது பாருங்கள். அது பாராட்டுக்குரியது. அவருடைய நாடகங்களில் சில நேரங்களில் கடுமையான வசனத்தைக் கூட சொல்லுவார். ஒருமுறை நடிகவேள் ராதா அவர்களுடைய நாடகத்திற்கு ஏ.எஸ்.பி. அய்யர் தலைமை தாங்கியிருக்கின்றார். அவர் அய்.சி.எஸ். உயர் நீதிமன்ற நீதிபதி. ராதா அவர்களுடைய நாடகங்களை நேரடியாக வந்து பல நேரங்களில் பாராட்டியவர்.

ராதா நாடகத்திற்கு ஏ.எஸ்.பி. அய்யர் தலைமை

ஏ.எஸ்.பி. அய்யர் நாடகத்திற்கு தலைமை தாங்கியிருக்கின் றார். இரத்தக் கண்ணீர் நாடகத்தில் ராதா அவர்கள் நிறைய நேரம் உட்கார்ந்து வசனம் பேசக்கூடிய வாய்ப்பு வரும். அப்படி பேசக் கூடிய நேரத்திலே கேள்வி கேட்டு பதில் சொல்லக்கூடிய நிலை வரும். ஒரு பேப்பரை கையில் வைத்துக் கொண்டு அன்றாட நிகழ்ச்சி கேள்விகளுக்குப் பதில் சொல்லுவார். தன்னுடைய கருத்துகளை சொல்லுவதற்கு வசதியாக வைத்துவிடுவார்.

ஒருவர் கேள்வி கேட்பார். ராதா பதில் சொல்லுவார். திரைப் படத்தைபற்றி ராதா சொல்லுவார். யாருடா? இவர்கள் என்று வேலைக்காரரைப் பார்த்து ராதா கேட்பார். புது டைரக்டர்கள் எல்லாம் இப்பொழுது படம் எடுப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்று வேலைக்காரர் சொல்லுவார். உடனே ராதா சொல்லுவார் நானும் ஒரு காலத்தில் படம் எடுத்தவன்தான்டா, நானும் ரொம்ப சிறப்பாக இருந்தவன்தான் என்று சொல்லுவார். நானும் நடிக்கிறவன்தான்டா, இப்பொழுதும் நடிக்கிறவன்தான்டா, நானும் படம் எடுப்பேன் என்று ராதா சொல்லுவார். அந்த வேலைக்காரர் சொல்லுவார். நீங்கள் நடித்தால் எவன் பார்ப்பான் என்று கேட்பார். அதற்கு ராதா அவர்கள் பளிச்சென்று பதில் சொன்னார்.

பார்ப்பான் – பார்ப்பான்

எவன் பார்ப்பான்? என்று வேலைக்காரர் கேட்பார். பார்ப்பான் பார்ப்பான் என்று நடிகவேள் ராதா பதில் சொன்னார் (பலத்த கைதட்டல் – சிரிப்பு) . பார்ப்பான் பார்ப்பான் என்று சொன்னார். ஏ.எஸ்.பி. அய்யர் அந்த மேடையில் இருக்கின்றார். இது மாதிரி சமயோசிதமாக பதில் சொல்லக்கூடியவர் நடிகவேள் ராதா. (சிரிப்பு கைதட்டல்) ஜனவரி 31-ஆம் தேதி தி.மு.க. கலைக்கப் படுகிறது. எங்களையெல்லாம் கமிசனர் அலுவலகத்தில் கைது செய்து ஒவ்வொருவராகக் கொண்டு வருகின்றார்கள்.

நடிகவேள் ராதா அவர்களையும் நள்ளிரவைத் தாண்டி இரண்டு மணியளவில் கைது பண்ணிக் கொண்டு வந்தார்கள். இங்கே பேசிய பாமரன் அவர்கள்கூட அதை எடுத்துச் சொன்னார்.

யார் இந்த அய்.ஜி.?

எல்லோரையும் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்ல அழைத்து வந்தார்கள் கமிசனர் அலுவலகத்திற்கு. போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் இருக்கின்ற படங்களை எல்லாம் பார்த் துக் கொண்டு வந்தார். இது யார்? என்று கேட்டுக் கொண்டே வந்தார். இவர் அந்த அய்.ஜி., இந்த அய்.ஜி. என்று சொன்னார்.

ஆமாம் தாடி வைத்திருக்கிறாரே இவர் எப்பொழுது அய்.ஜி ஆனார் என்று கேட்டார். திருவள்ளுவர் படம் மாட்டப்பட் டிருக்கின்றது. அதைத்தான் ராதா அவர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். பிறகு எங்களையெல்லாம் சிறைச்சாலைக்கு அழைத்துப் போனார்கள். அங்கு அவரிடம் பேசிக் கொண்டி ருப்போம். பழைய சம்பவங்களை எல்லாம் சொல்லுவார்.

மிசா கைதிகளுக்கு
எங்களைப் பார்க்க நேர்காணல் என்ற முறையில் குடும்ப உறுப்பினர்கள் வருவார்கள். சிறையில் இருந்த சில பேரிடம் சிறைச்சாலை மூத்த அதிகாரிகள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் உங்களை விடுதலை செய்வது பற்றி யோசிப்போம் மிசாவில் கைதியாக வந்த நீங்கள் திரும்பவும் எப்பொழுது வெளியே போவீர்கள் என்று சொல்ல முடியாது. எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் உங்களை வைத்திருக்கலாம். இப்படியே உங்களுடைய வாழ்க்கை முடிந்து போனாலும் முடிந்து போய்விடும். ஆயுள் கைதிகள் கூட எப்பொழுது வெளியே போகப் போகிறார் என்ற ஒரு கால

நிர்ணயம் உண்டு.

மிசாவில் அப்படி எல்லாம் கிடையாது. நாளைக்கே வெளியே விட்டாலும் விடுவார்கள். அல்லது எத்தனையோ ஆண்டுகள் கழித்து 40 ஆண்டுகள் கழித்து நீங்கள் போகக் கூடிய நிலை இருந் தாலும் இருக்கும். இதில் காலவரையறை எல்லாம் கிடையாது. சட்டப்படி அதற்கு இடம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

ராதாவை அவருடைய துணைவியார் சந்தித்தார்

ஒன்றிரண்டு பேர் இப்படி மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத் துப் போனவர்களும் உண்டு. ஏனென்றால் சிறைக்குள் பலகீன மாகக் கூடிய ஒரு சூழல் இருக்கும். அப்படியிருக்கும்பொழுது நேர்காணல் வருகிறது. வாரத்திற்கு ஒருமுறை குடும்பத்தினர் வந்து சந்திப்பார்கள். ராதா அவர்களை அவருடைய துணைவியார் வந்து சந்தித்தார்.

ராதா அவர்களுக்கு ஒரு நாற்காலி போட்டு உட்கார வைத்திருப்பார்கள். பக்கத்தில் ஒரு ஸ்டூல் போட்டு அவருடைய வீட்டாரை உட்கார வைத்திருந்தார்கள். இவர்களுக்குப் பக்கத்தில் ஒரு ஜெயில் அதிகாரி இருப்பார். இவர்கள் பேசுவதை குறிப்பெடுப்பதற்கு அங்கே சுருக்கெழுத்தாளர் ஒருவர் இருப்பார். அங்கே ஒன்றும் ரகசியமாக பேச முடியாது.

இவர்கள் இல்லாமல் மூன்றாவது ஒருவர் திரைக்கு பின்னாலே வந்து உட்கார்ந்திருப்பார். இதுதான் மிசாவில் நேர்காணலில் இருந்த முறை. அப்படி இருந்துகொண்டிருக்கின்ற பொழுது ராதா அவர்களுக்கு நேர்காணலின் அழைப்பு வந்தது. ராதா அவர்களும் வந்து உட்கார்ந்தார். ராதா அவர்களுடைய துணைவியார் தனலெட்சுமி அவர்கள் வந்தார்கள். அவர்கள் அருகில் அதிகாரிகள் இருந்தார்கள்.

வெகுளியாக கேள்விகேட்டார்

அவர்கள் அப்பாவி – வெகுளியாக இருக்கக் கூடியவர்கள். ஏங்க எப்பொழுது வருவீர்கள் என்று கேட்டார். நான் என்ன பண்றது? விட்டால் வரப்போகிறேன். நானாகவா வந்து இங்கு உட்கார்ந்திருக்கிறேன் என்றார். எப்பொழுது விடுகிறானோ அப்பொழுது வருவேன் என்று சொன்னார். உடனே ராதா அவர்களின் துணைவியார் சொன்னார். நான் வெளியில் நின்று கொண்டிருந்தபொழுது சொன்னார் கள். வெள்ளை பேப்பர் கொடுக்கிறார்களாம். அதை வாங்கி நீங்கள் அவர்கள் சொல்லுகிறபடி இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடுத்து வந்து விடலாமே என்று கேட்டாராம். எங்களுக்கு அந்தப் பக்கம் இண்டர்வியூ. ராதா கேட்டார் என்னான்னு எழுதி கொடுக்கச் சொல்லுகிறாய் என்று.

அதிகாரிக்குச் சிரிப்பு தாங்கமுடியவில்லை

அதிகாரிகள் இவர் சொல்லுவதை எழுதிக் கொண்டே இருக்கின்றார்கள். இனிமேல் அந்த மாதிரி செய்யமாட்டேன் என்று எழுதி கொடுத்துவிட்டு வாருங்கள் என்று அந்த அம்மையார் வெகுளித்தனமாக சொன்னார்.
இதோபார் நான் என்ன பண்ணினேன் – இங்கு என்னை அழைத்துக் கொண்டு வருவதற்கு முன்பு – தூங்கி கொண்டிருந் தேன் (சிரிப்பு – கைதட்டல்). இனிமேல் நான் தூங்கமாட்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வரச் சொல்லுகிறாயா என்று கேட்டவுடன் எழுதிக் கொண்டிருந்த சி.அய்.டி. இன்ஸ்பெக்டர் பேனாவை கீழே வைத்து விட்டு அவரும் சிரிக்கிறார். சிறை அதிகாரிகளும் சிரிக்கின்றார்கள்.

கூச்ச, நாச்சம்

அதாவது இயல்பாக கொஞ்சம்கூட கூச்சநாச்சம் இல்லாமல் யோசனையே இல்லாமல் இயல்பாக பேசினார் ராதா. எதற்கு சிறைக்கு வந்தோம் என்பது எங்களுக்குத் தெரியாது. எதற்கு அழைத்து வந்தார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது. கூட்டிவரச் சொன்னார்கள். இவர்கள் கூட்டி வந்து விட்டார்கள் என்று அவ்வளவு நகைச்சுவையாக ராதா அவர்கள் பதில் சொன்னார்.

இந்தியாவிலேயே ஒரு நடிகரைக் கண்டு அரசாங்கம் பயந்தது நடிகவேள் ராதாவுக்காகவே!

சென்னை சங்கமம் விழாவில் தமிழர் தலைவர் பேச்சு

சென்னை, ஜன. 26- இந்தியாவிலே நடிகருக்காகவே ஒரு சட்டத்தை இயற்றியது. ஒரு நடிகரைக் கண்டு அரசாங்கம் பயந்தது ராதாவுக்காகத்தான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.

சென்னை சங்கமம் சார்பில் 14-1-2008 அன்று சென்னை – அண்ணாசாலையில் உள்ள ஃபிலிம்சேம்பரில் நடைபெற்ற நடிகவேள் எம்.ஆர். ராதா நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இவ்வளவு நிலைகளிலும் எதிர் நீச்சல் அடித்து கலைத் துறையிலே சுயமரியாதைக்காரராக வாழ்ந்து, கொஞ்சம்கூட விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த ராதா அவர்களிடம் சிறந்த மனிதநேயம் இருந்தது.

நடிகவேள் ராதா மனித நேயக்காரர்

நடிகவேள் ராதா அவர்களிடத்திலே இருந்த மனிதநேயம் வேறு யாருக்கும் வராது. அவர் முரட்டுச் சுபாவம் உள்ளவ ராகவும், எதிர் நீச்சல் அடிப்பவராகவும், ரொம்பப் பிடிவாதக் கொள்கைக்காரராகவும் இருந்ததெல்லாம் ஒரு அம்சம்.

ஆனால் அவர் யார் யாருக்கு உதவி செய்திருக்கிறார் என்பதை விளம்பரமே படுத்திக் கொள்ளாத ஒரு மாமேதையாக, ஒரு வள்ளலாக ராதா அவர்கள் திகழ்ந்தார்கள் (கைதட்டல்). ராதா அவர்களிடம் உதவியைப் பெற்றவர்கள் பல துறையிலே இருக்கிறார்கள்.

