Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Thaamarai’ Category

Vairamuthu: “Today’s cinema songwriters write with their beer’

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

வைரமுத்து சொன்னது சரியா?
– கடுகடுக்கும் கவிஞர்கள்

Kalki 25.03.2007

அது ஒரு விழா மேடை.

‘இன்றைய இளம் பாடலாசிரியர்கள் பாட்டிலுடன் கவிதை எழுதுகிறார்கள். எனவே அந்தப் பாடல் அவர்களுக்குச் சொந்தமானதல்ல’

என்கிற ரீதியில் பேசுகிறார் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து. இது மறுநாள் தினசரிகளில் வந்துவிட, அங்கே இங்கே என்று சலசலப்புகள் ஆரம்பித்துவிட்டன. வைரமுத்து சொன்னது சரியா? இளம் பாடலாசிரியர்களிடம் கேட்டோம்.

விவேகா: ஒட்டுமொத்த கவிஞர்களையும் குறை கூறுவது ஏற்க முடியாத செயல். மது பக்கமே போகாத என்னைப் போன்றவர்களை இப் பேச்சு அவமானப்படுத்துவதாக உள்ளது. யார், யார் மது அருந்துகிறார்கள் என்கிற ஆய்வு தேவையற்றது. இளம் கவிஞர்களின் வளர்ச்சியில் உண்மையிலேயே அக்கறை இருந்தால், தனிப்பட்ட முறையில் அறிவுரை வழங்கியிருக்கலாம். இப்படிக் குற்றம் சாட்டுவது சரியான அணுகுமுறையாக எனக்குப் படவில்லை.

சிநேகன்: சென்ற தலைமுறை கவிஞர்களைவிட, இன்றைய தலைமுறை கவிஞர்கள் திறமையானவர்கள்; உழைக்கத் தெரிந்தவர்கள்; பிழைக்கத் தெரிந்தவர்கள். எல்லாக் கவிஞர்களையும் குற்றம் சாட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.

குகை மா. புகழேந்தி: சரக்குள்ள பாடல்கள் பலவற்றை எழுதுகிற இன்றைய இளங்கவிஞர்களை, சரக்குப் பாட்டில் இருந்தால்தான் எழுதவே ஆரம்பிக்கிறார்கள் என்று வைரமுத்து பேசியிருப்பது மிகவும் துரதிருஷ்டமானது.

வேறு ஏதோ ஒரு கோபம் அவர் பேச்சு மூலம் வெளிப்படுவதாகவே நான் நினைக்கிறேன். எந்த இளைய தலைமுறைக் கவிஞனும் அவரை விமர்சிக்க, குற்றஞ்சாட்டத் தயாராக இல்லாதபோது, விஷம் தெளிக்கும் விதமாக அவர் பேசியுள்ளார். புத்திமதி என்றுகூட எங்களால் இதை எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், தன் மகன் மீது குறையிருந்தால், அதைத் திருத்த எந்தத் தகப்பனும் மேடை போட்டுச் சொல்ல மாட்டான். வைரமுத்து யாரையும் பாராட்ட மாட்டார். இந்த ஆராவாரத் தூற்றல் எங்களை எரிச்சல் படவே வைக்கிறது!

கபிலன்: எப்போதாவது சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது இவற்றால், எந்தக் கவிஞனும் கெட்டுப் போகப் போவதில்லை. தண்ணியடித்தால் என்ன… பாடல்கள் தள்ளாடாமல் இருந்தால் சரி!

யுகபாரதி: அவர் மது அருந்துகிறவர்களைப் பற்றித்தான் பேசியிருக்கிறார். நான் மது அருந்துவதில்லை. எனவே, அந்தச் செய்திக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

அறிவுமதி: கவிஞர்களிடையே ஒற்றுமை இருக்கவேண்டும் என விரும்புபவன் நான். அந்த ஒற்றுமை குலைய வேண்டாம் என்று நினைக்கிறேன். எனவே மேற்கொண்டு பேச விரும்பவில்லை.

ஆண்டாள் பிரியதர்ஷினி: இளைய தலைமுறை மீது அக்கறை இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கவிஞரை தனிப்பட்ட முறையில் கனிவாகக் கண்டிக்க வைரமுத்துவுக்கு உரிமை உண்டு. ஆனால், விழா மேடையில் ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தைப் பொதுமையாக்கிப் பேசுவது தேவையில்லாதது. இப்படிப் பொதுவாகப் பேசுவது தொழில்போட்டியில் வரும் பொறாமையுணர்வுப்பேச்சோ என்ற யூகத்துக்கு வழி வகுத்துவிடும்.