கலைஞர்களாக இருக்கக் கூடியவர்களில் இருந்து, நடிகர் களாக இருக்கக் கூடியவர்களில் இருந்து, மற்ற பொதுமக்கள் பொது ஸ்தாபனத்திலே இருந்து எல்லோருமே அவரிடம் உதவியைப் பெற்றிருக்கின்றார்கள்.

எனது கல்விக்கு உதவி செய்திருக்கின்றார்

என்னுடைய வாழ்க்கையிலே கூட, அவருடைய உதவி என்பது ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு என்றைக்கும் நன்றியோடு நான் நினைக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது. நான் கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கவேண்டும் என்பதற் காக என்னுடைய நண்பர்கள் முயற்சி செய்த பொழுது, கடலூ ருக்கே வந்து நாடகம் போட்டு அதன்மூலமாக எனக்கு உதவியை செய்தார்கள் (கைதட்டல்). எல்லோருக்கும் அத்தகைய உதவியை செய்வார்.

என்னுடைய மணவிழாவை தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் 50 ஆண்டுகளுக்கு முன்னாலே திருச்சியிலே நடத்தினார்கள்.

அய்யா அவர்கள், அந்த நிகழ்ச்சியிலே பேசும்பொழுது சொன்னார். கவிஞர் நந்தலாலா அவர்கள் சொன்னமாதிரி, ராதா அவர்களுக்கு ஒரு தனித்த சிந்தனை இருக்கும்.

பொது அறிவிலே தனி முத்திரை

பொது அறிவு, பட்டறிவு அவருடைய முத்திரை அதிலே இருக்கும். என்னுடைய மணவிழாவிலே பேசும்பொழுது அய்யா அவர்கள் சொன்னார்கள்: வீரமணிக்கும் அவருடைய வாழ் விணையர் மோகனா அவர்களுக்கும் திருமணத்தை எல்லாம் நடத்தியிருக்கின்றோம். இங்கே தோழர்கள் ஏராளமாக வந்தி ருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு மாநாடு மாதிரி நடைபெறுகிறது.
அய்யா பேசிய குறிப்புகள் இன்னமும் இருக்கின்றன. ஒலி நாடாவில் இருக்கிறது. நான் எப்பொழுதுமே சிக்கனக் காரன். ரொம்ப சுருக்கமாக, சிக்கனமாக நடக்கவேண்டும் என்று நினைக்கின்றவன்.

50 ஆண்டுகளுக்கு முன் என் மணவிழா

ஆனால், இங்கு ஏராளமான தோழர்கள் வந்துவிட்டார்கள். நிறையபேர் வந்துவிட்டர்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னாலே சொல்லுகின்றார். நிறையபேர் வந்துவிட்டார்கள். அதனால் நான் ரொம்பத் தாராளமாகவே நடத்திவிட்டேன். நான் நினைத்ததற்கு மேலே இது பெரிதாக நடந்துவிட்டது என்று சொன்னார். வாழ்த்துரையில் ஒவ்வொருவராகப் பேசும்பொழுது நடிகவேள் ராதா அடுத்து பேசினார். இதுமாதிரி அய்யா அவர்கள் சொன்னார். இந்தத் திருமணத்தை ரொம்பத் தாராளமாக நடத்திவிட்டேன் என்று சொன்னார்.

நான்கூட யோசனை பண்ணினேன். என்ன இவ்வளவு தாராள மாக அய்யா அவர்கள் நடத்திவிட்டாரா? அல்லது பெரிய விருந்து போட்டு விட்டாரா? அல்லது தாராளமாக செலவு செய்து விட்டாரா? என்று பார்த்தேன். அதெல்லாம் ஒன்றுமில்லை.

அய்யா அவர்கள் தாராளம் என்று சொன்னது

ஆனால், அய்யா அவர்கள் தாராளம் என்று சொன்னது என்ன? என்று நினைத்துப் பார்த்தேன். அவர் தாராளம் என்று சொன்னதை ஏதோ ரூபாயைப் பற்றி அல்ல. இதற்கு முன்னாலே சுயமரியாதைத் திருமணம் என்று சொன்னால். அந்தத் திரு மணத்திற்குப் பெரியார் தலைமை தாங்கி நடத்துகிறார்கள் என்றால் பெண்ணைக் கொண்டுபோய் ஒளித்து வைத்து விடுவார்கள்.

அதே மாதிரி மாப்பிள்ளை இன்னொரு பக்கம் காணாமல் போவார். கடைசி நேரத்தில்தான் இரண்டு பேரையும் கொண்டு வந்து மேடையிலே நிறுத்தி திருமணம் நடத்தி வைப்பார்கள். இல்லையென்றால் பெண் காணாமல் போய்விடும். ஆள்கள் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

திருமணத்திலே கலவரம் வரும். அது எல்லாம் இல்லாமல் இன்றைக்கு இவ்வளவு பேரை அழைத்து இந்த மணவிழாவை நடத்தி வைத்திருப்பது இந்த கொள்கை வெற்றி பெற்றிருக்கிறது பாருங்கள். அதைத்தான் அவர் தாராளம் என்று சொல்லியி ருக்கின்றார்.

பெண், மாப்பிள்ளையை ரொம்பபேர் வந்து பாராட்டியி ருக்கிறீர்கள். மாநாடு போல பாராட்டியிருக்கிறீர்கள். அதைத் தான் அய்யா அவர்கள் தாராளம் என்று சொல்லியிருக்கின்றார் என்று 50 ஆண்டுகளுக்கு முன்னாலே ராதா அவர்கள் பேசும்பொழுது சொன்னார்கள்.

தனித்த சிந்தனைவாதி

இதை எதற்காகச் சொல்லுகிறேன் என்று சொன்னால் அவருடைய சிந்தனை என்பது தனித்த சிந்தனை. அதோடு ஆழமான சிந்தனை உள்ளவர். மனித நேயத்தோடு கூடிய சிந்தனை. எல்லோருக்கும் உதவி செய்வார். அதைப் பெரிதாக விளம் பரப்படுத்தமாட்டார்.

சிங்கப்பூரில் ராதா சொன்னார்

ராதா அவர்கள் மலேசியாவில் பேசியிருக்கின்றார். சிங்கப் பூரில் பேசியிருக்கின்றார். சிங்கப்பூரில் ராதா அவர்கள் பேசும்பொழுது சொன்னார்.

நீங்கள் நிறையபேர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறீர்கள். நல்ல நடிகர்களின் கருத்து என்ன என்று கேளுங்கள். கைதட்டுங்கள். பாராட்டுங்கள். அதோடு எழுந்திருந்து போங்கள். அதற்கு மேலே எங்களிடம் ஏதோ தனித்தன்மையான தன்மை இருக்கிறது என்று நினைத்து நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

நாங்களும் சாதாரண மனிதர்கள்

நாங்களும் சாதாரண மனிதர்கள்தான். நடிர்களும் சாதா ரணமான மனிதர்கள்தான் என்ற சிந்தனையோடு சென்றால் சரி. அதற்கு மாறாக நினைக்கும் பொழுது தான், கோளாறு வருகிறது. இவ்வளவு பச்சையாக நடிகர்களைப் பற்றி அல்லது நடிகர் களுடைய துறையைப்பற்றி சொன்னார்.
ஒரு எதார்த்தவாதியாக இருந்தார். அவர்கள் உண்மையைப் பேசக் கூடியவர்களாக இருந்தார்.

நாடகத்தில் அவர் கண்ட எதிர்ப்பு

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ராதா அவர்களுடைய நூற்றாண்டு விழாவைப் பல இடங்களில் இன்றைக்கு சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.
திரைப்படங்களிலே அவருடைய உரையாடல் அனைவ ருக்கும் தெரிந்தது. ஆனால் அவர் நாடகத் துறையில் கொள் கையைப் பரப்பிய துணிச்சல் அவர் எதிர்ப்புகளை சமாளித்த விதம் சாதாரணமானதல்ல.

யாராவது அவரை அவருடைய நாடகத்தை எதிர்த்து கூச்சல் போட்டால், அவர் எந்த வேசம் போட்டாலும் நேரடியாகப் பதில் சொல்லுவார்.

யாருடா அவன் – திரவுபதிக்கு பிறந்தவன்?

யாருடா அவன், திரவுபதிக்குப் பிறந்த பயல்? என்று கேள்வி கேட்பார் (பலத்த கைதட்டல் – சிரிப்பு). ராதா அகராதி என்கிற ஒரு தனி அகராதி போடலாம். இதுவரையிலே தமிழ் நாட்டிலே ஒரு நடிகருக்காக ஒரு தனிச் சட்டம் வந்ததே நடிகவேள் ராதா அவர்களுக்காகத்தான் வந்தது – நாடகத் தடை சட்டம் (கைதட்டல்). ராதா அவர்கள் ராமாயணம் நாடகம் போட்டார்.

இராமாயணத்தில் உள்ளபடி

அந்த நாடகம் ஆரம்பிக்கும் பொழுதே இந்த நாடகம் வால்மீகி ராமாயணத்தில் இன்னின்ன ஆதாரங்களை வைத்து எழுதப்பட்ட பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நிகழ்வுகள் ஆகும். எனவே இந்த நிகழ்வுகளைத்தான் இப்படிச் செய்கிறோம். ராமனை இப்படிக் காட்டுகிறோம் என்று சொன்னால், இது எங்களுடைய கற்பனை இல்லை என்றெல் லாம், தெளிவான அறிவிப்பைக் கொடுத்து, யாராவது மனம் புண்படுகிறது என்று நினைத்தால், என் நாடகத்தைப் பார்க்க வராதே. ஆகவே இது ஆதாரப்பூர்வமான செய்திகளே தவிர இது கற்பனை அல்ல. ஆதாரங்களை உள்ளபடியே காட்டுகின்றோம் என்று சொன்னார்.

நடிகருக்காகவே ஒரு சட்டம்

அப்பொழுதுதான் தமிழக சட்ட அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்கள் நாடக தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தியாவிலேயே ஒரு நடிகருக்காக ஒரு சட்டம் கொண்டு வந்ததே- நடிகவேளைக் கண்டு ஒரு அரசு பயந்ததே நடிகவேள் ராதா அவர்களைக் கண்டுதான் (பலத்த கைதட்டல்).
தந்தை பெரியார் அவர்களைக் கண்டு மற்றவர்கள் எப்படி அஞ்சினார்களோ அதுபோல பயந்தார்கள். எனவே நடிகவேள் நடிப்பால் உயர்ந்தவர். பண்பால் உயர்ந்தவர். மனித நேயத்தால் சிறந்தவர்.

பெரியாருக்கு அடங்கியவர்

எதிர்ப்பு என்று சொன்னால் அதற்கு இன்னும் ஒரு படி அதிகமாகச் செல்லக் கூடியவர். இவ்வளவு சிறப்பானவர். யாருக்குமே அடங்காதவர். அவர் தந்தை பெரியார் அவர் களுடைய கட்டுப்பாட்டிற்குள்ளே மிகவும் அடங்கியவர்கள். அய்யா அவர்கள் என்ன சொல்லுகின்றார்களோ, அதற்கு உடனே கட்டுப்படுவார்.

திராவிடர் கழக உறுப்பினராக அவர் இல்லை

ஒருவர் ராதா அவர்களிடம் கேள்வி கேட்டார். நீங்கள் இவ்வளவு பெரிய பெரியார் பக்தனாக இருக்கின்றீர்களே நீங்கள் ஏன் திராவிடர் கழகத்தில் உறுப்பினராகவில்லை? என்று கேட்டார். நீங்கள் கருப்புச் சட்டை போடுகிறீர்கள். ஊர்வலத்தில் குதிரைமீது அமர்ந்து வருகின்றீர்கள். பெரியார் கொள்கையைத் தான் பிரச்சாரம் செய்கின்றீர்கள்.

ஆனால், திராவிடர் கழகத்தில் ஏன் உறுப்பினராக ஆக வில்லை? என்று கேள்வி கேட்டவுடனே, அதற்கு ராதா அவர்கள் பட்டென்று பதில் சொன்னார்.

கட்டுப்பாடுள்ள இயக்கம்

அவர் ரொம்ப நாணயமாகப் பதில் சொன்னார். நான் பெரியார் பக்தன். பெரியார் தொண்டன். பெரியார் கொள்கையை விரும்புகிறவன். பிரச்சாரம் செய்கின்றவன். திராவிடர் கழகத்தில் நானெல்லாம் உறுப்பினராக இருக்க முடியாது.. திராவிடர் கழகத்தில் சில கட்டுப்பாடுகள், சில நியதிகள் எல்லாம் உண்டு. சில கடும் பத்தியங்கள் எல்லாம் உண்டு. அவைகளை கடைப் பிடித்தால்தான் உறுப்பினராக இருக்கமுடியும்.