எம்.ஜி.கன்னியப்பன்: ‘இன்றைய கவிஞர்கள் குடித்துவிட்டுப் பாடல் எழுதுகிறார்கள், குடிக்காமல் எழுதுகிறார்கள்’ என்பது வைரமுத்துவுக்கு ஒரு பிரச்னையே இல்லை. ‘ஒரு படத்துக்கான ஒட்டுமொத்த பாடல்களையும் எனக்கே கொடுங்கள்’ என்று கேட்கும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என அவர் எண்ணிக் கொண்டிருக்கையில், இன்னொரு கவிஞரும் அப்படிக் கேட்பதை அவரால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? அந்தக் கோபத்தை நேரடியாகப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லாமல், ஒட்டுமொத்த இளம் கவிஞர்களைச் சாடினால், போய்ச் சேர வேண்டிய கவிஞனை சேருமே என்பதற்காகத்தான் அப்படிப் பேசியிருக்கிறார்.

தனக்கென ஓர் எல்லையை நிர்ணயித்துக்கொண்டு, ‘எல்லை தாண்டி வந்தாயென்றால் பார்’ என்று எச்சரிக்கை விடுவது என்பது நாடுகளிடையே வேண்டுமானால் இருக்கலாம், பாடலாசிரியர்களிடையே இருக்கக்கூடாது.

நா.முத்துக்குமார்: இதைப் பற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை.

தாமரை: படைப்பாளியாக இருந்தால் மட்டும் என்ன? யாராக இருப்பினும் வாழ்நாளில் தவிர்க்க வேண்டிய, எதிர்க்க வேண்டிய, ஒழிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் மது.

இதைப் பற்றி மூத்த தலைமுறைக் கவிஞரான மு.மேத்தா என்ன சொல்கிறார்?

‘‘யாரோ ஒருவரை மனத்தில் வைத்துக் கொண்டு எல்லோரையும் பொத்தாம் பொதுவாக இழிவாகப் பேசுவதென்பது தவறான காரியம். வளர்ந்து வருகிற இளங் கவிஞர்களை வாழ்த்தும் ஸ்தானத்தில், தங்களை வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, அவர்களை வைரிகளாகக் கருதுகிற மனோபாவம் குரூரமானது!’’

கவிஞர் வைரமுத்துவின் கருத்தறிய அவரைத் தொடர்பு கொண்டபோது அவருடைய உதவியாளர், ‘‘நீங்கள் கேட்பதற்கு, கவிஞர் ஈரோட்டு லயன்ஸ் கிளப்பில் பேசிய அந்த ஆடியோ கேசட்தான் பதில். அதையே பதிலாகப் போட்டுக் கொள்ளுங்கள். திரித்து வெளியிடும் பத்திரிகைகளின் செய்தியினை வைத்துக் கொண்டு கேட்காதீர்கள். இது குறித்து கவிஞர் வாய்மொழியாகவோ, எழுத்து மூலமோ தருவதற்கு ஒன்றுமில்லை’’ என்றவர், ஈரோட்டு தொலைபேசி எண்ணைத் தந்தார். நமது தொடர்ந்த அழைப்புக்கு ஈரோட்டிலிருந்து பதிலில்லை என்ற விஷயத்தை மறுபடியும் கவிஞரின் உதவியாளரிடம் கூறினோம். ஆனால் அவர் மூலம் ஆடியோ கேசட்டோ, கவிஞரின் மறுப்போ இந்த இதழ் அச்சாகும்வரை கிடைக்கவில்லை.

– சுமதி, அருணாஸ்

Posted in Andal Priyadarshini, Arivumathi, Arivumathy, Audio, beer, Brandy, Cinema, Cocktail, Culture, Drink, Drunkard, Gin, Immoral, Kabilan, Kalki, Kannadasan, Kapilan, Kavinjar, Lyricist, Lyrics, Moral, Morality, music, Pa Vijai, Pa Vijay, Paa Vijai, Paa Vijay, Preach, Rum, Scotch, Snegan, Snehan, Song writer, songwriters, Thaamarai, Thamarai, Vairamuthu, Viveka, Whiskey, Whisky, Wine, Yugabharathi, Yugabharathy, Yukabharathi, Yukabharathy | Leave a Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy – Thoothuvalai for Healthy Hearts and Thaamarai: Lotus

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

மூலிகை மூலை: இதய பலவீனத்துக்குத் தூதுவளை!

விஜயராஜன்

சிறிதாக உடைந்த முள் உள்ள இலைகளையும் மித ஊதா நிறப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்களையும், சிவப்பு நிறத்தில் பழங்களையும், வளைந்த முட்கள் நிறைந்த தண்டினையும் உடைய சிறு கொடி இனமாகும். இதைப் பந்தல் போட்டு வளர்ப்பது சிறந்த முறையாகும். கொடிகளில் முட்கள் இடைவிடாமல் அப்பி இருக்கும். ஐந்து ஆண்டுகள் வரை வளரக் கூடியது. சரியான முறையில் வளர்த்து வந்தால், அதற்கும் அதிக நாட்கள் வளர வாய்ப்பு உண்டு. வேர் முதல் பழம் வரை எல்லாமே மருத்துவக் குணம் கொண்டவை. இதன் இலையும், பூவும் கோழையை அகற்றவும், உடலைப் பலப்படுத்தவும், காமத்தைப் பெருக்கவும் செய்யும். இதன் காய், பழம் பசியைத் தூண்டும், மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படும். தமிழ்நாடெங்கும் இது பரவலாக வளரும் செடியினம்.

வேறு பெயர்கள்: சிங்க வல்லி, ரத்து நயத்தான், தூதூவளை, தூதூளம், தூதுளை.

ஆங்கிலத்தில்: Soanum Grilobalum, Solanaceae

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம். தூதுவளை இலைகளை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி பொடியை 1 டம்ளர் பசும்பாலில் காலையில் மட்டும் தொடர்ந்து குடித்து வர நாவறட்சி, கபநீர், மூட்டு வலி, காசநோய் குணமாகும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, குழம்பாகக் கடைந்தோ உண்டு வரக் கபக் கட்டு நீங்கி உடல் பலம் பெறும்.

ஆடா தொடை இலையை ஆவியில் வாட்டி பின்னர் அதைச் சாறு பிழிந்து ஒரு சங்களவு எடுத்து சிறிது தேன் கலந்து குடித்து வர இருமலுடன் துப்பும் சளியில் இரத்தம் கலந்து வருவது உடனே நிற்கும். அத்துடன் 10 சொட்டு தூதுவளை இலையைச் சாறு பிழிந்து குடிக்க, சவ்வு போன்று இழுத்துக் கொண்டு இருக்கும் இருமலும் நீங்கும்.

தூதுவளை இலையைச் சாறு பிழிந்து அதேயளவு நெய்யில் காய்ச்சி 1 தேக்கரண்டியளவு 2 வேளை குடித்து வர, எலும்புருக்கிக் காசம், மார்புச் சளி உடனே நீங்கும்.

தூதுவளைக் காயை நிழலில் உலர்த்திக் காயவைத்து தயிர், உப்பு சேர்த்து பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உணவுடன் உண்டு வர மனநலம் பாதிப்பு, இதய பலவீனம், மலச்சிக்கல் குணமாகும்.

தூதுவளை சமூலத்தை 50 கிராம் அளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 150 மில்லியளவுக்கு வற்றக் காய்ச்சி வடிக்கட்டி 2 வேளை குடித்து வர, இரைப்பு, சுவாசகச் சளி, இருமல் குணமாகும்.

தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி புகை பிடிப்பது போல செய்து வர, இரைப்பு இருமல், மூச்சுத் திணறல், சளி இளகி வெளியேறும்.

தூதுவளைப் பூக்கள் 10 எடுத்து 1 டம்ளர் பாலில் காய்ச்சி வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து 48 நாட்கள் இருவேளை குடித்து வர, தாது விருத்தி, உடல் பலம், முகவசீகரம் பெறலாம்.