நான் அந்த மாதிரி இயக்கத்தில் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. அதற்காகத்தான் பெரியார் பற்றாளனாக இருக்கின்றேன் என்று உண்மையை அப்பட்டமாகச் சொன்ன மிகப் பெரிய ஒரு இலட்சியவாதி.

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராதா வாழ்கிறார்

எனவே இலட்சியங்கள் அவருடைய சொத்துக்கள். அவருடைய ஆற்றல் என்பது வரலாற்றை உருவாக்கக் கூடியது. வரலாற்றில் இடம் பெறுவதல்ல. வரலாற்றையே உருவாக்கக் கூடியது.
அந்த வகையிலே இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராதா வாழ்கிறார். காலத்தை வென்ற புரட்சியாளர் என்ற பெருமையோடு வாழ்ந்தார் என்று சொல்லி அவருக்கு நூற்றாண்டு விழா எடுத்த சென்னை சங்கமத்தையும் தமிழ் மய்யத்தையும், தமிழ் இயல் இசை நாடக மன்றத் துறையையும் அனைவரையும் பாராட்டி அமைகிறேன்.

Posted in 100, Chennai, Dramas, EVR, MR Radha, MRR, Nadigavel, Nadikavel, Performances, Periyar, Pralayan, Radha, Sangamam, Stage, Street, Theater, Veeramani, Viduthalai, Vituthalai | Leave a Comment »

Charukesi: Ramanujar & Muthusamy Dikshithar – Dinamani Theater Reviews

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

ராமானுஜரும், முத்துசாமி தீட்சிதரும்

ராமானுஜர் மதப்புரட்சி செய்த மகான். சாதிப் பாகுபாடுகளைத் தாண்டி எல்லோரையும் சமமாகப் பார்த்த சன்னியாசி.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமானுஜர் தமிழ் நாடகத்தின் ஆங்கில வடிவத்தை, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை மாணாக்கர் சிலர், பேராசிரியர் ரஜானியின் இயக்கத்தில் நடித்தார்கள். ஆனால் ராமானுஜர் வேடத்தில் நடித்தவர் அம்ருதா கரயில் என்கிற இளம்பெண். குற்றவியல்துறை மாணவி. ஓர் ஆண் கூடவா ராமானுஜர் வேடத்தை ஏற்க முன்வரவில்லை என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ராமானுஜர் வேடமேற்ற பெண் திருப்திகரமாக நடித்தார் என்பது மட்டும் நமக்குப் போதும்.

நாடக வடிவின் நூலைப் பெற்றுக்கொண்ட திருக்காட்டுப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திரா பார்த்தசாரதியின் இருபது வருட நண்பராம். அவர் பேச்சு நவீன இலக்கியவாதியின் உரைபோல இருந்ததே தவிர, அரசியல்வாதியின் “நடை’யாக இருக்கவில்லை.

தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை, அவர் அந்தணர் அல்லாதவர் என்பதற்காக மனைவி அவரைத் திண்ணையில் அமரச் செய்து அமுது படைத்ததற்காக, ராமானுஜர் அவளுடன் தன் வாழ்க்கையையே முறித்துக்கொண்டு விடுகிற நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது.

தனக்கு எதிர்க் கருத்துக்களைக் கொண்ட பலரையும் மனம் மாறச் செய்து வெல்ல முடிந்த ராமானுஜரால், மனைவியின் மனத்தை மாற்ற முடிந்திருக்காதா? அவர் அப்படிச் செய்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை, நூலை வெளியிட்ட “ஹிந்து’ ஆசிரியர் ரவியும், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் எழுப்பினர். தம் உரையில் இந்திரா பார்த்தசாரதி இதற்கு பதில் ஏதும் தரவில்லை. “நாடகத்தைப் படைத்தேன்’ அத்தோடு என் பணி முடிந்தது என்றார்.

மொழிபெயர்ப்பில், குறிப்பாக பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மகானின் வரலாறு பற்றிச் சொல்லும்போது, ஆங்கிலத்தில் எத்தகைய சொற்-சங்கடங்கள் எழுகின்றன என விவரித்தார் பேராசிரியர் ஸ்ரீமான். இவர் ஆங்கில மற்றும் அயல்நாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர். (ஆனால் மொழியாக்கம் தமக்குத் திருப்தி அளித்ததாகவே இந்திரா பார்த்தசாரதி அங்கீகரித்துவிட்டார்.)

ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிடி பிரஸ்ஸின் இந்திய படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடும் பணியை மேற்கொண்டிருக்கும் மினி கிருஷ்ணன் உரை “மினி உரை’ என்றால், நூலுக்கு நீண்ட முன்னுரை வழங்கியிருக்கும் ஆங்கிலப் பேராசிரியர் சி.டி.இந்திரா, இந்த நூல் வெளிவர, தாம் தில்லி வரை சண்டை போட்டுவிட்டு வந்த சரித்திரத்தை சாங்கோபாங்கமாக “மாக்ஸி உரை’யாக நிகழ்த்தினார். (நமக்குப் பொறுமையைச் சோதித்த பேச்சுதான். ஆனால் அவருடைய ஆதங்கத்தை இந்த இடத்தில் வெளியிடாமல் வேறு எங்கே, எப்போது வெளியிடுவார், பாவம்!)

“நந்தன் கதை’ போலவே “ராமானுஜரு’ம் இந்திரா பார்த்தசாரதியின் மனித சாதியிடையே பிரிவு காணலாகாது என்ற சிந்தனையை வெளிப்படுத்தும் படைப்பு. தமிழில் இந்த நாடகத்தை விரைவில் மேடையில் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கர்நாடக இசையின் சரித்திரத்தில், மூன்று கிறிஸ்துவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. ஒருவர் ஆபிரகாம் பண்டிதர். இன்னொருவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மூன்றாமவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவர்தான் ஏ.எம்.சின்னசாமி முதலியார் என்கிற கத்தோலிக்க கிறிஸ்தவர். “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ என்ற தெலுங்கு நூலை வெளிச்சத்துக்கு கொண்டு வர தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்த அந்நாளைய அரசு ஊழியர். ஆங்கிலேய ஆட்சியில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பணிபுரிந்த இந்த அபூர்வ மனிதரைப் பற்றிய காலை நேரச் சொற்பொழிவு ஒன்றில், இணையற்ற ஆங்கிலப் பேச்சாளர் வி.ஸ்ரீராம் தொகுத்து அளித்த விவரங்கள் இதுவரை யாரும் அறியாதவை.

“சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ நூல் இசை மாணாக்கர்களுக்கு தேவையான ராக லட்சணங்களையும், ஸ்வரங்களையும், கமகங்களையும் அறிமுகப்படுத்தும் நூல். இவருக்குத் துணை நின்றவர் முத்துசாமி தீட்சிதரின் சகோதரர் பாலுசாமி தீட்சிதரின் மகன் சுப்பராம தீட்சிதர். ஒருசமயத்தில் எட்டயபுர சமஸ்தான வித்துவானாக இருந்தவர். (இவரைக் குறித்து மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கூட ஒரு பாடல் புனைந்திருக்கிறார்.)

மின்சாரம் கிடையாது, கம்ப்யூட்டர் கிடையாது, நவீன அச்சுக்கோக்கும் எந்திரம் கிடையாது. இத்தனை “கிடையாது’-களுக்கும் இடையே, மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமாகி, சென்னையை விட்டுப் புறநகர் போய் வசிக்கும் சூழ்நிலையிலும், சின்னசாமி முதலியார் மனம் தளர்ந்துவிடவில்லை. பென்ஷன் தொகை எல்லாம்கூட நூலுக்காகச் செலவிடுகிறார். கடன் ரூ.28000-த்தைத் தாண்டி விடுகிறது. மனைவியின் நகைகளை எல்லாம் விற்றுவிடுகிறார். ஆனால் அவர் குறிக்கோள் எல்லாம் எப்படியாவது நூல் வெளியாக வேண்டும் என்பதே.

கர்நாடக இசையின் பங்களிப்பில் பங்கு கொண்ட அத்தனை வாக்யேக்காரர்களின் பாடல்களையும் திரட்டி, அவற்றை ஆங்கில இலைக்கலைஞர்களும் பாடும் அல்லது வாசிக்கும் வகையில் ஸ்டாஃப் நொட்டேஷன் செய்து பரப்ப இவர் எடுத்துக் கொண்ட முயற்சி இவ்வளவு, அவ்வளவு அல்ல. “”ஜெயதேவர், புரந்தரதாசர், நாராயண தீர்த்தர், அருணாசலக் கவி ஆகியோரின் பாடல்களைவிட, நவீன ஓரியண்டல் இசை என்று எடுத்துக் கொண்டால், தியாகராஜ சுவாமிகளின் பாடல்களுக்குத்தான் முதல் இடம்’ என்று தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஐரோப்பிய வயலின் இசைக் கலைஞர்களைக் கொண்டு, நொட்டேஷன்-களின்படியே இசைக்கச் செய்து வெற்றி கண்டவர் இவர்.

முத்துசாமி தீட்சிதரின் கிருதிகளை வெளியே கொண்டு வர, சின்னசாமி முதலியார் பட்டபாடு இருக்கிறதே, அது “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ அச்சில் கொண்டு வர அவர் பட்ட பாட்டைப் போலவே உருக்கமானது.

இறுதியில் சுப்பராம தீட்சிதர் பணியாற்றிய எட்டயபுரம் சமஸ்தான மன்னரின் உதவியோடு, அங்கேயே அச்சகம் நிறுவச் செய்து, 1906-ல் சுப்பராம தீட்சிதரே அந்த நூலை வெளியிடும் சமயம், சின்னசாமி முதலியார் காலமாகிவிடுகிறார். ஆனால் அதற்காகப் பாடுபட்ட தன் நண்பரின் நினைவுக்கு அந்த நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார் சுப்பராம தீட்சிதர்.

முத்துசாமி தீட்சிதரின் பாடல்களை, அவர் தமது பிரதம சீடர்களான தஞ்சை நால்வர்களுக்கும், தேவதாசிகளுக்கும், நாதஸ்வர வித்துவான்களுக்கும் கற்றுக்கொடுத்தார். அதனால் ராமானுஜர் போலவே, முத்துசாமி தீட்சிதரும் சாதியுணர்வு தாண்டி நின்ற மேதை எனலாம்.

சாருகேசி

Posted in Authors, Books, Carnatic, Chaarukesi, Charukesi, Classical, Dikshithar, Dinamani, Drama, Indira Parthasarathy, Indra Parthasarathy, IPa, IPaa, Literature, music, Muthusami, Muthusamy, Oxford, publications, Publishers, Ramanujam, Ramanujan, Ramanujar, Reviews, Saarukesi, Sarukesi, Shows, Stage, Tamil, Theater, Theatre, Translations, Works, Writers | Leave a Comment »

‘TV Gopalakrishnan is my Guru’ – Ilaiyaraja

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007

மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை: டி.வி.கோபாலகிருஷ்ணன் நெகிழ்ச்சி

“மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை’ என்று இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணனின் 70 ஆண்டு இசை வாழ்க்கையை பாராட்டும் வகையில் அவரது சிஷ்யர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பில், “குரு சேவா 70′ நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் “ஸ்கார்ப்’ அமைப்பிற்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். “யுவர் வாய்ஸ்’ நுõலினை டி.வி.கோபாலகிருஷ்ணன் வெளியிட இசையமைப்பாளர் இளையராஜா பெற்றுக் கொண்டார். “தி கிங் ஆப் பெர்கூசன்மிருதங்கம்’ புத்தகத்தை மியூசிக் அகடமி தலைவர் என்.முரளி வெளியிட கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா பெற்றுக் கொண்டார். “மகிமா’ இசை “சிடி’யை இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா வெளியிட கலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன் பெற்றுக் கொண்டார்.

கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா பேசுகையில், “இசையின் அடிப்படையை தெரிந்து கொண்டால் எல்லா இசையும் ஒன்று தான். தென்னிந்திய இசையிலிருந்தே எல்லா இசைகளும் வருகின்றன. டி.வி.கோபாலகிருஷ்ணன் பல இளம் இசைக் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறார்’ என்றார். இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா பேசுகையில், “தனது திறமையால் முன்னேறி, பல்வேறு திறமையான இசைக் கலைஞர்களை உருவாக்கி வருகிறார். அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகம்’ என்றார்.