=========================================================

மூலிகை மூலை: தாமரை

விஜயராஜன்

சேற்றுப் பகுதியில் இருக்கும் வேர்க்கட்டுள்ள கிழங்கில் இருந்து கிளம்பி மிருதுவான தண்டுப் பகுதி வெளியேறி அதைத் தொடர்ந்து வட்டமான பெரிய இலைகளை நீர்ப்பரப்பில் பெற்றிருக்கும். அதற்கு மேல் கூம்பு மலரையும் பெற்று இருக்கும். தாமரை இலையின் மேல் பரப்பில் நீர் ஒட்டாத ஒரு தன்மை இருக்கும். தண்ணீர் மேல் மட்டத்தில் பாய் விரித்தாற் போல மிதந்து கொண்டு இருக்கும். இது நேராக வளரும் நீர்க் கொடி இனமாகும். பூ, விதை மருத்துவக் குணம் உடையது. தாமரை மலர்கள் தாது வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும் மருத்துவக் குணம் உடையது. தமிழகம் எங்கும் குளம், குட்டை, கோவில் தடாகத்திலுள்ள பொய்கைகளில் தானாகவே வளர்கின்றது.

வேறு பெயர்கள்: அம்புயம், அம்புசாதம், அரவிந்தம், அன்புசன் மடம், அம்போசம், அம்போருசம் ஆசிய பத்திரம், ஆய் மலர், ஆசைய பத்திரம், இரதிகாந்தன், கந்தோதம், கமலம், கசம், கரோசம், சரோருகம், சலகாங்கம், சலசம், சல சங்கமம், சல நகம்.

வகைகள்: வெண் தாமரை, கல்தாமரை, செந்தாமரை, வெண்ணிற பூக்களைக் கொண்ட தாமரை, வெண் தாமரை என்றும், இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்களைக் கொண்ட தாமரை செந்தாமரை என்றும் பெயர் பெற்றுள்ளது. செந்தாமரையை விட வெண் தாமரைக்கே மருத்துவக் குணம் அதிகம் உள்ளது.

ஆங்கிலத்தில்: Nelumbium speciosum, Wild, Nymphaeqceae

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம். வெண்தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி ஒரு கிலோ அளவு எடுத்து 3 லிட்டர் நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊறப் போட்டு மறுநாள் அதை அடுப்பில் வைத்து 1 லிட்டர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி, சர்க்கரை 1 கிலோ கலந்து தேன் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு 15 மில்லி எடுத்து வெந்நீரில் கலந்து 2 வேளை குடித்து வர, உடல் சூடு, தாகம் அடங்கி கண் குளிர்ச்சி பெறும்.

தாமரை இதழ்களை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம் பொடியைத் தேன்விட்டு குழப்பி 2 வேளை சாப்பிட்டு வர, இருதயம் பலப்படும். இரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் சீராக அனுப்பும்.

செந்தாமரை பூவின் இதழ்களை 10 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்துவர உடல் சூடு தணியும்.

தாமரை விதைகள் நன்றாகக் காய்ந்ததாக ஒரு கையளவு எடுத்து 1 டம்ளர் பசும் பாலில் 12 மணிநேரம் இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் இந்தப் பாலை மட்டும் குடித்துவர, உடல் குளிர்ச்சி அடைந்து மூத்திரம் வெள்ளையாகப் பிரிந்து போகும்.

தாமரை விதையை 1 கிராம் எடுத்து அதை 1 டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்துவர உடல் சூடு தணிந்து தாது வளர்ச்சி அடையும்.

கல்தாமரையை பாலில் அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர, வீரிய விருத்தியும், தேக பலமும் உண்டாகும். (குட்ட வியாதி உள்ளவர்களுக்கு இது ஆகாது.)

============================================

மூலிகை மூலை: பசிக்கு…ருசிக்கு… கறிவேம்பு!

விஜயராஜன்

கொத்தான மாற்று அடுக்கில் அமைந்த நறுமணமுள்ள இலைகளையும் கொத்தான மலர்களையும் கரிய நிறமான பழங்களையும் உடைய நடுத்தர குறுமர வகையைச் சார்ந்ததாகும். இலை மருத்துவ குணம் உடையது. இதனை மருந்தாகப் பயன்படுத்துவதால் பசியைத் தூண்டும். தாதுபலம் பெருகும். வயிற்றில் வெப்பமுண்டாகி வாயுவைக் கலைக்கும். கறிவேம்பினால் தாளிக்காத ஒரு குழம்பு ஒரு குழம்பா? என்று கேட்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காய்கறிச் சமையலுக்கு மணமூட்டியாகப் பயன்படுகிறது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தோட்டக்கால்களில் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படுகின்றது.