சென்னை சபாக்கள் கூட்டமைப்பின் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், “நாரதகான சபா ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் பல வித்வான்களை அறிமுகப்படுத்தி, அவர்களுடன் உட்கார்ந்து வாசித்து, அவர்களையும், எங்கள் சபாவையும் வளர்த்த பெருமை டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு உண்டு. அவர் இசை உலகிற்கு செய்த பணி மகத்தானது’ என்றார்.

இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், “கம்ப்யூட்டர், கிரிக்கெட் உள்ளிட்டவற்றை வைத்துக் கொண்டு, இசையை மட்டும் எடுத்து விட்டால் உலகில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். நான் சினிமாவில் பிரபலமாக இருந்தபோது, இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரையும், மீண்டும் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எனக்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் சங்கீதம் கற்றுத் தந்திருக்கிறார். சங்கீத உலகிற்கு அவர் போல ஒருவர் கிடைப்பது அபூர்வம்’ என்றார்.

கலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன், கர்நாடக கலாசார அமைச்சர் பேபி, மியூசிக் அகடமியின் தலைவர் என்.முரளி ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். ஏற்புரையாற்றிய இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன், “மனிதனுக்கு புத்தி தான் வழிகாட்டி. மனது நல்லபடியாக இருக்க வேண்டும். அதற்கு இசை அவசியம். மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை. ஒரு பாடலை கேட்கும் போது, அதோடு உங்கள் குரலில் பாடி வருகிறீர்கள். உங்கள் உள்ளத்தில் என்றும் இசை பாடிக் கொண்டிருக்க வேண்டும்’ என்றார்.

Posted in Audio, Bala murali krishna, Balamurali krishna, Balamuralikrishna, BGM, Carnatic, CD, Chennai, Cinema, City, Classical, Events, Films, Gopalakrishnan, Guru, Guru Seva 70, Ilaiyaraja, ilayaraja, Instructor, IR, Kalakshethra, Kalasethra, Kalasetra, Kalashethra, Kalashetra, Live, Madras, MD, Movies, music, NGO, Performance, Raja, release, SCARF, service, Shows, Stage, Teacher, Theater, Theatre, TV Gopalakrishnan, TVG, Your voice | Leave a Comment »

Thirukkural Chellammal: Karagattam Dancer – Folk Dances of Tamil Nadu

Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2007

முகங்கள்: கரகாட்டத்தில் திருக்குறள்!

வி. கிருஷ்ணமூர்த்தி

ஆண்டு: 1957; இடம்: வந்தவாசி அருகே மங்கலம் கிராமம்; கையில் எப்போதும் இருக்கும் திருக்குறள் புத்தகம். எதற்கும் திருக்குறள் மேற்கோள். சீனிவாசனை உறவினர்கள் மட்டுமல்லாது ஊரில் உள்ளவர்களும் திருக்குறள் பைத்தியம் என கிண்டலடித்தனர். ஆனால் அவரைப் பைத்தியம் என்று ஒதுக்கவில்லை, அவரது சகோதரி மகளான செல்லம்மாள்.

திருக்குறள் சொல்பவரை பைத்தியம் என்கிறார்களே ஏன்? அப்படி திருக்குறளில் என்னதான் இருக்கிறது என்ற ஆர்வத்தில் திருக்குறளை படிக்க ஆரம்பித்தார் அவர். 10 வயதில் ஏற்பட்ட திருக்குறள் ஆர்வம், செல்லம்மாவை குறளுக்கு அடிமையாக்கிவிட்டது என்றே சொல்லலாம். திருக்குறள் மீது ஆர்வம் வருவதற்குப் பலருக்குப் பல காரணங்கள் உண்டு. செல்லம்மாளுக்கு ஏற்பட்ட ஆர்வம் இந்த வகையில் வித்தியாசமானதுதானே?

6-வது படிக்கும் போது செல்லம்மாள் கரகாட்டத்தைக் கற்றுக் கொண்டார். திருக்குறளும், கரகாட்டமும் தனது வாழ்க்கையை எந்த அளவுக்கு ஆட்கொள்ளப் போகிறது என்பது அப்போது தெரியாது செல்லம்மாளுக்கு. இந்த இரண்டிலும் ஏற்பட்ட ஆர்வம் திருக்குறளுக்குக் கரகாட்டம் ஆடும் அளவுக்கு அவரை உயர்த்தியது.

  • திருக்குறள் மாமணி,
  • திருக்குறள் தூதர்,
  • திருக்குறள் செம்மல்,
  • திருக்குறள் திருத்தொண்டர்

என ஏராளமான விருதுகளைப் பெற்ற, பெற காரணமாக இருந்த தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் புலவர் கோ.ப. செல்லம்மாள் இனி உங்களுடன்…
“”திருக்குறள், கரகாட்டம் இவற்றுடன் எனது பள்ளிப்படிப்பு நல்லபடியாக முடிந்தது.

பள்ளிப்பருவத்தில் கரகாட்டம் ஆடியும், திருக்குறளை பாடியும் பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றிப் பெற்றதால் ஆசிரியர்கள் மட்டுமல்லாது சக மாணவர்களிடமும் பாராட்டுகளைப் பெற முடிந்தது. பள்ளிப்படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி அதுவும் திருக்குறள், கரகாட்டத்துடன் வெற்றிகரமாக முடிய ஆசிரியர் பணி கிடைத்தது.

ஆசிரியர் பணிக்கிடையே கரகாட்டத்துடன் எம்.ஏ., எம்.ஃபில், பிஎச்.டி., டி.டி.எச். என படிப்பிலும் பல்வேறு சிகரங்களைத் தொட திருக்குறள் அடிப்படையாக இருந்தது.

படிப்பில் ஏற்பட்ட உயர்வு எனது பணியின் நிலையையும் மேம்படுத்தியது. உதவி ஆசிரியையாக, தலைமை ஆசிரியை வரை பல்வேறு உயர்வுகள் கிடைத்தன.

ஆசிரியர் பணியில் இருந்த 33 ஆண்டுகளும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களாக அமைந்துவிட்டன. ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, என்னிடம் படித்த மாணவர்கள், மாணவிகளுக்குக் கரகாட்டத்தைச் சொல்லிக் கொடுத்து அவர்களைக் கல்வி மட்டுமல்லாது கலையிலும் வல்லவர்களாக உருவாக்கினேன்.

வெறுமனே கரகாட்டத்தை எப்படி ஆடுவது என சொல்லிக் கொடுக்காமல் மாணவர்களுக்குக் கரகாட்டத்தின் தோற்றம், வளர்ச்சி, சிறப்புகள், தற்போதைய நிலை ஆகியவைக் குறித்துச் சொல்லிக் கொடுப்பதால் நான்படித்தக் கலையை மற்றவர்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்த்த திருப்தி கிடைத்துள்ளது.

ஆசிரியர் பணியின்போது நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கரகாட்டத்தைக் கற்றுக் கொடுத்திருந்தாலும் அதில் மது, சந்திரா உள்ளிட்ட சில மாணவமணிகள் இந்தக் கலையில் பெரிய அளவில் சிறப்பு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கரகாட்டம் கற்றுக் கொடுக்கும்போது மாணவர்களுக்குத் திருக்குறளையும் கற்றுக்கொடுத்தேன். அனைத்து மாணவர்களையும் திருக்குறளை முழுமையாகப் படிக்கச் செய்து, அதில் போட்டிகள் நடத்தியும், மற்ற இடங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் அளவுக்குத் தயார்படுத்தினேன்.

இந்தச் சமயத்தில், கரகாட்டத்துக்கு வழக்கமான கிராமியப் பாடல்கள், பக்திப் பாடல்களுக்குப் பதிலாக திருக்குறளின் சில பகுதிகளைப் பாடலாக மாற்றி கரகாட்டம் நடத்தினேன். பார்வையாளர்களிடம் இதற்குக் கிடைத்த வரவேற்பு இதனை மேலும் சிறப்பாகச் செய்யத் தூண்டியது. இதனால், பக்தி மற்றும் கிராமியப் பாடல்களே இல்லாமல் அவற்றின் மெட்டில் திருக்குறளையும் அது வலியுறுத்தும் கருத்துகளையும் பாடலாக அமைத்து கரகாட்டம் நடத்த தொடங்கினோம். பல மாணவர்களுக்கு இதனை கற்றுக் கொடுத்தேன்.

உலகத் திருக்குறள் மையத்தில் இணைந்தது, எனது திருக்குறள் பணியை மேலும் விரிவுப்படுத்தியதுடன் என்னை திருக்குறள் தூதராக்கியது. திருக்குறள் கருத்துகளை மக்களிடம் விளக்க பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்றேன். 1996-ம் ஆண்டில் திருச்சி மாவட்டம் நடுப்பட்டியில் திருக்குறள் கருத்து விளக்கத்துக்காகச் சென்ற போது திருக்குறள் இசைப் பாடலுக்குக் கரகாட்டம் ஆடியது பலராலும் பாராட்டப்பட்டது.

திருக்குறள் பிரசாரம் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமான மன்றங்கள், மையங்களில் என்னை இணைத்துக் கொண்டேன். இது எனது திருக்குறள் பணியின் எல்லையை மேலும் விரிவுபடுத்தியது. தமிழகம் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்கள் அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் திருக்குறள் பிரசார மாநாடுகளில் பங்கேற்றேன்.

ஒரு கட்டத்துக்கு பின்னர் எனது அன்றாட செயல்களில் ஒன்றாகவே திருக்குறள் பிரசாரம் மாறிவிட்டது. எனது மகன் மகள் இருவருக்கும் திருக்குறளுடன் கரகாட்டத்தைக் கற்று கொடுத்து மேடை ஏற்றிவிட்டேன். வீட்டுக்கு வெளியில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் எந்த நிகழ்ச்சியும் திருக்குறள் இல்லாமல் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

திருக்குறள் பிரசாரத்தில் கிடைத்த சந்தோஷம் அதிகம் இருந்தாலும், கரகாட்டத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது. நமது கலாசாரத்தில் நடைமுறை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது கரகாட்டகலை. ஒரு சமயத்தில் கடவுள் வழிபாடாக மட்டும் இருந்த கரகாட்டகலை பிற்காலத்தில் பொழுதுபோக்காகவும் மாறியது. இந்தக் காலகட்டத்தில் பொழுதுபோக்காக இருந்தாலும் அதன் அடிப்படை புனிதத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டன. அதன்படி ஆடும்போது பல்வேறு சாகசங்கள் செய்து மக்களை அசத்துவதோடு ஆச்சரியப்பட வைத்தனர் கரகாட்ட கலைஞர்கள். ஆனால், தற்போது கரகாட்டத்தை முறையாகக் கற்றுக் கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும் மற்ற பொழுதுபோக்குகளில் இருந்து மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காகவும் கரகாட்டக் கலைஞர்கள் பல தவறான அணுகுமுறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர். ஆபாச சைகைகள் போன்றவற்றால் இந்தக் கலையின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது கவலை அளிக்கிறது” என்றார் செல்லம்மாள்.

Posted in Artistes, artists, Arts, Chellammal, Couplets, Cultural, Culture, Dancers, Dances, Folk, Heritage, Instructor, Karaga, Karagam, Karagattam, Kural, Literature, Performances, Performers, Shows, Stage, Students, Teacher, Temple, Theater, Theatre, Thirukkural, Thiruvalluvar, Tradition, Traditional, Valluvar | Leave a Comment »

‘Uyir’ & ‘Mirugam’ director Sami vs Tamil Actress Padmapriya

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2007

டைரக்டருக்கு கீழ் பணியாதவர்
“பத்மப்ரியா நல்ல நடிகை-ஆனால் நல்ல குணம் கிடையாது”
டைரக்டர் சாமி சொல்கிறார்


“பத்மப்ரியா நல்ல நடிகை. ஆனால் நல்ல குணம் கிடையாது. டைரக்டருக்கு கீழ் பணியாதவர், அவர்” என்று டைரக்டர் சாமி கூறினார்.

கணவன்-மனைவி கதை

`உயிர்’ படத்தை டைரக்டு செய்தவர், சாமி. மைத்துனரை, அண்ணி காதலிப்பது போலவும், அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவது போலவும் கதை அம்சம் உள்ள படம், `உயிர்.’ அந்த படத்தில், காமவெறி பிடித்த அண்ணியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார், சங்கீதா.

அந்த படத்தை அடுத்து டைரக்டர் சாமி, `மிருகம்’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் புதுமுகம் ஒருவர் கதாநாயகனாக நடிக்கிறார். கொடூர குணமும், ரவுடித்தனமும் கொண்ட அவர், கொடூர நோயினால் பாதிக்கப்படுவது போலவும், அவருடைய வக்கிரங்களையும், அக்கிரமங்களையும் தாங்கிக்கொண்டு கடைசிவரை கணவருக்கு பணிவிடை செய்யும் பரிதாபத்துக்குரிய மனைவியாக பத்மப்ரியா நடிக்கிறார்.

தகராறு

இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்றது. அப்போது பத்மப்ரியா படப்பிடிப்புக்கு தினமும் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. கதைக்கு ஏற்ப, டைரக்டர் சாமி சொல்லிக்கொடுத்தபடி பத்மப்ரியா நடிக்க மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பொறுமை இழந்த டைரக்டர் சாமி, பத்மப்ரியாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த பிரச்சினை, பெரும் விவகாரமானது. பத்மப்ரியா நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளில் புகார் செய்தார். மூன்று சங்கங்களும் சேர்ந்து டைரக்டர் சாமியிடம் விசாரணை நடத்தினார்கள்.

தடை

அப்போது டைரக்டர் சாமி, பத்மப்ரியாவிடம் மன்னிப்பு கேட்டார்.

சாமி, புதிய படங்களை டைரக்டு செய்வதற்கு, ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.

`மிருகம்’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அந்த படத்தின் பாடல் காட்சிகளையும், `டிரைலரை’யும் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய், டைரக்டர் சாமி ஆகிய இருவரும் நிருபர்களுக்கு திரையிட்டு காண்பித்தார்கள்.

அதன்பிறகு டைரக்டர் சாமி `தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“மிருகம் படம், டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. படம் திரைக்கு வந்தபின், என் மீது விதிக்கப்பட்டு இருந்த தடை தானாகவே விலகிவிடும் என்று நம்புகிறேன். அடுத்து இதே படத்தை நான் தெலுங்கில் டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறேன். `மிருகம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவரே, தெலுங்கு படத்திலும் கதாநாயகனாக நடிப்பார்.

கதாநாயகி மாற்றம்

கதாநாயகி மட்டும் மாறுவார். பத்மப்ரியாவுக்கு பதில் வேறு ஒரு கதாநாயகி நடிப்பார். பத்மப்ரியா நல்ல நடிகை என்பதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அவரிடம் நல்ல குணம் கிடையாது. டைரக்டரின் `ஸ்கிரிப்ட்’ (திரைக்கதை)க்கு கீழ் பணியாத ஒரு நடிகை.

`மிருகம்’ படத்தின் முதல் பிரதியை, தமிழ் சினிமாவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் பார்த்துவிட்டு, “இந்த வருடத்தின் சிறந்த படம்” என்று பாராட்டினார். படத்தின் கடைசி மூன்று ரீல்கள் மிரட்டலாக இருக்கும்.”

இவ்வாறு டைரக்டர் சாமி கூறினார்.

Posted in abuse, Action, Actress, AIDS, Allegations, Andhra, AP, Apology, Ban, Callsheet, Cinema, Condemn, Director, Faces, Films, Hero, Heroine, Hit, HIV, Hype, Interview, Investigation, journalism, Kerala, Kisu Kisu, Kisukisu, Malayalam, Media, Mirugam, Mirukam, Mollywood, Movies, News, Padma priya, Padmapriya, Pathma priya, Pathmapriya, people, Product, Promotions, Protest, Reel, release, Reports, Rumor, Rumors, Rumour, Saami, Saamy, Sami, Samy, Sangeetha, Sangitha, Screenplay, Sex, Slap, Sorry, Strike, Telugu, Theater, Theaters, Theatres, Tollywood, Torture, Uyir, video | Leave a Comment »

Ki Parthibharaja’s Kaayatha Kaanagathey – Book Review in Unmai

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2007

நூல்: காயாத கானகத்தே
ஆசிரியர்: கி.பார்த்திபராஜா
வெளியீடு:ராகாஸ் அகமது வணிக வளாகம்,
12/293, இராயப்பேட்டை, நெடுஞ்சாலை,
சென்னை-14.

விலை:ரூ.100/-

தமிழ் நாடகத்தின் ஒரு கூறான இசை நாடகம் பற்றி பெரிய அளவில் ஆய்வுகளோ, பகுதிகளோ இல்லாத நிலையில் பார்த்திப ராஜாவின் காயாத கானகத்தே நூல் இசை நாடகம் பற்றிய ஒரு சிறந்த பதிவாகும்.

தென்மாவட்டங்களில் 20 பகுதி மக்களின் சமூக வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்த இசை நாடகங்கள், காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பால் அந்த நாடகங்கள் பற்றி நூல்கள் மூலமே. இளைய தலைமுறையினர் அறியக்கூடிய நிலையில், இந்நூல் மிகவும் பயனுள்ள வரவாகும்.
மற்ற நாடகங்கள் போலன்றி இசை நாடக கலைஞர்களுக்கு கற்பனைத் திறனும், நாட்டு நடப்பில் தெளிந்த கண்ணோட்டமும், சமயோசித திறனும் இருந்தால் தான் காட்சிகளில் பரிணமிக்க முடியும்.

நாடக கலைஞர்களின் பங்களிப்பு, அவர்களின் திறன் அவர்களின் வாழ்வியல் நிலைகள் ஆகியவற்றை நடிகர் சங்க அமைப்பாளர்களுடன் இணைந்து தொடர்ந்து நாடகத்தை பார்த்தும், அவர்களுடன் பழகியும் பல சுவையான தகவல்களை தொகுத்தளித்துள்ளார்.

கலைஞர்களின் திறனை வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட நடை சிறப்புடையது. அவற்றில் ஒரு சில துளிகள். வள்ளி நாடகத்தில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற நடிகை தன்னை தர்க்கத்தில் வென்றால் நடிப்புத் தொழிலையே விட்டுவிடுவேன் என்று சவால் விடுவார். அவருடன் நடிப்பதற்கு ராஜபார்ட்டுகளே அஞ்சுவார்கள்.

அவரை வேறு பகுதியைச் சேர்ந்த ஒரு நடிகர் சூழ்ச்சியால் தர்க்கத்தில் வென்றுவிட அதன் பின்னர் அந்த நடிகை அரிதாரம் பூசுவதைவிட்டு நடிப்புத் தொழிலையே விட்டுவிட்டார்.

அதேபோல் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் எமன் வேடத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் குரலையும், ஆட்டத்தையும் பார்த்த அதிர்ச்சியில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கரு கலைந்து போனது. அதன்பிறகு அடுத்தடுத்த நாடகங்களில் அவர் எமன் வேடத்தில் வரும்போது கர்ப்பிணிகள் இருந்தால் சபையைவிட்டு வெளியே போய்விட்டு காட்சி முடிந்த பிறகு திரும்பிவரவும் என்ற அறிவிப்பு செய்துள்ளனர்.

அவர் நடித்த பிரகலாதன் நாடகத்தில், இரணியன் வேடம் கட்டி பிரகலாதனாக நடித்த சிறுவனை தூக்கி கீழே வீசியபடி கர்ஜனை செய்த காட்சியை பார்த்த பெண் மூர்ச்சையடைந்தார். அதிலிருந்து அவர் தொடர்ந்து நடிப்பை மேற்கொள்ள மறுத்துவிட்டார்.

அதன் பிறகு அவர் நடிக்கவேயில்லை.

இசை நாடக வரலாற்றில் பெண்களை புறந்தள்ளிவிட்டே தொடங்கியிருந்தது. அதனால் தான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, பாவலர் பாய்ஸ் கம்பெனி, தேசிகானந்தா பாய்ஸ் கம்பெனி என்ற பெயரிலேயே நாடக கம்பெனிகள் இருந்துள்ளன. பிறகு இசை நாடகங்களில் பெண்கள் பங்கேற்க ஆரம்பித்த பின், ஆண்கள் பெண் வேடமிடும் பழக்கம் குறைந்தது.

அப்படியும் நாடக நடிகைகளுக்கு சமூக அங்கீகாரம் பெரிய அளவில் கிடைத்துவிடவில்லை. சமூகம் தங்களை இழிவாக பார்க்கவில்லை என்றும் கூறும் நடிகைக்கள் கூட அதற்கு காரணம் பொருள் வசதியோடு இருப்பது தான் என்கின்றனர். இக்காலக் கட்டத்தில் தான் பழம்பெரும் நடிகை பாலாமணி அம்மாள் பெண்களைக்-கொண்டே நாடகக் குழுவை நடத்தி வந்துள்ளார்.

அவரது குழுவில் 50-க்கும் மேற்பபட்ட பெண்கள் இருந்துள்ளனர்.

கும்பகோணத்தில் அவர் நடத்திய தாரா சசாங்கம் என்ற நாடகத்தைப் பார்க்க, மாயவரத்திலிருந்து எட்டு மணிக்கு ஒரு ரயிலும், திருச்சியிலிருந்து எட்டரை மணிக்கு ஒரு ரயிலும் புறப்பட்டு கும்பகோணம் சென்று, நாடகம் முடிந்து நள்ளிரவு மூன்று மணிக்கு இருரயில்களும் திரும்பிச் செல்லும். நாடகம் பார்க்கும் ரசிகர்-களுக்காக விடப்பட்ட இந்த ரயிலுக்கு பாலாமணி ஸ்பெஷல் என்றே பெயரிட்டுள்ளனர்.

இன்றைய தமிழ் சினிமா ரசிகத் தன்மை, நடிகர், நடிகைகள் வழிபாடு, ரசிக வெறித்தனம் போன்றவை ஒன்றும் புதியதல்ல. அது ஏற்கனவே நாடக வரலாற்றில் காண முடிகிறது. முழுஇரவு நாடகங்கள் முற்றாக மறைந்துவிட்ட நிலையில், அவற்றை பற்றிய ஒரு தொகுப்பு நூல் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு வரலாற்றுப் பெட்டகமாகும். இந்த அளவுக்கு களப்பணி செய்து, ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு; சுவைபட எழுதப்பட்ட நூல் இது.

நூலாசிரியரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Posted in Actors, artists, Books, Cinema, Documents, Drama, Fieldwork, Films, History, Incidents, Literature, Movies, music, Paarthibharaja, Parthibharaja, Performance, Research, review, Shows, Stage, Theater, Theatre, Unmai | Leave a Comment »

Margazhi Music Festival – December Season Kutchery: Charukesi

Posted by Snapjudge மேல் நவம்பர் 12, 2007

வருகிறது சங்கீத சீசன்!

“”இன்னும் சீசன் டிக்கட்டுகள் கூட அச்சாகி வர வில்லை. அதற்குள் பணத்தைக் கொடுத்து விட்டு தங்கள் சீட்டுகளை உறுதி செய்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் ரசிகர்கள்!” என் றார் பிரபல சபாவின் செயலர்.

“”போன வருடம் கொடுத்த அதே சீட்டுதான் வேணும். எப்படியாவது பார்த்துக் கொடுங்க!” என்று சில ரசிகமணிகள் கெஞ்சாத குறையாகக் கேட்பதை யும் பார்க்க முடிந்தது.

இந்த நிலைமை- அக்டோபர் முதல் தேதி கூட விடி யாத, செப்டம்பர் இரண்டாம், மூன்றாம் வார நிலவரம்.

“”யார் பாடப் போகிறார்கள், என்னென்ன நாடகங் கள், யாருடைய நடனங்கள் என்று எதுவுமே அவர்க ளுக்குத் தெரியாது. ஆனாலும் டிக்கெட் மட்டும் அவ சியம் அவர்களுக்கு வாங்கி வைத்துக் கொள்ள வேண் டும். டிசம்பர் சங்கீத-நடன-நாடக விழா என்றாலே தனி. மற்ற மாதங்களில் ” ஆல் ஆர் வெல்கம்’ போட் டால்தான் ஹாலுக்குள் கூட்டம் இருக்கும். டிசம்பர் மட்டும் விதிவிலக்கு” என்றார் அந்த சபாக்காரர்.

  • சஞ்சய் சுப்பிரமணியம்,
  • டி.எம். கிருஷ்ணா,
  • சுதா ரகுநாதன்,
  • அருணா சாய்ராம்,
  • நெய்வேலி சந்தான கோபாலன்,
  • டிவிஎஸ்,
  • மதுரை டி.என். சேஷகோபா லன்,
  • விஜய் சிவா, சௌம்யா,
  • அருண்,
  • ரவிகிரண்,
  • ஜெயஸ்ரீ,
  • மாண்டலின் சீனிவாஸ்,
  • கதிரி கோபால்நாத்,
  • குன்னக்குடி,
  • ரமணி

என்று ஒரு சின்ன வட்டத்துக்குள் ளேயேதான் எல்லா பிரபல சபாக்களும் சுற்றிச் சுற்றி வரவேண்டியிருக்கிறது.