வேறு பெயர்கள்: கருவேப்பிலை, கறிவேப்பிளை.

ஆங்கிலத்தில்: Murraya konigii, spreng (Bergera konigii) Rutaceae.

இனி மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.

கறிவேம்பு நன்றாக முற்றியது 100 கிராம் எடுத்து சுக்கு 25 கிராம் கடுக்காய்த் தோல் 50 கிராம் இவற்றை நிழலில் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகைப் பொடியை வெந்நீரில் இருவேளை குடித்துவர அழிந்து போன சுரப்பிகள் புதுப்பிக்கப்பட்டு ருசியில்லாத நாக்கில் ருசி ஏற்படும். நாம் உண்ணும் உணவுகள் சீர் பெறாமல் வயிற்றில் உளைச்சலைக் கொடுத்தால் அதைச் சமப்படுத்தும். வாத, பித்தங்கள் உடலில் எங்காவது ஒளிந்து கொண்டு இருந்தால் அவற்றை வெளியேற்றும்.

கறிவேம்பு இலையைக் கைப்பிடியளவு, மிளகாய் 2 இவற்றை நெய்யில் வதக்கிப் பழம்புளி, வறுத்த உப்பு சேர்த்து துவையல் செய்து, சாப்பிடும்போது முதல் வாய் உணவுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட குமட்டல், வாந்தி, அசீரண பேதி, சீதபேதி, செரியா மந்தம், வயிற்றுக் கோளாறு குணமாகும்.

கறி வேம்பு இலை, மருதாணி இலை, கரிசலாங் கண்ணி இலையின் தண்டு, கைப்பிடி அளவுடன் சிறிது வேப்பிலையின் கொழுந்தையும் சேர்த்து அரைத்து தலையில் தடவி வர பித்த நரை, இளநரை மாறும்.

கறிவேம்பு, சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு, பொரித்தப் பெருங்காயம் சம அளவாக எடுத்து நிழலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை பொடியை நெய்விட்டுப் பிசைந்து சுடு சோறுடன் கலந்து உண்ண மலச்சிக்கல் பேதி நிற்கும். குடல் பலவீனத்தால் ஏற்படுகின்ற பேதியும் நிற்கும்.

கறிவேம்பைத் தொடர்ந்து உணவில் உபயோகித்து வர சளி, கபநீர்க்கட்டு அடங்கும்.

கறிவேம்பு ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முறுங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி நான்கு வேளை 50 மில்லி வீதம் குடித்துவர சளி, இருமல், காய்ச்சல், வாதக் காய்ச்சல் குணமாகும்.

கறிவேம்பு இலை, கொத்தமல்லியிலை, பூண்டு, புதினாக்கீரை, உளுத்தம் பருப்பு, பிரண்டைத் தண்டு, கடுகு இவற்றை நல்லெண்ணையில் வதக்கி அதைப் பின்னர் சட்டினியாக அரைத்து எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு மறுபடியும் தாளித்து ஊறுகாயாக உணவுடன் சேர்த்துவர கபாலநீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும்.

கறிவேம்பு இலையை நிழலில் உலர்த்தி காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியுடன் சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து இரண்டுவேளை தொடர்ந்து சாப்பிட்டு வர நீர்க் கோவை, சூதக வாய்வு குணமாகும்.

கறிவேம்பு ஈர்க்கு, சுக்கு, சீரகம், ஓமம் வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி சிறிது சர்க்கரை சேர்த்துக் குடிக்க செரியாமை, வாயு நீங்கும்.

Posted in Ayurveda, Ayurvedha, Dhoodhuvalai, Dhoothuvalai, Flower, garland, Health, Healthy, Heart, Hearts, Herbs, Kari Patha, Karipatha, Karipaththa, Karivepilai, Kariveppilai, Karu Veppilai, Karuvepilai, Karuveppilai, Lotus, Mooligai, Mooligai Corner, Naturotherapy, Nelumbium speciosum, Patha, Paththa, Plants, Soanum Grilobalum, Solanaceae, Thaamarai, Thamarai, Thoodhuvalai, Thoothuvalai, waterplant | 4 Comments »