  • சாகேதராமன்,
  • சிக்கில் குருசரண்,
  • மாஸ்டர் பாலமு ரளி கிருஷ்ணா(இப்போ இவர் குன்னக்குடி பாலமு ரளி கிருஷ்ணாவாமே?),
  • லஷ்மி ரங்கராஜன்,
  • நிஷா ராஜகோபால்,
  • வசுந்தரா ராஜகோபால்,
  • மாம்பலம் சகோதரிகள்

என்று அடுத்த வட்டத்துக்குள் இன் னொரு சுற்று!

  • ஜெயந்தி குமரேஷ்,
  • காயத்ரி,
  • ரேவதி கிருஷ்ணா

என்று வீணைக் கலைஞர்கள் பட் டியலோ மிகச் சுருங்கிப்போய் விட்டது.வயலின் சோலோ அல்லது டூயட்-

  • டி.என்.கிருஷ்ணன்,
  • எம்.எஸ்.ஜி,
  • கணேஷ்-கும ரேஷ்,
  • ஜிஜேஆர் கிருஷ்ணன்- விஜயலஷ்மி

என்று இந்தப் பட்டியலும் குறுகிப்போய்விட் டது.நடனம் என்று பார்த்தால் அதிலும் வறட்சி.

  • அலர்மேல்வள்ளி மூன்றே சபாக்களில் மட் டுமே ஆடுகிறார்.
  • பத்மா சுப்ரமணியம்,
  • லீலா சாம்சன் கூட அதிகம் இருக்காது.

இளைய தலைமுறை நடனக் கலைஞர்களில்,

  • ஊர் மிளா சத்யநாராயணன்,
  • ரோஜா கண்ணன்,
  • நர்த்தகி நடராஜ்,
  • லாவண்யா அனந்த் (கார்த் திக் ஃபைன் ஆர்ட்ஸின் இந்த வருட “நடன மாமணி’ விருது பெறுபவர்),

பிற்பகல் நிகழ்ச்சியும் மாலை நிகழ்ச்சியும் வழங்க இருப்பதாக ஒரு தகவல்.இந்த இசை-நடன நிகழ்ச்சிகள் ஒரு புறம் இருக்க, காலை ஏழு மணிக்கு நடைபெறும் “திருப்பாவை சொற்பொழிவுகளில், கல்யாணபுரம் ஆராவமுதாச்சா ரியார், வேளுக்குடி கிருஷ்ணன் இரண்டு பேரே ஸ்டார் அந்தஸ்து பெற்று, ஹால் நிரம்ப வைக்கிறார் கள்.
பாரம்பரியமான இந்த இசை-நடன நிகழ்ச்சிகள் எல்லாச் சபாக்களிலும் வெவ்வேறு பக்க வாத்தியக் கலைஞர்களுடன் நடக்கிறபோது, அனிதா ரத்னம் குழுவினர் மட்டும் தனியே “அதர் ஃபெஸ்டிவல்’ என்று நட்சத்திர ஓட்டலில் நடத்தி வருகிறார்கள்.

நிகழ்ச்சிகளின் தலைப்புகளே புருவத்தை உயர்த்தும் வகை என்றால், ஆடியன்சும் “ஹை ப்ரோ’தான்! போன வருடம் மியூசிக் அகடமி, ஜனவரியில் தனியே ஒருவாரத்துக்குக் காலை முதல் மாலை வரை நடன நிகழ்ச்சிகள் நடத்தி வெற்றி கண்டதால், இந்த வருடமும் ஒரு வாரத்துக்கு பிரபல நடனக் கலைஞர்க ளின் லெக்-டெம் உள்பட, பல நடன நிகழ்ச்சிகள் உண்டு என்கிறது தகவல் அறிந்த வட்டாரம். காலை நிகழ்ச்சிகளுக்கு “ஆல் ஆர் வெல்கம்’. மாலை டிக்கட் டுகள் உண்டு. பக்க பலமாக அமெரிக்க நிறுவன ஸ்பான்சர் வேறு!

சென்னை நகரம் முழுக்க மூலைக்கு மூலை இந்த இசை-நடன நிகழ்ச்சிகள் நடந்தாலும், திருவல்லிக்கே ணியின் பரபரப்பான தெரு ஒன்றில் மகாகவி பாரதி யாரின் இல்லத்திலேயே அவர் நினைவைப் போற்றும் வகையில் “வானவில் பண்பாட்டு மையம்’ நாலு நாள் களுக்கு, கச்சேரிகளும், நடனமும், சொற்பொழிவுக ளும், ஜதி பல்லக்குமாக நடத்தும் பாரதி விழாவுக்கும் கூட்டம் குறைச்சலில்லை.

திருமணங்களில் வரவேற்பு நிகழ்ச்சி என்று எல்லா மண்டபங்களிலும் இசைக் கச்சேரி நடப்பது வழக்கம்.

ஆனால் “இலக்கிய வீதி’ இனியவன் அவர்க ளின் நண்பர்கள் வட்டாரத்தில், அவர் தன் அமைப்பின் சார்பாக அறிமுகப்படுத்தியிருப்பது- நடன நிகழ்ச்சி! அவர் நண்பர் ஒருவரின் மகளின் திருமண வரவேற்புக்கு காயத்ரி பாலகுருநாதனின் “ஆண்டாள் திருமணத்து’க்குக் கிடைத்த பாராட்டைத் தொடர்ந்து, அவர் தம் நண்பர் கள் வட்டாரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச் சிகளாக சைவ-வைணவ நடன நிகழ்ச்சிகளை, நாரத கான சபாவின் “நாட்டியரங்கம்’ அமைப் பின் உதவியோடு நடத்தப் போகிறார்! இது திருமண வரவேற்பு நிகழ்வுகளில், வர வேற்கத்தக்க மாற்றம்!

சாருகேசி


சென்ற வருடத்து தினமணிக் கதிர் கட்டுரைகள்:1. SRG Sambhandham & SRG Rajanna – December Carnatic Music Season Special by Dinamani Kadhir

2. Lalkudi Jayaraman – Dinamani Kathir Music Season Special

3. D Sankaran – Malaikottai Govindhasaamy Pillai : Dinamani Kathir Music Season Special

4. Sembai Vaithyanatha Bagavathar, Mani – Dinamani Kathir Music Season Special

5. Thiyagaraja Bhagavathar, Maangudi Chidhambara Bhagawathar, Brindha, TK Jayaraman, Sundha – Dinamani Kathir Music Season Special

6. Dhandapani Desikar, Ariyakkudi, TS Rajarathnam Pillai, AKC Natarajan – Dinamani Kathir Music Season Special

7. KV Ramakrishnan’s encounters with Carnatic Vidwans – Dinamani Kathir Music Season Special

8. Sabha Awards, Recongnitions & Prizes to Carnatic Sangeetha Performers : Dinamani Kathir Music Season Special

9. ‘Cauvery’ Ramaiya – Ramanujam : Dinamani Kathir Music Season Special

10. Sujatha Vijayaraghavan – Amma : Ananthalakshmi : Dinamani Kathir Music Season Special

Posted in Charukesi, Cutchery, December, Drama, Isai, Kutchery, Margali, Margazhi, Margazi, music, Performance, Season, Stage, Theater, Theatre | Leave a Comment »

Ludhiana blast: Jihadi-Khalistani link likely

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

பயங்கரவாதிகள் கூட்டு சதி?: லூதியானா குண்டுவெடிப்பு

லூதியானா, அக். 16: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஞாயிற்றுக்கிழமை திரையரங்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு சீக்கிய, முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்களின் கூட்டுச் சதி காரணமாக இருக்குமா என்று போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்பில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று பஞ்சாப் போலீஸ் உயர் அதிகாரி ஒüலக் தெரிவித்தார்.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 12 பேரிடம் போலீஸôர் விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த திரையரங்கின் ஊழியர்களும் விசாரிக்கப்படுகின்றனர்.

திரையரங்கில் குண்டுவைத்த பயங்கரவாதிகள், திரைப்படத்தின் இடைவேளைக்கு முன்பே வெளியே சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்புக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

எனவே சந்தேகத்தின் அடிப்படையில் எந்த அமைப்பையும் குறிப்பிட்டுக் கூற இயலாது என்று பஞ்சாப் அரசின் தலைமைச் செயலர் ரமேஷ் இந்தர்சிங் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரை சேர்ந்த ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பஞ்சாபில் வேலைசெய்துவருகின்றனர்.

அவர்களை அச்சுறுத்தி பஞ்சாபை விட்டு விரட்டியடிப்பதற்காக இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்குமா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு, “காலிஸ்தான் ஜிந்தாபாத்’ இயக்கம் காரணமாக இருக்கலாம் என்று பஞ்சாப் மாநில முன்னாள் போலீஸ் உயர் அதிகாரியும் அந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை அடியோடு வேரறுத்தவருமான கே.பி.எஸ்.கில் தெரிவித்தார்.

இந்த இயக்கத்துக்கு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

லூதியானா குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு நமது அண்டை நாடு உடந்தையாக இருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று சிரோமணி அகாலி தளம் தலைவர் சுகவீர்சிங் பாதல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குண்டுவெடிப்புக்கு ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளுடன் இதரவகை வெடிபொருள்களும் கலந்து பயன்படுத்தப்பட்டுள்ளது முதல்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

குண்டுவெடித்ததால் சம்பவ இடத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் இதை உறுதி செய்கிறது. திரையரங்கில் நெருக்கமாக இருந்த நாற்காலிகள் குண்டுவெடிப்பின் பாதிப்பை தடுத்துவிட்டன. இல்லாவிடில் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என்று புலன் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சக்திவாய்ந்த வெடிபொருள்கள் வெடித்த காரணத்தால்தான் திரையரங்கில் ஆறு பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

இவர்களில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக லூதியானா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பஞ்சாப் மாநிலம் முழுவதும் போலீஸôர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டப் போலீஸ் அதிகாரிகளுடன் மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பண்டிகைக் காலமாதலால் அனைத்து நகரங்களிலும் போலீஸôர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Posted in Arms, Babbar Khalsa International, Bihar, BKI, Blast, Bombs, Cinema, dead, Democracy, explosion, Freedom, Independence, Investigation, Islam, Jihad, Khalistan, Liberation, Ludhiana, Movie, multiplex, Muslim, Punjab, RDX, Samrala, Separation, Sikhs, Singar, Terrorism, terrorist, Theater, Theatre | 1 Comment »

Ve Saaminatha Sharma – Biosketch by Vikraman

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

மறக்கமுடியா அரசியல் அறிஞர்!

விக்கிரமன்

பேரறிஞர், மூதறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் பெயர் சொன்னால் உடனே நமக்கு நினைவுக்கு வருவது “பிளாட்டோவின் அரசியல்’ என்ற அவரது நூலாகும். பல்லாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த நூலை இன்று படிப்பவர்களும் அவரது தெளிந்த தமிழ் நடையைப் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.

தமிழில் அரசியல் நூல்களை எழுதி வெளியிட்ட முன்னோடி சர்மா. “கார்ல் மார்க்ûஸ’ அறிமுகப்படுத்தினார். “புதிய சீனாவைப்’ புரிய வைத்தார். லெனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கினார். ரஷியப் புரட்சியை எடுத்துக் கூறினார். கிரீஸ் வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டினார்.

வெ. சாமிநாத சர்மா அப்போதைய “வட ஆர்க்காடு’ மாவட்டத்திலுள்ள வெங்களத்தூரில் 1895-ல் செப்டம்பர் 17-ல் பிறந்தார். தந்தை முனுசாமி அய்யர். தாயார் பார்வதி அம்மாள். செங்கல்பட்டிலுள்ள நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற சர்மா ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார். இளம் வயதிலேயே தேசபக்தி, எழுத்தார்வம் மிகுந்த சர்மா தமது பதினேழாம் வயதில் – 1914 ஜூலையில் “கௌரிமணி’ எனும் சமூக நாவலை எழுதி வெளியிட்டார். அப்போது விலை மூன்றணா!

தேசிய இயக்கம் கொழுந்துவிடத் தொடங்கிய காலம். சர்மா “பாணபுரத்து வீரன்’ எனும் நாடகத்தை எழுதினார். டி.கே.எஸ். சகோதரர்கள் “தேசபக்தி’ எனும் பெயரில் அதை நாடகமாக நடத்தினார்கள். அந்த நாடகம் அக்கால மாணவரிடையே தேசபக்தியை எவ்வாறு வளர்த்தது என்பதை டி.கே. சண்முகம் நமது “நாடக வாழ்க்கை’ நூலில் எடுத்துக் கூறியுள்ளார்.

ம.பொ. சிவஞானம் தமது “விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு’ எனும் நூலில் பாராட்டியுள்ளார். தமிழக அரசு முன்னாள் செயலர் க. திரவியம் தமது “தேசியம் வளர்த்த தமிழ்’ என்று நூலில் “தேசிய இலக்கியம்’ என்று அதைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பகாலத்தில் “இந்து நேசன்’ “சுல்பதரு’ போன்ற பத்திரிகைகளில் சர்மா பணியாற்றினார். ஆனால், 1917-ல் தமிழ்த் தென்றல் திரு.வி.க. தொடங்கிய “தேசபக்தனில்’ தொண்டாற்றத் தொடங்கியது அவரது வாழ்க்கையில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது. அப்போது பெரிய தேசபக்தர்களான சுப்ரமணிய சிவா. வ.வே.சு. அய்யர், மகாகவி பாரதியார் போன்றவர்களின் தொடர்பு கிடைத்தது. “கல்கி’ சர்மாவுடன் பணியாற்றினார். பின்னர் திரு.வி.க.வின் “நவசக்தி’யில் அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது. சுவைமிகுந்த இலக்கியத் தொடர்களை, கட்டுரைகளைப் படைத்தார். செய்தித் தலைப்புகளை அமைப்பதில் சர்மா திறமை மிக்கவர்.

சூழ்நிலை காரணமாக தமிழ்நாட்டினின்று பர்மா சென்றுவிட்ட சர்மா, 1937 – 42-ல் ரங்கூனில் “ஜோதி’ என்ற மாத இதழைத் தொடங்கித் திறம்பட நடத்தினார். பிற்காலத்தில் “சக்தி’ போன்ற சிறந்த மாத இதழ் தோன்றக் காரணமாயிருந்தது ஜோதியே. 1942-ல் ஜப்பானியர் பர்மாவில் குண்டு வீசத் தொடங்கியபோது சர்மாவும், அவரது துணைவியாரும் தமிழகம் திரும்பினர். பர்மாவினின்று நடந்தும், காரிலும் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்த அனுபவத்தை “பர்மா நடைப்பயணம்’ எனும் நூலில் எழுதி வைத்தார்.

சர்மா சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர் மட்டுமல்ல; அவர் முற்போக்குக் கருத்தும் கொண்டவர். வரதட்சிணை எதிர்ப்பு சங்கத்தை நிறுவினார். 1914-ல் நண்பர்கள் உதவியுடன் சென்னை செந்தமிழ்ச் சங்க சங்கத்தை ஆரம்பித்தார். தமிழ்த்தாத்தா உ.வே.சா.வைத் தலைவராக இருக்குமாறு அணுகினாராம்! 1958-ல் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தார்.

1914-ஆம் ஆண்டில் மங்களம் என்ற பெண்மணியை மணம் புரிந்துகொண்டார். தம் துணைவியாரையும் இலக்கிய, தேசியத் தொண்டில் சமமாக ஈடுபாடு கொள்ளச் செய்திருக்கிறார். சர்மாவின் இலக்கியத் தொண்டுக்கு அம்மையார் 1956-ல் மறையும் வரை உறுதுணையாக இருந்திருக்கிறார். சர்மாவும் மங்களம் அம்மாளும் பெற்றெடுத்தவை அருமையான நூல்களே. மனைவியை இழந்த துக்கத்தில் அவர் எழுதிய “அவள்பிரிவு’ என்ற கடித நூல் கடிதக் கலையில் சிறந்ததாகும்.

திட்டமிட்ட வாழ்க்கையை உடையவர் சர்மா. ஆனால் கருணை உள்ளம் நிறைந்தவர். ஒழுக்கம், தமிழ்ப்பற்று இரண்டும் கலந்த உருவமே வெ. சாமிநாத சர்மா.

“உலகம் சுற்றும் தமிழர்’ என்ற புகழ்ப் பெயர் கொண்ட காந்தி திரைப்படச் சிற்பி ஏ.கே. செட்டியார் தொடங்கிய “குமரி மலர்’ எனும் மாத இதழின் ஆசிரியராக 1945-46ல் பணியாற்றினார். அப்போதுதான் அவரைச் சந்தித்தேன். தியாகராய நகரில் அவர் நடத்திய இலக்கியச் சொற்பொழிவுகளில் கலந்துகொண்டேன். உஸ்மான் சாலையிலுள்ள பர்ணசாலை போன்ற குடிலில் நான் ஆசிரியராக இருந்த இதழுக்குக் கட்டுரை கேட்டுப் பெறச் சந்தித்தேன். 1978 ஆம் ஆண்டு நண்பர் பெ.சு. மணியுடன், கலாúக்ஷத்ரா விடுதியில் சந்தித்தேன். முதுமையும் நோயும் வாட்டிய நிலையிலும் தமிழ் வளர்ச்சியைப் பற்றியே அவர் பேசினார்.

பர்மா நடைப்பயணக் கையெழுத்துப் பிரதியை பெ.சு. மணி தேடி எடுத்து என்னிடம் தந்தார். தன் நூல்களை வெளியிடும் உரிமையை, சர்மாஜி அவரிடம் அளித்திருந்தார். நான் அப்போது ஆசிரியராக இருந்த “அமுதசுரபி’ மாத இதழில் வெளியிடச் சம்மதித்தேன். கட்டுரை தொடங்கப் போகும் அறிவிப்பைப் பார்த்து அந்த மூதறிஞர் மகிழ்ச்சியடைந்தார். முதல் இதழ் வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆனால் அதற்கு இரு நாள்களுக்கு முன்பே அவர் மறைந்தார்.

“பர்மா வழி நடைப்பயணத்தை’ தமிழ் மக்களுக்கு வெளியிட்டுப் படிக்கச் செய்தது என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பேறு.

பர்மா வழி நடைப்பயணத்தைப் படிக்கும்போது நாம் சர்மாவுடன் அந்தப் பகுதியில் அவருடன் சேர்ந்து பயணம் செய்த உணர்வை அடைந்திருக்கிறோம். அறிஞர் சர்மா பயணக் கட்டுரையாக எழுதியிருந்தாலும் இந்த நூல் ஒரு வரலாற்று நூலாகும்.

தமிழ்நாட்டிற்குக் கிடைத்த பேரிலக்கியம் அந்தப் பயணக் கட்டுரை. மறைந்த பேரெழுத்தாளர் கு. அழகிரிசாமி, சர்மாவைப் பற்றி 54 ஆண்டுகளுக்கு முன்பு பாராட்டி எழுதினார்.

“”தமிழகத்தில் ஆங்கிலம் தெரியாத தமிழர்களும் அரிஸ்டாட்டிûஸப் பற்றித் தெரிந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் பிளேட்டோவையும் ரூúஸôவையும் அரிஸ்டாட்டிலையும் அறிமுகப்படுத்தியவர் சர்மாதான். தமிழ்ச் சமுதாயத்திற்கு எப்பேர்ப்பட்ட பேருபகாரம் இது!

வெ. சாமிநாத சர்மா சிறிது குள்ளமாக இருப்பார். ராஜகோபாலச்சாரியாரைப் போல் மொட்டைத் தலை. சிவந்த மேனி, கதர்வேட்டியும் கதர்ஜிப்பாவும் இவருடைய உடை. சிலசமயங்களில் நேருஜியைப் போல் அரை கோட் அணிந்திருப்பார். தொலைவில் பார்த்தால், திரு.வி.க.வின் தோற்றத்தில் இருப்பார். இவரது எளிய வாழ்க்கைக்கு மகாத்மாவின் எளிய வாழ்க்கையைத்தான் உவமையாகக் கூற முடியும்.

அன்பென்ற மலர், இதழ் விரித்துப் பூத்தது போன்ற தெய்வீகச் சிரிப்பு. சாந்தி பொலியும் முகம். அன்பு சுரக்கும் இனிய சொற்கள். அவர்தான் சர்மாஜி.

செப்டம்பர் 17 ஆம் நாள் அவருடைய பிறந்த நாள். ஒழுக்க சீலரான, பண்பாட்டுக் காவலரான, எழுத்துக்காக வாழ்ந்தவரான சர்மாஜி 1978 ஜனவரி 7ஆம் தேதி, கலாúக்ஷத்ராவில் தன் இறுதி மூச்சு நிற்கும்வரை, தமிழ் மொழியின் உயர்வைப் பற்றி மட்டுமே நினைத்தவரை, தமிழ் உள்ள வரை மறக்க முடியாது.

(இன்று அரசியல் அறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் 112ஆவது பிறந்த நாள்)

(கட்டுரையாளர்: அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர்).

Posted in Alagirisami, Alakirisami, Amudhasurabhi, Amudhasurabi, Amuthasurabhi, Amuthasurabi, Arcot, Author, Azhagirisami, Azhakirisami, Biosketch, Books, Burma, China, Cinema, Congress, Drama, Faces, Films, Gandhi, Greece, History, Integration, journalism, journalist, Kadhar, Kalashethra, Kalashetra, Lenin, Literature, Ma Po Sivanjaanam, Mag, magazine, MaPoSi, Marx, Media, Movies, MSM, Nation, National, people, Person, Plato, Rajaji, Read, Russia, Saaminadha, Saaminatha, Saaminatha Sharma, Saminatha, Saminatha Sharma, Sharma, Sivajaanam, Sivanjaanam, Tamil, Theater, Theatre, TKS, Tour, Travel, Ve Saaminatha Sharma, Vigraman, Vikraman, VSS, Writer | Leave a Comment »

Arts club for Mentally disabled in Chennai – Rasa

Posted by Snapjudge மேல் ஜூலை 13, 2007

மனவளர்ச்சி குன்றியோரின் கலைக் குழு: “ரஸா’ அமைப்பு உருவாக்குகிறது
மனவளர்ச்சி குன்றியோரின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையிலும், அந்தத் திறமையின் மூலம் அவர்கள் வருவாய் ஈட்ட உதவும் விதத்திலும் “சிறப்பு கலைக் குழு’வை சென்னையைச் சேர்ந்த “ரஸா‘ (ரமணா சூன்ருத்யா ஆலயா) அமைப்பு உருவாக்குகிறது.

இதற்காக 14 முதல் 30 வயதுக்கு உட்பட்ட மனவளர்ச்சி குன்றிய 15 பேரை வரும் 21-ம் தேதி கலைத்திறன் தேர்வுகளை நடத்தி, தேர்ந்தெடுக்க உள்ளதாக அமைப்பின் நிறுவனர் -இயக்குநர் டாக்டர் அம்பிகா காமேஷ்வர் தெரிவித்தார். 1989 அக்டோபரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கலைத்திறனை வளர்க்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. இங்கு பயிலும் மாணவர்களிடம் எத்தகைய கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.

ரஸா‘ நடத்தும் சிறப்புப் பள்ளியில் மன வளர்ச்சி குன்றிய 100 பேர் தற்போது பயின்று வருகின்றனர். அவர்களுக்கு இசை, நாட்டியம், நாடகம், முக பாவங்களுடன் கதை சொல்லுதல் உள்ளிட்ட கலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வப்போது ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களது திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், முழுக்க முழுக்க மன வளர்ச்சி குன்றியோரை மட்டுமே கொண்ட கலைக் குழுவை உருவாக்க வேண்டும் என்பது “ரஸô’வின் நோக்கம்.

கலைக் குழுவில் இடம்பெறத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இலவச பயிற்சி தரப்படும். பயிற்சிக் காலத்தில் அவர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு “ரஸா, 1/1 அபிராமபுரம் முதல் தெரு, சென்னை -600 018′ என்கிற முகவரியிலோ, 2499 7607, 6528 1970 என்கிற தொலைபேசிகளிலோ தொடர்பு கொள்ளலாம்.

Posted in Arts, Chennai, Dance, Disabled, Drama, Free, Help, Madras, music, Narration, Performance, Rasa, service, Stage, Story, Students, Teach, Theater, Volunteer | Leave a Comment »

Sivaji – The Boss: Theater Reports; Reservation Details; Fan Celebrations

Posted by Snapjudge மேல் ஜூன் 10, 2007

சிவாஜி டிக்கெட் முன்பதிவு: தியேட்டர்களில் அலை மோதிய கூட்டம்

சென்னை, ஜுன். 10-

உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரஜினி நடித்த “சிவாஜி” படம் வருகிற 15-ந்தேதி திரையிடப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார். ஏ.வி.எம். தயாரிப்பில் ஷங்கர் இயக்கியுள்ளதால் “சிவாஜி” படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஊர்களில் திரையிடப்படுகிறது. சிறிய ஊர்களில் கூட இரண்டு, மூன்று தியேட்டர்களில் ரிலீசாகிறது. சென்னை நகரிலும், புற நகரிலும் 30 தியேட்டர்களில் சிவாஜி படம் திரையிடப்படுகிறது.

சென்னை நகரில்

  • சத்யம்,
  • சாந்தம்,
  • ஆல்பட்,
  • தேவி,
  • மெலோடி அபிராமி,
  • அன்னை அபிராமி,
  • பாலஅபிராமி,
  • உதயம்,
  • சூரியன்,
  • மினி உதயம்,
  • ஏவி.எம்.ராஜேஸ்வரி,
  • கமலா,
  • பாரத்,
  • மகாராணி ஆகிய 15 தியேட்டர்களில் தினமும் 4 காட்சிகளாக திரை யிடப்படுகிறது.

இதே போல் புறநகர்ப் பகுதியில்

  • மாயாஜால்,
  • பிருந்தா,
  • ஈஞ்சம்பாக்கம் பிரார்த்தனா,
  • ஆராதான,
  • தாம்பரம் ஸ்ரீவித்யா,
  • குரோம்பேட்டை வெற்றி,
  • ராக்கேஷ்,
  • நங்கநல் லூர் வேலன்,
  • வெற்றிவேல்,
  • திருவான்மிïர் தியாகராஜா,
  • கணபதிராம்,
  • ரெட்ஹில்ஸ் ஸ்ரீலட்சுமி,
  • அம்பத்தூர் ராக்கி சினிமாஸ்,
  • முருகன்,
  • திருமுரு கன் ஆகிய 15 தியேட்டர்களிலும் ரிலீசாகிறது.

சிவாஜி படத்துக்கு தமிழ்நாடு முழுவதும் முன்பதிவு இன்று தொடங்கியது. இதையடுத்து சென்னை நகரில் உள்ள தியேட்டர்களில் முன்பதிவு செய்ய அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.

ஒவ்வொரு தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. அவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.

சத்யம் தியேட்டரில் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆயிரக் கணக்கில் முன் பதிவு செய்ய காத்து இருந்தனர். `சாப்ட்வேர்’ கம்பெனி ஊழியர்களும் வந்து இருந்தனர்.

உதயம் தியேட்டரில் தியேட் டருக்கு வெளியே ரோட்டிலும் ஏராளமான ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று இருந்தனர்.

அபிராமி காம்ப்ளக்சில் 3 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்படுவதால் அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.

அதிகாலை 3 மணிக்கே ரசிகர்கள் வந்து தியேட்டர் வாசல்களில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தனர். 4 மணிக்கு கூட்டம் மேலும் குவியத் தொடங்கியது. சாரை சாரையாக தொடர்ந்து ரசிகர் கள் குவியத் தொடங்கி னார்கள்.

தியேட்டர்களில் ரஜினி கட்-அவுட் வைக்கப்பட்டு கொடி- தோரணங்கள் கட்டப் பட்டு இருந்தன. தியேட்டர் கள் அனைத்தும் திருவிழாக் கோலம் பூண்டு இருந்தது. டிக் கெட் கொடுக்க ஆரம்பித்த தும் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.

சென்னை மாவட்ட ரஜினி மன்ற தலைவர் ஓம்சேகர் ரசிகர்களை ஒழுங்கு படுத்தி னார். பொதுமக்களுக்கு இடைïறு ஏற்படுத்தாமல் டிக்கெட் வாங்கிச் செல்லுமாறு கூறினார்.

கூட்டம் அதிகம் திரண்டு இருந்ததால் காலை 6 மணிக்கே முன்பதிவு தொடங்கியது. சில மணி நேரங்களிலேயே ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இதனால் முன்பதிவு செய்ய முடியாத ரசிகர்கள் ஏமாற்றம் அடைந் தனர்.

ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதை தொடர்ந்து அனைத்து தியேட்டர்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சிவாஜி முன்பதிவு பெண்கள் ஆர்வம்

சிவாஜி படத்துக்கு முன்பதிவு செய்ய மாணவிகளும், பெண்களும் அதிக ஆர்வத்துடன் வந்திருந்தனர். மற்ற தியேட்டர்களை விட சத்யம் தியேட்டரில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களுக்கு தனி `கிï’ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முன்பதிவு டிக்கெட் வாங்கியதும் மகிழ்ச்சியுடன் டிக்கெட்டை காண் பித்தபடி சென்றனர். ஊனமுற்ற ரசிகர்களும் தவழ்ந்து தவழ்ந்து வந்து கிïவில் நின்றனர்.

சத்யம் தியேட்டரில் டிக்கெட் கவுண்டரில் தொடங்கிய கூட்டம் தியேட்டரைச் சுற்றி வளையம் போல் வந்து அதே டிக்கெட் கவுண்டர் வரை நின்று இருந்தது. அங்கு கூட்டம் முண்டியடித்த தால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசாக தடியை சுழற்றினார்கள்.

Posted in Cinema, Film, Movies, Previews, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Reports, Shivaji, Shivaji the boss, Sivaji, Sivaji Fans, Sivaji Story, Sivaji the Boss, Theater, Theatre, Theatres | Leave a Comment »

Periyar Movie Celebrations – Processions, Theater Specials

Posted by Snapjudge மேல் மே 2, 2007

சாரட் வண்டியில் “பெரியார்’ ஊர்வலம்

ஈரோடு, மே 2: ஈரோட்டில் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் “பெரியார்’, “ராவணன்’ வேடமணிந்து திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் சென்றனர்.

தமிழகம் முழுவதும் பெரியார் திரைப்படம் மே 1-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பெரியாராக நடிகர் சத்யராஜ், மணியம்மையாக குஷ்பு நடித்துள்ளனர். பெரியார் திரைப்படம் வெளியானதையொட்டி தி.க.வினர் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை கொல்லம்பாளையத்தில் இருந்து தேவி அபிராமி திரையரங்குக்கு ஊர்வலமாகச் சென்றனர்.

குதிரை பூட்டிய சாரட் வண்டியில் திராவிடர் கழக ஈரோடு நகரச் செயலர் தியாகு பெரியார் வேடமணிந்தும், இளைஞர் அணி அமைப்பாளர் ராசு ராவணன் வேடமணிந்தும் சென்றனர்.

ஊர்வலம் கொல்லம்பாளையம், காளைமாட்டுச் சிலை, மணிக்கூண்டு, பஸ்நிலையம் வழியாக திரையரங்கை அடைந்தது. பெரியார், ராவணன் வேடமணிந்தவர்கள் சாரட் வண்டியில் செல்வதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். திரையரங்கில் பெரியார், ராவணன் வேடமணிந்தவரை தி.க.வினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

Posted in Celebrations, Cinema, Fan, Fan Clubs, Kushboo, Kushbu, Manram, Movie, Periyar, Rasigar, Rasikar, Ravanan, Sathyaraj, Satyaraj, Tamil Cinema, Tamil Movie, Tamil Movies, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Tamil Theatres, Theater, Theatre | 1 Comment »

The modalities of an Official Bandh, Strike – Organized Laziness by the Government

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2007

செய்தி வெளியீடு எண்.187 நாள் 30.3.2007
செய்தி வெளியீடு

31.3.2007(சனிக்கிழமை) அன்று பொது வேலை நிறுத்த நாளாக தமிழகத்தில் அனுசரிப்பதையொட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அலுவலர்கள் ஆகியோருக்கு கீடிநடிநடிநடிநக்கண்ட உத்தரவுகளின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

• பொது வேலை நிறுத்த நாளான 31.3.2007 (சனிக்கிழமை) அன்று, மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் 31.3.2007ம் நாள் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

• மாநில போக்குவரத்துக் கழகங்கள், நாட்டில் செயல்பட்டுவரும் இதர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும், மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் 31.3.2007ம் நாளன்று பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

• பொது வேலை நிறுத்தத்திலிருந்து,

  1. தொலைபேசி,
  2. தொலைத் தொடர்பு,
  3. குடிநீர் விநியோகம்,
  4. பால் விநியோகம்,
  5. மின் விநியோகம்,
  6. தீயணைப்பு சேவை,
  7. செய்தித் தாள்கள்,
  8. மருத்துவமனைகள்,
  9. கருவூலங்கள்,
  10. பட்டியல் இன வங்கிகள் ஆகிய அத்தியவசியப் பணிகளுக்கு விலக்களிக்கப்படுகிறது,

• 31.3.2007 அன்று காலை 6.00 முதல் மாலை 6.00 மணி வரை , பேருந்துகளும், இரயில்களும், தமிழகத்தில் ஓடாது. 30.3.2007-அன்று புறப்படும் பேருந்துகள் அனைத்தும், 31.3.2007 அன்று அதிகாலை 5.00 மணிக்கு முன்பாக பாதுகாப்பான இடத்தை சென்றடைந்து நிறுத்தப்பட வேண்டும்.

• 31.3.2007 அன்று காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை விமானம் மற்றும் இரயில்களின் இயக்கம் இல்லாதவாறு நேரத்தை மாற்றியமைத்துக் கொள்ளும்படி சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

• மதுபானக் கடைகளும், வெடிமருந்து கிடங்குகளும், திரையரங்கங்களும், 31..3.2007 அன்று மூடப்பட்டிருக்கும்.

• பொது வேலை நிறுத்தம் முடிவுற்றதும், 31.3.2007-அன்று மாலை 6.00 மணிக்கு மேல் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.

+++++
வெளியீடு இயக்குநர், செய்ய்ய்ய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை – 9

Posted in Alcohol, Bandh, Bus, Cinema, Communications, Electricity, Essential, Fire, Flights, Government, Govt, Hospital, job, Lazy, Media, milk, Movies, Newspapers, Official, Police, Politics, Railways, Services, Strike, Telecom, Telephone, Theater, TN, Trains, Transportation, Water Supply, Wine, Work, Worker | 2 Comments »

Sangeet Natak Akademi introduces youth awards

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

தமிழகத்தின் 5 இளம் கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது

புதுதில்லி, பிப். 22: தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து இளம் கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருதுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்த விவரம்:

புதுதில்லியில் உள்ள சங்கீத நாடக அகாதெமி முதன்முறையாக இளம் கலைஞர்களுக்கான விருதுகளை வழங்குகிறது. இவ்விருதுகள் பாரத ரத்னா உஸ்தாத் பிஸ்மில்லா கான் நினைவாக “உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார்’ என்ற பெயரில் வழங்கப்படுகின்றன.

2006-ம் ஆண்டுக்கான இவ்விருதுகள் 33 இளம் கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்றன.

  • இசை,
  • நாட்டியம்,
  • நாடகத்துறை ஆகியவற்றுக்கு தலா எட்டு விருதுகளும்,
  • பாரம்பரிய நாட்டுப்புற கலை,
  • பொம்மலாட்டம் போன்ற பல்வேறு துறைகளில் ஏழு விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுடன் ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.

இந்த விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 5 கலைஞர்களின் விவரம்:

கர்னாடக வாய்ப்பாட்டு: டி.எம்.கிருஷ்ணா

மிருதங்க இசை: என்.மனோஜ் சிவா

கடம் வாசிப்பு: எஸ்.கார்த்திக்

பரத நாட்டியம்: சீஜித் கிருஷ்ணா

படைப்புக் கலை: சங்கீதா ஈஸ்வரன்

Posted in Acting, Actor, Artiste, Arts, Awards, Barathanatyam, Bharatanatyam, Bharathanatyam, Bismillah Khan, Bismillah Khan Yuva Puraskar, Carnatic, Creator, Culture, Dance, Direction, Gadam, Hindustani instrumental, Hindustani vocal, instrumental, Kadam, Kathak, Kathakali, Kuchipudi, Kutiyattam, lighting, Manipuri dance, Mime, Ministry of Tourism and Culture, Mridangam, Mrudangam, music, Odissi, Performer, Playwriting, Puppetry, Sangeet Natak Akademi, santoor, Singer, sitar, Stage, stage craft, Tamil Nadu, Thang-ta, Theater, tribal, Ustad Bismillah Khan, vocal, Youth, youth award, Yuva Puraskar | Leave a Comment »